CJ for You: caricaturist

caricaturist

Showing posts with label caricaturist. Show all posts
Showing posts with label caricaturist. Show all posts

French Beard and Spiritual Journey by Sugumarje


குறுந்தாடியும் ஆன்மீக பயணமும் - ஒரு அலசல்


Sugumarje - Image Created by AI based on prompt

        இந்த குறுந்தாடிக்கு பின்னால், நான் தான் இருக்கிறேன் எனினும், அதற்கென்று தனிக்கதை ஏதுமில்லை. இராயிரத்து மூன்றுவரை மீசை மட்டுமே பிரதானமாக (மூக்கின் கீழே) இருந்துவந்தது. பொதுவாகவே வாரத்தில் ஆறுநாள் தாடியும், மறுநாள் அதை (சுய) வழித்தலும் தொடர்ந்தது. எப்போதாவது மீசை ஓரம் ஒதுங்கிப்போக, முழுமையான வழித்தலும் நிகழ்ந்ததுண்டு. இராயிரத்து ஐந்துகளில் சிலமாதங்கள், மீசையும் இல்லாத நிலை நீடித்தது. எனினும், வாழ்க்கை தந்த அடியில், பாடம் நிறைய படித்ததால், அந்த அனுபவத்திற்குப் பின், மாற்றம் தேடி, இராயிரத்து ஏழில், சென்னையில் ஒருமாதம் தங்கி இருந்து சில வேலைகள் செய்யவேண்டி அமைந்தது. 

வேலைப்பளுவில், வழித்தலுக்கு நேரமும், ஆர்வமும் இன்றி தாடி, மீசையோடு ஆள் மாறி இருந்தேன். அப்போதுதான் இந்த குறுந்தாடி வைக்கலாமா? என்ற சிந்தனையும் வந்தது. அந்த குறுந்தாடிக்குறிய சில குணாதசியங்களையும் நான் வளர்த்துக்கொண்டிருந்தேன். அதனால் நம்பிக்கையும் வந்தது. உடனடியாகவே அது செயல்வடிவமும் பெற்று, என் அடையாளமாக மாறிக்கொண்டது.

விமர்சனங்களை கடந்த மனநிலையும், பக்குவம்பெற்ற அனுபவ நிலையும், நிறைத்துக்கொண்ட தகுதியும், ஒழுங்கும், நடவடிக்கைகளும் எனக்கு உறுதியை தந்தது. கேரிகேச்சர் ஓவியர் சுகுமார்ஜெ என்பதற்கான அடையாளமாகவும் மாறிவிட்டது.  இந்த வடிவ அமைப்பை, சுய வழித்தலில் கொண்டுவருதல் கடினம் என்றுதான் பலரும் சொல்லிக்கொண்டனர். சொல்லுகின்றனர். ஆனால் எனக்கொன்றும் சிரமம் இருக்கவில்லை. ஒரே அளவில் நிறுத்துக் கொள்ளுதல் என்ற நிலை, இராயிரத்து பதினெட்டுகளில் மாறிவிட்டது. காரணம், அந்த காலத்தில், வேதாத்திரி மகரிஷியின் மனவளக்கலை வழியாக, ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருந்தேன். அந்த நெடும் பயணம், பல்வேறு பிரச்சனைகளை விளைவித்தது. 

வாழும் பொழுதே இறத்தல் என்பது போல, இருக்கும் சுமையெல்லாம் கழித்தல் (கர்ம வினை) அவ்வளவு சுலபமா என்ன? இன்றுவரை வாழ்வியலில் சில கடினம் தொடர்கிறது. என் நண்பர்களிடம் சொல்லிக்கொள்வதுண்டு. 'by Spiritually I am a winner and loser in Matirialistic' எனினும், ஒவ்வொரு நாளையும், இறையாற்றல் எனக்கு கொடுக்கும் கொடையாக, நிறைவாக, புரிந்து கடந்து போகிற மனபக்குவம் எனக்கு கிடைத்துவிட்டதால், இயல்பாக ஒவ்வொரு நாளையும் அதன் போக்கிலே விட்டுவிடுகிறேன். படகில் பயணிக்கிறேன். படகின் துடுப்பை நான் இயக்குவதில்லை. இலக்கின்றியும் நான் பயணிக்கவில்லை என்பதையும் தெளிவு செய்கிறேன். என் இலக்கு நிறைவுற்றது. நீண்ட நேரம் குளத்தில் குளித்தபிறகு, சும்மா மிதக்கலாமே என்று தோன்றுமல்லவா? அது தான் இங்கே நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

இதை என் அனுபவமாக கொண்டாலும், அதுகுறித்து விளக்கிட எனக்கு ஆர்வமில்லை. அதை எத்தனையோ குருமார்கள் சொல்லிவிட்டார்கள். என்னுடைய ‘Vethathiriya Sky Lead' என்ற Youtube-லும் கூட மூன்று மாதங்களாக ஏதும் பதிவிடவில்லை. போதும் என்றாகிவிட்டது. ஆனாலும் சில பதிவுகள் அன்பர்களுக்காக இனிமேல் வரும். இத்தகைய அனுபவங்களுக்குப் பிறகு, மறுபடியும் சில மாற்றங்கள் குறுந்தாடியில் நிகழ்கிறது. தேடல் முடிந்துவிட்டாலும், வாழ்க்கை தொடர்கிறது அல்லவா? அந்த வாழ்விற்காக. இதன் காரணமாகவே, இங்கேயும் தொடர்கிறேன்.

உலகில் பிறந்துவாழும் நாம் ஒவ்வொருவருக்கும், அந்த தேடலும், கடமையும் இருக்கிறது. ஆனால், நாம் நம்மை அதில் ஈடுபடுத்துவதற்கு பதிலாக, இறையாற்றலை செயல்படு, செய்துகொடு, வரமாக கொடு, வழிநடத்து, துணை இரு, சாட்சியாக இரு என்று கேட்டுக்கொண்டிருக்கிறோம். உங்களுக்கு யோகம், ஆன்மீகம், பொருளாதாரம், வாழ்க்கை, உறவுகள், பிறவிக்கடமை, கர்ம வினை, இறை, தெய்வம், கடவுள், இயற்கை, கோள்கள், பிரபஞ்சம், விஞ்ஞானம், மெய்ஞானம் குறித்த சந்தேகங்கள் இருந்தால் என்னோடு உரையாடலாம். 

#vethathiriya #vethathiriyaskylead #sugumarje #caricaturist #caricatureartist #youtube #facebook #instagram #vethathiri #maharishi #manavalakalai #skyyoga 


The Other Side of Man - Part 2


 


சைஞானி இளையராஜா அவர்கள் எப்போது பேட்டி கொடுத்தாலும், (பெரும்பாலும் தருவதில்லை) எதாவது “இவரை சிக்கவைக்க ஏதேனும் சொல்லுவாரா?!” என்று பெரும்பாலும் எண்ணுவார்கள்.  உள்ளதை உள்ளபடியும், சுற்றி வளைக்காமலும், எளிய வார்த்தைகளாக பேசக்கூடியவர்களில் இவரும் ஒருவர். அதனால்  இசைஞானி இளையராஜா எது சொன்னாலும் அதில் வில்லங்கம் இருக்கிறது என்று கிளம்புவார்கள். உண்மையிலேயே பிரச்சனை, நம் மக்களின் “மறு மனிதன் சிந்தனையில்தான்” இருக்கிறது.

இசைஞானி இளையராஜா, தானாக மேடைகளில் பேசினாலும், அப்படியான வில்லங்க பிரச்சனையாக மாறிவிடும் அல்லது மாற்றிவிடுவார்கள். உண்மையில் இசைஞானி இளையராஜா உள்முக தேடலில் ஆழ்ந்துபோனவர் என்றே நான் கருதுகிறேன். எனக்கு கிடைத்த சில குறிப்புக்களின் வழியாக, அவர் “தீட்சை” பெற்று தவம் பயின்றவராகவே இருக்கிறார். இதனால், குறிப்பாக, எளிமையாக, தனக்கு தோன்றுவதை சொல்லிவிடும் தன்மை வந்துவிடுவது இயல்பு.

இப்படியான மனிதர்களிடம் நாம் கலந்துரையாடுவதற்கு எளியவழி உண்டு. அது, நாம் இயல்பாக இருப்பதுதான். எதிராளைப்பற்றிய எந்த பிம்பத்திற்கும் நாம் வந்துவிடக்கூடாது. முக்கியமாக  “மறு மனிதன் சிந்தனை” வேண்டவே வேண்டாம்.

திருட்டுத்தனம் உள்ளவர்தான், உலக இயல்பில், இதை பேசினால் தப்பாகிவிடும், இதைச்செய்தால் தப்பாகிவிடும், இவர் என்னை தப்பாக நினைப்பார், பிரச்சனை உருவாகிவிடும் என்று பயந்தும், தயங்கியும், தான் நினைத்ததிற்கு மாறாக ஒன்றைச்சொல்லி தப்பித்துவிடுவார். அல்லது தன்மேல் எந்த தவறும் வராதவாறு அந்த விசயத்தை கடந்துவிடுவார். 

திரை ஒளிப்பதிவாளர், இயக்குனர் பி.சி. ஸ்ரீராம் அவர்கள். திரைக்கு பின்னே இருந்த ஒளிப்பதிவாளார்களை, மக்களின் மனதில் நிலைக்கச்செய்தவர்களில் முன்னோடி. இவரைபார்க்கும் ஓவ்வொருவரும் “மகா கலைஞன்” என்பதோடு தனக்குள் “இன்னொரு பிம்பத்தையும், மறு மனிதன் சிந்தனையும்” கொண்டுவிடுவார்கள். ஆனால் பி.சி. ஸ்ரீராம்  மிக எளியவராகவே இருக்கிறார். ஆரம்பநாட்களில், எனக்கே அப்படியான பிம்பமும், சிந்தனையும் இருந்தது உண்மைதான். காரணம், அமைதியாக தோற்றமளிப்பார், பேச ஆரம்பித்தால் கீச்சுக்குரலில் வேகமாக, சுருக்கமாக பேசுவார். அவரின் இயல்பே இதுதான் என்றதும், நான் என் இயல்புக்கு உடனே வந்துவிட்டேன். 

சமீபத்தில் ஒரு காணொளி செவ்வியில், (Video interview) தன்னை பேட்டி கண்டவரிடம் சொல்கிறார். “ எனக்கும் இது ரொம்ப நாளைக்குப்பிறகு ஒரு நல்ல பேட்டியாக இருந்தது. நான் சொல்வதை புரிந்துகொண்டு அடுத்த அடுத்த நல்ல கேள்விகளுக்கு வந்தீர்கள். அதற்காக நன்றி. நிறையபேர் நான் சொல்றதை, நீங்க என்ன சொல்றீங்கன்னே தெரியலை என்று என்னிடம் சொல்லுவார்கள்” என்று பேட்டியை முடித்துக்கொண்டார்.  இதன் காரணம் உங்களுக்கும் புரிந்திருக்குமே!

ஒரு ஓவியர் சொன்னார் “அழகாக இருக்கும் பெண்களெல்லாம் அறிவாளிகள் என்று நினைத்து பேசவே பயந்திருக்கிறேன்”. 

எனக்கும் அத்தகைய பயம் இருந்திருக்கிறது. என் கேரிகேச்சர் வேலைகளில், தமிழே பேசத்தெரியாத, தமிழ் பேசினாலும் புரிந்துகொள்ள முடியாத, தமிழ்நாடு, சென்னையில் வாழும்  “ஒரு அழகான பெண்” பைசா செலவு செய்யாமல் என்னிடம் வேலைகளை வாங்கிவிட்டு, மூன்று முறை அலைக்கழித்துவிட்டு, கைவிரித்துவிட்டார். அந்த வேலையில் நான் ஈடுபட காரணம், அவள் பெண் என்பதும், அழகும், பணக்காரத்தனமும், அவள் வேலைபார்த்த நிறுவனமும், அவளின் வேலை தகுதியும், அது தந்த “பிம்பமும், மறு மனித சிந்தனையும்” தான். அதோடு நானும் இது “விதியின் சதி” என்று நினைத்து விட்டுவிட்டேன். இன்றுவரை எந்தப்பதிலும் இல்லை. 

ஆகவே, ஒரு மனிதர் (ஆண், பெண் இருபாலரும்) இயல்பாக இருப்பதுதான் நியதி. யாருக்காகவும் அவர்கள் தன்னை மாற்றிக்கொள்வதில்லை, மாற்றிக்கொள்ள வேண்டியதும் இல்லை. அதைப்போலவே அவரை, நாமும் எந்த “பிம்பத்திற்கும், மறு மனித சிந்தனைக்குள்ளும்” அடக்கிவைக்க வேண்டியதில்லை. அவர்களைப்போலவே நாமும் இயல்பாக இருக்கப்பழவேண்டியது அவசியமானதாகும்.

முக்கியமாக, உங்கள் மனைவியே, கணவனோ, குழந்தைகளோ, நண்பர்களோ கூட இயல்பாக இருப்பதை உணர்ந்து கொள்ளுங்கள். நீங்களும் அப்படியே இயல்பாக அவர்களிடம் பழகிப்பாருங்கள். வாழ்வில் இனிமை இருப்பதை உங்களுக்குள்ளும், தக்கவைப்பீர்கள்.

வாழ்க வளமுடன்.



New Year Artwork from Paintstorm Studio


 புத்தாண்டிற்காக ஏதேனும் எழுதியே தீருவது என்று நினைத்த நொடி, அந்த புதிய நாளின் இறுதி நேரத்திற்கு (23.06 மணி) எழுதிய பதிவு. :D

புத்தாண்டு சபதம் என்றெ கொள்கையெல்லாம் பள்ளிக்காலத்திலேயே கைகழுவியாயிற்று. எந்த தவறும் என்னிடமில்லை என்ற ஓர் உயர்ந்த நோக்கம் என்னிடம் உண்டு. யாரேனும் சுட்டிக்காட்டும் தவறுகளை அவ்வப்பொழுதே திருத்திக் கொள்ளும் பக்குவமும் எனக்குண்டு. 

முக்கியமாக, இணையதளம் என்ற பொதுவெளிக்கும், பரந்த உலகளாவிய வேலைகள் என்ற நிலையிலும் என்னை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. இந்த “சுகுமார்ஜி யார்?” என்று தேடினால் கொட்டிக்கிடக்கும் விபரங்களே போதுமானது.

சமீபத்தில் கூட, ஒரு நண்பர் ஓவிய வேலைகள் மூலமாக அழைத்திருந்தார். தேர்தல் நெருங்குவதைப் பொருட்டு, சில பல கேலிச்சித்திரங்கள் “கேரிகேச்சராக” வரும், வளரும் அரசியக் கட்சி தலைவர்கள் குறித்த ஓவியம் தேவைப்படுகிறது. நீங்கள் வரைந்து தாருங்கள் என்றார். அவர் விவரித்து சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதே... 

