December 2015 | CJ

December 2015

THE EVOLUTION OF ART BY CARICATURIST-03


சூரியக்கதிர் மாத இதழுக்கு நேர்காணல் கேள்விகளும், பதில்களும்
பகுதி 03


17. அசலைப்போல ஓவியமா, அனுபவ ஓவியமா?

ஒரு ஓவியம் கற்கும் மாணவர் அசலைப்போலவே வரைந்துதருவதில் கற்றுத்தேர வேண்டியது அவசியம். ஆனால் அதில் தன் அனுபவத்தை காலப்போக்கில் இணைத்தே தரவேண்டும். இருப்பதை அப்படியே தர, இப்பொதெல்லாம் கேமரா முதற்கொண்டு, இயந்திரங்கள்கூட வந்துவிட்டன. அசலைப்போலவே வரைந்தால் மட்டுமே ஓவியன் என்றும், அதுவே தகுதியானது என்ற முட்டாள்தனம் இந்தியாவில் மட்டுமே காணக்கிடைக்கிறது. இப்படி எதிர்பார்த்தால் நூறு பேருக்கு ஒருவரே அப்படி வரையலாம். மற்றவர்கள் எல்லாம் இன்னும் கற்றுக்கொண்டே இருக்கவேண்டியதுதான். ஒரு போட்டோவை, நகல் எடுத்து வரைந்து அனுப்பினால் உலகநாடுகளில் மதிக்கவே மாட்டார்கள். இங்கேதான் ஆகா, ஓகோ என்று புகழ்ந்து அந்த ஓவியரை வளரவிடாமல் செய்கின்றனர். இதில் சிலர், தன் புகழுக்காக, போட்டோவையே சிற்சில வேலைகள் செய்து ஓவியமாக்கி ஏமாற்றவும் செய்கின்றனர்

ஆனால் ஓவியம் அப்படி அசலைப்பொல வரைவது மட்டுமல்ல. தன் அனுபவத்தை அந்த கோடுகளிலும், வண்ணங்களிலும் கொண்டுவருபவனே நல்ல ஓவியன்

-----

18. பொழுதுபோக்கு நிலையா, தொழில் பயன்பாடா? இதை சந்தைப்படுத்தி விற்பனை செய்யமுடிகிறதா?

ஓவியத்தை பொறுத்தவரை, பொழுதுபோக்காக கற்றுத்தேர்ந்து, தொழில்முறை ஓவியராகமாறி, சந்தைப்படுத்தவும் செய்கின்றனர். முக்கியமாக, தன் ஓவியம் உலக அளவில் கிடைக்கும் மேலான தகுதி கொண்டிருக்கிறதா, இல்லை இன்னும் சில அனுபவங்களை பெற வேண்டுமா என்பதை சோதனை செய்துகொள்ளவேண்டும். இப்போது இணையம் மூகமாக உலகம சுருங்கியிருக்கிறது. யார் எங்கிருந்தாலும், யாரோடும் தொழிலை, சந்தைப்படுத்துதலை செய்துகொள்ள இயலும். எனவே தொழிலாக செய்யும்பொருட்டு இதை சந்தைப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கின்றன. ஓவியம் பிறரை கவருமானால், கண்டிப்பாக அது விலைபோகும். ஆனால் அந்த நிலைக்கு வர நாம் தொடர்ந்து முயற்சிக்கவேண்டியது அவசியம். 

-----

19.தானாக இதை கற்றுத்தேர முடியுமா? என்ன வழி?

நிச்சயமாக முடியும் என்றே சொல்லுவேன். தானாக கற்றுத்தேர அவசியான எல்லா விசயங்களையும், பிறரின் அனுபவங்கள் மூலம் கற்றுக்கொள்ளலாம். இந்த ஓவியத்துறையில் வல்லவர்கள் தங்கள் கட்டுரைகளை, ஓவிய நுணுக்கங்களை, பழகுவதற்கான வழிமுறைகளை, நூல்களாகவும், வீடியோவாகவும் தனியாக விற்பனைக்கும், இணையத்திலும் தருகின்றர். சிலர் இதை தொழிலாகக்கூட செய்கின்றனர். ஆனால் ஏமாற்றி பணம் செய்பவர்களை தவிர்த்து, உண்மையான ஓவியர்களை, அவர்களின் படைப்புக்களால் அடையாளம் கண்டு, கற்றுத்தேர்ந்து யார் ஒருவரும் சிறப்பிக்க இயலும். 

-----

20. ஓவியம் குறித்த மன நிலை உலகநாடுகள், இந்தியாவில் எப்படியிருக்கிறது? 

பாராட்டதகுந்த அளவில் இல்லை. நான் கிண்டலாக சொல்லுவேன். இந்தியர்கள் மட்டுமே எல்லாம் தெரிந்தவர்களாக காட்டிக்கொள்வார்கள். 
“இது நான் இசைத்த பாடல்” என்று சொன்னால், “இதென்ன, நானும் அந்த காலத்தில் இதை விட அருமையான பாடல் இசைத்திருக்கிறேன்” என்று சொல்லுவார்கள். “இது நான் சமைத்த உணவு, சுவை பாருங்கள்” என்றால். “இதென்ன விசயம், நான் இதைப்போல ஒன்றை செய்யும்போது... ” என்று பதில் வரும். “இது நான் எடுத்த ஒளிப்படம், எப்படி இருக்கிறது” என்றால். “நான் என் பழைய கேமராவில், இப்படி எடுத்திருக்கிறேன்... இதில் முக்கியமாக...” என்று அறிவுரை ஆரம்பித்துவிடுவார்கள். இதைப்பொலவே ஓவியம் முதலான எல்லாவற்றிலும்.... 

