CJ for You: Vethathiri Maharishi

Vethathiri Maharishi

Showing posts with label Vethathiri Maharishi. Show all posts
Showing posts with label Vethathiri Maharishi. Show all posts

The Game Changer


 வணக்கம் அன்பர்களே.

கடந்த  2023 ஆண்டு ஜூலை மாதம் முதலாகவே, @வேதாத்திரியா (@Vethathiriya) எனும் YouTube வழியாக தரக்கூடிய பதிவுகள் எண்ணிக்கை குறைந்துவிட்டதை அறிவீர்கள். என்னுடைய இருப்பிட இடமாறுதல், வேலை மாற்றம், உடல்நிலை, குடும்பத்தினர் உடல்நிலை என பல்வேறு சோதனை காலமாக ஆரம்பமானது. தெளிவாக சொன்னால், கரோனா நோய்த்தொற்றுக்கு முன்பான சூழலே, வழக்கமான வேலைகளை குறைத்துவிட்டது. அந்த வகையில், கடந்த ஆறு ஆண்டுகளாகவே, அருள்துறையில் அதிசயதக்க உயர்வுகளை அடைந்தாலும் கூட, பொருள்துறையில் பெரும் தடுமாற்றத்தை பெற்றேன். முக்கியமான காரணம், கடந்த இருபது ஆண்டுகளாக, தனி நபராக, சுயசார்பாக இயங்கியதுதான். தனிப்பட்ட எந்த நிறுவனத்தையோ, எந்த நபரையோ சார்ந்து நான் இயங்கியதில்லை. இதனால், கரோனா நோய்தொற்று காலம், வேலைகள் இல்லாது, பொருளாதாரத்தில் வீழ்ச்சி. தடுமாற்றம். சிக்கல்கள் ஏற்பட்டு சமாளிக்க முடியாத திண்டாட்டம் ஆகிவிட்டது.

‘எனினும் மாற்றம் ஒன்றுதான் மாறாதது’ என்பதை தெரிந்து கொண்டிருந்ததாலும், பல்வேறு மாற்றங்களை தந்து, நமக்கு பாடம் நடத்தும் இறையின், இயற்கையின் நீதி அறிந்ததாலும், ‘நடப்பது நடக்கட்டும் எனினும் நான் என் முயற்சிகளில் தயங்கி நின்றிடமாட்டேன்’ என்ற உறுதியில், என்னால் முடிந்ததை, சரியான வழியிலே செயல்பட்டுக்கொண்டே இருந்தேன். வேதாத்திரி மகரிஷி அவர்களின் கவிதை ஒன்றை அவ்வப்பொழுது நான் நினைவில் கொண்டுவருவேன்.

-

இயற்கை என்னும் பேராட்டக்காரனுக்கு

எல்லோருமே ஆட்டக்காய்கள், பெயர்த்து

இடமாற்றி வைப்பான், பிய்த்தெறிவான்,

அருள்வான். குறையென்று சொல்லுவதற்கு

பிறந்தோர் உலகில் யாருளர்!

-

இந்த கவிதையின் உண்மை அறிந்தோர், எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது? என்று மனம்வருந்த முடியாது. எதனால்? என்ன காரணம்? என்று நம்முடைய குறை அறிவுக்கும் விளங்கிடாது. ஆனால் எங்கோ தவறு இழைத்திருக்கிறோம். அதனால், இதை, இந்த சூழலை, அதற்கான திருத்தமாக ஏற்றுக்கொள்வோம் என்ற முழுமையான முடிவுக்கு வந்து நிற்பதற்கு தயாராகிவிடுவோம். அதுதான் எனக்கும் நிகழ்ந்தது. இதில், மறுபடியும் எழமுடியுமா? என்ற கேள்விகூட எழலாம். ஆனால், மனிதன் தாங்கமுடிகிற துன்பத்தைத்தான் ‘இந்த இயற்கை நீதி’ வழங்குகிறது என்பதையும் நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். இது நமக்கான திருத்தம் என்பதை ஆழமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

எனக்குப்போய் இப்படியா? என்று தனை வருத்தம் செய்துகொண்டால், யாராலும் உங்களை தேற்றிட முடியாது. நடப்பது எனது தவறுகளுக்கான திருத்தம், தண்டனை என்று ஏற்றுக்கொள்ளலாம். அந்த நிலைக்கு மனம் தெளிவு வரவேண்டும் என்பதும் முக்கியம். இல்லையானால், உயிரை மாய்த்துக்கொள்ளக்கூட சில முயற்சிப்பார்கள்.

எனக்கான சூழலில், அதை சரி செய்திட குடும்பத்தினரும், நண்பர்களும் உதவினர். அதன்வழியாக சில சிக்கல்களை கடந்து வந்தேன். எனினும் வேலை தாமதமாகவே அமைந்தது. முழுமையாக, என்னையே மாற்றி அமைக்கும்படி, என் அடையாளத்தையும் மாற்றும்படி வேலை அமைந்தது. என்றாலும், நிறைவான வேலைதான். சொந்தமான தொழில் என்ற நிலை கடந்துவிட்டது. எனினும் இதுவும் ‘இதுவும் நீதிக்காகவே’ என்று ஏற்றுக்கொண்டேன். இன்றுவரை பயணிக்கிறேன், இனிமேலும் அதிலே பயணிப்பேன். எனக்கு அல்லது எனக்குள் எந்த குறையும் இல்லை.

வேதாத்திரியத்தில் விளக்கம் பெற்ற பிறகுமட்டுமல்ல, அதற்கு முன்பாகவேகூட என் தேவைகள் மிகக்குறைவு. எந்த திட்டமும், முனைப்பும், முயற்சியும் கொண்டவனில்லை. இருப்பது போதும், இதில் குறைவின்றி இருந்தாலே நிறைவுதான் என்ற மன நிலை எப்போதும் உண்டு. இது என் குடும்பத்தின் வழியாக எனக்கு கிடைத்திருக்கும் நற்பண்பு என்றுதான் சொல்லுவேன். பெயருக்கும், புகழுக்கும், பெருமைக்கும் என்றும் ஆசையும், அதற்கான திட்டமும், குறுக்குவழிகளும் என்றுமே இருந்ததில்லை. என்னுடைய இருபதாண்டு ஓவிய வேலைகளிலேயே அது நிறைவும் பெற்றுவிட்டேன். ஆனால், நான் வேதாத்திரியா வழியாக எதைச் சொன்னாலும், நான் ஏதோ காசுக்கு ஆசைப்பட்டு செயல்படுவதாகவே சில அன்பர்கள் பின்னூட்டம் தந்ததை அறிவேன். அது அப்படித்தான் நிகழும் என்று எனக்குத் தெரியும். ஆனால், இத்தகைய அன்பர்களின் பின்னூட்டம், மற்ற அன்பர்களையும், ஆர்வத்தையும், உயர்வையும் திசை திருப்பிவிடும், நான் ஒன்று சொல்ல, அவர்கள் அதற்கு ஒரு பின்னூட்டம் இட, இப்படி நீண்டுகொண்டே இருக்கும் என்பதன் காரணமாகவே பின்னூட்டம் தடையும் செய்யப்பட்டது.

இப்படியாக, ஆறுமாதங்களாக இரு புதிய பதிவுகள் மட்டுமே என்னால் தரமுடிந்தது. இதற்காக அன்பர்கள் என்னை பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன். என்றாலும், எழுத்துப்பதிவுகளும், வேதாத்திரிய கேள்வி பதில்களும் தொடர்கின்றன. அருள்தந்தை, மகான், வேதாத்திரி மகரிஷி தந்த, உங்களுக்கான விளக்கங்களை, என்வழியாக, என்னுடைய புரிதல் கொண்டு, இன்னும் எளிமையாக தந்திருக்கிறேன் என்பது உண்மை. புதிய பதிவுகள் இல்லாத இந்த நிலையிலும், மிக சிறப்பான பார்வைகள் வந்துகொண்டிருப்பதை YouTube தருகிற மாத அறிக்கை சொல்லுகிறது. அன்பர்களாகிய உங்களுக்கு நன்றி, வாழ்த்துகள்.

உலகமெங்கும், எண்ணற்ற வேதாத்திரியர்கள் தம் மக்களுக்கான பகிர்தலை தந்துகொண்டுதான் இருக்கிறார்கள். நானும் என்னால் முடிந்த பதிவுகளை தந்திருக்கிறேன். இன்னும் தருவேன்.

ஒவ்வொரு நொடியும் பல்வேறு சூழல் வழியாகவும், பிறர்மூலமாகவும், எண்ணங்களாலும் வழிநடத்தும் இறையாற்றலுக்கு என்னுடைய வணக்கங்கள், அந்த இறையை உணரத்தந்த மகான் குரு வேதாத்திரி மகரிஷிக்கும் வணக்கங்கள். அன்பர்களாகிய நீங்கள் அனைவரும், இறையாற்றலின் கருணையினால், உடல்நலம், நீள் ஆயுள் நிறை செல்வம், உயர்புகழ், மெய்ஞானம் பெற்று ஓங்கி வாழ்க என வாழ்த்தி மகிழ்கிறேன். வாழ்க வளமுடன்.


French Beard and Spiritual Journey by Sugumarje


குறுந்தாடியும் ஆன்மீக பயணமும் - ஒரு அலசல்


Sugumarje - Image Created by AI based on prompt

        இந்த குறுந்தாடிக்கு பின்னால், நான் தான் இருக்கிறேன் எனினும், அதற்கென்று தனிக்கதை ஏதுமில்லை. இராயிரத்து மூன்றுவரை மீசை மட்டுமே பிரதானமாக (மூக்கின் கீழே) இருந்துவந்தது. பொதுவாகவே வாரத்தில் ஆறுநாள் தாடியும், மறுநாள் அதை (சுய) வழித்தலும் தொடர்ந்தது. எப்போதாவது மீசை ஓரம் ஒதுங்கிப்போக, முழுமையான வழித்தலும் நிகழ்ந்ததுண்டு. இராயிரத்து ஐந்துகளில் சிலமாதங்கள், மீசையும் இல்லாத நிலை நீடித்தது. எனினும், வாழ்க்கை தந்த அடியில், பாடம் நிறைய படித்ததால், அந்த அனுபவத்திற்குப் பின், மாற்றம் தேடி, இராயிரத்து ஏழில், சென்னையில் ஒருமாதம் தங்கி இருந்து சில வேலைகள் செய்யவேண்டி அமைந்தது. 

வேலைப்பளுவில், வழித்தலுக்கு நேரமும், ஆர்வமும் இன்றி தாடி, மீசையோடு ஆள் மாறி இருந்தேன். அப்போதுதான் இந்த குறுந்தாடி வைக்கலாமா? என்ற சிந்தனையும் வந்தது. அந்த குறுந்தாடிக்குறிய சில குணாதசியங்களையும் நான் வளர்த்துக்கொண்டிருந்தேன். அதனால் நம்பிக்கையும் வந்தது. உடனடியாகவே அது செயல்வடிவமும் பெற்று, என் அடையாளமாக மாறிக்கொண்டது.

விமர்சனங்களை கடந்த மனநிலையும், பக்குவம்பெற்ற அனுபவ நிலையும், நிறைத்துக்கொண்ட தகுதியும், ஒழுங்கும், நடவடிக்கைகளும் எனக்கு உறுதியை தந்தது. கேரிகேச்சர் ஓவியர் சுகுமார்ஜெ என்பதற்கான அடையாளமாகவும் மாறிவிட்டது.  இந்த வடிவ அமைப்பை, சுய வழித்தலில் கொண்டுவருதல் கடினம் என்றுதான் பலரும் சொல்லிக்கொண்டனர். சொல்லுகின்றனர். ஆனால் எனக்கொன்றும் சிரமம் இருக்கவில்லை. ஒரே அளவில் நிறுத்துக் கொள்ளுதல் என்ற நிலை, இராயிரத்து பதினெட்டுகளில் மாறிவிட்டது. காரணம், அந்த காலத்தில், வேதாத்திரி மகரிஷியின் மனவளக்கலை வழியாக, ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருந்தேன். அந்த நெடும் பயணம், பல்வேறு பிரச்சனைகளை விளைவித்தது. 

வாழும் பொழுதே இறத்தல் என்பது போல, இருக்கும் சுமையெல்லாம் கழித்தல் (கர்ம வினை) அவ்வளவு சுலபமா என்ன? இன்றுவரை வாழ்வியலில் சில கடினம் தொடர்கிறது. என் நண்பர்களிடம் சொல்லிக்கொள்வதுண்டு. 'by Spiritually I am a winner and loser in Matirialistic' எனினும், ஒவ்வொரு நாளையும், இறையாற்றல் எனக்கு கொடுக்கும் கொடையாக, நிறைவாக, புரிந்து கடந்து போகிற மனபக்குவம் எனக்கு கிடைத்துவிட்டதால், இயல்பாக ஒவ்வொரு நாளையும் அதன் போக்கிலே விட்டுவிடுகிறேன். படகில் பயணிக்கிறேன். படகின் துடுப்பை நான் இயக்குவதில்லை. இலக்கின்றியும் நான் பயணிக்கவில்லை என்பதையும் தெளிவு செய்கிறேன். என் இலக்கு நிறைவுற்றது. நீண்ட நேரம் குளத்தில் குளித்தபிறகு, சும்மா மிதக்கலாமே என்று தோன்றுமல்லவா? அது தான் இங்கே நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

இதை என் அனுபவமாக கொண்டாலும், அதுகுறித்து விளக்கிட எனக்கு ஆர்வமில்லை. அதை எத்தனையோ குருமார்கள் சொல்லிவிட்டார்கள். என்னுடைய ‘Vethathiriya Sky Lead' என்ற Youtube-லும் கூட மூன்று மாதங்களாக ஏதும் பதிவிடவில்லை. போதும் என்றாகிவிட்டது. ஆனாலும் சில பதிவுகள் அன்பர்களுக்காக இனிமேல் வரும். இத்தகைய அனுபவங்களுக்குப் பிறகு, மறுபடியும் சில மாற்றங்கள் குறுந்தாடியில் நிகழ்கிறது. தேடல் முடிந்துவிட்டாலும், வாழ்க்கை தொடர்கிறது அல்லவா? அந்த வாழ்விற்காக. இதன் காரணமாகவே, இங்கேயும் தொடர்கிறேன்.

உலகில் பிறந்துவாழும் நாம் ஒவ்வொருவருக்கும், அந்த தேடலும், கடமையும் இருக்கிறது. ஆனால், நாம் நம்மை அதில் ஈடுபடுத்துவதற்கு பதிலாக, இறையாற்றலை செயல்படு, செய்துகொடு, வரமாக கொடு, வழிநடத்து, துணை இரு, சாட்சியாக இரு என்று கேட்டுக்கொண்டிருக்கிறோம். உங்களுக்கு யோகம், ஆன்மீகம், பொருளாதாரம், வாழ்க்கை, உறவுகள், பிறவிக்கடமை, கர்ம வினை, இறை, தெய்வம், கடவுள், இயற்கை, கோள்கள், பிரபஞ்சம், விஞ்ஞானம், மெய்ஞானம் குறித்த சந்தேகங்கள் இருந்தால் என்னோடு உரையாடலாம். 

