CJ for You: boon

boon

Showing posts with label boon. Show all posts
Showing posts with label boon. Show all posts

The World Community Network


 அன்பர்களே,



கேள்வியில் தொடங்குகிறேன்

உங்களிடம்,  “இப்பொழுது நீங்கள் என்ன மனநிலையில் இருக்கிறீர்கள்?” என்று கேட்கிறேன். உங்கள் பதில் என்னவாக இருக்கும் என்பதை ஒரு காகித்தலோ / கைபேசி குறிப்பிலோ எழுதி வைத்துக்கொள்க. இதை நானாக புரிந்துகொண்டவகையில் சில பதில்களை இங்கே தந்து இந்த கட்டுரையை துவங்குகிறேன். அந்த பதில்கள் என்ன?

1) இன்றைய நாளும் பொழுதும் நன்றாக இருக்கிறது

2) ஏன் இன்றைக்கு ஏதோ சோகமாக உணர்கிறேன்?

3) இந்தவேலைக்கு ஏன் வந்தேனோ, ஒரே இம்சையடா!

4) எதிர்பார்த்த மாதிரி பண வரவு இல்லையே என்ன செய்வது?

5) வாங்கிய கடனுக்கான வட்டி ஏறிக்கொண்டே இருக்கே, பிரச்சனை ஆகிடுமோ?

6) கொடுத்த காசை திருப்பித்தராம எப்படியெல்லாம் ஏமாத்துறாங்க!

7) பூர்வீக வீட்டு பிரச்சனை எப்போதான் தீருமோ தெரியலையே?

8) இந்த சொந்தக்காரங்களுக்கு பதில் சொல்லியே உயிர் போகுது!

இன்னும் இன்னும், ஆயிரம் மனிதர்களின் பதில்களும் ஒரே மாதிரி இல்லாமல், தனித்தனியாகவே அமைந்திருக்கும். இதுதான் மனிதனின் இயல்பு. ஆணும் பெண்ணும் இருவரும், பொருளாதார வாழ்வில் சமமாக இருக்கும் காலம் இது. எனவே ஆணுக்கு என்னவகையான பிரச்சனைகள் எழுமோ, அதே அளவிலான பிரச்சனைகள் பெண்ணுக்கும் உண்டு.


வேற்றுமையில் ஒற்றுமை

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சனை தன்னளவில் இருந்தாலும், உலகம் சுருங்கிய இந்த காலத்தில் இன்னொன்றை கவனிக்க வேண்டும். அது சமூகம் தொடர்பானது. சமூகம் என்றால் நீங்கள், உங்கள் இனம், குழு என்று சொல்லுவதற்கில்லை. அதெல்லாம் அந்தக்காலம். 

இப்பொழுது சமூகம் என்றால், இந்த உலகமே சமூகம் என்றாகிவிட்டது. காரணம், எல்லைகளைக் கடந்த தொடர்புகள். ஆம் தகவல் தொடர்பு,  இணையம் வழியாகவும், கைபேசி வழியாகவும் இந்த உலகத்தையே ஓர் சமூகமாக மாற்றிவிட்டது. இதனால எண்ணற்ற பயன்கள் உண்டு. அதை நாமும் அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனாலும் அந்த அனுபவத்தில் நன்மைகளுக்குப் பதிலாக, நிறைவாக வாழ்வதற்குப் பதிலாக, துன்பத்தையும், நிம்மதி இன்மையையும் அனுபவிக்கிறோமே அது சரியா?

அத்தகைய உலக சமூகம், தகவல் தொடர்பால் தரும் துன்பத்தையும், நிம்மதியின்மையையும், தன்னளவில் தனித்தனியாக பிரச்சனைகளை சந்திக்கும் ஆயிரமாயிரம் மனிதர்கள், ஒருசேர ஒற்றுமையாக ஒரே அளவில் அனுபவிக்கிறார்களே! இது சரியா? இதில் நானுமே ஒருவன், நானும் கூட தப்பிவிடுவதில்லை. 


இதில் நல்லது என்ன?

உலகம் சமூகமாகிவிட்டாலும், அங்கே சுயநலமும், தான் என்ற அகங்காரமும், தனது என்ற அதிகாரத்தை அமைக்க விரும்புவதும், குழப்பதை ஏற்படுத்தி மக்கள் நிம்மதியை கெடுத்தலும், நாட்டை அபகரித்தலும், எதிரிகளை கூட்டாக அழிக்க விரும்புவதும், அரசை கைபற்ற நினைப்பதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதேவேளையில் நடக்கும் நல்லது என்ன?

