CJ for You: Human life

Human life

Showing posts with label Human life. Show all posts
Showing posts with label Human life. Show all posts

Happiness is what we get in this worldly life. It is truly blissful to be in the union of twos. But, you are confusing people by calling it erotic. It's been like this for a long time. It is foolish to call a godman who has nothing as bliss. How many people have felt such bliss? It's all a lie. If you have other good work, go check it out. Don't cheat.


உலக வாழ்க்கையில் நமக்கு கிடைப்பதுதான் இன்பம். அதில் ஆண் பெண் கலப்பில் கிடைப்பதுதான் உண்மையிலேயே பேரின்பம். ஆனால், நீங்கள் அதை சிற்றின்பம் என்று சொல்லி, மக்களை குழப்புகிறீர்கள். நீண்டகாலமாக இப்படித்தான். ஒன்றுமே இல்லாத சாமியார்தனத்தை பேரின்பம் என்று சொல்லுவது முட்டாள்தனம். அப்படியான பேரின்பத்தை உணர்ந்தவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? எல்லாமே பொய். வேறு நல்ல வேலை இருந்தால் போய்பாருங்கள். ஏமாற்றாதீர்கள்.




இப்படியாக, மனதில் இருப்பதை அப்படியே கொட்டிவிடும் அன்பர்களும், நாம் தரும் தத்துவ விளக்களை காண்பது மகிழ்ச்சி. இப்போது அவருக்கு புரியாவிட்டாலும்கூட, ஏதேனும் ஒருநாள், அவருக்கான விளக்கம் நிச்சயமாக கிடைத்துவிடும். இந்த இயற்கை அதற்கான வாய்ப்பை வழங்கவும் செய்யும். அது அப்படித்தான்.

இதை அந்த அன்பர், படிப்பாரா? என்பது தெரியாது எனினும், இதைப்போன்ற கருத்து கொண்டு, வெளியே சொல்லாமல், இதேபோலவே பார்க்கும், வேறு சில அன்பர்களுக்கு உதவும் அல்லவா? அதனாலேயே இந்த பதிவை தருகிறேன்.

மனிதன் தனக்குள்ளாகவே முழுமையானவன். முழு வட்டம் கொண்டவன். குழந்தைகள் விளையாடும் ஜிக் ஜாக் போல, இன்னொன்றை இணைத்து முழுமையை கொண்டுவர வேண்டிய அவசியம் இல்லாதவன். அதனாலேயே அவன், தன்னளவில் சிந்திக்கவும், செயல்படவும், விளைவை பெறவும் முடியும். குடும்பமாக, சமூகமாக, உலகமாக இருந்தபோதிலும், ஒவ்வொருவரும் தனித்தனி உலகமாக இருப்பது இதனால்தான்.

இந்த உலகில், பொதுவாகவே இன்பம் மட்டுமே நிறைந்திருக்கிறது. அந்த இன்பத்தை முறையாக அனுபவித்தாலே பேரின்பமும், அதைத்தொடர்ந்து அமைதியும் கிடைத்துவிடும். இதில் சிக்கல் என்னவென்றால், இன்பம் நீடிக்கவேண்டும். ஆனால் நமக்கு கிடைக்கிற இன்பமெல்லாம், சில நொடிகள்தானே நீடிக்கிறது? உண்மைதானே?

அப்படி குறைவுபட்ட இன்பத்தை சிற்றின்பம் என்று சித்தர்கள்தான் சொன்னார்கள். நிலையாக நீடிக்கும் இன்பத்தை பேரின்பம் என்று சொன்னார்கள். ஆனால், உண்மை அறியாதோ ஏற்க மறுக்கின்றனர். தன்னை அறிவதையும், பிறவிக்கடமை தீர்ப்பதையும், மெய்ப்பொருள் உண்மை விளங்கிக் கொள்வதையும் மறந்துவிட்டு, அதை சாமியார்தனம் என்று சொல்வது சரிதானா? 

இத்தகைய பேரின்பத்தை உணர்ந்து அறிந்த சித்தர்களும், ஞானிகளும், மகான்களும்தான், நமக்கும் அது கிடைக்கவேண்டும் என்று நம்மை வழிநடத்துகிறார்கள். ஆனால், நாம் சிற்றின்பத்திலேயே மூழ்கி கிடக்கிறோம். இந்த விளக்கங்களோடு, இந்த இணைப்பில் உள்ள காணொளி பதிவையும் கண்டு உண்மை அறிக!

சிற்றின்பம், பேரின்பம் என்றால் என்ன? What is Pleasure and Bliss? வேதாத்திரிய கேள்வி பதில்
வாழ்க வளமுடன்

Everyone in the world worships a different God. But who or who is the true God? How to understand the truth? Give an explanation.


வாழ்க வளமுடன் ஐயா,  உலகில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கடவுளை, இறைவனை, தெய்வத்தை வணங்குகின்றனர். ஆனால், எது அல்லது யார் உண்மையான இறை? எப்படி உண்மை விளங்கிக் கொள்வது? விளக்கம் தருக.


    உலகில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கடவுளை, இறைவனை, தெய்வத்தை வணங்குகின்றனர் என்ற கருத்து சரிதான். பல்வேறு பிரிவுகளாகவும், குழுக்களாகவும் இருந்து வருகின்றனர். நிச்சயமாக அதை குறிப்பிட்டு சொல்லவும் முடியாது. சொன்னால் மதம் முன்னே வந்து நிற்கும். அப்போது உண்மை மறைந்துவிடும்.

கடவுள் என்பது ‘கடந்து உள்ளே’ என்ற வினைச்சொல்லின் விளக்கமாகும். ஒரு மனிதன் தனக்குள்ளே கடந்து உள்ளே கவனித்தால், தன்னை விட மதிப்பு வாய்ந்த, எல்லாவற்றிக்கும் மூலமான, தெய்வீகத்தை உணர்ந்து அறியலாம் என்பதுதான், சித்தர்கள், ஞானிகள், மகான்கள், முன்னோர்களின் வாக்கும், வழிமுறைகளும் ஆகும்.

ஒரு பொருள் என்பதைக் கடந்து, எப்போதும் இருக்கும் பொருள், என்பதை மெய்ப்பொருள் என்று சொல்லுவது வழக்கு. ஏனென்றால், நாம் இந்த உலகில் காணும் எல்லாமே, பொருள் நிலையில் இருந்தாலும், மாறிக்கொண்டே இருக்கிறது. நாமும் கூட, சிறு அணுவாக இருந்து சிசுவாக, குழந்தையாக, சிறுவராக, இளைஞராக, மனிதராக மாறிக்கொண்டே இருக்கிறோம் அல்லவா? இந்த வளர்ச்சியில், ஒருகட்டத்தில் இல்லாமலும் போகிறோம். ஆனால், இந்த உண்மை உணரா மயக்கத்தில், நாமும், மற்ற எல்லாமும், எப்போதும் இருப்பதாக எண்ணிக் கொள்கிறோம். 

ஆனால், மெய்ப்பொருள் இருந்தது, இருக்கிறது, இருக்கும் என்ற தன்மையை கொண்டிருக்கிறது. அதன் ஆரம்பம், நிலை, முடிவு அறியாதும் இருக்கிறோம். அதனால்தான் அத்தன்மையை, இறை என்று உயர்ந்த மதிப்பு கொடுத்து வணங்குகிறோம். அந்த உண்மைதான், பல்வேறு மனிதர்களிடத்தில், சிக்கிவிட்டது.

சிவம் என்பது உலக உயிர்களுக்கு பொதுவான வார்த்தையாகும். இதில் எந்தவிட பாகுபாடும் வருவதற்கில்லை. சிவம் என்பதுதான் பின்னாளில் பல்வேறு மாற்றங்களை கொண்டது. அந்த மாற்றங்களின் வழியாக, உண்மை மறைந்து அதில் பொய்யும் கலந்துவிட்டது. சிவத்திற்கு பதிலாக வேறு என்னென்னமோ வந்து மக்களை குழப்பியும்விட்டது, பிரித்தும்விட்டது.

உலகில் உள்ள எல்லா மனிதர்களும், யோகத்தின் வழியாக, தன்னையறிந்தால், இந்த உண்மை விளங்கிவிடும். வேறெதையும் எங்கே? எங்கே? என்று தேடவேண்டியதில்லை. ஆனால் அவர்களை ஏதோ தடுக்கிறது.

மெய்பொருள் என்பது என்ன? என்பதை வேதாத்திரி மகரிஷி அவர்கள், இங்கே விளக்குகிறார். அறிந்து கொள்வோம்.
மெய்ப்பொருளே சிவம் என்பதை உணர்வோம்! Let's Perceive the Absolute Matter is Shivam!
வாழ்க வளமுடன்
-

I am afraid that whatever happens to others will happen to my family as well. For example, untimely death. This adds to my confusion. This was not easily overcome. I fear for my spouse and children and their future. What to do about it?


வாழ்க வளமுடன் ஐயா, அடுத்தவருக்கு நிகழும் எந்த ஒரு துன்பமும், என் குடும்பத்திலும் நடந்துவிடுமோ என்று அச்சமாக இருக்கிறது. உதாரணமாக அகால மரணம். இதனால் என் மனம் குழப்பம் அதிகரிக்கிறது. இதை எளிதாக கடந்து செல்ல முடியவில்லை. என் வாழ்க்கைத்துணை மற்றும் குழந்தைகளை நினைத்தும், அவர்கள் எதிர்காலம் குறித்தும் பயம் வருகிறது. இதற்கு என்ன செய்வது? விளக்கம் தருக.


