CJ for You: problem

problem

Showing posts with label problem. Show all posts
Showing posts with label problem. Show all posts

My stomach often gets into trouble. There is no interest in food. There is also sluggishness without appetite. What is the solution?


என்னுடைய வயிறு அடிக்கடி பிரச்சனைக்குள்ளாகிறது. உணவில் நாட்டம் இருப்பதில்லை. பசி இல்லாமல் மந்தமாகவும் இருக்கிறது. வீட்டில் சாப்பிட்டாலும், வெளியே சாப்பிட்டாலும் பிரச்சனையே. இதற்கு தீர்வு என்ன?

உணவு என்பது ஜீவன்களின், உயிர்களின் அடிப்படையானது. உயிர்வாழ்வதிலும், உடலை வளர்த்துக் காத்து, மனதையும் உயிரையும் காத்துக்கொள்வதிலும், உணவு தான் முக்கியமானது ஆகும். மேலும் இந்த உணவுதான் ஏழு தாதுக்களாகவும் மாறி, வாழ்வை, வாழும் பொழுது வளமாக்குகிறது. இப்படி முக்கியத்துவமான உணவை, நாம் கையாளும் விதம், சிறப்பாக இல்லை என்பது உண்மை. ஆனால், உணவு கலாச்சாரம், அதற்குரிய மதிப்பு, உலகெங்கும் உள்ளது. அது, ஒவ்வொரு வீட்டிலும், ஒவ்வொரு உணவு விடுதியிலும் இருக்கிறது.

உணவு என்பதைக் கொண்டே, அதை பரிமாறுபவர்களின் குணாதசியத்தை அறியலாம். அந்த உணவை செய்தவரின் அக்கறையை, அன்பை அறியலாம். அதுபோலவே அந்த உணவை உண்பவரின் நடவடிக்கையைக் கொண்டு, அவரின் குணாதசியத்தையும் அறியலாம். இங்கே ஒரு உணவின் வழியாக, எப்படியான தொடர்புகள் நம்மையறியாமல் உருவாகிறது என்று சிந்தித்து தெரிந்து கொள்ளமுடியும்.

ஆனால் இதையெல்லாம் அறிந்துக் கொள்ளக்கூடிய சூழலை நாம் கைக்கொள்வதில்லை. ஏனென்றால் அப்படியான அவசர உலகில் நாம் வாழ்கிறோம். அப்படியான நிலையில்தான் நீங்களும் இருக்கிறீர்கள் என்று எண்ணுகிறேன். அதுபோலவே, அமைதியாக, பொறுமையாக, ரசித்து, ருசித்து, அனுபவித்து சாப்பிடுபவர்கள், மிகமிகக் குறைவு. இந்த பிரச்சனை, உங்களுடைய உணவால் வந்திருக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், அது மிக குறைவே. அப்படியென்றால், இந்த பிரச்சனையின் மூலம் என்ன என்றால், உங்களுடைய மனமும், உங்கள் உடலும், உடல் உறுப்புக்களும் ஆகும். அப்படியா? என்று திகைக்கிறீர்களா? ஆம், அதுதான் உண்மை.

ஆனால், இந்த பிரச்சனையை, மருத்துவரின் வழியாக தீர்க்கவே நான் வழிமொழிகிறேன். என்றாலும். உங்களுடைய இந்த உணவு தொடர்பான பிரச்சனையை தீர்க்க காயகல்ப யோக பயிற்சி உதவும். இதைக்குறித்த சில உண்மைகளை, இந்த காணொளி வழியாக காணலாம்.

உணவுக்கும் முன்பும், நீர் அருந்தும் முன்பும் காயகல்ப பயிற்சி செய்யவேண்டுமா? ஏன்? Kayakalpa Yoga!

வாழ்க வளமுடன்

-

What about the soul attachment and how to avoid it? Notes by Vethathiri Maharishi


ஆவி இறங்குதல், உடல்விட்ட ஆன்மாக்கள் நம் உடலில் பீடிக்காது இருக்க வழிகள் என்ன? எப்படி தடுத்துக் கொள்ளலாம்?


கேள்வி:

சுவாமிஜி! உடலைவிட்ட ஆன்மாக்கள் நம் உடலில் புகாது இருக்க (Immunity against Soul attachment) என்ன செய்ய வேண்டும்?


வேதாத்திரி மகரிஷியின் பதில்: 

Soul attachment என்று சொல்லக்கூடிய உடலை விட்ட ஆவியின் தொடர்பெல்லாம் உணர்ச்சிவயப்பட்ட நிலையிலே உள்ளவர்களிடந்தான் வந்து சேர முடியும். தவத்தின் மூலம் நம் உயிர் இயக்கத்தை, உயிரிலிருந்து எழக்கூடிய மன இயக்கத்தை, நுண்மையான அலையியக்கத்துக்கு கொண்டு வர வேண்டும். 

எனவே, மனிதன் உணர்ச்சிவயப்படாத நிலையில் தன்னுடைய மன அலையின் நுண்மையிலே இருக்கப் பழக வேண்டும். அதற்குக் குண்டலினியோகம் அல்லது வேறுவிதமான உளப்பயிற்சியின் மூலம் மன அலையை ஓரளவு குறைத்து நுண்மையிலேயே வைத்துக் கொண்டோமேயானால் எவ்விதமான உயிர்த் தொடர்பு வந்தாலும், இணையவிடாது அதைத் தடுத்து விட முடியும். பிற உயிர் இணைய முடியாதிருக்க இதுதான் ஒரே வழி.

அதனுடன் மனதிலே பயம் இருக்கக் கூடாது. பயமிருந்தால் நமது சூக்கும சரீரம் நமக்குத் தெரியாமலே வெளிப்படும். அப்போது வேறு ஆவி வந்து நம்மோடு தொடர்பு கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுவிடும்.

நாம் இரவிலே கண்ணாடி பார்த்துக்கொண்டே இருப்போமானால் நம்முடைய சூக்கும சரீரம் வெளிப்பட்டு, உடல் விட்ட ஆவியுடன் தொடர்பு கொள்ள வாய்ப்பிருக்கிறது.

அப்படி நமக்குத் தெரியாமலே தொடர்பு ஏற்பட்ட பின், நம் முகத்தை கண்ணாடியில் பார்த்தால், எந்த உயிர் நம்மோடு தொடர்பு கொண்டிருக்கிறதோ அதனின்று பிரதிபலிக்கக் கூடியதொரு விகாரமான உருவம் நமக்குக் கண்ணாடியில் தோன்றக் காண்போம். அதனால் தான் இரவிலே நீண்ட நேரம் கண்ணாடி பார்க்கக் கூடாது என்பார்கள்.

அதிகமான வாசனைத் திரவியங்களை இரவிலே நாம் பூசிக் கொண்டால் அதன் மூலமாக நமது சூக்கும சரீரம் வெளியேறுவதற்கு வழியுண்டு.

இது போன்ற காரணத்தால்தான், இரவில் பூ வைத்துக் கொண்டு வெளியே போகக் கூடாது என்பார்கள். இவற்றையெல்லாம் நாம் கடைப்பிடித்து வந்தால் உடல் விட்ட வேறு ஆவிகள் நம்முடன் இணைவதைத் தவிர்க்கலாம்.

அப்படி ஏதேனும் ஒன்றிரண்டு ஆவிகள் இணைந்தாலும் அந்த ஆவிகளுக்குரியவர்கள் நல்ல எண்ணமும், தவ ஆற்றலும் உடையவர்களாக இருந்து, அந்த நிலையிலேயே உயிர் விட்டவர்களாக இருந்து, அந்த நிலையிலேயே மேம்பாட்டை பூர்த்தி செய்து கொள்வதற்காக, அவர்கள் நம்முடன் இணைந்து, நமக்கு நன்மை தருவார்கள். அவர்களும் பூரணம் அடைவார்கள்.

ஆன்மிகத்துறையில் ஈடுபட்டு இவற்றையெல்லாம் அறிந்து, ஆய்ந்து உணர்ச்சிவயப்படாத நிலையில் இருந்தால் பிற ஆவிகளின் தொடர்பை தவிர்க்கலாம்.

வாழ்க வளமுடன்

-


How to solve the problem of life and get peace of mind? What is the solution and the way?


வாழ்க்கைச் சிக்கலை தீர்த்து, மன அமைதியை பெறுவது எப்படி? தீர்வும் வழியும் என்ன?

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, சிக்கல் மிகுந்த வாழ்க்கையில் இருக்கிறேன். ஒவ்வொரு நாளும் நரக வேதனை என்பது போல உள்ளது. மனமும் அமைதியில் இல்லை. இதற்கு வழி என்ன? இறைவழிபாடுகளிலும் கவனமில்லை, அதில் மாற்றமும் நிகழவில்லை. என் சிக்கல் தீர வழி என்ன? உண்மை விளக்கங்களை தருக.


பதில்: 

உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும், வாழ்க்கை என்பது இனிமையும், அமைதியும் நிறைந்துதான் என்பதில் ஐயமில்லை. இயற்கையின் பரிணாம எழுச்சியில், வந்த முழுமையாக, தன் மூலமான இயற்கையையே, முழுதாக அறிந்து கொள்ளும்படியான, ஆறாம் அறிவின் நிலை பெற்றவன், இந்த மனிதன். அது உண்மைதானே? எங்கேயோ ஒர் அணுவாக தோன்றி, முழு மனிதனாக வந்து நின்ற பயணம், நிறைவு பெறுவதற்கு பதிலாக, சிக்கிக்கொண்டு தவிக்கிறது. எத்தனையோ ஞானிகளும், மகான்களும், மெய்யுணர்வாளர்களும், பல்லாண்டு காலமாக விளக்கம் அளித்தும் கூட, யாரோ ஒரு சிலர்தான், அந்த மாற்றத்தை விருப்புகிறார்கள். அந்த தன்னையறியும் பாதையில் பயணித்து நிறைவடைகிறார்கள்.

இதில் விருப்பமின்றி, மாற்றம் ஏற்காத, ஒதுக்கித்தள்ளும் மனிதர்கள், வழக்கமான வாழ்வில், இருக்கும் சிக்கலோடு, இன்னும் பல சிக்கல்களை உருவாக்கிக் கொண்டு தவிக்கிறார்கள். அதிலிருந்து விடுபட போராடுகிறார்கள். யாரேனும் உதவ மாட்டார்களா? என்று நினைக்கிறார்கள். ஏற்கனவே பலர், பலவிதமாக எடுத்துச் சொல்லியும், அதை இவர்கள் ஏற்கவில்லை என்பதை மறந்துவிடுகிறார்கள்.

இவர்களை பொறுத்தவரை, வாழ்க்கைச் சிக்கல்கள், தானாக வந்து, எங்களை ஆட்கொண்டு விட்டது. எப்படி ஒரு மலைப்பாம்பு தன் இரையை சுற்று வளைத்து, நெருக்கி, நசுக்குகிறதோ, அதுபோலவே எங்களையும், எங்கள் வாழ்க்கையையும் நெருக்கி, நசுக்குகிறது என்பார்கள். ஆனால் உண்மை என்ன? இந்த சிக்கல்களுக்கு வழியும் என்ன? இந்த கேள்விகளுக்கு, பாமர மக்களின் தத்துவ ஞானி, வேதாத்திரி மகரிஷி அவர்கள், தரும் விளக்கத்தை இங்கே தருகிறேன். இதோ.

‘வாழ்க்கை என்பது சிக்கல் நிறைந்த மனப்போராட்டமாகும்.  உயிரும் உடலும் சேர்ந்ததே ஒரு சிக்கல்தானே.  அதிலிருந்து உருவாகும் சிக்கல்களே மற்ற எல்லாச் சிக்கல்களுக்கும் காரணம்.  சில சிக்கலை விரைவாகத் தீர்த்துவிட வேண்டி உணர்ச்சி வயப்பட்டுச் செயலாற்றினால் பெரும்பாலும் அச்சிக்கல் பெருகிவிடும்.  சிக்கல் இல்லாத வாழ்வு ஒரு மனிதனுக்கு அமையாது.  அப்படி அமைந்தாலும் ஏதேனும் ஒரு சிக்கலை உருவாக்கிக்கொண்டு தவிக்கும் வரையில் எந்த மனிதனும் சும்மாயிருக்கமாட்டான்.’

‘தன்னிலை அறிந்த உளவியல் நிபுணர்களே இதற்கு விதிவிலக்கு.  நாமாகச் சிக்கல்களை உண்டு பண்ணிக்கொள்வதைத் தவிர்த்தால் வாழ்க்கையில் எதிர்கொண்டாக வேண்டிய சிக்கல்களின் எண்ணிக்கை குறையும்.’

‘சரி நம்மாலோ பிறராலோ உண்டாகிவிட்ட சிக்கல்களை என்ன செய்வது? சிக்கல்களை அவற்றின் நுட்பந்தெரிந்து அவிழ்க்கப் பழகிக்கொள்ள வேண்டும். இதையெல்லாம் நம் மனம்தான் செய்தாக வேண்டும். 

தகுந்த மனோ பயிற்சியின் மூலம் மனதின் தரத்தையும் மனதின் திறத்தையும் அதாவது மனதின் வளத்தை முதலில் உயர்த்திக் கொண்டாக வேண்டும்.  தன்நிலை அறிந்து, இறைநிலை உணர்ந்து, அந்தத் தெளிவோடு ஒழுக்கம், கடமை, ஈகை என்னும் அறநெறி காத்து வாழும் ஒரு தேர்ந்த சிந்தனை ஆற்றல் கொண்ட மனவளக்கலைஞனுக்கு தேர்ந்த குண்டலினியோகிக்கு கவலை என்பது எவ்விதத்தும் வர வாய்ப்பே இல்லை.’

வேதாத்திரி மகரிஷியின் இந்த விளக்கம், போதுமானதாக இருக்கும் என்று, நம்புகிறேன். இத்தகைய மாற்றத்தை, இன்றே, இப்பொழுதே தொடருங்கள். நிறைவு பெறுங்கள்.

