January 2024 | CJ

January 2024

How to counter the general notion that devotion and spirituality deceive people?


பக்தியும், ஆன்மீகமும் மக்களை ஏமாற்றுகிறது என்ற பொதுதன்மையான கருத்தை எப்படி எதிர்கொள்வது?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, பக்தியும், ஆன்மீகமும் மக்களை ஏமாற்றுகிறது என்ற பொதுதன்மையான கருத்தை எப்படி எதிர்கொள்வது?


பதில்:

உண்மையிலேயே பக்தியும், ஆன்மீகமும் மக்களை ஏமாற்றுகிறது என்றுதான் பெரும்பாலோர் சொல்லுகிறார்கள். நீங்கள் குறிப்பிட்டதுபோலவே பொதுத்தன்மையான கருத்தாக மக்களிடம் பரவியும் உள்ளது. இன்னமும் கூடுதலாக, மக்களை ஏமாற்றுவது மட்டுமல்ல, அவர்களின் பணத்தையும் பறிக்கிறது என்று சொல்லுகிறார்கள். எப்படி? அதிகவட்டிக்கும், மறைமுகமான இருமடங்கு லாபத்திற்கும், ஏதெனும் ஒரு போலியான நிதி நிறுவனத்தை நம்பி, பெரும் முதலீடு செய்து மக்கள் ஏமாந்து நிற்பதை விட அதிகமாகவா? என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.

பக்தியும் ஆன்மீகமும் ஏதோ ஒரு மதத்தில் மட்டுமே, ஏமாற்றுவதாகவும், பணத்தை பிடுங்குவதாகவும் பிரச்சாரம் நிறைந்துவிட்டது சோகமானதே. இதனாலேயே பக்தியும் இல்லை, ஆன்மிகமும் இல்லை, கடவுளும் இல்லை (அதாவது குறிப்பிட்ட வகையிலான மதத்தில் மட்டுமே) என்று சொல்லி வளர்ந்தும் வளர்த்தும் வருகிறார்கள். ஆனால் நாம் எந்த மதத்தையும், பக்தியையும், ஆன்மீகத்தையும் குறையாக பார்க்கவில்லை, அது குறித்து தனியாக அடையாளம் காட்டப்படுவதும் இல்லை. நமக்கு அது தேவையும் இல்லை. ஆனால் விளக்கங்களை தரவேண்டியது உள்ளதே?!

பக்தி என்பது, பிறந்தது முதல் பருவத்திற்கு வரும் வயதுவரை எல்லோருக்குமே அவசியம். அது இந்த இயற்கையை, தெய்வீகமாக கருதி அதற்கு மதிப்பு தந்து அதற்கு முரண்பாடு இல்லாமல் வாழவேண்டும் என்பதற்காகவும், கட உள் என்ற தன்மைக்கு நம்மை தயார் செய்வதற்காகவுமே சித்தர்களாலும், அறிவார்ந்த முன்னோர்களாலும், ஞானிகளாலும் வழங்கப்பட்டது. பருவம் நிறைந்து விட்டால், அந்த பக்தியில் இருக்கும் உண்மையை ‘யோகத்தின் வழியே’ அறிந்துகொள்ளவும் வழிவகை செய்திருந்தார்கள். இதுதான் சிதைந்துபோய், வழிபாடாகவும், சடங்காகவும் உண்மையை மறைத்துக்கொண்டு நிற்கிறது. இந்த சிதைவை திருத்திட வழிகாணாமல், அதில் இருக்கிற உண்மையை அறிந்துகொள்ளாமல், மொத்தமுமே தவறு கருவது பெரும்பாலான மக்களின் அறியாமை தான்.

ஆன்மீகம் என்பது பக்தி என்பதிலிருந்து வேறுபட்டது. பக்தியிலிருந்து உண்மையை நோக்கி நகரும் பாதை என்றும் சொல்லலாம். ஆன்மீகத்தை புரிந்துகொண்டால், யோகம் என்பது என்ன என்றும் தெரிந்து கொள்ளலாம். ஆனால் தற்கால ஆன்மீகம், பக்தியைத்தான் பிடித்துக்கொண்டு நகர்கிறது. ஆன்மீகமும் பக்தியும் ஒன்றுதான் என்று வாதிடுவோரும் உள்ளனர்.

இந்த பணத்தை பிடுங்குவதில் பக்தி, பல ஏமாற்று பேர்வழிகளிடம் சிக்கிவிட்டது. அது ஓரளவில் உண்மைதான். எனினும் அதை எளிதாக கண்டு விலக்கிவிடவும் முடியும். ஆனால் ஆன்மீகமும் பணத்தை பிடுங்குகிறது, பறிக்கிறது, ஏமாற்றுகிறது என்பது சோகம். உண்மையான ஆன்மீகம் எது என்பதை மக்கள்தான் தேர்ந்தெடுத்துக்கொண்டு அதில் பயணித்து, உண்மையறிந்து ‘யோகத்திற்குள்’ நுழையவேண்டும். யோகமே உங்கள் பிறப்பின் ரகசியத்தையும், நோக்கத்தையும், இயற்கையின் அதிசயத்தையும் உங்களுக்கு அறியத்தரும்.

இதன்படி, பக்தியும், ஆன்மீகமும் மக்களை ஏமாற்றுகிறது என்ற பொதுதன்மையான கருத்தை கொண்டவர்களுக்கு, அதை ஆழ்ந்து பார்த்து, உண்மையை அறிந்து கொள்ளக்கூடிய வழியை சொல்லித்தந்தால் போதுமானது.

வாழ்க வளமுடன்.

-

Is it feasible being awaken without mind?


வாழும் பொழுதும், எந்த வேலைகள் செய்யும் பொழுதும், விழிப்புணர்வுடன் மனமற்ற நிலை சாத்தியமானதா?



வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, வாழும் பொழுதும், எந்த வேலைகள் செய்யும் பொழுதும், விழிப்புணர்வுடன் மனமற்ற நிலை சாத்தியமானதா?

பதில்:

மனிதன் என்றாலே மனம்+இதன் = மனிதன் என்பதுதான் கருத்து. மனிதனையும், மனதையும் பிரித்துப்பார்த்திடவும் முடியாது. மனதை உணர்ந்த மனிதனும் இல்லை, மனதை துறந்த மனிதனும் இல்லை.  சில ஞான வகுப்பு நிகழ்த்துபவர்கள், மனதை தள்ளிவைத்து வாழ் என்று போதனை சொல்லுகிறார்கள். மனதை கண்டுகொள்ளாதே, அது உன்னை தடுக்கிறது, குழப்புகிறது, அதற்கு கவனம்  செலுத்தாதே, உன் மனதிற்கு மதிப்பளிக்காதே என்று பல்வாறாக அறிவுரைகள் தந்துகொண்டே இருக்கிறார்கள். அப்படி வாழ்வதுதான் விடுதலை வாழ்க்கை, ஞானம் தேடுதல் என்றும் சிலர் சொல்லிக்கொள்கிறார்கள்.

மனிதனே மனமாக இருக்கும் பொழுதும், மனமே மனிதனாக இருக்கும் பொழுதும் இது பொருந்தக்கூடியதா? என்பதை நீங்களே சிந்தித்துப் பாருங்கள். உங்களை உங்கள் மனதிலிருந்து பிரித்தால், தடுத்தால், விலகினால் என்னவாகும்? பிரிக்கவே முடியாத ஒன்றை பிரித்ததாக எண்ணி குழப்பம் தான் மிஞ்சி நிற்கும்.

மனமற்ற நிலை சாத்தியமில்லை. ஆனால் அது, அந்த மனமற்ற நிலை, உங்களுக்கும் எனக்கும் எவருக்கும் தினமும் நடக்கிறது. நடந்துகொண்டே இருக்கிறது. எப்போது என்று தெரியுமா? நம்முடைய தூக்கத்தில் தான். தூக்கத்தில் மனமும் இல்லை, நாமும் இல்லை. அப்படியான தூக்கத்தில் கூட சிலருக்கு கனவுத்தொல்லையும் உண்டு. கனவில் கூட மனதை பிரிக்கமுடியவில்லை என்று புரிந்துகொள்ள முடிகிறதா?

அப்படியானால் வேறு வழியே இல்லையா, மனமற்ற நிலை சாத்தியப்படுத்திட? 

இல்லைதான். ஆனால் மனதில் எண்ணங்களற்ற நிலை சாத்தியமானது. குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் சொல்லுவதுபோல, ‘மனதை அடக்க நிலைத்தால் அலையும், அறிய நினைத்தால் அடங்கும்’ ஆம் அதுதான் சிறந்தவழி.

அது எப்படி என்று கேட்கிறீர்களா? இன்னொரு கேள்வி பதிலில் காணலாம்.
வாழ்க வளமுடன்.
-

Any best solution and prevention as lifelong to our body?


நம் உடலில் நோய்வராது காப்பதற்கு சிறந்த வழி உள்ளதா? நீண்டநாள் உதவிடுமா?




வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, நம் உடலில் நோய்வராது காப்பதற்கு சிறந்த வழி உள்ளதா? நீண்டநாள் உதவிடுமா?

பதில்:

இந்த உலகில் வாழ்கின்ற எல்லா உயிர்களுக்கும் நோயும், அதன் தாக்கமும், குணமடைதலும் உண்டு. அது இயற்கயாகவும் உண்டாகும். சில சூழ்நிலை காரணாகவும் வந்துவிடும். நாமே உருவாக்கியும் சிக்கிக் கொள்வோம். 2019ம் ஆண்டு உலகை பாதித்த கரோனா தொற்றுநோய், மனிதர்கள், தன்னுடைய ஆய்வகத்தில் உருவாக்கியதன் விளைவுதானே? அது இன்னமும் மிச்சம் மீதியாக ஆங்காங்கே தொடரத்தான் செய்கிறது. சிலவகை நோய், நோய்க்கிருமிகள், தாவரங்களை நாம் உணவாக உட்கொள்வதின் மூலமாக வந்துவிடுகிறது. வேறு சில நோயும், நோய்கிருமிகளும் பறவைகள், விலங்குகள், வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகள் வழியாகவும் நம்மை வந்துடந்து பாதிக்கிறது.

இயற்கையின் இயல்பாகவே தன்னைத்தானே சரி செய்துகொள்ளும் நிலை உடலுக்கும், உடல் உறுப்புகளுக்கும் உண்டு. அதில் ஏமாற்றமும், பலன் இல்லாது போலும் பொழுதும்தான் அது நோயாக வடிவமெடுக்கிறது. 
நம்முடைய வாழ்க்கையில், நமக்கு இந்த உடலை மிகச்சரியாக இயக்காமல் இருந்தாலும், அதிகமான வேலையை ஒரு உறுப்புக்கு கொடுத்தாலும் வலி வந்துவிடும் என்பது நமக்குத் தெரியும். அந்த வலி சரியானபடியாக தீர்கப்படாவிட்டால், அதுவே நோயாகவும் மாறிவிடும் என்பதை முதலில் கவனத்தில் கொள்ளவேண்டும்.

உணவு, நொறுக்குதீணி, அதீத சுவை, திடீர் உணவுகள் எடுத்துக்கொள்வதில் கவனம் வேண்டும். உடலுக்கு பொருத்தமானதா? என்பதை ஆராயவேண்டும். பசி வந்தால் மட்டுமே உணவு என்ற முறைக்கு மாறவேண்டும். நேரம் கடத்துதலும், நேரம் சுருக்குதலும் செரிமான உறுப்புகளை பாதிக்கும். 
உடலுக்குள்ளாக இயங்குகின்ற காற்றோட்டம், வெப்ப ஓட்டம், இரத்த ஓட்டம் இந்த மூன்றும் ஒன்றை ஒன்று பாதிக்கப்படாமல் இயங்கிட வேண்டியது அவசியம். அதற்கு நம்முடைய உடலும், உடல் உறுப்புகளும் சரியாக பயன்படுத்திடவும் வேண்டும். அந்த பயன்பாடு இப்போதைய உலக வாழ்வியலில் பெரும்பாலோர்க்கு இல்லை.

இதனால் உடல் அங்காங்கே சோர்வுற்று வலியாகவும், நோயாகவும் மாறிவிடுகிறது. இளம் வயதுவரை எட்டிப்பார்க்காத பரம்பரை வழியாக வந்த நோய்கள், குறிப்பிட்ட காலத்தில் வெளியேறியும் நம்மை பாதிக்கிறது. தகுந்த மருந்துகளை உட்கொள்வதின் மூலமும், எடுத்துக்கொள்வதின் வழியாகவும் தீர்க்கலாம். இல்லையேல் அது நீடித்த நோயாக மாறி, குணப்படுத்த முடியாத  நிலைக்குப் போய்விடும்.

மருந்தில்லா மருத்துவம் என்றாலும், அதற்கு முன்பாக, இந்த உடல் நோய் இல்லாத தன்மையில் வைத்துக்கொண்டால் தானே அது உதவும்?! நோய் வந்தபிறகும், முற்றியபிறகு அது எப்படி உதவமுடியும்?

மிகசரியான பருவ வயதில் உடல் அசைவுக்கு பழகவேண்டும். வேதாத்திரி மகரிசி வழங்கிய எளியமுறை உடற்பயிற்சி மிகச்சரியான தீர்வு. வருமுன் காப்பது என்ற நிலையில், வலி, நோயை தடுத்துக்கொள்ள நல்ல வழி. எனினும் எல்லாவயதினரும், எந்த வலி, நோய் நிலையில் உள்ளவரும்கூட கற்றுக்கொண்டு பயிற்சியை தொடர்ந்து செய்துவரலாம். வலி, நோயின் தீவிரம் குறைந்து குணமளிக்கும். என்றாலும் மருந்தும் அவசியம். தொடர்ந்து செய்துவரும்பொழுதுதான், மருந்தில்லா நிலைக்கு உடலும், உறுப்புகளும் பழக்கமாகலாம். அதுவரை மருந்துகளை நிறுத்திவிடாமல் தொடர்வும் வேண்டும். இதற்கிடையில் மருத்துவரின் ஆலோசனையையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

வேதாத்திரி மகரிசி வழங்கிய எளியமுறை உடற்பயிற்சி எல்லாவயதினரும் செய்யலாம். அதன் வழியாக உடல், மன, உயிர் வளம் காக்கலாம். வாழ்நாள் நீடிப்பும் செய்யலாம். இயற்கையோடு இணைந்த உடல் இயக்கத்தை பெறலாம். வாழ்வில் பசிக்கு உணவு என்பதைபோல, உடலுக்கு எளியமுறை உடற்பயிற்சி என்றவகையில் மாற்றிக்கொள்ள வேண்டும்.

முக்கியமாக உங்கள் உடலை பேணிக்காப்பதில், உங்களுக்கு மட்டுமே அக்கறை உண்டாக வேண்டும். அதில் ஆர்வம், முயற்சி, பயிற்சி இவைகளும் முக்கியமாகும்.

வாழ்க வளமுடன்.
-

Why need yoga, we need to life like as others, who free from on yoga in life?


மற்றவர்களைப் போல்தான் வாழவேண்டும் என்கிறபொழுது, யோகம் இல்லாத வாழ்வுதானே வாழ்கிறார்கள்? பிறகு ஏன் எனக்கு மட்டும் யோகம்?




வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, மற்றவர்களைப் போல்தான் வாழவேண்டும் என்கிறபொழுது, யோகம் இல்லாத வாழ்வுதானே வாழ்கிறார்கள்? பிறகு ஏன் எனக்கு மட்டும் யோகம்?

பதில்:

நீங்கள் கேட்பது சரியான சந்தேகம் தான். ஒரு நூறு அன்பர்களை எடுத்துக்கொண்டால், அதில் யாரேனும் ஒருவருக்குத்தான், நிச்சயமாக யோகத்தில் இணையவேண்டும் என்ற ஆர்வம் எழும் என்பது உண்மையே. அந்த ஒருவரை மற்ற 99 அன்பர்களும் தடுத்து நிறுத்திவிடுவார்கள், சிலவேளை அவர்களை பார்த்து அந்த ஒருவரும், யோகத்தை விட்டுவிடுவார். பெரும்பாலும் இதுதான் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது எனலாம். அந்த ஒருநபர், இத்தனை பேரும் யோகம் என்பதே அறியாமல், அதில் ஆர்வம் காட்டாமல், அதைக்குறித்து ஒரு விபரமும் தெரிந்து கொள்ளாமல், வழக்கமான உலக வாழ்க்கையில் வாழ்கிறார்கள். நன்றாகத்தானே இருக்கிறார்கள்! அந்த நிலையில் நான் மட்டும் ஏன்? எதற்காக? யோகம் வேண்டும், அதில் இணையவேண்டும்? என்று நினைக்கிறேன் என்று குழப்பம் எழுந்துவிடுகிறது.

உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா? யோகத்தில் விருப்பமும், அதில் இணைந்து உண்மையை அறியவேண்டும் என்ற விருப்பமும், தானாக, உங்களுக்குள்ளாக எழவேண்டும். அது உங்களுடைய மனதை, சிந்தனையை இயல்பாக தூண்டவேண்டும். யாரோ சொன்னார்கள், இவர் சொன்னார், அவர் சொன்னார், முயற்சிக்கிறேன் என்றெல்லாம் யோகத்தில் இணையமுடியாது, இணைந்தாலும் கூட அதை தொடரவும் முடியாது. ஒரு நாளோ, ஒருவாரமோ, ஒருமாதமோ செய்துவிட்டு முழுமையாக அதை கைவிட்டு போய்விடுவார் என்பதுதான் உண்மை.