ஆங்காங்கே, மக்கள் ஒன்றுபட்டு நல்ல அரசை அமைக்க விரும்புவதும், தங்கள் பிரச்சனையை தாங்களே கேட்டுப்பெறுவதும், நாட்டின் இறையான்மையை காப்பதும் நிகழ்கிறது. அவற்றை முன்னெடுத்து நடத்திச் செல்லும் நல்ல தலைவர்களையும் அடையாளம் காணமுடிகிறது. நாடு என்ற அளவில், மொழி, மத, இன அடையாளங்கள் மறந்து ஒற்றுமையான மக்களை உருவாக்குகிறது.


நீங்களும், உங்கள் நிலையும்!

இந்த உலகில், இந்த காலகட்டத்தில் வாழ்வதால் நீங்களும், இந்த உலக சமூகத்தில் ஓர் உறுப்பினர். நீங்கள் ஏற்றாலும், மறுத்தாலும் கூட அந்த பாதிப்பையும், நன்மையையும் நீங்கள் பெறுவீர்கள். சில நேரம் மறுக்கலாம், ஆனாலும் எல்லோரும் ஏற்கும் பொழுது நீங்கள் மட்டும் மறுப்பதற்கு வாய்ப்பே இல்லை. மீறினால தண்டிக்கவும்படுவீர்கள்.

இதில் உங்கள் நிலை என்ன என்பது, உங்களை வந்தடையும் உலக சமூக பிரச்சனை / நல்லது இவற்றைப்பொறுத்துத்தான் அமையும். அதில் சந்தேகமே இல்லை. அது நல்லதா, கெட்டதா என்பதை, உங்களை வந்தடையும் நேரத்தில் கணிக்கவும் முடியாததாக இருக்கலாம். மேலும் உங்களையும் தன்பக்கம் இழுக்கக்கூடிய, உங்களுக்கு நன்மை தரதக்க ஒன்றாகவும் இருக்கலாம். முற்றாக உங்களுக்கு அவசியமற்ற, உங்கள் வாழ்க்கையும் பறிக்கலாம், நீங்கள் இந்த உலகில் வாழ்வதற்கான உரிமையையும் பறிக்கலாம்.


உங்கள் வீடும், குப்பைகளும்!

இந்த உலகத்திலேயே மன நிம்மதி தரும் இடம் என்றால், உங்கள் வீடுதான். அந்த வீடு ஆடம்பரம் இல்லாமல் இருக்கலாம். 1BKH முதல் 6BHK வரைகூட இருக்கலாம். நேற்று உடுத்திய துணிகள் எங்கும் பரவிகிடக்கலாம், வீடெங்கும் குப்பைகள் நிறைந்திருக்கலாம். ஆனாலும் அது உங்கள் வீடு, உங்களுக்கு அமைதிதரும் வீடு என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

இப்பொழுது உங்கள் வாசல், எப்படி இருக்கிறது என்ற கவலை உங்களுக்கு இல்லை. என் வீடு என்வாசல் எப்படி இருந்தாலும் எனக்கு சரிதான் என்ற நிலைதான் உங்களுக்கு. நல்லதுதான். ஆனால் யாரோ உங்கள் வாசலில், வந்து குப்பையை கொட்டிவிட்டு போகிறார்கள் என்றால், என்ன ஆகும்?

நீங்கள் வெகுண்டு எழுந்து, “எவண்டா அது என்வீட்டு வாசலில் குப்பையை கொட்டுகிறவன்?” என்று வீட்டை விட்டு, வாசலில் நின்று கொண்டு சத்தம் போடுவீர்கள். பக்கத்தில் இருக்கும் நான் உங்களிடம் “சரி, விடப்பா, எவனோ போட்டுட்டு போயிட்டான், நீ நிம்மதியா இரு” என்று சொன்னாலும், “அதெப்படிங்க, என் வீட்டு வாசலில் எவனோ ஒருத்தன் குப்பை கொட்டலாம், இது நியாயமா?” என்று என்னிடம் சொல்லுவீர்கள். அதற்கு மேல் நான் பேசினால், நம் இருவருக்கும் வாக்குவாதம் ஆகிவிடும். கடைசியில் நான் தான் குப்பையை கொட்டினேன் என்று திருப்பிவிடவும் வாய்ப்புக்கள் அதிகம்.

