August 2023 | CJ

August 2023

Why do I feel like suffering from yoga and not being as happy as others?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, மற்றவர்களெல்லாம் இயல்பாக வாழும்பொழுது, யோகத்தில் இருக்கும் நான்மட்டும் இப்படி கஷ்டப்படுகிறேனே என்று தோன்றுகிறது. சரிதானா?!


பதில்:

நீங்கள் யோகத்தில் இருப்பது மிக நல்லது, அதற்கு வாழ்த்துகள். உங்களைத் தவிர மற்றவர்கள் எல்லாம் இயல்பாக வாழ்கிறார்கள் என்று எப்படி சொல்லுகிறீர்கள்? அவர்களின் வாழ்க்கைமுறை, பொருளாதார நிலை, ஆடம்பரம், தோற்றம், வழக்கம் பழக்கம் இப்படி வெளித் தோற்றங்களை வைத்துப்பார்த்தால் அப்படித்தான் தோன்றும். நிச்சயமாக அவர்கள் சூழ்நிலை கைதியாக, ஒரு நடிப்பாக வாழ்ந்துகொண்டிருப்பதை அறியலாம். மேலும் முக்கியமாக, பொருள், புகழ், அதிகாரம், இன்பவாழ்வு என்ற நிலையில்தான் தங்கள் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டு இருப்பார்கள். நீங்கள் அவர்களிடம் போய், ஏதேனும் கேட்டுப்பாருங்கள். உங்கள் நிலையைவிடவும், மிகச் சாதாரண நிலையில் இருப்பார்கள் என்பதே உண்மை. மேலும் அவர்கள் யோகத்திற்கு வரமுடியாத மிக நீண்ட தூரத்திலும் நிலைபெற்றிருக்கிறார்கள்.

தெய்வபக்தி மிகுதி என்று காட்டிக்கொள்வார்கள். அன்பும் ஆதரவும் பிறருக்கு எப்போதும் உண்டு என்றும் சொல்லுவார்கள். தேவை என்றால் என்னை அணுகுக என்றும் நம்பிக்கை தருவார்கள். ஆனால் திடீரென்று ஆளே நம்கண்ணுக்கு தெரியாமல் மறைந்து விடுவார்கள். மறுத்தும் விடுவார்கள். 

யோகத்தில் இருக்கிற நீங்கள், உங்களை சரியான பாதையில் பயணிக்கிறீர்கள் என்பது உறுதி. அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. வாழ்க்கையின் நோக்கமே, இன்பமாக வாழ்வதுதான், அதில் எந்த குழப்பமும் இன்றி இருக்க, தன்னையறிதல் எனும் பிறப்பின் கடமையை அறிந்துகொள்ள வேண்டும். நம்மிடம் இருக்கும் களங்களை போக்கி, மனதை, உடலை இயல்பாக வைத்துக்கொள்ள யோகம் தானே சிறந்த வழி?! இதுவரையில் வாழ்ந்த வாழ்க்கையில், உங்களை நினைத்துப்பாருங்கள்.

யோகத்தில் இணைந்தபிறகு ஏற்பட்ட, ஏற்பட்டுக் கொண்டிருக்கிற மாற்றங்களை எண்ணிப்பாருங்கள். அன்று உங்களுக்கு மனம் என்றால் என்ன என்றே தெரியாதுதானே? இப்பொழுது மனம் குறித்த விளக்கமும், அதை எப்படி இயல்பாக வைத்துக்கொள்வது யோகத்தின் வழியாக நீங்கள் அறிந்துவிட்டீர்களே!  தினமும் இயற்றும் தவமும் உங்களை உயர்த்துகிறது. காலத்தால் நீங்கள் தன்னிலை விளக்கம் பெற்று உயர்வடைவீர்கள். வாழ்க்கையை இயற்கையோரு ஒன்றி ரசித்து, இன்பமாக வாழ்வீர்கள் என்பதே உண்மை. இது குருமகான் வேதாத்திரி நமக்கு தந்த பாதை.

மற்றவர்களை எப்போதும், உங்களோடு ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். அது உங்கள் மனதை, உடலை, வளர்ச்சியை, நோக்கத்தை கெடுக்கும். உங்கள் பாதையில், உங்கள் செயலுக்கான விளைவை மிகச்சரியாக இறைநிலை தரும், அதுதான் அதனுடைய நீதியும் ஆகும்!

வாழ்க வளமுடன். 

What is Gnana in Tamil? How to get it?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, ஞானம் என்பது என்ன? அதை எப்படி பெறுவது?


பதில்:

ஞானம் பெறுதல் எப்படி என்றால், முதலில் உங்களுக்கு என்ன தேவை? எது எனக்கு வேண்டும்? எதில் நான் உயர்வடைய வேண்டும்? என்ற நோக்கமும், சிந்தனையும் வேண்டும். அதை நோக்கியே உங்கள் கவனம் இருக்கவேண்டும். மனம் ஒருமுகம் என்று கூட சொல்லலாம். அத்தகைய ஞானம் என்பதை குண்டலினி யோகத்தின் வழியாக பெறுவது ஒருவகை. வேறு சில வாழ்க்கைக்கு, அறிவுக்கு, வளர்ச்சிக்கு உதவம் கலைகள், பயிற்சிகள் வழியாகவும் பெறலாம் என்பதே உண்மை.

ஞானம் அடைந்தால் மோட்சம், முக்தி, அப்படி இப்படி என்ற கதைதான் இங்கே உலவுகிறது. ஞானம் ஒரு தனித்துவமான, சக்தியை வழங்குகின்ற, சக்தியை பெற்றுக்கொள்கின்ற நிலை அல்ல என்பதை முதலில் தெளிவு செய்து கொள்க. ஞானம் என்பது உங்கள் அனுபவத்தில், வளர்ச்சியில், ஆராய்ச்சியில், காலத்தால் பெறக்கூடிய ஒரு நிலைதான். அந்த நிலையை அடைந்தவர்களை, அதாவது ஞானத்தில் நிலை பெற்றவர்களை, ஞானி என்று அழைக்கின்றோம் அல்லது அழைக்கப்படுகிறார்கள்.

ஞானம் என்றால், உண்மையை அறிந்த நிலை என்று அர்த்தமாகும். இறைஞானம் என்றால், இறை என்ற உண்மையை அறிந்துகொண்ட நிலை என்று பொருளாகிறது. கேள்விஞானம் என்றால் கூட, கேள்விகளாக சிந்தித்து, உண்மையை அறியக்கூடிய தன்மை அல்லது நிலை என்று பொருளாகும். ஞானம் என்பது, அக்காலம் முதல் இக்காலம் வரை, உணமை அறியாதோரால் கட்டமைக்கப்படும் அதிசயமானது ஒன்றல்ல. 

முக்கியமாக, வெற்று வார்த்தைகளால் விளங்கிக் கொள்வது ஞானம் அல்ல. மனப்பூர்வமாக, மனமே மலர்ந்து, விரிந்து, இறையுண்மையில் திளைத்த நிலையில் உங்களுக்கு கிடைப்பதுதான் ஞானம். ஒருவேளை உங்களுக்கு வார்த்தையில் கிடைத்தாலும், அந்த உண்மை தன்மை நோக்கி நகர்ந்து அதை உணரவேண்டும். 

குண்டலினி யோகத்தின் வழியாக நாம் பெறுகின்ற ஞானம், இறை ஞானம் ஆகும். இதற்கு தகுந்த குருவின் வழிகாட்டல் வேண்டும், அவர்மூலமாக தீட்சையும், தவசாதனையும் பெற்று கற்றுத்தேரவேண்டும். நம்முடைய முயற்சி, பயிற்சி, ஆர்வம், ஆராய்ச்சி ஆகியவற்றின் வழியாக, ஞானம் பெறுதல் கைகூடும்.

வாழ்க வளமுடன்.


Wife Appreciation Day, Annai Logambal Birthday on August 30


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, மனைவி நல வேட்பு நாளின் சிறப்பு என்ன? 


பதில்: 

இதற்கான பதிலை, குரு மகான் வேதாத்திரி மகரிஷியே கூறுகின்றார்.

 உலகில் இதுவரை தந்தை நாள் (Father’s day), தாயார் நாள் (Mother’s day) தனித்தனியே கொண்டாடுகிறார்கள். சுமங்கலி பூஜை என்றளவிலே கணவன் நலவேட்பு நாளும் கொண்டாடுகிறார்கள். மனைவி நலவேட்பு நாள் எந்த ஊரிலேயும் இல்லை. இது ஒரு நன்றி கெட்டதனம் இல்லையா? இது என் மனதை உறுத்திக் கொண்டே இருந்தது.

ஆனாலும், ஒருவர் தலையிட்டுச் செய்தால் மட்டும் போதாது. இது நாடு முழுவதும் ஆண் மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

பெண்மையின் பெருமையை உணர வேண்டும் என்ற மனதோடு ஆராய்ச்சி செய்த போது இந்த ஆண்டு என் மனைவியினுடைய [அருள் அன்னை லோகாம்பாள்] பிறந்த நாள் 30-8-ல் வந்தது. அன்பர்களிடம் சொன்னேன். என் மனைவியின் பிறந்த நாளையே வைத்துத் தொடங்கி மனைவி நல வேட்பு நாள் கொண்டாடலாம். இதையே வைத்துக் கொண்டு, இது முதல் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 30-ஆவது நாளை மனைவி நலவேட்பு நாளாகக் கொண்டாடுவது நம் சங்கத்தின் வழக்கமாக வரட்டும். பிறகு உலக நாடுகளிலும் பரவட்டும் என்றேன்.

அதுபோலவே, மனவளக்கலை மன்ற அன்பர்களும், அவர்களைச் சார்ந்த ஆண்களும், பெண்களும் உற்சாகமாக அதை ஏற்றுக் கொண்டு பல இடங்களில் கொண்டாடுகிறார்கள். நீங்களும் உங்கள் வாழ்க்கைத் துணையை நன்றியோடு வாழ்த்தி இக்கவியைச் சொல்லி மகிழுங்கள்.

மேலும் குருமகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள், வாழ்க்கைத்துணையாக வரும் மனைவி குறித்தும், இந்த நாள் குறித்தும் கவியாக சொல்லுகிறார்.


பெற்றோரைப் பிறந்தகத்தைப்

பிறந்த ஊரை விட்டுப்

பிரிந்து வந்து,

பெருநோக்கில் கடமையறம் ஆற்றப்,

பற்றற்ற துறவியெனக் குடும்பத் தொண்டேற்றுப்

பண்பாட்டின் அடிப்படையில் எனைப் பதியாய்க் கொண்டு

என் நற்றவத்தால் என் வாழ்க்கைத் துணையாகிப்

பெண்மை  நல நோக்கில் அன்போடு கருணை

இவை கொண்டு மற்றவர்க்கும் தொண்டாற்றும்

மாண்புமிக்க எந்தன் மனைவியை

நான் மதிக்கின்றேன்

வாழ்த்தி மகிழ்கின்றேன்.


நீங்கள் மிகச்சிறந்த கணவன் எனில் அல்லது அத்தகைய மதிப்பை பெறுவதற்காகவும் கூட, தன் அன்புமிக்க மனைவியை வாழ்த்தி மகிழவும், தன்னுடை அன்பை, அவள்மீது கொண்ட நட்பை, மதிப்பை வெளிக்காட்டவும், இல்லத்தில் இன்பம் பொங்க, வாழ்நாள் சிறக்கவும் இந்த மனைவி நல வேட்பு நாளை மிகச்சிறந்த வாய்ப்பாக அமைத்துக் கொள்ளலாம்.

வாழ்க வளமுடன்.


Can simplified exercise will solution for my all physical problems?


 வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, எனக்கு சில உடல்பிரச்சனைகள் உள்ளது! வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சியில் முழுமையாக தீர்வு கிடைத்துவிடுமா?


பதில்:

நமக்கு வரும் உடல் பிரச்சனைகள், தொந்தரவுகள் பெரும்பாலும் மனரீதியில் உருவானவையாகவே இருப்பதை நாம் அறியலாம். உதாரணமாக நாம் கவலைப்பட்டால் கூட அது மனதையும் உடலையும், உடல் உறுப்புக்களையும் பாதிக்கும். சினமும் அத்தகைய தன்மை கொண்டதே. ஆனால் பிரச்சனை, தொந்தரவு என்ற நிலையில் இருந்தால் அது ஆரம்ப நிலை என்று சொல்லலாம். அதுவே காலத்தால் நீண்டு, முற்றிப்போனால் அது, பிரச்சனை, தொந்தரவு என்ற நிலையை மீறி நோயாக மாறிவிடும். அந்தந்த உறுப்புக்களையும் பாதிப்படையச் செய்யும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். 

இதனால் உங்களுக்கு இருப்பது, உடல் பிரச்சனைதானா? அல்லது நோயா? என்பதை முதலில் தெளிவு செய்து கொள்ளுங்கள். இங்கே மருத்துவரின் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்ள தயங்காதீர்கள். பார்வைக்கு திடமாக இருக்கும் மனிதர்கள் பலர், நீண்டகால நோயை தன்வசம் பெற்றவராக இருப்பார் என்பதே நிகழ்கால உண்மை. மேலும் உடல் பருமனாக இருப்பது நல்லது என்றும், ஒல்லியாக இருப்பது நோய்தன்மை என்ற தவறான கணிப்பிலிருந்து மாறிவிடுங்கள்.

குரு மகான் வேதாத்திரி மகரிஷி தந்த எளியமுறை உடற்பயிற்சி என்பது, உடலை, மனதை, உயிர் வளத்தை தக்கவைக்கவும், ஒன்றுக்கொன்று முரண்படாமல் இயங்கிடவும், உடலுக்குள்ளாக இயங்கும் காற்றோட்டம், வெப்ப ஓட்டம், ரத்தவோட்டம் ஆகிய சீராக பாய்ந்தோடவும், குறைவுபடாமல் இருக்கவும் உதவும் என்பதே உண்மையாகும். மேலும் நோய்தாக்கம் பெறாத விழிப்புணர்வும், தடுப்பு சக்தியும் தந்து காத்திடும்.

