CJ for You: medicine

medicine

Showing posts with label medicine. Show all posts
Showing posts with label medicine. Show all posts

Even if I take good care of my body by exercising, some problems keep coming up. What could be the reason for this? Some medicines don't work.


வாழ்க வளமுடன் ஐயா.  என் உடலை நல்ல வகையில், உடற்பயிற்சி செய்து காத்து வந்தாலும் கூட ஏதேனும் பிரச்சனைகள் வந்துகொண்டே இருக்கின்றன. இதற்கு என்ன காரணமாக இருக்கும்? சில மருந்துகளும் தீர்வு தரவில்லையே? விளக்கம் தருக.


    நீங்கள் உடற்பயிற்சி என்று மட்டும் சொல்லி இருக்கிறீர்கள். எனினும், என்னிடம் கேள்வியாக கேட்ட காரணத்தால், அது வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சியாகவே இருக்கும் என்று நம்புகிறேன். இதற்கு விளக்கம் தரும் முன்பாக, நான் சில கேள்விகளை உங்களிடம் கேட்க வேண்டுமே? சரியா? அந்த கேள்விகள் இதுதான்.

  • உடற்பயிற்சி என்றைக்கு இருந்து தொடங்கினீர்கள்? என்பது மிக முக்கியமான கேள்வியாகும்.
  • இந்த வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சி தொடங்குவதற்கு முன்பாக, என்ன நிலைமையில் உங்கள் உடல் இருந்தது?
  • இதற்கு முன்பாக ஏதேனும், உடல் பிரச்சனைக்காக மருந்து எடுத்துக்கொண்டீர்களா? இல்லையா?
  • தேவையான மருத்துவரின் ஆலோசனைகளை ஏற்றுக்கொண்டீர்களா?
  • நீங்களாகவே ஏதேனும் நண்பரின் ஆலோசனை தொடர்கிறீர்களா?
  • வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சியை தொடர்ந்து செய்துவருகிறீர்களா?

இந்த கேள்விகளுக்கு நீங்களே பதிலை, தனியே எழுதிக் கொள்ளுங்கள். இப்போது இதற்கான பதிலை நானே யூகித்து அதற்கான விளக்கமும் தந்துவிடுகிறேன்.

வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சியின் பலன்கள் பொதுவாக, நல்ல நிலைமையை நமக்கு உணர்த்தவும், அதை அறியவும், குறைந்தது ஒன்று முதல் மூன்று மாதங்கள் வரை காத்திருக்கவேண்டும். ஒருநாளில், ஒருவாரத்தில் முன்னேற்றம் என்பதெல்லாம் தவறான கருத்தாகும்.

ஏற்கனவே உடல் பாதிப்பு, உடலுறுப்பு பாதிப்பு இருந்தால், வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சி செய்த உடனே சரியாகிவிடும் என்று யாருமே சொன்னதில்லை. அப்படி நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் அதுவும் தவறான கருத்தாகும்.

உங்கள் உடலின் பிரச்சனை கருதி, மருத்துவரின் ஆலோசனையில், மருந்துகள் எடுத்துக்கொள்வதுதான் சிறப்பு. யாரோ சொன்னார்கள், உயிருக்கு உயிராக பழகும் நண்பர் சொன்னார் என்பதெல்லாம் சரிப்பட்டு வராது. அது உங்களை மேலும் சிக்கலில் சிக்கவைக்கும். உடல் மேலும் பாதிப்படையலாம். அதனால் தவிர்க்கவும். மருத்துவரின் ஆலோசனை ஒன்றே மிகச்சிறந்த வழியாகும்.

வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சியை, தினமும் அதிகாலை 4:30  மணி முதல் 7:30 மணிக்கு முடிக்கலாம். அதிகபட்சமாக காலை 11:00 மணி என்பதுவரை சரிதான். ஆனால், வெறும் வயிற்றில் என்பதும் முக்கியமானது. நொறுக்குத்தீனியும், Tea, Coffee என்று நிரப்பிய வயிறுடன் செய்வது, உடற்பயிற்சி ஆகாது. அதுப்போலவே மாலையில் உடற்பயிற்சி என்பது அவசியமில்லை. காலையில் ஒரு நேரத்தில், ஒருநாளைக்கு ஒரு முறை செய்தால் போதுமானதுதான். ஒருநாள் விட்டு ஒருநாள், வாரத்தில் ஒருநாள், கிடைக்கும் நேரத்தில் ஏதோ ஒருநாள் என்று வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சி செய்துவந்தால், அதன் பலனை நாம் எதிர்நோக்கிடவும் வழியில்லை.

அடிப்படையில் உங்கள் உடல்போல இன்னொருவருக்கு இருப்பது இல்லை. ஓவ்வொருவருக்கும் தனித்தனி தன்மை இருக்கிறது. பொதுவான உடற்பயிற்சிகள் ஒவ்வொன்றும் வித்தியாசமானவை. ஆனால், வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சி முற்றிலுமாக, எல்லா வயதினருக்கும், எல்லா அன்பர்களுக்கும் பொருத்தமானது. மேலும் 14 வயது சிறுவர் சிறுமியும் செய்துவரலாம். முதுமையிலும் செய்ய முடிந்தவர்கள் செய்யலாம், எல்லோருக்குமான மாற்றம் பொதுவானதே ஆகும். அத்தகைய சிறப்பு வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சியில் உண்டு.

எனவே நீங்கள், உங்கள் ஆசிரியரை சந்தித்து, உங்கள் நிலைமையை சொல்லி நேரடியாக ஆலோசனை பெறலாம். வாய்ப்பிருந்தால் என்னையும் நீங்கள் சந்திக்கலாம். உங்களுக்காக, ஒரு காணொளி பதிவை தருகிறேன், மேலும் பல விளக்கங்களை அறிந்து கொள்க.

உடலில் நோய் உருவாக முக்கிய காரணம் என்ன? உண்மை விளக்கம் - Main cause of disease in the body?

வாழ்க வளமுடன்.

-

Can Yoga Bring Physical and Mental Health? Doesn't medication solve that? Part 02


உடல் நலம், மன வளம் யோகத்தால் கிடைத்துவிடுமா? மருந்துகள் அதை தீர்க்காதா? உண்மை என்ன? Part 02


இயக்கம் என்பது, இந்த பிரபஞ்சத்தில் எப்படி இருக்கிறதோ, அதுபோலவே, அந்த பிரபஞ்சத்தில் இருக்கிற எல்லாமே, அதனுள் அடங்கிய எல்லாமே, இயங்கிக் கொண்டிருக்கிறது. கல் மண் உலோகம் போன்ற ஜடப்பொருளும் அணுக்கூட்டங்களால் இயங்குகிறது. அதுபோலவே, மரமும், புழுவும், எல்லா உயிரினங்களும், மனிதன் உட்படவும் அணுக்களின் கூட்டே. அவ்வணுக்களும் இயங்கிக் கொண்டே இருக்கிறது. இதை இயற்கை. அந்த வகையிலேதான், ஜீவன்களின் உடலுறுப்பும் இயங்கிக்கொண்டே இருக்கின்றன. மனிதனைத்தவிர, மற்றெல்லா உயிரினங்களும், தன் இயற்கை இயல்பை விட்டுவிடவில்லை. இன்னும் மாறாமல், இயற்கையோடு உறவாடிக்கொண்டு, அந்த இயற்கை நீதிக்கு பொருத்தமாகவே வாழ்கின்றன.

மனிதன், ஆறாவது அறிவின், சிந்தனை எழுச்சியால், பலவகைகளில் உந்துதல் பெற்று, இயற்கையின் எல்லைகளை மீறிவிடுகிறான். இதனால், தன்னை வித்தியாசப்படுத்திக் கொள்கிறான். பிரபஞ்சத்தின், இயற்கையின் ஒருபகுதி நான் என்பதை அறியாமல், தானே உயர்வானவன் என்ற தன்முனைப்பு கருத்துக்கு வந்துவிடுகிறான். இக்கருதாக்கம், அவனை, இயற்கைக்கும், பிரபஞ்சத்திற்கும் விரோதமாக செயல்பட வைக்கிறது எனலாம். மனிதனின் ஆறாம் அறிவின் எழுச்சி, மனித பரிணாமத்தின், வளர்ச்சிக்கும் உதவுகிறது என்பதில் ஐயமில்லை. ஓவ்வொரு நாளும், விஞ்ஞானமும், மருத்துவமும், வானியலும் வளர்ந்துகொண்டே இருக்கிறது. கடல் நீர் சூழ்ந்த நிலப்பரப்பில், எல்லா உயிரினங்களும், எல்லைகளற்று இருக்கையில், மனிதன், தான் வாழும் நிலப்பரப்பிலும், தன் மனதிலும் எல்லைகளை வகுத்துக்கொண்டு வாழ்ந்து வருகிறான். இந்நிலை மாறிடவே, சித்தர்களும், யோகியரும், மகான்களும் முயன்றார்கள். பக்தியிலும், யோகத்திலும் மனிதனை உயர்த்திட வழி காட்டினார்கள், இன்னும் வழி காட்டிக்கொண்டே இருக்கிறார்கள். வேதாத்திரி மகரிஷி, தன் வாழ்நாளில், உலக சமாதனமும், ஓர் உலக கூட்டாட்சியும் அமையவேண்டும் என்ற நோக்கத்தோடு வாழ்ந்து, அதற்கான வழிமுறைகளையும், திட்டங்களையும் வகுத்துத் தந்தார். இன்னும் நூற்று ஐம்பது ஆண்டுகளில் நிழந்திடும் என்றும் உறுதி அளித்திருக்கிறார்.

மனிதனின், இயற்கையை மீறிவிட்ட வாழ்க்கை முறைதான், அவனுக்கு பலவித தொல்லைகளை உருவாக்குகிறது. மனம் இதனான மனிதன், அந்த இதம் என்ற அமைதி, பொருத்தம், நிலைபாடு, சமநிலை ஆகியவற்றை இழந்துவிட்டான் என்று சொல்லலாம். ஆனால், மனிதனை மனிதனே இப்படி சொல்லிக் கொள்ளலாமா? என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது. பொதுவாக, ஒரு மனிதன், தன்னுடைய உடல், மனம், உயிர் இயக்கத்தால்தான் வாழ்கிறான். ஆனால் உடல் இயக்கம் ஏதுமில்லாமல், வெறுமனே வாழ தயாராகிறான். மனமும், உயிரும் இயற்கையாக இயங்கும் பொழுதும், உடல்சார்ந்த உறுப்புக்களும்  இயற்கையாக இயங்கும் பொழுதும், உடல் இயக்கம் இல்லாது தடுமாறுகிறான். இதனால் உடலும் கெட்டு, உடலுறுப்பும் கெட்டு, வாழ்நாளை சுருக்கிக் கொள்கிறான்.

