2024 | CJ

2024

Please explain the Realization of the Consciousness by all ways?


இறையுண்மையை நாம் அறிவதற்கும், புரிந்து கொள்வதற்கும், உணர்ந்து கொள்வதற்குமான விளக்கங்களை தரவேண்டுகிறேன்.



வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, இறையுண்மையை நாம் அறிவதற்கும், புரிந்து கொள்வதற்கும், உணர்ந்து கொள்வதற்குமான விளக்கங்களை தரவேண்டுகிறேன்.

வேதாத்திரி மகரிஷி அவர்களின் பதில்:

அன்பும் கருணையும் மகிழ்ச்சியும் நிறைவும் வேண்டுமானால் இறைநிலை உணர்வு எல்லோருக்கும் வர வேண்டும்.  சிறு குழந்தைகள் நிலையிலே இந்த உணர்வு வருவது எளிதல்ல என்பதால் சிலை வணக்கம் போன்ற சில முறைகள் அவசியமே.  ஆனால் பருவம் வந்த பின் புற வழிபாட்டிலிருந்து அக வழிபாடு தொடங்க வேண்டும்.  அதற்குப் பிறகு எல்லோருக்கும் அகத்தவம் எனும் கருதவ சாதனை அவசியம் வேண்டும். 

அப்போது தான் மனம் ஒரு சமநிலையிலே இருக்கவும் உயர் நிலையிலே அறிவு இயக்கவும் முடியும்.  இங்கே தான் மனம் அமைதி பெரும்.  எல்லையற்ற ஆற்றலுடைய பரம்பொருளே அறிவாக இருப்பதால் அது தனது முழுமையை நோக்கியே விரிவடைகிறது. 

அதனை எந்தப் பொருளிலும் எவ்வகையான புலன் இன்பத்திலும் எல்லைகட்டி நிறுத்திவிட முடியாது. போதும் என்ற நிறைவு நிலையை பெற முடியாது. பொருளில் இன்பத்தில் நிறுத்தினால் அவற்றில் நிலைக்காது விரைவு மீறும்.   அதன் முழுமை எல்லை இன்னதென்று தெரியாத போது அதில் இணைப்புக் கிடைக்காத போது எந்தப் பொருளில் இன்பத்தில் அறிவைப் பொருத்தினாலும் அதுவே இன்னும் வேண்டும், மேலும் வேண்டும் என்று விட்டுவிட்டு விரிந்து பேராசையாக அலைந்து கொண்டேயிருக்கும். 

மேலும் பரநிலையுணர்வும் அதில் அடங்கி இணைந்து நிலைபெறும் பேறும் கிடைக்காத போது அறிவு தான்-தனது, என்னும் தன்முனைப்பில் உணர்ச்சிவயமாகி புலன்கள் மூலமே அளவு முறை கடந்து செயல்புரிந்து துன்பங்களையும் சிக்கல்களையும் பெருக்கிக் கொள்ளும்.  தனது மூலமும் முடிவுமாகவுள்ள இருப்புநிலையை அறிவு உணர்ந்தால் தான் அதில் அடங்கி நிலைத்து நிறைவும் அமைதியும் பெறும்

வாழ்க வளமுடன்.
-

How to understand the pattern, precession and regularity?


தன்மை, துல்லியம், இயக்க ஒழுங்கு இந்த மூன்றும் ஒவ்வொரு பொருளிலும் எவ்வாறு உள்ளது? அதை எப்படியாக புரிந்துகொள்வது?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, தன்மை, துல்லியம், இயக்க ஒழுங்கு இந்த மூன்றும் ஒவ்வொரு பொருளிலும் எவ்வாறு உள்ளது? அதை எப்படியாக புரிந்துகொள்வது?


வேதாத்திரி மகரிஷி அவர்களின் பதில்:

உலகம் என்று எடுத்துக்கொண்டால், அதன் அளவு என்ன? இரசாயனங்களில் அளவு என்ன? என்பதனை இன்றுள்ள விஞ்ஞானிகள் ஓரளவிற்கு உணர்ந்துள்ளார்கள். அந்தக் காலத்தில் இருந்தவர்களும் ஓரளவிற்கு இந்தக் கிரகத்தில் இன்னின்ன சக்தி அதிகம் என்று சொல்லியிருக்கிறார்கள். எந்தப் பொருளால் ஒன்று ஆக்கப்பட்டதோ அது அதன் தன்மை. 

பூமி மணிக்கு 1,000 மைல் வேகத்தில் 24 மணி நேரத்திற்குள் ஒரு சுற்று தன்னைத்தானே சுற்றிக் கொள்கிறது. சூரியனைச் சுற்றும் பாதையில் மணிக்கு 67,000 மைல் வேகத்தில் சென்று 365¼ நாளில் அதை வலம் வருகிறது. இது சிறிதும் காலம் தவறாமல் சரியாக அமையும். இதுவே அதன் துல்லியம். 

இரசாயனப் பொருட்களிலுள்ள நுண்ணணுவின் சுழல் விரைவுக்கேற்ப காந்தத் தன்மாற்ற வேறுபாடுகள் உண்டாகின்றன. அதே விண்துகள்களின் சுழல் விரைவுக்கேற்ப அதன் திணிவும் வடிவமும் அமைகின்றன, இதுவே வடிவம். 

        பரமாணு நிலையிலிருந்து அவை கூடி ஒரு சிறு வடிவமாக மாறி, குறிப்பிட்ட விரைவில் இயங்கும்போது ஏற்பட்டு மாறிக்கொண்டே வரும் ரசாயனத் தன்மைகளும் மற்ற சிறப்புகளும் துல்லியம் அல்லது தன்மைகள் ஆகும். 

இந்த இயக்க நியதி மாறாது. பூமி தன்னுடைய மற்ற இயல்பூக்கத்தையும் நடத்திக் கொண்டு, சூரியனையும் சுற்றி வருகிறது. இச்செயல்பாட்டைத்தான் இயக்க ஒழுங்கு என்கிறோம். இதுவே காலம் அல்லது இயக்கச்சீர்மை ஆகும். 

        பூமி அதிக அளவு சூடு ஆகிவிட்டதென்றால் வெப்பக் குழம்பை “எரிமலை” யாக வெளியேற்றுகின்றது. இது காலத்தால் நடக்கும் இயக்க ஒழுங்காகும். இதுபோல் ஒவ்வொரு பொருளுக்கும் தன்மை, துல்லியம், இயக்க ஒழுங்கு என்ற மூன்று குணங்களும் உண்டு. 

ஒரு ரோஜாச்செடியை எடுத்துக் கொண்டால் அதன் இலை, தண்டு இவ்வாறுதான் இருக்கும் என்பது அதன் தன்மை. 

        ஒரு விதையைப் போட்டால் இத்தனை நாட்களில் செடி வளரும். இத்தனை நாட்களில் பூ பூக்கும். அந்தப் பூவை உண்டால் இன்னது ஏற்படும். இது விளைவு. இவை துல்லியம். அது பூத்தவுடன் அதன் இதழ்கள் வாழும் காலம், அது குறிப்பிட்ட காலத்தில் தளர்ச்சியுற்று இலையுதிர்வது, அது இத்தனை நாட்கள்தான் வளரும், வாழும் என்பது, அந்தச் செடியின் முடிவு இவையெல்லாம் காலத்தை ஒட்டி நடைபெறுவது இயக்க ஒழுங்காகும். 

இவ்வாறு ஒவ்வொரு சடப் பொருளிலும், ஒவ்வொரு உயிரிலும் அதன் தன்மை, துல்லியம், இயக்க ஒழுங்கு என்ற முத்தன்மைகளையும் காணலாம். 

வாழ்க வளமுடன்.

-

We are supernatural in evolution but why we are struggle on life by simple things?


மனிதன் என்ற ஆறறிவு நிலையில் வாழ்ந்தாலும் கூட, வாழ்க்கையில் சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் தடுமாறுவது ஏன்?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, மனிதன் என்ற ஆறறிவு நிலையில் வாழ்ந்தாலும் கூட, வாழ்க்கையில் சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் தடுமாறுவது ஏன்?


வேதாத்திரி மகரிஷி அவர்களின் பதில்:

இந்த உலகத்தில், பரிணாமத்தின் வழியாக, இறையாற்றலின் தன்மாற்றமாகவே ஜீவனாகி,  மனிதன் என்ற ஆறறிவு நிலையில் வாழ்ந்து வருகிறோம். என்றாலும் அந்த வாழ்க்கையில், நீங்கள் குறிப்பிட்டதுப்போலவே வாழ்க்கையில் சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் தடுமாறுகிறோம். அதுகுறித்து சிந்திப்போம்.

ஏன் நாம் இயற்கையை உணர்ந்து கொள்ளவும்  வாழ்க்கையின் உண்மையை உணர்ந்து கொள்ளவும் முடியாமல் தடுமாறுகிறோம்?  ஏன் அமைதியான  சீரான வாழ்வைப் பெற முடியாமல் அல்லலுறுகிறோம் ?  ஏன் இந்த நிலை என ஆய்ந்து பார்க்க வேண்டும்.

உதாரணத்திற்கு ஒன்று சொல்வேன்.   நீங்கள் ஒரு பையை எடுத்துக் கொண்டு நல்ல காய்கறி வாங்குவதற்காகக் கடைத் தெருவுக்கு புறப்பட்டு போகிறீர்கள்.  போகும் வழியில் விதவிதமாக பூக்களும் பழங்களும் உங்கள் கண்ணில் படுகின்றன,  அவற்றை வாங்கி பையை நிரப்பிக் கொள்கிறீர்கள்.  பின்னர் கடைத்தெருவுக்குப் போய் காய்கறி வாங்கிய பிறகு பார்த்தால் அவற்றை வைக்க பையில் இடமில்லை, பையில் தான் ஏற்கனவே நிரப்பிவிட்டீர்களே!  

இப்போது உங்கள் பிரச்சனை என்ன?  ஏற்கனவே பையில் உள்ளவற்றை வெளியே கொட்டிவிட்டு  எதை வாங்குவதற்காக கடைத் தெருவுக்கு வந்தீர்களோ,  அந்தக் காய்கறியை வாங்கிப் போட்டுக் கொள்வதா?  அல்லது காய்கறியே வாங்காமல் ஏற்கனவே வழியில் வரும்போது பையில் நிரப்பிக் கொண்டு வந்தவற்றுடன் வீடு திரும்புவதா?  கடைத் தெருவுக்குப் புறப்படும் பொழுதே காய்கறி தான் வாங்கிக் கொண்டு திரும்ப வேண்டும் என்ற உறுதி வேண்டும்.  

ஒவ்வொரு வகையிலும் அத்தகைய மன உறுதியைப் பெற்று இறைநிலை உணர்ந்து உண்மை நெறியில் அறிவறிந்து வாழ்வது தான் தவம்.

வாழ்க வளமுடன்.

-

What kinds of benefit will rise when we greets someone?


மற்றவர்களை வாழ்த்தும் பொழுது என்ன விதமான நன்மைகள் ஏற்படுகின்றன? 

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, மற்றவர்களை வாழ்த்தும் பொழுது என்ன விதமான நன்மைகள் ஏற்படுகின்றன? 


வேதாத்திரி மகரிஷி அவர்களின் பதில்:

யாரும் யாரையும் எளிதில் வாழ்த்திவிட மாட்டார்கள். அதற்கென்று ஒரு நிறைவான மனமும், சூழ்நிலையும் அமையவேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். மேலும் ஏதேனும் ஒருவகையில் இரண்டுபேருக்குமான நன்மையும் இருக்க வேண்டும், கிடைத்திருக்க வேண்டும் என்றும் நினைப்பார்கள். அப்போதுதான் அவரை / பிறரை வாழ்த்த முடியும் என்று முடிவும் செய்திருப்பார்கள். ஆனால் நிஜத்தில் அப்படியா கணக்கு போட்டுக் கொண்டு வாழ்த்த வேண்டியதில்லை. 

மனதின் நுண்ணிய நிலையிலே நாம் வாழ்த்துக் கூறும்போது அவர்களுக்கும் நமக்கும் தெரியாமலேயே இரண்டுபேருடைய அடித்தளமான அந்த உயிர்நிலையில் ஒரு பரஸ்பர ஓட்டம் ஏற்படுகின்றது.  ஊடுருவிப் பாய்ந்து நிற்கின்றோம்.  இரண்டு தடவை நாலு தடவை வாழ்த்த வாழ்த்த,  நமக்கும் அவர்களுக்கும் ஒரு தொடரியக்கம் வந்து விட்டதானால் அது எப்பொழுதும் நமக்கு அலை வீசிக் கொண்டிருக்கும். அந்த அலை நாம் நினைத்தாலும் நினைக்காவிட்டாலும் முன்பே ஏற்படுத்திவிட்ட தொடர்புப்படி வந்து கொண்டும் போய்க்கொண்டும் இருக்கும். அந்தத் தொடர் அறுபடாது இருக்கும்.

அதனால் அவருக்கு வேண்டியதை நாம் செய்ய வேண்டும் என்று நினைப்பது, நமக்கு வேண்டியதை அவர்கள் செய்ய வேண்டும் என்று நினைப்பது, அவர்கள் நன்மைக்காக நாம் எண்ணுவது இவை எல்லாம் சாதாரண நிகழ்ச்சியாக மாறிவிடும். அப்படி வாழ்த்தி வாழ்த்தி எப்பேர்ப்பட்டவர்களையும் நண்பர்களாக மாற்றிவிட முடியும்.  அவர்களுடைய செயல்களைத் திருத்திவிட முடியும்.  எண்ணங்களை எல்லாம் ஒழுங்குபடுத்திவிட முடியும்.  நல்லவர்களாக மாற்றிவிட முடியும். 

நாம் அந்த அளவு உறுதி பெற்று விட்டால் வாழ்த்துவது பழக்கத்திற்கு வந்துவிட்டால் அந்த மனநிலையிலே அந்த எல்லையிலே அந்த மையத்திலே நிற்கக்கூடிய அளவிற்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டால் நாம் நினைக்கும் போதெல்லாம் அது வாழ்த்தாக முடியும்

வாழ்க வளமுடன்.

-

What happening between ourselves and our mind when we practice the meditation?


தியானம் என்ற அகத்தவம் செய்யும் பொழுது நமக்கும், நம்முடைய மனதுக்கும் நிகழும் மாற்றங்கள் என்ன என்பதை விளக்குவீர்களா?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, தியானம் என்ற அகத்தவம் செய்யும் பொழுது நமக்கும், நம்முடைய மனதுக்கும் நிகழும் மாற்றங்கள் என்ன என்பதை விளக்குவீர்களா?


வேதாத்திரி மகரிஷி அவர்களின் பதில்:

வெறுமனே தியானம் செய்பவர்களுக்கு, ஏதோ அந்த நேரம் மட்டும் அமைதி கிடைப்பதுபோல தோன்றலாம். எனினும் அது உடனே விலகி எப்போதும்போலவே ஆகிவிடும். தகுந்த குரு வழியாக, குண்டலினி தீட்சைபெற்று, உபதேசம் பெற்று தியானம் செய்யும் பொழுதுதான், உயர்ந்த நன்மைகள் பல நிகழும்.

