CJ

If we worship at home pooja, the grace will be same as like a temple level?


வீட்டிலேயே பூஜை அறை அமைத்து வழிபடும் இடத்திலும்கூட, கோவில், ஆலயத்தில் இருக்கும் அதே சிறப்பான ஆற்றலும் சக்தியும் இருக்குமா? நமக்கு உதவுமா?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி: 

வாழ்க வளமுடன் ஐயா, வீட்டிலேயே பூஜை அறை அமைத்து வழிபடும் இடத்திலும்கூட, கோவில், ஆலயத்தில் இருக்கும் அதே சிறப்பான ஆற்றலும் சக்தியும் இருக்குமா? நமக்கு உதவுமா?


பதில்:

பக்தியில் இயல்பாகவே ஆர்வம்கொண்டு, அதை கடைபிடித்து வரும் இந்திய நாட்டில், ஒவ்வோர் வீட்டிலும், பூஜை வழிபாடு உண்டு. அவரவர்கள் தங்கள் பொருளாதார வசதிகேற்ப, ஒரு பூஜை அறை, ஒரு தடுப்பு, ஒரு பெட்டகம், ஒரு அலமாரி அமைத்து அங்கே, இறை உருவம், படம், பொருட்கள் கொண்டு வழிபாடு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்கள். இப்போது கட்டும் நவீன வீடுகளிலும் கூட எளிமையாக பூஜை அறை உண்டு. அது இல்லையென்றால் வீடு முழுமை அடைவதில்லை என்ற ஒரு கருத்தும் இருப்பதை நாம் அறிந்திடமுடியும். அதை மற்றவர்கள் கிண்டல், கேலி செய்தாலும், தேவை என்ற மனப்பாங்கு இருப்பதை மறுக்கமுடியாது. இறைவழிபாட்டில் ஓர் உந்துதலாகவும், யோகத்திற்கு அடிப்படையாகவும் இருக்கின்ற பக்தியை எப்படி நாம் மறுத்திட முடியும்? வளர்ந்த பெரியவர்களுக்கு தேவையில்லாது இருக்கலாம். ஆனால், நாளைய தலைமுறையாக வளர்ந்து வரும் குழந்தைகளுக்கு ஒழுக்கமும், நற்பண்பும், தன்னை மீறிய சக்திக்கு வணக்கம் செலுத்தி, மதித்து, இயற்கை ஒழுங்கமைப்பை ஏற்று வாழ்ந்து, தன்னை யார்? என்று அறிந்து பிறப்பின் முழுமையை அடைவதற்கும் பக்தி தேவைதானே?

வீட்டிலேயே  பூஜை அறை அமைத்து வழிபடுகிறோம் என்றால், அங்கே நெய் விளக்கு தீபம் இருக்கும், மந்திரங்கள் சொல்லப்படும், மனதை உற்சாகப்படுத்தும்மலர்களின் அலங்காரம், அவற்றின் நறுமணம் இருக்கும். படைப்பாக வைக்கும் பழங்கள், பலகாரங்கள் ஆகியன இருக்கும். வேண்டுதல் ஏதுமில்லை என்றாலும், வழிபாடு முடித்துவிட்டால், ஒரு திருப்தியை ஒவ்வொருவராலும் உணரமுடியும் என்பது உண்மைதான். நிச்சயமாகவே வீட்டிலேயே பூஜை அறை அமைத்து வழிபடும் இடத்திலும்கூட,  சிறப்பான ஆற்றலும் சக்தியும் இருக்கும். ஆனால், கோவில், ஆலயத்தில் இருக்கும் அதே அளவில் என்று எதிர்பார்க்கமுடியாது. காரணம், கோவில், ஆலயம் என்பது ஆற்றல், சக்தியை ஏற்று அதை தக்கவைத்துக் கொள்ளும் வழிமுறையிலேயே அமைப்பதாகும். அந்த ஆற்றல் களம் அபரிதமாக இருக்கும். அது எப்படி என்றால், யாகம் வளர்ப்பதாலும், ஆறுகால பூஜைகள் செய்வதாலும், கும்பாபிஷேகம் நிகழ்த்துவதாலும், தீப ஆராதனை, அபிஷேகம் செய்வதாலும், ஏளாரமான மக்கள் வணங்குவதாலும், அந்த இடத்தை சுற்றுவருவதாலும், அந்த வழிபாடு தளத்தில் ஆற்றல் களம் திணிவுபெறும். அதுபோலவே அவரவர்களுக்கு தேவையான ஆற்றலையும், உந்துதலையும் தந்துகொண்டே இருக்கும்.

கோவில், ஆலய வழிபாடுகளில் புதைந்திருக்கின்ற, கருத்துருவான இறை உண்மை அவர்களுக்குள் உடனடியாகவும், அதை நினைக்கும்பொழுதும் கிடைத்துக்கொண்டே இருக்கும். அது அவர்களின் மலர்ச்சிக்கும், உயர்வுக்கும் உறுதுணையாக இருக்கும்.  வீட்டில் அந்த அளவிற்கு கிடைத்திடுதல் அபூர்வமாகும். எனினும் ஏதேனும் ஒருவகையில் துணைசெய்யும் என்பதில் ஐயமில்லை. எனினும், பருவம் வந்தோரும், வயதில் பெரியோர்களும் இந்த வழிபாடுகள் தாண்டி, இதில் உள்பூர்வமாக பொதிந்து இருக்கின்ற, இறை தத்துவத்தை அறிவதற்கு முயற்சிக்க வேண்டியது அவசியம். அந்த நிலையில் உயர்ந்திட, யோகத்தில் ஆர்வம் வரவேண்டும். அப்போதுதான் நம்முடைய பிறப்பின் நோக்கம், கடமை நிறைவேறிடும். பூஜை வழிபாடு மட்டுமே போதும் என்று நின்றுவிடுவது முழுமையில்லை என்பதை நினைவுகொள்க.

