Why some of Saint in Silence? They not offer course or methods. But they are in Upatesh somedays. What is the truth on it? | CJ for You

Why some of Saint in Silence? They not offer course or methods. But they are in Upatesh somedays. What is the truth on it?

Why some of Saint in Silence? They not offer course or methods. But they are in Upatesh somedays. What is the truth on it?


வாழ்க வளமுடன் ஐயா. சில ஞானிகள் மௌனமாக இருப்பது ஏன்? உபதேசம் என்று குறிப்பாக சில நாட்கள் மட்டுமே சொல்லுவார்கள். யோக பயிற்சி, தீட்சை, தவம் என்று கற்றுத்தருவது இல்லை. இப்போதும் சிலர் இருக்கிறார்களே? காரணம் என்ன?



        ஞானிகள் மௌனமாக இருப்பது உண்மைதான். முக்கியமாக, இறை உண்மையை, மெய்ப்பொருள் தத்துவத்தை, வெட்டவெளி எனும் தன்மையை, எந்தவொரு வார்த்தையாலும், உணர்ந்தவர் மற்றவருக்கு புரியவைக்க முடியாது. இதைத்தான், வேதாத்திரி மகரிஷி அவர்களும் 

‘மொழிவதற்கு வார்த்தை இன்றி முட்டி மோதி நின்றனர்’ என்று சொல்லுகிறார். 

அதே கவிதையில் 

‘இந்தநாள் விஞ்ஞானமோ ஏற்றம் பெற்றதால் அதை, 

இயங்கிடும் மின்சாரம் மூலம், எல்லோர்க்கும் உணர்த்தலாம்’ 

            என்று தனக்கு கிடைத்த வழியையும் சொல்லுகிறார். மேலும், கணிணி செயல்பாட்டை, கருமையம் என்ற உன்னதமான விளக்கத்திற்கு, வேதாத்திரி மகரிஷி எடுத்துக்கொண்டதையும் அறியலாம். இதெல்லாம், தகுந்த உதாரணம் என்று சொல்லமுடியுமா? இல்லை, ஆனால் எத்தனையோ தடுமாற்றத்திற்குப் பிறகு கிடைத்த முதல்படி என்று சொல்லமுடியும். மலை உச்சியில் இருந்து விழுந்துகொண்டிருப்பவனுக்கு கிடைத்த, மரக்கிளை என்றும் சொல்லலாம். இனி அவன் மெதுவாக இறங்கவேண்டும், இல்லையானால் மலை உச்சி நோக்கியாவது நகரவேண்டும். சரிதானே?!

        இந்நிலையில்தான், தன் மன, எண்ண அலைகளால், பிறரோடு கலந்து, உண்மை விளக்கத்தை உருவாக்கும் விதத்தில்,  சித்தர்களும், ஞானிகளும் மௌனமாக இருந்தனர். ஒருவகையில் அதுவும்கூட இறையின் தன்மைதானே! வேதாத்திரியத்திலும், மௌனம் என்பது உண்டு. வேதாத்திரி மகரிஷி வருடத்தில் கிட்டதட்ட 45 நாட்கள் மௌனமாக இருப்பது உண்டு. இது பேசா மௌனம் அல்ல. மனமின்றி, எண்ணங்களின்றி இருக்கும் ஒர் உயர்வான நிலையும் ஆகும்.

இப்படியாக, இறையுண்மையை, பிறருக்கு சொல்லி விளக்கமுடியாத சித்தர்களும், ஞானிகளும் கண்ட மாற்றுவழிதான், அருவத்தை உள்முகமாக காண்பதற்காக, கட உள் வழிபாடாக, சிலை வணக்கம் கொண்டு வந்தனர். ஆனால்,  சித்தர்களும், ஞானிகளும் தந்த உண்மையை தவிர்த்துவிட்டு, அதில் பல்வேறு குழப்பங்களை ‘மக்களே’ உருவாக்கிவிட்டனர்.

        இன்றைய உண்மையான விஞ்ஞானம், இந்த பிரபஞ்சத்தில் 5% நாம் காணும் கோள்கள், நட்சத்திரங்கள், விண்மீன் மண்டலங்கள் என்று சொல்லுகிறது. அதுபோல 26% பிளாக்ஹோல் என்று சொல்லப்படும் கருந்துளை இருக்கிறது என்றும், என்னவென்று அறிந்திட முடியாத ஆற்றல் 69% இருக்கிறது என்கிறார்கள். இந்த மூன்றையும் Normal Matter, Dark Matter and Dark Energy என் ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள். இறை என்பது விஞ்ஞானத்தில் இல்லை. எனவே இந்த Dark Energy எல்லாம்  வல்ல பரம்பொருளா? என்று கேட்டால், இல்லை என்றுதான் சொல்லுகிறார்கள். அப்படியானால், Dark Energy யை விளக்குக. என்றால் கையை விரிக்கிறார்கள். இதற்குமேல் அதற்கு அவர்களிடம் வேறு பதில் இல்லை. நீங்கள் வேண்டுமானால், எந்த விஞ்ஞானியையாவது கண்டு கேட்டு, பதில் கேட்டு வாங்குங்களேன்.