#vethathiriya #vethathiriyaskylead #sugumarje #caricaturist #caricatureartist #youtube #facebook #instagram #vethathiri #maharishi #manavalakalai #skyyoga 


Why some of Saint in Silence? They not offer course or methods. But they are in Upatesh somedays. What is the truth on it?


வாழ்க வளமுடன் ஐயா. சில ஞானிகள் மௌனமாக இருப்பது ஏன்? உபதேசம் என்று குறிப்பாக சில நாட்கள் மட்டுமே சொல்லுவார்கள். யோக பயிற்சி, தீட்சை, தவம் என்று கற்றுத்தருவது இல்லை. இப்போதும் சிலர் இருக்கிறார்களே? காரணம் என்ன?



        ஞானிகள் மௌனமாக இருப்பது உண்மைதான். முக்கியமாக, இறை உண்மையை, மெய்ப்பொருள் தத்துவத்தை, வெட்டவெளி எனும் தன்மையை, எந்தவொரு வார்த்தையாலும், உணர்ந்தவர் மற்றவருக்கு புரியவைக்க முடியாது. இதைத்தான், வேதாத்திரி மகரிஷி அவர்களும் 

‘மொழிவதற்கு வார்த்தை இன்றி முட்டி மோதி நின்றனர்’ என்று சொல்லுகிறார். 

அதே கவிதையில் 

‘இந்தநாள் விஞ்ஞானமோ ஏற்றம் பெற்றதால் அதை, 

இயங்கிடும் மின்சாரம் மூலம், எல்லோர்க்கும் உணர்த்தலாம்’ 

            என்று தனக்கு கிடைத்த வழியையும் சொல்லுகிறார். மேலும், கணிணி செயல்பாட்டை, கருமையம் என்ற உன்னதமான விளக்கத்திற்கு, வேதாத்திரி மகரிஷி எடுத்துக்கொண்டதையும் அறியலாம். இதெல்லாம், தகுந்த உதாரணம் என்று சொல்லமுடியுமா? இல்லை, ஆனால் எத்தனையோ தடுமாற்றத்திற்குப் பிறகு கிடைத்த முதல்படி என்று சொல்லமுடியும். மலை உச்சியில் இருந்து விழுந்துகொண்டிருப்பவனுக்கு கிடைத்த, மரக்கிளை என்றும் சொல்லலாம். இனி அவன் மெதுவாக இறங்கவேண்டும், இல்லையானால் மலை உச்சி நோக்கியாவது நகரவேண்டும். சரிதானே?!

        இந்நிலையில்தான், தன் மன, எண்ண அலைகளால், பிறரோடு கலந்து, உண்மை விளக்கத்தை உருவாக்கும் விதத்தில்,  சித்தர்களும், ஞானிகளும் மௌனமாக இருந்தனர். ஒருவகையில் அதுவும்கூட இறையின் தன்மைதானே! வேதாத்திரியத்திலும், மௌனம் என்பது உண்டு. வேதாத்திரி மகரிஷி வருடத்தில் கிட்டதட்ட 45 நாட்கள் மௌனமாக இருப்பது உண்டு. இது பேசா மௌனம் அல்ல. மனமின்றி, எண்ணங்களின்றி இருக்கும் ஒர் உயர்வான நிலையும் ஆகும்.

இப்படியாக, இறையுண்மையை, பிறருக்கு சொல்லி விளக்கமுடியாத சித்தர்களும், ஞானிகளும் கண்ட மாற்றுவழிதான், அருவத்தை உள்முகமாக காண்பதற்காக, கட உள் வழிபாடாக, சிலை வணக்கம் கொண்டு வந்தனர். ஆனால்,  சித்தர்களும், ஞானிகளும் தந்த உண்மையை தவிர்த்துவிட்டு, அதில் பல்வேறு குழப்பங்களை ‘மக்களே’ உருவாக்கிவிட்டனர்.

        இன்றைய உண்மையான விஞ்ஞானம், இந்த பிரபஞ்சத்தில் 5% நாம் காணும் கோள்கள், நட்சத்திரங்கள், விண்மீன் மண்டலங்கள் என்று சொல்லுகிறது. அதுபோல 26% பிளாக்ஹோல் என்று சொல்லப்படும் கருந்துளை இருக்கிறது என்றும், என்னவென்று அறிந்திட முடியாத ஆற்றல் 69% இருக்கிறது என்கிறார்கள். இந்த மூன்றையும் Normal Matter, Dark Matter and Dark Energy என் ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள். இறை என்பது விஞ்ஞானத்தில் இல்லை. எனவே இந்த Dark Energy எல்லாம்  வல்ல பரம்பொருளா? என்று கேட்டால், இல்லை என்றுதான் சொல்லுகிறார்கள். அப்படியானால், Dark Energy யை விளக்குக. என்றால் கையை விரிக்கிறார்கள். இதற்குமேல் அதற்கு அவர்களிடம் வேறு பதில் இல்லை. நீங்கள் வேண்டுமானால், எந்த விஞ்ஞானியையாவது கண்டு கேட்டு, பதில் கேட்டு வாங்குங்களேன்.

        உதாரணமாக, எண்ணம் இல்லாமல் மனிதன் இருக்கமுடியுமா? என்று கேட்டால், மனிதனின் மூளை, மனம் அதற்கு ஒத்துழைக்காது. எண்ணமில்லாமல் இருப்பதற்காக, மனிதன் பிறக்கவில்லை என்று விஞ்ஞானம் சொல்லுகிறது. இது உங்களுக்கு சரியான பதிலாக இருக்கிறதா?

        ஆனால், விஞ்ஞானம் தான் பகுத்தறிவு. இறையுண்மையை பகுத்து அறிந்தது மூடநம்பிக்கை என்றுதான் உலகமே பேசுகிறது. இன்று மட்டுமல்ல, அந்தக்காலத்திலும் இப்படித்தான். அதனால், ஞானிகள் மௌனி ஆனார்கள். சில அன்பர்களிடம் பேசி, இறையுண்மையை  புரியவைப்பதில் அவர்களுக்கு கிடைத்த அனுபவம் தந்த பாடமாக இருக்கலாம். எந்த வகையிலும், மனதை நுண்ணிய நிலைக்கு மாற்றிக்கொள்ளாத, எந்த ஒரு நபரிடமும், இறையுண்மையை புரியவைக்கவே முடியாது. அப்படியான மனதை பயிற்சியால் மாற்றிக் கொள்வதற்காகத்தான் ‘குண்டலினி யோகம்’ வந்தது. வேதாத்திரி மகரிஷியால், அதுவே ‘மனவளக்கலை’ என்றானது.

        இந்த மனதை நுண்ணிய அலை நிலைக்கு கொண்டுவருவது, டெல்டா என்ற 1க்கு3 சுழற்சியைக் கொண்டதாகும். இது, பீட்டா, ஆல்ஃபா, தீட்டா என்ற அலையின் உச்சநிலைதான் டெல்டா ஆகும். இதை விஞ்ஞானமும் ஏற்றுக்கொண்டிருக்கிறது. ஆனால், இறையுண்மையை கைவிட்டு விட்டது. மனதையும் கைவிட்டு விட்டது. மனதை, மூளையின் அலை என்றுதானே விஞ்ஞானம் சொல்லுகிறது.

        இப்போது ஒரு உண்மை உங்களுக்கு புரிந்து இருக்கலாம். விஞ்ஞானிகளே புரிந்து கொள்ளமுடியாத, அதற்கு வாய்ப்பில்லாமல் தத்தளிக்கும் பொழுது, சராசரி மனிதன் எப்படி புரிந்து கொள்ளுவான்? இதுதான் இங்கே பிரச்சனை. இந்த புரிதலுக்கு, குண்டலினி யோகம், எவ்வளவு காலம் செய்யவேண்டும்? என்று நாம் கணிக்கவும் முடியாது. முயற்சி, பயிற்சி, ஆராய்ச்சி என்பதுதான் அதை தீர்மானிக்கும்.

        இந்த இடத்தில், வேதாத்திரி மகரிஷி அவர்களுக்கு, கிட்டதட்ட 14 ஆண்டுகள் ஆகின என்று சொல்லலாம். தன்னுடைய 34 வயதில், தன்னிலை விளக்கத்தை அடைந்துவிட்டார். அந்த உண்மையைதான், தன்னுடைய 96 வயது வரை, மனவளக்கலை அன்பர்களுக்கு விளக்கி சொல்லிக் கொண்டிருந்தார். எத்தனை அன்பர்கள் புரிந்துகொண்டார்கள்? எனினும், வேதாத்திரி மகரிஷியே இதற்கு பதிலும் தருகிறார். எப்படி தெரியுமா? ‘உண்மை அறிந்தவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தங்களை வெளிக்காட்டிக் கொள்வதில்லை’

        அடடா? என்ன காரணமாக இருக்கும்? பார்க்கலாமா? என்னுடைய அனுபவத்தில், என்னுடைய 46 வயதில்தான், தன்னிலை விளக்கத்தை அறிந்தேன். எனினும் அடுத்த இரண்டு ஆண்டுகள் கடந்து, 48 வயதில்தான், நான் அறிந்ததை, வேதாத்திரி மகரிஷியின் அனுபவங்களோடு இணைத்து, ஆராய்ந்து, அதன் உண்மைத்தன்மை கிடைத்தபிறகுதான், @Vethathiriya எனும் தளத்திலும், இந்த கட்டுரை பதிவுகளாகவும், விளக்கம் சொல்லி, எழுதி, பேசி வந்தேன். எனினும் இதனால் எனக்கு  கிடைக்கின்ற பெயர் என்ன தெரியுமா?  ‘நீ என்ன பெரிய அப்பாடக்கரா?’ என்பதுதான். எனவே இப்படியான, அன்பர்களும், பாமரர்களும், சாமானியர்களும், இருக்கும் இவ்வுலகில், இறையுண்மையை சொல்லுவதும், புரியவைப்பதும் சாத்தியம்தானா? இதற்கு நானும் மௌனமாக இருந்துவிட்டிருக்கலாம் தானே? ஆனால், 

        ‘இறையுண்மை அறிந்தவர் சும்மா இருக்கமுடியாது என்றும், அந்த உண்மையே சும்மா இருக்கவிடாது’ என்றும் வேதாத்திரி மகரிஷி சொல்லுகிறார். அந்த தூண்டுதலும், வாய்ப்பும் எனக்கு கிடைத்ததால், என்வழியாக, இறைத்தத்துவ உண்மைகளை, வேதாத்திரிய வழியில் கொடுத்துக்கொண்டு வருகிறேன். 36 ஆண்டுகளாக, வேதாத்திரியத்தில் பயணிக்கிறேன் என்று சொல்லுவதும், என்னை வார்த்தையால் சீண்டிட நினைக்கும், அவருக்கு கிண்டலுக்கு இடம் கொடுக்கிறது. மேலும், என்னுடைய தகுதியையும் அவர் புரிந்து, தெரிந்து, அறிந்து கொண்டாதாகவும் சொல்லுகிறார். ஆனால் இப்படி, அந்த நபர் சொன்னதற்காக, நான் ஒதுங்கிக்கொள்ள முடியாது. ஏற்கனவே ‘நான்’ ஒதுங்கிக் கொண்டதால்தான், இப்படியாக செயல்படுகிறேன். அவர், அவருக்குண்டான அறிவுநிலைக்கு ஏற்றவாறு சொல்லிவிட்டார். அவ்வளவுதான். மேலும் அவருடைய தன்முனைப்பிற்கு தீணிபோடுவது என்வேலையும் அல்ல.

        இந்த நவீன விஞ்ஞான காலத்திலும் இப்படியானவர்கள் இருந்தால், ஞானி மௌனமாக இருப்பது நியாயம்தானே? ஆனால், வாய்பேசாத ஞானி வேறு, மௌனமாக இருக்கும் ஞானி வேறு என்பதையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

        இன்னொன்றையும் நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். எந்த ஞானியும், உன்னை நான் திருத்துகிறேன் என்று சொல்லி செயல்படுவதில்லை. ஆனால். கேட்காமல் கிடைக்கும் விருந்து அது. ஏற்போருக்கு அது பசிப்பிணி போக்கும். ஏற்பதும் மறுப்பதும் உங்கள் நிலைபாடு. மேலும் ஒரு ஞானி பேசித்தான் ஆகவேண்டும் என்பதில்லை. தன்னுடைய எண்ண அலைகளால் செய்பட முடியும். உதாரணமாக, மகான் ரமணர் அவர்களை சொல்லலாம். அவரிடம் கருணைப்பார்வையை பெற்றாலே, பலநூறு விளக்கங்கள் கிடைத்துவிடும் என்று சொல்லியிருக்கிறார்கள். அதுவும் உண்மையே! 

        பயிற்சிகளின்றி, உண்மைவிளக்கம் பெறமுடியுமா? என்றால், இல்லை. ஆனால், அதன் அருகில் செல்லலாம். இதைத்தான் வேதாந்தம் சொல்லுகிறது. வேதாத்திரி மகரிஷியை நன்கு உணர்ந்தவர்கள், இந்த உண்மையை புரிந்து கொள்ளலாம்.

        எனவே, நீங்கள் சொன்னது போலவே, சில ஞானிகள் மௌனமாக இருப்பது  உண்மையே. உபதேசம் என்று குறிப்பாக சில நாட்கள் மட்டுமே சொல்லுவார்கள். அதைத்தான் ‘சத்சங்கம்’ என்றும் அழைப்பார்கள். நீங்களும் உங்கள் நிலையில் உணர்ந்தறியும் பொழுது, மௌனம் என்பது ஏன்? என்பதை புரிந்துகொள்வீர்கள்.

    இன்னொரு உண்மையும் சொல்லிவிடுகிறேன். இந்த பதிவும், அந்த நபருடைய, அவரைபோன்ற சில நபர்களுடைய தன்முனைப்பை தூண்டிவிடும் என்பது எனக்குத் தெரியும். ஆனால் ஏற்கனவே சொன்னதுபோல, இது அவர்களுக்கான தீணி அல்ல!

வாழ்க வளமுடன்.