இந்த பூஜை, வழிபாடு, அதன் தொடர்பான விசயங்களை மறுப்பவர்களையும், கிண்டலும், கேலியும் செய்பவர்களை புறந்தள்ளுங்கள். அவர்களுக்கு புரியவில்லை என்றால் அப்படியே விட்டுவிடுங்கள். அப்படிப்பட்டவர்களுக்கு விளக்கம் சொல்லி உங்கள் நேரத்தை வீண் செய்யாதீர்கள். உங்களுக்கு விருப்பமானதை தொடர்வதில் எந்த தவறும் இல்லை. அதில் உண்மையோடும், உண்மையை நோக்கியும் பயணியுங்கள்.  

வாழ்க வளமுடன்

-

Please explain the good, bad, and benefits on the almighty's believes and unbelieves?


இறைவழிபாடுகளில் இருக்கும் நம்பிக்கையும், கடவுளே இல்லை என்ற நிலையையும் நீங்கள் விளக்கமுடியுமா? இரண்டிலும் இருக்கின்ற நன்மை, தீமை, பயன்கள் என்ன என்றும் சொல்லுங்கள்!


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி: 

வாழ்க வளமுடன் ஐயா, இறைவழிபாடுகளில் இருக்கும் நம்பிக்கையும், கடவுளே இல்லை என்ற நிலையையும் நீங்கள் விளக்கமுடியுமா? இரண்டிலும் இருக்கின்ற நன்மை, தீமை, பயன்கள் என்ன என்றும் சொல்லுங்கள்!


பதில்:

நல்ல கேள்விதான் எனினும், இங்கே பொதுவெளியில் சுருக்கமாகவேதான் சொல்ல முடியும். கடவுளை வணங்குவோர் குறித்து பேசினாலும், கடவுள் இல்லை என்று சொல்வோரை குறித்து பேசினாலும் இங்கே தேவையற்ற பிரச்சனைகள்தான் எழுகின்றன என்று வருந்துவோர்களில் நானும் ஒருவன். ஏனென்றால் இந்த உலகில், உண்மைகளை எடுத்துப் பேசுவோர்களுக்கும், விளக்கமளித்து பேசுவோருக்கும் எதிரிகள் உருவாகிவிடுவார்கள். எனவே மிகசுருக்கமாக சிலவற்றை இங்கே சொல்ல முயற்சிக்கிறேன். இது என்னுடைய கருத்தல்ல, நான் பலவழிகளில் அறிந்து கொண்ட வகையில், மற்றவர்கள் தந்த குறிப்பு மட்டுமே.

என்னைப் பொறுத்தவரையில் நான், கடவுளை வணங்குவோரையும், கடவுள் இல்லவே இல்லை என்போரையும் குறித்து தனிப்பட்ட எந்தக்கருத்தும் சொல்லுவதில்லை. உங்களுக்கு பிடித்திருக்கிறது அதனால் கடவுளை வணங்குகிறீர்கள். உங்களுக்கு அது அனுபவமாகவில்லை எனவே கடவுள் இல்லவே இல்லை என்கிறீர்கள். அவ்வளவுதான் என்னுடைய கருத்தாக இருக்கிறது.

இந்த இரண்டு நிலைபாடு கொண்டவர்களுக்கும் தங்களுக்குள்ளாக ‘ஒரு நம்பிக்கை’ உண்டு. அந்த நம்பிக்கை பெரும்பாலும், மற்றவர்களால்தான் உருவாகிறது. அது தொடர்வதும், அற்றுப் போவதும், அவர்களுக்கே அது அனுபவமாகும் பொழுதுதான். வளரும் சிறுவயதில் பெற்றோர் ஏற்படுத்தும் பக்தி நம்பிக்கை, தொடர்ந்தால் அக்குழந்தையும் ‘கடவுளை’ நம்பும். பெற்றவர்களுக்கே பக்தியும், கடவுள் நம்பிக்கையும் இல்லையென்றால் அக்குழந்தைக்கும் ‘கடவுள்’ இல்லைதான், அதுகுறித்த நம்பிக்கையும் இல்லைதான். பக்திமார்க்கத்தில் வளர்ந்த சிறுவர் சிறுமியர் கூட பிறகு வளர்ந்த நிலையில், சூழ்நிலையினாலும், மற்ற கருத்துளினாலும், தன்னறிவினாலும், பகுத்தறிவு சிந்தனைகளினாலும் தன் சுய அறிவால், சில காலங்களுக்குப்பிறகு  ‘இரண்டாவது நிலைப்பாட்டுக்கு, இல்லாத நிலைப்பாட்டுக்கு’ வந்துவிடுவதுண்டு.

