CJ for You: drawing

drawing

Showing posts with label drawing. Show all posts
Showing posts with label drawing. Show all posts

Artist life in the world


ஒரு தொழில்முறை ஓவியனாக என்னை நிறுத்திக்கொண்டது என் வாழ்வில் நான் அடைந்த சிறப்பான முன்னேற்ற நிலை. பல ஆண்டுக்காலமாக, பொழுதுபோக்காக சிலரின் அன்புக்காகவும் ஓவியங்களை வரைந்து கொண்டிருந்தவன் நான். கேரிகேச்சர்லைவ்ஸ் என்று ஒரு சுயநிறுவனம் தொடங்கி, வாடிக்கையாளர்கள் கேட்டுக்கொண்டபடி, அவர்களின் குறிப்பில், அவர்களுக்கு பிடித்த அளவில், அவர்களின் முகம், பாவம் மாறாமல் வரைந்து தந்துகொண்டிருக்கிற இந்தகாலம், கிட்டதட்ட 17 ஆண்டுக்கால பயணம்.


கடந்த வாரத்தில் என் உறவினர் இல்லத்தில், ஒரு பெரியவரை சந்தித்தேன். நல்ல மத்திய அரசு நிறுவனத்தில் வேலையில் பணியாற்றியவர், தற்போது பணி ஓய்வில், தான் கட்டிய 5 வீடுகளின் வாடகை வசூல்தான் இப்போதைய அவரின் பணி. என்னைவிட இருபத்தியாறு வயது கூடியவர். தன் மகளும், மகனும் வெளிநாட்டில் இருக்கிறார் என்ற பெருமையுடையவர். அன்றுதான் அவரை நேரில் பார்த்தேன். இதற்குமுன்பே அவரின் “மேற்கூறிய” தகவல்கள் எனக்கு கிடைத்திருந்தன.
“வணக்கம் நல்லாயிருக்கீங்களா?”
“நான் நல்லாயிருக்கேன். என்ன வேலைல இருக்கீங்க?”
“நான் ஓவியரா இருக்கேன். இதோ இந்த மாதிரியான ஓவியங்கள்தான் பாருங்க” என்று என் கைபேசி திரையை காட்டினேன்.
“அது சரி, வேறே வேலைல எதும் இல்லையா?”
“--------”
“இதுல என்னத்த கிடைச்சிட போகுது? வாழ்க்கை நல்லபடியா போகுதா?”
நான் உணர்ச்சிவசப்படாமல் “அதெல்லாம் போகுது போகுது” என்றேன்.
“போனா சரிதான்”
இனி பேசி பயனில்லை என்றபடி, நான் வாசலுக்கு வந்து நின்றுகொண்டேன். அந்த பெருசு வெளியேறினபிறகுதான் உள்ளே செல்லவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.

ஒரு ஓவியனைப்பற்றிய மதிப்பீடு இவ்வளவுதான். அடப்பாவிகளா. மனிதகுலத்தின் முதல் மலர்ச்சியே ஓவியம்தானடா? அதையே இப்படி செல்லாக்காசாக நினைத்துவிட்டீர்களேடா? கொஞ்சம் மனவேதனைதான். ஆனாலும் “நாங்க அடிவாங்காத ஏரியாவே கிடையாது, தம்பி போவீங்களா” என்று கைப்பிள்ளையாக கடந்துவந்த பாதையில் அமைதியானேன்.

காலச்சுழற்சி பின்னோக்கி ஓடியது.
“வீட்டில இருக்கிற நேரமெல்லாம், வரைஞ்சிகிட்டே இருக்கான்பா”
“அப்படியா, அப்ப இவன் தேறமாட்டான்” சொன்னவர் சில ஓவியங்களை வரைந்து வீட்டில் மாட்டியிருக்கிறார். ஆனால் வேறு தொழில் செய்துகொண்டிருந்தார்.

“சுகு, நீ என்ன இவனைமாதிரி வரைஞ்சிகிட்டே இருப்பியாம். ஓவியன் வரையறவன் விளங்கமாட்டான்பா” நண்பனின் அம்மா சொன்னார்.

என் வீட்டில், என் தாயும், தந்தையும், சகோதரிகளும், சகோதரனும் ஓவியத்தின் பொருட்டு ஒரு குறையும், குற்றச்சாட்டும்  வைத்ததில்லை. நான் பல நேரங்களில், இத்தகைய, அவர்களின், என் ஓவியம் குறித்தான ஏற்றுக்கொள்ளல் தன்மை குறித்து வியந்திருக்கிறேன்.

சமீபமாக ஓவியம், ஓவியன் குறித்த சமூக நிலை, கீழிறிங்கிக்கொண்டிருக்கிறது. கிட்டதட்ட படுத்துவிட்டது என்று கூட சொல்லலாம். நான் சொல்லுவது, சமுக அன்பர்கள் கேட்டுக்கொண்டதறு இணங்க வரையும், பழங்கால முறையில் வரைவதும், நவீன முறையில் கணிணி துணை கொண்டு  வரைவதுமான ஓவியங்கள் மட்டுமே.

தனக்கு தெரிந்ததை, தன் அனுபத்தை, தன் எழுச்சியை வரைந்து, காட்சிப்படுத்தி, அதற்கென்று காத்திருக்கும் அன்பர்களுக்கு விற்பனை செய்யும், ஓவியகலைஞர்களின் போக்கு தனி. அத்தகைய ஓவிய வட்டத்திற்குள் நான் நுழைந்ததில்லை. இனி நுழையப்போவதும் இல்லை.