உலகில் பெரும்பாலோர்க்கு கடவுள் நம்பிக்கையே, அவர்களுடைய சிதைந்து போய் இருப்பதால், யோகம் குறித்த எந்த நல்ல எண்ணமும் கருத்தும் இருக்காது என்றே கருதவேண்டும். உண்மையில் கடவுள் (கட+உள்) என்ற தத்துவமும், நம்பிக்கையும் உண்மையாகவேதான் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. பகல் வானில் நட்சத்திரங்களே இல்லை என்று வாதாடும் அன்பர்களை நாம் என்ன செய்துவிடமுடியும்? அதுபோலவேதான் நாம் கணக்கில் எடுத்துக் கொண்ட 99 அன்பர்களும் இருப்பார்கள். இருக்கிறார்கள் என்றும் சொல்லலாம்.

உங்களுக்கு வாய்ப்பிருந்தால், உங்கள் வாழ்க்கையையும், அவர்களுடைய வாழ்க்கையையும் ஒப்பிட்டுப் பாருங்கள். பணம், பொருள், வசதி அதுவெல்லாம் கணக்கில் இல்லை. அது யார்வேண்டுமானாலும், தகுந்த காலத்தில் சம்பாத்தியமாக கொண்டுவரலாம். அதற்கு தேவை உழைப்பும், விழிப்புணர்வும், முயற்சியும், ஆர்வமும் மட்டுமே. பரம்பரையாக செல்வாக்கோடு இருப்பவர், இப்போதும் உங்களைவிட பணக்காரராக் இருப்பதில் வியப்பொன்றும் இல்லை. அதனால் அந்த பொருள்நிலை செல்வாக்கை விலக்கிவிட்டு, அவர்களுடை எண்ணம், சொல், செயல், வழக்கம், பழக்கம், அணுகுமுறை, உதவும் குணம், நிறைவு, அமைதி என்பதெல்லாம் ஆராய்ந்து பாருங்கள். ஒவ்வொரு நாளையும், தன்னோடு இருக்கும் ஒவ்வொரு நபரையும் எப்படி நடத்துகிறார் என்று கவனியுங்கள். 

உண்மையாகவே, இந்த 99 அன்பர்களைவிட நீங்கள், வித்தியாசமாக, உள்ளுணர்வில் இருப்பதை மிக எளிதாக கண்டுகொள்வீர்கள். யோகத்தில் நீங்கள் இணைந்துகொண்டால், மிக எளிமையாக அளவு, முறை கண்ட வாழ்வில், தன்னை அறிந்து, இறை உண்மையும் அறிந்து, நிறைவாக, நிம்மதியாக, என்றும் மகிழ்வோடு வாழ்ந்து அதை பிறருக்கும் பகிர்ந்து வாழமுடியுமே?!

மேலும் பிறவி நோக்கமும் நிறைவேறிவிடும். இதுவரை இருந்துவந்த கர்ம வினைப்பதிவுகளின் களங்கம் நீங்கிவிடும். உங்களின் முன்னோர்களும், உங்கள் வழி வரும் தலைமுறையினரும் கூட நிறைவடைவார்கள். இயற்கையின் உன்னதமும் உங்களுக்கு புரிந்துவிடும். எனவே, யோகம் குறித்தான சிந்தனையில், விழிப்பாக இருங்கள்.

உடனே யோகத்தில் உங்களை இணைத்துக் கொள்ளுங்கள் என்றெல்லாம் சொல்லவும் மாட்டேன், கட்டாயப்படுத்தவும் மாட்டேன். அதை நீங்களே முடிவு செய்யலாம். காலமும் உங்களுக்கு துணை செய்யும்.

வாழ்க வளமுடன்.
-

Why the enlightenment is late through the yoga? How long it takes?


யோகத்தின் வழியாக நம்மை உயர்த்திக்கொள்ள எவ்வளவு காலம் ஆகும்? ஏன் தாமதம் ஆகிறது?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, யோகத்தின் வழியாக நம்மை உயர்த்திக்கொள்ள எவ்வளவு காலம் ஆகும்? ஏன் தாமதம் ஆகிறது?


பதில்:

உலகில் பிறந்த நாம், பக்தி வழிபாட்டின் வழியாக, இயற்கையின் உன்னதமான பெரும் பொருளை, மெய்ப்பொருளை அறிந்துகொள்கிறோம். நம்மைவிட, நம்மிலும் பெரிய, சக்திவாய்ந்த ஒன்று இறையாக, தெய்வமாக இருக்கிறது என்று நம்புகிறோம். அதற்கு மதிப்பு கொடுத்து வளர்ந்து வந்து, இளைஞர்களாக உலக வாழ்க்கையை ஏற்கும் பொழுது, நம்முடைய வாழ்க்கையை சீரமைத்துக் கொள்கிறோம். சிலர் அது பொய், இல்லவே இல்லை என்ற ரீதியில் மாற்றுப்பாதையில் சென்றுவிடுகிறார்கள். நாம், இதுவரை வழிபட்டுவந்த அந்த இறையை, தெய்வீகத்தை உண்மையாக அறியும்பொருட்டு, யோகத்தில் இணைத்துக்கொள்ளவும் விரும்புகிறோம்.

அப்படியான யோகத்தில், எளிமைப்படுத்தப்பட்ட வேதாத்திரியத்தில் நாம் இணைந்திருக்கிறோம். இப்படி சொல்லுவதால் மற்ற யோக அமைப்புக்களை குறைசொல்லுவதாக நினைத்திடக்கூடாது. ஒவ்வொரு அமைப்பும் ஒவ்வொரு வகையான சிறப்பை கொண்டதுதான் என்பதால், இங்கே மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. அப்படி யோகத்தில் பயணிக்கும் பொழுது, குருவின் அன்பினாலும், கருணையாலும், உண்மை தத்துவ விளக்கங்களை பெறுகிறோம். கேட்கும் பொழுதும், படிக்கும் பொழுதும் நமக்கு புரிந்தாலும், அது நடைமுறைக்கு எளிதில் வந்துவிடுவதில்லை.

இதற்கு ஒரு மனிதனிடம் உள்ள, மூன்றடுக்கு கர்ம வினைப்பதிவுகளும், பழிச்செயல் பதிவுகளும் காரணமாகின்றன. கருவழியாக, முன்னோர்கள் தெரிந்தோ, தெரியாமலோ செய்த வினைகள் பதிவாகி, கருமையம் களங்கப்பட்டு இருக்கிறது. அது நமக்கும் பகிரப்பட்டு இருக்கும் நிலையில், நாம் அதை தூய்மை செய்யாது, நமக்கு ஒரு குழந்தை உண்டானால் அக்குழந்தைக்கும் பகிரப்படும் என்பது இயற்கை விதி. அத்தகைய கர்மா என்ற வினைப்பதிவுகளும், பழிச்செயல் பதிவுகளும் எவ்வளவு இருக்கிறதோ அந்த அளவிற்கு, அதை தீர்ப்பதற்காக நம்முடைய, யோக பயண முயற்சி தொடரவேண்டியது அவசியமாகிறது. சிலருக்கு 20 ஆண்டுகள் ஆகலாம், சிலருக்கு 30 ஆண்டுகள் ஆகலாம். சிலருக்கு 50 ஆண்டுகள் ஆகலாம். சிலருக்கு இன்னும் கூடுதலாக ஆகலாம்.

எனினும், யோகத்தின் வழியாக ஏற்படும் வளர்ச்சியை நாம் முடிவு செய்யவும் முடியாது. கணித்துப்பார்க்கவும் முடியாது. இந்த இடத்தில் நாம் அதை இயற்கையின் வசமும், தெய்வீகத்தின் வசமும் ஒப்படைத்து விட்டு, நாம் தொடர்ந்து பயணிக்க வேண்டியதுதான். ஆனால், அந்த மாற்றங்களும், உயர்வுகளும் நாம் அறிந்திடவும் முடியும் என்பதே உண்மை. சிறிது ஆழ்ந்து சிந்தித்தால், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடியும்கூட மாற்றம் உண்டாகிக்கொண்டே வருவதை நாம் உணரமுடியும்.

தொடர்ந்து யோகத்தில் பயணியுங்கள், நிறைவடைவீர்கள்!

வாழ்க வளமுடன்.

-

What is lifeforce? Why it is separated? Can we protected?


உயிர் என்பது என்ன? அது ஏன் காலத்தால் போய்விடுகிறது? தடுக்கமுடியாதா?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, உயிர் என்பது என்ன? அது ஏன் காலத்தால் போய்விடுகிறது? தடுக்கமுடியாதா?


பதில்:

எளிமையாக கேள்வி கேட்டுவிட்டீர்கள், அதில் எவ்வளவு ஆழ்ந்த இயற்கை உண்மைகள், ரகசியங்கள் அடங்கியுள்ளன என்பதை அறிவீர்களா? இத்தகைய உயிர் குறித்த எல்லா உண்மைகளையும் சித்தர்கள் அறிந்து உணர்ந்து முழுமையும் அடைந்தார்கள். சித்து என்று அழைக்கப்படும் உயிரை அறிந்ததால்தான் ‘சித்தர்கள்’ என்றும் அழைக்கப்பட்டனர். விளக்கிட கடினமே என்றாலும் கூட, இந்த பதிவில் முடிந்தளவு எளிமையாக விளங்கிக் கொள்ள முயற்சிப்போம். எல்லோருக்குமே பயன்படும் வகையில் உதவும் என்று நினைக்கிறேன். இந்த இடத்தில், குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்களை வாழ்த்தி வணங்குவோம். குப்பையாக குழப்பிக் கிடந்த உண்மைகளை அழகாக, சிதையாமல் எடுத்து, அழக்குகளை நீக்கி மிக தெளிவாக, எளிமையும் செய்து, மாற்றுக்கருத்துக்கு இடம் தராமல், விளக்கித்தந்தவர் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

உயிர் என்று அழைக்கப்படும் ஆகாஷ் துகள்கள், பஞ்சபூத தத்துவத்தின் முதல் நிலையாகும். கண்ணுக்கும் கருவிக்கும் எட்டாத நிலையிலும், கருத்துக்கும் மிக எளிதில் சிக்கிடாத நுண்ணியது இந்த உயிர்த்துகள்கள். இதை தமிழில், வேதாத்திரியத்தில் விண் என்றும் சொல்லுகிறோம். மனிதர்களாகிய, நம்முடைய உடல் மண் என்ற பஞ்சபூத தன்மை கொண்டது, அதனூடாக, நீராக இரத்தம், வெப்பமாக உடல் சூடு, காற்றாக மூச்சுக்காற்று ஆகிய நான்கு பஞ்சபூதங்கள் இருப்பதை நாம் அறிவோம். இதில் ஐந்தாவதாக, முதல் நிலை பஞ்சபூதமான உயிர் இணைந்தால், நாம் இந்த புவியில் உயிரோடு, உணர்வோடு வாழ்கிறோம் என்று அர்த்தமாகிறது.

இந்த உயிர் மிக மிக நுண்ணியதும், லேசானதும் ஆகும். எனவே இது இயற்கையின் சக்தியால் நீண்டகாலம் ஒரே இடத்தில் தங்கிட வாய்ப்பில்லை. ஆசான் திருவள்ளுவர், மிகத்தெளிவாக தன்னுடைய குறள் வழியாக இதை சொல்லுகிறார்,

நாளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈரும்
வாளது உணர்வார்ப் பெறின். (நிலையாமை, குறள் 334)

உயிரானது, ஒவ்வொருநாளும் இந்த உடலைவிட்டு நகர்ந்து போய்க்கொண்டேதான் இருக்கிறது. ஒருநாள் என்பது உடலையும் உயிரையும் இணைக்கும் இணைப்பை வாளால் அறுத்துக்கொண்டே இருக்கிறது என்பதை உணர்வாக பெற்று அறிந்து கொள்ளுங்கள். என்று குறளில் சொல்லுகிறார்.

இதன்படி காலத்தால், இயற்கையாகவே உயிர் உடலைவிட்டு நகர்ந்து கொண்டேதான் இருக்கிறது. ஏதோ ஒருநாளில் முழுதாக போய்விடுகிறது. அன்றைக்கு ஒருநபர் இறந்துவிடுகிறார் என்று புரிந்துகொள்கிறோம். இதில், இந்த இயற்கைக்கு முன்பாக, அதன் விதிக்கு முன்பாக நாம் ஒன்றுமே இல்லை. அதனால் அதன்போக்கில் நிகழும் ஒன்றை தடுக்கவும் வழியில்லை. ஆனால் இது ஏன் நிகழ்கிறது? இந்த பிறப்பும் இறப்பும் எதனால்? என்ற கேள்வி உங்களுக்கு எழுமானால், யோகம் அதற்கான பதிலை தரும். வாழ்கின்ற நாளுக்குள் அதை அறியவும் முயற்சிக்கலாம் என்பதும் உறுதி.

ஆசான் திருவள்ளுவர், தன் குறள்வழியாக தருகின்ற இன்னொரு உண்மையையும் இங்கே சொல்லிவிடுகிறேன்.

புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு. (நிலையாமை, குறள் 340)

உடம்பில் ஒரு மூலையில் குடியிருந்த உயிர்க்கு, நிலையாகப் புகுந்திருக்கும் வீடு இதுவரையில் அமையவில்லையோ? என்ற விளக்கத்தை - மு. வரதராஜன் அவர்கள் தருகின்றார்.

உயிர் குறித்த உண்மைகளை எடுத்துரைத்த ஆசான் திருவள்ளுவரையும், ஔவையார், சித்தர்கள், ஞானியர்கள், மகான்கள், யோகியர்கள், ஆசான் வேதாத்திரி மகரிஷி அவர்களையும் மீண்டும் வாழ்த்தி நினைவு கூர்வோம்.

வாழ்க வளமுடன்.

-

Can I foreknow or guess our death? Any Idea?


நம்முடைய இறப்பை, மரணத்தை நான் முன்கூட்டியே அறிவதற்கு முடியுமா?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, நம்முடைய இறப்பை, மரணத்தை நான் முன்கூட்டியே அறிவதற்கு முடியுமா?


பதில்:

நம்முடைய இறப்பை, மரணத்தை  முன்கூட்டியே அறிவதற்கு முடிந்தால், அப்படி தெரிந்து கொண்டால், அது ஒருவகையில் நல்லதுதான். அந்த இறப்பு, மரணம் வருவதற்கு முன்பாக நன்றாக அனுபவித்து வாழ்ந்து விடலாம். அந்த வாழ்நாளுக்குள்ளாக என்னென்ன தேவையோ அதை பெற்றுக்கொள்ள முயற்சிக்கலாம். வாழ்நாளுக்குப் பிறகு நம் குடும்பத்திற்கு, வாழ்க்கத்துணை, குழந்தைகள் நலம் விரும்பி செய்ய வேண்டியதையும் முடித்துவிட்டு நிம்மதியாக இருக்கலாம். 

மேலும் நமக்கு என்னென்ன விருப்பமோ அதை பெற்றுவிடலாம். என்னென்னெ ஊர், இடம் பார்க்கவேண்டுமோ அதையெல்லாம் பார்த்து திருப்தி அடையலாம். கொடுக்க வேண்டியதை கொடுத்துவிடலாம். பெறவேண்டியதை பெற்றும் கொள்ளலாம். வரிசையாக பட்டியலிட்டு, எல்லாவற்றையும் முடித்துவிட்ட திருப்தியில் இறப்பை, மரணத்தை ஏற்றுக்கொள்ளவும் தயாராகலாம் தானே?! சரியா?

இதனோடு, இதெல்லாம் அப்படியே விட்டுவிட்டு போகப்போகிறோமே? என்ற கவலை எழாமல் இருக்குமா? முதலில் நம்முடைய கைபேசி, வங்கி கடன் வரவு அட்டைகள், அதன் உட்கடவுட்சொல், வங்கியில் இருக்கும் பணம், பங்கு வர்த்தகத்தின் செயல்பாட்டில் பணம், கார், பைக், விருப்பமான பொருட்கள் எல்லாவற்றையுமே இழந்துவிடுவோம், இனி யாருக்கோ போய்விடுமே என்ற பயமும் வருத்தமும் எழாமல் இருக்குமா? இறப்பை மரணத்தை ஏற்றுக்கொள்ளதான் விருப்பம் எழுமா? இல்லைதானே! இன்று ஒருநாள் விட்டுவிடு, இன்னும் ஒருவாரம் விட்டுவிடு, ஒருமாதம் விட்டுவிடு, ஒருவருடம் மட்டும்  விட்டுவிடு என்று நாம் கேட்பதற்கும் வழியில்லை.