உலகில் பிறந்த மனிதன் ஆறாவது அறிவின் துணைக்கொண்டுதான் மற்ற எல்லா உயிரினங்களை விடவும், சிந்தித்து அறிந்து கொண்டு வாழ்கிறான், அந்த சிந்தனையே மனிதனை, விலங்குகளின் பரிணாமத்தில் இருந்து, பிரித்து உயர்த்துகிறது. எல்லாவகையான உணர்வையும் விலங்குகள் போலவே பெற்று மகிழ்கிறான் என்பதும் உண்மை. கூடவே, அந்த உணர்வுகளையே பெறுவது நானேதான் என்றும் உணர்கிறான். இதனினும் மேலாக, அந்த நான் என்பது யார்? என்று சிந்தனையும் இயல்பாக எழுவது உண்மைதான். ஆனால் இந்த ‘நான் யார்?’ அவ்வளவு எளிதில் சராசரி மனிதனுக்கு வருவதே இல்லை. என்றாலும் அந்த கேள்வியோடு, யோகசாதனை வழியாக, இதை அறிந்த முன்னோர்கள்கள், ஞானிகள், மகான்கள், சித்தர்கள் தங்களோடு வாழ்கின்ற மக்களின் அறிவு நிலைக்கு ஏற்றவாறு, புரிந்து கொள்ளும்படியாக எளிமைநிலை கருதி, ‘இப்படியான உண்மை, உட்பொருளாக, மெய்ப்பொருளாக இருக்கிறது. அதை அறிந்தும், உணர்ந்தும் உங்கள் வாழ்வை சிறப்பித்துக்கொள்க’ என்ற கருத்தில், அதை ஆன்மீகத்தத்துவமாக, கருத்துருவாக ‘இறை’ என்ற உண்மை விளக்கத்தை தந்தார்கள். அதுவே கட+உள்=கடவுள் என்பதாக ஆகிற்று. ஆகவே, கடவுள் என்ற கருத்துரு வணக்கத்தில், பொதுவாகவே, நம்பிக்கை என்ற நிலைக்கு அடுத்ததாக, பரிபூரண நம்பிக்கை (FAITH) என்ற நிலைக்கு உயர்ந்தால்தான், பக்தியில் இருப்பவர் கூட, ஓரளவில் உயர்ந்து இறை உண்மையை அறியமுடியும்.

மேற்சொன்ன இந்த கருத்துக்கு எதிரான போக்குத்தான், கடவுள் இல்லை என்ற நிலைபாடு ஆகும். மனிதனும் ஓர் பிறப்பே என்ற நிலையோடு, ஆறாவது அறிவின் துணையோடு, உலக இன்பங்களை துய்த்து வாழ்ந்து வரலாம். கடவுள் என்ற கருத்துருவுக்கு இடமில்லை. அதற்கு அவசியமும் இல்லை. அப்படியாக ஏமாற்றிக் கொள்ளவும் தேவையில்லை என்பதான போக்கு ஆகும். இங்கேயும் ஒரு , பரிபூரண நம்பிக்கை (FAITH) உள்ளதுதான். அது, மனிதனுக்கென்று இருக்கிற ஆறாவது அறிவில் இயற்கை தவிர ‘வேறு எதற்கும்’ இடமில்லை என்பதாகும். அந்த இயற்கையையும் ‘ஏதொன்றும் தனியாக, சிறப்பாக’ கூறவும் அவசியமில்லை என்பதுமாகும்.

இரண்டிலும், நன்மை, தீமை, பயன்கள் எல்லாமே, உணர்ந்து அறியக்கூடியதாக இருப்பதால் அதை நீங்கள், உங்களுக்கு எந்த , பரிபூரண நம்பிக்கை (FAITH) வேண்டுமோ அதை நீங்கள் தேர்ந்தெடுத்து பயணிக்கலாம். உங்கள் வாழ்க்கை, உங்கள் தேர்வு என்பதன் வழியாக உணர்ந்து அறிந்து கொள்க!

வாழ்க வளமுடன்

-

How we can act free from problematic activities with family members and others?


வாழ்க்கைத் துணைவரோடும், பிள்ளைகளோடும், வீட்டில் இருப்போரிடம் பேசும் பொழுதேகூட அதை அவர்கள் புரிந்துகொள்ளாமல் பிரச்சனை எழுகிறதே? எப்படி இதை சரி செய்வது?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி: 

வாழ்க வளமுடன் ஐயா, வாழ்க்கைத் துணைவரோடும், பிள்ளைகளோடும், வீட்டில் இருப்போரிடம் பேசும் பொழுதேகூட அதை அவர்கள் புரிந்துகொள்ளாமல் பிரச்சனை எழுகிறதே? எப்படி இதை சரி செய்வது?

பதில்:

நீங்கள் சொல்லுகின்ற இந்த பிரச்சனை, பெரும்பாலும் எல்லா குடும்பங்களிலும் உண்டு. ஒரு குடும்பத்திலேயே இப்படி இருந்தால், ஒரு சமூகத்தில், நாட்டில், உலகில் எத்தனையோ பிரச்சனை எழுந்துவிடுமே? இதையெல்லாம் எப்படித்தான் சமாளிக்கிறார்களோ? என்ற ஒரு கேள்வியும் உங்களுக்கு எழுந்துவிடும் அல்லவா? ஆம் அதுவும் உண்மைதான். இப்போது இருக்கின்ற தலைவர்கள், தலைவிகள் படும்பாடையும் நாம் அறிவோம் தானே?

