CJ for You: air

air

Showing posts with label air. Show all posts
Showing posts with label air. Show all posts

Ten top most wanted Mudra for Health and Peaceful Life with detailed explanations


வாழ்க வளமுடன் ஐயா, மனித வாழ்வில், உடலுக்கான நன்மையும், மன அமைதியும் உண்டாக்கும் பத்து முத்திரைகள் குறித்த விளக்கம் தாருங்கள்.

வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சியில், தனிப்பட்ட முத்திரைகள் இல்லை. ஆனால், தேவையான இடங்களில், சில முத்திரைகள் அமைந்திருக்கின்றன, அந்த முத்திரைகளின் தொகுப்பை தனியாக, வேதாத்திரியா சானலில் பதிவாக தந்திருக்கிறோம். அதை இங்கே காணலாம்.

இணைப்பு: வேதாத்திரிய உடற்பயிற்சியில் முத்திரைகள்

வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சியில், வேதாத்திரி மகரிஷியால் சேர்த்துக்கொள்ளப்படாத, முத்திரைகள் அவற்றின் தொகுப்பு ஏன் பின்னாளில், சேர்க்கப்பட்டன? காரணம், அவை பள்ளி, கல்லூரி, ஆராய்ச்சி மாணவர்களுக்கு பாடத்திட்டமாக மாற்றம் பெறும்பொழுது, யோகா என்ற தலைப்பின் கீழ், இவை தனிதொகுப்பாக சேர்த்துக்கொள்ளப்பட்டன. வேதாத்திரி மகரிஷியும் அதற்கான அனுமதி கொடுத்தார். இந்த முத்திரைகள், வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சிக்கு முன்னதாக, செய்து கொள்ளலாம். இனி முத்திரைகள் குறித்து பார்ப்போம்.

“முத்திரை (முத்ரா)” என்பது ஒரு சில மதங்களின் குறியீடாகவும், செய்கையாகவும் கூறப்படுகிறது. பெரும்பாலும் கை, விரல்களினால் செய்யப்பட்டாலும் முழு உடலை கொண்டும் முத்திரை காட்டப்படும்.

புத்தர் பல முத்திரைகளை கையாண்டிருப்பதை அவருடைய சிலைகளில் காணலாம்.

பரத நாட்டியத்தில் 200-க்கும் மேற்பட்ட முத்திரைகளும், மோகினி ஆட்டத்தில் 250-க்கும் மேற்பட்ட முத்திரைகளும் கையாளப்படுகிறது. தாந்தீரிகத்தில் 108 முத்திரைகள் உள்ளன. அன்றாட நம் உடல் ஆரோக்கியத்திற்கு கீழ்க்கண்ட 10 முத்திரைகள் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன.

நமது கைகளின் ஐந்து விரல்கள் ஐம்பூதங்களை குறிக்கின்றன.

1. கட்டைவிரல் – தீ

2. ஆள்காட்டி விரல் – காற்று

3. நடுவிரல் – ஆகாயம்

4. மோதிரவிரல் – நிலம்

5. சுண்டுவிரல் – நீர்

Click for Big View


இந்த ஐந்து விரல்களை பயன்படுத்தி முத்திரை ஆசனங்கள் செய்தால் உடல் நலம் கூடும்.

1. அறிவு முத்திரை:

ஆள்காட்டி விரல் நுனி கொண்டு கட்டை விரல் நுனியை தொடவும். மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும்.

கட்டை விரல் நுனிகள் பிட்யூட்டரி மற்றும் எண்டாக்ரின் சுரப்பிகளுக்கு ஆதாரம்.

ஆள்காட்டி விரல் நுனியால் அழுத்தம் கொடுக்கும்போது மேற்கண்ட சுரப்பிகளின் இயக்கம் சுறுசுறுப்படையும்.

இந்த முத்திரையை நின்ற நிலை, உட்கார்ந்த நிலை, படுத்த நிலையிலும் செய்யலாம்.

அறிவை கூர்மையாக்கி நினைவாற்றலை அதிகரிக்கும். தூக்கமின்மையை போக்கும். கோபம் குறையும்.

2. வாயு முத்திரை:

ஆள்காட்டி விரலை கட்டை விரல் அடியில் வைத்து கட்டை விரலால் அழுத்தவும்.

மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். 45 நிமிடங்கள் தொடர்ச்சியாக செய்தால் வாயுவால் ஏற்படும் தொந்தரவை 24 மணி நேரத்தில் நிவர்த்தி செய்யும்.

தொடர்ந்து 2 மாதங்கள் செய்து வந்தால் வாயுப்பிடிப்பு, கீழ் வாதம், பாரிச வாயு போன்ற வியாதிகளை கட்டுப்படுத்தும்.

வயிறு சம்பந்தப்பட்ட வாயு உபாதைகளும் நீங்கும்.

3. சூன்ய முத்திரை:

நடு விரலை சுக்கிர மேட்டின் மேல் வைத்து கட்டை விரலால் அழுத்தவும்.

மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். உடல் சோர்வை இது நிவர்த்தி செய்யும்.

தினமும் 40 முதல் 60 நிமிடங்கள் செய்ய வேண்டும். காது தொடர்புடைய நோய்களை இந்த முத்திரை கட்டுப்படுத்தும்.

4. பூமி முத்திரை:

மோதிர விரல் நுனி கொண்டு கட்டை விரல் நுனியை தொடவும். மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும்.

சோர்வை இது குறைக்கும். இந்த முத்திரையை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம்.

சோர்வான எடை குறைந்தவர்களுக்கு உடல் எடை கூடும். மேனி அழகை கூட்டி பளபளப்பாக்கும். உடலை சுறுசுறுப்பாக்கி ஆரோக்கியத்தை நிலைப்படுத்தும்.

நடு விரலை சுக்கிர மேட்டின் மேல் வைத்து கட்டை விரலால் அழுத்தவும் – மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும்.

உடல் சோர்வின்மையை இது நிவர்த்தி செய்யும். தினமும் இப்படி 40 முதல் 60 நிமிடங்கள் செய்து வந்தால் நோய் குணமாகும்.

காது வலியை 4 அல்லது 5 நிமிடத்தில் குணமாக்கும். காது கேளாதோர் மற்றும் மூளை பாதிக்கப்பட்டோர்க்கு இந்த முத்திரை உதவும்.

பிறவி நோயாக இருந்தால் பயன் தராது.

5. வாழ்வு முத்திரை:

சின்ன விரல் மற்றும் மோதிர விரலை மடக்கி கட்டை விரலால் அழுத்தவும்.

மற்ற இரு விரல்களும் நேராக இருக்க வேண்டும். பெயருக்கு ஏற்றார்போல் வாழ்வின் சிறப்பிற்கு வகை செய்யும்.