‘துன்பத்தை மாத்திரம் நினைத்துக் கொண்டிருந்தால் அது தொல்லையாகவே இருந்திருக்கும். அது மாத்திரம் அன்று; ஒவ்வொரு நிகழ்ச்சியும் நடக்கிறபோது காலத்தாலும், இடத்தாலும் எல்லாம் வல்ல இறைநிலையானது ஒவ்வொரு மனிதனுக்கும் கொடுக்கக் கூடிய அறிவுரை, அனுபவ உரை, அனுபவ ஞானம்; அப்படித்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படி எடுத்துக் கொண்டோமானால் எந்தத் துன்பத்துக்கும் காரணத்தைக் கண்டுபிடிக்கிறபோது இதிலிருந்து விளையக்கூடிய நன்மையெல்லாம் விளங்கி விடும். உண்மையில் எல்லாம் நன்மையாகத் தான் ஏற்படும். அப்படிப் பார்க்கின்றபோது துன்பம் வருகிறது என்று கவலைப்படுகிறோமே, துன்பம் வரக்கூடாது என்று எண்ணுவதால் தான் அந்தக் கவலை.’

இப்படியாக வேதாத்திரி மகரிஷி விளக்கம் தருகிறார். உங்கள் வாழ்க்கையில், நீங்கள் சொல்லுவதைக் கொண்டு கவனிக்கும் பொழுது, ஒருவரின் உடல் பிரச்சனை, நோய், அகால மரணம் என்பதெல்லாம் இயற்கையின் நிகழ்வு. விபத்து என்பது கூட, நம்முடைய தவறுதானே தவிர, இயற்கை நிகழ்த்துவதில்லை.

ஏதேனும் ஒரு வகையில், நாம் எல்லோருமே பிறந்து வளர்ந்து, வாழ்ந்து முடிவு நோக்கி நகர்பவர்கள்தாம். எனவே, வாழும் காலத்தில், நம்முடைய கடமைகளை நிறைவேற்றி, நல்வாழ்வு வாழ்ந்து, நம் வாரீசுகளை நிலைக்கசெய்யவேண்டும். அதன்படி அவர்கள் வாழ்ந்துவிடுவார்கள். அதுபோதும். எனவே, பிறருக்கு நடப்பதை எண்ணி, நம்மை வருத்திக்கொள்ள தேவையில்லை. உங்களுடைய இப்போதைய தேவை, எதிர்கால தேவை என்பதை திட்டமிட்டு செயல்படுங்கள். நம் பெற்றோர் இல்லாமல் நாம் எப்படி மன உறுதி கொண்டோமோ, அதுபோல குழந்தைகளுக்கும் தனித்து செயல்பட பழக்குங்கள். அவர்களுக்கு தன்னம்பிக்கை கற்றுக் கொடுங்கள்.

எதிர்கால பயம் இருந்தால், இருக்கும் நாள் கெட்டுவிடும். செயல்படவும் முடியாது. அதை இறைவசம் விட்டுவிட்டு, அருட்காப்பு செய்துகொள்ளுங்கள். அது உங்களுக்கும், கணவருக்கும், குழந்தைகளுக்கும் காப்பாக இருக்கும்.

துரிய தவம் அடிக்கடி செய்யுங்கள், மனம் தெளிவு பெறும். முக்கியமாக, இந்த கைபேசி, அதன்வழியான தகவல்கள் இவையெல்லாம், சிறுது நாளைக்கு மூட்டை கட்டுங்கள். அடுத்தவருடைய பிரச்சனை, துன்பம், உலகின் போக்கு, குழப்பம், அரசியல் அடிதடி, தடுமாற்றம், விரோதபோக்கு இதெல்லாம் இப்போது வேண்டாம். விலகிக் கொள்ளுங்கள். அதற்கு பதிலாக, கிடைக்கும் நேரங்களில்,  நீங்கள், உங்கள் குடும்பம் என்று மகிழ என்னென்ன வழிகள் உண்டோ அதை கவனியுங்கள். அது போதும், மகிழ்ச்சி உங்கள் இல்லத்தை நிறைக்கும். வாழ்க வளமுடன். மேலும் சில உண்மைகள் அறிய இந்த காணொளி உதவும்.

துன்பமே இல்லாத வாழ்க்கை வாழ விருப்பமா? அதற்கான வழி என்ன?

வாழ்க வளமுடன்

-

I suffer in every way of my life. Why does nature give me so much suffering? What is God's role in this? Give an explanation.


வாழ்க வளமுடன் ஐயா, என் வாழ்வில் எல்லாவகையிலும் துன்பங்களை அனுபவிக்கிறேன். இத்தனை துன்பங்களை இயற்கை ஏன் எனக்கு தருகிறது? இதில் கடவுளின் பங்கு என்ன? விளக்கம் தருக.

கட உள் என்று நமக்குள்ளாக இருக்கிற தன்மையே கடவுளாக மாறிவிட்டது. இத்தன்மையை இறை என்றும் நாம் வணங்குகிறோம். நம்பிக்கையற்றவர்கள் இயற்கை என்று சொல்லுகிறார்கள். எப்படியே, இறை வழியாகவும், இயற்கை வழியாகவும் துன்பம் வருகிறது என்று நம்புகிறோம். ஆனால் உண்மை என்ன?

இறைத்தன்மையும்,  இயற்கையும் மூன்று துன்பங்களை மட்டுமேதான் தருகிறது. அது என்னென்ன என்பதை இந்த காணொளி வழியாக காணலாம். ஆனாலும், இயற்கையில் கூடுதலாக சில நிகழ்ச்சிகள் எழுவதுண்டு. அது இயற்கை நிகழ்வு. தன்னை சரி செய்துகொள்ளும் ஓர் நிலைபாடும், காலத்திற்கு கேற்றபடி தன்னில் மாற்றம் பெறுவதும் ஆகும். அந்த இயற்கையின் நிகழ்வுகளில், அதைச் சார்ந்து வாழும் மனிதன் சிக்கிக் கொள்கிறான். அதனால் மட்டுமே துன்பப்படுகிறான். அதுதான் உண்மையே தவிர, மனிதனுக்கு துன்பம் தரவேண்டும் என்று இயற்கை திட்டமிட்டு செயல்படுவதில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதுபோலவே, கடவுள் தன்மையும், இந்த மனிதனுக்கு பாதிப்பு, துன்பத்தை தரவேண்டும் என்று செயல்படுவதில்லை என்பதையும் விளங்கிக் கொள்ள வேண்டும்.

இந்த விளக்கங்களின் மொத்த விளக்கமும், இந்த காணொளியில் நாம் அறிந்து கொள்ளலாம். இதோ அதற்கான பதிவு.

கடவுள் ஏன் நமக்கு துன்பங்களை தருகிறார்? Why does God give us suffering? வேதாத்திரிய கேள்வி பதில்

வாழ்க வளமுடன்

-

I believe that ego is what makes us grow. But they say no to ego. How can it be wrong to think that I want to be better, grow and rise?


தன்முனைப்பு என்பதுதான் நம்மை வளர்க்கிறது என்று நான் நம்புகிறேன். ஆனால் தன்முனைப்பு கூடாது என்றுதானே சொல்லுகிறார்கள். நான் நன்றாக இருக்கவேண்டும், வளரவேண்டும், உயரவேண்டும் என்று நினைப்பது எப்படி தவறாகும்? விளக்கம் தருக.

தமிழில் தன்முனைப்பு என்ற வார்த்தை, ஏதோ குறிப்பிட்ட காலங்களில் உட்புகுந்தது போல தோன்றுகிறது. சில வார்த்தைகளை, ஆங்கிலத்தில் இருந்து மொழி (முழி) பெயர்க்கும் பொழுது இப்படியான தமிழ் வார்த்தைகள் வந்துவிடுவதுண்டு. இந்த தன்முனைப்பை, motivation என்று கூட சொல்லுகிறார்கள். ஆனால் பொதுவான சமமான வார்த்தை Ego என்பதாகும்.

எனக்குத்தெரிந்தவரை, தன்முனைப்பு என்ற வார்த்தை, பழந்தமிழில் இல்லை என்றுதான் தோன்றுகிறது. நல்ல தமிழறிஞர் யாரேனும் இருந்தால், என் சந்தேகம் தீர்க்கலாம். ஆனால், தன்முனைப்பு என்பதற்கு என்ன விளக்கம் சொல்லுகிறார்களோ, அதற்குச் சமமான வார்த்தைகள் இப்படியாக இருக்கிறது. அவை, அகங்காரம்,. தான் என்ற எண்ணம்; செருக்கு, கர்வம், அகந்தை, திமிர், இறுமாப்பு, தலைக்கனம். செருக்கு, இறுமாப்பு, முனைப்பு ஆகும்.

தான், தனது என்று வாழும் பொழுது, தான் என்ற அதிகார பற்றிலும், தனது என்ற பொருள்பற்றிலும் மனிதன் சிக்கிவிடுகிறான். இதைத்தான் தன்முனைப்பு என்று சொல்லுகிறார்கள்.  தான் என்றும், தனது என்றும் வாழ்வதில் சிக்கலில்லை, ஆனால் தான் மட்டுமே, தனது மட்டுமே என்று குறுகிக் கொள்வதுதான் சிக்கலாகிறது. அதனால்தான், தன்முனைப்பு கூடாது என்று சொல்லப்படுகிறது. மனிதர்களுக்கு இந்த குறுகிய மனப்பான்மை அறியமுடிவதில்லை. அதனால்தான், மனிதனுக்கு மனிதனே துன்பம் செய்விக்கிறான். தன்னைப்போலவே இன்னொருவரும் மனிதரே என்று அவன் நினைப்பதில்லை.

மிருகங்களிலும், பறவைகளிலும் இந்த தொல்லை இல்லை. ஒரு சிங்கம் இன்னொரு சிங்கத்தை பழிவாங்குமா? கீழாக நினைக்குமா? அதன் வாழ்நிலையை சிதைக்குமா? இதைப்போல, ஒரு புலி இன்னொரு புலியை, ஒரு யானை இன்னொரு யானையை என்று இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ஒருவேளை இவைகளுக்கு ஐந்தறிவு என்பதால், இப்படி இருக்கின்றதோ? நமக்கெல்லாம் ஆறறிவு ஆகிற்றே?