மறுநாள், உங்கள் வீட்டிற்குள்ளேயே குப்பையை யாரோ கொட்டிவிட்டார்கள். இப்பொழுது என்ன நடக்கும்? பார்த்த உடனே, கெட்டவார்த்தையில் கூட யாரையோ திட்டிக்கொண்டே வாசல் வரை வந்து கத்துவீர்கள். இன்றோ நானும் உங்களிடம் ஒருகருத்தும் சொல்லவில்லை. நான் வெளியே வரவேஇல்லை. நீங்களாகவே கொஞ்சம் கத்திவிட்டு அடங்கிவிட்டீர்கள்.

மூன்றாவது நாள், நீங்கள் அறியாமல், உங்கள் படுக்கை அறையிலேயே யாரோ ஒருவர் குப்பையை கொட்டுவிட்டார். அவ்வளவுதான், உங்கள் சினம் எந்த அளவுக்கு எகிரும் என்பதை அளவிடவே முடியாது என்பதுதான் உண்மை. 

கூட்டி அள்ளி வெளியில், போட்டுவிடுகின்ற குப்பைக்கு இவ்வளவு கோபம் உங்களுக்கு வருமென்றால்... அடுத்த தலைப்பையும் படியுங்கள்!


உங்கள் மனமும், குப்பையும்!

உலக சமூகம், தகவல் தொடர்பில் மிக எளிதாக எல்லோரையும் ஒரே கயிறில் கட்டி இணைத்துவிட்டது. யார் எங்கே இருந்தாலும், யாரோடு யாரும் பேசலாம், பழகலாம், விரும்பலாம், இணையலாம், கூடலாம், விலகலாம், எதிர்க்கலாம், சண்டையும் போடலாம், பழியும் வாங்கலாம் என்றாகிவிட்டது தானே?!

மேலும் தினம் தினம், இணையம் வழியாக, கைபேசி வழியாக, யார் யாரோ குப்பைகளை, உங்கள் மனதில் கொட்டி விட்டு போகிறார்களே? உங்கள் மனம், நீங்கள் வாழுகின்ற வீட்டை விட கேவலமானதா? ஏகப்பட்ட குப்பைகளோடு வாழ்ந்து பழகி, இன்னும் பல மடங்கு குப்பைகளை ஏற்றுக்கொள்ளும் மனதைத்தான் நீங்கள் பெற்றிருக்கிறீர்களா? ஒரு போதும் நீங்களாக, உங்கள் குப்பைகளை சரிசெய்ததில்லை அப்படியே வாழ்ந்து பழகிவிட்டீர்கள் என்றால், யார் யாரோ போடும் குப்பைகளை ஏற்றுக்கொள்ளவும் செய்வீர்களா? அந்த குப்பைகளோடும்  உங்கள் வாழ்க்கையை தொடர்வீர்களா?

உங்கள் பதிலும், நிலையும் என்ன?

வாழ்க வையகம், வாழ்க வளமுடன்!

Ask a boon


சென்னையிலிருந்து பல்லவன் தொடர் வண்டியில் திருச்சி வந்துகொண்டிருக்கிறேன். மதிய வேளையில் கிளம்பி இரவு திருச்சி வந்து பின்னிரவில் காரைக்குடி வரை செல்லுமாறு நீடிக்கப்பட்டிருக்கிறது... எப்பொதும் நான் தேர்வு செய்வது சாளரம் சார்ந்த இருக்கை... வண்டியின் விரைவில் முகத்தில் மோதிதள்ளும் காற்று தரும் அனுபவம் விட்டுவிட முடியுமா?