Not speak is silence, isn't it? What's the big deal about that? And is it possible not to speak in this world? Some men, saints and gurus are silent. Is that really silence too? Explain


வாழ்க வளமுடன் ஐயா, வாய்பேசாமல் இருந்தாலே மௌனம் தானே? அதில் என்ன பெரிய விசயம் இருக்கிறது? மேலும் இந்த உலகில் பேசாமல் இருக்கமுடியுமா? சில மனிதர்கள், சாமியார்கள், ஞானிகள் பேசாமல் இருக்கிறார்களே? அதும் மௌனமா? விளக்கம் தருக.

உங்கள் ஆர்வத்தை வரவேற்கிறேன். மௌனம் இறைவனின் மொழி என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? இந்த பிரபஞ்சம் முழுவதுமே அப்படியான மௌனம் நிரம்பி இருக்கிறது. நமக்குள்ளும் அப்படியான மௌனம் இருந்தது. இருக்கிறது. ஆம், நாம் தாயின் கருவறையில் இருக்கும் பொழுது அப்படித்தான் இருந்தோம். பிறந்த பிறகுதான் அந்த மௌனத்தை கலைத்தோம். இன்றுவரை, இப்போது வரை அந்த மௌனத்தை கடைபிடிக்கவில்லை என்றும் சொல்லலாம் தானே?

மௌனம் யோகத்தில் மிக சிறப்பானது. எனினும் வாய்மூடி பேசாமல் இருப்பதற்கும், மௌனமாக இருப்பதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு. இந்த வித்தியாசத்தை தொலைத்துவிட்டுத்தான், பெரும்பாலோர் மௌனம் இருக்கிறேன் என்று சொல்லிக் கொள்கின்றனர். 

        யாராவது எதாவது கேட்பார்கள், நாம் எதையாவது சொல்லி மாட்டிக் கொள்வோம் என்பதற்காகவே, மற்றவர்களோடு பேசுவதை தவிர்த்து, மௌன நாடகம் நடிப்பவர்களும் இந்த உலகில் உண்டு. அப்படி தோற்றம் தருகின்ற பல்லாயிரக்கணக்கான குருமார்கள், ஞானிகள், சாமியார்கள் என்ற ‘அடைமொழிக்குள்’ அவர்கள் இருக்கிறார்கள். நீங்கள் எளிதில் அவரை அடையாளம் கண்டு, அவரிடம் இருந்து ஒதுங்கி விலகி, ஏமாறாமல் உங்களை காத்துக்கொள்ளலாம்.

சிக்கல் என்ன என்றால், யார் வாய்மூடி இருக்கிறார்கள், மௌனமாக இருக்கிறார்கள் என்று உடனடியாக அறிந்துகொள்ள முடியாது. ஆனால், சிறிது நேரம், அவரின் அருகே இருந்து கவனித்தால், அவர் உண்மையாகவே மௌனத்தில் இருக்கிறாரா? வாய்மூடி இருக்கிறாரா? என்பதை அறிந்துவிடலாம்.

எப்படி? இதற்கான விளக்கத்தை இந்த காணொளி வழியாக தெரிந்து கொள்ளலாம். மேலும், உங்கள் கேள்விக்கான உண்மையும் இந்த காணொளியில் கிடைக்கும்.

நாம் பேசாமல் இருந்தால் இறைவன் பேசுகிறானா? மௌனம் உண்மைவிளக்கம் அறிவோமா?#silence #divine

வாழ்க வளமுடன்

Pancha Bhootha Navagraha Penance has never been heard of. Will all this new penance help? And they say that everyone can do this? Do you know that penance has its own rule? If everyone could do it, it would be just a ritual.


பஞ்ச பூத நவக்கிரக தவம் இதுவரை கேள்விப்பட்டதே இல்லை. இப்படியெல்லாம் புதிது புதிதான தவம் எல்லாம் உதவுமா? மேலும் இதை எல்லோரும் செய்யலாம் என்றும் சொல்லுகிறார்களே? தவம் என்றால் அதற்கென்று ஒரு விதி இருக்கிறது தெரியுமா? எல்லோரும் செய்யமுடியும் என்றால் அது வெறும் சடங்காக மட்டுமே இருக்கும். சரிதானே? விளக்கம் தருக.

நீங்கள் வேதாத்திரியத்தில் இல்லை என்று கருத இடமிருக்கிறது. கிட்டதட்ட ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாகவே, அல்லது உங்கள் வயதிற்கு மேலாகவே, இந்த பஞ்ச பூத நவக்கிரக தவம், வேதாத்திரியத்தின் வழியாக அன்பர்களுக்கு கிடைக்கிறது. இது புதிய தவமாக, வேதாத்திரி மகரிஷி அவர்களால் வடிவமைக்கப்பட்டது. அன்பர்களுக்கு உதவும் வகையில், முழுமையான பலன்களை பெறுவதற்கும், தன் மனதை பிரபஞ்ச அளவில் விரித்துப்பழகிடவும் இத்தவம் உதவுகிறது. இதன் எளிமை கருதியே, வேதாத்திரியத்தில் அல்லாத மற்றவர்களும் இத்தவத்தை செய்யலாம் என்று சொல்லப்படுகிறது. விருப்பமுள்ளோர் இந்த, பஞ்ச பூத நவக்கிரக தவம் இயற்றி பயன் பெறுகின்றனர். உங்களைப் போல கேள்வி கேட்போர் தவிர்த்து விடுகின்றனர்.

பொதுவாக, இறையை வணங்கு, உனக்கு நல்லது நடக்கும் என்ற கருத்து எல்லோருக்கும் பொருந்தும் தானே? இதற்கு ஏதேனும் தனிப்பட விதி இருக்கிறதா? இல்லையே. வணங்குபவரின் மனம் ஒன்றிப்போனால் போதுமானது.

நீங்கள் சொல்லும் விதி, குண்டலினி யோகம் என்ற தியானத்திற்கு மட்டுமே இருக்கிறது. அதில் எட்டுவிதமான படிநிலைகளும் உண்டு. அதில் தியானம் என்பது ஏழாவது நிலையாகும். ஆனால், பஞ்ச பூத நவக்கிரக தவம் மிக எளிமையானது. இதில் எந்தவித தடையோ, பிரச்சனையோ, குழப்பமோ ஏற்பட வழியும் இல்லை. குண்டலினி என்ற உயிராற்றல் எழுப்பும், தீட்சைக்கும் இதற்கும் தொடர்பு இல்லை. குருவின் வழிகாட்டுதல், இதை எப்படி செய்யவேண்டும் என்பதில் மட்டுமே இருக்கிறது. மற்றபடி, பஞ்ச பூத நவக்கிரக தவம், வீட்டிலே இருந்தபடி செய்யவும் முடியும்.

நீங்கள் சொல்வதுபோல, சடங்கும் சாதாரணமானது அல்ல. விதிகளை உள்ளடக்கியதுதான் சடங்கு என்றும் மாறிவிடுகிறது. ஆனால், இது தவம். இதில் சடங்கு என்பது இல்லை. மனம் ஒன்றிச்செய்யும் தவம், சடங்குகளைவிட மேலானது என்பதை அறிவீர்களா? இப்போது உங்களுக்கான விளக்கம் கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன். கூடுதல் விபரம் அறிய, இந்த காணொளி உதவும்.

பஞ்சபூத நவக்கிரதவங்களை யார் வேண்டுமானாலும் இயற்றமுடியுமா? எப்படி? ஏன்? #Vethathiriya

வாழ்க வளமுடன்

In what way does Vethathiriyam support life? So what's so special about it? Isn't it a collection of spiritual truths that have already been told by many? How can it be right to call it Vethathiriyam? Are you deceiving people?


வேதாத்திரியம் எந்த வகையில் வாழ்க்கைக்கு துணை நிற்கிறது? அப்படியென்ன அதில் சிறப்பு இருக்கிறது? ஏற்கனவே பலரும் சொன்ன ஆன்மீக உண்மைகளின் தொகுப்புத்தானே? அதை வேதாத்திரியம் என்று சொல்லிக் கொள்வது எப்படி சரியாகும்? மக்களை ஏமாற்றுகிறீர்களா?


இந்த கேள்வியை வரவேற்கிறேன். வேதாத்திரியம் குறித்து சராசரி பதிவாக சொல்லுவதற்கு மாறாக, இப்படியான கேள்விக்கு பதில் தரும்பொழுதுதான், சிறப்பான உண்மையை எல்லோரும் புரிந்து கொள்ள முடியும். வேதாத்திரியம் என்பது, வேதாத்திரி மகரிஷி அவர்கள், மெய்ப்பொருள் உண்மையை உணர்ந்தறிந்த, தன்னுடைய முப்பத்தைந்து வயது முதல், தொன்னூற்றி ஆறு வயது வரை, உலக மக்களை, ஆன்மீகத்தில் உயர்வடையச் செய்து, இன்பம், பேரின்பம், அமைதி என்ற வகையில் வாழ்வதற்கு வழிவகை செய்தவர் ஆவார். இன்னமும் அவருடைய சேவை, என்னைப்போன்ற ஆசிரியர்களால் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது.

நீங்கள் சொல்லுவதுபோல, ஆன்மீக உண்மைகள் பல, இந்த உலகில் இருக்கின்றன. ஆனால் அவை எல்லாம் சிதறிப்போய், உண்மை பலவாறாக திரிந்து போய்விட்டது. காரணம் எடுத்துச் சொல்லுபவர்கள், படித்திருக்கிறார்களே தவிர, உணர்ந்தறிந்தவர்கள் இல்லை. அப்படி இருந்தாலும் அவர்கள், மிகக் குறைவே. இதனால், யார் யாரோ, ஆன்மீகத்தின் வழியாக, உண்மை சொல்கிறேன் என்று, ஒப்பித்து, மக்களை, குறிப்பாக உங்களை ஏமாற்றிவிட்டார்கள்.  இந்த கேள்வி கேட்கும் நீங்களே ஏன் இந்த சேவையை, மக்களுக்குத் தரக்கூடாது? உங்களுக்குத்தான், பலரும் சொன்ன ஆன்மீகத்தின் தொகுப்புக்கள் குறித்த விபரங்கள் தெரிந்திருக்கிறதே? அந்த தகுதி போதுமே? அதைவிட்டுவிட்டு, வேதாத்திரியத்தை குறை சொல்வானேன்?

பக்தி, ஆன்மீகம், விஞ்ஞானம் என்று திசைக்கொன்றாக, பிரிந்துபோய், உண்மையறியாமல், வாழ்க்கைச்சூழலில் சிக்கித்தவித்த மக்களுக்கு, விளக்கம் அளித்திடவே, தான் அறிந்த மெய்ப்பொருள் உண்மையை விளக்கிட, உலக சமுதாய சேவா சங்கம் என்பதை துவங்கி, தன்னுடைய பயிற்சிகளை, முப்பத்தைந்து வயதிலேயே தொடங்கிவிட்டார். கவனிக்கவும், மெய்பொருள் உண்மையை நன்கு விளங்கிக் கொண்ட பிறகுதான். ஏதோ படித்தோம், பகிர்வோம் என்றில்லை.

தன்னுடைய அனுபவ விளக்கத்தை, மிகத்தெளிவாக வேதாத்திரி மகரிஷி பதிவு செய்கிறார். பக்தி கடந்த உண்மையே ஞானம் என்று வலியுறுத்துகிறார். எனினும் பருவத்திற்கு முன்பு வரை, பக்தி அவசியம் என்றும் சொல்லுகிறார். பருவம் வந்த அனைவருமே, பிரம்மஞானம் என்ற மெய்ப்பொருள் தத்துவம் அறிந்து கொள்ள பயிற்சி வடிவமைத்தார். சித்தர்களின் வெட்டவெளி தத்துவத்தை, வற்றாயிருப்பு, பேராற்றல், பேரறறிவு, காலம் என்ற வளம் கொண்டதாக தெரிவிக்கிறார். காந்த தத்துவத்தையும், பிரபஞ்ச பரிணாமத்தையும், உயிரின பரிணாமத்தையும், உங்கள் விஞ்ஞானத்தின் துணை கொண்டும் விளக்குகிறார். நான் யார்? என்ற கேள்விகான விடையை அறியத்தருகிறார். உண்மையை அறிய திணறும் விஞ்ஞானத்திற்கு, வழியும் காட்டுகிறார். அவ்வுண்மைகளை, உலக விஞ்ஞானிகள் கூட்டத்திலும் பகிர்ந்திருக்கிறார்.

நீங்கள் உங்கள் அறிவில், எல்லாம் ஏற்கனவே இருப்பதுதானே? இருந்தது தானே? என்று நினைத்தால் அது உங்களின் அறியாமை. எனினும், வேதாத்திரியத்தில் இணைந்து, இதையெல்லாம் தெரிந்து கொள்ளுங்கள் என்று நான் அழைக்கமாட்டேன். அது உங்கள் விருப்பம். உங்களின் உரிமை. ஆனால், விளக்கத்தை உங்களுக்குச் சொல்லவேண்டியது என்னுடைய கடமை. இங்கே ஒரு அன்பரின் வாழ்க்கை அனுபவ குறிப்பு காணொளி பதிவு, மற்றொரு புரிதலை உங்களுக்குத் தரலாம். 

உறவுகளோடு இனிய வாழ்க்கைக்கு வேதாத்திரியம் - pleasant life with relatives by Vethathiriyam

வாழ்க வளமுடன்.

-

I don't know why my spouse is at odds with me. Every day there is a problem. There is no peace between us. How will this be solved? Can a third person come and solve it?


வாழ்க வளமுடன் ஐயா. என்னுடைய வாழ்க்கைத்துணை ஏன் என்னோடு முரண்பாடு கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை. தினமுமே ஒரு பிரச்சனை உண்டாகிறது. எங்கள் இருவருக்குள்ளும் சமாதானம் கிடைப்பதே இல்லை. இது எப்படி தீரும்? மூன்றாம் மனிதர் வந்துதான் தீர்த்துவைக்க முடியுமா? விளக்கம் தருக.


இல்லறம் என்பது நீண்ட கால தொடராக வரும் நிகழ்வு. ஆணுக்கு பெண், பெண்ணுக்கு ஆண் என்ற வகையில் வாழ்க்கைத்துணை அமைவதும் இயற்கையின் உன்னதம். யாருக்கு யார் என்பதும் ரகசியமாகவும் இருக்கிறது. நாமே விரும்பி காதல் கொண்டு, திருமணம் நிகழ்த்தி, இல்லற வாழ்வை தொடங்கினாலும்கூட, அதில் இயற்கையின் பங்கு இருக்கிறது என்பதை நாம் மறந்துவிடுகிறோம். இல்லறமே சமூகத்தின் வளர்ச்சி நிலை என்று இருந்தாலும், சிலருக்கு திருமணம் தள்ளிப்போவதும் உண்டு, நிகழாமல் போய்விடுவதும் உண்டு. இதற்கும், நாம் அறியாத காரணம், நம்மோடு தொக்கி நிற்கிறது.