வாழ்க வளமுடன்.

-

Best solution for peaceful family by Shri Vethathiri Maharishi


கணவன் மனைவி இடையே அடிக்கடி பிரச்சனைகளும், அதனால் மன வருத்தமும் நிகழ்ந்துகொண்டே இருக்கிறதே? மணமுறிவுக்கும் அதுவே காரணமாகிறதே? இதற்கு தீர்வு என்ன?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, கணவன் மனைவி இடையே அடிக்கடி பிரச்சனைகளும், அதனால் மன வருத்தமும் நிகழ்ந்துகொண்டே இருக்கிறதே? மணமுறிவுக்கும் அதுவே காரணமாகிறதே? இதற்கு தீர்வு என்ன? 


பதில்:

திருமணம் என்பதை ஆயிரம் காலத்து பயிர் என்றுதான் சொல்லிவருகிறார்கள். அத்தனை தலைமுறை வாழ்வுக்கு அது நிலைத்திருக்கக் கூடியது என்ற அர்த்தமாகிறது. ஆண் பெண் ஆகிய இருவரும், எங்கெங்கோ பிறந்தை வளர்ந்து வாலிபத்தில், அவர்களாகவே காதல் வயப்பட்டும், தகுந்த பெரியோர்களின் வழிகாட்டால் மூலமும் திருமணம் வழியாக, இல்லற வாழ்வை துவக்குகின்றனர். ஆனால், பிரச்சனை, மனவருத்தம் என்பது இந்த இரண்டு நிலைகளிலும் இருக்கிறது. காதல் என்ற நிலையில், மனமொத்து இருந்தாலும்கூட, திருமணம் ஆனபிறகு பல்வேறு சிக்கல்களில் அவர்களுக்குள்ளாக  பிரிவினை வந்துவிடுவதை காண்கிறோம்.

பெற்றோரின் தேடுதலிலும், பெரியோர்களின் ஆசியிலும், திருமண வாழ்வில் நுழைபவர்களும், ஆரம்பகாலத்தில் இயல்பான, நிறைவான, மகிழ்ச்சியான நிலையிலே வாழ்வை ஆரம்பித்தாலும், பின்னாளில் அவர்களுக்குள்ளாகவும் பிரிவினை வந்துவிடுவதை காண்கிறோம். இரண்டிலுமே ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, அந்தந்த சூழலுக்கும், பிரச்சனைக்கும், எதிர்காலத்திற்கும் ஏற்றபடி பொறுமை, விட்டுக்கொடுத்தல், தியாகம் ஆகிய மூன்று உயர்ந்த குணங்களால் சரி செய்யமுடியும் என்று குரு மகான் வேதாத்திரி மகரிஷி வலியுறுத்துகிறார். அவரும் இல்வாழ்க்கையில் வாழ்ந்து அனுபவித்தவர் தானே?

இந்த  பொறுமை, விட்டுக்கொடுத்தல், தியாகம் ஆகிய மூன்றையும், குடும்பத்தில் இருக்கிற யார் செயல்படுத்த வேண்டும்? ஆணா, பெண்ணா? கணவனா? மனைவியா? என்று கேட்கும் பொழுது, வேதாத்திரி மகரிஷி சொல்லுகிறார், ‘யாருக்கு அன்பு நிறைய இருக்கிறதோ அவர் அதை செயல்படுத்த வேண்டும்’ என்று பதில் தருகிறார். பொதுவாகவே, கணவன் மனைவி ஆகிய இருவருமே, புரிதலில் இருக்கக்கூடிய சிறிய, விளக்கமின்மைதான், பெரும்பாலான பிரச்சனைகளுக்கு காரணமாகிறது. அதை இருவருமே அமைதியாக பேசி, திருத்தம் பெற்றுக்கொள்ளவும் வழி உண்டு. நல்ல வழிகாட்டல் இருந்தால், உடனடியாக தீர்வும் பெற முடியும். அந்தவகையில், வேதாத்திரி மகரிஷியின், வழிகாட்டுதலை இங்கே பகிர்கின்றேன்.

வேதாத்திரி மகரிஷி சொல்லுகிறார்... 

உண்மையான நிலை என்னவென்றால் நாம் செய்த பாவம் புண்ணியம் இரண்டும் நம்மிடத்திலே உள்ளன. இந்த இரண்டையும் சரிப்படுத்துவதற்கு இறைநிலை பாரபட்சமில்லாத நீதிபதியாக அவ்வப்போது செயலிலே விளைவு தந்துக் கொண்டிருக்க வேண்டுமென்று சொன்னால் நெருங்கிய உறவிலே, இணைந்த உறவிலே உள்ளவர்கள் மூலமாகத்தான் அதிகமான அளவு செயல்பட முடியும்.  விளைவு வரமுடியும்.  அப்பொழுது இறைவனுடைய வரமாகட்டும்,  இறைவன் தரும் படிப்பினையாகட்டும், கணவனுக்கு மனைவியும் மனைவிக்கு கணவனும் அவர்கள் மூலமாகத்தான் அதிகமாக வெளிப்பாடு உண்டாகும்.


ஆகவே இருவருமே ஒருவருக்கு ஒருவர் இறைவனே என்னுடைய மனைவியினுடைய வடிவத்திலே வந்து எனக்கு உறுதுணையாக இருக்கிறாள் என்று எண்ணவும், இறைவனே எனக்குக் கணவன் என்ற உறவிலே வந்து உறுதுணையாக அமைந்திருக்கிறான் என்னுடைய வினையின் பயனாக ஏதோ ஆங்காங்கு சில துன்பங்கள் வந்தாலும் அதை நாம் போக்கிக் கொள்ள வேண்டும் என்ற அளவிலே இரண்டு பேருமே ஒருவரிடத்திலே ஒருவர் உண்மையான தெய்வ நிலையைக் காணக் கூடிய அளவிலே, தெய்வப் பிரசன்னத்தை அறியும் அளவிலே மனதை உயர்த்திக் கொண்டீர்களேயானால் இல்லற வாழ்க்கையிலே இதுவரை நீங்கள் அனுபவித்திராத ஒரு மலர்ச்சி உண்டாகும்.

இப்போது இந்த சிந்தனையை, மீண்டும் மீண்டும் உங்களுக்குள்ளாக ஓடவிடுங்கள். ஒருசில நாட்களில் உங்களுக்கான தெளிவில் நிறைவீர்கள். நீங்களே முன்வந்து, உங்களுக்குள்ளாக இருக்கும் பிரச்சனைகளில் இருந்து வெளிவந்து, அமைதியும், நிறைவும் கொண்ட குடும்ப வாழ்க்கையை வாழ தயாராவீர்கள் என்பது உறுதி!

வாழ்க வளமுடன்.

-




The solution and best advice to the husband and wife!


குடும்பத்தில் அமைதி நிலவிட, கணவன் மனைவிக்கும் இடையே பிரச்சனைகளின்றி வாழ வழி என்ன?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, குடும்பத்தில் அமைதி நிலவிட, கணவன் மனைவிக்கும் இடையே பிரச்சனைகளின்றி வாழ வழி என்ன?

வேதாத்திரி மகரிஷி அவர்களின் பதில்:

        குடும்பத்திலே அமைதி வேண்டுமென்றால், மூன்று ஒழுக்கங்களை கடைபிடித்தால் போதுமானது. அது அந்த கணவன் மனைவி இருவருமே செயல்படுத்தவேண்டும். அது 1. விட்டுக்கொடுத்தல் 2. பொறுமை 3. தியாகம் ஆகியன ஆகும். இவற்றை அந்த வாழ்நாளெல்லாம் கடைபிடிக்கவேண்டுமா? என்று கேட்டால் ஆம். ஆனால் அதற்கு அவசியமிருக்காது. ஏனென்றால் தினமுமே நீங்கள் கணவனாகவும், மனைவியாகவும் இவற்றை செயல்படுத்தும்பொழுது, மூன்று மாதத்திற்குள்ளாக அது உங்களுக்குள்ளாக நிறைந்து, உங்கள் இயல்பாகவேகூட மாறிவிடும். பிறகு நீங்கள் இயல்பாகவே விட்டுக்கொடுத்தல், பொறுமை, தியாகத்தை கடைபிடிப்பீர்கள் என்பதுதான் உணமை.

நீங்கள் சாதாரணமாகப் பெண்மையைப் புகழ்ந்து பாராட்ட வேண்டும் என்ற தேவையே இல்லை. உள்ளதைப் பாராட்டினாலே போதும். சாப்பாடு செய்து போட்டால் ரொம்ப நன்றாக இருக்கிறது என்று சொல்லலாம் இல்லையா? நாக்கு வராது. அதை மாற்றிக் கொள்ள வேண்டும். இனிமேல் காலை முதல் மாலை வரை யார் நன்மை செய்தாலும் நன்றி பாராட்டக் கற்றுக் கொள்ள வேண்டும். அது பண்பாட்டின் உயர்வு. இனி மேல் இந்தப் பண்பாடு எல்லா இடத்திலும் வரவேண்டும்.

உலகத்திலேயே நட்பு மிகமிகச் சிறந்தது; பயனுடையது; அதிலே கணவன் – மனைவி நட்பைப் பற்றிச் சாதாரணமாகச் சொல்ல முடியாது. அத்தகைய நட்பு எந்த விதத்திலும் மேலானதாகவும், மேன்மையுறவும், வளர்ச்சி பெறவும், வலுப்பெறவும் இரண்டு பேருடைய வாழ்க்கையும், தூய்மையானதாகவும், மேன்மையுடையதாகவும் இருக்க வேண்டும்.

அப்போது அவர்களின் குழந்தைகள் எவ்வாறு இருக்கும் என நினைத்துப் பாருங்கள். இந்த உயர்வான நன்மையைக் கருதி முன் ஏதேனும் பிணக்கு இருந்தாலும் மன்னித்து விடுங்கள். மன்னிக்க முடியாத குற்றமேயில்லை. எல்லோரும் ஒருவருக்கொருவர் தியாக உணர்வுடன் வாழ்கிறீர்கள். அந்த உணர்வையே நினைவில் வைத்துக் கொண்டு சிறு சிறு குற்றம், குறைகள் இருந்தால் அவைகளை எல்லாம் போக்கிக் கொண்டு மகிழ்ச்சியுடன் வாழ உங்கள் அனைவரையும் இறைநிலையில் மனதை நிறுத்தி வாழ்த்துகிறேன்.

வாழ்க வளமுடன்

-

What is the reason of body pain and disease on our lifetime?


நன்றாக இருக்கும் உடலில் தீடீரென வலியும், தொடர்ந்த நோயும் வருவதற்கு காரணம் என்ன?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

        வாழ்க வளமுடன் ஐயா, நன்றாக இருக்கும் உடலில் தீடீரென வலியும், தொடர்ந்த நோயும் வருவதற்கு காரணம் என்ன?


வேதாத்திரி மகரிஷி அவர்களின் பதில்:

        உடல் இயக்கத்தில் உள்ள நுட்பத்தை நாம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். நமது உயிருக்கும் உடலுக்கும் ஒத்த உறவு, இனிமையான உறவு இருக்கும் வரையில் தான் உடல் நலம், மன நலம் பாதுகாக்கப் பெறும். இந்த உறவானது நீடித்திருப்பதற்கு ரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்று ஓட்டம் இவை மூன்றும் சரியாக இருக்க வேண்டும். 

        அளவிலே, முறையிலே இவை சரியாக இருந்தால் தான் உயிருக்கும், உடலுக்கும் ஒரு தொடரியக்கம், நட்பு, உறவு சீராக இருக்கும். எந்தக் காரணத்தினாலோ ரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்று ஓட்டம் இந்த மூன்றிலே ஒன்று தடுக்கப்பட்டாலும், திசைமாறினாலும், வெளியேறினாலும், அளவிலே குறைந்தாலும், ஓட்டத்திலே குழப்பம் அடைந்தாலும், அந்த ஓட்டத்தில் அணு அடுக்குச் சீர்குலைவு ஏற்படும். 

        அது இரத்த ஓட்டத்திலோ, வெப்ப ஓட்டத்திலோ, காற்று ஓட்டத்திலோ எதனாலே வந்தாலும் சரி, மற்ற இரண்டும் கூட ஓட்டத்திலே தடையாகி விடும். அந்தக் குழப்பத்தை நீக்குவதற்கு அங்கே இருக்கக் கூடிய மின்சக்தி போதாது. அதனாலே அதிகமான மின்சக்தி அங்கே சேர வேண்டியதாகின்றது.

        அவ்வாறு அங்கே சேரும் போது ஏற்கனவே அங்கு தொளை (Puncture) ஆகி இருக்கிறது. அளவுக்கு மேலாகக் காந்த சக்தி மின் சக்தியாக மாறும் போது அந்த இடத்தில் நிச்சயமாக மின்குறுக்கு (Short circuit, earthing) உண்டாகும். அதுதான் வலியாக வரும். 

        இந்த மின்குறுக்கு சிறிது நேரம் இருந்தால் அது வலி என்றும், அது இடத்தாலே விரிந்தும் காலத்தாலே நீடித்தும் இருந்தால் அது நோய் அல்லது வியாதி என்றும் கூறப்படுகிறது. அதற்கும் மேலாக உடலில் உள்ள ஜீவகாந்தசக்தி எல்லாம் அதிகமாகச் செலவாகி, வருவதற்கும் போவதற்கும் மத்தியில் உள்ள இருப்பை ஜீவகாந்தம் வெகுவாகக் குறைக்குமானால் அதனை ஈடு செய்ய முடியாமல் போகும். 

வாழ்க வளமுடன்

-

How we can act free from problematic activities with family members and others?


வாழ்க்கைத் துணைவரோடும், பிள்ளைகளோடும், வீட்டில் இருப்போரிடம் பேசும் பொழுதேகூட அதை அவர்கள் புரிந்துகொள்ளாமல் பிரச்சனை எழுகிறதே? எப்படி இதை சரி செய்வது?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி: 

வாழ்க வளமுடன் ஐயா, வாழ்க்கைத் துணைவரோடும், பிள்ளைகளோடும், வீட்டில் இருப்போரிடம் பேசும் பொழுதேகூட அதை அவர்கள் புரிந்துகொள்ளாமல் பிரச்சனை எழுகிறதே? எப்படி இதை சரி செய்வது?

