இப்படியாக, மனதில் இருப்பதை அப்படியே கொட்டிவிடும் அன்பர்களும், நாம் தரும் தத்துவ விளக்களை காண்பது மகிழ்ச்சி. இப்போது அவருக்கு புரியாவிட்டாலும்கூட, ஏதேனும் ஒருநாள், அவருக்கான விளக்கம் நிச்சயமாக கிடைத்துவிடும். இந்த இயற்கை அதற்கான வாய்ப்பை வழங்கவும் செய்யும். அது அப்படித்தான்.
இதை அந்த அன்பர், படிப்பாரா? என்பது தெரியாது எனினும், இதைப்போன்ற கருத்து கொண்டு, வெளியே சொல்லாமல், இதேபோலவே பார்க்கும், வேறு சில அன்பர்களுக்கு உதவும் அல்லவா? அதனாலேயே இந்த பதிவை தருகிறேன்.
மனிதன் தனக்குள்ளாகவே முழுமையானவன். முழு வட்டம் கொண்டவன். குழந்தைகள் விளையாடும் ஜிக் ஜாக் போல, இன்னொன்றை இணைத்து முழுமையை கொண்டுவர வேண்டிய அவசியம் இல்லாதவன். அதனாலேயே அவன், தன்னளவில் சிந்திக்கவும், செயல்படவும், விளைவை பெறவும் முடியும். குடும்பமாக, சமூகமாக, உலகமாக இருந்தபோதிலும், ஒவ்வொருவரும் தனித்தனி உலகமாக இருப்பது இதனால்தான்.
இந்த உலகில், பொதுவாகவே இன்பம் மட்டுமே நிறைந்திருக்கிறது. அந்த இன்பத்தை முறையாக அனுபவித்தாலே பேரின்பமும், அதைத்தொடர்ந்து அமைதியும் கிடைத்துவிடும். இதில் சிக்கல் என்னவென்றால், இன்பம் நீடிக்கவேண்டும். ஆனால் நமக்கு கிடைக்கிற இன்பமெல்லாம், சில நொடிகள்தானே நீடிக்கிறது? உண்மைதானே?
அப்படி குறைவுபட்ட இன்பத்தை சிற்றின்பம் என்று சித்தர்கள்தான் சொன்னார்கள். நிலையாக நீடிக்கும் இன்பத்தை பேரின்பம் என்று சொன்னார்கள். ஆனால், உண்மை அறியாதோ ஏற்க மறுக்கின்றனர். தன்னை அறிவதையும், பிறவிக்கடமை தீர்ப்பதையும், மெய்ப்பொருள் உண்மை விளங்கிக் கொள்வதையும் மறந்துவிட்டு, அதை சாமியார்தனம் என்று சொல்வது சரிதானா?
இத்தகைய பேரின்பத்தை உணர்ந்து அறிந்த சித்தர்களும், ஞானிகளும், மகான்களும்தான், நமக்கும் அது கிடைக்கவேண்டும் என்று நம்மை வழிநடத்துகிறார்கள். ஆனால், நாம் சிற்றின்பத்திலேயே மூழ்கி கிடக்கிறோம். இந்த விளக்கங்களோடு, இந்த இணைப்பில் உள்ள காணொளி பதிவையும் கண்டு உண்மை அறிக!
சிற்றின்பம், பேரின்பம் என்றால் என்ன? What is Pleasure and Bliss? வேதாத்திரிய கேள்வி பதில்
வாழ்க வளமுடன்
