March 2024 | CJ

March 2024

Is it okay by practice one meditation per day?


ஒரு நாளைக்கு ஒரு தவம் மட்டுமே செய்துவர முடிகிறது. அது சரியானதுதானா?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி: 

வாழ்க வளமுடன் ஐயா, ஒரு நாளைக்கு ஒரு தவம் மட்டுமே செய்துவர முடிகிறது. அது சரியானதுதானா?


பதில்:

வாழ்கின்ற இந்த உலகில், தனி மனிதராக இருந்தாலும், குடும்ப அமைப்பில் இருந்தாலும் அன்றாடம், பரபரப்பாக இயங்க வேண்டிய கட்டாயம் எல்லோருக்குமே உண்டு. எந்த வகையிலும் அதை தவிர்க்க முடியாது. சில விடுமுறை நாட்களில் கூட ஓய்வாக இருக்கமுடியாத சூழல் இருப்பதும் உண்மை. அப்படியான நிலையில்,  தவம் செய்வதற்கு நேரம் ஒதுக்குவதும் கடினமே.

பொதுவாக ஒரு நாளில், நான்கு தவம் இயற்றுவதற்கான் வாய்ப்புக்கள் உள்ளது. 1) அதிகாலை 2) முற்பகல் 3) மாலை 4) இரவு படுக்கைக்கு முன்பாக என்று பிரித்து விருப்பமான தவங்களை செய்யலாம், இரவில், மற்ற எந்த தவங்களையும் தவிர்த்து, சாந்தி தவம் மட்டும் செய்துவருவது சிறப்பு. அப்படியில்லை என்றால், அன்றைய உறக்கம் கெடும், உடலும், மனதும் துன்புறும் என்பது உறுதி.

என்றாலும், இன்றைய சூழலில், எனக்கு தவம் செய்யவே நேரமில்லை என்று ஒதுக்கிவிட்டு, உலகோடு ஓடாமல், ஒரு நாளைக்கு ஒரு தவம் மட்டுமே செய்ய முடிகிறது என்பதே சிறப்புத்தான். அதற்காக பாராட்டவும் செய்யலாம். ஆனால், நம்முடைய உடலும், மனமும் ஓடுகின்ற பரபரப்பான ஓட்டத்திற்கு அமைதி கொடுக்கவும், யோகத்தின் வழியாக நாம் உயரவும், ஒரு நாளைக்கு ஒரு தவம் மிகதாமதமாகவே உதவும். உதவாது என்று சொல்லுவதற்கு வழியில்லை. எனினும் இந்த யோக பயணம் நீண்ட நாள் எடுத்துக்கொள்ளும். 

அதனால், வேலை நாட்கள் என்று எடுத்துக்கொண்டால், ஐந்து நாட்களுக்கு, நாளில் ஒரு தவமும், விடுமுறை நாட்களிலாவது, மூன்று முதல் நான்கு தவம் செய்வதற்கு திட்டமிட்டுக்கொள்ளுதல் சிறப்பானதாகும். அப்படியாக உங்கள் சூழலை மாற்றிக்கொள்ள தயக்கம் வேண்டாம். இன்றே உடனடியாக திட்டமிட்டு தொடங்கிடுக. நிச்சயம் உதவிடும், மாற்றமும் வரும்.

உங்களுக்கு வாய்ப்பிருந்தால், நீங்கள் செய்கின்ற அந்த ஒரே ஒரு தவத்தை, அருகில் உள்ள நண்பர்களோடு, தவ மையத்தில் அன்பர்களோடு செய்வதற்கு வாய்ப்பிருந்தால் அதை பயன்படுத்திக் கொள்க. மிகுந்த பயன் தருவற்கு வழி உண்டாகும். மேலும் நீங்கள் வீட்டிலே அதை செய்வதாக இருந்தால், அதிகாலை என்பதை வழக்கப்படுத்திக் கொள்ளவும். ஏதெனும் வகையில் அந்த அதிகாலைத் தவம், நாள் முழுவதும் புத்துணர்ச்சியோடு உங்களை செயலாற்ற  வைக்கலாம் அல்லவா? அப்படி சிறப்புற உங்களை வாழ்த்தி மகிழ்கிறேன்.

வாழ்க வளமுடன்

-

Does a dead soul leave immediately? Where is it going?


இறந்த உயிர் உடனடியாக வெளியேறிவிடுமா? எங்கே போகிறது?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி: 

வாழ்க வளமுடன் ஐயா, இறந்த உயிர் உடனடியாக வெளியேறிவிடுமா? எங்கே போகிறது?


பதில்:

கருவிலே தொடங்கிடும் நம்முடைய உயிரின் பயணம், பிறந்து வாழ்கின்ற காலமுழுவதும் கூடவே பயணித்து, குறிப்பிட்ட காலத்தில், வாழ்நாளின் முடிவில் உடலை விட்டு பிரிந்துவிடும். இது இயற்கையின் நியதியாகும். எந்த மாற்றத்திற்கும் உட்பட்டதல்ல. இது எல்லா ஜீவன்களுக்குமே உரித்தானதுமாகும். குரு மகான் வேதாத்திரி மகரிஷி சொல்லுவது போல, ‘இது இயற்கையின் நீதி. இதில் தப்பித்தோர் யாருமில்லை. ஒரு நூறாண்டு என்று எடுத்துக்கொண்டால், அன்று வாழ்ந்தவர்கள் இன்று இல்லை. இன்று வாழ்ந்து கொண்டிருப்பவர்கள், அடுத்த நூறாண்டுகளில் இருக்கப்போவதும் இல்லை’.

நம்முடைய உடல், உயிர், மனம் கூடவே இன்னொன்றான ஆன்மா (ஆத்மா) இதில் நாம் யார்? என்ற கேள்வி எழுவது இயல்பு. அந்த நாம் யார்? என்று நான் சொல்லுவதை விட, ‘நான் யார்?’ நீங்களே உங்களுக்குள்ளாக கேட்கும் பொழுதான் அங்கே உங்களுக்கான ஆராய்ச்சி தொடங்கும். எனவே அதில் நான் குறுக்கே நிற்கப்போவது இல்லை. ஆனால் நாம் உயிர் அல்ல என்பதை மட்டும் என்னால் சொல்ல முடியும்.

‘ஆனால் நாம் உயிரால்தானே வாழ்கிறோம்’ என்று சொல்லுவீர்கள். ஆம் அது உண்மைதான். நாம் + உயிரால் = வாழ்கிறோம். இங்கே நாம் தனித்து நிற்பதை அறிவீர்களா? உயிரால் வாழ்கிறோம்,. உயிரில்லையேல் நாமும் இல்லை. அப்படியென்றால் நாம் யார்? அதுதான் ‘நான் யார்?’ என்ற கேள்வியில் கிடைப்பதாகும்.

உயிர், தினமும் நம்மைவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக பிரிந்து கொண்டேதான் இருக்கிறது. அதனால்தான் காலையில் இருக்கும் உற்சாகம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, சோர்ந்துபோய், களைத்து உறங்கிவிடுகிறோம். சிலர் மயக்கமே அடைந்துவிடுகிறார்கள். அதை சரிசெய்யவே, காற்று, தண்ணீர், உணவு, பூமியின் மையப்பகுதியில் இருந்து வரும் சக்தி அலைகள் நமக்கு உதவுகிறது. என்றாலும், ‘ஒரு நாள் என்பது உயிரை அறுத்தெறியும் வாள்’ என்றுதான் ஆசான் திருவள்ளுவர் தன் குறள் வழியாக சொல்லுகிறார். அதுவும் உண்மைதான்.

வாழ்நாளின் காலம் முடிந்துவிட்டால், காலன் வந்துவிட்டான்  என்று சொல்லுவார்கள். வடநாட்டில் காளி என்றும் சொல்லுவார்கள். உயிர் உடனடியாக நம் உடலை விட்டு வெளியேறிவிடும். உயிரின் தன்மை எப்போதும் தனித்தன்மை வாய்ந்தது. உடனடியாக வெளியேறி, உடலுக்கு அப்பாலுள்ள, விண் துகள்கள் களத்தோடு இணைந்துவிடும். ஏன்? வெளியே விண்ணாக (ஆகாஷ்) இருப்பதுதான் உடலளவில் உயிராக இருக்கிற உண்மை அறிவீர்களா? மற்றபடி உயிர் எங்கேயும் போய்விடுவதில்லை. 

என்ன? ஏதேனும் என்னோடு வாள் சுழற்ற தயாராக இருக்கிறீர்களோ? பார்க்கலாம்.

வாழ்க வளமுடன்

-

Why some people looking calm but they extreme blast sometimes?


அமைதியாக இருக்கும் பலர் தீடீரென்று வெடிப்பதுபோல நடந்துகொள்வது ஏன்? அதனால் எழும் பிரச்சனை என்ன?



வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி: 
வாழ்க வளமுடன் ஐயா, அமைதியாக இருக்கும் பலர் தீடீரென்று வெடிப்பதுபோல நடந்துகொள்வது ஏன்? அதனால் எழும் பிரச்சனை என்ன?

பதில்:
உங்களுடைய கேள்வியில், அமைதியாக இருக்கும் பலர் என்பதை விடவும், அமைதியாக இருப்பதுபோல நடிக்கும் பலர் என்பதுதான் சரியானது ஆகும். உலகவாழ்வில், நன்கு கல்வி கற்றவர், சிந்தனையாற்றல் மிக்கவர், தன் காரியத்தில் கண்ணும் கருத்துமாக இருப்பவர், சுய சிந்தனை உள்ளவர், தற்சார்பு தன்மையில் வாழநினைப்பவர், தத்துவத்தை கரைத்து குடித்தவர் இப்படி பலரும், வெளித்தோற்றத்திற்கு அமைதியாகவே இருப்பார்கள். ‘இந்தப்பூனையும் பால் குடிக்குமா?’ என்ற பழமொழி ஞாபகத்திற்கு வருவதை தடுக்கமுடியாது. அவரைப்பார்க்கின்ற நாம், அவரை மதித்து அவரோடு நட்பு பாராட்டவே விரும்புவோம்.

‘என்னைவிட இவ்வளவு அமைதியாக இருக்கிறாரே, இவரோடு நாம் பழகிக் கொண்டால், நமக்கும்கூட அந்த அமைதியான பண்பு வந்துவிடும் அல்லவா?’ என்றுதான் நினைப்போம். பழகும் காலங்களில் கூட உங்களோடு, ஒரு வார்த்தைகள் பேசி நிறுத்திக்கொள்வார். நீங்கள் சொல்லுவதை எல்லாம் அக்கறையாக கேட்டுக்கொள்வார். அதாவது உங்களுக்கு அவ்வளவு மதிப்பு அளிப்பார், அப்படியாக காட்டிக்கொள்வார் என்பதுதான் உண்மை. நீங்கள் பழகுகின்ற அந்த காலம் முழுவதும் உங்களை எடைபோடுவார். ‘இவர் எப்படிப்பட்டவர்? எந்தெந்த விசயத்தில் இவர் பலவீனம்? இவரின் நல்லது என்ன? கெட்டது என்ன? இவரிடமிருந்து நமக்கு கிடைப்பது என்ன? லாபம் என்ன?’ என்று பல வகைகளில் கணக்குப்போட்டு, எடைபோட்டுக் கொண்டிருப்பார். இதெல்லாம் முடிந்தவுடனே, உங்கள் ஒவ்வொரு சொல்லுக்கும் செயலும், ‘ஆமாய்யா, ஆனா இப்படி, அப்படி’ என்றவாறாக மாற்றுக்கருத்தை தெரிவிப்பார். அதை நீங்கள் கவனமாக செவிமெடுக்கவில்லை என்றால் ‘யோவ், உனக்கு எத்தனை தடவை, என்ன சொன்னாலும் தெரியாதாய்யா?’ என்று சினம் கொள்ளுவார். நாமும் இவ்வளோ அன்பாக பழகியவர், ‘நம்ம நல்லதுக்குத்தானே சொல்லுகிறார்’ என்று ஏற்றுக்கொள்ளவும் தயாராவோம். சரிதானே?!

இந்த மாதிரி நபர்களை எல்லாம், ரஜனீஷ் ‘பழைய கில்லாடிகள்’ என்று அழைக்கிறார். இவர் ஒருபோதும் மாறுவதே இல்லை. மாற்றிக்கொள்வதும் இல்லை. உலகில் நடத்தப்படுகின்ற பெரும்பாலான (யோகமுறை அல்லாத) பயிற்சி மையங்கள், இப்படியான ‘அமைதியாக நடிக்கும் நபர்களைத்தான்’ உருவாக்குகின்றன. சில வணிக மேம்பாடு பாடங்களின் கல்வி கூட இப்படியான பயிற்சியைத்தான் தருவதாக சொல்லுகிறார்கள். காரியம் ஆகும்வரை கையப்பிடி, காலைப்பிடி என்று செயல்படுவார்கள். இத்தகைய குணநலன், நடவடிக்கைகள் வெறுமனே பயிற்சியால் மாறுவதில்லை. ஏனென்றால் அவர்களின் மனம் அந்த அளவிற்கு திசைமாறி போயிருக்கிறது. கூடவே அவர்களுக்கான மாற்றத்தை ‘இந்த அளவில் போதும்’ என்று நம்புகிறார்கள். அவர்களுடைய வாழ்வில், ஏதேனும் ஒருநாளில், இதனாலேயே ஒர் பிரச்சனையை சந்திக்கும்பொழுதான் ‘நாம் ஏதோ தவறு செய்கிறோம்’ என்று உள்ளுணர்வாக உணர்வார்கள். அதுவரை நாம் சொல்லுவதை கேட்டுக்கொள்ளவும் மாட்டார்கள். ‘எல்லாம் எனக்குத் தெரியும்மய்யா’ என்று விலக்கியும் விடுவார்கள்.

நாம் என்ன செய்யலாம்? இப்படியான, அமைதியாக நடிக்கும் நபர்களை, அடையாளம் கண்டு பழகவேண்டும். எடுத்த எடுப்பிலேயே நம்முடைய நல்லதை, கெட்டதை எந்த அளவிலும் அவர்களோடு பகிரக்கூடாது, நம் வார்த்தைகளில் கவனம் வைத்து பேசி, சிக்கிக் கொள்ளாத விழிப்புணர்வு வேண்டும். அது போதுமானது.

வாழ்க வளமுடன்
-

Please explain the good, bad and problems on the trick of body to body transformation!


கூடுவிட்டு கூடுபாயும் வித்தையில் இருக்கக்கூடிய நன்மை, தீமை, பிரச்சனைகள் குறித்து சொல்லமுடியுமா?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி: 

வாழ்க வளமுடன் ஐயா, கூடுவிட்டு கூடுபாயும் வித்தையில் இருக்கக்கூடிய நன்மை, தீமை, பிரச்சனைகள் குறித்து சொல்லமுடியுமா?


பதில்:

இன்னமும் உங்களுக்கு இந்த கூடுவிட்டு கூடுபாயும் வித்தையில் இருக்கும் ஆசை தீரவில்லை போலிருக்கிறதே? நல்லவேளையாக எப்படிச் செய்வது என்று என்னிடம் கேட்காமலிருப்பது குறித்து மகிழ்கிறேன். அடுத்த கேள்வி அதுவாகவே இருந்தாலும் இருக்கலாம்தானே? யார் கண்டது? இப்பொழுது இந்த கேள்விக்கு வரலாம், முடிந்தளவு விளக்க முயற்சிக்கிறேன்.

என்னுடைய ஆரம்ப நாட்களில், வேதாத்திரிய யோகத்தில் இணைவதற்கு முன்பாகவே கூட, சித்தர்களின்பால் நான் ஆர்வமோடு இருந்தேன். இதற்கு காரணமாக என்வீட்டில், பரணில் மூட்டைகட்டி வைத்திருந்த, என் தந்தைவழி தாத்தாவின் நூல்கள் உதவின. என்வீட்டில் யாருக்குமே இல்லாத அக்கறை, ஏனோ எனக்கு யோகத்தின்மேல் ஏற்பட்டது. மேலும், நகரில் இருந்த நூலகமும், உறவினர்கள், நண்பர்கள் மூலம் கிடைத்த நூல்களும் உதவியது. ஒரு சிறிய கிழிந்த துண்டு காகிதத்தைக்கூட படிக்கக்கூடிய ஆரவம் மிகுந்த காலம் அது. அப்படியாக, பதினென்கீழ்கணக்கு சித்தர்கள் முதலாக, ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், வேதாத்திரி மகரிஷி என்று பலரையும் தெரிந்துகொள்ள நூல்கள் பல கிடைத்தன.

கூடுவிட்டு கூடுபாயும் வித்தை குறித்தும் நான் அறிந்தேன். சித்தர் பெருமகான் திருமூலர், காட்டுவழியே செல்லும் பொழுது, மேய்ப்பனை இழந்த மாடுகள் வீடுதிரும்பாமல் இருந்தபொழுது, இறந்து போன அந்த மேய்ப்பனின் உடலில், தன்னுயிரைப் பாய்ச்சி, மேய்ப்பனாக மாறி, அம்மாடுகளை வீட்டிற்கு வழிநடத்தி உதவியதாக படித்திருக்கிறேன்.  சித்தர்கள், தங்களுடைய ஆராய்ச்சிக்காகவே இவ்வித்தையை செய்திருக்கிறார்கள். பேரதிசயமாக இருந்ததும் உண்மை. இது எப்படி என்பதுதான் அந்த 14 முதல் 17 வயதில் எனக்கு அறியமுடியவில்லை. 18 வயது நிறைவில்தான் ‘வேதாத்திரிய தீட்சை’ பெற்றேன். அந்த வயதிலே ‘கூடுவிட்டு கூடுபாயும் வித்தை' மையமாகக் கொண்டு கதைகள் கூட எழுதினேன் என்றால் மிகையில்லை. ஏதேனும் சில நேரம், நானே வேறு யாராகவோ இருப்பதாகவும், என்முகத்தை நானே வேறு ஆளாக கண்ணாடியில் பார்ப்பது வரையிலான கனவுகள் கூட கண்டதுண்டு. ஆனால் அந்த கனவுகளின் உண்மை நான் மட்டுமே அறிவேன்.