என்பாதையும், பயணமும் தனியானது. தனி ஒருவன், ஓவியனாக முகமறியா அன்பருக்கு, அவர் கேட்டுக்கொண்டபடி வரைந்து, அதற்கான விலையில் பணம் பெறுவது என்ற அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக மாறி, தொழிலாக செய்துகொண்ருக்கும் ஓவியர் என்ற வரிசையில் நான் நின்றிருப்பது எனக்கு பெருமையே.
“நீ மட்டும் எப்படி இந்த நிலைக்கு வரமுடிந்தது? ஏன் என்னால் முடியவில்லை?”
“இந்த முறையில்மட்டுமே, வாழக்கை உங்களால் ஓட்ட முடிகிறதா? எப்படி?”
“எனக்கும் இந்த வழியை காட்டிகொடுங்களேன்”
புன்னகை மட்டுமே என்பதிலாக இருந்திருக்கிறது.

சமீபமாக என்று ஆரம்பித்தேன் அல்லவா? அதை இன்னும் விளக்குகிறேன். கடந்த டிசம்பர் மாதம் முதல், தற்போது கடந்த பிப்ரவரி மாதம் வரையும் நான்பார்த்த எல்லா வாடிக்கையாளரும், எனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தினார்கள். அதற்கு முன்பும் ஒரு சில வாடிக்கையாளர்கள் மூலம் வரும், சகஜமாக எடுத்துக்கொள்வேன். ஆனால் வேலைகொடுத்த அனைவருமே அப்படி செய்தபோது கொஞ்சம் கலங்கித்தான்போனேன்.

ஒரு ஓவியம் என்பது, படைத்தல், அதில் குறைகள் என்று கண்டுபிடிப்பவனும், அதை இப்படி திருத்திக்கொடு என்று கேட்பவனும் முட்டாள். கொஞ்சமும், ஓவியம் குறித்த எந்த அனுபவமும் இல்லாதவன் என்றும் நான் சொல்லுவேன். Critic என்று சொல்லபடுபவனும் முட்டாளே. இயற்கையை குறைகாண்பானா அவன்? குறை நிறைகள் தான் இயற்கை.

Quora வில் ஒரு குறிப்பு எழுதியிருந்தேன். என்றைக்கு ஒருவன் முதன் முதலில் ஓவியம் வரைந்தானோ அவன் ஓவியன். அதை பார்த்துக்கொண்டிருந்த இன்னொருவன்தான் Critic

ஒரு மனிதனின், ஒருபக்க காது வித்தியாசமிருக்கிறதே? நீ என்ன செய்தாய்? ஒட்டுபோட்டுக்கொண்டாயா?
ஒரு மனிதனின், ஒரு கண் சிறுத்திருக்கிறதே? இமைகளை விரிக்கச்சொல்லி மருத்துவம் பார்த்தாயா?
சிரித்தால் இதழ் ஒருப்பக்கம் கோணலாக போகிறதே, வாழ்வில் சிரிக்காமலேயேவா நாட்களை கடத்துகிறாய்?
நிறுத்து, நீ ஓவியன், காசுக்காக வரையும் ஓவியன், நீ கொடுப்பதை நான் காசு கொடுத்து பெற்றுக்கொள்ள நாங்களென்ன முட்டாளா? எங்களுக்குள்ளும் ஓவியன் இருக்கிறான் (?!) நான் எப்படி கேட்கிறேனோ அப்படி வரைந்துதருவதுதான் உன்வேலை.  படைப்பு கிடைப்பு என்று பினாத்துகிறாயே?!

எத்தனை அடி? எவ்வளவு அடி? யப்பா?

ஒரு கணிணி அல்லது கைபேசி விளையாட்டில், எதிரியை கொன்று குவிக்க, குவிக்க மீண்டும் மூண்டும் முளைத்தெழும் எதிரியைப்போலவே, ஒவ்வொரு முகமுடியை மாட்டிக்கொண்டு, அதே வாடிக்கையாளர் வந்து எனக்கு வேலை கொட்டுப்பதுபோலவே எனக்கு திகிலாக இருக்கும். இன்னுமா இது முடியலை என்று என் மனம், பழைய வேலையோடு ஒப்பிட்டுப்பார்த்து திடுக்கிடச்செய்யும்.

ஓவியத்தில் திருத்தமெல்லாம் ஏற்றுக்கொள்ளாதீர்கள் என்று பலதுறைகளைச் சார்ந்தோர் எனக்கு சொன்னபோதிலும், வாடிக்கையாளரிடமிருந்து பணம் பெறுகிறோம், அதனால் அவர்களின் திருப்திக்காக சில திருத்தம் செய்வதில் தவறில்லை என்பது என் கருத்தாகவே இருந்தது. ஒரு ஒளிப்பட கருவி, (Camera) இருப்பதை எடுத்துக்காட்டும் என்ற அளவில் கூட, “ஒருஓவியனுக்கு” மதிப்பில்லாமல் போனது அதிசயமே.

இதில், இப்படியும் கேட்பார்கள். “எனக்கு Soft copy மட்டும் போதும்” இதை எங்கே, யாரிடம் கற்றுக்கொண்டார்கள் என்று தெரியவில்லை. இதன் பொருள் என்னவென்றால் “ நீபாட்டுக்கு உனக்கு தகுந்த விலையை சொல்லாதே, கொஞ்சம் சீப்பா விலை சொல்லு” (நான் என்னய்யா, வாழைப்பழ கடையா போட்டிருக்கேன்?) முழு ஓவியம், பெரிதாக வரையாமல், எப்படி சீப் சாப்ட் காப்பி கொடுக்கமுடியும்?!