இங்கே ஏற்கனவே, உடலில் நோய் என்ற நிலை இருந்தால், அந்த நோய்தன்மையை கொஞ்சம் குறைத்திட வழி பிறக்குமே அன்றி, முழுதாக தீர்த்திட வழியில்லை. நோய் தன்மையை பொறுத்து, மருத்துவரின் வழிகாட்டலும், மருந்துகளும் முக்கியம் ஆகும். ஏனென்றால் இது உடற்பயிற்சி தானேதவிர, உடல் உறுப்புகளை திருத்திட, மாற்றி அமைக்க மருந்து அல்ல என்பதை புரிந்துகொள்க. அப்படியானால், ‘எளியமுறை உடற்பயிற்சி என்பது வீண் தானே?!’ என்ற முடிவுக்கு நீங்கள் வந்துவிட்டால், அது உங்களுடைய கருத்தேயன்றி உண்மையல்ல.

எப்போதுமே, வருமுன் காப்பதுதானே சிறப்பு, அதன்படி, நாம் இளமையில் நன்றாக இருக்கும்பொழுதே, அப்படி உணரும் பொழுதே, எளியமுறை உடற்பயிற்சியை தொடர்ந்தால், வாழும்நாள் வரையில், நோயின்றி சிறப்பாக வாழ வழியுண்டாகும். அதுதான் குருமகான் வேதாத்திரி மகரிஷி தந்த விளக்கமும் ஆகும்.

வாழ்க வளமுடன்.


Why does this mind make me suffer this? How to calm it down?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, இந்த மனம் ஏன் என்னை இந்த படாதபாடுபடுத்துகிறது? அதை எப்படி அமைதிபடுத்துவது?


பதில்:

மிக நல்லதுதான், ஒருவகையில் மனம் என்பதை புரிந்துகொள்ள சந்தர்ப்பம் உங்களுக்கு கிடைத்திருக்கிறதே?! சரி இந்த மனம் என்பது என்ன? நாம் வேறு மனம் வேறா? என்றுதான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். எல்லோருமே அப்படித்தான் சொல்லி, விளக்கமும் கொடுத்து, அதை அடக்கு, விலக்கு, ஆளுமை செய் என்றெல்லாம் அறிவுரை சொல்லுகிறார்கள். ஆனால் முடிகிறதா?

குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள், மனிதனும், மனமும் ஒன்றே என்று சொல்லுகிறார். எப்படி? மனம் இதனானவன் மனிதன். மனதையும், மனிதனையும் பிரித்திட முடியாது என்கிறார். ஆனால் நாம் வாழும் காலத்தில், நம் அனுபவங்களைக் கொண்டும், பிறர் நமக்கு தருகின்ற, தகவல்கள், அறிவுரைகள், ஆராய்ச்சிகள், விஞ்ஞான முடிவுகள் கொண்டும் அப்படி பிரித்து நினைத்துக் கொண்டு, புதிய ஒரு பிரச்சனைகளிலும் சிக்கிக் கொள்கிறோம். மனம் நம்மோடு பிறந்தது, நம்மோடு பிரிவது, நம்மோடு வாழ்வதும் கூட. எனவே மனதை அடக்க நினைக்காது, அறியவும், புரிந்து கொள்ளவும் முயற்சிக்க வேண்டும்.

மனம், நம்முடைய உடலெங்கும் ஓடிக்கொண்டே இருக்கக்கூடிய, உயிராற்றலின் படர்க்கை ஆற்றல் என்ற உண்மையையும், குரு மகான் வேதாத்திரி மகரிஷி விளக்குகிறார். மனம் என்பது அலை இயக்கமும் கூட. இதை தற்கால விஞ்ஞானிகள் பதிவு செய்தும் காட்டுகிறார்கள். மேலும் மனம் என்பதை, மூளையின் அலை இயக்க செயல்பாடு என்றும் விளக்கம் தருகிறார்கள். அதுஒருபக்கம் இருக்கட்டும். நீங்களும், மனமும் ஒன்றே என்பதை முதலில் புரிந்துகொள்க.

இங்கே ஏன் படாதபாடுபடுத்துகிறது என்று கேட்டீர்கள் அல்லவா? அதற்கு அடிப்படையாக சில காரணங்கள் உள்ளன. தனக்குள்ளாக ஏற்கனவே பதிவாக வைத்திருக்கும், கர்மா என்ற வினைப்பதிவுகளின் தாக்கமே ஆகும். அது அவ்வப்பொழுது நம்முடைய எண்ணம், சொல்,செயலால் வெளிவருகிறது. சூழ்நிலை தாக்கம் இருந்தால், தானாகவும் வெளிவரும். அது எப்படி நமக்குள் இருக்கிறது என்றால், வழிவழியாக, பரம்பரையாக, நம் முன்னோர்கள் வழியாக, நம் பெற்றோருக்கு வந்து, பெற்றோரிடம் இருந்து நமக்கும் வந்துவிட்டது. இதை நாம் புரிந்து சரிசெய்துகொள்ளவும், தீர்க்கவும் வேண்டும். இல்லையேல் இது, நம் வழியாக, நம்முடைய குழந்தைகளுக்கும் தொடரும். இதுதான் இயற்கையின் வினை விளைவு நீதியாகும்.

மனதை அமைதிப்படுத்த, அந்த மனதையே ஆராயவேண்டும், அந்த ஆராய்ச்சியில் இறங்கிட யோகத்திற்கு வரவேண்டும். தகுந்த குருவால், அவரின் வழிகாட்டலுடன் நாம் அமைதியும், முழுமையும் அடையலாம். வாழ்நாளை மகிழ்ச்சிக்குறியதாக மாற்றலாம்! அந்த மாற்றத்தை பெற உங்களை வாழ்த்துகிறேன்.

வாழ்க வளமுடன்.

Can we change the level on the simplified exercise by up or down?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, எளியமுறை உடற்பயிற்சி செய்யும்பொழுது, அந்த வரிசைப்படிதான் செய்ய வேண்டுமா? நாமாக மாற்றிக் கொள்ளலாமா? விளக்கம் தேவை.


பதில்:

நம்முடைய குருமகான் வேதாத்திரி மகரிஷி, மனவளக்கலை வழியாக, எளியமுறை உடற்பயிற்சியை பாடமாக அமைத்தபொழுதே, அறிஞர் குழு, மருத்துவர் குழு ஆகியரோடு இணைந்தே வரிசைப்படி அமைத்துக்கொண்டார். மேலும் அவ்வப்பொழுது, பயிற்சியில் கிடைக்கும் மாற்றங்களையும் குறித்து ஆராய்ந்து திருத்தமும் கொண்டார்.

மேலும் எளியமுறை உடற்பயிற்சி செய்யும் யாவருமே, அந்த வரிசையை, ஓவ்வொன்றாக புரிந்துகொள்ளவும் முடியும். முதலில் உடலின் நேர்த்தன்மை, கைகள், கால்கள், இடுப்பு, உள்ளுறுப்புக்கள் என்றபடியே வரிசையாக, படிபடியாக அமைந்திருப்பதை அறியலாம். இதன்படி, உடனடியாக, உடலின் குறிப்பிட்ட பகுதியை, உறுப்பை ஊக்குவிக்கும் முறை இங்கே இல்லை. இதனால் தீடீரென எழும் வலியோ, பிரச்சனையோ உண்டாவதில்லை. ஓவ்வொரு நிலையாக உடல் பழகி தன்னை ஊக்கம் செய்துகொள்ளும்படி, வரிசயாக நிலைகள் அமைந்திருக்கிறது.

ஆனாலும் ஏற்கனவே உடல் தொந்தரவு, பிரச்சனைகள், நோய்தொற்று ஏதேனும் இருக்குமானால் அவர்கள் இந்த நிலைகளை தொடர்ச்சியாக, படிப்படியாக செய்வதில் தடுமாறலாம். அவர்களைப் பொறுத்தவரை, கற்றுக்கொடுக்கும் ஆசிரியரின் ஆலோசனையை ஏற்று மாற்றம் செய்து கொள்ளலாம் தவறில்லை. ஆனால் சோம்பலில், பயிற்சி செய்ய ஆர்வமின்றி, ஒன்றை விட்டு அடுத்த நிலைக்கு போய்விட்டு, சீக்கிரமாக பயிற்சியை முடித்துவிடுவது தவறு ஆகும்.

மேலும் சூழ்நிலை கருதி, அதாவது தீடீரென்று எற்பட்ட பயணத்தில், புதிய இடங்கள், நேரமின்மை, அருகில் இருக்கும் அன்பர்கள் என்று இருக்குமானல், ஏதோ ஒருநாள், உங்கள் உடலுக்கும் ,மனதிற்கும் இதமளிக்கும் உடற்பயிற்சி நிலைகள் மாற்றிக் கொள்வதில் தவறில்லை. ஆனால் இதை தொடர்ந்து செய்யக்கூடாது, எளியமுறை உடற்பயிற்சியை முழுமையாக செய்வதில்தான் அதன் பலனை தக்கவைக்க முடியும். மாற்றமும் நிலைக்கும் என்ற உண்மையை புரிந்துகொள்க,

வாழ்க வளமுடன்.

-

What about the Summa Eru on the Self-Realization?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, தவம் இயற்றாமல், வழிபாடும் செய்யாமல், மனதை புரிந்துகொண்டு, நாம் சும்மா இருந்தாலே இறையுணர்வு பெறலாம் என்று சொல்லுகிறார்களே?


பதில்:

ஆமாம் அப்படித்தான் சொல்லுகிறார்கள். இங்குமட்டுமல்ல, உலகெங்கும் அப்படி மக்களை வழிநடத்தக் கூடியவர்கள் இருக்கிறார்கள். ஒருவகையில் இது வேதாந்த கருத்தின் அடிப்படை எனலாம். இதில் எந்தக்குறையும் இல்லை. ஆனால் இதை நீங்கள் கடைபிடித்தாலும், கடைபிடிக்காவிட்டாலும், இதுவரை நீங்கள் எப்படி இருந்தீர்களோ அப்படியேதான் இருப்பதாக உங்களுக்குத் தோன்றும். ஏதோ பேச்சளவில், செயலளவில், நீங்கள் விழிப்பாக இருப்பதாக தோன்றுமே தவிர வேறெந்த மாற்றமும், அனுபவமும் தரப்போவதில்லை, பெறப்போவதும் இல்லை. அதாவது நீங்கள் அருகில் இருக்கிறீர்கள் ஆனால் உங்களுக்கும் புரிதலுக்கும் இடையே ஒரு தடையும் இருக்கிறது. அத்தடையை நீங்கள் காண்பதே இல்லை.

இதன்வழியே மனமும், உடலும், அடிப்படை குணாதசியங்களும் மாற்றம் பெறுவது மிக கடினம். ஒரு வெளித்தோற்றத்தில் மாற்றம் ஏற்பட்டு இருப்பதாகவேண்டுமானால் நம்பலாம். உடலும் தன்னை நோய் திருத்தம், தாக்கம் இவற்றிலிருந்து விடுதலை பெற்றுவிடுவதில்லை.

மேலும் இதன் வழியாக நீங்கள் ஒரு குழப்பத்திலிருந்து, விடுபட்டுவிட்டேன் என்று நம்புகிறீர்கள் அல்லது பழகிக் கொள்கிறீர்கள். ஆனால் எதுவுமே மாறவில்லை. உங்கள் கர்மா என்ற வினைப்பதிவு, உங்கள் எண்ணம், சொல், செயல் திருத்தம் பெறவில்லை. விளைவுகளும் உங்களுக்கு சாதகமாக எழப்போவதில்லை. ஆனால் நீங்கள் இறையுணர்வு பெற்றுவிட்டதாகவும், இறையுணர்வில் இருப்பதாகவும் நம்புகிறீர்கள். உங்களைப்பொறுத்தவரை அது சரிதான். இங்கே எந்த வாதத்திற்கும் இடமில்லை. ஏனென்றால் புரிதலில் குழப்பமும், நிலைமாறுதலும் அமைந்திருக்கிறதே?!

உங்கள் கையில் இருக்கும், மாதுளம்பழம் நன்கு சிவந்து அழகாக இருக்கிறது. எப்படியும் உள்ளே இருக்கும் விதைகள் சுவையாக இருக்கும், நல்ல இனிப்பைத்தரும். பிழிந்தால் நன்கு பழச்சாறாகவும் கிடைக்கும், இந்த மரம் எந்த விதையின் அடிப்படை கொண்டது தெரியுமா? இதன் தாய் மரம், இந்த நாட்டைச் சார்ந்தது, அந்த நாட்டின் மண் எப்படி வளம் கொண்டது தெரியுமா? என்று இப்படி பலவாறாக சொல்லி மகிழலாம், பிறருக்கும் புரியவைக்கலாம். ஆனால் அந்த மாதுளம்பழத்தை, வெட்டி பிரித்து, அதன் விதைகளை தனியே பிரித்தெடுத்து, சாப்பிட்டுப் பார்த்தால்தானே உண்மைச்சுவை அறியமுடியும்?! ஆனால், ‘என்னய்யா பெரிய மாதுளம்பழம்? நான் சாப்பிடாத மாதுளம்பழமா? இதுவரைக்கும் எத்தனையோ பழம் சாப்பிட்டிருக்கேன். அதுபோலத்தான் இதுவும் இருக்கும்’ என்று பத்தோடு பதினொன்றாக ஒதுக்கித்தள்ளிவிட முடியுமா?

குண்டலினி யோகம் என்பது குருவால், நான் யார்? என்ற கேள்வியில் ஆரம்பித்து, உணர்ந்து அனுபவித்து, தன்னை அறிவதும், இறையுணர்வு பெறுவதுமாகும்! அந்த நிலையில்தான் ரமணமகரிஷி சொல்லிச்சென்ற ‘சும்மா இரு’ என்பது உண்மையாகும்!

வாழ்க வளமுடன்.

Why we are living anytime with love and attraction?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, ஆண் பெண் பாலுறவு குறித்த ஈர்ப்பு எப்போதும் இருப்பது ஏன்?


பதில்:

அதுதான் இயற்கை. இதில், இந்த ஆணுக்கு பெண்மேல் ஈர்ப்பு, பெண்ணுக்கு ஆண்மேல் ஈர்ப்பு என்பது அவர்வர்களின் தவறு என்று வருந்த வேண்டியதில்லை. ஆனால் அதை முறைப்படுத்திக் கொள்ளாவிட்டால், அவர்கள் வாழும் வாழ்க்கை நாசமாகிவிடும். அதனால்தான் முன்னோர்கள், அறிஞர்கள், வாழும் மக்கள் நலம்காப்போர், தகுந்த காலம் வரை காத்திருக்கவும், தகுந்த துணை தேடி, திருமணம் என்ற பந்தத்தில் ஒருவருக்கு ஒருவர் என்ற நலம் சார்ந்து வாழவும், அவர்கள் குழந்தை பெற்று, காத்து வளர்த்து ஆளாக்கிடவும், வழிவகை செய்துவைத்தார்கள்.