என் இருக்கைக்கு அருகே, ஒரு இளைஞன் (டி சர்ட், ஜீன்ஸ்), எதிரே ஒரு பெண் (மடிப்பு பிசகாத சேலை), ஆண் (பேண்ட், முழுக்கை சட்டை).. இடதுபக்கம் நடைபாதைக்கு அப்புறத்தில் இரு பெண்கள் (சாதா பட்டு சேலை), அவர்களுக்கு எதிர் இருக்கையில் இரண்டு ஆண்கள் (கதர் சட்டை வேட்டி). பெண்கள் இருவரும் கிட்டதட்ட ஐம்பதை நெருங்குபவர்களாக இருக்கும். ஆண்கள் அறுபது தொடக்கமாக இருக்கலாம்,

நானாக பேச்சை தொடங்கும் வழக்கம் எனக்கில்லை என்பதால்... என்னை ஆளைவிடுங்கப்பா என்று நினைத்து, என் ஓவிய காகிதங்கள் எடுத்து வெறுமனே வரைந்து பழக ஆரம்பித்தேன். கதர் சட்டை வேட்டியில், கனத்த ஒருவர் “யாரையடா கலாய்க்கலாம்” என்றபடி துறுதுறுத்தது எனக்கு புரிந்தது... தங்களுக்கிடையேயான வியாபாரம் குறித்து இன்னொரு கதர் சட்டை வேட்டியிடம் புலம்பியவாறு வந்தார். இடையே தொடர்வண்டி ஊழியர்கள் விற்கும் சில திண்பண்டங்களை வாங்கி சாப்பிட்டுக்கொண்டனர். அதை எங்கள் எல்லோருக்கும் பகிர நினைக்கையில் எல்லோரும் மறுத்துவிட்டோம்.

தொடர்வண்டி வேகமெடுத்திருந்தது... “என்னாய்யா இது, என்னமோ விழுந்த வீடு மாதிரியா ஊருக்கு போறது, கலகலன்னு பேசி சிரிச்சிக்க வேணாமா?” என்று பேசிக்கொண்டே... என் அருகில் இருந்த இளைஞரை கேட்டார்...
 “என்ன திருச்சிக்கா தம்பி?”
 “ஆமாங்க”
 “படிக்கிறீங்களா?”
 “இல்ல, வேலைக்கி போயிட்டுருக்கேன்... லீவ்க்கு ஊருக்குபோறேன்”
 “எவ்வளோ சம்பளம்?”
நான் குரலாக கேட்டுக்கொண்டிருக்க, எல்லோரும் அந்த உரையாடலை கவனிப்பது புரிந்தது...
 “மாசம் 7500 ரூபாய்”
 “போதுமா?”
 “பத்தாதுதான்... இனி போகப்போக ஏறும்”
 “நம்பலாமா”
 “அப்படித்தான் சொல்லிருக்காங்க”
 “என்ன படிச்சீங்க?”
 “இஞ்ஜினியரிங்”
 “எவ்வளவு செலவாச்சு?”
 “கிட்டதட்ட ஐந்து லட்சரூபா”
 “ஹ்ம். பேசாம அத பேங்கல் போட்டு, நீ தள்ளுவண்டி தள்ளி சம்பாதிச்சா கூட மாசம் பத்தாயிரம் சம்பாதிக்கலாமே?!”
 கேட்ட எல்லோரும் சிரிக்க ஆரம்பித்தனர்... இளைஞனின் முகமோ தொங்கிப்போக, இந்த ஆள் கிட்ட எதுக்குடா வாய் கொடுத்தோம் என்றிருந்தது...
கதர் சட்டை வேட்டி, எல்லோரையும் பார்த்து...
 “ஏங்க, சிரிக்கிறதுக்காக இத சொல்லலீங்க... நிலவரத்தை சொன்னேன், தம்பி தப்பா நினைக்காத, நாங்கல்லாம் வியாபாரிங்க, எங்களுக்கு காசு போட்டா, காசு வரணும் அவ்வோளோதான் தெரியும்... நல்லா நீயும் யோசிச்சாகூட இதுல இருக்கிற உண்மை புரியும்... அப்புறம், நீங்களும் திருச்சி  தானா?”
 எதிரே அமர்ந்திருந்த இருபெண்களை நோக்கி கேட்டார்.
 “நாங்க ஸ்ரீரங்கம்”
 “அதென்னா, அதும் திருச்சீலதானே இருக்கு”
 மீண்டும் எல்லோரும் சிரிக்க ஆரம்பித்தனர்...

நகைச்சுவை வழியாக பிறரை கவர்தல் என்பது அவருக்கு வாய் வந்த கலையாக இருக்கும் என்பது தெரிந்தது... இதற்கிடையில் அந்த இளைஞன், எழுந்து வாசல் அருகே நின்று ஓடுகிற மரங்களையும், மலைகளையும் பார்க்க ஆரம்பித்துவிட்டான்.