இல்லறம் என்பதின் நோக்கம், ஒருவரை ஒருவர் காத்துக்கொண்டு, அதன் வழியாக வாரீசுகளை உருவாக்கி, நிறைவாக வாழ்தல் ஆகும். இதில் வாழ்க்கைத்துணை என்பவர், நமக்கு சமமாக எப்போதும் அமைவதே இல்லை. நம்மைவிட உயர்வான, குறைந்த அறிவு, அனுபவ நிலை இதோடு கர்மா என்ற வினைப்பதிவு தாக்கமும், அதற்கான தீர்வும் என்றுதான் அமைவதுண்டு. ஒருவகையில் என்னிடம் இருக்கும் குறைகளை அவர் நிவர்த்தி செய்வார், அவரிடம் இருக்கும் குறைகளை நான் நிவர்த்தி செய்வேன் என்ற வகையில்தான், வாழ்க்கத்துணை அமைகின்றார். வெளிப்படையாக நமக்கு இது தெரியாவிட்டாலும்கூட, உள்ளாக இந்த ஏற்பாடுதான் இயற்கையால் அமைக்கப்படுகிறது.

இந்த ஏற்ற இறக்கம், உயர்வு தாழ்வு, பகிர்வு, சமன் செய்தல் என்பதை அறியாமல், என்னை திருத்துகிறாயா? என்று நாம் கேட்பதும். நீ சொல்லித்தான் நான் திருந்தவேண்டுமா? என்று முரண்படுவதும் அவசியமில்லை. கணவன் மனைவிக்குமான இல்லறத்தில் இன்பம் நிலைத்திருக்க, வேதாத்திரி மகரிஷி தரும் மூன்று முக்கியமான வழிமுறை 1) பொறுமை 2) விட்டுக்கொடுத்தல் 3) தியாகம் என்பவனவாகும். நான் இதையெல்லாம் செய்யமாட்டேன் என்று, கணவன் மனைவி இருவரும் முடிவெடுத்தால்? இல்லறம் எப்படி சிறக்கும்?

இருவரும் சண்டை போட்டுக்கொள்வது போல, அமைதியாக உட்கார்ந்து, ஏன் இப்படி நாம் சண்டை போடுகிறோம்? கடினமாக பேசிக்கொள்கிறோம் என்றும் விளக்கமாக கேட்டுக்கொள்ள வேண்டும். ஆனால், யார் இதை முதலில் ஆரம்பிப்பது என்றுதான் நாம் தள்ளிவைத்து, சண்டையை தொடர்கின்றோம் அல்லவா? நமக்குள்ளாக இருக்கும் பிரச்சனையை, எளிதில் நாமாகவே தீர்த்துக் கொள்ளமுடியும். மூன்றாம் மனிதர் தேவையில்லை. தேவையில்லாமல், அவருடைய பிரச்சனைவேறு உங்களோடு கலந்து, இன்னும் அதிகமாகலாம். உலக நாடுகளே சமாதானம் நோக்கி நகர்கையில், இரு நபர்கள், இல்லறத்தில் சமாதான தீர்வு காணமுடியாதா? நிச்சயமாக முடியும்.

இந்த காணொளி சில உண்மைகளை உங்களுக்குத் தரும்.

உங்களுக்கு வாழ்க்கைத்துணைவரை அமைப்பதில் பெரும்பங்கு யாருக்கு உண்டு?

வாழ்க வளமுடன்.

-

Do people benefit from this service called Vethathiriyam or not? Is there truth in the records? Can't you give it away for free? What is this Vethathiriya journey like?


பத்தோடு பதினொன்றாக, அரைகுறையாக ஏதோ சொல்லுகிறீர்கள். இதில் வேதாத்திரியம் என்று பெயர்வேறு? உங்களுக்குத் தோன்றுவதை சொல்லி பெரிய ஆளாக நினைக்கிறீர்கள். பதிவுகளில் உண்மை இல்லாமல், வளவள என்று பிதற்றலாக இருக்கிறது. பதிவுகள் இப்படி இருக்க, இதில் அடிக்கடி ஜாதகம் பார்க்கிறேன் என்று காசு வேறு கேட்கிறீர்கள். பதிவுகளை காண மெம்பராகவும் ஆகவேண்டுமா? யோகம் இலவசமாக எல்லோருக்கு போய்சேர வேண்டும் என்று உங்கள் மகரிஷி சொல்லவில்லையா? இதில் முகத்தை வேறு காட்டுகிறீர்கள், சகிக்கவில்லையே. பேசாமல் சும்மா இருக்கலாம்!




வழக்கமாக, ஒரு கேள்விக்கு பதில் தருவதற்கு பதிலாக, கருத்து பதில் தருவது இந்தப்பதிவாகும். மேலே நீங்கள் படித்த கருத்து, ஒருவர் தந்ததல்ல. என்னுடைய வேதாத்திரிய காணொளி பதிவுகளை கண்டுவிட்டு, சில அன்பர்கள் தந்த பின்னூட்டத்தின் தொகுப்பு இது. பல்வேறு காலங்களில் இப்படியான பின்னூட்டங்களும், இதைவிட பலமான பின்னூட்டங்களும் வந்தன. இப்போதும் ஏதோ ஒரு சில பின்னூட்டங்கள் இப்படி வருவதுண்டு. அவைகளை, நான் பொதுவெளிக்கு வரமால் தடுத்து அழித்துவிடுகிறேன். ஆனால் குறிப்பாக எடுத்து வைத்துக் கொள்வேன்.

இத்தகைய நபர்கள், தங்களின் ஈகோ என்ற தன்முனைப்பை, இப்படி பொதுவெளியில் காட்டிக் கொள்கிறார்கள். கூடுதலாக, ஏன் இணைய பிச்சை எடுக்கிறாய்? என்றுகூட கேட்டிருக்கிறார்கள். இவர்களுக்கு பதில் சொல்லுவது, எரியும் தீயில் பெட்ரோலை ஊற்றுவது போலாகும். என்னுடைய கைபேசி எண் பொதுவெளியில் தான் இருக்கிறது. அதோடு, கிட்டதட்ட இருபது ஆண்டுகளாக, உலக அளவில், இணைவழியில்தான், என் ஓவிய வேலைகள், கட்டண சேவையாக நடந்துகொண்டிருக்கிறது. அப்படி இருக்கையில், காசுக்காக, இந்த வேதாத்திரிய சேவை என்று இவர்கள் நினைக்கிறார்கள். அவர்கள் கைபேசி எண் கொடுத்தால், நான் பேசி பதில் தரவும் தயார், ஆனால் அவர்கள் அதை தருவதில்லை.

வேதாத்திரியத்தில், என்னுடைய பதினெட்டு வயதில், இணைந்து தீட்சை பெற்றுக்கொண்டு, இன்றுவரை (2024 வரை) கிட்டதட்ட, முப்பத்தியாறு ஆண்டுகள் அனுபவம் எனக்குண்டு. சும்மா வெறுமனே, வேதாத்திரியா காணொளி சேவை ஆரம்பிக்கவில்லை. அப்படி இருக்குமானால், நான் உங்களோடும், வேதாத்திரியாவோடும் ஏழு ஆண்டுகள் பயணத்தை பெற முடிந்திருக்குமா? ஆம். வேதாத்திரியா ஏழாவது ஆண்டில் பயணிக்கிறது.

வேதாத்திரி மகரிஷியிடம் ஒரு அன்பர் கேட்டார். ‘சுவாமிஜி, நீங்கள் ஆரம்ப காலத்திலே சொன்னதிற்கும், இப்போது சொல்லுவதற்கும் மாற்றமே இல்லையே. அதே கருத்தையே விளக்கிச் சொல்லுவதாகவே அமைகிறதே எப்படி?’

இதற்கு வேதாத்திரி மகரிஷி ‘நான், எல்லாமே முழுமையாக உணர்ந்த பிறகுதான், எழுதினேன், சொன்னேன். அதனால் அதில் உண்மை மட்டும் தான் இருக்கிறது. அதுதான் இன்னமும் தொடர்கிறது. மற்றவர்கள், தங்கள் ஆரம்ப காலத்தில் ஒருவகையிலும், உண்மை உணர்ந்த பிறகு மற்றொருவகையாகவும் சொல்லுவார்கள். ஆனால் நான், உண்மை உணர்ந்து கொள்ளாமல் எதையுமே பகிரவில்லையே’ என்று சொல்லுகிறார்.

இந்த அடிப்படையில்தான். நானும், 1988ம் ஆண்டு தீட்சை பெற்று, 1991ல் ஆசிரியர் பயிற்சி பெற்று, 1993 வரை, கற்றுக்கொடுக்கும் ஆசிரியராக சேவையில் இருந்தும், பொதுவெளியில் எதுவும் சொன்னதில்லை. 2018ம் ஆண்டு, மெய்ப்பொருள் உண்மை விளங்கிக் கொண்ட பிறகுதான், வேதாத்திரியா எனும் காணொளி தளத்தை ஆரம்பித்து, என் பதிவுகளை தந்தேன். எனக்கு இணையத்தில் கிடைத்த ஏமாற்றம், மற்ற அன்பர்களுக்கு கிடைக்கவேண்டாமே? என்ற நோக்கத்தில்தான், வேதாத்திரிய அன்பர்களுக்கு உதவும் வகையில், பதிவுகளை தந்துகொண்டு இருக்கிறேன்.

வேதாத்திரிய தத்துவ உண்மை மாறாமல், அதன் வழியிலே மட்டும் நின்று, வேறெந்த யோக, வேத, புராண, இதிகாச, யோகி, முனிவர், ஞானி, மகான், சாதனையாளர், தத்துவமேதை இப்படி எந்த கருத்துக்களையும் இணைக்காமல், எடுத்துக்காட்டாமல் பதிவுகளை தருவது வழக்கம். அந்த வகையில்தான். இந்த ஏழு ஆண்டு பயணம் தொடர்கிறது. அதற்கு மதிப்பளிக்கும் வகையில்தான், கிட்டதட்ட 38 ஆயிரம் அன்பர்கள், பகிர்வாளர்களாக இருக்கிறார்கள்.

வேதாத்திரி மகரிஷியின் கருத்துக்களை தருவதில், இது பத்தோடு பதினொன்றுதான். அதில் மாற்றுக் கருத்தில்லை. எனக்கு தோன்றுவதை சொல்லாமல், என் அனுபவத்தை, வேதாத்திரியத்தோடு சொல்லுகிறேன். அதுதான் உண்மை. நான் யார்? என்று எனக்குத் தெரியும். நான் எளியவன். எனக்கென்று பிம்மத்தை கட்டிக்கொண்டிருப்பவன் அல்ல. பதிவுகள் பிதற்றல் என்றால், ஏழு ஆண்டு பயணம் இருக்கமுடியுமா? அன்றாடம் வளரமுடியுமா?

கர்ம வினை குறித்த ஜோதிட ஆய்வு என்பது நன்கொடை சேவை. இதில் என்னுடைய பல்லாண்டுகால அனுபவ அறிவு, நேரம், ஆராய்ச்சி, முடிவு, திருத்தம், அதை ஒழுங்கு செய்து, கட்டுரையாக மாற்றுதல் என்று பல்வேறு செலவுகளும், வேலைகளும் இருக்கின்றன. உங்களுக்கு சும்மா தந்தால், எனக்கு கிடைப்பதெல்லாம் சும்மா இல்லையே?! அதற்கு நீங்கள் மாற்றுவழி செய்வீர்களா? விருப்பம் உள்ளோருக்கான அழைப்பு என்றுதான் தலைப்பு தந்திருக்கிறேன். அதை நீங்கள் படிக்கவில்லையா?!

வேதாத்திரிய பதிவுகள், முன்கூட்டியே பார்க்க, உறுப்பினர் சேவை உண்டு, இது யூடுயூப் தரும் சேவைதானே தவிர நான் ஏற்படுத்தவில்லை. என்வழியாக, யூடுயூப் நிறுவனமும் காசு பார்க்கிறது என்பதை நீங்கள் அறிவீர்களா?

யோகம் இலவசமாக எல்லோருக்கும் போய்சேர வேண்டும் என்று உங்கள் மகரிஷி சொல்லவில்லையா? இந்த கருத்தை, நீங்கள் ஆழியார் சென்று, அங்கே உள்ள தலைமை குழுவிடம் சொல்லுங்களேன். நான் ஒரு சாதாரணன். என்னிடம் சொல்லி பிரயோஜனம் இல்லை.

        முகத்தை காட்டக்கூடாது என்பதுதான் என்னுடைய எண்ணமும் முடிவும். ஆனால், என் வார்த்தைகளின் உண்மைத்தன்மையை தீர்மானிக்க முகம் அவசியம் என்பது எனக்குத்தெரியும். உங்களுக்கு சகிக்கவில்லை  என்பதற்காக, நான் முகத்தை மாற்றிக்கொள்ளவும் முடியாது. நீங்கள் இனி பார்க்காதீர்கள், என் முகத்தை இணையத்திலும், நேரிலும் கூட. போதுமா?!

இப்படியெல்லாம் பதில் சொல்லி, ஏனெய்யா உன் நேரத்தை வீணாக்குகிறாய்? என்று என் நண்பர் கேட்டார். ஆனால் இந்த பதிலை எல்லாம், அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அந்த தூண்டுதலும், URGEம் அவர்களுக்கு தேவைப்படுகிறது. இனி அவர்கள் திருப்தி அடையலாம். இனி பின்னூட்டம் தந்தாலும், அதற்கும் பதில்தர நான் தயார்.

வேதாத்திரிய காணொளி சேவையின் பயணம் குறித்த காணொளி, இதோ.

வேதாத்திரியாவும் நீங்களும் உண்மை தத்துவ விளக்கமும் ஏழாமாண்டு பயணமும் Vethathiriya & Your Realization
வாழ்க வளமுடன்.
-

Can anyone learn simple exercise? Is there an age for this? Can the physically weak and the sick do it?


எளியமுறை உடற்பயிற்சியை யார்வேண்டுமானாலும் கற்றுக்கொள்ள முடியுமா? அல்லது இதெற்கென்று வயது இருக்கிறதா? உடல் பலவீனமானவர்கள், உடல்நிலை சரி இல்லாதவர்களும் செய்யமுடியுமா? விளக்கம் தருக.


உடற்பயிற்சிகள் என்பது, மனிதனுக்கு ஊக்கமளிக்கும்  செயல்தானே தவிர வேறொன்றும் இல்லை. ஆனால் உடற்பயிற்சிகளை, தற்கால GYM பயிற்சிகளோடு முடிச்சுபோடக்கூடாது. கனமான பொருட்களை, தூக்குவது, சுழற்றுவது, தாங்குவது. இழுப்பது என்பது, உடலுக்கு வேறுமாதிரியான அழுத்தங்களை உருவாக்குவதாகும். ஆனால், வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சி என்பது, முற்றிலும் இயல்பான அசைவுகளைக் கொண்டது. மேலும், எந்த அளவுக்கு உடல் தாங்குமோ அதற்கு ஏற்றபடியே, எல்லாவிதமான அசைவுகளை தந்து, உறுத்தலோ, வலியோ இல்லாமல் பயிற்சியாக செய்வதாகும்.