இந்த உலகில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும், ஒரு அடையாளம் உண்டு. அந்த அடையாளம்தான் தன்னை வெளிப்படுத்தும். நான் இப்படிப்பட்டவன், இப்படிப்பட்டவள் என்று நாமும் அதை சொல்லால், செயலால் வெளிப்படுத்திக் காட்டுவோம். நம்முடைய சொல்லாலும், செயலாலும் மற்றவர்கள் அதை புரிந்து கொள்ளவும் செய்வார்கள். இது நாமளாகவே விரும்பியும் கட்டமைத்துக் கொள்ளலாம். சில நேரங்களில் நம்மையறியாமலும் அது வெளிப்பட்டு அப்படியான ஒரு தோற்றத்தை ஏற்படுத்திவிடவும் கூடும். அதில் நாம் கவனமாக இருக்கவேண்டும். நான்கு சுவருக்குள் யாரும் பார்க்காதவண்ணம் இருப்பது வேறு, ஒருவரோ, பலரோ, குடும்பமோ, சமூகமோ பார்க்கின்ற பார்வை வேறு என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

பொதுவாகவே ‘நான் நல்லவன் / நல்லவள்’ என்ற ரீதியிலான நம்பிக்கை நல்லதுதான். ஆனால் அதை மற்றவர்கள் மீது காட்டவும் கூடாது, திணிக்கவும் கூடாது. ஒவ்வொருவரும் அவரவர் அளவில் நல்லவர்கள் தான் என்பதை நினைவில் கொள்க. சில விரும்பாத நடவடிக்கைகள், குணங்கள் இருந்தாலும் உடனே காட்டிக்கொள்ளவும் மாட்டார்கள். 

ஒளிவுமறைவின்றி இருக்கக்கூடிய உறவு என்றால் அது கணவன் மனைவி உறவு மட்டுமே. அதில் ஆளுமையும், அதிகாரமும், உதவிடாது. அன்பு மட்டுமே தேவை. இந்த உறவில் இன்னொருவரை திருத்த வேண்டும் என்று நினைக்கவே கூடாது. அதை செயல்படுத்தவும் கூடாது. அவரவர்களுக்கு அது அவரவர் இயல்பு. அதை நீங்கள் சுட்டிக்காட்டலாமே தவிர மாற முயற்சிக்கக் கூடாது. வேதாத்திரி மகரிஷி ‘பொறுமை, விட்டுக்கொடுத்தல், தியாகம்’ என்ற மூன்று தன்மைகளை கணவனும் மனைவியும் ஏற்றுக்கொண்டால், இல்லறவாழ்வு இன்பமாக சிறப்பாக நிறைவாக இருக்கும் என்கிறார். ஆனால் நான், பொறுமை காப்பதா? நான் விட்டுக்கொடுக்கமுடியுமா? அது என் தலைமுறையிலேயே இல்லையே? நான் ஏன் தியாகம் செய்யவேண்டும்? என்றுதான் கேள்வி எழுமே தவிர மாற்றத்தை ஏற்கவே மாட்டொம் அல்லவா?

 வாழ்க்கைத் துணைவரோடும், பிள்ளைகளோடும், வீட்டில் இருப்போரிடம் பேசும் பொழுதேகூட அதை அவர்கள் புரிந்துகொள்ளாமல் பிரச்சனை எழுகிறது என்றால், முதலில் உங்களோடு இருக்கும், பழகும் இவர்கள், அவர்களுடைய இயல்பில் இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். உங்களுடை எக்கருத்தையும், வழிமுறையையும் திணிக்காதீர்கள், அவர்களை திருத்த முயற்சிக்காதீர்கள். உங்கள் சொல், செயல் ஆகிய மூலமாக அவர்களுக்குள் ஏற்படுத்திய பிம்பத்தை கலைக்காதீர்கள். ஒருவேளை தவறாக அவர்கள் கருதியிருந்தால், அதை திருத்திட முயற்சியுங்கள். நான் நல்லவன் / நல்லவள் என்று சொல்லாமல், அதை செயலாலும், அன்பாலும் காட்டுங்கள்.

அவர்களின் ஏற்பு இல்லாமல், கேட்காமல் எதையுமே செய்யதீர்கள். சொல்லாதீர்கள். எப்போதுமே மற்றவர்கள் குறித்த ‘பாவ்வம்’ என்று சொல்லக்கூடிய குணாதசியத்தை நீங்கள் தீர்மாணிக்காதீர்கள். அதுபோலவே ‘நான் இப்படித்தான்’ என்றும் உங்களை முடிவு செய்யாதீர்கள். இயல்பு என்ற நிலைக்கு நீங்கள் வந்து நின்று, அந்ததந்த பொழுதுக்கும், நேரத்திற்கும் தகுந்தபடி, விழிப்பாக செயல்படுங்கள். மற்றவர்களோடு எந்த பிரச்சனையும் எழாது காத்துக்கொள்ளலாம்.

வாழ்க வளமுடன்
-

Why felt peace when worship at temple better then the meditation?