உண்மையிலேயே, நம் பிறப்பே பாலுறவின் தீர்வு தானே? நம் பெற்றோரின் நிறைவான இன்பத்தின் வழியாகத்தானே நாம் இந்த உலகில் பிறந்தோம். அதனாலேயே அதன்பால் ஈர்ப்பு வருவது இயல்பு என்றுதான் குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்களும் குறிப்பிடுகின்றார். மேலும் அவர் விளக்கிடும் பொழுது, கருவாக இருந்து, இந்த உடல் கட்டப்படுவதற்கு, வித்துநாதமும், அதன் ஆற்றலுமே செலவாகிறது. அந்த கட்டமைப்பில் முழுமை வந்துவிட்டால், ஆண் பெண் பருவ வயதிற்கு வந்துவிடுகிறார்கள். அதாவது தன்னைப்போல இன்னொரு உயிரை உருவாக்கிக் கொள்ளக் கூடிய தகுதியை, இயற்கை அவர்களுக்கு வழங்கிவிடுகிறது. மேலும் வித்துப்பையில் ஏற்படும் தேக்கம், பாலுறவு தூண்டுதலையும் ஏற்படுத்துகிறது.

இதனால்தான், பருவ வயதினர்கள் அதீத பாலுறவு ஆர்வத்தில் இருக்கிறார்கள். தவறான வழிகாட்டல், பிறரின் தூண்டுதல், சூழ்நிலையின் தாக்கம் இவற்றால், இயற்கைக்கு மாறான பாலுறவு இன்பத்தில் திளைக்கிறார்கள். அதனால் வாழ்க்கை சிக்கலாக்கிக் கொள்கிறார்கள். இதிலிருந்து பருவ வயது ஆணும், பெண்ணும் விலகி விளக்கம் பெறவேண்டும். அதற்காகவே மனவளக்கலை வழியாக, காயகல்ப யோகம் எனும் சிறந்த பயிற்சியும் வழங்கப்படுகிறது.

முக்கியமாக, ஆண் பெண் பாலுறவு குறித்த ஈர்ப்பு எப்போதும் இருப்பது இல்லை என்பதே உண்மை. வித்தின் தன்மை மாறமாற, அதன் அளவு குறையக்குறைய ஈர்ப்பு இருந்திடாது. இதற்கு, உடலில், மனதில் ஏற்படும் மாற்றங்களும், வயதும் காரணமாக அமைகிறது. தெளிந்த அறிவோடு வாழப்பழகிக் கொண்டால், பாலுறவு ஈர்ப்பை அளவோடும், முறையோடும் அனுபவித்து, இன்பம் நிறைந்து வாழலாம்.

வாழ்க வளமுடன்.

How the Thuriyatheetha meditation set as a highest ?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, தவத்தில் துரியாதீத தவம் உயர்வானது எப்படி? வேறுதவம் இல்லையா?!


பதில்:

பல ஆயிரமாண்டு கால, யோக வரலாற்றில், சஸ்ரதாரா என்ற ஆயிரத்தெட்டு இதழ் தாமரை பெயர் கொண்ட, தலை உச்சி நிலையான, துரியம் என்ற ஆதாரமைய தவமே உயர்நிலை தவம் என்று இருந்தது. ஏறக்குறைய இப்போதும் அப்படித்தான் என்ற நிலை தொடர்கிறது. பெரும்பாலான யோக மையங்களில், துரிய தவத்திற்கு மேல்நிலையாக எந்த தவமும் இல்லை. மனவளக்கலை வழியாக மட்டுமே, ஏற்கனவே உயர் நிலையாக இருந்த துரியத்திற்கும் அடுத்ததாக உச்ச நிலை தவமாக, துரியாதீதம் என்ற தவம் வழங்கப்படுகிறது! பெயரிலேயே, துரியம் அதீதம் என்ற பெயர் பெற்றுள்ளதையும் கவனியுங்கள்.

குருமகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள், தன் இறையுணர்தல் வழியில், பல ஆண்டுகளாக, துரியதவம் இயற்றிவந்துள்ளார். எனினும் அவர் அதில் நிறைவடையாத தன்மையை உணர்ந்திருக்கிறார். துரியம் என்ற நிலைக்கு அப்பாலும் கூட மனம் விரிந்து நிற்பதையும், மேலும் மேலும் அதனிலும் விரிவதையும் கண்டு உணர்ந்து ஆராய்ச்சி செய்துள்ளார். இது குறித்து, தன்னோடு யோகத்தில் பயணித்த சிலரிடம் கேட்டு கலந்தாலோசித்த பொழுது, அவர்கள், துரியத்திற்கு மேல் எதுவுமில்லை என்றே மறுத்துள்ளனர்.

ஆனாலும், வேதாத்திரி மகரிஷி அவர்கள், தொடர்ந்து, அந்த மனவிரிவை கவனித்து, முடிவான உண்மையில், பேராற்றலும் பேரறறிவுமான, சித்தர்கள் சொன்ன வெட்டவெளியில், சுத்தவெளியில் முழுமையடைவதை உணர்ந்தார். அதன்பிறகே மனம் தன் உண்மைநிலையை, அடித்தளமான நிலையையும் அடைந்ததை அறிந்துகொண்டார். மேலும் தொடர்ந்து ஆய்வு செய்து, அதை ஆர்வமுள்ள மற்றவர்களுக்கும் தர எண்ணியே, தவமாக வடிவமைத்தார். அந்த தவமே துரியாதீதம் ஆகும். 

எனவே துரியாதீதத்திற்கு உயர்வான தவம் என்ற நிலை பொருத்தமானதே ஆகும். இதற்கு நிகராக வேறெந்த தவநிலையையும் குறிப்பிட்டுச் சொல்லிவிட முடியாது.

வாழ்க வளமுடன்.

Is the curse true? Explain how much impact it can have?!


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, சாபம் என்பது உண்மையா? அது எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்று விளக்குக?!


பதில்:

மன இதனாகிய மனிதர்கள், தங்களை இந்த இயற்கையோடு முரண்பட்டு, தனித்தும், தன்முனைப்போடும் செயல்படும் பொழுது தன்னுடைய இயல்பை மறந்துவிடுகிறான். அந்நிலையில் அவன் பாவத்தை செய்கிறான். இந்த பாவம் என்றால், அறமில்லாத செயல் என்பதைத்தவிர வேறு அர்த்தமோ, கற்பனைகளோ செய்துகொள்ளக்கூடாது. அது அடுத்தவருக்கு மட்டுமல்ல, தனக்குத்தானாகவும் செய்து சிக்கிக் கொள்கிறான். சாபம் என்ற நிலை, பொறாமையினாலும், வருத்ததினாலும் உண்டாவதாக சொல்லலாம்.

ஒரு மனிதர் உங்களை, மிகுந்த துன்பத்திற்கு உள்ளாக்கினால், அந்த நேரத்தில் அதை தடுக்கமுடியாமல், ஏற்றுக்கொள்ளும் சூழலில், வருத்தம் மேலிட துன்பம் விளைவித்த அந்த நபருக்கு சாபம் தருவதாக சொல்லலாம். சினம், வஞ்சம் ஆகியற்றின் அடக்கப்பட்ட குணமே சாபமாகவும் வெளிப்படுகிறது. முக்கியமாக, துன்பம் நமக்கு வருகிறது என்றால் அதற்கான, காரணங்களை நாம் ஆராய்ந்து பழகி, உண்மை உணர்ந்து கொண்டால் தேவையின்றி, நாம் யாருக்கும் சாபம் தரவேண்டியதில்லை. அதுபோல நாமும் பிறருக்கு எச்செயல் செய்தாலும், அதில் நன்மை விளைவதை முக்கியமாக்கொண்டா செய்யவேண்டும். இதனால் பிறருக்கும், துன்பமோ, வருத்தமோ விளையாத நிலை உண்டாகும்.

மேலும் இந்த துன்பம், வருத்தம், சாபம் ஆகியன கருமையத்திலும் பதிந்து, கர்மா என்ற வினைப்பதிவுகளாகவும் மாற்றம் பெறும். இத்தகைய நிலையில் மாற்றம் பெறவேண்டும் என்றேதான், நம் குரு மகான் வேதாத்திரி மகரிஷி, இரண்டொழுக்க பண்பாடை உருவாக்கி தந்துள்ளார். எந்த வகையிலும், தனக்கோ, பிறருக்கோ, உடலுக்கோ, மனதிற்கோ துன்பம் விளைவிக்க மாட்டேன் என்ற உறுதியோடு தன்னுடைய எண்ணம், சொல், செயல் இவற்றை அமைத்துகொள்ள வேண்டியது அவசியம்.

இந்த சாபம் என்ற நிலை, எங்கே எழுந்ததோ அந்த மனிதரையும், யாருக்கு தரப்பட்டதோ அவரையும் இணைத்தே பாதிப்பைப் தரக்கூடியது. மேலும், மனதோடும், நினைவோடும் தொடர்பு கொண்டது என்பதால் உடனடியாகவும் செயல்படக்கூடும். விளைவில் நன்மை தீமை என்பது, அவரவர் கர்ம வினைப்பதிவுகளின் சாரமாகவும் அமைந்துவிடும். எனவே நம்மை திருத்திக்கொண்டு, பிறரின் சூழல் அறிந்து, பொறுத்துக்கொள்ளவும் பழகிக் கொள்ள வேண்டும். பிறருக்கு நன்மை, உதவி, சேவை என்ற வகையில் நம் வாழ்க்கையை மாற்றிக்கொண்டால், பிறரிடமிருந்தும் சாபம் எழுவதை தடுத்துக் கொள்ளலாம். சிந்தனையில் உயர்ந்து திருத்தம் கொள்க.

வாழ்க வளமுடன். 


How do we live with those who do not believe in God?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, தெய்வ நம்பிக்கை இல்லாதவர்களோடு நாம் வாழ்வது எப்படி? உதாரணமாக என் வாழ்க்கைத் துணைக்கு ‘கடவுள் இல்லை’தான்.


பதில்: 

உலக நாடுகள் பலவற்றிலும் இருக்கக்கூடிய நிலைதான் இது. உண்மையிலேயே, தெய்வம் உண்டா? இல்லையா? என்ற கேள்வியின் மூலமாக நிரூபணம் கேட்பவர்களுக்கு எந்த பதிலும் நாம் தந்து நிரூபித்துவிட முடியாது. அது நமக்கு தேவையும் இல்லை. இன்னும் சொல்லப்போனால், தன்னை நிரூபிக்க வேண்டும் என்பது அந்த ‘தெய்வீகத்திற்கே’ தேவையில்லாதது.

தெய்வீகத்தை விளக்க வந்த பக்தி, உண்மை இழந்து, வேறுபாதை நோக்கி நகர்ந்து விட்டதால், பெரும்பாலான மக்கள் அதில் நம்பிக்கை இழந்துவிட்டார்கள் என்பது உண்மையே. நம்பிக்கை இழப்பு என்பதால் இருந்த, இருக்கிற உண்மை மறைந்துவிடுமா என்ன?!

எல்லாமே அறிவியல் / விஞ்ஞானம் என்ற கருத்துக்களில் மூழ்கிப் போனவர்களின் கருத்து, தெய்வம் என்பது பொய், கடவுள் என்பது இல்லை என்பதுதான். இருக்கட்டும். அது அவர்களின் கருத்துரிமை. அதை நாம் தடுக்கவோ, மாற்றி அமைக்கவோ முடியாதுதான். இவர்களுக்கு குருமகான் வேதாத்திரி மகரிஷி கொடுத்த பதிலையே நாமும் தரலாம். 

‘நாம் சாப்பிடுகிறோம். பலவித உணவுப் பொருட்களை சமைத்தோ, அப்படியேவோ உண்கிறோம். உணவு வயிற்றில் என்ன ஆகிறது? செரிமானம் ஆகிவிடுகிறது. அதுமட்டுமல்லாமல், ஏழு தாதுக்களாகவும் மாறுகிறது. இதை யார் செய்கிறார்கள்? நீங்கள் செய்கிறீர்களா? உங்களுக்கு யாரேனும் செய்கிறார்களா? இந்த சமூகமோ, அரசாங்கமோ செய்கிறதா?’

‘இல்லை, இது இயற்கை என்று பதில் சொல்வீர்கள். அந்த இயற்கையை, அந்த ஆற்றலை நாம் தெய்வீகம், தெய்வம் என்று சொல்லுகிறோம். அந்த தெய்வீகத்தை வணங்குகிறோம். அதை அறிவதற்கு கடந்து உள்ளே போகவேண்டும் என்பதால் கடவுள் என்று வினைக்குறிப்பாக சொன்னது, கடவுள் என்ற பெயர்ச்சொல்லாக மாறிவிட்டது.'

‘எல்லாம் விஞ்ஞானம் என்று சொல்லும் நீங்கள், உலகில் தேர்ந்த பல அனுபவம் வாய்ந்த, விஞ்ஞானிகளிடம், இரண்டு இட்லியை கொடுத்து, இதை ரசம், ரத்தமாக்கித் தாருங்கள் என்று சொல்லுங்களேன்’ என்று கேட்கிறார், வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

தன்னை விட பெரிய, மகத்தான, உண்மையான, முழுமையான பேராற்றலையும், பேரறறிவையும், தெய்வம் என்று சொல்லுவதும், மதிப்பதும், வணங்குவதும், நம்பிக்கையோடும் இருப்பதில் என்ன தவறு?! ஆனால் பக்தி வழியில் ஏற்பட்ட குழப்பங்களுக்காக முழுமையாக கைவிட்டு விடுவது, நம்மைக்குறித்து அறியும் ‘நான் யார்?’ என்ற பயணத்தை தடுக்கும். நம் பிறவிக்கடனான கர்ம வினை தீர்த்தலை மட்டுப்படுத்தும்.

எனினும், அவர்வர்கள், அவர்களின் பாதையில் செல்ல விட்டுவிடுங்கள். என்றாவது ஒருநாள், உண்மை உணர்ந்தால் ‘தெய்வீகத்தை’ ஏற்றுக்கொள்வார்கள். காலம் அவர்களுக்கு பதில் தந்துவிடும்.

வாழ்க வளமுடன்.


