CJ for You: people

people

Showing posts with label people. Show all posts
Showing posts with label people. Show all posts

Why the Truth of Almighty is hidden by the words by ancestors and till now?


முன்னோர்கள் அக்காலம் முதலாக நமக்கு மேலான ஒரு சக்தியை, ஆற்றலை ‘கடவுள், தெய்வம், இறை, சாமி’ என்று பலவகைகளில், உண்மையை மறைபொருளாக வைத்திருந்த காரணம் என்ன?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா! முன்னோர்கள் அக்காலம் முதலாக நமக்கு மேலான ஒரு சக்தியை, ஆற்றலை ‘கடவுள், தெய்வம், இறை, சாமி’ என்று பலவகைகளில், உண்மையை மறைபொருளாக வைத்திருந்த காரணம் என்ன?


பதில்: 

இந்த கேள்வியில், நல்ல புரிதல் ஒன்றை நான் அறிகிறேன். அதுகுறித்து நான் வாழ்த்தி மகிழ்கின்றேன். நமக்கு மேலான சக்தி, ஆற்றல் என்று குறிப்பிட்டது சிறப்பு. இப்போது கேள்விக்கு வரலாம். முன்னோர்கள், தங்களின் சிந்தனையாலும், தொடர்ந்த ஆராய்ச்சியாலும், குண்டலினி எனும் யோகத்தின் வழியாகவும், உண்மையான ‘இறையாற்றலை’ உணர்ந்து அறிந்தார்கள். அதனுடை தன்மாற்றத்தையும், பரிணாமம் என்ற சிறப்பையும் அறிந்தார்கள். அதன்வழியாக, மனித பிறப்பின் மூலத்தையும், முடிவையும் அறிந்துணர்ந்தார்கள்.

இதை ஏன் மறைபொருளாக வைத்திருந்தார்கள்? அப்படி சொல்லிவிட முடியாது. யார் வேண்டுமானாலும், ஆர்வம் கொண்டு, உணர்ந்து அறிய விரும்பினால்,  அதற்கான வழியையும் சொல்லிக்கொடுத்து, அவர்களே குருவாகவும் இருந்து, வழிகாட்டியாகவும் இருந்தார்கள் என்பதுதான் உண்மை. அப்படியான குருவின் துணை, இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது அல்லவா? நாமும் கூட அப்படியான, மறைபொருள் அறிந்து உணர்ந்திட விருப்பம் கொண்டுதான், வேதாத்திரி மகரிஷியின், வேதாத்திரியத்தில் இணைந்திருக்கிறோம். எனவே ‘மறைபொருளாக’ வைத்திருந்தார்கள் என்று சொல்லுவதற்கில்லை.

ஆனால், அந்த உண்மையை அறிய ஆர்வமில்லாத, சொல்லாலும், விளக்கங்களாலும் புரிந்துகொள்ள முடியாத, விளிம்பு நிலை மக்கள் எப்போதும் உண்டுதானே? அவர்களுக்கு அன்றாட பிழைப்பே போதுமானது என்ற நிலையில்தான் வாழ்வார்கள். அவரவர் அளவில் உண்டு, உறங்கி இன்பம் துய்த்தால் போதும் என்ற நிலையில்தான் வாழ்வார்கள். மற்ற வேறெதிலும் ஆர்வமின்றியும் இருப்பார்கள். எனக்கு தேவையில்லை என்று மறுப்பார்கள். இன்றும் இப்படியான மக்கள், நம்மோடு கலந்துதான் இருக்கிறார்கள் என்பது, உங்களுக்கே தெரியும் அல்லவா?

இப்படியான மக்களுக்கு, அவர்கள் அளவிலான, அறிவு நிலைக்கு ஏற்றவாறு, 'மெய்ப்பொருளான’ உண்மையை, உயர்ந்ததாக கருதும் அளவிலே,  ‘கடவுள், தெய்வம், இறை, சாமி’ என்று சொல்லி வைத்தார்கள். அதை வழிபடவும், மனதிற்குள் கருத்தாக கொண்டுவரவுமே, ஆலயம் என்ற ஆன்மா லயமாகும் இடம் என்றும் அமைத்தார்கள். கடந்து உள்ளே அறிவதுதான் ‘மெய்ப்பொருள் உண்மை’ என்பதாகத்தான் கடவுள் என்றும் சொன்னார்கள். ஆனால் அது வார்த்தையாகவும், வழிபாடு என்பது கொடுக்கல், வாங்கல் சடங்குகளாகவும் மாறி, அதுவே இன்றும் நிலைத்திருக்கிறது.

உங்கள் கையில் ஒரு மதிப்புமிக்க பொருளைக் கொடுத்தால், அது மதிப்பானது என்று எப்படி உங்களுக்குத் தெரியும்? கொடுப்பவர் அதைக்குறித்து சொல்லவேண்டும். ஒருவேளை நீங்களாக அதை உணர்ந்திருந்தாலும், அதற்கான் மதிப்பை கொண்டிருப்பீர்கள். அப்படியில்லை என்றால், அந்தப்பொருள் உங்களிடம் இருக்கும் பொழுது, ‘மதிப்பற்று’ போய்விடும் அல்லவா? அப்படித்தான், சராசரி மக்களிடம், நமக்கு மேலான ஒரு சக்தியை, ஆற்றலை ‘கடவுள், தெய்வம், இறை, சாமி’ என்று பலவகைகளில், உண்மையை மறைபொருளாக சொல்லி விளக்கம் பெற வழி செய்தனர். காலமாற்றத்தில், வேதாத்திரி மகரிஷி சொன்னது போலவே, ‘பருவம் வந்த அனைவருக்கும், பிரம்மஞானம் என்ற மெய்ப்பொருள் விளக்கம் கிடைக்கும்’ என்பது நிகழும்.

வாழ்க வளமுடன்.

-

How imaginary thoughts affected the family and individual?


பொதுமக்களின் உணர்ச்சி பெருக்கத்தை விட, கணவன் மனைவி என்ற குடும்ப அமைப்பையும், ஆண், பெண் ஆகியோரின் மன, எண்ண ஓட்டங்களையும் சில கற்பனைகள் எப்படி பாதிக்கிறது?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, பொதுமக்களின் உணர்ச்சி பெருக்கத்தை விட, கணவன் மனைவி என்ற குடும்ப அமைப்பையும், ஆண், பெண், ஆகியோரின் மன, எண்ண ஓட்டங்களையும் சில கற்பனைகள் எப்படி பாதிக்கிறது?


பதில்:

காதல் காட்சிகளாகிய  படங்களை அடுத்தடுத்துப் பார்ப்பது கணவன் மனைவி உறவில் சலிப்பைத் தரும்.  காதல் காட்சியில் நடிக்கும் நட்சத்திரங்கள் இருவரும் பார்க்கும் ரசிகர்களுக்கு ஆணுக்குப் பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் உள்ளத்தில் மானசீகக் காதலர்களாக இடம் பெற்றுவிடுவார்கள். 

அடுத்தடுத்து அந்த மானசீகக் காதலியையோ  காதலனையோ பார்க்க வேண்டுமென்று அவர்களையும் அறியாமல் மனோவேகம் ரசிகர்களையும் இழுத்துச் செல்லும்.  பலர் உள்ளங்களைக் கவர்ந்து பணம் ஈட்ட வேண்டுமென்று பட அதிபர்கள் கூலிக்காக ஆண் பெண் இருவரையும் அமர்த்திக் கொள்ளுகிறார்கள்;  நாணம் விட்டு நடிக்கச் செய்கிறார்கள்.  

காதலர்களாக படக் காட்சியில் நடிக்கும் நடிகர்களுடைய கவர்ச்சியான உடைகளையும் நாணமற்ற முறைகளையும் அடிக்கடி பார்த்துப் பழகிக் கொண்ட குடும்பத்தவர்கள் தங்கள் வாழ்வில் இயல்பாக உயர்வாக ஒழுங்காக அமைந்த காதல் இன்பத்தை விருப்பத்தோடு நுகர முடியாது.   

ஓட்டல்களில் தினமும் பலவிதமான ருசிகளையுடைய சிற்றுண்டிகளை உண்டு பழகி விட்டவர்கட்கு வீட்டுச் சிற்றுண்டி போதிய சுவை தருமா ?   படக்காட்சிக் கவர்ச்சியிலும்  மானசீகக் காதலர் உருவத்திலும் பல தடவை தன்னை மறந்து ஈடுபட்டு தன் உள்ளத்தில் வலுவேற்றிக் கொண்டவர்களுக்கு எவ்விதம் இயற்கையான காதல் நிறைவான இன்பத்தை அளிக்க முடியும்?

வாழ்க வளமுடன்.

-

பதிலின் மூலம் வேதாத்திரி மகரிஷி அவர்கள்

Why yogi, siddhar, gnani, mahan has differential appearances after the same truth of realization?


யோகி, சித்தர், ஞானி, மகான் என்ற நிலைக்கு உயர்ந்தவர்களின் தோற்றம் ஏன் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒரே உண்மையைத்தானே அவர்கள் உணர்ந்தார்கள்? எனினும் ஏன் இந்த வேறுபாடு?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, யோகி, சித்தர், ஞானி, மகான் என்ற நிலைக்கு உயர்ந்தவர்களின் தோற்றம் ஏன் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒரே உண்மையைத்தானே அவர்கள் உணர்ந்தார்கள்? எனினும் ஏன் இந்த வேறுபாடு?


பதில்:

        சிந்தனைக்குறிய கேள்விதான். எனினும் நீங்களே புரிந்துகொள்ளக்கூடிய எளிய உண்மையையும் உள்ளடக்கியதுதான். இந்த உண்மையறிதல் என்ற நிலைக்கு, ஒவ்வொரு யோகி, சித்தர், ஞானி, மகான் ஆகியோருக்கும் ஒவ்வொரு வழிமுறைகள் இருக்கும். எந்தெந்த நிலையில் அவர்கள் வாழ்ந்து வந்தார்களோ, எத்தகைய வழக்கம் பழக்கம் இவற்றை கொண்டிருக்கிறார்களோ, எந்தெந்த நாட்டின் வாழ்க்கை முறைகளை கடைபிடிக்கிறார்களோ அதன்படிதான் அவர்களின்,  தோற்றமும் வெளிப்பாடும் அமையும். அதுதான் இயல்பும் கூட. சாதரணமாக யாருமே வெளித்தோற்றத்தை மாற்றிக்கொள்ள முடிவதில்லை.

        உதாரணமாக உங்களுக்கு தாடியும் மீசையும் இருக்கிறது,  அதை எடுத்துவிடுங்களேன், தாடியும் மீசையும் இல்லாமல் இனி வாழ்நாள் முழுவதும் தொடருங்கள் என்று சொன்னால் உடனே உங்களால், அதை செய்துவிட முடிடுமா? ரொம்பவும் யோசிப்பீர்கள். குழப்பமும் அடைவீர்கள். முடியாது என்றும் சொல்லிவிடுவீர்கள். இதுபோலவே ஆடைகளும், அலங்காரங்களும் உடனே உங்களால் ஏற்றுக்கொண்டு செயல்படுத்த முடியாது. காரணம் உங்களின் வழக்கமும் பழக்கமும். அதனால் சமூகத்தில் உங்களுக்கு கிடைத்த அடையாளமும் காரணமாகிறது.

        ஆணுக்கும் பெண்ணுக்கும் மெய்ப்பொருள் உண்மை விளக்கமும், தன்னையறிதலும் பொதுவானது. அது நிகழ்ந்த பிறகும்கூட, எப்போதும் போலவே இயல்பாகத்தான் இருப்பார்கள் என்பது உறுதி. என்றாலும் கூட அக்காலத்தில், சாரசரி மக்களில் இருந்து, வித்தியாசம் என்ற நிலையிலும், அவர்களின் ஆசிரம, மடம், அமைப்பு சார்ந்த விதிமுறைகளின்படி, துறவு என்ற நிலையிலும் இப்படித்தான் ‘தோற்றம்’ இருக்கவேண்டும் என்று இருந்தது. இவையெல்லாம் அந்தக்கால வழக்கமாக இருந்தாலும், இப்போதும்கூட சில யோக அமைப்புக்களில், கல்வியாக கற்கும் நிலையில், சீடர்களுக்கான தோற்ற ஒழுங்கு விதி இருக்கிறது. வேதாத்திரிய மனவளக்கலையிலும் உண்டுதானே.

        எந்த ஒரு அமைப்பிலும், யோகத்தை கற்கும் வரை அந்த ஒழுங்கும், பிறகு கற்பிக்கும் நிலையிலும் அத்தகைய தோற்றத்தை நீங்கள் கடைபிடிக்க வேண்டியது அவசியம். நீங்கள் அமைப்பிலிருந்து விலகி, வெளியே வந்து யோகத்தில் உண்மை விளக்கம்  பெற்றுவிட்டால், உங்கள் தோற்றம் உங்கள் விருப்பமே. அந்தவகையில்தான் சில யோகி, சித்தர், ஞானி, மகான் ஆகியோர் தங்களுக்கு விருப்பமான தோற்றத்தில் இருக்கிறார்கள். என்னைக்கூட யாருமே யோகி என்று கருதுவதில்லை, நானும் பார்க்கும் நபர்களிடமெல்லாம் ‘நான் யோகி’ என்று சொல்லிக் கொள்வதில்லை. என் நண்பர் சொல்லுவார் ‘உன்னையெல்லாம் பார்த்தா, கார்பொரேட் ஆபிஸர் மாதிரி இருக்கு, எவன்யா யோகின்னு நம்புவான்?’ என்று கிண்டலடிப்பார். அதற்காக நான், குறுந்தாடிக்கு பதிலாக நீண்ட தாடி தலைமுடி, உச்சியில் கொண்டை, திரிசடை, ஜாடாமுடி, தலைப்பாகை, உடல்போர்த்திய துண்டு ஆகிய இதுபோன்ற  தோற்றத்திலா இருக்கமுடியும்? என் விருப்பத்தில் நான் தோற்றமளிக்கிறேன் அவ்வளவுதான்.

        இயற்கையின் ஒழுங்கில் கூட, தோற்றம் என்பது ஒரே மாதிரி இருப்பதில்லை. அதனதன் அளவில் அது தன்னை விரிக்கும், சுருக்கும். உங்களுக்குத் தெரியுமா? வழக்கமாக நான் என்னுடைய ஓவிய பாடத்தில் சொல்லுவதுண்டு, ‘ஒரு வேப்ப மரத்தின் பல்லாயிரக்கணக்கான இலைகளில், ஒரே மாதிரியான மற்றொரு இலையை நீங்கள் காணவே முடியாது’

        எனவே நீங்களும் யோகத்தில் தன்னையறிந்து, மெய்ப்பொருள் விளக்கம் அறிந்து உயர்ந்தால், உங்களுக்கு விருப்பமான தோற்றத்தில் நீங்கள் தொடரலாம். என்றாலும் கூட வாழும் மக்களிடம் ‘யோகி, சித்தர், ஞானி, மகான்’ இப்படித்தான் இருப்பார்கள் என்ற கருத்து நிலவி வருவதை மாற்றிட முடியாது. அத்தகைய மக்களையும், சம்பவங்களையும் நாம் கண்டுதான் வருகிறோம், அதிலும் முன்னைவிட அதிகமாகவும் தானே? ஆகவே, அதுவரை ஏமாற்றுக்கார்களுக்கு நல்வாய்ப்புத்தான். அவர்களுக்கும் பிழைப்பு ஓடும்வரை ஓடும். 