பதில்:

நீங்கள் சொல்லுகின்ற இந்த பிரச்சனை, பெரும்பாலும் எல்லா குடும்பங்களிலும் உண்டு. ஒரு குடும்பத்திலேயே இப்படி இருந்தால், ஒரு சமூகத்தில், நாட்டில், உலகில் எத்தனையோ பிரச்சனை எழுந்துவிடுமே? இதையெல்லாம் எப்படித்தான் சமாளிக்கிறார்களோ? என்ற ஒரு கேள்வியும் உங்களுக்கு எழுந்துவிடும் அல்லவா? ஆம் அதுவும் உண்மைதான். இப்போது இருக்கின்ற தலைவர்கள், தலைவிகள் படும்பாடையும் நாம் அறிவோம் தானே?

இந்த உலகில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும், ஒரு அடையாளம் உண்டு. அந்த அடையாளம்தான் தன்னை வெளிப்படுத்தும். நான் இப்படிப்பட்டவன், இப்படிப்பட்டவள் என்று நாமும் அதை சொல்லால், செயலால் வெளிப்படுத்திக் காட்டுவோம். நம்முடைய சொல்லாலும், செயலாலும் மற்றவர்கள் அதை புரிந்து கொள்ளவும் செய்வார்கள். இது நாமளாகவே விரும்பியும் கட்டமைத்துக் கொள்ளலாம். சில நேரங்களில் நம்மையறியாமலும் அது வெளிப்பட்டு அப்படியான ஒரு தோற்றத்தை ஏற்படுத்திவிடவும் கூடும். அதில் நாம் கவனமாக இருக்கவேண்டும். நான்கு சுவருக்குள் யாரும் பார்க்காதவண்ணம் இருப்பது வேறு, ஒருவரோ, பலரோ, குடும்பமோ, சமூகமோ பார்க்கின்ற பார்வை வேறு என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

பொதுவாகவே ‘நான் நல்லவன் / நல்லவள்’ என்ற ரீதியிலான நம்பிக்கை நல்லதுதான். ஆனால் அதை மற்றவர்கள் மீது காட்டவும் கூடாது, திணிக்கவும் கூடாது. ஒவ்வொருவரும் அவரவர் அளவில் நல்லவர்கள் தான் என்பதை நினைவில் கொள்க. சில விரும்பாத நடவடிக்கைகள், குணங்கள் இருந்தாலும் உடனே காட்டிக்கொள்ளவும் மாட்டார்கள். 

ஒளிவுமறைவின்றி இருக்கக்கூடிய உறவு என்றால் அது கணவன் மனைவி உறவு மட்டுமே. அதில் ஆளுமையும், அதிகாரமும், உதவிடாது. அன்பு மட்டுமே தேவை. இந்த உறவில் இன்னொருவரை திருத்த வேண்டும் என்று நினைக்கவே கூடாது. அதை செயல்படுத்தவும் கூடாது. அவரவர்களுக்கு அது அவரவர் இயல்பு. அதை நீங்கள் சுட்டிக்காட்டலாமே தவிர மாற முயற்சிக்கக் கூடாது. வேதாத்திரி மகரிஷி ‘பொறுமை, விட்டுக்கொடுத்தல், தியாகம்’ என்ற மூன்று தன்மைகளை கணவனும் மனைவியும் ஏற்றுக்கொண்டால், இல்லறவாழ்வு இன்பமாக சிறப்பாக நிறைவாக இருக்கும் என்கிறார். ஆனால் நான், பொறுமை காப்பதா? நான் விட்டுக்கொடுக்கமுடியுமா? அது என் தலைமுறையிலேயே இல்லையே? நான் ஏன் தியாகம் செய்யவேண்டும்? என்றுதான் கேள்வி எழுமே தவிர மாற்றத்தை ஏற்கவே மாட்டொம் அல்லவா?

 வாழ்க்கைத் துணைவரோடும், பிள்ளைகளோடும், வீட்டில் இருப்போரிடம் பேசும் பொழுதேகூட அதை அவர்கள் புரிந்துகொள்ளாமல் பிரச்சனை எழுகிறது என்றால், முதலில் உங்களோடு இருக்கும், பழகும் இவர்கள், அவர்களுடைய இயல்பில் இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். உங்களுடை எக்கருத்தையும், வழிமுறையையும் திணிக்காதீர்கள், அவர்களை திருத்த முயற்சிக்காதீர்கள். உங்கள் சொல், செயல் ஆகிய மூலமாக அவர்களுக்குள் ஏற்படுத்திய பிம்பத்தை கலைக்காதீர்கள். ஒருவேளை தவறாக அவர்கள் கருதியிருந்தால், அதை திருத்திட முயற்சியுங்கள். நான் நல்லவன் / நல்லவள் என்று சொல்லாமல், அதை செயலாலும், அன்பாலும் காட்டுங்கள்.

அவர்களின் ஏற்பு இல்லாமல், கேட்காமல் எதையுமே செய்யதீர்கள். சொல்லாதீர்கள். எப்போதுமே மற்றவர்கள் குறித்த ‘பாவ்வம்’ என்று சொல்லக்கூடிய குணாதசியத்தை நீங்கள் தீர்மாணிக்காதீர்கள். அதுபோலவே ‘நான் இப்படித்தான்’ என்றும் உங்களை முடிவு செய்யாதீர்கள். இயல்பு என்ற நிலைக்கு நீங்கள் வந்து நின்று, அந்ததந்த பொழுதுக்கும், நேரத்திற்கும் தகுந்தபடி, விழிப்பாக செயல்படுங்கள். மற்றவர்களோடு எந்த பிரச்சனையும் எழாது காத்துக்கொள்ளலாம்.

வாழ்க வளமுடன்
-

Please explain the good, bad and problems on the trick of body to body transformation!


கூடுவிட்டு கூடுபாயும் வித்தையில் இருக்கக்கூடிய நன்மை, தீமை, பிரச்சனைகள் குறித்து சொல்லமுடியுமா?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி: 

வாழ்க வளமுடன் ஐயா, கூடுவிட்டு கூடுபாயும் வித்தையில் இருக்கக்கூடிய நன்மை, தீமை, பிரச்சனைகள் குறித்து சொல்லமுடியுமா?


பதில்:

இன்னமும் உங்களுக்கு இந்த கூடுவிட்டு கூடுபாயும் வித்தையில் இருக்கும் ஆசை தீரவில்லை போலிருக்கிறதே? நல்லவேளையாக எப்படிச் செய்வது என்று என்னிடம் கேட்காமலிருப்பது குறித்து மகிழ்கிறேன். அடுத்த கேள்வி அதுவாகவே இருந்தாலும் இருக்கலாம்தானே? யார் கண்டது? இப்பொழுது இந்த கேள்விக்கு வரலாம், முடிந்தளவு விளக்க முயற்சிக்கிறேன்.

என்னுடைய ஆரம்ப நாட்களில், வேதாத்திரிய யோகத்தில் இணைவதற்கு முன்பாகவே கூட, சித்தர்களின்பால் நான் ஆர்வமோடு இருந்தேன். இதற்கு காரணமாக என்வீட்டில், பரணில் மூட்டைகட்டி வைத்திருந்த, என் தந்தைவழி தாத்தாவின் நூல்கள் உதவின. என்வீட்டில் யாருக்குமே இல்லாத அக்கறை, ஏனோ எனக்கு யோகத்தின்மேல் ஏற்பட்டது. மேலும், நகரில் இருந்த நூலகமும், உறவினர்கள், நண்பர்கள் மூலம் கிடைத்த நூல்களும் உதவியது. ஒரு சிறிய கிழிந்த துண்டு காகிதத்தைக்கூட படிக்கக்கூடிய ஆரவம் மிகுந்த காலம் அது. அப்படியாக, பதினென்கீழ்கணக்கு சித்தர்கள் முதலாக, ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், வேதாத்திரி மகரிஷி என்று பலரையும் தெரிந்துகொள்ள நூல்கள் பல கிடைத்தன.

கூடுவிட்டு கூடுபாயும் வித்தை குறித்தும் நான் அறிந்தேன். சித்தர் பெருமகான் திருமூலர், காட்டுவழியே செல்லும் பொழுது, மேய்ப்பனை இழந்த மாடுகள் வீடுதிரும்பாமல் இருந்தபொழுது, இறந்து போன அந்த மேய்ப்பனின் உடலில், தன்னுயிரைப் பாய்ச்சி, மேய்ப்பனாக மாறி, அம்மாடுகளை வீட்டிற்கு வழிநடத்தி உதவியதாக படித்திருக்கிறேன்.  சித்தர்கள், தங்களுடைய ஆராய்ச்சிக்காகவே இவ்வித்தையை செய்திருக்கிறார்கள். பேரதிசயமாக இருந்ததும் உண்மை. இது எப்படி என்பதுதான் அந்த 14 முதல் 17 வயதில் எனக்கு அறியமுடியவில்லை. 18 வயது நிறைவில்தான் ‘வேதாத்திரிய தீட்சை’ பெற்றேன். அந்த வயதிலே ‘கூடுவிட்டு கூடுபாயும் வித்தை' மையமாகக் கொண்டு கதைகள் கூட எழுதினேன் என்றால் மிகையில்லை. ஏதேனும் சில நேரம், நானே வேறு யாராகவோ இருப்பதாகவும், என்முகத்தை நானே வேறு ஆளாக கண்ணாடியில் பார்ப்பது வரையிலான கனவுகள் கூட கண்டதுண்டு. ஆனால் அந்த கனவுகளின் உண்மை நான் மட்டுமே அறிவேன்.

கூடுவிட்டு கூடுபாயும் வித்தையில், இறந்த உடலில் புகுவது என்று சொல்லப்பட்டாலும் அதில் உண்மை இருப்பதாக தெரியவில்லை. ஏனென்றால் உயிர் பிரிந்த உடலில் எல்லாமே இறந்து கொண்டே இருக்கையில், அதை மீண்டும் புதுப்பிப்பது இயற்கைக்கு முரணானது. (உடனே வாளை தூக்கி சண்டை போடவேண்டாம்). அப்படியானால், உயிரோடு இருக்கும் ஒரு மனிதனோடு கலக்கமுடியுமா? முடியும். அதிலும் சிக்கல் உள்ளது. அந்த உயிர் தனித்தன்மையாக இருந்தால், கூடுவிட்டு கூடுபாயும் நம்மை ஏற்றுக்கொள்ளாது. பிறருக்கும், சமூகத்திற்கும், உலகுக்கும் நன்மை தரதக்க வகையில் இதை செய்யலாம் என்பது ‘சித்தர்களின் கருத்து’. தனிமனித, சுயநல, பறித்தல் நோக்கோடு இதைச் செய்தால், உங்கள் உயிர் வீணாகிவிடும். கவனம்.

முக்கியமாக, கூடுவிட்டு கூடுபாயும் வித்தையை செய்வதென்றால், நீங்கள் உங்கள் உயிரை தனியே பிரித்துப் பழகவேண்டும். உயிரில் குறிப்பிட்ட அளவு பிரிந்து சென்ற உங்கள் உடல், மிகச்சரியாக பாதுகாக்கப்பட வேண்டும். எந்த ஒரு அதிர்ச்சியும் இங்கே நேரக்கூடாது. கிட்டதட்ட நீங்கள் இறந்தபோன தன்மைபோலத்தான் இருப்பீர்கள். அது உண்மை ஆகிவிடாமல் இருக்க கவனமாக இருக்கவேண்டியது அவசியம். உயிர்த்துகள் என்பது மிகமிக நுண்ணியது, சக்தி வாய்ந்தது. அதற்குரிய மதிப்பளித்து செயல்படுவது முக்கியம். கொஞ்சம் பிசகினாலும் உங்கள் வாழ்க்கை முடிந்துவிடக்கூடிய அபாயம் உண்டு. உங்கள் உடலுக்கே மீண்டும் திரும்புவதில் அதிக பிரச்சனைகளை நீங்கள் சந்திக்கக்கூடும்.

        எனவே, என்னைப்பொறுத்தவரை, இனிமேல் யாரும் ‘கூடுவிட்டு கூடுபாயும் வித்தை' செய்யவேண்டியதும் இல்லை, அதை பழகிட வேண்டியதும் இல்லை' என்றே நினைக்கிறேன். வேறு ஏதேனும் கேள்விகள் இருந்தால் நேரில் கேட்கவும்.

வாழ்க வளமுடன்

-

Shall we learn the trick of one body to another body transformation and how?


கூடுவிட்டு கூடுபாயும் வித்தையை நாம் இன்றும் கற்றுக்கொள்ள முடியுமா? அதற்கு வழி சொல்லுவீர்களா?



வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, கூடுவிட்டு கூடுபாயும் வித்தையை நாம் இன்றும் கற்றுக்கொள்ள முடியுமா? அதற்கு வழி சொல்லுவீர்களா?