ஆரம்பத்தில் பத்து நிமிடம் குண்டலினி யோக தவம்  செய்தோமானால் தொடக்கத்தில் அரை நிமிடம் மனம் நிலைத்திருந்தது என்றாலும் அதுவே லாபம் தான். அது மாத்திரம் இல்லை நாம் உயிர்ச் சக்தியின் மீது மனதை நிலைக்க வைத்துத் தவம் செய்யும்போது Beta Wave (அலைநீளம் 14 - 40 Cycles) என்ற நிலையிலிருந்து Alpha Wave (அலை நீளம் 8 - 13 Cycles) என்ற நிலைக்கு மனம் வந்து விடும். அதைத்தான் சொப்பன நிலை அல்லது சாக்கரம் என்று சொல்லுவார்கள். 

அந்தச் சொப்பன நிலை எதுவோ அந்த Alpha அலைக்கு வந்தும் விழிப்போடு இருக்கிறோம்.  அதாவது தூக்கத்துக்குரிய நிலை வந்தும் விழிப்போடு இருக்கிறபோதுதான் அது யோகம்.  ஆனால் அதே Alpha அலை வந்து உறங்கி விட்டோமானால் அது தூக்கம்.

அந்த நிலையிலேயே நாம் தவம் செய்து பழகி வருகிறபொழுது அங்கும் இங்கும் மனது ஓடியது என்றாலும் அதிகமாக உணர்ச்சி வயம் பட்ட இடம் 20,30,35 Cycles போகாமல் அப்படி மனம் ஓடாமல் இந்த 14,15,16,18 வரைக்கும் ஓடித் திரும்புகிறது பாருங்கள், அது லாபந்தானே கடைசி வரையிலும்?

ஒன்று முதல் மூன்று (1-3 cycle/second) வரையுள்ள டெல்டா அலைக்கு தவத்தின் மூலம் மனதை (Mind Frequency) பழகிக் கொண்டோமானால் பேரியக்க மண்டலம் (Universe) இறை நிலையிலிருந்து தோன்றிய காலம் முதற்கொண்டு இன்று வரை நடந்த நிகழ்ச்சிகளெல்லாம் அங்கங்கே என்னென்ன நடந்ததோ அவற்றை எல்லாம் உணரக்கூடிய இடத்திற்கு மனம் (Mind) வந்து விடும்.

ஆகையினாலே நாம் உட்கார்ந்து அமைதியாகத் தவம் (Simplified Kundalini Yoga) செய்கிறபோதே நம்மை நாம் திருத்திக் கொள்வதற்கு, நம்மை நாம் வலுப்படுத்திக் கொள்வதற்கு நம்முடைய மனதைத் தெளிவுபடுத்திக் கொள்வதற்கு உறப்படுத்திக் கொள்வதற்கு, இதுவரையிலும் செய்த தவறுகளையெல்லாம் திருத்திக் கொண்டு நாம் மனிதர்களாக மாறுவதற்கு ஏற்ற பயிற்சியைச் செய்கிறோம் என்ற ஒரு தெளிவு ஒரு உணர்வு எல்லாருக்கும் வர வேண்டும். 

அது வந்துவிட்டது என்று வைத்துக் கொள்ளுங்கள், அந்த அக்கரையோடு நீங்கள் தவம் செய்கிறபோது அதனால் பெறுகின்ற பலன் வாழ்க்கையின் எல்லாத்துறைகளிலும் எல்லா அம்சங்களிலும் உங்களை பிரகாசிக்கச் செய்யும் என்பதை அனுபவ ரீதியாக நீங்கள் விரைவிலேயே உணர்ந்து கொள்வீர்கள்.

வாழ்க வளமுடன்.

-

Please explain the truth and secret philosophy of the 'Who Am I?'


‘நான் யார்?’ என்ற தத்துவத்தை விளக்கிச் சொல்லிவிட முடியுமா? அதை எப்படி புரிந்துகொள்வது?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, ‘நான் யார்?’ என்ற தத்துவத்தை விளக்கிச் சொல்லிவிட முடியுமா? அதை எப்படி புரிந்துகொள்வது?


வேதாத்திரி மகரிஷி அவர்களின் பதில்:

‘நான் யார்?’ தன்னையறிதலை புரிந்து கொள்வதல்ல, நாமே நமக்குள்ளாக உணர்ந்து கொள்வதாகும், வார்த்தைகளாலும், விளக்கங்காலும் சொல்லி புரியவைத்தாலும், புரிதல் அறிவு என்ற நிலையில் நமக்குள் உள்வாங்கப்படுமே அன்றி, மெய்யறிவாக கிடைத்துவிடாது. கனியை, சுவைத்து சாப்பிடாமல் கையில் வைத்துக்கொண்டு அதன் சுவையை சொல்லுவது போன்றதாகும் என்பதை விளங்கிக்கொள்க. எனினும் உங்கள் கேள்விக்கான விளக்கம் இதோ!

நான் யார்? பொருளா? சக்தியா? உடலா? அறிவா? உயிரா? இவை ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்க முடியுமா? என ஆழ்ந்து சிந்தித்தால் இவற்றில் எதுவும் தனித்து இல்லை. எல்லாம் சேர்ந்த ஒரு இயக்கச் சிறப்பே “நான்” என அறிவோம். உடல் வரையில் எல்லை கட்டி அது வரையில் “நான்” என்று எண்ணியிருந்த காலமும் உண்டு. அன்று வரை அறிவு அறிந்திருந்த பக்குவ நிலை அது.

உருவத்தை ஆராயுங்கால் அது அணுக்களின் கூட்டமாகத் தோன்றுகிறது. அறிவை நோக்கி ஆராயுங்கால் அது உடலியக்க சக்தியின் ஒரு பிரிவு இயக்கம் என விளங்குகின்றது. சக்தி என்பது என்ன என ஆராயுங்கால் அது எங்கும் நிறைந்த ஒரு அகண்டாகாரப் பெருவெளியின் எழுச்சி அணுவின் மூலம் இயக்க வேகமான நிலை எனத் தெளிவாகி விடுகின்றது.  ஆகவே அகன்ற பெருவெளியாக, அணுவாக, இயக்கச் சக்தியாக, அறிவாக இருக்கும் பல்வேறு நிலைகளும் ஒன்றாகக் காட்டும் ஒரு பேரியக்கமே “நான்” எனப்படுவது.

ஒளி அல்லது ஒலி எழுச்சி பெறும் பொருட்களின் நிலை, இயக்கம் இவைகளுக்கேற்பப் பல பேத அளவாக இருந்த போதிலும் ஒளி, ஒலி என்ற தத்துவத்தில் வேறுபட்டவை அல்ல. அதுபோலவே எல்லா சீவன்களிலும் உள்ள அறிவு பலபேத நிலைகளில் இயங்கிய போதிலும் அறிவு என்ற தத்துவத்தில் ஒன்றே. ஆகவே “நான்” பரவெளி என்ற நிலையில் எங்கும் நிறைந்த பூரணமாகவும், சக்தி என்ற நிலையில் அணுக்களின் கூட்டுப் பக்குவப் பரிணாமச் சந்தர்ப்பச் சந்திப்புகளுக்கேற்பப் பலவித இயக்க வேறுபாடுகளாகவும், அறிவு என்ற நிலையில் அந்தந்த ஜீவராசிகளின் புலன் அமைப்பு, தேவை, பழக்கம், சூழ்நிலை, அனுபவம் இவைகளுக்குப் பல பேதப்பட்ட நிலைகளாகவும் உருவம் என்ற நிலையில் அணுக்களின் கூடுதலுக்கேற்பப் பலவித அமைப்புகளாகவும் இருக்கிறேன் எனக் கொள்ளுதல் சரியான முடிவாகும்.

எனவே நான் வேறு, பிரபஞ்சம் வேறு அல்ல. நான் வேறு, இயற்கை வேறு அல்ல. நான் என்பதை எதிலிருந்தும் பிரித்து எடுக்கவோ, பிரித்துப் பேசவோ முடியாது. ஒன்றாகவும் பலவாகவும் எல்லாமாக ஏகத் தொடர் நிலையில் இருப்பதே “நான்” என்பதாகும். அரூப நிலையில் ஏகமாக, உருவ நிலையில் சிதறுண்டு தோன்றும் பலவாக, அரூபத்தில் உருவங்கள் அனைத்தும் அடக்கம் பெற்றும், உருவங்கள் அனைத்திலும் அரூப நிலை நிறைந்தும் ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்க முடியாத அகன்ற பேரியக்கமாகிய தத்துவமே “நான்” என்பதாகும்.

வாழ்க வளமுடன்

How to control the unwanted thoughts that arise in the mind?


மனதிற்குள் எழுகின்ற தேவையில்லாத எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவது? அதற்கு ஏதேனும் எளிய வழி உள்ளதா?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, மனதிற்குள் எழுகின்ற தேவையில்லாத எண்ணங்களை எப்படி கட்டுப்படுத்துவது? அதற்கு ஏதேனும் எளிய வழி உள்ளதா?


வேதாத்திரி மகரிஷி அவர்களின் பதில்:

நமது மனதின் பதிவுகளுக்குள்ளாக உள்ள நமக்குத் தேவையானது தேவையில்லாதது எல்லாம் மவுனத்தில் உட்காரும் போது வெளியில் வரும்.  இதில் எது எது நமக்கு தேவையில்லாதது, துன்பம் செய்வது என்பதைத் தெரிந்து கொண்டு அதயெல்லாம் குறித்துக் கொள்ளுங்கள். 

இந்த இந்தச் செயலைத் திருத்திக் கொள்வேன்,  இவரது பேரில் விரோதம் இருக்கிறது அது தேவைதானா? தேவையில்லை எனக் கண்டு அவர்களை நினைக்கும் போதெல்லாம் வாழ்த்திக் கொண்டே இருந்தால் இரண்டு மூன்று நாட்களுக்குள்ளாக அந்த விரோதமே இருக்காது. 

அம்மாதிரியான எண்ணங்களால் ஏற்பட்டுள்ள பதிவுகள் எத்தனை வைத்திருக்கிறீர்களோ அதை எல்லாம் எடுத்து வழித்து எரிந்து விட வேண்டும்.  அப்போது மனம் தூய்மையாக இருக்கும்.  மறுபடியும் அதே பதிவுகள் எண்ணத்தில் மேலோங்கி வந்தால், மறுபடியும் சங்கல்பங்களைப் போட்டு சரிப்படுத்திக் கொள்ளலாம்.

மனம் வெளுக்க மருந்து உண்டு:

வினைத்தூய்மை வேண்டும் என்று சொல்வார்கள். வினைத் தூய்மைக்கு முன்னதாக மனத்தூய்மை வேண்டும். மனதூய்மைக்கு மவுனத்தைவிட ஒரு சிறந்த பயிற்சி வேறு இல்லை.

எங்கே வேண்டுமானாலும் மழை பெய்யலாம்.  அந்த மழை எங்கே போய் நிற்கிறது என்று பாருங்கள்.  பள்ளம் எங்கே இருக்கிறதோ அங்கே போய்தான் அந்த மழை நீர் நிற்கும். 

மவுன காலங்களில் நாம் ஜீவகாந்தச் சக்தியை சேகரிக்கிறோம். செலவு செய்யாமல் மவுனத்தில் அப்படியே ஜீவகாந்த சக்தி சேருகிறது. அந்தச் சக்தி அழுத்தம் பெறும்போது உடலுக்குள்ளாகவே தேங்கி நிலைத்து நிற்கும்.

வாழ்க வளமுடன்.

-

Why human need to understand himself in the earth lifetime?


வாழும் மனிதன் தன் உண்மை நிலை உணர்ந்து தன்னை உயர்த்திக்கொள்வதற்கான் உண்மையான காரணம் என்ன? ஏன் தேவையாகிறது?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, வாழும் மனிதன் தன் உண்மை நிலை உணர்ந்து தன்னை உயர்த்திக்கொள்வதற்கான் உண்மையான காரணம் என்ன? ஏன் தேவையாகிறது?


வேதாத்திரி மகரிஷி அவர்களின் பதில்:

உலகில் பிறந்து வாழ்கின்ற மனிதர்களாகிய நாம், நீண்ட நெடுங்காலமாகவே பல பிறவிகளை எடுத்து உணர்ச்சி வயப்பட்ட நிலையிலேதான் வாழ்ந்து பழகியிருக்கிறோம். இப்படியே இருக்கிற வரையிலே மனிதனானவன் மனிதத்தன்மையையோ தெய்வத்தன்மையையோ அடைய முடியாது. அதற்கு மனம் அமைதி நிலைக்கு வரவேண்டும், சிந்தனை உயர வேண்டும் நுன்மை பெற வேண்டும் உண்மை உணர்வு வேண்டும். 

அப்பொழுதுதான் மனிதன் மனிதனாக வாழவும் மகிழ்ச்சி, இன்பம் இவையெல்லாம் கிட்டுகின்ற நிலைமையும் உண்டாகும்.  இந்தக் குறிக்கோள் கொண்டே மனதிற்கு முதலிலே ஒரு பயிற்சியைக் கொடுக்கிறோம். குண்டலினியோகம் கற்று உயிர் (Life force) மேல் மனம் செலுத்துகிறோம்.  ஜீவகாந்த சக்தி (Bio-Magnetism) புலன்கள் மூலமாகவோ எண்ணத்தின் மூலமாகவோ தான் ஜீவகாந்த சக்தி செலவாகிற இடம், அது குழாய் போல  அந்தக் குழாய் அதிகமாகத் திறந்திருந்தால் தானே ஜீவகாந்த சக்தி அதிகம் செலவாகும்.  அந்தக் குழாயின் அடைப்பானைத் திருப்பி நீங்கள் மீண்டும் உயிர்மேலே மனத்தை வைக்கிறீர்கள். எங்கே charge ஆகிறதோ அங்கேயே கொண்டு வந்து விடுகிறோம், அதுதான் தவம் (Energy Meditation).

மனவளக்கலை மன்றங்களில் குண்டலினியோகப் பயிற்சியில், உயிர்ச்சக்தியை மேலே எழுப்பி மனதால் அதைப் பற்றித் தியானம் செய்யும்போது மன அலை நீளம் நுணுகி அமைதிக்கு வரும்.  அமைதியினால் மன உறுதி ஏற்படும்.  அறிவு கூர்மை ஏற்படும். அனாவசியமாக மனோ சக்தி செலவாகாது. எப்போதும் சிந்தனையாற்றல் பெருகிக் கொண்டே இருக்கும். தேர்ந்தெடுத்துச் செயல் செய்வதற்கு நமது மனம் விழிப்பு நிலையில் இருக்கும்.

எண்ணம் ஆராய்தல், ஆசை சீரமைத்தல், சினம் தவிர்த்தல், கவலை ஒழித்தல் என்ற தற்சோதனைப் பயிற்சிகளை மேற்கொள்ள முடியும். இன்னும்.. நான் யார்? உடலா? உயிரா? மனமா? இந்த உடல், உயிர், அறிவு எவ்வாறு இயங்கிக் கொண்டிருக்கின்றன? இவற்றிற்கெல்லாம் உள்ள தொடர்பு என்ன? என்பதையெல்லாம் உணர்ந்து கொள்ள முடியும். அதற்கான அகத்தாய்வுப் பயிற்சியை அளித்து நேரடியாக ஒவ்வொருவரும் உணரும்படியாகச் செய்கிறது மனவளக்கலை மன்றம். 