திரைப்படத்தில், செந்தில், கவுண்டமணி கடத்தல் பேரம் பேசுவதுபோல, இப்படியான வாடிக்கையாளர்களுக்கு, எத்தகைய விலை சொன்னாலும், அது சீப் ஆகாது. இன்னும் குறை, அட்ஜஸ் பண்ணு. ரவுண்டப் பண்ணு... எல்லா மொழிகளிலும் கேட்பார்கள்.

திருத்தம், திருத்தம், திருத்தம் ?! மாற்றம் ஒன்றுதானே மாறாது :P போதுமடா சாமி என்றாகிவிட்டது.  எப்போதுமே, நாம் நம்முடைய வாழ்வில் சந்திக்கும் ஓவ்வொரு நபருக்கும் ஒரு தொடர்பு, விட்டகுறை தொட்டகுறை என்பது நிச்சயமாக இருக்கிறது. இருந்தாகவும் வேண்டும் என்பதுதான் இந்த இயற்கையின் விதி. தானாக வந்ததாகவும் இருக்கலாம். தானே சேர்த்ததாகவும் இருக்கலாம். இதன் மூலமாக, நம் வினைப்பதிவுகள் ஓவ்வொன்றாக கழிகின்றன. திருத்தம் பெறுகின்றன. அவர்கள் மூலமாக அவன் சுத்தம் செய்யபடுகிறான். உண்மையாகவே நான் அவர்களுக்கு, மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன். என்னுடைய சுயத்தை பரிசோதனை செய்ய வாய்ப்புத்தந்தவர்கள் அவர்களே. என் பலத்தையும்,  என் பலவீனத்தையும் எனக்கு வெளிச்சம்போட்டு காட்டி, என் சுயபலத்தை உணரச்செய்தவர்கள். நன்றி, நன்றி, நன்றி என் வாடிக்கையாளர்களே.

இந்த 17 வருடங்களில், 12 வருடங்கள் பெரும்பான்மையான வாடிக்காளார்களின் நன் மதிப்பை பெற்றிருக்கிறேன். ஓவ்வொருவரும், கடைசியாக, “மன்னிக்கனும் சார், உங்களை ரொம்ப கரைக்சன் கேட்டு நோகவைத்துவிட்டேன், பொறுமையாக எல்லாம் சரி செய்து கொடுத்ததற்கு நன்றி” என அவர்களே தானாக சொல்லும்படிச்செய்து, நட்பாகவே முடித்துவைத்திருக்கிறேன். தற்போதைய என்னுடைய பலம், இதுதான். அதோடு நம்பிக்கை. உடனுக்குடன் தகவல். என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதற்கான விளக்கங்கள். அவர்களே வியந்து பாராட்டுமளவுக்கு. நான் இந்த இடத்தில்தான் நிமிர்ந்து நிற்கிறேன்.

எல்லாம் நிகழ்வன, நிகழ்ச்சியே, தோற்றமாயைகளே, எங்கள் வேதாத்திரி மகரிசியும், மகாகவி பாரதியும் சொல்லியதை, அனுபவங்களாக, ஆராய்ச்சியால் கண்ட உண்மையில் நான் ஏற்றுக்கொண்டிருக்கிறேன். மனிதன் பல நிலைகளில், பலதரங்களில், பல காலங்களில் அனுபவித்து வாழலாம், ஆனால் பிறப்பு எப்படி நிகழ்ந்ததோ அப்படி, இறப்பும் காத்துக்கொண்டிருக்கிறது. இறப்பை வெறுக்கலாம், மறக்கலாம், வராது என்று நம்பலாம், மருத்துவத்தால், யோகத்தால், உடல் சாதனையால் தள்ளிவைக்கலாம் கொஞ்சநாளைக்கு... ஆனால் இறப்புக்கான அந்த டிக்கெட்டை யாராலும் வாபஸ் பெற முடியாது. அப்படி போய்ச்சேர்ந்தவர்களின் தோள்கள்மீதுதான் நாமும் நின்றுகொண்டிருக்கிறோம்.

நான், என் பயணத்தில் அடுத்த இலக்கு நோக்கி பயணிக்கதொடங்கியதாக எண்ணுகிறேன். முக்கியமாக ஒன்றை சொல்லவேண்டுமானால், இந்த பயணத்தையும், இலக்கையும் நான் தீர்மானிக்கவில்லை. நான் அதை தொடங்கவும் இல்லை. நான் ஒரு பயணி, ஏதோ ஒன்றை என்னை எடுத்துச்செல்கிறது. நான் அதனிடம் என்னை சில வருடங்களுக்கு முன் ஒப்புக்கொடுத்துவிட்டேன்.  அந்த பயணத்திற்கும், அந்த வழியில் நான் காணப்போகும் காட்சிகளுக்கும், சென்றடையும் இலக்குக்கும் நான் மனம் விரித்தும், மனம் ஒடுங்கியும், காத்திருக்கிறேன், விழிப்புநிலையில். ஆனால் எந்த எதிர்பார்ப்புமின்றி.

வேலையை எளிமையாக்குவதற்கு ஓப்படைப்பதைத்தவிர வேறு வழியில்லை.

Drawing - Never Stop Learning



ஒரு ஓவியன் தன் வளர்ச்சியில், அவன் கற்ற ஓவிய நுணுக்கங்களையும் வளர்ச்சிக்குட்படுத்தவேண்டியது அவசியம். என்றோ கற்ற வித்தை காலாகாலத்திற்கும் போதுமானது என்பது வாழ்வில் ஏமாற்றத்தை தரும்.