தியானம் செய்வதை விடவும், கோவிலுக்குச் சென்றால் ஒரு நிம்மதி கிடைப்பதை நன்றாகவே உணர்கிறேன். இதன் காரணம் என்ன? இது சரியானதா?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி: 

வாழ்க வளமுடன் ஐயா, தியானம் செய்வதை விடவும், கோவிலுக்குச் சென்றால் ஒரு நிம்மதி கிடைப்பதை நன்றாகவே உணர்கிறேன். இதன் காரணம் என்ன? இது சரியானதா?

பதில்:

தியானம் செய்வதை விட நிறைவான நிம்மதி என்பது, நீங்கள் இன்னமும் தியானத்தை சரியாக செய்யவில்லை என்பதைத்தான் காட்டுகிறது. தியானம் என்பதை நீங்கள் எப்படியாக புரிந்துகொண்டிருக்கிறீர்கள் என்பது தெரியவில்லை. தியானம் முழுமையான தீர்வாக அமைந்து, நல்ல நிறைவைத் தரும், மனதுக்கு தேவையான ஊக்கம் தந்து நிம்மதியாக இருக்கவும் துணையாக இருக்கும். தன்னையறிதலுக்கு மனமும் தயாராக இருக்க பழகியும்விடும். இதை இப்படியாகச் சொல்லுவதால் கோவிலுக்கு போகவேண்டிய அவசியமில்லை என்ற கருத்துக்கும் குறுக்காக நீங்கள் வந்துவிட வேண்டிய அவசியமில்லை.

இப்போது கோவிலுக்குச் சென்றால் ஏன் மனம் அமைதியாகிறது? உங்களுக்குத் தேவையான, உங்கள் மனதிற்கு தேவையான ஒரு ஆற்றல் அங்கே நிரம்பி இருக்கிறது. அந்த ஆற்றல் அங்கே, வழிபாட்டு இடங்களில் தினமும், வழிபாடுகளால் உருவாக்கம் செய்யப்பட்டு தேக்கி வைக்கப்படுகிறது. எப்படி மின்கலங்களில், நமக்குத் தேவையான மின்சாரத்தை தேக்கிவைத்து, மின்சாரம் இல்லாத நிலைகளில், நேரங்களில் பயன்பாடு செய்கிறோமோ அப்படியாக. கோவிலில், வழிபாட்டுத்தலங்களில் இந்த ஆற்றல் எப்போதும் வெளிவந்துகொண்டே இருக்கும். நமக்கும், நம்மைப்போன்ற எல்லா ஜீவங்களுக்குமே அந்த ஆற்றல் உதவி செய்யும் என்பது உண்மை.

இதைத்தான் குடமுழுக்கு என்று, பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சீர் செய்கிறார்கள். ஊக்கப்படுத்துகிறார்கள். மக்களும் அன்றாடம் அவ்விடங்களுக்குச் சென்று வருவதால் பயனும் அடைகிறார்கள். ஆனால் யோகத்தில் தீட்சை எடுத்துக்கொண்டு பயணிக்கும் ஒரு அன்பருக்கு, கோவிலுக்குப் போய்தான் அந்த ஆற்றலை பெறவேண்டும் என்ற நிலை மாறிவிடுகிறது. தியானத்தில், மனதையே அதற்கு தகுந்தபடி மாற்றி அமைப்பதால், உங்களைச் சுற்றி இருக்கும் ஆற்றலின் வழியாகவே அந்த நிறைவையும், நிம்மதியையும் பெறுவதற்கு பழகிவிடுகிறது.

நீங்கள் இன்னமும் தியானத்தில் ஆழமாக செல்லவில்லை, பழகிக்கொள்ளவில்லை என்று தெரிகிறது. அதுவரை இப்படியான அனுபவம் உங்களுக்கு இருக்கும் என்று நம்பலாம். என்றாலும் தவறில்லை. தொடர்ந்து தியானம் செய்யுங்கள். அந்த ஆற்றல் உங்களுக்குள் தானாகவே நிரம்புவதை உணர்வீர்கள். நிறைவும் நிம்மதியும் இயல்பாக கிடைக்கும் என்பதை அறிவீர்கள். உடனே நீங்கள் கோவிலுக்கு செல்வதை நிறுத்திவிடலாம் என்று நான் சொல்லவே இல்லை. வழக்கம் போல சென்றுவாருங்கள். பயன்பெறுங்கள். இது உங்களுக்கு மட்டுமல்ல. எல்லா அன்பர்களுக்குமே சொல்லுகிறேன்.

வாழ்க வளமுடன்
-

What is the truth of Tamil new year and will it help for meditation?


தமிழ்புத்தாண்டு நாளின் சிறப்பு நம்முடைய தவத்திற்கு உதவுமா? விளக்கம் தருக.



வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி: 
வாழ்க வளமுடன் ஐயா, தமிழ்புத்தாண்டு நாளின் சிறப்பு நம்முடைய தவத்திற்கு உதவுமா? விளக்கம் தருக.

பதில்:
யோகசாதனையில் ஈடுபட்டுள்ள அன்பர்களுக்கு நாளும் கிழமையும் திசையும் ஒரு கணக்குமல்ல, தடையுமல்ல. ஆனால் புதிதாக யோகத்தில் இணைந்துகொள்ள விரும்பும் அன்பர்களுக்கும், யோகத்தில் ஆர்வமுள்ள நபர்களுக்கும், சித்திரைத்திங்கள் எனும் தமிழ் புத்தாண்டு நாள் சிறப்பாக இருக்கும் எனலாம்.

