CJ for You: kundalini yoga

kundalini yoga

Showing posts with label kundalini yoga. Show all posts
Showing posts with label kundalini yoga. Show all posts

Do you want liberation from the shackle? Do you know how it helps in life? by Yogic Master Sugumarje


தளைகளில் இருந்து விடுதலை வேண்டுமா? அது வாழ்க்கைக்கு எப்படி உதவுகிறது தெரியுமா?

வாழ்க வளமுடன் ஐயா, தளைகளில் இருந்து விடுதலை வேண்டுமா? அது வாழ்க்கைக்கு எப்படி உதவுகிறது? என்று விளக்குவீர்களா? என்று ஒரு அன்பர் கேட்டிருந்தார். தன்னையறியும் யோக பயணத்தில், நாம் ஏதேனும் சொன்னால், சொல்லுபவரையே எடைபோட்டு, நீ என்ன அவ்வளோ பெரிய ஆளா? என்று கேட்டு காலை வாறிவிடும் அன்பர்கள் மத்தியில், இப்படியான கேள்விகளை கேட்டு தன்னைப்போல பிறரும் பயனடைய வேண்டும் என்று நினைக்கும் அன்பர்களும் இருக்கிறார்கள். அவர்களை வாழ்த்தி மகிழ்கிறேன்.

அதுபோலவே, என்ன சொல்லியிருக்கிறேன் என்றே அறியாமல், மேலோட்டமாக படித்துவிட்டு, ‘நீ என்ன பெரிய அப்பாடக்கரா?!’ என்று ஏளனம் செய்து, தன் தகுதியை வெளிப்படுத்திக்கொண்ட அன்பர்களையும் வாழ்த்துகிறேன். இத்தகைய அன்பர்கள்தான், என்னைப்போன்ற சாதகர்களுக்கு, படிகற்கள். நாம் சரியாக அடுத்தபடியில் நடக்கிறோமா? இல்லையா? என்று சோதனை செய்து, உறுதி செய்து கொள்வதற்கு உதவுகிறார்கள். இப்படி சொல்லுகிறாரே? என்று நானும் உணர்ச்சி வசப்பட்டு ஏதேனும் சொன்னால், அவருக்கும் எனக்கும் வித்தியாசமே இல்லாமல் போய்விடும் அல்லவா! அப்படியாக உணர்ச்சி வசப்பட்டால்கூட அது எனக்கு தளைதான்.

தளைகள் என்பது நமக்கு வேண்டாத சுமைகள் என்று சொல்லலாம். நம்மை தடுக்கும் கண்ணாடி சுவர்கள் அது. நம் கைகளை, கால்களை சுற்றி சிக்கலாகிக் கிடக்கும் கயிறு என்றும் சொல்லலாம். நம்முடைய முதுகில் ஏற்றி இருக்கும் பாரம் என்றும் அர்த்தம் கொள்ளலாம். யோக வழித்துணையில் சுமை தேவையில்லை தானே? அத்தகைய சுமைகள் தான் தளை என்று சொல்லப்படுகிறது.

ஒரு பாறையில் ஒளிந்திருக்கும் சிலைக்கு, அதன் தேவையற்ற பாறைகள் தான் தளையும், சுமையும் ஆகும். அந்த பாறை சிற்பமாக மாறுவதற்கு, சிற்பி என்ற குரு தேவைப்படுகிறார். உளி என்ற யோக வழி தேவைப்படுகிறது. இந்த நிலையில் பாறைக்கு ஒன்றும் வேலையில்லையா? என்று கேட்கத்தோன்றுகிறது தானே? ஆம். பாறைக்கு வேலை இருக்கிறது. அது, தான் சிற்பமாக மாற்றப்படும் வரை, பொறுமையாக குருவின் துணையையும், உளியின் செதுக்குதலையும் தாங்கிக் கொள்ள வேண்டும். அதாவது, யோக பயிற்சியில், அதை சாதனையாக்கிட, மனம் ஒன்றி செயல்பட வேண்டும். இப்போது, இந்த தளை என்பதில் விடுதலையானது, எவ்வளவு முக்கியம் என்று புரிந்திருக்கும் அல்லவா?!

தளைகளை விடுவிப்பதிலும், யோக பயணத்தில் முன்னேறுவதிலும் அவசியமாக தேவைப்படுகின்ற ‘பொறுமை’ எல்லாவிதங்களிலும் நிலைபெற்று, உங்கள் வாழ்க்கையை, செயல்முறைகளை, வழக்கம் பழக்கங்களை முற்றிலுமாக மாற்றி அமைக்கும் என்று சொல்லலாம். அப்படி இருந்த மனிதரா இப்படி மாறிவிட்டார்? என்று உங்கள் காதுபடவே பேசி அதிசயிக்கும் மனிதர்களை நீங்கள் காணமுடியும். ஆம். ஒரு புது மனிதராக நீங்கள் மாறிட முடியும் என்பதே உண்மை.

எனினும், தளைகளை களைதல், உடனடியாக நிகழக்கூடியதல்ல. இதற்கு பல காலங்கள் ஆகலாம். உதாரணமாக சொன்னால், பல பிறவிகள் கூட ஆகலாம் என்பதே உண்மை. அந்த உண்மையை நாம் முதலில் புரிந்துகொள்வது நல்லது. இந்த தளைகள், நம்முடைய எண்ணம், சொல், செயல் வழியாக நம்மை வந்தடைந்தது. வந்துகொண்டும் இருக்கிறது. கூடுதலாக, பரம்பரை வழியாக, கருமூலமாகவும் நமக்குள்ளாக விதைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் விளங்கிக் கொள்ள வேண்டும்.

இதை முற்றுணர்ந்த குரு, நமக்கு உதவியாக இருந்து, இந்த தளைகளில் இருந்து, நம்மை விடுவிக்க துணையாகவும் இருக்கிறார். அவர் காட்டுகிற வழியில், அந்த அறிவுரைகள்படி நாம் நம்மை திருத்திக்கொள்ள ஆரம்பித்தால் போதும். தளைகள் தானாகவே நம்மைவிட்டு நீங்கிவிடும்.

இந்த உண்மையை உங்களுக்கு விளக்கிச் சொல்லும் நேரத்தில்கூட, புதிதான தளைகள் உங்கள் மீது ஒட்டிக்கொள்ளலாம். நம்மையறியாமல் சில தளைகள் நம்மீது படர்ந்துவிடும். அதை லாவகமாக, விட்டு விலகிட, விலக்கிவிட நாம் கற்றுக்கொள்வதும் அவசியமாகிறது. தளை என்பதை நன்கு புரிந்துகொண்டு, உங்கள் யோக பயணத்தில் சிறக்க, உங்களை வாழ்த்தி மகிழ்கிறேன்.

வாழ்க வளமுடன்.

Why some of Saint in Silence? They not offer course or methods. But they are in Upatesh somedays. What is the truth on it?


வாழ்க வளமுடன் ஐயா. சில ஞானிகள் மௌனமாக இருப்பது ஏன்? உபதேசம் என்று குறிப்பாக சில நாட்கள் மட்டுமே சொல்லுவார்கள். யோக பயிற்சி, தீட்சை, தவம் என்று கற்றுத்தருவது இல்லை. இப்போதும் சிலர் இருக்கிறார்களே? காரணம் என்ன?



        ஞானிகள் மௌனமாக இருப்பது உண்மைதான். முக்கியமாக, இறை உண்மையை, மெய்ப்பொருள் தத்துவத்தை, வெட்டவெளி எனும் தன்மையை, எந்தவொரு வார்த்தையாலும், உணர்ந்தவர் மற்றவருக்கு புரியவைக்க முடியாது. இதைத்தான், வேதாத்திரி மகரிஷி அவர்களும் 

‘மொழிவதற்கு வார்த்தை இன்றி முட்டி மோதி நின்றனர்’ என்று சொல்லுகிறார். 

அதே கவிதையில் 

‘இந்தநாள் விஞ்ஞானமோ ஏற்றம் பெற்றதால் அதை, 

இயங்கிடும் மின்சாரம் மூலம், எல்லோர்க்கும் உணர்த்தலாம்’ 

            என்று தனக்கு கிடைத்த வழியையும் சொல்லுகிறார். மேலும், கணிணி செயல்பாட்டை, கருமையம் என்ற உன்னதமான விளக்கத்திற்கு, வேதாத்திரி மகரிஷி எடுத்துக்கொண்டதையும் அறியலாம். இதெல்லாம், தகுந்த உதாரணம் என்று சொல்லமுடியுமா? இல்லை, ஆனால் எத்தனையோ தடுமாற்றத்திற்குப் பிறகு கிடைத்த முதல்படி என்று சொல்லமுடியும். மலை உச்சியில் இருந்து விழுந்துகொண்டிருப்பவனுக்கு கிடைத்த, மரக்கிளை என்றும் சொல்லலாம். இனி அவன் மெதுவாக இறங்கவேண்டும், இல்லையானால் மலை உச்சி நோக்கியாவது நகரவேண்டும். சரிதானே?!

        இந்நிலையில்தான், தன் மன, எண்ண அலைகளால், பிறரோடு கலந்து, உண்மை விளக்கத்தை உருவாக்கும் விதத்தில்,  சித்தர்களும், ஞானிகளும் மௌனமாக இருந்தனர். ஒருவகையில் அதுவும்கூட இறையின் தன்மைதானே! வேதாத்திரியத்திலும், மௌனம் என்பது உண்டு. வேதாத்திரி மகரிஷி வருடத்தில் கிட்டதட்ட 45 நாட்கள் மௌனமாக இருப்பது உண்டு. இது பேசா மௌனம் அல்ல. மனமின்றி, எண்ணங்களின்றி இருக்கும் ஒர் உயர்வான நிலையும் ஆகும்.

இப்படியாக, இறையுண்மையை, பிறருக்கு சொல்லி விளக்கமுடியாத சித்தர்களும், ஞானிகளும் கண்ட மாற்றுவழிதான், அருவத்தை உள்முகமாக காண்பதற்காக, கட உள் வழிபாடாக, சிலை வணக்கம் கொண்டு வந்தனர். ஆனால்,  சித்தர்களும், ஞானிகளும் தந்த உண்மையை தவிர்த்துவிட்டு, அதில் பல்வேறு குழப்பங்களை ‘மக்களே’ உருவாக்கிவிட்டனர்.

        இன்றைய உண்மையான விஞ்ஞானம், இந்த பிரபஞ்சத்தில் 5% நாம் காணும் கோள்கள், நட்சத்திரங்கள், விண்மீன் மண்டலங்கள் என்று சொல்லுகிறது. அதுபோல 26% பிளாக்ஹோல் என்று சொல்லப்படும் கருந்துளை இருக்கிறது என்றும், என்னவென்று அறிந்திட முடியாத ஆற்றல் 69% இருக்கிறது என்கிறார்கள். இந்த மூன்றையும் Normal Matter, Dark Matter and Dark Energy என் ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள். இறை என்பது விஞ்ஞானத்தில் இல்லை. எனவே இந்த Dark Energy எல்லாம்  வல்ல பரம்பொருளா? என்று கேட்டால், இல்லை என்றுதான் சொல்லுகிறார்கள். அப்படியானால், Dark Energy யை விளக்குக. என்றால் கையை விரிக்கிறார்கள். இதற்குமேல் அதற்கு அவர்களிடம் வேறு பதில் இல்லை. நீங்கள் வேண்டுமானால், எந்த விஞ்ஞானியையாவது கண்டு கேட்டு, பதில் கேட்டு வாங்குங்களேன்.

        உதாரணமாக, எண்ணம் இல்லாமல் மனிதன் இருக்கமுடியுமா? என்று கேட்டால், மனிதனின் மூளை, மனம் அதற்கு ஒத்துழைக்காது. எண்ணமில்லாமல் இருப்பதற்காக, மனிதன் பிறக்கவில்லை என்று விஞ்ஞானம் சொல்லுகிறது. இது உங்களுக்கு சரியான பதிலாக இருக்கிறதா?

        ஆனால், விஞ்ஞானம் தான் பகுத்தறிவு. இறையுண்மையை பகுத்து அறிந்தது மூடநம்பிக்கை என்றுதான் உலகமே பேசுகிறது. இன்று மட்டுமல்ல, அந்தக்காலத்திலும் இப்படித்தான். அதனால், ஞானிகள் மௌனி ஆனார்கள். சில அன்பர்களிடம் பேசி, இறையுண்மையை  புரியவைப்பதில் அவர்களுக்கு கிடைத்த அனுபவம் தந்த பாடமாக இருக்கலாம். எந்த வகையிலும், மனதை நுண்ணிய நிலைக்கு மாற்றிக்கொள்ளாத, எந்த ஒரு நபரிடமும், இறையுண்மையை புரியவைக்கவே முடியாது. அப்படியான மனதை பயிற்சியால் மாற்றிக் கொள்வதற்காகத்தான் ‘குண்டலினி யோகம்’ வந்தது. வேதாத்திரி மகரிஷியால், அதுவே ‘மனவளக்கலை’ என்றானது.

        இந்த மனதை நுண்ணிய அலை நிலைக்கு கொண்டுவருவது, டெல்டா என்ற 1க்கு3 சுழற்சியைக் கொண்டதாகும். இது, பீட்டா, ஆல்ஃபா, தீட்டா என்ற அலையின் உச்சநிலைதான் டெல்டா ஆகும். இதை விஞ்ஞானமும் ஏற்றுக்கொண்டிருக்கிறது. ஆனால், இறையுண்மையை கைவிட்டு விட்டது. மனதையும் கைவிட்டு விட்டது. மனதை, மூளையின் அலை என்றுதானே விஞ்ஞானம் சொல்லுகிறது.

        இப்போது ஒரு உண்மை உங்களுக்கு புரிந்து இருக்கலாம். விஞ்ஞானிகளே புரிந்து கொள்ளமுடியாத, அதற்கு வாய்ப்பில்லாமல் தத்தளிக்கும் பொழுது, சராசரி மனிதன் எப்படி புரிந்து கொள்ளுவான்? இதுதான் இங்கே பிரச்சனை. இந்த புரிதலுக்கு, குண்டலினி யோகம், எவ்வளவு காலம் செய்யவேண்டும்? என்று நாம் கணிக்கவும் முடியாது. முயற்சி, பயிற்சி, ஆராய்ச்சி என்பதுதான் அதை தீர்மானிக்கும்.