இந்த முத்திரையை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். வைட்டமின் குறைபாடு நீங்கும். சோர்வு நீங்கும். கண்பார்வை சிறப்பாகும்.

6. ஜீரண முத்திரை:

நடு விரல் மற்றும் மோதிர விரல் நுனியின் மூலம் கட்டை விரல் நுனியை தொட வேண்டும்.

மற்ற இரு விரல்களும் நேராக இருக்க வேண்டும். தினமும் குறைந்தது 45 நிமிடங்கள் பயிற்சி தரவும். சர்க்கரை வியாதி, மலச்சிக்கல் போன்றவற்றை சீராக்கும்.

7. இதய முத்திரை:

நடு விரல் மற்றும் மோதிர விரல் நுனிகள் கட்டை விரல் நுனியை தொட வேண்டும்.

ஆள் காட்டி விரல் நுனி கட்டைவிரலின் அடியை தொட வேண்டும். சின்ன விரல் மட்டும் நேராக இருக்க வேண்டும்.

இது இதய நலத்துக்கு சிறந்தது. இதய நோய் உள்ளவர்கள் தினமும் இருமுறை தலா 15 நிமிடம் செய்தால் பலன் தெரியும்.

8. சூரிய முத்திரை:

மோதிர விரலை மடக்கி கட்டை விரலால் அழுத்தவும்.

தைராய்டு சுரப்பியை தூண்டும் சக்தி இந்த முத்திரைக்கு உண்டு.

தினமும் இரு முறை 5 முதல் 15 நிமிடங்கள் பயிற்சி தரலாம். கொலஸ்ட்ராலை குறைக்க உதவும்.

நிம்மதியின்மை, ஜீரணமின்மை போன்ற குறைபாட்டை களைய வகை செய்யும்.

9. நீர் முத்திரை:

சின்ன விரல் நுனி கொண்டு கட்டை விரல் நுனியை தொடவும்.

மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். இது உடலில் உள்ள நீரை கட்டுப்பாட்டில் வைத்து நீர் குறைவால் ஏற்படும் குறைகளை நிவர்த்தி செய்யும்.

இதனை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். ஜீரண கோளாறு மற்றும் சதை பிடிப்புகள் வராது.

10. லிங்க சக்தி முத்திரை:

இரு கைகளையும் சேர்த்து விரல்கள் ஒன்றுக்கொன்று பின்னி இருப்பது போல் சேர்த்து கொள்ளவும்.

இப்படி செய்யும்போது இடது கை கட்டை விரல் நேராகவும் வலது கை கட்டை விரல் மற்றும் ஆள் காட்டி விரல் நடுவில் இருக்குமாறும் வைத்துக் கொள்ளவும்.

இது உடலில் உஷ்ணத்தை தரும். எனவே இதை பயிற்சி செய்யும்போது நெய், அதிக நீர் மற்றும் பழ ரசம் பருகவும்.

இதை அதிக நேரம் செய்யக் கூடாது. ஏனெனில் இந்த முத்திரை குளிர் காலத்தில் செய்தால் கூட வியர்வை வரும்.

கபம் மற்றும் சளி போன்ற சுவாச சம்பந்தப்பட்ட வியாதிகளை குணப்படுத்த வல்லது.

வாழ்க வளமுடன்!

-

Do you know the true secret of the great life force you receive? Do you know how to protect it?


உங்களுக்கு கிடைக்கும் மகத்தான உயிர்சக்தியின் உண்மை ரகசியம் அறிவோமா? அதை எப்படி பாதுகாக்கலாம் தெரியுமா?


இந்த உலகில் நிலையாக இருப்பதை, அசையாமல் இருப்பதை பொருள் என்கிறோம். ஆனால் அசையும் ஒவ்வொன்றையும், உயிர் என்று அழைக்கிறோம். அசையும் ஒரு கருவிக்கு, மின்சாரம் என்ற சக்தி அவசியமாகிறது. அதுபோல ஜீவன்களுக்கு, உயிர் சக்தி அவசியமாகிறது. மனிதனுக்கும் அவ்வாறு தான். எனினும், மனிதனுக்கு மட்டுமே அந்த சக்தியை, இன்னும் அதிகமாக கூட்டிக்கொள்ளவும், இருப்பாக்கி வைக்கவும் முடிகிறது. இந்த சக்தியால் தான், நாம் தினமும், இயங்குகிறோம், உழைக்கிறோம், சேவை செய்கிறோம், இன்பங்களை அனுபவிக்கிறோம். இந்த சக்தி நான்கு வகையாக கிடைக்கும். 

நாம் உண்கின்ற உணவு வழியாகவும், நாம் சுவாசிக்கும் காற்றின் வழியாகவும், வானில் உலாவுகின்ற நட்சத்திரங்கள், கோள்கள் வழியாகவும், பூமியின் மையத்தில் எழுகின்ற அணுக்களின் வழியாகவும், உயிர் சக்தி நமக்கு கிடைக்கிறது. இதை நாம் தினமும், உடலுக்குள்ளாக தக்கவைக்க வேண்டும் அல்லவா? அதற்காகவேதான், தூக்கம் என்பது அமைகிறது. அந்த தூக்கம் ஆழ்ந்த அமைதியான, கனவுகள் இல்லாத, அரை விழிப்பு இல்லாத, தூக்கமாக இருக்க வேண்டியது அவசியம். உயிர் சக்தியை கூட்டுவது மட்டுமில்லாமல், நம்முடைய சக்தி இழப்பையும் கூட, தூக்கம் சரி செய்கிறது.

இந்த உயிர்சக்தி, நமக்கு இருப்புக்கு மேலே இருந்தால், மகிழ்ச்சி என்பது உங்களோடு இருக்கும். கவலை, வருத்தம், சோர்வு, அசதி, வலி இப்படி எதுவுமே உங்களை அணுகாது. அதோடு யாருக்காவது உதவலாமே? என்ற எண்ணம் உங்களுக்குள் மேலோங்கும். முதலில் நீங்கள் மகிழ்வாக, சந்தோசமாக இருக்கலாம். உங்கள் வீட்டில் மற்றவர்களை சந்தோசப்படுத்தலாம். உங்கள் வாழ்க்கைத் துணையை பாராட்டி மகிழலாம். அன்பை பெருக்கலாம். உங்கள் நண்பரோடு நட்பை பாராட்டலாம். சமூகத்திற்கும் உங்களுடைய பங்கை அளித்து, நீங்களும் பயன்பெறலாம். இவ்வளவு நன்மைகள் இருக்கிறது.