Why I am not interested to yoga meditation practice? How I can change it?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.



கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, வேதாத்திரிய தவம் செய்வதற்கான ஆர்வமே இல்லாமல் இருந்தால் என்ன செய்வது? எப்படி திருத்திக்கொள்ளலாம்?!


பதில்:

ஆரம்பகாலத்தில், அதாவது வேதாத்திரிய அடிப்படை பயிற்சி கற்றுக்கொண்ட காலத்தில் அப்படித்தோன்றுவது இயல்புதான். பதினைந்து நாட்களில் நாம் கற்றுக்கொள்ளும் பயிற்சிகள் உடனடியாக நம்மை மாற்றிவிடும் என்று எப்படி நம்பமுடியும்? நாமெல்லாம் எவ்வளவு பெரிய கில்லாடிகள். அப்படியெல்லாம் மாற்றிக்கொள்வோமா? நம்மை அசைக்க முடியாது அல்லவா?

உண்மை என்ன என்றால், நாம் இதுநாள் வரை வாழ்ந்துவந்த நாட்களில், யோகத்திற்கு இடம் அளிக்கவே இல்லை. பக்தியோடும், பக்தி இல்லாமலும் சாமி கும்பிட்டு வந்தோமே தவிர அதன் உண்மை அறிய முயற்சிக்கவில்லை. கோவில், குளமென்று சுற்றி, மலை ஏறி இறங்கினோமே தவிர அதிலும் உண்மை என்ன என்று அறியவில்லை. ஆனால் தொடர்ந்து பலகாலமாக அதை செய்துவந்தோம். அப்படியான பழக்கம் உடனடியாக நம்மைவிட்டு போய்விடுமா? அது கொஞ்சம் கொஞ்சமாகத்தானே விலகும். இதற்கிடையில், யாரோ ஒரு சிலருக்கு, வேதாத்திரியத்தையே விட்டுவிடலாமே என்று கூட தோன்றிவிடும். அப்படியும் சிலர் விட்டுவிட்டு வேறெதோ, வாசி யோகம், சித்தர் யோகம் என்று பயில போய்விட்டார்கள். சரி அவர்களை நாம் குறை சொல்ல முடியாது. அவர்களுக்கு விருப்பமானதை தேர்ந்தெடுக்க அவர்களுக்கு உரிமை உள்ளதுதானே?! நாம் என்ன செய்யமுடியும்?

இப்போது உங்கள் பிரச்சனையும் அதுதான். ஏற்கனவே நீங்கள் வாழ்ந்த வாழ்க்கை, வழக்கப் பழக்கங்களின் தாக்கம் இன்னமும் உங்களை விட்டு விலகிவிடவில்லை. அதனால், எதற்கடா, இந்த தவமும் யோகமும்?! என்று உங்களை, உங்கள் மனமே குழப்புகிறது.

இதற்கு சரியான வழி என்ன தெரியுமா? உங்களை நீங்களே ஆராய்ச்சி செய்யுங்கள். யாரோ சொல்லித்தான் இந்த யோகமும் தவமும் கற்றேனா? இல்லையென்றால் எனக்கே ஆர்வம் வந்து கற்றுக்கொண்டேனா? இதற்கு தகுந்த நேரம், இடம், சூழ்நிலை இருக்கிறதா? இதனால் என்னுடைய வழக்கமான வேலை பாதிப்படைகிறதா? யாருக்காவது தொந்தரவாக இருக்கிறதா? இதனால் என்னுடைய நட்பு வட்டம் பாராட்டுகிறதா? கேலி செய்கிறதா? என் வீட்டில் எதிர்க்கிறார்களா? ஏற்கிறார்களா? என் வாழ்க்கத்துணைக்கு பிடிக்கிறதா? பிடிக்கவில்லையா? இதை செய்யும் பொழுது வேறுவேலை தடங்கல் ஆகிறதா? அடுத்து முக்கியமான வேலை இருக்கிறதா? வீம்பாக இதை செய்கிறேனா? எதிர்பார்ப்போடு செய்கிறேனா? என்ற இந்த கேள்விக்கெல்லாம் பதில் என்ன என்று கண்டுபிடித்து, ஒரு வெள்ளைத்தாளில் பதிலை எழுதிவைத்துக்கொண்டு ஆராய்ந்து சிந்தனை செய்யுங்கள்.

அந்த பதிலின் வழியாக, உங்கள் நிலை உங்களுக்கே புரியவரும், அதன்படி நீங்கள் வேதாத்திரிய யோகத்தை தொடரலாம். உங்கள் ஆர்வமும் கூடிவரும் என்பது உண்மை. அதன்வழியே நன்மை விளையும்.

வாழ்க வளமுடன்.


Why all are advice to worship the Ancestors Worship Temple?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்!



கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, பெரும்பாலோர் குலதெய்வம் கோவிலுக்கு சென்று வழிபடுங்கள். நன்மை பிறக்கும் என்று அடிக்கடி சொல்லுகிறார்களே? அதில் உண்மை உள்ளதா?


பதில்:

பக்தி வழியில், மக்களை மேன்மை அடையச் செய்வதற்காக சொல்லப்படும் வழிமுறைதான் இது. தனியாக குறிப்பிடும் வகையில் சில உள் அர்த்தம் இதில் உண்டு எனினும், அடிக்கடி குலதெய்வம் கோவிலுக்கு சென்று வழிபட்டால் மட்டும் நன்மை பிறந்துவிடுவதில்லை என்பதையும் நாம் அறிந்துகொள்ள வேண்டும்.

குலதெய்வம் என்பது என்ன? ஆதிகாலம் முதல், நம் குடும்பத்தின் முன்னோர்கள் பக்தி வழியில் வழிபட்டு, வழிபாடு செய்து வந்த நிலையில் இருக்கும், தெய்வம் எனலாம். நாமும் சிறுவயதில் இருந்து அச்சடங்குகளை பார்த்து, வணங்கி வந்ததால் நமக்கும் இதில் ஏற்பு உண்டாகிவிடும். முன்னோர்கள் வணங்கிய தெய்வத்தையே நானும் வணங்குகிறேன் என்ற சிறப்பும் அங்கே இருக்கிறது தானே?!

ஆனால் ஒன்றை இங்கே கவனிக்க வேண்டும். இத்தனை ஆண்டுகாலமாக, எத்தனையோ தலைமுறையாக வந்த பக்தி, கனிந்து யோகமாக மாறவில்லையே?! பக்தி என்பது குறிப்பிட்ட விளக்கமுடியாத எல்லைகளைக் கொண்டது. ஆனால் யோகம் என்பது முழுமையானது, விரிவானது, உண்மையானது ஆகும். பக்தியில் இருப்பவர்களுக்கு, யோகம் தேவையில்லை என்ற கருத்துத்தான், பொதுவாக இங்கே பரவியிருக்கிறது. 

வழிவழியாக குலதெய்வ வழிபாடு செய்வது நல்லதுதான் எனினும், அவ்வழியில் நாம் பெற்ற, கர்மா என்ற வினைப்பதிவுகளை தீர்ப்பதற்கு நாம் எடுக்கின்ற முயற்சிகள் என்ன? என்று கேட்டால் ஒன்றுமில்லையே! இத்தனை காலமாக, நாம் பிறந்ததின் பிறவிக்கடனை மறந்துவிட்டு அல்லவா, பக்தியில் திளைக்கிறோம். உண்மையிலேயே, நம் முன்னோர்களுக்காக, அவர்களின் ஆன்ம சாந்திக்காக, கர்மா என்ற வினைப்பதிவை தீர்ப்பதற்காக நாம் ஏதேனும் முயற்சி செய்தோமா?

அவர்களைப்போலவே, இன்னமும் பக்தியில் தானே நின்றிருக்கிறோம்? இந்த இடத்தில்தான் யோகத்தின் உண்மை உணர்ந்து, யோகத்தில் இணைத்துக்கொண்டு, இதுவரை முன்னோர்களின் வழியாக பெற்ற கர்மா என்ற வினைப்பதிவை தீர்த்து, தன்னுடைய களங்கத்தையும் போக்கிக்கொண்டால், நாம் வாழும் வாழ்க்கை இனிதாகும். இனி நமக்கு வரக்கூடிய சந்ததியினரின் வாழ்க்கையும் இனிதாகும் அல்லவா?

அதற்கு நாம் முயற்சிக்க வேண்டாமா? இன்னமும் பக்தியோடு நின்றிருப்பது நல்லதுதானா என்று யோசித்துப் பாருங்கள். உண்மையை அறிந்து கொள்ளுங்கள். உங்களை வாழ்த்தி மகிழ்கிறேன்.

வாழ்க வளமுடன்.


Family lifestyle is obstructs to the yoga?


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, குடும்ப வாழ்க்கையில் இருப்பதுதான் யோகத்திற்கு தடை என்று சொல்லுகிறார்களே, அது உண்மைதானா?


பதில்:

இல்லவே இல்லை. அப்படி சொல்லப்பட்டது ஒருகாலம். அது எப்போதோ கடந்துபோய்விட்டது என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள். எல்லாவற்றிற்கும் மாற்றம் வேண்டும் என்று, நம் வாழ்க்கை மிக உயர்ந்த நிலையில், உலகமே சுருங்கிய அளவிற்கு மாற்றத்தை பெற்று வாழ்ந்து வந்துகொண்டு இருக்கிறோம். இது இன்னமும் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கிறது அல்லவா? அப்படியான மாற்றம், யோகத்திற்கு மட்டும் வராது என்று நினைக்கிறீர்களா? அல்லது வந்துவிடாது என்று முடிவு செய்கிறீர்களா?

யோகத்திற்கும் மாற்றம் வந்துவிட்டது. ஆனால் மக்கள் இன்னும் பழங்கால, அந்தக்கால நிலைகளையே மனதில் பதித்து, அதையே பேசிப்பேசி மயக்கத்தில் இருக்கிறார்கள். முதலில் யோகம் என்றால் என்ன? இதற்கு உடனே நமக்கு கிடைக்கும் பொதுவான பதில் என்ன தெரியுமா? இறைவனை அறியும் அடையும் வழி, இதற்கு துறவு ஏற்கொள்ளவேண்டும். வீட்டை, குடும்பத்தை விட்டு விலகி, காட்டில் சென்று தவம் செய்ய வேண்டும். இதற்கு பல ஆண்டுகள் ஆகும் என்பார்கள். சாதாரண மனிதர்களுக்கு, குடும்ப வாழ்வில் இருப்பவர்களுக்கு தேவை இல்லை என்றும் சொல்லுவார்கள்.

ஆனால், யோகம் என்றால் தன்னை அறிந்து வாழும் நெறி ஆகும். அந்த தன்னை அறிதலில், இறை எனும் மாபெரும் உணர்வையும் புரிந்து கொள்கிறோம். எப்படி நமக்குள்ளாக நிறைந்து இருக்கிறது என்பதையும், இயற்கைக்கும் நமக்கும் என்ன தொடர்பு என்பதையும் அறிந்து கொள்கிறோம். வாழ்வில் நம் கடமை என்ன என்று புரிந்து, எது உண்மையான இன்பமோ அதை மட்டுமே அனுபவித்து, பிறரையும் மகிழ்வித்து வாழப் பழகுகிறோம் என்பதுதான் யோகத்தின் உண்மை விளக்கம் ஆகும்.

தற்காலத்தில் எத்தனையோ யோகம் உலகில் உள்ளன, எனினும், வேதாத்திரி மகரிஷி அவர்களின் மனவளக்கலை என்பது எளிமைப்படுத்தப்பட்ட குண்டலினி யோகம் ஆகும். இதில் எந்த ஒரு குழப்பத்திற்கும் இடமின்றி, கற்றுத் தேரலாம். இன்னமும் பழங்கதை பேசி காலத்தை வீணாக்கிட வேண்டாம். வாழும் காலத்திற்குள்ளாக, நம் பிறவிக்கடனான, கர்மா என்ற வினைப்பதிவுகளை தீர்த்து, துன்பங்கள் நீக்கிய இன்பமான் வாழ்வில், நான் யார்? என்ற தன்னையறிதலில் உயர்ந்து, யோகவாழ்வில் முழுமைபெறுவோம்.

வாழ்க வளமுடன்.

Can we make changes if we feel some problems on the simplified exercise?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, எளியமுறை உடற்பயிற்சியில் சில பிரச்சனைகள் எழுந்தால், நமக்கு நாமே சில மாற்றங்களை செய்துகொள்ளலாமா?


பதில்:

எளியமுறை உடற்பயிற்சி, ஏதோ உடனடியாக, இப்படித்தான் என்ற முடிவில் உருவாக்கப்பட்டது அல்ல என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். குரு மகான் வேதாத்திரி மகரிஷி, மனவளக்கலை வழியாக யோகபயிற்சிகளை தரும் முன்பாகவே, எளியமுறை உடற்பயிற்சி என்பதை படிப்படியாக அமைத்துதந்தார். கிட்டதட்ட 40 ஆண்டுக்கால ஆராய்ச்சியும், செய்துபார்த்த விளைவுகளின் திருத்தங்களையும் கொண்டது ஆகும். 

மேலும், ஒவ்வொரு உலக நாடுகள் பயணத்தின் பொழுதும், அங்குள்ள கால சூழ்நிலைக்கு ஏற்ப, தன் உடற்பயிற்சியால் எழுகின்ற மாற்றங்களையும் குறிப்பெடுத்து, உலகின் எல்லா கால சூழலுக்கும் எற்றவகையில், பாடத்திட்டமாக மாற்றி அமைத்துக்கொண்டார். ஆண்களின் உடலுக்கு ஏற்றவாறும், பெண்களின் உடல் தன்மைக்கு ஏற்றவாரும் பொருந்தமான, திருத்தங்களையும் அமைத்திருக்கிறார், முக்கியமாக அஷ்டாங்க யோகத்தின் மூன்று, நான்கு  நிலைகளான, ஆசனம், பிராணாயாமம் என்பதையும் எளிமையாக்கி, தன் பயிற்சிகளில் இணைத்துக்கொண்டிருக்கிறார் என்று சொல்லலாம்.