Left - Recent / Right - Done 6yr before
நான் ஆரம்பகாலத்தில் ஓவியம் வரைந்ததற்கும், இப்போதைய நிலையில் ஓவியம் வரைவதற்கும் மிக நீண்ட வளர்ச்சி இருப்பதை தெரிந்துகொள்கிறேன். ஆனாலும் இன்னமும் கூட தினம்தினம் புதிய நுணுக்கங்களை, என்னிலும் இளைய ஓவியர்களிடமிருந்தே கற்றுக்கொள்கிறேன். Template என்று பட்டியலிட்ட ஓவிய முறைகளில் நான் கண்டிப்பாக இல்லை. அதில் நான் சேரவும் மாட்டேன்...

கேரிகேச்சர் என்ற ஓவிய முறையில் என் கற்றுத்தேர்வுகளை தனிப்பதிவாக போடுமளவுக்கு உண்டு... (முயற்சிக்கிறேன்)

என் வாடிக்கையாளர்களுக்கு தரும் ஓவியங்களிலும், அவ்வப்போதைய என் மாற்றத்தை தந்துகொண்டிருப்பேன். ஒரேமாதிரி ஓவியம் என்பதை நான் செய்வதே இல்லை. இன்னும் சொல்லப்போனால், என் ஓவியத்தையே நான் மறுபதிப்பு செய்வதை தவிர்த்துவிடுவேன்.

இளைய தலைமுறை ஓவியர்களின் ஓவியங்கள், Tumblr, Behance, Deviantart இப்படியான தளங்களில் காணக்கிடைக்கின்றன. நீங்களும், ஆர்வமுள்ள ஓவியர்களும், (போட்டோவை தடவுவதை விட்டுவிட்டு) பென்சிலும், பேப்பருமாக நிறைய, (or Mousepen and pad) கற்றுத்தேர்ந்து உங்களை வளப்படுத்திக்கொள்ளுங்கள். உலகம் விரைவாக மாற்றம்பெறும்ப்போது கையறு நிலையில் இருக்கவேண்டாமே...!

தொடர்ந்து முயற்சியுங்கள்.... உங்கள் ஓவியம் நன்கு விலைபோகும், கிடைக்கும் “லைக்”கை விட அதிகமாக...

Let Do Art


ஓவியர் அரஸ்

Click the Image, See Bigger View

என் பதின்ம வயதுகளில் தன் ஓவியங்களால் என்னை வசீகரித்தவர். அழகாக வளைந்து நெளியும் கோடுகளாலும்,  வண்ணங்களை வீசி மேலும் அழகு சேர்த்து, கதைக்கு மேலும் மெருகூட்டி அக்கதையை படிக்கத்தூண்டுவார்...

எத்தனை எத்தனை ஓவியங்கள் இன்னமும் என் கண்ணுக்குள்ளே சுழன்றோடுகின்றன. இவர் ஓவியங்களில் ஆண்கள் ஏறக்குறைய “ரஜினி”சாயலிலும், பெண்கள் “ராதா” சாயலிலும் இருப்பதை உணர்ந்திருக்கிறேன்...

அந்தக்காலம் என்பது சற்றேறக்குறைய முப்பதாண்டு காலம் முன்னேதான். ஒரு ரசிகன் தூர நின்றுதான் தன்னை தன் மனம் கவர்ந்தவர்களுக்கு அறிமுகப்படுத்திக்கொள்ள இயலும், சில வேளைகளில் அதும் நிறைவேறாது... என் வாழ்வில் அப்படி யாரையும் நான் நேரடியாக சந்தித்தது இல்லை... பேஸ்புக், டிவீட்டர் வந்தது... கொஞ்சம் நெருங்கி நான் உங்கள் ரசிகன் என்று அவர்களுக்கு தெரியப்படுத்த முடிகிறது.

நான் முழுநேர ஓவியனாக மாறுவதற்கு முன்னால், சில அடிப்படை ஓவியம் பழக “அரஸ்” அவர்களின் ஓவியங்களை பார்த்து வரைந்திருக்கிறேன். வண்ணங்களும் நிறைத்து பழகியிருக்கிறேன்... ஆனால் எனக்கென நினைத்தபோக்கில்...  ஒரு ஓவியனின் கடினகாலப்பகுதி தனக்கென ஒரு பாணி உருவாக்கும் காலமே... பழகும் காலத்திலேயே இதை கவனத்தில் கொண்டால் சீக்கிரமே தன் பாணியை தக்கவைக்கலாம்...

அந்த பதின்வயதுகளில் நான் ஓவியத்தை பொழுதுபோக்காகவும், நண்பர்களுக்கு வரைந்து தருவதாகவும், சிறு குழந்தைகளை மகிழ்விப்பதற்க்காகவுமே நான் ஓவியம் வரைந்துகொண்டிருந்தேன்... நான் முழுநேர ஓவியனாக மாறிப்போனது அதிசயமே...

நான் அதிசயித்த ஒரு ஓவியரை, நான் வரைந்து என்னை அறிமுகப்படுத்துகொள்வென் என்பதும் ஒரு அதிசய நிகழ்வே...