ஆனால், நாம், ஏற்கனவே இருக்கிற, உயிர்சக்தியை இழந்துகொண்டே, ஒவ்வொரு நாளும் தடுமாறுகிறோம். தூக்கத்தை தள்ளிப் போடுகிறோம். காரணமில்லாமல் சினம் கொள்கிறோம். நம்மோடு இருப்பவர்களிடமே கோபத்தை காட்டுகிறோம். அடிக்கடி கவலை, குழப்பம், தடுமாற்றம் நிகழ்கிறது. உடல் சோர்வாக இருக்கிறது. மிச்சமிருக்கும் சக்தியை, ஆர்வத்தாலும், ஆசையாலும், எதிர்பார்ப்பாலும், தவறாகவும் பயன்படுத்தி, சிக்கிக் கொள்கிறோம். வாழ்வே வேண்டாம் என்ற முடிவுக்கும் வந்து விடுகிறோம் தானே? இதற்கெல்லாம் ஒரே வழி, உயிர்சக்தி விளக்கமும், சிந்தனையுமே ஆகும்.

வாழ்க வளமுடன்.

Why need important of exercise before the practice Kundalini Yoga Part 02


குண்டலினி யோகம் கற்கும் முன்பாக ஏன் உடற்பயிற்சி முக்கியமாகிறது? Part 02


        வாழ்க வளமுடன். மனிதனாக இவ்வுலகில் பிறந்தவனுக்கு, வாழும்வரை உடல் சொந்தம், அந்த உடல் இருக்கும்வரைதான், அவனும் இந்த உலகில் இன்பங்களை அனுபவித்து மகிழவும் முடியும். இந்த உண்மையின்படி, மனிதன் என்பவன் உடலா? என்ற கேள்வி எழுப்பினால், இல்லை என்றுதான் பதில் தருவீர்கள். உடல் என்பது மனிதன் இல்லையானால், மனிதனாக இருக்கும் நீ யார்? என்ற கேள்வியை கேட்டால், அந்த கேள்வியை உங்களுக்குள்ளாக திருப்பிவிட்டு, நான் யார்? என்று கேட்க வேண்டும். அப்படி இந்த கேள்விக்கு பதில் அறியவேண்டுமானால், நீங்கள் யோகத்திற்கு வரவேண்டும்.

        நான் யார்? என்ற கேள்விக்கான பதில், எப்போது கிடைக்கும்? என்று உறுதியாக சொல்ல முடியாது. வேறு யாரும் கணித்து சொல்லவும் முடியாது. உங்களுக்கு தீட்சை வழங்கிடும், ஆசானும், குருவும் கூட, இதை சொல்லமுடியாது. உங்களை அந்த நிலைக்கு உயர்த்தித் தருவது அவர்களின் வேலை. விடையை, பயிற்சியாலும், முயற்சியாலும், ஆராய்ச்சியாலும் கண்டுபிடிப்பது உங்களின் வேலைதான். சந்தேகமில்லை. இந்த பதில் கிடைக்கும் வரை, நீங்களும், உடலும் நலமாக இருக்கவேண்டுமே? அதற்கு உடலும் துணையாக இருக்கவேண்டும் அல்லவா? இல்லையேல், நோக்கம் நிறைவேறாது.

        இந்த உண்மையை அறிந்த சித்தர்களும், ஞானியர்களும், குண்டலினி எனும் தீட்சைக்கு முன்னால், உடலை வளப்படுத்தி தக்கவைக்கும், பயிற்சிகளை கண்டறிந்தார்கள். அதுதான் உடற்பயிற்சியாகவும், யோக ஆசனங்களாகவும், காயகல்ப யோக கலையாகவும் மலர்ந்திருக்கிறது. அப்படியும் கூட, சிலருக்கு, வாழ்நாள் போதாமல் கவலைப்பட்டிருக்கிறார்கள். இதையெல்லாம், பதஞ்சலி முனிவர், அஷ்டாங்க யோகம் என்ற எட்டு படி நிலைகளாக அமைத்துத் தந்தார். இயமம், நியமம், ஆசனம், பிரணாயமம், தாரணா, பிரத்தியாகாரா, தியானம், சமாதி ஆகினவே அந்த எட்டு படி நிலைகள் ஆகும்.

        இந்த இயமம், ஏற்கனவே இருக்கும் வழக்கங்களை விட்டொழிப்பது ஆகும். நியமம், புதிய வழங்கங்களை பற்றிக்கொள்வது ஆகும், இதன் பிறகுதான், உடலை, மனதை, உயிரை வலுப்படுத்தி, உரமூட்டும் ஆசனம் கிடைக்கிறது. வடமொழியில் ஆசனம் என்றால், தமிழில் அது உடற்பயிற்சிதான். அத்தகைய பயிற்சியே யோகத்தில் பலவாறாக வழங்கப்படுகிறது. வேதாத்திரி மகரிஷி அவர்கள், தன்னுடைய அன்பர்களின் மேல், அக்கறை கொண்டு, உடற்பயிற்சிகளை கற்று, மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுத்து, விளைவுகளுக்கு ஏற்றபடி மாற்றமும் செய்து கொண்டார். மேலும் புதிய முறைகளும் தந்தார்.

        வேதாத்திரி மகரிஷி அவர்கள், ஹோமியோபதி சிகிச்சை முறையில், மருத்துவர் என்பதால், அதற்கு ஏற்றபடியும், உடற்பயிற்சியை திருத்தி அமைத்தார். உலக நாடுகள் பலவற்றுக்கும், ஆன்மீக வகுப்பு காலங்களில், மக்களின் கலாச்சாரங்களையும், அதனோடு கலந்த உடற்பயிற்சிகளை அறிந்து, உலகமக்கள் எல்லோருக்கும் பொதுவான, எளியமுறை பயிற்சியாக, அதை வடிவமைத்தார். இந்த வகையில்தான், குண்டலினி யோகம் கற்கும் முன்பாக, உடலை வளப்படுத்தியாக வேண்டும் என்ற நிலைபாடுகளில்தான், உடற்பயிற்சி கட்டாயம் என்பதாக மாற்றம் பெற்றது. அதுவே இன்றும் தொடர்கிறது.

 வாழ்க வளமுடன். 