அக்கால மருத்துவ முறைகளும், இயற்கை மருத்துவமும், பாரம்பரிய மருத்துவமும், நவீன மருத்துவமும் உதவினாலும்கூட, மனிதனுக்கு முழுமையான தீர்வு இல்லை. உடலையும், உடலுறுப்பையும் தானாகவே சரி செய்திடும் அமைப்பும், சிறப்பும், இயற்கையாகவே உண்டுதான் எனினும், அதற்கான வாய்ப்பை மனிதன் இழக்கிறான். இயற்கையின் வினை விளைவு நீதி தெரியாமல், தானாகவே வலிந்து போய், சிக்கிக் கொள்கிறான். முக்கியமாக, மனிதனான, தன்னுடைய பிறப்பின் உண்மையை, அதிசயத்தை, பெருமையை, சிறப்பை, மகத்துவத்தை அறியாமலேயே, என்ன என்று புரிந்து கொள்ளாமலேயே, அதை உணராமலேயே இறந்தும் விடுகிறான். இதில் வேடிக்கை என்னவென்றால், பிறந்தவர் இறப்பார் என்று தத்துவத்தை அவனே சொல்லிக்கொள்வான். பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் கொஞ்ச காலம் நிலைத்திருக்கும், வாழ்நாளையும், வாழ்க்கையையும் ஆராய்ந்திட மாட்டான்.

இதனால், மருந்துகள் அவனுக்கு உதவாத நிலையை அடைந்துவிடுகிறான். எதாவது பிரச்சனை என்றால், பாதிக்கப்பட்ட அந்த உறுப்பை அகற்று என்பது, வழக்கமான மருத்துவ முறையாக வந்து நிற்கிறது. மருந்துகளால் சரி செய்யப்படுகின்ற, ஆரம்பகால கவனிப்பும், அக்கறையும் மனிதனுக்கு தெரியவில்லை. அதை மறந்தும் விட்டான்.  இயற்கையாக சரி செய்துகொள்ளும் வழக்கமும், பழக்கமும் கூட அவனுக்கு இல்லை. இந்த நிலையில்தான், யோகம் அவனுக்கு உதவ துணை நிற்கிறது எனலாம்.

யோகம் என்பது, மனதை செம்மைபடுத்தும் ஓர் பயிற்சி. வேதாத்திரி மகரிஷி மிகப் பொருத்தமாக, மனவளக்கலை என்ற தமிழாக்கத்தை அதற்கு தந்திருக்கிறார். இதுவரை மனிதன் விட்டு விலகிய பாதையில், அவனை அழைத்துச் செல்வதற்கு, யோகம் மட்டுமே உதவும். ‘தேடுவதை விட்டுவிட்டால், தேடும் பொருள் அங்கேயே இருக்கும்’என்று, உண்மை விளக்கமாக, வேதாத்திரி மகரிஷி சொல்லுகிறார். இன்னொரு உதாரணமாக, தேவையற்ற பகுதிகளை, ஒரு பாறையில் இருந்து, அகற்றும் பொழுதுதான், அந்த பாறையின் உள்ளாக, மறைந்திருந்த சிலை, வெளிப்படுகிறது. அதுபோல, தவறுகளை திருத்திவிட்டால், இயல்பு அங்கே இருப்பதை அறியலாம். அதை காத்தும் வரலாம்.

மனவளக்கலை யோகமும், அதன் வழியாக தரும் எளியமுறை உடற்பயிற்சியும், இருக்கும் நோய்க்கும், பாதிக்கப்பட்ட உடலுறுப்புக்கும் தீர்வு அல்ல. ஆனால் வருமுன் காப்பதில், அதற்கு நிகர் ஏதுமில்லை என்பதை புரிந்து கொள்ளலாம். நீங்கள், அன்றாட வாழ்வுக்கு வாங்கும் பொருளை, கவனமாக கையாண்டால், வாழும் நாள்வரை உபயோகிக்கலாம் அல்லவா? அதுபோலவே, உங்கள் உடலையும், உடலுறுப்பையும் காத்துவந்தால், உங்களுடைய வாழ்நாள் முழுவதும் நிறைவாக வாழலாம். இதனாலேயே, பருவம் வந்த அனைவருமே, மனவளக்கலை யோகம் மற்றும் எளியமுறை உடற்பயிற்சி கூடுதலாக காயகல்பம் கற்ற வேண்டும் என்று, வேதாத்திரி மகரிஷி வலியுறுத்துகிறார்.

வேதாத்திரி மகரிஷியின் வாழ்க்கையை, பெரும்பாலும் ஆராய்ச்சிக்கே பயன்படுத்தினார். காயகல்ப யோகம் எனும் பயிற்சியை, அவர் முழுமையாக்கிய பொழுது, ‘இதன் முழுமை எனக்கு இப்போதுதான் கிடைத்தது, முன்னமே கிடைத்திருந்தால், நானும் அப்பொழுதே கற்றிருப்பேன்’ என்று சொல்லியிருக்கிறார். அப்படி கிடைத்த அற்புதமான பயிற்சியை, நாம் கைவிடுகிறோம். செய்ய நேரமில்லை என்று ஒதுக்கி தள்ளுகிறோம். 

இனியும் வருத்தம் தேவையின்றி, ஒரே முடிவாக, நீங்கள் எந்த வயதினராக இருந்தாலும், யோகத்தில் இணைந்து கொள்ளுங்கள். பயிற்சிகளை தொடருங்கள். உங்களுக்கும், இயற்கைக்கும் உள்ள இணைப்பை உறுதி செய்யுங்கள். முரண்படாத வாழ்க்கையை வாழத் தொடங்குங்கள். சிலநாட்களில் விளக்கமும், உறுதியும் பெறலாம். உடல் நலம், மன வளம் யோகத்தால் கிடைத்துவிடுகிறது என்ற உண்மையை, நீங்களே அறிந்து கொள்ளலாம்.

வாழ்க வளமுடன்.

Can Yoga Bring Physical and Mental Health? Doesn't medication solve that? Part 01


உடல் நலம், மன வளம் யோகத்தால் கிடைத்துவிடுமா? மருந்துகள் அதை தீர்க்காதா? உண்மை என்ன? Part 01


வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதனுக்கு, ஒவ்வொரு நாளும் புதிது. இந்த ஒருநாள் என்பது, அவன் தூங்கத்தில் இருந்து விழுத்து எழுவதை சொல்லலாம். ஆர்பரித்த புயல், அடங்கி அடுத்ததாக ஒரு புதிய ஆர்பரிப்புக்கு தயாராவது போல, மனிதன் ஒருநாளில் களைத்து, சோர்ந்து, தூங்குகிறான், தூங்க முயற்சிக்கிறான். மறுநாளில் கண்விழித்து எழுகிறான். அவனுக்கான புதிய நாள் காத்திருக்கிறது. இது தினமும் நிகழும் ஒரு இயற்கை நிகழ்வு. ஆனால், உண்மை என்ன? நொடிக்கு நொடி எதுவுமே, பழசில் இல்லை. அது தன்னில் இருக்கும் பழசை உதிர்த்துக்கொண்டே, புதிதாக மலர்ச்சியை பெற்றுக்கொண்டே இருக்கிறது.

இந்த பூமி, நொடிக்கு ஆயிரம் மைல் வேகத்தில் சுழன்று, பதினைந்து லட்சம் மைல் தூரம் நகர்ந்து கொண்டே இருக்கிறது. இதை எதற்காக, இவ்வளவு தெளிவாக சொல்லப்படுகிறது என்றால், எதுவுமே புதிதாக மாறிக்கொண்டே, நிகழ்ந்துகொண்டே இருக்கையில், மனிதன், தன்னை பழசில் தான் இணைத்துக் கொண்டிருக்கிறான். அதை மாற்றிக்கொள்ள விருப்பமின்றி, அதிலே தங்கி நிற்கிறான். பிரபஞ்சத்தின் மலர்ச்சியோடு, தன்னை இணைத்துக் கொள்வதில்லை. இணைத்துக் கொள்ள விரும்புவதும் இல்லை.

ஒரு மழை பொழிந்து, ஓடுகின்ற மழைநீர், ஓடி மண்ணில், ஊறி, மறைந்துபோனால் அது மிக இயல்பானது. ஆனால் எங்கேயாவது, தேங்கி நின்றால், மண்ணும், நீரும் கலந்து, மற்றொரு வளர்ச்சிக்கு ஆளாகிவிடும். நீர் தேங்குதல், சிறு பூச்சிகள், புழு, கொசு என்று பலவித உயிர்களை தோற்றுவிக்கும். பாசம் பிடித்து சிறுசெல் பூச்சிகளும் உருவாகும். மனிதர்களுக்கு ஒவ்வாத பல பிரச்சனைகள் அங்கிருந்து உருவாகும். அதுபோலவே, மனிதன் தேங்கி நின்றால், பலவித உடல், மன பிரச்சனைகளுக்குள் சிக்குகிறான்.

முதலில் மன நலம் பாதிப்பும், அதன்வழியே உடல் பாதிப்பும், உடலுறுப்பு பாதிப்பும் நிகழும், அதேவேளையில் முதலில் உடல் பாதிப்பும், உடலுறுப்பு பாதிப்பும், அதன்வழியே மன நலம் பாதிப்பும் நிகழக்கூடும். மனித நோய்களின் அடிப்படை இதுதான். இதை வருமுன் காக்கவே உடற்பயிற்சி, மனித வாழ்வின் கலாச்சாரமாக உருவானது. அன்றாட வேலைகளும் கூட, உடற்பயிற்சிக்காகவே உருவாக்கமும் செய்யப்பட்டன. உடல் உழைப்பு இல்லாத மனிதன், நோய்க்கு இடம் தருகிறான் என்பது நிருபிக்கப்பட்ட உண்மை தானே?

உடலுக்குள் ஓடிக்கொண்டே இருக்கும் காற்று, வெப்பம், ரத்தம் இவற்றின் ஓட்டம் சீராக இருக்க வேண்டியது மிக அவசியம். அதற்கு ஈடாக, உடலுறுப்புக்கள் இயல்பாக, இயற்கையாக செயல்படும். இதற்கு வழியும், உறுதுணையும் தர, உடலை தகுந்த அளவில், இயக்குவதும் முக்கியம் அல்லவா? ‘நான் எதுவும் செய்யமாட்டேன். ஆனால் நான் நலமாக இருக்கவேண்டும்’ என்று நினைப்பதும், வாழ்வதும் எப்படி சரியாகும்? இந்த நிலையில்தான், வாழ்வில் உடற்பயிற்சி அவசியமாகிறது.

இப்படி மாற்றத்தை செய்யாமல், உடலில் சோர்வு, வலி, நோய் என்று வரும்பொழுதுதான், மரு உந்து என்ற மருந்து அவசியமாகிறது. உடலின் குறைபாட்டின் அடிப்படையிலே, மருந்தின் தன்மையும், வீரியமும், அளவும், எடுத்துக்கொள்ளும் காலமும் மாறுபடும். இந்த கருத்தின் மற்றொரு வகையில்தான், யோகம் என்பதும் உதவுகிறது. 