        இந்த இடத்தில், வேதாத்திரி மகரிஷி அவர்களுக்கு, கிட்டதட்ட 14 ஆண்டுகள் ஆகின என்று சொல்லலாம். தன்னுடைய 34 வயதில், தன்னிலை விளக்கத்தை அடைந்துவிட்டார். அந்த உண்மையைதான், தன்னுடைய 96 வயது வரை, மனவளக்கலை அன்பர்களுக்கு விளக்கி சொல்லிக் கொண்டிருந்தார். எத்தனை அன்பர்கள் புரிந்துகொண்டார்கள்? எனினும், வேதாத்திரி மகரிஷியே இதற்கு பதிலும் தருகிறார். எப்படி தெரியுமா? ‘உண்மை அறிந்தவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தங்களை வெளிக்காட்டிக் கொள்வதில்லை’

        அடடா? என்ன காரணமாக இருக்கும்? பார்க்கலாமா? என்னுடைய அனுபவத்தில், என்னுடைய 46 வயதில்தான், தன்னிலை விளக்கத்தை அறிந்தேன். எனினும் அடுத்த இரண்டு ஆண்டுகள் கடந்து, 48 வயதில்தான், நான் அறிந்ததை, வேதாத்திரி மகரிஷியின் அனுபவங்களோடு இணைத்து, ஆராய்ந்து, அதன் உண்மைத்தன்மை கிடைத்தபிறகுதான், @Vethathiriya எனும் தளத்திலும், இந்த கட்டுரை பதிவுகளாகவும், விளக்கம் சொல்லி, எழுதி, பேசி வந்தேன். எனினும் இதனால் எனக்கு  கிடைக்கின்ற பெயர் என்ன தெரியுமா?  ‘நீ என்ன பெரிய அப்பாடக்கரா?’ என்பதுதான். எனவே இப்படியான, அன்பர்களும், பாமரர்களும், சாமானியர்களும், இருக்கும் இவ்வுலகில், இறையுண்மையை சொல்லுவதும், புரியவைப்பதும் சாத்தியம்தானா? இதற்கு நானும் மௌனமாக இருந்துவிட்டிருக்கலாம் தானே? ஆனால், 

        ‘இறையுண்மை அறிந்தவர் சும்மா இருக்கமுடியாது என்றும், அந்த உண்மையே சும்மா இருக்கவிடாது’ என்றும் வேதாத்திரி மகரிஷி சொல்லுகிறார். அந்த தூண்டுதலும், வாய்ப்பும் எனக்கு கிடைத்ததால், என்வழியாக, இறைத்தத்துவ உண்மைகளை, வேதாத்திரிய வழியில் கொடுத்துக்கொண்டு வருகிறேன். 36 ஆண்டுகளாக, வேதாத்திரியத்தில் பயணிக்கிறேன் என்று சொல்லுவதும், என்னை வார்த்தையால் சீண்டிட நினைக்கும், அவருக்கு கிண்டலுக்கு இடம் கொடுக்கிறது. மேலும், என்னுடைய தகுதியையும் அவர் புரிந்து, தெரிந்து, அறிந்து கொண்டாதாகவும் சொல்லுகிறார். ஆனால் இப்படி, அந்த நபர் சொன்னதற்காக, நான் ஒதுங்கிக்கொள்ள முடியாது. ஏற்கனவே ‘நான்’ ஒதுங்கிக் கொண்டதால்தான், இப்படியாக செயல்படுகிறேன். அவர், அவருக்குண்டான அறிவுநிலைக்கு ஏற்றவாறு சொல்லிவிட்டார். அவ்வளவுதான். மேலும் அவருடைய தன்முனைப்பிற்கு தீணிபோடுவது என்வேலையும் அல்ல.

        இந்த நவீன விஞ்ஞான காலத்திலும் இப்படியானவர்கள் இருந்தால், ஞானி மௌனமாக இருப்பது நியாயம்தானே? ஆனால், வாய்பேசாத ஞானி வேறு, மௌனமாக இருக்கும் ஞானி வேறு என்பதையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

        இன்னொன்றையும் நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். எந்த ஞானியும், உன்னை நான் திருத்துகிறேன் என்று சொல்லி செயல்படுவதில்லை. ஆனால். கேட்காமல் கிடைக்கும் விருந்து அது. ஏற்போருக்கு அது பசிப்பிணி போக்கும். ஏற்பதும் மறுப்பதும் உங்கள் நிலைபாடு. மேலும் ஒரு ஞானி பேசித்தான் ஆகவேண்டும் என்பதில்லை. தன்னுடைய எண்ண அலைகளால் செய்பட முடியும். உதாரணமாக, மகான் ரமணர் அவர்களை சொல்லலாம். அவரிடம் கருணைப்பார்வையை பெற்றாலே, பலநூறு விளக்கங்கள் கிடைத்துவிடும் என்று சொல்லியிருக்கிறார்கள். அதுவும் உண்மையே! 

        பயிற்சிகளின்றி, உண்மைவிளக்கம் பெறமுடியுமா? என்றால், இல்லை. ஆனால், அதன் அருகில் செல்லலாம். இதைத்தான் வேதாந்தம் சொல்லுகிறது. வேதாத்திரி மகரிஷியை நன்கு உணர்ந்தவர்கள், இந்த உண்மையை புரிந்து கொள்ளலாம்.

        எனவே, நீங்கள் சொன்னது போலவே, சில ஞானிகள் மௌனமாக இருப்பது  உண்மையே. உபதேசம் என்று குறிப்பாக சில நாட்கள் மட்டுமே சொல்லுவார்கள். அதைத்தான் ‘சத்சங்கம்’ என்றும் அழைப்பார்கள். நீங்களும் உங்கள் நிலையில் உணர்ந்தறியும் பொழுது, மௌனம் என்பது ஏன்? என்பதை புரிந்துகொள்வீர்கள்.

    இன்னொரு உண்மையும் சொல்லிவிடுகிறேன். இந்த பதிவும், அந்த நபருடைய, அவரைபோன்ற சில நபர்களுடைய தன்முனைப்பை தூண்டிவிடும் என்பது எனக்குத் தெரியும். ஆனால் ஏற்கனவே சொன்னதுபோல, இது அவர்களுக்கான தீணி அல்ல!

வாழ்க வளமுடன்.

Not speak is silence, isn't it? What's the big deal about that? And is it possible not to speak in this world? Some men, saints and gurus are silent. Is that really silence too? Explain


வாழ்க வளமுடன் ஐயா, வாய்பேசாமல் இருந்தாலே மௌனம் தானே? அதில் என்ன பெரிய விசயம் இருக்கிறது? மேலும் இந்த உலகில் பேசாமல் இருக்கமுடியுமா? சில மனிதர்கள், சாமியார்கள், ஞானிகள் பேசாமல் இருக்கிறார்களே? அதும் மௌனமா? விளக்கம் தருக.

உங்கள் ஆர்வத்தை வரவேற்கிறேன். மௌனம் இறைவனின் மொழி என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? இந்த பிரபஞ்சம் முழுவதுமே அப்படியான மௌனம் நிரம்பி இருக்கிறது. நமக்குள்ளும் அப்படியான மௌனம் இருந்தது. இருக்கிறது. ஆம், நாம் தாயின் கருவறையில் இருக்கும் பொழுது அப்படித்தான் இருந்தோம். பிறந்த பிறகுதான் அந்த மௌனத்தை கலைத்தோம். இன்றுவரை, இப்போது வரை அந்த மௌனத்தை கடைபிடிக்கவில்லை என்றும் சொல்லலாம் தானே?

மௌனம் யோகத்தில் மிக சிறப்பானது. எனினும் வாய்மூடி பேசாமல் இருப்பதற்கும், மௌனமாக இருப்பதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு. இந்த வித்தியாசத்தை தொலைத்துவிட்டுத்தான், பெரும்பாலோர் மௌனம் இருக்கிறேன் என்று சொல்லிக் கொள்கின்றனர். 

        யாராவது எதாவது கேட்பார்கள், நாம் எதையாவது சொல்லி மாட்டிக் கொள்வோம் என்பதற்காகவே, மற்றவர்களோடு பேசுவதை தவிர்த்து, மௌன நாடகம் நடிப்பவர்களும் இந்த உலகில் உண்டு. அப்படி தோற்றம் தருகின்ற பல்லாயிரக்கணக்கான குருமார்கள், ஞானிகள், சாமியார்கள் என்ற ‘அடைமொழிக்குள்’ அவர்கள் இருக்கிறார்கள். நீங்கள் எளிதில் அவரை அடையாளம் கண்டு, அவரிடம் இருந்து ஒதுங்கி விலகி, ஏமாறாமல் உங்களை காத்துக்கொள்ளலாம்.

சிக்கல் என்ன என்றால், யார் வாய்மூடி இருக்கிறார்கள், மௌனமாக இருக்கிறார்கள் என்று உடனடியாக அறிந்துகொள்ள முடியாது. ஆனால், சிறிது நேரம், அவரின் அருகே இருந்து கவனித்தால், அவர் உண்மையாகவே மௌனத்தில் இருக்கிறாரா? வாய்மூடி இருக்கிறாரா? என்பதை அறிந்துவிடலாம்.

எப்படி? இதற்கான விளக்கத்தை இந்த காணொளி வழியாக தெரிந்து கொள்ளலாம். மேலும், உங்கள் கேள்விக்கான உண்மையும் இந்த காணொளியில் கிடைக்கும்.

நாம் பேசாமல் இருந்தால் இறைவன் பேசுகிறானா? மௌனம் உண்மைவிளக்கம் அறிவோமா?#silence #divine

வாழ்க வளமுடன்

Kundalini Yoga is meant to be practiced for many years, but it's funny that it is available immediately and a lifetime is enough. Is it also a deception that you can learn without Vasiyogam? Can you explain how mindfulness works?


குண்டலினி யோகம் பல்லாண்டுகாலம் கற்க வேண்டும் என்பதுதான் முறை, ஆனால் உடனே கிடைக்கும் என்பதும், வாழ்நாள் போதும் என்பது வேடிக்கையாக இருக்கிறது. அதுவும் வாசியோகம் இல்லாமல் கற்கலாம் என்பதும் ஏமாற்றுவேலையோ? என்று நினைக்கத் தோன்றுகிறது. மனவளக்கலை எப்படி என்பதை விளக்குவீர்களா?

நீங்கள் இன்னமும் அந்தக்காலத்து மனிதராகவே இருக்கிறீர்கள் என்பது தெரிகிறது. உண்மையாகவே நீங்கள் உங்களை, இந்த நவீன காலத்திற்கு மாற்றிக் கொண்டீர்களா? இல்லையா? மற்றவர்களை பார்த்தாவது அந்த வாழ்வியல் மாற்றத்திற்கு வரவில்லையா? இன்னமும் பழமையில்தான் வாழ்கின்றீர்களா? என்று கேட்டால் உங்கள் பதில் என்ன? 

சித்தர்கள் வழங்கிய குண்டலினி யோகத்திலும், அவர்கள் வழியாகவே மாற்றமும், எளிய பயிற்சிகளும் வந்துவிட்டது. தீடீரென வேறு யாரும் குறுக்குவழியை, குண்டலினி யோகத்தில் தரவும் முடியாது. ஆனால் இந்த மாற்றங்கள் உங்களுக்கு தெரியவில்லை, உங்கள் வந்தடையவில்லை. அதனால் நீங்கள் இன்னமும் பழைய முறையைல், கடினமான வழியில், வீட்டை, நாட்டை, வேலையை, கடமையை, அடிப்படை தேவைகளை விட்டுவிட்டு, சந்நியாசி கோலம் கொண்டு, காட்டிற்கு போய்விட வேண்டும் என்ற காலத்திலேயே இருக்கிறீர்கள்! 

உண்மையை புரிந்து கொள்ள தயாராகுங்கள். குண்டலினி யோகம் என்ற  வார்த்தைதான், வேதாத்திரி மகரிஷியால், எளிய உண்மை அர்த்தம் தரும் ‘மனவளக்கலை’ என்றானது. இந்த, மனவளக்கலை என்பது பயிற்சி மட்டுமல்ல, அள்ள அள்ள குறையாத இயற்கை செல்வத்தை பெற்றிருக்கும் ஒரு பெட்டகம் ஆகும். அந்த செல்வத்தின் வழியாக, உங்களின் அன்றாட வாழ்க்கையையும் உயர்த்திக் கொள்ளலாம். உங்களுடைய பொருள்வளத்தையும் உயர்த்திக்கொள்ள தகுதியாக்கிக் கொள்ளலாம்.  எனவே, யோகத்தின் இணைவதால் என்னபயன்? என்ற கேள்விக்கு இடமில்லை.

தான் உயரவும், பிறரையும் உயர்த்தவும் ஏற்ற பயிற்சியும், தொண்டும் மனவளக்கலையில் அடங்கியுள்ளன. இதை நீங்கள் அடிப்படை பயிற்சியிலேயே தெரிந்து கொள்ளலாம். உங்கள் உடலை வளமாக்கும், எளியமுறை உடற்பயிற்சியை கற்றுத்தேரலாம். உயிரை வளப்படுத்தி, வாழும் நாளை சிறப்பாக்கிட, காயகல்பயோக பயிற்சி கற்றுக்கொள்ளலாம். குருவின் அருளாசியோடு தீட்சை பெற்று, தவம் கற்றுக் கொள்ளலாம். இத்தகைய மூன்று முக்கிய அம்சங்களும், உங்களுக்கு கிடைத்துவிடுகிறது.

இரண்டு வேளையும் ஆக்கினை, துரியம், சாந்தியோகம் தவறாமல் தவமியற்றி வாருங்கள். மன அமைதி, அறிவுக்கூர்மை, அறிவின் ஓர்மை, மன உறுதி இவையுண்டாகும்.

தற்சோதனையில் எண்ணங்களை ஆராயுங்கள். விழிப்பு நிலையில் அறிவு செயல்படும். நலம், தீது உணர் ஆற்றல் உண்டாகும். வேண்டாப் பதிவுகளை – வினைப் பதிவுகளை மாற்றி விடலாம். ஆசைச் சீரமைப்புப் பயிற்சி செய்யுங்கள். உடல் நலம், மனவளம், பொருள் வளம், நற்புகழ், நிறைவு இவை பெருகும். அமைதி உண்டாகும்.

சினம் தவிர்ப்புப் பழகுங்கள். குடும்பம், நண்பர்கள், தொழில் செய்யும் இடத்திலுள்ளோர், உற்றார் உறவினர் இவர்களிடம் உங்கள் அன்பு, நட்பு இவை பெருகும். இனிமையும், மகிழ்ச்சியும் உண்டாகும். கவலை ஒழிப்புப் பழகுங்கள். அச்சமின்மை, மெய்யுணர்வு, உடல் நலம், மனநிறைவு இவையுண்டாகும்.

நான் என்ற ஆராய்ச்சியில் தெளிவு பெறுங்கள். பேரியக்க மண்டலம், தோற்றம், இயக்கம், விளைவு, அனைத்து மறை பொருட்கள், மனம், உயிர், மெய்ப்பொருள் உணர்வு உண்டாம்.

இவ்வளவு பயிற்சியும், பழக்கமும் இணைந்த ஒரு வாழ்க்கை நலக் கல்வியே ‘மனவளக்கலை’ ஆகும். இக்கலையை எளிய முறையில் கற்கும் பேறு பெற்றிருக்கிறீர்கள். இக்கலையின் மாண்புணர்ந்து பழகி நலம் பெற்று மனதில் நிறைவு பெறுங்கள். மனநிறைவைப் பெற்று விட்டால், அறிவு மேலும் உயர்ந்து சிறந்து விளங்கும். பிறவியின் நோக்கம் வெற்றி பெறும். இத்தகைய உயர் வாழ்வுக்கு ஏற்ற ஒரு பெட்டகம் மனவளக்கலை என்பதில் ஐயமில்லை. 

இத்தகைய மாற்றம், எத்தகையோ பிறவிவழியாக நாம் கைவிட்டுவிட்டோம் என்பதே உண்மை. இன்று, இப்பொழுது கிடைத்த வாய்ப்பை நழுவ விடலாமா? உடனே கைக்கொண்டு, நமக்கு பயனாக்கிக் கொண்டு, நம் பிறவியின் நோக்கத்தையும், கடமையையும் நிறைவேற்றிட வேண்டும். உங்களை வாழ்த்தி மகிழ்கிறேன்.

வாழ்க வளமுடன்.

-

Do we need these planets and stars when we try to know God in the form of meditation and penance in yoga? So Astrology and horoscopes are not necessary. Our yogic journey is beyond all that. Vedathri Maharshi would have risen accordingly. If that is the case, is your karmic astrological analysis wrong? What is your response to this?


வாழ்க வளமுடன் ஐயா, யோகத்தில் தியானம் தவம் என்ற வகையில், இறைவனை அறியமுயற்சிக்கும், நமக்கு இந்த கிரகங்கள், கோள்கள், நட்சத்திரங்கள் அவசியமா? ஜோதிடம், ஜாதகம் என்பதும் தேவையில்லை தானே? அதையெல்லாம் கடந்த ஒரு நிலையில்தான் நம்முடைய யோக பயணம் இருக்கிறது. வேதாத்திரி மகரிஷியும் அதன்படிதானே உயர்ந்திருப்பார். அப்படி இருக்கும்பொழுது, உங்கள் கர்ம வினை ஜோதிட ஆய்வு தவறுதானே? இதற்கு உங்கள் பதில் என்ன?




