CJ for You: vethathiriyam

vethathiriyam

Showing posts with label vethathiriyam. Show all posts
Showing posts with label vethathiriyam. Show all posts

In what way does Vethathiriyam support life? So what's so special about it? Isn't it a collection of spiritual truths that have already been told by many? How can it be right to call it Vethathiriyam? Are you deceiving people?


வேதாத்திரியம் எந்த வகையில் வாழ்க்கைக்கு துணை நிற்கிறது? அப்படியென்ன அதில் சிறப்பு இருக்கிறது? ஏற்கனவே பலரும் சொன்ன ஆன்மீக உண்மைகளின் தொகுப்புத்தானே? அதை வேதாத்திரியம் என்று சொல்லிக் கொள்வது எப்படி சரியாகும்? மக்களை ஏமாற்றுகிறீர்களா?


இந்த கேள்வியை வரவேற்கிறேன். வேதாத்திரியம் குறித்து சராசரி பதிவாக சொல்லுவதற்கு மாறாக, இப்படியான கேள்விக்கு பதில் தரும்பொழுதுதான், சிறப்பான உண்மையை எல்லோரும் புரிந்து கொள்ள முடியும். வேதாத்திரியம் என்பது, வேதாத்திரி மகரிஷி அவர்கள், மெய்ப்பொருள் உண்மையை உணர்ந்தறிந்த, தன்னுடைய முப்பத்தைந்து வயது முதல், தொன்னூற்றி ஆறு வயது வரை, உலக மக்களை, ஆன்மீகத்தில் உயர்வடையச் செய்து, இன்பம், பேரின்பம், அமைதி என்ற வகையில் வாழ்வதற்கு வழிவகை செய்தவர் ஆவார். இன்னமும் அவருடைய சேவை, என்னைப்போன்ற ஆசிரியர்களால் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது.

நீங்கள் சொல்லுவதுபோல, ஆன்மீக உண்மைகள் பல, இந்த உலகில் இருக்கின்றன. ஆனால் அவை எல்லாம் சிதறிப்போய், உண்மை பலவாறாக திரிந்து போய்விட்டது. காரணம் எடுத்துச் சொல்லுபவர்கள், படித்திருக்கிறார்களே தவிர, உணர்ந்தறிந்தவர்கள் இல்லை. அப்படி இருந்தாலும் அவர்கள், மிகக் குறைவே. இதனால், யார் யாரோ, ஆன்மீகத்தின் வழியாக, உண்மை சொல்கிறேன் என்று, ஒப்பித்து, மக்களை, குறிப்பாக உங்களை ஏமாற்றிவிட்டார்கள்.  இந்த கேள்வி கேட்கும் நீங்களே ஏன் இந்த சேவையை, மக்களுக்குத் தரக்கூடாது? உங்களுக்குத்தான், பலரும் சொன்ன ஆன்மீகத்தின் தொகுப்புக்கள் குறித்த விபரங்கள் தெரிந்திருக்கிறதே? அந்த தகுதி போதுமே? அதைவிட்டுவிட்டு, வேதாத்திரியத்தை குறை சொல்வானேன்?

பக்தி, ஆன்மீகம், விஞ்ஞானம் என்று திசைக்கொன்றாக, பிரிந்துபோய், உண்மையறியாமல், வாழ்க்கைச்சூழலில் சிக்கித்தவித்த மக்களுக்கு, விளக்கம் அளித்திடவே, தான் அறிந்த மெய்ப்பொருள் உண்மையை விளக்கிட, உலக சமுதாய சேவா சங்கம் என்பதை துவங்கி, தன்னுடைய பயிற்சிகளை, முப்பத்தைந்து வயதிலேயே தொடங்கிவிட்டார். கவனிக்கவும், மெய்பொருள் உண்மையை நன்கு விளங்கிக் கொண்ட பிறகுதான். ஏதோ படித்தோம், பகிர்வோம் என்றில்லை.