வாழ்க வளமுடன்

-

Why the changes are low level within people based on yoga even it is simplified?


உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதருக்கும், பிறவியின் நோக்கத்தை நிறைவேற்றும் யோகம் பயிற்சியாக எளிமையாக வந்த பிறகும் மாற்றம் வெகு குறைவாக இருக்கிறதே?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதருக்கும், பிறவியின் நோக்கத்தை நிறைவேற்றும் யோகம் பயிற்சியாக எளிமையாக வந்த பிறகும் மாற்றம் வெகு குறைவாக இருக்கிறதே?


பதில்:

யோகம் என்பது எளிமையாக்கப்பட்டு, மனிதர்களின் பிறவி நோக்கத்தை அறியவும், பிறவிக்கடன் தீர்த்திடவும் வழிகளாக, பயிற்சிகளாக பல கிட்டதட்ட 100 ஆண்டுகளாக உலகில் எத்தனையோ ஞானிகளால், மகான்களால், யோகிகளால், உலக மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதற்கு முன்பாகவும் இருந்தன எனினும் கடின முறைகளும், துறவு கட்டாயம் என்ற நிலையும்கூட மக்கள் ஏற்றுக்கொள்ள தயக்கத்தோடு இருந்தனர். என்றாலும் அதையும் விரும்பி ஏற்று கற்றுக்கொண்டு, தானும் உயர்ந்து, பிறரையும் உயர்த்த நினைத்த அத்தகைய உயர்ந்த நோக்கமும் எண்ணமுமே, பிற்காலங்களில் யோகத்தை எளிமையாக்கிடவும் வகை செய்தது எனலாம்.

அந்தக்கால கடின முறைகளும், கட்டாய துறவும் இப்பொழுது இல்லை. பயிற்சியில் எளியமுறையும், வாழும் வாழ்க்கையில் அளவும் முறையும் கொண்டு யோகத்தின் வழியாக உயரலாம். தன்னிலை விளக்கமும், மெய்ப்பொருள் உண்மையும் அறியலாம் என்ற நிலை உருவாகிவிட்டது. அதுவே இன்றளவும் தொடர்கிறது.

எத்தனையோ யோக பயிற்சி மையங்களும் உலகெங்கிலும் உருவாகிவிட்டன. நோக்கம் ஒன்றாகக் கொண்டு பலவாறாக பயணிப்பது மக்களுக்கும் உதவும். அந்தவகையில்தான் மொழி, இனம், நாடு என்ற பிரிவுகள் இன்றி அனைவரும் யோகத்தில் பயணிக்கின்றனர் என்பதுதான் உண்மை. எனினும் சில குறுமதியர்கள், தங்களின் சுய லாபத்திற்காகவும், பெயருக்காகவும், புகழுக்காகவும், பிறரிடமிருந்து பொருள் பறிக்கவும் திட்டமிட்டு, மக்களுக்கு  தவறான பாதையையும், அச்சுறுத்தலையும் பரப்புகின்றனர். மிகையாகச் சொல்லி அதை மனிதர்களால் முடியாது என்றும் சொல்லுவார்கள். மனிதர்களாகிய நமக்குத் தேவையும் இல்லை என்றும் சொல்லுவார்கள். இப்படியான மனிதர்களுக்கும் பெரும்கூட்டம் பின்னால் செல்லுகிறது என்பதுதான் நாம் நேரில் பார்க்கின்ற உண்மையாகும்.

தகவல் தொடர்பு உலகம் முழ்வதும் எளிமையாகிவிட்ட இந்த நிலையிலும் கூட, இப்படியான உண்மைக்குப் புறம்பான மாற்றுக்கருத்துக்கள் வலிமையாக பரவி வருவது கண்கூடு. ஆனால் இதை உடனடியாக மாற்றிவிட முடியுமா? முடியாதுதான். வேகமாக நகரும் ஒரு விசையை, பொருளை, தடுப்பதில் மிகப்பெரும் பாதிப்பு ஏற்படுவது இயற்கை விதி. ஆனால் அதுவாகவே ஒர்நாளில் ஓரளவில் நின்றுவிடும் அல்லவா? அதுவரை காத்திருந்து பிறகு அதை மாற்றி அமைக்க நாம் முயற்சிக்கலாம்.

பொதுவாகவே யோகம் குறித்து எது பேசினாலும் ஏற்கும் மனநிலை, எந்த மனிதருக்கும் இல்லை என்பதுதான் இப்போதுள்ள தலைமுறைக்கும், அடுத்த இரண்டு தலைமுறையினருக்கும் இருக்கிறது. தவறில்லை. எல்லா மனிதர்களுமே உலகில் இன்பத்தை நுகர்ந்து அனுபவித்து வாழவே பிறந்தோம் என்ற உண்மையில், அவர்கள் பயணிக்கிறார்கள்.  யோகத்தின் வழியாக, இப்படியாகத்தான் அந்த இன்பத்தை நுகர்ந்து அனுபவிக்கவேண்டும் என்று மற்றோர் பயணிக்கிறார்கள். இந்த பயணத்தில் எங்கே பிரச்சனை வருகிறதோ? தடை வருகிறதோ? குழப்பம் வருகிறதோ? அப்போது தானாகவே மாற்றம் நிகழும் என்பதே உண்மை. இயல்பான பாடமும், திருத்தமும் மனித சிந்தனையில் அமைந்துள்ளது. இயற்கையானது நமக்கு வழிகாட்டியது போலவே, அவர்களுக்கும் வழிகாட்டும் என்பதே உண்மையாகும். காத்திருக்கலாம் தவறில்லை.

வாழ்க வளமுடன்

-

Why still some of people share the old notes and details is hard to follow in this modern world?


இன்னமும் கூட பழைய பஞ்சாங்கம்,  புரிந்து கொள்ள முடியாத விளக்கம், குறிப்பு, வழிபாடு, சடங்கு, வழிமுறை, நடைமுறைக்கு கடினமான பழக்கங்கள் இவற்றை விளக்குகிறார்களே?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, இன்னமும் கூட பழைய பஞ்சாங்கம்,  புரிந்துகொள்ள முடியாத விளக்கம், குறிப்பு, வழிபாடு, சடங்கு, வழிமுறை, நடைமுறைக்கு கடினமான பழக்கங்கள் இவற்றை விளக்குகிறார்களே?


பதில்:

வேதாத்திரியத்தில் இருக்கின்ற உங்களுக்கு அத்தகைய கண்ணோட்டம் வேண்டியதில்லை. இப்போழுது நீங்கள் இருக்கும் நிலையில், உங்கள் வகுப்பில் என்ன சொல்லித்தரப்படுகிறதோ? உங்கள் கேள்விக்கான விளக்கம் கிடைக்கிறதோ? அதை மட்டும் நீங்கள் பெற்று பயன் செய்து கொள்ளுங்கள். உங்களைச் சுற்றி என்ன நடந்தாலும், யார் என்ன சொன்னாலும் அப்போதைக்கு ஏற்று கடந்துவிடப் பழகுங்கள்.

யாரையும் குறை சொல்லுவதும், அவர்களை திருத்திட முயற்சிப்பதும், மாற்றங்களை விளக்கிக் கொண்டிருப்பதும், அவர்களின் விளக்கத்தில் இருக்கிற குறைகளை களைவதும் நம்முடைய வேலையில்லை. அதை காலமும், அவர்களுடைய அனுபவமும் பார்த்துக்கொள்ளும். எனவே அவர்களையும், அவர்கள் கருத்துக்களையும் கடந்துபோகக் கூடிய தன்மையை நீங்கள் வளர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

ஒரு தனிநபர், ஒரு சமூகம், ஒர் நாடு என்ற வகையில் பலவித கருத்துக்களும், விளக்கங்களும் இருக்கத்தான் செய்யும். வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான் உலகின் சிறப்பாகும். அதற்குத் தக்கபடி நாம் வாழ்வதற்கும் பழகிக் கொள்ளவேண்டும்.

வேதாத்திரியம் உண்மையிலேயே தனது விளக்கத்தை தருவதாக மட்டுமே அமைந்திருப்பதை நீங்கள் காணலாம். எந்த வகையிலும் அது வேண்டாம், இது வேண்டாம், இது தவறு, அது தவறு என்று குறைகளையும், விளக்கங்களையும் சுட்டிக் காட்டுவதே இல்லை. இதை கட்டாயம் கடைபிடியுங்கள் என்று உங்களை வற்புறுத்துவதும் இல்லை. ஏதேனும் குழப்பமாக சொல்லி உங்களை எந்த விதத்திலும் பயமுறுத்துவதும் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதுவரை உங்களுக்கு வேதாத்திரியத்தின் நோக்கம் தெரியவில்லை என்றாலும் கூட, இனிமேலாவது தெரிந்து கொள்ளுங்கள்.

ஒரு பாதையில், பலதரப்பட மனிதர்கள் கடந்து போகலாம். அவர்களோடு நாமும் நடந்து போகிறோம். அந்த வகையில், அந்த பாதையில் நடந்து போகிற எல்லோருக்குமே ஒரே நோக்கமும், தெளிவும், விளக்கமும் இருக்கும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. மனிதன் ஒரே மாதிரியான அமைப்பில் இருந்தாலும், வந்தாலும், ஒவ்வொருவரும் தனித்தனி உலகம் என்ற உயர்ந்த ஞானிகளின் கருத்தை நாம் ஏற்றுக்கொள்ளாமல் இருக்கமுடியாது. அந்த உண்மையை புரிந்து கொண்டு, அவர், அவருக்குத் தெரிந்த கருத்தையும், அவர் கற்றுக்கொண்ட கருத்தையும், அவருக்கு அனுபவப்பட்ட வழிகளில் கிடைத்த உண்மைகளையும் சொல்லுகிறார். அது அவருடைய வழி என்று விட்டுவிடுதல் நல்லது. உங்களுக்கான வழியும், பாதையும் எதுவோ அதில் நீங்கள் அமைதியாக நிறைவாக பயணிப்பதுதான் நல்லதாகும்.

குறைகளை பார்த்துக்கொண்டே இருக்கின்ற மனதிற்கு என்றுமே அமைதி இருக்கப்போவது இல்லை. அதனால், உங்களுடைய உண்மைக் கருத்துக்களில் நின்று, அதை குழப்பிக்கொள்ளாமல், மேலும் மேலும் அதிலேயே விளக்கம் பெற்று உயர்ந்து கொண்டே இருங்கள், அதுவே போதுமானது!

வாழ்க வளமுடன்

-

Most of people not interested on yoga and they living till end, no issues on that. correct?


யோகத்திற்கு யாரோ ஒரு சிலர்தானே வந்து சேர்கிறார்கள், பெரும்பாலோர் எப்போதும்போல உலக இன்பம் அனுபவித்து வாழ்ந்து முடிந்துவிட்டால் போதும் என்றே இருக்கிறார்கள். அதில் ஏதும் குறை இருப்பதாக தெரியவில்லையே?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி: 

வளமுடன் ஐயா, யோகத்திற்கு யாரோ ஒரு சிலர்தானே வந்து சேர்கிறார்கள், பெரும்பாலோர் எப்போதும்போல உலக இன்பம் அனுபவித்து வாழ்ந்து முடிந்துவிட்டால் போதும் என்றே இருக்கிறார்கள். அதில் ஏதும் குறை இருப்பதாக தெரியவில்லையே?


பதில்:

நீங்கள் சொல்வது சரிதான். எப்போதுமே வாழ்கின்ற வாழ்க்கையில் தானாகவே யோகத்திற்கு வருபவர்களும், பிறர் சொல்லி கேட்டு யோகத்திற்கு வந்து அதை கடைபிடித்து வருபவர்களும் ஒருசிலர் தான் என்பதில் ஐயமில்லை. அதுபோலவே, பெரும்பாலோர் எப்போதும்போல உலக இன்பம் அனுபவித்து வாழ்ந்து முடிந்துவிட்டால் போதும் என்றே இருக்கிறார்கள். அதனால் நீங்களும் அப்படியே இருந்துவிடலாமே என்று நினைக்கிறீர்கள். சரிதானே?

அது உங்கள் விருப்பம், உங்கள் முடிவு, நான் தலையிடமாட்டேன். ஆனால் அதிலிருக்கும் உண்மையை நான் சொல்லியே ஆகவேண்டும். அதுதான் என்னுடைய கடமை. இந்த உலகில் நாம் அடிக்கடி பிறப்பதில்லை. ஏற்கனவே பிறந்தோமா? என்பதும் நினைவில் இல்லை, இனி எப்போதாவது பிறக்கப்போகிறோமா? என்பதும் நமக்குத் தெரியாது தானே? அப்படியானால் இருக்கின்ற இந்த வாழ்க்கையை நல்லவிதமாக, எல்லா இன்பங்களையும் பெற்று அனுபவித்து வாழ்வது நல்லதுதான். ஆனால் உண்மையாகவே அப்படி வாழ்ந்து அனுபவித்தீர்களா? அப்படி அனுபவிக்கவும் முடிகிறதா? என்ற கேள்விக்கு பதிலை சொல்லுவீர்களா?

வாழ்க்கை என்றால் கஷ்ட நஷ்டம் இருக்கத்தான் செய்யும், இதையெல்லாம் பெரிசாக எடுத்துக்கொள்ள முடியுமா? என்று என்னிடமே எதிர்கேள்வியும் கேட்பீர்கள். இந்த பிரபஞ்சம் முழுவதும் இன்பமே நிறைந்திருக்கிறது. அந்த இன்பத்தை நீங்கள் ஏன் மறுக்குறீர்கள்? என்று நானும் கேள்வி கேட்பேன். அது உண்மைதானா? ஆம். இந்த பிரபஞ்சம் முழுவதும் இன்பமே நிறைந்து இருக்கிறது. அதை நானும் அனுபவித்து மகிழ்கிறேன். உங்களைப்பொறுத்தவரை, ஏதேனும் செய்தால்தான் இன்பம் கிடைக்கும் என்றுதானே நினைக்கிறீர்கள்? ஆனால் சும்மா இருக்கும் சுகம் பற்றிய உண்மையை அறிவீர்களா? எதுவுமே செய்யாமல், இன்பத்தை தேடாமல், இன்பத்திலேயே நிறைந்து இருப்பது குறித்த உண்மை உங்களுக்குத் தெரியுமா?