பதில்:

உங்கள் உடலைவிட்டு, இன்னொரு உடலுக்குப் போகும், தந்திரத்தில் இன்னும் உங்களுக்கு ஆர்வம் இருக்கிறது என்பதை இந்த கேள்வி நிரூபிக்கிறது. சித்தாந்தம் என்ற வழியில் சித்து என்ற உயிரை அறிந்து, அதனுடைய மூலமும், இயக்கமும் உணர்ந்தவர்களான சித்தர்கள் இந்த ‘கூடுவிட்டு கூடுபாயும்’ வித்தையை கண்டுபிடித்து, உலகில் தாங்கள் வாழும் காலத்தில், அந்தந்த மக்களின் நன்மை கருதிமட்டுமே இதை செய்துவந்தார்கள். அதையே தங்கள் கவிதைகள் வழியாக சொல்லியும் வைத்தார்கள். ஆனால் செய்முறையை சொல்லவில்லை. அப்படியான செய்முறையை, நேரடியாக அந்த சித்தரின் வசமாக மட்டுமே கற்றுக்கொள்ளவும் முடியும். இந்தக்காலத்தில் யாருமே தங்களை சித்தர் என்று வெளிப்படையாக தங்களை, மக்களிடம் காட்டிக்கொள்வதில்லை. அதற்கான அவசியமும் அவர்களுக்கு இல்லை. என்றாலும் கூட, வாழும் சித்தர்கள் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

ஆனால், சில மனநலம் குன்றி, தெருவில் கவனமின்றி திரிவோரையும் ‘வாழும் சித்தர்கள்’ என்று நவீன மக்கள் கொண்டாடுகிறார்கள். அவர்களுக்கான, அக்கறையும், மருத்துவ உதவியும் செய்யாமல், செய்தும் தராமல், அவர்களின் தனிமையை, சுதந்திரத்தை கெடுத்து, மேலும் மேலும் அவர்களின் மனதை புண்ணாக்குகிறார்கள். காண்டண்ட் கிடைக்காத காணொளி பதிவர்கள் இதையும் பதிவாக்கி, யூயூபில் பரப்புகிறார்கள். கொடுமைதான்.

        இப்பொழுது கேள்விக்கு வரலாம். கூடுவிட்டு கூடுபாயும் வித்தையை நாம் இன்றும் கற்றுக்கொள்ள முடியும்தான். ஆனால் அதற்கான அவசியம் என்ன? இதற்கான தக்க பதில் உங்களிடம் இருக்கிறதா? என்னவிதமான நன்மையை கருதி நீங்கள் இதை செயல்படுத்தப் போகிறீர்கள்? இதில் ஏதேனும் ரகசியமான ஆராய்ச்சி இருக்கிறதா? மக்களின் நலம் சார்ந்தோ, உலகின் எதிர்கால நன்மை கருதியோ திட்டத்தை நீங்கள் செயல்படுத்தப் போகிறீர்களா? இதற்கான விடையை முதலில் தயார் செய்யுங்கள். சுயநலம் கருதி இதை நீங்கள் செய்வதாக இருந்தால், நீங்கள் மாட்டிக்கொள்வீர்கள், உயிரிழப்பு நேர்ந்துவிடும் என்பதும் உறுதி. தற்கொலைக்குச் சமமான காரியத்திற்கு ஒப்பாகிவிடும். ஏனென்றால் ‘இயற்கையின் செயல்விளைவு நீதி’ அத்தகையது.

        என்றாலும் உங்களுக்கான புரிதலை நான் தெளிவு செய்கிறேன். நீங்கள் அறிந்த ‘கூடுவிட்டு கூடுபாயும் வித்தை’ அவ்வளவு சுலபமானது அல்ல. காரணம் உங்களுக்குத் தெரியுமா? சொல்லுகிறேன்... 

நாம் ஓருடலாக வாழ்வதாக இருந்தாலும் கூட, இந்த உடல் மூன்று உடலாக அமைந்திருக்கிறது. 1) பருவுடல் 2) உயிருடல் 3) காரண உடல் ஆகியன ஆகும். பருவுடல் என்பது எலும்பு, தசை, சதை, ரத்தம், உடலுறுப்பு இவைகளால் ஆன மொத்த அமைப்பு. உயிருடல் என்பது பலகோடி உயிர்த்துகள் இணைந்த கண்ணாலும், கருவிகளாலும் காணமுடியாத, நுண்ணிய துகள்களால் ஆனதான் அமைப்பு. இதைத்தான் ‘சூக்குமம்’ என்றும் அழைக்கிறோம். அதையே சூக்கும உடல் என்றும் அழைக்கிறோம். மூன்றாவதாக இருப்பது, இந்த உயிரை, உடலுக்குள் கட்டிக்காக்கும் சக்தியான ‘காரண ஆற்றல் சக்தி’ இதையும் நாம் உணரமட்டுமே முடியும். இந்த மூன்றுக்கும் தனித்தனியான விரைவு இயக்கங்கள் உண்டு. அந்த தனித்தனியான இயக்கங்களை முறைப்படுத்தி ஒன்றுசேர்க்கவும் வேண்டும். இதில் அதிவேகமான விரைவுஇயக்கம் கொண்டது ‘காரண உடல்’ இதற்கு சமமாக ‘உயிருடல்’ பழகவேண்டும். இந்த இரண்டின் விரைவையும், இயக்கத்தையும் உடல் தாங்கிட பழகவேண்டும். இதற்கு நீண்டகால பயிற்சி முக்கியமானது ஆகும். யாரோ சொல்லக்கேட்டு, ஏதோ புத்தகம் வாசித்து, எவரோ காணொளியில் சொன்னதைக் கேட்டு செய்தால் அது ‘தற்கொலைக்கு’ சமமாகலாம்.

குருமகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் வழங்கிய ‘சூக்கும பயணம்’ என்பது ‘கூடுவிட்டு கூடுபாயும் வித்தையின்’ முன்னோட்டம் என்று சொல்லலாம். ஆனால், வேதாத்திரியத்தில் இந்த சூக்கும பயணம் பயிற்சி 1996 ம் ஆண்டுகளுக்கு முன்பாகவே நிறுத்தப்பட்டுவிட்டது. கைவிடப்பட்டது. ஏனென்றால், அதில் அன்பர்கள் ஏற்படுத்திக்கொண்ட கவனக்குறைவுதான் காரணமாக இருந்தது. எனவே, வேதாத்திரி மகரிஷி அவர்களே ‘இதுவேண்டாம்’ என்று சொல்லிவிட்டார்.

என்றாலும், வேதாத்திரியத்தில் வழங்கப்படும் ‘ஜீவகாந்த பெருக்கம்’ உங்களுக்கு சிறந்த மாற்றாக அமைந்திருக்கிறது. அது உங்களுக்கு உதவும்.
வாழ்க வளமுடன்
-

How the yogi can understand the simply human problems and life struggles?


மக்களின் அன்றாட வாழ்க்கை, அதில் எழும் பிரச்சனைகள், சமூக நிலைமை இதெல்லாம், உலகிலிருந்து தனித்து வாழும் ஒரு யோகிக்கு எப்படித் தெரியும்? என்று கேட்கிறவர்களுக்கு பதில் என்ன?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, மக்களின் அன்றாட வாழ்க்கை, அதில் எழும் பிரச்சனைகள், சமூக நிலைமை இதெல்லாம், உலகிலிருந்து தனித்து வாழும் ஒரு யோகிக்கு எப்படித் தெரியும்? என்று கேட்கிறவர்களுக்கு பதில் என்ன?


பதில்:

இதே கேள்வியை, இப்போது மட்டுமல்ல, எக்காலத்திலும் வாழும் மக்கள், அவர்களை வாழ்விலும், தரத்திலும், பிறவியிலும் உயர்த்த வழிகள் சொல்லும் உயர்ந்த யோகிகளை, ஞானிகளை, மகான்களை பார்த்து அப்படித்தான் கேட்கிறார்கள். இனிவரும் காலங்களில் வெகு சிலர் மட்டும் கேட்பார்கள். ஏனென்றால், இப்போது உலக அளவில் நல்ல ஆன்மீக முன்னேற்றம் வளர்ந்து பரவியுள்ளது என்பதே உண்மை.

குரு மகான் வேதாத்திரி மகரிஷியிடமும், இதேபோலான கேள்வியை, வெளிநாடுகளிலும், நம் இந்தியநாட்டின் நகரங்களிலும் அவரின் ஆன்மிக சொற்பொழிவும், மனவளக்கலை பயிற்சியும் அளிக்கும் காலங்களில், அவரிடமே நேரடியாக கேட்டிருக்கிறார்கள். 1986 ம் ஆண்டுகள் வரையிலும், அவர் ஆறு மாதங்கள் உலகநாடுகளில் ஆங்கில மொழிவழியான பயிற்சிகளும், டெல்லி,  மும்பை போன்ற இந்திய நகரங்களிலும் பயிற்சியை வழங்கிவந்தார். அதன்பிறகுதான் நிலையாக, ஆழியார் அறிவுத்திருக்கோவிலில் இருந்தே தன் பயிற்சிகளை வழங்கிவந்தார்.

‘ஒரு யோகியாக, எல்லாவற்றையும் விடுத்து, தனித்து வாழ்கின்ற ஒருவருக்கு, எங்களுடைய கஷ்டங்களெல்லாம் எப்படி தெரியும் என்றுதான் அன்பர்களாகிய நீங்கள் கேட்கிறீர்கள். நான் ஒன்றும் நேரடியாகவே யோகியாக பிறக்கவில்லையே. உங்களைப்போலவே நானும் பிறந்து வாழ்ந்து, வாழும் பொழுதே குடும்ப கஷ்டங்களை அனுபவித்து, கல்வி படிக்க முயன்று முடியாமல், வேலை பழகி, இரவும் பகலும் உழைத்து, என்னளவில் பணம் சம்பாதித்து, இறை என்பது என்ன? ஏன் இந்த கஷ்டம்? என்ற கேள்விக்கு விடைதேடி அலைந்து, திரிந்து, யோகம் கற்றுக்கொண்டேன். ஒருவேலை பார்த்தால் போதாது என்று, கிடைக்கும் வாய்ப்புக்களில் எல்லாம் வேலை பார்த்து சம்பாத்தியம் பெற்றேன். பார்க்கும் வேலையிலும் கிடைத்த மனம் ஒவ்வாத பிரச்சனைகளை சமாளித்தேன். சொந்தமாகவும், குழுவாகவும் தொழில் துவங்கி நடத்திய அனுபவமும் கண்டேன், அதில் நல்ல உயர்வும், தீடீர் நஷ்டமும் கூட உண்டுதான். இதற்கிடையில் திருமணமும் செய்துகொண்டேன். அதுவும் ஒன்றல்ல இரண்டு. அதில் கணவன் மனைவிக்கு இடையிலான குடும்ப பிரச்சனைகள், வருத்தம், கவலை, மகிழ்ச்சி எல்லாம் உண்டு. வறுமையும், செழிப்பும், வேலையும், வேலையின்மையும், உழைப்பும், அதற்கேற்ற உயர்வும், உதவியும், ஏமாற்றமும், தாழ்வும், பழிவாங்கப்படுதலும் இப்படியாக எல்லாமும் நானும் அனுபவித்திருக்கிறேன்’ என்றுதான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் குறிப்பிடுகின்றார். தன்னுடைய பேச்சிலும், எழுத்திலும், கவிதைகளிலும் இத்தகைய குறிப்பை அவர் பதிவும் செய்திருக்கிறார்.

இதைவிட வேறென்ன வாழ்க்கை குறித்த அனுபவம் வேண்டும்? சொல்லப்போனால் நம்மையும் விட கொடுமையான வாழ்க்கை அனுபமாக அல்லவா இருக்கிறது? நாம் ஏதோ பராவாயில்லையே என்றுதான் நமக்குத் தோன்றும். பொதுவாக சொல்லுவார்கள் அல்லவா? இக்கரைக்கு அக்கரை பச்சை என்று, அதுபோல பார்ப்பதற்கு வேண்டுமானால் அப்படி இருக்கலாம். அக்கரைக்குச் சென்றால்தான் அங்கேயும் இதேபோல வறட்சியும் உண்டுதான் என்று தெரியவரும்.  எப்போதும், யாரும், எவரும் எடுத்த எடுப்பிலேயே நீதி போதனை செய்யமாட்டார்கள். அப்படிச் செய்தால் அவர்களுடைய மனமே அவர்களை தண்டித்துவிடும் என்பது இயற்கை நீதி. வாழ்ந்து கெட்ட மனிதர் என்றொரு சொற்றொடரும் நாம் அறிவோம். அப்படியான வாழ்க்கை அனுபவத்தை பெற்றவர்தான் நமக்கு வழிகாட்டவும் முடியும். இப்படிப்போகாதே, பாதையில் முட்கள் இருக்கிறது என்று யாராவது போதனை செய்தால், நீ உன் வேலையைப்பார், எல்லாம் எனக்குத் தெரியும் நீ சொல்லவேண்டிய அவசியம் இல்லை என்று அந்த முட்பாதையில் கால்வைத்து நடப்பீர்களா? ஆனால் அப்படித்தான் இந்த உலகில் மனிதர்கள் பயணிக்கிறார்கள்.

ஆனால், உண்மையான ஞானியும், யோகியும், மகானும் ‘நான் சொல்லுவதை கடைபிடியுங்கள்’ என்று கட்டாயப்படுத்தவே மாட்டார்கள்.

வாழ்க வளமுடன்

-

Why no one give a solution for my problems? How I can get it?


எனக்கான பிரச்சனைக்கு ஏன் யாராலும் உதவமுடியவில்லை, அதற்கான வழியோ, பதிலோ தரமாட்டேன் என்கிறார்கள் என்று குழப்பமாக இருக்கிறது. இதற்கு விடை என்ன?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, எனக்கான பிரச்சனைக்கு ஏன் யாராலும் உதவமுடியவில்லை, அதற்கான வழியோ, பதிலோ தரமாட்டேன் என்கிறார்கள் என்று குழப்பமாக இருக்கிறது. இதற்கு விடை என்ன?


பதில்: 

இது பொதுவான நிலைமைதான். மனிதர்களுடைய சிந்தனையும், செயலும், எதிர்பார்ப்பும் கூட ஒன்றாக இருந்துவிட நிறைய வாய்ப்பு உள்ளது. ஆனால் அதனால் எழுகின்ற விளைவுகளும், பிரச்சனைகளும் தனித்தனியானவை தான் என்பது பிரபஞ்ச இயற்கை விதி என்றுதான் சொல்லவேண்டும். கூடவே ஒவ்வொரு தனிமனிதனிடம் உள்ளமைந்த, சமீபகால மக்கள் ஏற்றுக்கொள்ளாத, கர்மா என்ற வினைப்பதிவும் காரணமாக அமைந்து விடுகிறது.