உலக நாடுகளில் பெற்றோர்கள் குடும்ப சூழ்நிலைகேற்ற வேலை பார்த்தாலும், தங்கள் குழந்தை எதை விரும்புகிறதோ, அந்த விருப்பத்தின்படியே படிக்க ஆர்வமூட்டுகின்றனர். தான் நினைத்தை செய்யும் நிலை உலக நாடு குழந்தைகளுக்கு இருக்கிறது. இந்திய குழந்தைகளுக்கு, பெற்றோரின் ஆசைப்படி அவன்/அவள் ஒரு டாக்டராகவோ, ஒரு இஞ்சினியராகவோ மட்டுமே முடியும். தன் ஆசையை தன் குழந்தைமீது திணிக்கும் வன்முறைதான் இது. கேட்டால் பொருளாதார நிலையை சொல்லுவார்கள். பிடித்தவேலையை செய்தால் கிடைக்கும் நிம்மதியை தொலைத்துவிட்டு, கைபேசியிலும், இணையத்திலும், மது போதைகளிலும் தேடிக்கொண்டிருக்கும் இளைஞ தலைமுறைகளை நான் உதாரணம் காட்ட இயலும். 

குழந்தைகளுக்கு வழி காட்டுங்கள், பிடித்துதள்ளாதீர்கள் என்றே பெற்றோர்கள் கேட்டுக்கொள்கிறேன். 

-----

21. இந்த நிலை மாற என்ன செயலாம் என்று நினைக்கிறீர்கள்?

இந்த நிலைப்பாடுகளில் அரசு, நிர்வாகங்கள், தலைவர்களை எல்லாம் நான் குறைசொல்லி தப்பிக்க தயாரில்லை. இந்த உலகில் இன்னமும் பொழுபோக்கு எனும் மிகப்பெரும் தொழில் சிறந்து விழங்குகிறது. அதில் ஓவியமும் ஒன்றே. எந்த ஒரு விசயத்தையும் ஒரு ஓவியமாக தர, புரியாத ஒன்றையும் புரியவைக்கவும் இயலும். ஒரு திட்ட அறிக்கையை இன்னமும் ஒரு பென்சில், ஓவியம், காகிதம் இவற்றில் முடிக்காது, திட்டத்தில் இறங்க எந்த நிறுவனமும் தயாரில்லை. தன் நிறுவன ஊழியர்கள் மன அழுத்தத்திலிருந்துவிடுபட ஓவியம் கற்றுத்தரும் வகுப்புக்களை நடத்துகின்றனர். 

தொழில்முறை ஓவியராக மாற, ஓவியம் கற்றுத்தேர்தலின் பொழுது நிச்சயமாகவே கொஞ்சம் காலத்தை கொடுத்துத்தான் அனுபவத்தைபெற இயலும், ஆனால் மிக நிம்மதியான ஒரு வேலையாக, ஓவியம் இருப்பதை அறியலாம், அதை பிறருக்கு கற்றுத்தருவதையும் கூட தொழிலாக செய்யமுடியும். பெற்றோர்கள் தன் குழந்தையை பணம் செய்யும் கருவியாக மாற்றாது, அவனை/ அவளை, அவர்களின் தனித்தன்மையை மதித்து அவர்களுக்கான வழிகாட்டியாக இருக்கலாம். ஓவியத்தை தொழிலாக செய்யலாமா, வேண்டாமா என்பதை அவர்களே கூட முடிவு செய்யும் பக்குவத்திற்கு வர விடவேண்டும் என்பதும் என் வேண்டுகோள்.

-----

22. இந்த கேரிகேசர் கற்கும் மாணவர்களுக்கும், தொழில்சார் ஓவியர்களுக்கும் உங்கள் கருத்தாக என்ன சொல்லுவீர்கள்? 

கற்றது கையளவு, கல்லாதது உலகளவு என்று ஒளவை சொல்லிச்சென்றதுபோல கேரிகேச்சரில், உங்களை எல்லாவகைகளிலும் சோதனை செய்துபார்க்கும் கட்டுப்பாடற்ற நிலை உண்டு. நான் இப்படித்தான் வரைவேன் என்று வட்டம் போட்டுக்கொள்ளாமல், நான் இப்படியும் வரைவேன் என்று தன் நிலை மாற்றிகொள்ளவும் தயாராக இருக்கவேண்டும். ஆனால் நிச்சமாக உங்களின் பாணி மாறவே கூடாது. 
தயக்கமே இல்லாமல் ஒரு கோடு போட்டு பழகவேண்டும், அதில் நிச்சயமற்ற தன்மை இருக்கக்கூடாது. பிற ஓவியர்களோடு கருத்துவேறுபாடின்றி பழகி, ஓவிங்கள் பற்றிய கருத்துக்களை பகிர்ந்துகொள்ளவேண்டும். எப்போதுமே பயிற்சியையும், கற்றலையும் நிறுத்துதல் கூடாது. அப்படியிருந்தால்தான் தொழில்முறை ஓவியராகவும் சிறக்கமுடியும்.

------


பகுதி ஒன்று, இரண்டு முந்தைய பதிவுகளில் கிடைக்கும்.

THE EVOLUTION OF ART BY CARICATURIST-02


சூரியக்கதிர் மாத இதழுக்கு நேர்காணல் கேள்விகளும், பதில்களும்
பகுதி 02

8. நீங்கள் விரும்பிய கேலிச் சித்திரம், அதை வரைந்தவர்கள் என 5 நபர்களைப் பற்றி குறிப்பிடுங்களேன்.

Jack Davis - இவரை ஏற்கனவே பார்த்தோம், தன் 90 வயதில்தான் “நான் இப்போதும் வரையமுடியும், ஆனால் நான் எதிர்பார்த்ததுபோல் இல்லை” என்று சொல்லியவர், தன் பென்சிலுக்கு ஓய்வு கொடுத்துள்ளார்.

Magesh - கேரளாவை சேர்ந்தவர் - வழக்கமான ஓவிய முறை, கணிணி வழியாக ஓவியம் வரவதிலும் தேர்ந்தவர். அனிமேசன் நிறுவனத்தில் தலைமை பணியில் இருக்கிறார்.

Tiago Hoisel - சாவ் பாலோ, பிரேசில் நாட்டை சேர்ந்தவர்- ஓவியராகவும், தலைமை வடிவியலாளராகவும்  பணியிலிருக்கிறார் 
https://www.behance.net/hoisel

Lumen - க்ரெச்னயா பெடரிய, ரஷ்யா நாட்டை சேர்ந்தவர் - ஓவியராகவும், தலைமை வடிவியலாளராகவும், கார்டூனிஸ்டாகவும் பணியிலிருக்கிறார்

Anthony Geoffroy - லியோன், பிரான்சு நாட்டை சேர்ந்தவர். ஓவியராக பணியிலிருக்கிறார்

-----

9. அரசியல்வாதிகள், கேலிச்சித்திரம் குறித்த சுவையான விஷயங்கள் ஏதும் உள்ளனவா?