தன்னுடைய அனுபவ விளக்கத்தை, மிகத்தெளிவாக வேதாத்திரி மகரிஷி பதிவு செய்கிறார். பக்தி கடந்த உண்மையே ஞானம் என்று வலியுறுத்துகிறார். எனினும் பருவத்திற்கு முன்பு வரை, பக்தி அவசியம் என்றும் சொல்லுகிறார். பருவம் வந்த அனைவருமே, பிரம்மஞானம் என்ற மெய்ப்பொருள் தத்துவம் அறிந்து கொள்ள பயிற்சி வடிவமைத்தார். சித்தர்களின் வெட்டவெளி தத்துவத்தை, வற்றாயிருப்பு, பேராற்றல், பேரறறிவு, காலம் என்ற வளம் கொண்டதாக தெரிவிக்கிறார். காந்த தத்துவத்தையும், பிரபஞ்ச பரிணாமத்தையும், உயிரின பரிணாமத்தையும், உங்கள் விஞ்ஞானத்தின் துணை கொண்டும் விளக்குகிறார். நான் யார்? என்ற கேள்விகான விடையை அறியத்தருகிறார். உண்மையை அறிய திணறும் விஞ்ஞானத்திற்கு, வழியும் காட்டுகிறார். அவ்வுண்மைகளை, உலக விஞ்ஞானிகள் கூட்டத்திலும் பகிர்ந்திருக்கிறார்.

நீங்கள் உங்கள் அறிவில், எல்லாம் ஏற்கனவே இருப்பதுதானே? இருந்தது தானே? என்று நினைத்தால் அது உங்களின் அறியாமை. எனினும், வேதாத்திரியத்தில் இணைந்து, இதையெல்லாம் தெரிந்து கொள்ளுங்கள் என்று நான் அழைக்கமாட்டேன். அது உங்கள் விருப்பம். உங்களின் உரிமை. ஆனால், விளக்கத்தை உங்களுக்குச் சொல்லவேண்டியது என்னுடைய கடமை. இங்கே ஒரு அன்பரின் வாழ்க்கை அனுபவ குறிப்பு காணொளி பதிவு, மற்றொரு புரிதலை உங்களுக்குத் தரலாம். 

உறவுகளோடு இனிய வாழ்க்கைக்கு வேதாத்திரியம் - pleasant life with relatives by Vethathiriyam

வாழ்க வளமுடன்.

-

Do people benefit from this service called Vethathiriyam or not? Is there truth in the records? Can't you give it away for free? What is this Vethathiriya journey like?


பத்தோடு பதினொன்றாக, அரைகுறையாக ஏதோ சொல்லுகிறீர்கள். இதில் வேதாத்திரியம் என்று பெயர்வேறு? உங்களுக்குத் தோன்றுவதை சொல்லி பெரிய ஆளாக நினைக்கிறீர்கள். பதிவுகளில் உண்மை இல்லாமல், வளவள என்று பிதற்றலாக இருக்கிறது. பதிவுகள் இப்படி இருக்க, இதில் அடிக்கடி ஜாதகம் பார்க்கிறேன் என்று காசு வேறு கேட்கிறீர்கள். பதிவுகளை காண மெம்பராகவும் ஆகவேண்டுமா? யோகம் இலவசமாக எல்லோருக்கு போய்சேர வேண்டும் என்று உங்கள் மகரிஷி சொல்லவில்லையா? இதில் முகத்தை வேறு காட்டுகிறீர்கள், சகிக்கவில்லையே. பேசாமல் சும்மா இருக்கலாம்!




வழக்கமாக, ஒரு கேள்விக்கு பதில் தருவதற்கு பதிலாக, கருத்து பதில் தருவது இந்தப்பதிவாகும். மேலே நீங்கள் படித்த கருத்து, ஒருவர் தந்ததல்ல. என்னுடைய வேதாத்திரிய காணொளி பதிவுகளை கண்டுவிட்டு, சில அன்பர்கள் தந்த பின்னூட்டத்தின் தொகுப்பு இது. பல்வேறு காலங்களில் இப்படியான பின்னூட்டங்களும், இதைவிட பலமான பின்னூட்டங்களும் வந்தன. இப்போதும் ஏதோ ஒரு சில பின்னூட்டங்கள் இப்படி வருவதுண்டு. அவைகளை, நான் பொதுவெளிக்கு வரமால் தடுத்து அழித்துவிடுகிறேன். ஆனால் குறிப்பாக எடுத்து வைத்துக் கொள்வேன்.