இரண்டு நபர்கள் என்று கணக்கில் எடுத்துக்கொண்டால் கூட, ஒரே வயது, ஒரே ஊர், ஒரே படிப்பு என்று பல ஒற்றுமைகள் இருந்தாலும் கூட அவர்களுக்கான பிரச்சனை என்பது, ஒரே மாதிரி இருப்பதே இல்லை. சிலர் பேசிக்கொள்ளும் பொழுது, ‘நான் நினைச்சேன், நீ சொல்லிட்ட’ என்று மகிழ்வோடு பாராட்டுவார்கள். அப்படியாக ஒருவர் நினைப்பதைக்கூட, பிறரால் சொல்லிவிட முடிகிறபொழுது, பிரச்சனை என்றால் மட்டும், தனித்தனியாகத்தான் பிறக்கிறது/ இருக்கிறது. மனிதனின் சிறப்பும் இதுவேதான்.

ஆனால் இதற்காக, ‘எனக்கான பிரச்சனைக்கு ஏன் யாராலும் உதவமுடியவில்லை, அதற்கான வழியோ, பதிலோ தரமாட்டேன் என்கிறார்கள் என்று குழப்பமாக இருக்கிறது' என்று புலம்பிக்கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. பிரச்சனைகள் பல இருந்தாலும், அவற்றை முதலில் ஒழுங்கு செய்துகொள்ள வேண்டியது அவசியம். எல்லா பிரச்சனைகளையும் ஒரே தொகுப்பில், அடுக்கில் வைத்துக்கொண்டு புலம்பக்கூடாது. தீர்க்கமுடியாதது, தீர்க்க முடிந்தது, தீர்க்கவேண்டியது, விட்டு விலக்கவேண்டியது என்று அதில் வகைகளை பிரிக்கவேண்டியதும் அவசியம். நீங்கள் அகத்தாய்வு எனும் தற்சோதனை பயிற்சி குறித்த விளக்கம் பெற்றிருந்தால், அதை செய்யமுடியும். ஒரு அரைநாள், இதற்காக ஒதுக்கிக்கொண்டு, துரிய தவம் இயற்றி, அதன் நிறைவில், ஒரு காகிதத்தில் வரிசையாக, ஒவ்வொரு பிரச்சனைகளாக எழுதிக் கொண்டு, அதை பட்டியலிட்டு, சீர்தூக்கிப் பார்த்து வகைப்படுத்திக் கொள்ளலாம். பெரும்பாலான மனக்குறை, இந்த பயிற்சியின் வாயிலாகவே தீர்க்கமுடியும், பிரச்சனைகளின் தாக்கம் குறையும் என்பது உண்மை.

மேலும், ஒரு குருவோ, மகானோ, ஞானியரோ, இதை விளக்கிக் கொண்டிருக்கும் நானோ, தனியாக, ஒரு குறிப்பிட்ட நபருக்காக ஒன்றை சொல்லுவதற்கு வழியில்லை. நீங்கள் அவர்களை நேரடியாக பார்த்து கேட்டால்தான் உங்களுக்கான தனியான ஆலோசனையும், தீர்வும் அவர்களிடம் இருந்து கிடைக்கும். அது இல்லாமல், யாருமே எனக்கு தீர்வு தரவில்லை என்று வருந்துவதில் பயனில்லை. ஆனால், பொதுவாக கிடைக்கும் செய்திகளில், எழுத்துக் கட்டுரைகளில், கவிகளில், உண்மை விளக்கங்களில், பேச்சுக்களில் கூட உங்களுக்கான தீர்வு அங்கே பொதிந்து மறைந்து இருக்கும். இது உறுதியான உண்மையே. ஆனால் நாம்தான் எதையுமே ‘தனி கவனத்துடன்’கவனிப்பதே இல்லையே? பிறகு எப்படி நமக்கான தீர்வு கிடைக்கும். இன்னும் சொல்லப்போனால், உங்களை ஏதோ ஒரு நாளில், ஏதோ ஒரு காரணமாக, சந்திக்கும், பேசும், நபர்கள் வழியாகக்கூட உங்களுக்கான தீர்வு கிடைக்கலாம். நாம் தான் அதற்கு தயாராகாமல், விழிப்பாக இல்லாமல் இருப்போம். கொஞ்சம் கவனித்துப்பார்த்தால், பல வழிகளில் அந்த உண்மையை, வழியை, கருத்தை, ஆலோசனையை பெறாமல் இழந்திருப்போம்.

எனவே உங்களுக்கான தீர்வு கிடைக்க, தீர்வைப் பெற வழிகள் மூன்று உள்ளன. நேரடியாக சந்தித்து ஆலோசனை பெறுங்கள், அகத்தாய்வு எனும் தற்சோதனை செய்யுங்கள், உங்களைச்சுற்றி நிகழ்வதை கவனியுங்கள். போதுமானது. நீங்கள் தெளிவு பெற, இறைநிலையோடு இணைந்து நின்று வாழ்த்துகிறேன்.

வாழ்க வளமுடன்

-

How Amavasya fast will benefit to us and which meditation is best for that day?


அமாவாசை விரதம் என்பது எவ்வகையில் நமக்கு உதவுகிறது? எந்த தவம் செய்தால் சிறப்பான முன்னேற்றம் தரும் என்பதை விளக்குவீர்களா?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, அமாவாசை விரதம் என்பது எவ்வகையில் நமக்கு உதவுகிறது? எந்த தவம் செய்தால் சிறப்பான முன்னேற்றம் தரும் என்பதை விளக்குவீர்களா?

பதில்:
அமாவாசை, பௌர்ணமி என்பதும் ஒவ்வொரு மாதமும் அடுத்தடுத்து நிகழும் இயற்கையின் அதிசயம் என்றுதான் சொல்லவேண்டும். இந்த புவியில், பஞ்சபூதங்களுக்கும், அதன் மலர்ச்சியில் உள்ள இயற்கைக்கும், பரிணாமத்தின் வழியாக மலர்ந்த ஜீவன்களுக்கும், மனிதர்களாகிய நமக்கும் ஓர் உந்துதலையும், மாற்றத்தையும் ஏற்படுத்துகிறது என்பது உண்மை. அக்காலத்தில் இருந்தே இதை உணர்ந்தறிந்த முன்னோர்கள், மக்களின் வாழ்க்கை முறையை, அன்றைய நாளில் மட்டும் ஒழுங்குசெய்தார்கள். நிலவு, சூரியன், பூமி இவற்றின் அமைப்பில் மாறும் ஆற்றலை, நமக்கு சாதகமான வகையில் ஏற்று நன்மை பெற வழி வகுத்தார்கள்.

அமாவாசை என்றால், சூரியனும் நிலவும் இணைகிறது எனலாம். பௌர்ணமி என்றால் சூரியனும், நிலவும் தனித்தனியே எதிரெதிராக பிரிந்து நிற்கிறது எனலாம். இந்த இரண்டு நிலைகளிலும், சூரியன், நிலவு, நாம் வாழும் பூமி இவற்றின் காந்தக்களம் மாறுபாடு அடைகிறது. ஏனென்றால் ஓவ்வொரு கிரகத்திற்கும், தனித்தன்மையான காந்த அலைகள் உண்டு. அவை எப்போதும் பரவி வீசிக்கொண்டே இருக்கும். அமாவாசையில் சூரியனும், நிலவும் இணைவதால், அதன் காந்த அலைகள், புமியை நோக்கிய நிலையில் பலமாகின்றன. இதனால் ஒர் ஆகர்ஷணசக்தி ஏற்படுகிறது. இது மனிதர்களாகிய நம் உடலையும், மனதையும் பாதிக்கிறது. அது மட்டுமல்ல, ஜீரணமண்டலத்தையும் பாதிக்கிறது.

அதனால்தான் அமாவாசையில் விரதம் என்ற நிலைபாட்டை வைத்தார்கள். இந்த விரதம், குறிப்பிட்ட எளிய உணவுகளை குறைவாக சாப்பிடுவது என்றும், ஒரு நேரம் மட்டும் எதுவும் சாப்பிடாமல் தவிர்ப்பது என்றும் முன்னோர்கள் வழிசெய்தார்கள். இதில் அந்த ஆற்றலை வணங்குவதற்கு பக்தி வழியாகவும் பூஜை என்று வைத்தார்கள். இதனால் உடல், மன, உயிர் நலம் காக்கப்படும் என்பது உறுதி.

உணவு என்ற விரதம் மட்டுமல்ல, எந்த ஒரு புதிய செயல் தவிர்ப்பது, கடினமான வேலைகளை தவிர்ப்பது, ஆயுதங்களை கையாளாமல் இருப்பது என்று பல விரதங்கள் உண்டுதான். முக்கியமாக ஆண், பெண் உடலுறவையும் தடுக்கவே சொல்லுகிறார்கள். அதற்கான காரணங்கள் நிறைய உண்டு. அதை தனிப்பதிவாகவே தரலாம். ஆனால் இதை எல்லாம் மறுத்து, பொய், கட்டுக்கதை என்போர், வரக்கூடிய பிரச்சனையை அனுபவிக்க வேண்டியதுதான். அதுகுறித்து நாம் ஏன் கவலைப்பட வேண்டும்?!

அமாவாசையில் தவம் செய்வதாக இருந்தால், சாந்தி தவம் செய்யலாம். தவ ஆற்றலை உடலாற்றலாக மாற்றம் செய்யும் வகையில், உடல்நலம் காக்கப்படும். சக்தி இழப்பும் ஏற்படாது. மனமும் சிதறாத நிலைக்கு உதவும். வேறு தவங்கள் தேவையில்லை.
வாழ்க வளமுடன்
-

Is it true mind will be affected when break the meditation suddenly?


தியானம் செய்யும் பொழுது தடை உண்டானால், மனக்குழப்பம் வரும், புத்தி பேதலிக்கும் என்று சொல்லுகிறார்களே? அது உண்மையா? விளக்கம் தேவை!


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, தியானம் செய்யும் பொழுது தடை உண்டானால், மனக்குழப்பம் வரும், புத்தி பேதலிக்கும் என்று சொல்லுகிறார்களே? அது உண்மையா? விளக்கம் தேவை!


பதில்:

யோகத்தில் தியானம் என்பது மிக உயர்ந்த சாதனை. மிக எளிதில் யாருக்கும் கிடைக்காத பேறு என்றுதான் சொல்லவேண்டும். பரபரப்பான இப்போதைய, பொருள்முதல்வாத உலகில், தியானம் மிகவும் கடினமானதுதான். ஏனென்றால், நம் மனதை அலைக்கழிக்க ஏகப்பட்ட விஷயங்கள் அருகியிருக்கின்றன. மிக முக்கியமாக நம்முடைய செல்ஃபோன். ஏதோ நம்மோடு பிறந்தது போலவே, ஒட்டிக்கொண்டது. அது இல்லாமல் நம்முடைய எந்த நடவடிக்கையும் இல்லை என்ற நிலைக்கு நாம் மாறிவிட்டோம், மாற்றப்பட்டுவிட்டோம் என்பது உண்மைதானே?

இதோடு, வேலை, வியாபாரம், தொழில், நிறுவனவேலைகள் என்றும் பலவழிகளில் சிக்கி, நேரமின்மையில் தவிக்கிறோம். சரியான நேரத்திற்கு உணவை எடுத்துக்கொள்ளக்கூட நேரமில்லை. இதனினும் மேலாக, குடும்ப கடமைகள். வீட்டில் இருக்கும் நபர்களுக்கான தேவைகளை நிறைவேற்றுதல், குழந்தைகளை கவனித்தல், வளர்த்தல், அவர்களுடைய கல்விக்கு உதவுதல் என்றும் வரிசையாக அடுக்கிவைத்தார்போல செய்யவேண்டிய கடமைகள். இவை எல்லாமே ஆண்களுக்கும் உண்டு, பெண்களுக்கும் உண்டு. கூடுதலாக பெண்களுக்கு, எல்லோருக்குமான உணவை சமைத்தல், பரிமாறுதல், வீட்டில் உள்ளவர்களை அக்கறையோடு கவனித்தல் என்ற பொறுப்பும் உண்டு. இதையெல்லாம் அன்றாடம் ஒழுங்கிபடுத்திக்கொண்டு, அதில் கிடைக்கும் சிறிய இடைவெளியில், நமக்கான சில நேரங்களை, வேலைகளை ஒதுக்கிவைத்துவிட்டு, இந்த தியானத்தை செய்யவேண்டிய நிலைதான் இங்கே, இன்று இருக்கிறது.

மேற்கண்ட விஷயத்தை படிக்கும் பொழுதே, யோசித்துப் பார்க்கும் பொழுதே, ஏகப்பட்ட தடைகளுக்கான காரணங்கள் விளங்கிவிடும் என்பது உண்மைதான். என்றாலும் கூட, நாம் யோகத்திலும் கூட ஒரு முன்னேற்றமான காலத்தில் வாழ்ந்து வருகிறோம் என்றால் மிகையில்லை. குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் வழங்கிய ‘எளியமுறை குண்டலினி யோகம்’ என்ற மிகச்சிறந்த யோகமுறையில் பயணிக்கிறோம். அதனால், நம்முடைய அன்றாட வாழ்வில், மிகச்சிறிய நேரத்தை ஒதுக்கிக்கூட தியானம் இயற்ற முடிகிறது. அதுகுறித்த சிந்தனையிலும் இருக்கமுடிகிறது. இது நமக்கு கிடைத்த மிகப்பெரும் பாக்கியம் அல்லவா?