பதிநான்கு வயது நிரம்பிய சிறுவர், சிறுமியர் செய்யமுடியும். அந்த வயதில் இருந்து, எளியமுறை உடற்பயிற்சிகளை செய்துவந்தால், மிகச்சிறப்பான உடல், மன அமைப்பை பெற்றுக்கொள்ளவும் முடியும் என்பது உறுதி. இந்த வயதில், உடற்பயிற்சிகளில் ஆர்வம் இருக்காது, என்றாலும், பெற்றோர்கள் அவர்களை ஊக்கப்படுத்தி கற்றுக்கொள்ளச் செய்யவேண்டும். 

பொதுவாகவே, எளியமுறை உடற்பயிற்சி வயது எத்தடையும் இல்லை. யார்வேண்டுமானாலும் கற்றுக் கொண்டு, செய்துவரலாம். ஒருநாளைக்கு ஒரு முறை, அதுவும் காலை, வெறும் வயிற்றில், காலைகடன் முடித்ததும் செய்து முடித்துவிட்டு, குளியல் என்பதை வழக்கமாக்கிக் கொள்ளலாம். மாலையில் எந்த பயிற்சியும் உடலுக்கு தருவது, சோர்வை தரும். ஆனால் தவம் செய்யலாம்.

ஏற்கனவே உடல் நலமின்மை, நோய் தொந்தரவுகள் கொண்டோர் கூட எளியமுறை உடற்பயிற்சி கற்றுக்கொண்டு, பயன்பெறலாம். எனினும் இங்கே ஆசிரியரின் ஆலோசனை தேவைப்படும். மற்ற எந்த பயிற்சிகளையும் விட, எளியமுறை உடற்பயிற்சி சிறப்பு. காரணம், வேதாத்திரி மகரிஷி அவர்கள், அடிப்படையில், சிறப்புத்தகுதி வாய்ந்த மருத்துவர். அதனால், இப்பயிற்சிகளை, முறையாக திருத்தி வடிவமைத்தே நமக்கு தந்துள்ளார்.

இந்த எளியமுறை உடற்பயிற்சியில் உள்ள, உடலுக்கான ஓய்வு என்ற பயிற்சியை, எழுந்து நடமாட முடியாத, படுத்த படுக்கையான மனிதரும் செய்யமுடியும் என்பது சிறப்பு. அதன் வழியாக அவர், மன அமைதியும், உடல் அமைதியும் பெறலாம். அந்த நோய் தாக்கங்களில் இருந்து விடுபடவும் வாய்ப்பு உண்டாகலாம். 

புதிதாக எளியமுறை உடற்பயிற்சி கற்க விரும்புவோருக்கு, இந்த காணொளி உதவும்.

எளியமுறை உடற்பயிற்சி கற்பதற்கு முன் நீங்கள் முக்கியம் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

வாழ்க வளமுடன்

-

Is death the only freedom from pleasure and pain? Or is it possible to be liberated while alive by some other means? Give an explanation.


வாழ்க வளமுடன் ஐயா, இறப்பு என்பதுமட்டும் தான் இன்ப துன்பங்களில் இருந்து விடுதலை தருகிறதா? அல்லது வேறு ஏதேனும் வழிகள் மூலம், வாழும்பொழுதே விடுதலை பெறமுடியுமா? விளக்கம் தருக.



இந்த கேள்வியின் வழியாக, இரண்டு நிலைகளை அறிந்து கொள்ள முடியும். ஒன்று, வாழ்ந்து கொண்டிருக்கும் பொழுதான, புரிதல் விடுதலை. இன்னொன்று முழுமையான விடுதலை. வாழும் பொழுதுதான் விடுதலை என்பது, தற்காலிகமானது. ஆனால், அதை புரிந்துகொண்டால், அடுத்து வரக்கூடிய அல்லது நிகழக்கூடிய இன்ப துன்பங்களை, விழிப்புணர்வாக ஏற்றுக் கொள்ள முடியும். அதை இயல்பாக கடந்து போகவும், பழகிவிடலாம். நாம் வருத்தப்படவும் வழியில்லை.

ஆனால், அப்படியில்லாமல், முழுமையான விடுதலை எப்போது கிடைக்கும்? என்ற கேள்விக்கு, வேதாத்திரி மகரிஷி அவர்கள், இப்படியான பதில் தருகிறார். ‘இந்த உலகில், தனியாக, நம்மை யாரும் காப்பாற்றிக் கொண்டிருக்கவில்லை. எல்லோரும் பிறந்தோம். வாழ்கிறோம். இறப்போம். இதற்கிடையில் உற்றார், உறவினர், நண்பர்கள் என்ற முறையில் சந்திப்புகள் நிகழ்கின்றன. அவை தினமும், நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. ஒன்றைப்போல ஒன்று இருப்பதில்லை. ஆனால் தொடர்ச்சியாக நினைவில் பதிவாகின்றன. அது தொகுப்பாகவும் இருந்து விடுகிறது. உண்மைதானே?’

‘எப்போது நினைத்தாலும், அந்த நினைவுகள் பசுமையாக இருக்கின்றன. அதில் இன்பமும் உண்டு, துன்பமும் உண்டு. கூடுதலும் உண்டு, பிரிதலும் உண்டு. இழப்பும் உண்டு, பெறுவதும் உண்டு. எனினும் அவையெல்லாம், நடந்து முடிந்தவைதானே? அது இப்போது இல்லை. இந்த நொடியில் அது இல்லை. நம் வாழ்க்கையில் நடந்துதான். நாம் அனுபவித்ததுதான். என்றாலும், நம்மைவிட்டு கடந்துவிட்டது தானே? புரிந்து கொள்ள கடினமாக இருந்தாலும், உண்மை இதுதான். உறங்கும் பொழுது, கனவு வருகிறது. ஆனால் அதை கனவு என்று கடந்துவிடுவதில்லை. அதிலும் எல்லா உணர்வும் உண்டு.’

‘நாம் கனவு காணும் போது, அதில் காணும் காட்சிகள், உண்மையாக, நடப்பவையாக தோன்றும். ஆனால் விழித்த பின்பு? மாயை என்று சொல்லும்படி ஒன்றுமே இருக்காது. எந்த ஒரு குறிப்பும், அடையாளமும் இருக்காது. அது போன்றே நம் வாழ்வை, நிரந்தரமானதாக நினைத்து, புலனலவில், அறிவில் கட்டுப்பட்டுச் செயல் புரியும் போதும் பல நிகழ்ச்சிகள் தொடர்பாக,  உருவாகின்றன. பிறப்பிற்கு முன்னும், இறப்பிற்கு பின்னும், உயிரின் நிலையை யூகித்து உணர்ந்தால், உலக வாழ்க்கையில், நாம் உருவாக்கிக் கொள்ளும் கருத்துக்கள் எல்லாம், என்னவாகும் தெரியுமா?’

‘எல்லாமே, கனவில் நடந்த நிகழ்ச்சிகள் போல, வலுவற்றுப் போகும். எல்லா உயிர்கட்கும், எல்லா வகையான துன்பங்களிலிருந்தும், விடுபட, இயற்கை ஒழுங்கமைப்பால் அமைந்துள்ள, ஒரு நல்வரம் தான், இறப்பு. ஆம். மரணம்தான், சீவ இன இன்ப துன்ப,  மாகடலைத் தாண்டும், உயர் நிகழ்ச்சி. என்று கவிதையில் எழுதியுள்ளேன்’ என்று வேதாத்திரி மகரிஷி பதில் தருகிறார்.

இந்த உலகில், ஆறாம் அறிவாக உயர்ந்து வாழும் நாம், அறியாமையில் சிக்கிவிடக்கூடாது. எனவே, அந்நிலை வரும்வரை காத்திருக்காமல், விட்டுவிடாமல், உண்மையை, சிந்தித்தும், யூகித்தும் அறிந்து, விழிப்புணர்வு பெறலாம். நமக்கு நிகழும் நிகழ்ச்சிகளை, ஒவ்வொடு கணமும் ஆராய்ந்து, விளங்கிக் கொண்டால், போதுமானதாகும்.

இந்த உண்மையை காணொளி பதிவாகவும் அறிந்து கொள்க!

வாழ்க வளமுடன்.

Why simple exercise? Why it is called by body penance? Give an explanation.


ஐயா, எளியமுறை உடற்பயிற்சி ஏதற்காக? ஏன்? உடல் தவம் என்று சொல்லப்படுகிறது? விளக்கம் தருக.


நம்முடைய இந்த உலக வாழ்க்கை, முதன் முதலில், அன்னையின் கருப்பைக்குள்ளாக உடலைக்கொண்டுதான் வடிவமைக்கப்படுகிறது. நாம் பிறந்தும் கூட, முன்று வருடங்கள் வரை, உடலை மட்டுமே வளர்த்தும் வந்திருக்கிறோம். அதுவும் நம்மால் அல்ல. அன்னை, தந்தை மற்றும் உறவுகளால் தானே? அதன் பிறகுதான் நமக்கென்று ஒரு பெயர் கூட இருக்கிறது என்று தெரியவருகிறது. அந்த வளரும் நிலையில் தான், தன்னையே நாம் அடையாளப்படுத்தவும் செய்கிறோம். நம் விருப்பு வெறுப்புக்களையும் வெளிக்காட்டுகிறோம்.

மூன்று வருடங்கள் வரை நமக்கு அடிப்படையாக அமைந்த உடலை, நாட்கள் செல்லச் செல்ல, அதில் கவனம் கொள்வதே இல்லை. அதனால்தான் இளமை கடந்த பிறகு, பலவிதமான உடல் சோர்வையும், நோய் தொந்தரவுகளையும் பெற்று துன்பத்தில் ஆழ்ந்து விடுகிறோம். 

இதெல்லாம் கவனத்தில் கொண்டுதான், இனிமேலாவது, உடலின் மேல் கவனம் செலுத்துக என்று வேதாத்திரி மகரிஷி அவர்கள் ‘எளியமுறை உடற்பயிற்சியை’ வடிவமைத்துத் தந்தார். இந்த உடலின்றி உலக வாழ்க்கை ஏது? நான் யார்? என்ற உண்மை அறியும் யோகப் பயணம் ஏது? அதனால், உடலின் மீது அக்கறை கொள்ள வேண்டும் என்பதற்காகவே, எளியமுறை உடற்பயிற்சி  உடல் தவம் என்று சொல்லப்படுகிறது.

இந்த உண்மையை, இந்த வேதாத்திரிய காணொளி வாயிலாகவும் அறியலாம்.

வாழ்க வளமுடன்.

What is the Truth of Vethathirya Kayakalpa yoga and how it come to this form as exercise?


ஐயா, காயகல்ப யோகப் பயிற்சி என்பது சித்தர்களின் புதிரா? அதை எப்படி இப்போதுள்ள பயிற்சியாக மாற்றம் பெற்றது என்று விளக்குவீர்களா?

சிவ வாக்கியர் என்ற சித்தர் பெருமகான், அம்மை அப்பன் என்று தொடங்கும் ஒரு கவியில், இப்படியாக ஒரு கவி இருக்கிறது.

மூலமாம் குளத்திலே முளைத்தெழுந்த கோரையை
காலமே எழுந்திருந்து நாலுகட்டு அறுப்பிரேல்
பாலனாகி வாழலாம் பரப்பிரமம் ஆகலாம்
ஆலம் உண்ட கண்டர் பாதம் அம்மைபாதம் உண்மையே!

இந்த கவி, காயகல்ப பயிற்சி உண்மையை, தெளிவாக தெரியப்படுத்துகிறது. ஆனால், அதை நாம் முழுமையாக தெரிந்துகொள்ள முடிகிறதா? இல்லை. ஆனால், தமிழ் படிக்கத்தெரிந்த அனைவரும், இதை படித்து ஏதோ புரிந்து கொள்ளலாம். அவ்வளவுதான். இந்த கவிதையின் கருத்துரை, விளக்கம் அறியமுடியாது. என்றாலும்கூட, நமக்கு புரிந்த அளவில் விளக்கம் சொல்ல வாய்ப்பு உள்ளது. அதை தனியே விளக்க வேண்டியதில்லை எனினும், ஒர் உதாரணமாக பார்க்கலாமே? 

மூலமாம் என்றால், மூலாதாரம் என்று அறியமுடிகிறது. அந்த மூலாதாரத்தில் கோரப்புல் விளைகிறது. அதை அதிகாலை எழுந்து, நாலு கட்டு கட்டுமளவுக்கு அறுக்கலாம். அப்படி அறுத்துக் கொண்டே வந்தால், பாலன் போல, இளவயது சிறுவன் சிறுமி போல, வாழலாமாம். பரப்பிரம்மம் என்று முழுமுதற்ப் பொருளையும் அறிந்து அதைப்போலவும் ஆகலாமாம். ஆலம் என்ற விஷத்தை உண்ட சிவனின் அடிசேர்ந்த வகையிலும், சக்தியை சரணடைந்த வகையிலும் இது உண்மை என்று இந்த கவிதை விளக்குகிறது’ என்று நாம் சொல்லிவிடலாம். ஆனால் இதன்படி செய்தால் அது காயகல்பம் ஆகிவிடுமா?

மூலாதாரம் எங்கே? என்று அறியவேண்டும். அங்கே கோரைப்புல் எப்படி இருக்கிறது? என்பது அறியவேண்டும். இதற்கு முன்பாக கோரைப்புல் அங்கே எப்படி வந்தது என்பதையும் அறியவேண்டுமே? நாலுகட்டு அறுக்கவேண்டும் என்றால் எப்படி? எதனால் அறுக்கவேண்டும்? அறுத்து எங்கே வைக்கவேண்டும்? இப்படி கேள்வி கேள்வியாக பிறக்கும்தானே?

        இப்படியாக பல நூறு சித்தர்கள், இத்தகைய காயகல்பம் என்ற தத்துவத்தை மறைமுகமாக சொல்லி இருக்கிறார்கள். இதன் அவசியம் அவர்களுக்கு, தங்கள் வாழ்நாளை மெய்பொருள் ஆராய்ச்சியில் செலவழிக்க அவசியமாகவும் இருந்ததுதானே!