தன்முனைப்பு பெரும்பாலும் சுயநலம் கொண்டது. எவன் எக்கேடு கெட்டால் என்ன? எனக்கு தேவையானது வேண்டும், நான் விரும்பியது வேண்டும். எனக்கானது வேண்டும் என்ற வகையில், தன்னளவில் வாழும்பொழுது, அவன் மனித தன்மையையே இழந்தவனாகிறான். இயற்கையின் இயல்பை கெடுக்கவும் செய்கிறான். ஆனால் அதை அவன் அறிவதும் இல்லை. எனவே நீங்கள் தன்முனைப்பு என்ற வார்த்தைக்கான உண்மையை அறிதல் அவசியமாகும்.

இந்த காணொளி கூடுதலாக சில விளக்கங்களை தரலாம்.

தன்முனைப்பு, சுயமரியாதை புரிந்துகொள்வது எப்படி? தவிர்க்க என்ன செய்யலாம்?

வாழ்க வளமுடன்


Suddenly, one day, I took initiation and learned penance. But I couldn't keep up. My living situation is not good, there is no peaceful place. Shall we leave it at that? What other way? Give an explanation.


வாழ்க வளமுடன் ஐயா, ஏதோ ஒருநாள் திடீரென, தீட்சை எடுத்துக்கொண்டு, தவம் கற்றுக்கொண்டேன். ஆனால் தொடர்ந்து என்னால் செய்யமுடியவில்லை. என்னுடைய வாழ்க்கை சூழ்நிலை சரியில்லை, அமைதியான இடமும் இல்லை. அப்படியே விட்டுவிடலாமா? வேறு என்ன வழி? விளக்கம் தருக.

எல்லோருமே, தீடீரென ஒருநாள் தான், மாற்றத்தையும், உண்மையையும் உணர்ந்து, இனியாவது, வாழ்வில் திருத்தம் பெறவேண்டும் என்று, குருவை நாடி சரணடைகிறோம் என்பதுதான் உண்மை. நாம் தேர்ந்தெடுத்தது எதுவேண்டுமானலும் இருக்கலாம். ஆனால் குருவை நாடினால், அவரின் வழிகாட்டுதல் எந்தவகையிலும் நமக்கு துணை நிற்கும் என்பது உறுதி. 

நீங்கள் மனவளக்கலை அன்பர் என்றால், உங்களுக்கான அடிப்படை பயிற்சிகள் போதுமானது. அதை உங்கள் வாழ்நாள் முழுவதுமே கடைபிடிக்கும் வகையில்தான், வேதாத்திரி மகரிஷி அவர்கள் வடிவமைத்திருக்கிறார். அந்த நிலையில் இருந்து நீங்களாகவே, உயர வேண்டும் என்று தீர்மானித்தால், அதற்கு அடுத்த பயிற்சிகளில் நீங்கள் இணைந்து, அகத்தாய்வு, பிரம்மஞானம், அருள்நிதி என்ற வகையில் உயரலாம். அது உங்கள் விருப்பம் மட்டுமே தவிர, கட்டாயம் இல்லை.

பொதுவாகவே, நீங்கள் சொல்லுவது போல, சிலர் தொடர்ந்து செய்வதில்லை. ஏதோ வாரம் ஒருநாள், மாதம் ஒருநாள் என்றுதான் போகிறது. காரணம், நீங்கள் சொன்ன அதே வாழ்க்கை சூழ்நிலைதான். இந்த பொருள்முதல்வாத உலகில், எல்லோருக்குமே நேரம் கிடைப்பதில்லை. கிடைக்கும் நேரம் உறங்கி எழுவதற்கு கூட போதாமல் இருக்கிறதுதானே? வேறுவழியும் இல்லை.

ஆனால், இந்த உழைப்புக்கும், ஓட்டத்திற்கும் நம்முடைய உடல், மனம், உயிர் ஈடு கொடுக்க வேண்டுமே? அது முக்கியமாயிற்றே? அதற்கு வழி என்ன? அதற்குத்தான் இருக்கிறது வேதாத்திரிய மனவளக்கலை. அதனால், ஏதேனும் ஒரு வகையில் அரைமணியோ, ஒருமணியோ நேரம் ஒதுக்கி, பயிற்சி மற்றும் தவம் செய்ய முறைப்படுத்திக் கொள்ளவேண்டும். அது மிக மிக அவசியம். எனவே இன்றே திட்டமிடுங்கள்.

இந்த காணொளியும் உங்களுக்கு உதவக்கூடும்.

தீட்சை எடுத்துக்கொண்ட பிறகும் தவம் செய்யாமல் தவிர்க்கலாமா? #vethathiriyayoga #meditation #thavam

வாழ்க வளமுடன்.

-

In what way does Vethathiriyam support life? So what's so special about it? Isn't it a collection of spiritual truths that have already been told by many? How can it be right to call it Vethathiriyam? Are you deceiving people?


வேதாத்திரியம் எந்த வகையில் வாழ்க்கைக்கு துணை நிற்கிறது? அப்படியென்ன அதில் சிறப்பு இருக்கிறது? ஏற்கனவே பலரும் சொன்ன ஆன்மீக உண்மைகளின் தொகுப்புத்தானே? அதை வேதாத்திரியம் என்று சொல்லிக் கொள்வது எப்படி சரியாகும்? மக்களை ஏமாற்றுகிறீர்களா?


இந்த கேள்வியை வரவேற்கிறேன். வேதாத்திரியம் குறித்து சராசரி பதிவாக சொல்லுவதற்கு மாறாக, இப்படியான கேள்விக்கு பதில் தரும்பொழுதுதான், சிறப்பான உண்மையை எல்லோரும் புரிந்து கொள்ள முடியும். வேதாத்திரியம் என்பது, வேதாத்திரி மகரிஷி அவர்கள், மெய்ப்பொருள் உண்மையை உணர்ந்தறிந்த, தன்னுடைய முப்பத்தைந்து வயது முதல், தொன்னூற்றி ஆறு வயது வரை, உலக மக்களை, ஆன்மீகத்தில் உயர்வடையச் செய்து, இன்பம், பேரின்பம், அமைதி என்ற வகையில் வாழ்வதற்கு வழிவகை செய்தவர் ஆவார். இன்னமும் அவருடைய சேவை, என்னைப்போன்ற ஆசிரியர்களால் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது.

நீங்கள் சொல்லுவதுபோல, ஆன்மீக உண்மைகள் பல, இந்த உலகில் இருக்கின்றன. ஆனால் அவை எல்லாம் சிதறிப்போய், உண்மை பலவாறாக திரிந்து போய்விட்டது. காரணம் எடுத்துச் சொல்லுபவர்கள், படித்திருக்கிறார்களே தவிர, உணர்ந்தறிந்தவர்கள் இல்லை. அப்படி இருந்தாலும் அவர்கள், மிகக் குறைவே. இதனால், யார் யாரோ, ஆன்மீகத்தின் வழியாக, உண்மை சொல்கிறேன் என்று, ஒப்பித்து, மக்களை, குறிப்பாக உங்களை ஏமாற்றிவிட்டார்கள்.  இந்த கேள்வி கேட்கும் நீங்களே ஏன் இந்த சேவையை, மக்களுக்குத் தரக்கூடாது? உங்களுக்குத்தான், பலரும் சொன்ன ஆன்மீகத்தின் தொகுப்புக்கள் குறித்த விபரங்கள் தெரிந்திருக்கிறதே? அந்த தகுதி போதுமே? அதைவிட்டுவிட்டு, வேதாத்திரியத்தை குறை சொல்வானேன்?

பக்தி, ஆன்மீகம், விஞ்ஞானம் என்று திசைக்கொன்றாக, பிரிந்துபோய், உண்மையறியாமல், வாழ்க்கைச்சூழலில் சிக்கித்தவித்த மக்களுக்கு, விளக்கம் அளித்திடவே, தான் அறிந்த மெய்ப்பொருள் உண்மையை விளக்கிட, உலக சமுதாய சேவா சங்கம் என்பதை துவங்கி, தன்னுடைய பயிற்சிகளை, முப்பத்தைந்து வயதிலேயே தொடங்கிவிட்டார். கவனிக்கவும், மெய்பொருள் உண்மையை நன்கு விளங்கிக் கொண்ட பிறகுதான். ஏதோ படித்தோம், பகிர்வோம் என்றில்லை.

தன்னுடைய அனுபவ விளக்கத்தை, மிகத்தெளிவாக வேதாத்திரி மகரிஷி பதிவு செய்கிறார். பக்தி கடந்த உண்மையே ஞானம் என்று வலியுறுத்துகிறார். எனினும் பருவத்திற்கு முன்பு வரை, பக்தி அவசியம் என்றும் சொல்லுகிறார். பருவம் வந்த அனைவருமே, பிரம்மஞானம் என்ற மெய்ப்பொருள் தத்துவம் அறிந்து கொள்ள பயிற்சி வடிவமைத்தார். சித்தர்களின் வெட்டவெளி தத்துவத்தை, வற்றாயிருப்பு, பேராற்றல், பேரறறிவு, காலம் என்ற வளம் கொண்டதாக தெரிவிக்கிறார். காந்த தத்துவத்தையும், பிரபஞ்ச பரிணாமத்தையும், உயிரின பரிணாமத்தையும், உங்கள் விஞ்ஞானத்தின் துணை கொண்டும் விளக்குகிறார். நான் யார்? என்ற கேள்விகான விடையை அறியத்தருகிறார். உண்மையை அறிய திணறும் விஞ்ஞானத்திற்கு, வழியும் காட்டுகிறார். அவ்வுண்மைகளை, உலக விஞ்ஞானிகள் கூட்டத்திலும் பகிர்ந்திருக்கிறார்.

நீங்கள் உங்கள் அறிவில், எல்லாம் ஏற்கனவே இருப்பதுதானே? இருந்தது தானே? என்று நினைத்தால் அது உங்களின் அறியாமை. எனினும், வேதாத்திரியத்தில் இணைந்து, இதையெல்லாம் தெரிந்து கொள்ளுங்கள் என்று நான் அழைக்கமாட்டேன். அது உங்கள் விருப்பம். உங்களின் உரிமை. ஆனால், விளக்கத்தை உங்களுக்குச் சொல்லவேண்டியது என்னுடைய கடமை. இங்கே ஒரு அன்பரின் வாழ்க்கை அனுபவ குறிப்பு காணொளி பதிவு, மற்றொரு புரிதலை உங்களுக்குத் தரலாம். 

