Do you want liberation from the shackle? Do you know how it helps in life? by Yogic Master Sugumarje | CJ for You

Do you want liberation from the shackle? Do you know how it helps in life? by Yogic Master Sugumarje

Do you want liberation from the shackle? Do you know how it helps in life? by Yogic Master Sugumarje


தளைகளில் இருந்து விடுதலை வேண்டுமா? அது வாழ்க்கைக்கு எப்படி உதவுகிறது தெரியுமா?

வாழ்க வளமுடன் ஐயா, தளைகளில் இருந்து விடுதலை வேண்டுமா? அது வாழ்க்கைக்கு எப்படி உதவுகிறது? என்று விளக்குவீர்களா? என்று ஒரு அன்பர் கேட்டிருந்தார். தன்னையறியும் யோக பயணத்தில், நாம் ஏதேனும் சொன்னால், சொல்லுபவரையே எடைபோட்டு, நீ என்ன அவ்வளோ பெரிய ஆளா? என்று கேட்டு காலை வாறிவிடும் அன்பர்கள் மத்தியில், இப்படியான கேள்விகளை கேட்டு தன்னைப்போல பிறரும் பயனடைய வேண்டும் என்று நினைக்கும் அன்பர்களும் இருக்கிறார்கள். அவர்களை வாழ்த்தி மகிழ்கிறேன்.

அதுபோலவே, என்ன சொல்லியிருக்கிறேன் என்றே அறியாமல், மேலோட்டமாக படித்துவிட்டு, ‘நீ என்ன பெரிய அப்பாடக்கரா?!’ என்று ஏளனம் செய்து, தன் தகுதியை வெளிப்படுத்திக்கொண்ட அன்பர்களையும் வாழ்த்துகிறேன். இத்தகைய அன்பர்கள்தான், என்னைப்போன்ற சாதகர்களுக்கு, படிகற்கள். நாம் சரியாக அடுத்தபடியில் நடக்கிறோமா? இல்லையா? என்று சோதனை செய்து, உறுதி செய்து கொள்வதற்கு உதவுகிறார்கள். இப்படி சொல்லுகிறாரே? என்று நானும் உணர்ச்சி வசப்பட்டு ஏதேனும் சொன்னால், அவருக்கும் எனக்கும் வித்தியாசமே இல்லாமல் போய்விடும் அல்லவா! அப்படியாக உணர்ச்சி வசப்பட்டால்கூட அது எனக்கு தளைதான்.

தளைகள் என்பது நமக்கு வேண்டாத சுமைகள் என்று சொல்லலாம். நம்மை தடுக்கும் கண்ணாடி சுவர்கள் அது. நம் கைகளை, கால்களை சுற்றி சிக்கலாகிக் கிடக்கும் கயிறு என்றும் சொல்லலாம். நம்முடைய முதுகில் ஏற்றி இருக்கும் பாரம் என்றும் அர்த்தம் கொள்ளலாம். யோக வழித்துணையில் சுமை தேவையில்லை தானே? அத்தகைய சுமைகள் தான் தளை என்று சொல்லப்படுகிறது.

ஒரு பாறையில் ஒளிந்திருக்கும் சிலைக்கு, அதன் தேவையற்ற பாறைகள் தான் தளையும், சுமையும் ஆகும். அந்த பாறை சிற்பமாக மாறுவதற்கு, சிற்பி என்ற குரு தேவைப்படுகிறார். உளி என்ற யோக வழி தேவைப்படுகிறது. இந்த நிலையில் பாறைக்கு ஒன்றும் வேலையில்லையா? என்று கேட்கத்தோன்றுகிறது தானே? ஆம். பாறைக்கு வேலை இருக்கிறது. அது, தான் சிற்பமாக மாற்றப்படும் வரை, பொறுமையாக குருவின் துணையையும், உளியின் செதுக்குதலையும் தாங்கிக் கொள்ள வேண்டும். அதாவது, யோக பயிற்சியில், அதை சாதனையாக்கிட, மனம் ஒன்றி செயல்பட வேண்டும். இப்போது, இந்த தளை என்பதில் விடுதலையானது, எவ்வளவு முக்கியம் என்று புரிந்திருக்கும் அல்லவா?!

தளைகளை விடுவிப்பதிலும், யோக பயணத்தில் முன்னேறுவதிலும் அவசியமாக தேவைப்படுகின்ற ‘பொறுமை’ எல்லாவிதங்களிலும் நிலைபெற்று, உங்கள் வாழ்க்கையை, செயல்முறைகளை, வழக்கம் பழக்கங்களை முற்றிலுமாக மாற்றி அமைக்கும் என்று சொல்லலாம். அப்படி இருந்த மனிதரா இப்படி மாறிவிட்டார்? என்று உங்கள் காதுபடவே பேசி அதிசயிக்கும் மனிதர்களை நீங்கள் காணமுடியும். ஆம். ஒரு புது மனிதராக நீங்கள் மாறிட முடியும் என்பதே உண்மை.

எனினும், தளைகளை களைதல், உடனடியாக நிகழக்கூடியதல்ல. இதற்கு பல காலங்கள் ஆகலாம். உதாரணமாக சொன்னால், பல பிறவிகள் கூட ஆகலாம் என்பதே உண்மை. அந்த உண்மையை நாம் முதலில் புரிந்துகொள்வது நல்லது. இந்த தளைகள், நம்முடைய எண்ணம், சொல், செயல் வழியாக நம்மை வந்தடைந்தது. வந்துகொண்டும் இருக்கிறது. கூடுதலாக, பரம்பரை வழியாக, கருமூலமாகவும் நமக்குள்ளாக விதைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் விளங்கிக் கொள்ள வேண்டும்.

இதை முற்றுணர்ந்த குரு, நமக்கு உதவியாக இருந்து, இந்த தளைகளில் இருந்து, நம்மை விடுவிக்க துணையாகவும் இருக்கிறார். அவர் காட்டுகிற வழியில், அந்த அறிவுரைகள்படி நாம் நம்மை திருத்திக்கொள்ள ஆரம்பித்தால் போதும். தளைகள் தானாகவே நம்மைவிட்டு நீங்கிவிடும்.

இந்த உண்மையை உங்களுக்கு விளக்கிச் சொல்லும் நேரத்தில்கூட, புதிதான தளைகள் உங்கள் மீது ஒட்டிக்கொள்ளலாம். நம்மையறியாமல் சில தளைகள் நம்மீது படர்ந்துவிடும். அதை லாவகமாக, விட்டு விலகிட, விலக்கிவிட நாம் கற்றுக்கொள்வதும் அவசியமாகிறது. தளை என்பதை நன்கு புரிந்துகொண்டு, உங்கள் யோக பயணத்தில் சிறக்க, உங்களை வாழ்த்தி மகிழ்கிறேன்.

வாழ்க வளமுடன்.