இந்த சித்தர்கள் ஏனய்யா இப்படி குழப்புகிறார்கள்? என்று நமக்கு அங்கலாய்ப்பாக இருக்கிறது அல்லவா? ஆனால், இதுதான் சித்தர்களின் வழிமுறை. ரகசியம் காக்கும் குழூஊகுறி பாடல்கள் என்று சொல்லுவார்கள். மேலோட்டமாக ஒன்றும், உள்பொதிந்த அர்த்தத்தைக் கொண்டும் அதை வார்த்தைகளால் சொல்லுவதாகும். மேலும் முக்கிய காரணம், இந்த உண்மைகள், உண்மையை அறிந்து தேடுபவர்களுக்கு மட்டும் கிடைக்கவேண்டும் என்ற காரணமும் ஆகும்.

இதைத்தான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் ஆராய்ந்தார், பல்லாண்டுகள் அதை தேடித்தேடி, உணர்ந்தறிந்து, ஒழுங்குபடுத்தி, தானே செய்து பார்த்து, திருத்தங்கள் ஏற்று முழுமை செய்தார். அதுதான் நமக்கு, வேதாத்திரிய காயகல்ப யோக பயிற்சியாக நமக்கு கிடைத்திருக்கிறது. இதைக் குறித்த விரிவான காணொளி பதிவை இங்கே காணலாம். உண்மை அறியலாம்.

வாழ்க வளமுடன்.

Is it beneficial for us to multiply or biomagnetism gazing practice? Isn't it? How to retain it?


ஐயா, ஜீவாகாந்தம் பெருக்கப்பயிற்சி நமக்கு நன்மை தருகிறதா? இல்லையா? எப்படி அதை தக்கவைத்துக் கொள்வது?


ஜீவாகாந்தம் என்பது நம் உடலுக்குள்ளாக ஓடிக்கொண்டே இருக்கின்ற மின்சார சக்தி என்று உதாரணமாக கொள்ளலாம். இந்த சக்தி ஓட்டத்தின் வழியாகவே நம்முடைய அன்றாட செயல்பாடுகள், நினைவுகள், சிந்தனைகள், உணர்வு எல்லாமே நிகழ்கிறது. எண்ணங்களின் வழியாகவும், ஐம்புலன்களின் வழியாகவும் செலவாகிக் கொண்டும் இருக்கிறது. நம்முடைய உடலில் எப்போதும், போதுமான அளவில் இந்த ஜீவகாந்தம் இருக்க வேண்டியதும் அவசியம். இந்த இயற்கையும் அந்த ஜீவகாந்தத்தின் வரவையும், செலவும் கண்காணிக்கிறது என்பதும் உண்மை. ஒருவேளை ஏதேனும் வகையில், அதிகமான ஜீவகாந்த இழப்பை நாம் இழந்திட தயாரானால், இந்த இயற்கை, இனி உன்னால் முடியாது, பொறுமை என்று எச்சரிக்கிறது. தடுக்கிறது. இதை நீங்கள் அனுபவமாக உணரவும் முடியும்.

இதை ஏன் ஜீவகாந்தம் என்று அழைக்கிறார்கள்? காரணம் இருக்கிறது. மறை பொருளாக இருந்த இந்த ஆற்றலை, நம்முடைய சித்தர்கள் கண்டுணர்ந்து, காந்தம் என்றுதான் பெயரிட்டார்கள். இந்த காந்தத்தை, வேறெந்த வகையிலும் ஒப்பிட்டுப்பார்க்க முடியாது. உடலுக்குள்ளாக இருக்கும் இந்த ஆற்றல், ஜீவகாந்தம் என்றும், பிரபஞ்சத்தில் இருக்கும் இதேமாதிரியான ஆற்றல் வான் காந்தம் என்றும் அழைக்கப்படும்.

ஜீவகாந்த பெருக்கம் என்பது, நமக்குள் இருக்கும் ஆற்றலை பெருக்கிக் கொள்ளும் ஓர் வழிமுறை ஆகும். இருப்பு அதிமானால், நமக்கு குறைவில்லாத, நிறைவான நன்மை கிடைக்கும் அல்லவா? அதுதான் இந்த பயிற்சியில் உண்டாகிறது. ஆனால், இதை செலவிடாமல் பாதுகாக்கவும் வேண்டும்.

இதை இந்த காணொளி வழியாக அறிந்து கொள்வோம். இந்த காணொளியில், கருவுற்ற தாய்மார்களும், கர்ப்பிணி பெண்களுக்கும் இந்த ஜீவகாந்த பெருக்கப்பயிற்சி எப்படியான பலனை தருகிறது என்ற உதாரணத்தின் மூலம், உண்மையை நீங்கள் அறியலாம். 


வாழ்க வளமுடன்.

-

Does nature teach us a lesson in the result of action?


வினையிலே கிடைக்கின்ற பயனில் நமக்கு இயற்கை பாடம் நடத்துகிறதா?


        கர்மா என்ற வினை குறித்து, எவ்வளவு பேசினாலும் கூட, அதை நாமாக நம்முடைய அனுபவ அறிவோடு புரிந்து கொள்ளும் பொழுதுதான், அதன் சுமையும், அழுத்தமும், வீரீயமும் தெரியவரும். ‘இவ்வளவு காலமாக இப்படியாக ஒன்றை தெரிந்து கொள்ளாமல் போயிற்றே என்ற வருத்தமும் எழும். இனிமேலாவது மாற்றி அமைக்கலாம்’ என்ற நம்பிக்கையும் எழுந்துவிடும். இந்த கால சூழ்நிலையில், ஒவ்வொருவருக்கும் அப்படியான அனுபவம் கிடைக்க விரும்புவோம். ஏனென்றால், நம்முடைய, மனித பரிணாமத்தின், ஆறாம் அறிவின் எழுச்சியான பிறப்பையும், அதன் முழுமையையும், நிறைவையும் பெற்று, அனுபவித்து, இன்பமாக, சுகமாக வாழ்வதற்கு தடையாக இருப்பதே இந்த ‘கர்மா என்ற வினை’ தானே!

வேதாத்திரி மகரிஷி அவர்கள் விளக்கும் பொழுது, நமது முன்னோர்கள் நல்லது கெட்டது என்பதைத் தீர்மானித்துச் சிலவற்றைச் செய்யலாம், சிலவற்றைச் செய்யக்கூடாது என்னும் முறையிலே அனுமதி கொடுத்தும், தடை விதித்தும் வந்துள்ளார்கள். அவைகளெல்லாம் அந்தக் காலத்தை ஒட்டிய வாழ்க்கை முறைக்குப் பொருத்தமாக இருந்திருக்கும்.

நாம் இன்னும் அதிகமாக, ஆழமாகப் போனால் அந்தக் காலத்தில், ‘இதைச் செய், இதைச் செய்யாதே’ என்று சொல்வதற்கு அவர்கள் எடுத்துக் கொண்டது ‘சொர்க்கம், நரகம்’ என்ற இரண்டு கற்பனைகளே. நல்லவை செய்தால் கடவுள் ஒருவனுக்கு நல்ல இடத்தைக் கொடுப்பான்.  தீயவை செய்தால் தண்டிப்பான் என்று ஆசை காட்டியும், அச்சுறுத்தியும் நல்லன செய்யவும், தீயன தடுக்கவும், வேண்டிய அளவிற்கு மக்களுக்குப் போதித்து வந்தார்கள். விஞ்ஞான அறிவு வளர்ச்சி பெற்று வரும் இந்தக் காலத்திலே அந்த முறை எவ்வளவு நாட்கள் தொடர்ந்து பயன்படும்? 

இன்றைக்கு என்ன வேண்டும் என்றால், ‘ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விளைவு உண்டு’ என்ற இயற்கையின் நியதியை (Law of Nature) மனிதன் உணர்ந்து கொள்ளக்கூடிய அளவிற்கு சிறுவயதுலேயிருந்து படிப்படியாக விளக்கி அந்த உணர்வு ஒவ்வொருவருக்கும் வந்து விட வேண்டும்.  ‘இதைச் செய்தால் அதன் விளைவு இதுவாகத் தான் இருக்கும், அந்த விளைவைத் தாங்கிக் கொள்வதற்கு நான் தயாரா?’ என்ற அளவிற்கு ஒவ்வொருவரும் அவர்களுடைய செயலிலே விளைவாகத் தொக்கி நிற்கக் கூடிய ஒரு உண்மையை, இயற்கை அமைப்பை உணர்ந்து கொள்ளக்கூடிய முறையில் உள்ள கல்விதான் இன்றைக்கு அவசியம்.

செயலிலேயே விளைவு இருக்கின்றது என்பது தெளிவாகவும், உறுதியாகவும் உணர்ந்து கொள்ளப் பெற்றால் ஒரு ஆசை எழும்போது, அதனை நிறைவேற்றிக் கொள்ளச் செயலில் இறங்கும்போது நல்லது அடைவோம் என்று நன்மை செய்வான். இந்த முறையிலே தான் தற்காலத்திற்கு கல்வி முறை அவசியம். ‘வினையும் பயனும்’ என்ற முறையிலே ஒரு தெளிவான பொறுப்புணர்ச்சி ஏற்படுவது இன்று எல்லோர்க்கும் அவசியம். 

அந்த வழியில்தான், வேதாத்திரிய மனவளக்கலை அன்பர்களுக்கு உதவுகிறது. ஏன் மனவளக்கலையில் இணைந்து விளக்கம் பெறவேண்டும் என்று அறிவோமா? தனிப்பட்டதாக, என்றோ வாழ்வில் கிடைக்கும் அனுபவத்திற்கு பதிலாக, நாமாகவே விரும்பி, உண்மையை தெரிந்து கொண்டு, விளக்கம் பெற்று, நம்மையும், நமக்குப்பின் வரக்கூடிய சந்ததியினரின், மகிழ்ச்சியும், நிறைவுமான வாழ்க்கைக்கும் நாம் உதவமுடியும். நமக்கு முன்பாக, நம் பரம்பரையினரின் தொகுப்பான குறைகளைக்கூட, நாம் திருத்தி அமைத்துக் கொள்ளவும் முடியும்.

வாழ்க வளமுடன்.

-

There is no compulsion to change through yoga. Why?


யோகத்தின் வழியான, மாற்றத்திற்கு வரவேண்டிய கட்டாயம் ஏதுமில்லை. ஏன்?


இந்த உலகில் பிறந்து வாழும் நாம், யாருடைய பிள்ளை, யாருடைய வாரீசு, யாருடைய வம்சாவழி என்பதெல்லாம் தெரியும். அதை நாம் வளரும் பொழுதே தெரிந்தும் கொண்டு, அதை இறுக பற்றிக்கொண்டும் விடுகிறோம். நாம் வீடு, ஊர், நாடு என்பதையும்கூட விரிவாக, நுண்ணிய தகவல்களோடு அறிந்து கொள்கிறோம். சமூகம், உலகம் என்ற செயல்பாடுகளையும், அதன் பாரம்பரியம், வரலாறு, முன்னேற்றம் என்பதையும் தெளிவாகவே நாம் புரிந்தும் கொள்கிறோம். கல்வியும் இதற்கு உறுதுணையாக இருக்கிறது.

ஆனால், மனிதனாக இருக்கிற நாம், பரிணாமத்தின் எழுச்சியில் வந்த, ஆறறிவான ஜீவன் என்பதை ஒரு விளக்கமாக பெற்றுக்கொண்டாலும், ‘நான் யார்?’ என்ற கேள்வியை கேட்டுக்கொண்டதில்லை. நீ யார்? என்று மற்றவர்களை தயங்காமல் கேட்கும் நாம், நமக்குள்ளாக கேட்டுக்கொள்வதே இல்லை. அது குறித்த அக்கறையும் நமக்கில்லை. நம்மைச்சார்ந்த குடும்ப உறவுகள் யாரும்கூட சொல்லித்தரவும் இல்லை. ஆனால், ஏதோ ஒருவகையில், நண்பர்களோ, யாரோகூட, இப்படியாக ‘நான் யார்?’ என்ற கேள்வி இருக்கிறது. அதை கேட்டுப் பார்க்கவேண்டும். இதற்கு பக்தி கடந்த யோகம் உதவும் என்று சொல்லி இருப்பார்கள். உங்கள் சூழ்நிலைகளும் இப்படியான கேள்வியை உருவாக்கிடவும் வாய்ப்புண்டு.

ஒரு சிலருக்கு, இப்படியாக ‘நான் யார்?’ என்று தனக்குத்தானே கேட்டுக்கொள்வது அவசியம்தானா? என்றும் நினைப்பார்கள். ஆறாம் அறிவு ஜீவன் என்று தன்னை உயர்வாக சொல்லிக்கொள்கின்ற மனிதன், அந்த ஆறாம் அறிவை, அதன் பயனை, அற்புதத்தை அறிந்து கொள்ள வாய்ப்பு இருக்கும் பொழுது, அதை தவறவிடலாமா? மறுத்து ஒதுக்கித் தள்ளலாமா? எனினும் இவர்களை எல்லாம், வற்புறுத்தியோ, கட்டாயப்படுத்தியோ, யோகத்தின் வழியாக, நீங்கள் உண்மை உணர்ந்து கொள்ளுங்கள் என்று சொல்லமுடியாது. இதெல்லாம் தானாக வருவதும், தனக்குள்ளாக மலரும், சிந்தனையும் ஆகும். சட்டமோ, விதியோ ஏற்படுத்தி, நாம் ஒன்றும் செய்வதற்கில்லை. அப்படியான அவசியமும், அவசரமும் அவர்களுக்கு இல்லை.

இப்போது, உள் ஆர்வத்தோடும், மற்றவர்கள் சொல்லி, ஏதோ தவிர்க்கமுடியாத கட்டாயத்திலும், விருப்பத்திலும் யோகத்தில் இணைந்து கொண்டோம் என்று வைத்துக்கொண்டால், அடுத்தடுத்த நடவடிக்கை எப்படி இருக்கும்? என்ற கேள்வி எழும் அல்லவா? இந்த கேள்விக்கு, வேதாத்திரி மகரிஷி அவர்களே பதில் தருகிறார். எப்படி என்று பார்க்கலாமா?

வேதாத்திரி மகரிஷி அவர்கள், நம்மிடம் இப்படியாக விளக்குகிறார். மனவளக்கலை மன்றத்திற்கு வந்ததால் என்னென்ன நன்மைகள் வந்தன? சினிமாவுக்கு, கோயிலுக்குப் போனதால் என்னென்ன நன்மைகள் வந்தன? இரண்டு மாதங்கள் கழித்து மனதுக்கு, தெளிவோ, அமைதியோ, வெற்றியோ, மகிழ்வோ இருக்கிறது என்றால் அதைப் பின் பற்றி வாருங்கள்.

இல்லை, இதைவிட எனக்குக் கோயிலுக்குப் போனதனால், சினிமாவுக்குப் போனதனால் நன்றாக இருக்கிறது என்று சொன்னால், இன்னும் சில நாட்களுக்கு அதையே தொடருங்கள்.