தெரியாவிட்டாலும் பிரச்சனை இல்லை. அதனால் என்ன பிரயோஜனம்? என்று மறுபடி என்னிடம் எதிர்கேள்வி கேட்கிறீர்களா? சரி, நீங்கள் பிறந்ததே அந்த உண்மையை அறிவதற்குத்தானே? அதை மறந்துவிட்டீர்களே? அந்த உண்மை அறிந்துவிட்டால், நீங்களாக இருப்பது யார்? என்ற ‘நான் யார்?’ என்ற கேள்விக்கும் விடை கிடைத்துவிடுமே? அதை கிடைத்த இந்த பிறவியில் அறிந்து கொள்ளாமல், வாழ்க்கையை முடித்துக்கொள்வீர்களா? அது சோகம் இல்லையா? உணராமல் இறந்துவிடுவது கொடுமை தானே? இனி அந்த வாய்ப்பு எப்படி கிடைக்கும்? முடிந்தது முடிந்ததுதான்.

எனவே சுருக்கமாக முடித்துக்கொள்ளாலாம், உங்களுக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி ‘யோகத்தில்’ பயணியுங்கள். உங்களோடு வராதவர்களை ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். அது உங்களை முடக்கிவிடும். அதற்கு இடம்கொடுக்காமல், தொடர்ந்து பயணித்து, உண்மை விளக்கம் பெறுங்கள். குருவருள் உங்களுக்கு துணை இருக்கட்டும். நானும் உங்களை வாழ்த்து மகிழ்கிறேன்.

வாழ்க வளமுடன்

-

What is the need of truth of Pongal festival?


பொங்கல் பண்டிகை குறித்த உண்மை என்ன? இது தேவைதானா?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.



கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, பொங்கல் பண்டிகை குறித்த உண்மை என்ன? இது தேவைதானா?

பதில்:
மனிதர்களாகிய நமக்கு தேவைதான். பண்டிகை என்றால் பண்டு+ஈகை= பண்டிகை என்றாகிறது. சமூகத்தில் இருக்கின்ற மனிதர்கள் ஒருவருக்கொருவர் பொருட்களை, முழுமனதோடு பகிர்ந்து அளிப்பது என்று பொருள்தரும். இங்கே ஈகை என்பது, எதிர்பார்த்து கொடுப்பது அல்ல, தனிப்பட்ட கொடுக்கல் வாங்கலும் அல்ல. தன்னிடம் இருக்கின்ற மிகுதியை பிறருக்கு அளிப்பது என்று அர்த்தமாகிறது. இது தமிழர்களின் சிறப்பம்சம், சித்தர்கள் வகுத்த வாழ்க்கை நெறியின் அடிப்படையில் மலர்ந்தது என்றும் சொல்லமுடியும். ஏனென்றால் சித்தர்கள், தங்களுடைய வாழ்வில், ஒழுக்கம், கடமை, ஈகை என்ற மூன்று நிலைகளின் அடிப்படையில்தான் வாழ்ந்தார்கள், அதையே மக்களுக்கும் தந்து முறைப்படுத்தினார்கள்.

இங்கே பொங்கல், என்பது இயற்கைக்கும், சூரியனுக்கும் நன்றி போற்றும் விதமான ஒரு வழிபாட்டு நிலை என்பதையும் நாம் குறிப்பிடவேண்டும். பொதுவாகவே மனிதன் தன்னளவில், இயற்கையக் போற்றி வந்தவன். தன்னை காப்பதும் இந்த இயற்கைதான் என்று அறிந்துகொண்ட மனிதன், இயற்கையை தெய்வமாக வணங்குவதில் தவறு இல்லையே? அந்த நிலையில், தினமும் எழுந்து மறைந்து, மீண்டும் தோன்றும் சூரியனுக்கு வணக்கமும், நன்றியும் தெரிவிக்கும் நாளாக, பொங்கல் அமைந்திருக்கிறது.

இது தமிழர் திருநாள் என்று சொல்லுவதற்கு சான்றாக, பழங்கால சங்கப்பாடல்கள் நமக்கு உதவுகிறது எனலாம். இங்கிருந்து மக்கள் உலகெங்கும் புலம் பெயர்ந்ததில், இந்த பொங்கல் பண்டிகையும் பலவேறாக திரிபு பெற்று வெவ்வேறு நிலைகளிலும், பெயர்களிலும் மாறி இருக்கவும் வாய்ப்புள்ளது.

குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள், இந்த பொங்கல் நாளில், அதன் சிறப்பு குறித்தும், யோகத்தோடு இணைந்து நிறைய கவிகள் படைத்துள்ளார். 

“பொங்கிடுவோம் உயிர் உணர்ந்து
புலனடக்க வாழ்வு பெற்றுப்
பொங்கிடுவோம் நாடனைத்தும்
பொறுப்பாட்சி வளம் கண்டு
பொங்கிடுவோம் சமுதாயப்
பொருள் துறையில் நிறைவு கண்டு
பொங்கிடுவோம் மக்கள் குலம்
போர் ஒழித்து அமைதி பெற."
"பயிர் விளைந்த மகிழ்ச்சியிலே உழவர் பொங்க
பங்கீடு பெற்றவர்கள் பயனால் பொங்க
உயிரறிந்த உவப்பினில் யான் உளத்தில் பொங்க
உலகெங்கும் வளம் பெறவே வாழ்த்து கின்றேன்."

இன்னொரு சிறப்பு என்னவென்றால், சூரியனின் வானியல் நகர்வு முக்கியமானது. ஒருமாத காலம், தனுசு ராசி நட்சத்திர கூட்டத்தில் இருந்துவந்த சூரியன், மார்கழி மாதம் என்ற தெய்வீக தன்மைகொண்ட காலம் முடித்து, தன்னை மீண்டும் பொலிவோடு, மகர ராசி நட்சத்திரக் கூட்டத்திற்கு நகர்கிறது. அதுவே தை மாதம் முதல் நாளாகிறது. இன்னொரு சிறப்பாக, சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வும், நின்று இனி தெற்கு நோக்கி நகர்ந்திடும். இதை உத்தராயணம், தெட்சினாயணம் என்றும் சொல்லுவார்கள். அதையும் அறிந்துணர்ந்த தமிழ் முன்னோர்கள், சூரிய வழிபாட்டு நாளாகவும், பொங்கல் பண்டிகை நாளாகவும் அமைத்தார்கள். மேலும் அந்த நாளின் சூரியன், மனிதர்களின் உயிருக்கும், அதே நேரத்தில் சந்திரன் மனிதர்களின் மனதிற்கும் ஊட்டமளிக்கிறது.

எனினும் இதையெல்லாம் மறுத்து, அதெல்ல, இதெல்ல, அப்படி, இப்படி என்று மறுத்துப்பேசுபவர்களை விட்டுவிடலாம். அவர்களின் உரிமையில் அது தேவையில்லை என்றால் விட்டுவிடோம். உங்களுக்கு விருப்பம் இருக்கும் நிலையில், உண்மை அறிந்த நிலையில் கொண்டாடுவது தவறில்லை. இந்த பண்டிகை வழியாக, இந்த ஒரு நாளில், உங்கள் மனதை மாற்றியமைக்கிறீர்கள் என்ற உண்மையையும் புரிந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
-

What is the states of the people, who dislike and opponent the Bhakti and Yoga?


பக்தியிலும், யோகத்திலும் ஆர்வமில்லாதவர்கள், அதை எதிர்ப்பவர்கள், ஏற்றுக்கொள்ளாதவர்கள் நிலை என்ன?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, பக்தியிலும், யோகத்திலும் ஆர்வமில்லாதவர்கள், அதை எதிர்ப்பவர்கள், ஏற்றுக்கொள்ளாதவர்கள் நிலை என்ன?

பதில்:
மிக விரிவாகவே பதில் தரக்கூடிய கேள்வி, எனினும் சுருக்கமாகவே இங்கு காண்போம். இந்த உலகில் வாழும் எல்லா மனிதர்களுக்கும், அவரவர் அளவில் அனுபவங்கள் உண்டு. அந்த அனுபவம், தங்கள் எண்ணம், சொல், செயல் இவற்றாலும், எதிர்பார்பதாலும் வரும். முக்கியமாக, ஒரு விளைவு என்பது தானாக வருவது என்பது இல்லை. இந்த இயற்கை மட்டுமே தானாக எதேனும் ஒரு விளைவை நொடிகொருதரம் தந்துகொண்டே இருக்கும்.

எந்த ஒரு மனிதனும், இன்னொரு மனிதனுக்கு துன்பம் நேரடியாக தருவதில்லை. ஒரு தலைமை, அதிகாரம், ஆளுமை, நீதி, சட்டம் என்ற உலக அரசு, அலுவலகம், பொது வாழ்வில் முறை என்ற வகையில்தான், நம்மை ஆளுமை செய்வார்கள். அதில்கூட துன்பம் என்பது, நாம் மீறினால்தான் வரும். மற்றபடி அது எல்லா மக்களுக்கும் பொதுவானதுதானே?!

ஒரு மனிதன், பக்தியிலும், யோகத்திலும் ஆர்வமில்லாது இருந்தாலும், அதை எதிர்த்தாலும், ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் கூட அவர்களுக்கு துன்பம் வந்துவிடுவதில்லை. இயற்கையும் தனியாக தண்டிப்பதில்லை. ஆனால், இவைகளுக்கு எதிராக, இதை கடைபிடிப்பவர்களுக்கு எதிராக, தன் கருத்தை திணிக்கும் பொழுதான் அது முறையற்ற செயலாக மாறுகிறது. இங்கேதான் இருபக்கமும் துன்பம் எழுகிறது. மேலும், எதிரான நிலையுள்ளவர்கள், நேர்மையாக, இயல்பாக, இயற்கைக்கு மாறான கருத்து இல்லாது செயலாற்றவேண்டியது அவசியமாகிறது. அதை மீறினால் அவர்களுக்கு அவர்களாலேயே துன்பம் எழுந்துவிடும்.

என்றாலும், பக்தியில் உள்ளவர்கள் தன்னை, தனக்கு மேலான ஒரு சக்தியிடம் தன்னை ஒப்படைத்து சரணாகதி அடைகிறார்கள். யோகத்தில் உள்ளவர்கள் தன்னையே உள் கடந்து, அந்த சக்தி எது என்பதை அறிந்து தன்னிலே முழுமை அடைகிறார்கள். அவர்களின் மனம் விரிந்த நிலையில், உலக விசயங்களில் இருந்து விடுபட்டு, உண்மை இன்பம், பேரின்பம் பெற்று அமைதியும், அதன் வழியே சாந்தியும் பெறுகிறது. எனவே, இந்த இரண்டிலும், மனிதனாக பிறந்த பிறவியின் கடன் தீர்க்கப்படுகிறது. 

எதிர்தரப்பினர்களுக்கு இந்த வாய்ப்பு இல்லை. அதனால், இந்த இயற்கை அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்துகொண்டே இருக்கும். உள்முகமாக வருத்தங்களையும், துன்பங்களையும் உருவாக்கிக் கொண்டே இருக்கும். எப்படியாவது, எக்காலத்திலாவது உண்மை உணர்க என்று வலியுறுத்திக் கொண்டே வரும். ஆனால் இது எதையும் அவர்கள் கண்டுகொள்ள மாட்டார்கள். உதாசீனமும் செய்வார்கள். இதனால் அவர்களின் பிறவி நீண்டுகொண்டே போகும். கருத்தொடரின் காலமும் கூடும். சரி, அது அவர்களின் கவலையும், நிலையும் தானே?! அவர்களுக்கு இயற்கை கைவிடாமல் காப்பாற்றிக் கொண்டுதான் இருக்கும். நாம் கடந்து செல்வோம்!
வாழ்க வளமுடன்.
-

If we join in yoga, I think money earning will be lost. Correct?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, பணம் என்ற ஒன்றை வைத்துத்தானே வாழவேண்டியுள்ளது. யோகத்திற்கு வந்துவிட்டால் அதில் இழப்பு வந்துவிடுமே?!


பதில்:

உங்களுடைய புரிதலில் தவறு இருக்கிறது. இல்லையென்றால் யாரோ உங்களுக்கு தவறான தகவல்களை தந்திருக்கிறார்கள் என்றும் சொல்லலாம். முதலாவதாக யோகத்தையும், பணத்தையும் இணைத்து சொன்னது யார்? எதிர் எதிராக சொன்னதும் யார்? என்று தெரியவில்லை. ஆனால் பற்பல கதைகள் சொல்லி மக்களை, உங்களைப்போன்ற பலரை குழப்பி வைத்திருக்கிறார்கள் என்று சொல்லமுடியும்!

மனிதர்களாகிய நாம் ஆதிகாலத்தில் விலங்குகள் போல, வேட்டையாடி, உண்டு, உறங்கி வாழ்ந்து வந்தோம். அந்த வாழ்வில் தொடர்ச்சியில், பல்லாயிரம் ஆண்டுகள் அனுவமாக அறிவில் உயர்ந்து, ஒருவருக்கொருவர் பயண்பாடு கொள்ளவும், இன்னொருவருக்கு உதவவும் பண்டமாற்றும், பணமும் வந்து சேர்ந்தது. முக்கியமாக யாரும் யாரையும் ஏமாற்றி, சோம்பேறியாக வாழ்ந்திடக்கூடாது என்ற நிலையிலும், ஒரு வேலை அதற்கான கூலி என்ற முறையும் வந்துவிட்டது. நவீன கால மாற்றத்தில், வேலை, வியாபாரம், தொழில், நிறுவனம் என்று பலவாறாக உலகளவில் மாற்றம் வந்துவிட்டது. இத்திறமைகளை கற்றுக்கொடுக்க எண்ணற்ற கல்வி நிறுவனங்களும் உள்ளன. எனவே எல்லாவற்றிற்கும் பணம் முதன்மை என்பதில் ஐயமில்லை. அந்தப்பணத்தை சம்பாதிப்பது ஒவ்வொரு மனிதனின் கடமை என்பது உலகம் ஏற்றுக்கொண்ட உண்மை.

இங்கே யோகம் எப்படி பணத்திற்கு விரோதமாக போய்விட்டது என்று தெரியவில்லை. யோகத்திற்கு வந்துவிட்டால் ஏன் பணத்தை ஒதுக்கிடவேண்டும்? ஏன் பணத்தை வெறுக்கவேண்டும்? சம்பாத்தியத்தை விட்டுவிட வேண்டும்? அப்படி பணத்தை விட்டுவிட்டால், யோகத்தில் சென்றவர், உலகில் எப்படி உயிர் வாழ்வார்?! யார் உதவுவார்? ஏதேனும் காட்டுக்குச் சென்று பழம், காய்கறிகள் பறித்து உண்பாரா? வாழும் மக்களிடம் யாசகம் கேட்டு புசிப்பாரா? தன் தேவைகளை எப்படி நிறைவேற்றுவார்? யோகத்தில் வந்ததினால், இந்த உலகுக்கு அவர் அவசியமில்லாதவராக போய்விடுவாரா? இப்படியான எத்தனையோ கேள்விகளுக்கு விடை இருக்கிறதா? சரி, இதற்கு யோகமே தேவையில்லை என்ற முடிவுக்கும் நீங்கள் போய்விடுவீர்களா? இல்லைதானே?!