-

Why need important of exercise before the practice Kundalini Yoga Part 01


குண்டலினி யோகம் கற்கும் முன்பாக ஏன் உடற்பயிற்சி முக்கியமாகிறது? Part 01


        வாழ்க வளமுடன். உலகில், அக்காலம் முதல் இக்காலம் வரை, பொதுவாகவே உடலை வளமாக்கும் வேலைகளும், ஆசனங்களும், உடலுக்கான பயிற்சிகளும் நடைமுறையில் இருந்தன. கால மாற்றத்திலும், விஞ்ஞான வளர்ச்சியிலும், வேலைகள் எளிதானதாக மாறிவிட்டது, மனிதனுக்கு நடைப்பயணம் என்பது கூட இல்லை, இதனால், உடல் தன் இயக்கங்களில் பெரும் மாற்றம் பெற்றுவிட்டது. வேலை, வியாபரம், தொழில் ஆகியன எல்லாமே, உட்கார்ந்து செய்யக்கூடிய நிலைக்கு மனிதவாழ்வு மாறிவிட்டது. எனினும் கடின உழைப்பாளிகள் இருப்பதை மறுக்க முடியாது. உடலுக்கு எப்போதும் அசைவுகள் தேவை.

ஏனென்றால், உடல் பஞ்சபூத தோற்றங்களால் ஆனது. மண் என்ற கெட்டிப்பொருள் உடலாகவும், உடல் உறுப்புகளாகவும். நீர் என்பது உடலெங்கும் ஓடும் ரத்தமாகவும், வெப்பம் என்பது, உடல் நடத்திட உதவும் மின்சாரமாகவும், காற்று என்பது உயிர்காற்றாகவும், சுவாசமாகவும், விண் என்பது மனிதனுக்கும், ஜீவன்களுக்கும் உயிராகவும் இருக்கிறது. இவை எல்லாமே அணுக்களின் கூட்டு என்பதை மறந்துவிடக்கூடாது. அணுக்கள் என்றாலே, எப்போதும், என்றும் இயக்கமும் இருக்கும். அந்த இயக்கங்களில், தடை ஏற்படாத நிலையில், பாதுகாப்பாக இருக்கவேண்டியது அவசியம்.

முக்கியமாக, உடலாக நாம், நம்மை அறிகிறோம். அது நிலையாக இருப்பதாக உணர்கிறோம். ஆனால், உடல் செல்கள் அன்றாடம் வளர்ந்து கொண்டே இருக்கிறது. புதியது உருவாகவும், பழையது உதிரவும் செய்கிறது. இதை நாம் அறிவதில்லை. உடலுக்குள் காற்று ஓட்டம், வெப்ப ஓட்டம், ரத்த ஓட்டம் சீராக, ஓடிக்கொண்டே வருகிறது, இதனோடு உயிரோட்டமும், ஜீவகாந்தம் என்ற அலை இயக்கமும் ஓடுகிறது. காற்று, வெப்பம், ரத்தம் இவைகளின் ஓட்டத்தில், எந்த தடை வந்தாலும், அங்கே வலி உண்டாகும். வலி தேக்கமுற்றால், அது நோயாக மாறிவிடும். நோய் உறுப்புக்களை சிதைக்கும்.

வலி, நோய், உறுப்புகளின் சிதைவு ஆகிய எல்லாமே, மனதையும், உயிரையும் தாக்கும். மருந்துகளால் சரி செய்யமுடியும் என்றாலும் கூட, பழைய நிலைமைக்கு கொண்டு வருவதிலும், திருத்தி அமைப்பதிலும் சிக்கல் உண்டு. இயந்திரங்கள் போல, மாற்று உறுப்புக்களும் உடனடியாக பொருந்துவதும் இல்லை. எனவே, மனிதன் வருமுன் காப்பதில், கவனமும், அக்கறையும் கொள்ள வேண்டியதாக இருக்கிறது. உடலியக்கம் சுருங்கிவிட்ட இக்காலத்தில், உடற்பயிற்சி மிக முக்கிமானதாக அமைகிறது. உடல், மனம், உயிர் என்ற இணைப்பு சிறப்பாக இருந்தால்தான் வாழ்நாளும் நீடிக்கும்.

உடற்பயிற்சி என்பதை விட, குறிப்பிட்ட நேரம், நடந்தால் கூட நல்லதுதான் என்ற நிலைக்கு, மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். ஆனால், வெறுமனே நடப்பது மட்டும், முழுமையான உடல், உடல் உறுப்பு மாற்றங்களை, நலத்தை உருவாக்கி விடுவதில்லை. இதனால், உடலுக்கும், உடலுறுப்புக்கும், தனித்தனியான பயிற்சிகள் அவசியமாகிறது. பருவ வயதில் இருந்து, உடற்பயிற்சியை செய்துவர ஆரம்பித்தால், உடல், மன, உயிர் இயக்கம் மிக ஆரோக்கியமாக இருக்கும் என்பது உறுதி. உடல் இல்லாமல் உணர்வு ஏது? இன்பங்கள் ஏது? உலக வாழ்க்கையும் ஏது? இன்னும் தொடரும்.

வாழ்க வளமுடன். 

-

Guide me with truth of Pancha Bootha Navagraha Thavam!


பஞ்ச பூத நவக்கிரக தவம் செய்துவந்தால், நம் ஜாதகத்தில் அவ்வப்பொழுது இருக்கின்ற பிரச்சனைகளுக்கு பரிகாரமாக அமையுமா? கோள்களின் நன்மையை பெறமுடியுமா? ஆலோசனை தேவை.



வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி: 

வாழ்க வளமுடன் ஐயா, பஞ்ச பூத நவக்கிரக தவம் செய்துவந்தால், நம் ஜாதகத்தில் அவ்வப்பொழுது இருக்கின்ற பிரச்சனைகளுக்கு பரிகாரமாக அமையுமா? கோள்களின் நன்மையை பெறமுடியுமா? ஆலோசனை தேவை.

பதில்:

யோகத்தில் இணைந்து தீட்சை பெறாவிட்டாலும் கூட, தனிநபராகவே இந்த பஞ்ச பூத நவக்கிரக தவம் செய்து நன்மையை பெறலாம் என்பது, இத்தவத்தின் சிறப்பாகும். இந்த பிரபஞ்சமும் உலகமும் உண்டாவதற்கு காரணமான பஞ்ச பூத தோற்றங்களை வணங்குவதும், அதன் அருளைப் பெறுவதும், நாம் வாழும் இந்த பூமி உட்பட, சூரிய குடும்பத்தில் உள்ள 7 கோள்களையும், நிழல் கிரகங்களான ராகு கேது ஆகியவற்றையும் வணங்கி அருளைப்பெறுவதும்தான் இந்த ‘பஞ்ச பூத நவக்கிரக தவம்’ஆகும்.

பரிகாரம் என்ற ஒன்று ஜோதிடத்தில் இருந்தாலும், அந்த பரிகாரம் செய்வதால் எதும் மாறிவிடுவதில்லை. அது அகன்றுவிடுவதும் இல்லை. தீர்மானிக்கப்பட்ட ஒன்று, நிச்சயிக்கப்பட்ட ஒன்று நிகழ்ந்தே தீரும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. வில்லில் ஏற்றப்பட்ட அம்பு, பின்னோக்கி இழுக்கப்பட்டால், அது பாய்ந்துதானே தீரும்?! அதை நாம் நிறுத்திட முடியுமா? எனவே பரிகாரம் செய்தாலும்கூட, அது நிகழந்தே தீரும் என்பது உறுதி. எனினும் அதை தாங்கிக் கொள்ளக்கூடிய திடம் கிடைத்துவிடும்.