ஆனால், மனவளக்கலை மன்றம் மனிதனை மனிதன் ஆக்க வல்லது. மனதைத் திடப்படுத்த வல்லது. மனது திடம் இல்லாததனால்தான் வாழ்க்கைச் சிக்கல்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை; தாங்கிக் கொள்ள முடியவில்லை; அதைப் போக்கிக் கொள்ள முடியவில்லை. அப்போதுதான் சினம் உண்டாகிறது. துன்பம் உண்டாகிறது.

மனதிலே நல்ல வலு இருக்குமேயானால் இதெல்லாம் தானாகவே போக்கி விட முடியும். உங்கள் கையில் ஏதேனும் பொருள் இருக்குமேயானால், அப்போது விருந்தினர் வந்துவிட்டால் அச்சமில்லை. உட்காருங்கள். இதைச் சாப்பிடுங்கள். அதைச் சாப்பிடுங்கள் என்பீர்கள். உங்கள் கையில் பொருள் இல்லையானால் எப்படி இருக்கும்? சோர்வு இருக்கும்.

அதே போல, மனம் வளமாக இருக்குமேயானால் ஏதேனும் புதிய சிக்கல்கள் தோன்றும்போது அதைச் சோர்வு இல்லாது தாங்கிக் கொள்ளலாம். வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்கள் எதையெடுத்தாலும் போக்கிவிட முடியும் என்று நினைக்காதீர்கள். அல்லது பிறருடைய வாழ்க்கைச் சிக்கல்களை நாம் போக்கிவிட முடியும் என்ற அகம்பாவமும் யாருக்கும் வேண்டாம். அவரவர்களே போக்கிக் கொண்டால் தான் முடியும். அதற்கு மற்றவர்கள் உதவி செய்ய முடியும்; ஒத்துழைக்க முடியும்.

ஒரு கிணற்றுக்கு, இன்னொரு கிணற்றிலிருந்து குழாய் மூலம் நீரைச் செலுத்தி நிரப்ப இயலாது; அந்தக் கிணறு நிறையாது. அதனுடைய ஊற்று வந்தால்தான் எப்போதுமே கிணறு நிரம்பும். 

ஒருவருக்கு ஏதோ ஒரு சிரமம் இருக்கிறது. பத்து ரூபாய் கொடுத்தோம். அந்தச் சிரமம் போய்விட்டது என்பது இல்லை. இன்றைக்குப் பத்து ரூபாய் கொடுத்தோம் என்றால் நாளைக்கு இருபது ரூபாய் கொடுக்க வேண்டிய நிலைவரும்.

ஒவ்வொருவருடைய உள்ளமும் ஒரு பெரிய சுரங்கம். அறிவாலும், ஆற்றலாலும் அதை வளர்க்க வேண்டும். அதைத் தான் 'மனவளக்கலை மன்றம்' (Simplified Kundalini Yoga) செய்கிறது.

உடலாலும் மனதாலும் மனிதனை மேல் நோக்கி வரச் செய்ய அவர்கள் செய்ய வேண்டிய செயல்களையெல்லாம் வழிப்படுத்தி வாழ வைக்கத் தேவையானப் பயிற்சிகளை அளிக்கிறது. அதை அனுபவத்தினால்தான் தெரிந்து கொள்ளவும் முடியும்.  எனவே, நமக்கு கிடைத்த அரிய வாய்ப்பை, பிறவியின் நோக்கமும், கடமையும் தீர்க்க பயன்படுத்திக் கொள்ளலாம்.

வாழ்க வளமுடன்!

-

What is Divinity Penance? For what is this penance performed? Who is it? When? How to do it? Can you explain?


வாழ்க வளமுடன் ஐயா, இறைநிலை தவம் என்பது என்ன? எதற்கான இத்தவம் செய்யப்படுகிறது? அதை யார்? எப்போது? எப்படி செய்யலாம்? விளக்கமுடியுமா?


இத்தனை கேள்விகளை ஒன்றாக அடுக்கி இருப்பதை பார்த்தால், நீங்கள் வேதாத்திரியத்தின் வெளியே இருந்து கேள்வி கேட்பதாக தெரிகிறது. உங்களுக்கு பதில் தருவதின் வழியாக, சில வேதாத்திரிய அன்பர்களுக்குமே உதவக்கூடும் என்றும் நினைக்கிறேன். வாழ்க வளமுடன்.

இறைநிலை தவம் என்பது, வேதாத்திரியத்தில் மட்டுமே வழங்கப்படும் தவமாகும். அதுவும் நேரடியாக, வேதாத்திரி மகரிஷி அவர்களே வழிநடத்துவதாக அமைந்திருக்கும். வேதாத்திரியத்தின் முழுமையையும், மெய்ப்பொருள் உண்மையையும் உண்டாகித்தரும் தவமாக உள்ளது. வேதாத்திய பாடங்கள், அகத்தாய்வு பயிற்சிகளான எல்லாம் பூர்த்தி செய்து, பிரம்மஞானம் அறிந்து, மற்றவர்களுக்கு அவ்வுண்மையை விளக்கித்தரும் அளவில், அறிந்துகொள்ள உதவும் தவமே ‘இறைநிலை தவமாகும்’. அப்படியான பயிற்சியின் முடிவில், இத்தவம் கற்றுக்கொண்டாலே, ஆசிரியராகிவிட முடியுமா? என்றால் அதுதான் இல்லை.

இறைநிலை தவம், தொடர்ந்து செய்து, அதை நாம் அனுபவமாக்கிக் கொள்ளவேண்டியது அவசியம். மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் சொல்லுவது போல, ‘மனதின் அடித்தலமே நிலைபொருள், அது தெய்வம்’ என்ற வகையில், ஒருமுனையில் நாமும், மறு முனையில் மெய்ப்பொருளும், இணைந்திருக்கும் நிலையை உணர்ந்து, அந்நிலையிலேயே இருத்தல்’ என்பதை அனுபவமாக பெற வேண்டும். இதற்கு எவ்வளவு காலம் ஆகும்? அது அவரவருடைய, பயிற்சி, முயற்சி, ஆராய்ச்சி, அனுபவம், கர்ம வினை, அகத்தாய்வு ஆகியன துணையாக இருந்து உதவும். எனவே நாம் அக்காலத்தை கணிக்க முடியாது.

இந்த இறைநிலை தவம், முழுமையாக நம்மை, வேறொரு தளத்திற்கு கொண்டு செல்லும் அல்லது உயர்வைத்தந்து முழுமையை தரும் என்பது உண்மை. இது பொதுவெளியில் இல்லை. மற்ற எந்த யோக சேவை மையங்களிலும் இல்லை. இதற்கு முன்பும் எந்த ஒரு வகையில், இத்தவம் இருந்ததும் இல்லை என்பதே உண்மையாகும். முழுமையாக, தானாக, தான் உணர்ந்த உண்மையை, அன்பர்களுக்காக, அவர்களின் உயர்வுக்காக, வேதாத்திரி மகரிஷியே இத்தவத்தை வடிவமைத்து, நேரடியாக நடத்தியும் தந்தார். அதுவே இன்றும் தொடர்கிறது.

        சித்தர்களும், ஞானிகளும், மகான்களும், மெய்யியளாலர்களும் கண்ட மெய்ப்பொருள் உண்மையை, தவத்தின் வழியாக, உங்களுக்குள் உணர்த்தித்தருவதே ‘இறைநிலை தவத்தின் தத்துவமாகும்’. இதை நீங்களும் நானும் வார்த்தையால் விளக்கிக் கொள்ள முடியாது.

இந்த இறைநிலை தவத்தை எப்படிச் செய்யலாம்? அதை வேதாத்திரிய பாடத்திட்டத்தின் வழியாக உங்களுக்குச் சொல்லித்தருவார்கள். அதை நான் இங்கே விளக்கினால், நீண்டு எழுதிக்கொண்டே செல்லவேண்டும். பதிவு இப்போதைக்கு முடியாது. எனவே, நேரடியாக, வேதாத்திரியத்தில் இணைந்து கற்றுக்கொண்டு, இறைநிலை தவத்தை செய்யலாம். அதுதான் உங்களுக்கான உண்மை விளக்கத்தை தரும். 

இந்த இறைநிலை தவம் செய்வதற்கு, எந்த நேரமும் தனியான அமைக்கப்படவில்லை. பிரம்ம முஹூர்த்தம் என்ற அதிகாலை 3:30 என்றெல்லாம் கடின அவசியமில்லை. அதிகாலை, பகல், மாலை, இரவு என்ற வித்தியாசமும் பார்க்க வேண்டியதில்லை. அதுதான் இந்த இறைநிலை தவத்தின் சிறப்பும் ஆகும்.

முக்கியமாக ஒன்றை, இங்கே சொல்லுகிறேன். இந்த இறைநிலை தவத்தின் வழியாக, நம்முடைய உடலில், எந்த ஒரு ஆதார சக்கர மையங்களும் தூண்டப்படுவதில்லை. அதனால் ஏற்படக்கூடிய கடினமோ, சிக்கலோ, பயமோ அவசியமும் இல்லை. நம்முடைய மனமே இதில், இத்தவத்தில் முக்கிய பங்காற்றுகிறது. நம்முடைய மனமே அந்த அனுபவத்தையும் பெறுகிறது, உயர்கிறது.

இறைநிலை தவம், வேதாத்திரியத்தின் முழுமை மட்டுமல்ல. ஒவ்வொரு மனிதனுன் முழுமையான உண்மையையும், உயர்வையும் தரும் தவமும் ஆகும்.

வாழ்க வளமுடன்.

-


What are the differences between Vedanta and Siddhanta? What can be considered useful? How does it work?


வேதாந்தம் என்பதற்கும், சித்தாந்தம் என்பதற்கும் உள்ள வித்தியாசங்கள் என்ன? எதை பயனுள்ளதாக கருதலாம்? எப்படி பயனாகிறது?

அந்தம் என்ற வடமொழி, முடிவான உண்மையை குறிக்கும் ஒரு சொல்லாகும். வேதம் என்பது உயர்வான உண்மை, மாற்றுக் கருத்தில்லாதது என்றும் பொருள் தரும் சொல்லாகும். அது மதிப்பானது என்ற தகுதியையும் பெற்றிருக்கும். பொதுவாகவே, வாழ்ந்த முன்னோர்களின் வழியாக, மனித வாழ்வை உயர்த்தக்கூடிய அருளுரைகள் இதில் அடங்கி இருக்கும். ஓவ்வொரு நிகழ்விலும், இயற்கையோடும், இறையாற்றலோடும் ஒருங்கிணைந்து, அறிந்து உணரப்பெற்ற உண்மைகளின் தொகுப்பு வேதம், அதை சொல்லும் வழிமுறையே வேதாந்தம் என்றாகிறது. உலகில் பல்வேறு, பாரம்பரியமான வேதங்கள் இருந்தாலும்கூட, இந்தியாவில் இருக்கின்ற வேதம் மிகச் சிறப்பானது. முழுமையானது என்பதை ஐயமில்லை. உலகுக்கே வழிகாட்டியாகவும் அமைந்திருக்கிறது.

சித் என்றால் உயிர் ஆகும். இந்த உயிரை ஆராய்ந்து, அதன் பஞ்ச பூதத்தின் முதன்மையான நிலையையும் அறிந்து கொண்டு, அந்த உயிரின் மூலமான, வெட்டவெளி என்ற மெய்ப்பொருள் நிலையையும் உணர்ந்து அறிந்தவர்கள் சித்தர் என்றாயினர். சித் என்ற உயிர் உண்மை வழியாக, மூலமும், முடிவான உண்மையையும் சொல்லும் பொழுது, அது சித்தாந்தம் என்றாகிறது. சித்தாந்தம் என்பது, சித்தர்கள் வழியாக, தமிழ்நாட்டில் தான் உருவானது. அக்காலம் முதல், உலகெங்கும் பரவி உள்ளது. எனினும் அதன் அடையாளம் பல்வேறு வகைகளில் சிதறிவிட்டது. வேறு வேறு பெயர்களில் மாற்றம் பெற்றுவிட்டது. ஆனால், சித்தாந்தத்தின் ‘மூலம்’ அதிலிருந்து விலகவில்லை.

வேதாந்தம் என்பது அறிவுக்கு விளக்கம் அளிப்பது என்றால். சித்தாந்தம் அந்த அறிவையே அறிந்துணரத் தருவதாகும். வேதாந்தம் கேட்டு, படித்து, சிந்தித்து ஏற்றுக்கொள்வதாகும். சித்தாந்தமோ உடல், மன, உயிருக்கான பயிற்சிகளை உள்ளடக்கியதாகும். இந்த இரண்டுக்குமான வித்தியாசத்தை, வார்த்தைகளால் விளக்குவதை விடவும், அனுபவமாக பெறுவதுதான் சிறந்தவழி. வெற்று வார்த்தைகளில் வித்தியாசப்படுத்தினால், அதன் தரத்தை கொச்சைப்படுத்துவதாக அமைந்துவிடும். எனவே கவனம்.

இந்த இடத்தில், மகான் வேதாத்திரி மகரிஷி அவர்களின், விளக்கமான கருத்துக்களையும் அறிவோம். ‘தானே அவனாகவும் அவனே தானாகவும், சிவனே சீவனாகவும்,  சீவனே சிவனாகவும் இருக்கும் நிலையை உரைமூலம் கேட்டு அறிவதோடு மனதைப் பழக்கி, அந்த மனதின்னுள்ளேயே செலுத்தும் தவத்தின் மூலமாகவும் உணர்ந்து பார்க்கும் போது தான் தெளிவோடு திருப்தியும் வரும்.  இதை நமது மனவளக்கலை (Simplified  Kundalini Yoga - SKY) மூலம் சாதிக்க முடிகிறது.  தோற்றங்களெல்லாம் பஞ்சபூதக் கூட்டென்றும் பஞ்ச பூதங்கள் அணுவின் திரட்சி வேறுபாடென்றும், அணு இறைநிலையின் இயக்க நிலையென்றும் விளக்கம் சொல்வது வேதாந்தமாகும்.'

மேலும், ‘தத்துவ ஞானியின் வாய் மொழியாகவோ அல்லது நூல் வழியாகவோ ஞான விளக்கத்தைப் பெற்றுக் கொண்டால் மட்டும் போதாது.  முறையான அறிவுப் பயிற்சியும் வேண்டும்.  அக நோக்குப் பயிற்சி என்னும் உள்ளொடுங்கு பயிற்சியின் மூலம் அறிவை உயிரில் ஒன்றச் செய்து, உயிரே தனது அடக்கத்தில் தன் மூலமான மெய்ப் பொருளாக மாறி நிற்கும் தன்மையை அனுபோக பூர்வமாக பெற்றாக வேண்டும்’ என்கிறார்.