உங்களுடைய சோதிடம் வழியாக, மாரகாதிபதி சனி பகவான், அதன் இருப்பிடம், சுழற்சி, மாரகஸ்தானம் என்ற வகையில் கூட யூகிக்கலாமே தவிர, உண்மையும் உறுதியும் சொல்ல முடிவதில்லை. நோய்தாக்கம் முற்றி மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை அளித்தாலும்கூட, மருத்துவார்களால் இருப்பு, இறப்பு உறுதி செய்ய முடிவதில்லை. ஒரு நாள் தாங்காது என்று சொன்னால், பலவருடம் நின்று வாழ்வார். நாளைக்கே வீடு திரும்பலாம் என்றால் அவர் உலகைவிட்டே திரும்பிவிடுவார். இதெல்லாம் நம் குடும்பத்திலும் நிகழ்கிறது. வாழ்கின்ற சமூகத்தில் சம்பவங்களாகவும் நாம் அறிகிறோம் அல்லவா?

நீடூழி வாழ்க என்று பிறரை, மனம் விரும்பி வாழ்த்திடும், தன்னையறிந்த ஞானிகள், மகான்கள், யோகியர்கள் கூட இந்த உண்மையை அறிந்து கொண்டது இல்லையே. ஆனால் உடனே நீங்கள் மறுதலிப்பீர்கள். ‘உங்களுக்கு தெரியாது, இப்படி இந்த நாளில், இந்த நட்சத்திரத்தில், இந்த நேரத்தில், இன்ன இடத்தில், இந்த நோயால் நான் மரணிப்பேன் என்று சொன்ன சித்தர்களும், ஞானியர்களும் உண்டுதான். இன்னமும் இருக்கிறார்கள், நேற்று கூட ஒருவர் அப்படி சொன்னார் தெரியுமா?’ என்று சொல்லுவீர்கள். அப்படியானால் அந்த வித்தையை நீங்களும் கற்றுக் கொள்ளலாமே? இங்கே மறுப்பு தெரிவிப்பதற்கு பதிலாக,  நேரத்தை வீண் செய்யாமல் அவர்களை தேடிப்போய், அந்த வித்தையை கற்றுக் கொள்ளுங்கள். எனக்கும்கூட சொல்லிக் கொடுங்களேன். 

ஒரு மனிதனின் பிறப்பையும், இறப்பையும் இயற்கையானது என்றுமே ரகசியமாக வைத்திருக்கிறது என்பதால், நாம் முன்கூட்டியே அறிவதற்கு முடியாது, அதற்கு வழியும் இல்லை. ஆனால் நிச்சயமாக, பிறப்பு என்ற ஒன்று இருந்தால், இறப்பு உண்மையானது. குரு மகான் வேதாத்திரி மகரிஷி சொன்னதுபோல, ‘ஓவ்வொருவரும் திருப்பிப் போகும் பயணச்சீட்டோடுதான் வந்திருக்கிறோம். என்ன? அதில் தேதி குறிப்பிடப்படவில்லை’

என்றாலும் நமக்கு தெரியும் தானே? ஒரு சராசரி மனிதனின் ஆயுட்காலம் மாறிக் கொண்டேதான் இருக்கிறது. ஆனால், 120 ஆண்டுகள் மனிதன் வாழமுடியும் என்கிறார்கள். அவ்வளவு முடியாவிட்டாலும், உயிரோடு இருக்கும் ஆண்டுகளில், அதை மனதில் கொண்டு, வாழும் வாழ்க்கையை சிறப்பாக்கிக் கொள்வதுதான் நம்முடைய குறிக்கோளாக இருக்கவேண்டும். நீங்கள் பக்தியில் இருந்தாலும் சரி, யோகத்தில் இருந்தாலும் சரி. அதில் நீங்கள் பிறப்பின் உண்மையை, நோக்கத்தை உணர்ந்து அறிவதாக அமைத்துக் கொள்ள வேண்டும். அது அவசியமானதும் கூட. 

நிலையாமை என்ற தலைப்பில், ஆசான் திருவள்ளுவர் சொல்லும் குறள் ( எண்-339) கவனியுங்கள். 

உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு

வாழ்க வளமுடன்.

-

Why no mind peace when we worship in temple too? What can be done?


மன அமைதிக்காக ஏதேனும் கோவிலுக்கு சென்றாலும்கூட அமைதி கிடைக்கவில்லையே? என்ன செய்வது?!


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, மன அமைதிக்காக ஏதேனும் கோவிலுக்கு சென்றாலும்கூட அமைதி கிடைக்கவில்லையே? என்ன செய்வது?!


பதில்:

இந்தக்கேள்வியின் உள்நிலை அறியும் பொழுது, நீங்கள் வீட்டிலேயே தவம் செய்துவருகிறீர்களா? அதைவிட்டு விட்டீர்களா? என்று தெரியவில்லை.  என்றாலும், யோகத்தில் இணைந்து தவம் கற்றுக்கொண்ட ஒருவர், முற்றிலுமாக கோவிலுக்கு போவதை, அங்கே வழிபாடு செய்வது விட்டுவிட வேண்டியதில்லை. அதில் எந்த வித மாற்றுக்கருத்தும், குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் சொன்னதுமில்லை. என்றாலும், அந்த வழிபாடுகளில் இருக்கின்ற உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும் என்றுதான் அறிவுறுத்துகிறார். அதனால், யோகத்திற்கு வந்த பிறகு கோவிலுக்கு செல்வது அவரவர் விருப்பமே. ஆனால் அதற்காக, கற்றுக்கொண்ட யோகத்தை விட்டுவிடவும் கூடாது. அதுதான் பிறப்பை மறுபடியும் சிக்கலாக்கிவிடும்.

உங்கள் கேள்வியின் வழியாக, இரண்டு விசயங்களை புரிந்து கொள்ளமுடிகிறது. உங்களுக்கு வீட்டில் தவம் செய்தாலும் அமைதி கிடைக்கவில்லை, கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தாலும் அமைதி கிடைக்கவில்லை. இப்பொழுது இதற்கு காரணம், ஏற்கனவே உங்கள் மனம் அமைதியின்று தவிக்கிறது என்றுதான் கருதவேண்டும். உங்கள் வாழ்வில் ஏதேனும் ஒரு சிக்கல் இருக்கலாம். அது தினமும் தொடர்கிறது என்றுதான் நினைக்கிறேன். அது குடும்பத்தில் இருக்கலாம், குடும்ப நபர்களில் இருக்கலாம், உங்களின் நெருங்கிய நட்பு வட்டத்தில் இருக்கலாம், உங்களின் தொழில், வியாபாரம், வேலை இவற்றிலும் கூட சிக்கல் இருக்கலாம்.

எனவே முதலில், இந்த சிக்கல், மன குழப்பம் தருவது எது என்று ஆராயுங்கள். ஒருநாளை இதற்கென்று ஒதுக்கி, ஏதேனும் தனிமையில் உட்கார்ந்து யோசியுங்கள், சிந்தனை செய்யுங்கள், முதலில் உங்கள் கைபேசி, மற்ற இதர உபயோகங்களை ஒருநாள் தவிர்த்துவிடுங்கள். வெறும் ஆளாக அமர்ந்து, யாரையும் அருகில் விடாமல் தனியாக, உங்கள் வீட்டிலே கூட அமைதியாக இருந்து சிந்தித்துப் பாருங்கள். இதைத்தான், வேதாத்திரியத்தில் ‘அகத்தாய்வு எனும் தற்சோதனை’ என்றும் சொல்லுகிறோம். உங்களுக்கு தவம் செய்ய வாய்ப்பிருந்தால், முதலில் துரிய தவம் செய்துவிட்டு பிறகு இந்த சிந்தனையை தொடருங்கள். நிச்சயமாக விடை கிடைக்கும்.

அந்த சிக்கல், அதன் தன்மை, யாரால் வந்தது?, எதனால் வந்தது? எப்படி தீர்க்கலாம்? யார் உதவுவார்கள்? எவ்வளவு காலம் ஆகும்? நீடித்தால் என்னாகும்? விலக்கிவைக்க முடியுமா? ஏற்று வாழ முடியுமா? என்றெல்லாம் கேள்வி கேட்டு அந்த பதிலை எழுதியும் வையுங்கள். மறுபடி ஆராயுங்கள்.

மற்றபடி பிரச்சனையும், சிக்கலும், குறையும் மனதில் சுமந்து கொண்டு இருக்கிற நிலையில், நீங்கள் வீட்டில் தவம் செய்தாலும் அமைதி கிடைக்காது. கோவிலுக்கு சென்று வணங்கி, வழிபாடு செய்தாலும் அமைதி கிடைக்காது. பிரச்சனை உங்கள் தவத்தில் இல்லை, கோவிலிலும் இல்லை. அது அந்த பிரச்சனை உங்களுடைய மனதில்தான் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள். உண்மை அறிந்தால் அந்த அமைதியை நீங்கள் அறிந்து அதை அனுபவிக்கலாம்.

வாழ்க வளமுடன்.

-

Why do we have problems with our relationships?


நீண்ட நாள் நம்மோடு இருக்கும் உறவுகளாலேயே, நமக்கு சிக்கல் எழுவது எதனால்?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, நீண்ட நாள் நம்மோடு இருக்கும் உறவுகளாலேயே, நமக்கு சிக்கல் எழுவது எதனால்?


பதில்:

நீங்கள் சொல்வது ஓரளவில் உண்மைதான். நீண்ட நாள் நம்மோடு இருக்கும் உறவுகளாலேயே, நமக்கு சிக்கல் எழுகிறது. எல்லோருடைய குடும்ப வாழ்விலும் இத்தகைய பிரச்சனைகள் உண்டு. சிலர் வெளியே சொல்லுவார்கள். சிலர் வெளியே சொல்லமாட்டார்கள். இத்தகைய பிரச்சனைகள் தீர்க்கப்படாமல், குடும்பம் என்ற அமைப்பும் சிதறி, கலைந்துபோனதும் உண்டு. இதனால் ஊரைவிட்டு விலகி வேறு ஊருக்குச் சென்று வாழ்பவர்களும் உண்டு. அதனால்தான் பெரும்பாலான மக்களுக்கு இத்தகைய உறவுகளால் ஏற்படும் சிக்கல்கள், பிரச்சனைகள் இருக்கிறது என்று தெரியவருகிறது.

உறவுகள், சொந்தம், பந்தம் என்பது ஏதேனும் ஒருவகையில், பாதுகாப்பும், அணுசரணையும் கிடைக்கும் என்பதற்காகவே முன்னோர்கள் உருவாக்கிய குடும்பம் என்ற வாழ்க்கை முறையில் அமைந்தது. அந்தக்காலத்தில் கூட்டுக் குடும்பமும் இருந்தது என்பதை மறவாதீர். இன்றைய கால திருமண விழா சாப்பாடு போலவே, ஒவ்வொடு கூட்டுக் குடும்ப வீட்டிலும் நிகழ்ந்து வந்தது என்று சொன்னால் நாம் வியந்து நிற்போம் என்பதே உண்மை.

ஒருவருக்கு உடம்பு சரியில்லை என்றால், அந்த வீடே அவருக்கு உதவும். ஒரு குழந்தைக்கு பிரச்சனை என்றால் எல்லோருமே கலங்கி தவிப்பார்கள். அப்படியான உறவுகள் சூழ்ந்த வாழ்க்கைமுறை அது. ஆனால் இன்றோ,  கணவன், மனைவி, குழந்தை என்ற மூவர் மட்டுமே குடும்பம் என்று ஆகிவிட்டது. அந்த குழந்தை வளர்ந்து ஆளாகி நின்றால், அவரின் திருமணம் வழியாக ஒரு உறவு உருவாகிவிடும். ஆனால், அவரும், அவரின் வாழ்க்கைத்துணையும் தனிக்குடும்பமாக உருவாகிவிடுவார்கள். இப்படியான சிதறிய, சுருங்கிய குடும்ப வாழ்க்கையிலும்,  நம்மோடு இருக்கும் உறவுகள் சிக்கலை ஏற்படுத்துவதான் இப்போதைய பிரச்சனை. இதற்கு முக்கிய காரணம் நாம்தான். அந்த அளவிற்கு அவர்களோடு நம்மை வெளிப்படுத்திக் கொண்டோம். அந்த வெளிப்பாடுகளில், நாம் எப்படிப்பட்டவர் என்பதை அறிந்து, சமயம் பார்த்து நம் காலை வாருகிறார்கள்.

எனவே நாம் செய்யவேண்டியது, நம்மைக்குறித்து என்ன பிறரிடம் பகிரவேண்டுமோ, அதை மட்டுமே பகிரவேண்டும். மற்றதை ரகசியம் காக்கவும் வேண்டும். உங்கள் முடிவு சரியாக இருக்கும்படி, விமர்சனங்கள் எழாதபடி அதை செயல்படுத்தவும் வேண்டும்.  உங்கள் முடிவு சரியாக் இருக்கும்படி, விமர்சனங்கள் எழாதபடி அதை செயல்படுத்தவும் வேண்டும். உங்கள் செயல் தாமதிக்காது, உடனடியாக நிறைவேற்றிடவும் வேண்டும். இன்று நாளை என்று நாட்களை மட்டுமல்ல, நேரத்தையும் வீணாக கடத்தக்கூடாது.

இன்னொருவரின் துணை, உதவி தேவையில்லை என்பதை உங்கள் திட்டத்திலேயே உருவாக்கி இருக்கவேண்டும். ஆலோசனை கேட்கலாம் ஆனால் அவர்கள் முடிவில், உறவுகளின் முடிவில் பயணிக்கக் கூடாது. அதேநேரத்தில் ‘எல்லாம் எனக்குத் தெரியும்’ என்று அவர்களை உதாசீனம் செய்யவும் கூடாது. ஏனென்றால் உறவுகள் எப்போதும் நமக்கு தேவைதான்!

இப்படியான உறவு சிக்கல் எழுந்தால், நீங்கள் அவர்களை ‘வாழ்க வளமுடன்’ என்று வாழ்த்துங்கள். தனியாக சிக்கல் குறித்து ஆராயுங்கள். அகத்தாய்வும், தற்சோதனையும் செய்துவாருங்கள். எளிதாக தீர்க்கலாம்!

வாழ்க வளமுடன்.

-

Some of wealthy men living with as atheist, they no need yoga by the way?


உலகில் எல்லா வசதிகளோடு வாழும் ஒருவர், கடவுள் மறுப்பாளராகவும் இருக்கிறார். அவருக்கு யோகம் தேவையில்லையா?



வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, உலகில் எல்லா வசதிகளோடு வாழும் ஒருவர், கடவுள் மறுப்பாளராகவும் இருக்கிறார். அவருக்கு யோகம் தேவையில்லையா?

பதில்:
இந்த கேள்விக்கான  பதிலை நாம் பார்க்கும் முன்பாக, நீங்கள் எப்போதும், இன்னொரு மனிதரோடும், அவர் வாழ்க்கையோடும், பணம், பொருள், வசதியோடும் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். அது நிச்சயமாக உங்களுக்கு ஒரு பிரச்சனையை, வலியை ஏற்படுத்தும். உங்கள் வாழ்க்கை நிறைவான வாழ்க்கையாக உணர்ந்தால் பரவாயில்லை. ஆனால் குறையான வாழ்வாக நினைத்துக்கொண்டால், அதில் நீங்கள் தன்னம்பிக்கை இழந்துவிடுவீர்கள் என்பது உறுதி. எனவே கவனமாக இருங்கள்.

உலகில் பிறந்த ஓவ்வொருவரும் வாழவேண்டும். உலகநடைமுறையில் வாழ பணமும் சம்பாதிக்க வேண்டும். அது சம்பளம் வழியாக, தொழில் முலமாக, வியாபாரத்தினால் இன்னபிற வழிகளால் கிடைக்கவும் வேண்டும். ஏழையாக இருந்தாலும் தன் தேவைகளை தானே நிறைசெய்ய உலகில் பலப்பல வழிகளும் உண்டு. ஏற்கனவே பரம்பரைவழி, பெற்றோர்வழி செல்வந்தர்களாக இருந்தால், பிறக்கும் குழந்தைக்கும் அச்செல்வம் தொடரும். ஏழையாகவே இதுவரை இருந்தாலும், இப்பொது பிறக்கு குழந்தை அந்த நிலையை மாற்றியும் அமைக்கலாம், ஏழ்மை என்பது விதியும் அல்ல.

குறுகிய காலத்தில் நியாயமாக முன்னேறுவோரும் உண்டு, குறுக்குவழியில் முன்னேறுவோரும் உண்டு. குறுக்கு வழியில் பணம் பொருள் ஈட்டவேண்டும் என்பதற்காக, தவறான வழிகளை தேடி பயணிப்பார்கள், அதில் வெற்றியும் அடைவார்கள்.

நம்முடைய பார்வைக்கு அவர்களின் வளர்ச்சியும் தெரியும், அதில் இருக்கும் ரகசியமும் தெரியும் என்பது உண்மைதான். அதோடு அவர் தன்னை கடவுள் மறுப்பாளராகவும் காட்டிக்கொள்கிறார் என்றும் சொல்லுகிறீர்கள். கடவுள் மறுப்பாளர்களை கடவுள் என்ற இறையாற்றல் கைவிட்டுவிடுமா? இல்லையே, நம்மை காப்பதுபோலவே அவர்களையும் காக்கும். ஆனால் ஓவ்வொரு மனிதனுக்குள்ளாக, கடந்து உள்ளே இருக்கின்ற மனமும், அதன் முடிவில் இருக்கும் கருமையமும் எல்லாவற்றையும் பதிவு செய்கிறது. அதுவே கர்மா என்ற வினைப்பதிவாகவும் மாறிவிடுகிறது. மேலும் அவர்களிடைய அறிவு களங்களோடும் இருக்கிறது. அந்த கர்ம வினைப்பதிவுகளும், களங்கமும் காலத்தால் தீர்க்காது அவர்களின் பிறவிக்கடமை முழுமையும் அடையாது. பிறவி வழியாக தொடரவும் செய்யும்.