அடுத்த பதிவில் தொடர்ந்து காண்போம்.

வாழ்க வளமுடன்.

-

Is Simplified Exercise Suitable for You? Truth Explanation


 எளியமுறை உடற்பயிற்சி உங்களுக்கு பொருத்தமானதா? உண்மை விளக்கம்.


        இந்த கட்டுரையின் நோக்கம், எளியமுறை உடற்பயிற்சியின் நோக்கத்தை தவறாக மதிப்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே ஆகும்.

ஒரு மனிதன் என்று எடுத்து ஆராய்ந்தால், எல்லோரும் ஒரே மாதியான அமைப்பு என்று பொதுவாக கருதினாலும், உடலின் இயக்கம், உடலுறுப்பின் இயக்கம், மனம் செயல்பாடு, உயிரின் தன்மை ஆகியவற்றில் பெரும் வேறுபாடுகள் கொண்டிருக்கிறான். மேலும், ஆண், பெண் என்ற பேதமும், அவர்களுக்குள் இருக்கும் உடறுலுறுப்பு மாறுபாடுகளும் அவர்களை பாதிக்கின்றன. இதில் மூன்றாம் பாலினமும் உண்டுதான்.

இதனாலேயே, ஒரே ஒரு பயிற்சி எல்லோருக்கும் பொருந்துமா? என்ற கேள்வி எழுவது உண்மைதான். ஆனால், தற்போதைய உலகம், எல்லோருக்கும் பொதுவான உடலமைப்பையும், உடலுறுப்பும் கொண்டதாகவே கருதி, எந்த உடல் நல குறைபாடு வந்தாலும், இதுதான் தீர்வு என்று பயிற்சிகளும், சிகிச்சைகளும், மருந்துகளும் வழங்கப்படுகின்றன. ஆரம்பகாலத்தில், ஏதோ சரியாகிவிடுவது போல இருந்தாலும், பலவிதமான பின்விளைவுகளை உருவாக்கி விடுகிறது. மருந்துகளை நிறுத்திவிட்டால், மீண்டும் பழைய அதே நிலைக்கோ, அதைவிட மோசமான நிலைக்கோ போய்விடக்கூடும். இதை நாம், நம்முடைய அனுபவத்திலேயே உணர்ந்திருக்கிறோம். உண்மைதானே?

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, திருவள்ளுவர், தன் திருக்குறளில், ‘நோய் நாடி, நோய் முதல்நாடி’ என்று ஆராய்ந்து தீர்க்க முயற்சிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார் தானே? ஆனால் அக்கால மருத்துவ முறைகளும், கைவிடப்பட்டுவிட்டன. ஒரு நோயுற்ற மனிதனின் நாடி பார்த்தே, குறித்த மருந்து தரும், மருத்துவர்களும், மருந்துகளும் இப்போதில்லை, இருந்தாலும்கூட ஏதோ ஒரு சிலர்தான். அதில் நம் மக்களுக்கு நம்பிக்கையும் இல்லை. வீட்டிலேயே வருமுன் காக்கும் ‘பாட்டி வைத்தியமும்’ இப்போதில்லை. சொல்லப்போனால் பாட்டியே வீட்டில் இல்லை.

இதை எழுபதாண்டுகளுக்கு முன்பே உணர்ந்த, வேதாத்திரி மகரிஷி அவர்கள், திருத்தமான வாழ்வியலுக்கு உதவ எண்ணம் கொண்டிருந்தார் எனலாம். தன்னுடைய குரு, வைத்திய பூபதி கிருஷ்ணாராவ் வழியில், ஹோமியோபதி கற்றுத்தேர்ந்து, அதில் பட்டயமும் பெற்று உயர்ந்தார். மருந்துகளும் தயாரித்து வழங்கி சேவை செய்துவந்தார். தன் தொடர்ச்சியாகவே, தவமும் கற்று, அதன் முறையான பயிற்சியை, பரஞ்சோதி மகான் அவர்களிடமும் கற்றுக்கொண்டார். தன் ஆராய்ச்சியின் வழியாகவும், பிறரின் அனுபவத்தின் வழியாகவும், உலக மக்கள் சமுதாய வாழ்வில் கலந்திருக்கும் செயல்கள் வழியாகவும், ஒரு முழுமையான, உடற்பயிற்சியாகவே, தன்னுடைய வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சியை வடிவமைத்தார்.

உலகில் இருக்கும் பயிற்சிகளை உள்ளடக்கியது என்றில்லாமல், உடலுக்கும், மனதுக்கும், உயிருக்கும் வளம் தருகின்ற, ஊக்கமும், ஊட்டமும் தருகின்ற பயிற்சியாக அமைந்திருக்கிறது. உடலை எந்தவகையிலும், வருத்தாமல், வலி உண்டாக்காமல், மிக எளிமையாக, பதிநான்கு வயதுமுதல் உடல் அசைவுள்ள எந்த வயதினரும், வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சிகளை செய்து பயன்பெறலாம். இப்பயிற்சியின் முக்கிய நோக்கம், வருமுன் காப்பதும், இருப்பதை சரி செய்து குறைப்பதும் ஆகும். நோய் தீர்வு என்பது தொடர் பயிற்சிகளாலும், மருந்துகளாலும் மட்டுமே அமையும்.

இப்போது கேள்வியின் முக்கிய பகுதிக்கு வருவோம். எளியமுறை உடற்பயிற்சி உங்களுக்கு பொருத்தமானதா? என்று கேட்டால், நம்முடைய பெரும்பாலான அன்பர்களின் பதில் ஆம் என்பதுதான். கற்றுக்கொண்டேன், தொடர்ந்து செய்து வருகிறேன். அதன் பலனை அனுபவிக்கிறேன் என்றுதான் கருத்திடுகிறார்கள். ஆனால், ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு விதமான, உடலமைப்பும், காற்றோட்டமும், வெப்ப ஓட்டமும், ரத்த வோட்டமும் இருக்கிறது அல்லவா? வயது வித்தியாசமும், உடலுறுப்பின் இயல்பு, இயக்க வித்தியாசமும் இருக்கிறது. உறுப்புக்களின் இயற்கை நிலை மாறாதிருப்பதும், நோய் தாக்கம் பெற்றிருப்பதும் உண்டுதானே? இந்த அடிப்படையில், ஒரே தீர்வு என்று, வேதாத்திரிய எளியமுறை பயிற்சியை, எடுத்துக்கொள்வது சரிதானா?

இதற்கு வழி என்ன? வேதாத்திரிய எளியமுறை பயிற்சியை கற்றுக்கொள்வது நல்லதுதான் எனினும், உங்கள் உடல் எப்படி? எந்த நிலையில் இருக்கிறது? நோய் தாக்கம் உள்ளதா? பயிற்சியால் குணமாகுமா? மருந்துகள், சிகிச்சை அவசியமா? என்ற ஆய்வும் அதன் முடிவும் அவசியமாகிறது. உடலில் ஏற்கனவே உள்ள தொந்தரவோடு, எந்த பயிற்சியை செய்தாலும். அது உடலுக்கு பொருந்தாது. இதையும் நீங்கள் அனுபவத்தில் கண்டிருக்கலாம். எனவே, உங்களுக்கு தேவை, நல்ல ஆலோசனை. அதை தகுந்த மருத்துவரிடமோ, ஆசிரியரிடமோ பெற்றுக்கொண்டு, அதற்கான தீர்வையும் பெற்றுக்கொண்டு, அதன் பிறகு, வேதாத்திரிய எளியமுறை பயிற்சியை, எடுத்துக்கொள்வது மிகுந்த பலன் அளிக்கும் என்பது என்னுடைய முடிவாகும். உடனே இதற்கு மாற்றுக்கருத்து, உங்களுக்குள் எழலாம். ஆனால், சில அனுபவம் மற்றும் ஆய்வுகளின் வழியாகவே இந்த விளக்கங்களை தருகிறேன் என்பதே உண்மை.

வேதாத்திரிய எளியமுறை பயிற்சியை கற்றுக்கொண்டு செய்து வாருங்கள், அதில் எந்த குறையுமே இல்லை. ஆனால். உங்கள் உடலில் ஏற்படுகின்ற மாற்றத்தை கவனியுங்கள். அதில் பிரச்சனை எழுந்தால், உடல் தொந்தரவு எழுந்தால், நீங்கள் செய்கின்ற ‘வேதாத்திரிய எளியமுறை பயிற்சி’ குறை கொண்டது என்று தீர்மானித்து விடக்கூடாது அல்லவா? ‘வேதாத்திரிய எளியமுறை பயிற்சி செய்தும் கூட, எனக்கு இந்த உடல் பிரச்சனை, மன பிரச்சனை தீரவில்லையே’ என்று நீங்கள் புலம்பத்தயாரானால், அது சரியான நிலைபாடு ஆகுமா? இப்போது நீங்கள் எதை தொடருவீர்கள்? எதை கைவிடுவீர்கள்? கேள்விகள் சரியானது தானா? உங்கள் அனுபவம் என்ன? என்பதை பின்னூட்டத்தில் தரலாம், வரவேற்கிறேன்.


வாழ்க வளமுடன்.

-

Vethathiri Maharishi's Advice for better health and long life!


உலகில் வாழும் நாம், நலமோடும், வளமோடும், நீண்டநாள் வாழ, வேதாத்திரி மகரிஷி அவர்கள் தந்த அறிவுரைகள் என்ன?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, உலகில் வாழும் நாம், நலமோடும், வளமோடும், நீண்டநாள் வாழ வேதாத்திரி மகரிஷி அவர்கள் தந்த அறிவுரைகளை தொகுத்துத்தருக!


பதில்:

  1. அணுக்களின் கொத்து இயக்க நிகழ்ச்சியே தூல உடல்.அதனூடே பரமாணு நிலையில் ஊடுருவிச் ஓடிச் சுழன்று கொண்டேயிருப்பது உயிர்ச்சக்தி. உயிர்ச்சக்தியின் ஓட்டத்தில் தடையுண்டானால் அதுவே உணர்ச்சியாகின்றது. அந்த உணர்ச்சி ஒரு ஜீவன் தாங்கும் அளவிற்கும் தாங்கிப்பழகிய அளவிற்கும் மேலாக ஓங்கும்போது அது வல்லுணர்ச்சியாகி துன்பமாக, நோயாக உணரப்பெறுகின்றது. 

அந்த தடை நீடித்து, அதன் விளைவாக உடலில் மின் சாரம், காற்று, இரத்தம், ஆகிய மூன்று சுழல்களும் தடைப்படுமானால் உடலுக்கு மூலமான வித்து, தாங்கும் அளவுக்கு மேல் கனல் கொண்டு, அதன் நாளங்களைத் தகர்த்து வெளியேறிவிடும். உணர்ச்சி என்ற அறிவோடு கூடிய உயிச்சக்தி தொடர்ந்து அந்த உடலில் சுழன்று இயங்க முடியாமல் உடலை விட்டு வெளியேறி விடும். இந்த நிகழ்ச்சியே மரணம் எனப்படுகிறது.