இத்தகைய நபர்கள், தங்களின் ஈகோ என்ற தன்முனைப்பை, இப்படி பொதுவெளியில் காட்டிக் கொள்கிறார்கள். கூடுதலாக, ஏன் இணைய பிச்சை எடுக்கிறாய்? என்றுகூட கேட்டிருக்கிறார்கள். இவர்களுக்கு பதில் சொல்லுவது, எரியும் தீயில் பெட்ரோலை ஊற்றுவது போலாகும். என்னுடைய கைபேசி எண் பொதுவெளியில் தான் இருக்கிறது. அதோடு, கிட்டதட்ட இருபது ஆண்டுகளாக, உலக அளவில், இணைவழியில்தான், என் ஓவிய வேலைகள், கட்டண சேவையாக நடந்துகொண்டிருக்கிறது. அப்படி இருக்கையில், காசுக்காக, இந்த வேதாத்திரிய சேவை என்று இவர்கள் நினைக்கிறார்கள். அவர்கள் கைபேசி எண் கொடுத்தால், நான் பேசி பதில் தரவும் தயார், ஆனால் அவர்கள் அதை தருவதில்லை.

வேதாத்திரியத்தில், என்னுடைய பதினெட்டு வயதில், இணைந்து தீட்சை பெற்றுக்கொண்டு, இன்றுவரை (2024 வரை) கிட்டதட்ட, முப்பத்தியாறு ஆண்டுகள் அனுபவம் எனக்குண்டு. சும்மா வெறுமனே, வேதாத்திரியா காணொளி சேவை ஆரம்பிக்கவில்லை. அப்படி இருக்குமானால், நான் உங்களோடும், வேதாத்திரியாவோடும் ஏழு ஆண்டுகள் பயணத்தை பெற முடிந்திருக்குமா? ஆம். வேதாத்திரியா ஏழாவது ஆண்டில் பயணிக்கிறது.

வேதாத்திரி மகரிஷியிடம் ஒரு அன்பர் கேட்டார். ‘சுவாமிஜி, நீங்கள் ஆரம்ப காலத்திலே சொன்னதிற்கும், இப்போது சொல்லுவதற்கும் மாற்றமே இல்லையே. அதே கருத்தையே விளக்கிச் சொல்லுவதாகவே அமைகிறதே எப்படி?’

இதற்கு வேதாத்திரி மகரிஷி ‘நான், எல்லாமே முழுமையாக உணர்ந்த பிறகுதான், எழுதினேன், சொன்னேன். அதனால் அதில் உண்மை மட்டும் தான் இருக்கிறது. அதுதான் இன்னமும் தொடர்கிறது. மற்றவர்கள், தங்கள் ஆரம்ப காலத்தில் ஒருவகையிலும், உண்மை உணர்ந்த பிறகு மற்றொருவகையாகவும் சொல்லுவார்கள். ஆனால் நான், உண்மை உணர்ந்து கொள்ளாமல் எதையுமே பகிரவில்லையே’ என்று சொல்லுகிறார்.

இந்த அடிப்படையில்தான். நானும், 1988ம் ஆண்டு தீட்சை பெற்று, 1991ல் ஆசிரியர் பயிற்சி பெற்று, 1993 வரை, கற்றுக்கொடுக்கும் ஆசிரியராக சேவையில் இருந்தும், பொதுவெளியில் எதுவும் சொன்னதில்லை. 2018ம் ஆண்டு, மெய்ப்பொருள் உண்மை விளங்கிக் கொண்ட பிறகுதான், வேதாத்திரியா எனும் காணொளி தளத்தை ஆரம்பித்து, என் பதிவுகளை தந்தேன். எனக்கு இணையத்தில் கிடைத்த ஏமாற்றம், மற்ற அன்பர்களுக்கு கிடைக்கவேண்டாமே? என்ற நோக்கத்தில்தான், வேதாத்திரிய அன்பர்களுக்கு உதவும் வகையில், பதிவுகளை தந்துகொண்டு இருக்கிறேன்.

வேதாத்திரிய தத்துவ உண்மை மாறாமல், அதன் வழியிலே மட்டும் நின்று, வேறெந்த யோக, வேத, புராண, இதிகாச, யோகி, முனிவர், ஞானி, மகான், சாதனையாளர், தத்துவமேதை இப்படி எந்த கருத்துக்களையும் இணைக்காமல், எடுத்துக்காட்டாமல் பதிவுகளை தருவது வழக்கம். அந்த வகையில்தான். இந்த ஏழு ஆண்டு பயணம் தொடர்கிறது. அதற்கு மதிப்பளிக்கும் வகையில்தான், கிட்டதட்ட 38 ஆயிரம் அன்பர்கள், பகிர்வாளர்களாக இருக்கிறார்கள்.