“இல்லை, இதற்கு நான் தயாரில்லை. இதுவரை எந்த அரசியல் தலைவரையும், ஏதேனும் கருத்துக்களோடு கேலிச்சித்திரங்கள் வரைந்ததில்லை. (என்னுடைய வளர்ச்சியில் பழகிய நிலைக்காக சில ஓவியங்கள் மட்டுமே உண்டு.) எனவே என்னால் இயலாது” என்று உடனேயே தெரிவித்து விலகிக்கொண்டேன்.

கூடவே இன்னொன்றையும் சொன்னேன். “ஒருவேளை எனக்கு “அந்தபத்திரிக்கையில்” எனக்கு ஒரு வேலை வாங்கி, நிறுவன கேலிச்சித்திரக்காரர் ஆகிவிட்டால் வரைந்து தர சம்மதம்” என்றேன்.  அதற்கு பிறகு அழைப்பு இருபக்கமும் முடித்துக் கொள்ளப்பட்டது. 

ஒரு ஓவியன் ஏற்கனவே மனதிருப்தியில் இருப்பவன். அவன் வெறுமனே புகழுக்காக வரைவதில்லை. பெரும்பாலும் “ஓவியர்கள்” போய்ச்சேர்ந்த பிறகுதான் மதிக்கப்படுவார்கள். இது உலக இயல்பு. ஆனால் இதற்கெல்லாம் ஓவியன் கவலைப்படுவதில்லை. அடுத்தவர் பாராட்டவேண்டும் என்பதற்கு முன்னேலேயே தான் தன்னால் புகழ்ந்து நிறைவைப் பெற்றுவிடுகிறான் அந்த ஓவியன்.

இந்த நாளில் சும்மாவேணும் ஒரு கிறுக்கலை வரைந்து கொண்டிருந்தபொழுது, அது நன்றாக வெளிவந்திருப்பதாக தோன்றியது, சரி, நிறுத்தாமல் கொஞ்சம் கொஞ்சமாக நேர்த்தி செய்து, வண்ணக்கலவை கொடுக்க, அழகான பெண் ஓவியம் மலர்ந்தது. எனக்கும் திருப்தியாக இருந்தது. என் நண்பர் சு. கிருஷ்ணமூர்த்தியிடம் பகிர்ந்துகொண்டேன்.  இந்த பதிவுக்காக உங்களிடமும் பகிர்ந்து கொள்கிறேன்.






Final Result


Software: Paintstorm Studio

Tool: Wacom Digital Tab

Time: 2 hours

Model: Nil


இந்த புதிய ஓவிய மென்பொருள், போட்டோஷாப் க்கு ஒரு பெரிய மாற்றாக இருக்கிறது. (ஓவிய வேலைகளுக்கு மட்டும்). 


எழுதிய பதிவை 23.56 மணிக்கு ஏற்றியாகிவிட்டது. :D


Why stopped to draw human faces - Part 02



ஒரு ஓவியன், கண்களால் பார்ப்பதைமட்டுமே வரைவதில்லை. அவனின் பார்வை அளவில் சிக்கிய, அவனுக்குமட்டுமே முக்கியமாகப்படும் விசயத்தையோ, பொருளையோ மையப்படுத்தி, இயல்பாக அங்கே கிடைக்கும் வெளிச்சம், நிழல் ஆகியவற்றை கவனித்து, அதில் கூடுதலாக ‘இன்னும் என்ன செய்யலாம்?’ என்ற சிந்தனை தெளிவோடு வரைவான்.

காட்சிப்பொருளை வரையாது, தன் மனதிற்குள் எழுவதை வரைகிறேன் என்ற, மாடர்ன் ஆர்ட் ஓவியர்கள் இதில் சிக்கமாட்டார்கள். அவர்கள் தனி உலகம்.

இத்தனை காலமாக, நான் ஒருபோதும் இயற்கை காட்சிகளையோ, தெரு, நகரம் இப்படியான காட்சிகளையோ வரைந்ததில்லை. அதில் நிறைய நுணுக்கங்களை சேர்க்கவேண்டியதிருக்கும் என்பதால், அதற்கான பொறுமை என்னிடமில்லை.  ஒரு ஓவியத்தை நீண்ட நாளாக வரைந்துகொண்டே இருக்கும் பழக்கமும் என்னிடமில்லை. அதோடு நாம் உழைத்தால், அதற்கான பலன் கிடைக்கவேண்டுமேயன்றி, சும்மா ‘எனக்கும் வரையத்தெரியும் என்பதற்கோ, இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு வரைந்தேன்’ என்று பெருமையடித்துக்கொள்வதற்கும் நான் வரைவதில்லை. ஒரு ஓவியம் வரைந்தால் அது எனக்கு என்ன கொடுக்கும் என்பதில் எனக்கு அக்கறை உண்டு. எனவே, நான் ஒரு ஓவியன் என்பதை வெளிக்காட்டுவதற்காக வரைந்த ஓவியங்களைத்தவிர வேறெந்த ஓவியமும் நான் வரைந்து வைத்துக்கொள்வதில்லை. சில நண்பர்களுக்கு சும்மாவேணும் நட்புக்காக வரைந்து கொடுத்ததுண்டு, இன்னமும் அப்படி கொடுத்துக்கொண்டிருக்கிறேன்.

இதனால், கேட்பதை வரைந்து தருகிறேன் என்றவகைக்கு வந்துவிட்டேன். ஒரு நிறுவனம் மூலமாக வரையும் வேலைகளும், தனி நபர் வேலைகளும் நீண்டகாலமாக செய்துவந்தேன். அவ்வப்போது அதற்கான வருமானமும் வந்துகொண்டிருந்தது. நீங்கள் யார்? என்றால் நான் ஒரு ஓவியர் என்று பதிலளிக்கமுடிந்தது. இதைத்தவிர வருமானத்திற்கு என்ன செய்கிறீர்கள்? என்ற அர்த்தமில்லா கேள்விக்கு என்னால் புன்னகைக்க முடிந்தது.

நிறுவனம் மூலமாக கிடைக்கும் வேலைகளில் 10:2 என்ற அளவில் திருத்தங்கள் வரும். அந்த திருத்தங்களை ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தால், திருத்திக்கொடுப்பதுண்டு. சில இப்படித்தான் அந்த ஓவியத்தில் வரையமுடியும் என்ற நியாயமான விசயத்தை சொல்லி புரியவைப்பதும் உண்டு. தனி நபர்களில், என் ஆரம்ப காலங்களில் வரைந்து தருவதை, மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டவர்கள் 50:50 மட்டுமே.

முக்கியமாக, தனி நபர் கேட்கும் திருத்தங்களை கவனித்தால், அவர்களுக்கு ஓவிய அறிவு கொஞ்சமும் இல்லை என்பது தெரியவரும். அடுத்தவருடைய ஓவியத்தைப்பார்த்து “அப்படியே நிஜமாக இருக்கு, அருமை” என்பவர்கள் தன் முகம் வரைந்தால்மட்டும் “வேறே யாரோ மாதிரி இருக்கு” என்று ஏற்றுக்கொள்ள மறுப்பார்கள். அதோடு தோலின் நிறம், நிழலின் அடர்த்தி, வெளிச்சத்தின் பாதிப்பு இவைகளும் பெரும் குறையாக அவர்களுக்கு தோன்றும். 

ஒருவருடைய முகத்தை வரைய பல நுட்பமான வழிகள் உள்ளன. இதில் கணித சமன்பாடுகளைக்கூட உபயோகப்படுத்தலாம். நான் அதிலும் சில வழிகளை தேர்ந்தெடுத்தே, கோட்டு ஓவியம் வரைந்து, அவர்களிடம் காட்டி, உங்கள் முகம் போல இருக்கிறதா? என்று கேட்டுவிட்டே அடுத்த நிலைக்கு செல்வது வழக்கம்.  கோட்டு ஓவியம் அருமை என்று பதில் தந்துவிட்டு, கடைசியில் என் முகம் இல்லை என்று சண்டைபோடுவது பெரும்பாலோரின் வழக்கம். சரி, எனக்கு இது பிழைப்பு, நீ பணம் தருகிறாய் எனவே, திருத்தங்கள் தருகிறேன் என்று அவர்கள் சொல்லுகிறவகையில் திருத்தி வரைந்து அனுப்பிவைப்பேன்.

ஒரு முகம், வெளிச்சத்தில் ஒருமாதிரியும், அதிகவெளிச்சத்தில் ஒருமாதிரியும், லேசான வெளிச்சத்தில் ஒருமாதிரியும் இருப்பது உண்மை. எனக்கு அவர்கள் அனுப்பிவைக்கும் ஒளிப்படத்தைக்கொண்டே, மாதிரி எடுத்துக்கொள்ளவேண்டியுள்ளது. எனவே அதில் என்ன அளவில் ஒளியும், நிழலும் இருக்கிறதோ அதைத்தான் ஓவியத்தில் கொண்டுவர முடியும், ஆனால் அவர்கள் அதை புரிந்துகொள்வதில்லை. 

ஓவியத்தில் எல்லாம் முடித்தபிறகு, இன்னொடு ஒளிப்படத்தை உடனே அனுப்பி “இதைபாருங்கள், நான் இப்படித்தான் இருப்பேன், நீங்கள் வரைந்தது நான் அல்ல” என்பார்கள். அப்படியானால் முந்தைய ஒளிப்படத்தில் இருப்பது நீ இல்லையா? பிறகு ஏன் அந்த ஒளிப்படத்தை எனக்கு அனுப்பினாய்? இந்த ஒளிப்படத்தை முன்னதாகவே அனுப்பியிருக்கலாமே? என்று கேட்டால் பதில் வராது.

இதில் இன்னும் சிலர், பக்கவாட்டில் முகம் திரும்பிய ஒளிப்படத்தை அனுப்பிவிட்டு, நேராக பார்க்கிறமாதிரி வரைந்துகொடுங்கள் என்று கேட்பார்கள். “ஐயா, எனக்கு இறைவன் அந்த வரத்தை தரவில்லை, என்னால் முடியாது” என்று சொல்லிவிடுவேன்.

எனக்குத்தெரிந்து, கிட்டதட்ட நான்கு தலைமுறைகள், ஓவியம் குறித்த அறிவே இல்லாது வந்துவிட்டார்கள் என்று நம்புகிறேன்.இந்நிலை இந்தியா முழுதும் என்று என்னால் சொல்லமுடியும். அவர்களுக்கு ஒரு ஓவியன், விளக்கி சொன்னாலும் கூட புரிந்து கேட்டுக்கொள்ளும் மனநிலை அவர்களுக்கு இல்லை. 

முக்கியமாக ஒளிப்படத்தில் இருக்கிற குறைகளையும், அவர்கள் முகத்தில் இருக்கிற குறைகளையும் சரி செய்துதான் ஓவியன் வரைவான். அதாவது மேலும் அழகுபடுத்துவான். கேரிகேச்சர் (இருப்பதை மிகைப்படுத்தும் கலை) என்று வரைந்தாலும் கூட, நான் குறைகளை மிகைப்படுத்துவதில்லை. 

சரி, இருப்பதை அப்படியே வரைவதற்கு ஓவியன் தேவையா? ஒரு கேமரா மூலமாகவே அதை செய்துவிடலாமே? அதோடு ஓவியன் கற்றுத்தேர்ந்ததையும் இணைத்துத்தானே தருவான். அவன் என்ன இயந்திரமா? அப்படியே நகலெடுக்க? 


அடுத்ததாக, கிடைக்கின்ற மென்பொருள்களில், Photoshopல்  Smudge என்றெரு tool இருக்கிறது. இதை வைத்துக்கொண்டு, ஒளிப்படத்தையே, அப்படியும், இப்படியும் தேய்த்து மழுக்கி, லேயர் லேயராக வண்ணத்தை பரப்பிவிட்டு, டிஜிட்டல் ஆர்ட் என்று தடவும் டிஜிட்டல் ஆர்டிஸ்ட்கள் (Digital Art - Digital Artist) செய்கிற, இருப்பத்தை அப்படியே வரைந்து தரும் ஓவியம் என்ற திருட்டுத்தன வேலைகள், மக்களை மயக்குகின்றன. 

எனவே ஓவியவேலை தருபவர்கள், ஒரு ஓவியன் “அப்படியே, அப்படியே” வரைந்து தரவேண்டும். இல்லையேல் அவன் தேறாத ஓவியன், அனுபவமில்லை என்ற முடிவுக்கு வந்துவிடுகிறார்கள்.  

நீ சும்மாவா கொடுக்கிறாய்? பணம் வாங்குகிறாய் அல்லவா? நான் கேட்பதை வரைந்து கொடுக்காமல் வேறெதாவது வரைந்து கொடுத்தால், வாங்குவதற்கு நான் முட்டாளா? எனக்கும் ஓவிய அறிவு இருக்கிறது(?!) என்று ஓவியனிடம் மல்லுகட்டுவார்கள். அதற்காகவே ஒரு ஓவியன் “குரங்காட்டம்” ஆடவேண்டிருக்கிறது.

முக்கியமாக, ஒரு படைப்பை திருத்துகிற உரிமை எவனுக்குமே இல்லை. மறு பதிப்பு என்பதுதான் நியதியே தவிர வேறெதுமில்லை. அந்தவகையில் கதை எழுத்தாளர்களுக்கும், கவிஞர்களுக்கும் இருக்கிற, துணிச்சலான, தைரியமான, நம்பகமான வெளிப்பாடு ஓவியனுக்கு இல்லை.  இன்னும் விளக்கமாக காசுவாங்கிக்கொண்டு வரைந்துதரும் ஓவியனுக்கு இல்லை என்று சொல்லலாமா?

இத்தகைய அறிவு எனக்கு உள்முகமாக வந்த பிறகு, முகம் வரைவதற்கான ஆர்வம் எனக்கில்லை. ஒரு ஓவியனாக மக்களிடம் தோற்கிறேன். நான் ஓவியன் என்று சொல்லுவதற்கு குறைபட்டதில்லை, ஆனால் ஒரு ஓவியம் வரைய என் கைகள் கூச ஆரம்பித்துவிட்டது. கூடவே கரோனா தொற்றும் வேலைகளை குறைக்க, சரி இதுதான் நல்ல சமயம் என்றெண்ணி, வரும் வேலைகளையும் “பார்க்க ஆளில்லை, வரைந்துதரவும் ஓவியர்களில்லை” என்று சொல்லி தடுத்து நிறுத்திவிட்டேன்.

அப்படியானால் வயிற்றுப்பாட்டு? நல்லவேலையாக எனக்கு தெரிந்த ஓவியமல்லாத வேறு சில வேலைகளை செய்துவந்ததினால் தப்பித்தேன். இன்றும்கூட அவைதான் என் வாழ்க்கைக்கு உதவுகின்றன. முக்கியமாக இந்த வேலைகளில், எந்த திருத்தமும் இல்லை. யாரும் குறைசொல்லும் வழியும் இல்லை. எனக்கு நேரடியாக வேலைக்கு பணம் வழக்கும் மக்களுமில்லை. அவர்களின் திருத்தங்களை கேட்கவேண்டிய அவசியமும் இல்லை. இதற்கு இவ்வளவா என்று கேட்டவர்களிடம் பேரம் பேசி அவர்களுக்கு புரியவைக்கும் வேலையும் இல்லை.