2. உயிர்ச்சக்தி உடலில் ஒழுங்காக ஓடிக்கொண்டிருப்பதே இன்ப உணர்வாகும்; உடல் நலமாகும். அதைப் பாதுகாக்க (1) உணவு, (2) உழைப்பு, (3) உறக்கம், (4) ஆண்-பெண் உடலுறவு, (5) எண்ணம் இந்த ஐந்து அம்சங்களில் தொடர்ந்த கவனம் தேவை. 

        இவை அளவுக்கு அதிகமானாலும் குறைந்தாலும் முறை தவறிக் கொள்ளப் பெற்றாலும் உயிர்ச்சக்தி ஓட்டம் பாதிக்கப்படும். நோய்கள் உண்டாகும்.

3. வாரத்திற்கு ஒரு முறை இரவில் உணவு கொள்ளாமல், இலேசாகப் பழ வகை உண்டோ, அல்லது சிறிது பால் அருந்தியோ உறங்குவது நோய்களை ஒரு அளவில் தடுக்க உதவும். உடல் ஜீரணிக்கத்தக்க அளவு உணவு உண்டால் அது நன்மை பயக்கும். அளவுக்கு மீறினால், அந்த உணவு உடலை ஜீரணிக்கும்.

4. கருவமைப்பு, எண்ணம், செய்கை, கோள்களின் சஞ்சாரத்தில் அமையும் நிலை, சந்தர்ப்ப மோதல் ஆகிய காரணங்களால் உடலில் இரசாயன வேறுபாடுகள் உண்டாகின்றன. 

இத்தகைய வேறுபாடுகளால் உடலிலுள்ள அணு மூலகங்கள் அதற்கு ஏற்ப விரைவில் வேறுபடும். அதன் பயனாக உடலில் சுழன்றோடிக்கொண்டிருக்கும் காந்தம், மின்சாரம், இரத்தம், காற்று ஆகிய நால்வகையும் அவற்றின் விரைவில் ஏற்றத்தாழ்வுகளைப் பெறும். 

விளைவாக ஒவ்வொரு அவயங்களூடேயும் ஊடுருவிச் செல்லும் அவற்றின் ஓட்டத்தில் தடையும் உண்டாகும். இந்தத் தடை நோயாக உணரப்படுகிறது. எந்த அவயத்தில் எந்த அளவு எந்தச் சக்தியின் ஓட்டத்தில் தடைப்படுகிறதோ அதற்கு ஏற்ப நோயின் வலுவும், பெயரும், அதற்குக் காலமும் நிர்ணயிக்கப்பெறுகின்றன.

5. நோய்களை நீக்கிக் கொள்ளும் சக்தி இயற்கையாக உடலில் அமைந்துள்ளது.ஒத்த முறையில் பத்தியம் காத்து ஓய்வும் எடுத்துக்கொண்டால் நோய்கள் மிகவும் விரைவாகத் தீர்ந்துவிடும். நோய் கடினமாக இருந்தால் தக்க மருந்து வகைகளை உபயோகிக்கலாம்.

6. நோயற்ற உடலில்தான் அறிவும் திறன்பட இயங்கும். இயற்கை இன்பங்களைத் துய்க்க இயலும். எனவே ஒவ்வொருவரும் நோயுற்று வாழ வழிகண்டு நின்று ஒழுகி வாழவேண்டும்.

7. மனத்தூய்மை, ஒழுங்கான உணவு, அளவான உழைப்பு இவற்றுடன் கூடிய வாழ்க்கை, நோய்கள் இல்லா உடல் நலத்தோடு இருக்க உதவும்.

பொறாமை, சினம், வஞ்சம், கவலை, காம எண்ணங்கள் இவை உடல் காந்த சக்தியினை அளவுக்கு மீறி அழித்து விடும். தவத்தாலும் ஆராய்ச்சியாலும் இந்த உணர்ச்சி நிலைகளை மாற்றி விடலாம். உணர்ந்தோரை அண்டி முயலுங்கள். வெற்றி நிச்சயம்.

8. உணவு உண்ட உடனே ஓட்டம், சைக்கிள் சவாரி, கடினமான வேலை, ஆண் பெண் உடலினைப்பு இவை கூடாது. அடுத்தடுத்து இச்செயல்களில் ஈடுபடுவோருக்கு வயிற்றுப்புண் உண்டாகிவிடும். அது குன்மம் (Peptic Ulser) நோயாக வழங்கப் பெறுகின்றது.

9. உடலிலிருந்து கழிவாகி வெளியேறும் எந்தப் பொருளும் உடலின் மீது தங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவை உடனே கிருமிகளாக மாறும் வாய்ப்பு இருக்கின்றது. ஒரு நாளைக்கு ஒரு முறையாகிலும் வெந்த நீரிலே தண்ணீரிலோ குளிக்க வேண்டியது அவசியம். 

மலபந்தம் (Constipation) அஜீரணம் இவை ஏற்படாமல் பாதுகாப்பது உடல் நலத்தைப் பேணும் வழிகளில் மிக முக்கியமானது.

10. எந்தக் காரணத்தைக் கொண்டும் பிறர் அணியும் செருப்பு, உடுத்தும் துணி, படுக்கும் பாய் இவற்றை மற்றவர் உபயோகிக்கக் கூடாது. தவிர்க்க முடியாத சமயத்தில் பிறர் பாயின் மீது துணி விரித்துப் படுப்பது நல்லது. 

        மக்கள் கூட்டமாக கூடும் இடங்களில் மூன்று அடிக்கு ஒருவர் மேல் நெருங்கி இருக்கக் கூடாது. மூச்சு விடும்போது அவற்றில் வெளிவரும் சத்துக்கள் மிகவும் வேகமானவை. இருவர் மூச்சும் ஒன்று சேரும்போது உடனே கிருமிகளாக மாறும் தன்மையுடையன. அத்தகைய காலங்களில் கிருமி நாசினிப் புகையோ அல்லது சாம்பிராணிப் புகையோ இடைவிடாமல் பரப்பிக் கொண்டே இருக்கவேண்டும்.

வாழ்க வளமுடன்

-

* பதிவின் மூலம்: குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள்

-

What is the reason of body pain and disease on our lifetime?


நன்றாக இருக்கும் உடலில் தீடீரென வலியும், தொடர்ந்த நோயும் வருவதற்கு காரணம் என்ன?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

        வாழ்க வளமுடன் ஐயா, நன்றாக இருக்கும் உடலில் தீடீரென வலியும், தொடர்ந்த நோயும் வருவதற்கு காரணம் என்ன?


வேதாத்திரி மகரிஷி அவர்களின் பதில்:

        உடல் இயக்கத்தில் உள்ள நுட்பத்தை நாம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். நமது உயிருக்கும் உடலுக்கும் ஒத்த உறவு, இனிமையான உறவு இருக்கும் வரையில் தான் உடல் நலம், மன நலம் பாதுகாக்கப் பெறும். இந்த உறவானது நீடித்திருப்பதற்கு ரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்று ஓட்டம் இவை மூன்றும் சரியாக இருக்க வேண்டும். 

        அளவிலே, முறையிலே இவை சரியாக இருந்தால் தான் உயிருக்கும், உடலுக்கும் ஒரு தொடரியக்கம், நட்பு, உறவு சீராக இருக்கும். எந்தக் காரணத்தினாலோ ரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்று ஓட்டம் இந்த மூன்றிலே ஒன்று தடுக்கப்பட்டாலும், திசைமாறினாலும், வெளியேறினாலும், அளவிலே குறைந்தாலும், ஓட்டத்திலே குழப்பம் அடைந்தாலும், அந்த ஓட்டத்தில் அணு அடுக்குச் சீர்குலைவு ஏற்படும். 

        அது இரத்த ஓட்டத்திலோ, வெப்ப ஓட்டத்திலோ, காற்று ஓட்டத்திலோ எதனாலே வந்தாலும் சரி, மற்ற இரண்டும் கூட ஓட்டத்திலே தடையாகி விடும். அந்தக் குழப்பத்தை நீக்குவதற்கு அங்கே இருக்கக் கூடிய மின்சக்தி போதாது. அதனாலே அதிகமான மின்சக்தி அங்கே சேர வேண்டியதாகின்றது.

        அவ்வாறு அங்கே சேரும் போது ஏற்கனவே அங்கு தொளை (Puncture) ஆகி இருக்கிறது. அளவுக்கு மேலாகக் காந்த சக்தி மின் சக்தியாக மாறும் போது அந்த இடத்தில் நிச்சயமாக மின்குறுக்கு (Short circuit, earthing) உண்டாகும். அதுதான் வலியாக வரும். 

        இந்த மின்குறுக்கு சிறிது நேரம் இருந்தால் அது வலி என்றும், அது இடத்தாலே விரிந்தும் காலத்தாலே நீடித்தும் இருந்தால் அது நோய் அல்லது வியாதி என்றும் கூறப்படுகிறது. அதற்கும் மேலாக உடலில் உள்ள ஜீவகாந்தசக்தி எல்லாம் அதிகமாகச் செலவாகி, வருவதற்கும் போவதற்கும் மத்தியில் உள்ள இருப்பை ஜீவகாந்தம் வெகுவாகக் குறைக்குமானால் அதனை ஈடு செய்ய முடியாமல் போகும். 

வாழ்க வளமுடன்

-

Is it true Kayakalpa yoga and kayakalpam for endless happy life?


காயகல்ப பயிற்சி செய்தால், காயகல்பம் சாப்பிட்டால், ஆணுக்கும் பெண்ணுக்கும் நீடித்த போக இன்பம் கிடைக்கும் என்று சொல்லுகிறார்களே?




வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, காயகல்ப பயிற்சி செய்தால், காயகல்பம் சாப்பிட்டால், ஆணுக்கும் பெண்ணுக்கும் நீடித்த போக இன்பம் கிடைக்கும் என்று சொல்லுகிறார்களே?

பதில்:

சித்தர்களின் வழிவந்த பரம்பரையினர் உலகெங்கும் சிதறிப்போன பிறகு, பல்வேறு இடங்களில் ஆங்காங்கே இருந்தவர்கள், அவர்களுக்கு தெரிந்த காயகல்ப யோக பயிற்சிகளை, மக்களின் நல்வாழ்வுக்காக கற்றுக்கொடுத்தனர். அதை பார்த்த வேறுசிலர் அந்த பயிற்சியின் உண்மையை புரிந்து கொள்ளாமல், காயகல்ப பயிற்சியை, காயகல்ப மருந்தாக மாற்றி, மக்களின் ஆர்வத்தை தூண்டி, மருந்து வியாபராமாக்கி வாழ்ந்து வந்தனர். அந்த நிலையில்தான் காயகல்ப பயிற்சி செய்தால், காயகல்பம் சாப்பிட்டால், ஆணுக்கும் பெண்ணுக்கும் நீடித்த போக இன்பம் கிடைக்கும் என்ற கருத்து பல நூறாண்டுகளாக நிலைத்துவிட்டது. 