வேதாத்திரி மகரிஷியின் கருத்துக்களை தருவதில், இது பத்தோடு பதினொன்றுதான். அதில் மாற்றுக் கருத்தில்லை. எனக்கு தோன்றுவதை சொல்லாமல், என் அனுபவத்தை, வேதாத்திரியத்தோடு சொல்லுகிறேன். அதுதான் உண்மை. நான் யார்? என்று எனக்குத் தெரியும். நான் எளியவன். எனக்கென்று பிம்மத்தை கட்டிக்கொண்டிருப்பவன் அல்ல. பதிவுகள் பிதற்றல் என்றால், ஏழு ஆண்டு பயணம் இருக்கமுடியுமா? அன்றாடம் வளரமுடியுமா?

கர்ம வினை குறித்த ஜோதிட ஆய்வு என்பது நன்கொடை சேவை. இதில் என்னுடைய பல்லாண்டுகால அனுபவ அறிவு, நேரம், ஆராய்ச்சி, முடிவு, திருத்தம், அதை ஒழுங்கு செய்து, கட்டுரையாக மாற்றுதல் என்று பல்வேறு செலவுகளும், வேலைகளும் இருக்கின்றன. உங்களுக்கு சும்மா தந்தால், எனக்கு கிடைப்பதெல்லாம் சும்மா இல்லையே?! அதற்கு நீங்கள் மாற்றுவழி செய்வீர்களா? விருப்பம் உள்ளோருக்கான அழைப்பு என்றுதான் தலைப்பு தந்திருக்கிறேன். அதை நீங்கள் படிக்கவில்லையா?!

வேதாத்திரிய பதிவுகள், முன்கூட்டியே பார்க்க, உறுப்பினர் சேவை உண்டு, இது யூடுயூப் தரும் சேவைதானே தவிர நான் ஏற்படுத்தவில்லை. என்வழியாக, யூடுயூப் நிறுவனமும் காசு பார்க்கிறது என்பதை நீங்கள் அறிவீர்களா?

யோகம் இலவசமாக எல்லோருக்கும் போய்சேர வேண்டும் என்று உங்கள் மகரிஷி சொல்லவில்லையா? இந்த கருத்தை, நீங்கள் ஆழியார் சென்று, அங்கே உள்ள தலைமை குழுவிடம் சொல்லுங்களேன். நான் ஒரு சாதாரணன். என்னிடம் சொல்லி பிரயோஜனம் இல்லை.

        முகத்தை காட்டக்கூடாது என்பதுதான் என்னுடைய எண்ணமும் முடிவும். ஆனால், என் வார்த்தைகளின் உண்மைத்தன்மையை தீர்மானிக்க முகம் அவசியம் என்பது எனக்குத்தெரியும். உங்களுக்கு சகிக்கவில்லை  என்பதற்காக, நான் முகத்தை மாற்றிக்கொள்ளவும் முடியாது. நீங்கள் இனி பார்க்காதீர்கள், என் முகத்தை இணையத்திலும், நேரிலும் கூட. போதுமா?!

இப்படியெல்லாம் பதில் சொல்லி, ஏனெய்யா உன் நேரத்தை வீணாக்குகிறாய்? என்று என் நண்பர் கேட்டார். ஆனால் இந்த பதிலை எல்லாம், அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அந்த தூண்டுதலும், URGEம் அவர்களுக்கு தேவைப்படுகிறது. இனி அவர்கள் திருப்தி அடையலாம். இனி பின்னூட்டம் தந்தாலும், அதற்கும் பதில்தர நான் தயார்.

வேதாத்திரிய காணொளி சேவையின் பயணம் குறித்த காணொளி, இதோ.

வேதாத்திரியாவும் நீங்களும் உண்மை தத்துவ விளக்கமும் ஏழாமாண்டு பயணமும் Vethathiriya & Your Realization
வாழ்க வளமுடன்.
-

I have a passion for yoga. However, I haven't gotten into that yet. For, as far as I can see, there is only lies and distortions about yoga here. That's why I'm not interested in learning. Can you tell me which is the best way of yoga? Maybe I should just pass it on? What will happen to me?