நிம்மதியாக, சுதந்திரமாக, தைரியமாக, உண்மையாக என்படைப்புக்களை தந்துகொண்டிருக்கிறேன். பலன் பெறுகிறேன்.  என் ஓவிய கைகள் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கின்றன. அது நல்லதுதான். 

பின்குறிப்பு: ஆனால் இன்னமும்  அங்கே  ஆர்டர்கள் பெறப்படும் என்று இருக்கிறதே? என்று கேட்டால், அதன் விலைப்பட்டியலை, தெளிவான விபரங்களை பார்த்துவிட்டு, முடிவுக்கு வரவும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். 

Why stopped to draw human faces - Part 01


 மனித முகங்களை வரைவது மற்றெல்லாவகை ஓவிய நுணுக்கங்களைவிட கடினமானது. அது எனக்கும் அவ்வளவு இயல்பாக வந்துவிடவில்லை.

Pen Art_Sugumarje (6)
(பள்ளிக்காலத்தில் பேனாவால் வரைந்த ஓவியங்கள்)

ஆனால்  சிறுவயது முதல், ஒருவருடைய முகத்தை அதில் அமைந்திருக்கிற வடிவங்களை கவனிப்பேன். இவருடைய காது நீண்டு இருக்கிறது, யானைக்காது போல இருக்கிறது. முகத்திற்கு, வழக்கத்தைவிட வெளியே தள்ளி அமைந்திருக்கிறது, இவருடைய மூக்கு ஊசி முனை, இந்த மூக்கு மிக விரிந்தது, நுனி மேல் தூக்கி நிற்கிறது,  மூக்கின் மேலே இரண்டு வளைவுகள் இருக்கின்றன, கண்கள் சுருங்கியுள்ளது, விரிந்து முட்டைக்கண்ணாக உள்ளது, நெற்றி இவ்வளவு அகலமா? நெற்றிக்கு முன்பே இவ்வளவு முடி இருக்கிறதே என்று இப்படியெல்லாம் பார்த்து மனதிற்குள்ளாக குறிப்பெடுத்துக் கொள்வேன். 


இன்னொரு முக்கிய விசயமாக, ஒரு கணவன் மனைவி என்று எடுத்துக்கொண்டால், அவர்களுக்கு இடையே இருக்கிற முக ஒற்றுமையை கவனிக்கமுடியும். கூடுதலாக அவர்களின் குழந்தைக்கு, தாயின் முகமா, தந்தை முகமா, தாய்வழி பெற்றோர், தந்தைவழி பெற்றோர் முகமா என்றெல்லாம் ஆராய்ச்சியும் செய்யலாம்.  

சிறுவயதில் இருந்தே யாரோடும் பேசும் பிள்ளை அல்ல நான். முக அறியாத மனிதரோடு பேச தயக்கம் கொண்டவனும் அல்ல. யாராவது எதேனும் கேட்டால், எனக்குத்தெரிந்த அதற்கான பதிலைசொல்லுவேன். என்வீட்டிலேயும் “ரொம்ப அமைதியான பையன்”. ஆனால் என் மனஓட்டம் மிக சிந்தனைக்குறியதாக இருக்கும். என் நேரத்தை எனக்குள்ளாக சிந்தனைகளாக ஓட்டிக்கொண்டிருப்பதே என் அன்றாட நடவடிக்கையாக இருக்கும். ஒருவேளை அது கற்பனை கோட்டையாகவும் இருக்கலாம், ஆனால் நான் கற்பனையில் பறந்தாலும், தரையில் நிற்பதை மறக்கமாட்டேன், அந்த சிறுவயதிலேயே. போதும் சுயபுராணம் என்றாலும், இந்தக்கட்டுரையில் சொல்லித்தான் ஆகவேண்டும்.


ஒரு செவ்வகம் போட்டு அதன் அடிப்படையில் எம்ஜியார் அவர்களை வரைவதுதான் என் ஆரம்பகால முகம். என் சகோதரன் அப்படி வரைந்து காட்டியதை நான் பழக முயற்சித்தேன். ஆனாலும் பின்னாளில் நான் அவரைவிட பொறுமை பெற்றிருந்ததால், இன்றுவரையிலும் ஓவியனாக நிற்க முடிந்திருக்கிறது. அந்த எம்ஜியார் “நல்ல நேரம்” திரைப்பட தோற்ற கொண்டவர். அதோடு அப்போது எங்களுக்கு படிக்க கிடைத்த, வார, மாத தமிழ் நூல்கள், அதில் இருந்த ஓவியங்கள் கூடுதலாக முகம் வரைவதற்கு பயிற்சி அளித்தன.  அந்த ஓவியர்களின் பெயர்கள், செல்லம், புஜ்ஜாய், ஆழி, மணியம், சில்பி, ஸ்ரீ தர், லதா, ராமு, மாருதி, கோபுலு, ஜெ, ஜி.கே. சங்கர், அரஸ், ம.செ., மதன், நடனம்,  (மன்னிக்கவும், சில பெயர்கள் ஞாபகமில்லை) இவர்கள் காலத்திற்குபிறகு ஸ்யாம் பிறகு கதைகளும் அதற்கான ஓவியங்களும் அருகிப்போகின.

ஓரளவு எனக்கு முகம் வரையபழகிய பிறகு, விதவிதமாக முகங்களை வரைந்து பழகிக்கொண்டேன். ஒருபக்கமாக திரும்பிய முகம், மேல்புறம் பார்க்கும் முகம், கீழே குனிந்த முகம், முக்கால் பாகம் முன்னால் தெரியும் முகம், முழு நேர்பார்வை முகம் இப்படியாக முகங்கள், முகங்கள். அதுவும் கை எடுக்காமலும் வரையும் வேகமும் உண்டு. சில நண்பர்கள், ஏதேனும் வரைந்து காட்டுங்களேன் என்று கேட்டால், உடனே எதேனும் ஒரு பெண்ணின் முகம் வரைவேன், அழகிய கூந்தலோடு, கொஞ்சம் மலர்கள் வைத்து காண்பிப்பேன். 

என் ஓவிய பாடசாலைக்கு, தன் தந்தையோடு வந்த ஒரு சிறுமி, 

“ஏன் அங்கிள், எப்போ சாம்பிள் வரையச்சொன்னாலும், கேர்ள்தான் வரையனுமா?”

“இல்லடா, அவங்கதானே பார்க்கவும் அழகா இருக்காங்க, ஓவியத்திலும் அழகா இருப்பாங்களே அதான்” என்று சமாளித்தேன்.

ஒரு ஆணுக்கு முதல் கவர்ச்சி பெண் தானே?! இதில் ஓவியன் விதிவிலக்கா? மேலும் வளைவு, நெளிவையும் ரசித்து கோடுகளிலும், வண்ணங்களிலும் பதிப்பவன் தானே ஓவ்வொரு ஓவியனும்.

எனக்கு சில தொழில்முறை ஓவியர்களின் பழக்கம் இருந்ததால், அவர்களிடம் நான் வரைந்த முக ஓவியங்களை காட்டி திருத்தங்கள் கேட்பேன். அவர்கள் சொல்லும் திருத்தம், வேண்டுமென்றே குறை சொல்லுவதுபோல தோன்றும். ஆனாலும் அந்த இடத்தில் பொறுமையாக கேட்டுக்கொண்டு, வழக்கமான என் பாணியிலே கொஞ்சம் மாற்றம் செய்துவருவேன். பள்ளியிலேயே, ஒரு நடிகை (சுஹாசினி) ஓளிப்படம் கொடுத்து இதை பென்சில் ஆர்ட்டாக கொடு என்று கேட்ட நண்பனிடம் பணம் (வாழ்வின் முதல் ஆர்டர்?!) பெற்று வரைந்துகொடுத்தேன். 


Girl_Sugumarje_Pencil (7)
(பள்ளிக்காலத்தில் பென்சிலால் வரைந்த ஓவியங்கள்)

கிட்டதட்ட 2005 ஆண்டு வரை, முகங்களை வரைவதும், அதை பாதுகாப்பதும், பிறகு அந்த ஓவியத்தை மறந்துவிடுவதுமாக,  ஓவியத்தைச் சாராத வேறு சில பணியில் இருந்ததால், நேரமிருந்தால் வரைவது என்றிருந்தேன். எந்த ஓவியத்தையும் கண்காட்சி வைத்ததும் இல்லை, விற்பனை செய்ததும் இல்லை. ஆனால் 2007 தனித்து இயங்க துவங்கியபொழுது, எனது யாகூ வெப் பேஜிலும் (Yahoo web page), கூகுள் சைட்டிலும் (Google site), பிறகு பிளாக்கிலும் (Blog) என் ஓவியங்களை கண்டு, எனக்கு ஓவியங்கள் வரைந்துதர இயலுமா? என்று சில வெளிநாட்டினர் கேட்க, இதற்கென இருக்கும் பெரிய சந்தையை அறிந்துகொண்டேன். அந்த சில வேலைகளுக்காகவே, உலகில் இருக்கக்கூடிய ஓவியர்களின் தரத்தை ஒத்த அளவில் நானும் என்னை, பல நாட்கள் வரைந்து புதிய நுணுக்கங்களை கற்றுக்கொண்டு, பத்திற்கு ஒன்பது தேர்ச்சி என்று அவர்களே பாராட்டும் அளவுக்கு உயர்ந்தேன். முக்கியமாக இன்னமும் கூட, புகழ் பெற்ற ஓவியர்களின் ஓவியங்களையும், புதிதாக ஓவியம் கற்றுவரும் இளைஞர்களின் ஓவியங்களையும் கூட கவனித்து, அவர்கள் தரும் நுணுக்கங்களை பழகிக்கொண்டுதான் வருகிறேன். இந்த மாற்றங்களை ஒரு ஓவியன் ஏற்று தேரவில்லை என்றால், அவன் காலத்தால் பின் தங்கிவிடுவான். ஓவியனின் கையை, மரணம் மட்டுமே நிறுத்தமுடியும் என்று நம்புகிறேன்.

இப்பொழுது ஒரு உண்மை தெரியவரும். ஒரு முகத்தை வரைவதற்கான சிரமமும், அதில் எத்தகைய தேர்ச்சியும் தேவையாக இருக்கிறது என்பதும். என் கையால் வருவதுதான் ஓவியம் என்று சும்மாவேனும் கிறுக்கித்தள்ள முடியாது. ஒரு ஓவியம் என்பது படைப்பு, அதில் மறைந்திருக்கும் செய்தியும் உண்டு, வெளிப்படையான காட்சிப்பொருளும் உண்டு. 

என் ஓவியங்கள், பார்ப்பதை வரைவது என்ற வகையை கொண்டது, அதிலும் மனிதர்களுக்கானது. அத்தேர்வு, ஓவியரின் மன நிலையையும், பண நிலையையும் சார்ந்தது. எனக்கோ இரண்டாம் நிலை. வரைந்து வைத்துக்கொண்டு, ஊர் ஊராய் தூக்கிக்கொண்டுபோய் காட்சிப்படுத்துவதில் எனக்கு ஆர்வமில்லை. வரைகிறோமா, வித்தோமா என்பது என்பாணி. 

Vethathri_Sugumarje_Pencil (1)
(18 வயதில் வரைந்த சில ஓவியங்கள்)

எனது மாணவர் 

“சார், உங்க வீட்டிற்கு வந்து உங்க ஓவியங்களை பார்க்கலாமா?”

“வீட்டில், பெரிய பெரிய கேன்வாசில் வரைந்து வைத்திருக்கிறேன் என்று நினைக்கிறாயா?”

“ஆமாம் சார்”

“அப்படியெல்லாம் ஒன்று கூட இல்லை, அப்படி வரைந்த ஓவியங்களைக்கூட பரிசாக பிறருக்கு தந்துவிட்டேன். என்னிடமிருப்பது, இந்த கணிணியில் இருக்கும் ஓவியங்கள் மட்டுமே. ஒரு சில பேப்பர் ஓவியங்கள் கைவசம் இருக்கின்றன. ஆனால் அவையெல்லாம் கற்றுக்கொள்ள வரைந்தவை, காட்சிப்படுத்தலுக்கு அல்ல”

கடைசிவரை அந்த மாணவர், நான் சொன்னதை நம்பவே இல்லை.

இப்படியாக, முகங்களை வரைந்து, காசாக்கிக் கொண்டிருந்த நான், கடந்த நவம்பர் 2019 முதல் இனி யார் ஓவியம் கேட்டாலும் வரைவதே இல்லை என்று சபதம் எடுத்தேன். என் வாட்சப்பில் கூட “We stopped new orders" என்று வாசகம் வைத்தேன். அது கரோனா (Covid-19) பாதிப்பால் அல்ல.


தொடரும்...

Open Statement for Commercial Caricature from Artist



Open Statement:

Stopped working for commercial caricature service.

Dear ones! We stopped working and provide a caricature paintings you liked, adorable. We're really sorry.

The main reason for this, is that, we do not have knowledge and experience to the extent you know the art and painting.

Anyway a painting is a creation. Just as nature creates its creations. A creation is always completed piece. This is the truth.

The painter creates a painting. That is the completeness of his knowledge. But you are disgusted by the painter and the creation by saying, "You change this, change that, draw like this, draw like that, it is chubby, it is fat, slim, and curvy, not like me, looks like someone else". Yes, you can comment like this, why you are giving some money to the Artist.

In fact, does the artist draw from your photocopy you provided? Are you unaware of this fact?

Thus for every work he buys, for every person, if he continues to learn painting, what is the fate of that painter? So you okay to teach a art to the Artist?

Otherwise without this difficulty for you, the right method is to draw yourself.

It was only after receiving this explanation that we stopped offering caricature painting. Please forgive us. Thanks to the loved ones who have supported so far.

by Caricaturelives

---------------------

ஒரு மனம் திறந்த அறிக்கை:

வியாபார ரீதியிலான கேரிகேச்சர் சேவை நிறுத்தப்பட்டது.

அன்பானவர்களே! நீங்கள் விரும்பிய, கேட்கக்கூடிய கேரிகேச்சர் ஓவியங்கள் வரைவதை நிறுத்திவிட்டோம். உண்மையிலேயே நாங்கள் வருந்துகிறோம்.

அதற்கான காரணங்களில் முக்கியமானது, உங்களுக்கு ஓவியம் தெரிந்த அளவிற்கு, எங்களுக்கு அது குறித்த அறிவும், அனுபவமும் இல்லை என்பதுதான்.

ஆனால், ஓரு ஓவியம் என்பது படைப்பு. எப்படி இந்த இயற்கை தன் படைப்புக்களை உருவாக்குகிறதோ அப்படியானது. ஒரு படைப்பு என்பது எப்போதுமே முழுமையானது. இதுதான் உண்மை.

ஒரு ஓவியத்தை ஓவியன் படைக்கிறான். அவனுடைய கற்று தேர்ந்த அறிவின் முழுமை அப்படைப்பு. ஆனால் நீங்கள், காசு தருகிறேன் என்பதற்காக, இதைமாற்று, அதை மாற்று, இப்படி வரை, அப்படி வரை, குண்டாக இருக்கிறது, ஒல்லியாக இருக்கிறது, என் முகம் போல இல்லை, வேறுயாரோபோல இருக்கிறது என்று சொல்லி ஓவியனையும், படைப்பையும் அசிங்கபடுத்துகிறீர்கள்.