நான் வருத்தப்படும் நிலை ஒன்றை இங்கே தெரியப்படுத்துகிறேன்... கிட்டதட்ட மூன்று தலைமுறைகள், என்காலத்தில் கிடைத்த ஓவிய அனுபவத்தை இழந்து திரிகின்றனர்... இது இந்தியாவின் சாபக்கேடு... ஓவியம் தொடர்பான வேலையில் இருப்பவர்களுக்கு கூட மிகச்சரியாக ஓவியம் குறித்த அறிவும், அனுபவமும் இல்லாதிருக்கிறார்கள். தாத்தாவிற்கு ஓவிய அறிவில்லை, அதனால் பிள்ளைக்கும் இல்லை, பிள்ளைக்கு இல்லாததால் அவர் பேரனுக்கும் இல்லை... ஆக பேரனுக்கு இல்லாததால்...

வெளிநாடுகளில் 16 வயதிற்குள்ளாக இருக்கும் இளைஞர்கள், மிக திறமையாக ஓவியங்கள் கற்று தேர்ந்து, அதற்கான அறிவைப்பெற்று, அனுபவ ஓவியருக்கு நிகராக, ஓவியங்களை வரைந்து வெளியிட்டு, வேலையையும், விற்று பணத்தையும் பெற்று, தான் தனக்கு பிடித்தவேலையில் ஈடுபட்டு மிக நிறைவாக வாழ்வதை, கொஞ்சம் வலையில் தேடினால் கண்டுபிடிக்கலாம்...

மனம் நிறைவில்லாத நிலையில், பக்குவம் கிடைபதில்லை... எங்கே பார்த்தாலும் ஒரே சண்டைக்காடு... தானும் நிம்மதியின்றி பிறரையும் நிம்மதியின்றி கெடுத்து, கெட்டொழுகின்றனர்...

பிறக்கும் பொழுது எல்லோரும் ஓவியரே... ஆனால் அதை காப்பாற்றி தொடர்ந்து முயற்சி செய்பவரே ஓவியராகிறார்... நவீன ஓவிய பிதா “பிக்காசோ” சொன்னதாகும்...

உங்கள் பிள்ளைக்கு ஓவியம் பிடிக்கும், அவன் வரைகிறேன் என்று சொன்னால். அவனுக்கு ஒரு காகிதத்தையும், வரைகோலையும் கையில் கொடுங்கள்... உங்களுக்கு ஓவியம் தெரியுமென்றால், அவனுக்கு கற்றும் கொடுங்கள்... இல்லையேல் அவனிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள்...  

Ask a boon


சென்னையிலிருந்து பல்லவன் தொடர் வண்டியில் திருச்சி வந்துகொண்டிருக்கிறேன். மதிய வேளையில் கிளம்பி இரவு திருச்சி வந்து பின்னிரவில் காரைக்குடி வரை செல்லுமாறு நீடிக்கப்பட்டிருக்கிறது... எப்பொதும் நான் தேர்வு செய்வது சாளரம் சார்ந்த இருக்கை... வண்டியின் விரைவில் முகத்தில் மோதிதள்ளும் காற்று தரும் அனுபவம் விட்டுவிட முடியுமா?

என் இருக்கைக்கு அருகே, ஒரு இளைஞன் (டி சர்ட், ஜீன்ஸ்), எதிரே ஒரு பெண் (மடிப்பு பிசகாத சேலை), ஆண் (பேண்ட், முழுக்கை சட்டை).. இடதுபக்கம் நடைபாதைக்கு அப்புறத்தில் இரு பெண்கள் (சாதா பட்டு சேலை), அவர்களுக்கு எதிர் இருக்கையில் இரண்டு ஆண்கள் (கதர் சட்டை வேட்டி). பெண்கள் இருவரும் கிட்டதட்ட ஐம்பதை நெருங்குபவர்களாக இருக்கும். ஆண்கள் அறுபது தொடக்கமாக இருக்கலாம்,

நானாக பேச்சை தொடங்கும் வழக்கம் எனக்கில்லை என்பதால்... என்னை ஆளைவிடுங்கப்பா என்று நினைத்து, என் ஓவிய காகிதங்கள் எடுத்து வெறுமனே வரைந்து பழக ஆரம்பித்தேன். கதர் சட்டை வேட்டியில், கனத்த ஒருவர் “யாரையடா கலாய்க்கலாம்” என்றபடி துறுதுறுத்தது எனக்கு புரிந்தது... தங்களுக்கிடையேயான வியாபாரம் குறித்து இன்னொரு கதர் சட்டை வேட்டியிடம் புலம்பியவாறு வந்தார். இடையே தொடர்வண்டி ஊழியர்கள் விற்கும் சில திண்பண்டங்களை வாங்கி சாப்பிட்டுக்கொண்டனர். அதை எங்கள் எல்லோருக்கும் பகிர நினைக்கையில் எல்லோரும் மறுத்துவிட்டோம்.