கூடுவிட்டு கூடுபாயும் வித்தையில், இறந்த உடலில் புகுவது என்று சொல்லப்பட்டாலும் அதில் உண்மை இருப்பதாக தெரியவில்லை. ஏனென்றால் உயிர் பிரிந்த உடலில் எல்லாமே இறந்து கொண்டே இருக்கையில், அதை மீண்டும் புதுப்பிப்பது இயற்கைக்கு முரணானது. (உடனே வாளை தூக்கி சண்டை போடவேண்டாம்). அப்படியானால், உயிரோடு இருக்கும் ஒரு மனிதனோடு கலக்கமுடியுமா? முடியும். அதிலும் சிக்கல் உள்ளது. அந்த உயிர் தனித்தன்மையாக இருந்தால், கூடுவிட்டு கூடுபாயும் நம்மை ஏற்றுக்கொள்ளாது. பிறருக்கும், சமூகத்திற்கும், உலகுக்கும் நன்மை தரதக்க வகையில் இதை செய்யலாம் என்பது ‘சித்தர்களின் கருத்து’. தனிமனித, சுயநல, பறித்தல் நோக்கோடு இதைச் செய்தால், உங்கள் உயிர் வீணாகிவிடும். கவனம்.

முக்கியமாக, கூடுவிட்டு கூடுபாயும் வித்தையை செய்வதென்றால், நீங்கள் உங்கள் உயிரை தனியே பிரித்துப் பழகவேண்டும். உயிரில் குறிப்பிட்ட அளவு பிரிந்து சென்ற உங்கள் உடல், மிகச்சரியாக பாதுகாக்கப்பட வேண்டும். எந்த ஒரு அதிர்ச்சியும் இங்கே நேரக்கூடாது. கிட்டதட்ட நீங்கள் இறந்தபோன தன்மைபோலத்தான் இருப்பீர்கள். அது உண்மை ஆகிவிடாமல் இருக்க கவனமாக இருக்கவேண்டியது அவசியம். உயிர்த்துகள் என்பது மிகமிக நுண்ணியது, சக்தி வாய்ந்தது. அதற்குரிய மதிப்பளித்து செயல்படுவது முக்கியம். கொஞ்சம் பிசகினாலும் உங்கள் வாழ்க்கை முடிந்துவிடக்கூடிய அபாயம் உண்டு. உங்கள் உடலுக்கே மீண்டும் திரும்புவதில் அதிக பிரச்சனைகளை நீங்கள் சந்திக்கக்கூடும்.

        எனவே, என்னைப்பொறுத்தவரை, இனிமேல் யாரும் ‘கூடுவிட்டு கூடுபாயும் வித்தை' செய்யவேண்டியதும் இல்லை, அதை பழகிட வேண்டியதும் இல்லை' என்றே நினைக்கிறேன். வேறு ஏதேனும் கேள்விகள் இருந்தால் நேரில் கேட்கவும்.

வாழ்க வளமுடன்

-

Shall we learn the trick of one body to another body transformation and how?


கூடுவிட்டு கூடுபாயும் வித்தையை நாம் இன்றும் கற்றுக்கொள்ள முடியுமா? அதற்கு வழி சொல்லுவீர்களா?



வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, கூடுவிட்டு கூடுபாயும் வித்தையை நாம் இன்றும் கற்றுக்கொள்ள முடியுமா? அதற்கு வழி சொல்லுவீர்களா?

பதில்:

உங்கள் உடலைவிட்டு, இன்னொரு உடலுக்குப் போகும், தந்திரத்தில் இன்னும் உங்களுக்கு ஆர்வம் இருக்கிறது என்பதை இந்த கேள்வி நிரூபிக்கிறது. சித்தாந்தம் என்ற வழியில் சித்து என்ற உயிரை அறிந்து, அதனுடைய மூலமும், இயக்கமும் உணர்ந்தவர்களான சித்தர்கள் இந்த ‘கூடுவிட்டு கூடுபாயும்’ வித்தையை கண்டுபிடித்து, உலகில் தாங்கள் வாழும் காலத்தில், அந்தந்த மக்களின் நன்மை கருதிமட்டுமே இதை செய்துவந்தார்கள். அதையே தங்கள் கவிதைகள் வழியாக சொல்லியும் வைத்தார்கள். ஆனால் செய்முறையை சொல்லவில்லை. அப்படியான செய்முறையை, நேரடியாக அந்த சித்தரின் வசமாக மட்டுமே கற்றுக்கொள்ளவும் முடியும். இந்தக்காலத்தில் யாருமே தங்களை சித்தர் என்று வெளிப்படையாக தங்களை, மக்களிடம் காட்டிக்கொள்வதில்லை. அதற்கான அவசியமும் அவர்களுக்கு இல்லை. என்றாலும் கூட, வாழும் சித்தர்கள் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

ஆனால், சில மனநலம் குன்றி, தெருவில் கவனமின்றி திரிவோரையும் ‘வாழும் சித்தர்கள்’ என்று நவீன மக்கள் கொண்டாடுகிறார்கள். அவர்களுக்கான, அக்கறையும், மருத்துவ உதவியும் செய்யாமல், செய்தும் தராமல், அவர்களின் தனிமையை, சுதந்திரத்தை கெடுத்து, மேலும் மேலும் அவர்களின் மனதை புண்ணாக்குகிறார்கள். காண்டண்ட் கிடைக்காத காணொளி பதிவர்கள் இதையும் பதிவாக்கி, யூயூபில் பரப்புகிறார்கள். கொடுமைதான்.

        இப்பொழுது கேள்விக்கு வரலாம். கூடுவிட்டு கூடுபாயும் வித்தையை நாம் இன்றும் கற்றுக்கொள்ள முடியும்தான். ஆனால் அதற்கான அவசியம் என்ன? இதற்கான தக்க பதில் உங்களிடம் இருக்கிறதா? என்னவிதமான நன்மையை கருதி நீங்கள் இதை செயல்படுத்தப் போகிறீர்கள்? இதில் ஏதேனும் ரகசியமான ஆராய்ச்சி இருக்கிறதா? மக்களின் நலம் சார்ந்தோ, உலகின் எதிர்கால நன்மை கருதியோ திட்டத்தை நீங்கள் செயல்படுத்தப் போகிறீர்களா? இதற்கான விடையை முதலில் தயார் செய்யுங்கள். சுயநலம் கருதி இதை நீங்கள் செய்வதாக இருந்தால், நீங்கள் மாட்டிக்கொள்வீர்கள், உயிரிழப்பு நேர்ந்துவிடும் என்பதும் உறுதி. தற்கொலைக்குச் சமமான காரியத்திற்கு ஒப்பாகிவிடும். ஏனென்றால் ‘இயற்கையின் செயல்விளைவு நீதி’ அத்தகையது.

        என்றாலும் உங்களுக்கான புரிதலை நான் தெளிவு செய்கிறேன். நீங்கள் அறிந்த ‘கூடுவிட்டு கூடுபாயும் வித்தை’ அவ்வளவு சுலபமானது அல்ல. காரணம் உங்களுக்குத் தெரியுமா? சொல்லுகிறேன்... 

நாம் ஓருடலாக வாழ்வதாக இருந்தாலும் கூட, இந்த உடல் மூன்று உடலாக அமைந்திருக்கிறது. 1) பருவுடல் 2) உயிருடல் 3) காரண உடல் ஆகியன ஆகும். பருவுடல் என்பது எலும்பு, தசை, சதை, ரத்தம், உடலுறுப்பு இவைகளால் ஆன மொத்த அமைப்பு. உயிருடல் என்பது பலகோடி உயிர்த்துகள் இணைந்த கண்ணாலும், கருவிகளாலும் காணமுடியாத, நுண்ணிய துகள்களால் ஆனதான் அமைப்பு. இதைத்தான் ‘சூக்குமம்’ என்றும் அழைக்கிறோம். அதையே சூக்கும உடல் என்றும் அழைக்கிறோம். மூன்றாவதாக இருப்பது, இந்த உயிரை, உடலுக்குள் கட்டிக்காக்கும் சக்தியான ‘காரண ஆற்றல் சக்தி’ இதையும் நாம் உணரமட்டுமே முடியும். இந்த மூன்றுக்கும் தனித்தனியான விரைவு இயக்கங்கள் உண்டு. அந்த தனித்தனியான இயக்கங்களை முறைப்படுத்தி ஒன்றுசேர்க்கவும் வேண்டும். இதில் அதிவேகமான விரைவுஇயக்கம் கொண்டது ‘காரண உடல்’ இதற்கு சமமாக ‘உயிருடல்’ பழகவேண்டும். இந்த இரண்டின் விரைவையும், இயக்கத்தையும் உடல் தாங்கிட பழகவேண்டும். இதற்கு நீண்டகால பயிற்சி முக்கியமானது ஆகும். யாரோ சொல்லக்கேட்டு, ஏதோ புத்தகம் வாசித்து, எவரோ காணொளியில் சொன்னதைக் கேட்டு செய்தால் அது ‘தற்கொலைக்கு’ சமமாகலாம்.

குருமகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் வழங்கிய ‘சூக்கும பயணம்’ என்பது ‘கூடுவிட்டு கூடுபாயும் வித்தையின்’ முன்னோட்டம் என்று சொல்லலாம். ஆனால், வேதாத்திரியத்தில் இந்த சூக்கும பயணம் பயிற்சி 1996 ம் ஆண்டுகளுக்கு முன்பாகவே நிறுத்தப்பட்டுவிட்டது. கைவிடப்பட்டது. ஏனென்றால், அதில் அன்பர்கள் ஏற்படுத்திக்கொண்ட கவனக்குறைவுதான் காரணமாக இருந்தது. எனவே, வேதாத்திரி மகரிஷி அவர்களே ‘இதுவேண்டாம்’ என்று சொல்லிவிட்டார்.

என்றாலும், வேதாத்திரியத்தில் வழங்கப்படும் ‘ஜீவகாந்த பெருக்கம்’ உங்களுக்கு சிறந்த மாற்றாக அமைந்திருக்கிறது. அது உங்களுக்கு உதவும்.
வாழ்க வளமுடன்
-

What is the easy way to understand the Vethathiriyam, if we feel as difficult?


வேதாத்திரிய தத்துவத்தை புரிந்துகொள்ள கடினமாக இருக்கிறது என்றால் என்ன செய்வது? புரிந்துகொள்வதற்கான வழி என்ன?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, வேதாத்திரிய தத்துவத்தை புரிந்துகொள்ள கடினமாக இருக்கிறது என்றால் என்ன செய்வது? புரிந்துகொள்வதற்கான வழி என்ன?


பதில்:

பொதுவாகவே கல்வி என்ற நிலையில் உள்ள எந்த உண்மைகளும், விளக்கங்களும், தத்துவங்களும் புரிந்துகொள்ள கடினமாகவே இருக்கும். அவற்றை அனுபவமாக்கிக் கொள்ளும் பொழுது அவை முழுமையாக புரிந்துவிடும் என்பதே உண்மையாகும். எந்த ஒரு நபரை எடுத்துக் கொண்டாலும். அவரின் வயது, அனுபவம், கல்வி அறிவு, ஏற்கும் திறன், புரிந்துகொள்ளும் திறன் ஆகியவை அளவில் மாற்றம் பெற்றே இருக்கும். ஒருவருக்கு எளிமையாக இருப்பது, இன்னொருவருக்கு கடினமாக இருக்கும். இதனோடு ஆராய்ச்சிப் பார்வை, ஒத்துப்பார்த்தல், அனுபவமாக்கிக் கொள்ளுதல் என்ற தன்மைகளும் மாறுதலாகவே இருக்கும். எழும் சந்தேகங்களும், அதற்குறிய கேள்விகளும் கூட ஒரே மாதிரி இருப்பதில்லை.

        இதற்கெல்லாம் காரணம், அவர்களின் வயதும், அவர்களின் வாழ்க்கை சூழலும், ஏற்புத்திறனும், வாழ்வில் அவர்கள் கண்ட குடும்ப, சமூக, உலக வழக்க பழக்கங்களுமே ஆகும். எந்த வகையிலும் யாரையும் இங்கே குறை சொல்லுவதற்கு வாய்ப்பில்லை. பொதுவாகவே, என்னுடைய எல்லாவகையான பதிவுகளிலும், ‘நான் சொல்லுவது உங்களுக்கு புரிகிறதா?’ என்று முட்டாள்தனமாக கேட்பதே இல்லை. அது கேட்போரை கீழாக நினைத்து கேட்கக்கூடிய மனோநிலை என்பதை சில ‘விற்பனர்கள்’ புரிந்து கொள்வதில்லை. தன்னைமட்டுமே மேலாக நினைத்து, தனக்கு எல்லாம் தெரியும் என்ற ஒரு நிலையில் இருப்பதுண்டு. ஒருவேளை ‘எனக்கு சுத்தமாக புரியவில்லை ஐயா’ என்று ஒருவர் எழுந்து கேட்டால், அந்த விற்பனரின் நிலை என்ன? மறுபடி முதலில் இருந்து பாடம் நடத்துவாரா? தனியாக கவனம் வைத்து பாடம் தருவாரா?

        வேதாத்திரியம் மிக எளிமையானது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. வேதாத்திரியத்தின் உண்மைகளும், விளக்கங்களும், தத்துவங்களும் புரிந்துகொள்ள கடினமானதும் அல்ல. வேதாத்திரியத்தை தந்த, வேதாத்திரி மகரிஷி ‘பாமர மக்களின் தத்துவஞானி’ என்றுதான் போற்றப்படுகிறார். அவரின் எழுத்துக்களும், கட்டுரைகளும், கவிகளும், பேச்சுக்களுமே சான்றாக இருக்கின்றது. அதை எடுத்துச் சொல்லுபவரும் அத்தகைய உண்மையை, தானாக புரிந்து கொண்ட பிறகு சொன்னால்தான், அது மற்றவர்களுக்கும் எளிதாக புரிந்து கொள்ளும் தன்மையில் இருக்கும். தனக்கே புரியாத ஒன்றை, பிறருக்கு பாடமாக, கல்வியாக தரமுடியுமா? எனவே இங்கே, ஒரு குறிப்பிட்ட உண்மைகளும், விளக்கங்களும், தத்துவங்களும் புதிய ஒருவருக்கு வழங்கவேண்டும் என்றால், கற்றுக்கொடுப்பவர் நன்கு புரிந்து கொண்ட தன்மையில், அனுபவமானவராக இருக்கவேண்டியதும் அவசியம்.

        உங்களைப்போல, ஒரு தனிமனிதராகவே ஒவ்வொருவரும் இருப்பார். அவரவர்களுக்கு ஏற்றவகையில், தனித்தனி கவனம் கொண்டு உண்மைகளும், விளக்கங்களும், தத்துவங்களும்  தரமுடியும் என்பதும் உண்மையே. பொதுவெளியிலும், கல்வி, பாட மையங்களிலும் அதை தரும் பொழுது, ஒரு பொதுவான நிலையில்தான் வழங்கமுடியும். அது எல்லோருடைய அறிவிற்கும் போய்ச்சேரும்படி ‘எளிமையாக’ இருக்கவேண்டியதும் அவசியமாகும். அனுபவமிக்க ஆசிரியர்கள் அதை கடைபிடிக்கிறார்கள் என்பதும் உண்மையே. படித்ததை பேசுவதற்கும், உணர்ந்ததை பேசுவதற்கும் வித்தியாசம் உண்டுதானே?

        உங்களுக்கு இங்கே வழங்கப்படும் வழி, தீர்வு என்ன? என்றால் வேதாத்திரிய தத்துவத்தை மட்டுமல்ல, வேறு எந்த தத்துவமாக இருந்தாலும், அந்த வகுப்பில் உங்களுக்கு புரியவேண்டும் என்று நினைக்காதீர்கள். கல்வி பாடங்களை, விளக்கங்களை கேட்கும்பொழுது, குறிப்பு எடுத்துக்கொள்வது மிகச்சிறந்த வழி. உங்கள் சிறப்பான மூளையையும் காதுகளையும் மட்டுமே நம்புவது தவறு. சிந்தனைக் கவனம் சிதறிவிட்டால், அந்த விளக்கங்கள் உங்களின் இன்னொரு காதுவழியாக வெளியே ஓடுவிடும். அன்றைய பாடங்களை அன்றைக்கே, தனியாக அமர்ந்து, உங்கள் குறிப்புக்களோடு ஞாபகப்படுத்தி, ஆராய்ந்து பாருங்கள், எளிதாக புரிந்துகொள்ள வாய்ப்பு உண்டு.

        கேள்வி நேரத்திலேயே, உங்கள் குறிப்பின் வழியாக, உங்களுக்கு புரிந்து கொள்ள கடினமானதை, சந்தேகத்தை கேள்வியாக கேட்டு பதில் பெற மறவாதீர்கள். ‘உங்களுக்கு புரிகிறதா?’ என்று ஆசிரியர் கேட்டால் ‘எனக்கு புரியவில்லை ஐயா’என்று உடனடியாக சொல்லிவிடுங்கள். பிறகு அந்த ஆசிரியரே உங்களுக்கு ஏற்றபடியாக தன்னை மாற்றுக்கொள்வார் என்பது உறுதி.