உண்மையில், ஓவியன் நீங்கள் வழங்கிய உங்களின் புகைப்பட பிரதியில்ருந்துதானே வரைந்து தருகிறான்? இந்த உண்மையை நீங்கள் அறியாது இருக்கிறீர்களா?

உங்கள் விருப்படி ஓவியம் வரையவேண்டுமென்றால், உங்களிடம் இருந்துதான் அந்த ஓவியன் கற்றுக்கொள்ள வேண்டும். இப்படியாக தான் வாங்கும் ஓவ்வொரு வேலைக்கும், ஓவ்வொரு நபரிடமும், அவன் ஓவியம் கற்றுக்கொண்டே இருந்தால், அந்த ஓவியனின் கதி என்னாவது? 

இல்லையெனில் உங்களுக்கு இந்த சிரமம் இல்லாமல், நீங்களே வரைந்துகொள்வதுதான் சரியான முறை. 

இந்த விளக்கம் பெற்ற பிறகுதான், நாங்கள் ஓவியம் வழங்குவதை நிறுத்திவிட்டோம். தயவு செய்து எங்களை மன்னிக்கவும். இதுவரை ஆதரவு அளித்த அன்பர்களுக்கு நன்றி. 

கேரிகேச்சர்லைவ்ஸ்

---------------------

Artist life in the world


ஒரு தொழில்முறை ஓவியனாக என்னை நிறுத்திக்கொண்டது என் வாழ்வில் நான் அடைந்த சிறப்பான முன்னேற்ற நிலை. பல ஆண்டுக்காலமாக, பொழுதுபோக்காக சிலரின் அன்புக்காகவும் ஓவியங்களை வரைந்து கொண்டிருந்தவன் நான். கேரிகேச்சர்லைவ்ஸ் என்று ஒரு சுயநிறுவனம் தொடங்கி, வாடிக்கையாளர்கள் கேட்டுக்கொண்டபடி, அவர்களின் குறிப்பில், அவர்களுக்கு பிடித்த அளவில், அவர்களின் முகம், பாவம் மாறாமல் வரைந்து தந்துகொண்டிருக்கிற இந்தகாலம், கிட்டதட்ட 17 ஆண்டுக்கால பயணம்.


கடந்த வாரத்தில் என் உறவினர் இல்லத்தில், ஒரு பெரியவரை சந்தித்தேன். நல்ல மத்திய அரசு நிறுவனத்தில் வேலையில் பணியாற்றியவர், தற்போது பணி ஓய்வில், தான் கட்டிய 5 வீடுகளின் வாடகை வசூல்தான் இப்போதைய அவரின் பணி. என்னைவிட இருபத்தியாறு வயது கூடியவர். தன் மகளும், மகனும் வெளிநாட்டில் இருக்கிறார் என்ற பெருமையுடையவர். அன்றுதான் அவரை நேரில் பார்த்தேன். இதற்குமுன்பே அவரின் “மேற்கூறிய” தகவல்கள் எனக்கு கிடைத்திருந்தன.
“வணக்கம் நல்லாயிருக்கீங்களா?”
“நான் நல்லாயிருக்கேன். என்ன வேலைல இருக்கீங்க?”
“நான் ஓவியரா இருக்கேன். இதோ இந்த மாதிரியான ஓவியங்கள்தான் பாருங்க” என்று என் கைபேசி திரையை காட்டினேன்.
“அது சரி, வேறே வேலைல எதும் இல்லையா?”
“--------”
“இதுல என்னத்த கிடைச்சிட போகுது? வாழ்க்கை நல்லபடியா போகுதா?”
நான் உணர்ச்சிவசப்படாமல் “அதெல்லாம் போகுது போகுது” என்றேன்.
“போனா சரிதான்”
இனி பேசி பயனில்லை என்றபடி, நான் வாசலுக்கு வந்து நின்றுகொண்டேன். அந்த பெருசு வெளியேறினபிறகுதான் உள்ளே செல்லவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.

ஒரு ஓவியனைப்பற்றிய மதிப்பீடு இவ்வளவுதான். அடப்பாவிகளா. மனிதகுலத்தின் முதல் மலர்ச்சியே ஓவியம்தானடா? அதையே இப்படி செல்லாக்காசாக நினைத்துவிட்டீர்களேடா? கொஞ்சம் மனவேதனைதான். ஆனாலும் “நாங்க அடிவாங்காத ஏரியாவே கிடையாது, தம்பி போவீங்களா” என்று கைப்பிள்ளையாக கடந்துவந்த பாதையில் அமைதியானேன்.

காலச்சுழற்சி பின்னோக்கி ஓடியது.
“வீட்டில இருக்கிற நேரமெல்லாம், வரைஞ்சிகிட்டே இருக்கான்பா”
“அப்படியா, அப்ப இவன் தேறமாட்டான்” சொன்னவர் சில ஓவியங்களை வரைந்து வீட்டில் மாட்டியிருக்கிறார். ஆனால் வேறு தொழில் செய்துகொண்டிருந்தார்.

“சுகு, நீ என்ன இவனைமாதிரி வரைஞ்சிகிட்டே இருப்பியாம். ஓவியன் வரையறவன் விளங்கமாட்டான்பா” நண்பனின் அம்மா சொன்னார்.

என் வீட்டில், என் தாயும், தந்தையும், சகோதரிகளும், சகோதரனும் ஓவியத்தின் பொருட்டு ஒரு குறையும், குற்றச்சாட்டும்  வைத்ததில்லை. நான் பல நேரங்களில், இத்தகைய, அவர்களின், என் ஓவியம் குறித்தான ஏற்றுக்கொள்ளல் தன்மை குறித்து வியந்திருக்கிறேன்.

சமீபமாக ஓவியம், ஓவியன் குறித்த சமூக நிலை, கீழிறிங்கிக்கொண்டிருக்கிறது. கிட்டதட்ட படுத்துவிட்டது என்று கூட சொல்லலாம். நான் சொல்லுவது, சமுக அன்பர்கள் கேட்டுக்கொண்டதறு இணங்க வரையும், பழங்கால முறையில் வரைவதும், நவீன முறையில் கணிணி துணை கொண்டு  வரைவதுமான ஓவியங்கள் மட்டுமே.

தனக்கு தெரிந்ததை, தன் அனுபத்தை, தன் எழுச்சியை வரைந்து, காட்சிப்படுத்தி, அதற்கென்று காத்திருக்கும் அன்பர்களுக்கு விற்பனை செய்யும், ஓவியகலைஞர்களின் போக்கு தனி. அத்தகைய ஓவிய வட்டத்திற்குள் நான் நுழைந்ததில்லை. இனி நுழையப்போவதும் இல்லை.

என்பாதையும், பயணமும் தனியானது. தனி ஒருவன், ஓவியனாக முகமறியா அன்பருக்கு, அவர் கேட்டுக்கொண்டபடி வரைந்து, அதற்கான விலையில் பணம் பெறுவது என்ற அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக மாறி, தொழிலாக செய்துகொண்ருக்கும் ஓவியர் என்ற வரிசையில் நான் நின்றிருப்பது எனக்கு பெருமையே.
“நீ மட்டும் எப்படி இந்த நிலைக்கு வரமுடிந்தது? ஏன் என்னால் முடியவில்லை?”
“இந்த முறையில்மட்டுமே, வாழக்கை உங்களால் ஓட்ட முடிகிறதா? எப்படி?”
“எனக்கும் இந்த வழியை காட்டிகொடுங்களேன்”
புன்னகை மட்டுமே என்பதிலாக இருந்திருக்கிறது.

சமீபமாக என்று ஆரம்பித்தேன் அல்லவா? அதை இன்னும் விளக்குகிறேன். கடந்த டிசம்பர் மாதம் முதல், தற்போது கடந்த பிப்ரவரி மாதம் வரையும் நான்பார்த்த எல்லா வாடிக்கையாளரும், எனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தினார்கள். அதற்கு முன்பும் ஒரு சில வாடிக்கையாளர்கள் மூலம் வரும், சகஜமாக எடுத்துக்கொள்வேன். ஆனால் வேலைகொடுத்த அனைவருமே அப்படி செய்தபோது கொஞ்சம் கலங்கித்தான்போனேன்.

ஒரு ஓவியம் என்பது, படைத்தல், அதில் குறைகள் என்று கண்டுபிடிப்பவனும், அதை இப்படி திருத்திக்கொடு என்று கேட்பவனும் முட்டாள். கொஞ்சமும், ஓவியம் குறித்த எந்த அனுபவமும் இல்லாதவன் என்றும் நான் சொல்லுவேன். Critic என்று சொல்லபடுபவனும் முட்டாளே. இயற்கையை குறைகாண்பானா அவன்? குறை நிறைகள் தான் இயற்கை.

Quora வில் ஒரு குறிப்பு எழுதியிருந்தேன். என்றைக்கு ஒருவன் முதன் முதலில் ஓவியம் வரைந்தானோ அவன் ஓவியன். அதை பார்த்துக்கொண்டிருந்த இன்னொருவன்தான் Critic

ஒரு மனிதனின், ஒருபக்க காது வித்தியாசமிருக்கிறதே? நீ என்ன செய்தாய்? ஒட்டுபோட்டுக்கொண்டாயா?
ஒரு மனிதனின், ஒரு கண் சிறுத்திருக்கிறதே? இமைகளை விரிக்கச்சொல்லி மருத்துவம் பார்த்தாயா?
சிரித்தால் இதழ் ஒருப்பக்கம் கோணலாக போகிறதே, வாழ்வில் சிரிக்காமலேயேவா நாட்களை கடத்துகிறாய்?
நிறுத்து, நீ ஓவியன், காசுக்காக வரையும் ஓவியன், நீ கொடுப்பதை நான் காசு கொடுத்து பெற்றுக்கொள்ள நாங்களென்ன முட்டாளா? எங்களுக்குள்ளும் ஓவியன் இருக்கிறான் (?!) நான் எப்படி கேட்கிறேனோ அப்படி வரைந்துதருவதுதான் உன்வேலை.  படைப்பு கிடைப்பு என்று பினாத்துகிறாயே?!

எத்தனை அடி? எவ்வளவு அடி? யப்பா?

ஒரு கணிணி அல்லது கைபேசி விளையாட்டில், எதிரியை கொன்று குவிக்க, குவிக்க மீண்டும் மூண்டும் முளைத்தெழும் எதிரியைப்போலவே, ஒவ்வொரு முகமுடியை மாட்டிக்கொண்டு, அதே வாடிக்கையாளர் வந்து எனக்கு வேலை கொட்டுப்பதுபோலவே எனக்கு திகிலாக இருக்கும். இன்னுமா இது முடியலை என்று என் மனம், பழைய வேலையோடு ஒப்பிட்டுப்பார்த்து திடுக்கிடச்செய்யும்.

ஓவியத்தில் திருத்தமெல்லாம் ஏற்றுக்கொள்ளாதீர்கள் என்று பலதுறைகளைச் சார்ந்தோர் எனக்கு சொன்னபோதிலும், வாடிக்கையாளரிடமிருந்து பணம் பெறுகிறோம், அதனால் அவர்களின் திருப்திக்காக சில திருத்தம் செய்வதில் தவறில்லை என்பது என் கருத்தாகவே இருந்தது. ஒரு ஒளிப்பட கருவி, (Camera) இருப்பதை எடுத்துக்காட்டும் என்ற அளவில் கூட, “ஒருஓவியனுக்கு” மதிப்பில்லாமல் போனது அதிசயமே.

இதில், இப்படியும் கேட்பார்கள். “எனக்கு Soft copy மட்டும் போதும்” இதை எங்கே, யாரிடம் கற்றுக்கொண்டார்கள் என்று தெரியவில்லை. இதன் பொருள் என்னவென்றால் “ நீபாட்டுக்கு உனக்கு தகுந்த விலையை சொல்லாதே, கொஞ்சம் சீப்பா விலை சொல்லு” (நான் என்னய்யா, வாழைப்பழ கடையா போட்டிருக்கேன்?) முழு ஓவியம், பெரிதாக வரையாமல், எப்படி சீப் சாப்ட் காப்பி கொடுக்கமுடியும்?!

திரைப்படத்தில், செந்தில், கவுண்டமணி கடத்தல் பேரம் பேசுவதுபோல, இப்படியான வாடிக்கையாளர்களுக்கு, எத்தகைய விலை சொன்னாலும், அது சீப் ஆகாது. இன்னும் குறை, அட்ஜஸ் பண்ணு. ரவுண்டப் பண்ணு... எல்லா மொழிகளிலும் கேட்பார்கள்.

திருத்தம், திருத்தம், திருத்தம் ?! மாற்றம் ஒன்றுதானே மாறாது :P போதுமடா சாமி என்றாகிவிட்டது.  எப்போதுமே, நாம் நம்முடைய வாழ்வில் சந்திக்கும் ஓவ்வொரு நபருக்கும் ஒரு தொடர்பு, விட்டகுறை தொட்டகுறை என்பது நிச்சயமாக இருக்கிறது. இருந்தாகவும் வேண்டும் என்பதுதான் இந்த இயற்கையின் விதி. தானாக வந்ததாகவும் இருக்கலாம். தானே சேர்த்ததாகவும் இருக்கலாம். இதன் மூலமாக, நம் வினைப்பதிவுகள் ஓவ்வொன்றாக கழிகின்றன. திருத்தம் பெறுகின்றன. அவர்கள் மூலமாக அவன் சுத்தம் செய்யபடுகிறான். உண்மையாகவே நான் அவர்களுக்கு, மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன். என்னுடைய சுயத்தை பரிசோதனை செய்ய வாய்ப்புத்தந்தவர்கள் அவர்களே. என் பலத்தையும்,  என் பலவீனத்தையும் எனக்கு வெளிச்சம்போட்டு காட்டி, என் சுயபலத்தை உணரச்செய்தவர்கள். நன்றி, நன்றி, நன்றி என் வாடிக்கையாளர்களே.

இந்த 17 வருடங்களில், 12 வருடங்கள் பெரும்பான்மையான வாடிக்காளார்களின் நன் மதிப்பை பெற்றிருக்கிறேன். ஓவ்வொருவரும், கடைசியாக, “மன்னிக்கனும் சார், உங்களை ரொம்ப கரைக்சன் கேட்டு நோகவைத்துவிட்டேன், பொறுமையாக எல்லாம் சரி செய்து கொடுத்ததற்கு நன்றி” என அவர்களே தானாக சொல்லும்படிச்செய்து, நட்பாகவே முடித்துவைத்திருக்கிறேன். தற்போதைய என்னுடைய பலம், இதுதான். அதோடு நம்பிக்கை. உடனுக்குடன் தகவல். என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதற்கான விளக்கங்கள். அவர்களே வியந்து பாராட்டுமளவுக்கு. நான் இந்த இடத்தில்தான் நிமிர்ந்து நிற்கிறேன்.