கூடுதலாக, ‘பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் உயிர்கள் அனுபோகம் பெறுவது இன்பம் துன்பம் இரண்டு தான் உண்டு. அந்த இன்ப துன்பங்கள் உணரப் பெறுவது மனதிலே. ஆராய்ச்சியில் உயிரே மனமாகவும் இறைவனே உயிராகவும் இருப்பதைக் கண்டு அந்த இறைவனே நானாகவும் எல்லாமாகவும் இருக்கிறான் என்று சொல்வது சித்தாந்தமாகும். 

துன்பத்தின் காரணத்தை அறியாதாரும் துன்பத்தைத் தோற்றுவிக்காமல் இன்பம் மட்டுமே விளையத்தக்க வகையில் தங்கள் வாழ்வை அமைத்துக் கொள்ளும் விதமாக இன்ப துன்ப இயல்பறிந்தோர் வகுத்த வாழ்க்கை முறையே பக்திமார்க்கம்.’என்று தெளிவாக விளக்கம் அளிக்கிறார்.

வாழ்க வளமுடன்.

-

Why is it exalted as divine power? How does it relate to us? What is the need to respect it?


இறையாற்றல் என்று உயர்வாக சொல்லப்படுவது ஏன்? நம்மோடு எப்படி தொடர்புகொண்டதாகிறது? அதற்கு மதிப்பளிக்க வேண்டிய அவசியம் என்ன?


பொதுவாகவே, நாம் வாழும் காலத்தில், இறை என்பது குறித்த சந்தேகங்கள் நிறைய உண்டு. காரணம் பன்னெடுங்காலமாக, அதை நாம் ஆராயாமல், உண்மை அறியாமல், பக்தியில் மட்டுமே திளைத்து இருந்ததுதான். பக்தி என்பது, மெய்ப்பொருளை விளக்கும் சிறு முயற்சி, அடிப்படை தத்துவம் மட்டுமே. அந்த பக்தியின் வழியாக, இறை என்று சொல்லப்படுவது எது? நான் யார்? இயற்கை என்பது என்ன? எனக்கும் அதற்கும் உள்ள தொடர்பு என்ன? என்று யோகத்தின் வழியாக உணர்வேண்டியது அவசியம்.

ஆனால், உண்மை அறிகிறேன், அறிந்துவிட்டேன் என்று, தான் சொல்லும் விளக்கங்களிலேயே, நிலைத்து நிற்கமுடியாது தடுமாறும் விஞ்ஞான அறிவின் துணை கொண்டு, இறை என்பதே இல்லை என்று ஒதுக்கித்தள்ளிவிடும் நிலைதான் நம்மோடு இருக்கிறது. ஆனால் உண்மை நிலைத்து இருக்கிறது. உங்களுடைய  இந்த மூன்று கேள்விக்கும், பதிலாக, குரு மகான் வேதாத்திரி மகரிஷி என்ன சொல்லி விளக்கம் தருகிறார் என்று பார்க்கலாமா?

ஒரு கைப்பிடி பயறை எடுத்து ஒரு கோப்பை நீரில் போட்டால் சில மணி நேரத்தில் அந்தப் பயறு எல்லாவற்றுக்குள்ளும் தண்ணீர் நிறைந்து விடும். அதே நேரத்தில் பயறும் தண்ணீருக்குள் இருக்கும். அதாவது சுருங்கச் சொன்னால் தண்ணீருக்குள் பயறு, பயறுக்குள் தண்ணீர். அதே போல இருப்பு நிலையான சுத்தவெளியானது எல்லா விண்துகள்களையும் விண்துகள்களான பொருள்களையும் சூழ்ந்தும் ஊடுருவியும் இருக்கிறது. இயக்கக்களமாகிய பிரபஞ்சம் முழுவதும் நிறைந்திருக்கிற இருப்பு நிலையானது, நிழல் அலைத் துகள்களால் நிரம்பப் பெற்றிருக்கிறது. ஆகவே, துகள்களுக்கு இடையே உள்ள வெளியானது வான்காந்தக் களமாகத் திகழ்கிறது. 

இத்தகைய பிரபஞ்சக் களத்தின் ஒரு சிறு பகுதியில் உள்ள இந்தப் பூமியானது சூரியனைச் சுற்றி வலம் வருகிறது. பூமியில் உள்ள எல்லா உயிரினங்களும் பரிணமித்து, வளர்ந்து, வாழ்ந்து, மறைந்து இறுதியிலே வான்காந்தக் களத்திலே கலக்கின்றன. பிரபஞ்சத்தின் வாழ்க்கையோடு ஒப்பிடும்போது மனிதனுடைய வாழ்க்கை மிகமிகச் சிறியதாகும். மனிதனின் இந்தக் குறுகிய வாழ்க்கைக் காலத்திற்குள் அவனது உடலிலே ஏற்படும் பல்வேறு விந்தைகளை யாரும் இன்னும் தெளிவாக விளங்கிக் கொள்ளவில்லை. 

  வாழ்க்கையை முழுமையாக நிறைவோடு வாழும் வகையில் வாழ்க்கையின் அடிப்படைத் தத்துவங்களை அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். பிரபஞ்சத்தின் பரிணாம வளர்ச்சி, பிரபஞ்சத்தின் இயக்கம் இவற்றைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது நாம் உள்ளுணர்வாக உணரக்கூடிய மூன்று அடிப்படைத் தத்துவங்களான சுத்தவெளி, உயிர்ச்சக்தி, காந்தம் ஆகியவற்றின் சிறப்பை அறியலாம். இந்த மூன்றைப் பற்றியும் ஒருவர் தெளிவாகவும், சந்தேகம் இல்லாமலும் தெரிந்து கொள்வதற்குத் தவறினால் அவர் தத்துவ ஞானத்தையும் சரி, விஞ்ஞானத்தையும் சரி ஆழமாகவும், பூரணமாகவும் தெரிந்து கொள்ள முடியாது.

மகரிஷியின் இத்தகைய விளக்கம், உங்களுக்கு துணையாக இருக்கும். எந்த ஒன்றையும் நுணுகி, ஆராய்ந்து பார்க்கவே, மனிதனுக்கான, மனிதனுக்கு மட்டுமான ஆறாம் அறிவு அவனுக்கு கிடைத்திருக்கிறது. எந்த உண்மையையும், இயற்கையையும் அவன் ஒதுக்கித் தள்ளுகிறானோ, அந்த இயற்கையே அந்த ஆறாம் அறிவையும் அவனுக்கு வழங்கி இருக்கிறது. உண்மை விளக்கம் பெறவும், அறிவின் முழுமையை பெறவும், யோகமே துணையாகிறது.

வாழ்க வளமுடன்.

-

In this living world, how can we be aware of our actions and duties?


வாழ்கின்ற இந்த உலகில், நம்முடைய செயல்களிலும், கடமையிலும், விழிப்புணர்வாக இருப்பது எப்படி?




கடமையில் விழிப்புணர்வு என்பது, ஓவ்வொரு மனிதனுக்கும் தேவையானது. தன்னுடைய வாழ்வில், துன்பமும், சிக்கலும் தானாக, உருவாக்கிக் கொள்ளாத நிலை, இங்கிருந்துதான் கிடைக்கும். கவனமும், பாதுகாப்பும் தரும்.
இன்ப வாழ்வுக்கு, திறந்த மனப்பான்மையோடு கருத்தை மனதில் வாங்கிக் கொள்வது (Receptivity) அதற்கேற்ப தன்னை மாற்றிக் கொள்வது (Adaptability) குற்றத்தைக் கண்டபோது, அதை மன்னித்து மறந்து விடுவது (Magnanimity) ஆகிய மூன்று தன்மைகள் நம் எல்லோரிடமும் வளர்க்கப்பட வேண்டும். இதோடு தீமையை நீக்கி, நன்மையே செய்தல் (Creativity) என்ற தன்மையும் வேண்டும்.
பிறர்க்கு உதவி புரிவதில் கூட நாம் இக்காலத்தில் விழிப்போடு இருக்க வேண்டியுள்ளது. உதவி தேவைப்படுபவர்கள் தான், அதற்கு தகுதியுடையவர்கள் தான் நம்மை நாடி வருகிறார்கள் என்று நினைப்பதற்கில்லை. 
அப்படித் தகுதியுடையவர்களாய் இருப்பினும், தகுதி பெற்ற எல்லோருக்குமே நாம் உதவி செய்ய முடியுமா என்பதையும் நாம் சிந்தித்துப் பார்த்துக் கொள்ள வேண்டும். 
நாம் ஒரு கனி மரம் வளர்க்கின்றோம். கனிகளை மட்டும் தான் கொடுத்து உதவி செய்யலாமே ஒழிய மரத்தையே வெட்டிக் கொடுத்துவிட்டால் பிறகு கனி எப்படிக் கிடைக்கும்? 
பொருள் பறிக்கவே சிலர் பற்பல வேடங்களில் நம்மை நாடி வரும் இக்காலத்தில், பிறர்க்கு உதவி செய்வதில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியுள்ளது, 
பிறர் உதவி என்பது கூரிய ஆயுதம் போன்றது. தவறிமாட்டிக் கொண்டால் அதற்கு நாமே பலியாகி விடுவோம். விழிப்பு நிலையோடு தான், நம் அளவுக்குத் தக்கபடி தான் நாம் பிறர்க்கு உதவ வேண்டும். 
நீதிபதி முன் நிறுத்தப்படும் குற்றவாளியை, எப்படி அந்நீதிபதி அவன் குற்றமற்றவனாகவும் இருக்கக்கூடும், என்று விசாரணையை துவக்குகிறாரோ, அதேபோல் நம்மிடம் உதவி நாடுபவரை "இவன் ஏன் ஏமாற்றுக்காரனாய் இருக்கக் கூடாது" என்று ஒரு கேள்வி எழுப்பிக் கொண்டு, பிறகு நல்லவன் தான் என்று சோதித்து அறிந்த பிறகே அளவோடு உதவி அளிக்க வேண்டும்.
உலக கடமையில் ஈடுபட்டுள்ள நமக்கு பல பொறுப்புகள் உண்டு. எவ்வளவு விழிப்புடன் நம் கடமையைச் செய்கிறோமோ அந்த அளவுக்குத் தான் நாம் வாழ்வில் இனிமை காண முடியும். இத்தகைய தெளிவான அனுபவ விளக்கத்தை, பாமர மக்களின் தத்துவஞானி, வேதாத்திரி மகரிஷி அவர்கள் நமக்கு அறியத்தருகிறார்.

வாழ்க வளமுடன்.

What about the soul attachment and how to avoid it? Notes by Vethathiri Maharishi


ஆவி இறங்குதல், உடல்விட்ட ஆன்மாக்கள் நம் உடலில் பீடிக்காது இருக்க வழிகள் என்ன? எப்படி தடுத்துக் கொள்ளலாம்?


கேள்வி:

சுவாமிஜி! உடலைவிட்ட ஆன்மாக்கள் நம் உடலில் புகாது இருக்க (Immunity against Soul attachment) என்ன செய்ய வேண்டும்?


வேதாத்திரி மகரிஷியின் பதில்: 

Soul attachment என்று சொல்லக்கூடிய உடலை விட்ட ஆவியின் தொடர்பெல்லாம் உணர்ச்சிவயப்பட்ட நிலையிலே உள்ளவர்களிடந்தான் வந்து சேர முடியும். தவத்தின் மூலம் நம் உயிர் இயக்கத்தை, உயிரிலிருந்து எழக்கூடிய மன இயக்கத்தை, நுண்மையான அலையியக்கத்துக்கு கொண்டு வர வேண்டும். 

எனவே, மனிதன் உணர்ச்சிவயப்படாத நிலையில் தன்னுடைய மன அலையின் நுண்மையிலே இருக்கப் பழக வேண்டும். அதற்குக் குண்டலினியோகம் அல்லது வேறுவிதமான உளப்பயிற்சியின் மூலம் மன அலையை ஓரளவு குறைத்து நுண்மையிலேயே வைத்துக் கொண்டோமேயானால் எவ்விதமான உயிர்த் தொடர்பு வந்தாலும், இணையவிடாது அதைத் தடுத்து விட முடியும். பிற உயிர் இணைய முடியாதிருக்க இதுதான் ஒரே வழி.

அதனுடன் மனதிலே பயம் இருக்கக் கூடாது. பயமிருந்தால் நமது சூக்கும சரீரம் நமக்குத் தெரியாமலே வெளிப்படும். அப்போது வேறு ஆவி வந்து நம்மோடு தொடர்பு கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுவிடும்.

நாம் இரவிலே கண்ணாடி பார்த்துக்கொண்டே இருப்போமானால் நம்முடைய சூக்கும சரீரம் வெளிப்பட்டு, உடல் விட்ட ஆவியுடன் தொடர்பு கொள்ள வாய்ப்பிருக்கிறது.

அப்படி நமக்குத் தெரியாமலே தொடர்பு ஏற்பட்ட பின், நம் முகத்தை கண்ணாடியில் பார்த்தால், எந்த உயிர் நம்மோடு தொடர்பு கொண்டிருக்கிறதோ அதனின்று பிரதிபலிக்கக் கூடியதொரு விகாரமான உருவம் நமக்குக் கண்ணாடியில் தோன்றக் காண்போம். அதனால் தான் இரவிலே நீண்ட நேரம் கண்ணாடி பார்க்கக் கூடாது என்பார்கள்.

அதிகமான வாசனைத் திரவியங்களை இரவிலே நாம் பூசிக் கொண்டால் அதன் மூலமாக நமது சூக்கும சரீரம் வெளியேறுவதற்கு வழியுண்டு.

இது போன்ற காரணத்தால்தான், இரவில் பூ வைத்துக் கொண்டு வெளியே போகக் கூடாது என்பார்கள். இவற்றையெல்லாம் நாம் கடைப்பிடித்து வந்தால் உடல் விட்ட வேறு ஆவிகள் நம்முடன் இணைவதைத் தவிர்க்கலாம்.

அப்படி ஏதேனும் ஒன்றிரண்டு ஆவிகள் இணைந்தாலும் அந்த ஆவிகளுக்குரியவர்கள் நல்ல எண்ணமும், தவ ஆற்றலும் உடையவர்களாக இருந்து, அந்த நிலையிலேயே உயிர் விட்டவர்களாக இருந்து, அந்த நிலையிலேயே மேம்பாட்டை பூர்த்தி செய்து கொள்வதற்காக, அவர்கள் நம்முடன் இணைந்து, நமக்கு நன்மை தருவார்கள். அவர்களும் பூரணம் அடைவார்கள்.

ஆன்மிகத்துறையில் ஈடுபட்டு இவற்றையெல்லாம் அறிந்து, ஆய்ந்து உணர்ச்சிவயப்படாத நிலையில் இருந்தால் பிற ஆவிகளின் தொடர்பை தவிர்க்கலாம்.

வாழ்க வளமுடன்

-