என்றாலும் கூட, நாம் இயற்றுகின்ற தியானத்தில் தடை ஏற்பட்டால், அது பாதிப்பை தரும் என்பது உண்மைதான். மனக்குழப்பம், மன அழுத்தம் உருவாகிவிடும்.  தியானம் முடிக்காமல் தடையால் நிறுத்திவிட்டோமே? என்று சிந்திப்பது மனக்குழப்பம் ஆகும். ஏற்பட்ட தடையால் மனமும் எண்ணங்களும் சிதறுவது, பதட்டப்படுவது, என்ன ஆகிவிடுமோ? என்று பயப்படுவது மன அழுத்தம் ஆகும். இந்த இரண்டும் பொதுவாக, தியானத்தில் தடை ஏற்பட்டால், எல்லோருக்குமே உருவாகக்கூடியதுதான். என்றாலும் அடுத்த சில மணி நேரங்களில், தானாகவே சரியாகிவிட வாய்ப்பு உள்ளது. ஏனென்றால், நாம் இணைந்திருக்கின்ற ‘மனவளக்கலையின்’ சிறப்பு அதுவே.

புத்தி பேதலிக்குமா? என்ற அடுத்த ஒரு கேள்வி உள்ளது. இப்பொழுது நாம் பயணிக்கும், எளியமுறை குண்டலினி யோகத்தில் அதற்கு வாய்ப்பில்லை. ஆனால், வாசியோகம், ஆசனமுறை, பூஜா முறை ஆகியவற்றில் குண்டலினி சக்தி தானாகவே எழுப்பிக்கொண்டு, தியானம் செய்துவரும் அன்பர்களுக்கு, அந்த தியானம் செய்யும் பொழுது தடை ஏற்பட்டால், புத்தி பேதலிக்க வாய்ப்பு உண்டு. எனினும் குருவின் அருகாமையும், மேற்பார்வையும் இருந்தால் சரிசெய்யப்படலாம். எனினும் கவனம் வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

வாழ்க வளமுடன்

-

I am sad that there is no one to comfort me. Who will give me a shoulder?


என்னை தேற்றுவதற்கு யாருமே இல்லையே என்று வருத்தமாக இருக்கிறது. அவ்வளவு துன்பங்களை நான் அனுபவிக்கிறேன். எனக்கு தோள் கொடுப்பார் யார்?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, என்னை தேற்றுவதற்கு யாருமே இல்லையே என்று வருத்தமாக இருக்கிறது. அவ்வளவு துன்பங்களை நான் அனுபவிக்கிறேன். எனக்கு தோள் கொடுப்பார் யார்?


பதில்:

உங்களின் நிலைமை எனக்கு புரிகிறது. ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் இந்த நிலைமை ஒவ்வொருவருக்கும் உண்டு. நாம் பிறந்து வளர்ந்து வரும் பருவ காலத்தில், எதைபற்றியும், எதுகுறித்தும் கவலைப்படாது வாழ்ந்த காலம் உண்டு. ஆனால், குடும்பத்தில் சூழல்காரணமாக, நமக்கு கிடைத்த வாய்ப்புக்கள் வழியாக, சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக ஏதேனும் ஒரு வாழ்க்கை மாற்றத்தை ஏற்றுக்கொண்ட பிறகு, வெளியில் சொல்லமுடியாத துயரம் நம்மை ஆழ்த்திவிடும். உண்மையில் அதை விட்டு விலகிட முடியாத அளவில் சிக்கி இருப்போம். ஏதோ ஒருவகையில், மற்றவர்கள் என்னால் பாதிக்கப்படக் கூடாது என்ற நல்ல எண்ணமும் அதில் இருக்கும் என்பதே உண்மை. ஆனால் மேலும்மேலும் சிக்கல் நிறைந்து, என்னசெய்வது என்று புரியாமல் காலம் கடத்திவருவோம்.

அத்தகைய காலகட்டத்தில், நாம் தனிமனிதனாக அல்லாமல், நமக்கென்று ஒரு குடும்பம், நம்மை எதிர்பார்த்து சில உறுப்பினர்களும் இருப்பார்கள். இதற்கிடையில் நமக்கு ஆறுதல் சொல்லவோ, ஏதேனும் உதவி செய்தோ, நல்லவார்த்தைகள் சொல்லி ஊக்கப்படுத்தவோ, நம்முடைய பெற்றோர்களும் இருக்கமாட்டார்கள். ஆம் அவர்கள் வயதாகி, முடியாத சூழலில் இருக்கலாம். காலத்தில் நிறைவாகியும் போயிருக்கலாம். நம்மோடு இருப்பவர்களும், நமக்கான எந்த உதவியும், ஆறுதலும் தரமுடியாத சூழலில் இருக்கலாம். அவர்களை சொல்லியும் குறையில்லை. அவர்களுக்கும் நம்மைப்போலவே ஏகப்பட்ட பிரச்சனைகள் இருக்கலாம்தானே?

இப்போதைய இந்த சூழலில், நமக்கு உதவி எதுவும் கூட தேவையில்லை. ஒரு ஆறுதல் வார்த்தை சொல்லக்கூட யாருமில்லையே என்பதுதான் மிகப்பெரும் பிரச்சனை. ஆனால் ஓவ்வொருவருமே, அவரவர் உலகில் தனித்து, ஒரு எல்லையோடு வாழ்ந்து வருவதால், யாரையும் யாரும் தன்னிடத்தில் அண்ட விடுவதில்லை. ‘நீ உன் எல்லைக்குள் இரு, நானும் என் எல்லைக்குள்தான் இருப்பேன்’ என்று சொல்லிவிடுவார்கள். இதையும் நாம் குறை சொல்லமுடியாது. ஒருகாலத்தில் நாம் இப்படித்தானே சொல்லிக்கொண்டிருந்தோம் இல்லையா? நிச்சயமாக இல்லை என்று மறுக்கமுடியாதுதானே?!

அப்படியானால், என்னை தேற்றுவதற்கு யாருமே இல்லையே என்று வருத்தமாக இருக்கிறது. அவ்வளவு துன்பங்களை நான் அனுபவிக்கிறேன். எனக்கு தோள் கொடுப்பார் யார்? என்று நீங்கள் கேட்டதற்கு வழி என்ன? யோகத்தின் வழியாக நம்மை உயர்த்த விரும்பும், குரு தான் நமக்கு உதவக்கூடியவர். நம் குருமகான் வேதாத்திரி மகரிஷி அவர்களை. ‘அருட்தந்தை’ என்று அழைப்பதில் இருக்கக்கூடிய அர்த்தமும், உண்மையும் அதுதான். ஒரு தந்தைக்குத்தான், வாழ்வியல் குறித்த முழு அனுபவம் இருக்கும். தாய் நம்மை, உள்முகமாக, மனப்பூர்வமாக ஆறுதல் தரக்கூடியவள்தான். அதில் மாற்றுக்கருத்தில்லை. எனினும், வாழ்கின்ற வாழ்க்கையில் பெறக்கூடிய துன்பங்களுக்கு தகுந்த ஆறுதல் தந்து நம்மை தேற்றக்கூடியவர் ‘தந்தை’ மட்டுமே.

குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்களை, ‘அருட்தந்தை’ என்ற நிலையில் ஏற்க தயாராகுங்கள். அவரின் தோளில் சாய்ந்து ஆறுதல் பெறுங்கள். ‘நான் இருக்கிறேன்’ என்றுதான் அவர் நம்மிடம் சொல்லியிருக்கிறார். சூட்சுமமாக, வான்காந்த வெளியில் கலந்திருக்கிறார். உங்களுக்கு ஆறுதல் தர, உங்கள் குருவை விட வேறு யார் வேண்டும்? இனி கவலையும், துன்பமும் எதற்கு? மிகச்சிறந்த வடிகாலாக, நம் குரு மகான் வேதாத்திரி மகரிஷி இருக்கிறார்.

வேதாத்திரியத்தில் இணையாதவர்களுக்கு, அவரவர் அளவில் அவர்களுடைய குருவை தாராளமாக ஏற்றுக்கொள்ளலாம். அதில் எந்த சந்தேகமும் இல்லை. எனவே குருவின் தோள் சாயுங்கள். ஆறுதல் பெறுங்கள். எல்லாம் கடந்து விட்டு விலகி, வாழ்வில் உயர்ந்து, மெய்யுணர்வு பெறுங்கள். வாழ்க்கையின், பிறப்பின் கடமையில் சிறந்து விளங்குங்கள். 

வாழ்க வளமுடன்

-

Should my Guru grace will be help to relieve from problems? Please let know me how?!


என்னுடைய வாழ்க்கைப் பிரச்சனைகளை உடனே தீர்க்க குருவருள் உதவிடுமா? அதற்கு என்ன செய்யவேண்டும்?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, என்னுடைய வாழ்க்கைப் பிரச்சனைகளை உடனே தீர்க்க குருவருள் உதவிடுமா? அதற்கு என்ன செய்யவேண்டும்?

பதில்:

வாழும் மனிதர்களாகிய நமக்கு, பிரச்சனைகள் எழுந்துகொண்டேதான் இருக்கிறது. அதை எப்படி நாம் அணுகுகிறோம்? என்பதில்தான் அது உண்மையிலேயே பிரச்சனையா? பிரச்சனையாக தோன்றுகிறதா? கடந்துவிடக் கூடியதா? என்பது நமக்குத் தெரியவரும். பெரும்பாலானவர்கள் அதை ஏற்று, அதில் சிக்கிக் கொள்வதுதான் வருத்தம் தரக்கூடிய நிகழ்வு. சிலர் அந்த பிரச்சனையில் சிக்கி, அதை சரி செய்யமுடியாமல் தோற்றுப்போய், வாழ்க்கையில் இருந்து விலகி ஓடிவிடுவதும் உண்டுதான். அதுதான் மிகப்பெரும் சோகம்.

இந்நிலையில், குழந்தையாக இருந்தால், நல்லதுதான் என்று சிலர் நினைப்பார்கள். ஆனால் இக்கால குழந்தைகளுக்கும் அன்றாட சிக்கல்கள் இருக்கின்றன. அவர்களுக்குரிய அளவில் அவை இருக்கின்றன என்பது உண்மைதான். உங்கள் குழந்தைகளிடம் பேசிப்பாருங்கள். அவர்கள் ஒவ்வொன்றாக பட்டியலிடுவார்கள். அப்படியானால், பிரச்சனைகளும் சிக்கல்களும் இல்லாத வயது எது? யார் அவர்கள்? என்றால், மூன்று வயது நிரம்பிடாத குழந்தைகள் தான் எனலாம். ஏனென்றால், அக்குழந்தைகள் மூன்று வயதுவரையிலும், தன்னியல்புக்கு வருவதில்லை. என்றாலும் கூட சில குழந்தைகள் விதிவிலக்கு.

இப்போது உங்கள் கேள்விக்கு வருவோம். என்னுடைய வாழ்க்கைப் பிரச்சனைகளை உடனே தீர்க்க குருவருள் உதவிடுமா? என்று கேட்டால், அதற்கான பதில் நிச்சயமாக உதவிடும். உதவிக்கொண்டும் இருக்கிறது எனலாம். இதை நான் உறுதியாகவே சொல்லுகிறேன். அப்படியானால், அதற்கு என்ன செய்யவேண்டும்? என்பது உங்களின் இன்னொரு கேள்வி. இதோ அதற்கும் பதிலை காணலாம். குருவருளின் உதவியை நாடும் நீங்கள், ஆன்மீக சாதனையில் உங்களை இணைத்துக்கொண்டு இருப்பீர்கள் என்று நம்புகிறேன். குரு அவர்கள் உங்களுக்கு வழங்கிய, யோக பயிற்சிகளை அன்றாடம் செய்துவருவீர்கள் என்றும் நினைக்கிறேன். அதை தொடர்ந்து செய்துவாருங்கள். உங்கள் பயிற்சிகளில் மனம் லயித்து செய்வதை உறுதி செய்யுங்கள். வெறுமனே கண்மூடி நிமிடங்களை கடத்துவதை விட்டுவிடுங்கள்.

தவம் செய்ய அமரும்பொழுதே, உங்கள் மனம், உங்களுடைய எல்லா பிரச்சனைகளிலில் இருந்தும், அந்த நேரம் மட்டுமாவது விலகி நிற்கிறதா? அதிலேயே உழல்கின்றதா? அந்த பிரச்சனைகளையே எடுத்துக்காட்டிக் கொண்டே வருகிறதா? இதை எப்படி நான் தீர்ப்பேன் என்று எண்ணி வருந்துகிறதா? இந்த தவம் செய்து என்ன ஆகப்போகிறது என்று உங்களை திசை திருப்புகிறதா? என்றெல்லாம் ஆராய்ச்சி செய்யுங்கள். இந்த தாக்கம் உங்களுக்கு அதிகமாக இருந்தால், தவம் இயற்றாமல், சிறிது நேரம் அமைதியாக இருங்கள். உங்களுக்கு பிடித்த ஏதேனும் ஒன்றை செய்து மனதை இயல்பாக்குங்கள். நீங்கள் இருக்கும் இடத்தைவிட்டு நகன்று, வேறு இடத்திற்கு செல்லுங்கள். அடிக்கடி உங்களைச் சுற்றிலும் ‘நல்ல தெய்வீக ஆற்றலே நிரம்பின’ என்று சங்கல்பம் செய்து கொள்ளுங்கள். இதன் வழியாக மனம் விடுபட்டு, இயல்பாக இருக்க வழி கிடைக்கும். அதன் பிறகு தவம் செய்யலாம்.
தவம் இயற்றும் பொழுது, குருவை நினைந்து போற்று மகிழுங்கள். அவரிடம் சரணாகதி அடையுங்கள். நீங்களாக எதும் கேட்காதீர்கள். நீங்களாக எதும் சொல்லியும் புலம்பாதீர்கள். அமைதியாக உள்முகமாக, குருவை நினைந்து வணங்குங்கள். தவமும் இயற்றுங்கள்.

தவமுடிவில், ‘அருட்பேராற்றலின் கருணையினால், உடல்நலம், நீளாயுள், நிறைசெல்வம், உயர்புகழ், மெய்ஞானம் ஓங்கி வாழ்வேன்’ என்பதை மனம் ஒன்றி சொல்லுங்கள். வெறும் வார்த்தையாக இல்லாமல், ஒப்பிப்பது போலவும் இல்லாமல், அழுத்தம் திருத்தமாக சொல்லுங்கள். நாளடைவில், குருவருள் உங்களுக்கு உதவுவதை உணர்வாகவும் பெறலாம். மேலும் உங்களுக்கு ஆலோசனை தேவையென்றால், நேரடியாகவும் என்னை அணுகலாம்! நானும் உங்களை குருவோடு, இறையருளோடு இணைந்து வாழ்த்தி மகிழ்கிறேன்.
வாழ்க வளமுடன்
-

Can we change the day, time, place for the yoga practice? Is it Okay?