காயகல்ப யோக பயிற்சி, அதன் சிறப்பு, பயிற்சி முறை என்று பலதரப்பட்ட உண்மைகளை, கவி வடிவில் குறிப்பாக எழுதி வைத்திருந்தாலும், உண்மையை மறைத்து, உளப்பூர்வமாக அறியும்வகையிலும், ஒரு குருவின் மூலமாகமட்டுமே கற்றுக்கொள்ளும் வகையிலும் அமைத்துவிட்டார்கள். அதனால் மொழிவல்லுனர் ஒருவர் படித்தால் கூட முற்றிலும் உண்மையை அதில் அறியமுடியாத நிலைதான் உள்ளது. என்றாலும், சித்தர்களின் வழியில் வந்த பலருக்கு, ஏதோ ஒருவகையில் இந்த காயகல்ப யோகபயிற்சி சொல்லித்தரப்பட்டு வந்தது.

ஆனால் அதற்கு நீண்டகாலம் குருவிற்கு தொண்டு செய்யும் சீடனாக இருக்க வேண்டிய நிலையும் தேவையானது. என்றாலும் கூட அந்த குருவிற்கு எந்த அளவு, பயிற்சியின் உண்மை தெரியுமோ? அதே அளவுதான் சீடனுக்கும் பகிரப்படும் நிலை. இதனால் கொஞ்சம் கொஞ்சமாக, காயகல்ப பயிற்சி அதன் உண்மையை இழந்து, ஆண் பெண் நீடித்த போக இன்பத்துக்கான ஒரு பயிற்சியாக உலகில் இருந்துவந்தது.

குரு மகான் வேதாத்திரிக்கும், காயகல்ப பயிற்சி குறித்த ஐயப்பாடும், குழப்பங்களும் இருந்துவந்தது. எத்தனையோ சித்தர்களின் குறிப்புகளை ஆய்வு கண்டும், முழுமையான பயிற்சி வடிவம் கிடைக்கவில்லை. என்றாலும்கூட அதன் அடிப்படை உண்மைகளை புரிந்து கொண்டார். உலக நாடுகள் பலவற்றுக்கு சென்று, அங்குள்ள ஆன்மீக அமைப்புகளில் உள்ளவர்களை சந்தித்து உண்மை அறிந்து, அவற்றை தன் ஆராய்ச்சியோடு ஒப்பிட்டு, ஒழுங்கு செய்து, பயிற்சியாக வடிவமைத்தார். அதுவே இப்போதுள்ள ‘வேதாத்திரிய காயகல்ப பயிற்சியாக’ மலர்ந்துள்ளது.
 
வாழ்க வளமுடன்

Any best solution and prevention as lifelong to our body?


நம் உடலில் நோய்வராது காப்பதற்கு சிறந்த வழி உள்ளதா? நீண்டநாள் உதவிடுமா?




வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, நம் உடலில் நோய்வராது காப்பதற்கு சிறந்த வழி உள்ளதா? நீண்டநாள் உதவிடுமா?

பதில்:

இந்த உலகில் வாழ்கின்ற எல்லா உயிர்களுக்கும் நோயும், அதன் தாக்கமும், குணமடைதலும் உண்டு. அது இயற்கயாகவும் உண்டாகும். சில சூழ்நிலை காரணாகவும் வந்துவிடும். நாமே உருவாக்கியும் சிக்கிக் கொள்வோம். 2019ம் ஆண்டு உலகை பாதித்த கரோனா தொற்றுநோய், மனிதர்கள், தன்னுடைய ஆய்வகத்தில் உருவாக்கியதன் விளைவுதானே? அது இன்னமும் மிச்சம் மீதியாக ஆங்காங்கே தொடரத்தான் செய்கிறது. சிலவகை நோய், நோய்க்கிருமிகள், தாவரங்களை நாம் உணவாக உட்கொள்வதின் மூலமாக வந்துவிடுகிறது. வேறு சில நோயும், நோய்கிருமிகளும் பறவைகள், விலங்குகள், வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகள் வழியாகவும் நம்மை வந்துடந்து பாதிக்கிறது.

இயற்கையின் இயல்பாகவே தன்னைத்தானே சரி செய்துகொள்ளும் நிலை உடலுக்கும், உடல் உறுப்புகளுக்கும் உண்டு. அதில் ஏமாற்றமும், பலன் இல்லாது போலும் பொழுதும்தான் அது நோயாக வடிவமெடுக்கிறது. 
நம்முடைய வாழ்க்கையில், நமக்கு இந்த உடலை மிகச்சரியாக இயக்காமல் இருந்தாலும், அதிகமான வேலையை ஒரு உறுப்புக்கு கொடுத்தாலும் வலி வந்துவிடும் என்பது நமக்குத் தெரியும். அந்த வலி சரியானபடியாக தீர்கப்படாவிட்டால், அதுவே நோயாகவும் மாறிவிடும் என்பதை முதலில் கவனத்தில் கொள்ளவேண்டும்.

உணவு, நொறுக்குதீணி, அதீத சுவை, திடீர் உணவுகள் எடுத்துக்கொள்வதில் கவனம் வேண்டும். உடலுக்கு பொருத்தமானதா? என்பதை ஆராயவேண்டும். பசி வந்தால் மட்டுமே உணவு என்ற முறைக்கு மாறவேண்டும். நேரம் கடத்துதலும், நேரம் சுருக்குதலும் செரிமான உறுப்புகளை பாதிக்கும். 
உடலுக்குள்ளாக இயங்குகின்ற காற்றோட்டம், வெப்ப ஓட்டம், இரத்த ஓட்டம் இந்த மூன்றும் ஒன்றை ஒன்று பாதிக்கப்படாமல் இயங்கிட வேண்டியது அவசியம். அதற்கு நம்முடைய உடலும், உடல் உறுப்புகளும் சரியாக பயன்படுத்திடவும் வேண்டும். அந்த பயன்பாடு இப்போதைய உலக வாழ்வியலில் பெரும்பாலோர்க்கு இல்லை.

இதனால் உடல் அங்காங்கே சோர்வுற்று வலியாகவும், நோயாகவும் மாறிவிடுகிறது. இளம் வயதுவரை எட்டிப்பார்க்காத பரம்பரை வழியாக வந்த நோய்கள், குறிப்பிட்ட காலத்தில் வெளியேறியும் நம்மை பாதிக்கிறது. தகுந்த மருந்துகளை உட்கொள்வதின் மூலமும், எடுத்துக்கொள்வதின் வழியாகவும் தீர்க்கலாம். இல்லையேல் அது நீடித்த நோயாக மாறி, குணப்படுத்த முடியாத  நிலைக்குப் போய்விடும்.

மருந்தில்லா மருத்துவம் என்றாலும், அதற்கு முன்பாக, இந்த உடல் நோய் இல்லாத தன்மையில் வைத்துக்கொண்டால் தானே அது உதவும்?! நோய் வந்தபிறகும், முற்றியபிறகு அது எப்படி உதவமுடியும்?

மிகசரியான பருவ வயதில் உடல் அசைவுக்கு பழகவேண்டும். வேதாத்திரி மகரிசி வழங்கிய எளியமுறை உடற்பயிற்சி மிகச்சரியான தீர்வு. வருமுன் காப்பது என்ற நிலையில், வலி, நோயை தடுத்துக்கொள்ள நல்ல வழி. எனினும் எல்லாவயதினரும், எந்த வலி, நோய் நிலையில் உள்ளவரும்கூட கற்றுக்கொண்டு பயிற்சியை தொடர்ந்து செய்துவரலாம். வலி, நோயின் தீவிரம் குறைந்து குணமளிக்கும். என்றாலும் மருந்தும் அவசியம். தொடர்ந்து செய்துவரும்பொழுதுதான், மருந்தில்லா நிலைக்கு உடலும், உறுப்புகளும் பழக்கமாகலாம். அதுவரை மருந்துகளை நிறுத்திவிடாமல் தொடர்வும் வேண்டும். இதற்கிடையில் மருத்துவரின் ஆலோசனையையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

வேதாத்திரி மகரிசி வழங்கிய எளியமுறை உடற்பயிற்சி எல்லாவயதினரும் செய்யலாம். அதன் வழியாக உடல், மன, உயிர் வளம் காக்கலாம். வாழ்நாள் நீடிப்பும் செய்யலாம். இயற்கையோடு இணைந்த உடல் இயக்கத்தை பெறலாம். வாழ்வில் பசிக்கு உணவு என்பதைபோல, உடலுக்கு எளியமுறை உடற்பயிற்சி என்றவகையில் மாற்றிக்கொள்ள வேண்டும்.

முக்கியமாக உங்கள் உடலை பேணிக்காப்பதில், உங்களுக்கு மட்டுமே அக்கறை உண்டாக வேண்டும். அதில் ஆர்வம், முயற்சி, பயிற்சி இவைகளும் முக்கியமாகும்.

வாழ்க வளமுடன்.
-

Why have a depression? Any best solution for it?


மனம் ஏன் பாரமாக இருக்கிறது? எப்படி அதை சரிசெய்வது?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, மனம் ஏன் பாரமாக இருக்கிறது? எப்படி அதை சரிசெய்வது?

பதில்:

நாம் இந்த உலகில், மனதின் வழியாகவே வாழ்கிறோம். உலக இன்ப துன்பம் அடங்கிய எல்லாவற்றிற்கும் வாசல், நம்முடைய மனமே. நாம் வெளியே போவதற்கும், நமக்குள் ஏதேனும் வருவதற்கும் மனமே வாசலாக இருக்கிறது. நாம் வாழ்கின்ற இந்தக்காலத்தில், ஒவ்வொரு நாளும், உலக முன்னேற்றமும் புதிதுபுதிதாக வந்துகொண்டே, வளர்ந்துகொண்டே இருந்தாலும்கூட, நாம் எப்போதும் ஒரே நிலையில்தான் வாழ்ந்து வருகிறோம் என்பதும் உண்மை. 

ஒரு தலைமுறை என்று எடுத்துக்கொண்டாலும் அது தொடர்கிறது. சராசரியான பார்வைக்கு உதாரணமாக சொல்ல வேண்டுமானல், தாத்தாவுக்கு அப்பா திறமைசாலி, அப்பாவுக்கு மகன் திறமைசாலி, மகனுக்கு பேரன் திறமைசாலி, பேரனுக்கு அவனுடைய மகன் திறமைசாலி என்று தொடராக மாறிக்கொண்டேதான் இருக்கிறது.

ஆனால் மனிதனும், அவனுடைய மனமும் அப்படியேதான் இருக்கிறது. இது, இந்த நிலை மாறிட வேண்டும் என்றுதான், யோகம் உருவானது. யோகம் புரியாதவர்களுக்கு பக்தி துணையானது. இந்த இரண்டிலுமே பலப்பல பொய்கள் கலந்து, மனிதர்களுக்கு நீண்டகாலமாக, எளிதில் நெருங்க முடியாதபடி தூரமாகிவிட்டது.