ஒரு கோவிலுக்குச் சென்று, பூஜை, பரிகாரம், வழிபாடு, நவகிரகங்களை சுற்றிவருதல் ஆகியன எப்படி உங்களுக்கு திருப்தியும், பலனும் அளிக்குமோ, அதைவிடவும் நிறைவான முழுமையான திருப்தியை, பலனை,  ‘பஞ்ச பூத நவக்கிரக தவம்’ செய்வதால் பெறலாம். ஆனால், ஏதோ ஒருநாள் செய்துவிட்டால் போதும் என்று நினைத்துவிட முடியாது. குறிப்பிட்ட காலம் வரை தொடர்ந்து செய்துவர வேண்டும். பொதுவாக வாரத்தில் மூன்று நாள் காலையிலோ, மாலையிலோ செய்துவரலாம்.

அவசர கோலத்தில் இல்லாமல், பொறுமையாக, அதற்குரிய நேரம் கொடுத்து, தவம் இயற்றிவருதல் சிறப்பு. நீங்களே வார்த்தைகளாக சொல்லியும் தவம் இயற்றலாம். காணொளி, ஒலி வழியாகவும் கேட்டு தவம் இயற்றலாம். எப்படியாயினும், தவத்தில் நல்ல ஓர்மை நிலை இருக்கவேண்டும். மனம் அதில் ஒன்றி இருப்பது அவசியம்.

இந்த  ‘பஞ்ச பூத நவக்கிரக தவம்’ வழியாக, விண், காற்று, வெப்பம், நீர், மண் ஆகிய பஞ்ச பூதங்களோடு மனதை இணைத்து அதன் நன்மையையும், காப்பையும் பெறுகிறோம். அதுபோலவே, சூரியன், புதன், சுக்கிரன், சந்திரன், செவ்வாய், குரு, சனி, ராகு, கேது ஆகிய கிரகங்களின் மீது மனதை ஒன்றிணைத்து, நன்மையையும், காப்பையும் பெறுகிறோம்.  ‘பஞ்ச பூத நவக்கிரக தவம்’ நம் உடலுக்கும், மனதிற்கும், உயிருக்கும் சிறப்பை தரக்கூடியதவம். நிச்சயமாகவே நம் ஜாதகத்தில் காணப்படுகின்ற ‘கோளாறுகளுக்கு’ தீர்வாகவே அமையும் என்பது உறுதி.  யோகத்தில் தீட்சை பெற்று, இத்தவம் இயற்றும்பொழுது, கூடுதலான ஒரு விளக்கமும், முன்னேற்றமும் கிடைக்கும் என்பதும் உண்மை.

வாழ்க வளமுடன்
-

Does a dead soul leave immediately? Where is it going?


இறந்த உயிர் உடனடியாக வெளியேறிவிடுமா? எங்கே போகிறது?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி: 

வாழ்க வளமுடன் ஐயா, இறந்த உயிர் உடனடியாக வெளியேறிவிடுமா? எங்கே போகிறது?


பதில்:

கருவிலே தொடங்கிடும் நம்முடைய உயிரின் பயணம், பிறந்து வாழ்கின்ற காலமுழுவதும் கூடவே பயணித்து, குறிப்பிட்ட காலத்தில், வாழ்நாளின் முடிவில் உடலை விட்டு பிரிந்துவிடும். இது இயற்கையின் நியதியாகும். எந்த மாற்றத்திற்கும் உட்பட்டதல்ல. இது எல்லா ஜீவன்களுக்குமே உரித்தானதுமாகும். குரு மகான் வேதாத்திரி மகரிஷி சொல்லுவது போல, ‘இது இயற்கையின் நீதி. இதில் தப்பித்தோர் யாருமில்லை. ஒரு நூறாண்டு என்று எடுத்துக்கொண்டால், அன்று வாழ்ந்தவர்கள் இன்று இல்லை. இன்று வாழ்ந்து கொண்டிருப்பவர்கள், அடுத்த நூறாண்டுகளில் இருக்கப்போவதும் இல்லை’.

நம்முடைய உடல், உயிர், மனம் கூடவே இன்னொன்றான ஆன்மா (ஆத்மா) இதில் நாம் யார்? என்ற கேள்வி எழுவது இயல்பு. அந்த நாம் யார்? என்று நான் சொல்லுவதை விட, ‘நான் யார்?’ நீங்களே உங்களுக்குள்ளாக கேட்கும் பொழுதான் அங்கே உங்களுக்கான ஆராய்ச்சி தொடங்கும். எனவே அதில் நான் குறுக்கே நிற்கப்போவது இல்லை. ஆனால் நாம் உயிர் அல்ல என்பதை மட்டும் என்னால் சொல்ல முடியும்.

‘ஆனால் நாம் உயிரால்தானே வாழ்கிறோம்’ என்று சொல்லுவீர்கள். ஆம் அது உண்மைதான். நாம் + உயிரால் = வாழ்கிறோம். இங்கே நாம் தனித்து நிற்பதை அறிவீர்களா? உயிரால் வாழ்கிறோம்,. உயிரில்லையேல் நாமும் இல்லை. அப்படியென்றால் நாம் யார்? அதுதான் ‘நான் யார்?’ என்ற கேள்வியில் கிடைப்பதாகும்.

உயிர், தினமும் நம்மைவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக பிரிந்து கொண்டேதான் இருக்கிறது. அதனால்தான் காலையில் இருக்கும் உற்சாகம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, சோர்ந்துபோய், களைத்து உறங்கிவிடுகிறோம். சிலர் மயக்கமே அடைந்துவிடுகிறார்கள். அதை சரிசெய்யவே, காற்று, தண்ணீர், உணவு, பூமியின் மையப்பகுதியில் இருந்து வரும் சக்தி அலைகள் நமக்கு உதவுகிறது. என்றாலும், ‘ஒரு நாள் என்பது உயிரை அறுத்தெறியும் வாள்’ என்றுதான் ஆசான் திருவள்ளுவர் தன் குறள் வழியாக சொல்லுகிறார். அதுவும் உண்மைதான்.