இந்தப் பயிற்சிகளைச் சரியாகச் செய்து விட்டால் மனம் எவ்வளவு தெளிவாக இருக்கிறது என்பதை அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம்.  நாமாக மனதைப் பளுவாக்கிக் கொள்வதற்குப் பதிலாக இலேசாக ஆக்கிக் கொள்கிறோம். அதன் பிறகு வாழ்க்கை நிலையே தெளிவாக இருக்கிறது என்பதை அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம். 

தெரிந்தோ தெரியாமலோ நாம் சில தவறுகள் செய்ததனால் உடலில் நோய்கள் உண்டாயின. இன்னும் சில நோய்களும் உணடாகலாம். அதனால் வரப்போகிற நோய்களைத் தடுக்கவும் வந்த நோய்களைப் போக்கிக் கொள்ளவும் எளியமுறையில் சில உடற்பயிற்சிகளை மனவளக்கலை மன்றத்தில் சொல்லிக் கொடுக்கிறார்கள். 

உடற்பயிற்சிகளைக் கற்றுக் கொண்டு இரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்று ஓட்டம் இவைகளைச் சரிப்படுத்தி உடலுக்கும, உயிருக்கும் நட்பைச் சரியாக வைத்துக் கொண்டால் உடல் எப்போதும் நலமாக இருக்கும். உடல் நலமும் வேண்டும் மனவளமும் வேண்டும். எளிமைப்படுத்தப்பட்ட குண்டலினி யோக பயிற்சி முறையானது (Simplified Kundalini Yoga - SKY) மனிதனை மனிதன் ஆக்க வல்லது. மனதை திடப்படுத்த வல்லது.

வாழ்க வளமுடன்.

Is it perfect the explaining the spiritual truth through with the modern science?


இறைதத்துவ விளக்கத்தையும் அதன் உண்மையையும் இணைந்த மெய்ஞானத்தை, விஞ்ஞானத்தின் துணையோடு விளக்குவது சரிதானா?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, இறைதத்துவ விளக்கத்தையும் அதன் உண்மையையும் இணைந்த மெய்ஞானத்தை, விஞ்ஞானத்தின் துணையோடு விளக்குவது சரிதானா?


வேதாத்திரி மகரிஷி அவர்களின் பதில்:

நமது வேதாத்திரியம் இறைதத்துவ விளக்கத்தையும் அதன் உண்மையையும் இணைந்த மெய்ஞானத்தை, விஞ்ஞானத்தின் துணையோடுதான் அன்பர்களுக்கு, பயிற்சியோடும் விளக்கிவருகிறது என்பதை யாவரும் அறிவார்கள்

உலகில் விஞ்ஞான வளர்ச்சிக்கேற்ப மெய்ஞான வளர்ச்சியில்லாத காரணத்தால் மக்கள் வாழ்வில் துன்பங்களும், சிக்கல்களும், குழப்பங்களும் பெருகியுள்ளன. எளியமுறைக் குண்டலினி யோக வாழ்க்கை நெறி மனிதகுலத்தை வழி நடத்த ஒப்புயர்வற்ற ஒளி விளக்காகத் திகழ்கிறது. அருட்பேராற்றலாகிய சுத்தவெளியும், அதிலிருந்து தோற்றமாகிய சக்தியெனும் மண்டல [பிரபஞ்ச]மாக விளங்குகிறது. 

இத்திருக்கூத்தில் சக்தியின் தள்ளும் (Repulsive Force) ஆற்றலும், சிவமாகிய சுத்தவெளியின் கொள்ளும் (Attractive Force) ஆற்றலும் ஒருங்கிணைந்து இயங்கும் ஒரு விரிவான நெடிய தொடரியக்கம், தெய்வீக காந்தகளமாக இப்பேரியக்க மண்டலம் விளங்குகிறது.

இப்பேரியக்க மண்டலத்தில் தோன்றும் எப்பொருளும் தன்மை, துல்லியம், இயக்க ஒழுங்கு (Pattern, Precision & Regularity) எனும் இயற்கை நியதியோடு இயங்கிக் கொண்டிருக்கின்றன. மனிதன் அறிவின் நுட்பத்தாலும், செயல் ஒழுக்கம், திறமை இவற்றாலும் ஒவ்வொரு பொருளிலும் அமைந்துள்ள தெய்வீக ஒழுங்கமைப்பை உணர்ந்தும், மதித்தும், இனிமை காத்தும் முரண்படாத முறையில் தொடர்பு கொண்டு வாழ்ந்தால்தான் வாழ்வில் இன்பமும், நிறைவும் உண்டாகும். பிறவிப் பயனாகிய அறிவின் முழுமைப் பேறும் கிட்டும். இத்தகைய தெய்வநெறி வாழ்வடைய, மனிதனைப் பக்குவப்படுத்தி வழி நடத்தவல்ல, உடல் உள்ளப் பயிற்சி முறையே எளியமுறைக் குண்டலினி யோகமாகும்.

இல்லறமும், துறவறமும் இணைந்த ஒரு பேரற வாழ்வை நல்கும் குண்டலினி யோகமென்னும் மனவளக்கலை உங்களுக்கு எளிதில் கிடைத்திருக்கிறது உங்கள் பெற்றோர் செய்த புண்ணியம்; நீங்கள் செய்த புண்ணியமுமாகும். இதன் மதிப்புணர்ந்து, பயின்று, பயன்பெற்று, மன நிறைவோடு, அமைதியோடு வாழுங்கள். உங்கள் மனதை வளப்படுத்த ஆக்கினை, துரியம், துரியாதீதம் என்னும் தவமுறைகளும், செயல்களை ஒழுங்குபடுத்தி, சிறப்பளிக்க ஒழுக்கம், கடமை, ஈகையென்ற அறநெறிகளும் நீங்கள் அறிந்துள்ளீர்கள். உற்றார், உறவினர், ஊரார், உலகோர் அனைவரையும் வாழ்த்திக் கொண்டே இருங்கள்.

அருட்பேராற்றல் இரவும், பகலும், எல்லாத் தொழில்களிலும், எல்லா இடங்களிலும் உறுதுணையாகவும், பாதுகாப்பாகவும், வழிநடத்தியாகவும் அமையட்டும் எனும் அருட்காப்பை, வேண்டும் போதெல்லாம் நினைத்துக் கொள்ளுங்கள். மனத்தூய்மை, வினைத்தூய்மை இரண்டும் சித்தியாகும். வாழ்வு வளம், நிறைவு, அமைதி பெறும். இன்பம் விரிந்து கொண்டேயிருக்கும்.

வாழ்க வளமுடன்.

What is the reason of body pain and disease on our lifetime?


நன்றாக இருக்கும் உடலில் தீடீரென வலியும், தொடர்ந்த நோயும் வருவதற்கு காரணம் என்ன?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

        வாழ்க வளமுடன் ஐயா, நன்றாக இருக்கும் உடலில் தீடீரென வலியும், தொடர்ந்த நோயும் வருவதற்கு காரணம் என்ன?


வேதாத்திரி மகரிஷி அவர்களின் பதில்:

        உடல் இயக்கத்தில் உள்ள நுட்பத்தை நாம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். நமது உயிருக்கும் உடலுக்கும் ஒத்த உறவு, இனிமையான உறவு இருக்கும் வரையில் தான் உடல் நலம், மன நலம் பாதுகாக்கப் பெறும். இந்த உறவானது நீடித்திருப்பதற்கு ரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்று ஓட்டம் இவை மூன்றும் சரியாக இருக்க வேண்டும். 

        அளவிலே, முறையிலே இவை சரியாக இருந்தால் தான் உயிருக்கும், உடலுக்கும் ஒரு தொடரியக்கம், நட்பு, உறவு சீராக இருக்கும். எந்தக் காரணத்தினாலோ ரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்று ஓட்டம் இந்த மூன்றிலே ஒன்று தடுக்கப்பட்டாலும், திசைமாறினாலும், வெளியேறினாலும், அளவிலே குறைந்தாலும், ஓட்டத்திலே குழப்பம் அடைந்தாலும், அந்த ஓட்டத்தில் அணு அடுக்குச் சீர்குலைவு ஏற்படும். 

        அது இரத்த ஓட்டத்திலோ, வெப்ப ஓட்டத்திலோ, காற்று ஓட்டத்திலோ எதனாலே வந்தாலும் சரி, மற்ற இரண்டும் கூட ஓட்டத்திலே தடையாகி விடும். அந்தக் குழப்பத்தை நீக்குவதற்கு அங்கே இருக்கக் கூடிய மின்சக்தி போதாது. அதனாலே அதிகமான மின்சக்தி அங்கே சேர வேண்டியதாகின்றது.

        அவ்வாறு அங்கே சேரும் போது ஏற்கனவே அங்கு தொளை (Puncture) ஆகி இருக்கிறது. அளவுக்கு மேலாகக் காந்த சக்தி மின் சக்தியாக மாறும் போது அந்த இடத்தில் நிச்சயமாக மின்குறுக்கு (Short circuit, earthing) உண்டாகும். அதுதான் வலியாக வரும். 

        இந்த மின்குறுக்கு சிறிது நேரம் இருந்தால் அது வலி என்றும், அது இடத்தாலே விரிந்தும் காலத்தாலே நீடித்தும் இருந்தால் அது நோய் அல்லது வியாதி என்றும் கூறப்படுகிறது. அதற்கும் மேலாக உடலில் உள்ள ஜீவகாந்தசக்தி எல்லாம் அதிகமாகச் செலவாகி, வருவதற்கும் போவதற்கும் மத்தியில் உள்ள இருப்பை ஜீவகாந்தம் வெகுவாகக் குறைக்குமானால் அதனை ஈடு செய்ய முடியாமல் போகும். 

வாழ்க வளமுடன்

-

Why human need food? can we avoid? any science truth on it?


மனிதனுக்கு உணவு ஏன் தேவை? உணவின் தேவையின்றி வாழ முடியாதா? அதில் ஏதேனும் விஞ்ஞான விளக்கம் உள்ளதா?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

கேள்வி:

வாழ்க வளமுடன் சுவாமிஜி, மனிதனுக்கு உணவு ஏன் தேவை? உணவின் தேவையின்றி வாழ முடியாதா? அதில் ஏதேனும் விஞ்ஞான விளக்கம் உள்ளதா?


வேதாத்திரி மகரிஷியின் பதில்:

மனிதன் இப்பூவுலகின் மீது வாழ்ந்து கொண்டிருக்கிறான்.  இப்பூவுலகம் 25000 மைல் சுற்றளவு உடையது.  தன்னைத் தானே மணிக்கு 1042 மைல் வேகத்தில் சுற்றிக் கொண்டுள்ளது.  எந்த ஒரு பொருளும் வேகமாகச் சுற்றும் பொழுது இறைவெளியின் சூழ்ந்தழுத்தம் (Self Compressive Surrounding Pressure Force) காரணமாக ஒரு மைய ஈர்ப்பு விசை அமைந்துவிடுகிறது.

உலகம் சுழலுகின்ற வேகத்தில் அதன் விளிம்பில் மையத்தை விட்டு விலக்கும் சக்தி (Gravitational Repulsive Force) அல்லது தள்ளும் சக்தி உண்டாகிறது.

உடலானது கோடானகோடி செல்களால் கட்டப்பட்டுள்ளது. 

பலகோடி பிறவிகளில் வந்த பரிணாம வேகத்தில் உடலில் உள்ள விண் என்ற லேசான நுண்ணியக்கத் துகள்கள் மேல் நோக்கு வேகத்தைப் பெற்றுள்ளன.  பூமியின் மையத்தை விட்டு விலகும் ஆற்றலால் பூமியின் மேல் வாழுகின்ற மனித உடலில் உள்ள நுண்ணியக்கத் துகள்கள் உடலை விட்டுத் தொடர்ந்து (Thrown Up) விசிறியடிக்கபடுகின்றன.  அதனால் உடலில் நுண்ணியக்க ஆற்றலில் தொடர்ந்து இழப்பு ஏற்படுகிறது.

அதே போல பூமியின் மைய ஈர்ப்பு ஆற்றலால் வேகம் குறைந்த முதிர்வுற்ற (Worn  out Cells) துகள்கள் பூமியை நோக்கி உதிர்ந்து விடுகின்றன.  இவ்வாறு ஒவ்வொரு நிமிடத்திற்கும் மனித  உடலில் உள்ள தசை,  நரம்பு, எலும்பு, மூளைகளிலிருந்து கோடிக்கணக்கான செல்களை உடல் இழந்து கொண்டிருக்கிறது.

அதே நேரத்தில் ஒவ்வொரு நிமிடமும் கோடிக்கணக்கான  புதிய சக்தி மிக்க செல்கள் உணவிலிருந்தும், காற்றிலிருந்தும், நீரிலிருந்தும், கோள்களிலிருந்தும் உடலைப் புதுப்பித்துப் கொண்டிருக்கின்றன.  இதனால் உடலின் இழப்பானது சரிகட்டப்படுகிறது.

இதை ஒரு உதாரணத்தினால் அறிந்து கொள்ளலாம்.  நாம் உடலைச் சரியாக எடை போட்டுக் கொள்வோம்.  ஒரு முழுநாள் நீரைத் தவிர எந்த உணவும் எடுத்துக் கொள்ளாமல் இருப்போம்.  அடுத்தநாள் காலை உடலை எடை போட்டுப் பார்த்தால் குறைந்த பட்சம் 50 கிராமிலிருந்து அதிக பட்சம் 200 கிராம்வரை உடலின் எடை குறைந்திருக்கும்.  இதிலிருந்து உடல் தான் இழந்த அணுக்களை உணவால் புதுப்பித்துக் கொள்வதை அறியலாம்.

இவ்வாறு உடலின் ஆற்றல் இழப்பிற்கும் சேர்க்கைக்கும் இடையில் நாள் தோறும் மனிதன் சாவிலிருந்து தப்பிபிழைத்துக் கொண்டேயிருக்கிறான்.  இதனால் தான் வாழ்க்கைக்கு பிழைப்பு என்றே பெயர் வந்தது.

வாழ்க வையகம்    வாழ்க வளமுடன்.

-

Since everything is against nature, how can it be considered good?


மனிதன் யோகத்தில் இருந்தாலும் கூட, செய்வது எல்லாமே இயற்கையை எதிர்த்துத்தான் என்றே அமைகிறது என்பதால் அதை எப்படி நல்லதாக நினைத்துக்கொள்ள முடியும்?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி: 

வாழ்க வளமுடன் ஐயா, எண்ண அலைகளைப் பரப்பி நன்மை செய்விக்க முடியும் என்று கூறுகிறீர்கள். தங்களால் மழை பெய்ய வைத்து உலகம் உய்ய வழி செய்ய முடியுமா? இயற்கை ஆற்றலின் நியதியை மீறி எதுவும் நம்மால் செய்ய முடியாது என்பது தங்களின் பதிலானால் மனித மனம் முயற்சி செய்வது எல்லாம் இயற்கையை எதிர்த்து தானே? தாங்கள் மனதைப் பற்றி கூறும் அறிவுரைகளும் இயற்கையை எதிர்த்துச் சென்று மனதை நிலை நிறுத்துவது தானே? விளக்க வேண்டுகிறேன்?