தான் வாழும்வரை, அவ்வப்பொழுது மாற்றங்களை கேட்டு குறித்து அதற்குரிய, திருத்தங்களை சொல்லியிருக்கிறார் என்பதே உண்மை. மேலும் பல்வேறு சிறந்த மருத்துவர்களின் ஆலோசனைகளையும் ஏற்றுக்கொண்டுதான், முழுமையாக்கினார். எனவே, உங்களுக்கு, எளியமுறை உடற்பயிற்சியில் என்ன கற்றுத்தரப்படுகிறதோ அதை கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் கையேடு நூலில் என்ன விளக்கப்பட்டுள்ளதோ அதையும் படித்து அறியுங்கள். தினமும் தொடர்ந்து செய்துவாருங்கள்.

எளியமுறை உடற்பயிற்சி செய்யும் பொழுது, பிரச்சனை எழுகிறது என்றால், அதன்காரணம், இதுவரை நீங்கள் உடற்பயிற்சி செய்யாததாலும், புதிதாக ஒன்றை கற்கும் பொழுது உடலும் மனமும் தரும் சோர்வும், ஒதுக்கிவிடும் நிலையுமே தவிர வேறொன்றும் இல்லை. அதனால், நீங்கள் உங்களை ஆர்வமாக வைத்துக்கொண்டு, உற்சாகமாக, செய்து பழகி வாருங்கள். நாளடைவில் உடலும் மனமும் ஒத்த தன்மைக்கு மாறிவிடும் என்பதால், எந்தபிரச்சனையும் உங்களுக்கு உருவாகாது. ஒரே ஒரு பிரச்சனை எழலாம் எப்படி என்றால், இன்றைக்கு எளியமுறை உடற்பயிற்சி செய்யாமல் விட்டுவிட்டேனே? என்ற வருத்தம்தான் அது.

வாழ்க வளமுடன்.


Why we need to worship ancestors and is it a nonsense?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

Rameshwaram, Tamilnadu, India / image by Dinamalar


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, முன்னோர்களை நினைப்பதும், அவர்களை  வணங்குவதும், வேண்டிக்கொள்வதும், இறந்துபோன அவர்கள் நற்கதி அடையவும் வேண்டிக்கொள்வது அவசியம் தானா? நவீன அறிவியல் உலகில் வாழும் நமக்கு, அது ஒரு முட்டாள்தனம் இல்லையா?


பதில்:

மனித வாழ்வு குறித்து, எந்த சிந்தனையும் அக்கறையும், ஆராய்ச்சியும் இல்லாத நிலையில் வாழக்கூடிய மனிதனுக்கு தோன்றக்கூடிய கேள்வியைத்தான் நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். மனிதன், இயற்கையின் முழுமையாக, பரிணாமத்தின் வழியாக வந்தவன். திடீரென வானத்தில் இருந்து குதித்துவிடவில்லை. யாரோ தீடீரென்று உருவாக்கி உலவ விடவும் இல்லை. ஏதுமற்ற ஒன்றாக இருந்து, கருவாகி, பெண்ணுக்குள், கருப்பையில் உருவாகி, வளர்ந்து, முழுமைபெற்று, அவள் பிரசவித்து, வளர்த்து ஆளாக்கி, மூன்று வயதிற்கு பிறகுதான், தான் யார்? என்ற நிலைக்கே ஒரு குழந்தை நிலைத்து வருகிறது. அதன்பிறகு, நான் என்ற தன்முனைப்பில் ஊறித்திழைக்கிறது.

அந்த குழந்தைக்கு, இதற்கு முன் எங்கிந்தோம் என்று நினைவில் இல்லை. அக்குழந்தை வளர்ந்து பெரிய ஆளாகி, உலக இன்பங்களெல்லாம் அனுபவித்து, வயோதிகமடைந்து இறந்தும் போகிறது, எங்கே போகிறோம் என்றும் தெரியாது. அதை பிறருக்கு சொல்லவும் வழியில்லை. வாழும் வரை வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தமும் தெரிந்து கொள்வதில்லை. எதோ பிறந்தோம், வாழ்ந்தோம், இறக்கிறோம் என்று மூன்றே நிலைபாடுகளில் தன் வாழ்வை சுருக்கிக்கொள்கிறோம். உண்மைதானே?

ஆனால், உண்மை அப்படியில்லையே! மனிதன் ‘நான் யார்?’ என்று கேட்டு விடையறியும் வரை அவனுக்கு/ அவளுக்கு பிறவிப்பயணம் தொடரும். தன்னையறிதலும், அதன் வழியாக தனக்கு மூலமான இறையாற்றலை உணர்வதும் கடமையாகிவிடுகிறது. ஆனால் நவீன விஞ்ஞானம் இதை ஏற்பதில்லை.

உண்மையாக, நவீன விஞ்ஞானம், தன்னையறிந்த சித்தர்கள், ஞானிகள், மகான்கள் உருவாக்கித்தந்த பாதைக்கு எதிர் திசையில் அழைத்துச்செல்கிறது என்று சொல்லலாமா என்றால், அதை யாருமே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனால் ஏதோ ஒருவகையில் உண்மை நோக்கித்தான் செல்கிறது என்பது உண்மை, அந்த உண்மை எது என்பதை, தெரிந்துகொள்ளும் அதற்கு நிறைய இழப்பும், காலமும் ஆகலாம். அதுவரை இப்படியான கேள்விகள் வரும்.

நம் முன்னோர்கள் இன்றி நாம் இல்லை. இறந்துபோனவர்கள் குறித்த அக்கறையும், கவலையும் நமக்கு இல்லை எனினும், அவர்களின் நினைவுகளை நாம் தூக்கிச் சுமக்கிறோம் என்பது உண்மைதானே? அதுபோல அவர்களின் இனமறியாத ஏதோ நம்மிடம் தங்கி இருக்கவும் வாய்ப்பு இருக்கலாமே? அதை ‘கர்மா என்ற வினைப்பதிவு’ என்று மனிதனின் வாழ்வை, முழுமையை நோக்கி திருப்பிட ஆர்வம் கொண்ட ஞானிகள் சொல்லுகிறார்கள். அதை தீர்க்கவும், போக்கிடவும் நமக்கு வாய்ப்பு உள்ளது. நாம் அதை தீர்க்காவிட்டால், நம் வழியாக, நம்முடைய குழந்தைக்கும் அது கடத்தப்படும் என்பது இயற்கையின் வினை விளைவு நீதியாகும்.

அதனால்தான், முன்னோர்களை நினைப்பதும், அவர்களை வணங்குவதும், அவர்கள் நற்கதி அடைய வேண்டுவதும் தேவை என்ற கருத்தியல் உருவானது. ஒருவகையில் யோகத்தில் இணைய ஆர்வமில்லாதவர்களுக்கு உதவும் என்பதே உண்மை. எனினும் இது முட்டாள்தனம் என்று நினைத்தால், அது அவரவர் விருப்பமே. ஏனென்றால் வாழும் வாழ்க்கை என்பது அவரவர் உரிமை.

வாழ்க வளமுடன். 

Why always mislead with Karma? Being with positive is good in life! Correct?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, வாழ்க்கையில் எதையும் நேர்மறையாக, நேர்மறை எண்ணங்கள் கொண்டு, நினைத்து வாழ்ந்தால் நல்லதுதானே? அப்போது ஏன் கர்மா குறித்து அடிக்கடி சொல்லி எல்லோரும் பயமுறுத்துகிறார்கள்?


பதில்:

ஆங்கிலத்தில் Positive x Negative என்பதை ‘மெய்மை x பொய்மை’ என்று சொல்லியிருக்கலாம். ஆனால் யாரோ, நேர்மறை x எதிர்மறை என்று மொழி பெயர்த்துவிட்டார்கள். இனி அதை மாற்றிடவும் வழியில்லை. இனி உங்கள் கேள்விக்கு வரலாம், வாழ்க்கையில் எதையும் நேர்மறையாக, நேர்மறை எண்ணங்கள் கொண்டு, நினைத்து வாழ்ந்தால் நல்லதுதான். ஆனால் அப்படி வாழ்பவர்கள் மனநிலை எப்படி இருக்கிறது என்று பார்த்தீர்களா? அல்லது நீங்களே அனுபவித்தீர்களா? என்பதையும் சொல்லி விடுங்கள்.

தான் எப்போதும் நல்ல எண்ணங்களை உருவாக்கிக்கொண்டு, அதாவது நேர்மறை எண்ணங்களை உருவாக்கிக் கொண்டு, அதன்படி வாழ்வதாக இருந்தால், உங்களுக்கும் நல்லது கிடைக்கவேண்டும், மற்றவர்களுக்கும் நல்லது கிடைக்கவேண்டும் என்பது உள்ளர்த்தம் ஆகிறது. இதில் கிடைப்பது, நடப்பது எல்லாமே ‘இன்னும் வேண்டும்’ என்ற நிலையில்தான் இருக்கும். அதாவது பற்றாக்குறை என்ற அளவில்தான் இருக்கும். எவ்வளவு கிடைத்தாலும், எவ்வளவு நிகழ்ந்தாலும் இன்னும் வேண்டும் என்ற தேவை அதிகமாகவே இருக்கும் என்பதே உண்மை. ஏனென்றால் இங்கே முழுமையற்ற நிலைதான் நிகழ்கிறது, கிடைக்கிறது எனலாம்.

ஆனால் நீங்கள் கர்மா என்ற வினைப்பதிவு குறித்து, மற்றவர்கள் பயமுறுத்துகிறார்கள் என்றும் சொல்லுகிறீர்கள். அது அவர்களின் வழக்கம். உங்களை பயமுறுத்தி அதன்வழியாக தங்களை நிலைநிறுத்திட முயற்சிக்கிறார்கள். நாம், வேதாத்திரியத்தில், கர்மா என்ற வினைப்பதிவு குறித்து விளக்கம் மட்டுமே தருகிறோம். புரிந்து கொண்டு, உங்களின் எண்ணம், சொல், செயல் வழியாக திருத்தம் பெறுக என்றுதான் வழிகாட்டுகிறோம். ஆனால் வேதாத்திரியமும் பத்தோடு பதினொன்று என்பதாக நீங்கள் நினைத்து ஒதுக்குகிறீர்கள். நல்லது அது உங்கள் உரிமையும், விருப்பமும் ஆகும்.

வாழ்கின்ற மனிதன், தனக்குள்ளாக, ஏற்கனவே வாழ்ந்த அவனின் முன்னோர்களின் வினைப்பதிவுகளை பெற்றிருக்கிறான். அவனின் எண்ணம், சொல், செயலில் அது விளைவாக வருகிறது. அது ஏன் எனக்கு வருகிறது? என்று கேட்கமுடியாது. காரணம், மனிதன் தனியாக உருவாகி, வந்துவிடவில்லை அல்லவா? இதை, இந்த வினைப்பதிவுகளை மிகச்சாதாரணமாக, நேர்மறை எண்ணம் கொண்ட வாழ்வால் மாற்றிவிட, தீர்த்துவிட முடியாது என்பதே உண்மை. முதலில் நீங்கள் கர்மா என்ற வினைப்பதிவு குறித்தான உண்மை விளக்கங்களை பெற்றுக்கொண்டு ஆராய்ந்து பாருங்கள்,

வாழ்க வளமுடன்.

Why i not interested in yoga and no one do not follow this then why me?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, தினமும் யோகத்தில் ஈடுபடுவது ஏன் சோர்வைத் தருகிறது? பெரும்பாலோர் செய்யாத ஒன்றை நாம் ஏன் செய்யவேண்டும்?


பதில்:

தினமும் யோகத்தில் ஈடுபடுவது ஏன் சோர்வைத் தருகிறது போலவும் பெரும்பாலோர் செய்யாத ஒன்றை நாம் ஏன் செய்யவேண்டும் என்று நினைக்கும் அளவுக்கு, இந்த உலகில் மனோநிலை மாறிவிட்டது என்பது உண்மைதான். காரணம், மனிதன், தன்னையும், தன்னுடைய ஆதாரமூலம் எது? என்பதையும் ஆராயக்கூடிய நிலையில் இருந்து விலகிவிட்டான். அவனுக்கு, இந்த உலகில், பொருள், புகழ், செல்வாக்கு, புலன் இன்பம் இவற்றில் கவனம் கொண்டு வாழ்வதற்கு பழகிவிட்டான். வாழும் வரை இதுவே போதும் என்ற நிலைக்கும் நிறைந்துவிட்டான்.

பிறந்த குழந்தைகூட இயல்பான நிலையில் வளர்கிறதா? என்பதை நீங்கள் பார்த்து பரிசோதிக்கலாம் அல்லது உங்கள் வீட்டில் வளரும் குழந்தைகளையே கவனிக்கலாம். மூன்று வயது வரைதான் அந்த குழந்தைத்தனம் என்ற இயற்கையோடு ஒன்றிய செயல்பாடு இருக்கும், மூன்றுவயதை தாண்டிவிட்டால், குழந்தைகளும் பெரியவர்களோடு போட்டிபோட பழகிவிடுகிறார்கள். பெரியவர்களையே அடக்கிடவும் பழகிவிடுகிறார்கள். இயற்கை குறித்து ஏட்டளவில் தான் உள்ளது, தன்னைப்பற்றிய அறிவும் அங்கே இல்லை. நான் யார்? என்ற தேடலுக்கும் இங்கே இடமில்லை. இயற்கையை மதிப்பதும் இல்லை, இறைநம்பிக்கையும் இல்லை. இதனால் பக்தியும், யோகமும் அவசியமற்று போய்விட்டது. செயல் விளைவு குறித்து அக்கறை இருந்தாலும், கர்மா என்ற வினைப்பதிவு குறித்தும் விளக்கமில்லை. இதனால் ஏதோ பிறந்தோம், வாழ்கிறோம், போய்ச்சேருவோம், இதுதான் மனித இயல்பும், வாழ்க்கையும் என்று வாழப்பழகிவிட்டார்கள்.

ஆனால், நாம், நமக்கு நம் முன்னோர்களால் ஏற்பட்ட உந்துதலால், துன்பம் தீர்க்கவும், தன்னை அறியவும், இயற்கையை உணரவும், இறையுணர்வு பெறவும் ஆர்வம் கொண்டு யோகத்தில் இணைந்திருக்கிறோம். அதை நினைவில் கொண்டு, மற்றவர்களை பார்க்காமல், அவர்களை அவர்கள்போக்கில் விட்டுவிட்டு, உங்கள் பாதையை மாற்றாமல், யோகத்தில் பயணியுங்கள். உண்மை உணர்ந்து, நிறைவான, முழுமையான மகிழ்ச்சியான உலக வாழ்க்கை வாழலாம். அர்த்தமுள்ளதாக மாற்றிக்கொள்ளலாம். வாழும் வாழ்வில் உயரலாம். மற்றவர்களுக்கு உதாரணமாகவும் இருக்கலாம். சமூகம் மதிக்கும் உயர் நிலையும் அடையலாம்.