வாழ்நாளின் காலம் முடிந்துவிட்டால், காலன் வந்துவிட்டான்  என்று சொல்லுவார்கள். வடநாட்டில் காளி என்றும் சொல்லுவார்கள். உயிர் உடனடியாக நம் உடலை விட்டு வெளியேறிவிடும். உயிரின் தன்மை எப்போதும் தனித்தன்மை வாய்ந்தது. உடனடியாக வெளியேறி, உடலுக்கு அப்பாலுள்ள, விண் துகள்கள் களத்தோடு இணைந்துவிடும். ஏன்? வெளியே விண்ணாக (ஆகாஷ்) இருப்பதுதான் உடலளவில் உயிராக இருக்கிற உண்மை அறிவீர்களா? மற்றபடி உயிர் எங்கேயும் போய்விடுவதில்லை. 

என்ன? ஏதேனும் என்னோடு வாள் சுழற்ற தயாராக இருக்கிறீர்களோ? பார்க்கலாம்.

வாழ்க வளமுடன்

-

Please let me know the Vethathiriya simplified exercise within simple words!


எளியமுறை உடற்பயிற்சி சிறப்பு குறித்து எத்தனையோ விபரங்கள் இருக்கின்றன. அவை படிக்க கேட்க அலுப்பூட்டுகிறது. அதனால் சுருக்கமாக சொல்லமுடியுமா?



வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, எளியமுறை உடற்பயிற்சி சிறப்பு குறித்து எத்தனையோ விபரங்கள் இருக்கின்றன. அவை படிக்க கேட்க அலுப்பூட்டுகிறது. அதனால் சுருக்கமாக சொல்லமுடியுமா?

பதில்:

வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சியின் சிறப்பை மிக எளிமையாக, சுருக்கமாக சொல்லமுடியுமே. குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள், ஆரம்ப காலம் முதலாகவே, எளியமுறை உடற்பயிற்சியில் அவ்வப்பொழுது குறைகளை நிவர்த்தி செய்துகொண்டே வந்தார். ஆண்பாலருக்கு மட்டுமல்லாமல், பெண்பாலருக்கும் உண்டான பொருத்தங்கள், விளைவுகள், சங்கடங்கள், பலன்கள் இவற்றை ஆராய்ந்து திருத்தங்களும் செய்து வந்தார். அதை மறுபயிற்சியில் திருத்தங்களோடு சொல்லியும் வந்தார். அறிவும், அனுபவமும் கொண்ட மருத்துவர்களையும், மருத்துவ ஆலோசகர்களையும் கலந்தாலோசித்தும், அவர்கள் சொன்ன கருத்துக்களையும் ஏற்று, திருத்தம் அமைத்துக் கொண்டபிறகுதான், முழுமையான இப்போது இருக்கும், வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சி நமக்கு கிடைத்திருக்கிறது.

இந்தபயிற்சியில், அதை வடிவமைத்த வேதாத்திரி மகரிஷியே எளிய விளக்கங்களை மட்டுமே தந்து நிறுத்திக்கொண்டார். கேட்பவர்களையும், பயிற்சியில் ஆர்வமுள்ளவர்களையும், பயிற்சி கற்றுக்கொண்டவர்களையும், கற்றுக்கொண்டு இருப்பவர்களையும் குழப்பவில்லை. ஆனால் இன்று அதற்கு மாறான போக்கு வந்துவிட்டது, விபரம், நுணுக்கம், அற்புதம், அது இது என்று பல்வேறு வகையான, பல்லாயிரக்கணக்கான தகவல்கள் ‘வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சியில்’ கிடைக்கிறது. காலத்தின் மாற்றம் என்பதில் ஐயமில்லை. எனவே ஏற்றுக்கொள்ளக் கூடியதுதான்.

இதனால்தான், உங்களுக்கு எளியமுறை உடற்பயிற்சி சிறப்பு குறித்து எத்தனையோ விபரங்கள் இருக்கின்றன. அவை படிக்க கேட்க அலுப்பூட்டுகிறது. உங்கள் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் மிக எளிமையாக, சுருக்கமாக இங்கே உண்மைகளை தருகிறேன். உலகில் இப்போதும் நாம் செய்துவருகின்ற எல்லாவிதமான உடற்பயிற்சிகளும் நம்முடைய உடல் இயக்கத்தை சரி செய்கிறது. இதில் வயதுக்கு ஏற்றமாதிரியான பயிற்சிகளும் உண்டுதான். சில உடற்பயிற்சிகள் குறிப்பிட்ட இடங்களில் இருக்கும் எலும்புகள், தசைகள் இயக்கங்களை மறு சீரமைப்பும் செய்கிறது. வலி ஏற்படுத்தினாலும், நாளைடைவில் தானாக சரி செய்யும். உடலுக்கு போதுமான இரத்த ஓட்டத்தையும் காற்று சுழற்சியையும் தடையற்று இயக்குகிறது, உடல்வெப்பம் இயல்பாகிறது. என்றாலும் கூட, சில அசைவுகள் முரண்பாடானவை என்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

இத்தகைய பயிற்சிகளில், கவனம் செலுத்தி வந்த குருமகான் வேதாத்திரி மகரிஷி, அதை முழுவதுமாக சீராக்க நினைத்து ஆராய்ந்தார். ஓவ்வொரு நாட்டிற்கு செல்லும்பொழுதெல்லாம். அவர்களின் சமூக கட்டமைப்பில் இருக்கும் உடல், மனம் தொடர்பான வேலைகள், பயிற்சிகளை கேட்டுத்தெரிந்து கொண்டார். அதை பயிற்சியாக இணைத்தும்கொண்டார். அதனால், வேறெந்த உடற்பயிற்சிகளுக்கும் மேலாக வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சி உடலுறுப்புக்களின் இயக்கத்தை சீரமைத்து வலு ஊட்டுகிறது.

உடலில் ஒவ்வொரு உறுப்புக்களிலும், சதை, தசை, எலும்பு ஆகியவற்றின் இயக்கங்களிலும், அவற்றின் மூலக்கூறு, செல் அமைப்புகளிலும் நாம் செய்கின்ற செயல்கள், இயக்குகின்ற இயக்கங்கள் பதிவுகளாகிவிடுகின்றன. தேவைக்கேற்றபடி தானாகவோ, விரும்பும் பொழுதோ, சூழ்நிலையாகவோ அவை மறுபடி செயலாக மலர்கின்றன. அப்படியாக, இதுவரை நாம் செய்துவந்த செயல்களின் வழி

பதிந்த தேவையற்ற முரண்பாடான உடலியக்க பதிவுகள் சீராக்கப்படுகின்றன. இவை எல்லாவற்றையும் விடவும் முக்கியமாக, இயற்கையோடு ஒன்றிணைந்து உடல், மனம், உயிர் ஒத்துழைப்பாக இயங்க வழி தருகிறது!