உண்மை அறியாத நிலையில் இருந்து பார்த்தால், உங்கள் கேள்வி, மிகச்சரியான பார்வையாகவே தோன்றும். ஒருகாலத்தில், அதாவது நானும் என்னுடைய பருவ வயதில், வேதாத்திரிய தீட்சை பெற்ற காலங்களில், இப்படியாக நினைத்தது உண்டு. வேதாத்திரியத்தில் நுழைவதற்கு முன்பாகவே, ஜோதிடம் குறித்த அனுபவத்தையும், எப்படி பலன் அறிவது என்பதையும் கற்றுக்கொண்டிருந்தேன் என்பதும் உண்மை.

அதனால், நீங்கள் சொல்லுவது போலவே, நாம் கிரகங்கள், நட்சத்திரங்கள், மொத்தமான இந்த பிரபஞ்சம் என்ற எல்லை கடந்து, வெட்டவெளி என்ற இறைத்தன்மையை அறிந்து கொண்டிருக்கிறோமே?! இனி இந்த கிரகங்கள், ஜோதிடம், ஜாதகம் நம்பனுமா? என்று சிந்தித்திருக்கிறேன். அதுகுறித்து பேசியும் இருக்கிறேன். என்னுடைய மூத்த, மனவளக்கலை அன்பர் ஒருவரோடும் கலந்து பேசியிருக்கிறேன். அப்போதே அவர், ‘அப்படி இல்லை’என்று மறுதலித்தார். அதற்கு மேல் அவர் விளக்கம் அளிக்கவில்லை.

ஆனால், தொடர்ந்த என் ஆராய்ச்சியில், வேதாத்திரி மகரிஷின் பிரபஞ்ப பரிணாமும், உயிரின பரிணாமும் தலைப்பிலான, தத்துவ விளக்கத்தைக் கேட்டு, எனக்குள் அதை உணர்ந்தபொழுது, உண்மை அறிந்தேன். அதன்வழியே கிடைத்த விளக்கத்தை, என்பார்வையில் சுருக்கமாக தருகிறேன். உங்களுக்குப் புரியும் வகையில் தருவது கடினமே. எனென்றால், இதை பாடமாக தந்தால் கூட, அவ்வளவு எளிதில் புரியாது. எனினும் முயற்சிக்கிறேன்.

நீங்களும், நானும், தீடீரென்று வந்துவிடவில்லை. மாயாஜாலம் போல, யாரோ உருவாக்கி, இவ்வுலகில் விட்டுவிடவும் இல்லை. வெட்டவெளி என்ற இறைதன்மையில் இருந்து, பரமாணு உருவாகி, அது கூடி விண் என்ற பஞ்சபூத முதல் தோற்றமாகி, அதன்வழியே, மற்ற நான்கு தோற்றமாகி, கூடிக்கலந்து பிரிந்து, தோற்றங்களாக பிரபஞ்சத்தில் உலவும் கோள்கள், கிரகங்கள், நட்சத்திரங்களாகி, அதிலே ஒரு பூமியாகி வந்து நின்றது. இதுவரை நடந்த பிரபஞ்ச பரிணாமம் கடந்து, அந்த பூமியில் உயிரின பரிணாமம் நிகழ்ந்து, அந்த வழியில் ஆறாம் அறிவுநிறைந்த மனிதனாக நாம் மலர்ந்தோம்.

இத்தனை வரிசைகளை விட்டுவிட்டு, புறவழிச் சாலை (ByBass) வழியாக, நேரடியாக இறைநிலை அடைய வழியில்லை. மனிதனும், கோள்களும் அடிப்படையில் அணுக்களே. எனில், கோள்களின் அதிர்வுகள், மனிதனை வந்தடையும் என்ற உண்மையும் இருக்கிறதே?! மேலும் மனிதனின் ஆயுள் அற்பம். அதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். மனிதன் வாழ்வது, புவி என்ற சூரியனை சுற்றிவரும் மூன்றாவது கோளில் தானே? புவிக்கு துணையாக சந்திரன் என்ற கோளும் உண்டு. மூலமான சூரியனும் உண்டு. சூரியன் சந்திரன் ஒளியலைகளும் நம்மை வந்தடைகிறதே? இதை கணக்கில் கொண்டு கணிக்கும், ஜோதிடம் பொய்யாகுமா?

குழந்தை பிறக்கும் நேரத்தில், பிரபஞ்சத்தில் உள்ள நட்சத்திரம், கோள்களின் நிலை அறிவதே ஜாதகம். அதுஒரு குறிப்பேடு. அதை மறுக்கமுடியாது. விதைக்குள் அடங்கி இருக்கும் உண்மைகள் போலவே நமக்குள் சில ரகசியங்கள் உண்டு. அதை விளக்கிடும் ஒரு முயற்சியே ஜோதிடக்கலை. உண்மை திரிந்து போனது காலத்தின் கோலம்.

எனவே ஜோதிடம், ஜாதகம், என்பது தொடங்கி, கிரகங்கள், கோள்கள், நட்சத்திரங்கள், எல்லாம் உண்மையும், சரியானதும் ஆகும். வேதாத்திரி மகரிஷி ஜோதிடத்தை மறுக்கவில்லை. அதை மற்றவர்களின் பார்வைபோல, ஆதரிக்கவும் இல்லை. ஆனால், உண்மையை விளக்கி இருக்கிறார். அதனால்தான், பஞ்ச பூத நவக்கிரக தவம் என்பதையும் நமக்கு வடிவமைத்தார். அந்த வழியில்தான், நானும், ஜோதிடம் வழியாக கர்ம வினை அறியும் ஆய்வையும் நடத்தி வருகிறேன். அதன் வழியாக பலரும் நன்மை அடைந்திருக்கிறார்கள் என்பதும் உண்மை.

மேலும் நேரடியான உண்மைகளை, உங்களுக்கு தரவேண்டும் என்ற ஆர்வத்தால், வேதாத்திரி மகரிஷியே விளக்கும் உண்மைகளை காணொளியாக தருகிறேன். உண்மை அறிந்து கொள்ளுங்கள்.

வேதாத்திரிய வானியலும் சோதிடமும் - Cosmology and Astrology by Vethathiriya ( 3 Videos on this Playlist)
வாழ்க வளமுடன்.
-

In what way does Vethathiriyam support life? So what's so special about it? Isn't it a collection of spiritual truths that have already been told by many? How can it be right to call it Vethathiriyam? Are you deceiving people?


வேதாத்திரியம் எந்த வகையில் வாழ்க்கைக்கு துணை நிற்கிறது? அப்படியென்ன அதில் சிறப்பு இருக்கிறது? ஏற்கனவே பலரும் சொன்ன ஆன்மீக உண்மைகளின் தொகுப்புத்தானே? அதை வேதாத்திரியம் என்று சொல்லிக் கொள்வது எப்படி சரியாகும்? மக்களை ஏமாற்றுகிறீர்களா?


இந்த கேள்வியை வரவேற்கிறேன். வேதாத்திரியம் குறித்து சராசரி பதிவாக சொல்லுவதற்கு மாறாக, இப்படியான கேள்விக்கு பதில் தரும்பொழுதுதான், சிறப்பான உண்மையை எல்லோரும் புரிந்து கொள்ள முடியும். வேதாத்திரியம் என்பது, வேதாத்திரி மகரிஷி அவர்கள், மெய்ப்பொருள் உண்மையை உணர்ந்தறிந்த, தன்னுடைய முப்பத்தைந்து வயது முதல், தொன்னூற்றி ஆறு வயது வரை, உலக மக்களை, ஆன்மீகத்தில் உயர்வடையச் செய்து, இன்பம், பேரின்பம், அமைதி என்ற வகையில் வாழ்வதற்கு வழிவகை செய்தவர் ஆவார். இன்னமும் அவருடைய சேவை, என்னைப்போன்ற ஆசிரியர்களால் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது.

நீங்கள் சொல்லுவதுபோல, ஆன்மீக உண்மைகள் பல, இந்த உலகில் இருக்கின்றன. ஆனால் அவை எல்லாம் சிதறிப்போய், உண்மை பலவாறாக திரிந்து போய்விட்டது. காரணம் எடுத்துச் சொல்லுபவர்கள், படித்திருக்கிறார்களே தவிர, உணர்ந்தறிந்தவர்கள் இல்லை. அப்படி இருந்தாலும் அவர்கள், மிகக் குறைவே. இதனால், யார் யாரோ, ஆன்மீகத்தின் வழியாக, உண்மை சொல்கிறேன் என்று, ஒப்பித்து, மக்களை, குறிப்பாக உங்களை ஏமாற்றிவிட்டார்கள்.  இந்த கேள்வி கேட்கும் நீங்களே ஏன் இந்த சேவையை, மக்களுக்குத் தரக்கூடாது? உங்களுக்குத்தான், பலரும் சொன்ன ஆன்மீகத்தின் தொகுப்புக்கள் குறித்த விபரங்கள் தெரிந்திருக்கிறதே? அந்த தகுதி போதுமே? அதைவிட்டுவிட்டு, வேதாத்திரியத்தை குறை சொல்வானேன்?

பக்தி, ஆன்மீகம், விஞ்ஞானம் என்று திசைக்கொன்றாக, பிரிந்துபோய், உண்மையறியாமல், வாழ்க்கைச்சூழலில் சிக்கித்தவித்த மக்களுக்கு, விளக்கம் அளித்திடவே, தான் அறிந்த மெய்ப்பொருள் உண்மையை விளக்கிட, உலக சமுதாய சேவா சங்கம் என்பதை துவங்கி, தன்னுடைய பயிற்சிகளை, முப்பத்தைந்து வயதிலேயே தொடங்கிவிட்டார். கவனிக்கவும், மெய்பொருள் உண்மையை நன்கு விளங்கிக் கொண்ட பிறகுதான். ஏதோ படித்தோம், பகிர்வோம் என்றில்லை.

தன்னுடைய அனுபவ விளக்கத்தை, மிகத்தெளிவாக வேதாத்திரி மகரிஷி பதிவு செய்கிறார். பக்தி கடந்த உண்மையே ஞானம் என்று வலியுறுத்துகிறார். எனினும் பருவத்திற்கு முன்பு வரை, பக்தி அவசியம் என்றும் சொல்லுகிறார். பருவம் வந்த அனைவருமே, பிரம்மஞானம் என்ற மெய்ப்பொருள் தத்துவம் அறிந்து கொள்ள பயிற்சி வடிவமைத்தார். சித்தர்களின் வெட்டவெளி தத்துவத்தை, வற்றாயிருப்பு, பேராற்றல், பேரறறிவு, காலம் என்ற வளம் கொண்டதாக தெரிவிக்கிறார். காந்த தத்துவத்தையும், பிரபஞ்ச பரிணாமத்தையும், உயிரின பரிணாமத்தையும், உங்கள் விஞ்ஞானத்தின் துணை கொண்டும் விளக்குகிறார். நான் யார்? என்ற கேள்விகான விடையை அறியத்தருகிறார். உண்மையை அறிய திணறும் விஞ்ஞானத்திற்கு, வழியும் காட்டுகிறார். அவ்வுண்மைகளை, உலக விஞ்ஞானிகள் கூட்டத்திலும் பகிர்ந்திருக்கிறார்.

நீங்கள் உங்கள் அறிவில், எல்லாம் ஏற்கனவே இருப்பதுதானே? இருந்தது தானே? என்று நினைத்தால் அது உங்களின் அறியாமை. எனினும், வேதாத்திரியத்தில் இணைந்து, இதையெல்லாம் தெரிந்து கொள்ளுங்கள் என்று நான் அழைக்கமாட்டேன். அது உங்கள் விருப்பம். உங்களின் உரிமை. ஆனால், விளக்கத்தை உங்களுக்குச் சொல்லவேண்டியது என்னுடைய கடமை. இங்கே ஒரு அன்பரின் வாழ்க்கை அனுபவ குறிப்பு காணொளி பதிவு, மற்றொரு புரிதலை உங்களுக்குத் தரலாம். 

உறவுகளோடு இனிய வாழ்க்கைக்கு வேதாத்திரியம் - pleasant life with relatives by Vethathiriyam

வாழ்க வளமுடன்.

-

Who are Siddhars? Why is it that only Tamil Siddhas are spoken of? Are there still Siddhas? How useful is their support to us? Will you explain?


வாழ்க வளமுடன் ஐயா. சித்தர்கள் என்பவர் யார்? அது ஏன் தமிழக சித்தர்கள் மட்டுமே உயர்வாக பேசப்படுகிறார்கள்? இன்னமும் சித்தர்கள் இருக்கிறார்களா? அவர்களின் துணை நமக்கு எந்த அளவில் பயன்படுகிறது? விளக்குவீர்களா?



இந்த உலகில், பல்லாயிரம் ஆண்டு பரிணாம எழுச்சியில், இயற்கையின் உன்னதமாக, முழுமை வடிவமாக வந்த அமைந்த ஒரு ஜீவ, உயிரினம்தான் மனிதன். மனிதன் திடீரென வானத்தில் இருந்து குதித்துவிடவில்லை. யாரும் ஒருநாளில் உருவாக்கிடவும் இல்லை. ஒரு பெரிய மரத்தின் மூலம், சிறிதாக, அணுவாக இரு விதைக்குள் இருந்ததுதானே? அதுபோலவே மனிதனின் மூலமும், அணுவில் இருந்துதான் தொடங்கியது. அந்த அணு ஒருசெல் உயிரியாக மலர்ந்து, ஒர்ரறிவு தாவரமாக மலர்ந்து, ஐந்தறிவு விலங்கினங்களாக உயர்ந்து, அந்த அறிவு வேட்கை நின்றிடாமல், முழுமைபெற துடித்து, பல்வேறு பிறவிகளுக்கு அப்பால் வந்ததே, மனிதப்பிறவியாகும். ஆறாம் அறிவில் முழுமைபெற்று, தன் மூலம் நோக்கி நகர்ந்து நின்றவனே மனிதன்.

இந்த தற்கால, நவீன விஞ்ஞானம் சொல்லும் முன்பாகவே, மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, சித்தர்கள் கண்டறிந்தனர். சும்மா வெறுமனே யூகமாக அவர்கள் சொல்லவில்லை. சித்து என்ற உயிரின் மூலம் எது? என்று தேடி அதை முழுமையாக அறிந்ததனால்தான், சித்தர்கள் என்றும் அழைக்கப்பட்டனர். மனித பிறப்பின் ரகசியமும், நான் யார்? என்ற தேடல் முழுமையும், பொருளுக்கும், உயிருக்கும், இயற்கைக்கும், பிரபஞ்சத்திற்கும், மூலமாகவும் இருந்து, இயக்கிக் கொண்டும் இருக்குமந்த, மெய்ப்பொருளையும் கண்டார்கள்.

தன் ஆரம்ப புள்ளியை, அதில் கண்டு, உண்மை அறிந்து அதுவே மனித பிறப்பின் நோக்கமும், முடிவும், கடமையும் என்று, உலக மக்களுக்கு அறியத்தந்தார்கள். விரும்பியோர்க்கு யோகமாகவும், எளியோருக்கும், பாமரரருக்கும் பக்தியாகவும் தந்தார்கள். 

சித்தர்கள், தங்களை ஒழுக்கம், கடமை, ஈகை வழியாக, உலகோர்க்கும் சேவை செய்வதையே முழுமையாக்கிக் கொண்டார்கள். இன்றும் பலப்பல சித்தர்கள் இருக்கிறார்கள். ஆனால், நீங்களும் நானும் நினைப்பதைப்போல அவர்கள் தங்களை வெளிக்காட்டிக் கொள்வதில்லை. இப்படியான சித்தர்களை தமிழ்நாடு கொண்டது, மிகச்சிறப்பு. தமிழ்நாட்டின் காலநிலையும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது. சித்தர்களால், நாம் பெருமைமட்டும் அடையவில்லை. வாழ்வின் முழுமையையும் அடைகிறோம்.
 