வேதாத்திரி மகரிஷி அவர்களின் பதில்: 

அகத்தவத்தால் மனவலிவு ஏற்பட்டு பல காரியங்களை சாதிக்க முடியுமென்றால் நீங்கள் உங்கள் மனோவலிமையால் மழை பெய்விக்க முடியுமா? என்று சவால் விட்டிருக்கிறீர்கள். இயற்கையை, மெய்ப்பொருளை உணர்ந்தவர்கள் பஞ்சபூதங்களையும் ஒரு குறிப்பட்ட இடத்தில் கட்டுப்படுத்த முடியும். அந்த சாதனை அவர்கள் கருணையுள்ளத்திலே தோய்ந்து இயல்பாக இருக்கின்றது. ஆனால் ஒரு அன்பரின் சவாலுக்கு பதில் போன்று அம்மாபெருங்காரியத்தில் அத்தகையவர்கள் இறங்குவார்களா? என்பதை ஒருவர் மிக நுணுகி நின்றே அறிந்து கொள்ள வேண்டும். உங்கள் சவாலில் வெற்றி பெற்று சிறு புகழ் தேடிக் கொள்வதில் அத்தகையவர்கள், அவ்வளவு கீழ் இறங்கிவிடமாட்டார்கள் என்பதையும் நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.

மனவளக்கலையில் தேர்ந்த அன்பர் ஒர் இடத்தில் மழை பெய்விக்கச் செய்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள், நீங்கள் அப்போது என்ன சொல்வீர்கள். இது இயற்கையாக தற்செயலாக மழை பெய்தது. நீங்கள் பெய்வித்ததாக எவ்வாறு நம்புவது? என்று தான் சொல்வீர்கள்.

என்னைப் பொறுத்தவரை மழை பொழிவதன் காரணமும், பொய்ப்பதின் காரணமும் அறிவேன். மனிதர்களின் மனோநிலைக்கும், இயற்கையின் இயல்புக்கும் உள்ள தொடர் நிகழ்ச்சிகளில் மழை பொய்த்துப்போவதும் ஒன்று. இயற்கை ஆற்றலானது எல்லாம் வல்ல ஒரு பேரியக்க நியதி. இவ்வாற்றலை காலம், தூரம், பருமன், விரைவு எனும் நான்கு கணக்கீடுகளைக் கொண்டு மனித மனத்தால் அறுதியிட்டுக் கூற முடியாது.

இயற்கையின் ஆற்றலும் அதன் ஒழுங்கமைப்பும் அவ்வப்போது ஆங்காங்கு அமையும் சூழ்நிலைக்கேற்ப எண்ண ஆற்றல் அதிர்வலைகளாகவே நிகழ்கின்றது. மனித மனத்தின் எண்ண ஆற்றலுக்கு ஒரு வரம்பு உண்டு. உணர்வு, இச்சை, துணிவு, உணர்ச்சி வயம், விடாமுயற்சி என்ற மனநிலைகளில் அழுத்தத்திற்கும் விரைவிற்கும் ஏற்ப இயற்கையாற்றலின் ஒரு சிறு பகுதியை காலம், தூரம், விரைவு, பருமன், தூரம் என்ற ஒரு எல்லைக்குள் தனது விருப்பம் போல் பயனாக்கிக் கொள்ள முடியும்.

ஆனால் தனது விருப்பம் போல் அவ்வப்போதைய இயற்கை நிகழ்ச்சிகள், ஆற்றலை கணக்கிட முடியாமலும், தப்புக் கணக்கு போடுவதிலும் மனித எண்ணம் தோல்வியுறுகின்றது. உதாரணம்: மரம் ஒரு இயற்கையாற்றலின் பகுதி நிகழ்ச்சி. அதனை அதன் தன்மையை, அதன் ஆற்றலை உணரும் அளவில் மனிதன் பயனாக்கிக் கொள்கிறான். ஆனால் கையை மூடிக் கொண்டு மரம் மீது ஓங்கி ஒரு குத்து விட்டால் என்ன ஆகும்? கைவலி அல்லது சிறுகாயம் உண்டாகலாம்.

இயற்கை நியதியறியாமை என்ற மருளால் மனிதன் மனிதனுக்கு பகையாகிப் பொதுவான சமுதாயமே சாபத்துக்குள்ளாகின்றது. ஒவ்வொருவரும் பிறருக்கு துன்பமளிக்க வேண்டும் என்று விரும்புவதும் அதற்கு துணிந்து செயல் புரிவதும் பெரும்பாலான மக்களிடம் இயல்பாக வளர்ந்து வருகின்றது. மனித எண்ண ஆற்றல் இயற்கை ஆற்றலின் ஒரு பகுதி இயக்கமே என்று முன்னரும் விளக்கியிருக்கிறேன். அதன் விளைவு என்னவாகும்? மனித குல வாழ்வில் துன்பங்களும், சிக்கல்களும் பெருகும். இயற்கைச் சீற்றம், போர், மழையின்மை இவ்வாறாக இயற்கை ஆற்றலும், மனித ஆற்றலும் கூடி மனித எண்ண ஆற்றலால் தீய விளைவுகளாகின்றன.

மனிதன், மனிதன் மதிப்பை உணர்ந்தும் பிறருக்குத் துன்பமளிக்காமல் இயன்ற அளவில் உதவி செய்து கொண்டும் எல்லோரும் இன்புற்று வாழ வேண்டுமென்று மனதார வாழ்த்தி நல்லெண்ண அலைகளைப் பரப்பிக் கொண்டும் வாழ்ந்தால் கால மழை ஒத்த அளவில் உலகில் பெய்யும். போர், வறுமை, பஞ்சம் இவையின்றி மக்கள் செழிப்போடு வாழ்வார்கள்.

நாம் இப்போது காணும் இப்பஞ்ச நிலைமையில் மழையில்லா வறட்சி நிலையில் மக்கள் அனைவரும் கூடி மனித இனம் அடையும் துன்பங்களை நினைத்து, கருணை உள்ளத்தோடு எல்லோரும் வளவாழ்வு பெற மழை பொழிய வேண்டும், என அழுத்தமாக நினைத்தால் கட்டாயம் மழை பொழியும். ஒரு மனிதன் மட்டும் அவன் எண்ண ஆற்றலைப் பரப்பி மழை பொழியச் செய்ய நினைத்தால், செய்தால் அது இயற்கை ஆற்றலின் நியதிக்கே முரண்பாடாக அமையும். உதாரணமாக ஒரு மனிதன் உணவு செரியாமை, பேதி என்னும் நிலையில் மருத்துவரிடம் சென்று மருந்து பெற்று உண்கிறான். அம்மருந்து சரியாக பலன் தரவேண்டுமெனில் நோயாளி உணவில் கட்டுப்பாடு பின்பற்ற வேண்டும். அதன்படி மருந்தை உண்டுவிட்டு மேலும் உணவை மிகுதியாகவே உண்டால் என்ன விளையும், நோய் போகாது மிகுந்தும் போகலாம். இதனால் மருத்துவருக்கு வலுவில்லை என்று கொள்ளமுடியாது. அது போதிய பலன் விளைக்கத் தக்கதும் ஒத்ததுமான சூழ்நிலைகள் அமையவில்லை என்று தான் பொருள்.

மழையை பெய்விக்கும் ஆற்றல் மனித எண்ண ஆற்றலில் உண்டு. அந்த உயர்வில் மனவளம் பெற்றவர்கள் அதனை சித்தாகவோ, சில மக்களிடம் ஒரு புகழ் விரும்பியோ பயன்படுத்தும் அளவிற்கு கீழே இறங்கிவிட மாட்டார்கள். மனிதனிடம் அறிவை உயர்த்தி அவன் ஆற்றலும் அற உணர்வும் மேலோங்கச் செய்வதால் தனிமனிதனும், சமுதாயமும் நிரந்தரமாகப் பல வளங்களையும் பெற்று வாழும், இயற்கை ஒழுங்கமைப்பை ஒட்டி மனவளம் பெற்றோர் அந்தத்துறையில் இன்று உலகுக்குத் தொண்டாற்றி வருகிறார்கள். அவர்கள் கருணையின் ஊற்று மிகும் போது மழையும் பெய்யலாம்.

வாழ்க வளமுடன்

-

The truth and answer, who raising the question 'where is the God?'


கடவுள் எங்கே இருக்கிறார்? என்று கேட்பவர்களுக்கான உண்மை விளக்கம் தருவீர்களா?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா! கடவுள் எங்கே இருக்கிறார்? என்று கேட்பவர்களுக்கான உண்மை விளக்கம் தருவீர்களா?


வேதாத்திரி மகரிஷி அவர்களின் பதில்:

'கடவுள் எங்கேயோ இருப்பதாக எண்ணிக்  கொண்டிருக்கிறார்கள்.  அவன் மனிதனின் மன இயக்கத்தில் இருக்கிறான்.  ஆம், தெய்வம் அதற்குள்ளாகவும் இயங்கிக் கொண்டிருக்கிறது.   வேறுவேறாக இல்லை,  இறைவன் மனிதனிடம் ஒன்றுபட்டுத் தான் இருக்கிறான்.'  

'ஆனால் மனிதனுடைய எண்ணத்தின் காரணமாக,  இச்சையின் காரணமாக,  பல பொருட்களின் மீது வைத்திருக்கிற ஆசையின் காரணமாக, இறைவன் தூரத்தில் இருப்பது போல் மனிதனுக்குத் தோன்றுகிறது.'  

'இச்சையின் அடுக்குகளே இறைவன் தூரத்தில் இருப்பது போல் செய்து வருகின்றன.'  

'நமக்கும் கடவுளுக்கும் எவ்வளவு தூரம் இருக்கிறது என்று ஒரு கணக்கெடுக்க வேண்டுமா?  எத்தனை பொருட்களின் மீது ஆசை இருக்கிறதோ, வரிசையாக எழுதி பட்டியலிட்டால் அது இருக்கும் நீளத்தைக் கொண்டு இவ்வளவு தூரம் தான் நமக்கும் கடவுளுக்கும் இருக்கக் கூடிய தூரம்.'

'பொருட்களின் மீது இருக்கக் கூடிய ஆசைகள் எவ்வளவோ,  அந்த அளவுக்குக் கடவுளுக்கும், மனிதனுக்கும் உள்ள தூரம் அதிகமாகும்.  ஆகவே,  ஆசை என்பதைச் சீரமைத்து விட்டோமேயானால்,  இறைவனைக் காணலாம்.'

'ஆசையை அனுமதித்துக் கொண்டே இருந்தால்,  அதை ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு ஆண்டும் செயலாக்கிக்  கொண்டு தான் இருப்போம்.  அந்த வகையில் வேலை இருந்துக் கொண்டே இருக்கும்.'  

'ஆனால் ஆசை சீரமைக்கப்பட்டது என்றால்,  ஒரு பளுவும் இல்லை.  ஆகையினால் மனம் துல்லியமாக, நிறைவாக இருக்கும்.  அங்கே இறைவன் இருப்பான்.'

'ஆசை முறை கெட்டுப் போனால் பேராசை, முறைப்படுத்தப்பட்டால் நிறைமனம்.'

'மனிதன் தன்முனைப்பு அறுத்தாலே போதும்; அவன் 

        இறைநிலை என்கின்ற பெரிய ஆற்றலோடு தன்னைக் கரைய விட்டுக் கொள்கிறான்.'

        'தன்முனைப்பு, பாவப் பதிவுகள், தேவையில்லாத கடும்பற்று - இந்த மூன்றும்தான் மனிதனை எல்லைகட்டி குழப்பத்தில் ஆழ்த்தி வைக்கிறது.'

-

இந்த கவிகள் கூடுதலாக விளக்கங்களை தரும்.

'ஓர்மை நிலைப்பயிற்சி'

நினைப்பும் மறப்பும் அற்று இருக்க நீ பழகிக்கொள், புலன்கள் 

   அனைத்தும் அடிமையாம், அமைதி கிட்டிடும் ஆங்கே, 

ஒன்றையும் நினையாது, உன்னையும் மறவாது

   நின்ற நிலையே அது.  நீயறி., நினைவை நிறுத்தி.

(ஞானக்களஞ்சியம் கவி: 1486)


'நிறை நிலையில் அமைதி'

எல்லை கட்டும் மனநிலையில் இன்ப துன்பம் 

   இரவு பகல், சிறிது பெரிது,  ஆண்பெண், கீழ் மேல்,

நல்லதுவும் அல்லதுவும், நாணம், வீரம்,

   நட்டம்லாபம் என்ற அனைத்தும் தோன்றும்;

வல்லமையும் அதன்முழுமை நிலையாய் உள்ள 

   வரைகடந்த மெய்ப்பொருளாம்., அகத்துணர்ந்தால் 

அல்லலற்று அறிவு விழித்தும், விரிந்தும், 

   அறிவறிந்த நிறைநிலையில் அமைதி காணும்.

(ஞானக்களஞ்சியம் கவி: 661)

-

'வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!'

What is the purpose of building a temple of consciousness?


அறிவுத் திருக்கோயில் கட்டப் படுவதன் நோக்கம் என்ன?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி: 

வாழ்க வளமுடன் ஐயா! ஆங்காங்கே ஊர்களில் அறிவுத் திருக்கோயில் கட்டப் படுவதன் நோக்கம் என்ன?


வேதாத்திரி மகரிஷி அவர்களின் பதில்: 

        உருவ வழிபாட்டிற்கான கோயில்கள் ஆயிரமாயிரம் கட்டியிருக்கிறோம். நாம் அதிலெல்லாம் பயன் கண்டு வருகிறோம். ஆனால் அறிவுத்திருக்கோயில் உலகத் தொடர்பாக வந்த ஆன்மீகப் பயணத்திலேயே ஒரு மைல் கல்லாக அமைந்துள்ளது. பல கோயில்கள் விக்ரக ஆராதனைக்காக   கட்டப்பட்டிருந்தாலும் “கோயில்” என்பதன் அர்த்தத்தை அளிக்கக் கூடிய வகையில் அறிவுத்திருக்கோயில் கட்டப்பட்டிருக்கிறது. 

இதனால் பக்தி மார்க்கத்திலுள்ள விக்ரக ஆராதனைகளெல்லாம் பயனற்றது என்று கொள்ள வேண்டாம், அப்படிச் சொல்லவும் முடியாது. ஏனென்றால் மனிதன் எந்த உருவத்தை வணங்கினாலும் சரி, தன் அறிவைக் கொண்டு வடிவெடுத்துத்தான் வணங்குகின்றான்.