வாழ்க வளமுடன்

-

Why often noted yoga only is the best way? Any other way not truly work?


எத்தனையோ காலமாக யோகம்தான் சிறந்தது என்று ஏன் அடிக்கடி சொல்லப்படுகிறது? யோகமில்லாமல் உண்மை உணர வழியே இல்லையா?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, எத்தனையோ காலமாக யோகம்தான் சிறந்தது என்று ஏன் அடிக்கடி சொல்லப்படுகிறது? யோகமில்லாமல் உண்மை உணர வழியே இல்லையா?


பதில்:

யோகம்தான் சிறந்தது என்று சொல்லுபவர் உண்டுதான். ஆனால் அது அவர்களின் அனுபவம் சார்ந்த பதில் மட்டுமே. மெய்பொருள் உண்மை உணர்ந்த சித்தர்கள், ஞானிகள், மகான்கள் ஆகிய யாருமே யோகம் தான் சிறந்தது என்று சொல்லியதே இல்லை. சொல்லுவதும் இல்லை. ஆனால் ‘யோகம் ஒன்றுதான் முழுமையானது’என்று மட்டுமே சொல்லுவார்கள்.

உங்களுக்குத் தெரியுமா? இப்போது நீங்கள் இருக்கும் எந்த நிலையிலும், உண்மையை தெரிந்து கொள்ள முடியும். அவ்வளவு சுலபமானதுதான் அது. எளிமையாக நீங்களாகக்கூட சிலவேளை புரிந்து கொள்வீர்கள். ஆனால் அது உணர்வாக நிலைக்காது. தொடராது. காட்சியாகாது. அதுதான் இங்கே உங்களுடைய கேள்வியில் தொக்கி நிற்கிறது. மற்றபடி யோகம்தான் சிறந்தது என்றோ, யோகம் மட்டுமே முழுமையானது என்று கூறுவதற்கில்லை. என்னுடைய இந்த கருத்துக்கு மாற்றுக்கருத்து கொள்வோரும் உண்டு. அவர்கள் அவர்களின் அனுபவத்தில் இருந்து கருத்து சொல்கிறார்கள். நான் ஆராய்ச்சியின் வழியில் சொல்லுகிறேன்.

இதற்கு ஒரு உதாரணமாக இதைச் சொல்லலாம் என்று நினைக்கிறேன். வண்டியில் பூட்டிய மாடுகள், வயற்காட்டில் இருந்து விட்டிற்குச் செல்வதும், வீட்டிலிருந்து வயற்காட்டிற்குச் செல்வதும் தானாக நடக்கும். நீங்கள் அந்த மாடுகளை வழிநடத்த வேண்டியதில்லை. பழக்கபட்ட மாடுகள் தானாகவே வழி கண்டு நடந்து செல்லும். ஆனால் குதிரை அப்படியல்ல. என்னதான் பழக்கினாலும் அது தன் போக்கில்தான் நடந்து செல்லும், நடக்கும் என்பது கூட உண்மையல்ல, ஓடும் என்பதுதான்  உண்மை. மேலும் குதிரைக்கு அதன் பக்கவாட்டு பார்வையை மறைக்கவும் வேண்டும் அல்லவா? நீங்கள் அதையெல்லாம் கவனித்திருக்கிறீர்களா? ஆனாலும் இந்தக் காலத்தில் மக்கள் பயன்பாட்டுக்கான மாடுகள், குதிரைகள் அருகிவிட்டன. இதில் மாடுகளுக்கும், குதிரைக்கும் இடையிலான ஆற்றல், வெளிப்பாடு, காலம், தூரம் கூட அடங்கி இருக்கின்றன அல்லவா? அந்த குதிரையை, அதன் இயல்பிலேயே பக்குவப்படுத்திவிட்டால் சிறப்புத்தானே? அதைத்தான் யோகம் தருகிறது.

ஒருவர் பக்தியில் ஈடுபாடு கொண்டவரா? அதிலும் பிரிவுகளில் நிற்கிறாரா? கடவுள் நம்பிக்கையற்று இருக்கிறாரா? எல்லாம் மறுத்து இயற்கையே என்ற முடிவில் இருக்கிறாரா? விஞ்ஞானம்தான் எல்லாவற்றிற்கும் விடை என்று கருதுகிறாரா? வேதாந்தத்தில் ஆர்வமாக இருக்கிறாரா? சித்தாந்தம் தான் எனக்கு என்று நினைக்கிறாரா? கர்மயோகமே எனக்கு போதும் என்று கருதுகிறாரா? வாழ்க்கையில் மற்றவர்களுக்கு ஒத்தும் உதவியும் வாழ்ந்தால் போதும் என்று விரும்புகிறாரா? மற்றவர்களுக்கு துன்பம் தராமல் இருந்தாலே சரிதான் என்று நினைக்கிறாரா? இப்படி எந்த வகையினரும் மெய்ப்பொருள் உண்மையை ‘யோகம்’ ஒன்று இல்லாமல் அறிந்து கொள்ளமுடியும். ஆனால் உணர்ந்து கொள்ள, தனதாக்கிக் கொள்ள, முழுமையில் நிறைய ‘யோகம்’மட்டுமே துணை. இல்லையேல் ‘கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை’ என்ற கதைதான் உண்மையாகும்.

வாழ்க வளமுடன்

-

Why it is called by Vethathiriyam instead of Ashtanga yoga?


எல்லோருமே அஷ்டாங்க யோகம் என்றே சொல்லிவரும் பொழுது, வேதாத்திரிய யோகம் என்று சொல்லப்படுவதின் அர்த்தம் என்ன?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, எல்லோருமே அஷ்டாங்க யோகம் என்றே சொல்லிவரும் பொழுது, வேதாத்திரிய யோகம் என்று சொல்லப்படுவதின் அர்த்தம் என்ன?

பதில்:

பதஞ்சலி முனிவர் வகுத்துத்தந்த அஷ்டாங்க யோகம்தான் இன்றும் தொடரப்படுகிறது என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. உலகில் இருக்கின்ற எல்லாவகையான பெயரில் இயங்கிவரும், மக்களுக்கு ஆன்மீக சேவை வழங்கிவரும் யோக மையங்களும், இந்த அஷ்டாங்க யோகத்தின் வழியாகத்தான் கல்விப்பாடங்களையும், பயிற்சிகளையும் வழங்கி வருகின்றன. மெய்ப்பொருள் உண்மை விளக்கத்திற்கு வேதாந்ததையும் எடுத்துகொண்டு விரிவுரை தருவார்கள். அதில் தங்கள் அனுபவத்தையும் இணைத்துத் தருவார்கள். அந்த தலைமை யோகி, மகான், ஞானி, ஆகியோருக்குப் பிறகு, அவை அனைத்தையும் கற்று முழுமை அனுபவம் பெற்றவர் தனியாகவும் அதையே தொடர்வார், அங்கேயே பயிற்றுனராகவும் ஆசிரியராகவும் தொடர்வார். பெரும்பாலும் தங்களுடைய பயிற்சியில் எதையுமே மாற்றிக் கொள்ளவே மாட்டார்கள். அந்த பழமை மூலமானது, நவீன காலத்துக்கு ஏற்றபடி தொடருமே தவிர, வேறுஎதும் மாறிடாது.

இப்போதும் கூட அஷ்டாங்க  யோகம் இல்லாத சித்தர்வழி யோகமுறைகளும் உண்டு என்பதை மறுக்கமுடியாது. இதில் வேதாந்த கருத்துக்களின்றி, சித்தாந்த கருத்துக்களே பகிரப்படும். ஒருவகையில் நேரடியான யோக முறை என்று சொல்லவும் வாய்ப்புண்டு. இதிலும் அந்தக்கால பழமையான கடின பயிற்சிமுறைகள் உண்டு. மாற்றத்தை ஏற்றுக்கொள்ள மாட்டர்கள். உண்மை விளக்கம் பெறவர்கள் தங்களை யோகி, சித்தர் என்றும் விளங்கிக்கொண்டு கல்வி பாடங்களை, பயிற்சிகளை வழங்கிவருவார்கள். இங்கும் அனைத்தையும் கற்று முழுமை அனுபவம் பெற்றவர் தனியாகவும் அதையே தொடர்வார், அங்கேயே பயிற்றுனராகவும் ஆசிரியராகவும் தொடர்வார். 
இந்த இரண்டு நிலையான யோக மையங்களில், மெய்ஞான விளக்கங்கள் மட்டுமே இருக்கும். விஞ்ஞான விளக்கமோ ஒப்பீடோ, தகுந்த விளக்கமோ இருக்க வாய்ப்பில்லை. எல்லாவகையிலும், ஏற்கனவே சொல்லப்பட்டது எதுவோ அதுவேதான் தொடரும். சிற்சில கருத்துக்கள் மாறலாம் ஆனால், பழமையே தொடரும். அதற்கே முக்கியத்துவமும் தரப்படும். எக்காலத்திலும் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை என்ற உறுதி இருக்கும்.

ஆனால், குரு மகான் வேதாத்திரி, வேதாந்தம், சித்தாந்தம் இரண்டிலும் பெற்ற அனுபவங்களோடு அதில், ஆராய்ச்சியில் கிடைத்த உண்மைகளை எடுத்துக்கொண்டார். ஒவ்வொரு சைவ, வைஷ்ணவ, வேதாந்த விற்பனர்கள், சித்தர்கள் ஆகியோர் கவியாக வழங்கிய மெய்ஞான அனுபவங்களையும் ஏற்று விளக்கம் பெற்றார். உலகில் அணு முதல் அண்டம் வரையிலான விஞ்ஞான ஆராச்சிகளையும் அறிந்து அவற்றின் வழியாகவும் கிடைத்த ஆய்வுகளை, யோகத்தின் உண்மையை விளக்குவதற்கு பயன்படுத்திக் கொண்டார். அவற்றை தன்னுடை கல்வியாக, பயிற்சியாக, பாடத்திட்டமாகவும் வழங்கிவந்தார். சித்தாந்த வழியான யோகமாக இருந்தாலும், அதில் இத்தகைய நவீன மாற்றங்களை ஏற்று அனுபவமான பயிற்சி முறைகளும் சொல்லித்தருவதுண்டு. 

அதுவே வேதாத்திரியம் என்ற புதிய ஒன்றாக மாற்றம் பெற்றது.
குரு மகான் வேதாத்திரி மகரிசி, தன்னுடைய வேதாத்திரியத்தின் வழியாக , யோகம் என்பதை அஷ்டாங்க யோக வழியிலும் வேதாந்த வழியிலும், சித்தாந்த வழியிலும், விஞ்ஞான வழியிலும், தன் அனுபவத்தின் வழியிலும் விளக்குகின்றார் என்பதை, அந்த வேதாத்திரியத்தில் பயணிக்கும் ஓவ்வொருவரும் அறிந்து கொள்ளமுடியும். அப்படியானால் வேதாத்திரியம் மட்டுமே சிறப்பா? என்ற கேள்வி எழுந்துவிட்டால், அது அப்படியல்ல, ஒரே ஊருக்குச்செல்லும் இலக்கு நோக்கிய பாதைகள் பல இருப்பது போல வேதாத்திரியமும் ஒன்று. பயணம் செல்லவிரும்புவரின் முடிவே அதை தீர்மானிக்கும்.

வாழ்க வளமுடன்
-

Why yogi, siddhar, gnani, mahan has differential appearances after the same truth of realization?


யோகி, சித்தர், ஞானி, மகான் என்ற நிலைக்கு உயர்ந்தவர்களின் தோற்றம் ஏன் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒரே உண்மையைத்தானே அவர்கள் உணர்ந்தார்கள்? எனினும் ஏன் இந்த வேறுபாடு?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, யோகி, சித்தர், ஞானி, மகான் என்ற நிலைக்கு உயர்ந்தவர்களின் தோற்றம் ஏன் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒரே உண்மையைத்தானே அவர்கள் உணர்ந்தார்கள்? எனினும் ஏன் இந்த வேறுபாடு?


பதில்:

        சிந்தனைக்குறிய கேள்விதான். எனினும் நீங்களே புரிந்துகொள்ளக்கூடிய எளிய உண்மையையும் உள்ளடக்கியதுதான். இந்த உண்மையறிதல் என்ற நிலைக்கு, ஒவ்வொரு யோகி, சித்தர், ஞானி, மகான் ஆகியோருக்கும் ஒவ்வொரு வழிமுறைகள் இருக்கும். எந்தெந்த நிலையில் அவர்கள் வாழ்ந்து வந்தார்களோ, எத்தகைய வழக்கம் பழக்கம் இவற்றை கொண்டிருக்கிறார்களோ, எந்தெந்த நாட்டின் வாழ்க்கை முறைகளை கடைபிடிக்கிறார்களோ அதன்படிதான் அவர்களின்,  தோற்றமும் வெளிப்பாடும் அமையும். அதுதான் இயல்பும் கூட. சாதரணமாக யாருமே வெளித்தோற்றத்தை மாற்றிக்கொள்ள முடிவதில்லை.

        உதாரணமாக உங்களுக்கு தாடியும் மீசையும் இருக்கிறது,  அதை எடுத்துவிடுங்களேன், தாடியும் மீசையும் இல்லாமல் இனி வாழ்நாள் முழுவதும் தொடருங்கள் என்று சொன்னால் உடனே உங்களால், அதை செய்துவிட முடிடுமா? ரொம்பவும் யோசிப்பீர்கள். குழப்பமும் அடைவீர்கள். முடியாது என்றும் சொல்லிவிடுவீர்கள். இதுபோலவே ஆடைகளும், அலங்காரங்களும் உடனே உங்களால் ஏற்றுக்கொண்டு செயல்படுத்த முடியாது. காரணம் உங்களின் வழக்கமும் பழக்கமும். அதனால் சமூகத்தில் உங்களுக்கு கிடைத்த அடையாளமும் காரணமாகிறது.

        ஆணுக்கும் பெண்ணுக்கும் மெய்ப்பொருள் உண்மை விளக்கமும், தன்னையறிதலும் பொதுவானது. அது நிகழ்ந்த பிறகும்கூட, எப்போதும் போலவே இயல்பாகத்தான் இருப்பார்கள் என்பது உறுதி. என்றாலும் கூட அக்காலத்தில், சாரசரி மக்களில் இருந்து, வித்தியாசம் என்ற நிலையிலும், அவர்களின் ஆசிரம, மடம், அமைப்பு சார்ந்த விதிமுறைகளின்படி, துறவு என்ற நிலையிலும் இப்படித்தான் ‘தோற்றம்’ இருக்கவேண்டும் என்று இருந்தது. இவையெல்லாம் அந்தக்கால வழக்கமாக இருந்தாலும், இப்போதும்கூட சில யோக அமைப்புக்களில், கல்வியாக கற்கும் நிலையில், சீடர்களுக்கான தோற்ற ஒழுங்கு விதி இருக்கிறது. வேதாத்திரிய மனவளக்கலையிலும் உண்டுதானே.

        எந்த ஒரு அமைப்பிலும், யோகத்தை கற்கும் வரை அந்த ஒழுங்கும், பிறகு கற்பிக்கும் நிலையிலும் அத்தகைய தோற்றத்தை நீங்கள் கடைபிடிக்க வேண்டியது அவசியம். நீங்கள் அமைப்பிலிருந்து விலகி, வெளியே வந்து யோகத்தில் உண்மை விளக்கம்  பெற்றுவிட்டால், உங்கள் தோற்றம் உங்கள் விருப்பமே. அந்தவகையில்தான் சில யோகி, சித்தர், ஞானி, மகான் ஆகியோர் தங்களுக்கு விருப்பமான தோற்றத்தில் இருக்கிறார்கள். என்னைக்கூட யாருமே யோகி என்று கருதுவதில்லை, நானும் பார்க்கும் நபர்களிடமெல்லாம் ‘நான் யோகி’ என்று சொல்லிக் கொள்வதில்லை. என் நண்பர் சொல்லுவார் ‘உன்னையெல்லாம் பார்த்தா, கார்பொரேட் ஆபிஸர் மாதிரி இருக்கு, எவன்யா யோகின்னு நம்புவான்?’ என்று கிண்டலடிப்பார். அதற்காக நான், குறுந்தாடிக்கு பதிலாக நீண்ட தாடி தலைமுடி, உச்சியில் கொண்டை, திரிசடை, ஜாடாமுடி, தலைப்பாகை, உடல்போர்த்திய துண்டு ஆகிய இதுபோன்ற  தோற்றத்திலா இருக்கமுடியும்? என் விருப்பத்தில் நான் தோற்றமளிக்கிறேன் அவ்வளவுதான்.

        இயற்கையின் ஒழுங்கில் கூட, தோற்றம் என்பது ஒரே மாதிரி இருப்பதில்லை. அதனதன் அளவில் அது தன்னை விரிக்கும், சுருக்கும். உங்களுக்குத் தெரியுமா? வழக்கமாக நான் என்னுடைய ஓவிய பாடத்தில் சொல்லுவதுண்டு, ‘ஒரு வேப்ப மரத்தின் பல்லாயிரக்கணக்கான இலைகளில், ஒரே மாதிரியான மற்றொரு இலையை நீங்கள் காணவே முடியாது’

        எனவே நீங்களும் யோகத்தில் தன்னையறிந்து, மெய்ப்பொருள் விளக்கம் அறிந்து உயர்ந்தால், உங்களுக்கு விருப்பமான தோற்றத்தில் நீங்கள் தொடரலாம். என்றாலும் கூட வாழும் மக்களிடம் ‘யோகி, சித்தர், ஞானி, மகான்’ இப்படித்தான் இருப்பார்கள் என்ற கருத்து நிலவி வருவதை மாற்றிட முடியாது. அத்தகைய மக்களையும், சம்பவங்களையும் நாம் கண்டுதான் வருகிறோம், அதிலும் முன்னைவிட அதிகமாகவும் தானே? ஆகவே, அதுவரை ஏமாற்றுக்கார்களுக்கு நல்வாய்ப்புத்தான். அவர்களுக்கும் பிழைப்பு ஓடும்வரை ஓடும். 