இந்த காணொளி வழியாக இன்னும் பல தகவல்களை அறிந்து கொள்வோம்.

தமிழக சித்தர்களின் கடவுள் தேடல்! The search for God by the Siddhars of Tamil Nadu! Part 01
வாழ்க வளமுடன்.
-

I have a passion for yoga. However, I haven't gotten into that yet. For, as far as I can see, there is only lies and distortions about yoga here. That's why I'm not interested in learning. Can you tell me which is the best way of yoga? Maybe I should just pass it on? What will happen to me?


ஐயா. எனக்கு யோகம் குறித்த ஆர்வம் உண்டு. எனினும் அதில் நான் இன்னும் இறங்கிடவில்லை. ஏனென்றால், நான் பார்த்தவரையில், இங்கே யோகம் குறித்து பொய்யும் புரட்டும்தான் இருக்கிறது. அதனாலேயே கற்றுக்கொள்ள ஆர்வமும் இல்லை.  நல்ல சிறந்த யோகவழி எது என்று சொல்லுவீர்களா? ஒருவேளை அப்படியே நான் கடந்துபோய்விடுவது நல்லதா? எனக்கு என்ன பாதிப்பு வரும்? விளக்கம் தருக.


இந்த கேள்வி கேட்டதற்காக உங்களை பாராட்டுகிறேன். உங்களைப்போலவே பலரும் இங்கே இருக்கிறார்கள். அவர்களின் தாத்தா, பாட்டி, உறவினர் சொல்லக்கேட்டு, பக்தி கடந்த யோகத்தில் ஆர்வம் வருவதுண்டு. அந்த பெரியவர்களே அதை தேடமுடியாமல், கைவிட்டுப்போனதை, உங்களுக்கு கடத்திவிட்டார்கள். நீங்களும் அவர்கள் சொன்ன அதே போன்ற, எதிர்பார்ப்பில், இப்போதும் யோகத்தை தேடுகிறீர்கள். அவர்கள் சொன்ன யோகம் எப்படிப்பட்டதென்று ஓரளவில் என்னால் யூகிக்க முடியும். எனினும் அதை இங்கே விளக்கிட வேண்டியதில்லை.

ஒரு ஆப்பிள் என்ன சுவை தரும் என்பதைக்கொண்டு, ஒரு கூடை ஆப்பிளையும் தீர்மானிக்க முடியாது. அதில் அதிக இனிப்பும் இருக்கலாம், புளிப்பு, கசப்பு சுவை கொண்டதும் இருக்கலாம். ஆனால் இதற்காக, ஒரு கூடை ஆப்பிளையும் ருசி பார்த்திடவும் முடியாது. அது காலவிரயம் என்பதோடு, வயிற்றுக்கும் கெடுதல். அதுபோலவே, யோகம் பல்வேறு நிலைகளில், பல்வேறு மகான்கள், ஞானிகள், யோகிகள் வழியாக வழங்கப்பட்டு வருகிறது. எல்லோருக்கும் நோக்கம் ஒன்றுதான். ஆனால் பாதைகள் வேறு. இதில் எது சிறந்தது என்று நான் கூறவேண்டிய அவசியமும் இல்லை. நான் வேதாத்திரியத்தில் இருப்பதால், அதை கடைபிடிப்பதால், அதுவே சிறந்தது என்றும் சொல்லிவிட மாட்டேன். என்னளவில் அது சிறப்பு அவ்வளவுதான். நீங்கள் எதை தேர்ந்தெடுத்தாலும் அதில் கொஞ்சகாலம், பயணிக்கவும் வேண்டும். பிறகுதான் அது சரியான பாதையா? என்பதை நீங்கள் தீர்மானிக்க முடியும். நானே உங்கள் கையைப்பிடித்து, ‘வேதாத்திரியத்திற்கு வாருங்கள்’ என்று அழைப்பது முறையல்ல.

யோகசாதனை அமைப்புக்கள், வேதாத்திரியத்திற்கு முன்பாக பல இருந்தன, வேதாத்திரியத்திற்கு பின்பாகவும் பல இருக்கின்றன. இதுதான் காலத்தின் நியதி. உங்கள் விருப்பம், தேர்வு, அதில் கிடைக்கும் அனுபவம் ஆகியன மட்டுமே, சிறந்தது எது என்று தீர்மானிக்கும். எனவே என்னிடம் கேட்கவேண்டாம். நான் சொல்லவும் தயாரில்லை.

யோகம் குறித்த விளக்கங்களில் பொய்யும் புரட்டும் தருகிறார்கள் என்றால் அவர்கள் அதில், ஆழ்ந்து போகவில்லை என்பதுதான் குறை. ஏதோ நூல்களில் படித்ததையும், சினிமாவில் பார்த்ததையும், புராண கதைகளை கேட்டும், பிறர் சொல்லக்கேட்டும் இவர்களாகவே, இட்டுக்கட்டும் கதைகள் உண்டு. ‘மாஸ்டர் ஆஃப் ஆல் சப்ஜெக்ட்’ என்ற ரீதியில் புட்டுபுட்டு வைப்பார்கள். இவர்களையும், இவர்கள் கருத்துக்களையும் புறம் தள்ளுவதே நல்லது. இவர்களைப்பார்த்து, உங்களுக்கு சூடு வைத்துக்கொள்ள தேவையில்லை. உண்மை எது என்று தேடுங்கள். ஆர்வத்தை இதனால் தொலைக்காதீர்கள்.

ஏதோ சிறிதளவாவது யோகம் என்பதை அறிந்த நீங்கள், இந்த பிறப்பை வீண் செய்வதில் அர்த்தமில்லை. பிறவியின் நோக்கமும், கடமையும் தீராமல், உங்கள் பிறவி முழுமை அடைவதில்லை. வாழும் காலம் போதுமானது. அதை தேடுதலில் வீணாக்காமல், விருப்பமான ஏதோ ஒரு யோகசாதனையில் இணைந்துகொள்க. கற்றுக்கொண்டு பயன்பெறுக. அது உங்களுக்கு திருப்தி இல்லை என்றால், தெரிந்த அளவில் உள்ள அனுபவத்தால், மிகச்சிறந்த இன்னொரு யோக சாதனையை பெற்றுக்கொள்ள தயாராகுங்கள். இதில் எந்த இழப்பும் இல்லை. இழப்பின் வழியாக, மிகச் சிறந்ததை அடைகிறீர்கள் என்பதுதான் முக்கியம். அந்தவகையில், வேதாத்திரியாவையும் ஒருகை பார்த்துவிடுங்களேன். சரியா?

கூடுதலாக இந்த காணொளி பதிவு உங்களுக்கு உதவலாம்.

யோகம் குறித்த பதிவுகளை நான் தவிர்ப்பது ஏன்? Why do I avoid the any posts on yoga?

வாழ்க வளமுடன்

-

There is no need to worry about exercising so much. Isn't this a common thing? If you are interested, let them do it. Why provoke people to say it so often? What is the need for that?


உடற்பயிற்சி செய்வதை இவ்வளவு பெரிதாக அலட்டிக்கொள்ள தேவையில்லை. இது பொதுவான விசயம் தானே? ஆர்வமிருந்தால் செய்து கொள்ளட்டும். அதை ஏன் அடிக்கடி சொல்லி மக்களை தூண்டவேண்டும்? அப்படி என்ன அவசியம்? அதில் உங்களுக்கு என்ன கிடைக்கப்போகிறது? கேள்வி தவறென்றால் மன்னிக்கவும்.




ஒரு கேள்வி எப்போதுமே தவறாக இருக்கமுடியாது. அந்த கேள்விக்கான பதில்தான் தவறாக இருக்கும் என்பது பொதுவானது. எனவே நிச்சயமாக இந்த கேள்வியை எடுத்துக்கொண்டு, அதற்கான பதிலை தருகிறேன்.

நீங்கள் மனவளக்கலை அன்பராகவும் இருக்கலாம், பொதுவான அன்பராகவும் இருக்கலாம். அது பிரச்சனையில்லை. ஆனால் உடற்பயிற்சியால் என்ன நிகழ்கிறது? என்பதை மேலோட்டமான அறிவாக மட்டும் கொண்டிருக்கிறீர்கள் என்பது நன்றாகவே தெரிகிறது. முக்கியமாக, உடற்பயிற்சி என்பது, ஒவ்வொருவருக்கும் அவசியம் தேவை. அதிலும், இந்த உலகில் நன்றாக வாழ நினைக்கும் அனைவருக்குமே தேவையும் அவசியமும் ஆகும். உண்மையாக, உடற்பயிற்சி என்பது, ஏதோ ஒருவர் மற்றவருக்காக செய்யும் பயிற்சி அல்ல.

தன்னுடைய உடலுக்கு, உடலுறுப்புகளுக்கு ஊக்கம் தந்திடும் ஒரு செயல், 24 மணி நேரத்தில் சில நிமிடங்களை, உடற்பயிற்சியில் செலவழிக்கலாம். அதில் ஒரு இழப்பும் இல்லை. அதிகாலை உடற்பயிற்சி என்றால், அன்றைய நாள் முழுவதுக்குமான சக்தியாற்றல் கிடைத்துவிடுகிறது. உற்சாகமாக இரவு வரை, இயல்பாகவும் இருக்க முடிகிறது. இரவில் நல்ல தூக்கமும், அதுபோலவே அதிகாலை விழிப்பும் வந்துவிடுகிறது. இது உடற்பயிற்சி செய்துவருகின்ற ஒவ்வொரு அன்பரின் அனுபவமே ஆகும்.

மனித வாழ்வில், அவனுடைய ஆயுட்காலம் தனியாக யாருமே கணித்திட முடியாது. வாழும்வரை, இருக்கும்வரை, இயற்கைக்கு முரண்படாமல் வாழவேண்டும் அல்லவா? முரண் எங்கே எழுகிறது? இந்த இயற்கை அமைப்பை மீறிடும் பொழுது வருகிறது. 

உங்களை விட, உங்கள் உடலுக்கும் உடல் உறுப்புகளுக்கும், இயற்கையோடு இணைந்து செயல்படும் தன்மையும், அறிவும் உண்டு. ஆனால், நீங்கள்தான் உங்கள் விருப்பத்தின் வழியால், ஆர்வத்திலும், செயல்பாட்டிலும் அந்த ஒழுங்கமைப்பை கெடுத்துவிடுகிறீர்கள். இதனால் உங்கள் உடலின், உடல் உறுப்புக்களின் கட்டமைப்பு குலைந்து விடுகிறது. ஒரு நாளின் உணவு முறை, உடல் இயக்கம், தூக்கம் எல்லாம் மாற்றிவிடுகிறீர்கள். இதனால் உங்கள் உள் கட்டமைப்பு சிதறுகிறது. உடலுக்கும் மனதிற்கும் உள்ள ஒத்துழைப்பும் தடுமாறுகிறது. இப்படியான நிலை வந்துவிட்டால், மனிதனின் வாழ்நாள் குறுகிவிடும். அதனால், உங்கள் பிறப்பின் நோக்கம், கடமை அறியமுடியாது என்பதுதான், தன்னையறிந்த சித்தர்கள், யோகியர்கள், மகான்கள் ஆகியோரின் வார்த்தைகளாகும். அதனால்தான் உடற்பயிற்சியை, முதல் பாடமாக வைத்தார்கள்.

இப்பொழுது உங்களுக்கு உண்மை தெரியவரும் என்று நினைக்கிறேன். இதனோடு, இந்த காணொளியும் நல்ல விளக்கத்தை தரும். இதோ அதன் இணைப்பு...

எளியமுறை உடற்பயிற்சி வழியே நிறைவேறும் பிறப்பின் நோக்கம் என்ன? உண்மை ரகசியம் - Purpose Truth Secret


வாழ்க வளமுடன்
-

Sir, the burden of my anxiety seems to be increasing every day. Due to this, I could not concentrate on any work. Is there a solution to this?


ஐயா, ஒவ்வொரு நாளும் என் கவலையின் சுமை கூடிக்கொண்டே இருப்பதாக தெரிகிறது. இதனால் எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியவில்லை. இதற்கு தீர்வு உண்டா? எந்தெந்த வகையில் என் கவலையை போக்கமுடியும்? எனக்கு விளக்கம் தருக.

கவலை என்பது மனிதர்களின் அடிப்படை குணங்களில் ஒன்றாக அமைந்துவிட்டது. நீங்களும் நானும் இன்னும் பலரும் அந்த வரிசையில்தான் இருக்கிறோம் எனலாம். எனினும் இந்த கவலை என்பது, நிஜமாகவே மனிதனின் அடிப்படை குணமா? என்று கேட்டால் அதற்கு பதில், ஆமாம் என்று சொல்லுவதற்கில்லை. மகிழ்ச்சி, பயம், நிறைவு, சினம் என்ற இயற்கை குணங்களோடு, கவலை,  ஏக்கம் என்று சில கலந்துவிட்டது. நாமும் அதை விட்டுவிடுவதாக இல்லை.

இப்போதெல்லாம் குழந்தைகளுக்கே கவலை வந்துவிட்டது. aவர்களும் நமக்கு போட்டியாக கவலையை எடுத்துகொண்டுவிட்டார்கள். நமக்கு பெரிய பெரிய என்றால், அவர்களுக்கு அவர்களளவில் சிறிய சிறிய என்பதாக இருக்கிறது. இந்த கவலை குறித்து வேதாத்திரி மகரிஷி, தனியாக பாடமே அமைத்துவிட்டார். அதுதான் தற்சோதனை எனும் அகத்தாய்வில் ‘கவலை ஒழித்தல்’ என்று வைத்திருக்கிறார். கவனியுங்கள். கவலையை தீர்த்தல் அல்ல, ஒழித்தல் ஆகும்.

இந்த கவலை குறித்து எந்த ஆன்மீக, யோக பெரியோர்களும் தனியாக சொன்னதில்லை. இறையிடம், மெய்ப்பொருளிடம் முறையிடு. தீரும் என்றுதான் சொல்லுகிறார்கள். வேதாத்திரி மகரிஷியோ அதை, அந்த கவலையை ஆராய்ந்து அலசிப்பார் என்கிறார். அதை வகைப்படுத்தி புரிந்து கொண்டு, விளக்கம் பெற்று கவலையை ஒழித்துவிடு என்று அறிவுறுத்துகிறார்.

உங்கள் கவலை எத்தகையது என்பதை, உங்கள் கேள்வியிலேயே தெரிந்துவிடுகிறது. ஆனால் எதனால் அது ஆரம்பமாகிற்று? என்பதை தனியாக நீங்கள் மட்டுமே அறிவீர்கள். எனினும். அந்த கவலையை தீர்க்க, இல்லையில்லை ஒழிக்க வழி உண்டு. மனவளக்கலையில், நீங்கள் கவலை ஒழித்தலை பாடமாகவும் படிக்கமுடியும். கட்டுரையாகவும் படிக்கமுடியும். உங்களிடம் உள்ள மனவளக்கலை புத்தகம், பாகம் ஒன்றில், இருக்கும் ‘கவலை ஒழித்தல்’ தலைப்பிலான பதிவை படித்துப்பாருங்கள். கூடுதலாக. இந்த காணொளி உங்களுக்கு உதவலாம்.

மன ஆற்றலை, நம்பிக்கையை அகற்றும் கவலை தேவையா? 

வாழ்க வளமுடன்.

-

How Even if we see a Gnani or a Guru who has realized the truth, the mind becomes calm?


ஐயா,  உண்மை உணர்ந்த ஞானியை பார்த்தாலும், குருவை பார்த்தாலும் நமக்கு, ஏதோ பாரம் நீங்கியதுபோல தோன்றுவது எப்படி? மனம் அமைதியாகி விடுகிறது. ஏதேனும் சக்தி அவர்களிடம் இருந்து வெளிவருகிறதா? விளக்கம் தருக.