அரசியல் விமர்சன கேலிசித்திரங்களில் பொதுவாகவே நான் பயந்தாங்கொள்ளி... வீட்டிற்கு ஆட்டோவருமே அதனால்தான். சில பத்திரிக்கைகளில் அப்படி கேட்டுக்கொண்டனர். ஆனால், பத்திரிக்கைகளில் பணிபுரிந்தால் மட்டுமே “அப்படியான” ஓவியங்கள் தர இயலும் என்று சொல்லி தவிர்த்துவிட்டேன்.

கேரிகேச்சர், கார்ட்டூன் இவைகளையெல்லாம் இயல்பான, நகைச்சுவையாக புரிந்துகொள்ளும் தன்மை வட்டத்தலைவரிலிந்து, நாட்டின் முதல்குடிமகன் வரை இல்லை எனலாம். அதனால் அந்த “அதீத முயற்சி” இதுவரை செயததில்லை, இனி செய்யவும் ஆர்வமில்லை.

அதைப்போலவே சினிமா புகழ் மனிதர்களையும் நான் வரைவதில்லை. ஆனாலும் ரசிகர்களின் வற்புறுத்தலுக்கும், எனக்குப்பிடித்த நபர்களையும் நான் வரைந்திருக்கிறேன். அப்படி, திரு. பாலுமகேந்திரா அவர்களை வரைந்து வெளியிட்டபோது, என் நண்பர் திரு. சுகா, அந்த ஓவியத்தை திரு. பாலுமகேந்திரா அவர்களிடம் அழகாக, பரிசாக மாற்றி சேர்ப்பித்துள்ளார். இந்த ஓவியம்வரைந்தவரை பாராட்டியே தீரவேண்டும் என்று திரு. பாலுமகேந்திரா சொல்ல, நான் அந்த நேரங்களில் சுகாவிடம் கைபேசி என் பகிர்ந்துகொள்ளாததால், திரு. பாலுமகேந்திராவின் பாராட்டை ஒரு வீடியோவாகவே பதிந்து எனக்குத்தந்தார். எதிர்பாராத இந்த மிகப்பெரும் பாராட்டால் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். என் ஓவியத்தின் மூலமாக தான் பெருமையடைவதாக திரு. பாலுமகேந்திரா சொல்லி வாழ்த்தினார். 

திரு ஏபிஜெ. அப்துல்கலாம், குடியரசு தலைவராக இருந்தநாட்களில், அவரின் ஓவியமும், கவிதையும் அனுப்பிவைத்ததற்கு, பாராட்டி கடிதம் அனுப்பினார். அதுபோலவே அமெரிக்க குடியரசு தலைவராக திரு. பில் கிளிண்டன் இருந்தநாட்களில், என் ஓவியத்தைபாராட்டி அவரின் பாராட்டுக்கடிதம் கிடைத்தது.  

----

10. உங்கள் கேலிச்சித்திர அனுபவத்தில் நீங்கள் ரசித்த சில அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

எதேனும் ஒரு நிகழ்ச்சியில், நேரடியாக நபர்களை கேரிகேச்சராக வரைந்துதரும்பொழுதுமட்டுமே அவர்களின் ரசனைகளை உடனுக்குடன் அறியமுடியும். அப்படி நிறைய உண்டு.

ஒரு திருமண நிகழ்வில் வரைகிறேன். அந்த திருமண சடங்கில் தலைமை புரோகிதர், தன் வேலைக்களுக்கு இடையில் என்னை கவனித்திருக்கிறார். சடங்கு முடிந்தவுடன் என் அருகில் நின்றுகொண்டு நான் வரைவதை பார்த்துக்கொண்டிருந்தார். பிறகு.. “ஆஹா. என்ன அற்புதமாக வரைகிறீர்கள்?!” என்று சொல்லியவாறே என் கைகளை தன் கைகளோடு இணைத்து குலுக்கி, என் கைகளுக்கு முத்தம் கொடுத்தார். “சரஸ்வதி குடியிருக்கா” என்று சொல்லிக்கொண்டார். அதோடு தன்னை வரையச்சொல்லி எதிரில் அமர்ந்தார். வரைந்து கொடுத்ததும், அவரின் சீடர்களோடு தன் ஓவியத்தை காட்டி சந்தோசத்தை பகிர்ந்துகொண்டு எனக்கு நூறு ரூபாய் அன்பளிப்பாக தந்தார். நான் இப்படியான நிகழ்வுகளில் இதைஎல்லாம் ஏற்றுக்கொள்வதில்லை. எனவே உங்கள் அன்புபோதும் என்றேன். மிகுந்த வற்புறுத்தலினாலும், விழாவிற்கு அழைத்தவரும் “இதெல்லாம் கொடுப்பிணை சார், வாங்கிக்கங்க” என்று சொன்னபிறகே பெற்றுக்கொண்டேன்.   

ஒரு இல்லத்தில் நிகழ்ந்த திருமண வரவேற்பு நிகழ்வில், குழந்தைகளுக்கு கேரிகேச்சர் வரைந்து தந்துகொண்டிருந்தேன். எல்லோருமெ தன்னுடைய கேரிகேச்சரை கையில் வைத்துகொண்டு சிரித்து, கேலி, கிண்டல் செய்துகொண்டிருப்பதைகண்ட ஒரு பெண் (ஐம்பது வயதிற்கு மேலாக இருக்கலாம்) தயங்கியவாறே என்னிடம் வந்து எனக்கும் வரைந்து தருவீர்களா? என்று கேட்டார்... “இப்படிகேட்கவே தேவையில்லை, உடனே அமருங்கள்” என சொல்லி எதிரே அமரவைத்து கேரிகேச்சர் ஓவியம் தந்தேன். மிகுந்த மகிழ்ச்சியோடு வாங்கிச்சென்றார்.