உறவுகளோடு இனிய வாழ்க்கைக்கு வேதாத்திரியம் - pleasant life with relatives by Vethathiriyam

வாழ்க வளமுடன்.

-

Leave the mind as it is. Let it be what it is within. How then can one be without a mind? Explain.


வாழ்க வளமுடன் ஐயா, மனதை அப்படியே விட்டுவிடுங்கள். அது அகத்தில் எப்படி இருக்கிறதோ இருக்கட்டும் என்கிறார்கள். அப்படியென்றால் மனம் இல்லாமல் எப்படி இருக்கமுடியும்? விளக்குக.



வேறு எங்கே போகவேண்டிய கேள்வி என்று நினைக்கிறேன். ஆம். இது குறித்து, மற்றொரு யோகம் அல்லாத, மனம் விடுதலை குறித்து பேசும் அன்பர்களின் காணொளி சில கண்டேன். குறிப்பாக அது யார்? என்று அடையாளப்படுத்துவது வேண்டியதில்லை. எனினும் சில விளக்கங்களை காண்போம்.

பொதுவாகவே, மனம் ஒரு குரங்கு. அது இயல்பில் அடங்காது. உன்னை சும்மா இருக்கவிடாது. கண் போன போக்கில், கால் போகமுடியுமா? அது போல மனம் போன போக்கில், மனிதன் போகமுடியுமா? என்று பாடல்களும், கருத்துகளும் இருக்கின்றன. அவை விவரித்தால், இந்த கட்டுரையின் நீளமும் அதிகமாகிவிடும். மனம் இயல்பில் ஆற்றல் உடையது என்பதை மறுப்பதற்கில்லை. இயற்கையின் ரகசியங்களை தன்னுள்ளே அடக்கி வைத்திருக்கிறது என்பதும் உண்மை.

இன்னும் ஒருபடி மேலாக, ‘மனதின் அடித்தளமே நிலைபொருள்’ என்ற வேதாத்திரி மகரிஷியின் கருத்தை நினைவுகொள்க. அப்படியான மனதை, புறம்தள்ளி பழகுவதும், வாழ்வதும் சரியாகுமா? உங்கள் கேள்வியின்படி மனதை அகம், புறம் என்ற இரண்டாக பிரித்துக்கொண்டாலும், புறமனதை கவனி, அக மனதை விட்டுவிடு என்பதாக சொல்லப்படுகிறது.

மனமே மனிதனாகவும், மனிதனே மனமாகவும் இருக்கிறான் என்பது சித்தர்களின் கருத்தாகும். அதுவே வேதாத்திரியத்திலும் உள்ளது. எனவே புதிதாக எந்த திணிப்பும் இங்கே இல்லை. மேலும் மனதின் உயர்வுதான் மனிதனின் உயர்வு என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்நிலையில், விழிப்பாக இருக்கவேண்டும் என்பதற்காகவும், அந்த பழக்கத்திற்காகவும் ‘அக மனதை புறந்தள்ளுங்கள்’ என்பது சரியாக இருக்காது. இது விளக்கமே தவிர, அறிவுரை அல்ல. வேதாத்திரியத்தில் சொல்லப்பட்டது போல வேறு எங்குமே, ‘மனம்’ குறித்து விளக்கம் தரப்பட்டது இல்லை என்பது என்னுடைய கருத்து. அந்த அளவிற்கு மிக தெளிவாக, உண்மையாக, வேதாத்திரி மகரிஷி தன் விளக்கங்களை தந்திருக்கிறார்.

மேலும் எண்ணமோ, மனமோ, அடக்க நினைத்தால் அலையும். அறிய நினைத்தால் அடங்கும். மனம் தன் உணர்வுகளை எண்ணமாகவே பிரதி பலிக்கிறது. அவை எல்லாம் எது? என்று கேட்டால். ‘எல்லாம் நாம் போட்டு வைத்தவைதான்’ என்றே விளக்கம் அளிக்கிறார், வேதாத்திரி மகரிஷி.

மனதை பிரித்து, மனதை தவிர்த்து, மனதை ஒதுக்கிவைத்து, மனதை சும்மா விட்டுவிட்டு ஆகப்போவது ஒன்றுமே இல்லை. மனம் என்பது என்ன? என்று புரிந்து கொள்ளாதவர்களின் செயல்பாடே ஆகும்.  எனவே மனதை அப்படியே விட்டுவிடுங்கள் என்பது ஏற்பில்லாதது. அதை உங்கள் மனமே முதலில் ஏற்றுக்கொள்ளாது.

இந்த விளக்கம் குறித்தான காணொளி, மேலும் உங்களுக்கு புரிதலை கொடுக்கும் என்று நம்பலாம்.

மனம் என்பது என்ன? மனதை ஒதுக்கி வைத்து வாழமுடியுமா? What is the mind? Is it possible to live apart?

-

வாழ்க வளமுடன்
-

Sir, the burden of my anxiety seems to be increasing every day. Due to this, I could not concentrate on any work. Is there a solution to this?


ஐயா, ஒவ்வொரு நாளும் என் கவலையின் சுமை கூடிக்கொண்டே இருப்பதாக தெரிகிறது. இதனால் எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியவில்லை. இதற்கு தீர்வு உண்டா? எந்தெந்த வகையில் என் கவலையை போக்கமுடியும்? எனக்கு விளக்கம் தருக.

கவலை என்பது மனிதர்களின் அடிப்படை குணங்களில் ஒன்றாக அமைந்துவிட்டது. நீங்களும் நானும் இன்னும் பலரும் அந்த வரிசையில்தான் இருக்கிறோம் எனலாம். எனினும் இந்த கவலை என்பது, நிஜமாகவே மனிதனின் அடிப்படை குணமா? என்று கேட்டால் அதற்கு பதில், ஆமாம் என்று சொல்லுவதற்கில்லை. மகிழ்ச்சி, பயம், நிறைவு, சினம் என்ற இயற்கை குணங்களோடு, கவலை,  ஏக்கம் என்று சில கலந்துவிட்டது. நாமும் அதை விட்டுவிடுவதாக இல்லை.

இப்போதெல்லாம் குழந்தைகளுக்கே கவலை வந்துவிட்டது. aவர்களும் நமக்கு போட்டியாக கவலையை எடுத்துகொண்டுவிட்டார்கள். நமக்கு பெரிய பெரிய என்றால், அவர்களுக்கு அவர்களளவில் சிறிய சிறிய என்பதாக இருக்கிறது. இந்த கவலை குறித்து வேதாத்திரி மகரிஷி, தனியாக பாடமே அமைத்துவிட்டார். அதுதான் தற்சோதனை எனும் அகத்தாய்வில் ‘கவலை ஒழித்தல்’ என்று வைத்திருக்கிறார். கவனியுங்கள். கவலையை தீர்த்தல் அல்ல, ஒழித்தல் ஆகும்.

இந்த கவலை குறித்து எந்த ஆன்மீக, யோக பெரியோர்களும் தனியாக சொன்னதில்லை. இறையிடம், மெய்ப்பொருளிடம் முறையிடு. தீரும் என்றுதான் சொல்லுகிறார்கள். வேதாத்திரி மகரிஷியோ அதை, அந்த கவலையை ஆராய்ந்து அலசிப்பார் என்கிறார். அதை வகைப்படுத்தி புரிந்து கொண்டு, விளக்கம் பெற்று கவலையை ஒழித்துவிடு என்று அறிவுறுத்துகிறார்.

உங்கள் கவலை எத்தகையது என்பதை, உங்கள் கேள்வியிலேயே தெரிந்துவிடுகிறது. ஆனால் எதனால் அது ஆரம்பமாகிற்று? என்பதை தனியாக நீங்கள் மட்டுமே அறிவீர்கள். எனினும். அந்த கவலையை தீர்க்க, இல்லையில்லை ஒழிக்க வழி உண்டு. மனவளக்கலையில், நீங்கள் கவலை ஒழித்தலை பாடமாகவும் படிக்கமுடியும். கட்டுரையாகவும் படிக்கமுடியும். உங்களிடம் உள்ள மனவளக்கலை புத்தகம், பாகம் ஒன்றில், இருக்கும் ‘கவலை ஒழித்தல்’ தலைப்பிலான பதிவை படித்துப்பாருங்கள். கூடுதலாக. இந்த காணொளி உங்களுக்கு உதவலாம்.

மன ஆற்றலை, நம்பிக்கையை அகற்றும் கவலை தேவையா? 

வாழ்க வளமுடன்.

-

Can Yoga Bring Physical and Mental Health? Doesn't medication solve that? Part 02


உடல் நலம், மன வளம் யோகத்தால் கிடைத்துவிடுமா? மருந்துகள் அதை தீர்க்காதா? உண்மை என்ன? Part 02


இயக்கம் என்பது, இந்த பிரபஞ்சத்தில் எப்படி இருக்கிறதோ, அதுபோலவே, அந்த பிரபஞ்சத்தில் இருக்கிற எல்லாமே, அதனுள் அடங்கிய எல்லாமே, இயங்கிக் கொண்டிருக்கிறது. கல் மண் உலோகம் போன்ற ஜடப்பொருளும் அணுக்கூட்டங்களால் இயங்குகிறது. அதுபோலவே, மரமும், புழுவும், எல்லா உயிரினங்களும், மனிதன் உட்படவும் அணுக்களின் கூட்டே. அவ்வணுக்களும் இயங்கிக் கொண்டே இருக்கிறது. இதை இயற்கை. அந்த வகையிலேதான், ஜீவன்களின் உடலுறுப்பும் இயங்கிக்கொண்டே இருக்கின்றன. மனிதனைத்தவிர, மற்றெல்லா உயிரினங்களும், தன் இயற்கை இயல்பை விட்டுவிடவில்லை. இன்னும் மாறாமல், இயற்கையோடு உறவாடிக்கொண்டு, அந்த இயற்கை நீதிக்கு பொருத்தமாகவே வாழ்கின்றன.