நல்லவேளையாக, அதை உணர்ந்திருக்கிறீர்கள் என்பது மகிழ்ச்சி. பெரும்பாலோருக்கு அப்படியான அனுபவம் கிடைப்பதில்லை. ஒரு இசை நன்றாக இருக்கிறதா? இனிமையானதா? அது மகிழ்ச்சியை ஊக்குவிக்கிறதா? என்பதை இசையை ரசிக்கும் பொழுதுதான் அறியமுடியும். என்னமோ சத்தம் கேட்கிறது, இரைச்சலாக இருக்கிறது, என்று கடந்து போகும் மனிதர், அந்த இசையின் இனிமையை அறிவாரா? இல்லைதானே? அதுபோல, ஞானியை, குருவை பார்க்கும் பொழுது அத்தகைய மன நிலைக்கு, பார்ப்பவரும் வரவேண்டும். பரபரப்பாக, சுடுதண்ணீரை காலில் ஊற்றியதுபோல என்று சொல்லுவார்களே, அப்படி இருந்தால் எப்படி இந்த மாற்றத்தை அறியமுடியும்?

உண்மை உணர்ந்த ஞானி, உயர்ந்த குரு இவர்களின் மனம், மிக மிக அமைதியாக இருக்கும். இறைநிலையோடு ஒன்றிவிட்ட தன்மையிலும், பேரானந்த நிலையிலும் இருக்கும். அதனால் அவர்களைச்சுற்றி ஒரு நல்ல சக்தி ஓட்டம் இருக்கும் என்பது உண்மை. வேதாத்திரியத்தில் இருப்பவர்கள் இதை ‘ஜீவகாந்தம்’ என்று எளிதாக அறிந்திட முடியும். இந்த ஆற்றல் செழுமையாக, வளம் குறையாததாக அவர்களிடம் இருக்கும். அது நமக்கு தேவையான அளவில் கிடைக்கும். நமக்கு ஊடுறுவி நிற்கும். நம்முடைய உடலுக்கும், மனதிற்கும் அத்தகைய ஆற்றல் தேவை. எனென்றால், பல வழிகளில் நாம் அந்த சக்தியை இழந்து விடுகிறோம் அல்லவா?

இப்படியான, முற்றுணர்ந்த ஞானி, உயர்ந்த குரு ஆகியோரிடம் இருக்கின்ற சக்தியாற்றலை, ஆரா என்று அழைக்கிறார்கள். புத்தர் பெருமகானுக்கு, கிட்டதட்ட ஒருமைல் தூரத்திற்கு, அந்த ஆரா பரவி இருந்தது என்று சொல்லுகிறார்கள். கெட்ட எண்ணங்களோடு அந்த, சக்தியாற்றல் வளையத்திற்குள் வரும் ஒருவன், உடனடியாக நல்லவனாக மாறிவிடுவான் என்றும் சொல்லுகிறார்கள். இது உண்மையும், நிகழக்கூடியதுமாகும்.

போலியான ஞானி, குருவைப்போல வேடம் தரித்த வேடதாரி, இவர்களை அடையாளம் கண்டு கொள்ளவும் பழகவேண்டும். தோற்றத்தை வைத்து, கையெடுத்து கும்பிடுவதும், காலில் விழுவதும் நல்லதில்லை. உங்கள் சக்தியை அவர் வாறி எடுத்துவிடவும் கூடும். இந்த ஆரா குறித்த மேலும் பல உண்மைகளை, இந்த காணொளி வழியாக அறியலாமே!

ஆரா என்பது என்ன? ஜீவகாந்தத்தோடு தொடர்புடையதா? What is Aura? Is it Related to Bio-Magnetism?

வாழ்க வளமுடன்.

Thoughts are always running through me. I couldn't control it. Is this good? Bad?


ஐயா, எப்போதும் எனக்குள் எண்ணங்கள் ஓடிக்கொண்டே இருக்கின்றன. என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. இது நல்லதா? கெட்டதா? எப்படி இதை சரிசெய்து கொள்வது?


எண்ணம் என்பது இயற்கையானது. இயல்பானது. இன்னும் தெளிவாக சொல்லுவதானால் உயிர்ப்பானது. ஆம். நீங்கள் உயிருடன் இருக்கிறீர்கள் என்ற கருத்தே அதில் பொதிந்து இருக்கிறது. அதனால்தான், தடையில்லா நீரூற்றுபோல, அலை அலையாக எழும் கடல்போல, எண்ணங்கள் வந்து கொண்டே இருக்கின்றது. பொதுவாகவே, அது அதன் இயல்பில் தானாகவும் வரும். நீங்கள் உணரும், பார்க்கும், கேட்கும் நிகழ்ச்சிகள் வழியாகவும் வரும். மற்றவர்கள் தூண்டுதலாலும் வரும். நீங்களாகவே எதேனும் நினைத்தாலும் வரும்.

எண்ணம் என்பது, நம் மனதோடும், மூளையோடும் தொடர்பு ஏற்படுத்தி, காட்சியாக தருவது மட்டுமில்லாமல், உங்களுக்கு செயல் ஊக்கத்தையும் தந்துவிடும். இந்த உண்மையை நன்கு புரிந்து கொண்டால் மட்டுமே, நாம் இயல்பாக வாழவும் முடியும். இல்லையேல், நொடிக்கு நொடி நம்முடைய செயல்களில், நடவடிக்கைகளில் பதட்டமும், தடுமாற்றமும் வந்துவிடும். சிலர், ‘தனக்குள்ளாக, யாரோ இருந்து கட்டளை இடுகிறார்கள்’ என்று கூட சொல்லுவதுண்டு. அந்த அளவிற்கு எண்ணம் ஆட்சி செய்யக்கூடியதுதான்.

இந்த எண்ணம், அதன் செயலாக்கம், அதனுடைய மூலம், எந்த நவீன விஞ்ஞானத்தாலும், விஞ்ஞான கருவிகளாலும் விளக்கமாக அறியமுடியவில்லை. ஆனால் அதன் செயல் அளவைகளை, அளக்கின்ற கருவிகள் இருக்கின்றன. ஒரு மனிதன் தனக்குள்ளாக, எண்ணங்களின் அதிர்வோடு இருக்கிறானா? அமைதியாக இருக்கிறானா? என்று மன அலைச்சுழல் கருவி வழியாக அறியமுடியும். எனினும் கூட, ஆல்ஃபா, தீட்டா என்ற நிலை மட்டுமே அறியமுடியும் என்று சொல்லுகிறார்கள். டெல்டா என்ற நிலையை அறிய முடியவில்லை. ஏனென்றால் அது ஒன்றும் அற்றதாக, ஜீரோவும் அதற்கு கீழேயும் என்று முடிவு செய்கிறது. ஆனால் யோகத்தின் வழியாக, தவம் கற்ற ஒருவர், அந்த டெல்டா அலையிலும் நிலைக்க முடியும், உணரவும் முடியும். அதுவேதான் மெய்ப்பொருள் உண்மையையும் அறியும் நிலையாகும்.

எனவே, எண்ணங்கள் ஓடிக்கொண்டே இருக்கின்றன என்றால், அது அதனுடைய இயல்பு. அதை கட்டுப்படுத்த வாய்ப்பில்லை. ஆனால் ஒழுங்கு செய்யலாம். நாம் விழிப்பாக, அதை கவனிக்கும் பொழுது, இது தேவை, தேவையில்லை, இது நல்லது, இது வேண்டாம் என்று முடிவு செய்யவும் முடியும். எண்ணமே எல்லாவற்றிற்கும் ஆதாரமாக திகழ்வதை நாம் மறக்கக்கூடாது. எண்ணம் எழுமிடமோ, உள்ளம் எனும் சிறு புள்ளி, விரிந்திடும் இடமோ, அகண்டாகாரம் என்று வேதாத்திரி மகரிஷி அவர்கள் குறிப்பிடுகின்றார். அதன் பெருமை உணர்ந்து, நல்ல எண்ணங்களை நமக்குள் விதைக்கவும் வேண்டும். அவற்றையே அறுவடை செய்யவும் வேண்டும்.

இந்த காணொளி உங்களுக்கு மேலும் சில விளக்கங்களை தரலாம்.

வாழ்க வளமுடன்.


What is your position on astrology? Can you explain why you are doing an astrological study of karma?


ஜோதிடம் என்பதில் உங்களுடைய நிலை என்ன? நீங்கள் எதற்காக, கர்மா குறித்த சோதிட ஆய்வு செய்கிறீர்கள் என்று விளக்குவீர்களா?


நன்று, யோகத்தில் இருக்கிற உங்களுக்கு இது தேவையா? என்று கேட்பது வழக்கமே. எனினும் ஏற்கனவே சில உண்மைகளை, இங்கே கட்டுரை வடிவில் தந்திருந்தாலும்கூட, மறுபடியும் அதை நினைவு கூர்வதிலும், எடுத்துச் சொல்வதிலும் நன்மைகள் உண்டு. ‘ஜோதிடம்தன்னை பொய்யென்று இகழ்’ என்று மகாகவி பாரதி சொல்லி இருக்கிறார். ஆனால் அவர் கிரகங்கள், கோள்களை, நட்சத்திரங்களை பொய்யென்று இகழவில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இன்னொரு உண்மையையும் நாம் இங்கே தெரிந்து கொள்வோம். 

மகாகவி பாரதி, எழுச்சிக்கவிஞர் மட்டுமல்ல, சிறந்த யோகி, அதிலும் முற்றுணர்ந்த ஞானி என்பதும் உண்மையே. அதனால்தான் அப்படியான, தத்துவ கவிகளை தந்திடவும் முடிந்தது என்பதையும் நாம் அறிந்துகொள்ள வேண்டும். குள்ளச்சாமி என்ற ஒரு ஞானியின் வழியாக, மெய்ப்பொருள் தத்துவத்தை உணர்ந்தறிந்த பொழுது, சந்திரன் என்ற கோளைக் கண்டுதான் விளக்கம் பெற்றார் என்பதை அவருடைய வாழ்க்கை வரலாறு வழியாக தெரிந்து கொள்கிறோம். இந்த நிகழ்வு குறித்து, மற்றொரு பதிவாக இனிவரும் காலங்களில் பதிவு செய்கிறேன்.

அந்த வகையில், ஜோதிடத்தில் உள்ள சிலரின், பொய்களின் காரணமாகவும், அவர்களின் ஜோதிடமே ஒரு தடைக் கல்லாகவும், தலைவிதியாகவும் மாறிவிடுகிறது. பரிகார வகையில் பொருட்செலவையும், கால விரயத்தையும் உண்டாக்கி, மனிதனின் தன்னம்பிக்கையையும் குலைத்துவிடுகிறது என்பதாக, உண்மைக்கு புறம்பாக மாறி இருக்கின்ற காரணம் கொண்டே, அதை பொய்யென்று இகழ் என்று சொல்லி இருக்கிறார் என்பது தெளிவு. அப்படியானால் ஜோதிடத்தில் உண்மை இருக்கிறதா? என்று நீங்கள் கேட்பீர்கள். ஆம் இருக்கிறது. அதை நன்கு தேர்ந்த ஜோதிடர் எடுத்துரைப்பார்.

குறிப்பாக, இறந்தகாலம் என்பதும், எதிர்காலம் என்பதும் ஜோதிடத்தில், பலன் சொல்லுவதில் முக்கியபங்கு வகிக்கும். நிகழ்காலம் என்பதை எவ்வகையிலும் தீர்மானிக்க இயலாது. ஆனால் அதன் ஆரம்ப நிலையை சுட்டிக்காட்ட முடியும். இதில் இறந்தகாலம் என்பது நமக்குத் தெரிந்த ஒன்றுதானே? அதனால் கவலை ஏதுமில்லை. அதுகுறித்து நினைத்து நிகழ்காலத்தை வீணாக்க வேண்டியதில்லை. எதிர்காலம் எப்போதுமே இல்லை. இறந்தகாலம் என்பது ஓர் நினைவு என்றால், எதிர்காலம் என்பது ஓர் கனவு. எனவே எதிர்காலத்தைக் குறித்து நாம் எதும் சொல்லுவதற்கில்லை. ஆனால், ஜோதிடத்தில் எதிர்காலம் சொல்லுவது ஓர் தன்னம்பிக்கை குறித்த ஊக்குவித்தலே ஆகும். என்றாலும் கூட அப்படி எதிர்காலத்தைச் சொல்லி நான் ஊக்குவித்தலும் சொல்வதில்லை. ஆய்வில் கிடைத்ததை, உள்ளதை உள்ளபடி சொல்லுகிறேன்.

இதில் பரிகாரம் என்பது உண்டா? உண்டு. அது கர்ம யோகமாகவும், ஞான யோகமாகவும் இருந்தால் மட்டுமே பலன் தரும். 

🔎 Click and Zoom it for Readable View


கோவில் கோவிலாக சென்று வழிபாடும், கடல், ஆறு, மலை என சென்று மற்ற எந்த பரிகாரமும் செய்துவிட்டாலும், காலத்தால் காத்திருக்க வேண்டும். அதன்பிறகுதான் பலன் கிடைக்கும். சில நேரம் அந்த பலன் தள்ளியும் போகலாம். இங்கேதான், இந்த தாமதமும், தள்ளிப்போகும் தன்மையும் நிகழ்வதற்கு, நம்முடைய கர்மா என்ற வினை காரணமாகிறது. இந்த கர்மா என்ற வினை தீர மிகச்சிறந்தவழி, தவம் என்ற ஞான யோகமும், அறம் என்ற கர்ம யோகமும் ஆகும். சித்தர் பெருமகான் திருமூலரும், வினைக்கடலை நீந்தி தீர்க்க, தவமும் அறமுமே துணை என்றும் சொல்லுகிறார்.

இந்த வினைக்கடலான, கர்மா எப்படி உங்களோடு இணைந்திருக்கிறது? என்பதையே, உங்கள் ஜோதிடத்தின் வழியாக ஆய்வாக கண்டு உண்மை அறிகிறோம். ஜாதகத்தின் வழியாக  அறியமுடியும். எனினும் அது கருத்தொடராக, எல்லோரிடமும் மறைந்திருந்து செயலாக்கம் பெற்றுகொண்டே இருக்கிறது. ஒரு பாதையில் தீர்க்கப்படலாம், ஒரு பாதையில் அதிகப்படலாம். இரண்டுக்கும் இடையில் நாம் போராடிக்கொண்டு இருப்போம் என்பதே உண்மை.

        எனக்கு ஜாதமே இல்லையே? என்று தப்பிக்கலாம். ஜாதகமும் ஜோதிடமும் பொய் என்று சரியான உண்மை புரியாமலும் மறுக்கலாம். அது உங்கள் விருப்பம். ஆனால், உங்களுக்கு மட்டுமல்ல, உலகில் வாழும் எல்லா உயிர்களுக்கும், ஜீவன்களுக்கும், நான்கு வழிகளில், அந்தந்த உயிருக்கான சக்தியாற்றல் கிடைக்கிறது. அவை 1) உணவு 2) காற்று 3) வானில் உலவும் கோள்கள், நட்சத்திரங்கள் 4) பூமியின் மையத்தில் இருந்து கிடைக்கும் அணுவாற்றல் ஆகியன ஆகும்.

        எனவே உங்களுக்குள், கிரகங்கள், கோள்கள், நட்சத்திரங்கள் ஆகியவற்றின் சக்தி ஊடுறுவிக் கொண்டுதானே இருக்கிறது? அது தாக்கம் தந்துகொண்டுதானே இருக்கிறது? உதாரணமாக, சூரியனின் என்ற நட்சத்திர ஒளியில் நீங்கள் இருந்தால், உடல் சூடாகிறது, வியர்க்கிறது. சந்திரன் என்ற கோளின் ஒளியில் குளுமையை உணர்கிறீர்கள். இதெல்லாம் உண்மைதானே? இப்போதும், உங்கள் கருத்து அப்படித்தான் என்று சொல்லுவீர்களா?