தவம் செய்வதற்கான காலம், நேரம், இடம் இவற்றை மாற்றலாமா? அதில் ஏதேனும் தடை உண்டாகுமா?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, தவம் செய்வதற்கான காலம், நேரம், இடம் இவற்றை மாற்றலாமா? அதில் ஏதேனும் தடை உண்டாகுமா?


பதில்:

சாதாரணமாக  கண்கள்மூடி தவம், தியானம் செய்வதற்கும், குருவிடம் தீட்சை பெற்று, யோகவழி தவம் செய்வதற்கும் வித்தியாசம் உண்டு. அதுபோலவே நாம் இயற்றும் வேதாத்திரிய தவங்களுமாகும். பொதுவாகவே யோகவழி தவங்களுக்கு, உங்களுக்கு பொருத்தமான இடங்களை தேர்வு செய்வது மிக நல்லது. அப்போதுதான் மனம் அமைதியில் இருக்கும். தவமும் சிறக்கும்.

இடம் என்பதை, நீங்கள் என்றுமே பயன்படுத்தாத, எப்போதாவது பயன்படுத்துகின்ற இடமாக இருக்கக்கூடாது. வழக்கமான வாழ்வில், எப்போதும் நிறைவாக பயன்படுத்தும் அறையாக, இடமாக இருக்கவேண்டியது அவசியம். உங்கள் வீட்டில் பூஜை அறை இருந்தால் கூட பயன்படுத்திக் கொள்ளலாம். உங்களுடைய படுக்கையறையும் பொருத்தமானதே. பலர் வந்து போகின்ற அறையாகவோ, வரவேற்பறையாகவோ இருக்கக் கூடாது. நீங்கள் தவம் இயற்றுகின்ற நேரம் முழுவதும் எந்த தொந்தரவும், தடையும் ஏற்படுத்தாத நிலையும் முக்கியம்.

காலம் என்பது, ஒவ்வொரு நாளும், சூரிய உதயத்திற்கு முன்பான காலம் சிறப்பு. கூடுதலாக காலை, நண்பகல், மாலை வைத்துக்கொள்ளலாம். இரவு 8 மணிக்கு மேலாக தவம் செய்வதை தவிர்ப்பது நல்லது. நேரம் என்பதை எடுத்துக்கொண்டால், பெரும்பாலான தவத்திற்கு 15 நிமிடம் போதுமானது. அதை நீடிப்பது உங்கள் விருப்பம். அதை தடை ஏதும் இல்லை. ஆனால் அந்த நேரம் முழுவது உங்களுக்கு தடையோ, பிரச்சனையோ பிறரால் எழாத தனிமை அவசியமாகும்.

இந்த காலம், நேரம், இடம் இம்மூன்றையும், ஏதேனும் சூழ்நிலை கருதி மாற்றிக்கொள்வதில் தவறில்லை. உதாரணமாக், உங்கள் இல்லத்தில் விருந்தினர் வருகை என்றால், அவர்களை தொந்தரவும் செய்யாமல், ஏதேனும் மற்றோர் இடத்தில் தவம் செய்யலாம். ஆனாலும் உங்களுக்கு பொருந்தாத இடத்தில் தவம் செய்வதை தவிர்க்கலாம். தவம் இயற்றுவதற்காகவே வெளியிடங்களுக்கு, இன்னொருவர் வீட்டிற்கு செல்வதை முடிந்தளவு தவிர்த்துவிடலாம். ஏனென்றால் அது உங்கள் மனதிற்கு குழப்பத்தை ஏற்படுத்தும். அருகில் உள்ள மனவளக்கலை தவமையத்திற்கோ, அறிவுத்திருக்கோவிலுக்கோ செல்வது மிகச்சிறந்த வழியாகும்.

ஏதேனும் சூழலில், நீங்கள் வெளியூரில் இருந்தால், அங்கே தவம், தியானம் இயற்றுவதை தவிர்க்கலாம். புதிய இடங்கள் எப்படிப்பட்டவை என்ற அனுபவம் நமக்கு இல்லை என்பதால் விட்டுவிடலாம். அதுபோல பொது இடங்களில் தவம், தியானம் இயற்றுவதும் நல்லதல்ல.

ஏன் இப்படியாக மாற்றிக்கொள்ளக்கூடாது? அதற்கு சில காரணங்கள் உண்டு. தினமும் உங்கள் வீட்டில் ஒரே இடத்தில், தவம், தியானம் செய்துவந்தால், அந்த அறை, இல்லம் முழுவதும் நல்ல ஆற்றல்களம் நிறைந்திருக்கும். தவத்திற்கு அமர்ந்த உடனே மனம் லயித்து செய்யவும் முடியும். உங்கள் யோக பயணத்தில் நல்ல வளர்ச்சியை தந்துவிடும் எனலாம். பொதுவாக உங்கள் மனதில் தோன்றும் ‘உள்ளுணர்வுக்கு’ மதிப்பு கொடுங்கள். உங்களுக்கு பொருந்தாத இடம், காலம், நேரம் என்பதை தானாகவே உணர்த்திவிடும் என்று சொல்லலாம். அதை கணித்து மாற்றம் செய்து கொள்க.

வாழ்க வளமுடன்

-

What happen if we give up the yoga in the life by problem or mindset?


வாழ்க்கைசூழல் காரணமாகவோ, மனமாற்றம் காரணமாகவோ தீட்சை பெற்றும் யோகத்தை கைவிட்டுவிட்டால் என்ன ஆகிவிடும்?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, வாழ்க்கைசூழல் காரணமாகவோ, மனமாற்றம் காரணமாகவோ தீட்சை பெற்றும் யோகத்தை கைவிட்டுவிட்டால் என்ன ஆகிவிடும்?

பதில்:

இந்த உலகில் வாழும் எல்லோருக்குமே, அவரவர் நிலையில் பிரச்சனைகள் உண்டு. தனித்து வாழ்ந்தாலும், குடும்பமாக வாழ்ந்தாலும், சமூக அமைப்பில் இருந்தாலும் கூட இந்த பிரச்சனைகள், ஒவ்வொரு விதத்திலும் வந்துமோதும். அப்படியான உலகம் இது. பொருள்முதல்வாத உலகத்தில், நாமும் நம்மையறியாமல் சிக்கி திணறுகிறோம். நம் மூச்சு நிற்கும் வரை. இதற்கு மாற்றுவழி ஏதுமில்லை எனினும், வாழ்கின்ற இந்த வாழ்க்கையிலேயே நல்லதை நோக்கி நகர்ந்து அல்லதை விடுவதற்கு வழிஉண்டு. தன்னளவில் பிரச்சனை இல்லாமலும், பிறருக்கு துன்பம் விளைவிக்காமலும் நாம் வாழ்வதற்கு நிறைய வழிமுறைகள் இருக்கின்றன. அப்படியான ஒரு வழியை உருவாக்கித்தருவதும், அதற்கு நம்மை தயார் செய்வதும்தான் யோகம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இத்தகைய யோகத்தை உருவாக்கித்தந்த சித்தர்களின் நோக்கமும் இதுவேதான்.

மனம் இதனான மனிதன், தன்னளவில் குறுகி வாழ்ந்துவருகிறான் என்பதில் சந்தேகமில்லை. தான் தனது என்ற தன்முனைப்பில் வாழ்ந்து அதையே மற்றவர்களுக்கும் செயல்படுத்திக் கொண்டிருக்கிறான். தன்னளவில் திருப்தியும், நிறைவும், அமைதியும் இன்றி தவிக்கிறான். தனிமனிதன் அமைதியில்தான் குடும்பமும், சமூகமும், உலகமும் அமைதியடையும் என்பதை மறவாதீர்கள். அப்படியான அமைதியை தந்து, அளவு முறையோடு உலகில் வாழவே யோகம் உதவுகிறது. வேதாத்திரியமும் அதையே வழங்கிவருகிறது.

உங்களுடைய வாழ்க்கைசூழல் காரணமாகவோ, மனமாற்றம் காரணமாகவோ தீட்சை பெற்றும் யோகத்தை கைவிட்டுவிட்டால், மிகப்பெரும் இழப்பு என்பது உண்மைதான். ஆனால் அதை திருத்திட வழியே இல்லை என்ற தெளிந்த நிலையில், வேறுவழியே இல்லாமல் கைவிடுகிறேன் என்றால் விட்டுவிட வேண்டியதுதான். ‘அடடா, இப்படியெல்லாம் சொல்லலாமா? எப்படியாவது தொடரத்தான் வேண்டும் என்றல்லவா அறிவுரை கூற வேண்டும்’ என்று நினைக்கிறீர்களா? உண்மையை அறிந்தவர்களின் பார்வையிலும், அனுபவத்திலும் ‘பொய்யாக’ சொல்லமுடியாது. எது சரியோ? அதை சொல்லித்தான் ஆகவேண்டும்.

எனவே வாழ்க்கைச்சூழல், மனமாற்றம், பிரச்சனைகள் தாக்கம்  இருந்தால் ‘கைவிட்டு விடுங்கள்’. அது குறித்து கவலை இல்லாமல், அந்த சூழலை மாற்ற முயற்சி செய்யுங்கள். எவ்வளவு காலத்தில் சரி செய்யமுடியுமோ, அதுவரை உங்களுக்கு ‘யோகம்’ வேண்டாம்.

வாழ்க்கை முழுவதுமே இனி தொடர்முடியாத சூழலா? சரி வேறு வழியில்லை என்றால் அதுவும் ஏற்றுக் கொள்ளக்கூடியதுதான். உங்களுக்காக, உங்கள் வழியில் வேறு யாரெனும், வாரீசாக, தலைமுறையில் உருவாகலாம். அவரின் முயற்சியில் உங்களுக்கும் விளக்கம் உருவாகும். அதுவரை அமைதியாக வாழ்க்கையை கடந்து செல்லவேண்டியதுதான். எந்த வருத்தமும் தேவையில்லை.

வாழ்க வளமுடன்
-

Why do we have problems with our relationships?


நீண்ட நாள் நம்மோடு இருக்கும் உறவுகளாலேயே, நமக்கு சிக்கல் எழுவது எதனால்?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, நீண்ட நாள் நம்மோடு இருக்கும் உறவுகளாலேயே, நமக்கு சிக்கல் எழுவது எதனால்?


பதில்:

நீங்கள் சொல்வது ஓரளவில் உண்மைதான். நீண்ட நாள் நம்மோடு இருக்கும் உறவுகளாலேயே, நமக்கு சிக்கல் எழுகிறது. எல்லோருடைய குடும்ப வாழ்விலும் இத்தகைய பிரச்சனைகள் உண்டு. சிலர் வெளியே சொல்லுவார்கள். சிலர் வெளியே சொல்லமாட்டார்கள். இத்தகைய பிரச்சனைகள் தீர்க்கப்படாமல், குடும்பம் என்ற அமைப்பும் சிதறி, கலைந்துபோனதும் உண்டு. இதனால் ஊரைவிட்டு விலகி வேறு ஊருக்குச் சென்று வாழ்பவர்களும் உண்டு. அதனால்தான் பெரும்பாலான மக்களுக்கு இத்தகைய உறவுகளால் ஏற்படும் சிக்கல்கள், பிரச்சனைகள் இருக்கிறது என்று தெரியவருகிறது.

உறவுகள், சொந்தம், பந்தம் என்பது ஏதேனும் ஒருவகையில், பாதுகாப்பும், அணுசரணையும் கிடைக்கும் என்பதற்காகவே முன்னோர்கள் உருவாக்கிய குடும்பம் என்ற வாழ்க்கை முறையில் அமைந்தது. அந்தக்காலத்தில் கூட்டுக் குடும்பமும் இருந்தது என்பதை மறவாதீர். இன்றைய கால திருமண விழா சாப்பாடு போலவே, ஒவ்வொடு கூட்டுக் குடும்ப வீட்டிலும் நிகழ்ந்து வந்தது என்று சொன்னால் நாம் வியந்து நிற்போம் என்பதே உண்மை.

ஒருவருக்கு உடம்பு சரியில்லை என்றால், அந்த வீடே அவருக்கு உதவும். ஒரு குழந்தைக்கு பிரச்சனை என்றால் எல்லோருமே கலங்கி தவிப்பார்கள். அப்படியான உறவுகள் சூழ்ந்த வாழ்க்கைமுறை அது. ஆனால் இன்றோ,  கணவன், மனைவி, குழந்தை என்ற மூவர் மட்டுமே குடும்பம் என்று ஆகிவிட்டது. அந்த குழந்தை வளர்ந்து ஆளாகி நின்றால், அவரின் திருமணம் வழியாக ஒரு உறவு உருவாகிவிடும். ஆனால், அவரும், அவரின் வாழ்க்கைத்துணையும் தனிக்குடும்பமாக உருவாகிவிடுவார்கள். இப்படியான சிதறிய, சுருங்கிய குடும்ப வாழ்க்கையிலும்,  நம்மோடு இருக்கும் உறவுகள் சிக்கலை ஏற்படுத்துவதான் இப்போதைய பிரச்சனை. இதற்கு முக்கிய காரணம் நாம்தான். அந்த அளவிற்கு அவர்களோடு நம்மை வெளிப்படுத்திக் கொண்டோம். அந்த வெளிப்பாடுகளில், நாம் எப்படிப்பட்டவர் என்பதை அறிந்து, சமயம் பார்த்து நம் காலை வாருகிறார்கள்.