ஒரு வகையில் சூரியன், தன்னை புத்துணர்வாக்கிக் கொண்டு, தன்னொளியில் பிரகாசிக்கத் தொடங்கும் நாளாக, தமிழ் சித்திரை மாதம் ஒன்றாம் நாளை எடுத்துக்கொள்ளலாம். வானியல் அடிப்படையிலும், ஜோதிட அடிப்படையிலும் இது சரிதான். மேலும் சூரியனின் உச்சவீட்டாக இருக்கக்கூடிய மேஷ ராசிக்கட்டத்திற்கும் வருகிறது. இந்த மேஷ வீட்டில்தான் அசுவினி, பரணி, கிருத்திகை 1 ஆகிய நட்சத்திரங்களும் அதன் பாதங்களும் இருக்கின்றன. இதன்படி நாம் கவனிக்கும் பொழுது, அசுவினி என்ற நட்சத்திரத்தின் பாதையில், சூரியன் வரும் நாளே ‘சித்திரை மாதம்’ ஆகும். சூரியன் உச்சம் பெறுவது தனிப்பட்ட பாகையில் ஆகும்.

எனினும் சூரியனை, ஆத்மகாரகன், ஆத்மாவுக்கு உரியவன் என்றுதான் சொல்லப்படுகிறது. அதேபோல சந்திரனை மனோகாரகன், மனதிற்கு உரியவன் என்று சொல்லப்படுகிறது. சூரியன் எப்படி புத்துணர்வோடு, சித்திரை மாதத்தில் நுழைகிறதோ, அதே போன்றதொரு ஆத்ம புத்துணர்வு, நம் ஆன்மாவுக்கும் கிடைக்கலாம் அல்லவா? அந்த அடிப்படையில்தான், தமிழ்புத்தாண்டு நாள், யோகத்திற்கும், தவத்திற்கும் உதவலாம். 

மேலும் இது கோடைக்காலம். நீங்களே பார்க்கலாம். பெரும்பாலான மரங்கள் கடந்த மாதங்களில், தன்னுடைய எல்லா இலைகளையும் உதிர்த்துவிட்டு, பூரிப்பாக இளம்பச்சை இலைகளை தன்னுடைய கிளைகளில் படரச்செய்வதை காணலாம். கண்ணுக்கும் கருத்துக்கும் இனிதான பச்சைபசேல் என்ற மரங்களை இந்த கோடைகாலத்தில்தான் காணமுடியும். மாமரம் தன் பூக்களோடு மாங்கனிகளை தரும் காலமும் இதுதான். புளியமரம் தன் புளியங்கனிகளை தருவதும் இக்காலமே.

புதிதாக யோகத்தில் இணைவோடுக்கு இது சிறந்தகாலம் என்பதில் ஐயமில்லை. அதுபோலவே, ஏற்கனவே யோகத்தில் பயணிப்போருக்கு, தங்களின் தவ ஆராய்ச்சிக்கு இக்காலம் உதவும் என்பது நிச்சயமே. நீங்கள் தன்னையறிதலில் உயர்வு பெற இறைநிலையோடு மனதை இணைத்து வாழ்த்தி மகிழ்கின்றேன்.

வாழ்க வளமுடன்
-

Can the horoscope of children born at the same time be the same?


குறிக்கப்படும் ஜாதகம் எப்படி நமக்கானது என்று சொல்லமுடியும்? நான் பிறந்த அதே நேரத்தில் எத்தனையோ நபர்கள் பிறந்திருப்பார்கள் அல்லவா? அப்பொழுது அவர்கள் ஜாதகமும் ஒரே மாதிரிதானே இருக்கும்?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி: 

வாழ்க வளமுடன் ஐயா, குறிக்கப்படும் ஜாதகம் எப்படி நமக்கானது என்று சொல்லமுடியும்? நான் பிறந்த அதே நேரத்தில் எத்தனையோ நபர்கள் பிறந்திருப்பார்கள் அல்லவா? அப்பொழுது அவர்கள் ஜாதகமும் ஒரே மாதிரிதானே இருக்கும்?

பதில்:

நீங்கள் கேட்பது சரியான கேள்விதான். நீங்கள் பிறந்ததில் இருந்தே ஆரம்பிக்கலாமே. நீங்கள் இப்பொழுது அம்மாவின் கருவறையில் இருக்கிறீர்கள். குழந்தைப்பேறு மருத்துவமனையிலும் சேர்த்து தகுந்த நேரத்திற்கு மருத்துவர்கள் காத்திருக்கிறார்கள். அதே மருத்துவமனையில் ஒரே நேரத்தில் ஐந்து தாய்மார்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கும் ஒரே சமயத்தில் உதவ மருத்துவர்களும் இருக்கிறார்கள். அதிகாலை 3. 40 க்கு, உங்களோடு சேர்ந்து ஆறு குழந்தைகள் பிறக்கின்றன. அதில் மூன்று பெண் குழந்தைகள், மூன்று ஆண் குழந்தைகள். இத்தனை குழந்தை பிறப்பை, அங்கேயே ஆறு சோதிடர்களை வைத்து ஜாதகமும் எழுதிவிடலாமா? சரி. குழந்தைபிறப்பின் நேரத்தை மருத்துவர்கள் சொன்னபடி குறித்து ஜாதகம் கணித்தாயிற்று.