ஐயா. எனக்கு யோகம் குறித்த ஆர்வம் உண்டு. எனினும் அதில் நான் இன்னும் இறங்கிடவில்லை. ஏனென்றால், நான் பார்த்தவரையில், இங்கே யோகம் குறித்து பொய்யும் புரட்டும்தான் இருக்கிறது. அதனாலேயே கற்றுக்கொள்ள ஆர்வமும் இல்லை.  நல்ல சிறந்த யோகவழி எது என்று சொல்லுவீர்களா? ஒருவேளை அப்படியே நான் கடந்துபோய்விடுவது நல்லதா? எனக்கு என்ன பாதிப்பு வரும்? விளக்கம் தருக.


இந்த கேள்வி கேட்டதற்காக உங்களை பாராட்டுகிறேன். உங்களைப்போலவே பலரும் இங்கே இருக்கிறார்கள். அவர்களின் தாத்தா, பாட்டி, உறவினர் சொல்லக்கேட்டு, பக்தி கடந்த யோகத்தில் ஆர்வம் வருவதுண்டு. அந்த பெரியவர்களே அதை தேடமுடியாமல், கைவிட்டுப்போனதை, உங்களுக்கு கடத்திவிட்டார்கள். நீங்களும் அவர்கள் சொன்ன அதே போன்ற, எதிர்பார்ப்பில், இப்போதும் யோகத்தை தேடுகிறீர்கள். அவர்கள் சொன்ன யோகம் எப்படிப்பட்டதென்று ஓரளவில் என்னால் யூகிக்க முடியும். எனினும் அதை இங்கே விளக்கிட வேண்டியதில்லை.

ஒரு ஆப்பிள் என்ன சுவை தரும் என்பதைக்கொண்டு, ஒரு கூடை ஆப்பிளையும் தீர்மானிக்க முடியாது. அதில் அதிக இனிப்பும் இருக்கலாம், புளிப்பு, கசப்பு சுவை கொண்டதும் இருக்கலாம். ஆனால் இதற்காக, ஒரு கூடை ஆப்பிளையும் ருசி பார்த்திடவும் முடியாது. அது காலவிரயம் என்பதோடு, வயிற்றுக்கும் கெடுதல். அதுபோலவே, யோகம் பல்வேறு நிலைகளில், பல்வேறு மகான்கள், ஞானிகள், யோகிகள் வழியாக வழங்கப்பட்டு வருகிறது. எல்லோருக்கும் நோக்கம் ஒன்றுதான். ஆனால் பாதைகள் வேறு. இதில் எது சிறந்தது என்று நான் கூறவேண்டிய அவசியமும் இல்லை. நான் வேதாத்திரியத்தில் இருப்பதால், அதை கடைபிடிப்பதால், அதுவே சிறந்தது என்றும் சொல்லிவிட மாட்டேன். என்னளவில் அது சிறப்பு அவ்வளவுதான். நீங்கள் எதை தேர்ந்தெடுத்தாலும் அதில் கொஞ்சகாலம், பயணிக்கவும் வேண்டும். பிறகுதான் அது சரியான பாதையா? என்பதை நீங்கள் தீர்மானிக்க முடியும். நானே உங்கள் கையைப்பிடித்து, ‘வேதாத்திரியத்திற்கு வாருங்கள்’ என்று அழைப்பது முறையல்ல.

யோகசாதனை அமைப்புக்கள், வேதாத்திரியத்திற்கு முன்பாக பல இருந்தன, வேதாத்திரியத்திற்கு பின்பாகவும் பல இருக்கின்றன. இதுதான் காலத்தின் நியதி. உங்கள் விருப்பம், தேர்வு, அதில் கிடைக்கும் அனுபவம் ஆகியன மட்டுமே, சிறந்தது எது என்று தீர்மானிக்கும். எனவே என்னிடம் கேட்கவேண்டாம். நான் சொல்லவும் தயாரில்லை.