ஆனால் நாம் யோகத்தின் வழியாக, நம்முடைய களங்கங்களை தூய்மை செய்து, கர்ம வினைகளை தீர்த்து, பிறவிக்கடனான ‘நான் யார்?’ என்று உண்மையறிதலை நோக்கி செயல்படுகிறோம். நமக்கு கிடைத்த வரம் அல்லவா இது?!

இந்தப்பிறவியில் அவருக்கு கடந்து உள்ளே போக ஆர்வமில்லை. அதனால் யோகமும் அவசியமில்லை. அவருக்குப் பின் அவர்வழியாக வரும் பேரனோ பேத்தியோ, ஏதோ ஒரு தலைமுறையினரோ தீர்க்க முயற்சிப்பார்கள் என்பது காலமே முடிவு செய்யும். எனவே நம் கவலை அதுவல்ல.

நாம் நம்முடைய வாழ்வில் எப்படி இருக்கிறோம்? என்று ஆராய்ந்து, வாழ்க்கைக்கு நிறைவான பணம், பொருள், அதை பெறுகின்ற வகையில் வாழ்வேண்டும். இந்த வாழ்வை வீணாக்காது, யோகத்தின் வழியாக தன்னையும் அறியவேண்டும். மெய்ப்பொருள் உண்மையையும் உணரவேண்டும். இப்படி அடுத்தவர்களை ஆராயவேண்டியதில்லை, முடிந்தால் அவர்களையும் வாழ்த்தி மகிழ்வோம். 
வாழ்க வளமுடன்.
-

Why are there so few teachings for life these days?


இந்தக்காலத்தில் வாழ்க்கைக்கான போதனைகள் குறைவாக இருக்கிறதே ஏன்?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, இந்தக்காலத்தில் வாழ்க்கைக்கான போதனைகள் குறைவாக இருக்கிறதே ஏன்?

பதில்:
இந்தக்காலத்தில் வாழ்க்கைக்கான போதனைகள் குறைவாக இருக்கிறதாக ஏன் உங்களுக்குத் தோன்றுகிறது? என்று எதிர் கேள்வி கேட்டால் உங்கள் பதில் என்ன? பொதுவாகவே அறிவுரையும், ஆலோசனையும் மிக எளிது என்று எல்லோரும் சொல்லுவார்கள். அதை சொல்லுபவர்களே கடைபிடிக்கிறார்களா என்பதும் சந்தேகமே!

ஆனால் மனித வாழ்க்கைக்கான தத்துவங்களும், உண்மைகளும், வழிமுறையாக தந்த போதனைகளும், தன்னையும், இயற்கையையும் உணர்ந்தறிந்த ஞானிகளால், மகான்களால், மேதைகளால் வழங்கப்பட்டது, இன்னும் வழங்கப்பட்டுக் கொண்டும் வருகிறது, அவர்கள் வழி நடக்கும் உயர்ந்தோர்களாலும், ஆசான்களாலும். நம் தமிழ்நாட்டில் சங்ககாலம் என்று சொல்லப்படுகின்ற கிட்டதட்ட ஆறாயிரம் ஆண்டுகளாகவே, வாழ்க்கை நெறிகள் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன. 

அவற்றையெல்லாம் தொகுத்தளித்த ‘தொல்காப்பியம்’ எனும் நூல் மூன்றாயிரம் ஆண்டுக்கால நிறைவை பெற்றிருக்கிறது. இவை எல்லாம், மன வாழ்வியலை இயற்கைக்கு ஒத்த தன்மையோடும், மதித்து வாழும் நிலையையும், மக்களோடு மக்களாக தானும் எப்படி வாழ்ந்து இன்பமே கண்டு நிறைவடையலாம் என்றும் வழி சொல்லுகிறது. தொல்காப்பியம் என்பது பல ஞானிகளில் கருத்துக்களை உள்ளடக்கிய தொகுப்பு என்றும் சொல்லுகிறார்கள். சித்தர்கள் வழங்கிய பல குறிப்புக்கள், மனித வாழ்க்கையை ஒழுங்கு செய்வது மட்டுமல்லாமல், மனிதனின் மூலமான உண்மையை அறியவும் வழி தருகிறது. அதை ஏற்கமுடியாதவர்களுக்கு பக்தி என்ற வழிமுறையையும் கொடுக்கிறது.

ஆசான் திருவள்ளுவர் இராயிரம் ஆண்டுகள் முன்பாக, பல்வேறு தலைப்புக்களில் வாழ்க்கை நெறிமுறைகளை தருவதை நாம் சிறுவயது பள்ளிப்பாடங்களில் இருந்தே அறிவோம். எனவே வாழ்க்கைக்கான போதனைகள் நிறைய, நிறைய, நிறைய இருக்கின்றன. ஆனால் நாம் அவற்றை ஏற்று, புரிந்து, வாழ்வில் பயன்படுத்துகிறோமா? என்பதுதான் சந்தேகத்திற்குறியது.

நீங்கள் இந்தக்காலத்தில் என்று சொல்லுகிறீர்கள், ஏன் மனிதன் ஒவ்வொரு காலமும் மாறிவிடுகிறானா? இல்லையே? அவன் வாழ்க்கை முறையும், பொருள் வயப்பட்ட, உயயோகப்படுத்தும் கால நிலைகளும், விஞ்ஞான முன்னேற்றமும் தான் மாறிக்கொண்டே வருகின்றன. மனிதன் உடல், மனம், உயிர், கற்றறிவு, அனுபவ அறிவு, குடும்பம், உறவுகள், சமூகம், உலகம், சராசரி வாழ்நாள் காலம் என்பதில் எந்த மாற்றமும் வருவதில்லையே.

ஆனால் நாம் என்ன நினைக்கிறோம் என்றால், வாழ்க்கைக்கான போதனை என்றால், எப்படி பணமும் பொருளும் பெறவேண்டும்? மகிழ்ச்சியை நீடித்து அனுபவிக்க என்ன வழி? என்ன செய்தாலும், எதை சாப்பிட்டாலும் நோயில்லாமல் வாழ்வது எப்படி? என்ன செய்தாலும் குறையில்லாமல் நீண்ட நாள் வாழ்வது எப்படி? இன்னும் பலப்பல, என்பதாகத்தான் எதிர்பார்க்கிறோம். அந்த எதிர்பார்ப்பதுதான் நம் குறையே தவிர, போதனைகளில் எந்தக்குறையும் இல்லை. சிந்தித்துப்பாருங்கள்!

வாழ்க வளமுடன்.
-

Why not any changes on my worries in life after yoga?


யோகத்திற்கு வந்தபிறகும் கூட வாழ்க்கைக் குறித்த கவலை மாறவில்லையே? எப்போது மாறும்?



வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, யோகத்திற்கு வந்தபிறகும் கூட வாழ்க்கைக் குறித்த கவலை மாறவில்லையே? எப்போது மாறும்?


பதில்:

பெரும்பாலான மக்களின் நிலை அதுதான். சிலர் வெளியே சொல்லுவார்கள், சிலர் தனக்குள்ளாக புலம்பி தவிப்பார்கள். சிலர் அதை மறக்க நினைத்து புகை, குடி, போதை போன்ற இன்னும் பல தவறான பழக்கங்களுக்குள் சிக்கி விடுவார்கள். ஆனால் இதையெல்லாம் மீறி, யோகத்திற்கு இவர் வந்துவிட்டார் என்பது ஓர் ஆறுதல்தான். ஒரு மனிதன் யோகத்தில் இணைவதற்கு என்ன தகுதி வேண்டும்? என்று, வேதாத்திரி மகரிஷி அவர்களிடம் கேட்ட பொழுது, அவர் ‘உடல், மனம், உயிர் வேண்டும்’ என்றுதான் பதில் தந்தார். அதனால் உங்கள் கவலையால் ஏற்பட்ட, தவறான பழக்க வழக்கம் சூழல் என்றாலும், அது யோகத்திற்கு தடையை ஏற்படுத்தாமல், விட்டு விலக்கி விடாமல்  இருக்கவேண்டியது அவசியம். அப்போதுதான் யோகத்தின் வழியாக உங்களை நீங்களே, நல்லவழியில் செல்ல திருத்திக்கொள்ள முடியும் அல்லவா?

யோகத்தில் வழியாக, நாம் நம்முடைய மனதைத்தான் முதலாவதாக சீர் செய்கிறோம். இதுவரை நாம் நம்முடைய உடலுக்கும், மனதுக்கும், உயிருக்கும், ஆன்மாவுக்கும் செய்துவந்த தவறுகளை திருத்துகிறோம். ஏற்கனவே நம்மோடு கலந்து இருக்கும், பிறவி வழியாக வந்த கர்மா என்ற வினைப்பதிவுகளை திருத்தி அமைக்கிறோம். வாழும் வாழ்க்கையில் நம்கூடவே வாழும் இந்த சமூகத்திற்கும், உலகுக்கும் நன்றிக்கடனையும் செலுத்துகிறோம். இயற்கையை மதித்து அதனோடு நல்லுறவு பேணுகிறோம். இந்த பயணத்தில் உடனடியாக நமக்கான மாற்றம் வந்துவிடுவது சாத்தியமில்லை.

ஏனென்றால் நம்முடைய சுமை, கர்ம வினைகளினால் ஆன சுமை, எவ்வளவு என்பது நமக்கு தெரியாது. எத்தனையோ தலைமுறைகளாக, நம்முடைய பரம்பரையினர் தீர்க்காத நிலையில், இப்பொழுதான், நாம் இந்த முயற்சியை எடுத்து, முடிவாக யோகத்தில் இணைந்து பயணிக்கிறோம். அந்த வகையில், இதற்கான ஒரு உந்துதலை உருவாக்கித்தந்த அந்த முன்னோர்களை வாழ்த்தியும் வணங்குவோம்.

இப்படியான, வாழ்க்கைக் குறித்த கவலை,  வாழ்க்கை சிக்கல் என்பதெல்லாம், நாம் யோகத்தில் இணைந்த உடனே மாறிவிடும் என்று எதிர்பார்ப்பது தவறு. அது தானாக நிகழும் அதுவரை நாம் காத்திருக்க வேண்டும். மனதோடு வாழும் நாம், என்றுமே ஒர் எதிர்பார்ப்பிலேயே வாழ்வதற்கு பழகிவிட்டோம். அதை நாம் திருத்திக்கொள்ள வேண்டியதும் அவசியம். அதற்கு யோகசாதனையில் தவம் நன்கு உதவிடும். நம்முடைய மனம் என்றுமே, கடந்த காலத்தையும், நாளைய நாளையும் இணைத்துக் கொண்டே, காட்சியாக காட்டிக் கொண்டே, இன்றை நாளை மறுத்துக் கொண்டே வருவதை நாம் அறிவோம்.

அந்த நிலை மாறி, இன்று, இப்பொழுது என்று விழிப்படைவதற்கு மனம் பழகவேண்டும். அப்படி பழகிவிட்டால், உங்களுடைய கவலை, வாழ்க்கை சிக்கல் அகன்று, அதை தீர்ப்பதற்கான வழிகளும் பிறப்பதை காண்பீர்கள். இதற்கு அன்றாடம் நாம் செய்யும் தவம் உதவுகிறது. அந்த தவத்தின் வழியாகவே முன்னேற்றமும், தன்னம்பிக்கையும் பிறக்கிறது. தீர்வுகளும் உருவாகிறது. மனம் தளராமல் தொடர்ந்து யோகத்தில் பயணியுங்கள். உங்களை வாழ்த்தி மகிழ்கிறேன்.

வாழ்க வளமுடன்.

-

Who offer the solution for our life sufferings? man, god or nature?


வாழ்க்கை சிக்கல்களுக்கு தீர்வை தருவது யார்? மனிதனா? கடவுளா? இயற்கையா?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, வாழ்க்கை சிக்கல்களுக்கு தீர்வை தருவது யார்? மனிதனா? கடவுளா? இயற்கையா?

பதில்:
நல்ல சிந்தனைக்குறிய கேள்விதான். வாழ்க்கை என்பது சிக்கலானது இல்லை. மனிதர்கள் வாழும் காலத்தில் அவர்கள், அவர்களுக்குள்ளாக ஏற்படுத்திக்கொண்டே சிக்கல். அது அந்த மனிதர்களுடைய வாழ்நாளெல்லாம் தொடர்வதால், வாழ்க்கை சிக்கலானதாக தெரிகிறது என்பதுதான் உண்மை. உலகில் ஐந்தறிவு ஜீவராசிகளில் சிக்கல் உண்டா? உண்டு அவை, இயற்கை சிக்கலாக இருக்கும், அதை சமப்படுத்தி, அதை வென்று வாழக்கூடிய தன்மை அவைகளுக்கு உண்டு. இதை Survival of the Fittest என்று சொல்லுவார்கள். தமிழில் மிக கேவலமாக ‘வலியது வாழும்’ என்று மொழி பெயர்த்திருக்கிறார்கள். அது உண்மையில்லை. ‘தகுதியுள்ளது வாழும்’ என்பதுதான் சரியான அர்த்தமாகும். நாமும் அவ்வாறேதான்.

ஒரு மனிதரை சந்தித்து, அவர் யாராக வேண்டுமானலும் இருக்கட்டும், எத்தகைய பின்புலம் உள்ளவராகவும் இருக்கட்டும், என்ற நிலையில் எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டால், நாம் கேட்பதற்காக ‘நன்றாக இருக்கிறேன்’ என்று மறுமொழி தருவார். பெரும்பாலும் முகம் அறியாத நபர்களிடம், தங்களைப்பற்றி எதுவும் சொல்லக்கூடாது என்றுதான் நம் மக்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள். அதனால் நாம் அப்படியே நகர்ந்துவிடாமல், ‘ஏதேனும் பிரச்சனை உள்ளதா? நான் உதவலாமா?’ என்று கேட்டால் கூட ‘தேவையில்லை’ என்றுதான் சொல்லுவார்கள். ஆனால் தங்களிடம் உள்ள குறையை சொல்லுவதற்கும், பகிர்ந்து ஆலோசனை கேட்பதற்கும், உதவியாகவும் யாரையாவது எதிர்பார்ப்பார்கள். இந்த நிலையில், எல்லோருக்குமே வாழ்க்கை சிக்கல் உள்ளது என்று அறியலாம். ஆனால அவரவர் அளவில் சிறியதாகவோ, பெரியதாகவோ இருக்கும்.

பெரும்பாலான மனிதர்களின் முதல்நிலை சிக்கல், பணமும், வருமானமும் தான் என்பதை உறுதியாக சொல்லலாம். பணம், வருமானம் இருப்பவருக்கு, அதை செலவு செய்வதிலும், பற்றாக்குறையிலும் சிக்கல். பணமும் வருமானமும் இல்லாதவருக்கு அன்றாட செலவுகளுக்கே சிக்கல். இந்த இரண்டுக்குப் பிறகுதான் மற்ற எல்லா சிக்கல்களையும் வரிசைப்படுத்த முடியும்.

இத்தகைய சிக்கல்கள் தானாக வந்ததா? சிந்தித்துப்பாருங்கள். கொஞ்சம் முன்னோக்கி பார்த்தால், எங்கோ, ஏதோ ஓர் இடத்தில் நம்முடைய எதிர்பார்ப்பும், ஏமாற்றமும் கலந்திருக்கும். நம்முடைய செயல்பாடும், திட்டமும், உழைப்பும், சரிசெய்தலும் தடுமாறி இருக்கும். நடப்பது நடக்கட்டும் என்று இருந்தால் கூட காலத்தில் அதுவும் சிக்கலாகிவிடும் தானே?! எனவே எப்படிப் பார்த்தாலும், ஒரு சிக்கல் எழுகிறது, எழுந்திருக்கிறது என்றால், அது நம்மால்தான் வந்திருக்கிறது என்று சொல்லலாம். நம்மைச் சார்ந்தவர்களால் கூட நமக்கு வரும். அங்கே நாம் தப்பிக்கவும் வழியில்லை. ஏனென்றால், குடும்பம், உறவு, வாழ்க்கைத்துணை, குழந்தைகள், நண்பர்கள் என்றில்லாமல் தனித்து வாழ்ந்திடவும் வழியில்லையே. 

இங்கே நம்முடைய முன்னோக்கிய பார்வையும், எதிர்கால திட்டமிடுதலும் நிச்சயம் தேவைப்படும். இயற்கையில் சிக்கல் எழுகிறதா? என்றால் ஆம், ஆனால் அது அதன் போக்கில்தான் நிகழ்கிறது. ஒரு பழமொழி சொல்லுவதுபோல, ‘உப்பு விற்கப்போனால் மழை பெய்கிறது, மாவு விற்கப்போனால் காற்று அடிக்கிறது’ என்பதாக. கிராமங்களில் இதற்கு பதிலும் சொல்லுவார்கள், ‘இது ரெண்டையும் கலந்து பண்டமாக செய்து விற்கலாம்ல’ என்பார்கள். எனவே இயற்கை நமக்கு எந்த ஒரு சிக்கலையும், தனி நபருக்காக உருவாக்குவதில்லை. இயற்கையோடு வாழ்ந்தாக வேண்டிய நாம்தான் அதில் சிக்கிக் கொள்கிறோம்.