தொடர்வண்டி வேகமெடுத்திருந்தது... “என்னாய்யா இது, என்னமோ விழுந்த வீடு மாதிரியா ஊருக்கு போறது, கலகலன்னு பேசி சிரிச்சிக்க வேணாமா?” என்று பேசிக்கொண்டே... என் அருகில் இருந்த இளைஞரை கேட்டார்...
 “என்ன திருச்சிக்கா தம்பி?”
 “ஆமாங்க”
 “படிக்கிறீங்களா?”
 “இல்ல, வேலைக்கி போயிட்டுருக்கேன்... லீவ்க்கு ஊருக்குபோறேன்”
 “எவ்வளோ சம்பளம்?”
நான் குரலாக கேட்டுக்கொண்டிருக்க, எல்லோரும் அந்த உரையாடலை கவனிப்பது புரிந்தது...
 “மாசம் 7500 ரூபாய்”
 “போதுமா?”
 “பத்தாதுதான்... இனி போகப்போக ஏறும்”
 “நம்பலாமா”
 “அப்படித்தான் சொல்லிருக்காங்க”
 “என்ன படிச்சீங்க?”
 “இஞ்ஜினியரிங்”
 “எவ்வளவு செலவாச்சு?”
 “கிட்டதட்ட ஐந்து லட்சரூபா”
 “ஹ்ம். பேசாம அத பேங்கல் போட்டு, நீ தள்ளுவண்டி தள்ளி சம்பாதிச்சா கூட மாசம் பத்தாயிரம் சம்பாதிக்கலாமே?!”
 கேட்ட எல்லோரும் சிரிக்க ஆரம்பித்தனர்... இளைஞனின் முகமோ தொங்கிப்போக, இந்த ஆள் கிட்ட எதுக்குடா வாய் கொடுத்தோம் என்றிருந்தது...
கதர் சட்டை வேட்டி, எல்லோரையும் பார்த்து...
 “ஏங்க, சிரிக்கிறதுக்காக இத சொல்லலீங்க... நிலவரத்தை சொன்னேன், தம்பி தப்பா நினைக்காத, நாங்கல்லாம் வியாபாரிங்க, எங்களுக்கு காசு போட்டா, காசு வரணும் அவ்வோளோதான் தெரியும்... நல்லா நீயும் யோசிச்சாகூட இதுல இருக்கிற உண்மை புரியும்... அப்புறம், நீங்களும் திருச்சி  தானா?”
 எதிரே அமர்ந்திருந்த இருபெண்களை நோக்கி கேட்டார்.
 “நாங்க ஸ்ரீரங்கம்”
 “அதென்னா, அதும் திருச்சீலதானே இருக்கு”
 மீண்டும் எல்லோரும் சிரிக்க ஆரம்பித்தனர்...

நகைச்சுவை வழியாக பிறரை கவர்தல் என்பது அவருக்கு வாய் வந்த கலையாக இருக்கும் என்பது தெரிந்தது... இதற்கிடையில் அந்த இளைஞன், எழுந்து வாசல் அருகே நின்று ஓடுகிற மரங்களையும், மலைகளையும் பார்க்க ஆரம்பித்துவிட்டான்.

ஓவொருவராக நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று கேட்டுக்கொண்டே, என்னை நோக்கி, என்னிடம் அதே கேள்வியை கேட்டார்...
 “நான் ஓவியர்”
 “அதான் என்னை ஆளை விடுங்கடான்னு, அப்போ இருந்து என்னமோ பேப்பர்ல கிறுக்க  ஆரம்பிச்சிட்டீங்க, பார்த்தென்... தனி உலகத்திலே இருக்கிறவங்க ஆச்சே”
 நான் புன்னகைத்தேன்...
 “ஓவியம்ன்னா என்னமாதிரியான ஓவியம்?”
 “உங்களை வரைந்தே காட்டிவிடுகிறேன்”
 “பார்த்தீங்களா... நாமலாம் வாய் வலிக்க பேசினா, இவரு பேசாம, ஓவியம் வழியா பேச போறாரு”

கொண்டுவந்திருந்த ஓவிய அட்டையில், கரித்துண்டு (Charcoal) மூலமாக அவரை கேரிகேச்சராக (Caricature) செய்தேன்... ஒரு நிமிடத்திற்குள்ளாக வரைந்து அவரிடம் தந்தேன்.
 “நானா இது... எவனோ மாதிரி இருக்கு?!”
 “அப்படித்தான் உங்களுக்கே தோன்றும்”
 “ஓஹோ... சரி வரைஞ்சி கொடுத்திட்டீங்க... இதை வச்சி என்னா பன்றது?”
எல்லோரும் சிரிக்க ஆரம்பித்தனர்.
 நானும் அவரை நோக்கி புன்னகைத்தேன்...

 மனதிற்குள் “நீங்கள் ஒரு கழுதையாக இருக்கும்பட்சத்தில் அந்த காகிதத்தை சாப்பிடலாம்” என்று சொல்லிக்கொண்டேன்.
 “ஒரு ஓவியத்தை என்ன செய்வது என்று கேட்பவருக்கு, நான் ஓவியம் தந்தது தப்புத்தான்... அதை கொடுங்க”
 “அட, ஏன் தம்பி கோச்சுகிறீங்க... உங்க ஞாபகமா வச்சிக்கிறேன்... நன்றி”
 “நல்லது”

 அதற்கடுத்த உரையாடல்களை கவனிக்காது, ஓவியத்தில் நான் கவனம் இழந்தேன். அடுத்து என்ன பேசினார் என்பது என் காதுகளை தூண்டவில்லை... இப்படி இருக்கும் சில சாமனியர்களுக்கு, அந்த கடவுளே கூட கண்ணுக்கு தெரிவதில்லை... ஆனாலும் இத்தகைய மனிதர்களை நான் குறை சொல்லுவதற்கில்லை...

நான் தியானம் கற்றுணர்ந்தபொழுது... அன்பொளி மாத இதழில் படித்தது...