யோகம் குறித்த விளக்கங்களில் பொய்யும் புரட்டும் தருகிறார்கள் என்றால் அவர்கள் அதில், ஆழ்ந்து போகவில்லை என்பதுதான் குறை. ஏதோ நூல்களில் படித்ததையும், சினிமாவில் பார்த்ததையும், புராண கதைகளை கேட்டும், பிறர் சொல்லக்கேட்டும் இவர்களாகவே, இட்டுக்கட்டும் கதைகள் உண்டு. ‘மாஸ்டர் ஆஃப் ஆல் சப்ஜெக்ட்’ என்ற ரீதியில் புட்டுபுட்டு வைப்பார்கள். இவர்களையும், இவர்கள் கருத்துக்களையும் புறம் தள்ளுவதே நல்லது. இவர்களைப்பார்த்து, உங்களுக்கு சூடு வைத்துக்கொள்ள தேவையில்லை. உண்மை எது என்று தேடுங்கள். ஆர்வத்தை இதனால் தொலைக்காதீர்கள்.

ஏதோ சிறிதளவாவது யோகம் என்பதை அறிந்த நீங்கள், இந்த பிறப்பை வீண் செய்வதில் அர்த்தமில்லை. பிறவியின் நோக்கமும், கடமையும் தீராமல், உங்கள் பிறவி முழுமை அடைவதில்லை. வாழும் காலம் போதுமானது. அதை தேடுதலில் வீணாக்காமல், விருப்பமான ஏதோ ஒரு யோகசாதனையில் இணைந்துகொள்க. கற்றுக்கொண்டு பயன்பெறுக. அது உங்களுக்கு திருப்தி இல்லை என்றால், தெரிந்த அளவில் உள்ள அனுபவத்தால், மிகச்சிறந்த இன்னொரு யோக சாதனையை பெற்றுக்கொள்ள தயாராகுங்கள். இதில் எந்த இழப்பும் இல்லை. இழப்பின் வழியாக, மிகச் சிறந்ததை அடைகிறீர்கள் என்பதுதான் முக்கியம். அந்தவகையில், வேதாத்திரியாவையும் ஒருகை பார்த்துவிடுங்களேன். சரியா?

கூடுதலாக இந்த காணொளி பதிவு உங்களுக்கு உதவலாம்.

யோகம் குறித்த பதிவுகளை நான் தவிர்ப்பது ஏன்? Why do I avoid the any posts on yoga?

வாழ்க வளமுடன்

-

Is death the only freedom from pleasure and pain? Or is it possible to be liberated while alive by some other means? Give an explanation.


வாழ்க வளமுடன் ஐயா, இறப்பு என்பதுமட்டும் தான் இன்ப துன்பங்களில் இருந்து விடுதலை தருகிறதா? அல்லது வேறு ஏதேனும் வழிகள் மூலம், வாழும்பொழுதே விடுதலை பெறமுடியுமா? விளக்கம் தருக.



இந்த கேள்வியின் வழியாக, இரண்டு நிலைகளை அறிந்து கொள்ள முடியும். ஒன்று, வாழ்ந்து கொண்டிருக்கும் பொழுதான, புரிதல் விடுதலை. இன்னொன்று முழுமையான விடுதலை. வாழும் பொழுதுதான் விடுதலை என்பது, தற்காலிகமானது. ஆனால், அதை புரிந்துகொண்டால், அடுத்து வரக்கூடிய அல்லது நிகழக்கூடிய இன்ப துன்பங்களை, விழிப்புணர்வாக ஏற்றுக் கொள்ள முடியும். அதை இயல்பாக கடந்து போகவும், பழகிவிடலாம். நாம் வருத்தப்படவும் வழியில்லை.

ஆனால், அப்படியில்லாமல், முழுமையான விடுதலை எப்போது கிடைக்கும்? என்ற கேள்விக்கு, வேதாத்திரி மகரிஷி அவர்கள், இப்படியான பதில் தருகிறார். ‘இந்த உலகில், தனியாக, நம்மை யாரும் காப்பாற்றிக் கொண்டிருக்கவில்லை. எல்லோரும் பிறந்தோம். வாழ்கிறோம். இறப்போம். இதற்கிடையில் உற்றார், உறவினர், நண்பர்கள் என்ற முறையில் சந்திப்புகள் நிகழ்கின்றன. அவை தினமும், நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. ஒன்றைப்போல ஒன்று இருப்பதில்லை. ஆனால் தொடர்ச்சியாக நினைவில் பதிவாகின்றன. அது தொகுப்பாகவும் இருந்து விடுகிறது. உண்மைதானே?’