இந்த  வினை குறித்த சோதிட ஆய்வு, ஓவ்வொருவரின் குணாதசியம் என்ன? என்பதில் ஆரம்பித்து, உங்கள் நடவடிக்கை, எண்ணங்களும், செயல்பாடுகளும் என்பதை எடுத்துச் சொல்லி, உங்களுக்கு திருத்தமான வழியை தருவதே ஆகும். கருத்தொடராக உங்களோடு தொக்கி நிற்கும் கர்மா என்ற வினை தீர்க்க என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது என்ற அறிவுரை தந்து, வேதாத்திரியத்தின் வழியாகவும், வேதாத்திரியம் அல்லாத, வேறெந்த யோக சாதனையின் வழியாகவும், முற்றிலும் புதியவர் என்றால் யோக விளக்கமும் தந்து, தவமும் அறமும் கொண்டு தீர்த்து, வாழ்வை மாற்றி அமைத்து சிறப்பாக வாழ வழி தரப்படுகிறது. இதுதான் இந்த ஜோதிட ஆய்வு ஆகும். இது சேவையாக வழங்கப்படுகிறதே தவிர வேறெந்த  நோக்கமும் இல்லை. எனவே, இந்த வழிமுறைகள், உலகில் இருக்கும், நிகழும் வழக்கமான ‘ஜோதிட ஆய்வாக’ இருக்காது.

        சரி ஐயா. இந்த ஆய்வு எப்படி உதவுகிறது? என்று நீங்கள் கேட்டால், அதற்கான பதில் இதோ. எனக்கென்னய்யா, நான் நன்றாகத்தான் இருக்கிறேன், என்றுதான் எல்லோரும் சொல்லுவார்கள். ஆனால், ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு மனக்குறை அவர்களை கீழே இழுக்கும். அதற்கு காரணங்களை ஆராய்ந்தால் ஏதும் புரியாது. சிலருக்கு பொருள் பிரச்சனை இருக்கலாம். சிலருக்கு பொருளே பிரச்சனையாக இருக்கலாம். தன்னுடைய நடவடிக்கையே தவறாகலாம், உடனிருப்போர், வாழ்க்கை துணை, வேலை, தொழில், வியாபாரம், என்று பலவழிகளில் அன்றாடம் தீர்க்கமுடியாத பிரச்சனைகள் உருவாகலாம். இது ஏன்? இதில் இருந்து நாம் எப்படி தடுத்து, விலகி நின்று, அலசி தீர்க்கலாம் என்ற ஆலோசனை கிடைக்கும். இந்த ஆலோசனை, நம்முடைய அடிப்படை குணாதசியத்தை ஒட்டியே அமைகிறது என்பது அதிசயமான உண்மை. யோகவழியிலும் அதைத்தான் நாம் செய்கிறோம் என்றாலும், புரிந்து கொண்டு இயங்கினால், பதில் விரைவாக கிடைக்கலாம் அல்லவா? அதைத்தான் இச்சேவை துணை செய்கிறது.

வேதாத்திரியர்களுக்கு சலுகை ஏன்? அவர்கள் ஏற்கனவே அந்த திருத்தமான பாதையில் இருக்கிறார்கள். மற்ற புதிய அன்பர்களுக்கு, யோகம் குறித்தும், தவம் அறம் குறித்தும் தனியாக விளக்கம் தர வேண்டும்தானே? அதனால்தான். நன்கொடை எதற்கய்யா? என்றும் கேட்கிறீர்களா? இந்த சேவையில் ஒரு ஒழுங்குமுறையை கொண்டுவரவேண்டும் அல்லவா? அதற்காகவே!

இந்த வகையில், உங்கள் கேள்விக்கான பதில் கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன். விரும்புவோர் வாட்சப் - WhatsApp வழியாக தொடர்பு கொள்ளலாம். அதற்கான நன்கொடையும் வழங்கி, உங்கள் பிறப்பு குறித்த விபரங்கள் (தேதி, மாதம், வருடம், நேரம், ஊர், இப்பொழுது வசிக்கும் ஊர்) அனுப்பி வைக்கலாம். ஜோதிடத்தின் வழியாக கிடைத்த ஆய்வு முடிவுகள், உங்களுக்கு விளக்கமாக மின்னூலாக அனுப்பி வைக்கப்படும். இதற்கு 7 முதல் 15 நாட்கள் ஆகலாம்.

நன்றி.

வாழ்க வளமுடன்.

-


Can we receive within ourselves the cosmic energy energy? What is the way out? Does meditation and penance help with that? Give an explanation.


பிரபஞ்ச ஆற்றல் சக்தி என்பதை நாம் நமக்குள்ளாக பெற்றுக்கொள்ள முடியுமா? அதற்கு வழி என்ன? தியானம் தவம் அதற்கு உதவுகிறதா? விளக்கம் தருக.


பிரபஞ்சம் ஆற்றல் சக்தி, என்றுமே எப்போதுமே குறைவுபடமால் இருக்கக்கூடியது ஆகும். நாம் காணும், காணமுடியாத தொலைவில் இருக்கும் கோள்கள், சூரியன்கள், நட்சத்திரங்கள், நட்சத்திர மண்டலங்கள் ஆகிய அனைத்தும், தனக்குள்ளிருந்து, ஆற்றல் சக்தியை வழங்கிக் கொண்டே இருக்கின்றன. எப்படி நமக்கு, காலையில் சூரியனின் ஒளியும், இரவில் சந்திரனின் ஒளியும் நமக்கு துணையாகி, உதவுகிறதோ, அதுபோலவே, இந்த பிரபஞ்ச ஆற்றல் சக்தியும் துணையாகிறது, உதவுகிறது எனலாம்.

இந்த உண்மையை, உங்கள் பிறந்த நேர ஜாதக குறிப்பின் வழியாகவும் அறிந்துகொள்ள முடியும். ஜாதகம் என்பது மிகச்சிறந்த எடுத்துக்காட்டு எனலாம். ஆனால், ஜாதகம் என்று சொன்னதுமே, எனக்கு எதுவுமே நல்லது நடக்கவே இல்லையே? என்றுதான் சொல்லுவார்கள். அதற்கு வேறு சில காரணங்கள் இருக்கின்றன. அதை தேர்ந்த ஜோதிடர், உங்கள் ஜாதகத்தை ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்து சொல்லுவார். நாம் இங்கே, இந்த பிரபஞ்ச ஆற்றல் சக்தியை மட்டும் கவனிப்போம்.


நாம் வாழ்கின்ற இந்த பூமியும் கூட, இந்த பிரபஞ்சத்தின் ஒரு கூறு என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. பூமிக்கு அருகிலும், தூரமாகவும், வெகு தொலைவிலும் பல்லாயிரம் நட்சத்திரங்கள் இருக்கின்றன என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். இவற்றின் ஆற்றலும் சக்தியும் பூமியையும் வந்தடைகின்றன. கூடவே, நம் பூமியின் அண்டை வீட்டார்களான, சந்திரன், புதன், சுக்கிரன், செவ்வாய், குரு, சனி ஆகிய கோள்களின் ஆற்றல் சக்தியும் இணைந்துதான் கிடைக்கின்றன. இதனினும் மேலாக, ராகு கேது என்ற நிழலான, ஆற்றல் சக்தியும் கிடைக்கின்றன. ராகு கேது என்பதை, நாம் தனித்து பார்க்கவும் முடியாது. ஆனால், அவற்றின் ஆற்றல் சக்தி அபரிதமானது என்பது, பொதுவாகவே உங்களுக்கு தெரியும் அல்லவா?

இந்த பிரபஞ்ச ஆற்றல், ஓவ்வொரு, கோள்கள், சூரியன்கள், நட்சத்திரங்கள் ஆகியவற்றில் இருந்து வந்தாலும்கூட, தனித்தன்மைகளை பெற்றிருந்தாலும் கூட, எல்லாமே அதன் அதன் அளவில், ஒன்றாகவே கலந்துதான் வருகின்றன. எங்கெங்கே, எந்தெந்த பொருளில், உயிரில் மோதுகிறதோ, அந்த அளவில் தூண்டுதலை உண்டாக்குகின்றன. அவை நம்மை பொறுத்தவரையில், நன்மை தருவதாக இருக்கலாம். தீமை தருவதாகவும் இருக்கலாம். அது நம்முடைய குணாதசியம் என்ற அடைப்படை நிலையை பொறுத்தது ஆகும். அப்படியானால், இந்த அடிப்படை நிலையை மாற்றிட முடியுமா? என்ற கேள்வி எழுந்தால், அதற்கு தியானம் என்ற தவம் உதவுகிறது.

நம்முடைய உடலுக்கும், மனதிற்கும், உயிருக்கும் இத்தகைய, பிரபஞ்சம் ஆற்றல் சக்தி அன்றாடம், நொடிக்கு நொடி கிடைக்கிறது. அதை நாம் தனியாக உணர்ந்து கொள்வதற்கும் வழி இல்லாத நிலையில்தான், நம்முடைய சராசரி வாழ்க்கை நகர்கிறது. தியானத்தின் வழியாக, தவத்தின் வழியாக, மன ஓர்மை பெற்றவர்கள் மட்டுமே, இதை அனுபவ பூர்வமாக உணரமுடியும். அதுவரை அப்படியெல்லாம் வாய்ப்பே இல்லை என்று மறுத்துத்தான் பேசுவோம்.

மேலும் நம்முடிய வாழ்வின் அடிப்படைக்குக்கூட, இந்த பிரபஞ்சம் ஆற்றல் சக்தி உறுதுணையாக இருக்கிறது என்பதை, சித்தர்களும், அவர்வழி வந்தவர்களும், வேதாத்திரி மகரிஷி அவர்களும் உண்மை விளக்குகிறார்கள். பிரபஞ்சம் ஆற்றல் சக்தி இருக்கிறது, அது நமக்கு கிடைக்கிறது. நமக்குள்ளாக ஊடுறுவி நிறைகிறது. நம்மைக்கடந்தும் செல்கிறது என்பது உண்மையே!

வாழ்க வளமுடன்.

-


There is no compulsion to change through yoga. Why?


யோகத்தின் வழியான, மாற்றத்திற்கு வரவேண்டிய கட்டாயம் ஏதுமில்லை. ஏன்?


இந்த உலகில் பிறந்து வாழும் நாம், யாருடைய பிள்ளை, யாருடைய வாரீசு, யாருடைய வம்சாவழி என்பதெல்லாம் தெரியும். அதை நாம் வளரும் பொழுதே தெரிந்தும் கொண்டு, அதை இறுக பற்றிக்கொண்டும் விடுகிறோம். நாம் வீடு, ஊர், நாடு என்பதையும்கூட விரிவாக, நுண்ணிய தகவல்களோடு அறிந்து கொள்கிறோம். சமூகம், உலகம் என்ற செயல்பாடுகளையும், அதன் பாரம்பரியம், வரலாறு, முன்னேற்றம் என்பதையும் தெளிவாகவே நாம் புரிந்தும் கொள்கிறோம். கல்வியும் இதற்கு உறுதுணையாக இருக்கிறது.

ஆனால், மனிதனாக இருக்கிற நாம், பரிணாமத்தின் எழுச்சியில் வந்த, ஆறறிவான ஜீவன் என்பதை ஒரு விளக்கமாக பெற்றுக்கொண்டாலும், ‘நான் யார்?’ என்ற கேள்வியை கேட்டுக்கொண்டதில்லை. நீ யார்? என்று மற்றவர்களை தயங்காமல் கேட்கும் நாம், நமக்குள்ளாக கேட்டுக்கொள்வதே இல்லை. அது குறித்த அக்கறையும் நமக்கில்லை. நம்மைச்சார்ந்த குடும்ப உறவுகள் யாரும்கூட சொல்லித்தரவும் இல்லை. ஆனால், ஏதோ ஒருவகையில், நண்பர்களோ, யாரோகூட, இப்படியாக ‘நான் யார்?’ என்ற கேள்வி இருக்கிறது. அதை கேட்டுப் பார்க்கவேண்டும். இதற்கு பக்தி கடந்த யோகம் உதவும் என்று சொல்லி இருப்பார்கள். உங்கள் சூழ்நிலைகளும் இப்படியான கேள்வியை உருவாக்கிடவும் வாய்ப்புண்டு.

ஒரு சிலருக்கு, இப்படியாக ‘நான் யார்?’ என்று தனக்குத்தானே கேட்டுக்கொள்வது அவசியம்தானா? என்றும் நினைப்பார்கள். ஆறாம் அறிவு ஜீவன் என்று தன்னை உயர்வாக சொல்லிக்கொள்கின்ற மனிதன், அந்த ஆறாம் அறிவை, அதன் பயனை, அற்புதத்தை அறிந்து கொள்ள வாய்ப்பு இருக்கும் பொழுது, அதை தவறவிடலாமா? மறுத்து ஒதுக்கித் தள்ளலாமா? எனினும் இவர்களை எல்லாம், வற்புறுத்தியோ, கட்டாயப்படுத்தியோ, யோகத்தின் வழியாக, நீங்கள் உண்மை உணர்ந்து கொள்ளுங்கள் என்று சொல்லமுடியாது. இதெல்லாம் தானாக வருவதும், தனக்குள்ளாக மலரும், சிந்தனையும் ஆகும். சட்டமோ, விதியோ ஏற்படுத்தி, நாம் ஒன்றும் செய்வதற்கில்லை. அப்படியான அவசியமும், அவசரமும் அவர்களுக்கு இல்லை.

இப்போது, உள் ஆர்வத்தோடும், மற்றவர்கள் சொல்லி, ஏதோ தவிர்க்கமுடியாத கட்டாயத்திலும், விருப்பத்திலும் யோகத்தில் இணைந்து கொண்டோம் என்று வைத்துக்கொண்டால், அடுத்தடுத்த நடவடிக்கை எப்படி இருக்கும்? என்ற கேள்வி எழும் அல்லவா? இந்த கேள்விக்கு, வேதாத்திரி மகரிஷி அவர்களே பதில் தருகிறார். எப்படி என்று பார்க்கலாமா?

வேதாத்திரி மகரிஷி அவர்கள், நம்மிடம் இப்படியாக விளக்குகிறார். மனவளக்கலை மன்றத்திற்கு வந்ததால் என்னென்ன நன்மைகள் வந்தன? சினிமாவுக்கு, கோயிலுக்குப் போனதால் என்னென்ன நன்மைகள் வந்தன? இரண்டு மாதங்கள் கழித்து மனதுக்கு, தெளிவோ, அமைதியோ, வெற்றியோ, மகிழ்வோ இருக்கிறது என்றால் அதைப் பின் பற்றி வாருங்கள்.

இல்லை, இதைவிட எனக்குக் கோயிலுக்குப் போனதனால், சினிமாவுக்குப் போனதனால் நன்றாக இருக்கிறது என்று சொன்னால், இன்னும் சில நாட்களுக்கு அதையே தொடருங்கள்.

ஆனால், மனவளக்கலை மன்றம் மனிதனை மனிதன் ஆக்க வல்லது. மனதைத் திடப்படுத்த வல்லது. மனது திடம் இல்லாததனால்தான் வாழ்க்கைச் சிக்கல்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை; தாங்கிக் கொள்ள முடியவில்லை; அதைப் போக்கிக் கொள்ள முடியவில்லை. அப்போதுதான் சினம் உண்டாகிறது. துன்பம் உண்டாகிறது.

மனதிலே நல்ல வலு இருக்குமேயானால் இதெல்லாம் தானாகவே போக்கி விட முடியும். உங்கள் கையில் ஏதேனும் பொருள் இருக்குமேயானால், அப்போது விருந்தினர் வந்துவிட்டால் அச்சமில்லை. உட்காருங்கள். இதைச் சாப்பிடுங்கள். அதைச் சாப்பிடுங்கள் என்பீர்கள். உங்கள் கையில் பொருள் இல்லையானால் எப்படி இருக்கும்? சோர்வு இருக்கும்.