எனவே நாம் செய்யவேண்டியது, நம்மைக்குறித்து என்ன பிறரிடம் பகிரவேண்டுமோ, அதை மட்டுமே பகிரவேண்டும். மற்றதை ரகசியம் காக்கவும் வேண்டும். உங்கள் முடிவு சரியாக இருக்கும்படி, விமர்சனங்கள் எழாதபடி அதை செயல்படுத்தவும் வேண்டும்.  உங்கள் முடிவு சரியாக் இருக்கும்படி, விமர்சனங்கள் எழாதபடி அதை செயல்படுத்தவும் வேண்டும். உங்கள் செயல் தாமதிக்காது, உடனடியாக நிறைவேற்றிடவும் வேண்டும். இன்று நாளை என்று நாட்களை மட்டுமல்ல, நேரத்தையும் வீணாக கடத்தக்கூடாது.

இன்னொருவரின் துணை, உதவி தேவையில்லை என்பதை உங்கள் திட்டத்திலேயே உருவாக்கி இருக்கவேண்டும். ஆலோசனை கேட்கலாம் ஆனால் அவர்கள் முடிவில், உறவுகளின் முடிவில் பயணிக்கக் கூடாது. அதேநேரத்தில் ‘எல்லாம் எனக்குத் தெரியும்’ என்று அவர்களை உதாசீனம் செய்யவும் கூடாது. ஏனென்றால் உறவுகள் எப்போதும் நமக்கு தேவைதான்!

இப்படியான உறவு சிக்கல் எழுந்தால், நீங்கள் அவர்களை ‘வாழ்க வளமுடன்’ என்று வாழ்த்துங்கள். தனியாக சிக்கல் குறித்து ஆராயுங்கள். அகத்தாய்வும், தற்சோதனையும் செய்துவாருங்கள். எளிதாக தீர்க்கலாம்!

வாழ்க வளமுடன்.

-

Who offer the solution for our life sufferings? man, god or nature?


வாழ்க்கை சிக்கல்களுக்கு தீர்வை தருவது யார்? மனிதனா? கடவுளா? இயற்கையா?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, வாழ்க்கை சிக்கல்களுக்கு தீர்வை தருவது யார்? மனிதனா? கடவுளா? இயற்கையா?

பதில்:
நல்ல சிந்தனைக்குறிய கேள்விதான். வாழ்க்கை என்பது சிக்கலானது இல்லை. மனிதர்கள் வாழும் காலத்தில் அவர்கள், அவர்களுக்குள்ளாக ஏற்படுத்திக்கொண்டே சிக்கல். அது அந்த மனிதர்களுடைய வாழ்நாளெல்லாம் தொடர்வதால், வாழ்க்கை சிக்கலானதாக தெரிகிறது என்பதுதான் உண்மை. உலகில் ஐந்தறிவு ஜீவராசிகளில் சிக்கல் உண்டா? உண்டு அவை, இயற்கை சிக்கலாக இருக்கும், அதை சமப்படுத்தி, அதை வென்று வாழக்கூடிய தன்மை அவைகளுக்கு உண்டு. இதை Survival of the Fittest என்று சொல்லுவார்கள். தமிழில் மிக கேவலமாக ‘வலியது வாழும்’ என்று மொழி பெயர்த்திருக்கிறார்கள். அது உண்மையில்லை. ‘தகுதியுள்ளது வாழும்’ என்பதுதான் சரியான அர்த்தமாகும். நாமும் அவ்வாறேதான்.

ஒரு மனிதரை சந்தித்து, அவர் யாராக வேண்டுமானலும் இருக்கட்டும், எத்தகைய பின்புலம் உள்ளவராகவும் இருக்கட்டும், என்ற நிலையில் எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டால், நாம் கேட்பதற்காக ‘நன்றாக இருக்கிறேன்’ என்று மறுமொழி தருவார். பெரும்பாலும் முகம் அறியாத நபர்களிடம், தங்களைப்பற்றி எதுவும் சொல்லக்கூடாது என்றுதான் நம் மக்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள். அதனால் நாம் அப்படியே நகர்ந்துவிடாமல், ‘ஏதேனும் பிரச்சனை உள்ளதா? நான் உதவலாமா?’ என்று கேட்டால் கூட ‘தேவையில்லை’ என்றுதான் சொல்லுவார்கள். ஆனால் தங்களிடம் உள்ள குறையை சொல்லுவதற்கும், பகிர்ந்து ஆலோசனை கேட்பதற்கும், உதவியாகவும் யாரையாவது எதிர்பார்ப்பார்கள். இந்த நிலையில், எல்லோருக்குமே வாழ்க்கை சிக்கல் உள்ளது என்று அறியலாம். ஆனால அவரவர் அளவில் சிறியதாகவோ, பெரியதாகவோ இருக்கும்.

பெரும்பாலான மனிதர்களின் முதல்நிலை சிக்கல், பணமும், வருமானமும் தான் என்பதை உறுதியாக சொல்லலாம். பணம், வருமானம் இருப்பவருக்கு, அதை செலவு செய்வதிலும், பற்றாக்குறையிலும் சிக்கல். பணமும் வருமானமும் இல்லாதவருக்கு அன்றாட செலவுகளுக்கே சிக்கல். இந்த இரண்டுக்குப் பிறகுதான் மற்ற எல்லா சிக்கல்களையும் வரிசைப்படுத்த முடியும்.

இத்தகைய சிக்கல்கள் தானாக வந்ததா? சிந்தித்துப்பாருங்கள். கொஞ்சம் முன்னோக்கி பார்த்தால், எங்கோ, ஏதோ ஓர் இடத்தில் நம்முடைய எதிர்பார்ப்பும், ஏமாற்றமும் கலந்திருக்கும். நம்முடைய செயல்பாடும், திட்டமும், உழைப்பும், சரிசெய்தலும் தடுமாறி இருக்கும். நடப்பது நடக்கட்டும் என்று இருந்தால் கூட காலத்தில் அதுவும் சிக்கலாகிவிடும் தானே?! எனவே எப்படிப் பார்த்தாலும், ஒரு சிக்கல் எழுகிறது, எழுந்திருக்கிறது என்றால், அது நம்மால்தான் வந்திருக்கிறது என்று சொல்லலாம். நம்மைச் சார்ந்தவர்களால் கூட நமக்கு வரும். அங்கே நாம் தப்பிக்கவும் வழியில்லை. ஏனென்றால், குடும்பம், உறவு, வாழ்க்கைத்துணை, குழந்தைகள், நண்பர்கள் என்றில்லாமல் தனித்து வாழ்ந்திடவும் வழியில்லையே. 

இங்கே நம்முடைய முன்னோக்கிய பார்வையும், எதிர்கால திட்டமிடுதலும் நிச்சயம் தேவைப்படும். இயற்கையில் சிக்கல் எழுகிறதா? என்றால் ஆம், ஆனால் அது அதன் போக்கில்தான் நிகழ்கிறது. ஒரு பழமொழி சொல்லுவதுபோல, ‘உப்பு விற்கப்போனால் மழை பெய்கிறது, மாவு விற்கப்போனால் காற்று அடிக்கிறது’ என்பதாக. கிராமங்களில் இதற்கு பதிலும் சொல்லுவார்கள், ‘இது ரெண்டையும் கலந்து பண்டமாக செய்து விற்கலாம்ல’ என்பார்கள். எனவே இயற்கை நமக்கு எந்த ஒரு சிக்கலையும், தனி நபருக்காக உருவாக்குவதில்லை. இயற்கையோடு வாழ்ந்தாக வேண்டிய நாம்தான் அதில் சிக்கிக் கொள்கிறோம்.

நீங்கள் கேட்ட கேள்வியில்,  தீர்வை தருவது யார்? மனிதனா? கடவுளா? இயற்கையா? என்பதில், மனிதன், கடவுள், இயற்கை இம்மூன்றுக்கும் ஒரு தொடர்பு இருப்பதையும் நாம் அறியலாம். எப்படியென்றால், மனிதன் கடந்து உள்ளே பயணித்து தன்னை அறிந்தால் இயற்கையின் உண்மையை தெரிந்து கொள்ளலாம் என்ற விளக்கமாகும். அப்படியானால் முடிவாக என்ன சொல்லமுடியும் என்றால், மனிதன் இயற்கையிலிருந்து விடுபட்டவன் இல்லை.

ஆனால் அவன் தனித்திருப்பதாக கருதுகிறான். இயற்கையில் ஒரு விதி இருக்கிறது. அது செயல் விளைவு தத்துவமாக செயல்படுகிறது. இன்னது செய்தால் இன்னது விளையும் என்பது பொதுவிதி. இது யாருக்காகவும், எதனாலும் மாறாது, குழையாது. சிதறாது. இதை புரிந்து கொண்டால், மனிதன் உருவாகிக்கொண்ட சிக்கல்களுக்கு தீர்வு மனிதனாலேயேதான் பெறமுடியும். மனிதன் தனக்குத்தானே தீர்வு தரவும் முடியும், பிறருக்கும் தீர்வு தரமுடியும். அதுபோலவே உங்களுக்கு நீங்களும் தீர்வு கொண்டுவரலாம், பிறரும் உங்களுக்கு தீர்வு தந்துவிடமுடியும். இதை சாத்தியப்படுத்துவது யார்? நீங்களேதான்.

வாழ்க வளமுடன்.
-

How we try to control who always do correction meaningless?


நம்மோடு இருந்துகொண்டு நம்மை குறை சொல்லுபவர்களை திருத்துவது எப்படி?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, நம்மோடு இருந்துகொண்டு நம்மை குறை சொல்லுபவர்களை திருத்துவது எப்படி?


பதில்:

நம்மோடு இருப்பவர்கள் மட்டுமல்ல, நம் குடும்பத்தில் இருப்பவர்களே நம்மை குறை சொல்லுவார்கள் தானே?! அது இயல்புதான். பொதுவாகவே, நீ எனக்கு பின்னால்தான் பிறந்தாய், அதனால் உனக்கு அவ்வளவு அனுபவம் போதாது. என்னிடம் இருந்து கற்றுக்கொள் என்றுதான் அவர்கள் நினைப்பார்கள். இல்லையென்றால், சில வயது கூடியவர்கள், படிப்பில் உயர்வு, பொருள் பணம் செல்வாக்கில் உயர்ந்தவர்கள் அப்படி மற்றவர்களை குறை கூறுவதை வழக்கமாகவே வைத்திருப்பார்கள். இவர்களின் அன்றாட வேலையே, யாரையாவது குறை சொல்லிக்கொண்டே இருப்பதுதான். அதுதான் அவர்களுக்கு திருப்தி அளிக்கும். ஒரு நீங்கள் உயர்ந்தால், அதாவது உங்கள் திறமையில் நீங்கள் உயர்ந்தால் கூட, உடனே, ‘பார்த்தாயா நான் சொல்லித்தான் நீ உயர்ந்தாய்’ என்று சொல்லுவார்கள். இதையே மற்றவர்களிடம் சொல்லியும் மகிழ்வார்கள்.

இவர்களை என்ன செய்யமுடியும்? நேரடியாக இவர்களிடம் ஒன்றும் சொல்லுவதற்கில்லை. ஏனென்றால், நாம் சொல்லுவதையும், விளக்கம் தருவதையும் ஏற்க மாட்டார்கள். சில வேளைகளில் நாம் இவர்களை வேண்டவே வேண்டாம் என்று தவிர்க்கவும் முடியாது. அத்தகைய நிலையில், நீங்கள் அவர் சொல்லுவதை அப்படியே கடந்து போய்விட வேண்டியதுதான். காதால் கேட்டாலும் கேட்காதது போல விட்டுவிட வேண்டும். இப்படி சொல்லுகிறாரே என்று உங்கள் மறுமொழி இருக்கவேண்டியதில்லை. அவரைக்குறித்தும், அவரின் குறை வார்த்தைகளை குறித்தும் கவனம் கொள்ளத் தேவையில்லை. இதை அவருக்கு தெரியாமல், அறியாமல் செய்யவேண்டியது முக்கியம்.

இதுபோலவே நீங்களும் வேறு யாரையும், குறை சொல்லாமல் இருக்கவேண்டியது அவசியம். அந்த பழக்கத்தை உடனே தொடருங்கள். உங்களிடம் இருந்து பாராட்டு மட்டுமே கிடைக்கும் என்பதுபோல ஒரு பிம்பம் உருவாக்கிக் கொண்டால் நல்லதுதான். அது உங்களுக்கு நற்பெயரை உருவாக்கித்தரும். அப்படியில்லாமல், நீங்களும் மற்றவர்களை குறை கூற ஆரம்பித்தால், அவர்கள் உங்களை தனித்து இயங்கச் செய்துவிடலாம். தீடீரென்று ஏதேனும் உதவி கேட்டால் கூட எதும் செய்ய முன்வர மாட்டார்கள் என்பதை நினைவில் கொள்க.

இந்தமாதிரியாக குறை சொல்லுபவர்களை எப்படி சரி செய்வது என்று கேட்டீர்கள். அது உங்களால் முடியாது. யாராலும் முடியாது. சம்பந்தப்பட்ட அவரேதான் அவரை திருத்திக் கொள்ள முடியும். அவர் உங்களுக்கு மிக நெருக்கமானவர், வேண்டியவர், குடும்பத்தில் ஒருவர் என்றால், அவரை நீங்கள் பார்க்கும் பொழுதும், நினைக்கும் பொழுதும் ‘வாழ்க வளமுடன்’ என்று வாழ்த்தி வாருங்கள். இந்த வாழ்த்து உள்முகமாக அவரை மாற்றியமைக்கும் என்பது உறுதி. ஏதேனும் ஒருவகையில் உங்களுக்கும் அவருக்குமான இந்த குறை சொல்லும் நிலையை மாற்றி அமைக்கும். உங்களைக் குறித்த ஒரு புரிதல் அவருக்கு கிடைத்துவிடும். அவராகவே குறை சொல்லுவதை விட்டுவிடக்கூடும். எனவே இதற்காக நீங்கள் வேறெதும் செய்யவேண்டாம். அது உங்களுக்கு பாதகமான விளைவையும் தந்துவிடும்.

வாழ்க வளமுடன்.

-