நீங்கள் கேட்ட கேள்வியில்,  தீர்வை தருவது யார்? மனிதனா? கடவுளா? இயற்கையா? என்பதில், மனிதன், கடவுள், இயற்கை இம்மூன்றுக்கும் ஒரு தொடர்பு இருப்பதையும் நாம் அறியலாம். எப்படியென்றால், மனிதன் கடந்து உள்ளே பயணித்து தன்னை அறிந்தால் இயற்கையின் உண்மையை தெரிந்து கொள்ளலாம் என்ற விளக்கமாகும். அப்படியானால் முடிவாக என்ன சொல்லமுடியும் என்றால், மனிதன் இயற்கையிலிருந்து விடுபட்டவன் இல்லை.

ஆனால் அவன் தனித்திருப்பதாக கருதுகிறான். இயற்கையில் ஒரு விதி இருக்கிறது. அது செயல் விளைவு தத்துவமாக செயல்படுகிறது. இன்னது செய்தால் இன்னது விளையும் என்பது பொதுவிதி. இது யாருக்காகவும், எதனாலும் மாறாது, குழையாது. சிதறாது. இதை புரிந்து கொண்டால், மனிதன் உருவாகிக்கொண்ட சிக்கல்களுக்கு தீர்வு மனிதனாலேயேதான் பெறமுடியும். மனிதன் தனக்குத்தானே தீர்வு தரவும் முடியும், பிறருக்கும் தீர்வு தரமுடியும். அதுபோலவே உங்களுக்கு நீங்களும் தீர்வு கொண்டுவரலாம், பிறரும் உங்களுக்கு தீர்வு தந்துவிடமுடியும். இதை சாத்தியப்படுத்துவது யார்? நீங்களேதான்.

வாழ்க வளமுடன்.
-

How thanduvada suthi and nadi suthi will helps to shanti yoga meditation?


சாந்தி தவத்திற்கு எப்படி நாடி சுத்தி, தண்டுவட சுத்தி உதவுகிறது?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, சாந்தி தவத்திற்கு எப்படி நாடி சுத்தி, தண்டுவட சுத்தி உதவுகிறது?


பதில்:

வேதாத்திரிய யோகத்தில் இணைந்துகொண்ட ஒரு தவசாதகருக்கு, குருவானவர் தீட்சை வழங்கி, மூலாதாரத்தில் இருக்கும் குண்டலினி சக்தியை எழுப்பி, தண்டுவடம் வழியாகவேதான், ஆறாம் நிலையான யோகவாசல் என்று அழைக்கப்படும் ஆக்கினை சக்கரத்திற்கு கொண்டுவந்து நிறுத்துகிறார். ஒரு குரு தன்னுடைய சக்தியால், தவ ஆற்றலால் தொட்டு எழுப்படும் வழிமுறை என்பது இதுதான். இத்தகைய குண்டலினி சக்தியை, தானாகவோ, வெறும் பயிற்சி மூலமாகவோ, வாசியோகம் போன்ற பயிற்சியாலோ, உடலைலசைத்து எழுப்பிக்கொள்ளும் பயிற்சியாகவோ செய்தால், உடனடியாக ஆக்கினை சக்கரத்திற்கு வந்துவிடாது. மேலும் அதற்கு கீழே இருக்கின்ற வேறு நான்கு ஆதார சக்கரத்தில் நின்றுவிடவோ, வழியில் சிக்கிடவோ கூடும்.

வேதாத்திரியத்தில் ஆக்கினை தவம் கற்று இயற்றிவரும் வேளையில், பொதுவாக மூன்று நாட்கள், ஒருவாரத்திற்குள் ஆக்கினை தவம் வழியாக தவ ஆற்றல் பெருகிவரும். அந்த தவ ஆற்றலை நம் உடலும், மனமும் தாங்கிடாது அல்லல்படும். தலைவலி, தலை பாரம், தூக்கமின்மை, தடுமாற்றம், உடல் சோர்வு இவற்றை தரும். நெற்றியின் முன்பக்கம் சிவந்து, வலியும், எரிச்சலும் உண்டாகும். இந்த நிலையை புரிந்துகொண்டு, தவ ஆற்றலை, உடல் ஆற்றலாக மாற்றிக்கொள்ள வேண்டும். ஏனென்றால், தவ ஆற்றலை தாங்கும் அளவிற்கு உடலும், மனமும் பழகிக்கொண்டால்தான் நல்லது.  இப்படி தவ ஆற்றலை உடலுக்கும் மனதிற்கும் மாற்றிடும் பொழுது, அவற்றிற்கான சக்தியாக மாறிவிடும்.

இந்த ஒரு மாற்றத்தைத்தான் சாந்தி யோகம் எனும் சாந்தி தவம் செய்கிறது. ஆக்கினைக்கு கொண்டு வந்து நிறுத்தப்பட்ட குண்டலினி சக்தி, மீண்டும் மூலாதர மையத்திற்கே கொண்டு செல்லவேண்டும். மேலும் நினைத்த உடனே ஆக்கினையிலிருந்து, மூலாதாரம் சென்று நிறைவு பெற வேண்டும் என்பது பொது விதி. இந்த நிலைக்கு, தண்டுவடமும், நாடிகளும் தடை இல்லாது இருக்கவேண்டும் அல்லவா? அதற்காகவே, நாடி சுத்தி எனும் பயிற்சி பத்து முறை செய்வதும், தண்டுவட சுத்தி பத்துமுறை செய்வதும் வழக்கமான நடைமுறையில் இருக்கிறது.

பொதுவாகவே எந்த தவம் செய்ய ஆரம்பிக்கும் பொழுதும், குண்டலினி சக்தி எழுவதில், இறங்குவதில் எந்த பிரச்சனையும் நேர்ந்துவிடக் கூடாது என்ற நிலையில்தான், முன்கூட்டியே பயிற்சியாக அமைத்துவிட்டார்கள். ஆரம்பகாலத்திலேயே நன்கு இந்த நாடி சுத்தி, தண்டுவட சுத்தி ஆகியன நன்கு பழகிக் கொண்டால், நம்முடைய நாடிகளும், தண்டுவடமும், மூச்சும் வளம் பெறும். நம்முடைய தவ சாதனைக்கும் உறுதுணையாக அமைந்திருக்கும் என்பது உறுதி.

வாழ்க வளமுடன்.

-

Invitation for Friend and Followers


அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும் ஒர் அழைப்பு!


Facebook, Twitter, Instagram, WhatsApp and Telegram, YouTube, SnapChat,  Etc. ஆகிய அனைத்து சமூகத்திற்கு,

வயது வித்தியாசம் இன்றி, ஒரே கருத்துப் பரிமாற்றம், எனக்கு பிடித்திருக்கிறது என்ற ஒரு உள்ளார்ந்த விருப்பம், எதிராளை பாராட்டுதல், ஊக்குவித்தல், இப்படியான நோக்கம் அமைந்து, சமூக இணையதளங்களில் கலந்திருக்கிறோம். ஒவ்வொருநாளும் முடிவின்றி அது தொடர்கின்றது.

நாம் இங்கே, நட்பாக இணைந்திருக்கிறோம். எத்தனை ஆண்டுகால நட்பில் நெருங்கி உறவினர்கள் போலான நெருக்கத்தையும் பெற்றிருக்கிறோம். நேராகவும் பார்த்து, எந்த வித்தியாசமும் இன்றி பழகுகிறோம். அன்பு பாராட்டுகிறோம். அதை ஒருவருக்கொருவர் பகிர்ந்தும் கொள்கிறோம். அதுமட்டுமே, மகிழ்ச்சி, பூரிப்பு, சந்தோசம், கவலை, துக்கம், சினம், வெறுப்பு, சிரிப்பு, மெல்லிய நகைச்சுவை, கேலி, கிண்டல் இப்படி எல்லா உணர்வுகளையும் கூட பகிர்ந்துகொள்கிறோம். பிடிக்கவில்லை என்றால் கண்டிப்பும் காட்டுகிறோம். அதை மாற்றிக்கொள்ளவில்லை என்றால் பிளாக்செய்து நீக்கியும் விடுகிறோம், நீங்கியும் விடுகிறோம்.

நமக்கென்று இருக்கின்ற, இருந்த பிரச்சனைகளில் சிக்கினாலும் கூட தனித்து நின்று, அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், அதைச்சொல்லி புலம்பாமல், இன்னொருவரையும் கஷ்டப்படுத்தாமல், பேஸ்புக் சமூக குடும்பத்தில் ஒரு இறப்பு நிகழந்தால் பரிதவிக்கிறோம், அஞ்சலி செலுத்துகிறோம். அவர் ஆன்மா சாந்தியடைய இறையை வேண்டுகிறோம். ஒரு குழந்தை பிறந்தால் மகிழ்கிறோம். அன்பையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறோம். நண்பர்களின் பிறந்தநாளில் நாமும் குதூகலம் அடைகிறோம். 

ஒருவருக்கொருவர் வேற்றுமையில் ஒற்றுமை என்று சொன்னால் மிகப்பொருத்தம். பால்பேதம் அற்றும்கூட பழகுதல் இங்கேதான் சாத்தியமாகிற்று என்றும் சொல்லலாம்.

அதுபோக உலகில் நாம் காணும், வஞ்சம், பழிவாங்குதல், ஏற்றத்தாழ்வு, மதியாதிருத்தல் அனுபவங்களும் கூட லேசாக உண்டுதான் எனினும் அவர்களை எளிதாக விலக்கியும், கடந்தும் வந்திருக்கிறோம். நட்பு எண்ணிக்கை அதிகம் ஆகிவிட, அரசியல் மேடையாகிப் போனது என்பது சோகம் தான். எனினும் அவர்களோடு நட்பை முறித்துவிடவில்லையே?! இங்கே இதுவரை சொன்ன எல்லாமே இன்னமும் தொடர்கிறதுதான். எனினும்... ஏதோ ஒன்றை விட்டுவிட்டு கலந்திருக்கிறோம் என்று மனம் உறுத்துகிறது. அது என்ன?

ஒரு நட்பாக நாம் இங்கே இணைந்திருந்தாலும், ஓவ்வொருவராக இழந்துகொண்டும் வருகிறோம், காலத்தால், அவர்களின் வயதால், உடல் பிரச்சனைகளால், பொருந்தாத சூழ்நிலைகளால்! அப்படியான சூழல் நம்மை சூழ்ந்துவிடுவதற்கு முன்னால், எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்ட நாம், நம்மை யார்? என்று அறிவதற்கான பகிர்வை பகிர்ந்தோமா? அதுகுறித்து உண்மைகளை அறிந்தோமா? என்றால் இல்லைதானே?

ஒரு மனிதனாக, இந்த உலகில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து, நட்பாகி, அனுபவித்து, பகிர்ந்து, பெற்று வாழ்ந்து மறைவது மட்டுமா? இந்த பிறப்பு ஏன் நிகழ்ந்தது? பிறப்பில் ஏதேனும் கடமை இருக்கிறதா? நோக்கம் இருக்கிறதா? மனிதனானவன் யார்? நான் யார்? பிறக்கும் முன் எங்கிருந்தேன்? எங்கே போகப்போகிறேன்? அவ்வளவுதானா? வேறேதேனும் உண்மை உள்ளதா? கடவுள் உண்டா? இல்லவே இல்லையா? இருந்தால் எப்படி இருக்கிறது? இல்லையென்றால் எப்படி நிரூபணம் செய்வது?  மிதக்கும் உலகை தாங்கிப்பிடிப்பது யார்? அது இயற்கை என்றால் இயற்கை என்பது என்ன? இப்படி பலவாறாக கேட்டுக்கொண்டோமா? அதை மற்றவர்களிடம் கேட்டோமா? பதில் அறிய முயற்சித்தோமா? தெரிந்த பதிலையாவது சொன்னோமா? என்ற கேள்விகள்தான் என்னுடைய மனதை உறுத்துகிறது.

இங்கே நான் ஏதோ எனக்கு தெரிந்த வழியில் சொல்லுவதாக நினைக்காமல், இதே பதிவையே நீங்கள் எழுதியதாக நினைத்து, உங்களுக்குத் தெரிந்ததை பகிர்ந்து கொள்ள முயற்சிக்கலாம் என்பதும், பகிர்வுகள் இல்லாமல் நீங்களாகவே தேடிக்கொள்ளலாம் என்பதும் என்னுடைய விருப்பம்.

ஒருவேளை இந்த மாற்றத்திற்கான விதையை நானும் விதைக்காமல் போனால், இதை, இப்படி ஒரு திருத்தத்தை, வழியை, யோசனையை, இப்படியும் ஒரு வாழ்கைக்கான நோக்கமும் பாதையும் உண்மையும் இருக்கிறது என்றுகூட சொல்லாமல் ஏமாற்றிவிட்டானே என்று நீங்கள் சொல்லக்கூடும். ஏமாற்றியதற்காக நானும் ஏதோ ஒருநாளில் வருந்தக்கூடும். சரிதானே?!

இன்றோ, நாளையோ, எதாவது ஒருநாளோ, இனி நம்மை அறிந்து உணர விருப்பம் கொள்ளலாமா? யோசித்து முடிவெடுங்கள்! இதெல்லாம் ஆகாத வேலை என்றால் கடந்தும் விடலாம், தவறில்லை. நமக்காக வேறு யாரேனும் ஒருவர் நம் குடும்பத்திலேயே பிறவி வழியாக பிறந்து வந்து நம் கடனையும் சேர்த்து அவரின் கடன் தீர்ப்பார் என்பதுதான் உண்மை!

-

Shall we get Ashtamasiddhi by joining yoga? Is it true and how?


யோகத்தில் இணைவதால் அஷ்டமா சித்தி, சித்துக்கள் இப்படி எத்தனையோ அதிசயங்கள் நிகழும் என்கிறார்கள் உண்மைதானா?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, யோகத்தில் இணைவதால் அஷ்டமா சித்தி, சித்துக்கள் இப்படி எத்தனையோ அதிசயங்கள் நிகழும் என்கிறார்கள் உண்மைதானா?


பதில்:

ஆம், சித்தர்கள் இதை, தங்களுடைய கவிதை நூல்கள் வழியாக, புரிந்துகொள்பவர் அறிந்துகொள்வார் என்ற குறிப்பாக எழுதி வைத்தார்கள். அதை அக்காலம் முதல் இக்காலம் வரை நேரடியாக அர்த்தம் புரிந்து கொள்ளாமல் பரப்புரை செய்பவர்கள் மிகுந்திருக்கிறார்கள். இப்போதைய தேடுதலில் கிடைத்த விபரம் என்ன என்று இங்கே பகிர்கின்றேன். படித்துப்பாருங்கள்.

அஷ்டமா சித்துக்களும், மூலிகை மந்திரங்களும்

அணிமா - அணுவைப் போல் சிறிதான தேகத்தை அடைதல்.

மகிமா - மலையைப் போல் பெரிதாதல்.

இலகிமா - காற்றைப் போல் இலேசாய் இருத்தல்.

கரிமா - கனமாவது-மலைகளாலும், வாயுவினாலும் அசைக்கவும் முடியாமல் பாரமாயிருத்தல்.

பிராப்தி - எல்லாப் பொருட்களையும் தன்வயப் படுத்துதல், மனத்தினால் நினைத்தவை யாவையும் அடைதல், அவற்றைப் பெறுதல்.

பிராகாமியம் - தன் உடலை விட்டு பிற உடலில் உட்புகுதல். (கூடு விட்டுக் கூடு பாய்தல்)

ஈசத்துவம் - நான்முகன் முதலான தேவர்களிடத்தும் தன் ஆணையைச் செலுத்தல்.

வசித்துவம் - அனைத்தையும் வசப்படுத்தல்,

-

உச்சாடனம் - மூலிகைகளால் மந்திரித்து வியாதிகள், பேய், பிசாசுகள், மிருகங்கள், எதிரிகள், உடலில் ஏறிய விஷங்களை விரட்டும் செயலே உச்சாடனம்.

ஆகர்ஷணம் - துர்தேவதைகள், தேவதைகள், இறந்து போன ஆன்மாக்கள் போன்றவற்றை அழைத்துப் பேசுவது.

பேதனம் - ஒன்றை வேறொன்றாக மாற்றிவிடுவது. மனிதர்களை, மிருகங்களைப் பேதலிக்கச் செய்வது.

மோகனம் - மயங்கச்செய்வது.

வசியம் - மனிதர்களை, விலங்குகளை வசியம் செய்வது.

வித்துவேஷணம் - விருப்பமில்லாமல் செய்வது அல்லது வெறுப்பை உண்டாக்குவது.

மாரணம் - எதிரிகளை மிரட்டி, கொல்வது.

தம்பனம் - பிற மனிதர்களின் செயல்களை. இயக்கங்களை தடுப்பது.