ஒரு மருத்துவ கூட்டத்தில் வந்திருந்த மருத்துவர்களுக்கு, கேரிகேச்சர் வரைந்து தந்துகொண்டிருந்தேன். ஒரு மருத்துவர், விழா அமைப்பினர் வற்புறுத்தலுக்காக என் எதிர் அமர்ந்தார். என்னைப்போலவே முன் தலையில் அவருக்கு முடியில்லை, நீள் சதுர முகம், படர்ந்த மீசை, அடர்த்தியான புருவங்கள் இப்படி சில அடையாளங்களை கொண்டிருந்தார். இவரை உட்காரவைத்துவிட்டு அமைப்பாளர்கள் அடுத்த மருத்துவரிடம் பேசிக்கொண்ட்டிருக்க, நான் இவரை வரையும் முன்பே, “இயல்பாக இருங்கள், இது கேலிக்காக மட்டுமே வரையும் ஓவியம், இதிலிருக்கும் நகைச்சுவையை ரசியுங்கள்” என்று சொல்லிவிட்டு வரைய ஆரம்பித்தேன். முழுதும் வரைந்து அவரிடம் தந்ததும், ஓவியத்தைப்பார்த்து அவர் முகம் சுளித்ததை கண்டேன், அதோடு சட்டென எழுந்துவாறே அந்த ஓவியத்தை ஒரு கையால் நான் கவனிக்கமாட்டேன் என்ற நினைப்பில் “கசக்கி” தன் மறுகையில் மறைத்துக்கொண்டு போய்விட்டார். நிச்சயமாக அது அங்கே இருந்த குப்பைக்கூடைக்கு போயிருக்கலாம். 

-----

11. கேரிகேச்சரிஸ்ட் என்னும் சொல் நம் தமிழ் மக்களிடையே பரவலாகப் போய் சேர்ந்திருக்கிறதா?

கேரிகேச்சர், ஆர்டிஸ்ட் என்ற இணைப்பே கேரிகேச்சரிஸ்டாக வந்திருக்கின்றது. கார்டூன், கார்டூனிஸ்ட் என்ற நிலையில் இல்லாவிட்டாலும், இளையர்களிடம் கேரிகேச்சர் மிகுந்த ஆர்வத்தை ஏற்படித்தியிருக்கிறது. இந்திய அளவில் இப்போது இதை கற்க, வெளிப்படுத்த, சோதனை ஓவியங்கள் தர ஆரம்பித்திருக்கின்றனர். இதனால் இந்த கேரிகேச்சரிஸ்ட் என்னும் சொல்லும் பரவ ஆரம்பித்திருகிறது. மக்களுக்கு சுலபமாக சேர்க்கக்கூடிய நிலையிலிருக்கும் பத்திரிக்கைகள், வார இதழ்கள், தொலைக்காட்சிகள் கேரிகேச்சர் என்ற விசயத்தை சேர்த்துக்கொள்வதில்லை. ஒரே ஒரு இதழ் வாராவாரம் ஒரு கேரிகேசரை தந்து கொஞ்சம் தெரியப்படுத்திக்கொண்டிருக்கிறது. 

நான் என் நண்பர்களுக்கு அன்பளிப்பாக கேரிகேச்சர் வரைந்து அதை இணையத்தில் பகிவர்தன் மூலம், நண்பர், அவர்தம் நண்பர் என்று பலபேருக்கு “இந்த கேரிகேச்சர், கேரிகேச்சரிஸ்ட்” சென்று சேர்கிறது. பேஸ்புக், டிவீட்டர் மூலமாக பரவலாகிவருகிறது.

எதாவது ஒரு தமிழ்சினிமாவில், ஒரு கதாநாயகன், “கேரிகேச்சரிஸ்டாக” நடித்தால் தமிழ்நாடெங்கும் புகழ்பெற்ற சொல்லாகிவிடும் என்று நினைக்கிறேன். 

-----

13. இப்போது சட்டென்று உங்களை ஒரு கேலிச்சித்திரம் வரையச் சொன்னால், வரைவதற்கு எந்த ஆளுமையைத் தேர்ந்தெடுப்பீர்கள்

என்னையே உதாரணமாகக்கொண்டு வரைந்துவிடுவேன். நான் நடத்தும் பயிற்சி வகுப்புகளில் கூட நான்தான் எனக்கு பரிசோதனை எலி. பிறரை வரைந்தால் “இதென்ன இப்படி இருக்கு” “நானா இது?” “கொஞ்சம் இந்த மூக்கை திருத்துங்கள்” “கன்னம் ரொம்ப குண்டாயிருக்கு” “உதடு இன்னும் சிறுத்துவரவேண்டும்” என்று எனக்கு பாடம் சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள். 

-----

14. உங்கள் கேரிகேச்சர் ஓவியங்களில் மாற்றங்களை ஏற்றுக்கொள்வீர்களா? அப்போது உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?

நான் நிகழ்ச்சிகளில் நேரடியாக நபர்களை வரையும் கேரிகேச்சர்களில் திருத்தங்கள் சொன்னால் “இது அப்படித்தான் இருக்கும்” என்று சொல்லிவிடுவேன். அந்த திருத்தங்கள் சொல்பவருக்கு “கேரிகேச்சர்” பற்றிய விழிப்பு இல்லாதிருக்கும், அதுதான் உண்மை. சிலர் “எனக்கு இந்த கேலி வேண்டாம் சாதரணமாக வரைந்துதாருங்களேன்” என்று கேட்டால் அதுபடி  வரைந்துகொடுத்து அவர்களை திருப்திபடுத்துவேன். குறைசொல்லும் நிலையில் இதுவரையிலும் நான் கோபம் கொண்டதில்லை. “கேரிகேச்சர்”குறித்து விளக்கமளித்து, அது ஏன் இப்படி வரையப்படுகிறது என்று புரியவைப்பேன்.