நன்றாக புரிந்து கொள்ளுங்கள். யோகம் என்பது வாழ்வியல் உண்மை நெறியாகும். அப்படியான யோகத்தையும் பணத்தையும் முடிச்சுபோட்டு, விரோதம் செய்யவேண்டாம். உங்கள் வழக்கமான வேலை, தொழில், வியாபாரம், நிறுவனம் நடத்தி பணத்தை சம்பாதியுங்கள். அதில் எந்த சுணக்கமும் வேண்டாம். நீங்கள் யோகத்தில் இருந்தபடி இதைச் செய்தால், உண்மையும், அளவும், நிறைவும் அமைந்திருக்கும். அதன் பலனாக உங்களை பலர் தேடிவருவதையும், அப்படி வருகின்ற எல்லோருக்கும் நிம்மதியும் கிடைப்பதை காண்பீர்கள். அதன்மாற்றமாக உங்களுக்கு வாழ்வில் அமைதியும் கிடைக்கும். முக்கியமாக இந்த உலகில் நாம் வாழும் வரை, சம்பாத்தியமும் அதன் நிறைவும் நமக்குத்தேவைதான்!

வாழ்க வளமுடன்.

Society, which does not respect a contemporary, celebrate after death? Why?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, சம காலத்தில் வாழும் ஒருவரை மதிக்காத இந்த சமூகம், இறந்தபிறகு கொண்டாடுகிறதே? ஏன்?


பதில்:

நல்ல சிந்தனைக்குரிய கேள்வி. ஆம் உண்மையே.சம காலத்தில் வாழும் ஒருவரை மதிக்காத இந்த சமூகம், இறந்தபிறகு கொண்டாடுகிறது. சமூகம் மட்டுமல்ல, இந்த உலகமே என்றும் சொல்லலாம். ஒரே காலத்தில் பிறந்து வளர்ந்த மக்களிடையே, ஒரு சம அளவிலான மனோபாவம் மட்டுமே இருக்கும். ஆனால் அனுபவத்திலும், அறிவின் வளர்ச்சியிலும், சிந்தனையிலும், செயலிலும், திட்டங்களிலும் மாறுபட்டு இருப்பதை மறுப்பார்கள். ‘அப்படி என்னய்யா இவர் பெரிய ஆளு?’ என்று வெளிப்படையாகவும் சொல்லுவார்கள்.

நீங்களே உங்களை பரிசோதிக்கலாம். உங்கள் மாணவ பருவத்தை நினைவுக்கு கொண்டு வாருங்கள். உங்களோடு படித்த மாணவர்கள் ஒவ்வொருவரையும் இப்போது பார்த்தால், அவர்களின் வளர்ச்சி, திறமை, சிந்தனை, செயல்பாடு மாறி இருப்பதை கண்டு நீங்கள் வியக்கலாம் அல்லது வருந்தலாம். அதுபோலவே உங்களையும் அதே கண்ணோட்டத்தில் அவர்கள் பார்ப்பார்கள். இதுதான் நிகழும். இதற்கு மேலே உங்களை அவர்களும், அவர்களை நீங்களும் மாறுதலாக பார்க்க மாட்டீர்கள். ஏனென்றால் நீங்கள் அனைவரும் சமகாலத்தவர்கள், ஒன்றாக இருந்தவர்கள் ஆயிற்றே!

இன்னொரு உதாரணமாக, ‘மகாத்மா காந்தி’ என்று அழைக்கப்படும் நம் தேசப்பிதா, ‘மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி’  தன்னுடைய வாழ்நாளில், தான் நினைத்த எண்ணப்போக்கை செயல்படுத்திடும் பொழுது, மற்றவர்களால் அவமானங்களைத்தான் சந்தித்தார். இந்திய சுந்திர போராட்ட காலத்தில், ‘இவருக்கு இதெல்லாம் தேவையா?’ என்றுதான் விமர்சனங்களை பெற்றிருக்கிறார். ஆனால் அவரின் துணிவான, உறுதியான செயல்பாட்டின் வழியாகவே, விமர்சனங்கள் வைத்த்தவர்களை வாயடைக்கச் செய்துவிட்டார். காந்திஜியின் தலைமுறையினரை விட, அடுத்த தலைமுறைதான் அவரை கொண்டாடியது. ஆனால் காந்திஜியின் நோக்கம் வாழும் தலைமுறையின் விடுதலையோடு அடுத்த தலைமுறைக்கான விடுதலையும் இனி வரக்கூடிய தலைமுறைக்கான விடுதலையும் தானே? மேலும் காந்திஜி என்பவரை விரும்பாத, பிடிக்காத நபர்கள் இன்னமும் இருக்கிறார்கள் தானே?!

இதுபோல அறியப்படாதவராகவும்,  தவறாக கருதப்படுவோராகவும், இந்திய சுந்திர போராட்டங்களில் அவர் பங்கை மறைத்தும் காட்டப்படுபவர், நேதாஜி சுபாஷ்சந்திர போஸ் ஆவார். அவருடைய வாழும் காலம் முதல் இப்போதுவரை பலப்பல விமர்சனங்களை, கதைகளை, கருத்துக்களை வைக்கிறார்களே தவிர, அவரின் உண்மை சாதனைகளை ஏற்றுக்கொள்ள தயங்குகிறார்கள் என்றே அறியமுடிகிறது. காந்திஜியின் வழியான அஹிம்சா சுதந்திர போராட்டத்திற்கும் செயல்பாடுகளுக்கும் மாறுதலான நிலையில்தான் நேதாஜி சுபாஷ்சந்திர போஸ் செயல்பட்டார். இதற்காக, இந்தியாவை ஆண்ட ஆங்கிலேய அரசுக்கு எதிரான நாட்டு அரசுகளின் ஆதரவையும் தேடி ஏற்றுக்கொண்டார். அப்போது நடந்த போர்களிலும், சண்டைகளிலும், பிரச்சனைகளிலும் ஆங்கிலேயர்களுக்கும், ஆங்கிலேய அரசுக்கும் எழுந்த பிரச்சனைகள் பல. அதில் என்னென்ன ரகசியங்கள் இருந்தன என்று யார் அறிவார்? 

குரு மகான் வேதாத்திரி மகரிஷியும், தான் பிறந்து வளர்ந்த ‘கூடுவாஞ்சேரி’ ஊரில் பலவித இன்னல்களை சந்தித்தார். அந்த குறிப்புக்கள் அவரின் என்வாழ்க்கை விளக்க நூலில் சொல்லப்படவில்லை என்றாலும், பிறர் எழுதிய மகரிஷியின் வாழ்வில் நடந்த நிகழ்வுகள் தொகுப்பில் படிக்கமுடியும். ‘கூடுவாஞ்சேரி’ ஊரில், வேதாத்திரி மகரிஷி அமைத்த தியான குடில், மாவட்ட கலெக்டர் அவர்களால், அரசு வழங்கிய நிலத்தில், மகரிஷியின் தொண்டு செய்யும் கருத்தை ஏற்று அரசாங்கமே அளித்த நிலம் அது. ஆனால். அக்குடில் உடனடியாக அந்த ஊர்கார்களால் கலைக்கப்பட்டு, பெரும் பிரச்சனையாகி, மகரிஷியின் உயிருக்கும் அச்சுறுத்தலாக அமைந்ததை சொல்லலாம். இதை மகரிஷி அவர்கள் ‘ எனக்கு இந்த ஊரில் வேலையில்லை, என்ற பாடத்தை இறைநிலை எனக்கு சொல்லுகிறது’ என்று குறிப்பிடுகிறார்.

வேதாத்திரி மகரிஷி குறித்த உண்மைகளை உணர்ந்த நாம், குரு மகான், தத்துவஞானி, அருட்தந்தை, மகரிஷி, என்று புகழ்பாடுகிறோம். இப்போதைய தலைமுறையும் போற்றுகிறது. வரும் தலைமுறையும் உலகமும் போற்றும். இதுதான் புரிந்துகொள்ளும் நிலை.

ஆனாலும் வாழும் காலத்தில் சக மனிதர்கள், அவ்வளவு சுலபமாக ஏற்றுக்கொள்ள மறுப்பார்கள் என்பதுதான் உலக நிலைபாடு. அது அவர்கள் குறை மனமும், அறிவும் செய்யும் மாயமாகும்.

வாழ்க வளமுடன்.

How to perform the simplified exercise relaxation for patients?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, எளியமுறை உடற்பயிற்சியின், உடல் தளர்த்தல் பயிற்சியை ஒரு நோய்வாய்பட்டவருக்கு, படுக்கையில் இருக்கும் ஒருவருக்கு எப்படி தரமுடியும்?


பதில்:

தாரளமாக தரலாம், மிகுந்த நன்மையும் அளிக்கும் என்பது உறுதி. அவர்கள் எழந்து நடக்கமுடியாதவாராக இருந்தாலும் குறையில்லை. முடிந்தவரை அவர்கள் புரிந்துகொள்ளும்படி, உடல் தளர்த்துதல் பயிற்சி குறித்து விளக்கமாக சொல்லி புரியவைக்க வேண்டும். அதாவது பயிற்சி எப்படி செய்வது என்றல்ல, இந்த பயிற்சியின் நோக்கம் என்ன? எதற்காக செய்கிறோம்? என்ற விளக்கத்தை மட்டும் புரியவைத்தால் போதுமானது. நீங்கள் இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து பழக்கம் இருந்தால், அதன் ஆரம்பம் முதல் கடைசி வரை நீங்களே சொல்லி பயிற்சியை நடத்தலாம். அவர்கள் அதை கேட்டுக்கொண்டே, உடலை தளர்த்திக்கொள்ள முடியும். ஒருவேளை உங்களால் நடத்தமுடியவில்லை என்றால், இணையத்தில் கிடைக்கும் ஒலிப்பதிவை பயன்படுத்தலாம். நல்ல ஒலிபெருக்கி (Speaker) கொண்டு அவர்களுக்கு நன்கு கேட்கும் ஒலி அளவில் வைத்து, கேட்டு கவனித்து செய்துவாருங்கள் என்று வழிப்படுத்தலாம்.

முக்கியமாக பயிற்சி எதற்காக என்பதை நீங்கள் சொல்லுவதில்தான் விஷயம் உள்ளது. அப்படி அவர்கள் சிறப்பாக புரிந்துகொண்டார்களா என்பதையும் நீங்கள் அவர்களிடமே கேட்டு தெரிந்துகொள்ளவும் வேண்டும் அது முக்கியமாகும்.

முடிந்தால், நம் குருமகான் வேதாத்திரி மகரிஷி அவர்களின் உருவப்படம் அவர்களிடம் காட்டி, மனதில் பதியவைக்கலாம். வாழ்க வையகம், வாழ்க வளமுடன் என்ற வாழ்த்தையும் சொல்லவைக்கலாம். அருட்காப்பும் சொல்லித்தரலாம். இது இன்னும் அவர்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக இருக்கும் என்பது உறுதி. எனவே இதை முக்கியமாக வைத்துக்கொள்ளலாம்.

ஆரம்ப நாட்களில், கொஞ்சம் அவர்களுக்கு தடுமாற்றம் இருந்தாலும் கூட, தொடர்ந்து செய்துவரும்போது நல்ல மாற்றத்தை அவர்களே உணர்ந்து உங்களுக்கு அதை தெரியப்படுத்தலாம். அதன் வழியாக, எளியமுறை உடற்பயிற்சியின் அருமையும், உடல் தளர்த்துதலின் சிறப்பும் புரியவரும். மருந்து செய்யாத மாற்றத்தை, அவர்கள் உளப்பூர்வமாக உணரக்கூடும்.

வாழ்க வளமுடன்.

Why is such a change taking place in the conditions of the growing youth in this age?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, இந்தக்காலத்தில் வளரும் குழந்தைகள் சமூக கட்டமைப்பை உடைத்து, உறவுகளை, பெரியோர்களை, பெற்றோரையும் கூட மதிக்காத நிலை ஏன்?


பதில்:

மிக நுட்பமான, ஆராய்ச்சிக்குறிய கேள்வி. இந்த கேள்வியைக் கேட்கின்ற உங்கள் வயது என்ன என்றும் இங்கே குறிப்பிடவில்லை. அதனால் இந்த கேள்விக்கான முகாந்திரம் என்ன என்பதும் அறியமுடியாது. என்ன வகையான பாதிப்பை நீங்கள் குறிப்பிட்டு இந்த கேள்வியை எழுப்புகிறீர்கள் என்பதும் தெரியவில்லை. முக்கியமாக இதற்கு மிக எளிதில் பதில் தந்துவிடவும் முடியாது. உலகில் ஒவ்வொரு மாற்றமும், முன்னேற்றமும், வாழ்கின்ற, வளர்கின்ற, வரப்போகிற மக்கள் சமுதாயத்தை பாதிக்கும் என்பது உண்மை. விஞ்ஞான, அணுவியல், வானியல், தகவல் தொழில் தொடர்பு முன்னேற்றங்கள் முன்னைவிடவும் இக்காலத்தில் மிகவும் ஏற்றம் பெற்றிருக்கின்றன. ஆனால் மனிதன் தன்னளவில் அப்படியேதான் இதனை ஏற்று வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்பதும் உண்மையே. 

இந்தக்கால தலைமுறை குழந்தைகள் உலகம் முழுவதும் அப்படி இருப்பதாக சிலர் சொன்னாலும் கூட, இல்லவே இல்லை என்று மறுப்பு தெரிவிப்பவர்களும் நிறைய உண்டு. மேலும் ஒவ்வொருவருக்கும் ஒரு மாற்றுக்கருத்து உண்டு என்பதை மறுக்க இயலாது. பொதுவாக, ஒன்றை குறை சொல்லுபவர்களின் மனப்பாங்கு எப்படி இருக்கிறது என்றும் பார்ப்பார்கள். அவ்வகையில், இப்படி குறையாக சொல்லுபவர்கள், பழமைவாதிகள், வாழ்ந்துமுடித்தவர், பொறாமையில் சொல்லுகிறார் என்று குறிப்பிடுகிறார்கள். மேலும் இளைய சமுதாயத்தோடு, வாழத்தெரியாத, பிற்போக்குவாதிகள் என்றும் முத்திரை குத்திவிடுவார்கள்.

எனவே இந்தக்கேள்விக்கான பதிலை, தனியே தருதல் தகாது. இதை ஒரு குழுவாக ஆராய்ந்து உண்மை அறியலாம். அந்த வகையில் விவாதமும் செய்யலாம். அதில் வரும் அல்லது கிடைக்கும் முடிவுகளை வரிசைப்படுத்தி, அதற்கு மாற்றாக நல்ல மாற்றங்களை செயல்படுத்தவும் முயற்சிக்கலாம்.

உங்களுக்கு ஏதேனும் விளக்கம் அல்லது மாற்றுக்கருத்து இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாமே! ஏனென்றால் கேள்வி கேட்பவருக்குக்கூட என்ன பதில் என்பது தெரியும் அல்லது என்ன பதிலாக வரும் என்பதும் தெரியும். அந்த வகையில் உங்கள் கருத்தையும் பதியலாம்!

வாழ்க வளமுடன்.

Why do some people degrade other human beings and live with competition and jealousy?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, சிலர் தங்களோடு வாழும் பிற மனிதர்களை தாழ்த்தியும், போட்டி, பொறாமையோடும் வாழ்வது ஏன்?