மனிதன், ஆறாவது அறிவின், சிந்தனை எழுச்சியால், பலவகைகளில் உந்துதல் பெற்று, இயற்கையின் எல்லைகளை மீறிவிடுகிறான். இதனால், தன்னை வித்தியாசப்படுத்திக் கொள்கிறான். பிரபஞ்சத்தின், இயற்கையின் ஒருபகுதி நான் என்பதை அறியாமல், தானே உயர்வானவன் என்ற தன்முனைப்பு கருத்துக்கு வந்துவிடுகிறான். இக்கருதாக்கம், அவனை, இயற்கைக்கும், பிரபஞ்சத்திற்கும் விரோதமாக செயல்பட வைக்கிறது எனலாம். மனிதனின் ஆறாம் அறிவின் எழுச்சி, மனித பரிணாமத்தின், வளர்ச்சிக்கும் உதவுகிறது என்பதில் ஐயமில்லை. ஓவ்வொரு நாளும், விஞ்ஞானமும், மருத்துவமும், வானியலும் வளர்ந்துகொண்டே இருக்கிறது. கடல் நீர் சூழ்ந்த நிலப்பரப்பில், எல்லா உயிரினங்களும், எல்லைகளற்று இருக்கையில், மனிதன், தான் வாழும் நிலப்பரப்பிலும், தன் மனதிலும் எல்லைகளை வகுத்துக்கொண்டு வாழ்ந்து வருகிறான். இந்நிலை மாறிடவே, சித்தர்களும், யோகியரும், மகான்களும் முயன்றார்கள். பக்தியிலும், யோகத்திலும் மனிதனை உயர்த்திட வழி காட்டினார்கள், இன்னும் வழி காட்டிக்கொண்டே இருக்கிறார்கள். வேதாத்திரி மகரிஷி, தன் வாழ்நாளில், உலக சமாதனமும், ஓர் உலக கூட்டாட்சியும் அமையவேண்டும் என்ற நோக்கத்தோடு வாழ்ந்து, அதற்கான வழிமுறைகளையும், திட்டங்களையும் வகுத்துத் தந்தார். இன்னும் நூற்று ஐம்பது ஆண்டுகளில் நிழந்திடும் என்றும் உறுதி அளித்திருக்கிறார்.

மனிதனின், இயற்கையை மீறிவிட்ட வாழ்க்கை முறைதான், அவனுக்கு பலவித தொல்லைகளை உருவாக்குகிறது. மனம் இதனான மனிதன், அந்த இதம் என்ற அமைதி, பொருத்தம், நிலைபாடு, சமநிலை ஆகியவற்றை இழந்துவிட்டான் என்று சொல்லலாம். ஆனால், மனிதனை மனிதனே இப்படி சொல்லிக் கொள்ளலாமா? என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது. பொதுவாக, ஒரு மனிதன், தன்னுடைய உடல், மனம், உயிர் இயக்கத்தால்தான் வாழ்கிறான். ஆனால் உடல் இயக்கம் ஏதுமில்லாமல், வெறுமனே வாழ தயாராகிறான். மனமும், உயிரும் இயற்கையாக இயங்கும் பொழுதும், உடல்சார்ந்த உறுப்புக்களும்  இயற்கையாக இயங்கும் பொழுதும், உடல் இயக்கம் இல்லாது தடுமாறுகிறான். இதனால் உடலும் கெட்டு, உடலுறுப்பும் கெட்டு, வாழ்நாளை சுருக்கிக் கொள்கிறான்.

அக்கால மருத்துவ முறைகளும், இயற்கை மருத்துவமும், பாரம்பரிய மருத்துவமும், நவீன மருத்துவமும் உதவினாலும்கூட, மனிதனுக்கு முழுமையான தீர்வு இல்லை. உடலையும், உடலுறுப்பையும் தானாகவே சரி செய்திடும் அமைப்பும், சிறப்பும், இயற்கையாகவே உண்டுதான் எனினும், அதற்கான வாய்ப்பை மனிதன் இழக்கிறான். இயற்கையின் வினை விளைவு நீதி தெரியாமல், தானாகவே வலிந்து போய், சிக்கிக் கொள்கிறான். முக்கியமாக, மனிதனான, தன்னுடைய பிறப்பின் உண்மையை, அதிசயத்தை, பெருமையை, சிறப்பை, மகத்துவத்தை அறியாமலேயே, என்ன என்று புரிந்து கொள்ளாமலேயே, அதை உணராமலேயே இறந்தும் விடுகிறான். இதில் வேடிக்கை என்னவென்றால், பிறந்தவர் இறப்பார் என்று தத்துவத்தை அவனே சொல்லிக்கொள்வான். பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் கொஞ்ச காலம் நிலைத்திருக்கும், வாழ்நாளையும், வாழ்க்கையையும் ஆராய்ந்திட மாட்டான்.

இதனால், மருந்துகள் அவனுக்கு உதவாத நிலையை அடைந்துவிடுகிறான். எதாவது பிரச்சனை என்றால், பாதிக்கப்பட்ட அந்த உறுப்பை அகற்று என்பது, வழக்கமான மருத்துவ முறையாக வந்து நிற்கிறது. மருந்துகளால் சரி செய்யப்படுகின்ற, ஆரம்பகால கவனிப்பும், அக்கறையும் மனிதனுக்கு தெரியவில்லை. அதை மறந்தும் விட்டான்.  இயற்கையாக சரி செய்துகொள்ளும் வழக்கமும், பழக்கமும் கூட அவனுக்கு இல்லை. இந்த நிலையில்தான், யோகம் அவனுக்கு உதவ துணை நிற்கிறது எனலாம்.

யோகம் என்பது, மனதை செம்மைபடுத்தும் ஓர் பயிற்சி. வேதாத்திரி மகரிஷி மிகப் பொருத்தமாக, மனவளக்கலை என்ற தமிழாக்கத்தை அதற்கு தந்திருக்கிறார். இதுவரை மனிதன் விட்டு விலகிய பாதையில், அவனை அழைத்துச் செல்வதற்கு, யோகம் மட்டுமே உதவும். ‘தேடுவதை விட்டுவிட்டால், தேடும் பொருள் அங்கேயே இருக்கும்’என்று, உண்மை விளக்கமாக, வேதாத்திரி மகரிஷி சொல்லுகிறார். இன்னொரு உதாரணமாக, தேவையற்ற பகுதிகளை, ஒரு பாறையில் இருந்து, அகற்றும் பொழுதுதான், அந்த பாறையின் உள்ளாக, மறைந்திருந்த சிலை, வெளிப்படுகிறது. அதுபோல, தவறுகளை திருத்திவிட்டால், இயல்பு அங்கே இருப்பதை அறியலாம். அதை காத்தும் வரலாம்.

மனவளக்கலை யோகமும், அதன் வழியாக தரும் எளியமுறை உடற்பயிற்சியும், இருக்கும் நோய்க்கும், பாதிக்கப்பட்ட உடலுறுப்புக்கும் தீர்வு அல்ல. ஆனால் வருமுன் காப்பதில், அதற்கு நிகர் ஏதுமில்லை என்பதை புரிந்து கொள்ளலாம். நீங்கள், அன்றாட வாழ்வுக்கு வாங்கும் பொருளை, கவனமாக கையாண்டால், வாழும் நாள்வரை உபயோகிக்கலாம் அல்லவா? அதுபோலவே, உங்கள் உடலையும், உடலுறுப்பையும் காத்துவந்தால், உங்களுடைய வாழ்நாள் முழுவதும் நிறைவாக வாழலாம். இதனாலேயே, பருவம் வந்த அனைவருமே, மனவளக்கலை யோகம் மற்றும் எளியமுறை உடற்பயிற்சி கூடுதலாக காயகல்பம் கற்ற வேண்டும் என்று, வேதாத்திரி மகரிஷி வலியுறுத்துகிறார்.

வேதாத்திரி மகரிஷியின் வாழ்க்கையை, பெரும்பாலும் ஆராய்ச்சிக்கே பயன்படுத்தினார். காயகல்ப யோகம் எனும் பயிற்சியை, அவர் முழுமையாக்கிய பொழுது, ‘இதன் முழுமை எனக்கு இப்போதுதான் கிடைத்தது, முன்னமே கிடைத்திருந்தால், நானும் அப்பொழுதே கற்றிருப்பேன்’ என்று சொல்லியிருக்கிறார். அப்படி கிடைத்த அற்புதமான பயிற்சியை, நாம் கைவிடுகிறோம். செய்ய நேரமில்லை என்று ஒதுக்கி தள்ளுகிறோம். 

இனியும் வருத்தம் தேவையின்றி, ஒரே முடிவாக, நீங்கள் எந்த வயதினராக இருந்தாலும், யோகத்தில் இணைந்து கொள்ளுங்கள். பயிற்சிகளை தொடருங்கள். உங்களுக்கும், இயற்கைக்கும் உள்ள இணைப்பை உறுதி செய்யுங்கள். முரண்படாத வாழ்க்கையை வாழத் தொடங்குங்கள். சிலநாட்களில் விளக்கமும், உறுதியும் பெறலாம். உடல் நலம், மன வளம் யோகத்தால் கிடைத்துவிடுகிறது என்ற உண்மையை, நீங்களே அறிந்து கொள்ளலாம்.

வாழ்க வளமுடன்.

Can Yoga Bring Physical and Mental Health? Doesn't medication solve that? Part 01


உடல் நலம், மன வளம் யோகத்தால் கிடைத்துவிடுமா? மருந்துகள் அதை தீர்க்காதா? உண்மை என்ன? Part 01


வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதனுக்கு, ஒவ்வொரு நாளும் புதிது. இந்த ஒருநாள் என்பது, அவன் தூங்கத்தில் இருந்து விழுத்து எழுவதை சொல்லலாம். ஆர்பரித்த புயல், அடங்கி அடுத்ததாக ஒரு புதிய ஆர்பரிப்புக்கு தயாராவது போல, மனிதன் ஒருநாளில் களைத்து, சோர்ந்து, தூங்குகிறான், தூங்க முயற்சிக்கிறான். மறுநாளில் கண்விழித்து எழுகிறான். அவனுக்கான புதிய நாள் காத்திருக்கிறது. இது தினமும் நிகழும் ஒரு இயற்கை நிகழ்வு. ஆனால், உண்மை என்ன? நொடிக்கு நொடி எதுவுமே, பழசில் இல்லை. அது தன்னில் இருக்கும் பழசை உதிர்த்துக்கொண்டே, புதிதாக மலர்ச்சியை பெற்றுக்கொண்டே இருக்கிறது.