ஓவொருவராக நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று கேட்டுக்கொண்டே, என்னை நோக்கி, என்னிடம் அதே கேள்வியை கேட்டார்...
 “நான் ஓவியர்”
 “அதான் என்னை ஆளை விடுங்கடான்னு, அப்போ இருந்து என்னமோ பேப்பர்ல கிறுக்க  ஆரம்பிச்சிட்டீங்க, பார்த்தென்... தனி உலகத்திலே இருக்கிறவங்க ஆச்சே”
 நான் புன்னகைத்தேன்...
 “ஓவியம்ன்னா என்னமாதிரியான ஓவியம்?”
 “உங்களை வரைந்தே காட்டிவிடுகிறேன்”
 “பார்த்தீங்களா... நாமலாம் வாய் வலிக்க பேசினா, இவரு பேசாம, ஓவியம் வழியா பேச போறாரு”

கொண்டுவந்திருந்த ஓவிய அட்டையில், கரித்துண்டு (Charcoal) மூலமாக அவரை கேரிகேச்சராக (Caricature) செய்தேன்... ஒரு நிமிடத்திற்குள்ளாக வரைந்து அவரிடம் தந்தேன்.
 “நானா இது... எவனோ மாதிரி இருக்கு?!”
 “அப்படித்தான் உங்களுக்கே தோன்றும்”
 “ஓஹோ... சரி வரைஞ்சி கொடுத்திட்டீங்க... இதை வச்சி என்னா பன்றது?”
எல்லோரும் சிரிக்க ஆரம்பித்தனர்.
 நானும் அவரை நோக்கி புன்னகைத்தேன்...

 மனதிற்குள் “நீங்கள் ஒரு கழுதையாக இருக்கும்பட்சத்தில் அந்த காகிதத்தை சாப்பிடலாம்” என்று சொல்லிக்கொண்டேன்.
 “ஒரு ஓவியத்தை என்ன செய்வது என்று கேட்பவருக்கு, நான் ஓவியம் தந்தது தப்புத்தான்... அதை கொடுங்க”
 “அட, ஏன் தம்பி கோச்சுகிறீங்க... உங்க ஞாபகமா வச்சிக்கிறேன்... நன்றி”
 “நல்லது”

 அதற்கடுத்த உரையாடல்களை கவனிக்காது, ஓவியத்தில் நான் கவனம் இழந்தேன். அடுத்து என்ன பேசினார் என்பது என் காதுகளை தூண்டவில்லை... இப்படி இருக்கும் சில சாமனியர்களுக்கு, அந்த கடவுளே கூட கண்ணுக்கு தெரிவதில்லை... ஆனாலும் இத்தகைய மனிதர்களை நான் குறை சொல்லுவதற்கில்லை...

நான் தியானம் கற்றுணர்ந்தபொழுது... அன்பொளி மாத இதழில் படித்தது...

வேதாத்திரி மகரிஷியிடம்...
 “ஐயா, பிறவிப்பயன் போக்க, தன் பிறப்பை உணர்ந்து, தவமியற்றி தன்னை தூய்மை செய்துகொள்ளும் வாய்ப்பாக நாங்கள் உங்களிடம் வந்திருக்கிறோம். ஆனால் இது அறியாமல் வறுமையிலும், இது பற்றி ஒன்றுமே அறியாத ஒரு குடியானவன் இருக்கிறானே, சொன்னாலும் உதாசீனம் செய்கிறானே அவனை நினைத்து எனக்கு வருத்தமாக இருக்கிறது... என்ன செய்வது” என்று கேட்க...
 “இந்தபிறவியில் நீங்கள் உங்களை தூய்மை செய்துகொள்ளவேண்டும் என்பது உங்களுக்கு கிடைத்த வரம். அந்த குடியானவனுக்கு அது இன்னமும் கிடைக்கவில்லை. இனிவரும் காலங்களில் கிடைக்கலாம், அல்லது அவன் வழி வருவோருக்கு கிடைக்கலாம். அவனை அப்படியே விட்டுவிடுதல் நலமே”

நான் ஓவியத்தை மதிக்காதவர்களையும் அப்படியே விட்டுவிடுகிறேன்...