இல்லங்களிலே ஒரு புரோகிதர் மூலமாக ஏதேனும் ஒரு சடங்கு செய்தாலும்  ஒரு விநாயகர் உருவையோ அல்லது வேறு உருவையோ வைத்து முதலில் “ஆவாகயாமி” என்று சொல்வார்கள். எனது அறிவை அதில் வைக்கின்றேன் என்பது அதன் பொருள். முடிவில் “யதாஷ்டானம் பிரதிஷ்டாப்யாமி” என்று கூறுவார்கள். எங்கே இருந்து கொண்டு வந்தேனோ அறிவை அந்த இடத்திலேயே கொண்டு போய்ச் சேர்த்து விட்டேன் என்பது பொருள். இதிலிருந்து என்ன தெரிகிறது? எந்த முறையில் இறைவணக்கத்தை நடத்தினாலும் நம் அறிவைத்தான் விரித்து அவ்வுருவாக்கி, அக்குணமாக்கி வணங்குகிறோம் என்பது விளங்குகிறதல்லவா?

“கடவுளை வணங்கும்போது கருத்தினை உற்றுப்பார் நீ

கடவுளாய்க் கருத்தே நிற்கும் காட்சியைக் காண்பாய் அங்கே”

என்று ஒரு கவியில் கொடுத்துள்ளேன்.

நீங்கள் அறிவுத்திருக்கோயிலுக்கு வந்து எளியமுறை உடற்பயிற்சி கற்று உடல்நலம் பெற்றும்; எளியமுறைக் குண்டலினி தவம் பயின்று மனவளம் பெற்றும்; சித்தர்களின் கலையான காயகல்பம் பயின்று கருமையத் தூய்மையும் பெறலாம். மேலும் மௌனம், அகத்தாய்வில் கலந்து குணநலப்பேறு பெற்றும் சிறப்பாக வாழ்வதோடு வீடுபேறும் அடையலாம்.

வாழ்க வளமுடன்!!

What is the truth and meaning of Culture?


கலாச்சாரம் என்பதன் உண்மை விளக்கம் என்ன?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன், ஐயா, கலாச்சாரம் என்பதன் உண்மை விளக்கத்தை நாங்கள் அறியலாமா?


பதில்:

வேதாத்திரி மகரிஷி அவர்கள் வழங்குகிறார், 

நம்மொழியில் "கலாச்சாரம்" (Culture) என்ற வார்த்தை இருக்கிறதே அது "கலை"  "ஆச்சாரம்"  என்ற இரண்டு சொற்கள் இணைந்து உருவான கூட்டுச்சொல் (Compound-word).  இதில் "கலை" என்ற வார்த்தை எப்படி வந்தது என்றால், இயற்கை வளத்தை வாழ்வின் வளமாக அறிவின் நுட்பத்தினாலே,  கைத்திறனாலேயே உருமாற்றி,  அழகுபடுத்தி நாம் துய்க்கிறோம் பாருங்கள்,  அது தான் கலை. 

ஆக மனிதன் வாழ்வே கலைதான். அப்படி இந்தக் கலையின் காரணமாக விளைவு  தனக்கோ, பிறர்க்கோ, தற்காலத்திலோ, பிற்காலத்திலோ, அறிவுக்கோ, உடல் உணர்ச்சிகளுக்கோ துன்பம் எழாது விழிப்போடு இருந்து கொண்டு, அளவோடு, முறையோடு கலையை நாம் பழகி வந்தோமானால்,  அந்த நெறியின் பெயரே "ஆச்சாரம்".  துன்பம் எழாமல் காக்கக்கூடிய ஒரு நெறி, ஒரு முறை, ஒரு அளவு,  இது எல்லாம் பார்த்தோமானால்,  அதன் பெயர் ஆச்சாரம் என்று சொல்லுவார்கள்.   அதனால்,  கலை + ஆச்சாரம் = கலாச்சாரம் என்றானது.

ஆங்கிலேயர்கள் நமது நாட்டுக்கு வந்த போது பார்த்தார்கள்;  நல்ல அழகான சொல்லாக இருக்கிறது,  நாமும் உச்சரிக்கலாம் என்று எடுத்தவர்கள், இடையிலேயுள்ள நெடிலை விட்டுவிட்டு "Culture" என்று தங்கள் அகராதிக்கு எடுத்துச் சென்றார்கள்.  "கலாச்சாரம்" என்ற வார்த்தையை வைத்துக் கொண்டு பார்த்தோமானால் எப்பொழுதுமே இயற்கை வளத்தை வாழ்வின் வளமாக மாற்றி,  அறிவினாலோ, கைத்திறனாலோ, உருமாற்றி அழகுபடுத்தியே துய்த்து வாழக் கூடியவர்களாகவே நாம் இருக்கிறோம்.    

தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.


Why most of persons stayed long with their personality?


மனிதர்களில் சிலர் ‘நான் இப்படித்தான்’ என்று இருப்பது எதனால்? அவர்களை நம்மால் எதுவுமே செய்யமுடியவில்லையே? வாழ்க்கைத்துணையாக இருந்தாலும், பிள்ளைகளாக இருந்தாலும், நண்பராக இருந்தாலும் மாறவில்லையே?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி: 

வாழ்க வளமுடன் ஐயா, மனிதர்களில் சிலர் ‘நான் இப்படித்தான்’ என்று இருப்பது எதனால்? அவர்களை நம்மால் எதுவுமே செய்யமுடியவில்லையே? வாழ்க்கைத்துணையாக இருந்தாலும், பிள்ளைகளாக இருந்தாலும், நண்பராக இருந்தாலும் மாறவில்லையே?


பதில்:

ஆமாம், நீங்கள் சொல்வது சரிதான். இதைச் சொல்லுகின்ற உங்களுக்கும்கூட ‘நான் இப்படித்தான்’ என்ற நிலைபாடு இருக்கும் என்பதும் உண்மையே. அது உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம் என்று வைத்துக்கொண்டாலும், நீங்களே யாரிடமாவது, உங்களைப்பற்றி கேட்டு தெரிந்து கொண்டால், அவர்கள் சொல்லிவிடுவார்கள். நாம் யார்? நம் நடவடிக்கைகள் என்ன? என்று விபரமாக சொல்லுவார்கள்.

ஒவ்வொடு பொருளுக்கும் தரம், குணம், செயல்பாடு என்று இருப்பதுபோலவே, எல்லா ஜீவன்களுக்கும், மனிதர்களாகிய நமக்கும் உண்டு. அதை குணாதசியம் என்று சொல்லுவார்கள். ஆங்கிலத்தில் Quality, Personality என்று குறிப்பிடுகிறார்கள். வேதாத்திரி மகரிஷி அவர்கள், மிக தெளிவாக ‘குணநலப்பேறு’ என்று சொல்லுகிறார். இதிலேயே குணம், நலம், அதனால் அடையும் பேறு என்ற மூன்று வார்த்தைகளும், பொருள்களும் நிறைந்திருக்கக் காணலாம்.

இயக்கமற்ற பொருட்கள், ஓரரறிவு தாவரங்கள் ஆகிய தன்னுடைய கருவழியாகவே தன்னுடைய ‘குணநலப்பேறு’ பெற்றுக்கொள்கிறது. ஒரு களிமண், ஒரு பாறை, உப்புக்கல், மிளகாய், மாம்பழம் என்று உதாரணம் எடுத்துகொண்டு புரிந்து கொள்ளலாம். ஆனால் ஈரறிவு முதல், ஆறறிவு மனிதனாக நம்மையும் சேர்த்து, கருவழியான ‘குணநலப்பேறு’ மட்டுமல்லாமல், வாழ்கின்ற சூழல், கூட்டு, சமூகம், தேவை, எதிர்பார்ப்பு, அனுபவம் என்று பலவழிகளில் புதிதாகவும் ‘குணநலப்பேறு’ அமைந்துவிடுகிறது.

முதலில் ஏற்படும் தேவை என்ற உணர்வுதான் எல்லா ‘குணநலப்பேறு’நிலைக்கும் அடிப்படை ஆகிறது. அதன்படிதான் மனிதர்கள் தங்களை கட்டமைத்துக் கொள்கிறார்கள். அத்தகைய மனிதர்கள், தனக்கு பாதிப்பு, இழப்பு ஏற்பட்டால் மட்டுமே தங்கள் நிலையை மாற்றிக் கொள்வார்கள். ஒருசிலர் என்ன நிகழ்ந்தாலும் ‘நான் இப்படித்தான்’ என்ற நிலையை (உயிரே போனாலும் கூட) மாற்றிக் கொள்ளவே மாட்டார்கள். இதனால் ஏதேனும் நன்மை உண்டா? இல்லவே இல்லை என்பதுதான் உண்மை. ஆனால் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

வேதாத்திரி மகரிஷி, இத்தகைய, இயற்கைதான் என்று நம்பிக்கொண்டிருக்கும் நிலை மாறவேண்டும், ‘குணநலப்பேறு’ அடையவேண்டும் என்றுதான், அகத்தாய்வும், தற்சோதனையும் அமைத்திருக்கிறார். முழுமையாக தங்களை மாற்றிக்கொள்வது மட்டுமல்ல, இயற்கையாக ஒன்றிணைந்து இருப்பது என்ற தகுதியையும் அது தரும். மேலும் கருவழியான பதிவுகளை அகற்றிடவும் துணை செய்யும். யோகத்தின் வழியாக மட்டுமே இந்த Personality மாறுமே தவிர, வேறெந்த development பயிற்சியாலும் மாறிடாது என்பதை அறிந்துகொள்க.

வாழ்க வளமுடன்

-


Is it right for us to live by greeting others?


எரிகிற வீட்டில் பிடுங்குவது லாபம் என்ற வகையிலேயே எல்லோரும் இந்த உலகில் வாழும் பொழுது நாம் மட்டும் பிறரை வாழ்த்திக்கொண்டே வாழ்வது சரியாகுமா?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி: 

வாழ்க வளமுடன் ஐயா, எரிகிற வீட்டில் பிடுங்குவது லாபம் என்ற வகையிலேயே எல்லோரும் இந்த உலகில் வாழும் பொழுது நாம் மட்டும் பிறரை வாழ்த்திக்கொண்டே வாழ்வது சரியாகுமா?


பதில்:

இதே போன்றதொரு கேள்வி வேதாத்திரி மகரிஷியிடம் கேட்கப்பட்டது. அது ‘தவறு செய்பவர்கள் இந்த உலகில் நன்றாகத்தானே வாழ்கிறார்கள். நாம் ஏன் திருத்தமாக வாழவேண்டும்?’ என்ற கேள்வி. அதற்கு மகரிஷின் பதில் ‘நீங்கள் வேண்டுமானால் அப்படி கொஞ்சநாள் தவறு செய்தே வாழ்ந்து பாருங்களேன்’ என்று தருகிறார்.

நம்முடைய பார்வைக்கு, தவறு செய்பவர்கள் ‘நன்றாக’ இருப்பதுபோலவும், செழிப்பாக, இன்பமாக, நிறைவாக வாழ்வது போலவும் தெரியும், ஆனால், அவர்கள் மனதிலும், உடலிலும், வீட்டிலும், வீட்டில் உள்ள மற்றவர்களுக்கு உள்ள பிரச்சனைகள் எதுவுமே நமக்கு தெரியாது. இரவில் அவர்கள் நிம்மதியாக தூங்கி எழுவார்களா? என்பது கூட கேள்விதான். அதை அவர்கள் வெளிக்காட்டவும் தயங்குவார்கள் / மறைப்பார்கள். ஆனால் ஏதேனும் வகையில் நாம் அறிய முடியும்தானே?

நாம் நம்முடைய பார்வையை, முன்னோக்கி பார்த்தால் இப்படி வாழ்ந்த முடிந்தவர்கள் பேரும் புகழோடுமா தன்னுடைய காலத்தை முடித்திருக்கிறார்கள்? சிந்தித்துப் பாருங்கள். அவர்கள் இறந்து பல காலம் ஆனாலும் கூட, அவர்கள்மேல் விழுந்த பழிச்சொல் அகலாமல் இருப்பதை நாம் காணமுடியும். நல்லதிற்கு உதாரணம் என்பது போலவே, தீய நடவடிக்கைகளுக்கும், தவறுகளுக்கும் உதாரணமாக அவர்கள் ‘காலத்தால்’ நின்றிருப்பதை அறியலாம்.

அறிவில், அனுபவத்தில், வாழும் சூழலில் வளர்ச்சி அடையாத சிலர், மற்றவர்கள் வருத்தி, துன்புறுத்தி, பிடுங்கி, வாழ்வதை நாம் காணமுடியும். நாமேகூட அப்படியான சிலரிடம் மாட்டிக்கொண்டு முழித்திருப்போம் என்பதும் உண்மையே. அத்தகைய நிகழ்வுக்குப் பின் நாம் எப்படி இருக்கிறோம்? என்பதையும், அவர்கள் எப்படி இருக்கிறார்கள்? என்பதையும் சிந்திக்க வேண்டும். அறம் அல்லாத எந்த ஒரு செயலை செய்தாலும், அது இயற்கை எனும் தெய்வீக பேராற்றலால், அவரவர் மனதிற்குள்ளாகவும், கருமையத்திலும் ‘கர்மவினைப்பதிவாக’ பதிவு செய்வதை மறவாதீர்கள். வட்டியும் முதலுமாக என்ற ரீதியில் அதை தீர்க்காமல் விடவே விடாது. அதுதான் இயற்கையின் செயல்விளைவு நீதி.

சாதாரணமாகவே, மனம் ஒப்பாத ஒன்றை செய்துவிட்டு காலம்பூராவும் வருந்துவது மனிதனின் இயல்பு. யோகத்தின் வழியாக மனதை அறிந்த நாம், அப்படியான தவறை நாமே விரும்பி செய்திட முடியுமா? அது நியாயமும் ஆகுமா? இருக்கும் வினைப்பதிவுகளை தீர்க்க மட்டுமேதான் நாம் பிறந்திருக்கிறோம் என்பதை மறுபடி நாம் ஞாபகப்படுத்திக் கொள்வோம். தவறு செய்யும் அவர்கள், தவறுமட்டுமே செய்யும் அவர்களுக்கு அதுகுறித்த கவலை இல்லை. அது அவர்கள் பாடு. நாம் நம்மை திருத்திக் கொள்வோம்.

வாழ்க வளமுடன்

-

Please explain Dvaita, Advaita, Vishishtadvaita philosophies?


துவைதம், அத்வைதம், விசிஷ்டாத்வைதம் ஆகிய தத்துவங்களை புரிந்துகொள்வது எப்படி? விளக்குவீர்களா?




வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி: 

சுவாமிஜி, துவைதம், அத்வைதம், விசிஷ்டாத்வைதம் ஆகிய தத்துவங்களை புரிந்துகொள்வது எப்படி? விளக்குவீர்களா?