இப்பொழுது ஏறக்குறைய எல்லா ஜாதகமும் ஒரே மாதிரி இருக்கும் என்பது உண்மைதான். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.  என்றாலும், ஜாதகம் அதன் நுணுக்கத்தில், கணிதத்தில் நுண்ணிய மாறுதலாகவே அமைதிருப்பதையும் நாம் அறியமுடியும். இந்த ஆறு குழந்தைகளுக்கும் ஒரே பெயர் வைக்கப்போவதில்லை. தனிப்பட்ட விருப்பமான பெயர்தான் வைப்பார்கள். கணித்த ஜாதகம் ஒன்றாக இருந்தாலும், எல்லா குழந்தைகளும் ஒரே நேரத்தில் அழுவதில்லை, கொட்டாவி விடுவதில்லை, தானாக சிரிப்பதில்லை. ஒரு குழந்தை காலையில் தூங்கும், இரவில் அழும், சில குழந்தை இரவில் தூங்கும், வெளிச்சம் வந்தால் அழுதுகொண்டே இருக்கும். ஒரு குழந்தை தாய்ப்பால் குடிக்கும், ஒரு குழந்தை அதை அறவே மறுக்கும். ஒரு குழந்தை தாயின் அணைப்பை விரும்பும், மறு குழந்தை தூக்கினாலே அழும். இப்படி பலவித மாறுபாடுகள் அங்கேயே வெளிப்படுவிடுகின்றன அல்லவா?

ஜாதகமும், அதன் கிரநிலைகளும் ஒன்றாக இருக்கட்டும். அந்தந்த கிரக நிலைகளின் அலைவீச்சு ஒன்றாகவே இருந்தாலும், அதை பெறுவது, ஏற்பது, விலக்குவது என்று ஒவ்வொரு குழந்தைக்கும் மாறிக்கொண்டே இருக்கும் என்பது உண்மை. மேலும் அந்த ஜாதகத்தை வைத்துக்கொண்டு, இந்தக்குழந்தை இப்படித்தான் வளரும் என்று சொல்லவும் முடியாது. அப்படி எந்த ஜோதிடரும் சொல்லவும் மாட்டார். ஒரே ஒரு சாட்டிலைட் தொலைகாட்சி டிஷ், உங்களின் ஒரே ஒரு 49 இன்ஞ் ஸ்மார்ட் டிவி வழியாக பல்வேறு நிகழ்ச்சிகளை பார்ப்பது போலவே, இந்த குழந்தைகள் மாறிக்கொண்டுதான் வளரும் என்பது உண்மை. ஒரே மரத்தின் விதைகளை நீங்கள் விதைத்தாலும், வளர்ந்து அதுதரும் அதன் கனிகள் ஒரே சுவையாக இருப்பதில்லை.

அப்படியானால் ஜாதகம்? அது ஒரு குறிப்பு, கையேடு. அதைக்கொண்டு அந்தக் குழந்தைகளின் அடிப்படை அறிந்து மாற்றத்தை விரும்பி செயல்பட்டு வாழ்வில் தன்னை உயர்த்திக் கொள்ளலாம். பார்வைக்கு ஒன்றுபோல் இருக்கலாம். ஆராய்ந்து பலன் தரும் பொழுது அது மாறுதலை தந்துகொண்டே இருக்கும். ஒவ்வொடு தனித்தனியான குழந்தைக்கும் பதினாறு வகையான மாற்றங்கள் உண்டு என்று வேதாத்திரி மகரிஷி அவர்கள் சொல்லுகிறார். அதில் ஒன்று மாறினாலும் ஒரே மாதிரி இருக்கபோவதில்லை. அதனால் ஒரே நேரத்தில் பிறந்த எல்லோருக்கும் ஜாதகம் கணித்தாலும், நகர்ந்துகொண்டே இருக்கக்கூடிய இந்த வானியல் நிகழ்வு, நுண்ணிய மாற்றதை கொண்டிருக்கும். அது அந்த ஜாதகத்திலும் இடம்பெறும் என்பதுதான் உண்மை.

        குழந்தையின் அடிப்படை குணாதசியம், கர்மா, செயல்பாடு, மனநிலை, பரம்பரை, வழக்கம், பழக்கம், இப்படியாக எண்ணற்ற விசயங்கள், குழந்தைக்கு குழந்தை மாறுபாடுபெறும் அல்லவா? அதுபோல அந்த ஜாதகமும் தன்னுள்ளே ரகசியத்தை புதைத்து வைத்திருக்கும். அதை நல்ல தேர்ந்த, அனுபவம் உள்ள ஜோதிடர் நிச்சயமாக கண்டடைவார்.

வாழ்க வளமுடன்
-

Will karma come to the person who helps the wrong man? What is the reason for this?


தவறுக்கு துணைபோகிறவரையும் கர்மா துரத்துமா? ஏனென்றால் மனமறிந்து எந்த தவறுமே செய்யாத நிலையிலும் பலவித பிரச்சனைக்களுக்கு உள்ளாவதுபோல தோன்றுகிறதே? காரணம் என்ன?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி: 

வாழ்க வளமுடன் ஐயா,  தவறுக்கு துணைபோகிறவரையும் கர்மா துரத்துமா? ஏனென்றால் மனமறிந்து எந்த தவறுமே செய்யாத நிலையிலும் பலவித பிரச்சனைக்களுக்கு உள்ளாவதுபோல தோன்றுகிறதே? காரணம் என்ன?