வாழ்க வளமுடன்

-

Why the social norms is never changes based on rich, poor and middle classes?


பணக்காரனிடம் பணம் சேர்ந்துகொண்டே இருக்கிறது, ஏழை ஏழையாகிக் கொண்டே இருக்கிறான். நடுத்தரவர்க்கம் உழைத்துக்கொண்டே இருக்கிறது. இதை மாற்றவழி என்ன?



வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, பணக்காரனிடம் பணம் சேர்ந்துகொண்டே இருக்கிறது, ஏழை ஏழையாகிக் கொண்டே இருக்கிறான். நடுத்தரவர்க்கம் உழைத்துக்கொண்டே இருக்கிறது. இதை மாற்றவழி என்ன?


பதில்:

ஏதோ பொருளாதார நிபுணருக்கு அனுப்பிவைக்க வேண்டிய கேள்வியை என்னிடம் அனுப்பிவிட்டீர்களா என்று கேட்கத் தோன்றுகிறது. நிச்சயமாக அவர்கள் மிக தெளிவான, துல்லியமான, உலகியல் நிலைப்படியும், தற்கால சூழ்நிலைப்படியும் புள்ளிவிபரங்களோடு கூடிய விரிவான பதிலை அவர்கள்தான் தரமுடியும். என்னளவில் பார்வைகளும் அனுபவங்களும் மாறும் என்பதே உண்மை. மேலும் யோகத்தில் ஆழ்ந்து அதில் பயணிப்பவர் பார்வை ஆழ்ந்து செல்லக்கூடியதுதான் என்றாலும், அக்கருத்தை சொல்லும் பொழுது, எதிர்தரப்பு எதிர்பாராத பதிலாக அமையும், அதனால் இவரிடம் போய் ஏனடா இதைக்கேட்டோம் என்று வருந்துமளவுக்கு, முகத்தினை திருப்பிக்கொள்ளும் அளவுக்கு, வேறொடு பிரச்சனை எழுமளவுக்கு இருக்கும். ஏதோ முடிந்தளவு விளக்க முயற்சிக்கிறேன்.

பணக்காரன், ஏழை, நடுத்தரவர்க்கள் என்பதெல்லாம் விதி அல்ல என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். ஒரு பணக்கார வீட்டில், பணக்காரனுக்கு மகனாக / மகளாக பிறந்ததால் மட்டுமே அவர் பணக்காரர் இல்லை. அவரின் வாழும் முறைதான் அந்த தகுதியை நிர்ணயிக்கிறது. ஒரு பணக்காரர் தீடீரென்று பணம், பொருள், சொத்து இழந்தும் விடுகிறார் அல்லவா? அதுபோலவே ஏழைக்குடும்பத்தில் பிறந்தாலும், அந்த சூழலை மாற்றிட உயர்ந்த படிப்பு படிக்க முயற்சிக்கலாம், அடிப்படை கல்வி போதுமென வேலைக்கு செல்லலாம். படிப்பே தேவையில்லை என்று திறமையை வைத்தும் உழைத்து முன்னேறலாம் அல்லவா? அடுத்ததாக, நடுத்தர வர்க்கமும் ஒரே வேலை, தொழில், பரம்பரை நிலை என்பதெல்லாம் மாற்றி, என்ன செய்தால், எப்படி செய்தால், உயரலாம், முன்னேறலாம், மேம்பாடு காணலாம் என்று சிந்தித்து, ஆராய்ந்து தகுந்த காலத்தில் நல்ல நிலையை அடையலாம் அல்லவா?

இப்படியான நிலை இருக்கும் பொழுது பணக்காரனிடம் பணம் சேர்ந்துகொண்டே இருக்கிறது, ஏழை ஏழையாகிக் கொண்டே இருக்கிறான். நடுத்தரவர்க்கம் உழைத்துக்கொண்டே இருக்கிறது என்று சொல்லுவது முறையாகாது. அவரவர் அளவில் இருக்கக்கூடிய பிரச்சனைகள், வெளியில் தெரியாது. நீங்கள் ஒரு பணக்காரனாக இருந்தால் இந்த கேள்வியே கேட்டிருக்க மாட்டீர்கள் என்பது உறுதி. ஏழையும், நடுத்தரவர்க்கமும் தான் இப்படியான புலம்பலிலும், சிக்கலிலும் இருக்கிறார்கள். பணக்கார்களை நீங்கள் நுணுகி பார்க்கவேண்டும். அவர்களிடம் பொதுவாகவே, அநாவசிய செலவு என்று இருப்பதில்லை. எல்லாவற்றிலும் அளவு வைத்துக்கொள்வார்கள். திட்டமிடுவார்கள். லாபமும், வருமானமும் வருமா? என்று சிந்தித்துத்தான் ஒன்றை தொடங்குவார்கள். இழப்பை சிறிதளவும் ஏற்க மாட்டார்கள். தானமாக கொடுத்தாலும் அதில் ஓர் அளவும் கணக்கும் இருக்கும். இத்தகைய குணங்கள் ஏழையிடமும், நடுத்தரவர்கத்திடமும் உண்டா?

இன்றைக்கு இருக்கு, நாளை என்பதை நாளைக்குப் பார்க்கலாம் என்றுதான் ஏழையும், நடுத்தரவர்க்கமும் இருக்கும். தன்னிடம் இருப்பதை வாறி இறைக்கும் மனநிலையோடுதான் இருப்பார்கள். அது நல்ல உயர்ந்த நிலைதான் ஆனால், நீங்கள் தன்னளவில் ஏன் கஷ்டத்தை ஏற்கவேண்டும்? அப்படியான அவசியம் என்ன? அவரெல்லாம் உழைக்காமலேயே சம்பாதிக்கிறான், நான் இப்படியாக அவதிப்பட வேண்டியுள்ளது என்று மற்றவரை ஏன் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும்? இது உதாரணங்களே! இதுபோல இன்னும் நிறை பேசிக்கொண்டே. எழுதிக்கொண்டே போகலாம்.

ஏழைகளும், நடுத்தரவர்க்கமும் உழைக்கத் தயாரானவர்கள்தான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. மற்றவர்களுக்கு உதவும் மனநிலையும், பிறருக்காக வருந்தும் மனநிலையும் பெற்றவர்கள். ஆனால் தன்னளவில் தன்னை உயர்த்திட ஏனோ தயங்குகிறார்கள். அதை மாற்றி வாழ்வில், தொழிலில், வேலையில், வியாபாரத்தில், உழைப்பில் வெற்றி பெற்று, பொருளும் செல்வமும் பெறவேண்டும் என்று வாழ்த்தி மகிழ்கிறேன்.

ஐயா, என்னளவில் எனக்குத் தெரிந்த கருத்தைத்தான் முன்வைத்திருக்கிறேன். இதில் மாற்றுக்கருத்துக்கு இடமுண்டு. நான் தீர்வு தந்தாக என்னிடம் வாளை சுழற்றவேண்டாம். வாள் சண்டைக்கு நான் தயாரில்லை. கருத்துக்களில் உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால் விலகிக் கொள்ளுங்கள். தவறு இருக்குமானால் நானே திருத்திக்கொள்ளவும் தயங்கமாட்டேன்.

வாழ்க வளமுடன்

-

Why It's as if you don't need the service of teaching yoga to others?


நீங்கள் சொல்லுவதைப் பார்த்தால் பிறருக்கு யோகம் கற்றுத்தரும் சேவை தேவையில்லை என்பதுபோல இருக்கிறதே? இது உங்களுக்கே முரண்பாடாக தெரியவில்லையா?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, நீங்கள் சொல்லுவதைப் பார்த்தால் பிறருக்கு யோகம் கற்றுத்தரும் சேவை தேவையில்லை என்பதுபோல இருக்கிறதே? இது உங்களுக்கே முரண்பாடாக தெரியவில்லையா?

பதில்:

‘வாங்க, எத்தனைபேர் இப்படியாக கிளம்பியிருக்கிறீர்கள்?’ என்றுதான் கேட்கத்தோன்றுகிறது. இதுபோல இன்னும் எத்தனையோ வகையான கேள்விகளை நான் எதிர்கொண்டு இருக்கிறேன். நான் என்னுடைய கருத்தில், எழுத்தில் மேம்போக்காக எதையும் சொல்லுவதும் இல்லை. எழுதுவதும் இல்லை. அதை பொதுவெளியில் பகிர்வதும் இல்லை என்பதை இங்கே, உங்களுக்கு மட்டுமல்ல, எல்லோருக்குமே தெளிவு செய்கிறேன். எடுத்தோம், கவிழ்த்தோம் என்கிற பாணியிலே, படித்தோம் கேள்வி கேட்கிறோம் என்று எதையுமே ஆழ்ந்து புரிந்து கொள்ளாமல் ‘ஓ, அவர் இதைத்தான் சொல்லுகிறாரா?’ என்று தானாகவே எதையோ அரைகுறையாக புரிந்துகொண்டு, தன்னறிவிலே என்ன புரிந்து கொண்டாரோ, எப்படி புரிந்து கொண்டாரோ அதே அளவில், இப்படியான கேள்விகளை எதிராளிடம் கேட்பது என்று உங்களைப்போலவே பலர் இருக்கிறார்கள்.

இதை தன்முனைப்பு என்று தெளிவுசெய்தாலும், உனக்கில்லாத தன்முனைப்பா எனக்கு இருக்கிறது என்று மறுபடியும் முரண்படுவார்கள் என்பதே உண்மை.

நீங்கள் இங்கே கேள்வியில் குறிப்பிட்டிருக்கும் உண்மையை சொல்லும் பொழுதே, மனவளக்கலையின் நோக்கம் என்ன? என்பதை விளக்கியுள்ளேன். அதை தெளிவாக சொன்ன பிறகுதான். பிறருக்கு யோகம் கற்றுத்தரும் ஆசிரியராக செயல்படுவது உங்களின் விருப்பம் என்றும் தந்துள்ளேன். அதில் என்னுடைய கருத்து என்ன என்பதையும் ஏன் அப்படியான முடிவை எடுத்துக்கொண்டேன் என்பதையும் தெளிவாக தந்துள்ளேன். நீங்கள் வேண்டுமானால் பொறுமையாக, மறுபடியும், நிறுத்தி, நிதானமாக, கவனமாக படித்துப்பார்க்கவும். அதற்கான சுட்டி இணைப்பையும் இங்கே தருகிறேன்.

கடந்த பதிவுக்கான சுட்டி - இதோ இங்கே படிக்கலாம் 

உங்கள் கேள்வியில் உள்ள முதல் கேள்விக்கு மறுபடி ஒரு விளக்கம் தருகிறேன். நீங்கள் யோகம் கற்றுக்கொண்டால் மட்டுமே பிறருக்கு கற்றுத்தரக்கூடிய தகுதி வந்துவிடுகிறது என்பது உண்மைதான். குரு மகான் வேதாத்திரி மகரிஷி அந்த அளவிற்கு நம்மை உயர்த்தி, மதிப்பளித்து அதற்கான சான்றும் தந்துவிடுகிறார். ஆனால், ‘கற்க கசடற என்பதும், கற்றவை கற்றபின் நிற்க அதற்குத் தக’ என்ற ஆசான் திருவள்ளுவரின் குறள் சொல்லும் உண்மையில் இருக்கிறீர்களா? என்று சிந்தித்துப் பாருங்கள்.

நான் யார்? என்ற தன்னை உணர்தலையும், மெய்ப்பொருள் உண்மையையும் அறிந்து கொண்டீர்கள். எப்படியாக என்று பார்த்தால், வார்த்தைகளாலும், கருத்துக்களாலும், விளக்கங்களாலும் கேட்டும், படித்தும், அதுகுறித்து கேட்டறிந்தும் அறிந்து கொண்டீர்கள். எந்தவகையிலும் சந்தேகமில்லை என்றே வைத்துக் கொள்ளலாமே! ஆனால், நீங்கள் அதை உணர்ந்தீர்களா? குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள், தனக்குள் உணர்ந்ததுபோல நீங்கள் உணர்ந்து உண்மை தெளிந்தீர்களா? இதற்கு உங்கள் பதில் என்ன? 

அடுத்தாக இரண்டாவது கேள்விக்கு வரலாம். நீங்கள் உள்ளுணர்வாக, விளக்கமாக, உண்மையாக, அறிந்து உணராத ஒன்றை, பிறருக்கு பாடமாக சொல்லித்தருவது முரண்பாடு இல்லையா? அதை நான் சுட்டிக்காட்டியதுதான் உங்களுக்கு முரண்பாடாக தெரிகிறதா?

யோகம் என்பதை பிறரிடம் இருந்து (ஒரு வருடம் / இரண்டு வருடம் காலத்தில்) பெற்று, இன்னொருவருக்கு அப்படியே திருப்பி வழங்கிவிடுவதுதான் சரியானது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அதுவே போதுமானது என்றும் முடிவு செய்கிறீர்களா? மற்றவர்களுக்கும், மாணவர்களுக்கும் கற்றுக் கொடுப்பதற்கும் முன்னால், உங்களை தகுதியாக்கிக் கொள்ளும் திட்டம் ஏதும் உங்களிடம் இருந்ததில்லையா? அது தேவையும் இல்லையா? அனுவபத்திற்கும் ஆராய்ச்சிக்கும் இடமில்லையா? ஒருவேளை குருவுக்கு இணையாகவோ, அடுத்த நிலையிலேயோ அந்த நிலையிலேயே தானாக, அதிர்ஷ்டவசமாக உயர்ந்துவிட்டீட்களா? இதற்கும் உங்கள் பதில் என்ன?

உங்களுக்குத் தெரியுமா? குரு மகான் வேதாத்திரி மகரிஷியும் இத்தகைய கேள்விகளை எதிர்கொண்டும் இருந்திருக்கிறார். மேலும், தன்னுடைய வாழ்நாள் முழுவதுமே கூட, தன்னால் இருக்கையில் நீண்ட நேரம் உட்கார முடியாத நிலையிலும், பேராசியர்களுக்கு விளக்கம் வழங்கிக்கொண்டே இருந்தாரே? அது ஏன்? அவர்களை பயிற்றுவித்தார் தானே? அருள்நிதியர் என்று நிலையோடு விட்டுவிட்டாரா? அந்த பேராசியர்கள்தான் இன்னும் கற்றுக்கொள்வதை முரண்பாடு என்று விட்டுவிட்டார்களா?

எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற அவசர மனநிலையை தவிர்த்து, எதையுமே ஆழமாக புரிந்துகொள்ள உங்களை வாழ்த்துகிறேன்.

வாழ்க வளமுடன்
-

Shall we get initiation, guidance on self realization from you as a Master?


உங்களிடம் நாங்கள் தீட்சை, மறுதீட்சை, உண்மை விளக்கம் பெற்றுக் கொள்ள முடியுமா? அதுகுறித்த விளக்கங்கள் தருக.


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, உங்களிடம் நாங்கள் தீட்சை, மறுதீட்சை, உண்மை விளக்கம் பெற்றுக் கொள்ள முடியுமா? அதுகுறித்த விளக்கங்கள் தருக.

பதில்:

உங்கள் ஆர்வத்தை வரவேற்கிறேன், கேள்விக்கு நன்றியும், வாழ்த்தும் கூறுகிறேன். கடந்த 1988ம் ஆண்டின் இறுதியில், என்னுடைய பதினெட்டு வயதில், வேதாத்திரியத்தில் இணைந்து தீட்சை எடுத்துக்கொண்டு 1991ம் ஆண்டு, அப்போதைய MASTER Course என்ற ஆசிரியர் பயிற்சி பெற்றுக்கொண்டேன். ஒரு ஓவியராகவும், ஆசிரியராகவும், மனவளக்கலை மன்றத்தில் 1993ம் ஆண்டுவரை என் சேவைகளை பகிர்ந்து கொண்டேன். பிறகு என்னுடைய வேலை முதலான சொந்த காரணங்களால், மன்ற தொடர்பிலிருந்து என்னை விடுவித்துக் கொண்டேன். அன்றுமுதல் இன்றுவரை, நான் இப்போது இருக்கின்ற எந்த அமைப்பிலும் இல்லை என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.

அப்படியென்றால், வேதாத்திரிய உண்மை விளக்கம் எப்படி உங்களுக்கு கிடைத்தது? என்று உங்களுக்கு கேள்வி எழுவது சகஜமே! கூடவே சிலருக்கு பொறாமையும் எழும், இவருக்கு மட்டும் எப்படி இந்த உண்மை கிடைத்தது! என்று, மனதிற்குள் குமறுவார்கள். குரு மகான் வேதாத்திரி மகரிசி அவர்களின், மனவளக்கலை பயிற்சியின் நோக்கத்தை நீங்கள் கவனிக்கவேண்டும்.

ஒவ்வொரு தனிமனிதனையும், அவனுக்குள்ளாக இருக்கின்ற ‘மெய்ப்பொருள் உணர்வை’ தூண்டி அவனுக்கு இறையுணர்வு எனும் பிரம்மஞானத்தை அளித்து, தனி விடுதலை பெறவேண்டும் என்பதுதான். இந்த உண்மை அறிய, மனவளக்கலை லோகோவை (Logo) கவனியுங்கள். எனவே தீட்சை பெற்றது முதல்,  பிரம்மஞானம் விளக்கம் அறிந்து, அருளிநிதியர் ஆனாலே போதுமானது. ஆசிரியராக பணியாற்றுவது, அந்நிலையில் உயர்வது, சேவை புரிவது, அமைப்பில் தன்னை இணைத்துக் கொள்வது குறித்து, உங்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. நீங்கள் விரும்பினால் தொடரலாம், அவ்வளவுதானே?!