வேதாத்திரி மகரிஷியின் பதில்:

நீங்கள் வெளியூருக்கு செல்கிறீர்கள்; அங்கு பகல் உணவு கிடைக்காது என்பதால் உணவுப் பெட்டியில் (Tiffin Box) உணவை எடுத்து செல்கிறீர்கள். இப்போது, நீங்கள் வேறு, உணவு வேறு. பிறகு பகல், ஒரு மணி அளவில் அந்த உணவை உண்ணுகிறீர்கள். இப்போது அந்த உணவு பெட்டியில் இல்லை; உங்களுக்குள் சென்று விட்டது. இவ்வளவு நேரம் அந்த உணவும் நீங்களும் தனித்தனியே இருந்தாலும் இப்போது ஒன்றாகி விட்டீர்கள். இப்போது உங்களை நினைத்துப் பாருங்கள். நீங்கள் யார்? இதுவரையில் நீங்கள் எடுத்துக் கொண்டுள்ள மொத்த உணவின் சாரம் (Essence) தானே?


அணு நிலையில் உடலும் ஒன்றே. சிவம் என்ற இருப்பு நிலையிலிருந்து சக்தியெனும் விண் மலர்ந்தது. சில விண் துகள்கள் உடலாயின. சில விண் துகள்கள் உணவாயின. இதனால் உடலும், உணவும் தோன்றிய மூலப்பொருள் அணுவே. இங்கு அத்வைதம் துவைதமாயிற்று. 1 மணிக்கு, நீங்கள் வேறு அந்த உணவு வேறு. 5 மணிக்கு நீங்களும் அந்த உணவும் இரண்டறக் கலந்து ஒன்றாகி விட்டீர்கள். 1 மணியிலிருந்து 5 மணி வரை நடைபெற்ற வேலைக்கிரமம் (Process) இருக்கிறதே அதுதான் விசிஷ்டாத்வைதம்.

மனிதன் அத்வைதம் என்பதையும், த்வைதம் என்பதையும் உணர்ந்து கொள்கிறான். த்வைதம் என்ற நிலையிலிருந்து, உண்மையைப் புரிந்து கொண்டு, இயற்கையின் ஒழுங்காற்றலைப் புரிந்து கொண்டு, தன்னை உயர்த்திக் கொண்டு அத்வைதம் என்ற நிலைக்குச் சென்றடைகிறான். இந்தச் செயல் ஒழுங்கு (Process) தான் விசிஷ்டாத்வைதம். அதற்குத் தனித் தன்மையுள்ள அத்வைதம் (Special advaitha) என்பதும் பொருந்தும்.

இவ்வாறான உண்மைகளைத் தெளிவாக உணர்ந்து கொள்ளாமல், “த்வைதம் ஒன்றுதான் கடவுளை அடைய வழி” என்றும் “அத்வைதம் ஒன்றுதான் கடவுளை அடைய வழி” என்றும் சண்டையிட்டுக் கொண்டு மக்களில் பலர் தங்களைக் குழப்பத்திலாழ்த்திக் கொள்கிறார்கள். ஒவ்வொரு பொருளுக்கும், நிகழ்ச்சிக்கும் மூன்று அடிப்படைக் கொள்கைகள் (Principles) உண்டு. “எல்லாம் ஒன்று” என்பது அத்வைதம், “ஒவ்வொன்றும் அதனதன் தனித்தன்மைக்கும் குணாதிசயங்களுக்கும் ஏற்ப ஒன்றுக்கொன்று “மாறுபடுகிறது” என்பதை த்வைதம், “எல்லாமே பகுத்துக் கொண்டே வரப்படும்பொழுது (While disintegrating) அணுவாகிப் பின்னர் பரமாகிறது என்பது விசிஷ்டாத்வைதம்.


வாழ்க வளமுடன்.

Please explain about the Death and the Eternal after the death?


மரணமில்லா பெருவாழ்வு என்று சொன்னால், உண்மையில் மரணமென்று ஒன்று இல்லை என்று பொருளாகிறதே?, அதை விளக்குவீர்களா?



வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

அன்பரின் கேள்வி: 

சுவாமிஜி! மரணமில்லா பெருவாழ்வு என்று சொன்னால், உண்மையில் மரணமென்று ஒன்று இல்லை என்று பொருளாகிறதே?, அதை விளக்குவீர்களா?


அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களின் பதில்:

        உலகில் உயிர் வாழும், மனிதன் உட்பட எல்லா ஜீவன்களுக்கும், மரணம் என்பது உடலியக்க நியதியில் ஒரு மாற்றம் தான். வித்து, சீவகாந்தம், உயிர், உடல், புலன்கள், மனம் இவையனைத்தும் ஒரு இணைப்பாக இயங்கும் போதுதான் அது வாழ்வு. இந்த இயக்கங்கள் முரண்பட்டு பிரிந்து விடும் நிலையே மரணம் எனப்படும். மரணம் இல்லையென்று கூறமுடியாது.

        உயிரின் இயக்கத்தால்தான் இந்த உடலானது இன்னும் பலவித இயக்கங்களையும் இணைத்துக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. உயிர் இல்லையென்றால் உடலிலுள்ள அணுக்கள் தொடர் இயக்கம் சிதைந்து விடும்.

        கூட்டு இயக்கத்தில் இருந்து பிரிந்து உயிர்த்துகள் ஒவ்வொன்றும் தனித்தனியாகத் தன்னுடைய இயக்கத்தை நடத்திக் கொள்ளத் தொடங்கிவிடும்.

        உதாரணமாக இதற்கு ஒரு கம்பெனியைச் சொல்லலாம். நீதிமன்றத்தின் உத்தரவால் ஒரு கம்பெனியானது உலாவீனம் (Liquidate) செய்யப்படுகிறது. என்று வைத்துக் கொள்வோம்.

        அக்கம்பெனியானது அதன் பெயரில் இறந்துவிட்டது என்றாலும், அதிலுள்ள நிர்வாகிகள், பங்குதாரர்கள், வேலையில் இருந்தவர்கள் தொடர்ந்து இருக்கத்தான் செய்வார்கள்.

        கம்பெனி என்ற ஒரு அமைப்பிலே சேர்ந்திருந்தவர்கள் வகித்த பதவியை மட்டும் தான் இழக்கிறார்கள். ஆனால் தனித்தியங்குகின்றார்கள்.

            அதேபோல் உடலிருந்து உயிர் பிரிந்தவுடன், உடலிலுள்ள அணுக்கள் குழு இயக்கம் பிரிந்து இயங்குகின்றன. அவ்வளவே. அத்தகு தனித்தனியான இயக்கங்களுக்கு மரணம் என்பதில்லை.

        அணுக்களுடைய கூட்டு இயக்கச் சிறப்பு நிலைகள் மாற்றமடைவதும் அதே அணுக்கள் கூடி மற்றொரு உருவமாகத் திகழ்வதும் இயற்கை நியதி.

வாழ்க வளமுடன்!

-



Guide me with truth of Pancha Bootha Navagraha Thavam!


பஞ்ச பூத நவக்கிரக தவம் செய்துவந்தால், நம் ஜாதகத்தில் அவ்வப்பொழுது இருக்கின்ற பிரச்சனைகளுக்கு பரிகாரமாக அமையுமா? கோள்களின் நன்மையை பெறமுடியுமா? ஆலோசனை தேவை.



வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி: 

வாழ்க வளமுடன் ஐயா, பஞ்ச பூத நவக்கிரக தவம் செய்துவந்தால், நம் ஜாதகத்தில் அவ்வப்பொழுது இருக்கின்ற பிரச்சனைகளுக்கு பரிகாரமாக அமையுமா? கோள்களின் நன்மையை பெறமுடியுமா? ஆலோசனை தேவை.

பதில்:

யோகத்தில் இணைந்து தீட்சை பெறாவிட்டாலும் கூட, தனிநபராகவே இந்த பஞ்ச பூத நவக்கிரக தவம் செய்து நன்மையை பெறலாம் என்பது, இத்தவத்தின் சிறப்பாகும். இந்த பிரபஞ்சமும் உலகமும் உண்டாவதற்கு காரணமான பஞ்ச பூத தோற்றங்களை வணங்குவதும், அதன் அருளைப் பெறுவதும், நாம் வாழும் இந்த பூமி உட்பட, சூரிய குடும்பத்தில் உள்ள 7 கோள்களையும், நிழல் கிரகங்களான ராகு கேது ஆகியவற்றையும் வணங்கி அருளைப்பெறுவதும்தான் இந்த ‘பஞ்ச பூத நவக்கிரக தவம்’ஆகும்.

பரிகாரம் என்ற ஒன்று ஜோதிடத்தில் இருந்தாலும், அந்த பரிகாரம் செய்வதால் எதும் மாறிவிடுவதில்லை. அது அகன்றுவிடுவதும் இல்லை. தீர்மானிக்கப்பட்ட ஒன்று, நிச்சயிக்கப்பட்ட ஒன்று நிகழ்ந்தே தீரும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. வில்லில் ஏற்றப்பட்ட அம்பு, பின்னோக்கி இழுக்கப்பட்டால், அது பாய்ந்துதானே தீரும்?! அதை நாம் நிறுத்திட முடியுமா? எனவே பரிகாரம் செய்தாலும்கூட, அது நிகழந்தே தீரும் என்பது உறுதி. எனினும் அதை தாங்கிக் கொள்ளக்கூடிய திடம் கிடைத்துவிடும்.

ஒரு கோவிலுக்குச் சென்று, பூஜை, பரிகாரம், வழிபாடு, நவகிரகங்களை சுற்றிவருதல் ஆகியன எப்படி உங்களுக்கு திருப்தியும், பலனும் அளிக்குமோ, அதைவிடவும் நிறைவான முழுமையான திருப்தியை, பலனை,  ‘பஞ்ச பூத நவக்கிரக தவம்’ செய்வதால் பெறலாம். ஆனால், ஏதோ ஒருநாள் செய்துவிட்டால் போதும் என்று நினைத்துவிட முடியாது. குறிப்பிட்ட காலம் வரை தொடர்ந்து செய்துவர வேண்டும். பொதுவாக வாரத்தில் மூன்று நாள் காலையிலோ, மாலையிலோ செய்துவரலாம்.

அவசர கோலத்தில் இல்லாமல், பொறுமையாக, அதற்குரிய நேரம் கொடுத்து, தவம் இயற்றிவருதல் சிறப்பு. நீங்களே வார்த்தைகளாக சொல்லியும் தவம் இயற்றலாம். காணொளி, ஒலி வழியாகவும் கேட்டு தவம் இயற்றலாம். எப்படியாயினும், தவத்தில் நல்ல ஓர்மை நிலை இருக்கவேண்டும். மனம் அதில் ஒன்றி இருப்பது அவசியம்.

இந்த  ‘பஞ்ச பூத நவக்கிரக தவம்’ வழியாக, விண், காற்று, வெப்பம், நீர், மண் ஆகிய பஞ்ச பூதங்களோடு மனதை இணைத்து அதன் நன்மையையும், காப்பையும் பெறுகிறோம். அதுபோலவே, சூரியன், புதன், சுக்கிரன், சந்திரன், செவ்வாய், குரு, சனி, ராகு, கேது ஆகிய கிரகங்களின் மீது மனதை ஒன்றிணைத்து, நன்மையையும், காப்பையும் பெறுகிறோம்.  ‘பஞ்ச பூத நவக்கிரக தவம்’ நம் உடலுக்கும், மனதிற்கும், உயிருக்கும் சிறப்பை தரக்கூடியதவம். நிச்சயமாகவே நம் ஜாதகத்தில் காணப்படுகின்ற ‘கோளாறுகளுக்கு’ தீர்வாகவே அமையும் என்பது உறுதி.  யோகத்தில் தீட்சை பெற்று, இத்தவம் இயற்றும்பொழுது, கூடுதலான ஒரு விளக்கமும், முன்னேற்றமும் கிடைக்கும் என்பதும் உண்மை.

வாழ்க வளமுடன்
-

If we live in USA, Canada, Malaysia, Singapore, Australia, Dubai, Bahrain any different on yoga benefits?


அமெரிக்கா, கனடா, மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்த்ரேலியா, துபாய், பஹ்ரைன் போன்ற கடல்கடந்த நாடுகளில் வசிக்கும் தமிழர்களாகிய எங்களுக்கும் ஒரே மாதிரியாகத்தான் இறையாற்றல் உதவிடுமா? இறையுண்மை கிடைத்திடுமா? 


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி: 

வாழ்க வளமுடன் ஐயா, அமெரிக்கா, கனடா, மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்த்ரேலியா, துபாய், பஹ்ரைன் போன்ற கடல்கடந்த நாடுகளில் வசிக்கும் தமிழர்களாகிய எங்களுக்கும் ஒரே மாதிரியாகத்தான் இறையாற்றல் உதவிடுமா? இறையுண்மை கிடைத்திடுமா? 

Thanks to @arminschieb


பதில்:

அதில் உங்களுக்கு என்ன சந்தேகம்? ஆனால் இந்த கேள்வி எழுவது இயல்பு. ஒரு புதிய கண்டம், நாடு, சுற்றுச்சூழல், வாழ்க்கைமுறை, வழக்கம் பழக்கம், உணவு, கால நேரம் இப்படியாக எல்லாமே மாறி இருக்கும் அந்த நிலையில், ஏதோ ஒரு புதிய உலகுக்கே வந்துவிட்டதாகவே தோன்றும். இந்த உலகில் வாழும் எல்லா மனிதர்களுக்கும் ‘வேர், மூலம்’ ஒன்றுதான். இந்த உலகமும் ஓன்றுதான். கடல் கடந்து என்று சொல்லுகிறோம். உண்மையிலேயே அவை வெவ்வேறு கடலா? ஒரே கடல்தான், நம்முடைய சௌகரியத்திற்காக வெவ்வேறு பெயர் கொண்டு அழைக்கிறோம். எந்த நாட்டின் கடற்கரையில் நின்று, நீங்கள் கையால் நீர் அள்ளினாலும், உங்கள் கால்களை நனைத்தாலும் அது ஒரே நீர் நிலையான கடல்தான். நீங்கள் சுவாசிக்கும் காற்றும், மற்ற எல்லா உலக நாடுகளின் மக்களும் சுவாசிக்கும் காற்றும் ஒன்றுதானே? வேறு தனியாக அந்தந்த நாடுகளில் காற்று தனிப்பட்டு இருக்கிறதா?

எனவே மனிதர்களும், மனிதர்களின் வாழ்க்கைக்கானதும் ஒன்றுதான். அதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. உண்ணும் உணவு மாறி இருக்கலாம். ஆனால் செரிமானம், சக்தி, உழைப்பு, ஆற்றல் ஒன்றுதானே? இங்கே விளைவித்தால் அது அங்கே ஏற்றுமதி ஆகிறது. அங்கே விளைவித்தால் அது இங்கே இறக்குமதி ஆகிறது. யாரோ ஒரு மனிதனின் கண்டுபிடிப்பு, உலக மக்களின் எல்லாருடைய பயன்பாடுக்கும் கிடைக்கிறது. ஏதோ ஒரு நாட்டின் அரசியல் குழப்பம், மொத்த உலக நாடுகளையும் குழப்புகிறது. இப்படியாக எல்லாமே ஏதோ ஒன்றில் நாம் இணைந்துதான் இருக்கிறோம்.