வாழ்க வளமுடன்
-

Vethathiri Maharishi Simplified exercise, you and your health


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, எளியமுறை உடற்பயிற்சி செய்ய நினைக்கும் பொழுதெல்லாம் ஏதேனும் வேலை வந்து தடுக்கிறது. அதனாலேயே தொடர முடியவில்லையே?! என்ன செய்வது?!


பதில்:

நல்லதுதான், இதற்கு நம் வேதாத்திரி மகரிஷி அவர்கள் சொல்லுகிற பதிலை பார்க்கலாமா? ‘இதெல்லாம் சப்பைகட்டு, உங்களுக்கு செய்ய விருப்பமில்லை அதான் விசயம்’ என்கிறார். ஆம் அது உண்மைதானே? நீங்களும், உங்கள் உடலும், உடல் உறுப்புக்களும் நன்றாக, நீண்டநாள், எந்த நோய்தாக்கமும் இல்லாமல், வலி, சோர்வு ஏதும் இல்லாமல், காலை முதல் மாலை, இரவு என நாள் முழுவதும் உற்சாகமாக இருக்கவேண்டும் என்று நினைத்தால், எளியமுறை உடற்பயிற்சி செய்வதில் என்ன தயக்கம் வந்துவிடப்போகிறது?

இந்த எண்ணம் வந்துவிட்டால், முதலில் அதை செய்துவிட்டுத்தானே மற்ற வேலைகளை பார்ப்பீர்கள்? ஆனால் உங்களுக்கு உங்கள் உடலைவிட வேறு ஏதோ ஒன்று தேவையாக இருக்கிறது. முக்கியமாக தெரிகிறது. அதனால் எளியமுறை உடற்பயிற்சி செய்ய ஆர்வமில்லை, செய்தால் அப்படி என்ன ஆகிவிடப்போகிறது? செய்யாமல் விட்டாலும் ஒன்றும் குறையில்லை. நான் நன்றாகத்தானே இருக்கிறேன் என்றும் நீங்கள் நினைக்கிறீர்கள். சரி, நீங்கள் நன்றாக இருப்பதாக நினைப்பது சரிதான் தவறல்ல. ஆனால் உண்மையிலேயே உங்கள் உடலும், உடல் உறுப்புக்களும் நன்றாக இருக்கிறதா? என்று கேள்வி கேட்டு அதற்கான சோதனையை செய்திருக்கிறீர்களா? இல்லையா?

நீங்கள் எளியமுறை உடற்பயிற்சியை தவிர்க்கும் அளவிற்கு, உடல் நலத்தோடு இருக்கிறீர்கள் என்பது சிறப்பு. அதற்காக வாழ்த்துகிறேன். அந்த உடல் நலத்தை அப்படியே பேணி காத்திடுங்கள் அது போதும். எளியமுறை உடற்பயிற்சி செய்துதான் ஆகவேண்டும் என்று நானோ, வேறு யாருமோ, எவருமோ கட்டாயப்படுத்தவில்லை. உங்களுடைய பசிக்காக நீங்கள் தான் உணவு உண்ண வேண்டும் இல்லையா? அதுப்போலவே உங்களுக்கு தேவை என்றால் தான் எளியமுறை உடற்பயிற்சி செய்யவேண்டுமே தவிர கட்டாயத்திற்காக வற்புறுத்தலுக்காக பயமுறுத்தலுக்காக செய்ய வேண்டாமே?!

இனி உங்கள் முடிவுதான்! 

வாழ்க வளமுடன்.

Is any solution on simplified exercise for weight loss and body heat?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, உடல் எடை இழப்பு ஆகிறது, அடிக்கடி உடல் சூடும் ஆகிறது. இதற்கு எளியமுறை உடற்பயிற்சி உதவிடுமா?


பதில்:

உங்கள் உடலின்மேல் அக்கறை வந்தது மிகப்பெரிய விசயம். அதற்காக உங்களை பாராட்டலாம். உடல் எடை இழப்பு அடிக்கடி நிகழ்வது தவறு. இதற்கு நீங்கள் உண்ணும் உணவின் தன்மையில் மாறுபாடுகள் இருக்கலாம். உணவின் விஷத்தன்மையால், செரிமான உறுப்புக்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம். மேலும் உடல் சூடு என்றும் சொல்லுகிறீர்கள். சூடு எப்போது ஒரு அளவோடுதான் இருக்கவேண்டும். அதன் சராசரி வெப்ப அளவு 98.6 டிகிரி ஃபாரன்ஹீட் (37 டிகிரி செண்டிகிரேட்) என்று சொல்லுவார்கள். அது அதிகமாகிறது என்றால், உடலில் காற்றோட்டமும், இரத்தஓட்டமும் தடையாகி உள்ளது என்பதை உணர்த்துகிறது.

இதற்கு தீர்வாக, எளியமுறை உடற்பயிற்சி பலனளிக்கும் என்று உடனடியாக சொல்லிவிட முடியாது. ஏனென்றால், எளியமுறை உடற்பயிற்சியின் முக்கிய நோக்கமே, வருமுன் காப்பதுதான். எனவே, முதலில் ஒரு தேர்ந்த மருத்துவரை அணுகி, உங்கள் உடல் நிலைமையை சொல்லி அதற்கான ஆலோசனை பெறுக. அவர் தருகிற மருந்துகள் வழியாக, இருக்கும் உடல் பிரச்சனைக்கு தீர்வு கண்டு, அதற்குப்பிறகு, அதாவது ஓரளவு, உங்கள் உடல் நலம் தேறிய பிறகு, எளியமுறை உடற்பயிற்சியை ஆரம்பிக்கலாம்.

பொதுவாகவே நாம் வாழும் இந்த சூழலில், உடலில் காற்றோட்டம், வெப்பஓட்டம், இரத்தஓட்டம் (வாதம், பித்தம், கபம்) ஆகிய மாறுதலுக்கு உண்டாகிறது. அதை மிகச்சரியாக தக்கவைக்க, வேதாத்திரி மகரிஷி அவர்கள் வழங்கிய எளியமுறை உடற்பயிற்சி உதவுகிறது. ஆனாலும், நோய்தன்மை வந்துவிட்டால், அதற்குறிய மருத்துவ ஆலோசனையும், மருந்துகளை எடுத்துக்கொண்டுதான் சரி செய்யவேண்டும். அதுதான் உடனடி தீர்வாக அமையும்.  உங்கள் உடல் நலம் பெற வாழ்க வளமுடன் என வாழ்த்தி மகிழ்கிறேன்.