எனினும் அவ்வப்பொழுது மகான்கள், ஞானிகள் தோன்றி, உருவாகி, மக்களுக்கான மாற்றத்தை, மனதிற்கான மாற்றத்தை வழங்கிக் கொண்டேதான் இருக்கிறார்கள். குரு மகான் வேதாத்திரி மகரிஷியின் நோக்கமும் அதுதான். உலக சமாதானம் என்ற திட்டத்தை முன்னிறுத்தி, உலகம் முழுவதும் ஓரே ஆட்சியில் அமைந்து, உலக மக்கள் நலவாழ்வுக்கு, திட்டத்தை தந்து அதை பலவாறாக தன் வாழ்நாள் முழுவதும் செயல்படுத்தி வந்தார். அவர் எடுத்துக்கொடுத்த பணி இன்னும், நம்மைப்போன்ற வேதாத்திரியர்களால் தொடர்கிறது.

என்றாலும், இப்போது உங்களுக்கும், உங்களைப்போன்ற மற்றவர்களுக்கும், மனம் பாரமாக இருக்கிறதே?! அதை எப்படி சரி செய்வது? தீர்ப்பது? அதையும் யோசிக்கலாம். இந்த மன பாரம் என்பதை, இக்காலத்தில் மன நல மருத்துவர்கள், மன அழுத்தம் என்று சொல்லுகிறார்கள். பல்வேறு சிக்கல்களில் சிக்கி, பல்வேறு நினைவுகளின் தாக்குதலும், அதை நினைத்து வருந்துவதும் இத்தகைய மன அழுத்தத்திற்கு காரணம் என்று சொல்லுகிறார்கள். இதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான மன அழுத்தமும் இருக்கும் என்பதே உண்மை. இதை தீர்ப்பதற்கு, மன நல மருத்துவர்கள் தரும் ஆலோசனை என்ன?

மனதை இயல்பாக வைத்திருங்கள். நேற்று நடந்ததை, எப்போதோ முடிந்த ஒன்றை நினைக்காதீர்கள். மனதில் எழும் எண்ணங்களை பின்பற்றாதீர்கள். உங்களுக்கு பிடித்ததை செய்யுங்கள். தனிமையில் இருக்காதீர்கள், பாடல், இசை, நாடகம், சினிமா என்று நேரத்தை திசை திருப்புங்கள், பிடித்ததை சாப்பிடுங்கள். நன்றாக தூங்குங்கள் என்று சொல்லிவிட்டு, சில சத்து மாத்திரைகளையும், தூக்கம் வரவழைக்கும் மாத்திரைகளையும், தந்து அக்கறையோடு கவனிப்பார்கள். (பொதுவான கருத்தாக சொல்லப்படுகிறதே தவிர, மனநல மருத்துவர்களை குறை சொல்லுவதாக கருதவேண்டாம்)

வேதாத்திரியும், இப்படியான அறிவுரைகளும், மருந்துகளும் தருவதில்லை. சுற்றி வளைக்காமல் நேரடியாகவே, மனதை புரிந்து கொள்க என்று, தவம் இயற்றச் சொல்லுகிறது.  மனதையும், அதில் எழுகின்ற எண்ணங்களையும் அறிந்து, புரிந்து, ஆராய்ச்சி செய்து, ஒழுங்குசெய்து கொள்ள அகத்தாய்வு எனும் பயிற்சியை தருகிறது. இந்த தற்சோதனை வழியாக, மனம் தன்னைத்தானே விரிந்து நோக்கிட வழி பிறக்கிறது, தேவையில்லாததை தானே திருத்திக்கொள்ள பழகுகிறது.

மேலும் எண்ணம் ஆராய்தலை முடித்து, சினம் தவிர்த்தல், கவலை ஒழித்தல் என்ற அடுத்த இரு நிலை பயிற்சிகளையும் தந்து, நான் யார்? என்று ஆராயவும் சொல்லுகிறது வேதாத்திரியம்.

உங்களுடைய மன பாரத்திற்கும், மன அழுத்தத்திற்கும் முழுமையான, தெளிவான, சிறப்பான மருந்து ‘வேதாத்திரிய அகத்தாய்வு எனும் தற்சோதனை’ எனும் பயிற்சிதான் என்பதில் ஐயமில்லை!
வாழ்க வளமுடன்.
-

Why some of disease and problem not cure by the simplified exercise?


சில உடல் உபாதைகள், நோய்கள் எளியமுறை உடற்பயிற்சியால் குணமாகவில்லையே? காரணம் என்ன?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, சில உடல் உபாதைகள், நோய்கள் எளியமுறை உடற்பயிற்சியால் குணமாகவில்லையே? காரணம் என்ன?


பதில்:

அன்பரே, உங்களுடைய வயது தெரியவில்லை, எப்போது முதல், இந்த வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சி செய்து வருகிறீர்கள்? ஏற்கனவே உங்களுக்கு என்ன மாதிரியான உடல் உபாதைகள், நோய்கள் இருந்தன? எந்தவகையான மருந்துகள் எடுத்துக்கொண்டீர்கள்? சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி, இயற்கை வைத்தியம், மூலிகை வைத்தியம், யுனானி, அலோபதி இப்படி எந்தப் பிரிவு மருத்துவரின் ஆலோசனைகளை ஏற்று கடைபிடித்து வருகிறீர்கள்? அதன் விளைவு, மாற்றம் எப்படி இருக்கிறது? இருந்தது? மருத்துவம் தொடர்கிறதா? நிறுத்திவிட்டீர்களா? 

நீங்கள் தினமும் வேதாத்திரியம் வழங்கும் எளியமுறை உடற்பயிற்சி செய்து வரவேண்டும் என்பதே அதன் பலன் தருவதின் சிறப்பாகும்.  அப்படி அதனை தொடர்ந்து வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சி செய்து வருகிறீர்களா? என்பதான இத்தனை கேள்விகளுக்கும் பதில் தெரியவில்லை. அதை நீங்களே ஒரு ஆராய்ச்சி குறிப்பாக எழுதி தயாரித்து, நேரடியாக ஆசிரியரிடம் கேட்டும் உண்மை அறியமுடியும்.

நிச்சயமாக, வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சியின் வழியாக பலன்கள் செய்துவருவதால் மட்டுமே கிடைக்கும். குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் அதை, எளியமுறை உடற்பயிற்சியை வடிவமைத்த பொழுது, அந்தந்த பயிற்சிகளை மற்றவர்களோடு பகிர்ந்து, செய்யச்சொல்லி, மாற்றத்தை கணித்து, தானும் செய்து பார்த்து விளைவுகளை கண்டு, பயிற்சியிலும் தேவைப்படும் மாற்றத்தை ஏற்படுத்திக்கொண்டார். தன் வாழ்நாள் முழுவதும், 96 வயது வரையும் இதை கடைபிடித்தார். தன்னோடு இருக்கும் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளையும் ஏற்றுக்கொண்டும் திருத்தி அமைத்தும்  கொண்டார்.

பொதுவாகவே இளமைக் காலத்திலும், பருவம் வந்த வயதுகளிலும், மனமும், உடலும் மிக மிக உற்சாகமாக இருக்கும். உறக்கமும் மிகச்சரியாக இருக்கும். இருபது வயதை கடந்து, உலக கடமைகளில் நம்மை இணைத்துக்கொண்டு பயணிக்கும் பொழுது, உணவாலும், அதிக உழைப்பாலும், தூக்கமின்மையாலும், அன்றாட இன்ப நுகர்வுகளாலும், ஓயாத சிந்தனையாலும் நம்முடைய உடலும், மனமும் கெடுகின்றது. தானாகவே நோயை வரவழைத்துக் கொள்கிறோம். மேலும் வித்துவழியாக பரம்பரை நோய்களும் நம்மிடம் எட்டிப்பார்க்கிறது. நம்மைச் சுற்றியுள்ள சுழல், கிரகங்களின் அலைத்தாக்கம், தொற்று நோய்கள் வழியாகவும் பாதிக்கப்படுவோம்.

இவ்வளவுக்கும், துணையாக நிற்கும் தீர்வு என்றால், பருவ வயதில் வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சி கற்றுக்கொண்டால் சிறப்பு. உடல் உபாதை, வலி, பிரச்சனைகள், நோய்கள் எல்லாம் உருவாகி நம்மை வருத்தி, அதனால் மருத்துவ ஆலோசனை பெற்று, மருந்துகள் எடுத்துகொண்டிருக்கும் நிலையில், வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சி செய்து வந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று நினைப்பது தவறு. வருமுன் காப்பதும், வந்ததை ஓரளவில் தடுத்துக் கொள்வதுமே நன்று. இடைப்பட்ட காலத்தில், 30, 40 வயதுகளில், வயோதிகத்தில் நம்மால் இதைத்தான் பெறமுடியுமே தவிர, முற்றாக நோயை தீர்க்க முடியாது. ‘குணப்படுத்துவதை விடவும், தடுப்பதே சிறப்பு’ என்று மருத்துவ சொல் இருக்கிறது. 

உண்மையாக, நீங்கள் எதிர்பார்ப்பு ஏதுமின்றி, வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சி செய்து வாருங்கள். உங்களுக்கான உடல் உபாதை, வலி, பிரச்சனை, நோய்க்கான மருந்து என்னவோ அதையும் எடுத்துக்கொள்ளுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக மாற்றத்தை பெறுவீர்கள் என்பது உறுதி!

வாழ்க வளமுடன்.

Vethathiri Maharishi Simplified exercise, you and your health


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, எளியமுறை உடற்பயிற்சி செய்ய நினைக்கும் பொழுதெல்லாம் ஏதேனும் வேலை வந்து தடுக்கிறது. அதனாலேயே தொடர முடியவில்லையே?! என்ன செய்வது?!


பதில்:

நல்லதுதான், இதற்கு நம் வேதாத்திரி மகரிஷி அவர்கள் சொல்லுகிற பதிலை பார்க்கலாமா? ‘இதெல்லாம் சப்பைகட்டு, உங்களுக்கு செய்ய விருப்பமில்லை அதான் விசயம்’ என்கிறார். ஆம் அது உண்மைதானே? நீங்களும், உங்கள் உடலும், உடல் உறுப்புக்களும் நன்றாக, நீண்டநாள், எந்த நோய்தாக்கமும் இல்லாமல், வலி, சோர்வு ஏதும் இல்லாமல், காலை முதல் மாலை, இரவு என நாள் முழுவதும் உற்சாகமாக இருக்கவேண்டும் என்று நினைத்தால், எளியமுறை உடற்பயிற்சி செய்வதில் என்ன தயக்கம் வந்துவிடப்போகிறது?