மனிதன் தன்னுடைய ஆறாம் அறிவால், எண்ணத்தால், சிந்தனையால், எல்லா மனிதர்களோடும் இணைந்தேதான் இருக்கிறான். ஆனால் நாம் அதை அறிவதும் இல்லை, உணர்வதும் இல்லை. ஏதோ நாம் மட்டும் தனித்து இருப்பதுபோலவும், எதைவேண்டுமானலும் செய்துவிடலாம் என்று நினைக்கிறோம். ஆனால் உங்கள் கூடவே ‘மனசாட்சி’ என்ற ஒன்று, உங்கள் அத்தனை இயக்கங்களையும், மேம்பட்ட CCTV Camera போலவே ஒளி, ஒலி காட்சிகளோடு பதிந்து கொள்கிறது, நீங்கள் அறியாமலேயே. உண்மைதானே?

மனித இனம் ஒன்றுதான், மனமும், உயிரும் ஒன்றுதான். உடலால் பலப்பலவாக பிரிந்து எல்லைகட்டி இருக்கிறோம். அவ்வளவுதானே? இதில் உங்களுக்கு கிடைக்கும் எந்த யோக பயன்களும் மாறிடாது. இறையாற்றலும் மாறிடாது. வீணான கற்பனையும், உதாசீனமும் தேவையில்லை. உங்களுக்கு கொடுக்கப்பட்ட யோக வழிமுறைகளையும், பக்தி வழிமுறைகளையும் எந்த மாற்றமும் செய்துகொள்ளாமல், அதன்படியே தொடருங்கள். இறையாற்றலும், அருட்பேராற்றலும் நீங்கள் எங்கிருந்தாலும், அன்பும் கருணையுமாக உங்களைச் சூழ்ந்தே இருக்கிறது என்பதை மறவாதீர்கள். உங்களை எல்லைகட்டிக் கொள்ளாமல், ஒரே உலகம் என்ற கருத்தில் மலருங்கள். ஆர்வத்தோடும், முயற்சியோடும், தொடருங்கள். ‘நான் யார்?’ என்ற உண்மையை நோக்கியும் நகரலாம். இறையுண்மையையும் அறிந்து உயரலாம். பிறப்பின் நோக்கமும், கடமையும் கண்டு வாழ்வின் முழுமையை அடையலாம். உங்களை வாழ்த்தி மகிழ்கிறேன்.

        ஒரே ஒரு சிறப்பம்சத்தையும் சொல்லவேண்டும். அது என்னவென்றால், உங்களை யோகத்திற்கும், பக்திக்கும் இழுத்துக்கொண்டு திசை திருப்பும், போலியான நபர்கள் உங்களருகில் இருக்கமாட்டார்கள். உங்கள் யோக குரு / ஆசிரியர் சொன்னவற்றை கடைபிடித்து வந்தால் போதுமானது. ஆனால் உலகம் சுருங்கி கையில் வந்துவிட்ட இந்தக்காலத்தில் நீங்கள் ‘இதில்’ கவனமாக இருத்தல் அவசியமாகும்.

வாழ்க வளமுடன்
-

Please guide me for make the best Pooja Room at my home with yoga concepts!


வீட்டில் பூஜை அறை வேண்டும் என்பது என் விருப்பம். அதை எப்படி அமைக்கலாம் என்று சொல்லுவீர்களா? அந்த விளக்கம் யோகத்தின் அடிப்படையாக தரவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி: 

வாழ்க வளமுடன் ஐயா, வீட்டில் பூஜை அறை வேண்டும் என்பது என் விருப்பம். அதை எப்படி அமைக்கலாம் என்று சொல்லுவீர்களா? அந்த விளக்கம் யோகத்தின் அடிப்படையாக தரவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.


பதில்:

வீட்டில் பூஜை அறை அமைக்கவேண்டும் என்று விரும்புவது மிக நல்லதே! வளர்ந்து வரும் பிள்ளைகளுக்கு பக்தியிலும், யோகத்திலும் விருப்பம் கொண்டு, உயர்வதற்கும் உதவும். வாழ்வில் உயர்ந்த லட்சியங்களோடு அறநெறியில் வாழ்ந்து, தன் பிறப்பின் நோக்கமும் உண்மையும் அறிந்திட உதவும் அல்லவா? உங்கள் விருப்பம் நிறைவேற இறையோடு மனதை இணைத்து வாழ்த்தி மகிழ்கிறேன்.

வேதாத்திரிய யோகத்தில் இருந்துகொண்டு இதெல்லாம் சொல்லுகிறாரே? என்று எதிர்கேள்வி கேட்க நிறைய அன்பர்கள் நினைப்பார்கள். தங்கள் அறிவால், என்னை மட்டம் தட்டிட துடிப்பார்கள் என்றே நினைக்கிறேன். இவர்கள், வேதாத்திரி மகரிஷியின் வாழ்க்கை வரலாறை நன்கு படித்திருந்தால் உண்மை விளங்கும். பக்தி இல்லாமல் யோகம் இல்லை. மேலும் பக்தி கனிந்தால் அதுவே யோகம் ஆகும்.

உங்கள் வீட்டில் பூஜை அமைப்பதற்கு இதுவரை உங்களுக்கு கிடைத்த எல்லா அறிவுரைகளையும் விட்டுவிட வேண்டாம். ஆனால் இங்கே தரப்படும் ஆலோசனைகளையும் சிந்தித்து ஏற்றுக்கொள்ளுங்கள். முடிவு உங்கள் வசமே தவிர கட்டாயமில்லை. வீட்டில் பூஜை அறை என்பதை, இருவர் உள்ளே நின்றால் போதும் என்ற ரீதியில் அமைக்காமல், நான்கு முதல் பத்து நபர்கள் நன்றாக அமர்ந்து, ஒருவரை ஒருவர் இடிக்காமல் வந்து போகும்படி அமைத்துக்கொள்க. அதிக வெளிச்சமும் வேண்டாம். இருட்டாகவும் இருக்கவேண்டாம். காற்று நன்கு உட்சென்று வரும்படி அமைத்தல் நன்று. பெரும்பாலும் இப்போதைய வீட்டு பூஜை அறையில், ஜன்னல்கள் இல்லவே இல்லை. ஆனால் விளக்குகளும், அதன் ஒளிவெள்ளமும் கண்ணைப் பறிக்கிறது. காற்று வந்துபோக ஜன்னல் அவசியம். அதுபோல் எளிமையான விளக்குகள் போதும். வண்ண ஒளி தரும் அலங்கார விளக்குகள் அவசியமில்லை.

சிலை வைத்து வழிபடுவது தவறில்லை. இறை படங்களும், ஓவியங்களும் வைத்துக் கொள்ளலாம். தீப விளக்குகள், அதில் விளக்கெண்ணை, நெய் இட்டு தீபம் எரிதல் நன்று. நல்லெண்ணை, கடலையெண்ணை வேண்டியதில்லை. எந்த சிலை, எந்த உருவம் என்பதெல்லாம் உங்கள் தேர்வு. சில வீடுகளில் பரம்பரையாகவும் சிலைகள், படங்கள் இருப்பதுண்டு. உங்கள் முன்னோர்களும் அதை வழிபட்டு வந்தார்கள் என்பதால், நிச்சயமாக அதில் சிறப்புண்டு.

மந்திரங்கள் சொல்லலாம், மாலை, மலர்கள் அலங்காரம் செய்யலாம். சாம்பிராணி, ஊதுபத்தி, வாசனைதிரவியங்கள் பயன்படுத்தலாம். ருத்ராட்சம், படிக மாலைகளும் பயன்படுத்தலாம். எனினும் அவைகள் சுத்தமாக இருந்திட வேண்டும். தினமும் பூஜை அறையை சுத்தம் செய்தலும், ஒரு நாளைக்கு ஒரு நேரமாவது பூஜை செய்தல் நன்று. மணி ஒலிப்பதும், தீபாராதனை காட்டுவதும் சிறப்பு.

ஒவ்வொரு பூஜையிலும், உங்கள் குழந்தைகளை ஈடுபட செய்யுங்கள். அவர்களை அதில் ஆர்வம் கொள்ள பழக்குங்கள். உங்களுக்குத் தெரிந்த இறை உண்மையை மட்டும் சொல்லுங்கள். கதைகள் வேண்டியதில்லை. பக்தியின் உண்மை விளக்கம் யோகத்தில் தெரியும் என்பதையும் சொல்லுங்கள். அதே பூஜை அறையில், ஞானிகள், மகான்கள் சிலைகளும், படங்களும் வைத்துக்கொள்ளலாம் தவறில்லை.

பூஜை வழிபாடு முடித்து, அங்கேயே ஏதேனும் ஒரு தவம் செய்வதையும் நீங்கள் வழக்கமாக்கிக் கொள்ளலாம். எப்போதும் அமைதியாக, நிறைவாக இருக்குபடி, பூஜை அறையை வைத்துக்கொள்க. அதிக ஒலி, ஒளி தேவையில்லை. உங்கள் உறவினர்கள், நண்பர்கள் வந்தால், அவர்களையும், பூஜையில் கலந்துகொள்ளச்செய்யுங்கள். எங்கள் வீட்டில் இப்படி ஒரு நிறைவான பூஜை அறை உண்டு என்று தெரியப்படுத்துங்கள். உங்கள் பூஜை அறை குறித்த உயர்ந்த எண்ணங்களை எப்போதும் மனதிற்குள் வைத்திருங்கள். கண்களை மூடி எப்போது நினைத்தாலும், உங்களுக்குள் ஒரு தெய்வீகத்தை உணர்த்துவதாக இருக்கட்டும். அது உங்களுக்கு என்றும் உதவும். இதனோடு யோகத்திலும் நான் உயர்வேன், பக்தியின் முழுமையை யோகத்தில் அறிந்துகொள்வேன் என்பதில் திடமாக இருங்கள்.

வாழ்க வளமுடன்

-

If we worship at home pooja, the grace will be same as like a temple level?


வீட்டிலேயே பூஜை அறை அமைத்து வழிபடும் இடத்திலும்கூட, கோவில், ஆலயத்தில் இருக்கும் அதே சிறப்பான ஆற்றலும் சக்தியும் இருக்குமா? நமக்கு உதவுமா?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி: 

வாழ்க வளமுடன் ஐயா, வீட்டிலேயே பூஜை அறை அமைத்து வழிபடும் இடத்திலும்கூட, கோவில், ஆலயத்தில் இருக்கும் அதே சிறப்பான ஆற்றலும் சக்தியும் இருக்குமா? நமக்கு உதவுமா?


பதில்:

பக்தியில் இயல்பாகவே ஆர்வம்கொண்டு, அதை கடைபிடித்து வரும் இந்திய நாட்டில், ஒவ்வோர் வீட்டிலும், பூஜை வழிபாடு உண்டு. அவரவர்கள் தங்கள் பொருளாதார வசதிகேற்ப, ஒரு பூஜை அறை, ஒரு தடுப்பு, ஒரு பெட்டகம், ஒரு அலமாரி அமைத்து அங்கே, இறை உருவம், படம், பொருட்கள் கொண்டு வழிபாடு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்கள். இப்போது கட்டும் நவீன வீடுகளிலும் கூட எளிமையாக பூஜை அறை உண்டு. அது இல்லையென்றால் வீடு முழுமை அடைவதில்லை என்ற ஒரு கருத்தும் இருப்பதை நாம் அறிந்திடமுடியும். அதை மற்றவர்கள் கிண்டல், கேலி செய்தாலும், தேவை என்ற மனப்பாங்கு இருப்பதை மறுக்கமுடியாது. இறைவழிபாட்டில் ஓர் உந்துதலாகவும், யோகத்திற்கு அடிப்படையாகவும் இருக்கின்ற பக்தியை எப்படி நாம் மறுத்திட முடியும்? வளர்ந்த பெரியவர்களுக்கு தேவையில்லாது இருக்கலாம். ஆனால், நாளைய தலைமுறையாக வளர்ந்து வரும் குழந்தைகளுக்கு ஒழுக்கமும், நற்பண்பும், தன்னை மீறிய சக்திக்கு வணக்கம் செலுத்தி, மதித்து, இயற்கை ஒழுங்கமைப்பை ஏற்று வாழ்ந்து, தன்னை யார்? என்று அறிந்து பிறப்பின் முழுமையை அடைவதற்கும் பக்தி தேவைதானே?

வீட்டிலேயே  பூஜை அறை அமைத்து வழிபடுகிறோம் என்றால், அங்கே நெய் விளக்கு தீபம் இருக்கும், மந்திரங்கள் சொல்லப்படும், மனதை உற்சாகப்படுத்தும்மலர்களின் அலங்காரம், அவற்றின் நறுமணம் இருக்கும். படைப்பாக வைக்கும் பழங்கள், பலகாரங்கள் ஆகியன இருக்கும். வேண்டுதல் ஏதுமில்லை என்றாலும், வழிபாடு முடித்துவிட்டால், ஒரு திருப்தியை ஒவ்வொருவராலும் உணரமுடியும் என்பது உண்மைதான். நிச்சயமாகவே வீட்டிலேயே பூஜை அறை அமைத்து வழிபடும் இடத்திலும்கூட,  சிறப்பான ஆற்றலும் சக்தியும் இருக்கும். ஆனால், கோவில், ஆலயத்தில் இருக்கும் அதே அளவில் என்று எதிர்பார்க்கமுடியாது. காரணம், கோவில், ஆலயம் என்பது ஆற்றல், சக்தியை ஏற்று அதை தக்கவைத்துக் கொள்ளும் வழிமுறையிலேயே அமைப்பதாகும். அந்த ஆற்றல் களம் அபரிதமாக இருக்கும். அது எப்படி என்றால், யாகம் வளர்ப்பதாலும், ஆறுகால பூஜைகள் செய்வதாலும், கும்பாபிஷேகம் நிகழ்த்துவதாலும், தீப ஆராதனை, அபிஷேகம் செய்வதாலும், ஏளாரமான மக்கள் வணங்குவதாலும், அந்த இடத்தை சுற்றுவருவதாலும், அந்த வழிபாடு தளத்தில் ஆற்றல் களம் திணிவுபெறும். அதுபோலவே அவரவர்களுக்கு தேவையான ஆற்றலையும், உந்துதலையும் தந்துகொண்டே இருக்கும்.

கோவில், ஆலய வழிபாடுகளில் புதைந்திருக்கின்ற, கருத்துருவான இறை உண்மை அவர்களுக்குள் உடனடியாகவும், அதை நினைக்கும்பொழுதும் கிடைத்துக்கொண்டே இருக்கும். அது அவர்களின் மலர்ச்சிக்கும், உயர்வுக்கும் உறுதுணையாக இருக்கும்.  வீட்டில் அந்த அளவிற்கு கிடைத்திடுதல் அபூர்வமாகும். எனினும் ஏதேனும் ஒருவகையில் துணைசெய்யும் என்பதில் ஐயமில்லை. எனினும், பருவம் வந்தோரும், வயதில் பெரியோர்களும் இந்த வழிபாடுகள் தாண்டி, இதில் உள்பூர்வமாக பொதிந்து இருக்கின்ற, இறை தத்துவத்தை அறிவதற்கு முயற்சிக்க வேண்டியது அவசியம். அந்த நிலையில் உயர்ந்திட, யோகத்தில் ஆர்வம் வரவேண்டும். அப்போதுதான் நம்முடைய பிறப்பின் நோக்கம், கடமை நிறைவேறிடும். பூஜை வழிபாடு மட்டுமே போதும் என்று நின்றுவிடுவது முழுமையில்லை என்பதை நினைவுகொள்க.