ஒரு நண்பர் என்மீது மிகுந்த கோபத்தில் “ஒரு படைப்பை குறை சொல்லும் மனிதர்களோடு எதற்கு வேலை செய்வது? பணத்தை திருப்பி கொடுத்துவிடவேண்டியதுதானே. நான் அப்படித்தான், குறை சொன்னால் பொறுத்துக்கொள்ளமாட்டேன்” என்றார். ஆங்கிலத்தில், சில குறை சொல்லும் மனிதர்களை மற்றவர்கள் திருத்தும் நிலைக்கு, “அவனுக்கு கற்றுக்கொடுத்தேன்” என்பார்கள். அதுபோலவே தெரியாத ஒன்றை தெரியப்படுத்தி விளக்கமளித்தலும், சரி செய்தலும் நிச்சயம் வேண்டும்

தொழில்சார்ந்த கேரிகேச்சர்களிலும், இப்படி நடக்கும். பலமுறை திருத்தங்கள் கேட்டு பெறுவார்கள். இதனால் இந்த திருத்தங்களுக்கும் தனி விலை சேர்க்கும் நிலையும் இருக்கிறது. அவர்கள் பணம் கொடுத்துவாங்குவதால் அந்த திருத்தங்களை நாம் செய்யவேண்டியிருப்பது உண்மை. இத்தகைய திருத்தங்களால் ஓவியன் குறைபட்டுபோவதில்லை மாறாக அனுபவமே பெறுகிறான்.

-----

15. இப்போதும் கேலிச்சித்திரம் வரையக் கற்றுக்கொள்ளும் விருப்பில் மக்கள் இருக்கின்றனரா? கேலிச் சித்திரம் வரையக் கற்றுக்கொள்ள விரும்புபவர்கள் என்ன செய்ய வேண்டும்? யாரைப் பார்க்க வேண்டும்? நீங்கள் வகுப்பு எடுக்கிறீர்களா?

குழந்தை பருவத்தில் எல்லா குழந்தைகளும் ஓவியம் வரைய ஆர்வமாகவே இருக்கிறார்கள். “இனிமே படம் வரைஞ்சே, கையை ஒடைச்சிபோடுவேன்”என்ற அம்மாவின் பயமுறுத்தலால், அந்த குழந்தை பென்சிலே எடுப்பதில்லை. ஸ்கேல்வைத்து கோடுகள் போடுவதை தவிர. அந்த கோடு போடவே, ஓவியம் கற்கலாம் என்பதும், ஸ்கேல் இல்லாமல் நேரான கோடுபோடும் அறிவை அதுதரும் என்பது அம்மாவிற்கு தெரிவதில்லை. காரணம், அவங்க அம்மாவும் அவங்களை அப்படித்தான் சொல்லியிருப்பார்கள். ஓவியம் படிப்பை கெடுப்பதாக ஒரு நினைப்பு அவர்களுக்கு. இதனாலேயே தனக்குப்பிடித்த விசயத்தைசெய்யவே குழந்தைகள் தயங்குகிறார்கள். காலப்போக்கில் தன் குழந்தை தவிர்த்துவிட்ட ஒன்றை, பள்ளியில் தரப்படும் ஓவியத்தை, தன் பிள்ளை ஒழுங்காகசெய்யவில்லையெ என்று கவலை கொண்டு, ஒரேநாளில் ஓவியம் கற்க, எங்களை மாதிரி ஓவியர்களிடம் அழைத்துவருகின்றனர். 

இந்தவயதிலும் நான், சக ஓவியர்களில் படைப்புக்களிலிருந்து ஓவியம் கற்றுத்கொண்டுதான் வருகிறேன். இப்படி இருக்கையில் உடனெ ஓவியம் கற்றுக்கொள்ளுதல் முடியாத ஒன்று. பள்ளி மேல்நிலை இறுதிமுடித்தவர்கள். சென்னை, கும்பகோணம் ஓவிய கல்லூரியில் சேர்ந்து படிக்கலாம். இதில் ஆராய்ச்சி பட்டபடிப்புவரை செல்லமுடியும். ஆனால் இதற்கு அவர்கள் நடத்தும் ஓவிய பரிட்சையில் தகுதி பெறவேண்டும்.

கேரிகேசர், கார்டூன் போன்ற கேலிசித்திர வகுப்புகள் தனியாக நடத்தப்படுவாதாக தெரியவில்லை. ஆனால் ஒருநாள், இரு நாள் பயிற்சி முகாம் நடத்தப்படுகின்றன. ஓரளவுக்கு ஓவியம் படைக்கத்தெரிந்தவர்களே இதில் கலந்துகொண்டு பயன்பெற முடியும். ஆனால் கேலிசித்திரம் குறித்த ஒரு அறிமுகத்திற்கு இது உதவும்.

நான் என் அலுவலகத்தில் அடிப்படை ஓவியங்கள் முதல் வண்ணக்கலவை ஓவியங்களை வரை கற்றுத்தருகிறோம். கூடுதலாக ஆர்கிடெக்ட் படிக்கதேவையான தகுதி தேர்வுக்கான (NATA) வழிமுறைகளும் கற்றுத்தருகிறோம்.

ஓவியம் கற்க மட்டுமல்ல. அதுதொடர்பான கேள்விகளுக்கும் பதில்தர என்னை யாவரும் தொடர்புகொள்ளலாம்.

-----

16. இந்த ஓவியவகை கற்றலில் அடுத்த நிலை என்ன?

கேரிகேச்சர் கற்றலில் சில அடிப்படை விசயங்கள் உள்ளன. ஏறக்குறைய அடிப்படை ஓவியம் கற்றலின் அதே பாடங்களே இதற்கும் போதும். ஆனால் அதை வெளிப்படுத்தும் நிலையில் மட்டுமே மாற்றம் கொண்டிருக்கிறது. இதை ஓவியமாக செய்யும் அதேவேளையில் தனக்குக்கிடைத்த ஓவ்வொரு முகங்களையும் வரைந்து பழகி, உதாரணமாக ஒரே முகத்தை ஒரு பத்துவிதமாக, என்னென்ன செய்தால் என்னென்ன மாற்றங்களை அந்த முகம் தருகிறது என்கிற முயற்சியில் ஈடுபட்டு அனுபவம் பெறவேண்டும். பிறர் கேரிகேச்சர் ஓவியங்களை கண்டும், அதில் அவர் தருகிற விசயங்களை பழகவேண்டும், ஒருபோதும் அதேபோல செய்யாது, தன் அனுபவத்தை அதில் தர வேண்டும். கற்றல் எல்லையில்லாதது.