எல்லாம் நிகழ்வன, நிகழ்ச்சியே, தோற்றமாயைகளே, எங்கள் வேதாத்திரி மகரிசியும், மகாகவி பாரதியும் சொல்லியதை, அனுபவங்களாக, ஆராய்ச்சியால் கண்ட உண்மையில் நான் ஏற்றுக்கொண்டிருக்கிறேன். மனிதன் பல நிலைகளில், பலதரங்களில், பல காலங்களில் அனுபவித்து வாழலாம், ஆனால் பிறப்பு எப்படி நிகழ்ந்ததோ அப்படி, இறப்பும் காத்துக்கொண்டிருக்கிறது. இறப்பை வெறுக்கலாம், மறக்கலாம், வராது என்று நம்பலாம், மருத்துவத்தால், யோகத்தால், உடல் சாதனையால் தள்ளிவைக்கலாம் கொஞ்சநாளைக்கு... ஆனால் இறப்புக்கான அந்த டிக்கெட்டை யாராலும் வாபஸ் பெற முடியாது. அப்படி போய்ச்சேர்ந்தவர்களின் தோள்கள்மீதுதான் நாமும் நின்றுகொண்டிருக்கிறோம்.

நான், என் பயணத்தில் அடுத்த இலக்கு நோக்கி பயணிக்கதொடங்கியதாக எண்ணுகிறேன். முக்கியமாக ஒன்றை சொல்லவேண்டுமானால், இந்த பயணத்தையும், இலக்கையும் நான் தீர்மானிக்கவில்லை. நான் அதை தொடங்கவும் இல்லை. நான் ஒரு பயணி, ஏதோ ஒன்றை என்னை எடுத்துச்செல்கிறது. நான் அதனிடம் என்னை சில வருடங்களுக்கு முன் ஒப்புக்கொடுத்துவிட்டேன்.  அந்த பயணத்திற்கும், அந்த வழியில் நான் காணப்போகும் காட்சிகளுக்கும், சென்றடையும் இலக்குக்கும் நான் மனம் விரித்தும், மனம் ஒடுங்கியும், காத்திருக்கிறேன், விழிப்புநிலையில். ஆனால் எந்த எதிர்பார்ப்புமின்றி.

வேலையை எளிமையாக்குவதற்கு ஓப்படைப்பதைத்தவிர வேறு வழியில்லை.

Photoshop Doodle Art - 3


Hi all
Today the Next one, this time I do not use blend. It looks very different but awesome.
See the Result...




Anyone can do like this, if you a art lover or art student? Break the rules, jump over the circle around you... Start just, start... do like new learner in Sketch and Paint!

Keep Going your study!!

PHOTOSHOP DOODLE ART - 2


Based on Photograph,
I started this sketch at nights for this doodle artwork with digital brushes, after 120 minutes, I got this result... It looking as simple lightings, but give a pain to fingers :P But I Love this result...

You can Try!


Click image, see bigger result

THE EVOLUTION OF ART BY CARICATURIST-03


சூரியக்கதிர் மாத இதழுக்கு நேர்காணல் கேள்விகளும், பதில்களும்
பகுதி 03


17. அசலைப்போல ஓவியமா, அனுபவ ஓவியமா?

ஒரு ஓவியம் கற்கும் மாணவர் அசலைப்போலவே வரைந்துதருவதில் கற்றுத்தேர வேண்டியது அவசியம். ஆனால் அதில் தன் அனுபவத்தை காலப்போக்கில் இணைத்தே தரவேண்டும். இருப்பதை அப்படியே தர, இப்பொதெல்லாம் கேமரா முதற்கொண்டு, இயந்திரங்கள்கூட வந்துவிட்டன. அசலைப்போலவே வரைந்தால் மட்டுமே ஓவியன் என்றும், அதுவே தகுதியானது என்ற முட்டாள்தனம் இந்தியாவில் மட்டுமே காணக்கிடைக்கிறது. இப்படி எதிர்பார்த்தால் நூறு பேருக்கு ஒருவரே அப்படி வரையலாம். மற்றவர்கள் எல்லாம் இன்னும் கற்றுக்கொண்டே இருக்கவேண்டியதுதான். ஒரு போட்டோவை, நகல் எடுத்து வரைந்து அனுப்பினால் உலகநாடுகளில் மதிக்கவே மாட்டார்கள். இங்கேதான் ஆகா, ஓகோ என்று புகழ்ந்து அந்த ஓவியரை வளரவிடாமல் செய்கின்றனர். இதில் சிலர், தன் புகழுக்காக, போட்டோவையே சிற்சில வேலைகள் செய்து ஓவியமாக்கி ஏமாற்றவும் செய்கின்றனர்

ஆனால் ஓவியம் அப்படி அசலைப்பொல வரைவது மட்டுமல்ல. தன் அனுபவத்தை அந்த கோடுகளிலும், வண்ணங்களிலும் கொண்டுவருபவனே நல்ல ஓவியன்

-----

18. பொழுதுபோக்கு நிலையா, தொழில் பயன்பாடா? இதை சந்தைப்படுத்தி விற்பனை செய்யமுடிகிறதா?

ஓவியத்தை பொறுத்தவரை, பொழுதுபோக்காக கற்றுத்தேர்ந்து, தொழில்முறை ஓவியராகமாறி, சந்தைப்படுத்தவும் செய்கின்றனர். முக்கியமாக, தன் ஓவியம் உலக அளவில் கிடைக்கும் மேலான தகுதி கொண்டிருக்கிறதா, இல்லை இன்னும் சில அனுபவங்களை பெற வேண்டுமா என்பதை சோதனை செய்துகொள்ளவேண்டும். இப்போது இணையம் மூகமாக உலகம சுருங்கியிருக்கிறது. யார் எங்கிருந்தாலும், யாரோடும் தொழிலை, சந்தைப்படுத்துதலை செய்துகொள்ள இயலும். எனவே தொழிலாக செய்யும்பொருட்டு இதை சந்தைப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கின்றன. ஓவியம் பிறரை கவருமானால், கண்டிப்பாக அது விலைபோகும். ஆனால் அந்த நிலைக்கு வர நாம் தொடர்ந்து முயற்சிக்கவேண்டியது அவசியம். 

-----

19.தானாக இதை கற்றுத்தேர முடியுமா? என்ன வழி?

நிச்சயமாக முடியும் என்றே சொல்லுவேன். தானாக கற்றுத்தேர அவசியான எல்லா விசயங்களையும், பிறரின் அனுபவங்கள் மூலம் கற்றுக்கொள்ளலாம். இந்த ஓவியத்துறையில் வல்லவர்கள் தங்கள் கட்டுரைகளை, ஓவிய நுணுக்கங்களை, பழகுவதற்கான வழிமுறைகளை, நூல்களாகவும், வீடியோவாகவும் தனியாக விற்பனைக்கும், இணையத்திலும் தருகின்றர். சிலர் இதை தொழிலாகக்கூட செய்கின்றனர். ஆனால் ஏமாற்றி பணம் செய்பவர்களை தவிர்த்து, உண்மையான ஓவியர்களை, அவர்களின் படைப்புக்களால் அடையாளம் கண்டு, கற்றுத்தேர்ந்து யார் ஒருவரும் சிறப்பிக்க இயலும். 

-----

20. ஓவியம் குறித்த மன நிலை உலகநாடுகள், இந்தியாவில் எப்படியிருக்கிறது? 

பாராட்டதகுந்த அளவில் இல்லை. நான் கிண்டலாக சொல்லுவேன். இந்தியர்கள் மட்டுமே எல்லாம் தெரிந்தவர்களாக காட்டிக்கொள்வார்கள். 
“இது நான் இசைத்த பாடல்” என்று சொன்னால், “இதென்ன, நானும் அந்த காலத்தில் இதை விட அருமையான பாடல் இசைத்திருக்கிறேன்” என்று சொல்லுவார்கள். “இது நான் சமைத்த உணவு, சுவை பாருங்கள்” என்றால். “இதென்ன விசயம், நான் இதைப்போல ஒன்றை செய்யும்போது... ” என்று பதில் வரும். “இது நான் எடுத்த ஒளிப்படம், எப்படி இருக்கிறது” என்றால். “நான் என் பழைய கேமராவில், இப்படி எடுத்திருக்கிறேன்... இதில் முக்கியமாக...” என்று அறிவுரை ஆரம்பித்துவிடுவார்கள். இதைப்பொலவே ஓவியம் முதலான எல்லாவற்றிலும்.... 

உலக நாடுகளில் பெற்றோர்கள் குடும்ப சூழ்நிலைகேற்ற வேலை பார்த்தாலும், தங்கள் குழந்தை எதை விரும்புகிறதோ, அந்த விருப்பத்தின்படியே படிக்க ஆர்வமூட்டுகின்றனர். தான் நினைத்தை செய்யும் நிலை உலக நாடு குழந்தைகளுக்கு இருக்கிறது. இந்திய குழந்தைகளுக்கு, பெற்றோரின் ஆசைப்படி அவன்/அவள் ஒரு டாக்டராகவோ, ஒரு இஞ்சினியராகவோ மட்டுமே முடியும். தன் ஆசையை தன் குழந்தைமீது திணிக்கும் வன்முறைதான் இது. கேட்டால் பொருளாதார நிலையை சொல்லுவார்கள். பிடித்தவேலையை செய்தால் கிடைக்கும் நிம்மதியை தொலைத்துவிட்டு, கைபேசியிலும், இணையத்திலும், மது போதைகளிலும் தேடிக்கொண்டிருக்கும் இளைஞ தலைமுறைகளை நான் உதாரணம் காட்ட இயலும். 

குழந்தைகளுக்கு வழி காட்டுங்கள், பிடித்துதள்ளாதீர்கள் என்றே பெற்றோர்கள் கேட்டுக்கொள்கிறேன். 

-----

21. இந்த நிலை மாற என்ன செயலாம் என்று நினைக்கிறீர்கள்?

இந்த நிலைப்பாடுகளில் அரசு, நிர்வாகங்கள், தலைவர்களை எல்லாம் நான் குறைசொல்லி தப்பிக்க தயாரில்லை. இந்த உலகில் இன்னமும் பொழுபோக்கு எனும் மிகப்பெரும் தொழில் சிறந்து விழங்குகிறது. அதில் ஓவியமும் ஒன்றே. எந்த ஒரு விசயத்தையும் ஒரு ஓவியமாக தர, புரியாத ஒன்றையும் புரியவைக்கவும் இயலும். ஒரு திட்ட அறிக்கையை இன்னமும் ஒரு பென்சில், ஓவியம், காகிதம் இவற்றில் முடிக்காது, திட்டத்தில் இறங்க எந்த நிறுவனமும் தயாரில்லை. தன் நிறுவன ஊழியர்கள் மன அழுத்தத்திலிருந்துவிடுபட ஓவியம் கற்றுத்தரும் வகுப்புக்களை நடத்துகின்றனர். 

தொழில்முறை ஓவியராக மாற, ஓவியம் கற்றுத்தேர்தலின் பொழுது நிச்சயமாகவே கொஞ்சம் காலத்தை கொடுத்துத்தான் அனுபவத்தைபெற இயலும், ஆனால் மிக நிம்மதியான ஒரு வேலையாக, ஓவியம் இருப்பதை அறியலாம், அதை பிறருக்கு கற்றுத்தருவதையும் கூட தொழிலாக செய்யமுடியும். பெற்றோர்கள் தன் குழந்தையை பணம் செய்யும் கருவியாக மாற்றாது, அவனை/ அவளை, அவர்களின் தனித்தன்மையை மதித்து அவர்களுக்கான வழிகாட்டியாக இருக்கலாம். ஓவியத்தை தொழிலாக செய்யலாமா, வேண்டாமா என்பதை அவர்களே கூட முடிவு செய்யும் பக்குவத்திற்கு வர விடவேண்டும் என்பதும் என் வேண்டுகோள்.

-----

22. இந்த கேரிகேசர் கற்கும் மாணவர்களுக்கும், தொழில்சார் ஓவியர்களுக்கும் உங்கள் கருத்தாக என்ன சொல்லுவீர்கள்? 

கற்றது கையளவு, கல்லாதது உலகளவு என்று ஒளவை சொல்லிச்சென்றதுபோல கேரிகேச்சரில், உங்களை எல்லாவகைகளிலும் சோதனை செய்துபார்க்கும் கட்டுப்பாடற்ற நிலை உண்டு. நான் இப்படித்தான் வரைவேன் என்று வட்டம் போட்டுக்கொள்ளாமல், நான் இப்படியும் வரைவேன் என்று தன் நிலை மாற்றிகொள்ளவும் தயாராக இருக்கவேண்டும். ஆனால் நிச்சமாக உங்களின் பாணி மாறவே கூடாது. 
தயக்கமே இல்லாமல் ஒரு கோடு போட்டு பழகவேண்டும், அதில் நிச்சயமற்ற தன்மை இருக்கக்கூடாது. பிற ஓவியர்களோடு கருத்துவேறுபாடின்றி பழகி, ஓவிங்கள் பற்றிய கருத்துக்களை பகிர்ந்துகொள்ளவேண்டும். எப்போதுமே பயிற்சியையும், கற்றலையும் நிறுத்துதல் கூடாது. அப்படியிருந்தால்தான் தொழில்முறை ஓவியராகவும் சிறக்கமுடியும்.

------


பகுதி ஒன்று, இரண்டு முந்தைய பதிவுகளில் கிடைக்கும்.

THE EVOLUTION OF ART BY CARICATURIST-02


சூரியக்கதிர் மாத இதழுக்கு நேர்காணல் கேள்விகளும், பதில்களும்
பகுதி 02

8. நீங்கள் விரும்பிய கேலிச் சித்திரம், அதை வரைந்தவர்கள் என 5 நபர்களைப் பற்றி குறிப்பிடுங்களேன்.

Jack Davis - இவரை ஏற்கனவே பார்த்தோம், தன் 90 வயதில்தான் “நான் இப்போதும் வரையமுடியும், ஆனால் நான் எதிர்பார்த்ததுபோல் இல்லை” என்று சொல்லியவர், தன் பென்சிலுக்கு ஓய்வு கொடுத்துள்ளார்.

Magesh - கேரளாவை சேர்ந்தவர் - வழக்கமான ஓவிய முறை, கணிணி வழியாக ஓவியம் வரவதிலும் தேர்ந்தவர். அனிமேசன் நிறுவனத்தில் தலைமை பணியில் இருக்கிறார்.

Tiago Hoisel - சாவ் பாலோ, பிரேசில் நாட்டை சேர்ந்தவர்- ஓவியராகவும், தலைமை வடிவியலாளராகவும்  பணியிலிருக்கிறார் 
https://www.behance.net/hoisel

Lumen - க்ரெச்னயா பெடரிய, ரஷ்யா நாட்டை சேர்ந்தவர் - ஓவியராகவும், தலைமை வடிவியலாளராகவும், கார்டூனிஸ்டாகவும் பணியிலிருக்கிறார்

Anthony Geoffroy - லியோன், பிரான்சு நாட்டை சேர்ந்தவர். ஓவியராக பணியிலிருக்கிறார்

-----

9. அரசியல்வாதிகள், கேலிச்சித்திரம் குறித்த சுவையான விஷயங்கள் ஏதும் உள்ளனவா?