வாழ்க வளமுடன். 


Why I have not perfect in my job and financially yet?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, திறமை இருந்தும் கூட என் வேலையும் நிறைவில்லை, பணம், சம்பாத்தியம் பொருளாதரமும் நிறைவில்லை. காரணம் என்ன?


பதில்:

உலக வாழ்வியலில் நாம் முன்னேற, கல்வி படிப்பும், திறமையும் மிக அவசியம். வெறும் படிப்பு மட்டுமோ. திறமை மட்டுமே கொண்டு முன்னேறுகின்ற காலம் இப்போது இல்லை என்பது உண்மை. ஆனாலும், தனித்திறமையாளர்களுக்கு மதிப்பும், அதற்கான முன்னேற்றமும் உலகில் ஏற்றுக் கொள்ளப்படுவதை நாம் காணலாம். அதுபோலவே தனித்தொழில், வியாபாரம், சேவை வழியான உழைப்பிற்கும் நன்மதிப்பு உண்டு, வளர்ச்சியும் உண்டு. இங்கே இருக்கும் பிரச்சனை என்னவென்றால், உடனடியாக பொருளாதார உயர்வினை பெற முடியாது. எனவே பொறுமையாக காத்திருக்கவேண்டும் என்பதே உண்மை.

நீங்கள், உங்கள் திறமை மற்றும் படிப்பின் நிலை குறித்து ஆராய்ந்து அதற்கான, அரசு, தனியார் வேலைகளில் இணைந்துகொள்ளுங்கள். மிகுந்த போட்டி இருப்பதால், தொடர்ந்து முயற்சித்தால் மட்டுமே வேலை கிடைத்திடும் என்பதும் உண்மையே. உங்களை முடக்கும், திசை மாற்றும், அடிமைப்படுத்தும், அவமானப்படுத்தும் வேலைகளில் என்றுமே உங்களை ஈடுபடுத்தாதீர்கள். வெறுமனே பணத்திற்காக அப்படி வேலை பார்க்காதீர்கள். அது உங்களை வளர்ச்சிப்பாதையில் செலுத்தாது.

தனியாக நீங்கள் பொருளாதார உயர்வு பெற விரும்பினால், மக்களுக்கு சேவையை கருத்திக் கொண்டு, அதன்படி வேலையை, வியாபாரத்தை, தொழிலை அமைத்துக்கொண்டால் மிகச்சிறப்பாக முன்னேறலாம். குறைந்தது மூன்று மாதங்கள் பொறுமையோடு செயல்வேகம் குறையாது உழைக்கவேண்டியது அவசியமாகும்.

இதை நீங்கள் நம்புவீர்களா என்பது தெரியாது. எனினும் விளக்கம் தர வேண்டியது, எங்கள் கடமை. உங்கள் எண்ணம், சொல், செயல் வழியாக, உங்களை அறியாமல், உங்கள் கர்மா என்ற வினைப்பதிவை விளைவாக்குகிறீர்கள். அதுதான் உங்கள் வாழ்க்கையை அலைக்கழிக்கிறது எனலாம். இயற்கையின் வினைவிளைவு நீதியில் நீங்கள் தப்பிக்க முடியாது. எனவே உங்களின் எண்ணம், சொல், செயல் இவற்றில் விழிப்புணர்வு கொண்டு, வரக்கூடிய விளைவை கவனித்து, தனக்கும் பிறருக்கும் நன்மை தரக்கூடியதையே உங்கள் இயல்பாக்கிக் கொள்ள வேண்டும். இந்த விழிப்புணர்வை யோகமே தரும். யோகமில்லாமல், முடியாதா? என்றால் முடியும் ஆனால் அதில் நிலைக்கமுடியாது தடுமாற்றம் வரும். உங்கள் வாழ்வில் நீங்கள் நல்ல நிறைசெல்வமும், உயர்புகழும் பெற வாழ்த்துகிறோம்.

வாழ்க வளமுடன்.

Can we practice kundalini yoga meditation, exercise, kayakalpa in open places?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, திறந்த வெளியில், காயகல்பம், உடற்பயிற்சி, தவம் செய்யலாம் என்றும் நல்ல சக்தி ஊட்டம் கிடைக்கும் என்றும் சொல்லுகிறார்களே? இது சரியா?


பதில்:

திறந்த வெளியில், எல்லோரும் கூடி உடற்பயிற்சி செய்வதையும், சிலர் கூடி வழிபாடு செய்வதையும் கண்டு அப்படியான முடிவுக்கு வந்திருக்கலாம். ஏதாவது ஒருநாள், ஒரு சிறப்பு விழா, கொண்டாட்ட, நிகழ்வுகளில் பலர் கூடி அப்படி செய்து, மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் செய்யப்படுவதே அந்தமாதிரியான நிகழ்ச்சியாகும். இந்த உண்மையை, அதை நிகழ்த்தியோரும், அமைப்பும் தெரிந்தேதான் செய்வார்கள்.

ஆனால், யோகத்தில், அதுவும் மனவளக்கலை யோகத்தில் இணைந்திருக்கிற நாம், திறந்தவெளியில் காயகல்பம், உடற்பயிற்சி, தவம் செய்வதை தவிர்ப்பது நல்லது. எந்த ஒரு நேரத்திலும், அது அதிகாலையோ, பகலோ, மாலை நேரமோ செய்யவேண்டாம் என்பதே கருத்தாக இருக்கிறது. பெரும்பாலும், கூரை, சுவர்களற்ற திறந்த வெளியில், காற்றின் போக்கு அதிகம் இருக்கும். வெப்பதட்ப தாக்குதல் அதிகம் இருக்கும். அந்த இடங்களை சுற்றி எழும் ஒலிமாசு உங்கள் காதுகளை பாதிக்கும். ஏதேனும் சில பூச்சி, பறவை, விலங்கு இனங்கள் தாக்கம் இருக்கும். அவைகள் உங்களை தொந்தரவு தருபவராக நினைக்கவும் கூடும். இவை எல்லாமே உடலுக்கும் மனதிற்கும் ஒவ்வாத சூழலை தருவதாக அமைந்திருக்கும். அங்கே எழும் தூசி, அதன் தன்மை, கெடுதியான வாசனை ஆகியனவும் பாதிப்பு தரும்.

மேலும் முக்கியமாக, உடல், மனம் இவற்றின் இயல்பான சக்தியை உறிஞ்சி எடுக்கும் தன்மை அங்கே இருக்கக்காணலாம். இது வெகு சீக்கிரமாக உங்களுக்கு சோர்வை ஏற்படுத்தும். சக்தி இழப்பை ஏற்படுத்தும். தவத்தில் தடைகளை உண்டாக்கும். திறந்தவெளி என்பதால், பலவித தேவையில்லாத சக்தி இழப்பு உடனடியாக தாக்கும். இவை உங்கள் உடலை மட்டுமல்ல, மனதையும் பலவகையில் பாதிக்கும், குழப்பத்தை உருவாக்கும். என்னதான் இடத்தூய்மை, மனத்தூய்மை, அருட்காப்பு இட்டுக்கொண்டாலும் கூட, நன்மை தராது என்பதே உண்மை.

எனவே நிச்சயமாகவே, வெளியில், காயகல்பம், உடற்பயிற்சி, தவம் செய்வதை தவிர்த்து விடுங்கள். மேற்கூரை, தடுப்பு சுவர்கள் கொண்ட இடம், அறை தேவை என்பதில் கவனம் கொள்ளுங்கள். உங்கள் மனவளக்கலை யோக பயணத்தில் தடையின்றி பயணம் செய்து உயருங்கள்.

வாழ்க வளமுடன்.

Detailed information about the Manonmaniya Thavam


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, மனோன்மணிய தவம் குறித்து உண்மை விளக்கம் தருக!


பதில்:

மனோன்மணிய தவம், இப்பொழுது தவிர்க்கப்பட்டுவிட்டது. இதுப்போல பல தவங்கள், அதன் அடிப்படை நிலை கருதி நிக்கப்பட்டது. காரணம், நாம் நேரடியாகவே உயர்நிலை தவங்கள் கற்றுவிடுகிறோம். எனவே அத்தகைய உயர்நிலை தவங்கள் கற்கும் நிலையில், அதற்கு மாறான நிலைகொண்ட தவங்கள் தேவை குறைந்துவிடுகிறது. ஆனால் ஆரம்ப காலத்தில், கற்றுக்கொடுக்கப்பட்டது. 

ஏனென்றால், அன்பர்கள் படிப்படியாக உயர்நிலைக்கு வரவும், அவர்கள் தவங்களை, குண்டலினி சக்தி நிறையும் ஆதார, சக்கர நிலைகளை புரிந்து கொள்ளவும் தேவைப்பட்டது. ஆனால் காலமாற்றத்தில், அன்பர்களின் ஆர்வம், முயற்சி இவற்றை கருத்தில் கொண்டும், அவர்களின் தினசரி வாழ்வியல் சூழல் தன்மையைக் கொண்டும், நேரடியாகவே உயர்நிலை தவங்கள் கற்றுக்கொடுக்கப்படுகிறது. அன்பர்களின் நோக்கம் நிறைவேற, கற்ற தவங்களை, தடையில்லாமல் தொடர்ந்து செய்துவருவதில்தான் இருக்கிறது.

எனவே, தவிர்க்கப்பட்ட தவங்களை நாம் மீண்டும் கற்று செய்துவருவது நல்லதுதான் எனினும், அது தேவையில்லை என்பதே கருத்தாக நிற்கிறது.

இதை இன்னும் விளக்கமாக புரிந்து கொள்ள வேண்டுமென்றால். மனோன்மணியம் என்பது, பீனீயல் சுரப்பி என்று விஞ்ஞானத்தில் குறிப்பிடப்படும் ஒரு சக்கரம், ஆதாரமாகும். இந்த மனோன்மணி என்பதை துரிய சக்கரத்தின், அடிப்புற நிலை, மூலை நிலை எனலாம். நாம் இந்த இடத்தில் மனம் செலுத்தி தியானித்து பழக, மனோன்மணிய தவம் சித்தர்களால் உருவாக்கப்பட்டது. இந்த மனோன்மணிய இடத்தை, இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள, ஆக்கினை வழியாக உள்முகமாகவும், தலை உச்சியிலிருந்து கீழாகவும் ஒரு கோடு வரைந்தால், இரண்டு கோடுகளும் இணையும் புள்ளி எனலாம். சிலர் இரு காதுகளின் மேல்புறத்தின் வழியாக கோடுவரைந்தால், அக்கோட்டின் மையப்புள்ளி என்றும் கூறுவார்கள்.

மனோன்மணிய தவம், இணையத்தில் காணக்கிடைப்பதால், அதன்வழியாக நீங்கள் தவம் இயற்றலாம். தவறில்லை.

வாழ்க வளமுடன்.

If Kayakalpa yoga helps to lifetime120 years, why we live long?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, காயகல்பம் செய்தால் 120 ஆண்டுகள் மனிதன் வாழமுடியும் என்பது உண்மையா?! எதற்காக 120 ஆண்டுகள் வாழனும்?


பதில்:

ஆம், உண்மைதான். ஆனால் இதற்கு சில விதிகள் உள்ளன. அதன்படி கற்றுத்தேர்ந்து, பயன்படுத்தி, வாழ்ந்து வந்தால் நிச்சயமாக, மனிதனுக்கு இயற்கை அளித்த 120 ஆண்டுகள் வாழமுடியும் என்பது உறுதி. அவை என்னென்ன?

காயகல்பம் என்பது சித்தர்களின் அற்புதக் கலை. இந்தக்கலை, குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்களின் ஆராய்ச்சியில் ஒழுங்கு செய்யப்பட்டு, மனவளக்கலை வழியாக கற்றுத் தரப்படுகிறது. இப்பயிற்சியை ஒருவர், பருவம் வந்த நிலையில், அதாவது 14 வயது நிறைவில் இருந்தே கற்றுக் கொள்ளவேண்டும். நாள் தவறாது பயிற்சியை செய்துவரவும் வேண்டும். மேலும் உணவு, உழைப்பு, உறக்கம், உடலுறவு, எண்ணம் இவ்வைந்தில் அளாவு முறையோடும் வாழ்ந்துவர பழகவேண்டும்.

ஒரு மனிதனின் ஆயுள் பூமியின் சுழற்சியாலும், அதன் மையத்தில் உண்டாகும் ஆற்றலாலும் தான் நிர்ணயிக்கப்படுவதாக, குரு மகான் வேதாத்திரி மகரிஷி குறிப்பிடுகின்றார். உயிருக்கும் உடலுக்கும் உள்ள இணைப்பு, தொடர்பு தினமும் விலகிக் கொண்டே இருக்கிறது என்றும் சொல்லுவார். முன்னதாக, ஆசான் திருவள்ளுவர், ஒரு நாள் என்பது உயிரை அறுக்கும் வாள் என்று பொருள்பட ஆயுள் குறைவது குறித்து தன் குறளில் சொல்லுகிறார்.

சித்தர்களின் காயகல்பபயிற்சியை தொடர்ந்து செய்வதால், ஓவ்வொருநாளும், நம் உடலில் இருந்து வெளியேறக்கூடிய உயிர்த்துகள்கள் நிறுத்தி, பாதுகாக்கப்படுகின்றன. காயகல்ப பயிற்சியில், வித்துவின் நீர்த்தன்மையை கெட்டிப்படுத்தி வருவதால், அந்த வித்துவே, உயிர்த்துகள்களை காக்கிறது என்ற உண்மையை நாம் அறிந்து கொள்ள வேண்டும். இந்த வித்து மற்றும் உயிர்த்துகள்களின் கூட்டு, மனிதனின் ஆயுளை, இயற்கையின் சராசரியான 120 ஆண்டுகள் காக்கும் தன்மையை பெற்றுக்கொள்கிறது. இது வெறும் நம்பிக்கையல்ல. தினமும் பயிற்சி செய்துவருபவர்கள் உணர்ந்த உண்மையாகும்.