வேதாத்திரி மகரிஷியிடம்...
 “ஐயா, பிறவிப்பயன் போக்க, தன் பிறப்பை உணர்ந்து, தவமியற்றி தன்னை தூய்மை செய்துகொள்ளும் வாய்ப்பாக நாங்கள் உங்களிடம் வந்திருக்கிறோம். ஆனால் இது அறியாமல் வறுமையிலும், இது பற்றி ஒன்றுமே அறியாத ஒரு குடியானவன் இருக்கிறானே, சொன்னாலும் உதாசீனம் செய்கிறானே அவனை நினைத்து எனக்கு வருத்தமாக இருக்கிறது... என்ன செய்வது” என்று கேட்க...
 “இந்தபிறவியில் நீங்கள் உங்களை தூய்மை செய்துகொள்ளவேண்டும் என்பது உங்களுக்கு கிடைத்த வரம். அந்த குடியானவனுக்கு அது இன்னமும் கிடைக்கவில்லை. இனிவரும் காலங்களில் கிடைக்கலாம், அல்லது அவன் வழி வருவோருக்கு கிடைக்கலாம். அவனை அப்படியே விட்டுவிடுதல் நலமே”

நான் ஓவியத்தை மதிக்காதவர்களையும் அப்படியே விட்டுவிடுகிறேன்...


Stay Tuned with Art


ஓவியத்தோடு கலத்தல்...


ஒரு குறிப்பிட்ட செய்திகளை உள்வாங்கிக்கொண்டு தனக்குரிய பாணியில் எழுத்தில் தரவல்லவர்கள் நிறைய நபர்கள் இருக்கும் இந்நாட்களில், நானும் அதில் ஒருவனாக சிறப்பிக்க ஆர்வமாக இதுவரை எழுதிக்கொண்டிருந்தேன் என்பது உண்மை. ஆனால் ஒரு ஓவியனாக நான் நிலைத்திருப்பதும், அந்த ஓவிய திறமையினாலே நான் என் வயிற்றுப்பாட்டை நடத்திக்கொண்டிருப்பதும் உண்மை. இதை நினைவுக்கு கொண்டுவரும் வேளையில், இதுவரை நான் மறந்திருந்தேனோ என்று நினைக்கிறேன்.

இப்பொழுது எனக்கு நன்கு தெரிந்தது எது என்னும் நிலையில் ஓவியமே என்று முடிவுக்கு வந்துவிட்டேன். இதுவரை நான் என் வட்டத்தைக்கடந்து என் பெருவெளி என நினைத்து எழுத்திலும், பிறவகையான துறைகளிலும் ஒரு காலைப்பதித்து, என்னை ஒரு நிலையிலும் நிறுத்திக்கொள்ளாதிருக்கிறேன்.

பல ஆண்டுக்கால பயணத்தில், ஒரு குறிக்கோளுடன் தொடங்கிய பயணத்தில் என் நிறுத்தம் வந்துவிட்டதை அறியாமல் அல்லது அந்த நிறுத்தத்தில் மனமோ, உடலோ, நினைவோ எதோ ஒன்றை வைத்துவிட்டு அந்த பயணத்தை தொடங்கி போய்க்கொண்டிருப்பதாக என்னை கருதுகிறேன். தொடர்வண்டி பயணத்தில் தன் ஊர்வந்ததை அறியாது, மற்றவர்களிடம் கேட்டு அறியாமலும், தன் தூக்கத்தை தொடர்ந்தும், தன் பயணத்தை தொடர்ந்தும் பயணிக்கும் பயணி போல...

என் வாழ்வில் பல ஆண்டுகளை பலவகையான தேடல்களிலும், கற்றுக்கொள்ளலிலும், நிலைப்படுத்தி, அதன்மூலமான வேலைவாய்ப்பு தேடலிலும் என்னை இழந்திருக்கிறேன், இப்பொழுதைய கால கட்டத்தில், ஒரு ஓவியனாக என்னை நிலைபெறச்செய்யும் முயற்சியில் கொஞ்சம் வெற்றியோடு நின்றிருந்தாலும், இன்னமும் இதில் கவனம் செலுத்தவேண்டி இருப்பதாலும் இனிமேலும் சிதறி பறக்கலாகாது என்பது என் முடிவு.

அரசுத்துறை, தனியார் பணியாளர்கள் எப்போதும் தன் மேஜை எல்லைக்குள் மட்டுமே செயல்படுவதை பார்த்து வியந்திருக்கிறேன். ஒருவித மனக்குவிப்பு இதில் வரும் என்பதும், வேலைகளில், தன் செயல்களில் கவனம் வரும், தேவையில்லாத பிறரது செயல்களில் தலையிடுவதும், அதன்மூலமாக வரும் பிரச்சனைகளையும் தவிர்க்கலாம் என்பதும் உண்மை.

ஏற்கனவே ஓட்டைபானையாக இருக்கிற நான், ஓவியம் முதலான எல்லா ஓட்டைகள் வழியாக என் கவனங்களை செலுத்திக்கொண்டிருந்தது மகா விரயம் என்பது என்புத்திக்கு இப்பொழுதான் தெரியவருகிறது. இனி ஓவியத்துக்கான ஓட்டையில் மட்டும் விரயச்செலவு செய்ய முடிவு செய்திருக்கிறேன்.

ஓவியம் தொடர்பான தகவல்களில் என்னை நிறுத்தினால், பிறருக்கு கண்டிப்பாக உதவுமா என அறியாத நிலையில், அது என் வயிற்றுக்கு உதவும் என்பது தெளிவு. இதோடு நான் இன்னும் ஓவியம் குறித்தான அனுபவத்தில் என்னை மேம்படுத்தவும் உதவும்....

இந்த ஓவியன் இதையும் செய்தான் அல்லது எழுதினான் என்றால்... ஓவியத்தையாவது நன்றாக செய்தானா என்ற கேள்வி எழுப்பப்பட்டால்... இவன் இரண்டையுமே சரியாக செய்யவில்லை என்ற பதில் எனக்கானதாக இருக்கவேண்டாம் என்று முடிவுசெய்துவிட்டேன்.