இந்த எண்ணம் வந்துவிட்டால், முதலில் அதை செய்துவிட்டுத்தானே மற்ற வேலைகளை பார்ப்பீர்கள்? ஆனால் உங்களுக்கு உங்கள் உடலைவிட வேறு ஏதோ ஒன்று தேவையாக இருக்கிறது. முக்கியமாக தெரிகிறது. அதனால் எளியமுறை உடற்பயிற்சி செய்ய ஆர்வமில்லை, செய்தால் அப்படி என்ன ஆகிவிடப்போகிறது? செய்யாமல் விட்டாலும் ஒன்றும் குறையில்லை. நான் நன்றாகத்தானே இருக்கிறேன் என்றும் நீங்கள் நினைக்கிறீர்கள். சரி, நீங்கள் நன்றாக இருப்பதாக நினைப்பது சரிதான் தவறல்ல. ஆனால் உண்மையிலேயே உங்கள் உடலும், உடல் உறுப்புக்களும் நன்றாக இருக்கிறதா? என்று கேள்வி கேட்டு அதற்கான சோதனையை செய்திருக்கிறீர்களா? இல்லையா?

நீங்கள் எளியமுறை உடற்பயிற்சியை தவிர்க்கும் அளவிற்கு, உடல் நலத்தோடு இருக்கிறீர்கள் என்பது சிறப்பு. அதற்காக வாழ்த்துகிறேன். அந்த உடல் நலத்தை அப்படியே பேணி காத்திடுங்கள் அது போதும். எளியமுறை உடற்பயிற்சி செய்துதான் ஆகவேண்டும் என்று நானோ, வேறு யாருமோ, எவருமோ கட்டாயப்படுத்தவில்லை. உங்களுடைய பசிக்காக நீங்கள் தான் உணவு உண்ண வேண்டும் இல்லையா? அதுப்போலவே உங்களுக்கு தேவை என்றால் தான் எளியமுறை உடற்பயிற்சி செய்யவேண்டுமே தவிர கட்டாயத்திற்காக வற்புறுத்தலுக்காக பயமுறுத்தலுக்காக செய்ய வேண்டாமே?!

இனி உங்கள் முடிவுதான்! 

வாழ்க வளமுடன்.

Why I am not interested on simplified exercise?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, உடற்பயிற்சி செய்வதற்கு சோம்பேறித்தனமாக இருக்கிறதே எப்படி திருத்தலாம்?


பதில்:

அந்த அளவிற்கு உங்கள் மனதை கெடுத்துவைத்திருக்கிறீர்கள் என்பது தெரிகிறது. நீங்கள் மட்டுமல்ல, உலகில் கோடிக்கணக்கான இளைஞ சமுதாயமே அப்படித்தான் இருக்கிறது என்று கணக்கெடுத்திருக்கிறார்கள். காரணம், உலகில் ஏற்பட்டிருக்கும் தகவல் தொடர்பு மலர்ச்சி. உலகை கைகளில் சுருக்கி கைபேசி வடிவில் தந்துவிட்டதால், கண்களுக்கும், விரல்களுக்கும் மட்டுமே அதிக பயிற்சியும், குரலுக்கு கொஞ்சம் பயிற்சியும் தந்துகொண்டு வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

தனியாக, உடலுக்கும், உடல் உறுப்புகளுக்கும் பயிற்சி தேவையா? என்று அவர்களே அதை தவிர்த்தும் விடுகின்றனர். முதலில் நீங்கள் சொன்ன சோம்பேறித்தனம் எப்படி வருகிறது என்பதை அறிந்திடுங்கள். உங்களுக்கு உடற்பயிற்சியில் ஆர்வமில்லை. அதை செய்வதால் என்ன மாற்றம் நிகழ்கிறது என்பது குறித்த அக்கறை இல்லை. நான் நன்றாகத்தானே இருக்கிறேன். பிறகு எதற்காக பயிற்சி என்ற அசட்டுத்தனம். ஆனால் உடல் உங்களின் அன்றாட நடவடிக்கைகளால் சோர்வடைகிறது என்பதை நீங்கள் அறிவதே இல்லை. மேலும் மேலும் உடலை படாதபாடு படுத்தி, பகல்முழுவதும் உயயோகப்படுத்திவிட்டு, இரவிலும் கூடுதலாக கஷ்டப்படுத்துகிறீர்கள். இந்த உடலுக்கென்று பாஷை இல்லை. அதனால் அது என்னைவிட்டுவிடு என்று ஒருபோதும் சொல்லாது.

உங்களுக்கு ஏற்றபடி அது உங்களோடு பயணிக்கும். தீடீரென்று ஒருநாள் ஒரு தலைவலி என்று ஆரம்பிக்கும், பிறகு காய்ச்சல், உடல் வலி, சதை பிடிப்பு, உடலில் சூடு, கண்கள் வீக்கம், மூக்கில் சளி, இருமல் என்று படிப்படியாக ஆரம்பித்து நாளடைவில், ஒரு நோய்க்கான அறிகுறியைக் காட்டி, உங்களை படுக்கையில் வீழ்த்தும். அப்போதும் ஏதேனும் ஒரு மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற்று, மருந்துகள் சாப்பிட்டு, உடலுக்கு ஊக்கம் கொடுத்து, பழையபடி அதே வேலையை ஆரம்பிப்பீர்கள். இந்த முறை முன்னைவிட பலவீனமாக மீண்டும் உடல் விழும். இது தேவைதானா? சிந்திப்பீர்.

இயல்பாக, நன்றாக இருக்கும் பொழுதே, உடல்மீது அக்கறை கொண்டு, கவனித்து, பயிற்சியால் ஊக்கம் கொடுத்து வந்தால், வாழ்நாள் முழுவதும் எக்குறையும் இன்றி வாழமுடியுமே? அதை ஏன் தவிர்க்கிறீர்கள்? சிந்திப்பீர். தெளிவீர், உயர்வீர்!

வாழ்க வளமுடன்.

Can simplified exercise will solution for my all physical problems?


 வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, எனக்கு சில உடல்பிரச்சனைகள் உள்ளது! வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சியில் முழுமையாக தீர்வு கிடைத்துவிடுமா?


பதில்:

நமக்கு வரும் உடல் பிரச்சனைகள், தொந்தரவுகள் பெரும்பாலும் மனரீதியில் உருவானவையாகவே இருப்பதை நாம் அறியலாம். உதாரணமாக நாம் கவலைப்பட்டால் கூட அது மனதையும் உடலையும், உடல் உறுப்புக்களையும் பாதிக்கும். சினமும் அத்தகைய தன்மை கொண்டதே. ஆனால் பிரச்சனை, தொந்தரவு என்ற நிலையில் இருந்தால் அது ஆரம்ப நிலை என்று சொல்லலாம். அதுவே காலத்தால் நீண்டு, முற்றிப்போனால் அது, பிரச்சனை, தொந்தரவு என்ற நிலையை மீறி நோயாக மாறிவிடும். அந்தந்த உறுப்புக்களையும் பாதிப்படையச் செய்யும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். 

இதனால் உங்களுக்கு இருப்பது, உடல் பிரச்சனைதானா? அல்லது நோயா? என்பதை முதலில் தெளிவு செய்து கொள்ளுங்கள். இங்கே மருத்துவரின் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்ள தயங்காதீர்கள். பார்வைக்கு திடமாக இருக்கும் மனிதர்கள் பலர், நீண்டகால நோயை தன்வசம் பெற்றவராக இருப்பார் என்பதே நிகழ்கால உண்மை. மேலும் உடல் பருமனாக இருப்பது நல்லது என்றும், ஒல்லியாக இருப்பது நோய்தன்மை என்ற தவறான கணிப்பிலிருந்து மாறிவிடுங்கள்.

குரு மகான் வேதாத்திரி மகரிஷி தந்த எளியமுறை உடற்பயிற்சி என்பது, உடலை, மனதை, உயிர் வளத்தை தக்கவைக்கவும், ஒன்றுக்கொன்று முரண்படாமல் இயங்கிடவும், உடலுக்குள்ளாக இயங்கும் காற்றோட்டம், வெப்ப ஓட்டம், ரத்தவோட்டம் ஆகிய சீராக பாய்ந்தோடவும், குறைவுபடாமல் இருக்கவும் உதவும் என்பதே உண்மையாகும். மேலும் நோய்தாக்கம் பெறாத விழிப்புணர்வும், தடுப்பு சக்தியும் தந்து காத்திடும்.

இங்கே ஏற்கனவே, உடலில் நோய் என்ற நிலை இருந்தால், அந்த நோய்தன்மையை கொஞ்சம் குறைத்திட வழி பிறக்குமே அன்றி, முழுதாக தீர்த்திட வழியில்லை. நோய் தன்மையை பொறுத்து, மருத்துவரின் வழிகாட்டலும், மருந்துகளும் முக்கியம் ஆகும். ஏனென்றால் இது உடற்பயிற்சி தானேதவிர, உடல் உறுப்புகளை திருத்திட, மாற்றி அமைக்க மருந்து அல்ல என்பதை புரிந்துகொள்க. அப்படியானால், ‘எளியமுறை உடற்பயிற்சி என்பது வீண் தானே?!’ என்ற முடிவுக்கு நீங்கள் வந்துவிட்டால், அது உங்களுடைய கருத்தேயன்றி உண்மையல்ல.

எப்போதுமே, வருமுன் காப்பதுதானே சிறப்பு, அதன்படி, நாம் இளமையில் நன்றாக இருக்கும்பொழுதே, அப்படி உணரும் பொழுதே, எளியமுறை உடற்பயிற்சியை தொடர்ந்தால், வாழும்நாள் வரையில், நோயின்றி சிறப்பாக வாழ வழியுண்டாகும். அதுதான் குருமகான் வேதாத்திரி மகரிஷி தந்த விளக்கமும் ஆகும்.

வாழ்க வளமுடன்.


Medicine does not work - part 02


 வேலை செய்யாத மருந்து பகுதி 02



நேற்றைய பதிவில்,

ஞானியை தேடிச் சென்று யோகம் கற்பதற்கான தகுதி குறித்து கண்டோம். ஞானியோடு இணைந்து சென்றவன், தன்னை அவர்க்கு ஒப்படைத்திருந்தான் எனில், குருவிடம் அர்பணிப்பு என்ற வகையில், அவர், அவனுடைய தலையை ஆற்றில் மூழ்கடிக்கும் பொழுது, மூச்சடைக்கும் பொதுவான நேரமாவது அமைதியாக இருந்திருக்கலாம். (எப்படியும் சராசரி மனிதன் 10 முதல் 30 நொடிகள் வரை மூச்சை நிறுத்தி வைக்கலாம்) தன்னை தேடிவந்த ஒருவனை, ஒரு ஞானி, உயிர்க்கொலை செய்வாரா? என்று சிந்திருக்கலாம். ஆனால் அதற்கு அவகாசமில்லாமல், “நான் செத்துவிடுவோனோ” என்று திகைத்து, ஞானியின் பிடியிலிருந்து விலக முயற்சித்தான். 