சரி, ஏன் 120 ஆண்டுகள் வாழவேண்டும் என்று கேட்கிறீர்கள். வேடிக்கையான கேள்வி, எதை எப்படி அனுபவித்து வாழ்ந்து மடிந்தால் போதும் என்று நினைக்கிறீர்கள்? உங்களின் இந்த கேள்வியில், எது வாழ்க்கை உண்மை? பிறவிக்கடமை? நான் யார்? இயற்கை என்பது என்ன? எனக்கும் இயற்கைக்கும் என்ன தொடர்பு? மனம் என்பது என்ன? உயிர் என்பது என்ன? இறை என்பது என்ன? ஏன் பிறந்தேன்? ஏன் இறக்கிறேன்? பிறக்கும் முன் என் நிலை என்ன? இறந்த பிறகு என் நிலை என்ன? என்ற கேள்விக்கெல்லாம் உங்களுக்கு நேரமும், அவகாசமும், உண்மை அறியும் ஆர்வமும் இல்லை என்பதை சொல்லிவிடுகிறீர்கள். இந்த உண்மைகளை அறிந்துகொள்ளவும், அந்த உண்மைகளை பிறருக்கு பகிர்ந்து, அவர்களையும் உயர்த்தவும் வாழ்நாள் உதவிடுமே?! எனினும், இந்த உலகில் எப்படி வாழ்வது, எதை தேடுவது, அனுபவிப்பது என்பது உங்கள் விருப்பமே! இதில் மாற்றுக்கருத்தில்லை!

வாழ்க வளமுடன்

How we get extreme feel in life bond and why called is as eroticism


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

 கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, உடலுறவின் பொழுது அதிக இன்பம் எழுவது ஏன்? ஆனாலும் அதை சிற்றின்பம் என்று சொல்லுவது ஏன்?


பதில்:

இந்தக்கேள்வி, எல்லோருக்கும் பயன்பெறும் பதிலை பெற்றுத்தரக்கூடிய கேள்வி, மனிதவாழ்வின் தொடக்கமே, பாலுறவில்தானே ஆரம்பிக்கிறது. ஆணும்  பெண்ணும் இணைந்துதான் ஒரு புதிய உயிரை உருவாக்ககூடிய தேவையை, இந்த இயற்கையும், தெய்வீகமும் ஏற்படுத்தி, பாதுகாத்து முழுமையாக்கியும் உள்ளது. இந்த பாலுறவு, அதன்வழியான புதிய உயிரனம் என்ற பண்பு, ஈர் அறிவு பரிணாமத்தில் தொடங்கிவிடுவதாக, விஞ்ஞான அறிஞர்கள் சொல்லுகிறார்கள்.

மேலும் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும், தன்னுடைய பருவ வயதில் ஏற்படும் பாலுறவு ஆர்வம் இயல்பானதே, இயற்கையானதே அதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால், நாம் வாழும் உலகில், சமூக அமைப்பில், ஒரு கட்டுப்பாடு உள்ளது. இது ஒவ்வொரு நாட்டிற்கு ஒவ்வொரு அளவுமுறை, வயது, வழிகள், சட்டம், விதிகள் உருவாக்கப்பட்டிருக்கிறது. நம் இந்தியநாட்டில் பருவ வயது என்பது ஆணுக்கு 21 எனவும், பெண்ணுக்கு 18 என்றும் அமைந்திருக்கிறது. ஆனால் இயற்கையில் ஆணுக்கு 14 வயதிலும், பெண்ணுக்கு 10 முதல் 14 வரையிலான காலத்தில் பருவ தூண்டலும், அதன் உயர்வும் கிடைத்துவிடுகிறது.

உண்மையாகவே இந்த 10 முதல் 14 வயதில், பாலுறவு குறித்த விளக்கமும், அதன் விளைவும், அதை சமாளிக்கக் கூடிய தகுதியும் இருக்குமா என்றால் இல்லை. அதனால், இக்கால கட்டத்தில் பெரியவர்கள் / பெறோர்களின் / அறிஞர்களின் உதவியும், அக்கறையும், ஆலோசனையும் தேவைப்படுகிறது. இல்லையேல், பருவ வயது ஆணும் பெண்ணும் பாலுறவு இன்பத்தில் ஆழ்ந்து, அதன் தாக்கத்தில் தங்கள் வாழ்வையும், எதிர்காலத்தையும் சிதைத்துக் கொள்வார்கள்.

மேலும் பெண்ணுக்கு அந்த வயதில், குழந்தை உருவாகிவிடுமானால், அது மிகப்பெரும் சமுதாய கேடாக மாறிவிடும். அந்த வயதில் அவள் குழந்தையை பெற்றெடுக்கவும் வலிமையற்று இருப்பாள், வளர்க்கவும் முடியாது. இந்த சமூகமும் அதை ஏற்றுக் கொள்ளாது. இதனால்தான் குறிப்பிட்ட காலம் வரை காத்திருந்து, திருமணம் என்ற பந்தம் அமைத்து, இவளுக்கு இவன், இவனுக்கு இவள் என்று ஒப்புதலையும், சமூகம் ஏற்கும் நிலையையும், இவனின், இவளின் குழந்தை இது என்ற நிலைபாட்டையும் உருவாக்கிக் தருகின்றனர். இதனால்தான், பாலுறவை, தகுந்த வயதுவரை காத்திருந்து பெறவேண்டும் என்ற நிலையில்தான் அதை ‘சிற்றின்பம்’ என்று வாழ்வோர், அறிஞர்கள் சொல்லிவருகின்றனர், 

மேலும் யோகத்தில் இருப்பவர்களும் ‘சிற்றின்பம்’ என்று சொல்லுவது வழக்கம். அதற்கான காரணம், யோகத்தின் வழியாக, நான் யார்? என்று தன்னை அறிந்து, இறையுணர்வு பெற்றால், அதுதான் பேரின்பம் என்ற கருத்தில், மற்றது எல்லாம் சிற்றின்பம், குறையுடைய, முழுமையடையாத, நிறைவைத்தராத இன்பம் என்று சொன்னார்கள்.

சரி, உடலுறவின் பொழுது ஏன் அதிக இன்பம் எழுகிறது? அல்லது அப்படித்தோன்றுகிறது? இதற்கான காரணம், நாம் உணர்கின்ற, பெறுகின்ற, அதீத இன்பத்தை, நம்முடைய உயிராற்றலின் மூலமாகவும், அதன் வழியாக வருகின்ற ஜீவகாந்தம் என்ற இயக்கத்தாலும் பெறுகின்றோம். பாலுறவில் இந்த ஜீவகாந்தம் தன் இழப்பில் கூடுதலாக செலவாகிறது என்பதும் உண்மை. அதனால் அந்த இழப்பை ஈடு செய்ய, உயிரில் ஏற்படும் மாற்றம், ஒருவித மயக்கத்தை ஏற்படுத்துவதால், அது நமக்கு அதீத இன்பமாகவும் தோன்றுகிறது. ஆனால் அது தொடருமானால், உயிரிழப்பும் நேரலாம். கவனம்.

வாழ்க வளமுடன்.


How shanti meditation works? is it okay to store the kundalini there?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா,  குண்டலினி சக்தியை மூலாதாரத்தில் மறுபடி கொண்டு செல்வது நல்லதா? அப்படியானால் சாந்தி தவம் எப்படி வேலைசெய்கிறது?


பதில்:

நல்ல புரிதலுக்கான கேள்வி இது. நீங்கள் யோகத்தில் இணைந்து கொண்டால் உங்களுக்கு, குருவால் தீட்சை தரப்படும். சில யோக அமைப்புக்களில் குண்டலினி தீட்சை என்பது பெயரளவில்தான் இருக்கிறது. நீங்களாகவே உயர்த்திக்கொள்ளவோ, தானாகவே எழும்படி செய்யவோதான் பயிற்சி தரப்படுகிறது. இதற்கு கொஞ்சம் காலமும், முயற்சியும் ஆகலாம். ஆனால், குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்களின், மனவளக்கலை மிக எளிமையான யோகமுறை ஆகும். உயர்ந்த குருவால், பயிற்சி பெற்ற ஆசிரியரால், தொட்டுத்தரும் தீட்சை மூலமாக, குண்டலினி சக்தி, ஆக்கினை சக்கர மையத்திற்கு உயர்த்தப்படுகிறது. உடனடியாக நாம் அதை உணர்ந்து, தவம் இயற்றவும் முடியும்.

ஆர்வமும், முயற்சியும், ஏற்கனவே பக்தியில் ஈடுபாடு உள்ளோர்க்கும், ஆக்கினையில் தவம் இயற்றிவர, மூன்று நாட்களுக்குள் நல்ல ஆற்றல் பெருகிவரக் காணலாம். ஆனாலும் ஒருவாரம் ஆக்கினையில் இருப்பது நல்லதே. தவ ஆற்றல் ஆக்கினையில் பெருகிவிட்டால், ஆரம்பகாலத்தில், அதாவது தவம் புதிதாக கற்றுக்கொண்ட நிலையில் உள்ளவர்களுக்கு, தலைவலி, தலைபாரம், உடல் சோர்வு வரும். இது இயல்பு. அந்தநிலையில், அவர்களுக்கு உண்டாகிய தவ ஆற்றலை, குறைக்கவேண்டும். அதற்காகவே, சாந்தி தவம் என்ற முறை இருக்கிறது. மிக நீண்டகாலமாக இத்தவம் இல்லை. ஆனால், சித்தர்களின் ஆராய்ச்சி வழியாக, மகரிஷியின் காலத்தில், நடைமுறைக்கு வந்துவிட்டது.

சாந்தி தவம் என்பது, ஆக்கினையில் நின்றிருக்கும் குண்டலினி சக்தியை, மீண்டும் மூலாதார சக்கர மையத்திற்கு கொண்டு வருவதாகும். இது வாரம் ஒருநாளில், வெள்ளிக்கிழமையில் செய்வதுவர வேண்டும் என்பது நடைமுறையில் இருக்கிறது. இங்கேதான் உங்கள் சந்தேகம் எழுகிறது. எழுப்பிய, உயர்த்திய குண்டலினி சக்தியை, மீண்டும் அதன் இடத்திற்கே கொண்டுவந்தால் என்ன ஆகும்? 

அதீத தவ ஆற்றலை, சக்தியை, உடல் ஆற்றலாக மாற்றிக்கொள்ளும் தன்மை அங்கேதான் கிடைக்கிறது. அதனால்தான் குண்டலினியின் இடத்தை மாற்றி அமைக்கிறோம். எனவே இது நல்லதுதான். மேலும் முக்கியமாக, ஒருவரது வாழ்வில், ஒருமுறை எழுப்பி, உயர்த்தப்பட்ட குண்டலினி மீண்டும் அடங்கிவிடாது. எப்போதும் தவம் பழகப்பழக, தானாக எழுந்து உயர்ந்து, தவ நிலைகளில் நம்மோடு, நம் விருப்பத்திற்கு துணை நிற்கும் என்பதே உண்மை ஆகும்.

வாழ்க வளமுடன்.

Is sangalpa and mantra working? Or is it deception?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, சர்வ வஷிய தன ஆகர்ஷண சங்கல்பம் உண்மையிலேயே வேலை செய்கிறதா? அல்லது ஏமாற்றுவேலையா?


பதில்:

இதற்கான பதில் உங்களுக்கு நிச்சயமாக தெரியவேண்டும் என்றால், நீங்கள் அதை செய்துபார்க்க வேண்டியது அவசியம். அது ஏமாற்று வேலையா? இல்லையா? என்பதையும் நீங்கள் செய்து பார்த்த பிறகு தெரிந்துகொள்ளலாம் என்பதே உண்மை. வேதாத்திரி மகரிஷி அவர்கள் சொல்லியிருக்கிறார் என்பதற்காகவும், நான் சொல்கிறேன் என்பதற்காகவும், பிறர் சொல்லுகிறார்கள் என்பதற்காகவும் நீங்களே உங்களை ஏமாற்றிக் கொள்ள தேவையும் இல்லை. சில நல்லதை, விளக்கங்களை சொல்லுபவரின் அனுபவம் கொண்டுதான் ஏற்கவேண்டும். சந்தேகம் வருகிறது என்றால் தாராளமாக நீங்கள் தவிர்த்துவிடலாம். இது அவரவர் விருப்பமே அன்றி, கட்டாயம் என்ற நிலைபாடு இல்லையே. அதுப்பொல பிறரின் நம்பிக்கையை உதாசீனப்படுத்துவதும் நம் வேலை இல்லையே!

நமக்குள்ளும், இந்த பிரபஞ்சம் முழுவதும் நிறைந்திருக்கும் ஆற்றலை, சக்தியை, நம் வசப்படுத்திக் கொள்ளும் ஒரு வழிமுறைதான், சங்கல்பம் அல்லது மந்திரம். இதை தொடர்ந்து ஊக்குவிக்கும் பொழுது, அங்கே ஏற்படும் மாற்றம், நம் விருப்பத்திற்கு சாதகமாக அமைகிறது என்பதுதான் உண்மை. இதை விஞ்ஞான அறிவுகொண்டும் நிரூபணம் செய்யலாம். ஆனால் விஞ்ஞானிகள் விளைவினை உடனே எதிர்பார்ப்பதால், அவர்கள் ஏற்க மாட்டார்கள். விளைவு என்பது உண்மை, ஆனால் அது நம் எதிர்பார்ப்புக்குள் அடங்கிடாது! அதில் இயற்கையின் பங்கும், இயற்கையின் தவறாத விதியும் உண்டு. அதை நாம கணிக்கவும் முடியாது.

சங்கல்பமும், மந்திரமும் மிகச்சாதாரண மனிதர்கள் உருவாக்கிடவும் முடியாது. அதற்கு ஆழ்ந்த அனுபவமும், உண்மை விளக்கம் பெற்ற நிலையும், இயற்கையோடு தன்னை அறிந்த நிலையும், புரிதலும் தேவை. அப்படியான மகான்கள் உருவாக்கியதே, இப்போது நமக்கு கிடைத்திருக்கும் சங்கல்பம் மற்றும் மந்திரம். யாருக்கு நம்பிக்கையும், விருப்பமும் இருக்கிறதோ அவர்கள் அதை செய்யட்டும் பலன்பெறட்டும். நம்பிக்கை இல்லாதவர்கள் அதை செய்யவேண்டியதில்லை!

வாழ்க வளமுடன்.

After does good, had more problems, so Karma is fake?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, நல்ல செயல்கள் செய்தால் கர்மா என்பது தீர்ந்துவிடும் என்கிறார்கள். ஆனால் நிஜத்தில் அப்படி நடக்கமாட்டேன் என்கிறதே? மேலும் புதிய சிக்கல் அல்லவா உருவாகிறது? எனவே கர்மா தீர்த்தல் என்பது பொய்தானே?