எனக்கு அப்போது கிடைத்த உண்மை விளக்கம் போதுமான அனுவமாகி உணர்ந்ததாக இல்லை. அந்த நிலையில், நான் பிறருக்கு உண்மை விளக்கம் தரும் ஆசிரியராக இருக்கவும் மனமொன்றவில்லை. எனவே அதற்கு என்னை தயார் படுத்திக் கொள்ளவும், உண்மை  விளக்கத்தை பெறவும் விரும்பியே என்ன விடுவித்துக் கொண்டேன். அதேபோல, தொடர்ந்து காயகல்ப யோகபயிற்சி, எளியமுறை உடற்பயிற்சி, தவம் ஆகியன தவறாமல் செய்துவந்தேன். விளக்கங்களை வேதாத்திரி மகரிஷியின் நூல்கள் வழியாக, குரல்பதிவுகள் வழியாக பெற்றுவந்தேன். எனினும், நான் உண்மை விளக்கம் பெற்று, நிறைபேற்று நிலை பெற கிட்டதட்ட 30 ஆண்டுகள் ஆகின. இந்த விளக்கம் பெறுவதற்கு முன்னால், நான் வேதாத்திரிய உண்மைகளை நான் பகிர்ந்ததில்லை. அதன்பிறகுதான், சேவையாக இணையம் வழியில் எழுதியும், பகிர்ந்தும் வருகிறேன்.

தனியாகவே, இந்திய அரசின் நிறுவன அமைப்பின் வழியே, கல்விச்சேவை நிறுவனமாக, செரெவியோ (SEREVIYO) (Service of AKASH TECHNOLOGIES AND CULTURAL EDUCATION) பதிந்திருந்தாலும் கூட, இன்னும் சேவை வழங்கவில்லை. ஆனால் விரும்பும் தனி நபர்களுக்கு, சேவையும், ஆலோசனையும், வழிகாட்டுதலும், தீட்சை, தவம் முதலான வகுப்புகளும் தந்துவருகிறேன். மொத்தமாக எல்லோரையும் இணைக்கும் வழியிலும், ஆன்லைன் எனப்படும் இணைய வகுப்புகளும் நான் நடத்தவில்லை. அதில் எனக்கு ஆர்வமும் இல்லை.

நீங்கள் விரும்பினால் என்னை எப்போதும் தனிநபராக, தொடர்பு கொள்ளலாம். உடனே அழைப்பு விடுக்காமல், உங்களைப்பற்றிய விபரங்களை என்னுடைய arulnidhisugumaran@gmail.com என்ற மின்னஞ்சல் வழியாக அனுப்பி வைக்கலாம். அதன்பிறகே விளக்கங்கள் தர முயற்சிப்பேன். உடனடியாக, முதல் கேள்வியாக, என் முகத்திலடித்தாற்போல ‘சுத்தவெளி என்பது என்ன? எப்படி புரிந்து கொள்வது?’ என்ற கேள்வியை தனக்குள்ளே வைத்திருப்பவர்கள் தயவு செய்து தவிர்க்கவும்.

சேவை என்பதை அதற்குரிய தகுதியோடும், மதிப்போடும், பக்குவத்தோடும், அளவு நிலைகளோடும் பயன்படுத்திக் கொள்ளவும்.

வாழ்க வளமுடன்
-

Why getting allergies and pain on my regular simplified exercise?


எளியமுறை உடற்பயிற்சி செய்யும் பொழுதும், சில நேரம் கடினமாகவும் வலியாகவும் உணர்கிறேன். உடல் ஒவ்வாமையும் வருகிறது. என்ன செய்வது?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, எளியமுறை உடற்பயிற்சி செய்யும் பொழுதும், சில நேரம் கடினமாகவும் வலியாகவும் உணர்கிறேன். உடல் ஒவ்வாமையும் வருகிறது. என்ன செய்வது?


பதில்:

வாழும் மக்கள் தங்களின் அன்றாட நடவடிக்கைகளில் எப்படி உடலையும், மனதையும் பழக்கி வைத்திருக்கிறார்களோ அந்த தன்மைக்கு அவர்களின் உடலும், மனமும் பழகிக் கொள்ளும். ஆற்று நீரும், மழை நீரும் எப்படி அதன் பாதை போகிறதோ அதுபோல தானாக போகும் அளவுக்கு, மனிதர்களுடைய உடலும், மனமும் செயல்படும். நீண்டநாளாக இது தொடரும் நிலையில், உடலில் வலு இருக்கும் வரையிலும், குறிப்பிட்ட வயது வரையிலும் இந்தக்குறைபாடுகள் தெரியாது. உண்ணும் உணவாலும், பொழுதுபோக்குகளினாலும், கவனமின்மையாலும் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவோம். தீடீரென ஏதேனும் ஒருநாள் தலைவலியோ, காய்ச்சலோ, சளி பிடித்தலோ, விபத்தோ நடந்தால்தான் மொத்த நிலையும் குழப்பமடைந்து நிற்கும். என்ன செய்வது என்று தெரியாமல், மருந்துகளை நம்ப வேண்டிய நிர்பந்தம் அமையும். அதில் மருந்தும் உதவும், சில அறுவை சிசிச்சையும் உதவும். எனினும் முன்போல செயல்பட முடியாத கட்டுப்பாடுகள் உங்களுக்குத் தரப்படும் என்பது உறுதி.

நாம் ஏன் அந்த அளவுக்கு, இந்த உடலையும் மனதையும் விடவேண்டும்? இப்போது இருக்கும் ஆரம்ப நிலையிலேயே, கவனமும் அக்கறையும் கொண்டு திருத்தி அமைக்கலாம் அல்லவா? ஆனால் எங்கே தவறு நேர்கிறது என்றால், வழக்கமாக நாம் செய்கிற செயல்களில் இன்னமும் திருத்தம் பெறவில்லை என்பதைத்தான் இது குறிக்கிறது. நீங்கள் எளியமுறை பயிற்சியை கற்று, தொடர்ந்து செய்வதற்கு ஆர்வம் கொண்டால், உங்கள் வழக்கமான செயலையும், நடவடிக்கைகளையும் ஆராய்ந்து திருத்திக்கொள்ள முயற்சிக்க வேண்டும். ஒரு உதாரணமாக, நான் எளியமுறை உடற்பயிற்சி செய்வேன், ஆனால் வேலையின் காரணமாக இரவு இரண்டு மணி வரை கண் விழித்து வேலை பார்ப்பேன், சினிமா, பொழுதுபோக்கு, விளையாட்டு பார்ப்பேன் என்று இருக்கக்கூடாது.

வேதாத்திரியத்தில், நிறைவான, இன்பமான வாழ்க்கைக்கு ஐந்து ஒழுக்க பண்பாடு என்ற ஒரு நிலை உண்டு. அது உணவு, உறக்கம், உழைப்பு, உடலின்பம், எண்ணம் ஆகிய ஐந்திலும் அளவும், முறையும் மீறாமல் இருக்கவேண்டியது அவசியமாகும். உணவு உடலுக்கு முக்கிய தேவைதான், அதற்காக சாப்பிட்டுக்கொண்டே இருக்கமுடியாது அல்லவா? அதுபோலவே மற்ற நான்கும். இந்த ஐந்தோடு, வழக்கமான உங்கள் அன்றாட செயல்பாடை கவனியுங்கள். எந்தெந்த வகையில் உங்கள் உடலும், மனமும் அதன் போக்கில் செல்கிறது? நீங்கள் அதை உணராமல் பழக்கத்தால் சிக்கிக்கொள்கிறீர்கள் என்று ஆராய்ச்சி செய்யுங்கள். அந்த திருத்தங்களை பெற்று மாற்றிட முயற்சி செய்யுங்கள். இந்த விளக்கம் உங்களுக்கு கிடைத்துவிட்டால், எளியமுறை உடற்பயிற்சி உண்மையாகவே உங்களுக்கு பொருந்துவதை உணர்வீர்கள்.

வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சியின் முக்கிய நோக்கமே, எளிமையாக உடலுக்கும், உடலுறுப்புகளுக்கும் இயக்கம் தந்து சிறப்பாக செயல்பட வைப்பதும், இதுவரை இருக்கின்ற குறைகளை திருத்தி அமைப்பதும்தான் என்பதை நினைவில் கொள்க. உங்கள் வழக்கத்தை மாற்றிக்கொள்ளாமல், எளியமுறை உடற்பயிற்சி செய்வதால்தான், அந்த எளிமையே உங்களுக்கு கடினமாக தோன்றுகிறது. ஒரு பெரிய பொருளை கைகளால் தூக்கவேண்டும் என்றால், ஏற்கனவே கையில் இருக்கும் ஏதோ ஒரு பொருளை விட்டுவிட வேண்டும்தானே? நான் அதையும் வைத்துக்கொண்டே இந்தப்பெரிய பொருளையும் தூக்குவேன் என்றால், முடியாது, முடிந்தாலும் கைகள் வலிக்குமே? எனவே, உங்கள் அன்றாட பழக்க வழக்கம், செயல்பாடுகளில் இருந்து முதலில் மாற்றம் பெறுக. இதற்கு துணையான விளக்கங்களை, உங்கள் ஆசிரியரிடம் கலந்தாலோசித்து பெறலாம்.

வாழ்க வளமுடன்

-

Why felt myself lost something inside after joining on Yoga? Can give up Yoga?


யோகத்திற்கு வந்த பிறகு எதோ ஒரு மாற்றம் உணர்கிறேன். ஆனாலும் எதையோ இழந்தது மாதிரியாக இருக்கிறதே? யோகத்தை விட்டுவிடலாமா? என்றும் தோன்றுகிறது! ஏன்?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, யோகத்திற்கு வந்த பிறகு எதோ ஒரு மாற்றம் உணர்கிறேன். ஆனாலும் எதையோ இழந்தது மாதிரியாக இருக்கிறதே? யோகத்தை விட்டுவிடலாமா? என்றும் தோன்றுகிறது! ஏன்?


பதில்:

உங்களுக்குத் தோன்றிய இக்கருத்து, யோகத்தில் தங்களை, இணைத்துக் கொண்ட எல்லோருக்குமே தோன்றும் என்பதே உண்மை. நீங்கள் வாய்திறந்து கேட்டுவிட்டீர்கள். பெரும்பாலோர் கேட்கமாட்டார்கள். தங்களுக்குள் சந்தேகத்தோடு இருப்பார்கள். யோகத்தில் ஆர்வம் வருவதும், அதில் தங்களை இணைத்துக்கொள்வதும், குருவின் வழியாக தீட்சை பெற்று, குண்டலினி சக்தியை உயர்த்திக்கொண்டு தியானம் பழகுவதும் மிக எளிதானதல்ல. பலப்பல பிறவிகளின் வழியாக நாம் இழந்த ஒன்றை, இந்தப்பிறவியில் பெரும்பேறாக அடைந்துவிட்டோம் என்பதுதான் உண்மை. அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் அத்தகைய உண்மையை நாம் மிக எளிதாக கடந்துவிடுகிறோம்.

காரணம் என்ன? இதற்கு முன்னதாக நாம் வாழ்ந்துவந்த நிலைகளிலும், அதில் கிடைத்த அனுபவங்களிலும் மனம் ஒன்றி அனுபவித்துவிட்டோம். அதனால் இந்த மாற்றத்தை நாம் மிக எளிதான ஒன்றாக கருதுகிறோம். அவசியமில்லாததோ? என்றும் சந்தேகப்பட்டு விடுகிறோம்.

வல்லூறு என்ற ஒரு பறவை இருக்கிறது. கழுகு என்ற பறவை இனத்தைச் சேர்ந்தாலும் அது கழுகைவிடவும் விட மிக பெரிதாக இருக்கும். கழுகு என்ற இனத்தில்  ‘கருடன்’ என்பது உண்டு, அதுவும் வேறுவகையானதே. இந்த வல்லூறுக்கு மிக நீண்ட இறக்கைகள் இருக்கும். எட்டுஅடி நீளம் கொண்டவை உண்டு என்கிறார்கள். மிக தீர்க்கமான பார்வை, வேகம், தன்னைவிட பெரும் எடையை தூக்கிக் கொண்டு நீண்ட தூரம் பறக்கும் தன்மை கொண்டது. சரி, இதை ஏன் இங்கே சொல்லுகிறீர்கள் என்கிறீர்களா? வாருங்கள், மேலும் பார்க்கலாம்.

அத்தகைய வல்லூறுக் குஞ்சொன்று அடிபட்டு சாலையில் விழுந்துகிடந்தது. அதை பறவைகளின் ஆர்வலர், வனத்துறையிடம் கொடுத்துவிட்டார். அவர்கள், அந்த வல்லூறுக் குஞ்சை கவனமாக மருந்துகள் கொடுத்து, அதன் காயத்தை ஆற்றி, சிதைந்து போயிருந்த சிறகுகளை வெட்டி ஒழுங்கு படுத்தி, கூண்டுக்குள் வைத்து காத்துவந்தனர். வேட்டையாடும் பழக்கமுள்ள இனம் இந்த வல்லூறு, ஆனால் கூண்டுக்குள் உணவைக் கொடுத்து வளர்த்தனர். நாளடைவில் அது குணமடைந்துவிட்டது. வளர்ந்தும் விட்டது. அதன் இயல்பில் அவர்களை அலகால் கொத்தவும், தாக்கிடவும் செய்கிறது. இப்போது அதற்கு கூண்டு பொருந்தவில்லை. அவ்வளவு பெரிதாகவும் ஆகிவிட்டது. 

வனக்காவலர்கள் திட்டமிட்டு, அதை மலைக்காடுகளில் விட்டுவிட முடிவு செய்தனர். அடர்ந்த அந்த மலைக்காட்டின் உச்சியில் கொண்டு சென்று, முகத்திலும் கைகளிலும் உறை போட்டுக்கொண்டு கவனமாக, அக்கூண்டை திறந்துவிட்டனர். அந்த வல்லூறு, தன் கூண்டைவிட்டு கொஞ்சம் கூட நகரவே இல்லை. வனக்காவலர்கள் சிறிய மூங்கில் கம்புகளால் வல்லூறை கூண்டுக்கு வெளியே தள்ளுகிறார்கள். அப்படியும் நகரவில்லை. ஆனாலும் தொல்லை தாங்காதவாறு கூண்டுக்கு வெளியே வந்துவிட்டது. அது நடந்து நகர்கிறது. இறக்கைகளை விறிக்கவும் இல்லை, அது பறக்கவும் இல்லை. அதற்குப்பிறகு என்ன நடந்தது? அதை பிறகு சொல்லுகிறேன். இந்த வல்லூறின் நிலைதான் உங்களின் நிலைமை.

கூண்டில் இருந்து பழகியதால் அது கூண்டை விட்டும் நகரவில்லை, பறக்கவும் இல்லை. நீங்களும் இந்த உலக வாழ்க்கையில், மனதைக்கொண்டு வாழ்ந்து பழகிவிட்டு, உண்மையை நோக்கி யோகத்தின் வழியாக பயணிக்க தயங்குகிறீர்கள்.

மனிதனின் இயல்பும், பிறவியின் நோக்கமும் தன்னை அறிவதுதான். அதை விட்டு விலகிவிடலாமா? இப்போது இல்லையென்றால் இனி எப்போதும் இல்லை. 

வாழ்க வளமுடன்

-



Why the changes are low level within people based on yoga even it is simplified?


உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதருக்கும், பிறவியின் நோக்கத்தை நிறைவேற்றும் யோகம் பயிற்சியாக எளிமையாக வந்த பிறகும் மாற்றம் வெகு குறைவாக இருக்கிறதே?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதருக்கும், பிறவியின் நோக்கத்தை நிறைவேற்றும் யோகம் பயிற்சியாக எளிமையாக வந்த பிறகும் மாற்றம் வெகு குறைவாக இருக்கிறதே?


பதில்:

யோகம் என்பது எளிமையாக்கப்பட்டு, மனிதர்களின் பிறவி நோக்கத்தை அறியவும், பிறவிக்கடன் தீர்த்திடவும் வழிகளாக, பயிற்சிகளாக பல கிட்டதட்ட 100 ஆண்டுகளாக உலகில் எத்தனையோ ஞானிகளால், மகான்களால், யோகிகளால், உலக மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதற்கு முன்பாகவும் இருந்தன எனினும் கடின முறைகளும், துறவு கட்டாயம் என்ற நிலையும்கூட மக்கள் ஏற்றுக்கொள்ள தயக்கத்தோடு இருந்தனர். என்றாலும் அதையும் விரும்பி ஏற்று கற்றுக்கொண்டு, தானும் உயர்ந்து, பிறரையும் உயர்த்த நினைத்த அத்தகைய உயர்ந்த நோக்கமும் எண்ணமுமே, பிற்காலங்களில் யோகத்தை எளிமையாக்கிடவும் வகை செய்தது எனலாம்.

அந்தக்கால கடின முறைகளும், கட்டாய துறவும் இப்பொழுது இல்லை. பயிற்சியில் எளியமுறையும், வாழும் வாழ்க்கையில் அளவும் முறையும் கொண்டு யோகத்தின் வழியாக உயரலாம். தன்னிலை விளக்கமும், மெய்ப்பொருள் உண்மையும் அறியலாம் என்ற நிலை உருவாகிவிட்டது. அதுவே இன்றளவும் தொடர்கிறது.