அரசியல் விமர்சன கேலிசித்திரங்களில் பொதுவாகவே நான் பயந்தாங்கொள்ளி... வீட்டிற்கு ஆட்டோவருமே அதனால்தான். சில பத்திரிக்கைகளில் அப்படி கேட்டுக்கொண்டனர். ஆனால், பத்திரிக்கைகளில் பணிபுரிந்தால் மட்டுமே “அப்படியான” ஓவியங்கள் தர இயலும் என்று சொல்லி தவிர்த்துவிட்டேன்.

கேரிகேச்சர், கார்ட்டூன் இவைகளையெல்லாம் இயல்பான, நகைச்சுவையாக புரிந்துகொள்ளும் தன்மை வட்டத்தலைவரிலிந்து, நாட்டின் முதல்குடிமகன் வரை இல்லை எனலாம். அதனால் அந்த “அதீத முயற்சி” இதுவரை செயததில்லை, இனி செய்யவும் ஆர்வமில்லை.

அதைப்போலவே சினிமா புகழ் மனிதர்களையும் நான் வரைவதில்லை. ஆனாலும் ரசிகர்களின் வற்புறுத்தலுக்கும், எனக்குப்பிடித்த நபர்களையும் நான் வரைந்திருக்கிறேன். அப்படி, திரு. பாலுமகேந்திரா அவர்களை வரைந்து வெளியிட்டபோது, என் நண்பர் திரு. சுகா, அந்த ஓவியத்தை திரு. பாலுமகேந்திரா அவர்களிடம் அழகாக, பரிசாக மாற்றி சேர்ப்பித்துள்ளார். இந்த ஓவியம்வரைந்தவரை பாராட்டியே தீரவேண்டும் என்று திரு. பாலுமகேந்திரா சொல்ல, நான் அந்த நேரங்களில் சுகாவிடம் கைபேசி என் பகிர்ந்துகொள்ளாததால், திரு. பாலுமகேந்திராவின் பாராட்டை ஒரு வீடியோவாகவே பதிந்து எனக்குத்தந்தார். எதிர்பாராத இந்த மிகப்பெரும் பாராட்டால் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். என் ஓவியத்தின் மூலமாக தான் பெருமையடைவதாக திரு. பாலுமகேந்திரா சொல்லி வாழ்த்தினார். 

திரு ஏபிஜெ. அப்துல்கலாம், குடியரசு தலைவராக இருந்தநாட்களில், அவரின் ஓவியமும், கவிதையும் அனுப்பிவைத்ததற்கு, பாராட்டி கடிதம் அனுப்பினார். அதுபோலவே அமெரிக்க குடியரசு தலைவராக திரு. பில் கிளிண்டன் இருந்தநாட்களில், என் ஓவியத்தைபாராட்டி அவரின் பாராட்டுக்கடிதம் கிடைத்தது.  

----

10. உங்கள் கேலிச்சித்திர அனுபவத்தில் நீங்கள் ரசித்த சில அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

எதேனும் ஒரு நிகழ்ச்சியில், நேரடியாக நபர்களை கேரிகேச்சராக வரைந்துதரும்பொழுதுமட்டுமே அவர்களின் ரசனைகளை உடனுக்குடன் அறியமுடியும். அப்படி நிறைய உண்டு.

ஒரு திருமண நிகழ்வில் வரைகிறேன். அந்த திருமண சடங்கில் தலைமை புரோகிதர், தன் வேலைக்களுக்கு இடையில் என்னை கவனித்திருக்கிறார். சடங்கு முடிந்தவுடன் என் அருகில் நின்றுகொண்டு நான் வரைவதை பார்த்துக்கொண்டிருந்தார். பிறகு.. “ஆஹா. என்ன அற்புதமாக வரைகிறீர்கள்?!” என்று சொல்லியவாறே என் கைகளை தன் கைகளோடு இணைத்து குலுக்கி, என் கைகளுக்கு முத்தம் கொடுத்தார். “சரஸ்வதி குடியிருக்கா” என்று சொல்லிக்கொண்டார். அதோடு தன்னை வரையச்சொல்லி எதிரில் அமர்ந்தார். வரைந்து கொடுத்ததும், அவரின் சீடர்களோடு தன் ஓவியத்தை காட்டி சந்தோசத்தை பகிர்ந்துகொண்டு எனக்கு நூறு ரூபாய் அன்பளிப்பாக தந்தார். நான் இப்படியான நிகழ்வுகளில் இதைஎல்லாம் ஏற்றுக்கொள்வதில்லை. எனவே உங்கள் அன்புபோதும் என்றேன். மிகுந்த வற்புறுத்தலினாலும், விழாவிற்கு அழைத்தவரும் “இதெல்லாம் கொடுப்பிணை சார், வாங்கிக்கங்க” என்று சொன்னபிறகே பெற்றுக்கொண்டேன்.   

ஒரு இல்லத்தில் நிகழ்ந்த திருமண வரவேற்பு நிகழ்வில், குழந்தைகளுக்கு கேரிகேச்சர் வரைந்து தந்துகொண்டிருந்தேன். எல்லோருமெ தன்னுடைய கேரிகேச்சரை கையில் வைத்துகொண்டு சிரித்து, கேலி, கிண்டல் செய்துகொண்டிருப்பதைகண்ட ஒரு பெண் (ஐம்பது வயதிற்கு மேலாக இருக்கலாம்) தயங்கியவாறே என்னிடம் வந்து எனக்கும் வரைந்து தருவீர்களா? என்று கேட்டார்... “இப்படிகேட்கவே தேவையில்லை, உடனே அமருங்கள்” என சொல்லி எதிரே அமரவைத்து கேரிகேச்சர் ஓவியம் தந்தேன். மிகுந்த மகிழ்ச்சியோடு வாங்கிச்சென்றார்.

ஒரு மருத்துவ கூட்டத்தில் வந்திருந்த மருத்துவர்களுக்கு, கேரிகேச்சர் வரைந்து தந்துகொண்டிருந்தேன். ஒரு மருத்துவர், விழா அமைப்பினர் வற்புறுத்தலுக்காக என் எதிர் அமர்ந்தார். என்னைப்போலவே முன் தலையில் அவருக்கு முடியில்லை, நீள் சதுர முகம், படர்ந்த மீசை, அடர்த்தியான புருவங்கள் இப்படி சில அடையாளங்களை கொண்டிருந்தார். இவரை உட்காரவைத்துவிட்டு அமைப்பாளர்கள் அடுத்த மருத்துவரிடம் பேசிக்கொண்ட்டிருக்க, நான் இவரை வரையும் முன்பே, “இயல்பாக இருங்கள், இது கேலிக்காக மட்டுமே வரையும் ஓவியம், இதிலிருக்கும் நகைச்சுவையை ரசியுங்கள்” என்று சொல்லிவிட்டு வரைய ஆரம்பித்தேன். முழுதும் வரைந்து அவரிடம் தந்ததும், ஓவியத்தைப்பார்த்து அவர் முகம் சுளித்ததை கண்டேன், அதோடு சட்டென எழுந்துவாறே அந்த ஓவியத்தை ஒரு கையால் நான் கவனிக்கமாட்டேன் என்ற நினைப்பில் “கசக்கி” தன் மறுகையில் மறைத்துக்கொண்டு போய்விட்டார். நிச்சயமாக அது அங்கே இருந்த குப்பைக்கூடைக்கு போயிருக்கலாம். 

-----

11. கேரிகேச்சரிஸ்ட் என்னும் சொல் நம் தமிழ் மக்களிடையே பரவலாகப் போய் சேர்ந்திருக்கிறதா?

கேரிகேச்சர், ஆர்டிஸ்ட் என்ற இணைப்பே கேரிகேச்சரிஸ்டாக வந்திருக்கின்றது. கார்டூன், கார்டூனிஸ்ட் என்ற நிலையில் இல்லாவிட்டாலும், இளையர்களிடம் கேரிகேச்சர் மிகுந்த ஆர்வத்தை ஏற்படித்தியிருக்கிறது. இந்திய அளவில் இப்போது இதை கற்க, வெளிப்படுத்த, சோதனை ஓவியங்கள் தர ஆரம்பித்திருக்கின்றனர். இதனால் இந்த கேரிகேச்சரிஸ்ட் என்னும் சொல்லும் பரவ ஆரம்பித்திருகிறது. மக்களுக்கு சுலபமாக சேர்க்கக்கூடிய நிலையிலிருக்கும் பத்திரிக்கைகள், வார இதழ்கள், தொலைக்காட்சிகள் கேரிகேச்சர் என்ற விசயத்தை சேர்த்துக்கொள்வதில்லை. ஒரே ஒரு இதழ் வாராவாரம் ஒரு கேரிகேசரை தந்து கொஞ்சம் தெரியப்படுத்திக்கொண்டிருக்கிறது. 

நான் என் நண்பர்களுக்கு அன்பளிப்பாக கேரிகேச்சர் வரைந்து அதை இணையத்தில் பகிவர்தன் மூலம், நண்பர், அவர்தம் நண்பர் என்று பலபேருக்கு “இந்த கேரிகேச்சர், கேரிகேச்சரிஸ்ட்” சென்று சேர்கிறது. பேஸ்புக், டிவீட்டர் மூலமாக பரவலாகிவருகிறது.

எதாவது ஒரு தமிழ்சினிமாவில், ஒரு கதாநாயகன், “கேரிகேச்சரிஸ்டாக” நடித்தால் தமிழ்நாடெங்கும் புகழ்பெற்ற சொல்லாகிவிடும் என்று நினைக்கிறேன். 

-----

13. இப்போது சட்டென்று உங்களை ஒரு கேலிச்சித்திரம் வரையச் சொன்னால், வரைவதற்கு எந்த ஆளுமையைத் தேர்ந்தெடுப்பீர்கள்

என்னையே உதாரணமாகக்கொண்டு வரைந்துவிடுவேன். நான் நடத்தும் பயிற்சி வகுப்புகளில் கூட நான்தான் எனக்கு பரிசோதனை எலி. பிறரை வரைந்தால் “இதென்ன இப்படி இருக்கு” “நானா இது?” “கொஞ்சம் இந்த மூக்கை திருத்துங்கள்” “கன்னம் ரொம்ப குண்டாயிருக்கு” “உதடு இன்னும் சிறுத்துவரவேண்டும்” என்று எனக்கு பாடம் சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள். 

-----

14. உங்கள் கேரிகேச்சர் ஓவியங்களில் மாற்றங்களை ஏற்றுக்கொள்வீர்களா? அப்போது உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?

நான் நிகழ்ச்சிகளில் நேரடியாக நபர்களை வரையும் கேரிகேச்சர்களில் திருத்தங்கள் சொன்னால் “இது அப்படித்தான் இருக்கும்” என்று சொல்லிவிடுவேன். அந்த திருத்தங்கள் சொல்பவருக்கு “கேரிகேச்சர்” பற்றிய விழிப்பு இல்லாதிருக்கும், அதுதான் உண்மை. சிலர் “எனக்கு இந்த கேலி வேண்டாம் சாதரணமாக வரைந்துதாருங்களேன்” என்று கேட்டால் அதுபடி  வரைந்துகொடுத்து அவர்களை திருப்திபடுத்துவேன். குறைசொல்லும் நிலையில் இதுவரையிலும் நான் கோபம் கொண்டதில்லை. “கேரிகேச்சர்”குறித்து விளக்கமளித்து, அது ஏன் இப்படி வரையப்படுகிறது என்று புரியவைப்பேன்.

ஒரு நண்பர் என்மீது மிகுந்த கோபத்தில் “ஒரு படைப்பை குறை சொல்லும் மனிதர்களோடு எதற்கு வேலை செய்வது? பணத்தை திருப்பி கொடுத்துவிடவேண்டியதுதானே. நான் அப்படித்தான், குறை சொன்னால் பொறுத்துக்கொள்ளமாட்டேன்” என்றார். ஆங்கிலத்தில், சில குறை சொல்லும் மனிதர்களை மற்றவர்கள் திருத்தும் நிலைக்கு, “அவனுக்கு கற்றுக்கொடுத்தேன்” என்பார்கள். அதுபோலவே தெரியாத ஒன்றை தெரியப்படுத்தி விளக்கமளித்தலும், சரி செய்தலும் நிச்சயம் வேண்டும்

தொழில்சார்ந்த கேரிகேச்சர்களிலும், இப்படி நடக்கும். பலமுறை திருத்தங்கள் கேட்டு பெறுவார்கள். இதனால் இந்த திருத்தங்களுக்கும் தனி விலை சேர்க்கும் நிலையும் இருக்கிறது. அவர்கள் பணம் கொடுத்துவாங்குவதால் அந்த திருத்தங்களை நாம் செய்யவேண்டியிருப்பது உண்மை. இத்தகைய திருத்தங்களால் ஓவியன் குறைபட்டுபோவதில்லை மாறாக அனுபவமே பெறுகிறான்.

-----

15. இப்போதும் கேலிச்சித்திரம் வரையக் கற்றுக்கொள்ளும் விருப்பில் மக்கள் இருக்கின்றனரா? கேலிச் சித்திரம் வரையக் கற்றுக்கொள்ள விரும்புபவர்கள் என்ன செய்ய வேண்டும்? யாரைப் பார்க்க வேண்டும்? நீங்கள் வகுப்பு எடுக்கிறீர்களா?

குழந்தை பருவத்தில் எல்லா குழந்தைகளும் ஓவியம் வரைய ஆர்வமாகவே இருக்கிறார்கள். “இனிமே படம் வரைஞ்சே, கையை ஒடைச்சிபோடுவேன்”என்ற அம்மாவின் பயமுறுத்தலால், அந்த குழந்தை பென்சிலே எடுப்பதில்லை. ஸ்கேல்வைத்து கோடுகள் போடுவதை தவிர. அந்த கோடு போடவே, ஓவியம் கற்கலாம் என்பதும், ஸ்கேல் இல்லாமல் நேரான கோடுபோடும் அறிவை அதுதரும் என்பது அம்மாவிற்கு தெரிவதில்லை. காரணம், அவங்க அம்மாவும் அவங்களை அப்படித்தான் சொல்லியிருப்பார்கள். ஓவியம் படிப்பை கெடுப்பதாக ஒரு நினைப்பு அவர்களுக்கு. இதனாலேயே தனக்குப்பிடித்த விசயத்தைசெய்யவே குழந்தைகள் தயங்குகிறார்கள். காலப்போக்கில் தன் குழந்தை தவிர்த்துவிட்ட ஒன்றை, பள்ளியில் தரப்படும் ஓவியத்தை, தன் பிள்ளை ஒழுங்காகசெய்யவில்லையெ என்று கவலை கொண்டு, ஒரேநாளில் ஓவியம் கற்க, எங்களை மாதிரி ஓவியர்களிடம் அழைத்துவருகின்றனர். 