உங்கள் மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகு,  எளியமுறை உடற்பயிற்சியில் கைபயிற்சி, தொடர்ந்து, கால்பயிற்சி, நரம்பு தசை நார் மூச்சுப்பயிற்சி, கண்பயிற்சி, கபாலபதி, மகராசனம், உடலை தேய்த்து விடுதல், அக்குபிரஷர், உடல் தளர்த்தல் ஆகிய எல்லா பயிற்சிகளையும் செய்துவரவும், பலன் கிடைக்கும்!

வாழ்க வளமுடன்.

Smallest bones in the human body



மிகச்சிறு எலும்புகள்

அன்பர்களே, மனிதன், பரிணாமத்திலும், தன்மாற்றத்திலும் முழுமையாக வந்து நிறைந்த உயிரினம் என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஆனால் அந்த உண்மையை, அம்மனிதனே உணர்ந்தறியாமல் வாழ்வது வருத்தத்திற்கு உரியதே. எனினும் அவ்வபொழுது மாற்றங்களும் வந்துகொண்டேதான் இருக்கின்றன. மனிதனும் தன்னை ‘நான் யார்?’ என்கேட்க ஆர்வம் கொண்டுதான் வருகிறான் என்பதை நாம் காணவும் முடிகிறது.

மனிதனாகிய நாம் சிறப்பு என்றால், நமக்குள் இருக்கக்கூடியதும் சிறப்பாக இருக்கும் அல்லவா? அப்படியாக, நம்முடைய உடலில் மிகச்சிறிய எலும்புகள் எவை என்று கேட்டால் என்ன பதில் சொல்லமுடியும்? நடுப்புற காது பகுதியில் அமைந்துள்ள மூன்று எலும்புகளே ஆகும்!


அவை என்னென்ன?

தமிழில் அந்த எலும்புகளை சம்மட்டியுரு, பட்டையுரு மற்றும் ஏந்தியுரு என்று அதன் வடிவத்தைக் கொண்டு அழைக்கிறார்கள். இந்த மூன்று எலும்புகளும், ஒலி உணர்வு கடத்தியாக இணைந்தே செயல்படுகின்றன. இந்த எலும்புகள் நடுக்காது பகுதியில், உள்ளே மேல்புறமாக அமைந்துள்ளதால், சாதாரணமாக பார்த்துவிடமும் முடியாது. மேலும் நடுப்புற காதின் முன்புறம், அதாவது வெளிக்காதின் முடிவுப்பாதையில், ஒலியை வாங்கி அதிரவைக்கும் சவ்வுபடலம் மறைத்தும் இருக்கும். எனவே பார்ப்பது கடினமே!

இதோ பாருங்கள்


காணொளியாக காண்க


இரண்டாவது தோற்றமும் உணர்வும்

இந்த பிரபஞ்ச தோற்றத்திற்கு முன்னதாக, ஐந்து பௌதீக தோற்றத்தில், இரண்டாவது தோற்றம் ‘காற்று’ஆகும். அந்த காற்று தன்மாற்றத்தில்தான் ஒலியாக மலர்கின்றது. உயிரினங்களாக வந்த பரிணாமத்திலும், தன்மாற்றத்திலும் ஒலியை உணரும் கருவியாகவே ‘காது’ என்ற உறுப்பு உருவானது. ஊர்வனவற்றில் பாம்புக்கு காது இல்லை என்பது உங்களுக்கு தெரியுமா? 

‘ஏங்க, அதுதான் மகுடி ஊதினா எங்கிருந்தாலும் வந்திருதே!?’

மகுடி ஊதி. அதிலிருந்து வரும் ஒலி அலையை, பாம்பு அதிர்வாக மட்டுமே பெறுகிறது, மேலும் தன் பார்வையின் மூலமாகவும் அவ்வதிர்வை பெறுகிறது என்பதே உண்மை.

செவித்திறன் குறைவு

பெரும்பாலும் இயற்கையாக செவித்திறன் குறைவு வந்தால், அக்குழந்தை பேசுவதில், கற்றுக்கொள்வதில் தடுமாற்றத்தை பெறும். காரணம் சில காண்போம். 1) நடுக்காதில் உள்ள சவ்வு பாதிப்பு, துளை, சரியான வளர்ச்சி இன்மை 2) சவ்வோடு இணைந்த எலும்புகள் பலவீனம் 3) அதிர்வை பெற்று கடத்த முடிவதில்லை 4) உட்காதுக்கு எந்த அதிர்வும் கிடைக்காத தன்மை Etc,.

நாம் காதுகளை கவனமின்றி, பாதுகாப்பின்றி பயன்படுத்துவதாலும் செவித்திறன் பாதிக்கப்படலாம். 1) காது குடைதல் 2) அதிக ஒலி எழுவதை அடிக்கடி கேட்பது, அந்த இடங்களில் வாழ்வது, அப்படியான இடங்களில் வேலை செய்வது 3) காதுகளை முழுதாக மூடியபடி அதிரும் இசை கேட்பது 4) தண்ணீர், எண்ணைய், பிறவற்றை காதுக்குள் விட்டுக்கொள்வது 5) தூங்கும் பொழுது ஏதேனும் பூச்சிகள் காதுக்குள் சென்று பாதிப்பை ஏற்படுத்துவது 6) குழந்தையாக இருக்கும் பொழுது கன்னத்தில் அடிவாங்கியது 7) காது பாதிக்கப்படும் அளவில் எதிர்பாராத வாகன விபத்து, தடுமாற்றம், நோய் ஆகியன Etc,.

முக்கியமாக குழந்தையை, கன்னத்தில் அறைவதை பெற்றோர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். 

இயற்கையின் உன்னதம்

அற்புதமான இந்த இயற்கையின் வடிவமைப்பை கண்டீர்களா? வேறு யார் செய்தார் இதை? யாரேனும் நமக்காக செய்தார்களா? நமக்குள் பொருத்தினார்களா? இப்போது நாம் வாங்குகிற ஆப்பிள் ஏர்போட் போல யார் தயாரித்தார்கள்? யார் அதற்கு சக்தி அளிக்கிறார்கள்? என்றைக்காவது நாம் யோசித்ததுண்டா? அப்படியானால் அதை நாம் எப்படி பாதுகாக்க வேண்டும்? மனிதனில் எல்லாம் அடங்கியுள்ளது என்று பெருமை பேசுகிறோமே தவிட உண்மையை ஆராய்ந்து அறிந்தோர் மிகச்சிலர் அல்லவா? நீங்கள் ஆராய விரும்பினால், இயற்கை தன்னை உங்களுக்கு எல்லாவற்றையும் வழங்க தயாராகவே இருக்கிறது என்ற விபரம் உங்களுக்குத் தெரியுமா? 

வாழ்க வையகம், வாழ்க வளமுடன்!

-

Thanks to: Wikipedia, @microscopicture and twitter. Photos and video used here for education purpose only and copyright to owners