எத்தனையோ யோக பயிற்சி மையங்களும் உலகெங்கிலும் உருவாகிவிட்டன. நோக்கம் ஒன்றாகக் கொண்டு பலவாறாக பயணிப்பது மக்களுக்கும் உதவும். அந்தவகையில்தான் மொழி, இனம், நாடு என்ற பிரிவுகள் இன்றி அனைவரும் யோகத்தில் பயணிக்கின்றனர் என்பதுதான் உண்மை. எனினும் சில குறுமதியர்கள், தங்களின் சுய லாபத்திற்காகவும், பெயருக்காகவும், புகழுக்காகவும், பிறரிடமிருந்து பொருள் பறிக்கவும் திட்டமிட்டு, மக்களுக்கு  தவறான பாதையையும், அச்சுறுத்தலையும் பரப்புகின்றனர். மிகையாகச் சொல்லி அதை மனிதர்களால் முடியாது என்றும் சொல்லுவார்கள். மனிதர்களாகிய நமக்குத் தேவையும் இல்லை என்றும் சொல்லுவார்கள். இப்படியான மனிதர்களுக்கும் பெரும்கூட்டம் பின்னால் செல்லுகிறது என்பதுதான் நாம் நேரில் பார்க்கின்ற உண்மையாகும்.

தகவல் தொடர்பு உலகம் முழ்வதும் எளிமையாகிவிட்ட இந்த நிலையிலும் கூட, இப்படியான உண்மைக்குப் புறம்பான மாற்றுக்கருத்துக்கள் வலிமையாக பரவி வருவது கண்கூடு. ஆனால் இதை உடனடியாக மாற்றிவிட முடியுமா? முடியாதுதான். வேகமாக நகரும் ஒரு விசையை, பொருளை, தடுப்பதில் மிகப்பெரும் பாதிப்பு ஏற்படுவது இயற்கை விதி. ஆனால் அதுவாகவே ஒர்நாளில் ஓரளவில் நின்றுவிடும் அல்லவா? அதுவரை காத்திருந்து பிறகு அதை மாற்றி அமைக்க நாம் முயற்சிக்கலாம்.

பொதுவாகவே யோகம் குறித்து எது பேசினாலும் ஏற்கும் மனநிலை, எந்த மனிதருக்கும் இல்லை என்பதுதான் இப்போதுள்ள தலைமுறைக்கும், அடுத்த இரண்டு தலைமுறையினருக்கும் இருக்கிறது. தவறில்லை. எல்லா மனிதர்களுமே உலகில் இன்பத்தை நுகர்ந்து அனுபவித்து வாழவே பிறந்தோம் என்ற உண்மையில், அவர்கள் பயணிக்கிறார்கள்.  யோகத்தின் வழியாக, இப்படியாகத்தான் அந்த இன்பத்தை நுகர்ந்து அனுபவிக்கவேண்டும் என்று மற்றோர் பயணிக்கிறார்கள். இந்த பயணத்தில் எங்கே பிரச்சனை வருகிறதோ? தடை வருகிறதோ? குழப்பம் வருகிறதோ? அப்போது தானாகவே மாற்றம் நிகழும் என்பதே உண்மை. இயல்பான பாடமும், திருத்தமும் மனித சிந்தனையில் அமைந்துள்ளது. இயற்கையானது நமக்கு வழிகாட்டியது போலவே, அவர்களுக்கும் வழிகாட்டும் என்பதே உண்மையாகும். காத்திருக்கலாம் தவறில்லை.

வாழ்க வளமுடன்

-

Why still some of people share the old notes and details is hard to follow in this modern world?


இன்னமும் கூட பழைய பஞ்சாங்கம்,  புரிந்து கொள்ள முடியாத விளக்கம், குறிப்பு, வழிபாடு, சடங்கு, வழிமுறை, நடைமுறைக்கு கடினமான பழக்கங்கள் இவற்றை விளக்குகிறார்களே?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, இன்னமும் கூட பழைய பஞ்சாங்கம்,  புரிந்துகொள்ள முடியாத விளக்கம், குறிப்பு, வழிபாடு, சடங்கு, வழிமுறை, நடைமுறைக்கு கடினமான பழக்கங்கள் இவற்றை விளக்குகிறார்களே?


பதில்:

வேதாத்திரியத்தில் இருக்கின்ற உங்களுக்கு அத்தகைய கண்ணோட்டம் வேண்டியதில்லை. இப்போழுது நீங்கள் இருக்கும் நிலையில், உங்கள் வகுப்பில் என்ன சொல்லித்தரப்படுகிறதோ? உங்கள் கேள்விக்கான விளக்கம் கிடைக்கிறதோ? அதை மட்டும் நீங்கள் பெற்று பயன் செய்து கொள்ளுங்கள். உங்களைச் சுற்றி என்ன நடந்தாலும், யார் என்ன சொன்னாலும் அப்போதைக்கு ஏற்று கடந்துவிடப் பழகுங்கள்.

யாரையும் குறை சொல்லுவதும், அவர்களை திருத்திட முயற்சிப்பதும், மாற்றங்களை விளக்கிக் கொண்டிருப்பதும், அவர்களின் விளக்கத்தில் இருக்கிற குறைகளை களைவதும் நம்முடைய வேலையில்லை. அதை காலமும், அவர்களுடைய அனுபவமும் பார்த்துக்கொள்ளும். எனவே அவர்களையும், அவர்கள் கருத்துக்களையும் கடந்துபோகக் கூடிய தன்மையை நீங்கள் வளர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

ஒரு தனிநபர், ஒரு சமூகம், ஒர் நாடு என்ற வகையில் பலவித கருத்துக்களும், விளக்கங்களும் இருக்கத்தான் செய்யும். வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான் உலகின் சிறப்பாகும். அதற்குத் தக்கபடி நாம் வாழ்வதற்கும் பழகிக் கொள்ளவேண்டும்.

வேதாத்திரியம் உண்மையிலேயே தனது விளக்கத்தை தருவதாக மட்டுமே அமைந்திருப்பதை நீங்கள் காணலாம். எந்த வகையிலும் அது வேண்டாம், இது வேண்டாம், இது தவறு, அது தவறு என்று குறைகளையும், விளக்கங்களையும் சுட்டிக் காட்டுவதே இல்லை. இதை கட்டாயம் கடைபிடியுங்கள் என்று உங்களை வற்புறுத்துவதும் இல்லை. ஏதேனும் குழப்பமாக சொல்லி உங்களை எந்த விதத்திலும் பயமுறுத்துவதும் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதுவரை உங்களுக்கு வேதாத்திரியத்தின் நோக்கம் தெரியவில்லை என்றாலும் கூட, இனிமேலாவது தெரிந்து கொள்ளுங்கள்.

ஒரு பாதையில், பலதரப்பட மனிதர்கள் கடந்து போகலாம். அவர்களோடு நாமும் நடந்து போகிறோம். அந்த வகையில், அந்த பாதையில் நடந்து போகிற எல்லோருக்குமே ஒரே நோக்கமும், தெளிவும், விளக்கமும் இருக்கும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. மனிதன் ஒரே மாதிரியான அமைப்பில் இருந்தாலும், வந்தாலும், ஒவ்வொருவரும் தனித்தனி உலகம் என்ற உயர்ந்த ஞானிகளின் கருத்தை நாம் ஏற்றுக்கொள்ளாமல் இருக்கமுடியாது. அந்த உண்மையை புரிந்து கொண்டு, அவர், அவருக்குத் தெரிந்த கருத்தையும், அவர் கற்றுக்கொண்ட கருத்தையும், அவருக்கு அனுபவப்பட்ட வழிகளில் கிடைத்த உண்மைகளையும் சொல்லுகிறார். அது அவருடைய வழி என்று விட்டுவிடுதல் நல்லது. உங்களுக்கான வழியும், பாதையும் எதுவோ அதில் நீங்கள் அமைதியாக நிறைவாக பயணிப்பதுதான் நல்லதாகும்.

குறைகளை பார்த்துக்கொண்டே இருக்கின்ற மனதிற்கு என்றுமே அமைதி இருக்கப்போவது இல்லை. அதனால், உங்களுடைய உண்மைக் கருத்துக்களில் நின்று, அதை குழப்பிக்கொள்ளாமல், மேலும் மேலும் அதிலேயே விளக்கம் பெற்று உயர்ந்து கொண்டே இருங்கள், அதுவே போதுமானது!

வாழ்க வளமுடன்

-

How the yogi can understand the simply human problems and life struggles?


மக்களின் அன்றாட வாழ்க்கை, அதில் எழும் பிரச்சனைகள், சமூக நிலைமை இதெல்லாம், உலகிலிருந்து தனித்து வாழும் ஒரு யோகிக்கு எப்படித் தெரியும்? என்று கேட்கிறவர்களுக்கு பதில் என்ன?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, மக்களின் அன்றாட வாழ்க்கை, அதில் எழும் பிரச்சனைகள், சமூக நிலைமை இதெல்லாம், உலகிலிருந்து தனித்து வாழும் ஒரு யோகிக்கு எப்படித் தெரியும்? என்று கேட்கிறவர்களுக்கு பதில் என்ன?


பதில்:

இதே கேள்வியை, இப்போது மட்டுமல்ல, எக்காலத்திலும் வாழும் மக்கள், அவர்களை வாழ்விலும், தரத்திலும், பிறவியிலும் உயர்த்த வழிகள் சொல்லும் உயர்ந்த யோகிகளை, ஞானிகளை, மகான்களை பார்த்து அப்படித்தான் கேட்கிறார்கள். இனிவரும் காலங்களில் வெகு சிலர் மட்டும் கேட்பார்கள். ஏனென்றால், இப்போது உலக அளவில் நல்ல ஆன்மீக முன்னேற்றம் வளர்ந்து பரவியுள்ளது என்பதே உண்மை.

குரு மகான் வேதாத்திரி மகரிஷியிடமும், இதேபோலான கேள்வியை, வெளிநாடுகளிலும், நம் இந்தியநாட்டின் நகரங்களிலும் அவரின் ஆன்மிக சொற்பொழிவும், மனவளக்கலை பயிற்சியும் அளிக்கும் காலங்களில், அவரிடமே நேரடியாக கேட்டிருக்கிறார்கள். 1986 ம் ஆண்டுகள் வரையிலும், அவர் ஆறு மாதங்கள் உலகநாடுகளில் ஆங்கில மொழிவழியான பயிற்சிகளும், டெல்லி,  மும்பை போன்ற இந்திய நகரங்களிலும் பயிற்சியை வழங்கிவந்தார். அதன்பிறகுதான் நிலையாக, ஆழியார் அறிவுத்திருக்கோவிலில் இருந்தே தன் பயிற்சிகளை வழங்கிவந்தார்.

‘ஒரு யோகியாக, எல்லாவற்றையும் விடுத்து, தனித்து வாழ்கின்ற ஒருவருக்கு, எங்களுடைய கஷ்டங்களெல்லாம் எப்படி தெரியும் என்றுதான் அன்பர்களாகிய நீங்கள் கேட்கிறீர்கள். நான் ஒன்றும் நேரடியாகவே யோகியாக பிறக்கவில்லையே. உங்களைப்போலவே நானும் பிறந்து வாழ்ந்து, வாழும் பொழுதே குடும்ப கஷ்டங்களை அனுபவித்து, கல்வி படிக்க முயன்று முடியாமல், வேலை பழகி, இரவும் பகலும் உழைத்து, என்னளவில் பணம் சம்பாதித்து, இறை என்பது என்ன? ஏன் இந்த கஷ்டம்? என்ற கேள்விக்கு விடைதேடி அலைந்து, திரிந்து, யோகம் கற்றுக்கொண்டேன். ஒருவேலை பார்த்தால் போதாது என்று, கிடைக்கும் வாய்ப்புக்களில் எல்லாம் வேலை பார்த்து சம்பாத்தியம் பெற்றேன். பார்க்கும் வேலையிலும் கிடைத்த மனம் ஒவ்வாத பிரச்சனைகளை சமாளித்தேன். சொந்தமாகவும், குழுவாகவும் தொழில் துவங்கி நடத்திய அனுபவமும் கண்டேன், அதில் நல்ல உயர்வும், தீடீர் நஷ்டமும் கூட உண்டுதான். இதற்கிடையில் திருமணமும் செய்துகொண்டேன். அதுவும் ஒன்றல்ல இரண்டு. அதில் கணவன் மனைவிக்கு இடையிலான குடும்ப பிரச்சனைகள், வருத்தம், கவலை, மகிழ்ச்சி எல்லாம் உண்டு. வறுமையும், செழிப்பும், வேலையும், வேலையின்மையும், உழைப்பும், அதற்கேற்ற உயர்வும், உதவியும், ஏமாற்றமும், தாழ்வும், பழிவாங்கப்படுதலும் இப்படியாக எல்லாமும் நானும் அனுபவித்திருக்கிறேன்’ என்றுதான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் குறிப்பிடுகின்றார். தன்னுடைய பேச்சிலும், எழுத்திலும், கவிதைகளிலும் இத்தகைய குறிப்பை அவர் பதிவும் செய்திருக்கிறார்.

இதைவிட வேறென்ன வாழ்க்கை குறித்த அனுபவம் வேண்டும்? சொல்லப்போனால் நம்மையும் விட கொடுமையான வாழ்க்கை அனுபமாக அல்லவா இருக்கிறது? நாம் ஏதோ பராவாயில்லையே என்றுதான் நமக்குத் தோன்றும். பொதுவாக சொல்லுவார்கள் அல்லவா? இக்கரைக்கு அக்கரை பச்சை என்று, அதுபோல பார்ப்பதற்கு வேண்டுமானால் அப்படி இருக்கலாம். அக்கரைக்குச் சென்றால்தான் அங்கேயும் இதேபோல வறட்சியும் உண்டுதான் என்று தெரியவரும்.  எப்போதும், யாரும், எவரும் எடுத்த எடுப்பிலேயே நீதி போதனை செய்யமாட்டார்கள். அப்படிச் செய்தால் அவர்களுடைய மனமே அவர்களை தண்டித்துவிடும் என்பது இயற்கை நீதி. வாழ்ந்து கெட்ட மனிதர் என்றொரு சொற்றொடரும் நாம் அறிவோம். அப்படியான வாழ்க்கை அனுபவத்தை பெற்றவர்தான் நமக்கு வழிகாட்டவும் முடியும். இப்படிப்போகாதே, பாதையில் முட்கள் இருக்கிறது என்று யாராவது போதனை செய்தால், நீ உன் வேலையைப்பார், எல்லாம் எனக்குத் தெரியும் நீ சொல்லவேண்டிய அவசியம் இல்லை என்று அந்த முட்பாதையில் கால்வைத்து நடப்பீர்களா? ஆனால் அப்படித்தான் இந்த உலகில் மனிதர்கள் பயணிக்கிறார்கள்.

ஆனால், உண்மையான ஞானியும், யோகியும், மகானும் ‘நான் சொல்லுவதை கடைபிடியுங்கள்’ என்று கட்டாயப்படுத்தவே மாட்டார்கள்.

வாழ்க வளமுடன்

-

Always we are suffering to find happiness in life, then how will help yoga on that?


வாழும் நாட்களில், மகிழ்ச்சியும் சந்தோஷமும் தேடித்தானே வாழ்கிறோம். அதற்காத்தான் இத்தனை கஷ்டமும்படுகிறோம். இதில் யோகத்தில் எப்படி மகிழ்ச்சியும், சந்தோஷமும் கிடைத்துவிடும்?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, வாழும் நாட்களில், மகிழ்ச்சியும் சந்தோஷமும் தேடித்தானே வாழ்கிறோம். அதற்காத்தான் இத்தனை கஷ்டமும்படுகிறோம். இதில் யோகத்தில் எப்படி மகிழ்ச்சியும், சந்தோஷமும் கிடைத்துவிடும்?


பதில்:

அப்படியானால், உங்கள் யோகப்பயணத்தின் நோக்கம் என்னவென்றால், தேடுகின்ற மகிழ்ச்சியும் சந்தோஷமும் உங்களுக்கு கிடைக்கவேண்டும் என்பதாகத்தான் இருக்கிறது அல்லவா? உண்மையாக இப்படி யாரேனும் உங்களுக்குச் சொன்னார்களா? நீங்களாகவே அப்படியாக நினைத்துக் கொண்டீர்களா? என்பதை யோசிக்கிறேன். பெரும்பாலான யோக அமைப்புக்கள், யோகம் செய்தால் உண்மை விளக்கம் பெறலாம் என்றுதான் சொல்லுவார்கள். அந்த உண்மை விளக்கம், பலபடிகளில் உயர்வை அளித்து, ‘நான் யார்?’ என்ற கேள்விக்கான விடையை அளித்து, நம்முடைய பிறவி நோக்கத்தையும், இதுநாள்வரை நாம் பெற்றுவந்த பிறவிக்கடனையும் தீர்த்து நம்மை முழுமையாக்கும் என்பதுதான் உண்மை.

இந்த யோகபயணத்தில், அவரவர்களின் ஆர்வம், முயற்சி, பயிற்சி, ஆராய்ச்சி, விளக்கம் என்ற வகையில்தான் முன்னேற்றமும் கிடைக்கும். அந்த கால அளவு முறை என்பதை நாம், தீர்மானிக்க முடியாது. ஒருவருக்கு உடனே கிடைக்கலாம், இன்னொருவருக்கு குறிப்பிட்ட காலம் ஆகலாம். மற்றொருவருக்கு நீண்ட காலம் எடுத்துக்கொள்ளலாம்.  ஆனால், யோகத்தில் பயணிக்கும் ஒருவருக்கு உண்மை எப்படியாவது கிடைத்துவிடுகிறது என்பதுதான் நிச்சயமானது. அதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

யோகத்தில் இணைந்து அதன்வழியாக, விளக்கம்பெற்று பயிற்சியும், தியானமும் செய்துவந்தால், மகிழ்ச்சியும் சந்தோஷமும் எப்படி கிடைக்கும்? என்ற கேள்வியும், இதுவரை யோகம் செய்து வந்தும், அந்த மகிழ்ச்சியும் சந்தோஷமும் கிடைக்கவில்லையே? என்ற மற்றொரு கேள்வியும், உங்களுடைய கேள்வியில் இருக்கிறது எனலாம்.