        உதாரணமாக, எண்ணம் இல்லாமல் மனிதன் இருக்கமுடியுமா? என்று கேட்டால், மனிதனின் மூளை, மனம் அதற்கு ஒத்துழைக்காது. எண்ணமில்லாமல் இருப்பதற்காக, மனிதன் பிறக்கவில்லை என்று விஞ்ஞானம் சொல்லுகிறது. இது உங்களுக்கு சரியான பதிலாக இருக்கிறதா?

        ஆனால், விஞ்ஞானம் தான் பகுத்தறிவு. இறையுண்மையை பகுத்து அறிந்தது மூடநம்பிக்கை என்றுதான் உலகமே பேசுகிறது. இன்று மட்டுமல்ல, அந்தக்காலத்திலும் இப்படித்தான். அதனால், ஞானிகள் மௌனி ஆனார்கள். சில அன்பர்களிடம் பேசி, இறையுண்மையை  புரியவைப்பதில் அவர்களுக்கு கிடைத்த அனுபவம் தந்த பாடமாக இருக்கலாம். எந்த வகையிலும், மனதை நுண்ணிய நிலைக்கு மாற்றிக்கொள்ளாத, எந்த ஒரு நபரிடமும், இறையுண்மையை புரியவைக்கவே முடியாது. அப்படியான மனதை பயிற்சியால் மாற்றிக் கொள்வதற்காகத்தான் ‘குண்டலினி யோகம்’ வந்தது. வேதாத்திரி மகரிஷியால், அதுவே ‘மனவளக்கலை’ என்றானது.

        இந்த மனதை நுண்ணிய அலை நிலைக்கு கொண்டுவருவது, டெல்டா என்ற 1க்கு3 சுழற்சியைக் கொண்டதாகும். இது, பீட்டா, ஆல்ஃபா, தீட்டா என்ற அலையின் உச்சநிலைதான் டெல்டா ஆகும். இதை விஞ்ஞானமும் ஏற்றுக்கொண்டிருக்கிறது. ஆனால், இறையுண்மையை கைவிட்டு விட்டது. மனதையும் கைவிட்டு விட்டது. மனதை, மூளையின் அலை என்றுதானே விஞ்ஞானம் சொல்லுகிறது.

        இப்போது ஒரு உண்மை உங்களுக்கு புரிந்து இருக்கலாம். விஞ்ஞானிகளே புரிந்து கொள்ளமுடியாத, அதற்கு வாய்ப்பில்லாமல் தத்தளிக்கும் பொழுது, சராசரி மனிதன் எப்படி புரிந்து கொள்ளுவான்? இதுதான் இங்கே பிரச்சனை. இந்த புரிதலுக்கு, குண்டலினி யோகம், எவ்வளவு காலம் செய்யவேண்டும்? என்று நாம் கணிக்கவும் முடியாது. முயற்சி, பயிற்சி, ஆராய்ச்சி என்பதுதான் அதை தீர்மானிக்கும்.

        இந்த இடத்தில், வேதாத்திரி மகரிஷி அவர்களுக்கு, கிட்டதட்ட 14 ஆண்டுகள் ஆகின என்று சொல்லலாம். தன்னுடைய 34 வயதில், தன்னிலை விளக்கத்தை அடைந்துவிட்டார். அந்த உண்மையைதான், தன்னுடைய 96 வயது வரை, மனவளக்கலை அன்பர்களுக்கு விளக்கி சொல்லிக் கொண்டிருந்தார். எத்தனை அன்பர்கள் புரிந்துகொண்டார்கள்? எனினும், வேதாத்திரி மகரிஷியே இதற்கு பதிலும் தருகிறார். எப்படி தெரியுமா? ‘உண்மை அறிந்தவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தங்களை வெளிக்காட்டிக் கொள்வதில்லை’

        அடடா? என்ன காரணமாக இருக்கும்? பார்க்கலாமா? என்னுடைய அனுபவத்தில், என்னுடைய 46 வயதில்தான், தன்னிலை விளக்கத்தை அறிந்தேன். எனினும் அடுத்த இரண்டு ஆண்டுகள் கடந்து, 48 வயதில்தான், நான் அறிந்ததை, வேதாத்திரி மகரிஷியின் அனுபவங்களோடு இணைத்து, ஆராய்ந்து, அதன் உண்மைத்தன்மை கிடைத்தபிறகுதான், @Vethathiriya எனும் தளத்திலும், இந்த கட்டுரை பதிவுகளாகவும், விளக்கம் சொல்லி, எழுதி, பேசி வந்தேன். எனினும் இதனால் எனக்கு  கிடைக்கின்ற பெயர் என்ன தெரியுமா?  ‘நீ என்ன பெரிய அப்பாடக்கரா?’ என்பதுதான். எனவே இப்படியான, அன்பர்களும், பாமரர்களும், சாமானியர்களும், இருக்கும் இவ்வுலகில், இறையுண்மையை சொல்லுவதும், புரியவைப்பதும் சாத்தியம்தானா? இதற்கு நானும் மௌனமாக இருந்துவிட்டிருக்கலாம் தானே? ஆனால், 