பகுதி ஒன்று முந்தைய பதிவிலும், மூன்றும் அடுத்த பதிவுகளில் கிடைக்கும்.

THE EVOLUTION OF ART BY CARICATURIST-01


கடந்த நவம்பர் மாதம் 2015ல், சூரியகதிர் மாத இதழில் வெளியான எனது பேட்டியை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்... இதில் பிரசுரமாகாத சில கேள்வி-பதில்களும் இணைந்திருக்கின்றன.

சூரிய கதிர் இதழ் ஆசிரியருக்கும், கேள்விகளால் எனக்குள் என்னைத்தேடச்செய்து பதில்களை தரச்செய்த கவிஞர், எழுத்தாளர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர் திருமதி. மதுமிதா அவர்களுக்கும் நன்றி.

சூரியக்கதிர் மாத இதழுக்கு நேர்காணல் கேள்விகளும், பதில்களும்
பகுதி 01

1. ஓவியம் வரைதல் என்பதை எந்த வயதில் ஆரம்பித்தீர்கள்? நீங்கள் வரைந்த முதல் ஓவியம் உங்களுக்கு நினைவிருக்கிறதா? 

என் ஆறுவயதுகளில் யானை வரைந்தது நினைவில் நிலைத்திருக்கிறது என்பதால், அதற்கு முன்பே கூட வரைய முயற்சித்திருக்க வாய்ப்புள்ளது. என் தந்தை பொழுதுபோக்காக சில ஓவியங்கள் வரைவதை கண்டு இந்த ஆர்வம் வந்திருக்கலாம். காலப்போக்கில், ஒவியத்தில் நான் ஆர்வமாயிருந்ததைக்கண்டு, எந்ததடையும் செய்யாது, அவரே சில திருத்தங்கள் சொல்லித்தந்ததும் உண்டு. ஆனாலும் நான் தனித்து நிற்க முயற்சித்த காலங்களிலேயே அவர் இல்லை.

நான் என் இளமைக்காலம் முதலே மிகச்சுதந்திரமாக உணர்ந்தேன். என் ஒரு சகோதரிகள். என் சகோதர் என்னை எந்த விதத்திலும் கட்டுப்படுத்தியது இல்லை. இதனால் என் எல்லா ஆர்வங்களுக்கும் நல்ல தீனி கிடைத்தது... ஓவியத்தில் ஒரு முழுமை கிடைக்க உதவியது.

-----

2. சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் என்னும் பழமொழிப்படி, ஆர்வம் இல்லையென்றாலும் வரைய வரைய தான் சித்திரம் வருமா, வரையும் ஆர்வம் இருந்தாலே தானாக ஓவியம் வரைய வந்துவிடுமா?

நாம் எந்த மொழியிலும் எழுதுகிற எழுத்துக்கெல்லாம் ஓவியமே ஆதாரம். அந்த ஓவியத்தின் இன்னொரு பரிணாமம் தான் எழுத்தாக உருமாறியிருக்கிறது. இன்னமும் சீன, பாரசீக, ஜப்பான எழுத்துக்களில் வினைச்சொல்லுக்கு ஆதாரமாக எழுத்துருவை காணமுடியும். ஆக நன்றாக எழுதுபவரே கூட ஓவியம் வரையவும் முடியும். நாம் பொதுவாகவே மிக தெளிவாக, கசங்களில்லாத, உயிர்ப்பாக வரைவதுதான் ஓவியம் என்ற முடிவுக்கு வருகிறோம். அப்படியில்லவே இல்லை. ஒரு ஓவியத்திற்கான வரையறை எதுவுமே கிடையாது. குழந்தையின் கிறுக்கலும் ஓவியமே. அந்த கிறுக்கல் உருவமாக மாற்றமடைவது பயிற்சியினால் கிடைக்கும். அந்த பயிற்சி ஆர்வமிருந்தால் மட்டுமே கிடைக்கும்.

சில கலைகள் சொல்லிக்கொடுக்காமல் வரும், அதில் ஓவியம் முதன்மையானது. தானாக கற்று, தனித்து நின்று ஓவியராக வெளிப்படுவர்கள் அதிகம். நானும்கூட அதில் ஒருவனே...

பிக்காசோ சொன்னது போல, பிறக்கும் நிலையில் எல்லோருக்குள்ளும் ஓவியனிருக்கிறான், ஆனால் தன்னை ஓவியனாக நிலை நிறுத்துவது தொடர்ந்த பயிற்சிகளால் மட்டுமே.

-----

3. ஓவியத்தின் வகைகளில் இயற்கை, பூக்கள், விலங்குகள், மனிதர்கள்  என சித்திரம் தீட்ட எத்தனையோ பிரிவுகள் இருக்கையில்,  ஒரு ஓவியருக்கு ஒரு பிரிவைத் தேர்ந்தெடுக்கத் தோன்றுவது அவரின் ஆர்வம், விருப்பம் சார்ந்த விஷயம் மட்டுமா? அல்லது இயற்கை பிறவியில் அவருக்கு அளித்த கொடையாக அதைப் பார்க்க வேண்டுமா?

ஓவியம், அடிப்படை ஓவியம், காண்பதை அப்படியே வரைதல், தன் அனுபவத்தை அதி ல் சேர்த்தல், கருப்பொருளாக வரைதல், மனதில் தோன்றும் உணர்வுகளின் அடிப்படையில் வரைதல் இப்படி பல பிரிவுகளில் ஒருவர் கற்றுத்தேரவேண்டிவரும். அந்தந்த வயது, அனுபவம், சொல்லித்தரும் ஓவிய ஆசிரியர் இப்படியும் அவர்களின் ஆர்வம் தூண்டப்படும், தன் ஓவிய வெளிப்பாடுகளில், எளிதான, வேகமான, தெளிவான கருத்தை சொல்லும் ஓவியங்களை வகைப்படுத்தி, இது எனக்கு நன்றாக செய்ய முடிகிறது என்ற நிலையிலேயே தன் பாணியை தேர்ந்தெடுக்கின்றனர்.