ஒரு உண்மை விளக்கத்தை, இன்று உங்களுக்குச் சொல்லுகிறேன். அந்த உண்மை உங்களுக்குத் தெரியுமா? மகிழ்ச்சியும் சந்தோஷமும் வாழ்க்கையில் தேடிப்பெற வேண்டிய அவசியமே இல்லை. அது ஏற்கனவே நம்மிடம்தான் இருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்களா? நம்மிடம் ஏற்கனவே நிலைபெற்று இருக்கின்ற மகிழ்ச்சியும் சந்தோஷமும் பலவித தடைகளால் மறைக்கப்பட்டிருக்கிறது. அந்த தடைகளை அகற்றி, நமக்குள்ளும், நம்மைச்சுற்றிலும், இந்த உலகிலும், இந்த பிரபஞ்ச அளவிலும், எங்கும் நிறைந்துள்ள ‘மகிழ்ச்சியும் சந்தோஷமும்’ இருக்கும் இடத்திலிருந்தே பெறுவதுதான் யோகத்தின் முக்கிய நோக்கமும் ஆகும்.

‘அதுதானய்யா, கிடைக்கவில்லையே?’ என்று புலம்புவதில் அர்த்தமில்லை. உங்கள் யோகப்பயணத்தை, எந்த தேடுதலும், நோக்கமும் இன்றி இயல்பாக தொடருங்கள். உங்களுக்கான வெற்றி இலக்கு நிச்சயமாக கிடைக்கும். அதில் சந்தேகமில்லை. வாய்ப்புக் கிடைத்தால், என்னை நேரில் சந்தித்து உண்மையறியுங்கள். உங்கள் ஆசிரியடமும் கேட்டுப் பெறுங்கள்.

வாழ்க வளமுடன்

-


How we can identified the true Yogi or Mahan in this modern world?


யோகத்தில் இருப்பவர்கள் எப்போதும் தாடி மீசை வளர்ந்த, படர்ந்த தலைமுடியோடு, தலைப்பாகையோடு, போர்த்திய துண்டோடு, வித்தியாசமான அலங்காரத்தோடு இருப்பது ஏன்? விளக்குவீர்களா?




வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, யோகத்தில் இருப்பவர்கள் எப்போதும் தாடி மீசை வளர்ந்த, படர்ந்த தலைமுடியோடு, தலைப்பாகையோடு, போர்த்திய துண்டோடு, வித்தியாசமான அலங்காரத்தோடு இருப்பது ஏன்? விளக்குவீர்களா?

பதில்:

ஒரே கேள்வியில் இத்தனை துணைக்கேள்வியை இணைத்துக் கேட்டால் எப்படி சுருக்கமாக பதில் சொல்லமுடியும்? எனினும் முயற்சிக்கிறேன். உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா? யோகத்தின் வழியாக தன்னிலை விளக்கமும், மெய்ப்பொருள் உண்மையும் உணர்ந்தவர்கள் பெரும்பாலும் தன்னை வெளிக்காட்டிக் கொள்வது இல்லை. ஏனென்றால், ‘பிரம்மஞானம்’ என்ற உண்மைநிலையை எங்குமே, எதிலுமே, எப்பொருளிலுமே, எந்த உயிர்களிடமுமே, எந்த மனிதர்களிடமுமே காணக்கூடிய தன்மைக்கு வந்துவிட்டவர்கள் அவர்கள். எந்தவகையிலும் ‘தான், தனது’ என்று பிரித்துப்பார்த்திடாவர்கள். மிக இயல்புக்கு வந்து, இயற்கைத் தன்மையோடு ஒன்றி வாழ்பவர்கள்.

இப்படியான தன்னிலை விளக்கம் பெற்றவர்களும், மெய்ப்பொருள் உண்மை பெற்றவர்களும், பிறருக்கு எடுத்துச்சொல்லி, அவர்களையும் தன்னைப்போல உண்மையும், விளக்கமும் அறியச்செய்வதில் வெகு சிலர்தான் ஆர்வமாக இருப்பார்கள். மற்றோர் எப்போதும் போலான, வாழ்க்கையை, தன்னளவில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். தங்களை எளிமையாக காட்டிக்கொள்வதும், உலகுக்கு, அந்த உலகில் இயல்புக்கு மாறாக காட்டிக்கொள்வதும் உண்டு. எந்த ஆடையுமின்றியும் இருக்கலாம், கோவணம் என்ற சிறு மறைப்பு துணி மட்டும் கட்டியிருக்கலாம். சட்டை இல்லாமல் வேட்டி, துண்டு மட்டும் கட்டியிருக்கலாம். ஏதேனும் போர்வையை தன்மேல் போர்த்தியபடி இருக்கலாம். தலைப்பாகை கட்டியிருக்கலாம். தாடி மீசை கலைந்த தலைமுடி என்றும் இருக்கலாம். சிலர் அழுக்கடைந்த நிலையில் கூட இருப்பார்கள். சிக்கல் நிறைந்த, ஜடாமுடி என்று சொல்லப்படும் தலைமுடியிலும் இருப்பார்கள். 

இவர்களை நாம் அடையாளம் காண்பது எளிது. ஆனால் இவர்கள் எதுவுமே பேசாமல், இறையுணர்வை பெறுவது உண்மை எப்படி அறிவது என்று சொல்லாமல், பயிற்சி அளிக்காமல் இருப்பதால் இவர்களை மக்களாகிய நாம் உதாசீனம் செய்துவிடுவோம். மாறுதலாக எதோ சக்தி வாய்ந்தவர் என்று வணங்கவும் செய்துவிடுவோம்.

இந்த வணக்கத்தையும், மரியாதையையும், செல்வாக்கையும், பார்த்துத்தான் ஏமாற்றுப் பேர்வழிகள், தாடி மீசை முடியலங்காரம், ஆடை அலங்காரம் செய்து கொண்டு மக்களை ஏமாற்றி, பொருள், பணம் பறிக்கிறார்கள். இவர்கள் பெரும்பாலும் பூஜையும், வழிபாடும், மந்திர உச்சாடனமும், மௌன விரதமும் இருந்து, பல மக்களின் சந்தேக பார்வையில் இருந்து தப்பிவிடுவார்கள்.

மக்களின் அறியாமை உணர்ந்து, அவர்களை வழிநடத்த, உண்மைப்பொருள் உண்மையும், விளக்கமும் அளித்து முன்னேற்ற அக்கறை கொண்டு, ஞானிகள், மகான்கள், யோகியர்கள் தன்னை தனியாக அடையாளப்படுத்திக்கொண்டு செயல்படுவார்கள். எந்த எதிர்பார்ப்பும் இன்றி சேவை வழங்குவார்கள். இவர்களையும் மதிக்காது, உதாசீனம் செய்யும் மக்களும் உண்டுதான். இத்தகைய உண்மையானவர்கள் மீது, நம்மக்கள் அக்கறை கூட கொள்வதில்லை, ஏமாற்றுக்காரன் என்றும் சொல்லுவார்கள். ஆனால் எல்லாவற்றையும் சொல்லிக்கொடு என்றும் எதிர்பார்ப்பார்கள். என்னிடம் எதையும் எதிர்பார்க்காதே என்றும் மறுப்பார்கள். 

வாழ்கின்ற இந்த உலகில், நாட்டில் ஒரு மனிதன் எப்படி தன்னை வெளிப்படுத்திக் கொள்ளலாம் என்பது, அவரவர் உரிமை. அதில் நாம் தலையிட முடியாது. நீங்கள் சொல்வது போல, எப்போதும் தாடி மீசை வளர்ந்த, படர்ந்த தலைமுடியோடு, தலைப்பாகையோடு, போர்த்திய துண்டோடு, வித்தியாசமான அலங்காரத்தோடு இருப்பது, யோகத்தில் இருப்பவர்கள் மட்டுமல்ல, மிக சாதாரண மனிதர்களும் அப்படி இருப்பார்கள் என்பதுதான் உண்மை. இதில் மனிதர்களின் இயல்பும் இருக்கிறது. சோம்பேறித்தனம், இயல்பாக விட்டுவிடுதல், எனக்கு பிடிக்கும் என்று மிகைப்படுத்துதல், நான் இப்படித்தான் என்று தன்னை வெளிக்காட்டுதல், மற்றவர்களிடம் இருந்து தன்னை வித்தியாசப்படுத்துதல் என்று பலப்பல இருக்கின்றன. அடையாளம் காணத்துடிக்கும் நமக்குத்தான் பெரும் பிரச்சனை என்று சொல்லலாம்.

ஆசான் திருவள்ளுவர், 
தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து. (குறள் 828)

என்று குறள்வழியாக சொல்லுகிறார். இதன் பொருளாக, நம்மை வணங்கி தன்னை தாழ்த்தும் ஒரு மனிதனிடம், நம்மை ஏமாற்றி, படையெடுத்து தாக்கி அழிக்கும் தன்மை இருப்பதுபோலவே, ஒருவருடைய அழுகையும் அர்த்தம் பொதிந்ததாக இருக்கும் என்கிறார்.
 
இதன்படி தோற்றத்தை வைத்து, மயங்கிவிடும் தன்மையை, நாம் தான் மாற்றிக் கொள்ளவேண்டும். அவர் யார்? இதற்குமுன் என்ன செய்தார்? பின்புலம் என்ன? அணுகுமுறை என்ன? அனுபவம் என்ன? என்ன் சொல்லுகிறார்? அதில் உண்மை உள்ளதா? பயன்படுமா? உலகியலுக்கும், இயற்கைக்கும் முரண்படாது செயல்படுகிறாரா? வழிகாட்டுகிறாரா? என்று பலகேள்விகளை முன்வைத்து ஆராய்ந்து மதிப்பளிக்கவேண்டும். தோற்றம் கண்டு ஏமாறவேண்டியது இல்லை. அப்படி ஏமாந்தால் அது உங்கள்பாடு.
 
வாழ்க வளமுடன்
-

Why India has that yoga, karma, worship to the divine etc.?


இந்தியநாட்டில்தான் இப்படி யோகம், கர்மா, பிறப்பு நோக்கம், கடமை, வழிபாடு அது இது என்று இருக்கிறது. வெளிநாட்டு மக்கள் இதில் தப்பிவிடுகிறார்கள் அல்லவா? உண்மை என்ன?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, இந்தியநாட்டில்தான் இப்படி யோகம், கர்மா, பிறப்பு நோக்கம், கடமை, வழிபாடு அது இது என்று இருக்கிறது. வெளிநாட்டு மக்கள் இதில் தப்பிவிடுகிறார்கள் அல்லவா? உண்மை என்ன?


பதில்:

முகம் மலர்ந்த சிரிப்போடு இந்த கேள்வியை வரவேற்கிறேன். நல்ல கேள்விதான். ஆனால் இதில் மிகப்பெரிய பிழை இருப்பதை அறியாமலேயே நீங்கள் கேட்டுவிட்டீர்கள். தவறில்லை. நாம் உண்மை என்ன என்று அலசி ஆராய்ந்துவிடலாமே?

இப்போது நாம் ஏதேனும் ஒரு வெளிநாட்டிற்கு போய்விடலாமா? நார்வே (Norway) என்ற நாட்டை தேர்ந்தெடுத்து  ஓஸ்லோ என்ற நகரத்திற்கு (Oslo) பயணித்துவிடலாம். இந்தியா, தமிழ்நாடு மாநிலம், சென்னையில் இருந்து கிட்டதட்ட 7700km தூரம் இருக்கிறது. விமானத்தில் செல்ல 13Hr நேரம் ஆகலாம். பயணச்சீட்டிற்கு 60k ஆகலாம். நாம் எண்ணித்தின் வழியாக செல்வதால் ஒரு செலவும் இல்லை. இன்றைய நாளில் அங்கே, கால நிலை, குறைபனி -2 என்று சொல்லுகிறார்கள் (March 13'2024). அங்கே வாழ்கின்ற மக்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் என்று நினைக்கிறீர்கள்? அங்கே காற்று இருக்கிறது. தினமும் ஒரு நாளில், நாம் காண்பதுபோலவே சூரியனின் வெளிச்சம் இருக்கிறது. ஆனால் வெப்பமில்லை. சந்திரன் ஒளிர்கிறது. காலையும் உண்டு, இரவும் உண்டு. அங்கே வாழும் மக்களுக்கு உடலும் உண்டு, குடலும் உண்டு, மனமும் உண்டு. பசி எடுக்கும் சாப்பிடுவார்கள். மனமிருப்பதால், வாழ்க்கையின் இன்பம் துன்பம், மகிழ்ச்சி வருத்தம், கவலை, சினம் வந்துகொண்டுதான் இருக்கும். காதலும் உண்டு, காமமும் உண்டு, திருமணமும், இணைந்த குடும்ப வாழ்க்கையும் உண்டு, அதில் பிரச்சனைகளும், சண்டைகளும் உண்டு, பிரிவும் உண்டு, 

தங்கள் வாழ்க்கையையும், குழந்தையின் எதிர்காலத்தையும் திட்டமிட்டு உழைப்பார்கள், பணமும் பொருளும் சம்பாதிப்பார்கள். உழைப்பின் மிகுதியால் சோர்வும், அசதியும், தூக்கமும் வரலாம். குளிரை தாங்கமுடியாமல், சூடாகவும், சூட்டை ஏற்படுத்தி தாங்கிக்கொள்ள, அவர்கள் புகைக்கலாம், மதுபானங்கள் குடிக்கலாம். காய்கறிகள் சாப்பிடலாம். மாமிசம் மட்டுமே முழுநேர சாப்பாடாகவும் இருக்கலாம். அது அந்த நாடுகளில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கலாச்சாரம். அதன்வழியே இன்பமும் வரலாம் துன்பமும் வரலாம், பிரச்சனைகளும், நோய்களும், பெரும் செலவும் வரலாம்தானே? குணப்படுத்தலாம், அதுமுடியாமல் இறக்கவும் நேரலாம்.

ஆக அங்கேயும் பிறப்பும் உண்டு, இறப்பும் உண்டு. சிலருக்கு இறை வழிபாடு இருக்கலாம். யாருக்குமே நம்பிக்கையின்றி அதில் ஏமாற்றமும் இருக்கலாம்.  எனினும் தெய்வீகம் என்ற மெய்ப்பொருள் அதன் இயல்பில் மாறிக்கொள்வதில்லை. அவர்களும் நாம் வாழும் பூமியில் தான் இருக்கிறார்கள். வேறெரு கோளிலோ, கிரகத்திலோ இல்லை. அவர்களுக்கும், காலநிலை, பருவமாற்றம் எல்லாமும் உண்டு.

அவர்கள் எதைச்செய்தாலும் நல்லவிளைவுகள் மட்டுமே வருமா? விளைவறிந்து தான் எதையுமே செய்வார்களா? உணர்ச்சியும், சிந்தனையும், நோக்கமும் எப்போதும் நேர்மையாக தெளிவாக இருக்குமா? சினம், கோபம் என்றால் என்ன என்று தெரியாமல் இருப்பார்களா? தங்களுக்குள் தாக்கிக் கொள்ளாமல், மரியாதையாக நடந்துகொள்வார்களா? எப்போதும் அன்போடும், நட்போடும், கருணையோடும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்களா? இப்படியாக எத்தனையோ கேள்விகளுக்கு உங்கள் பதில் என்ன? 

இவ்வளவு இருக்கும் பொழுது எப்படி அவர்கள், மனிதப்பிறவியின் நோக்கத்தில் இருந்தும், மெய்ப்பொருள் உண்மை விளக்கத்தில் இருந்தும் தப்பிவிடுகிறார்கள் என்று கருதுகிறீர்கள்? உங்கள் பார்வைக்கு ஒரு உண்மை தெரியவில்லை என்றால் அது இல்லவே இல்லை என்று கருதிவிட முடியுமா? எங்கும் நிறைந்துள்ள, உலகையும், சந்திரனையும், சூரியனையும், அவைகளைப்போல பலதுமாக இருக்கும் கிரங்களையும், நட்சத்திரங்களையும், மண்டலங்களையும் மிதக்கவிட்டு, தாங்கிக்கொண்டிருக்கும் அந்த மெய்ப்பொருளை, கண்ணால் பார்க்கமுடியவில்லை என்பதால், இல்லை என்று சொல்லுவது பொருந்துமா?

இதுபோலவே, நாமும் பிறமக்களும் வாழும், இந்த பூமியில் இருக்கின்ற எந்த ஒரு வெளிநாட்டையும், மனிதர்களையும் சிந்தித்துப்பாருங்கள். உங்களால் முடிந்தால் கடல்கடந்து, வான்கடந்து சென்று, நேரிலே, நிஜமாக அவர்களோடு பேசி பழகி கேள்விகள் கேட்டு, உண்மையை அறியுங்களேன்.

மனிதனின் மூலம் என்ன? அவன் யார்? என்பதை தானாகவே அறியும் வழிதானே ‘கடவுள்’. அதை உலகில் பிறந்த ஆறாவது நிலை அறிவைக்கொண்ட மனிதன் அறியவேண்டும் என்பதுதானே அந்த பரிணாமத்தில் பொதிந்துள்ள உண்மை. அதை மறந்து, மறுத்து வாழ்ந்துவிட்டால், தப்பிப்பதாக அர்த்தமா?