இந்த பூமி, நொடிக்கு ஆயிரம் மைல் வேகத்தில் சுழன்று, பதினைந்து லட்சம் மைல் தூரம் நகர்ந்து கொண்டே இருக்கிறது. இதை எதற்காக, இவ்வளவு தெளிவாக சொல்லப்படுகிறது என்றால், எதுவுமே புதிதாக மாறிக்கொண்டே, நிகழ்ந்துகொண்டே இருக்கையில், மனிதன், தன்னை பழசில் தான் இணைத்துக் கொண்டிருக்கிறான். அதை மாற்றிக்கொள்ள விருப்பமின்றி, அதிலே தங்கி நிற்கிறான். பிரபஞ்சத்தின் மலர்ச்சியோடு, தன்னை இணைத்துக் கொள்வதில்லை. இணைத்துக் கொள்ள விரும்புவதும் இல்லை.

ஒரு மழை பொழிந்து, ஓடுகின்ற மழைநீர், ஓடி மண்ணில், ஊறி, மறைந்துபோனால் அது மிக இயல்பானது. ஆனால் எங்கேயாவது, தேங்கி நின்றால், மண்ணும், நீரும் கலந்து, மற்றொரு வளர்ச்சிக்கு ஆளாகிவிடும். நீர் தேங்குதல், சிறு பூச்சிகள், புழு, கொசு என்று பலவித உயிர்களை தோற்றுவிக்கும். பாசம் பிடித்து சிறுசெல் பூச்சிகளும் உருவாகும். மனிதர்களுக்கு ஒவ்வாத பல பிரச்சனைகள் அங்கிருந்து உருவாகும். அதுபோலவே, மனிதன் தேங்கி நின்றால், பலவித உடல், மன பிரச்சனைகளுக்குள் சிக்குகிறான்.

முதலில் மன நலம் பாதிப்பும், அதன்வழியே உடல் பாதிப்பும், உடலுறுப்பு பாதிப்பும் நிகழும், அதேவேளையில் முதலில் உடல் பாதிப்பும், உடலுறுப்பு பாதிப்பும், அதன்வழியே மன நலம் பாதிப்பும் நிகழக்கூடும். மனித நோய்களின் அடிப்படை இதுதான். இதை வருமுன் காக்கவே உடற்பயிற்சி, மனித வாழ்வின் கலாச்சாரமாக உருவானது. அன்றாட வேலைகளும் கூட, உடற்பயிற்சிக்காகவே உருவாக்கமும் செய்யப்பட்டன. உடல் உழைப்பு இல்லாத மனிதன், நோய்க்கு இடம் தருகிறான் என்பது நிருபிக்கப்பட்ட உண்மை தானே?

உடலுக்குள் ஓடிக்கொண்டே இருக்கும் காற்று, வெப்பம், ரத்தம் இவற்றின் ஓட்டம் சீராக இருக்க வேண்டியது மிக அவசியம். அதற்கு ஈடாக, உடலுறுப்புக்கள் இயல்பாக, இயற்கையாக செயல்படும். இதற்கு வழியும், உறுதுணையும் தர, உடலை தகுந்த அளவில், இயக்குவதும் முக்கியம் அல்லவா? ‘நான் எதுவும் செய்யமாட்டேன். ஆனால் நான் நலமாக இருக்கவேண்டும்’ என்று நினைப்பதும், வாழ்வதும் எப்படி சரியாகும்? இந்த நிலையில்தான், வாழ்வில் உடற்பயிற்சி அவசியமாகிறது.

இப்படி மாற்றத்தை செய்யாமல், உடலில் சோர்வு, வலி, நோய் என்று வரும்பொழுதுதான், மரு உந்து என்ற மருந்து அவசியமாகிறது. உடலின் குறைபாட்டின் அடிப்படையிலே, மருந்தின் தன்மையும், வீரியமும், அளவும், எடுத்துக்கொள்ளும் காலமும் மாறுபடும். இந்த கருத்தின் மற்றொரு வகையில்தான், யோகம் என்பதும் உதவுகிறது. 

அடுத்த பதிவில் தொடர்ந்து காண்போம்.

வாழ்க வளமுடன்.

-

What is the purpose of the Human Birth? Why it is not spread worldwide?


பிறப்பின் நோக்கம் என்று சொல்லப்படுகிறதே? அது உண்மைதானா? அப்படியொன்று இருக்குமானால் அது ஏன் எல்லா மனிதர்களுக்கும் சென்று சேரவில்லை?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா! பிறப்பின் நோக்கம் என்று சொல்லப்படுகிறதே? அது உண்மைதானா? அப்படியொன்று இருக்குமானால் அது ஏன் எல்லா மனிதர்களுக்கும் சென்று சேரவில்லை?


பதில்: 

மனிதனின் பிறப்பு, பரிணாமம் என்பதை நவீன விஞ்ஞானம் ஏற்றுக்கொள்கிறது. அதன் ஆராய்ச்சியில், மனிதனும் கூட விலங்கினங்கள் போலவே வாழ்ந்து வந்திருந்த நிலையை, பல்வேறு அகழ்வாராய்ச்சி மூலமாக அறிந்துகொண்டது. உலகம் முழுவதும் அப்படியான கற்கால மனிதர்கள் வாழ்ந்திருந்தார்கள் என்றும் நிரூபணமும் செய்கிறது. இப்போது வாழ்ந்துகொண்டிருக்கும் ‘நம்முடைய’ வளர்ச்சி நிலையையும், சிந்திக்கும் ஆற்றலையும், இயற்கையை பயன்படுத்திக் கொள்வதையும், சில நேரங்களில் அந்த இயற்கைக்கு மாற்றாகவும் செயல்படுவதையும் ‘ஆறாவது அறிவு’ என்று எடுத்துக்கொள்கிறது இன்றைய நவீன விஞ்ஞானம்.

கனவாக கண்ட காட்சிகளை நிஜமாக்கிடவும் செய்கிறது, என்றாலும் சிலவற்றிற்கு விடை அறியமுடியாமல் தவிக்கிறது. மனிதர்களிடையே கலந்து உலவி வரும் கற்பனை கதைகளை அகற்றிடவும் செய்கிறது. நிலவுக்கும் மனிதர்களை அனுப்பி, நிஜமாக்கியது. அப்படியாக கோள்களை மட்டுமல்ல, சூரியன் முதலான எல்லா நட்சத்திரங்களை எல்லாம் ஆராய்ந்து உண்மை தெரிவிக்கிறது. பூமிக்கு மேலே துணைக்கோள் போலவே, ஒரு விண்வெளி கப்பல் (Internation Space Station) உண்டாக்கி, அதில் மனிதர்குழு பயணித்துக்கொண்டும், ஆராய்ச்சி செய்துகொண்டும் இருக்கிறதையும் நாம் அறிவோம். என்றாலும், மெய்ஞானத்தில் சொல்லப்படுகின்ற உண்மையினை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. ஆதாரம் கேட்கிறது.

விஞ்ஞானத்தின் பார்வையில், பூமியில் இருக்கும் நாம், பூமியின் ஈர்ப்பு விசையை ஆதாரமாகக் கொண்டிருக்கிறோம். இந்த பூமி, வான்வெளியில் தானும் சுற்றி, சூரியனையும் சுற்றி உருண்டு ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் சூரியனின் ஈர்ப்பு விசை என்று சொல்லுகிறது. இங்கே சூரியன், பூமி, நிலவு, சூரியக்குடும்ப கோள்கள், நட்சத்திரங்கள் எல்லாமே வான்வெளியில் மிதந்துகொண்டிருக்கிறதே? அது எப்படி என்று கேட்டல் அது ஒரு ஆற்றல் சக்தியினாலும், பிரபஞ்ச ஈர்ப்பினாலும் என்று சொல்லுகிறது. Matter and Gravity என்ற இரண்டுக்குமேல் விஞ்ஞானத்தில் பதில் ஏதும் இல்லை.

மெய்ஞானம் இதையெல்லாம் கடந்து, மூலமான ஆற்றல் எது? அது எப்படி இருக்கிறது? இந்த பிரபஞ்ச பரிணாமம் எப்படி உருவானது? அந்த பிரபஞ்சத்தில், உருவான சூரிய குடும்பத்தில் உள்ள, பூமியில் உயிரின பரிணாமம் எப்படி வந்தது? மனிதன் என்பவன் யார்? என்று உண்மை அறிந்த விளக்கம் கண்டது. அதை அறிவதற்கான வழியை யோகம் என்றது. ‘நான் யார்?’ என்ற கேள்வியோடு பயணிக்கச் சொன்னது. யோகம் புரியாதவர்களுக்கு பக்தியை வழங்கியது. மெய்ஞானம் கருத்துக்களால் ஆனது, விஞ்ஞானம் கண்களால் பார்க்கும் பொருளால் ஆனது. அதனால் விஞ்ஞானம், மெய்ஞான கருத்துக்களுக்க மதிப்பளிக்கவில்லை. பொய் என்கிறது.

ஆனால், உண்மை மறுப்பதால் மாறுவதில்லையே? விஞ்ஞானத்தின் மறுப்பு பரவலாகப்பட்டதால், மெய்ஞானத்தின் முழுமை விளக்கம், மனிதர்களிடம் பரவினாலும் மக்கள் அதை ஏற்று, உண்மை பெறவில்லை, ஒதுக்கிவிட்டார்கள்.