இதனால் இழப்பொன்றும் யாருக்கும் இல்லை. இப்போது வரை என் நிலை, என் அனுபவம், என் ஆர்வம் என்று ஆய்வு செய்தால் “ஓவியம் தவிர ஏதுமில்லை” என்பதே முடிவாக இருக்கும் என்பதால் நான் அந்த நிலையிலேயே நின்று என்னை சிறப்பித்துக்கொள்ள விரும்புகிறேன்...

ஆனால் என் கற்றுக்கொள்ளலும், மேம்படுத்திக்கொள்ளலும் என்றும் இயல்பாக இயங்கிக்கொண்டிருக்கும்... 

Drawing-Master-Helps


என் பகுதி நேரத்தில் Vaneesa Art Academy ல் ஓவிய ஆர்வமுள்ளோர்க்கு ஓவிய வகுப்புக்கள் நடத்திவருகிறேன்... சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வந்து பாடங்கள் பயிலுகிறார்கள்....

இங்கே, தினமும் என்னை சந்திக்க வரும் நபர்களிடமிருந்து கிடைக்கும் அனுபவங்கள் ஓவ்வொரு விதமாக இருக்கும்...

அதை நீங்களும் பாருங்களேன்...










Srirangam-Live-sketch-sugumarje


நான் பணிபுரியும், ஓவிய பள்ளி சார்பாக, நேரடியாக பார்த்து வரைதல் பாடநிலைக்காக ஸ்ரீரங்கம் கோவில் சென்றிருந்தேன்... இரண்டுமாணவர்களுக்கன பாடம் இது... ஆனாலும் ஆர்வமுள்ள அனைவரும் வரலாம் என்றும், பேஸ்புக் மூலமாக அழைப்பு விடுத்திருந்தேன். ஆனால் யாரும் வருவதற்கான சூழல் இல்லை போலிருக்கிறது...

ஷேசராயர் மண்டபம் என்றழைக்கப்படும், சிற்ப மண்டபத்தில் ஓவியம் வரைய ஆரம்பித்தோம். ஒரு குறவன், குறத்தியை தலையில் சுமந்து செல்லும் காட்சிக்கான சிற்பத்தை தேர்வு செய்து, என் மாணவர்களுக்கு எப்படி வரையலாம் என்பது மாதிரியான சில விளக்கங்களை சொல்லிவிட்டு, நானும் அவர்களோடு வரைய ஆரம்பித்தேன்.


அருகிலிருந்த சிற்பத்தூணில் புலியைக்கொல்லும் ஒரு வீரனின் காலணி அற்புதவடிவில் இருக்கும். அடுத்ததாக அதை நான் வரைந்தேன்.


 இந்த நேரத்தில் இங்கிலாந்திலிருந்து வந்த ஒரு சுற்றுலாகுழு ஒரு வழிகாட்டியோடு சிற்பத்தூணைக்கான வந்தது. நான் அந்த வழிகாட்டியிடம்...
“இவர்களில் யாரேனும் ஒருவருக்கு நான் ஓவியம் வரைந்து தருகிறேன்” என்றேன்...
“எவ்வளவு ஆகும்?”
“பணம் வேண்டாம், இவர்களுக்கு அது பிடிக்கும் என்பதே போதும்” என்றேன்
“சரி செய்யுங்க”

ஒரு பெண் (என் வயதுக்கு அக்கா எனலாம்) முன்வந்தார். ஒரு நிமிடத்திற்குள்ளாக அவருக்கு கேரிகேச்சரை வரைந்து தந்தேன்... “வாவ்” என்று சொல்லி சிரித்தபடி வாங்கிக்கொண்டார்...

அவர் குழுவினரும் சந்தோசம் அடைந்தனர். அந்த பெண் தன் கைப்பையை திறந்து ரூபாய் 100 எடுத்தார்...


“Get It”
“No Please... This is My Gift for you"
"Thanks"
அவர்களிடம் சொல்லி, ஒரு ஒளிப்படமும் எடுத்துக்கொண்டேன்...

அடுத்து நான்காவது சிற்பத்தூணில் இருந்த குதிரையை வரைய ஆரம்பித்தேன்... மதியம் 12.30 மணிக்கு நிறைவுசெய்தோம்...

திருச்சியில் ஓவிய ஆர்வலர்கள் நிறைய இருப்பதாக தெரிகிறது. ஆனால் யாரும் குழுவாக சேரமறுக்கிறார்கள்!



இனி இந்த புகழ்பெற்ற, அழகான வேலைப்பாடுகள் நிறைந்த சிற்பதூண்களின் நிலை...

முதல் தூணில் சிறுத்தையில்லை, குதிரையின் கால்களும் இல்லை :(
இரண்டாவது தூணில் குறத்தியின் இடதுகால் இல்லை :(
மூன்றாவது தூணில் சிறுத்தையை கொல்லுபவர்களின் கால்கள் சிதைக்கப்பட்டிருக்கின்றன :(
இப்படியாக எல்லா சிற்பங்களிலிலும்...

ஓவியமாக வரைவதற்குக்கூட கடினமான இவ்வளவு நுணுக்க சிற்பத்தை இப்படியா சிதைப்பார்கள்??? இந்த உலகின் பயங்கரமான விலங்கு “மனிதனைத்தவிர” வேறெதும் இல்லை!

கலை இவர்களால் கலைகிறது...