CJ for You: medical advice from doctor

medical advice from doctor

Showing posts with label medical advice from doctor. Show all posts
Showing posts with label medical advice from doctor. Show all posts

Why some of disease and problem not cure by the simplified exercise?


சில உடல் உபாதைகள், நோய்கள் எளியமுறை உடற்பயிற்சியால் குணமாகவில்லையே? காரணம் என்ன?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, சில உடல் உபாதைகள், நோய்கள் எளியமுறை உடற்பயிற்சியால் குணமாகவில்லையே? காரணம் என்ன?


பதில்:

அன்பரே, உங்களுடைய வயது தெரியவில்லை, எப்போது முதல், இந்த வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சி செய்து வருகிறீர்கள்? ஏற்கனவே உங்களுக்கு என்ன மாதிரியான உடல் உபாதைகள், நோய்கள் இருந்தன? எந்தவகையான மருந்துகள் எடுத்துக்கொண்டீர்கள்? சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி, இயற்கை வைத்தியம், மூலிகை வைத்தியம், யுனானி, அலோபதி இப்படி எந்தப் பிரிவு மருத்துவரின் ஆலோசனைகளை ஏற்று கடைபிடித்து வருகிறீர்கள்? அதன் விளைவு, மாற்றம் எப்படி இருக்கிறது? இருந்தது? மருத்துவம் தொடர்கிறதா? நிறுத்திவிட்டீர்களா? 

நீங்கள் தினமும் வேதாத்திரியம் வழங்கும் எளியமுறை உடற்பயிற்சி செய்து வரவேண்டும் என்பதே அதன் பலன் தருவதின் சிறப்பாகும்.  அப்படி அதனை தொடர்ந்து வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சி செய்து வருகிறீர்களா? என்பதான இத்தனை கேள்விகளுக்கும் பதில் தெரியவில்லை. அதை நீங்களே ஒரு ஆராய்ச்சி குறிப்பாக எழுதி தயாரித்து, நேரடியாக ஆசிரியரிடம் கேட்டும் உண்மை அறியமுடியும்.

நிச்சயமாக, வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சியின் வழியாக பலன்கள் செய்துவருவதால் மட்டுமே கிடைக்கும். குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் அதை, எளியமுறை உடற்பயிற்சியை வடிவமைத்த பொழுது, அந்தந்த பயிற்சிகளை மற்றவர்களோடு பகிர்ந்து, செய்யச்சொல்லி, மாற்றத்தை கணித்து, தானும் செய்து பார்த்து விளைவுகளை கண்டு, பயிற்சியிலும் தேவைப்படும் மாற்றத்தை ஏற்படுத்திக்கொண்டார். தன் வாழ்நாள் முழுவதும், 96 வயது வரையும் இதை கடைபிடித்தார். தன்னோடு இருக்கும் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளையும் ஏற்றுக்கொண்டும் திருத்தி அமைத்தும்  கொண்டார்.

பொதுவாகவே இளமைக் காலத்திலும், பருவம் வந்த வயதுகளிலும், மனமும், உடலும் மிக மிக உற்சாகமாக இருக்கும். உறக்கமும் மிகச்சரியாக இருக்கும். இருபது வயதை கடந்து, உலக கடமைகளில் நம்மை இணைத்துக்கொண்டு பயணிக்கும் பொழுது, உணவாலும், அதிக உழைப்பாலும், தூக்கமின்மையாலும், அன்றாட இன்ப நுகர்வுகளாலும், ஓயாத சிந்தனையாலும் நம்முடைய உடலும், மனமும் கெடுகின்றது. தானாகவே நோயை வரவழைத்துக் கொள்கிறோம். மேலும் வித்துவழியாக பரம்பரை நோய்களும் நம்மிடம் எட்டிப்பார்க்கிறது. நம்மைச் சுற்றியுள்ள சுழல், கிரகங்களின் அலைத்தாக்கம், தொற்று நோய்கள் வழியாகவும் பாதிக்கப்படுவோம்.

இவ்வளவுக்கும், துணையாக நிற்கும் தீர்வு என்றால், பருவ வயதில் வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சி கற்றுக்கொண்டால் சிறப்பு. உடல் உபாதை, வலி, பிரச்சனைகள், நோய்கள் எல்லாம் உருவாகி நம்மை வருத்தி, அதனால் மருத்துவ ஆலோசனை பெற்று, மருந்துகள் எடுத்துகொண்டிருக்கும் நிலையில், வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சி செய்து வந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று நினைப்பது தவறு. வருமுன் காப்பதும், வந்ததை ஓரளவில் தடுத்துக் கொள்வதுமே நன்று. இடைப்பட்ட காலத்தில், 30, 40 வயதுகளில், வயோதிகத்தில் நம்மால் இதைத்தான் பெறமுடியுமே தவிர, முற்றாக நோயை தீர்க்க முடியாது. ‘குணப்படுத்துவதை விடவும், தடுப்பதே சிறப்பு’ என்று மருத்துவ சொல் இருக்கிறது. 