இதை வேதாத்திரி மகரிஷி அவர்கள் இப்படியாக விளக்குகிறார். ‘ஆறாவது அறிவைக் கொண்ட இந்த மனித வாழ்வின் நோக்கம் அறிவு முழுமை பெற வேண்டும். இயற்கையின் முழுமையை உணர வேண்டும்.  எந்தச் சக்தியிலிருந்து நாம் தோன்றி வந்து இயங்கிக் கொண்டிருக்கிறோமோ அந்த அடிப்படையை மனதால் உணர்ந்து அதோடு லயமாகி இணைந்து கொள்ள வேண்டும் என்பதேயாகும்.  இதுதான் பிறவியின் நோக்கம் (This and this alone is the purpose of life). போனபோக்கிலே பழக்கத்தின் வழியே நாம் சிக்கி, தேவை பழக்கம் சூழ்நிலையின் கட்டாயம் (நிர்பந்தம்) இந்த மூன்றினாலும் உந்தப்பட்டுச் செயல் செய்து கொண்டிருக்கிறோம்.  இவற்றிலிருந்து விளக்கம் பெற்று விளக்கத்தின் வழியே நாம் வாழ்க்கையை மாற்றி அமைக்க வேண்டுமானால் உடனடியாக விளக்கம் வராது.  பழக்கத்திலிருந்து உடனடியாக மாறிவிடவும் முடியாது’ என்கிறார்.

என்றாலும், மனிதர்களின் வாழ்வில், இயற்கையே வாய்ப்பு தந்து, உண்மை அறிக என்று சொல்லுகிறது. வெகு சிலர் அதை ஏற்று, உண்மை விளக்கம் பெற பயணிக்கிறார்கள். சிலர் கொஞ்ச காலம் கழித்து, நிச்சயமாக வருவார்கள்.

வாழ்க வளமுடன்.

-

Why are there so few teachings for life these days?


இந்தக்காலத்தில் வாழ்க்கைக்கான போதனைகள் குறைவாக இருக்கிறதே ஏன்?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, இந்தக்காலத்தில் வாழ்க்கைக்கான போதனைகள் குறைவாக இருக்கிறதே ஏன்?

பதில்:
இந்தக்காலத்தில் வாழ்க்கைக்கான போதனைகள் குறைவாக இருக்கிறதாக ஏன் உங்களுக்குத் தோன்றுகிறது? என்று எதிர் கேள்வி கேட்டால் உங்கள் பதில் என்ன? பொதுவாகவே அறிவுரையும், ஆலோசனையும் மிக எளிது என்று எல்லோரும் சொல்லுவார்கள். அதை சொல்லுபவர்களே கடைபிடிக்கிறார்களா என்பதும் சந்தேகமே!

ஆனால் மனித வாழ்க்கைக்கான தத்துவங்களும், உண்மைகளும், வழிமுறையாக தந்த போதனைகளும், தன்னையும், இயற்கையையும் உணர்ந்தறிந்த ஞானிகளால், மகான்களால், மேதைகளால் வழங்கப்பட்டது, இன்னும் வழங்கப்பட்டுக் கொண்டும் வருகிறது, அவர்கள் வழி நடக்கும் உயர்ந்தோர்களாலும், ஆசான்களாலும். நம் தமிழ்நாட்டில் சங்ககாலம் என்று சொல்லப்படுகின்ற கிட்டதட்ட ஆறாயிரம் ஆண்டுகளாகவே, வாழ்க்கை நெறிகள் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன. 

அவற்றையெல்லாம் தொகுத்தளித்த ‘தொல்காப்பியம்’ எனும் நூல் மூன்றாயிரம் ஆண்டுக்கால நிறைவை பெற்றிருக்கிறது. இவை எல்லாம், மன வாழ்வியலை இயற்கைக்கு ஒத்த தன்மையோடும், மதித்து வாழும் நிலையையும், மக்களோடு மக்களாக தானும் எப்படி வாழ்ந்து இன்பமே கண்டு நிறைவடையலாம் என்றும் வழி சொல்லுகிறது. தொல்காப்பியம் என்பது பல ஞானிகளில் கருத்துக்களை உள்ளடக்கிய தொகுப்பு என்றும் சொல்லுகிறார்கள். சித்தர்கள் வழங்கிய பல குறிப்புக்கள், மனித வாழ்க்கையை ஒழுங்கு செய்வது மட்டுமல்லாமல், மனிதனின் மூலமான உண்மையை அறியவும் வழி தருகிறது. அதை ஏற்கமுடியாதவர்களுக்கு பக்தி என்ற வழிமுறையையும் கொடுக்கிறது.

ஆசான் திருவள்ளுவர் இராயிரம் ஆண்டுகள் முன்பாக, பல்வேறு தலைப்புக்களில் வாழ்க்கை நெறிமுறைகளை தருவதை நாம் சிறுவயது பள்ளிப்பாடங்களில் இருந்தே அறிவோம். எனவே வாழ்க்கைக்கான போதனைகள் நிறைய, நிறைய, நிறைய இருக்கின்றன. ஆனால் நாம் அவற்றை ஏற்று, புரிந்து, வாழ்வில் பயன்படுத்துகிறோமா? என்பதுதான் சந்தேகத்திற்குறியது.

நீங்கள் இந்தக்காலத்தில் என்று சொல்லுகிறீர்கள், ஏன் மனிதன் ஒவ்வொரு காலமும் மாறிவிடுகிறானா? இல்லையே? அவன் வாழ்க்கை முறையும், பொருள் வயப்பட்ட, உயயோகப்படுத்தும் கால நிலைகளும், விஞ்ஞான முன்னேற்றமும் தான் மாறிக்கொண்டே வருகின்றன. மனிதன் உடல், மனம், உயிர், கற்றறிவு, அனுபவ அறிவு, குடும்பம், உறவுகள், சமூகம், உலகம், சராசரி வாழ்நாள் காலம் என்பதில் எந்த மாற்றமும் வருவதில்லையே.

ஆனால் நாம் என்ன நினைக்கிறோம் என்றால், வாழ்க்கைக்கான போதனை என்றால், எப்படி பணமும் பொருளும் பெறவேண்டும்? மகிழ்ச்சியை நீடித்து அனுபவிக்க என்ன வழி? என்ன செய்தாலும், எதை சாப்பிட்டாலும் நோயில்லாமல் வாழ்வது எப்படி? என்ன செய்தாலும் குறையில்லாமல் நீண்ட நாள் வாழ்வது எப்படி? இன்னும் பலப்பல, என்பதாகத்தான் எதிர்பார்க்கிறோம். அந்த எதிர்பார்ப்பதுதான் நம் குறையே தவிர, போதனைகளில் எந்தக்குறையும் இல்லை. சிந்தித்துப்பாருங்கள்!

வாழ்க வளமுடன்.
-

What is the way I can live without suffering?


வாழ்க வளமுடன் ஐயா, துன்பமில்லாது நான் வாழ்வதற்கு என்ன வழி?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, துன்பமில்லாது நான் வாழ்வதற்கு என்ன வழி?


பதில்:

இந்த உலகில் வாழும் மனிதன் மட்டுமல்ல, எல்லா உயிர்களுக்கும், இன்பமான வாழ்வுதான் கிடைக்கிறது. அதுதான் இயற்கையின் திட்டமாகவும் இருக்கிறது. ஏன் இங்கே இயற்கையை குறிப்பிடுகின்றோம்? இயற்கையின் வழியாக வந்த, பரிணாமத்தில் வந்தது தான் இந்த உலகம், அந்த உலகில் பரிணாமத்தால் உயிர்கள் உண்டானது. தாவரம் முதலான ஓரறறிவு முதல் ஐயறறிவு விலங்கினங்கள் வரை. அதன் பின்னும் அதன் தொடர்ச்சியாகத்தான் ஆறாம் அறிவாக மனிதனும் பரிணாமம் அடைந்தான். மனிதனின் பரிணாமத்தில் இயற்கையும் முழுமையை பெற்று நிறைந்தது. அதனால்தான் ஆறாம் அறிவுக்கு மேலான ஒன்று இல்லை, இவ்வுலகில்.

இப்படி வந்த உயிரினங்களில், மனிதன் மட்டுமே துன்பம் அடைகிறான் என்ற கருத்து நம் எல்லோருக்கும் உண்டு. முதலில் துன்பம் என்பது என்ன? என்று சிந்தித்தால், அதில் பலவகை வந்து நிற்கும். உதாரணமாக, உடலில் காயம், வலி, நோய், என துன்பம் வரலாம். மனதில் எழும் குழப்பாமான சிந்தனைகள், விரும்பத்தாகத நிகழ்வுகள், ஏமாற்றங்கள் வழியாக துன்பம் வரலாம். உங்களுக்கு என்ன வகையான துன்பம் என்பதை நீங்கள் தெளிவாகவும் சொல்லவில்லை. நீங்களே ஒரு நாள், தனியாக உட்கார்ந்து, என்ன வகையான துன்பம் எனக்கு இருக்கிறது? இது எதனால் வந்தது? என்றும் யோசித்துப்பார்த்து, வரிசையாக அதை எழுதுவைத்துக் கொள்ளுங்கள்.

பிறகு அதை படித்துப்பார்த்தால், சில உங்களுடைய எதிர்பார்ப்பினால் வந்த ஏமாற்றமாக இருக்கும். சில உங்களுடைய தவறான செயல்களால் உருவானதாக இருக்கும், சில அளவு முறை மீறியதால் வந்த விளைவாக இருக்கும். சில இயற்கையை மீறிய செயலுக்கான தண்டனையாக இருக்கும். சில மற்றவர்களுக்கு செய்த செயல்களால் கிடைத்த எதிர்விளைவுகளாக இருக்கும். சில ஏற்கனவே உங்கள் குடும்பத்தில் தொடர்ந்து வருவதாகவும் இருக்கும். இதில் கிடைத்திருப்பது எல்லாமே துன்பம்தான், நாம் புரிந்து கொள்ளாதவரை.