இந்த பூஜை, வழிபாடு, அதன் தொடர்பான விசயங்களை மறுப்பவர்களையும், கிண்டலும், கேலியும் செய்பவர்களை புறந்தள்ளுங்கள். அவர்களுக்கு புரியவில்லை என்றால் அப்படியே விட்டுவிடுங்கள். அப்படிப்பட்டவர்களுக்கு விளக்கம் சொல்லி உங்கள் நேரத்தை வீண் செய்யாதீர்கள். உங்களுக்கு விருப்பமானதை தொடர்வதில் எந்த தவறும் இல்லை. அதில் உண்மையோடும், உண்மையை நோக்கியும் பயணியுங்கள்.  

வாழ்க வளமுடன்

-

Please explain the good, bad, and benefits on the almighty's believes and unbelieves?


இறைவழிபாடுகளில் இருக்கும் நம்பிக்கையும், கடவுளே இல்லை என்ற நிலையையும் நீங்கள் விளக்கமுடியுமா? இரண்டிலும் இருக்கின்ற நன்மை, தீமை, பயன்கள் என்ன என்றும் சொல்லுங்கள்!


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி: 

வாழ்க வளமுடன் ஐயா, இறைவழிபாடுகளில் இருக்கும் நம்பிக்கையும், கடவுளே இல்லை என்ற நிலையையும் நீங்கள் விளக்கமுடியுமா? இரண்டிலும் இருக்கின்ற நன்மை, தீமை, பயன்கள் என்ன என்றும் சொல்லுங்கள்!


பதில்:

நல்ல கேள்விதான் எனினும், இங்கே பொதுவெளியில் சுருக்கமாகவேதான் சொல்ல முடியும். கடவுளை வணங்குவோர் குறித்து பேசினாலும், கடவுள் இல்லை என்று சொல்வோரை குறித்து பேசினாலும் இங்கே தேவையற்ற பிரச்சனைகள்தான் எழுகின்றன என்று வருந்துவோர்களில் நானும் ஒருவன். ஏனென்றால் இந்த உலகில், உண்மைகளை எடுத்துப் பேசுவோர்களுக்கும், விளக்கமளித்து பேசுவோருக்கும் எதிரிகள் உருவாகிவிடுவார்கள். எனவே மிகசுருக்கமாக சிலவற்றை இங்கே சொல்ல முயற்சிக்கிறேன். இது என்னுடைய கருத்தல்ல, நான் பலவழிகளில் அறிந்து கொண்ட வகையில், மற்றவர்கள் தந்த குறிப்பு மட்டுமே.

என்னைப் பொறுத்தவரையில் நான், கடவுளை வணங்குவோரையும், கடவுள் இல்லவே இல்லை என்போரையும் குறித்து தனிப்பட்ட எந்தக்கருத்தும் சொல்லுவதில்லை. உங்களுக்கு பிடித்திருக்கிறது அதனால் கடவுளை வணங்குகிறீர்கள். உங்களுக்கு அது அனுபவமாகவில்லை எனவே கடவுள் இல்லவே இல்லை என்கிறீர்கள். அவ்வளவுதான் என்னுடைய கருத்தாக இருக்கிறது.

இந்த இரண்டு நிலைபாடு கொண்டவர்களுக்கும் தங்களுக்குள்ளாக ‘ஒரு நம்பிக்கை’ உண்டு. அந்த நம்பிக்கை பெரும்பாலும், மற்றவர்களால்தான் உருவாகிறது. அது தொடர்வதும், அற்றுப் போவதும், அவர்களுக்கே அது அனுபவமாகும் பொழுதுதான். வளரும் சிறுவயதில் பெற்றோர் ஏற்படுத்தும் பக்தி நம்பிக்கை, தொடர்ந்தால் அக்குழந்தையும் ‘கடவுளை’ நம்பும். பெற்றவர்களுக்கே பக்தியும், கடவுள் நம்பிக்கையும் இல்லையென்றால் அக்குழந்தைக்கும் ‘கடவுள்’ இல்லைதான், அதுகுறித்த நம்பிக்கையும் இல்லைதான். பக்திமார்க்கத்தில் வளர்ந்த சிறுவர் சிறுமியர் கூட பிறகு வளர்ந்த நிலையில், சூழ்நிலையினாலும், மற்ற கருத்துளினாலும், தன்னறிவினாலும், பகுத்தறிவு சிந்தனைகளினாலும் தன் சுய அறிவால், சில காலங்களுக்குப்பிறகு  ‘இரண்டாவது நிலைப்பாட்டுக்கு, இல்லாத நிலைப்பாட்டுக்கு’ வந்துவிடுவதுண்டு.

உலகில் பிறந்த மனிதன் ஆறாவது அறிவின் துணைக்கொண்டுதான் மற்ற எல்லா உயிரினங்களை விடவும், சிந்தித்து அறிந்து கொண்டு வாழ்கிறான், அந்த சிந்தனையே மனிதனை, விலங்குகளின் பரிணாமத்தில் இருந்து, பிரித்து உயர்த்துகிறது. எல்லாவகையான உணர்வையும் விலங்குகள் போலவே பெற்று மகிழ்கிறான் என்பதும் உண்மை. கூடவே, அந்த உணர்வுகளையே பெறுவது நானேதான் என்றும் உணர்கிறான். இதனினும் மேலாக, அந்த நான் என்பது யார்? என்று சிந்தனையும் இயல்பாக எழுவது உண்மைதான். ஆனால் இந்த ‘நான் யார்?’ அவ்வளவு எளிதில் சராசரி மனிதனுக்கு வருவதே இல்லை. என்றாலும் அந்த கேள்வியோடு, யோகசாதனை வழியாக, இதை அறிந்த முன்னோர்கள்கள், ஞானிகள், மகான்கள், சித்தர்கள் தங்களோடு வாழ்கின்ற மக்களின் அறிவு நிலைக்கு ஏற்றவாறு, புரிந்து கொள்ளும்படியாக எளிமைநிலை கருதி, ‘இப்படியான உண்மை, உட்பொருளாக, மெய்ப்பொருளாக இருக்கிறது. அதை அறிந்தும், உணர்ந்தும் உங்கள் வாழ்வை சிறப்பித்துக்கொள்க’ என்ற கருத்தில், அதை ஆன்மீகத்தத்துவமாக, கருத்துருவாக ‘இறை’ என்ற உண்மை விளக்கத்தை தந்தார்கள். அதுவே கட+உள்=கடவுள் என்பதாக ஆகிற்று. ஆகவே, கடவுள் என்ற கருத்துரு வணக்கத்தில், பொதுவாகவே, நம்பிக்கை என்ற நிலைக்கு அடுத்ததாக, பரிபூரண நம்பிக்கை (FAITH) என்ற நிலைக்கு உயர்ந்தால்தான், பக்தியில் இருப்பவர் கூட, ஓரளவில் உயர்ந்து இறை உண்மையை அறியமுடியும்.

மேற்சொன்ன இந்த கருத்துக்கு எதிரான போக்குத்தான், கடவுள் இல்லை என்ற நிலைபாடு ஆகும். மனிதனும் ஓர் பிறப்பே என்ற நிலையோடு, ஆறாவது அறிவின் துணையோடு, உலக இன்பங்களை துய்த்து வாழ்ந்து வரலாம். கடவுள் என்ற கருத்துருவுக்கு இடமில்லை. அதற்கு அவசியமும் இல்லை. அப்படியாக ஏமாற்றிக் கொள்ளவும் தேவையில்லை என்பதான போக்கு ஆகும். இங்கேயும் ஒரு , பரிபூரண நம்பிக்கை (FAITH) உள்ளதுதான். அது, மனிதனுக்கென்று இருக்கிற ஆறாவது அறிவில் இயற்கை தவிர ‘வேறு எதற்கும்’ இடமில்லை என்பதாகும். அந்த இயற்கையையும் ‘ஏதொன்றும் தனியாக, சிறப்பாக’ கூறவும் அவசியமில்லை என்பதுமாகும்.

இரண்டிலும், நன்மை, தீமை, பயன்கள் எல்லாமே, உணர்ந்து அறியக்கூடியதாக இருப்பதால் அதை நீங்கள், உங்களுக்கு எந்த , பரிபூரண நம்பிக்கை (FAITH) வேண்டுமோ அதை நீங்கள் தேர்ந்தெடுத்து பயணிக்கலாம். உங்கள் வாழ்க்கை, உங்கள் தேர்வு என்பதன் வழியாக உணர்ந்து அறிந்து கொள்க!

வாழ்க வளமுடன்

-

How we can act free from problematic activities with family members and others?


வாழ்க்கைத் துணைவரோடும், பிள்ளைகளோடும், வீட்டில் இருப்போரிடம் பேசும் பொழுதேகூட அதை அவர்கள் புரிந்துகொள்ளாமல் பிரச்சனை எழுகிறதே? எப்படி இதை சரி செய்வது?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி: 

வாழ்க வளமுடன் ஐயா, வாழ்க்கைத் துணைவரோடும், பிள்ளைகளோடும், வீட்டில் இருப்போரிடம் பேசும் பொழுதேகூட அதை அவர்கள் புரிந்துகொள்ளாமல் பிரச்சனை எழுகிறதே? எப்படி இதை சரி செய்வது?

பதில்:

நீங்கள் சொல்லுகின்ற இந்த பிரச்சனை, பெரும்பாலும் எல்லா குடும்பங்களிலும் உண்டு. ஒரு குடும்பத்திலேயே இப்படி இருந்தால், ஒரு சமூகத்தில், நாட்டில், உலகில் எத்தனையோ பிரச்சனை எழுந்துவிடுமே? இதையெல்லாம் எப்படித்தான் சமாளிக்கிறார்களோ? என்ற ஒரு கேள்வியும் உங்களுக்கு எழுந்துவிடும் அல்லவா? ஆம் அதுவும் உண்மைதான். இப்போது இருக்கின்ற தலைவர்கள், தலைவிகள் படும்பாடையும் நாம் அறிவோம் தானே?

இந்த உலகில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும், ஒரு அடையாளம் உண்டு. அந்த அடையாளம்தான் தன்னை வெளிப்படுத்தும். நான் இப்படிப்பட்டவன், இப்படிப்பட்டவள் என்று நாமும் அதை சொல்லால், செயலால் வெளிப்படுத்திக் காட்டுவோம். நம்முடைய சொல்லாலும், செயலாலும் மற்றவர்கள் அதை புரிந்து கொள்ளவும் செய்வார்கள். இது நாமளாகவே விரும்பியும் கட்டமைத்துக் கொள்ளலாம். சில நேரங்களில் நம்மையறியாமலும் அது வெளிப்பட்டு அப்படியான ஒரு தோற்றத்தை ஏற்படுத்திவிடவும் கூடும். அதில் நாம் கவனமாக இருக்கவேண்டும். நான்கு சுவருக்குள் யாரும் பார்க்காதவண்ணம் இருப்பது வேறு, ஒருவரோ, பலரோ, குடும்பமோ, சமூகமோ பார்க்கின்ற பார்வை வேறு என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

பொதுவாகவே ‘நான் நல்லவன் / நல்லவள்’ என்ற ரீதியிலான நம்பிக்கை நல்லதுதான். ஆனால் அதை மற்றவர்கள் மீது காட்டவும் கூடாது, திணிக்கவும் கூடாது. ஒவ்வொருவரும் அவரவர் அளவில் நல்லவர்கள் தான் என்பதை நினைவில் கொள்க. சில விரும்பாத நடவடிக்கைகள், குணங்கள் இருந்தாலும் உடனே காட்டிக்கொள்ளவும் மாட்டார்கள். 

ஒளிவுமறைவின்றி இருக்கக்கூடிய உறவு என்றால் அது கணவன் மனைவி உறவு மட்டுமே. அதில் ஆளுமையும், அதிகாரமும், உதவிடாது. அன்பு மட்டுமே தேவை. இந்த உறவில் இன்னொருவரை திருத்த வேண்டும் என்று நினைக்கவே கூடாது. அதை செயல்படுத்தவும் கூடாது. அவரவர்களுக்கு அது அவரவர் இயல்பு. அதை நீங்கள் சுட்டிக்காட்டலாமே தவிர மாற முயற்சிக்கக் கூடாது. வேதாத்திரி மகரிஷி ‘பொறுமை, விட்டுக்கொடுத்தல், தியாகம்’ என்ற மூன்று தன்மைகளை கணவனும் மனைவியும் ஏற்றுக்கொண்டால், இல்லறவாழ்வு இன்பமாக சிறப்பாக நிறைவாக இருக்கும் என்கிறார். ஆனால் நான், பொறுமை காப்பதா? நான் விட்டுக்கொடுக்கமுடியுமா? அது என் தலைமுறையிலேயே இல்லையே? நான் ஏன் தியாகம் செய்யவேண்டும்? என்றுதான் கேள்வி எழுமே தவிர மாற்றத்தை ஏற்கவே மாட்டொம் அல்லவா?

 வாழ்க்கைத் துணைவரோடும், பிள்ளைகளோடும், வீட்டில் இருப்போரிடம் பேசும் பொழுதேகூட அதை அவர்கள் புரிந்துகொள்ளாமல் பிரச்சனை எழுகிறது என்றால், முதலில் உங்களோடு இருக்கும், பழகும் இவர்கள், அவர்களுடைய இயல்பில் இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். உங்களுடை எக்கருத்தையும், வழிமுறையையும் திணிக்காதீர்கள், அவர்களை திருத்த முயற்சிக்காதீர்கள். உங்கள் சொல், செயல் ஆகிய மூலமாக அவர்களுக்குள் ஏற்படுத்திய பிம்பத்தை கலைக்காதீர்கள். ஒருவேளை தவறாக அவர்கள் கருதியிருந்தால், அதை திருத்திட முயற்சியுங்கள். நான் நல்லவன் / நல்லவள் என்று சொல்லாமல், அதை செயலாலும், அன்பாலும் காட்டுங்கள்.

அவர்களின் ஏற்பு இல்லாமல், கேட்காமல் எதையுமே செய்யதீர்கள். சொல்லாதீர்கள். எப்போதுமே மற்றவர்கள் குறித்த ‘பாவ்வம்’ என்று சொல்லக்கூடிய குணாதசியத்தை நீங்கள் தீர்மாணிக்காதீர்கள். அதுபோலவே ‘நான் இப்படித்தான்’ என்றும் உங்களை முடிவு செய்யாதீர்கள். இயல்பு என்ற நிலைக்கு நீங்கள் வந்து நின்று, அந்ததந்த பொழுதுக்கும், நேரத்திற்கும் தகுந்தபடி, விழிப்பாக செயல்படுங்கள். மற்றவர்களோடு எந்த பிரச்சனையும் எழாது காத்துக்கொள்ளலாம்.

வாழ்க வளமுடன்
-