பொதுவான மனித மனம் இப்படித்தான் திகைக்கிறது. யோகத்திற்கு சென்றால், நான் பரதேசி போல ஆகிவிடுவேன். பணம் சம்பாதிக்க முடியாது, சுகம் அனுபவிக்க முடியாது, இல்லறம் இல்லாது போய்விடும், பிச்சை எடுக்கவேண்டிவரும் என்றெல்லாம் ஏதேதோ “அந்தக்கால பொய்” நிரப்பி பயப்படுவார்கள். பரஞ்சோதி மகான் காலம் முதல், வேதாத்திரி மகரிசி காலம் வரை, இல்லறம் இல்லாத துறவறம் காலாவதி ஆகிவிட்டது. எனவே இனிமேல் திருமணமும், உலக வாழ்வியலும் யோகத்திற்கு ஒரு தடையும் இல்லை என்பது உண்மையாகி விட்டது. ஆனாலும் சிலரிடம் அந்தப் பொய்கள் நிலைத்திருக்கின்றன.


இன்னொரு கதையை பார்க்கலாம்.

ஒரு திருமண தம்பதி, மாப்பிள்ளை பெரும் பணக்காரன். அவன் தன்னளவில் உயர்ந்த பெண்ணை திருமணம் செய்தால், தனக்கு அடங்கமாட்டாள் என்ற ஆணடிமைத்தனத்தில், ஓர் நடுத்தர வர்க்கப் பெண்ணை திருமணம் செய்தான். நல்லவிதமாக திருமணம் நடந்தது. முதலிரவு அறையில், தன் மனைவியிடம் சொன்னான்,

“இத்தனை நாள், நான் நன்றாக சாப்பிட  கூட முடியாமல் கஷ்டப்பட்டேன். இனி நீ வந்துவிட்டாய். எனக்கு கவலைவிட்டது. எனக்கு பிடித்தமான உணவை சமைத்துதருவாய் என்று நம்புகிறேன்”

“சரிங்க, அப்படியே செய்கிறேன். எனக்கு தெரிந்த அளவிலும், புதிதாக கற்று சமைக்கவும் நான் தயங்காமல் சமைத்துத் தருகிறேன். உங்க திருப்திதான் எனக்கு முக்கியம்” என்றாள் மனைவி.

மறுநாள் காலையிலேயே, மனைவி அடுப்படிக்குச் சென்று இருக்கிற பொருள் எல்லாம் சரிபார்த்து, காலை உணவுக்கு சிறந்த உணவாக, கொஞ்சம் கேசரி, பொங்கல், இட்லி, சாம்பார், தேங்காய் சட்னி, கார சட்னி, மெதுவடை என்று அமர்க்களமாக செய்து வைத்தாள். தன் கணவன் எழுந்து வருவதற்குள் இதை அவனுக்கு சாப்பிட தயாராக இருக்கவேண்டும் என நினைத்து, பரிமாறும் அறையிலும் அடுக்கி வைத்துவிட்டு. கணவனை எழுப்பி விட்டாள்.

“எல்லாம் தயாராக இருக்கு, இன்னைக்கு நீங்க திருப்தியா சாப்பிடலாம்” என்று புன்சிரிப்போடு ஆவலாக சொன்னாள்.

அவனோ சாவகாசமாக காலைக்கடன் முடித்து, குளித்து வந்து சாப்பிட அமர்ந்தான். தன் முன் பரப்பி இருந்த உணவுகளை ஒவ்வொன்றாக மூடி திறந்து பார்த்தான். அவன் மனைவி பரபரப்பாக, அவனுக்கு ஓர் இலையைப் போட்டு, அதன் மேல் நீர் தெளித்தாள். 

“நான் செய்துக்கிறேன்” என்றான் அவன்.

சுதாரித்துக்கொண்ட அவள். “கேசரி வைக்கட்டுமா?” என்றாள்.

“சரி கொஞ்சமாக வை” என்று ஒவ்வொன்றாக அவள் கேட்டு கேட்டு வைத்து அவன் முகத்தை ஆர்வமாக பார்த்தாள்.

அவனோ, ஒவ்வொன்றாக சாப்பிட்டுப்பார்த்து, உதட்டை பிதுக்கினான்.

“ஏங்க, பிடிக்கலையா?” என்று குரல் தேம்பிட கேட்டாள்.

“ஆமா, என்ன செஞ்சி வச்சிருக்க? ஒரு ருசியும் சரியில்லை, எனக்கு பிடிக்கவும் இல்லை”

அவள் ஏறக்குறைய அழுதிடும் நிலைக்குப் போய்விட்டாள்.

“இதிலே என்னென்ன குறைன்னு சொன்னா அதை சரி செய்துக்கிறேன். இல்லைன்னா உங்களுக்கு எப்படி, என்னென்ன பிடிக்கும்னு சொல்லுங்க, அதுபடிவேனா செய்துதரேன்”

“இங்கபார், அதலாம் எனக்கு தெரியாது, எனக்கு என்ன புடிக்கும்னு சொல்லவும் மாட்டேன், நீயே அதைக் கண்டுபுடி” என்று சொல்லிவிட்டு கை அலம்பிட எழுந்துவிட்டான். இலையில் எல்லாமே அப்படியே இருந்தன.

“மத்தியானமாவது எனக்கு புடிச்சதா நாலு நல்லது செய்துவை, சரியா?” என்றவாறு வெளியே கிளம்பிவிட்டான்.

புது மனைவிக்கு தலை இருண்டுவந்தது. 


நாளையும் தொடர்வோம் அன்பர்களே!

வாழ்க வளமுடன்.

----




Medicine that doesn't work?!


வேலை செய்யாத மருந்து?!



கேட்காமல் கொடுப்படும் எந்த மருந்தும் நன்கு பலன் அளிக்காது. இந்த வார்த்தையின் உண்மை என்னவென்றால், அந்த மருந்துக்கு மதிப்பிருக்காது, அதாவது நோயாளி, கேட்காமல் வைத்தியர் கொடுத்த மருந்து அல்லவா? அதனால் இது வேலை செய்வதில் சந்தேகம் கொண்டு, நோயாளி நம்பிக்கை இழப்பார். சில நேரம், வைத்தியரையே “ஆகாத” வைத்தியர் என்று நோயாளி நினைத்துவிடவும் வாய்ப்பு அதிகம்.

“ஐயோ என்னால், தாங்க முடியவில்லை. இந்த நோய் துன்பத்திலிருந்து என்னை விடுவியுங்கள்” என்றவாறு நோயாளி நொந்து, வைத்திரியரிடம் மருந்து கேட்டிருந்தால், வைத்தியர் எந்த மருந்தை கொடுத்திருந்தாலும் கூட, நோயாளியின் நம்பிக்கையில் குணமாகிவிட சாத்தியம் உண்டு. 

இந்த உதாரணங்களைப்போலவே, நவீன கால உலகில், YouTubeல், வேதாத்திரிய சானல் வழியாக யோக, தவ, இறை உண்மைகளை விளக்கும் காணொளிகளை நாங்கள் தருவதும், அதை அன்பர்கள் பார்ப்பதும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

பெரும்பாலான அன்பர்களின் ஆதரவு, வேதாத்திரிய சானலுக்கு உண்டு. அவர்களை வாழ்த்தி மகிழ்கிறோம். ஆனால் உண்மைகள் மிகுதியாக போய் சேரவில்லையே என்ற ஆதங்கம் எங்களுக்கு உண்டு.

அன்பர்களே, இந்தக்கதையை கேளுங்கள்.

ஒரு ஞானியைக் கண்டு, ஒருவன் ,

“எனக்கும் யோகத்தில் ஆர்வமாக இருக்கிறது. கற்றுக்கொடுங்கள்”

“அப்படியா நாளைக்காலை என் ஆசிரமத்திற்கு வா”

“இன்றைய நாளிலேயே என்னை ஏற்றுக்கொள்ள மாட்டீர்களா?” என்றான் ஆர்வத்தில்.

“நாளைதான் உனக்கு பரிட்சை, அதில் தேர்ந்தால் ஏற்றுக்கொள்கிறேன்”

மறுநாள் அதிகாலை ஆசிரமம் சென்றுவிட்டான். ஞானி அப்பொழுதான் ஆற்றில் குளிக்க தயாராக நின்று கொண்டிருந்தார்.

“என்னோடு வா”

இவனும், ஞானியோடு கூட நடந்து ஆற்றை வந்தடைந்தான். ஞானி அவனின் கை பிடித்து இழுத்துக்கொண்டே, ஆற்றுக்கு நடுவில் இடுப்பளவு நீரில் நின்றுகொண்டார். திடீரென, அவனின் கழுத்தை பிடித்து அழுத்தி, தலை முழுதும் நீருக்குள் இருக்குமாறு அழுத்தப்பிடித்து அமுக்கினார். பதறிப்போய் அவன் தன்னை விடுவித்துக்கொள்ள போராடினான். ஞானி தன் கைகளை விலக்கி அவனை மேலே எழச்செய்தார். அவனோ மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கிக்கொண்டிருந்தான்.

“இப்போது உனக்கு என்ன தேவையாக இருந்தது?” என்று ஞானி கேட்டார்.

“மூச்சுக்காற்று”

“அதுபோல உனக்கு எப்போது யோகம் தேவைப்படுகிறதோ அப்போது என்னிடம் வா” என்று சொல்லிவிட்டு, “என்னிடம் உன்னை ஒப்புவிக்க உன் மனம் எப்பொழுது தயாராகிறதோ அதுவரை காத்திரு” என்றார்.

சீடனாக வந்தவனுக்கு, அப்பொழுதான் ஒரு ஞானியிடம், யோகம் கற்பதற்கான தகுதி என்ன என்பதை உணர்ந்தான்.

நாளை இன்னொரு உதாரண கதையோடு தொடர்வோம் அன்பர்களே!

வாழ்க வளமுடன்!




Body isn't your servant - Final post


இந்த உடல் உன் வேலைக்காரனல்ல, அப்படியானால் யார்? 





வணக்கம் அன்பர்களே!


உங்களுக்கு பரிசாக கிடைத்த உடல் மற்றும் உடல் உன் வேலைக்காரன் அல்ல எனும், 

இந்த பதிவு மற்றும் இதன் தொடர்ச்சி பதிவுகள் அனைத்தும், அமேசான் வழியாக ”இயற்கை வழங்கிய உங்களுக்கான பரிசு” எனும் தலைப்பில் மின்நூலாக வெளிவருவதால், இங்கே பதிவிட முடியாமைக்கு வருந்துகிறேன். உங்கள் ஆதரவுக்கு நன்றி.


அமேசான் கிண்டில் மின்நூல் வழியாக வாங்க அல்லது படிக்க, கீழே சுட்டுக.

இயற்கை வழங்கிய உங்களுக்கான பரிசு



----------------------

Photos Thanks to: Hian Oliveira / Eiliv-Sonas Aceron / National Cancer Institute