(நன்றி: இணையதளங்களின் பகிர்வுகள்)

-

இவை எல்லாமே பொதுவாகவே சித்து என்றுதான் அழைக்கப்படுகிறது. இது செயல்படுகிறதோ இல்லையோ? புரிந்து செய்யமுடியுமோ இல்லையோ? பொருந்துமோ பொருந்தாதோ? எப்படி இருந்தாலும் கூட, இதை நாம் பொய் என்றால், நம்மை ஒருவழி செய்துவிடுவார்கள். அதனால் நாமும் நம்பிக்கொள்ளலாம். குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள், மக்கள் மனதை மயக்கி, மயக்கத்தில் ஆழ்த்தும் சித்துக்கள் வேண்டாம் என்று சொல்லுகிறார். உண்மையாகவே, நீங்கள் மேற்சொன்ன பட்டியலை படித்துப்பாருங்கள்.

இதனால் உண்மையிலேயே உங்களுக்கு ஆவதென்ன? ஏதேனும் பிரயோஜனம் உண்டா? மக்களுக்கு நன்மை ஏற்படுமா? இதனால் நீங்கள் உயர்வை அடைந்துவிடுவீர்களா? எந்த அளவிற்கு உங்கள் வாழ்க்கை நலம் பெறும்? மக்களின் அன்பை பெறமுடியும்? பொன்னும் பொருளும் புகழும் அதிகாரமும் நிறைய கிடைத்துவிடுமா? என்றெல்லாம் கேட்டு ஆராய்ச்சி செய்து அதற்கான பதிலை கண்டுபிடியுங்கள்.

முக்கியமாக, இந்த பட்டியலில் இருக்கின்ற எந்த ஒரு சித்து வேலைக்கும், ஆதாரம் ஏதுமில்லை. இதற்கெல்லாம் முழுமையான பாடம் உண்டா? யாரிடம் கற்பது? சொல்லித்தரும் நபர்கள் உண்டா? அவர் என்ன செய்கிறார்? எப்படி அதை பிறருக்கு கற்றுக்கொடுப்பார்? எதன் அடிப்படையில் அதை பிறருக்கு வழங்குவார்? என்பதும் தெரியவில்லை.

யோகம் என்றாலே எதோ மாயாஜாலம், சித்தர்கள் என்றாலே வித்தைக்காரர்கள் என்று கருத்து மேலோங்கி பரவிவிட்டது. நீங்களும் நானும் நம்பும் அளவிற்கு. ஆனால் சித்தர் என்றால், சித்து என்ற உயிராற்றலை உணர்ந்து அறிந்தோர் என்பதுதான் சித்தர் ஆகும். அந்த உண்மையை எல்லா யோகசாதனை அமைப்புக்களும் தருகிறது. வேதத்திரியமும் அதில் உண்டு. 

ஏற்கனவே கர்மா என்ற வினைப்பதிவுகளால் சிக்கித்தவிக்கும் ஒருவருக்கு, இந்த சுமைவேறு தேவைதானா? இருக்கிற வாழ்நாளில் இதை தீர்க்கவே காலமில்லாதபோது, அஷ்டமா சித்துக்களும் அவசியம் தானா? நான் யார்? என்ற பிறவியின் கடமையும், நோக்கமும் நிறைவேற்றுவதை விட்டு, இதற்காக காலம் கடத்துவது சரியானதுதானா? தன்னை அறிதலையும், இயற்கையின் உன்னதம் அறிவதையும், இறையுணர்வு பெறுவதையும் விட முக்கியத்தும் வாய்ந்ததா? இதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

வாழ்க வளமுடன்

-

Does the man born in this world really have a purpose?


இந்த உலகில் பிறந்த மனிதனுக்கு உண்மையிலேயே ஒரு நோக்கம் இருக்கிறதா?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, இந்த உலகில் பிறந்த மனிதனுக்கு உண்மையிலேயே ஒரு நோக்கம் இருக்கிறதா?


பதில்:

இந்த உலகில் பிறந்த, பிறக்கின்ற, பிறக்கப்போகிற ஓவ்வொரு மனிதனுக்கும் ஒரு நோக்கம் இருக்கிறது. மனிதன் என்றால் ஆண் என்பதாக மட்டும் நினைக்கக்கூடாது. பெண்ணுக்கும் அத்தகைய நோக்கம் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், ஆணைவிட பெண்ணுக்குத்தான் அந்த நோக்கம் இயற்கையாக அமைந்திருக்கிறது எனலாம். பெண் ஏற்கனவே இந்த இயற்கையோடு வாழ்பவளும், இயற்கையின் முழு இயல்பை தன்னகத்தே பெற்றவளும்கூட பெண் தான்.

ஒரு நோக்கம் என்பதை, பொதுவாக இக்காலத்தில் எப்படி எடுத்துக்கொள்வார்கள்? பேரும் புகழும் பெறவேண்டும், குறையாத வளமும், நிறைவான பணமும் வேண்டும் என்று சொல்லுவார்கள்.  ஒரு மனிதர் எந்தெந்த நிலையில் வாழ்ந்து பழகுகிறாரோ அந்ததந்த அளவில் நோக்கம் மாறும். அரசியலில் இருப்பவர் கட்சிக்கும், மாநிலத்திற்கும், நாட்டிற்கும் தலைவராக விரும்புவார். அலுவலத்தில் இருப்பவர், அந்த நிறுவனத்திற்கே தலைவராக விரும்புவார். நிறுவனம் வழி, தொழில், வியாபாரம் செய்பவர் உலகின் முன்னோடி நிறுவனமாக தன்னுடையது மட்டுமே இருக்கவேண்டும் என்று உயர விரும்புவார். இப்படி பலப்பல உண்டு.

ஆனால் இதெல்லாம் நிச்சயமானதுதானா? இதிலிருந்து உங்களுக்கு கிடைப்பது உண்மையிலேயே என்ன? பாராட்டும் புகழும் திருப்தியும் என்பது போதுமானதுதானா? ஒரு நொடியில், ஒரு நாளில் யாராவது வேறு ஒருவர், உங்கள்விட ஒரு படி முன்னேறினால் உங்கள் நிலை என்னவாகும்?! மேலும் தீடீரென்று உயர்த்தில் இருப்பவர், மறுநாள் இல்லை என்ற நிலை என்பதுதான் உலகில் நாம் பார்க்கிறோம். இதுநாள் வரை அவருடைய போராட்டம்  என்னவாயிற்று? என்ன நிறைவான பலனை அடைந்தார்? நிஜமாகவே அவருக்கு என்ன கிடைத்தது? நிச்சயமாக அவர் நோக்கம், விருப்பம் நிறைவேற்றம் அடைந்ததா? குறையோடு போய்ச்சேர்ந்தாரா? திருப்தியாக இருந்தாரா? என்ற கேள்விக்கு உங்கள் விடை என்னவாக இருக்கும்?! யோசித்துப்பாருங்கள்!

ஆனால் இதெல்லாம் உலக வாழ்க்கை இயல்புதான், பொருள்முதல்வாத உலகில், நாம் உழைப்பதும் அதனால் பொருள்வளம் பெறுவதும் தேவையே. அதை விட்டு விலகமுடியாது. குரு மகான் வேதாத்திரியும் கூட இதையெல்லாம் விட்டுவிடு என்று சொன்னதே இல்லை. ஆனால் போதும் என்ற நிறைவான மன நிலைக்கு, வாழும் பொழுதே வந்துவிடு என்று சொல்லுகிறார். அந்த அளவிற்கு மேல், தேவைப்படும் பிறருக்கு பகிர்ந்தளித்து உதவுக என்று வலியுறுத்துகிறார்.

உண்மையில், ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் பிறப்பின் நோக்கம், தன்னை அறிவதுதான். இந்த இயற்கை அதைத்தான் நமக்கு உள்நோக்கமாக அமைத்திருக்கிறது. அதுதான் மனதில் இருக்கிறது, வெளியேவும் பிரகாசிக்கிறது. ஆனால் வளரும் காலத்தில் அது பலவகைகளில் சிக்கி மறந்துவிட்டது. உங்களுக்கு இது பிடிக்கும் என்ற ஒன்றை செய்தால், பிறகு உங்கள் மனமே ‘நான் கேட்டது இது இல்லையே’ என்று சொல்லிவிடும். இப்படி ஓவ்வொன்றாக எதை நீங்கள் விரும்பினாலும் அதில், உங்களுக்கும் உங்கள் மனதிற்கும் திருப்தி ஏற்படுவதே இல்லை. உண்மைதானே? இல்லை நான் பொய்யாக சொல்லுகிறேன் என்று நினைக்கிறீர்களா?

நம்முடைய மனம் மிகப்பெரிய பேராற்றலின் ஒரு சிறுபகுதி. அதை வாழ்க்கையில் சிறிய சந்தோசங்களில் அடைப்பதில் முழுமை பெறுவதில்லை. மனதின் நோக்கம், தன்னையறிவதுதானே தவிர வேறொன்றும் இல்லை. மனம்+இதன்=மனிதன் என்பதால், மனிதனாகிய நமக்கும் தன்னையறிவதுதான் நோக்கம். அதற்காகவேதான் பிறப்பும் நிகழ்ந்தது, நிகழ்ந்துகொண்டும் இருக்கிறது!

வாழ்க வளமுடன்

-

How long we need to travel with the Guru, the master in Yoga?


யோகசாதனையில் எவ்வளவு காலம் குருவோடு பயணிக்க வேண்டும்?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.





கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, யோகசாதனையில் எவ்வளவு காலம் குருவோடு பயணிக்க வேண்டும்?

பதில்:
மிகச்சிறந்த கேள்வி என்று கருதுகிறேன். பெரும்பாலான அன்பர்கள் குருவின் மீது பெரும்மதிப்பு கொண்டு, அவர்களின் வாழ்நாள் காலம் முழுவதுமே குருவோடு பயணிப்பார்கள் என்பது பொதுவானது. அது உண்மையும், இயல்பானதும் ஆகும். இத்தகைய மதிப்பு உலகில் உள்ள மற்ற எந்த தலைவருக்கும், பிற சிறப்பான மனிதருக்கும் ஈடு ஆகாத சிறப்பு பெற்றிருக்கும் என்பதும் உண்மை. என்றாலும் ஏறக்குறைய ஒன்றுபோல தோன்றும். மனிதர்களுக்கு என்றுமே தன்னை வழிநடத்தும் உயர்ந்த மனிதருக்கு, மதிப்பு தந்து, ஒழுங்குதல் இயல்பானது. அது யோகத்தில் இன்னமும் அதிகமாக இருக்கும். ஏனென்றால் வாழ்நாளில் நம்மை உயர்த்தி, பிறவிக்கடன் தீர்த்து, தன்னையறிதலையும், இறையுணர்வையும் பெற்றுத்தருபவர் ஆயிற்றே!

நாம் ஏதேனும் சுற்றுலாவிற்கு சென்றால் அங்கே ஒருவழிகாட்டி இருப்பார், அவர் அந்த ஊரிலேயே பிறந்து வளர்ந்தவராகவும் இருப்பார். தனியாக படிப்பறிவு இல்லாவிட்டாலும், பலமொழிகள் பேசி எல்லாமக்களுக்கும் வழிகாட்டியாக துணைசெய்து வருவார். இப்போது அதுவும் ஒரு கல்லூரி பாடமாகவும் உள்ளது. அந்த வழிகாட்டி, நாம் எங்கே ஆரம்பித்தோமோ, அங்கே வந்து முடிக்கும் வரை துணையாக இருப்பார், அதன்பிறகு அவர் பணி முடிந்துவிடும். அடுத்த நபர்களை நோக்கி அவர், நகர்ந்துவிடுவார். வேறு சில உலகியல், வாழ்வியல், மனித முன்னேற்ற தலைவர்களும் அப்படித்தான், ஒரு குறிப்பிட்ட நிலைக்கும் மேலாக அவரின் துணை நகர்ந்து, வேறு சில புதியவர்களுக்கு நகர்ந்துவிடும்.

ஆனால் யோகசாதனையில், குருவின் துணை என்றுமே நகர்ந்தும் விடாது, அகன்றும் விடாது. ஒருவேளை நாம் குருவை கைவிட்டால் கூட, அவரின் வார்த்தைகளும், அக்கறைகளும் நம்மைவிட்டு பிரியாது என்பதே உண்மை. இதை நீங்கள் அனுபவமாகவும் பெற்றிருக்க வாய்ப்பு உண்டு. இதில், இந்த துணையிருப்பில், குருவும், மற்ற எந்த தலைவர்களும் நம்முடைய எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்க மாட்டார்கள். என்னோடு இரு என்று கட்டாயப்படுத்தவும் மாட்டார்கள். அங்கே ஒரு தனிமனித சுதந்திரமும் இருக்கும். சில உலகியல், வாழ்வியல் தலைவர்கள் விதிவிலக்கு.

அந்தக்கால யோகசாதனையில், குருவோடு பயணித்தல் என்பது, குருவின் காலம் முதல், அவருக்குப் பின்னாலும், அதை ஏற்று வழிநடத்தும் வகையில் இருந்தது. குரு என்ற உயர்ந்த தன்மை என்ற இடம், அடுத்து அடுத்து என்ற நிலையில் மட்டுமே இருந்துவந்தது. எனினும் காலமாற்றத்தில், ஒரு யோகசாதனையில் ஒரு குருவே தன் சீடரை தனக்கு நிகரான குரு அளவிற்கு உயர்த்தியும் வந்தார். இன்றோ, நம் குரு மகான் வேதாத்திரி மகரிஷி, தன்னோடு பயணிக்கும் ஒவ்வொரு அன்பரையுமே தன்னைப்போல குருவாக உயர்த்தி மகிழ்கிறார். அதுவே அவருடைய நோக்கமாகவும் இருந்தது. அவர் தன்னை பிரபஞ்ச வான்காந்தத்தில் கலந்துகொண்ட பிறகும் அது தொடர்கிறது.

இந்த நிலையில், யோகசாதனையில், நம் உயிரோடு கலந்து நிற்கும் குருவானவரின் துணை, நம்முடைய வாழ்நாள் முழுவதுமே துணையாக வருகிறார் என்பதே உண்மை. நாம் குருவிடம், குருவோடு பயணிப்பது என்பது நம்முடைய நோக்கம், ஆர்வம், முயற்சி, பயிற்சி, ஆராய்ச்சி, அனுபவம் என்பதை கொண்டுதான் அமையும். எனவே யோகசாதனையில் எவ்வளவு காலம் குருவோடு பயணிக்க வேண்டும்? என்பதை நீங்கள் தான் முடிவு செய்யவேண்டும்.

வாழ்க வளமுடன்
-

What is the need of truth of Pongal festival?


பொங்கல் பண்டிகை குறித்த உண்மை என்ன? இது தேவைதானா?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.



கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, பொங்கல் பண்டிகை குறித்த உண்மை என்ன? இது தேவைதானா?

பதில்:
மனிதர்களாகிய நமக்கு தேவைதான். பண்டிகை என்றால் பண்டு+ஈகை= பண்டிகை என்றாகிறது. சமூகத்தில் இருக்கின்ற மனிதர்கள் ஒருவருக்கொருவர் பொருட்களை, முழுமனதோடு பகிர்ந்து அளிப்பது என்று பொருள்தரும். இங்கே ஈகை என்பது, எதிர்பார்த்து கொடுப்பது அல்ல, தனிப்பட்ட கொடுக்கல் வாங்கலும் அல்ல. தன்னிடம் இருக்கின்ற மிகுதியை பிறருக்கு அளிப்பது என்று அர்த்தமாகிறது. இது தமிழர்களின் சிறப்பம்சம், சித்தர்கள் வகுத்த வாழ்க்கை நெறியின் அடிப்படையில் மலர்ந்தது என்றும் சொல்லமுடியும். ஏனென்றால் சித்தர்கள், தங்களுடைய வாழ்வில், ஒழுக்கம், கடமை, ஈகை என்ற மூன்று நிலைகளின் அடிப்படையில்தான் வாழ்ந்தார்கள், அதையே மக்களுக்கும் தந்து முறைப்படுத்தினார்கள்.

இங்கே பொங்கல், என்பது இயற்கைக்கும், சூரியனுக்கும் நன்றி போற்றும் விதமான ஒரு வழிபாட்டு நிலை என்பதையும் நாம் குறிப்பிடவேண்டும். பொதுவாகவே மனிதன் தன்னளவில், இயற்கையக் போற்றி வந்தவன். தன்னை காப்பதும் இந்த இயற்கைதான் என்று அறிந்துகொண்ட மனிதன், இயற்கையை தெய்வமாக வணங்குவதில் தவறு இல்லையே? அந்த நிலையில், தினமும் எழுந்து மறைந்து, மீண்டும் தோன்றும் சூரியனுக்கு வணக்கமும், நன்றியும் தெரிவிக்கும் நாளாக, பொங்கல் அமைந்திருக்கிறது.

இது தமிழர் திருநாள் என்று சொல்லுவதற்கு சான்றாக, பழங்கால சங்கப்பாடல்கள் நமக்கு உதவுகிறது எனலாம். இங்கிருந்து மக்கள் உலகெங்கும் புலம் பெயர்ந்ததில், இந்த பொங்கல் பண்டிகையும் பலவேறாக திரிபு பெற்று வெவ்வேறு நிலைகளிலும், பெயர்களிலும் மாறி இருக்கவும் வாய்ப்புள்ளது.

குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள், இந்த பொங்கல் நாளில், அதன் சிறப்பு குறித்தும், யோகத்தோடு இணைந்து நிறைய கவிகள் படைத்துள்ளார். 