பதில்:

தங்களோடு வாழும் பிற மனிதர்களை தாழ்த்தியும், போட்டி, பொறாமையோடும் நடத்திக்கொள்வதற்கு காரணம், சிலர் தங்களையும், பிறரையும் சம அளவில் கருதாததே ஆகும், மனிதன் என்பவன் மன இதனானவன் என்ற உண்மையை அவர்கள் உணர்வில்லை. மேலும் அத்தகைய மனிதர்களின் பரம்பரையில் வாழ்ந்தவர்களும், பொருள், புகழ், அதிகாரம், புலன் இன்பம் ஆகியவற்றில் மிகுந்த அக்கறை கொண்டவர்களாகவும் அதற்கு மிக மதிப்பளித்தும் வாழ்ந்து வந்திருப்பார்கள். அதுவே இப்போது வாழும் தலைமுறையினருக்கும் தொடர்கிறது எனலாம்.

மேலும் பரிணாமத்தின் வழியாக, விலங்கின பதிவுகளின் தாக்கமும் அதிக செயல்பாட்டில் இருக்கும் என்று சொல்லாம். அதாவது அவர்களின் கருமையம் களங்கத்தோடு இருக்கிறது. அதை திருத்திடவும், திருத்தி அமைக்கவும் வாய்ப்பில்லாமல் போகிறது. பல பிறவிகளின் வழியாக அந்த சுமையையும் கூட்டிக்கொண்டே போகிறார்கள். இதன் வழியாக, அவர்களுக்கு இயற்கை சில பாடங்களை கொடுத்து திருத்தம் செய்கிறது எனினும், அதை அவர்கள் ஏற்று நடப்பது இல்லை. இந்த களங்கத்தின் வழியாக, அவர்களின் உடல்நலம், மன நலம் பாதிக்கும், பிறவித்தொடர் நோய்களும், துன்பங்களும் இருக்கும் என்பதே உண்மை. யோகத்தில் இணைந்து தங்களை உயர்த்திக்கொள்ள வேண்டியது அவசியமாகும், மேலும் இரண்டொழுக்க பண்பாடும் கொண்ட வாழ்வாகவும் வாழவேண்டியதும் அவசியமாகும்.

இத்தகைய மனிதர்களிடம் சிக்கிக் கொண்டவர்களின் துயரம் சொல்லில் அடங்காது எனினும், இவர்களோடு இணைப்பில் உள்ளவர்கள், தனியே, தன் திறமையக்கொண்டு வாழ பழகுதல் வேண்டும், இவர்களை சாராத வகையில், வாழ்க்கையை அமைத்துக்கொண்டால் நல்லதுதானே. அவர் நம்மை சக மனிதனாக மதிக்காவிட்டாலும் கூட இவர்கள் திருத்தம் பெற நாம் வாழ்த்தலாம். அது நமக்கு நன்மையே தரும்.

வாழ்க வளமுடன்

How do we deal with those who deny and oppose whatever they say?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, வாழ்விலும், தொழில், வியாபார ரீதியிலும், சில நட்பு வட்டங்களிலும் எது சொன்னாலும் மறுத்தும், எதிர்த்தும் பேசுபவர்களை எப்படி சமாளிப்பது?


பதில்:

மிக நல்ல கேள்வி, சமீப காலமாகவே நானும் கூட இதை அனுபவித்து இருக்கிறேன். இங்கே இணைய தளத்திலும் அப்படியான அனுபவங்கள் உண்டு. அதுவும் இந்த, வேதாத்திரிய சானல், (இப்பொழுது வேதாத்திரிய யோகா) ஆரம்பித்த பிறகு நிறைய நபர்கள், மறுத்தும், எதிர்த்தும் பேசுகிறார்கள், அதாவது பின்னூட்டம் இடுகிறார்கள். அவர்களை சமாளிப்பது ஒரு பெரும் கலைதான்.

பொதுவாகவே, இப்போதைய தலைமுறைக்கு ஒன்று அல்லது இரண்டு முந்தைய தலைமுறை என்று வைத்துக் கொள்ளலாம். குறிப்பாக சொல்லுவதென்றால் 20 வயது முதல் 39 வயதுக்குள்ளான நபர்கள் என்று சொல்லலாம். இதில் பால் பேதம் இல்லவே இல்லை. இவர்கள்தான், எதை யார் சொன்னாலும், உடனே ‘உனக்கு ரொம்பத் தெரியுமோ? அதெல்லாம் அப்படியில்லை, என்னமோ தெரிஞ்ச மாதிரி பேச வேண்டியது! இதைப்பற்றி ‘இவர்’ என்ன சொல்லுறார் தெரியுமா?’ என்று விலாவரியாக பேச ஆரம்பித்து விடுவார்கள்.

சொல்லுவது யார்? அவரின் அனுபவம் என்ன? எதன் அடிப்படையில் சொல்லுகிறார்? எதற்காக சொல்லுகிறார்? யாருக்காக சொல்லுகிறார்? இதன் விளைவு யாருக்கு எப்படி இருக்கும்? நன்மைதானா? என்னதான் முடிவாக சொல்ல வருகிறார்?  என்றெல்லாம் நிறுத்தி நிதானமாக ஆராய்வதில்லை. ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற பழமொழியை, உதாரணமாக காட்டி, ‘நீ இதானே சொல்லுகிறாய்? இதற்கு மேலும் இதைத்தான் சொல்லுவாய்!’ என்று முடிவு செய்துவிடுவார்கள்.

இப்படி வாதிடுபவர்களிடம் நாம் ஒன்றும் பேசுவதற்கில்லை. அப்படியா? சரி இனி நான் திருத்திக் கொள்கிறேன் என்று ஒப்புக்கொண்டு நகர்ந்து விடுவது நல்லது. ஏனென்றால், மறுத்தும், எதிர்த்தும் பேசுபவர்கள், தன்முனைப்புக்கான நல்ல உதாரணப்புருஷர்கள். இவர்களோடு மல்லுகட்டுவது உங்களுக்கு கடினம். ஏனென்றால் நாம் பொதுவாக, யோகத்தில் இணைந்து அதன் வழியாக பயணிக்கிறோம். நாம் எதை விளக்க முயற்சித்தாலும் அது வேறுவிதமாகவே திரும்பும். நாம் சொல்லுவதை வைத்தே நம்மை மடக்கவே நினைப்பார்கள். அவர்களை பொறுத்தவரை அவர்களின் தன்முனைப்பில், அவர்கள்தான் வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவர்கள். ஆம் நீ வெற்றியாளன் தான் என்று நீங்கள் அவரை உறுதி செய்துவிட்டு நகர்ந்து விடுங்கள். கூடவே வாழ்க வளமுடன் என்று வாழ்த்தியும் விடுங்கள். அதுவே போதுமானது!

வாழ்க வளமுடன்.

Shall I join on the temple Homa, is it useful to me?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, கோவிலில் யாகம் வளர்க்கும் பொழுது நாம் கலந்து கொண்டால் நல்லதா?


பதில்:

இறை உண்மை அறிந்த முன்னோர்கள், அந்த தெய்வீகத்தை, யோகத்தில் வரமுடியாத மக்களுக்கு தெரியப்படுத்தவும், அதன் சக்தியை பெற்று வாழ்வில் உயரவுமே பக்தி உருவாக்கப்பட்டது. அந்த பக்தி, கோவில் என்ற வழிபாட்டு தளத்தில், உருவ வழிபாடாகவும் அமைக்கப்பட்டது. அப்படியான தளத்தில், தெய்வீக ஆற்றல் நிறைபெறவும்,  ஆற்றலை சேமிக்கவும், தக்கவைக்கவும் அந்தந்த வழிபாட்டு தளங்களில் யாகம் நடத்தி முறைப்படுத்துகிறார்கள். யாகம், ஹோமம் என்பது தமிழில் வேள்வி என்று அர்த்தமாகிறது.

கோவில் என்ற வழிபாட்டு தளங்களுக்குச் செல்லும் மனிதர்கள், தெய்வீகத் தன்மையை எளிதில் புரிந்து அந்த பெற்று தங்களையும் உயர்த்திக் கொண்டு, அதன் வழியாக நல்வாழ்க்கை வாழவும் இந்த ஆற்றல் உதவிடும் என்பது உறுதி. ஆனாலும், இக்காலத்திய யாகம், ஹோமம் இவற்றில் இருக்கிற உண்மை சில இடங்களில் தடுமாறுவதும் உண்டு. உண்மை உணர்ந்து செய்வதற்கும், வெறுமனே சடங்காக செய்வதற்கும் வித்தியாசம் உண்டுதானே?!

யோகத்தில் இருப்பவர்களுக்கு அழைப்பு இருந்தால், அந்த அமைப்பில் ஒருவராகவோ, ஏதேனும் ஒரு உதவியிலோ கலந்து கொள்வதில் தவறில்லை.  மேலும் யோகத்தில் இல்லாத மக்களுக்கு, பக்தியில் திளைக்கும் மக்களுக்கு நிச்சயமாக உதவிடும். ஆனால் குண்டலினி யோகத்தின் வழியாக, தொடர்ந்து தவம் செய்பவர்கள் யாகம், ஹோமம் என்ற வேள்வி நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டிய தேவையில்லை. ஏன்? என்று கேட்டால், யாகத்தில் கலந்து கொண்டால் உங்களுக்கு என்ன கிடைக்கும்? கிடைக்கவேண்டும் என்று விரும்புகிறீர்களோ அது, நீங்கள் இயற்றும் தவத்தில் கிடைத்துவிடும் என்பதே உண்மையாகும்!

என்றாலும் கூட, குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்களிடம், இதுபோல, வேதாத்திரிய தவம் கற்றோர், கோவிலுக்கு போகலாமா? என்று கேட்டவருக்கு, ‘போகலாம் அதில் தவறொன்றும் இல்லை. தவிர்க்கவேண்டிய அவசியமும் இல்லை’ என்று சொல்லுகிறார். அதில் உள்ளர்த்தமாக நிறை உண்மைகள் மறைந்து இருக்கின்றன. என்றாவது ஓர் நாள் என்னிடம் நேரிலே கேளுங்கள். அந்த உண்மையை சொல்லுகிறேன். 

வாழ்க வளமுடன்.


The World Community Network


 அன்பர்களே,



கேள்வியில் தொடங்குகிறேன்

உங்களிடம்,  “இப்பொழுது நீங்கள் என்ன மனநிலையில் இருக்கிறீர்கள்?” என்று கேட்கிறேன். உங்கள் பதில் என்னவாக இருக்கும் என்பதை ஒரு காகித்தலோ / கைபேசி குறிப்பிலோ எழுதி வைத்துக்கொள்க. இதை நானாக புரிந்துகொண்டவகையில் சில பதில்களை இங்கே தந்து இந்த கட்டுரையை துவங்குகிறேன். அந்த பதில்கள் என்ன?

1) இன்றைய நாளும் பொழுதும் நன்றாக இருக்கிறது

2) ஏன் இன்றைக்கு ஏதோ சோகமாக உணர்கிறேன்?

3) இந்தவேலைக்கு ஏன் வந்தேனோ, ஒரே இம்சையடா!

4) எதிர்பார்த்த மாதிரி பண வரவு இல்லையே என்ன செய்வது?

5) வாங்கிய கடனுக்கான வட்டி ஏறிக்கொண்டே இருக்கே, பிரச்சனை ஆகிடுமோ?

6) கொடுத்த காசை திருப்பித்தராம எப்படியெல்லாம் ஏமாத்துறாங்க!

7) பூர்வீக வீட்டு பிரச்சனை எப்போதான் தீருமோ தெரியலையே?

8) இந்த சொந்தக்காரங்களுக்கு பதில் சொல்லியே உயிர் போகுது!

இன்னும் இன்னும், ஆயிரம் மனிதர்களின் பதில்களும் ஒரே மாதிரி இல்லாமல், தனித்தனியாகவே அமைந்திருக்கும். இதுதான் மனிதனின் இயல்பு. ஆணும் பெண்ணும் இருவரும், பொருளாதார வாழ்வில் சமமாக இருக்கும் காலம் இது. எனவே ஆணுக்கு என்னவகையான பிரச்சனைகள் எழுமோ, அதே அளவிலான பிரச்சனைகள் பெண்ணுக்கும் உண்டு.


வேற்றுமையில் ஒற்றுமை

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சனை தன்னளவில் இருந்தாலும், உலகம் சுருங்கிய இந்த காலத்தில் இன்னொன்றை கவனிக்க வேண்டும். அது சமூகம் தொடர்பானது. சமூகம் என்றால் நீங்கள், உங்கள் இனம், குழு என்று சொல்லுவதற்கில்லை. அதெல்லாம் அந்தக்காலம். 

இப்பொழுது சமூகம் என்றால், இந்த உலகமே சமூகம் என்றாகிவிட்டது. காரணம், எல்லைகளைக் கடந்த தொடர்புகள். ஆம் தகவல் தொடர்பு,  இணையம் வழியாகவும், கைபேசி வழியாகவும் இந்த உலகத்தையே ஓர் சமூகமாக மாற்றிவிட்டது. இதனால எண்ணற்ற பயன்கள் உண்டு. அதை நாமும் அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனாலும் அந்த அனுபவத்தில் நன்மைகளுக்குப் பதிலாக, நிறைவாக வாழ்வதற்குப் பதிலாக, துன்பத்தையும், நிம்மதி இன்மையையும் அனுபவிக்கிறோமே அது சரியா?

அத்தகைய உலக சமூகம், தகவல் தொடர்பால் தரும் துன்பத்தையும், நிம்மதியின்மையையும், தன்னளவில் தனித்தனியாக பிரச்சனைகளை சந்திக்கும் ஆயிரமாயிரம் மனிதர்கள், ஒருசேர ஒற்றுமையாக ஒரே அளவில் அனுபவிக்கிறார்களே! இது சரியா? இதில் நானுமே ஒருவன், நானும் கூட தப்பிவிடுவதில்லை. 


இதில் நல்லது என்ன?

உலகம் சமூகமாகிவிட்டாலும், அங்கே சுயநலமும், தான் என்ற அகங்காரமும், தனது என்ற அதிகாரத்தை அமைக்க விரும்புவதும், குழப்பதை ஏற்படுத்தி மக்கள் நிம்மதியை கெடுத்தலும், நாட்டை அபகரித்தலும், எதிரிகளை கூட்டாக அழிக்க விரும்புவதும், அரசை கைபற்ற நினைப்பதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதேவேளையில் நடக்கும் நல்லது என்ன?

ஆங்காங்கே, மக்கள் ஒன்றுபட்டு நல்ல அரசை அமைக்க விரும்புவதும், தங்கள் பிரச்சனையை தாங்களே கேட்டுப்பெறுவதும், நாட்டின் இறையான்மையை காப்பதும் நிகழ்கிறது. அவற்றை முன்னெடுத்து நடத்திச் செல்லும் நல்ல தலைவர்களையும் அடையாளம் காணமுடிகிறது. நாடு என்ற அளவில், மொழி, மத, இன அடையாளங்கள் மறந்து ஒற்றுமையான மக்களை உருவாக்குகிறது.