பதில்:

உங்கள் கருத்தைத்தான் நவீன விஞ்ஞான உலகம் கடைபிடித்து வருகிறது. அந்த வழியில் தான் நவீன சிந்தனையாளர்களும், சராசரி மனிதர்களும், எதையுமே கண்டு கவலைப்படாது வாழ்ந்து வரும் பகுத்தறிவு மனிதர்களும் வாழ்ந்துவருகிறார்கள். இதில் எந்த குறையும் சொல்லுவதற்கு இல்லை. இங்கே சில உண்மையை புரிதல்களில் இருக்கக்கூடிய குழப்பங்கள்தான் உள்ளது. அதை எந்த தன்னையறிந்த ஞானியோ, மகானோ, தத்துவஞானியோ, ஒரு தனி நபரும் திருத்திட வேண்டியதில்லை. எல்லாவற்றையும் ‘காலமே’ பார்த்துக்கொள்ளும். 

முதல் கருத்தாக, நாம் தனித்து பிறக்கவில்லை என்பதை எல்லோரும் அறிவார்கள். மரபு வழி என்ற வகையில், நவீன மருத்துவ உலகம் பலவித நோய்தாக்கத்தை அறிவிக்கிறது அல்லவா? சிறுவயது முதல், இளம் வயது, நடுத்தரம் வரை  வெளிக்காட்டாத நோய்கள், பிறகு ஓவ்வொன்றாக வருகிறது அல்லவா? நீங்கள் அதை வரவழைக்காவிட்டாலும் கூட தானாக வருகிறதே? எப்படி? 

அதுப்போலவே, மனித உடலின் புலன்களாலும், அதற்குதவும் கருவிகளாலும் அறியமுடியாத, கர்மாவும், மரபு வழியாக தொடர்கிறது என்பதே உண்மை. கர்மா என்பதை, குரு மகான் வேதாத்திரி மகரிசி சொன்னதைப்போல ‘வினைப்பதிவு’ என்று புரிந்துகொண்டால் எளிமையானதாகும். இனி உங்கள் கேள்விக்கு வரலாம். நல்ல செயல்கள் செய்தால் கர்மா என்பது தீர்ந்துவிடும் என்கிறார்கள். ஆனால் நிஜத்தில் அப்படி நடக்கமாட்டேன் என்கிறதே? நல்ல செயல்களை செய்வது என்பது, கர்மயோகம் என்று வேதாந்தத்தில் சொல்லுவார்கள். அது ஒரு நல்ல வாழ்வியல் முறை. ஆனால் ஏன் நல்லது செய்தாலும் தவறு நிகழ்கிறது என்றால், முதலில் நம்மிடம் இருக்கும் கர்மா என்ற வினைப்பதிவை, திருத்திக் கொள்ளவேண்டும். அதன்பிறகுதான் நீங்கள் செய்வது, முற்றிலும் நல்லதாக, தவறான விளைவை தாராததாக இருக்கும். புதிய சிக்கலும் உருவாகமல் இருக்கும்.

எனவே இதன் விளக்கமாக, நமக்குள் இருக்கும் மூன்றுவகை கர்மாவான, சஞ்சிதம், பிராரப்தம், ஆகாமியம் ஆகியவற்றை திருத்தி அமைத்துக் கொள்வது முக்கியமானது. இவற்றை திருத்தி அமைக்காமல், எது செய்தாலும், அது கர்மாவின் வெளிப்பாடாக அமையும். அதனால்தான் உங்களால் ஏற்றுக் கொள்ளமுடியாமல், கர்மா என்பதே பொய் என்ற மனநிலையை, முடிவை உருவாக்குகிறது.

வாழ்க வளமுடன்.

If we have to join in yoga, we need to emptiness on our materialistic world?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, யோகத்தில் இணைந்தால், உலக இன்பமும், பணம் சம்பாத்தியமும், சொத்துக்களும் இழந்துவிடுவோம் என்பது உண்மையா?


பதில்:

இந்த கேள்வி 99.9% உலக மக்களிடம் எழுகின்ற சந்தேகமே ஆகும். யோகத்தின் வழியாக, யோகியர்களுக்கு கிடைத்த, மரியாதையை, உதவியை, போற்றுதலை கண்ட சில, கபட வேடதாரிகள், தாங்களும் யோகியர்களாக, உரு மாற்றிக்கொண்டு, சமூகத்தில் உயர்ந்த மனிதர்களின் நட்பை பெற்று, அவர்களின் பணம், சொத்துக்களை ஏமாற்றிப் பறித்திட, நடத்திய நாடகமே இந்த நிலையில் மக்கள் நினைப்பதற்கு காரணம் ஆகும்.

ஆனாலும், நம் உலகில் அந்தக்காலம் முதல், இந்தக்காலம் வரை, ஒரு யோகி எப்படி இருக்கவேண்டும் என்பதற்கான வரையறையை, அவரவர்களாகவே ஏற்படுத்திக் கொண்டு, அதில் பலவித சட்ட திட்டங்களை உண்டாக்கி, அதிசயம், அற்புதம் என்ற கட்டுக்கதைகளையும் சேர்த்துக் கொண்டார்கள்.

 இதனால் ஒரு யோகி, எல்லாவற்றையும் இழந்துவிடுவார். உலக இன்பங்களில் அவருக்கு ஆர்வம் இருக்காது. பணமும் சொத்தும் வேலையும் அவருக்கு அவசியமில்லை. எல்லா நேரமும் இறைபுகழ் பாடுவார். நமக்கு ஆசிகள் வழங்கிக்கொண்டே இருப்பார். நாம் அவருக்கு கொடுப்பதை மட்டும் வாங்கிக் கொள்வார். அவராக எதுவுமே கேட்க மாட்டார், பேசக்கூட மாட்டார், மௌனமாகவே இருப்பார்... என்பதான பலப்பல கற்பனை கதைகளையும் உருவாக்கி விட்டனர்.

மேலும், யோகியர்களின் எளிமையை, போற்றும் நபர்களும் இருக்கிறார்கள், அது குறித்து கிண்டல் செய்பவர்களும் இருக்கிறார்கள். ஒரு யோகி இப்படித்தான் இருக்கவேண்டும் என்று சொல்லுவதற்கு இவர்கள் யார்?!

தன்னை அறிந்த யோகி, தனக்குள் இறையையும் உணர்ந்து நிறைவாகிறார். உலகில் வாழும் வரை அவருக்கான உரிமை, தேவை, கடமை உண்டுதானே? குரு மகான் வேதாத்திரி மகரிஷி சொல்லும்பொழுது, ஒரு ஆசிரமத்தில் தன்னை இணைத்துக்கொண்டால் மட்டும், உணவு, உதவி, அக்கறையை தந்துவிடுவார்களா? அங்கே அவரும் உழைத்தால் தானே எல்லாம் கிடைக்கும் என்கிறார். எனவே யோகத்தில் இருப்பரோ, யோகியோ இப்படி இருக்கவேண்டும் அல்லது இப்படி இருக்கவேண்டியது இருக்கும் என்ற கற்பனைகளுக்கு இடம் கொடுக்காதீர்கள். இன்னமும் பழைய கட்டுக்கதைகளை நம்பாதீர்கள்.

இல்லறத்தின் கடமையை விட்டு விலகுவதும், யோகத்தில் தன்னை ஏமாற்றிக் கொள்வதற்கான காலம் இது அல்ல. மனவளக்கலை வழியாக, பிறப்பின் கடமைக்கும், இறையுணர்வுக்கும், நான் யார்? என்ற தன்னையறிதலுக்கான, மிகச்சிறந்த வழி நமக்கு கிடைத்திருக்கிறது. கட்டுக்கதைகளை நம்பி, பிறர் சொல்லுவதை ஏற்று, உங்களுக்கான வாய்ப்பை தவிர்த்துவிட வேண்டாம். உண்மை என்ன என்று உங்களுக்குள்ளாக சிந்தித்து ஆராய்ந்தும் பாருங்கள்.

வாழ்க வளமுடன்.

Explain the someone says, kayakalpa yoga will reduce the happiness of life?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

 கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, காயகல்பம் கற்றுக்கொண்டால், காம இன்பத்தில் ஆர்வம் குறைந்துவிடும் என்று சொல்லுகிறார்களே? அது உண்மையா?


பதில்:

காயகல்பம் கற்றுக்கொண்டவர்கள் அப்படி சொன்னார்களா? காயகல்ப யோகபயிற்சியின் உண்மை அறியாதவர்கள், அதை கற்றுக்கொள்ள ஆர்வம் இல்லாதவர்கள், அதை விரும்பாதவர்கள் சொல்லுகின்ற கட்டுக்கதைதான் அது. லட்டு இனிப்பானது என்று சொன்னால் நீங்கள் என்ன சொல்லுவீர்கள். இல்லவே இல்லை இனிப்பு என்று நிச்சயமாக சொல்லுவீர்கள். ஏன்? எப்படி? ஏற்கனவே லட்டு சாப்பிட்டு இனிப்பை சுவைத்த அனுபவம் இருக்கிறது அல்லவா? அதன் வழியாக அந்த பதிலை சொல்லுவீர்கள். யாரேனும் ஒருவர், உங்களிடம் ‘லட்டு சாப்பிடாதே கசக்கும்’ என்று சொல்லியிருந்தால், இன்று நீங்கள் லட்டின் சுவையை சொல்லமுடியுமா?

காயகல்ப யோகக்கலை, வேண்டாத, முரண்பாடான, காம இன்ப நினைவுகளை, அந்த ஊக்குவித்தலை தடுக்கிறது. சரி செய்கிறது. ஆனால் இயற்கையாக இருக்கின்ற, எழுகின்ற காம இன்பத்தை குறைக்கிறது என்று உங்களை ஏமாற்றுகிறார்களே, அதற்குப் பதிலாக, இன்னமும் நிறைவாக, முழுமையாக அனுபவிக்க துணை செய்கிறது என்பதுதான் உண்மை. எனவே கட்டுக்கதைகளை நம்பாதீர்கள்.

காம இன்பதை அதிகப்படுத்தினாலும் நோய்வரும், இயற்கைக்கு முரணாக குறைத்தாலும் நோய்வரும் என்பதை நீங்கள் அற்வீர்களா? அப்படி இயற்கையாக உள்ளபோது எப்படி, காயகல்பம் கற்றுக்கொண்டால், காம இன்பத்தில் ஆர்வம் குறைந்துவிடும் என்று சொல்லுகிறார்கள் என்று புரியவில்லை. உங்களுக்கு கிடைக்கும் நல்ல வாய்ப்பை, தானும் பெறாமல், உங்களையும் பெற விடாமல் தடுக்கிறார்கள் என்பதுதான் உண்மை. அதற்கு இடமளிக்காமல், நீங்களே நேரில் மனவளக்கலை மன்றம் சென்று, வேதாத்திரிய காயகல்ப யோகப்பயிற்சியின் உண்மை அறிந்து, உடனே கற்றுக்கொள்ளுங்கள்.

வாழ்க வளமுடன்.

How long we need to yoga practice for answering on Who am I?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

 கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, நான் யார்? என்று தன்னையுணர எவ்வளவு காலம் ஆகும் என்று சொல்ல முடியுமா?


பதில்:

இதற்கான பதிலை யாராலும் சொல்லிவிட முடியாது. ஏனென்றால், அவரவர் பெற்றுள்ள கர்மா எனும் வினைப்பதிவுகளின் தாக்கம் கொண்டே அளவிடவும், அதை எவ்வளவு காலத்திற்குள்ளாக தீர்க்கமுடியுமோ அதைபொறுத்துமே அமையும் என்பது உண்மை. நம் குருமகான் வேதாத்திரி மகரிஷி சொல்லியுள்ளபடி பார்த்தால், மனவளக்கலை வழியாக யோகம் கற்று, வாழும் காலத்திற்குள்ளேயே, தன்னுடைய கர்மா எனும் விளைப்பதிவு களங்கங்களை நீக்கி, இறையுண்மை அறியலாம். இதற்கு பயிற்சி, முயற்சி, ஆராய்ச்சி உறுதுணையாக இருக்கவேண்டும்.

ஆனால், ஒருவரின் கர்மாவை தீர்த்திட ஒரு பிறவி போதாது என்ற கட்டுக்கதை, ஏற்கனவே வழக்கத்தில் உள்ளது. அந்த நம்பிக்கையில், தன்னால் முடியாது என்ற ஒரு தாழ்வு மனப்பான்மையும் மக்களிடம் உருவாகிவிட்டதை அறியமுடியும். இதனாலும் யோகத்திற்கு வராமல், பக்தி வழியிலேயே நல்லது நடக்கட்டும் என்ற நம்பிக்கைக்கு போய்விட்டனர் என்றால் மிகையில்லை. மேலும் யோகம் கடினமானது என்றே இன்னமும் நினைத்துக்கொண்டு இருக்கின்றனர். ஆனால், மனவளக்கலை எளியமுறை குண்டலினி யோகம் என்பதை மறந்துவிடுகின்றனர்.

பொதுவாக சொல்லுவதாக இருந்தால், நம் மகரிஷி சொன்னது போல, பயிற்சி, முயற்சி, ஆராய்ச்சி இவற்றோடு தவ வாழ்வை அமைத்துக் கொண்டால், பத்து ஆண்டுகள் முதல் முப்பது ஆண்டுகள் ஆகலாம் என்று சொல்லலாம். அது எங்களின் அனுபவத்தில் கிடைத்த ‘நிறைபேற்று நிலையை’ உணர்ந்து சொல்லுகிறோம். ஆனாலும் இந்த கணக்கீடு மாறக்கூடும் என்பதே உண்மை. ஆனாலும் கூட, உங்களுக்கு ஏற்படும் மாற்றத்தை, அனுபவத்தைக் கொண்டு, நீங்களே அதை தெரிந்து கொள்ளவும் முடியும். அற்புதமான அந்த அனுபவத்தை நிச்சயமாக, வாழ்நாளுக்குள்ளாக பெற்றி மகிழ்ந்து, இறையுணர்வு விளக்கத்தோடு, உண்மை இன்பம் என்ன என்ற தெளிவோடும் வாழமுடியும் என்பதே உண்மையாகும். அத்தகைய அனுபவம் கிடைக்க உங்களை வாழ்த்தி மகிழ்கிறேன்.

வாழ்க வளமுடன்.