அதே போல, மனம் வளமாக இருக்குமேயானால் ஏதேனும் புதிய சிக்கல்கள் தோன்றும்போது அதைச் சோர்வு இல்லாது தாங்கிக் கொள்ளலாம். வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்கள் எதையெடுத்தாலும் போக்கிவிட முடியும் என்று நினைக்காதீர்கள். அல்லது பிறருடைய வாழ்க்கைச் சிக்கல்களை நாம் போக்கிவிட முடியும் என்ற அகம்பாவமும் யாருக்கும் வேண்டாம். அவரவர்களே போக்கிக் கொண்டால் தான் முடியும். அதற்கு மற்றவர்கள் உதவி செய்ய முடியும்; ஒத்துழைக்க முடியும்.

ஒரு கிணற்றுக்கு, இன்னொரு கிணற்றிலிருந்து குழாய் மூலம் நீரைச் செலுத்தி நிரப்ப இயலாது; அந்தக் கிணறு நிறையாது. அதனுடைய ஊற்று வந்தால்தான் எப்போதுமே கிணறு நிரம்பும். 

ஒருவருக்கு ஏதோ ஒரு சிரமம் இருக்கிறது. பத்து ரூபாய் கொடுத்தோம். அந்தச் சிரமம் போய்விட்டது என்பது இல்லை. இன்றைக்குப் பத்து ரூபாய் கொடுத்தோம் என்றால் நாளைக்கு இருபது ரூபாய் கொடுக்க வேண்டிய நிலைவரும்.

ஒவ்வொருவருடைய உள்ளமும் ஒரு பெரிய சுரங்கம். அறிவாலும், ஆற்றலாலும் அதை வளர்க்க வேண்டும். அதைத் தான் 'மனவளக்கலை மன்றம்' (Simplified Kundalini Yoga) செய்கிறது.

உடலாலும் மனதாலும் மனிதனை மேல் நோக்கி வரச் செய்ய அவர்கள் செய்ய வேண்டிய செயல்களையெல்லாம் வழிப்படுத்தி வாழ வைக்கத் தேவையானப் பயிற்சிகளை அளிக்கிறது. அதை அனுபவத்தினால்தான் தெரிந்து கொள்ளவும் முடியும்.  எனவே, நமக்கு கிடைத்த அரிய வாய்ப்பை, பிறவியின் நோக்கமும், கடமையும் தீர்க்க பயன்படுத்திக் கொள்ளலாம்.

வாழ்க வளமுடன்!

-

The truth explanation of the first elements of Akash in the panjaboothas system


பஞ்சபூத தோற்றத்தின் முதல் தோற்றமான ஆகாசம் (Space) என்பது குறித்த உண்மை விளக்கம் என்ன?


ஆகாசம் என்பது பஞ்ச பூத தோற்றத்தில் முதன்மையானது ஆகும். அதுவே தமிழில் விண் என்று சொல்லுகிறோம். இதன் இன்னொரு சிறப்பு பெயர்,  உயிர் ஆகும். ஆனால் அது ஜீவன் என்ற உயிரினங்களில் மட்டுமே இருக்கும் நிலையாகும். இந்த ஆகாசம், பல்லாயிரம் கோடி, பரமாணுக்கள் கூடிய ஒரு தோற்றம் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். இந்த ஆகாசம் சுழன்றுகொண்டே இருக்கக்கூடியது. நிறை மற்றும் எடை அளவில் மிகவும் லேசானது. கண்களுக்கும், கருவிகளுக்கும் எட்டாதது. ஆனால், மனிதன் தன் மனதால், அறியக்கூடியது. சித்தர்கள், இதை சித்து என்றழைத்தனர்.

இந்த ஆகாசத்தின் சுழற்சியினால்தான், அதன் மையப்பகுதியில் இருந்து, காந்தம் என்பது உருவாகி, விரிவலையாக வெளி வருகிறது. பொதுவாக இந்த ஆகாசத்தை, மூன்றாக பிரித்திருக்கிறார்கள். ஒன்று, மகா காசம். இரண்டு, பூதா காசம். மூன்று, சித்தா காசம்.  இந்தப் பிரபஞ்சம் முழுவதும் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பது மகா காசம். இதுதான் வான் காந்தக்களம் என்பதாகும். அதே ஆகாசத் துகள்கள் பொருட்களில் மடிந்தியங்கும் போது, அதைப் பூதா காசம் என்று சொல்கிறோம். அதுவே உயிர்களின் உடலில் எல்லைகட்டி இயங்கும்போது, அதைச் சித்தா காசம் என்கிறோம். 

நம்முடைய உடல், பஞ்ச பூதத்தின் கூட்டு. பிரிதிவி என்ற கெட்டிப்பொருள், மண் நம்முடைய, உடலாகவும். அப்பு என்ற நீர் என்பது இரத்தமாகவும், தேயு என்ற வெப்பம் என்பது உடல் நடத்தும் சூடாகவும், வாயு என்ற காற்று என்பது பிராண சக்தியாகவும், ஆகாசம் என்ற விண் அல்லது உயிர் எல்லாவற்றையும், இணைத்து இயக்கும் சக்தியாகவும் இருக்கிறது. கூடுதல் சக்தியாக, ஜீவகாந்தம் உருவாகி, மனமாக இருக்கிறது. அந்த மனதைக் கொண்டுதான், யோகத்தின் வழியாக, இந்த உண்மைகளை நாம் அறிந்து கொள்கிறோம். மெய்ப்பொருள் உண்மை விளக்கத்தையும் பெறுகிறோம்.

வாழ்க வளமுடன்.

How can we understand that God and Brahmmam are? Does it really matter? Is it necessary to accept that? truth explanation.


வாழ்க வளமுடன் ஐயா, இறை என்பதும் பிரம்மம் என்பதும் எப்படி விளங்கிக் கொள்வது? உண்மையாகவே இருக்கிறதா? அப்படி ஏற்றுக்கொள்வது அவசியம் தானா? உண்மை விளக்கம் தருக.


        உங்கள் அடிப்படை சந்தேகத்தை விளக்கக்கூடிய கேள்வி என்பதில் மகிழ்ச்சி. உங்களுக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் உதவக்கூடிய விளக்கமும் கிடைக்கும் என்பதும் உண்மை. ஏற்கனவே இந்த கேள்வியின் அடிப்படையில், விரிவாக விளக்கம் தந்துள்ளேன். அதை, இங்கே தேடிப்பார்த்து படித்து அறியலாம். இன்று கூடுதலாக, பாமர மக்களின் தத்துவஞானி, வேதாத்திரி மகரிஷி விளக்கித்தருகிறார் என்றும் பார்க்கலாம்.

இறைநிலை உணர்ந்த அறிவு, வாழும் எல்லா மனிதர்களுக்கும் வேண்டும். அது அவசியமும் கூட. காரணம், அதில் அவனுடைய பரிணாம எழுச்சியின் உண்மை மறைந்திருக்கிறது. மற்ற ஜீவன்களில் இருந்து, எந்த வகையில் அவன், ஆறாம் அறிவின் உன்னதத்தை பெற்றிருக்கிறான் என்ற காரணம் உள்ளடங்கி இருக்கிறது. அது அவனுடைய பிறவிக்கடமையாகவும், பிறவியின் நோக்கமாகவும் இருக்கிறது. இதை தெரிந்து கொள்ளாமல் போனாலும், உதாசீனப்படுத்தி விலகிக் கொண்டாலும், யாருக்கும் ஏதும் இழப்பு இல்லை. ஆனால், பிறந்த அந்த மனிதனின், பிறப்பு ‘வீணாகி விடுகிறது’. எனவே, அறிந்து உணராமல் மடிந்துவிடுவது, அவனுக்கே இழப்பாகிறது. அந்த இழப்பு, அவனுடைய வாரீசுகளுக்கும் தொடர்ந்தால் என்னாவது? 

இந்த நிலையில், ஒரு மனிதன் அவனின், பிறவி நோக்கமும், பிறவிக்கடமையும் தெரிந்து கொண்டால் என்னவாகும்? ‘நான் யார்?’ என்று தெரிந்து கொண்ட பிறகு, கிடைக்கக்கூடிய அந்த ‘முழுமை இன்பம்’ அனுபவமாக மட்டுமே கிடைக்கக்கூடியது. ஒருபோதும் வார்த்தைகளால், எழுத்துக்களால் விளக்கித்தர முடியாது. எனினும், வேதாத்திரி மகரிஷி அதுகுறித்த விளக்கத்தை, உங்கள் அளவிற்கு தருவதை, இதோ காணலாம்.

பேரியக்க மண்டலத் தோற்றங்கள் அனைத்திலும் சிறந்ததோர் தெய்வீகக் கருவூலம் மனித பிறப்பு. பிரம்மம் என்பதே தெய்வம் எனப்போற்றப்படுகிறது. அதுவேதான், இறைவெளியாக எங்கும் நீக்கமற நிறைந்துள்ள சுத்தவெளியாகும். இதுவே எல்லாம் வல்ல பேராற்றலாகும். இது எல்லையற்ற விரிவு நிலையுடையதாக இருப்பதால் புலன்களுக்கு எட்டாத ஒன்றாக உள்ளது.

இது விரைவு, பருமன், காலம், தூரம் எனும் நான்கு கணக்குகளுக்கும் உட்படாதது. இம்மாபெரும் ஆற்றலிலிருந்து தான் பரமாணுவெனும் நுண்ணியக்கத் தூள் தோன்றியது. பரமாணுக்கள் பல இணைந்து அணுவாகவும், அணுக்கள் பல இணைந்து பேரணு, செல்கள், பல உருவத் தோற்றங்கள், வானுலவும் கோள்கள், உலகம் மீது வாழும் ஓரறிவுத் தாவரம் முதல் ஆறறிவு மனிதன் வரையில் தொடரியக்கமான பரிணாமம் தான், ‘பிரம்மம்’ எனும் தெய்வீகப் பேரற்றாலின் சரித்திரம்.

மனிதன் என்ற தோற்றமே, பிரம்மத்தின் ஆதி நிலையாகவுள்ள இறைவெளி முதற் பொருளாகவும், ஆறறிவு கொண்ட மனித மனமே இறுதியாகவும் உள்ளன. ஆதி முதல் அந்தம் வரையில் அனைத்தையும் இணைத்து ஒரே அகக்காட்சியாகக் காணக்கூடிய பேரறிவுதான் பிரம்மஞானம் ஆகும். இத்தகைய அறிவுதான் இறைநிலையுணர்ந்த அறிவு. அறிவாகவும், அவ்வறிவுதான் தானாகவும் இருக்கும் முழுமை நிலையுணர்ந்த தெளிவே பிரம்மஞானம் ஆகும்’ என்ற வகையில் உண்மை விளக்கமளிக்கிறார், வேதாத்திரி மகரிசி.

இந்த உண்மைகளை, தன் வாழ்நாளில் அறிந்து உணர்வதற்காகவே பிறவியெடுக்கிறான். ஆனால் பிறந்த பிறகும், வாழும் நிலையிலும், அதை மறந்துவிடுகிறான். எல்லாவற்றையும் மறுத்தும் விடுகிறான். அதோடு மடிந்தும் விடுகிறான்.

வாழ்க வளமுடன்.

Why is it exalted as divine power? How does it relate to us? What is the need to respect it?


இறையாற்றல் என்று உயர்வாக சொல்லப்படுவது ஏன்? நம்மோடு எப்படி தொடர்புகொண்டதாகிறது? அதற்கு மதிப்பளிக்க வேண்டிய அவசியம் என்ன?


பொதுவாகவே, நாம் வாழும் காலத்தில், இறை என்பது குறித்த சந்தேகங்கள் நிறைய உண்டு. காரணம் பன்னெடுங்காலமாக, அதை நாம் ஆராயாமல், உண்மை அறியாமல், பக்தியில் மட்டுமே திளைத்து இருந்ததுதான். பக்தி என்பது, மெய்ப்பொருளை விளக்கும் சிறு முயற்சி, அடிப்படை தத்துவம் மட்டுமே. அந்த பக்தியின் வழியாக, இறை என்று சொல்லப்படுவது எது? நான் யார்? இயற்கை என்பது என்ன? எனக்கும் அதற்கும் உள்ள தொடர்பு என்ன? என்று யோகத்தின் வழியாக உணர்வேண்டியது அவசியம்.

ஆனால், உண்மை அறிகிறேன், அறிந்துவிட்டேன் என்று, தான் சொல்லும் விளக்கங்களிலேயே, நிலைத்து நிற்கமுடியாது தடுமாறும் விஞ்ஞான அறிவின் துணை கொண்டு, இறை என்பதே இல்லை என்று ஒதுக்கித்தள்ளிவிடும் நிலைதான் நம்மோடு இருக்கிறது. ஆனால் உண்மை நிலைத்து இருக்கிறது. உங்களுடைய  இந்த மூன்று கேள்விக்கும், பதிலாக, குரு மகான் வேதாத்திரி மகரிஷி என்ன சொல்லி விளக்கம் தருகிறார் என்று பார்க்கலாமா?

ஒரு கைப்பிடி பயறை எடுத்து ஒரு கோப்பை நீரில் போட்டால் சில மணி நேரத்தில் அந்தப் பயறு எல்லாவற்றுக்குள்ளும் தண்ணீர் நிறைந்து விடும். அதே நேரத்தில் பயறும் தண்ணீருக்குள் இருக்கும். அதாவது சுருங்கச் சொன்னால் தண்ணீருக்குள் பயறு, பயறுக்குள் தண்ணீர். அதே போல இருப்பு நிலையான சுத்தவெளியானது எல்லா விண்துகள்களையும் விண்துகள்களான பொருள்களையும் சூழ்ந்தும் ஊடுருவியும் இருக்கிறது. இயக்கக்களமாகிய பிரபஞ்சம் முழுவதும் நிறைந்திருக்கிற இருப்பு நிலையானது, நிழல் அலைத் துகள்களால் நிரம்பப் பெற்றிருக்கிறது. ஆகவே, துகள்களுக்கு இடையே உள்ள வெளியானது வான்காந்தக் களமாகத் திகழ்கிறது. 

இத்தகைய பிரபஞ்சக் களத்தின் ஒரு சிறு பகுதியில் உள்ள இந்தப் பூமியானது சூரியனைச் சுற்றி வலம் வருகிறது. பூமியில் உள்ள எல்லா உயிரினங்களும் பரிணமித்து, வளர்ந்து, வாழ்ந்து, மறைந்து இறுதியிலே வான்காந்தக் களத்திலே கலக்கின்றன. பிரபஞ்சத்தின் வாழ்க்கையோடு ஒப்பிடும்போது மனிதனுடைய வாழ்க்கை மிகமிகச் சிறியதாகும். மனிதனின் இந்தக் குறுகிய வாழ்க்கைக் காலத்திற்குள் அவனது உடலிலே ஏற்படும் பல்வேறு விந்தைகளை யாரும் இன்னும் தெளிவாக விளங்கிக் கொள்ளவில்லை. 

  வாழ்க்கையை முழுமையாக நிறைவோடு வாழும் வகையில் வாழ்க்கையின் அடிப்படைத் தத்துவங்களை அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். பிரபஞ்சத்தின் பரிணாம வளர்ச்சி, பிரபஞ்சத்தின் இயக்கம் இவற்றைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது நாம் உள்ளுணர்வாக உணரக்கூடிய மூன்று அடிப்படைத் தத்துவங்களான சுத்தவெளி, உயிர்ச்சக்தி, காந்தம் ஆகியவற்றின் சிறப்பை அறியலாம். இந்த மூன்றைப் பற்றியும் ஒருவர் தெளிவாகவும், சந்தேகம் இல்லாமலும் தெரிந்து கொள்வதற்குத் தவறினால் அவர் தத்துவ ஞானத்தையும் சரி, விஞ்ஞானத்தையும் சரி ஆழமாகவும், பூரணமாகவும் தெரிந்து கொள்ள முடியாது.