        ‘இறையுண்மை அறிந்தவர் சும்மா இருக்கமுடியாது என்றும், அந்த உண்மையே சும்மா இருக்கவிடாது’ என்றும் வேதாத்திரி மகரிஷி சொல்லுகிறார். அந்த தூண்டுதலும், வாய்ப்பும் எனக்கு கிடைத்ததால், என்வழியாக, இறைத்தத்துவ உண்மைகளை, வேதாத்திரிய வழியில் கொடுத்துக்கொண்டு வருகிறேன். 36 ஆண்டுகளாக, வேதாத்திரியத்தில் பயணிக்கிறேன் என்று சொல்லுவதும், என்னை வார்த்தையால் சீண்டிட நினைக்கும், அவருக்கு கிண்டலுக்கு இடம் கொடுக்கிறது. மேலும், என்னுடைய தகுதியையும் அவர் புரிந்து, தெரிந்து, அறிந்து கொண்டாதாகவும் சொல்லுகிறார். ஆனால் இப்படி, அந்த நபர் சொன்னதற்காக, நான் ஒதுங்கிக்கொள்ள முடியாது. ஏற்கனவே ‘நான்’ ஒதுங்கிக் கொண்டதால்தான், இப்படியாக செயல்படுகிறேன். அவர், அவருக்குண்டான அறிவுநிலைக்கு ஏற்றவாறு சொல்லிவிட்டார். அவ்வளவுதான். மேலும் அவருடைய தன்முனைப்பிற்கு தீணிபோடுவது என்வேலையும் அல்ல.

        இந்த நவீன விஞ்ஞான காலத்திலும் இப்படியானவர்கள் இருந்தால், ஞானி மௌனமாக இருப்பது நியாயம்தானே? ஆனால், வாய்பேசாத ஞானி வேறு, மௌனமாக இருக்கும் ஞானி வேறு என்பதையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

        இன்னொன்றையும் நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். எந்த ஞானியும், உன்னை நான் திருத்துகிறேன் என்று சொல்லி செயல்படுவதில்லை. ஆனால். கேட்காமல் கிடைக்கும் விருந்து அது. ஏற்போருக்கு அது பசிப்பிணி போக்கும். ஏற்பதும் மறுப்பதும் உங்கள் நிலைபாடு. மேலும் ஒரு ஞானி பேசித்தான் ஆகவேண்டும் என்பதில்லை. தன்னுடைய எண்ண அலைகளால் செய்பட முடியும். உதாரணமாக, மகான் ரமணர் அவர்களை சொல்லலாம். அவரிடம் கருணைப்பார்வையை பெற்றாலே, பலநூறு விளக்கங்கள் கிடைத்துவிடும் என்று சொல்லியிருக்கிறார்கள். அதுவும் உண்மையே! 

        பயிற்சிகளின்றி, உண்மைவிளக்கம் பெறமுடியுமா? என்றால், இல்லை. ஆனால், அதன் அருகில் செல்லலாம். இதைத்தான் வேதாந்தம் சொல்லுகிறது. வேதாத்திரி மகரிஷியை நன்கு உணர்ந்தவர்கள், இந்த உண்மையை புரிந்து கொள்ளலாம்.

        எனவே, நீங்கள் சொன்னது போலவே, சில ஞானிகள் மௌனமாக இருப்பது  உண்மையே. உபதேசம் என்று குறிப்பாக சில நாட்கள் மட்டுமே சொல்லுவார்கள். அதைத்தான் ‘சத்சங்கம்’ என்றும் அழைப்பார்கள். நீங்களும் உங்கள் நிலையில் உணர்ந்தறியும் பொழுது, மௌனம் என்பது ஏன்? என்பதை புரிந்துகொள்வீர்கள்.

    இன்னொரு உண்மையும் சொல்லிவிடுகிறேன். இந்த பதிவும், அந்த நபருடைய, அவரைபோன்ற சில நபர்களுடைய தன்முனைப்பை தூண்டிவிடும் என்பது எனக்குத் தெரியும். ஆனால் ஏற்கனவே சொன்னதுபோல, இது அவர்களுக்கான தீணி அல்ல!

வாழ்க வளமுடன்.