“பொங்கிடுவோம் உயிர் உணர்ந்து
புலனடக்க வாழ்வு பெற்றுப்
பொங்கிடுவோம் நாடனைத்தும்
பொறுப்பாட்சி வளம் கண்டு
பொங்கிடுவோம் சமுதாயப்
பொருள் துறையில் நிறைவு கண்டு
பொங்கிடுவோம் மக்கள் குலம்
போர் ஒழித்து அமைதி பெற."
"பயிர் விளைந்த மகிழ்ச்சியிலே உழவர் பொங்க
பங்கீடு பெற்றவர்கள் பயனால் பொங்க
உயிரறிந்த உவப்பினில் யான் உளத்தில் பொங்க
உலகெங்கும் வளம் பெறவே வாழ்த்து கின்றேன்."

இன்னொரு சிறப்பு என்னவென்றால், சூரியனின் வானியல் நகர்வு முக்கியமானது. ஒருமாத காலம், தனுசு ராசி நட்சத்திர கூட்டத்தில் இருந்துவந்த சூரியன், மார்கழி மாதம் என்ற தெய்வீக தன்மைகொண்ட காலம் முடித்து, தன்னை மீண்டும் பொலிவோடு, மகர ராசி நட்சத்திரக் கூட்டத்திற்கு நகர்கிறது. அதுவே தை மாதம் முதல் நாளாகிறது. இன்னொரு சிறப்பாக, சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வும், நின்று இனி தெற்கு நோக்கி நகர்ந்திடும். இதை உத்தராயணம், தெட்சினாயணம் என்றும் சொல்லுவார்கள். அதையும் அறிந்துணர்ந்த தமிழ் முன்னோர்கள், சூரிய வழிபாட்டு நாளாகவும், பொங்கல் பண்டிகை நாளாகவும் அமைத்தார்கள். மேலும் அந்த நாளின் சூரியன், மனிதர்களின் உயிருக்கும், அதே நேரத்தில் சந்திரன் மனிதர்களின் மனதிற்கும் ஊட்டமளிக்கிறது.

எனினும் இதையெல்லாம் மறுத்து, அதெல்ல, இதெல்ல, அப்படி, இப்படி என்று மறுத்துப்பேசுபவர்களை விட்டுவிடலாம். அவர்களின் உரிமையில் அது தேவையில்லை என்றால் விட்டுவிடோம். உங்களுக்கு விருப்பம் இருக்கும் நிலையில், உண்மை அறிந்த நிலையில் கொண்டாடுவது தவறில்லை. இந்த பண்டிகை வழியாக, இந்த ஒரு நாளில், உங்கள் மனதை மாற்றியமைக்கிறீர்கள் என்ற உண்மையையும் புரிந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
-

What is the truth of Jeevathma Paramathma and how to surrender? Please explain in yoga!


ஜீவாத்மா, பரமாத்மா என்பதும், ஜீவாத்மாவை பரமாத்மாவோடு இணைப்பது என்பதையும் யோகத்தில் விளக்க முடியுமா?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, ஜீவாத்மா, பரமாத்மா என்பதும், ஜீவாத்மாவை பரமாத்மாவோடு இணைப்பது என்பதையும் யோகத்தில் விளக்க முடியுமா?



பதில்:
மிகப்பெரும் இறை தத்துவ மேதைகள் காலம் காலமாக சொல்லிவரும் விளக்கம் ஆகும். பக்தி மார்க்கத்தின் மூலம், வைஷ்ணவத்தின் வழியாக, முழுமையை மக்களுக்கு, எளிமையாக அளித்த, விசிஷ்டாத்துவத்தின் உண்மையை அருளிச்செய்த மகான் இராமானுஜனாச்சாரியார், ஜீவாத்மா, பரமாத்மா என்பதையும், இந்த ஜீவாத்மாவை பரமாத்மாவோடு இணைப்பது என்ற உண்மையையும் விளக்கித்தந்தார். பெரும்பாலான எல்லா வைஷ்ணவ பெரியோர்களும், ஆழ்வார்களும் பாடல்கள் வழியாக விளக்கியும் உள்ளார்கள். அதை இங்கே விளக்கமாக காண்பது கடினமே. அப்படி விளக்கினாலும் முழுமையாக புரிந்து கொள்வதும் கடினமே.

ஏனென்றால், உணர்வு பூர்வமாக அறிந்துகொள்ள வேண்டியதை, எழுத்தாலும் வார்த்தைகளாலும் புரியவைக்க முடியாது. அந்த விளக்கமும் முழுமையாக உங்களை வந்தடையாது. ஒரு மலர் மலர்ந்து நறுமணம் வீசுகிறது என்று எழுதினால், அந்த பூவும், அதன் நறுமணமும் எப்படி உங்களுக்கு உணர்வாக கிடைக்கும்? உலகில் சாதாரணமாக நாம் காண்கின்ற பூவும், நுகர்கின்ற நறுமணமும் கூட இங்கே வார்த்தையால் விளக்கிட முடியவில்லை அல்லவா? அப்படியான நிலையில், இந்த கேள்விக்கான பதிலை விளக்கிவிடுவதும் கடினம்.

என்றாலும், அதில் சொல்லப்படும் உண்மை என்ன என்று பார்க்கலாம். ஜீவாத்மா என்பது, நாம் தான். ஒரு ஜீவன், மனிதன் என்று எடுத்துக் கொள்ளவேண்டும். ஐந்தறிவு ஜீவன்களுக்கு அடுத்துவந்த, ஆறறிவான மனிதனுக்கு மட்டுமே ஆத்மா என்பது சிறப்புத்தகுதி பெறுகிறது. மனிதன் ஒரு ஜீவன் என்பதால், ஜீவாத்மா. ஒரு மனிதனாவன், உடல், மனம், உயிர் என்பதைக் கடந்து ஆத்மா என்ற நிலையிலும் இருக்கிறான். அத்தகைய ஆத்மாவின் களங்களை போக்க வேண்டும் என்பதற்காகவே பிறவி எடுத்துள்ளான் என்பது கருத்து. அந்த களங்கள் என்பது என்ன? கர்மா என்ற வினைப்பதிவுகள் தான்.

இங்கே பரமாத்மா என்பது, இறையாற்றலை குறிக்கிறது. பரம் என்றால் முதன்மையான, முழுமையான, வேறெதும் ஈடாக சொல்ல இயலாத தனித்த ஒன்று என அர்த்தமாகிறது. அத்தகைய பரமாத்மாவோடு, ஜீவாத்மாவை ஒன்றிடச் செய்வதுதான் பிறவிக்கடன் என்பதே இதன் உண்மையாகிறது. இங்கே ஜீவன், ஆத்மா, பரமாத்மா என்ற மூன்று நிலைகள் உள்ளன.
சித்தர்கள் துவைதம், விசிஷ்டாத்துவைதம் என்பதையெல்லாம் கடந்து அத்வைதம் என்ற நிலையில் தங்களை நிறுத்திக்கொண்டார்கள்.

ஆதிசங்கரரும் அத்வைதத்தில் பெரும்பங்கு ஆற்றியவரே எனினும் பாமர்களுக்காக பக்தியிலும் பல பகிர்வுகளை தந்திருக்கிறார். சித்தர்களின் வழியான யோகத்தில் ஜீவாத்மா, பரமாத்மா என்பதும், ஜீவாத்மாவை பரமாத்மாவோடு இணைப்பது என்பதும் வேறெரு வகையாக விளக்கமளித்து பின்பற்றப்பட்டு வருகிறது.

நீங்கள் யோகத்தில் இணைந்து, தகுந்த குருவின் வழியாகவே இந்த உண்மைகளை புரிந்துகொள்ள முடியும். 

வாழ்க வளமுடன்
-

How we try to control who always do correction meaningless?


நம்மோடு இருந்துகொண்டு நம்மை குறை சொல்லுபவர்களை திருத்துவது எப்படி?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, நம்மோடு இருந்துகொண்டு நம்மை குறை சொல்லுபவர்களை திருத்துவது எப்படி?


பதில்:

நம்மோடு இருப்பவர்கள் மட்டுமல்ல, நம் குடும்பத்தில் இருப்பவர்களே நம்மை குறை சொல்லுவார்கள் தானே?! அது இயல்புதான். பொதுவாகவே, நீ எனக்கு பின்னால்தான் பிறந்தாய், அதனால் உனக்கு அவ்வளவு அனுபவம் போதாது. என்னிடம் இருந்து கற்றுக்கொள் என்றுதான் அவர்கள் நினைப்பார்கள். இல்லையென்றால், சில வயது கூடியவர்கள், படிப்பில் உயர்வு, பொருள் பணம் செல்வாக்கில் உயர்ந்தவர்கள் அப்படி மற்றவர்களை குறை கூறுவதை வழக்கமாகவே வைத்திருப்பார்கள். இவர்களின் அன்றாட வேலையே, யாரையாவது குறை சொல்லிக்கொண்டே இருப்பதுதான். அதுதான் அவர்களுக்கு திருப்தி அளிக்கும். ஒரு நீங்கள் உயர்ந்தால், அதாவது உங்கள் திறமையில் நீங்கள் உயர்ந்தால் கூட, உடனே, ‘பார்த்தாயா நான் சொல்லித்தான் நீ உயர்ந்தாய்’ என்று சொல்லுவார்கள். இதையே மற்றவர்களிடம் சொல்லியும் மகிழ்வார்கள்.

இவர்களை என்ன செய்யமுடியும்? நேரடியாக இவர்களிடம் ஒன்றும் சொல்லுவதற்கில்லை. ஏனென்றால், நாம் சொல்லுவதையும், விளக்கம் தருவதையும் ஏற்க மாட்டார்கள். சில வேளைகளில் நாம் இவர்களை வேண்டவே வேண்டாம் என்று தவிர்க்கவும் முடியாது. அத்தகைய நிலையில், நீங்கள் அவர் சொல்லுவதை அப்படியே கடந்து போய்விட வேண்டியதுதான். காதால் கேட்டாலும் கேட்காதது போல விட்டுவிட வேண்டும். இப்படி சொல்லுகிறாரே என்று உங்கள் மறுமொழி இருக்கவேண்டியதில்லை. அவரைக்குறித்தும், அவரின் குறை வார்த்தைகளை குறித்தும் கவனம் கொள்ளத் தேவையில்லை. இதை அவருக்கு தெரியாமல், அறியாமல் செய்யவேண்டியது முக்கியம்.

இதுபோலவே நீங்களும் வேறு யாரையும், குறை சொல்லாமல் இருக்கவேண்டியது அவசியம். அந்த பழக்கத்தை உடனே தொடருங்கள். உங்களிடம் இருந்து பாராட்டு மட்டுமே கிடைக்கும் என்பதுபோல ஒரு பிம்பம் உருவாக்கிக் கொண்டால் நல்லதுதான். அது உங்களுக்கு நற்பெயரை உருவாக்கித்தரும். அப்படியில்லாமல், நீங்களும் மற்றவர்களை குறை கூற ஆரம்பித்தால், அவர்கள் உங்களை தனித்து இயங்கச் செய்துவிடலாம். தீடீரென்று ஏதேனும் உதவி கேட்டால் கூட எதும் செய்ய முன்வர மாட்டார்கள் என்பதை நினைவில் கொள்க.

இந்தமாதிரியாக குறை சொல்லுபவர்களை எப்படி சரி செய்வது என்று கேட்டீர்கள். அது உங்களால் முடியாது. யாராலும் முடியாது. சம்பந்தப்பட்ட அவரேதான் அவரை திருத்திக் கொள்ள முடியும். அவர் உங்களுக்கு மிக நெருக்கமானவர், வேண்டியவர், குடும்பத்தில் ஒருவர் என்றால், அவரை நீங்கள் பார்க்கும் பொழுதும், நினைக்கும் பொழுதும் ‘வாழ்க வளமுடன்’ என்று வாழ்த்தி வாருங்கள். இந்த வாழ்த்து உள்முகமாக அவரை மாற்றியமைக்கும் என்பது உறுதி. ஏதேனும் ஒருவகையில் உங்களுக்கும் அவருக்குமான இந்த குறை சொல்லும் நிலையை மாற்றி அமைக்கும். உங்களைக் குறித்த ஒரு புரிதல் அவருக்கு கிடைத்துவிடும். அவராகவே குறை சொல்லுவதை விட்டுவிடக்கூடும். எனவே இதற்காக நீங்கள் வேறெதும் செய்யவேண்டாம். அது உங்களுக்கு பாதகமான விளைவையும் தந்துவிடும்.

வாழ்க வளமுடன்.

-

Why unable to complete and get the obstacles on action based on thought?


நினைத்த ஒன்றை செய்யமுடியாமல் போவதும், தடை உண்டாவதும் ஏன்?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, நினைத்த ஒன்றை செய்யமுடியாமல் போவதும், தடை உண்டாவதும் ஏன்?

பதில்:

நினைத்த ஒன்றை செய்வது என்றால், தனி மனிதனாக இருக்கும் பொழுது, தனக்காக ஏதேனும் செய்து கொள்வது நிகழும், எனக்கு பிடிக்கும் அதனால் இப்படி செய்கிறேன் என்று சொல்லவும் முடியும். ஆனால் அது, உங்களுடைய அளவுக்குள் இருப்பதாகவும், மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய வரையறை, வரம்பிற்குள் இருப்பதாகவும் இருக்கவேண்டியது அவசியம். ஏனென்றால் ஒரு மனிதனாகிய நீங்கள், சமூகத்தின் அங்கம். உங்களுடைய எந்த ஒரு செயலும், நடவடிக்கையும் இந்த சமூகத்தின் வழியாக பிரதிபலிக்கும் என்பதே உண்மை. அதுதான் இயற்கையாகவும் உள்ளது.

உதாரணமாக, உங்கள் வீட்டிற்குள்ளே நீங்கள் எப்போதும், உங்களுக்கு பிடித்தவற்றை செய்யலாம். உங்கள் தாய், தந்தை, உடன்பிறந்தோர் அதை அனுமதிக்கலாம், சிலவேளை அவர்களும் கூட, உங்களிடம் ‘இப்படியெல்லாம் செய்யாதே, இது தவறு, திருத்திக்கொள்’ என்பார்கள். சில விருந்தினர்கள், சொந்தபந்தம் உங்கள் இல்லத்தில் வந்திருந்தால் கூட, உங்கள் நடவடிக்கைகள் பார்த்து, ‘இவன்(ள்) ஏன் இப்படி?’ என்று நினைத்துக் கொள்வார்கள். உங்கள் குடும்பத்தோடு உரிமை உள்ளவர்கள், உங்களைப்பற்றி மற்றவர்களிடம், திருத்தச் சொல்லி அக்கறை கொள்வார்கள். சிலர் நேரடியாக உங்களிடமே சொல்லவும் கூடும்.

குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள், ‘உனக்கும் நல்லதாய் ஊருக்கும் நல்லதாய் எண்ணுவதும், சொல்வதும், செய்வதும் சிறப்பு’ என்று சொல்லுகிறார். உங்களுடைய எந்தஒரு சிந்தனை, செயல், வார்த்தை ஆகியன, மற்றவர்களும் ஏற்றுக்கொள்ளும்படி அமைத்துக் கொண்டால், எந்த தடையும் நேரப்போவதில்லை. நீங்கள் நினைத்ததை செய்வதற்கு சாதகமாக அமையும், மேலும் பிறரும்கூட இதில் துணையாக இருப்பார்கள்.

இதற்கு சரியான தீர்வு, முன்கூட்டியே விளைவு என்ன? என்று தீர்மானித்துக் கொள்வதுதான் நல்லது. இதை செய்தால் எனக்கு என்ன நிகழும்? இதனால் எனக்கோ, மற்ற யாருக்காவதோ தொந்தரவும், பிரச்சனைகளும் எழுமா? அது உடனடியாகவா? நீண்டநாள் கழித்து வருமா? இதில் ஏதேனும் மாற்றம் செய்யமுடியுமா? இதன் தேவையும் அவசியமும் உண்மைதானா? என்று பல கேள்விகள் கேட்டு அதற்கான விடையை தெளிவு செய்து கொள்ளலாம்.

ஒரு அலுவலகத்திலும், அரசு நிர்வாகங்களிலும் எந்த ஒரு முடிவும் உடனடியாக செயல்படுத்தப்படுவதில்லை. ஒருவேளை அப்படி செயல்படுத்துவதாக இருந்தால், ஏற்கனவே சில நிபுணர்கள் குழு அதை ஆராய்ந்து முடிவு செய்திருக்கும் என்பதே உண்மை. திடீரென்று ஒன்றை பிறர் நமக்கு சொன்னால் கூட, திணித்தால் கூட நாம் அதை ஏற்க மறுப்போம் தானே? அதுபோலவே நீங்கள் சொன்னதை நினைத்ததை சொல்லமுடியாமலும், செய்யமுடியாமலும் போகலாம். 

இன்னொரு முக்கியமான காரணம், நீங்கள் நினைத்ததை செய்வதற்கு தகுந்த காலமா? என்பதை முதலில் ஆராயவேண்டும். சூழ்நிலையும் பொருத்தமாக உள்ளதா என்பதையும் அறியவேண்டும். இப்படி எல்லாவற்றையும், திட்டமிட்டு அலசி, ஆராய்ந்து பிறகு செயலாக்கம் செய்தால், நினைத்த ஒன்றை செய்வதில் வெற்றி உண்டு.