அப்படித்தானே நம்முடைய முன்னோர்கள் வாழ்ந்தார்கள், இன்னும் சிலர் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். நாமும் இந்த முயற்சியை விட்டுவிடலாமா? இருக்கும் நவீன விஞ்ஞான அணுவியல் கருவிகளை அனுபவித்துக்கொண்டு, உண்டு, உறங்கி, எழுந்து, வாழ்ந்து மடிந்து போகலாமா? அப்படியானால், நமக்கும் நமக்கு கீழான உயிரினங்களுக்கும் என்ன வித்தியாசம்?

உங்கள் பார்வையை மாற்றி, வெளிநாட்டு மக்களை, உள்நோக்கி அவர்களின் வாழ்க்கையை ஆராய்ந்து பாருங்கள். உண்மை தானாகவே உங்களுக்கு புரியும். அவர்களும் விதிவிலக்கல்ல. உலகில் எந்த மனிதர்களுமே விதிவிலக்கல்ல. அவர்கள் உங்களைவிட, யோகம் குறித்த உண்மையை அறியாது இருக்கலாம் அல்லவா? உங்களால் முடிந்தால், அவர்களை, அவர்களின் மனதின் தரத்தை இன்னும் உயர்த்தலாமே? அப்படியொரு உயர்ந்த வேலையும், பொறுப்பும் சக மனிதாகிய உங்களுக்கும் இருக்கிறதே? யோகத்தில் உயர்ந்த பிறரைப்போல நீங்கள் உயரவேண்டும் என்று நினைப்பது போலவே, அவர்களுக்கும் வழிகாட்டலாமே? சிந்தித்துப் பாருங்கள்.

வாழ்க வளமுடன்

-


In our life mind is very problematic, any easy solution for that? can we live without mind?


வாழ்நாளில் நம்மை குழப்புவதே இந்த மனம் தானே? அதைமட்டும் சரிசெய்ய பயிற்சி ஏதேனும் கிடைக்காதா? மனதை விட்டுவிட்டு, விலகி சும்மா இருந்தால் போதும் என்கிறார்களே?!



வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, வாழ்நாளில் நம்மை குழப்புவதே இந்த மனம் தானே? அதைமட்டும் சரிசெய்ய பயிற்சி ஏதேனும் கிடைக்காதா? மனதை விட்டுவிட்டு, விலகி சும்மா இருந்தால் போதும் என்கிறார்களே?!

பதில்:

உங்களுடைய பிரச்சனை எனக்கு புரிகிறது. மேலும் நீங்கள் வேதாத்திரியத்திற்கு புதியவர் என்பதும், ஏதோ ஓர் ஆர்வத்தில் உள்ளே காலடி எடுத்து வைத்துவிட்டதும் தெரிகிறது. விட்டால் வேறே எங்கேயாவது தப்பி ஓடிவிடவும் யோசனையாக இருப்பதும் யூகிக்க முடிகிறது. உங்களுக்கான தெளிவான பதிலாகவே தருகிறேன்.

மனிதன் என்றாலே, இதமான மனதைக் கொண்டவன் என்று அர்த்தமாகிறது. மனதையும், மனிதனையும் பிரிக்கவே முடியாது. பிறக்கும் பொழுது இல்லாத மனம், மூன்று வயதிற்குப் பிறகு துணையாக நின்று, நாம் வாழும் காலம் வரை கூடவேதான் இருக்கும் பிரிவதே இல்லை. பிரிக்கவும் முடியாது.

வேதாத்திரிய யோகத்தில் இருக்கின்ற நீங்கள், உங்கள் மனதைக் கொண்டுதான் தியானமும், தவமும் செய்யமுடியும். அதே மனதைக் கொண்டுதான் புலன்களை கடந்து நிற்க முடியும், மனமே மனதை அறியச்செய்யவும் முடியும். அந்த மனதால்தான் நம்முடைய உயிரையும் அறியமுடியும். அதே மனதால்தான் உயிருக்குள்ளாக நிற்கின்ற அறிவை, மெய்ப்பொருள் நிலையாகவும் உணரமுடியும். அத்தகைய மனதை விட்டு விலகிவிடவும், சும்மா இருக்க வைக்கவும், தள்ளிவைக்கவும், தூரவைக்கவும் விரும்பினால் எப்படி அது நியாயமாகுமா?

உங்கள் வாழ்நாளில் உங்களை குழப்புவதே உங்களின் மனம் தான். ஏன் குழப்புகிறது? நீங்கள் அப்படி அதை வளர்த்தெடுத்திருக்கிறீர்கள். ஆனால், நான் எங்கேய்யா அதை வளர்த்தெடுத்தேன்? என்று என்னிடமே எதிர்கேள்வி கேட்பீர்கள். சரி நீங்கள் அதை செய்யவில்லை என்றால், உங்கள் தாய் தந்தையர், அவர்களின் தாய் தந்தையர், அவர்களின் அவர்களின் தாய் தந்தையர் இப்படி, பரம்பரை பரம்பரையாக செய்திருக்கலாம் அல்லவா? அதெல்லாம் எனக்கு ஏனய்யா வந்தது? என்கிறீர்களா? நீங்கள் தானே வாரீசு? உங்களிடம் தானே அது வந்து தங்கி நிற்கும்? சரிதானே?

அந்தவகையில் தங்கி நிற்பதெல்லாம், கர்மா என்ற வினைப்பதிவாக இருக்கிறது. அது எல்லாமே தீர்க்கவேண்டிய, அகற்றவேண்டிய, கழிக்கவேண்டிய பதிவுகள். இதெல்லாம் உங்கள் வாழ்க்கையில் அன்றாடம் வெளிவந்து கொண்டே இருக்கும். அது இயல்பு. இயற்கையின் வினை விளைவு நீதி அதுவாகும். அதை நீங்கள், இந்த யோகத்தின் வழியாக, அறிந்து, திருத்தி அமைக்கவேண்டும். அதற்காகத்தான் தற்சோதனையும், அகத்தாய்வும் இருக்கிறதே? அதைச் செய்யலாமே?

இப்படி எதுவுமே முயற்சிக்காமல், மனதை புரிந்தும் கொள்ளாமல், வெறுமனே ஒதுக்கி வைக்கிறேன், தள்ளி வைக்கிறேன், சும்மா வைக்கிறேன் என்றால் அது நகர்ந்துவிடுமா? நீங்கள் விலக்க விலக்க இன்னும் பலமாக ஒட்டிக் கொண்டுதான் இருக்கும். மேலே சொன்ன பயிற்சிகளை தொடருங்கள், தவத்தையும் தொடருங்கள், மனம் தெளிவு பெறும், நீங்களும் தெளிவு பெறுவீர்கள்.

வாழ்க வளமுடன்
-

Why no one give a solution for my problems? How I can get it?


எனக்கான பிரச்சனைக்கு ஏன் யாராலும் உதவமுடியவில்லை, அதற்கான வழியோ, பதிலோ தரமாட்டேன் என்கிறார்கள் என்று குழப்பமாக இருக்கிறது. இதற்கு விடை என்ன?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, எனக்கான பிரச்சனைக்கு ஏன் யாராலும் உதவமுடியவில்லை, அதற்கான வழியோ, பதிலோ தரமாட்டேன் என்கிறார்கள் என்று குழப்பமாக இருக்கிறது. இதற்கு விடை என்ன?


பதில்: 

இது பொதுவான நிலைமைதான். மனிதர்களுடைய சிந்தனையும், செயலும், எதிர்பார்ப்பும் கூட ஒன்றாக இருந்துவிட நிறைய வாய்ப்பு உள்ளது. ஆனால் அதனால் எழுகின்ற விளைவுகளும், பிரச்சனைகளும் தனித்தனியானவை தான் என்பது பிரபஞ்ச இயற்கை விதி என்றுதான் சொல்லவேண்டும். கூடவே ஒவ்வொரு தனிமனிதனிடம் உள்ளமைந்த, சமீபகால மக்கள் ஏற்றுக்கொள்ளாத, கர்மா என்ற வினைப்பதிவும் காரணமாக அமைந்து விடுகிறது.

இரண்டு நபர்கள் என்று கணக்கில் எடுத்துக்கொண்டால் கூட, ஒரே வயது, ஒரே ஊர், ஒரே படிப்பு என்று பல ஒற்றுமைகள் இருந்தாலும் கூட அவர்களுக்கான பிரச்சனை என்பது, ஒரே மாதிரி இருப்பதே இல்லை. சிலர் பேசிக்கொள்ளும் பொழுது, ‘நான் நினைச்சேன், நீ சொல்லிட்ட’ என்று மகிழ்வோடு பாராட்டுவார்கள். அப்படியாக ஒருவர் நினைப்பதைக்கூட, பிறரால் சொல்லிவிட முடிகிறபொழுது, பிரச்சனை என்றால் மட்டும், தனித்தனியாகத்தான் பிறக்கிறது/ இருக்கிறது. மனிதனின் சிறப்பும் இதுவேதான்.

ஆனால் இதற்காக, ‘எனக்கான பிரச்சனைக்கு ஏன் யாராலும் உதவமுடியவில்லை, அதற்கான வழியோ, பதிலோ தரமாட்டேன் என்கிறார்கள் என்று குழப்பமாக இருக்கிறது' என்று புலம்பிக்கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. பிரச்சனைகள் பல இருந்தாலும், அவற்றை முதலில் ஒழுங்கு செய்துகொள்ள வேண்டியது அவசியம். எல்லா பிரச்சனைகளையும் ஒரே தொகுப்பில், அடுக்கில் வைத்துக்கொண்டு புலம்பக்கூடாது. தீர்க்கமுடியாதது, தீர்க்க முடிந்தது, தீர்க்கவேண்டியது, விட்டு விலக்கவேண்டியது என்று அதில் வகைகளை பிரிக்கவேண்டியதும் அவசியம். நீங்கள் அகத்தாய்வு எனும் தற்சோதனை பயிற்சி குறித்த விளக்கம் பெற்றிருந்தால், அதை செய்யமுடியும். ஒரு அரைநாள், இதற்காக ஒதுக்கிக்கொண்டு, துரிய தவம் இயற்றி, அதன் நிறைவில், ஒரு காகிதத்தில் வரிசையாக, ஒவ்வொரு பிரச்சனைகளாக எழுதிக் கொண்டு, அதை பட்டியலிட்டு, சீர்தூக்கிப் பார்த்து வகைப்படுத்திக் கொள்ளலாம். பெரும்பாலான மனக்குறை, இந்த பயிற்சியின் வாயிலாகவே தீர்க்கமுடியும், பிரச்சனைகளின் தாக்கம் குறையும் என்பது உண்மை.

மேலும், ஒரு குருவோ, மகானோ, ஞானியரோ, இதை விளக்கிக் கொண்டிருக்கும் நானோ, தனியாக, ஒரு குறிப்பிட்ட நபருக்காக ஒன்றை சொல்லுவதற்கு வழியில்லை. நீங்கள் அவர்களை நேரடியாக பார்த்து கேட்டால்தான் உங்களுக்கான தனியான ஆலோசனையும், தீர்வும் அவர்களிடம் இருந்து கிடைக்கும். அது இல்லாமல், யாருமே எனக்கு தீர்வு தரவில்லை என்று வருந்துவதில் பயனில்லை. ஆனால், பொதுவாக கிடைக்கும் செய்திகளில், எழுத்துக் கட்டுரைகளில், கவிகளில், உண்மை விளக்கங்களில், பேச்சுக்களில் கூட உங்களுக்கான தீர்வு அங்கே பொதிந்து மறைந்து இருக்கும். இது உறுதியான உண்மையே. ஆனால் நாம்தான் எதையுமே ‘தனி கவனத்துடன்’கவனிப்பதே இல்லையே? பிறகு எப்படி நமக்கான தீர்வு கிடைக்கும். இன்னும் சொல்லப்போனால், உங்களை ஏதோ ஒரு நாளில், ஏதோ ஒரு காரணமாக, சந்திக்கும், பேசும், நபர்கள் வழியாகக்கூட உங்களுக்கான தீர்வு கிடைக்கலாம். நாம் தான் அதற்கு தயாராகாமல், விழிப்பாக இல்லாமல் இருப்போம். கொஞ்சம் கவனித்துப்பார்த்தால், பல வழிகளில் அந்த உண்மையை, வழியை, கருத்தை, ஆலோசனையை பெறாமல் இழந்திருப்போம்.

எனவே உங்களுக்கான தீர்வு கிடைக்க, தீர்வைப் பெற வழிகள் மூன்று உள்ளன. நேரடியாக சந்தித்து ஆலோசனை பெறுங்கள், அகத்தாய்வு எனும் தற்சோதனை செய்யுங்கள், உங்களைச்சுற்றி நிகழ்வதை கவனியுங்கள். போதுமானது. நீங்கள் தெளிவு பெற, இறைநிலையோடு இணைந்து நின்று வாழ்த்துகிறேன்.

வாழ்க வளமுடன்

-

How Amavasya fast will benefit to us and which meditation is best for that day?


அமாவாசை விரதம் என்பது எவ்வகையில் நமக்கு உதவுகிறது? எந்த தவம் செய்தால் சிறப்பான முன்னேற்றம் தரும் என்பதை விளக்குவீர்களா?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, அமாவாசை விரதம் என்பது எவ்வகையில் நமக்கு உதவுகிறது? எந்த தவம் செய்தால் சிறப்பான முன்னேற்றம் தரும் என்பதை விளக்குவீர்களா?

பதில்:
அமாவாசை, பௌர்ணமி என்பதும் ஒவ்வொரு மாதமும் அடுத்தடுத்து நிகழும் இயற்கையின் அதிசயம் என்றுதான் சொல்லவேண்டும். இந்த புவியில், பஞ்சபூதங்களுக்கும், அதன் மலர்ச்சியில் உள்ள இயற்கைக்கும், பரிணாமத்தின் வழியாக மலர்ந்த ஜீவன்களுக்கும், மனிதர்களாகிய நமக்கும் ஓர் உந்துதலையும், மாற்றத்தையும் ஏற்படுத்துகிறது என்பது உண்மை. அக்காலத்தில் இருந்தே இதை உணர்ந்தறிந்த முன்னோர்கள், மக்களின் வாழ்க்கை முறையை, அன்றைய நாளில் மட்டும் ஒழுங்குசெய்தார்கள். நிலவு, சூரியன், பூமி இவற்றின் அமைப்பில் மாறும் ஆற்றலை, நமக்கு சாதகமான வகையில் ஏற்று நன்மை பெற வழி வகுத்தார்கள்.

அமாவாசை என்றால், சூரியனும் நிலவும் இணைகிறது எனலாம். பௌர்ணமி என்றால் சூரியனும், நிலவும் தனித்தனியே எதிரெதிராக பிரிந்து நிற்கிறது எனலாம். இந்த இரண்டு நிலைகளிலும், சூரியன், நிலவு, நாம் வாழும் பூமி இவற்றின் காந்தக்களம் மாறுபாடு அடைகிறது. ஏனென்றால் ஓவ்வொரு கிரகத்திற்கும், தனித்தன்மையான காந்த அலைகள் உண்டு. அவை எப்போதும் பரவி வீசிக்கொண்டே இருக்கும். அமாவாசையில் சூரியனும், நிலவும் இணைவதால், அதன் காந்த அலைகள், புமியை நோக்கிய நிலையில் பலமாகின்றன. இதனால் ஒர் ஆகர்ஷணசக்தி ஏற்படுகிறது. இது மனிதர்களாகிய நம் உடலையும், மனதையும் பாதிக்கிறது. அது மட்டுமல்ல, ஜீரணமண்டலத்தையும் பாதிக்கிறது.

அதனால்தான் அமாவாசையில் விரதம் என்ற நிலைபாட்டை வைத்தார்கள். இந்த விரதம், குறிப்பிட்ட எளிய உணவுகளை குறைவாக சாப்பிடுவது என்றும், ஒரு நேரம் மட்டும் எதுவும் சாப்பிடாமல் தவிர்ப்பது என்றும் முன்னோர்கள் வழிசெய்தார்கள். இதில் அந்த ஆற்றலை வணங்குவதற்கு பக்தி வழியாகவும் பூஜை என்று வைத்தார்கள். இதனால் உடல், மன, உயிர் நலம் காக்கப்படும் என்பது உறுதி.

உணவு என்ற விரதம் மட்டுமல்ல, எந்த ஒரு புதிய செயல் தவிர்ப்பது, கடினமான வேலைகளை தவிர்ப்பது, ஆயுதங்களை கையாளாமல் இருப்பது என்று பல விரதங்கள் உண்டுதான். முக்கியமாக ஆண், பெண் உடலுறவையும் தடுக்கவே சொல்லுகிறார்கள். அதற்கான காரணங்கள் நிறைய உண்டு. அதை தனிப்பதிவாகவே தரலாம். ஆனால் இதை எல்லாம் மறுத்து, பொய், கட்டுக்கதை என்போர், வரக்கூடிய பிரச்சனையை அனுபவிக்க வேண்டியதுதான். அதுகுறித்து நாம் ஏன் கவலைப்பட வேண்டும்?!

அமாவாசையில் தவம் செய்வதாக இருந்தால், சாந்தி தவம் செய்யலாம். தவ ஆற்றலை உடலாற்றலாக மாற்றம் செய்யும் வகையில், உடல்நலம் காக்கப்படும். சக்தி இழப்பும் ஏற்படாது. மனமும் சிதறாத நிலைக்கு உதவும். வேறு தவங்கள் தேவையில்லை.
வாழ்க வளமுடன்
-