உலகின் பொருளாதார நிலையில் ஓவியன் நிலைமை, கொஞ்சம் கடினமானதே. இதனாலும் தான் நினைத்ததை, தனக்கு தன் பிழைப்புக்கு உதவும் வகையிலும் பாணியை தயார்படுத்திக்கொள்கின்றனர். நான் கேரிகேச்சர் எடுத்துக்கொண்டதற்கு, இதை யாரும் அதிகமாக இங்கே இந்தியாவில் செய்யாததும், எனக்கு இது சுலபமாக கைவரப்பெற்றதும் காரணமாகும். பொழுதுபோக்காக செய்ய ஆரம்பித்தது என் வயிற்றுபாட்டுக்கு உதவும் நிலைக்கு உயர்ந்தது. இன்று இந்த கேரிகேச்சர் ஓவியத்தொழிலே என் முழு நேர பணியாகும்.

இயற்கையாகவும் குறிப்பிட்ட சிலவகை பாணியை கொண்ட ஓவியர்களும் உள்ளனர். இது அவர்களின் மூதாதையரின் ஆர்வத்தால், அவர்களுக்குள் விளைந்த நிலையாகும்.

-----

4. சித்திரம் தீட்டுதல் என்பது பல பிரிவுகளைக் கொண்டதாக இருக்கையில் நீங்கள் கேலிச் சித்திரம் வரைவதை எப்படி ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்?

2006 ம் ஆண்டு வரை, பார்ப்பதை அப்படியே வரைவதையே செய்துவந்தேன். கிடைக்கும் காகிதத்தில் வரைந்து நண்பர்களிடம் காட்டி பெருமைசெய்துகொள்வதைத்தவிர ஏதும் செய்ததில்லை. சிலருக்கு அன்பளிப்பாக அந்த ஓவியங்களை தந்துவிடுவதும் உண்டு, ஓவிய சந்தை இருப்பது தெரிந்தாலும் அதில் நுழைய சில தயக்கங்கள் இருந்தது. இதனால் எனக்கு கிடைத்த கணிணி வரைகலை மட்டுமே ஆரம்ப நாட்களில் தொழிலாக செய்துவந்தேன்.

ஆனாலும் வேலைகளோடு 2001ம் ஆண்டுமுதலே இணையம் எனக்கு அறிமுகமாகி, 2003ம் ஆண்டுகளில் இணையத்தில் அதிக நேரம்  வேலையோடு வேலையாக செலவிட வாய்ப்பு வந்தது. மேற்கு நாடுகள் எப்போதும் நம்மை விட எந்த நிலைகளிலும் ஒரிரு ஆண்டுகள் முன்னிலையிலேயே இருப்பார்கள். அப்படி காண்கையில் கார்டூன் போல், ஆனால் வித்தியாசமாக, ஒரு மனிதரின் அடையாளங்களை மாற்றாது, கொஞ்சம் மிகைப்படுத்தி, கேலியை மையமாகக்கொண்ட ஒரு ஓவியத்தை ஆங்கில இணைய பத்திரிக்கைகளில் காணமுடிந்தது. அதன் கேலி எனக்கு பிடித்திருந்தது.

எப்போதும் ஒரு வித்தியாசமே, புதிய கவனத்தை உருவாக்கும். அதனால் அந்த கேரிகேச்சரை எப்படி செய்திருக்கிறார்கள் என்று ஆராயமுனைந்தேன். மேலும், மேலும் இந்த கேரிகேச்சர் குறித்து பார்த்தும், அதைப்போல வரைந்தும் சோதனை செய்துகொண்டேன். என் ஆரம்பகால கேரிகேச்சர்களில், நானே சில சோதனைகள் செய்து பார்த்துக்கொள்வேன். அதில் விகாரம் அதிகமாக இருப்பதை காணலாம், பற்கள் வரிசை, உதடுகள், காதுகள், மூக்கு, கண்கள் பெரிதாக வரைந்து தள்ளினேன்.

ஆனால் ஒரு ஒளிப்படம் எடுத்தாலே “இது என்னை மாதிரி இல்லை” என்று புறந்தள்ளும் “ஓவிய ஆர்வலர்கள்” மத்தியில் இது எடுபடாது என்பதை நான் உணர்ந்து,  கேலி செய்தாலும், அவர்களுக்கு பிடிக்கும் வகையில், அவர்களை சற்றே மிகைபடுத்தும் நிலைக்கு பழகி அதுவே என் பாணியாக வைத்து பயணிக்கிறேன். சந்தைப்படுத்துகிறேன்.

-----

5. தன்னைப் போன்ற அழகான ஓவியத்தை விரும்பும் மக்கள், போட்டோ எடுப்பதை விடவும் ஓவியம் வரைந்து பெற்றுக் கொள்வதில் ஆர்வமாகவும், தன்னுடைய அழகிய முகத்தை கேலிச்சித்திரமாக மாற்றிப் பார்ப்பதில் விருப்புடன் இருக்கிறார்களா?

வழக்கமாக நான் சொல்வதுண்டு, “எல்லோருக்கும் கேரிகேச்சர் ரொம்ப பிடிக்கும், அதில் தன் முகம் இல்லையென்றால் மட்டும்”.

முந்தைய பதிலில் சொன்னதுபோல, ஓவ்வொருவிதமான ஒளியில், ஓவ்வொருவிதமான பிண்ணனியில், வெவ்வேறு வகை லென்சுகளில் எடுக்கும் ஒளிப்படங்களில், நிச்சயமாகவே ஒருவரின் முகம் வெவ்வேறு தோற்றத்தில் இருக்கும். சப்ஜெக்ட், கேமரா, கேமராமென் என்ற பினைப்பு இருப்பதால் இது நான்தான் என்று வேறு வழியில்லாமல் ஏற்றுக்கொள்வார். சில திருமண போட்டோ ஆல்பம் பார்த்துவிட்டு, போட்டோகிராபரை ஏசும், அடிக்கக்கூட வரும் முட்டாள் கூட்டங்கள் உண்டு. அப்படி இருக்கையில் கையால் வரையும் ஓவியத்தை குறை சொல்லாமல் வாங்குபவர் பத்துக்கு ஐவர் என்று சொல்லலாம்.