வாழ்க வளமுடன்.

-

Why need to call that one is the God, Almighty, Supreme Power, and Divine?


இறை, இறைவன், கடவுள், தெய்வம், எல்லாம் வல்லவன், இப்படி சொல்வதெல்லாம் அவசியமானதுதானா?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, இறை, இறைவன், கடவுள், தெய்வம், எல்லாம் வல்லவன், இப்படி சொல்வதெல்லாம் அவசியமானதுதானா?


பதில்:

இறை, இறைவன், கடவுள், தெய்வம், எல்லாம் வல்லவன் என்ற வார்த்தைகள் தரும் உண்மையை நீங்கள் இன்னும் அறியவில்லை. அறிந்துகொள்ளவும் மறுக்கிறீர்கள். ஒன்றும் தவறில்லை. இந்த வார்த்தை மற்றும் உண்மையில் உங்கள் அனுபவம் அப்படி இருக்கிறது. மேலும் நீண்டகாலமாக சில கருத்துக்களை கொண்டிருப்பவர்கள் உடனடியாக மாற்றிக் கொள்ளவும் முடியாது. அதோடு உங்கள் பார்வையில், பொய்கள் தான் கண்ணில் பட்டிருக்கிறது. அதனாலும் கூட நீங்கள் இந்த கருத்தில் இருக்கலாம். வேறு யாரெனும் ஒரு வழிகாட்டியின் அறிவுரையாலும் அப்படியாக கருத்தில் நின்றிருக்கலாம். உங்களைப்பொறுத்தவரை அப்படி சொல்வது அவசியமில்லைதான்.

இதற்கு விளக்கமாக, குரு மகான் வேதாத்திரி சொன்ன உண்மைகளையே இங்கே குறிப்பிடுகின்றேன். ஒரு பொருளை நாம் தூக்குவது என்றால், நம்மால் எவ்வளவு தூக்கமுடியுமோ அவ்வளவு எடை கொண்ட பொருளைதான் தூக்க முடியும். காய்கறி அங்காடியில் உள்ள ஒரு மனிதர், தன் முதுகில் கிட்டதட்ட 50 கிலோ முதல் 100 கிலோ வரை தூக்கமுடியும். அதை நாம் வழக்கமாக பார்க்கிறோம். அதற்குமேல் என்றால் யாராலும் முடியாது. உங்களால் முடியும் என்றால் முயற்சிப்பதில் தவறில்லை. இப்போது ஓர் உண்மை நமக்கு தெரியவரும். தூக்கும் பொருளைவிட நாம் வலுவாக இருந்தால்தான், அந்த பொருளை தூக்கமுடியும். ஒரு மேஜைமேல் பத்து மூட்டைகளை அடுக்கினால் மேஜை உடைந்து நொறுங்கிவிடும் அல்லவா?

இப்போது உங்களுக்கு ஒரு காட்சி தருகிறேன். இந்த பூமி எவ்வளவு வலு உடையது என்பது உங்களுக்கு தெரியுமா? எத்தனையோ கோடி டன் எடை இருக்கலாம். அத்தகைய பூமியை தாங்கிக் கொண்டிருப்பது யார்? உடனே இதற்கு இயற்கை என்று நீங்கள் பதில் தருவீர்கள். ஆம் இயற்கைதான், தன்னிலே இந்த பூமியை மிதக்கவிட்டுக்கொண்டு இருக்கிறது. அந்த இயற்கைக்குத்தான் மதிப்பு கொடுத்து, வார்த்தைகளாலும் மதிப்பு கொடுத்து, இறை, இறைவன், கடவுள், தெய்வம், எல்லாம் வல்லவன் என்று பலவிதமான் பெயர்களில் அழைக்கிறோம். அந்த வார்த்தை இருக்கின்ற மதிப்பை உணராதவர்களுக்கு, அது மிக சாதாரணமான ஒலியாகவும், வார்த்தையாகவும் தான் தெரியும்.

நம்முடைய வாழ்வில் இன்று ஜனநாயகம் வந்துவிட்டதால், எந்த நாட்டு மக்களும் (ஒரு சிலர் தவிர) அவர்கள் நாட்டின் ஜனாதிபதியையும் மதிப்பதில்லை, பிரதமரையும் மதிப்பதில்லை. ஆனால் அந்தக்காலத்தில் அரசன், அரசி என்றால் பெரும் மதிப்பு கொண்டிருப்பார்கள். இப்போதும் சிலர் தங்களை அரச பரம்பரை என்று சொல்லிக் கொள்வதை கவனிக்கலாம். அதில் அவர்களுக்கு பெருமை கிடைத்துவிடுகிறது. அந்தவகையில், அரசன், அரசி என்று நேரில் பார்த்தாலும், பார்க்காவிட்டாலும் அந்த மதிப்பை நாம் வழங்குவோம் இல்லையா?! (ஒரு கற்பனையாக அந்தக்காலத்தில் நீங்கள் வாழ்வதாக நினைத்துப்பாருங்கள்).

இதுபோன்றதான உயர்ந்த மதிப்புத்தான், இறை, இறைவன், கடவுள், தெய்வம், எல்லாம் வல்லவன் என்ற சொல்லிலும் அடங்கி இருக்கிறது. எனினும் உங்களுக்கு என்ன விருப்பம் இருக்கிறதோ அப்படி அழைக்கலாம். யாரும் உங்களை குறை சொல்லப்போவதில்லை. என்றாலும் உணர்வால் நீங்களே உங்களையறியாமல் அப்படி சொல்லும் காலமும் வரலாம்!

வாழ்க வளமுடன்.

-

Why have a depression? Any best solution for it?


மனம் ஏன் பாரமாக இருக்கிறது? எப்படி அதை சரிசெய்வது?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, மனம் ஏன் பாரமாக இருக்கிறது? எப்படி அதை சரிசெய்வது?

பதில்:

நாம் இந்த உலகில், மனதின் வழியாகவே வாழ்கிறோம். உலக இன்ப துன்பம் அடங்கிய எல்லாவற்றிற்கும் வாசல், நம்முடைய மனமே. நாம் வெளியே போவதற்கும், நமக்குள் ஏதேனும் வருவதற்கும் மனமே வாசலாக இருக்கிறது. நாம் வாழ்கின்ற இந்தக்காலத்தில், ஒவ்வொரு நாளும், உலக முன்னேற்றமும் புதிதுபுதிதாக வந்துகொண்டே, வளர்ந்துகொண்டே இருந்தாலும்கூட, நாம் எப்போதும் ஒரே நிலையில்தான் வாழ்ந்து வருகிறோம் என்பதும் உண்மை. 

ஒரு தலைமுறை என்று எடுத்துக்கொண்டாலும் அது தொடர்கிறது. சராசரியான பார்வைக்கு உதாரணமாக சொல்ல வேண்டுமானல், தாத்தாவுக்கு அப்பா திறமைசாலி, அப்பாவுக்கு மகன் திறமைசாலி, மகனுக்கு பேரன் திறமைசாலி, பேரனுக்கு அவனுடைய மகன் திறமைசாலி என்று தொடராக மாறிக்கொண்டேதான் இருக்கிறது.

ஆனால் மனிதனும், அவனுடைய மனமும் அப்படியேதான் இருக்கிறது. இது, இந்த நிலை மாறிட வேண்டும் என்றுதான், யோகம் உருவானது. யோகம் புரியாதவர்களுக்கு பக்தி துணையானது. இந்த இரண்டிலுமே பலப்பல பொய்கள் கலந்து, மனிதர்களுக்கு நீண்டகாலமாக, எளிதில் நெருங்க முடியாதபடி தூரமாகிவிட்டது.

எனினும் அவ்வப்பொழுது மகான்கள், ஞானிகள் தோன்றி, உருவாகி, மக்களுக்கான மாற்றத்தை, மனதிற்கான மாற்றத்தை வழங்கிக் கொண்டேதான் இருக்கிறார்கள். குரு மகான் வேதாத்திரி மகரிஷியின் நோக்கமும் அதுதான். உலக சமாதானம் என்ற திட்டத்தை முன்னிறுத்தி, உலகம் முழுவதும் ஓரே ஆட்சியில் அமைந்து, உலக மக்கள் நலவாழ்வுக்கு, திட்டத்தை தந்து அதை பலவாறாக தன் வாழ்நாள் முழுவதும் செயல்படுத்தி வந்தார். அவர் எடுத்துக்கொடுத்த பணி இன்னும், நம்மைப்போன்ற வேதாத்திரியர்களால் தொடர்கிறது.

என்றாலும், இப்போது உங்களுக்கும், உங்களைப்போன்ற மற்றவர்களுக்கும், மனம் பாரமாக இருக்கிறதே?! அதை எப்படி சரி செய்வது? தீர்ப்பது? அதையும் யோசிக்கலாம். இந்த மன பாரம் என்பதை, இக்காலத்தில் மன நல மருத்துவர்கள், மன அழுத்தம் என்று சொல்லுகிறார்கள். பல்வேறு சிக்கல்களில் சிக்கி, பல்வேறு நினைவுகளின் தாக்குதலும், அதை நினைத்து வருந்துவதும் இத்தகைய மன அழுத்தத்திற்கு காரணம் என்று சொல்லுகிறார்கள். இதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான மன அழுத்தமும் இருக்கும் என்பதே உண்மை. இதை தீர்ப்பதற்கு, மன நல மருத்துவர்கள் தரும் ஆலோசனை என்ன?

மனதை இயல்பாக வைத்திருங்கள். நேற்று நடந்ததை, எப்போதோ முடிந்த ஒன்றை நினைக்காதீர்கள். மனதில் எழும் எண்ணங்களை பின்பற்றாதீர்கள். உங்களுக்கு பிடித்ததை செய்யுங்கள். தனிமையில் இருக்காதீர்கள், பாடல், இசை, நாடகம், சினிமா என்று நேரத்தை திசை திருப்புங்கள், பிடித்ததை சாப்பிடுங்கள். நன்றாக தூங்குங்கள் என்று சொல்லிவிட்டு, சில சத்து மாத்திரைகளையும், தூக்கம் வரவழைக்கும் மாத்திரைகளையும், தந்து அக்கறையோடு கவனிப்பார்கள். (பொதுவான கருத்தாக சொல்லப்படுகிறதே தவிர, மனநல மருத்துவர்களை குறை சொல்லுவதாக கருதவேண்டாம்)

வேதாத்திரியும், இப்படியான அறிவுரைகளும், மருந்துகளும் தருவதில்லை. சுற்றி வளைக்காமல் நேரடியாகவே, மனதை புரிந்து கொள்க என்று, தவம் இயற்றச் சொல்லுகிறது.  மனதையும், அதில் எழுகின்ற எண்ணங்களையும் அறிந்து, புரிந்து, ஆராய்ச்சி செய்து, ஒழுங்குசெய்து கொள்ள அகத்தாய்வு எனும் பயிற்சியை தருகிறது. இந்த தற்சோதனை வழியாக, மனம் தன்னைத்தானே விரிந்து நோக்கிட வழி பிறக்கிறது, தேவையில்லாததை தானே திருத்திக்கொள்ள பழகுகிறது.

மேலும் எண்ணம் ஆராய்தலை முடித்து, சினம் தவிர்த்தல், கவலை ஒழித்தல் என்ற அடுத்த இரு நிலை பயிற்சிகளையும் தந்து, நான் யார்? என்று ஆராயவும் சொல்லுகிறது வேதாத்திரியம்.

உங்களுடைய மன பாரத்திற்கும், மன அழுத்தத்திற்கும் முழுமையான, தெளிவான, சிறப்பான மருந்து ‘வேதாத்திரிய அகத்தாய்வு எனும் தற்சோதனை’ எனும் பயிற்சிதான் என்பதில் ஐயமில்லை!
வாழ்க வளமுடன்.
-

How we can avoid and escape the fake Godman in this modern world?


இந்த போலியான இறைத்தத்துவ விற்பனர்களிடம் இருந்து எப்படி தப்பிப்பது என்று சொல்லுவீர்களா?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, இந்த போலியான இறைத்தத்துவ விற்பனர்களிடம் இருந்து எப்படி தப்பிப்பது என்று சொல்லுவீர்களா?

பதில்:
நல்லதாக, எல்லோருக்கும் பயன்படும் ஒரு பதிலுக்கான கேள்விதான். இந்த கேள்வியில் நீங்கள் அறியாமலேயே, இத்தகைய நபர்களின் நோக்கத்தையும் சொல்லிவிட்டீர்கள். போலியான இறைத் தத்துவ விற்பனர்கள் என்று. இந்த விற்பனர்களின் நோக்கம் உங்களிடமிருந்து எதைதோ, அவர்களுக்கு சாதகாமான ஒன்றை எதிர்பார்ப்பதுதான். இது இந்த நவீன காலத்தில் மட்டுமல்ல, ஞானியர்களுக்கும், யோகியர்களும், மகான்களுக்கும் கிடைத்த மரியாதையை பெறுவதற்கு தாங்களும் முயற்சிசெய்தும் மக்களை ஏமாற்றியவர்கள் அந்தக்காலத்திலும் உண்டுதான். இப்படியான போலிகளிடம் ஏமாற்றம் அடைந்து உங்களிடமிருந்தோ, மற்ற மனிதர்களிடமிருந்தோ பணம் போனால் கூட பரவாயில்லை, மீண்டும் சம்பாதித்து விடலாம். ஆனால் மனம் போனால்? அது சிதைந்து விடுமே?!

இதில் இன்னொரு உண்மையையும் நீங்கள் புரிந்துகொள்வது நல்லது, உண்மையான இறைத்தத்துவம் வழங்கும் இறையுணர்ந்தவர்கள், ஆசிரியர்கள், பெரியோர்கள் உண்டு. சிலர் தங்களை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள், சிலர் தங்களை மறைத்துக்கொள்கிறார்கள். இந்த இறைத் தத்துவத்தை, மற்றவர்களுக்கு வார்த்தைகளால் செயல்படுத்த, விளக்கிச் சொல்ல முடியாதவர்கள் அமைதியாக இருந்து விடுவார்கள். குரு மகான் வேதாத்திரி மகரிஷி, மற்றும் இன்னும் பலர், இதை மக்களிடம் எளியமுறையில் கொண்டு சேர்க்கவும் ஆர்வம் கொண்டு பயிற்சி திட்டமாகவும் வழங்குகிறார்கள், வேதாத்திரியம் அப்படியான பயிற்சி முறைதானே!

அப்படியான பயிற்சிக்கும், கற்றுக்கொள்ளலுக்கும் ஒரு இணைப்பு பாலமாக, பொறுப்புணர்ந்து செயல்படவும், கைவிடாது தொடரவும், உறுதி கொள்ளவும், கட்டணம் செலுத்தும்படியான நிலை இருக்கிறது.

இலவசம், கட்டமில்லா நிலை, சேவை என்றால் உங்கள் மனமே அந்த, தத்துவத்தை, இறையுண்மையை, விளக்கத்தை, ஒழுங்கமைப்பை, உறுதியை ஏற்றுக்கொள்ளாமல் உதாசீனம் செய்துவிடும்.

சும்மா கொடுத்த மருந்து வேலை செய்யுமா? என்று ஒரு கேள்வி கேட்டால் உங்கள் பதில் என்னவாக இருக்கும்?

இந்தவித, தற்போதைய உலக இயல்பை, அந்த போலியான விற்பனர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஆனால் எல்லோரையும் அப்படி போலியானவர்களாக காண்பது ஒரு நோய். அப்படி இருக்கக்கூடாது. அந்த நபர், விற்பனர் என்ன சொல்லுகிறார்? அனுபவம் பெற்றவரா? இதுவரை அவரின் பதிவுகள் எப்படி இருக்கின்றன? அவரின் வாழ்க்கைமுறை என்ன? எப்படி நேரில் பழகிக் கொள்கிறார்? ஒரு உண்மையை விளக்கத்தை எப்படி புரியவைக்கிறார்? கதையளக்கிறாரா? எளிமையாக சொல்லுகிறாரா? நேரத்தை கடத்துகிறாரா? குழப்புகிறாரா? இதையும் செய், அதையும் செய் என்று ஓட்டுகிறாரா? எல்லாவற்றை விட்டுவிடு என்கிறாரா? சொந்த அனுபவத்தை சொல்லுகிறாரா? யாரோ சொன்னதை சொல்லுகிறாரா? கதையாக கலவையாக கலந்தடிக்கிறாரா? தீர்மானமாக இதுதான் என்று உறுதியாக சொல்லுகிறாரா? என்று பலவாறாக கேள்விகள் கேட்டு அதற்கு பதிலை பெற்றபிறகுதான், அவரின் தன்மை தெரியவரும். அதுவரையிலும் அவரை போலி என்றுகூட சொல்லாதிருங்கள்!

ஒரு கஷ்டம் என்ன என்றால், அந்த விற்பனரை புரிந்து கொள்வதற்காகவே, உங்களுடைய காலம் கொஞ்சம் வீணாகும் என்பதுதான். ஆனால் வேறுவழியில்லை. ஒருவேளை அவர் சிறப்பானவராக இருந்தால் அது உங்களுக்கு உதவும் கூடுமே?! இனி உங்கள் முடிவுதான்!
வாழ்க வளமுடன்.
-