இந்தவயதிலும் நான், சக ஓவியர்களில் படைப்புக்களிலிருந்து ஓவியம் கற்றுத்கொண்டுதான் வருகிறேன். இப்படி இருக்கையில் உடனெ ஓவியம் கற்றுக்கொள்ளுதல் முடியாத ஒன்று. பள்ளி மேல்நிலை இறுதிமுடித்தவர்கள். சென்னை, கும்பகோணம் ஓவிய கல்லூரியில் சேர்ந்து படிக்கலாம். இதில் ஆராய்ச்சி பட்டபடிப்புவரை செல்லமுடியும். ஆனால் இதற்கு அவர்கள் நடத்தும் ஓவிய பரிட்சையில் தகுதி பெறவேண்டும்.

கேரிகேசர், கார்டூன் போன்ற கேலிசித்திர வகுப்புகள் தனியாக நடத்தப்படுவாதாக தெரியவில்லை. ஆனால் ஒருநாள், இரு நாள் பயிற்சி முகாம் நடத்தப்படுகின்றன. ஓரளவுக்கு ஓவியம் படைக்கத்தெரிந்தவர்களே இதில் கலந்துகொண்டு பயன்பெற முடியும். ஆனால் கேலிசித்திரம் குறித்த ஒரு அறிமுகத்திற்கு இது உதவும்.

நான் என் அலுவலகத்தில் அடிப்படை ஓவியங்கள் முதல் வண்ணக்கலவை ஓவியங்களை வரை கற்றுத்தருகிறோம். கூடுதலாக ஆர்கிடெக்ட் படிக்கதேவையான தகுதி தேர்வுக்கான (NATA) வழிமுறைகளும் கற்றுத்தருகிறோம்.

ஓவியம் கற்க மட்டுமல்ல. அதுதொடர்பான கேள்விகளுக்கும் பதில்தர என்னை யாவரும் தொடர்புகொள்ளலாம்.

-----

16. இந்த ஓவியவகை கற்றலில் அடுத்த நிலை என்ன?

கேரிகேச்சர் கற்றலில் சில அடிப்படை விசயங்கள் உள்ளன. ஏறக்குறைய அடிப்படை ஓவியம் கற்றலின் அதே பாடங்களே இதற்கும் போதும். ஆனால் அதை வெளிப்படுத்தும் நிலையில் மட்டுமே மாற்றம் கொண்டிருக்கிறது. இதை ஓவியமாக செய்யும் அதேவேளையில் தனக்குக்கிடைத்த ஓவ்வொரு முகங்களையும் வரைந்து பழகி, உதாரணமாக ஒரே முகத்தை ஒரு பத்துவிதமாக, என்னென்ன செய்தால் என்னென்ன மாற்றங்களை அந்த முகம் தருகிறது என்கிற முயற்சியில் ஈடுபட்டு அனுபவம் பெறவேண்டும். பிறர் கேரிகேச்சர் ஓவியங்களை கண்டும், அதில் அவர் தருகிற விசயங்களை பழகவேண்டும், ஒருபோதும் அதேபோல செய்யாது, தன் அனுபவத்தை அதில் தர வேண்டும். கற்றல் எல்லையில்லாதது.

பகுதி ஒன்று முந்தைய பதிவிலும், மூன்றும் அடுத்த பதிவுகளில் கிடைக்கும்.

THE EVOLUTION OF ART BY CARICATURIST-01


கடந்த நவம்பர் மாதம் 2015ல், சூரியகதிர் மாத இதழில் வெளியான எனது பேட்டியை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்... இதில் பிரசுரமாகாத சில கேள்வி-பதில்களும் இணைந்திருக்கின்றன.

சூரிய கதிர் இதழ் ஆசிரியருக்கும், கேள்விகளால் எனக்குள் என்னைத்தேடச்செய்து பதில்களை தரச்செய்த கவிஞர், எழுத்தாளர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர் திருமதி. மதுமிதா அவர்களுக்கும் நன்றி.

சூரியக்கதிர் மாத இதழுக்கு நேர்காணல் கேள்விகளும், பதில்களும்
பகுதி 01

1. ஓவியம் வரைதல் என்பதை எந்த வயதில் ஆரம்பித்தீர்கள்? நீங்கள் வரைந்த முதல் ஓவியம் உங்களுக்கு நினைவிருக்கிறதா? 

என் ஆறுவயதுகளில் யானை வரைந்தது நினைவில் நிலைத்திருக்கிறது என்பதால், அதற்கு முன்பே கூட வரைய முயற்சித்திருக்க வாய்ப்புள்ளது. என் தந்தை பொழுதுபோக்காக சில ஓவியங்கள் வரைவதை கண்டு இந்த ஆர்வம் வந்திருக்கலாம். காலப்போக்கில், ஒவியத்தில் நான் ஆர்வமாயிருந்ததைக்கண்டு, எந்ததடையும் செய்யாது, அவரே சில திருத்தங்கள் சொல்லித்தந்ததும் உண்டு. ஆனாலும் நான் தனித்து நிற்க முயற்சித்த காலங்களிலேயே அவர் இல்லை.

நான் என் இளமைக்காலம் முதலே மிகச்சுதந்திரமாக உணர்ந்தேன். என் ஒரு சகோதரிகள். என் சகோதர் என்னை எந்த விதத்திலும் கட்டுப்படுத்தியது இல்லை. இதனால் என் எல்லா ஆர்வங்களுக்கும் நல்ல தீனி கிடைத்தது... ஓவியத்தில் ஒரு முழுமை கிடைக்க உதவியது.

-----

2. சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் என்னும் பழமொழிப்படி, ஆர்வம் இல்லையென்றாலும் வரைய வரைய தான் சித்திரம் வருமா, வரையும் ஆர்வம் இருந்தாலே தானாக ஓவியம் வரைய வந்துவிடுமா?

நாம் எந்த மொழியிலும் எழுதுகிற எழுத்துக்கெல்லாம் ஓவியமே ஆதாரம். அந்த ஓவியத்தின் இன்னொரு பரிணாமம் தான் எழுத்தாக உருமாறியிருக்கிறது. இன்னமும் சீன, பாரசீக, ஜப்பான எழுத்துக்களில் வினைச்சொல்லுக்கு ஆதாரமாக எழுத்துருவை காணமுடியும். ஆக நன்றாக எழுதுபவரே கூட ஓவியம் வரையவும் முடியும். நாம் பொதுவாகவே மிக தெளிவாக, கசங்களில்லாத, உயிர்ப்பாக வரைவதுதான் ஓவியம் என்ற முடிவுக்கு வருகிறோம். அப்படியில்லவே இல்லை. ஒரு ஓவியத்திற்கான வரையறை எதுவுமே கிடையாது. குழந்தையின் கிறுக்கலும் ஓவியமே. அந்த கிறுக்கல் உருவமாக மாற்றமடைவது பயிற்சியினால் கிடைக்கும். அந்த பயிற்சி ஆர்வமிருந்தால் மட்டுமே கிடைக்கும்.

சில கலைகள் சொல்லிக்கொடுக்காமல் வரும், அதில் ஓவியம் முதன்மையானது. தானாக கற்று, தனித்து நின்று ஓவியராக வெளிப்படுவர்கள் அதிகம். நானும்கூட அதில் ஒருவனே...

பிக்காசோ சொன்னது போல, பிறக்கும் நிலையில் எல்லோருக்குள்ளும் ஓவியனிருக்கிறான், ஆனால் தன்னை ஓவியனாக நிலை நிறுத்துவது தொடர்ந்த பயிற்சிகளால் மட்டுமே.

-----

3. ஓவியத்தின் வகைகளில் இயற்கை, பூக்கள், விலங்குகள், மனிதர்கள்  என சித்திரம் தீட்ட எத்தனையோ பிரிவுகள் இருக்கையில்,  ஒரு ஓவியருக்கு ஒரு பிரிவைத் தேர்ந்தெடுக்கத் தோன்றுவது அவரின் ஆர்வம், விருப்பம் சார்ந்த விஷயம் மட்டுமா? அல்லது இயற்கை பிறவியில் அவருக்கு அளித்த கொடையாக அதைப் பார்க்க வேண்டுமா?

ஓவியம், அடிப்படை ஓவியம், காண்பதை அப்படியே வரைதல், தன் அனுபவத்தை அதி ல் சேர்த்தல், கருப்பொருளாக வரைதல், மனதில் தோன்றும் உணர்வுகளின் அடிப்படையில் வரைதல் இப்படி பல பிரிவுகளில் ஒருவர் கற்றுத்தேரவேண்டிவரும். அந்தந்த வயது, அனுபவம், சொல்லித்தரும் ஓவிய ஆசிரியர் இப்படியும் அவர்களின் ஆர்வம் தூண்டப்படும், தன் ஓவிய வெளிப்பாடுகளில், எளிதான, வேகமான, தெளிவான கருத்தை சொல்லும் ஓவியங்களை வகைப்படுத்தி, இது எனக்கு நன்றாக செய்ய முடிகிறது என்ற நிலையிலேயே தன் பாணியை தேர்ந்தெடுக்கின்றனர்.

உலகின் பொருளாதார நிலையில் ஓவியன் நிலைமை, கொஞ்சம் கடினமானதே. இதனாலும் தான் நினைத்ததை, தனக்கு தன் பிழைப்புக்கு உதவும் வகையிலும் பாணியை தயார்படுத்திக்கொள்கின்றனர். நான் கேரிகேச்சர் எடுத்துக்கொண்டதற்கு, இதை யாரும் அதிகமாக இங்கே இந்தியாவில் செய்யாததும், எனக்கு இது சுலபமாக கைவரப்பெற்றதும் காரணமாகும். பொழுதுபோக்காக செய்ய ஆரம்பித்தது என் வயிற்றுபாட்டுக்கு உதவும் நிலைக்கு உயர்ந்தது. இன்று இந்த கேரிகேச்சர் ஓவியத்தொழிலே என் முழு நேர பணியாகும்.

இயற்கையாகவும் குறிப்பிட்ட சிலவகை பாணியை கொண்ட ஓவியர்களும் உள்ளனர். இது அவர்களின் மூதாதையரின் ஆர்வத்தால், அவர்களுக்குள் விளைந்த நிலையாகும்.

-----

4. சித்திரம் தீட்டுதல் என்பது பல பிரிவுகளைக் கொண்டதாக இருக்கையில் நீங்கள் கேலிச் சித்திரம் வரைவதை எப்படி ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்?

2006 ம் ஆண்டு வரை, பார்ப்பதை அப்படியே வரைவதையே செய்துவந்தேன். கிடைக்கும் காகிதத்தில் வரைந்து நண்பர்களிடம் காட்டி பெருமைசெய்துகொள்வதைத்தவிர ஏதும் செய்ததில்லை. சிலருக்கு அன்பளிப்பாக அந்த ஓவியங்களை தந்துவிடுவதும் உண்டு, ஓவிய சந்தை இருப்பது தெரிந்தாலும் அதில் நுழைய சில தயக்கங்கள் இருந்தது. இதனால் எனக்கு கிடைத்த கணிணி வரைகலை மட்டுமே ஆரம்ப நாட்களில் தொழிலாக செய்துவந்தேன்.

ஆனாலும் வேலைகளோடு 2001ம் ஆண்டுமுதலே இணையம் எனக்கு அறிமுகமாகி, 2003ம் ஆண்டுகளில் இணையத்தில் அதிக நேரம்  வேலையோடு வேலையாக செலவிட வாய்ப்பு வந்தது. மேற்கு நாடுகள் எப்போதும் நம்மை விட எந்த நிலைகளிலும் ஒரிரு ஆண்டுகள் முன்னிலையிலேயே இருப்பார்கள். அப்படி காண்கையில் கார்டூன் போல், ஆனால் வித்தியாசமாக, ஒரு மனிதரின் அடையாளங்களை மாற்றாது, கொஞ்சம் மிகைப்படுத்தி, கேலியை மையமாகக்கொண்ட ஒரு ஓவியத்தை ஆங்கில இணைய பத்திரிக்கைகளில் காணமுடிந்தது. அதன் கேலி எனக்கு பிடித்திருந்தது.

எப்போதும் ஒரு வித்தியாசமே, புதிய கவனத்தை உருவாக்கும். அதனால் அந்த கேரிகேச்சரை எப்படி செய்திருக்கிறார்கள் என்று ஆராயமுனைந்தேன். மேலும், மேலும் இந்த கேரிகேச்சர் குறித்து பார்த்தும், அதைப்போல வரைந்தும் சோதனை செய்துகொண்டேன். என் ஆரம்பகால கேரிகேச்சர்களில், நானே சில சோதனைகள் செய்து பார்த்துக்கொள்வேன். அதில் விகாரம் அதிகமாக இருப்பதை காணலாம், பற்கள் வரிசை, உதடுகள், காதுகள், மூக்கு, கண்கள் பெரிதாக வரைந்து தள்ளினேன்.

ஆனால் ஒரு ஒளிப்படம் எடுத்தாலே “இது என்னை மாதிரி இல்லை” என்று புறந்தள்ளும் “ஓவிய ஆர்வலர்கள்” மத்தியில் இது எடுபடாது என்பதை நான் உணர்ந்து,  கேலி செய்தாலும், அவர்களுக்கு பிடிக்கும் வகையில், அவர்களை சற்றே மிகைபடுத்தும் நிலைக்கு பழகி அதுவே என் பாணியாக வைத்து பயணிக்கிறேன். சந்தைப்படுத்துகிறேன்.

-----

5. தன்னைப் போன்ற அழகான ஓவியத்தை விரும்பும் மக்கள், போட்டோ எடுப்பதை விடவும் ஓவியம் வரைந்து பெற்றுக் கொள்வதில் ஆர்வமாகவும், தன்னுடைய அழகிய முகத்தை கேலிச்சித்திரமாக மாற்றிப் பார்ப்பதில் விருப்புடன் இருக்கிறார்களா?

வழக்கமாக நான் சொல்வதுண்டு, “எல்லோருக்கும் கேரிகேச்சர் ரொம்ப பிடிக்கும், அதில் தன் முகம் இல்லையென்றால் மட்டும்”.

முந்தைய பதிலில் சொன்னதுபோல, ஓவ்வொருவிதமான ஒளியில், ஓவ்வொருவிதமான பிண்ணனியில், வெவ்வேறு வகை லென்சுகளில் எடுக்கும் ஒளிப்படங்களில், நிச்சயமாகவே ஒருவரின் முகம் வெவ்வேறு தோற்றத்தில் இருக்கும். சப்ஜெக்ட், கேமரா, கேமராமென் என்ற பினைப்பு இருப்பதால் இது நான்தான் என்று வேறு வழியில்லாமல் ஏற்றுக்கொள்வார். சில திருமண போட்டோ ஆல்பம் பார்த்துவிட்டு, போட்டோகிராபரை ஏசும், அடிக்கக்கூட வரும் முட்டாள் கூட்டங்கள் உண்டு. அப்படி இருக்கையில் கையால் வரையும் ஓவியத்தை குறை சொல்லாமல் வாங்குபவர் பத்துக்கு ஐவர் என்று சொல்லலாம்.