உண்மையாக, நீங்கள் எதிர்பார்ப்பு ஏதுமின்றி, வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சி செய்து வாருங்கள். உங்களுக்கான உடல் உபாதை, வலி, பிரச்சனை, நோய்க்கான மருந்து என்னவோ அதையும் எடுத்துக்கொள்ளுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக மாற்றத்தை பெறுவீர்கள் என்பது உறுதி!

வாழ்க வளமுடன்.

Is any solution on simplified exercise for weight loss and body heat?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, உடல் எடை இழப்பு ஆகிறது, அடிக்கடி உடல் சூடும் ஆகிறது. இதற்கு எளியமுறை உடற்பயிற்சி உதவிடுமா?


பதில்:

உங்கள் உடலின்மேல் அக்கறை வந்தது மிகப்பெரிய விசயம். அதற்காக உங்களை பாராட்டலாம். உடல் எடை இழப்பு அடிக்கடி நிகழ்வது தவறு. இதற்கு நீங்கள் உண்ணும் உணவின் தன்மையில் மாறுபாடுகள் இருக்கலாம். உணவின் விஷத்தன்மையால், செரிமான உறுப்புக்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம். மேலும் உடல் சூடு என்றும் சொல்லுகிறீர்கள். சூடு எப்போது ஒரு அளவோடுதான் இருக்கவேண்டும். அதன் சராசரி வெப்ப அளவு 98.6 டிகிரி ஃபாரன்ஹீட் (37 டிகிரி செண்டிகிரேட்) என்று சொல்லுவார்கள். அது அதிகமாகிறது என்றால், உடலில் காற்றோட்டமும், இரத்தஓட்டமும் தடையாகி உள்ளது என்பதை உணர்த்துகிறது.

இதற்கு தீர்வாக, எளியமுறை உடற்பயிற்சி பலனளிக்கும் என்று உடனடியாக சொல்லிவிட முடியாது. ஏனென்றால், எளியமுறை உடற்பயிற்சியின் முக்கிய நோக்கமே, வருமுன் காப்பதுதான். எனவே, முதலில் ஒரு தேர்ந்த மருத்துவரை அணுகி, உங்கள் உடல் நிலைமையை சொல்லி அதற்கான ஆலோசனை பெறுக. அவர் தருகிற மருந்துகள் வழியாக, இருக்கும் உடல் பிரச்சனைக்கு தீர்வு கண்டு, அதற்குப்பிறகு, அதாவது ஓரளவு, உங்கள் உடல் நலம் தேறிய பிறகு, எளியமுறை உடற்பயிற்சியை ஆரம்பிக்கலாம்.

பொதுவாகவே நாம் வாழும் இந்த சூழலில், உடலில் காற்றோட்டம், வெப்பஓட்டம், இரத்தஓட்டம் (வாதம், பித்தம், கபம்) ஆகிய மாறுதலுக்கு உண்டாகிறது. அதை மிகச்சரியாக தக்கவைக்க, வேதாத்திரி மகரிஷி அவர்கள் வழங்கிய எளியமுறை உடற்பயிற்சி உதவுகிறது. ஆனாலும், நோய்தன்மை வந்துவிட்டால், அதற்குறிய மருத்துவ ஆலோசனையும், மருந்துகளை எடுத்துக்கொண்டுதான் சரி செய்யவேண்டும். அதுதான் உடனடி தீர்வாக அமையும்.  உங்கள் உடல் நலம் பெற வாழ்க வளமுடன் என வாழ்த்தி மகிழ்கிறேன்.

உங்கள் மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகு,  எளியமுறை உடற்பயிற்சியில் கைபயிற்சி, தொடர்ந்து, கால்பயிற்சி, நரம்பு தசை நார் மூச்சுப்பயிற்சி, கண்பயிற்சி, கபாலபதி, மகராசனம், உடலை தேய்த்து விடுதல், அக்குபிரஷர், உடல் தளர்த்தல் ஆகிய எல்லா பயிற்சிகளையும் செய்துவரவும், பலன் கிடைக்கும்!

வாழ்க வளமுடன்.