ஒரு கண்காட்சியில் நான் நேரடியாக நபர்களை ஓவியம் வரைந்து கொண்டிருந்தேன். ஒரு பெண் வந்து, “சார், என்னை எவ்வளவு கிண்டல் செய்ய முடியுமோ அவ்வளவு கிண்டல் செய்து வரைந்துகொடுங்கள்” என்றார்... வரைந்துமுடித்ததும் “வாவ்” என்று சந்தோச கூச்சலிட்டு மகிழ்ச்சியோடு விடைபெற்றார். இந்த அளவுக்கு ஆர்வமாக இருப்பவரும் உண்டு. இந்த சந்தோசத்தைப்பார்த்த என் நண்பர்... “நானும் உங்களைப்போல ஓவியம் கற்று. இப்படி மக்களை சந்தோசப்படச்செய்யவேண்டும், கற்றுக்கொடுங்கள்” என்றார்...

-----

6. மக்களிடையே கேலிச்சித்திரத்துக்கான வரவேற்பு எப்படி இருக்கிறது?

பத்தாண்டுகளுக்கு மேலான என் பயணத்தில், கேரிகேச்சருக்கான நிலை அற்புதமாக இருக்கிறது... இது இன்னும் சிறக்கும். இந்த ஓவியங்களில் ஒவ்வொரு ஓவியருக்கும் ஒரு பாணியை கொண்டிருப்பதால் எது சிறந்தது என்று கூற இயலாது. தன்னால் முடிந்த சிறப்பை அந்த ஓவியத்தில் அளிக்கிறார்கள் என்பதே உண்மை. வாடிக்கையாளார்களுக்கு எது, எந்தவகையான பாணி பிடிக்கும் என்பதை பொறுத்து ஓவியர்களுக்கு வரவேற்பு கிடைக்கும். இந்த ஓவியங்களில் ஓவியத்திற்கான ஓவியரின் அனுபவம் மட்டுமே உயர்வாக இருக்கும். இதனால் அப்படியான ஓவியர்களின் ஓவியத்திற்கு தனித்த விலை இருக்கும். அந்தவிலை மிகசாதாரணருக்கு கடினமாக இருக்கும். இதனால் நகர்புறங்களில் மட்டுமே இது சிறப்பாகிறது,

ஆனாலும் இதன் கேலித்தன்மை எல்லோரையும் கவர்வதால் “எப்படியாயினும்” எங்களுக்கு இதுபோல ஓவியம் வேண்டும் என்று விரும்பி கேட்டுக்கொள்பவர்களும் உண்டு. குறிப்பாக இளம் காதலர்கள், திருமணம் செய்யப்போகும் ஜோடிகள் தங்கள் திருமணத்திற்கு இத்தகைய கேரிகேச்சர்களை தங்கள் பத்திரிக்கைகளில் சேர்க்கவும், பெரிதாக தங்கள் இல்லங்களில் வைத்துக்கொள்ளவும் மிக ஆர்வமாக இருக்கின்றனர். என் ஆரம்ப காலங்களில் என் வாடிக்கையாளர்கள், கடல்கடந்த நாட்டிலிருந்து கிடைத்தனர். இப்பொதோ மிக அருகிலுள்ள நகரங்களில் இருந்தும் ஓவியங்கள் பெற்றுச்செல்கின்றனர்.

-----

7. கேலிச்சித்திரத்துக்கு உங்களுக்கு ஆதர்சமாக யாரைக் குறிப்பிடுவீர்கள்?

எல்லோருக்கும் அறிமுகமான லியானர்டோ டா வின்சி கேரிகேச்சருக்கு இணையான, சில விகாரமாக, இயல்புக்குமாறான தோற்றம் கொண்டவர்களை வரைந்திருப்பதான ஓவிய குறிப்புக்கள் இருக்கின்றன.

எனக்கு குறிப்பாக சொல்லவேண்டும் என்றால், அமேரிக்க நாட்டிலிருந்து வெளியாகும் MAD (https://en.wikipedia.org/wiki/Mad_(magazine)) எனும் நகைச்சுவை பத்திரிக்கையில் 1952 ல் ஓவிய ஆசிரியராக பணியாற்றிய ஜேக் டேவிஸ் (Jack Davis) (https://en.wikipedia.org/wiki/Jack_Davis_(cartoonist)) அவர்களை சொல்வேன். நான் அப்போதெல்லாம் பிறந்திருக்கவில்லையாதலால், தற்காலத்தில் இணையம் வழியாக அவரின் படைப்புக்களை கண்டே அறிந்துகொண்டேன். இவரின் பாணி இப்போதைய காலத்தை ஒத்திருப்பதை அறியலாம்.


மேலும் விட்டிகிராபி (wittygraphy), பிகேன்ஸ் (Behance) என்னும் இணையதளகளில் நிறைய தொழில்முறை கேரிகேச்சர்கள் தங்கள் படைப்புகளை தந்துகொண்டிருந்தனர். அவர்களின் படைப்புகளிலிருந்தும் நான் கற்றுகொண்டு என் பாணியை வெகு சீக்கிரமே கண்டறிந்தேன். முக்கியமாக கேரிகேச்சரின் வெளிப்பாடு அந்த கதாபாத்திரத்தின் முக்கிய அடையாளங்களை கொண்டுவருவதான கேரிகேச்சர்களில் நான் கவனம் செலுத்துவேன். அப்படிப்பார்த்தால், என் ஆர்வத்திற்கு ஈடு கொடுத்தவர்களாக நிறைய ஓவியர்களை சொல்ல இயலும்...


பகுதி இரண்டும், மூன்றும் அடுத்த பதிவுகளில் கிடைக்கும்.



The Evolution of Art by Caricaturist


Past November 2015,
The Suryakathir, monthly magazine published my interview. I am happy to share with you this interview pages. Thanks to Suryakathir Editor and team and My friend Poet, Writer. Ms.Madhumitha, who bring out the answers from me (by my inner search)

Page 01 - Click image for see bigger

Page 03 - Click image for see bigger
Page 03 - Click image for see bigger