ஒரு கண்காட்சியில் நான் நேரடியாக நபர்களை ஓவியம் வரைந்து கொண்டிருந்தேன். ஒரு பெண் வந்து, “சார், என்னை எவ்வளவு கிண்டல் செய்ய முடியுமோ அவ்வளவு கிண்டல் செய்து வரைந்துகொடுங்கள்” என்றார்... வரைந்துமுடித்ததும் “வாவ்” என்று சந்தோச கூச்சலிட்டு மகிழ்ச்சியோடு விடைபெற்றார். இந்த அளவுக்கு ஆர்வமாக இருப்பவரும் உண்டு. இந்த சந்தோசத்தைப்பார்த்த என் நண்பர்... “நானும் உங்களைப்போல ஓவியம் கற்று. இப்படி மக்களை சந்தோசப்படச்செய்யவேண்டும், கற்றுக்கொடுங்கள்” என்றார்...

-----

6. மக்களிடையே கேலிச்சித்திரத்துக்கான வரவேற்பு எப்படி இருக்கிறது?

பத்தாண்டுகளுக்கு மேலான என் பயணத்தில், கேரிகேச்சருக்கான நிலை அற்புதமாக இருக்கிறது... இது இன்னும் சிறக்கும். இந்த ஓவியங்களில் ஒவ்வொரு ஓவியருக்கும் ஒரு பாணியை கொண்டிருப்பதால் எது சிறந்தது என்று கூற இயலாது. தன்னால் முடிந்த சிறப்பை அந்த ஓவியத்தில் அளிக்கிறார்கள் என்பதே உண்மை. வாடிக்கையாளார்களுக்கு எது, எந்தவகையான பாணி பிடிக்கும் என்பதை பொறுத்து ஓவியர்களுக்கு வரவேற்பு கிடைக்கும். இந்த ஓவியங்களில் ஓவியத்திற்கான ஓவியரின் அனுபவம் மட்டுமே உயர்வாக இருக்கும். இதனால் அப்படியான ஓவியர்களின் ஓவியத்திற்கு தனித்த விலை இருக்கும். அந்தவிலை மிகசாதாரணருக்கு கடினமாக இருக்கும். இதனால் நகர்புறங்களில் மட்டுமே இது சிறப்பாகிறது,

ஆனாலும் இதன் கேலித்தன்மை எல்லோரையும் கவர்வதால் “எப்படியாயினும்” எங்களுக்கு இதுபோல ஓவியம் வேண்டும் என்று விரும்பி கேட்டுக்கொள்பவர்களும் உண்டு. குறிப்பாக இளம் காதலர்கள், திருமணம் செய்யப்போகும் ஜோடிகள் தங்கள் திருமணத்திற்கு இத்தகைய கேரிகேச்சர்களை தங்கள் பத்திரிக்கைகளில் சேர்க்கவும், பெரிதாக தங்கள் இல்லங்களில் வைத்துக்கொள்ளவும் மிக ஆர்வமாக இருக்கின்றனர். என் ஆரம்ப காலங்களில் என் வாடிக்கையாளர்கள், கடல்கடந்த நாட்டிலிருந்து கிடைத்தனர். இப்பொதோ மிக அருகிலுள்ள நகரங்களில் இருந்தும் ஓவியங்கள் பெற்றுச்செல்கின்றனர்.

-----

7. கேலிச்சித்திரத்துக்கு உங்களுக்கு ஆதர்சமாக யாரைக் குறிப்பிடுவீர்கள்?

எல்லோருக்கும் அறிமுகமான லியானர்டோ டா வின்சி கேரிகேச்சருக்கு இணையான, சில விகாரமாக, இயல்புக்குமாறான தோற்றம் கொண்டவர்களை வரைந்திருப்பதான ஓவிய குறிப்புக்கள் இருக்கின்றன.

எனக்கு குறிப்பாக சொல்லவேண்டும் என்றால், அமேரிக்க நாட்டிலிருந்து வெளியாகும் MAD (https://en.wikipedia.org/wiki/Mad_(magazine)) எனும் நகைச்சுவை பத்திரிக்கையில் 1952 ல் ஓவிய ஆசிரியராக பணியாற்றிய ஜேக் டேவிஸ் (Jack Davis) (https://en.wikipedia.org/wiki/Jack_Davis_(cartoonist)) அவர்களை சொல்வேன். நான் அப்போதெல்லாம் பிறந்திருக்கவில்லையாதலால், தற்காலத்தில் இணையம் வழியாக அவரின் படைப்புக்களை கண்டே அறிந்துகொண்டேன். இவரின் பாணி இப்போதைய காலத்தை ஒத்திருப்பதை அறியலாம்.


மேலும் விட்டிகிராபி (wittygraphy), பிகேன்ஸ் (Behance) என்னும் இணையதளகளில் நிறைய தொழில்முறை கேரிகேச்சர்கள் தங்கள் படைப்புகளை தந்துகொண்டிருந்தனர். அவர்களின் படைப்புகளிலிருந்தும் நான் கற்றுகொண்டு என் பாணியை வெகு சீக்கிரமே கண்டறிந்தேன். முக்கியமாக கேரிகேச்சரின் வெளிப்பாடு அந்த கதாபாத்திரத்தின் முக்கிய அடையாளங்களை கொண்டுவருவதான கேரிகேச்சர்களில் நான் கவனம் செலுத்துவேன். அப்படிப்பார்த்தால், என் ஆர்வத்திற்கு ஈடு கொடுத்தவர்களாக நிறைய ஓவியர்களை சொல்ல இயலும்...


பகுதி இரண்டும், மூன்றும் அடுத்த பதிவுகளில் கிடைக்கும்.



The Evolution of Art by Caricaturist


Past November 2015,
The Suryakathir, monthly magazine published my interview. I am happy to share with you this interview pages. Thanks to Suryakathir Editor and team and My friend Poet, Writer. Ms.Madhumitha, who bring out the answers from me (by my inner search)

Page 01 - Click image for see bigger

Page 03 - Click image for see bigger
Page 03 - Click image for see bigger

Caricaturist Sugumarje Interview


On past Friday, 02nd October 2015...
The New Indian Express made my Great! My interview published on "City Express" Trichy City Edition...

Click image - view bigger - easy to read


I am happy sharing with all. Thanks for supporters and Friends. I also thanks to my Parents,  Sisters, Brother and my wife. Sure they are superb supporter to me for reach this level.

You can read on this epaper too

http://epaper.newindianexpress.com/603004/The-New-Indian-Express-Tiruchy/02.10.2015#page/17/1

My Hearty Thanks to Reporter and Photographer at The New Indian Express Newspaper.

Caricature Workshop


கடந்த வாரத்தில் நடந்த கேரிகேச்சர் பயிலரங்கத்தில் நான் செயல்பட்ட சில விபரங்களை சொல்ல விரும்புகிறேன். இந்த கேரிகேச்சர் என்கிற ஒன்றை புது விசயமாக, இதை எப்படி செய்கிறார்கள், நாமும் இதை கற்றுக்கொள்ளவேண்டுமே என்ற ஆர்வத்தில் இன்றைய இளைஞ, இளைஞிகள் கூட்டம் இருப்பதை நாம் அறிவோம்.

அவர்களுக்காகவே இந்த கேரிகேச்சர் பயிலரங்கம் விழா குழுவினரால் நடத்தப்பட்டது. நான் பயிற்றுனராக கலந்துகொண்டேன்.


ஒரு கல்லூரியில், அதும் புகழ்பெற்ற கல்லூரியில் எனும் பொழுது, (NIT, TRICHY)கற்றுக்கொடுப்பவரும் திறமையானவராகவே இருப்பார் என்பது உண்மைக்கு ஏற்ப, நான் இந்த பயிலரங்கத்தை எப்படி பயனுள்ளதாக தரவேண்டும் என்பதற்காக, கடந்த ஒரு மாதகாலமாக என் வழக்கமான வேலைகளூடே, புது முயற்சிகளை செய்துபார்த்துக்கொண்டேன்.

பேஸ்புக், எண்ணற்ற நண்பர்களை எனக்கு தந்திருப்பதால், ஒரு புது முயற்சி என்றால், அதில் என்னோடு இணைந்திருக்கிற ஒரு நண்பருக்கு, பிறந்தாள் பரிசாக ஒரு கேரிகேச்சர் செய்தாலே, அந்த புது முயற்சிகளை செய்துபார்த்துவிடலாம்... அதை அவர் விரும்புகிறாரா என்பது உள்ளூர கேள்வி எழும்பினாலும், அவர் நிச்சயமாக வேண்டாம் ஒதுக்கமாட்டார். ஏனென்றால், அவரின் நண்பர்கள், அந்த ஓவியத்தை பார்த்து, அதிலிருக்கிற கிண்டலை புரிந்துகொண்டு அந்த நண்பரை மகிழ்ச்சிப்படுத்துவர், அதனாலே நான் தப்பித்துவிட சந்தர்ப்பம் கிடைத்துவிடும்...

பயிலரங்கத்தில் கேரிகேச்சர் இடம்பெறுகிறது என்பதை நன்கு விளம்பரப்டுத்திக்கொண்டதால் எதிர்பார்த்தபடி நிறைய மாணவ மாணவியர்கள் கலந்துகொண்டனர், என்றாலும் இன்னமும் நிறைய எண்ணிக்கையில் வந்திருந்தால் அமைப்பாளர்களுக்கு கூடுதல் திருப்தி அளித்திருக்கும்...




காலை ஒரு வகுப்பும், பிற்பகலில் ஒரு வகுப்புமாக இரண்டாக பிரித்து பயிலரங்கம் நடத்தினோம்... இரண்டு வகுப்புகளுக்கும் சிறியவித்தியாசம் அமைத்துக்கொண்டேன். முதல் பயிலிரங்கத்தில், சில மாணவர்கள், நான் கேரிகேச்சருக்கான விளக்கங்களை தந்துகொண்டிருந்தபோதே கொட்டாவி விட்டதை காணமுடிந்தது. சில கவனம் பிசகி, வாயடைக்கப்பட்டிருந்த கைபேசியில் சில ஒளிப்படங்களை பார்த்து அவர்களாகவே வரைய முனைந்தது அறிந்தேன்... இதனால் முதல் வகுப்பில் அவர்கள சோர்வுறச்செய்த விசயங்களை அடுத்தவகுப்பில் தவிர்த்துவிட்டேன்...

அடுத்து நான் இதுவரை என்ன செய்திருக்கிறேன், என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்று சொன்னதோடு நிறுத்திக்கொண்டேன். நான் என் கைபேசியிலும், கைபலகையிலும், கணிணியிலும் எடுத்துவைத்திருந்த எண்ணற்ற கேரிகேச்சர்களை காட்டவே இல்லை. அவற்றையெல்லாம் காட்டும்பொழுது, ஒரு திறமையாளன் செய்த ஓவியமாகவே அவர்களுக்குப்படும், கூடவே இதை காண்பித்து என் தற்பெருமையை காட்டிக்கொள்வதாகவும் தோன்றும். இதைப்போல நான் செய்யமுடியுமா என்று அவர்களை பயமுறுத்துவதாகவும் அமையலாம்...

ஒரு கோடுக்கூட மிகச்சரியாக வரையத்தெரியாத, கற்றுக்கொள்வதற்காக வந்திருக்கும் அவர்களுடைய தன்னம்பிக்கையை வலுவூட்ட நினைத்தே, அந்த பயிலரங்கள் முழுவதும் ஒரு வெற்றுத்திரையில், ஒவ்வொன்றாக வரைந்து, வரைந்தே அவர்களுக்கு விளக்கினேன்.

சாதாரணமாக ஒரு கோடு போடுவதற்கும், தன்னபிக்கையோடு கோடுபோடுவதற்கும் வித்தியாசத்தை, வந்திருந்த எல்லா மாணவ, மாணவிகளுக்கும் அவர்களுடைய பயிற்சி ஏட்டில் வரைந்து காட்டி, அதையே அவர்களையும் தொடரச்செய்தேன்.

கை நடுங்காமல், அழுத்தியும், லேசாகவும் கோடுகள் போடுவதற்கான பயிற்சிகளை கொடுத்தேன். இயற்கையான பொருட்கள் எந்த மனித நெறிகளுக்கும் அடங்காத அமைப்பையும், மனிதன் உருவாக்கிய அனைத்தும் வரையறைக்குட்பட்டே இருப்பதையும் விளக்கினேன்.

எல்லாவற்றிற்கும் ஒரு அடிப்படை தோற்றம் இருப்பதையும், அதில் ஒவ்வொரு அடையாளங்கள் இருப்பதையும் காட்டினேன். மனித முகம் பொதுவான ஒரு அளவீடை கொண்டிருப்பதும், அந்த அளவிலேயே எல்லா முகங்களையும் எப்படி அமைக்கலாம் என்பதையும் வரைந்தே காட்டினேன்.

முகத்தின் வகைகள், அதன் பகுதிகளை தனித்தனியாக வரைந்து அவர்களை பதிந்துவைத்துக்கொள்ள செய்தேன்...மாதிரியாக என் முகத்தையே பலவிதமாக வரைந்தும் காட்டினேன்.

ஒரு கேரிகேச்சர் ஓவியர் ஒரு முகத்தை எப்படி கவனிக்கிறார்? என்னன்ன விசயங்களை எடுத்து, தன் ஓவியத்தில் மிகைப்படுத்துகிறார்? இதில் நான் எந்த அளவில் அதை தருகிறேன்? ஒரு நபரை கேரிகேசராக வரைந்தால் அவருக்கு பிடிக்கிறதா இல்லையா என்பதையும் நான் விளக்கினேன். ஒரு மாணவரையும், மாணவியையும் என் எதிரில் வைத்து, அவர்களின் முக அடையாளங்களை சொல்லி, அவர்களை அந்த நிமிடத்திலேயே கேரிகேசராக வரைந்து காட்டினேன்... எனக்கு பாராட்டாக கைத்தட்டுகளை அளித்தனர்...

தினமும், கண்ணாடியில் அவர்கள் முகத்தை அவர்களே பார்த்துக்கொள்வதால், அந்த முகத்தில் உள்ள அடையாளங்களை அறியச்செய்து, அதையே நீங்கள் ஓவியமாக்குங்கள் என்று பயிற்சி செய்ய சொன்னேன். அவர்கள் வரைந்துகொண்டிருக்கையில், நான் ஓவ்வொருவரின் ஓவியத்திலும் அவர்கள், இன்னமும் சேர்த்துக்கொள்ளவேண்டிய சில விசயங்களை சொல்லியும், வரைந்தும் காட்டினேன்.

ஒரு வகுப்புபிற்கான நேரம் கடந்தும் ஆர்வமாக வரைந்துகொண்டிருந்தனர். கூடுதாலாக நான் விரும்பும் எல்லா மாணவ, மாணவியருக்கும், அவர்களை நானே கேரிகேச்சராகவும் வரைந்துதந்தேன்...

உண்மையாகவே இந்த நேரத்திற்குள் அவர்கள் கேரிகேச்சரை ஒரு தூண்டுதாலாக வைத்து, தன் முயற்சி, பயிற்சிகளால் செமைப்படுத்திக்கொண்டால் மட்டுமே அதை செய்ய இயலும்... ஆனால் அதுவே இந்த நேரத்திற்குள்ளாக, இவ்வளவு விசயங்களையாவது அங்கே தரமுடிந்ததே என நான் திருப்திபட்டுக்கொண்டேன்...

பயிலரங்க அமைப்பாளர்களுக்கு என் மனம் கனிந்த நன்றி...