நீங்களும், உங்கள் நிலையும்!

இந்த உலகில், இந்த காலகட்டத்தில் வாழ்வதால் நீங்களும், இந்த உலக சமூகத்தில் ஓர் உறுப்பினர். நீங்கள் ஏற்றாலும், மறுத்தாலும் கூட அந்த பாதிப்பையும், நன்மையையும் நீங்கள் பெறுவீர்கள். சில நேரம் மறுக்கலாம், ஆனாலும் எல்லோரும் ஏற்கும் பொழுது நீங்கள் மட்டும் மறுப்பதற்கு வாய்ப்பே இல்லை. மீறினால தண்டிக்கவும்படுவீர்கள்.

இதில் உங்கள் நிலை என்ன என்பது, உங்களை வந்தடையும் உலக சமூக பிரச்சனை / நல்லது இவற்றைப்பொறுத்துத்தான் அமையும். அதில் சந்தேகமே இல்லை. அது நல்லதா, கெட்டதா என்பதை, உங்களை வந்தடையும் நேரத்தில் கணிக்கவும் முடியாததாக இருக்கலாம். மேலும் உங்களையும் தன்பக்கம் இழுக்கக்கூடிய, உங்களுக்கு நன்மை தரதக்க ஒன்றாகவும் இருக்கலாம். முற்றாக உங்களுக்கு அவசியமற்ற, உங்கள் வாழ்க்கையும் பறிக்கலாம், நீங்கள் இந்த உலகில் வாழ்வதற்கான உரிமையையும் பறிக்கலாம்.


உங்கள் வீடும், குப்பைகளும்!

இந்த உலகத்திலேயே மன நிம்மதி தரும் இடம் என்றால், உங்கள் வீடுதான். அந்த வீடு ஆடம்பரம் இல்லாமல் இருக்கலாம். 1BKH முதல் 6BHK வரைகூட இருக்கலாம். நேற்று உடுத்திய துணிகள் எங்கும் பரவிகிடக்கலாம், வீடெங்கும் குப்பைகள் நிறைந்திருக்கலாம். ஆனாலும் அது உங்கள் வீடு, உங்களுக்கு அமைதிதரும் வீடு என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

இப்பொழுது உங்கள் வாசல், எப்படி இருக்கிறது என்ற கவலை உங்களுக்கு இல்லை. என் வீடு என்வாசல் எப்படி இருந்தாலும் எனக்கு சரிதான் என்ற நிலைதான் உங்களுக்கு. நல்லதுதான். ஆனால் யாரோ உங்கள் வாசலில், வந்து குப்பையை கொட்டிவிட்டு போகிறார்கள் என்றால், என்ன ஆகும்?

நீங்கள் வெகுண்டு எழுந்து, “எவண்டா அது என்வீட்டு வாசலில் குப்பையை கொட்டுகிறவன்?” என்று வீட்டை விட்டு, வாசலில் நின்று கொண்டு சத்தம் போடுவீர்கள். பக்கத்தில் இருக்கும் நான் உங்களிடம் “சரி, விடப்பா, எவனோ போட்டுட்டு போயிட்டான், நீ நிம்மதியா இரு” என்று சொன்னாலும், “அதெப்படிங்க, என் வீட்டு வாசலில் எவனோ ஒருத்தன் குப்பை கொட்டலாம், இது நியாயமா?” என்று என்னிடம் சொல்லுவீர்கள். அதற்கு மேல் நான் பேசினால், நம் இருவருக்கும் வாக்குவாதம் ஆகிவிடும். கடைசியில் நான் தான் குப்பையை கொட்டினேன் என்று திருப்பிவிடவும் வாய்ப்புக்கள் அதிகம்.

மறுநாள், உங்கள் வீட்டிற்குள்ளேயே குப்பையை யாரோ கொட்டிவிட்டார்கள். இப்பொழுது என்ன நடக்கும்? பார்த்த உடனே, கெட்டவார்த்தையில் கூட யாரையோ திட்டிக்கொண்டே வாசல் வரை வந்து கத்துவீர்கள். இன்றோ நானும் உங்களிடம் ஒருகருத்தும் சொல்லவில்லை. நான் வெளியே வரவேஇல்லை. நீங்களாகவே கொஞ்சம் கத்திவிட்டு அடங்கிவிட்டீர்கள்.

மூன்றாவது நாள், நீங்கள் அறியாமல், உங்கள் படுக்கை அறையிலேயே யாரோ ஒருவர் குப்பையை கொட்டுவிட்டார். அவ்வளவுதான், உங்கள் சினம் எந்த அளவுக்கு எகிரும் என்பதை அளவிடவே முடியாது என்பதுதான் உண்மை. 

கூட்டி அள்ளி வெளியில், போட்டுவிடுகின்ற குப்பைக்கு இவ்வளவு கோபம் உங்களுக்கு வருமென்றால்... அடுத்த தலைப்பையும் படியுங்கள்!


உங்கள் மனமும், குப்பையும்!

உலக சமூகம், தகவல் தொடர்பில் மிக எளிதாக எல்லோரையும் ஒரே கயிறில் கட்டி இணைத்துவிட்டது. யார் எங்கே இருந்தாலும், யாரோடு யாரும் பேசலாம், பழகலாம், விரும்பலாம், இணையலாம், கூடலாம், விலகலாம், எதிர்க்கலாம், சண்டையும் போடலாம், பழியும் வாங்கலாம் என்றாகிவிட்டது தானே?!

மேலும் தினம் தினம், இணையம் வழியாக, கைபேசி வழியாக, யார் யாரோ குப்பைகளை, உங்கள் மனதில் கொட்டி விட்டு போகிறார்களே? உங்கள் மனம், நீங்கள் வாழுகின்ற வீட்டை விட கேவலமானதா? ஏகப்பட்ட குப்பைகளோடு வாழ்ந்து பழகி, இன்னும் பல மடங்கு குப்பைகளை ஏற்றுக்கொள்ளும் மனதைத்தான் நீங்கள் பெற்றிருக்கிறீர்களா? ஒரு போதும் நீங்களாக, உங்கள் குப்பைகளை சரிசெய்ததில்லை அப்படியே வாழ்ந்து பழகிவிட்டீர்கள் என்றால், யார் யாரோ போடும் குப்பைகளை ஏற்றுக்கொள்ளவும் செய்வீர்களா? அந்த குப்பைகளோடும்  உங்கள் வாழ்க்கையை தொடர்வீர்களா?

உங்கள் பதிலும், நிலையும் என்ன?

வாழ்க வையகம், வாழ்க வளமுடன்!

Mind Perfection is Human


மனம் + இதன் = மனிதன்


அனைத்தும் பணிகளிலும் சவால்கள் நிறைந்துள்ளன என்றாலும், உங்கள் பார்வையில் மிகவும் கடினமான அல்லது சவாலான பணி எது? ஏன்?

கடினமான, சவாலான பணி என்றால், “ஒரு மனிதனை மனிதத்தன்மையோடு” இருக்கத் தூண்டுவதுதான். மனிதன் என்ற போர்வையில் இருக்கும் “பல்லுயிர் மிருங்கங்கள்” என்பதாகத்தான், பலப்பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வந்துகொண்டு இருக்கிறான். மனிதன் மனம்+இதன் ஆக வேண்டும் என்றுதான், அவ்வப்பொழுது சித்தர்கள், ஞானிகளும், மகான்களும் தோன்றி வழிநடத்துகிறார்கள். 


ஏதோ ஒரு கவிதை இப்படி சொல்லும்...


எங்கள் பள்ளிகள்

கல்லூரிகள்

எத்தனையோ பட்டதாரிகளை

எத்தனையோ ஆராய்ச்சியாளர்களை

எத்தனையோ பொறியியலாளார்களை

எத்தனையோ தொழிநுட்பர்களை

எத்தனையோ சாதனையாளர்களை

எத்தனையோ திறமைசாலிகளை

உருவாக்கி தந்திருக்கிறது

எப்போது ஒரு மனிதனை

உருவாக்கித்தரும்?!


ஒரு மனிதன் பிறப்பிலேயே, இயற்கையோடு ஒன்றிய (அந்த ஒன்றியமல்ல)  திறமைகளை பெற்றிருந்த போதிலும், அவை எல்லாம் சிதைக்கப்பட்டு, மடை மாற்றப்பட்டு  குறிப்பிட்ட துறைக்கென வளர்த்தெடுக்கும் நிலை தான் இங்கே. எல்லா உயிரினங்களும் அதனதன் இயல்பில் இருக்கும்பொழுது, மனிதன் தன்னை எல்லா பிறப்பிலும் உயர்ந்தவன் என்று சொல்லிக்கொண்டு, ஆறாவது நிலை அறிவானவன் என்றும் தன்னை வெளிப்படுத்திக்கொண்டு, சக மனிதனிடம் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறான். 

கூட்டம் கூட்டமாக விலங்குகள் ஒன்றாக வாழும் பொழுது, இரண்டு மனிதர்கள், கணவன் மனைவி கூட ஒற்றுமையாக விட்டுக்கொடுத்து வாழ முடியவில்லையே?! 

எனவே என்னைபொறுத்தவரை, மனிதனை மனிதனாக மாற்றுவதுதான் கடினமான, சவாலன பணி ஆகும்!

-----

நன்றி கோரா தமிழ்

Thanks to Image by: theexplanation.com

My Vote Goes to


 என் ஓட்டு யாருக்கு?


முதல் ஓட்டு அனுபவம்

நான் 18 வயது நிரம்பி, புதிய “மனிதனாக” மாறிய நாட்களில், ஓட்டுசீட்டில் என் பெயர் ஏறிக்கொண்டது. ஓவ்வொரு கட்சி வாக்கு படிவத்திலும் என் பெயரை படித்துப்பார்த்து, வாக்குச்சாவடி சீட்டு வாங்கு வைத்துக்கொள்ளும் பொழுது பெருமையாகவே இருந்தது. என்வீட்டில் மொத்தம் என்னையும் சேர்த்து எட்டு ஓட்டுகள் கிடைக்கும். எங்கள் பகுதி குறிப்பிட்ட கட்சிக்குரியது என்றெல்லாம் இல்லை எனினும்,  திமுக, அதிமுக, ஆர்வமுள்ளவர்களே அதிகம். ஆங்காங்கே சிலர் காங்கிரஸ். சிலர் இ.கம்யூனிஸ்ட் என்று சொல்லிக்கொள்வதும் உண்டு. எல்லோருமே கண்ணைப்பறிக்கும் புனிதமான வெள்ளை ஆடைகளில் “தங்களை” மறைத்திருந்தார்கள் என்றுதான் சொல்லவேண்டும். நானும் என் அம்மாவும், அருகே இருந்த வாக்குச்சாவடியாக மாற்றப்பட்ட பள்ளிக்கு நடந்துசென்றோம். பக்கம் என்பதால், நடந்தே சில தெரு மாறி செல்கையில், ஒரு காங்கிரஸ்காரர் வீட்டில் பல குதிரை வண்டிகள் நின்றிருந்தன. எங்களைப்பார்த்த அவர்,

“ஓட்டு சாவடிக்குத்தானேம்மா, இருங்க. வண்டி வைக்கிறேன்” என்றார்.

“வேணாண்ணா. நடந்துடறோம்” அம்மா

“அட, இருங்க போவோம். தம்பிக்கி கன்னி ஓட்டா? டேய் தம்பி எந்த கட்சிக்கு ஓட்டு போடனும் தெரியுமா?”

“தெரியும் சார்” நான்

“@க்கு போட்டுடு என்னா!” என்றார் சிரித்துக்கொண்டே.

இவ்வளவு சத்தமாக சொல்லுகிறாரே என்று நினைத்துக்கொண்டேன். அவர் வீட்டில், எப்போதாவது அந்தவீட்டின் அருகே, கடந்துவருகையில் ஏறக்குறைய என்வயதை ஒட்டிய கான்வெண்ட் பள்ளி மாணவியை பார்த்திருக்கிறேன். என்னை விட அழகாகவும் இருப்பாள். அது அவர் மகளா, பேத்தியா என்பது கூட தெரியாது. இந்த நேரத்தில் என் கண்கள், பருவ வயதின் ஆர்வத்தில், அந்த மாணவியை தேடத்தான் செய்தன. வேறு வழியின்றி, எங்கள் வீட்டிலிருந்து 800 மீட்டர் தூரமிருந்த பள்ளிக்கு, ஒரு 500 மீட்டர் தூரத்திற்கு குதிரை வண்டி பயணம். வாக்கு சாவடியில் என் பெயரையும் என்னையும் சரிபார்த்து, விரலில் மைவைத்து, 

“தம்பி, ஒரு தடவைதான், ஒரு பெயரில்தான், ஒரு சின்னத்தில் தான் குத்தனும் சரியா?”

ஓ அப்போ மூணு தடவை குத்தனுமா?! என்று கிண்டலடிக்கும் அளவிற்கு நான் வளரவில்லை. 

வேட்பாளர் பெயர், சின்னம் பட்டியல் கொடுத்து அனுப்பிவைக்க, ஒதுக்கப்பட்டிருந்த அட்டை மறைவுக்கு பின்னே, ஸ்வத்திக் சின்னம் மை தொட்டு அழுத்தி, பதித்தேன். 


அரசு + இயல் = அரசியல்

ஒரு நாட்டின் பாதுகாப்புக்கும், மக்களின் வாழ்க்கை வளம், கல்வி, பொருளாதாரம், எதிர்கால சந்ததியினருக்கான வழி இவற்றை, இயல்பாக, அரசால் வழிநடத்துவதற்கு அமைவதுதான் அரசு. ஒரு காலத்தில் “மன்னர் பரம்பரை வழியிலில் இருந்து” மக்களால் தேர்ந்தெடுக்கும் நிலைக்கு மாறிவிட்டது. இது காலப்போக்கில், தலைவர், தலைவர் மகன், தலைவரின் பேரன், தலைவரின் கொள்ளுப்பேரன் என்று நீண்டுக்கொண்டே போய் மறுபடி “தலைவர் பரம்பரை வழிக்கு” மாறிவிட்டது, அத்தலைவர்களை தேர்ந்தெடுத்த மக்களுக்கு கிடைத்த சாபக்கேடு.

என்றைக்கு அரசியலில் இருந்துகொண்டு, அதை, தன்னை, தன் குடும்பத்தை உயர்த்துவதற்கு ஒரு தொழிலாக நினைக்க ஆரம்பித்தார்களோ அப்போதிருந்தே இந்த நாட்டிற்கான மலர்ச்சியில் தடை வந்துவிட்டது. இன்னொன்று, சமூகத்தில் தனக்கு கிடைக்கும் மரியாதை, பதவியின் அதிகாரம் இதெல்லாம் அரசியல்வாதிகளுக்கு மிகுந்த தேவையாகியது. மக்களுக்கான, நாட்டிற்கான சேவைதான் “அரசியல்” என்பது பொய்யாக போனது. 

உன்னால் நான், என்னால் நீ என்று இருகட்சியினருக்கும் இருக்கும் பொது தன்மையில், யாரும், யாரையும் காட்டிக்கொடுக்காமல் “இன்றுவரை” வளர்ந்து வருகின்றனர் என்பதுதான் உண்மை.  