பதில்: 

இந்த சந்தேகம் எனக்கும், யோகத்தில் இல்லாத காலங்களில் இருந்துவந்தது. வேதாத்திரிய யோகத்திற்கு வந்த பிறகு, செயல்விளைவு தத்துவமும், இயற்கையின் விதி என்பதையும் நன்கு புரிந்து கொண்டபிறகு  அந்த சந்தேகம் தீர்ந்துவிட்டது. உண்மை கண்ட நிலையில், என்னுடைய செயல்களை நான் திருத்தி அமைத்துக் கொண்டாலும், என்னைச்சார்ந்த மற்றவர்களை அறியும் பொழுதும், சில அன்பர்களின் வாழ்க்கை கதைகளை கேட்கும் பொழுதும் ‘நான் அறிந்த உண்மையையும் மீறி’ வருத்தம் எழுவது உண்டு.

துன்பப்படும் இவர்கள் ஒன்றுமே செய்யவில்லையே, ஏன் இப்படி நிகழ்கிறது? என்று மனம் வருத்தமடையும். ஆனால் வேதாத்திரி மகரிஷி சொல்லுவது போல, இயற்கையின் ஒழுங்கமைப்பு ஒருபோது மாறாத தன்மை கொண்டது. தெய்வீக நீதிமன்றத்தின் செயல்பாடு அது என்றும் சொல்லுகிறார். யாருக்காகவும், எதற்காகவும், எக்காலத்திலும் மாற்றம் பெறாதது. இன்னும் சொல்லப்போனால் ‘தன்னையே தான் தண்டித்து, திருத்திக்கொள்ளும்’ தன்மை உடையதுதான் இறையாற்றல். அத்தகைய உயர்ந்த தன்மை கொண்டது. நம்மை சும்மா விட்டுவிடுமா?

வெளிப்பார்வைக்கு வேண்டுமானால், தவறு செய்தவரும், அந்த தவறுக்கு துணை நின்றவரும், வாய்ப்பு இருந்தும் தட்டிகேட்காமல் இருந்தவரும், கூடவே இருந்து அந்த தவறை திருத்தி அமைக்காதவரும், மகிழ்வாக, நிறைவாக, எப்போதும் போலவோ, அதைவிட சிறப்பாகவோ வாழ்வது போல இருக்கலாம். ஆனால் அதனால் எழுந்த கர்மா எனும் வினைப்பதிவு ‘சும்மா’விட்டுவிட்டது. இதென்னெ பயமுறுத்தல் என்கிறீர்களா? நீங்கள் செய்துதான் பாருங்களேன். அப்போது விளைவை அனுபவிக்கும் பொழுதாவது நம்புவீர்கள்தானே?!

மனிதனுக்கு மனிதன் செய்யும் பிணக்குத்தான் இன்றைய உலகின் அவலம். உதவியும் செய்யாமல், உபத்திரவும் செய்யாமல் இருந்தால் கூட போதுமானது. ஆனால், எப்படியாவது தான் வளர, முன்னேற, நன்மதிப்பு பெற என்று திட்டமிட்டு, அடுத்தவரை உடலாலும், மனதாலும் துன்பப்படுத்திக் கொண்டே வந்தால், தங்களுக்கான பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியாது. ஒருவேளை எந்த துன்பமும், வருத்தமும் இல்லாமல் இறந்துவிட்டால் கூட, அவர்களின் வாரீசுகளுக்கு அந்த சுமை வந்து சேர்ந்துவிடுமே?! இதற்கான சில உதாரணங்களை, உங்கள் வாழ்க்கையிலேயே பிறரை பார்த்து அறிந்து கொள்ளலாம்.

நீங்கள் கேட்டது போல, தவறுக்கு துணைபோகிறவரையும் கர்மா துரத்துமா? என்றால், ஆம் துரத்தும். ஏனென்றால் மனமறிந்து எந்த தவறுமே செய்யாத நிலையிலும் பலவித பிரச்சனைக்களுக்கு உள்ளாவதுபோல தோன்றுகிறதே? ஆமாம். காரணம் என்ன? பார்க்கலாமா? உனக்கு வாய்ப்பு இருந்தும் ஏன் அதை தட்டிக்கேட்காமல் இருந்தாய்? நீ அதை மாற்றியிருக்கலாம், திருத்தியிருக்கலாம், மன்னிப்பு கேட்டிருக்கலாம், உதவி செய்திருக்கலாம் தானே? அதை ஏன் நீ செய்யவில்லை. நீ அந்த தவறுகளுக்கு கூட்டுதானே? என்று இந்த இயற்கை கேட்டு அதை பதிவு செய்துகொண்டு, தக்க காலத்தில் திருப்பி அளிக்கிறது. திருத்திக்கொள்கிறாயா? என்று பாடம் நடத்துகிறது. ஆனால் மனிதன் ‘இந்த இயற்கையையே மிஞ்சி விட்டதாக வெற்றி பெருமிதம்’ கொண்டு வாழ்கிறான். அந்த பெருமிதம் இன்னும் வடிந்தபாடில்லை!

வாழ்க வளமுடன்

-