இந்த துன்பங்களின் உண்மை நிலையறிந்து, திட்டமிட்டு மாற்றி அமைத்துக்கொண்டால், இருக்கும் துன்பத்தில் இருந்து தீர்வு காணலாம், அதை விட்டு விலகலாம், அந்த துன்பங்கள் இனியும் எழாத வகையில் நம்மை பாதுகாத்தும் கொள்ளலாம். இதற்கு, வேதாத்திரியத்தில் அகத்தாய்வு, தற்சோதனை எனும் பயிற்சிகள் உதவும். துன்பத்திற்கு தீர்வும், வழியும் உங்களிடமே இருக்கிறது, அதை தேடிக்கண்டடைவதே உங்களுக்கான நோக்கமாக மாற்றிக் கொள்ளுங்கள்!

வாழ்க வளமுடன்.

-

What is Gnana in Tamil? How to get it?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, ஞானம் என்பது என்ன? அதை எப்படி பெறுவது?


பதில்:

ஞானம் பெறுதல் எப்படி என்றால், முதலில் உங்களுக்கு என்ன தேவை? எது எனக்கு வேண்டும்? எதில் நான் உயர்வடைய வேண்டும்? என்ற நோக்கமும், சிந்தனையும் வேண்டும். அதை நோக்கியே உங்கள் கவனம் இருக்கவேண்டும். மனம் ஒருமுகம் என்று கூட சொல்லலாம். அத்தகைய ஞானம் என்பதை குண்டலினி யோகத்தின் வழியாக பெறுவது ஒருவகை. வேறு சில வாழ்க்கைக்கு, அறிவுக்கு, வளர்ச்சிக்கு உதவம் கலைகள், பயிற்சிகள் வழியாகவும் பெறலாம் என்பதே உண்மை.

ஞானம் அடைந்தால் மோட்சம், முக்தி, அப்படி இப்படி என்ற கதைதான் இங்கே உலவுகிறது. ஞானம் ஒரு தனித்துவமான, சக்தியை வழங்குகின்ற, சக்தியை பெற்றுக்கொள்கின்ற நிலை அல்ல என்பதை முதலில் தெளிவு செய்து கொள்க. ஞானம் என்பது உங்கள் அனுபவத்தில், வளர்ச்சியில், ஆராய்ச்சியில், காலத்தால் பெறக்கூடிய ஒரு நிலைதான். அந்த நிலையை அடைந்தவர்களை, அதாவது ஞானத்தில் நிலை பெற்றவர்களை, ஞானி என்று அழைக்கின்றோம் அல்லது அழைக்கப்படுகிறார்கள்.

ஞானம் என்றால், உண்மையை அறிந்த நிலை என்று அர்த்தமாகும். இறைஞானம் என்றால், இறை என்ற உண்மையை அறிந்துகொண்ட நிலை என்று பொருளாகிறது. கேள்விஞானம் என்றால் கூட, கேள்விகளாக சிந்தித்து, உண்மையை அறியக்கூடிய தன்மை அல்லது நிலை என்று பொருளாகும். ஞானம் என்பது, அக்காலம் முதல் இக்காலம் வரை, உணமை அறியாதோரால் கட்டமைக்கப்படும் அதிசயமானது ஒன்றல்ல. 

முக்கியமாக, வெற்று வார்த்தைகளால் விளங்கிக் கொள்வது ஞானம் அல்ல. மனப்பூர்வமாக, மனமே மலர்ந்து, விரிந்து, இறையுண்மையில் திளைத்த நிலையில் உங்களுக்கு கிடைப்பதுதான் ஞானம். ஒருவேளை உங்களுக்கு வார்த்தையில் கிடைத்தாலும், அந்த உண்மை தன்மை நோக்கி நகர்ந்து அதை உணரவேண்டும். 

குண்டலினி யோகத்தின் வழியாக நாம் பெறுகின்ற ஞானம், இறை ஞானம் ஆகும். இதற்கு தகுந்த குருவின் வழிகாட்டல் வேண்டும், அவர்மூலமாக தீட்சையும், தவசாதனையும் பெற்று கற்றுத்தேரவேண்டும். நம்முடைய முயற்சி, பயிற்சி, ஆர்வம், ஆராய்ச்சி ஆகியவற்றின் வழியாக, ஞானம் பெறுதல் கைகூடும்.

வாழ்க வளமுடன்.


The other side of man - Part 01



ந்த சமூகத்தில் ஆளுமை கொண்ட நபர்கள், தன் திறமையினால், தங்கள்படைப்புக்களால் மட்டுமே. இப்படியான நபர்கள், மக்களிடத்தில் எந்த பிம்பத்தையும் ஏற்படுத்துவது இல்லை என்பது உண்மைதான். ஆனால் சகமனிதனான “இவன்” இப்படியெல்லாம் படைக்கிறானே! என்றொரு பெருமிதமும், மகிழ்ச்சியும், உத்வேகமும், பாராட்டும் நல்ல குணமும் உருவாவது இயல்புதானே?!

ஆனால், தன்னைக்காட்டும் நிலைக்கண்ணாடிக்கும் மறுபக்கம் உண்டு என்று சொல்லுவார்கள் தானே. அப்படி, ஓவ்வொருவருக்கும் ஒரு மறுபக்கம் அல்லது மறுமுகம் உண்டு. மறு மனிதன் என்றுகூட சொல்லலாம். அந்த மறு மனிதன் எப்படிப்பட்டவன் என்ற கருத்து நம்மால் முன்கூட்டியே அனுமானிக்க இயலாது.

இதென்ன ஆணுக்கு மட்டும்தானா? இல்லை பெண்களுக்கும் உண்டுதான், ஆனால் இங்கே ஆண்கள் மட்டுமே உதாரணம் கொண்டு சிந்திப்போமே.

என்னுடைய நண்பர், சித்தூர் முருகேசன் ஜோதிட வல்லுனர். இயல்பான வாழ்க்கையில் எதையும் கடந்து செல்ல எளிய வழியை சொல்லுபவர். தன்னிடம் ஜாதகம் தந்து பலன் கேட்க விரும்புவோருக்கு சொல்லும் வழி என்ன தெரியுமா? என் மின்னஞ்சலுக்கு உங்கள் ஜாதக விபரம் அனுப்புங்கள். அல்லது தபால் மூலமாக என் முகவரிக்கு அனுப்புங்கள். தயவு செய்து என்னை நேரில் வந்து பார்த்து, பலன் தெரிந்துகொள்ளவேண்டும் என்று அடம்பிடிக்காதீர்கள். உங்கள் நல்லதுக்குத்தான் சொல்லுகிறேன். நீங்கள் இப்படி, அப்படி என்று கற்பனை செய்து வைத்திருக்கும் பிம்பத்திற்குள் நான் சிக்கமாட்டேன். அதனால் உங்களுக்கு ஏமாற்றம் வரும். அதனால் நேரில் வரவேண்டாம் அது அவசியமும் இல்லை என்று அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பார். 

காரணம் “தனக்கு தானாக அவரைப்பற்றி, இவர்கள் கட்டிக்கொண்ட பிம்பம்தான்”

//அந்த மறு மனிதன் எப்படிப்பட்டவன் என்ற கருத்து நம்மால் முன்கூட்டியே அனுமானிக்க இயலாது.// ஏற்கனவே சொன்னது போலவே, இந்த பிம்பக்கணக்கு எப்படி நிகழ்கிறது? இதுவரை ஒருவரின் செயலுக்கும், அவரின் தன்மைக்கும் ஏற்படுத்திக்கொண்ட முடிச்சுத்தான்.  “வெள்ளையாக இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான், குண்டாக இருப்பவன் சூதுவாது அறியாதவன்” இப்படியெல்லாம் பொதுவாக சொல்லுவோம் அல்லவா?! அதுதான் இந்த முடிச்சு.

ஆளைப்பார்த்து, ரகம் பிரிப்பதும், மதிப்பளிப்பது என்றும் சரியாக இருந்ததில்லை. அன்பே சிவம் திரையின் வசனம் போல, “தீவிரவாதி என்பவன் என்னைப்போல கொடூரமுகத்தோட இருக்கனும்னு அவசியமில்லை, உங்களைப்போல அழகாகவும் இருக்கலாமே” 

இந்த முடிச்சால் உருவான பிம்பம் உடையும்போது, இவனால் மதிக்கப்பட்ட அந்த மனிதர் கீழே இறக்கப்படுகிறார், கேலியும் கிண்டலும் செய்யபடுகிறார் அல்லது இவனெல்லாம் ஒரு மனிதனா? என்று தாழ்த்தியும் விடப்படுகிறார்.

இசைஞானி இளையராஜா அவர்கள், என்று சொன்னதுமே,  இங்கே இரு நிலைப்பாடுகள் வந்திருக்கும்தானே?! மொத்த கூட்டத்தில் ஒருபாதி, இருபாதியாக பிரிந்து வம்பு இழுத்துக்கொண்டிருப்பது இப்போதும் சமூக வலைத்தளங்களில் காணமுடியும். விஜய் டிவியில், நீயா நானாவில் ஒரு அன்பர், “எனக்கு பொழுதுபோகவில்லை என்றால், இளையராஜாவை போற்றி, பாராட்டி, தூக்கிப்பிடித்து ஒரு டிவிட் போடுவேன், அப்படியே பத்திக்கும்” என்று சொன்னது ஞாபகமிருக்கிறது.

ஒரு தனிநபராக, உலக அளவில் ஓவியனாக வேலைகளை அவ்வப்பொழுது வாங்கி, பிழைப்பை ஓட்டிக்கொண்டிருக்கும் எனக்கே கூட இப்படியான, முடிச்சால் உருவான பிம்பம் உருவாக்கி விட்டிருக்கிறார்கள். “நீ என்னாய்யா இப்படி வேகமா பேசுறே, ஒன்னுமே புரியலை” என்று சொல்லியிருக்கிறார்கள். அந்த முடிச்சை அவிழ்க்க நான் படாதபாடு பட்டேன், பட்டுக்கொண்டும் இருக்கிறேன்.  

ஆனால் நானே கூட அப்படியான முடிச்சு பிம்பத்தை உருவாக்கியும் வைத்திருக்கிறேன் என்பது கொடுமை. அதில் சில உதாரணங்களை காண்போம். ஒருவர், இளையராஜா, இன்னொருவர் பி.சி ஸ்ரீராம்.

அடுத்தபதிவில் சந்திப்போம்.