குரங்கும் பகிர்வுகளும்

குரங்குகள் மட்டுமே அதிகமாக வாழும் அந்த சிறு காட்டுப்பகுதியில்,  உணவு கிடைக்காது வாடின. நல்ல உள்ளம் கொண்ட அந்த கிராமத்து மக்கள், தங்கள் தோட்டங்களில் கிடைத்த மாம்பழங்களை, ஒரு பெட்டியில் போட்டு, அந்த குரங்குகள் இருக்கும் இடங்களில் வைத்தனர். முதலில் குரங்குகள் அப்பெட்டியில் இருந்த மாம்பழங்களை பார்த்தாலும், கிட்டே வராமல் தள்ளியே நின்றன. நம்மை விட விலங்குகளுக்கு “வாசனை உணர்வு” மிக அதிகம். ஆனாலும் கிட்டே வரவில்லை. சில பெரிய வயதான குரங்குகள் கொஞ்சம் கிட்டே வந்தன. ஆர்வத்தில் நெருங்கப்போன குட்டி குரங்குகளை, அதன் தாய்கள்,  வாலைப்பிடித்து இழுத்து நிப்பாட்டின. 

வயதான குரங்குகள் பெட்டியை பாதுகாப்பாக தட்டி பார்த்துக்கொண்டு, பழத்தை எடுத்தன. சாப்பிட்டன. உடனே மற்ற குரங்குள் அனைத்தும் கிட்டே நெருங்கி, ஒரு குரங்கு, பழத்தை எடுத்துவிட்டு பாதுகாப்பான இடத்திற்கு நகர, அடுத்த குரங்கு பழத்தை எடுத்து அதுவும் பாதுகாப்பாக நகர்ந்துவிட இப்படியே எல்லா குரங்குகளும், மாம்பழத்தை எடுத்துக்கொண்டன. 

இந்த நிகழ்வில்,

1) ஒரு சில குரங்குகள் ஒரு பழம் மட்டுமே எடுத்துக்கொண்டன.

2) சில குரங்குகள் இரண்டு கைகளிலும் இரண்டு பழங்களை எடுத்துக்கொண்டன.

3) எந்த குரங்கும் ஒன்றோடு ஒன்று முட்டி மோதி, இடித்துக்கொண்டு பழங்களை எடுக்க போட்டி போடவில்லை.

4) ஒன்றை ஒன்று தள்ளிவிட்டோ, தலைக்கு மேலே ஏறியே பழத்தை எடுக்கவில்லை

5) தனக்கு கிடைக்கவில்லை என்று எந்த குரங்கும், இன்னொரு குரங்கின் மேல் பாய்ந்து சண்டைக்கு செல்லவில்லை.

6) தனக்கு கிடைக்காது யாருக்கும் கிடைக்க கூடாது என்று பெட்டியை தள்ளி உருட்டிவிடவில்லை.

7) தன்னால் முடிந்த அளவில் மாம்பழம் வேண்டும் என்று நிறைய எடுத்துக்கொள்ளவில்லை.

8) யாருக்கு கிடைத்தால் என்ன? கிடைக்காவிட்டால் என்ன? என்று எந்த ஒரு குரங்கும், பெட்டியோடு மாம்பழத்தை தூக்கிக்கொண்டு ஓடவில்லை.

9) தனக்கு மாம்பழம் கிடைக்கவில்லை என்பதற்காக கவலைப்படவில்லை, சினம் கொள்ளவில்லை, ஆத்திரப்படவில்லை

10) எந்தக்குரங்கும் சாப்பிட்டு விட்டு மீண்டும் மீண்டும் வந்து மாம்பழத்தை எடுத்துக் கொள்ளவில்லை.

குரங்குகளுக்கு கட்சி இல்லை, கொள்கைகள் இல்லை, அரசியல் ஆர்ப்பாட்டமும் இல்லை, தலைவர்கள் இல்லை, தொண்டர்கள் இல்லை. இப்படி இல்லாததினால் அவைகள் தாழ்ந்து போகவும் இல்லை. 


#குரங்கிலிருந்து மனிதன் வந்தானா? இல்லையா என்ற கேள்விக்கு நீங்களே பதில் சொல்லுங்கள்.


வாழ்த்தெரியார் ஆளத்தெரியாதோர்

வாழ்த் தெரியாதோர் பெரும்பாலும் வாழ்நாட்டில்

     ஆளத் தெரியாதோர் ஆட்சியே நடைபெறும்

கோழை, கயவர், கொலைஞர், தடியர்கள்,

    ஏழை, நோயுற்றோர் எங்குமே காட்சியாம்.

இந்த கவியை, குருமகான் வேதாத்திரி மகரிசி அவர்கள் 1958ம் ஆண்டு எழுதியிருக்கிறார். (ஞானக்களஞ்சியம் நூல் ஒன்று, 129ம் கவி)


மன்னிப்போம் மறப்போம்

மக்களிடையே பொய்யுரைகள், வெறுப்புரைகள், வெற்றுவாக்குறுதிகள் கொடுத்து, மக்களை தன் வசம் திருப்பும் கலையை, எல்லா கட்சி தலைவர்களும் கற்றிருக்கிறார்கள். தாங்கள் பிறர் மூலமாக தங்களை உயர்வாக சொல்லி, புகழ்பரப்பிக்கொள்ளும் தன்மையும் அவர்களுக்கு உண்டு. வேண்டுமென்றால் காலில் விழவும் தயங்குவதில்லை. அந்த அளவிற்கு “அதிகார போதையில்” ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். உண்மை உரக்கச்சொல்வோம் என்ற செய்தித்துறைகள் கூட, பூசி மழுப்பிக்கொண்டிருக்கின்றன, அதுவும் ஒரு கட்சி சார்பாகவே.

நாங்கள் தப்புசெய்திருக்கிலாம். நாங்கள் திருத்திக்கொள்கிறோம். என்று “சும்மா” கேட்டாலும், “பணம்” கொடுத்து கேட்டாலும், மக்கள் “மன்னிப்போம் மறப்போம்” என்று கடந்த ஆட்சிக்காலத்தில் தாங்கள் பெற்ற எல்லா கொடுமைகளையும் கடந்து, மீண்டும் அதே அரசை வரவேற்கின்றனர்.

குடும்ப பரம்பரை என்பதுப்போலவே, தனி மனித சிந்தனையும், அரசை தேர்ந்தெடுக்கும் உரிமையும் பலருக்கு இல்லை. கூடவே தனது “இந்த வளர்ச்சிக்கு” காரணம் இந்த அரசுக்கு ஓட்டு போட்டதால்தான், அதனால் நீயும் போடு என்று பிள்ளைக்கும் ஊட்டி வளர்க்கினர். 

இவர்களிடம் பணம் வாங்கிவிட்டேன். அதை செலவும் செய்துவிட்டேன். தின்ன காசுக்கு, நியாயமா “இவங்களுக்குத்தான் ஓட்டு போடனும்” என்று வாக்கு அளித்து விடுகின்றனர். பணம் பெற்று ஓட்டு போட்டால், அடுத்த அந்த ஐந்து ஆண்டுகளில் உங்களுக்கான தீர்வை எப்படி கொடுப்பார்கள்?!

“யோவ், நீதான் அன்னைக்கே காசு வாங்கிட்டேயேயா? இப்ப என்ன இதுக்கு வந்து இங்க நிக்கிற?!” என்று கேட்க மாட்டார்களா? 


கட்சியற்ற ஆட்சி

மனிதனின் அடிப்படையான தேவைகள் மூன்று,

1) உணவு 2) உடை 3) இருப்பிடம்

மேலும், அடுத்ததாக கல்வி, மருத்துவ உதவி, தொழில்வாய்ப்பு, மக்களின் பாதுகாப்பு ஆகிய அடுத்த நான்கு தேவைகள் போதுமானதாக இருக்கும்.  ஆனால் தனிப்பட்ட தேவைகள் என்றால் ஆளாளுக்கு மாறுபடும் எனவே தனித்தேவைகளை நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. எந்த ஒரு அரசும் இந்த முக்கிய அடிப்படை முன்றும், அடுத்த நான்கும் நிறைவேற்ற முடிவு செய்தாலே போதுமானதுதான்.

ஆனால் நாட்டில் ஒவ்வொரு கட்சிக்கும் ஓவ்வொரு கொள்கைகள், அதிலும் ஒன்றுக்கொன்று முரண்பாடுகள். சேவை மக்களுக்கானது என்றால் “ஒரே மாதிரிதானே இருக்க வேண்டும்?!” எத்தனை கட்சிகள் அரசாள வந்தாலும், 1) கடன் 2) வறுமை 3) கல்வியின்மை ஆகிய மூன்றும் இன்றுவரை தீர்க்கப்படவே இல்லையே?!

எனவே கட்சிகளற்ற ஆட்சிதான் நன்மை தரும் என்றும், வேதாத்திரி மகரிசி அவர்கள் தீர்வு (ஆண்டு 1961) தருகிறார்.


இன்னும் சில வார்த்தைகள்

வேதாத்திரி மகரிசி அவர்கள் “அரசியல், ஆட்சி, தலைவர்கள்” குறித்து இன்னும் என்ன சொல்கிறார் என்று பார்ப்போமே.

1) அரசியலே மக்களை அடக்கிடவும், உறிஞ்சிடவும் ஏற்றவழி என்பதை தலைவர்கள் அறிந்துகொண்டனர்.

2) அரசியலே முரடர்களின் சொத்தாய் மாறும் அவலநிலையை முதலில் மாற்றவேண்டும்.

3) தெளிவற்ற மக்களிடம் சுயநலத்தோர், தேச, மத, ஜாதி, இன வெறியூட்டி, தெரிந்தால்போல நடித்து புகழ் பெறும் நடிகராக, அரசியல் தலைவர்கள் இருக்கிறார்கள்


வாழவைக்கும் ஆட்சி

கடன் வறுமை கல்வியின்மை என்ற மூன்று

களங்கங்கள் உலகினிலே மறைய வேண்டும்

உடன்பிறந்தார் போலஉள்ளம் ஒன்றி மக்கள்

உயர்நிலையில் வாழ வைக்கும் ஆட்சி வேண்டும்.

என்று வேதாத்திரி மகரிசி அவர்கள், ஆட்சியாளார்களை வரவேற்கிறார்.


வாக்கு தேர்வு

யாரோ சொல்கிறார்கள், என் நண்பர் சொல்கிறார். என் தந்தை சொல்கிறார், என் வாழ்க்கைதுணை சொல்கிறார். சமூக வலைத்தளங்களில் சொல்லுகிறார்கள். செய்தி தொலைகாட்சியில் சொல்லுகிறார்கள். தொண்டரே சொல்கிறார். தலைவரே சொல்கிறார் என்றெல்லாம் “ஒரு சார்பு” நிலை எடுத்து உங்கள் வாக்கை வீணடிக்காதீர்கள்.

ஆட்சியாளர்களின் கடந்த கால நிலையை அலசுங்கள், இப்போது சொல்லும் வாக்குறுதிகளை கேளுங்கள். இரண்டையும் ஒப்பிட்டுப்பாருங்கள். கடந்த ஆட்சியை நிறைவேறாமல், நிறைவேற்றப்படாமல் போன காரணமென்ன என்பதை சிந்தியுங்கள். அது அந்த அரசின் அலட்சியம் என்றால், அவர்களுக்கு மறுவாய்ப்பு தருவதில் ஒரு பிரயோஜனமும் இல்லை. கண்டிப்பாக தவிர்த்து விடுங்கள். எளிய தலைவர்களை தேர்ந்தெடுங்கள். உங்கள் நண்பரோ, அறிமுகமானவரோ இருந்தால் அவர்களுக்கு வாக்களியுங்கள். கட்சி என்ற பாசம், ஒட்டுதல் நிலையில், அவர்கள் நிறுத்தும் எந்த மனிதருக்கும், உணர்ச்சி வசத்தால் வாக்களிப்பதை தவிருங்கள்.

உங்கள் வாக்கும், உங்களுக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு செல்லும் எனவே, ஒரு நாள் பணத்திற்கு ஏமாறாதீர்கள். விரலோடு ஒட்டும் மையில், மொத்த வாழ்க்கையையும் இருட்டாக்காதீர்கள். உங்கள் வாக்கால், பிற மனிதரையும், சமூகத்தை அவதிக்குள்ளாக்காதீர்கள்.


வாழ்க வளமுடன். 


-----------------

Photo thanks to: Trac Vu @tracminhvu

Why stopped to draw human faces - Part 02



ஒரு ஓவியன், கண்களால் பார்ப்பதைமட்டுமே வரைவதில்லை. அவனின் பார்வை அளவில் சிக்கிய, அவனுக்குமட்டுமே முக்கியமாகப்படும் விசயத்தையோ, பொருளையோ மையப்படுத்தி, இயல்பாக அங்கே கிடைக்கும் வெளிச்சம், நிழல் ஆகியவற்றை கவனித்து, அதில் கூடுதலாக ‘இன்னும் என்ன செய்யலாம்?’ என்ற சிந்தனை தெளிவோடு வரைவான்.

காட்சிப்பொருளை வரையாது, தன் மனதிற்குள் எழுவதை வரைகிறேன் என்ற, மாடர்ன் ஆர்ட் ஓவியர்கள் இதில் சிக்கமாட்டார்கள். அவர்கள் தனி உலகம்.

இத்தனை காலமாக, நான் ஒருபோதும் இயற்கை காட்சிகளையோ, தெரு, நகரம் இப்படியான காட்சிகளையோ வரைந்ததில்லை. அதில் நிறைய நுணுக்கங்களை சேர்க்கவேண்டியதிருக்கும் என்பதால், அதற்கான பொறுமை என்னிடமில்லை.  ஒரு ஓவியத்தை நீண்ட நாளாக வரைந்துகொண்டே இருக்கும் பழக்கமும் என்னிடமில்லை. அதோடு நாம் உழைத்தால், அதற்கான பலன் கிடைக்கவேண்டுமேயன்றி, சும்மா ‘எனக்கும் வரையத்தெரியும் என்பதற்கோ, இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு வரைந்தேன்’ என்று பெருமையடித்துக்கொள்வதற்கும் நான் வரைவதில்லை. ஒரு ஓவியம் வரைந்தால் அது எனக்கு என்ன கொடுக்கும் என்பதில் எனக்கு அக்கறை உண்டு. எனவே, நான் ஒரு ஓவியன் என்பதை வெளிக்காட்டுவதற்காக வரைந்த ஓவியங்களைத்தவிர வேறெந்த ஓவியமும் நான் வரைந்து வைத்துக்கொள்வதில்லை. சில நண்பர்களுக்கு சும்மாவேணும் நட்புக்காக வரைந்து கொடுத்ததுண்டு, இன்னமும் அப்படி கொடுத்துக்கொண்டிருக்கிறேன்.