மகரிஷியின் இத்தகைய விளக்கம், உங்களுக்கு துணையாக இருக்கும். எந்த ஒன்றையும் நுணுகி, ஆராய்ந்து பார்க்கவே, மனிதனுக்கான, மனிதனுக்கு மட்டுமான ஆறாம் அறிவு அவனுக்கு கிடைத்திருக்கிறது. எந்த உண்மையையும், இயற்கையையும் அவன் ஒதுக்கித் தள்ளுகிறானோ, அந்த இயற்கையே அந்த ஆறாம் அறிவையும் அவனுக்கு வழங்கி இருக்கிறது. உண்மை விளக்கம் பெறவும், அறிவின் முழுமையை பெறவும், யோகமே துணையாகிறது.

வாழ்க வளமுடன்.

-

What is wave motion? Where does it start? give the true explanation.


வாழ்க வளமுடன் ஐயா. அலை இயக்கம் என்பது என்ன? அது எங்கிருந்து தொடங்குகிறது? உண்மை விளக்கம் தருவீர்களா?

அலை இயக்கம் என்பது, விஞ்ஞானம் சொல்லுகின்ற டார்க் மேட்டர் (Dark Matter)என்பதில் இருந்துதான் தொடங்குகிறது. ஆனால் இன்னமும் அந்த விஞ்ஞானம் ஏற்றுக்கொள்ளவில்லை. மேட்டர் என்பதையே ஒன்றுமில்லாதது என்கிறபொழுது, அதனையும் கடந்த டார்க் மேட்டரை என்ன சொல்லும்? இப்படித்தான் சொல்லுகிறது. ‘ hypothetical form of matter that is believed to make up 90 percent of the universe; it is invisible (does not absorb or emit light) and does not collide with atomic particles but exerts gravitational force. 

    இதன் விளக்கம், ‘பிரபஞ்சத்தின் 90 சதவிகிதம் என்று நம்பப்படும் பொருளின் கற்பனையான, அனுமானமாக வடிவம்தான் இந்த கருமைப் பொருள். இது பார்வைக்கு அகப்படுவதில்லை. ஒளியை ஏற்காது, பிரதிபலிக்காது. எந்த அணுக்களோடும், அணுக்கூட்டங்களோடும் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. ஆனால் ஈர்ப்பு ஆற்றலை செலுத்துகிறது’. 

இந்த கருமைப்பொருள்தான், அலை இயக்கத்திற்கு ஆதாரமாக இருக்கிறது. ஆனால் அது அணுக்களின் சுழற்சியில் இருந்துதான் வெளிப்படுகிறது. பிரபஞ்சத்தில் எங்கோ தொடங்கும் அலை, இங்கே வரலாம். இங்கே உருவாகும் அலை, அங்கேயும் போகலாம். இனி, அலை இயக்கம் ( Wave Theory) குறித்த உண்மைகளை காணலாம்.  

எந்தப் பொருளை எடுத்தாலும், அணு முதல் அண்டங்கள் ஈறாக அது சுழன்று கொண்டேயிருப்பதனாலே அலை என்பது தோன்றிக் கொண்டேயிருக்கிறது.இந்த அலை தன்னைச் சுற்றியுள்ள பொருள்மீது தாக்குமல்லவா? அந்தத் தாக்குதல்தான் மோதுதல் (Clash) என்று சொல்லலாம். 

அப்படி மோதும்பொழுது ஒவ்வொரு பொருளிடத்தும் அதே ஆற்றல் உள்ளதால், அதிலிருந்துவரக்கூடிய அலையோடு, இந்த அலையும் மோதும்பொழுது பிரதிபலிக்கிறது (Reflection). அதனால் அது திரும்பிவருகிறது. 

ஒரு பொருளிலிருந்து போன அலை முழுவதும் திரும்புவதில்லை. அங்கு மோதுதல் ஏற்படுவதால் சிதறுதல் (Refraction) உண்டாகிறது. 

இந்தப் பிரபஞ்சத்தில் எல்லாப் பொருள்களும் அலைகளின் கூட்டு இயக்கமாகவே இருப்பதால், அதோடு மற்றொரு அலை மோதும்பொழுது ஊடுருவியும் (Penetration) போகிறது. 

அதே அலை ஒரு பகுதி மோதி, திரும்பி வந்து மீண்டும் மோதியும் இரண்டு பொருட்களுக்கிடையே ஓடிக் கொண்டேயும் (Interaction) இருக்கும். 

ஆகவே எந்தப் பொருள்களிடத்தும் தோன்றக்கூடிய அலைக்கு மோதுதல், பிரதிபலித்தல், சிதறுதல், ஊடுருவுதல், அவையிடையே முன்பின் ஓடுதல் என்ற ஐந்து வகையான இயக்கங்கள் உண்டு.

நாம் இங்கே அமர்ந்திருக்கின்றோம். எல்லோரிடத்திலும் ஒரு அலையியக்கம் இருக்கிறது. அந்த அலை மற்றவரிடத்தில் மோதும். ஓரளவு சிதறும். ஓரளவு ஊடுருவிப் போகும். பிறகு இரண்டு பேர்களுக்கிடையே ஓடிக்கொண்டுமிருக்கும். இதை உணர்ந்து கொள்ள வேண்டும். 

அலை இயக்கத்தின் மூலமாக எந்தப் பொருளிலும் ஒரு இயக்கம் இருக்கும். அந்த இயக்கத்தின் மூலமாக அது கருமையத்தில் (Genetic Center) ஒரு பதிவு ஏற்படும். 

அந்த பதிவு அதன் தன்மையாக மாறிவிடும். மீண்டும் மீண்டும் அதே பதிவு பிரதிபலித்துக் கொண்ட இருக்கும். நம்மிடம் எப்போதும் அலை இயக்கம் இருப்பதினாலே, அதையே செய்யும்படியாகத் தூண்டும். இவ்வாறு எந்த செயல் செய்கின்றோமோ அந்தச் செயல் வினைப்பதிவாக (Imprints) மாறி நாம் மீண்டும் மீண்டும் அதையே செய்து அதே துன்பத்தையோ, இன்பத்தையோ அடைகிறோம். 

ஆகவே நாம் எப்பொழுதும் எண்ணத்தில் நல்ல எண்ணம், செய்கையில், அளவு முறை கண்ட செய்கை, விழிப்போடு முன் அனுபவம், பின் விளைவு இந்த இரண்டையும் நினைத்துக் கொண்டு, தற்கால சூழ்நிலையோடு தொடர்பு கொள்ள முடியுமேயானால், இது தான் மெய்யுணர்வு, திரிகால ஞானம், உண்மை உணர்ந்த வாழ்வு. 

இந்த உண்மை உணர்ந்த வாழ்வுக்கு அலை இயக்கம் (Wave Theory) என்ற ஒரு நியதியை நன்றாக உணர்ந்து கொள்ள வேண்டும்.

கடல் அலைபோல ஒயாது, எழும்பி, இறங்கி முடிந்து, மீண்டும் வந்து கொண்டே இருக்கக்கூடிய, இந்த அலை இயக்கம் வழியாக, மெய்ப்பொருள் உண்மையை, நாம் மிக எளிதில் புரிந்து கொள்ள வழி இருக்கிறது. அந்த வழி, மனவளக்கலை மன்றத்தில் தொடங்குகிறது. விருப்பமுள்ளோர் அந்த வழியாக, ஆன்மீக பயணத்தை தொடங்கலாம்.

வாழ்க வளமுடன்.

கட்டுரையின் மூல வடிவம்: வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

-

What is the human mind? What does modern science explain?


மனிதனுடைய மனம் என்பது என்ன? நவீன அறிவியல் என்ன விளக்கம் தருகிறது?

கேள்வி: 

வாழ்க வளமுடன் ஐயா, மனிதனுடைய மனம் என்பது என்ன? நவீன அறிவியல் என்ன விளக்கம் தருகிறது?


பதில்:

அறிவியல் என்றால், அறிவைப்பற்றி நுணுகி ஆராய்ந்து அறிந்து சொல்லுவதான் என்று பொருள்படும். ஆனால் Science என்றால் அறிவியல் என்று சொல்லி பழகிவிட்டோம். அணுக்கள் குறித்த ஆராய்ச்சியில்தான் வளர்ந்தது. எங்குமே அறிவைப்பற்றி ஆராயவில்லை. ஆனால், அணுக்கள் ஆராய்ச்சிக்கு, மனிதனின் அறிவு துணை செய்தது. இதுதானே உண்மை? அணுக்கள் என்பதை, ஆகாஷ், விண் என்ற பஞ்சபூத தத்துவத்தின் முதல் நிலை என்று நம் முன்னோர்கள் சொல்லியுள்ளார்கள். எனவே விண் ஞானம், விஞ்ஞானம் என்பதுதான் மிகச்சரி என்று தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி அவர்கள் குறிப்பிடுகின்றார்.

மனம் என்பது என்ன? அது நவீன மனித வாழ்விலில் கலந்துள்ள, விஞ்ஞான யுகத்தில் எப்படியாக அறியப்படுகிறது? என்று ஆராய்ந்தால், நமக்கு கிடைக்கும் விளக்கங்கள் இதுவே. AI எனப்படும், செயற்கை நுண்ணறிவு துணை கொண்டு இந்த தகவல்களை நான் பெற்றேன். அதை, அப்படியே உங்களுக்காக பகிர்கின்றேன்.

மனம் என்பது ஒரு நபரின் சிந்தனை, உணர்வு, நினைவுகள், மற்றும் விழிப்புணர்வின் மையமாகும். இது நம் அனுபவங்களை புரிந்துகொள்ளவும், முடிவுகளை எடுக்கவும், உணர்வுகளை வெளிப்படுத்தவும் உதவுகிறது. மனம் என்பது மூளையின் செயல்பாடுகளின் ஒரு தொகுப்பு என்று கூறலாம், ஆனால் இது நம் உடலின் மற்ற பகுதிகளுக்கும் தொடர்புடையது.

மனம் என்பது மிகவும் சிக்கலான மற்றும் பல பரிமாணங்கள் கொண்ட ஒரு கருத்தாகும். இதைப் பற்றி மேலும் விளக்குவதற்கு, மனத்தின் சில முக்கிய அம்சங்களைப் பற்றி பேசலாம்:

சிந்தனை: மனம் நம் சிந்தனைகளை உருவாக்குகிறது. இது நம் அனுபவங்களை புரிந்துகொள்ளவும், பிரச்சினைகளை தீர்க்கவும் உதவுகிறது.

உணர்வுகள்: மனம் நம் உணர்வுகளை உருவாக்குகிறது மற்றும் அவற்றை வெளிப்படுத்த உதவுகிறது. இது மகிழ்ச்சி, சோகம், கோபம் போன்ற உணர்வுகளை உள்ளடக்கியது.

நினைவுகள்: மனம் நம் கடந்த கால அனுபவங்களை நினைவில் வைத்துக்கொள்ள உதவுகிறது. இது நம் அடையாளத்தை உருவாக்கும் முக்கிய அம்சமாகும்.

விழிப்புணர்வு: மனம் நம் விழிப்புணர்வின் மையமாகும். இது நம் சுற்றுப்புறத்தை உணரவும், அதற்கு ஏற்ப செயல்படவும் உதவுகிறது.

அவதானம்: மனம் நம் கவனத்தை ஒருங்கிணைக்கிறது. இது நம் கவனத்தை ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் மையமாக்க உதவுகிறது.

கூடுதலாக, நவீன இயற்பியல் மற்றும் அறிவியலில், மனதின் கருத்து முதன்மையாக அறிவாற்றல் அறிவியல் மற்றும் நரம்பியல் அறிவியலின் கருத்தியல்பு மூலம் ஆராயப்படுகிறது. இங்கே சில முக்கிய புள்ளிகள் உள்ளன, அவைகள் கீழ்கண்டவாறு பட்டியலிடப்படுகிறது.

அறிவாற்றல் அறிவியல்: இந்த இடைநிலைத் துறையானது மனதையும் அதன் செயல்முறைகளையும், கருத்து, சிந்தனை, நினைவகம் மற்றும் முடிவெடுத்தல் உட்பட ஆய்வு செய்கிறது1. இது உளவியல், செயற்கை நுண்ணறிவு, தத்துவம், நரம்பியல், மொழியியல், மானுடவியல் மற்றும் கல்வி ஆகியவற்றின் நுண்ணறிவுகளை ஒருங்கிணைக்கிறது.

நரம்பியல்: அறிவியலின் இந்த பிரிவு நரம்பு மண்டலத்தில் கவனம் செலுத்துகிறது, குறிப்பாக மூளை, மன நிகழ்வுகளை எவ்வாறு உருவாக்குகிறது என்பதைப் புரிந்துகொள்வது. நனவின் நரம்பியல் தொடர்புகளை (NCCs) ஆராய்ச்சியாளர்கள் தேடுகின்றனர், இவை நனவான அனுபவத்துடன் தொடர்புடைய குறிப்பிட்ட மூளை செயல்பாடுகள்.

நனவின் கோட்பாடுகள்: மூளை எவ்வாறு நனவை உருவாக்குகிறது என்பது பற்றி பல போட்டி கோட்பாடுகள் உள்ளன:

ஒருங்கிணைந்த தகவல் கோட்பாடு (IIT): ஒரு அமைப்பு மூலம் உருவாக்கப்பட்ட ஒருங்கிணைந்த தகவல்களின் அளவிற்கு நனவு ஒத்துள்ளது என்று பரிந்துரைக்கிறது3.

குளோபல் நியூரானல் பணியிட கோட்பாடு (GNWT): ஒரு சிறப்பு நெட்வொர்க் மூலம் மூளை முழுவதும் தகவல் ஒளிபரப்பப்படும் போது உணர்வு எழுகிறது என்று முன்மொழிகிறது.

மனம் மற்றும் நனவு: மனம் நனவான செயல்முறைகள் (வெளிப்புற மற்றும் உள் சூழ்நிலைகளின் விழிப்புணர்வு) மற்றும் மயக்கமான செயல்முறைகள் (விழிப்புணர்வு இல்லாமல் நடத்தை செல்வாக்கு) ஆகிய இரண்டையும் உள்ளடக்கியது.

இந்த ஆய்வுகளின்படி, நாம் வாழும் உலகின், நவீன உடலியல், மனோவியல், சமூகவியல், வாழ்வியல் அடங்கிய விஞ்ஞான அறிஞர்கள் குறிப்பிடும் மனம், நல்ல புரிதலை கொடுக்கிறது. இதை படித்தால், நாம் அதை அனுபவமாகவும் பெற்றிருப்பதால், ‘எனக்கு என் மனதைப்பற்றி தெரியும்’ என்று சொல்லிவிடலாம். எனினும், மெய்ஞானிகள் சொன்ன மனம், என்பது இதுதானா? இவ்வளவு மட்டும் தானா? என்று கேள்வி கேட்டால் உங்கள் பதில் என்ன?

‘இதுக்கு மேலே வேறே என்னய்யா தெரியனும், மனசைப்பத்தி? ஒரு வார்த்தை கூடுதலாக சொன்னாலும், அது ஒரு கட்டுக்கதைதான்யா!’ என்று பலர், மல்லுக்கு நிற்பார்கள் என்பதுதான் உண்மை. இந்த அளவில், மனம் என்பது குறித்த கருத்து, உங்களுக்கு போதுமானது, அதுவும் என் வாழ்நாள் முழுமைக்கும் போதுமானது என்று சொன்னால், அது அவரவர் விருப்பமே. ஆனால், இதையெல்லாம் கடந்து, மனதின் உண்மை என்ன? என்ற சிந்தனை எழுந்தால், யோகம் மட்டுமே அதற்கு உதவுகிறது.

வாழ்க வளமுடன்.

-