இதனால், கேட்பதை வரைந்து தருகிறேன் என்றவகைக்கு வந்துவிட்டேன். ஒரு நிறுவனம் மூலமாக வரையும் வேலைகளும், தனி நபர் வேலைகளும் நீண்டகாலமாக செய்துவந்தேன். அவ்வப்போது அதற்கான வருமானமும் வந்துகொண்டிருந்தது. நீங்கள் யார்? என்றால் நான் ஒரு ஓவியர் என்று பதிலளிக்கமுடிந்தது. இதைத்தவிர வருமானத்திற்கு என்ன செய்கிறீர்கள்? என்ற அர்த்தமில்லா கேள்விக்கு என்னால் புன்னகைக்க முடிந்தது.

நிறுவனம் மூலமாக கிடைக்கும் வேலைகளில் 10:2 என்ற அளவில் திருத்தங்கள் வரும். அந்த திருத்தங்களை ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தால், திருத்திக்கொடுப்பதுண்டு. சில இப்படித்தான் அந்த ஓவியத்தில் வரையமுடியும் என்ற நியாயமான விசயத்தை சொல்லி புரியவைப்பதும் உண்டு. தனி நபர்களில், என் ஆரம்ப காலங்களில் வரைந்து தருவதை, மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டவர்கள் 50:50 மட்டுமே.

முக்கியமாக, தனி நபர் கேட்கும் திருத்தங்களை கவனித்தால், அவர்களுக்கு ஓவிய அறிவு கொஞ்சமும் இல்லை என்பது தெரியவரும். அடுத்தவருடைய ஓவியத்தைப்பார்த்து “அப்படியே நிஜமாக இருக்கு, அருமை” என்பவர்கள் தன் முகம் வரைந்தால்மட்டும் “வேறே யாரோ மாதிரி இருக்கு” என்று ஏற்றுக்கொள்ள மறுப்பார்கள். அதோடு தோலின் நிறம், நிழலின் அடர்த்தி, வெளிச்சத்தின் பாதிப்பு இவைகளும் பெரும் குறையாக அவர்களுக்கு தோன்றும். 

ஒருவருடைய முகத்தை வரைய பல நுட்பமான வழிகள் உள்ளன. இதில் கணித சமன்பாடுகளைக்கூட உபயோகப்படுத்தலாம். நான் அதிலும் சில வழிகளை தேர்ந்தெடுத்தே, கோட்டு ஓவியம் வரைந்து, அவர்களிடம் காட்டி, உங்கள் முகம் போல இருக்கிறதா? என்று கேட்டுவிட்டே அடுத்த நிலைக்கு செல்வது வழக்கம்.  கோட்டு ஓவியம் அருமை என்று பதில் தந்துவிட்டு, கடைசியில் என் முகம் இல்லை என்று சண்டைபோடுவது பெரும்பாலோரின் வழக்கம். சரி, எனக்கு இது பிழைப்பு, நீ பணம் தருகிறாய் எனவே, திருத்தங்கள் தருகிறேன் என்று அவர்கள் சொல்லுகிறவகையில் திருத்தி வரைந்து அனுப்பிவைப்பேன்.

ஒரு முகம், வெளிச்சத்தில் ஒருமாதிரியும், அதிகவெளிச்சத்தில் ஒருமாதிரியும், லேசான வெளிச்சத்தில் ஒருமாதிரியும் இருப்பது உண்மை. எனக்கு அவர்கள் அனுப்பிவைக்கும் ஒளிப்படத்தைக்கொண்டே, மாதிரி எடுத்துக்கொள்ளவேண்டியுள்ளது. எனவே அதில் என்ன அளவில் ஒளியும், நிழலும் இருக்கிறதோ அதைத்தான் ஓவியத்தில் கொண்டுவர முடியும், ஆனால் அவர்கள் அதை புரிந்துகொள்வதில்லை. 

ஓவியத்தில் எல்லாம் முடித்தபிறகு, இன்னொடு ஒளிப்படத்தை உடனே அனுப்பி “இதைபாருங்கள், நான் இப்படித்தான் இருப்பேன், நீங்கள் வரைந்தது நான் அல்ல” என்பார்கள். அப்படியானால் முந்தைய ஒளிப்படத்தில் இருப்பது நீ இல்லையா? பிறகு ஏன் அந்த ஒளிப்படத்தை எனக்கு அனுப்பினாய்? இந்த ஒளிப்படத்தை முன்னதாகவே அனுப்பியிருக்கலாமே? என்று கேட்டால் பதில் வராது.

இதில் இன்னும் சிலர், பக்கவாட்டில் முகம் திரும்பிய ஒளிப்படத்தை அனுப்பிவிட்டு, நேராக பார்க்கிறமாதிரி வரைந்துகொடுங்கள் என்று கேட்பார்கள். “ஐயா, எனக்கு இறைவன் அந்த வரத்தை தரவில்லை, என்னால் முடியாது” என்று சொல்லிவிடுவேன்.

எனக்குத்தெரிந்து, கிட்டதட்ட நான்கு தலைமுறைகள், ஓவியம் குறித்த அறிவே இல்லாது வந்துவிட்டார்கள் என்று நம்புகிறேன்.இந்நிலை இந்தியா முழுதும் என்று என்னால் சொல்லமுடியும். அவர்களுக்கு ஒரு ஓவியன், விளக்கி சொன்னாலும் கூட புரிந்து கேட்டுக்கொள்ளும் மனநிலை அவர்களுக்கு இல்லை. 

முக்கியமாக ஒளிப்படத்தில் இருக்கிற குறைகளையும், அவர்கள் முகத்தில் இருக்கிற குறைகளையும் சரி செய்துதான் ஓவியன் வரைவான். அதாவது மேலும் அழகுபடுத்துவான். கேரிகேச்சர் (இருப்பதை மிகைப்படுத்தும் கலை) என்று வரைந்தாலும் கூட, நான் குறைகளை மிகைப்படுத்துவதில்லை. 

சரி, இருப்பதை அப்படியே வரைவதற்கு ஓவியன் தேவையா? ஒரு கேமரா மூலமாகவே அதை செய்துவிடலாமே? அதோடு ஓவியன் கற்றுத்தேர்ந்ததையும் இணைத்துத்தானே தருவான். அவன் என்ன இயந்திரமா? அப்படியே நகலெடுக்க? 


அடுத்ததாக, கிடைக்கின்ற மென்பொருள்களில், Photoshopல்  Smudge என்றெரு tool இருக்கிறது. இதை வைத்துக்கொண்டு, ஒளிப்படத்தையே, அப்படியும், இப்படியும் தேய்த்து மழுக்கி, லேயர் லேயராக வண்ணத்தை பரப்பிவிட்டு, டிஜிட்டல் ஆர்ட் என்று தடவும் டிஜிட்டல் ஆர்டிஸ்ட்கள் (Digital Art - Digital Artist) செய்கிற, இருப்பத்தை அப்படியே வரைந்து தரும் ஓவியம் என்ற திருட்டுத்தன வேலைகள், மக்களை மயக்குகின்றன. 

எனவே ஓவியவேலை தருபவர்கள், ஒரு ஓவியன் “அப்படியே, அப்படியே” வரைந்து தரவேண்டும். இல்லையேல் அவன் தேறாத ஓவியன், அனுபவமில்லை என்ற முடிவுக்கு வந்துவிடுகிறார்கள்.  

நீ சும்மாவா கொடுக்கிறாய்? பணம் வாங்குகிறாய் அல்லவா? நான் கேட்பதை வரைந்து கொடுக்காமல் வேறெதாவது வரைந்து கொடுத்தால், வாங்குவதற்கு நான் முட்டாளா? எனக்கும் ஓவிய அறிவு இருக்கிறது(?!) என்று ஓவியனிடம் மல்லுகட்டுவார்கள். அதற்காகவே ஒரு ஓவியன் “குரங்காட்டம்” ஆடவேண்டிருக்கிறது.

முக்கியமாக, ஒரு படைப்பை திருத்துகிற உரிமை எவனுக்குமே இல்லை. மறு பதிப்பு என்பதுதான் நியதியே தவிர வேறெதுமில்லை. அந்தவகையில் கதை எழுத்தாளர்களுக்கும், கவிஞர்களுக்கும் இருக்கிற, துணிச்சலான, தைரியமான, நம்பகமான வெளிப்பாடு ஓவியனுக்கு இல்லை.  இன்னும் விளக்கமாக காசுவாங்கிக்கொண்டு வரைந்துதரும் ஓவியனுக்கு இல்லை என்று சொல்லலாமா?

இத்தகைய அறிவு எனக்கு உள்முகமாக வந்த பிறகு, முகம் வரைவதற்கான ஆர்வம் எனக்கில்லை. ஒரு ஓவியனாக மக்களிடம் தோற்கிறேன். நான் ஓவியன் என்று சொல்லுவதற்கு குறைபட்டதில்லை, ஆனால் ஒரு ஓவியம் வரைய என் கைகள் கூச ஆரம்பித்துவிட்டது. கூடவே கரோனா தொற்றும் வேலைகளை குறைக்க, சரி இதுதான் நல்ல சமயம் என்றெண்ணி, வரும் வேலைகளையும் “பார்க்க ஆளில்லை, வரைந்துதரவும் ஓவியர்களில்லை” என்று சொல்லி தடுத்து நிறுத்திவிட்டேன்.

அப்படியானால் வயிற்றுப்பாட்டு? நல்லவேலையாக எனக்கு தெரிந்த ஓவியமல்லாத வேறு சில வேலைகளை செய்துவந்ததினால் தப்பித்தேன். இன்றும்கூட அவைதான் என் வாழ்க்கைக்கு உதவுகின்றன. முக்கியமாக இந்த வேலைகளில், எந்த திருத்தமும் இல்லை. யாரும் குறைசொல்லும் வழியும் இல்லை. எனக்கு நேரடியாக வேலைக்கு பணம் வழக்கும் மக்களுமில்லை. அவர்களின் திருத்தங்களை கேட்கவேண்டிய அவசியமும் இல்லை. இதற்கு இவ்வளவா என்று கேட்டவர்களிடம் பேரம் பேசி அவர்களுக்கு புரியவைக்கும் வேலையும் இல்லை.

நிம்மதியாக, சுதந்திரமாக, தைரியமாக, உண்மையாக என்படைப்புக்களை தந்துகொண்டிருக்கிறேன். பலன் பெறுகிறேன்.  என் ஓவிய கைகள் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கின்றன. அது நல்லதுதான். 

பின்குறிப்பு: ஆனால் இன்னமும்  அங்கே  ஆர்டர்கள் பெறப்படும் என்று இருக்கிறதே? என்று கேட்டால், அதன் விலைப்பட்டியலை, தெளிவான விபரங்களை பார்த்துவிட்டு, முடிவுக்கு வரவும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். 

The path and ride on opposite directions




எதிரெதிர் திசைகளில் பாதையும் பயணமும்.

ஒரு படைப்பாளி தான் கற்றுத்தேர்ந்த திறமைய வெளிக்காட்டவும், அதன் மூலமாக தன்னை முன்னிறுத்தி, தன் பெயர் நிலைக்கவும், கலையின் தரம் உயர்த்தி, வகைப்படுத்தவும், பிறரையும் அதில் ஆர்வம் வரச்செய்யவும் நினைத்துத்தான் செயல்படுகிறான்.

கூடவே இந்தக்காலங்களின் பொருளாதார தேவைகளை முன்னிட்டு, தனக்காக என்றில்லாமல், பிறர் கேட்டுக்கொண்டபடி, அவர்களுக்கு தேவையான கலைப்பொருளை வடித்துக்கொடுத்து, தன் வயிற்றுப்பாட்டையும் சமப்படுத்திக்கொள்கிறான்.

ஆனாலும், இந்த படைப்பாளிகளில் ஓவியனுக்கு இருக்கிற மரியாதையும், மதிப்பும்; மக்களைச்சார்ந்து, அவர்களின் தேவை கேட்டு வழங்கும் ஓவியங்களில் இல்லை என்றே சொல்லலாம். சில விதிவிலக்காக, இவர்களில் நல்ல மக்களையும், அவர்கள் ஓவியத்தின் மேலும், ஓவியரின் மேலும் மதிப்பும், மரியாதையும் தருவதை எண்ணி வியந்திருக்கிறேன்.

தான் நினைத்ததை மட்டுமே தரும் படைப்பாளியாக, எழுத்தாளனும், சிற்பியும், மரபு ஓவியர்களும் இருக்கிறார்கள். இவர்கள் யாருக்காகவும் தன்னை, தன் படைப்பில் சமரசம் செய்துகொள்வதில்லை. இதுதான் என் படைப்பு, உனக்கு பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் எனக்கு குறையில்லை என்ற ரீதியில் இயங்குவார்கள். இவர்களில் சிலர், சமூகத்தில் தன்னை நிலைப்படுத்திக்கொள்ள பெரும்பாடு. சிலர் வறிய நிலையிலும் இருக்க காணலாம். 

இந்த பொருளாதார சமூகத்தில், படைப்புக்கான மதிப்பும், கிடைக்ககூடிய பணமும் ஒரு படைப்பாளி சமரசம் செய்துகொள்ளும் பொழுதுதான் கிடைக்கிறது என்பது சோகம். இந்நிலை மாறவேண்டும். 

படைப்பாளி, இந்த உலகை வழிநடத்தும் திறமைகொண்டவன். அவன் இந்த உலகை, சமூகத்தை, உங்களை, என்னை பதிவுசெய்கிறான். அடுத்த பரம்பரைக்கும், வருங்கால சமூகத்திற்கு செய்தியை எடுத்துச்செல்கிறான். புதிய சமுகமே, உங்களுக்கு முன் இருந்த சமூகம் இப்படி இருந்தது என்று வெளிக்காட்டுகிறான். அது பாடமாகவும், அறிவுரையாகவும், பெருமையாகவும், எச்சரிக்கையாகவும் இருக்கமுடியும்.

ஒரு படைப்பாளி, இறந்தபிறகும், காலம் கடந்தபிறகும் போற்றப்படுவதுதான் அவனுக்கு கிடைத்த விதியாக இருக்கலாம். ஆனால் மன்னர்களும், புரவலர்களும், அரசுகளும் படைப்பாளிகளை போற்றிய காலங்கள் கடந்து, அவன் இந்த சமூகத்தை நோக்கி நகர்ந்துவந்துவிட்டான். இதனால், மக்களில் தேவையறிந்து, கேட்பதை தரும் நிலைக்கு சமரசம் செய்துகொண்டிருக்கிறான். 

அந்த படைப்பாளியையும், படைப்பையும், பணத்துக்கு நிகராக மதிப்பளிக்கும் வரை சரியானதுதான். ஆனால், அந்த பணத்திற்காக தன் இசைவுக்கு ஏற்ப வாலாட்டு என்று நினைப்பது தவறான நிலை. இதற்கு அந்த படைப்பாளியே ஒருகாரணமாகவும் அமைந்துவிடுவது சோகம்.

படைப்பாளி கிழக்கே போனால் இந்த சமூகம் மேற்கே போகிறது.  இரண்டுபேரும் சந்திக்கும் காலம்வரும். காத்திருப்போம்.

--------------------

Thanks to image: Kelli McClintock @kelli_mcclintock