‘எப்போது நினைத்தாலும், அந்த நினைவுகள் பசுமையாக இருக்கின்றன. அதில் இன்பமும் உண்டு, துன்பமும் உண்டு. கூடுதலும் உண்டு, பிரிதலும் உண்டு. இழப்பும் உண்டு, பெறுவதும் உண்டு. எனினும் அவையெல்லாம், நடந்து முடிந்தவைதானே? அது இப்போது இல்லை. இந்த நொடியில் அது இல்லை. நம் வாழ்க்கையில் நடந்துதான். நாம் அனுபவித்ததுதான். என்றாலும், நம்மைவிட்டு கடந்துவிட்டது தானே? புரிந்து கொள்ள கடினமாக இருந்தாலும், உண்மை இதுதான். உறங்கும் பொழுது, கனவு வருகிறது. ஆனால் அதை கனவு என்று கடந்துவிடுவதில்லை. அதிலும் எல்லா உணர்வும் உண்டு.’

‘நாம் கனவு காணும் போது, அதில் காணும் காட்சிகள், உண்மையாக, நடப்பவையாக தோன்றும். ஆனால் விழித்த பின்பு? மாயை என்று சொல்லும்படி ஒன்றுமே இருக்காது. எந்த ஒரு குறிப்பும், அடையாளமும் இருக்காது. அது போன்றே நம் வாழ்வை, நிரந்தரமானதாக நினைத்து, புலனலவில், அறிவில் கட்டுப்பட்டுச் செயல் புரியும் போதும் பல நிகழ்ச்சிகள் தொடர்பாக,  உருவாகின்றன. பிறப்பிற்கு முன்னும், இறப்பிற்கு பின்னும், உயிரின் நிலையை யூகித்து உணர்ந்தால், உலக வாழ்க்கையில், நாம் உருவாக்கிக் கொள்ளும் கருத்துக்கள் எல்லாம், என்னவாகும் தெரியுமா?’

‘எல்லாமே, கனவில் நடந்த நிகழ்ச்சிகள் போல, வலுவற்றுப் போகும். எல்லா உயிர்கட்கும், எல்லா வகையான துன்பங்களிலிருந்தும், விடுபட, இயற்கை ஒழுங்கமைப்பால் அமைந்துள்ள, ஒரு நல்வரம் தான், இறப்பு. ஆம். மரணம்தான், சீவ இன இன்ப துன்ப,  மாகடலைத் தாண்டும், உயர் நிகழ்ச்சி. என்று கவிதையில் எழுதியுள்ளேன்’ என்று வேதாத்திரி மகரிஷி பதில் தருகிறார்.

இந்த உலகில், ஆறாம் அறிவாக உயர்ந்து வாழும் நாம், அறியாமையில் சிக்கிவிடக்கூடாது. எனவே, அந்நிலை வரும்வரை காத்திருக்காமல், விட்டுவிடாமல், உண்மையை, சிந்தித்தும், யூகித்தும் அறிந்து, விழிப்புணர்வு பெறலாம். நமக்கு நிகழும் நிகழ்ச்சிகளை, ஒவ்வொடு கணமும் ஆராய்ந்து, விளங்கிக் கொண்டால், போதுமானதாகும்.

இந்த உண்மையை காணொளி பதிவாகவும் அறிந்து கொள்க!

வாழ்க வளமுடன்.

What is your position on astrology? Can you explain why you are doing an astrological study of karma?


ஜோதிடம் என்பதில் உங்களுடைய நிலை என்ன? நீங்கள் எதற்காக, கர்மா குறித்த சோதிட ஆய்வு செய்கிறீர்கள் என்று விளக்குவீர்களா?


நன்று, யோகத்தில் இருக்கிற உங்களுக்கு இது தேவையா? என்று கேட்பது வழக்கமே. எனினும் ஏற்கனவே சில உண்மைகளை, இங்கே கட்டுரை வடிவில் தந்திருந்தாலும்கூட, மறுபடியும் அதை நினைவு கூர்வதிலும், எடுத்துச் சொல்வதிலும் நன்மைகள் உண்டு. ‘ஜோதிடம்தன்னை பொய்யென்று இகழ்’ என்று மகாகவி பாரதி சொல்லி இருக்கிறார். ஆனால் அவர் கிரகங்கள், கோள்களை, நட்சத்திரங்களை பொய்யென்று இகழவில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இன்னொரு உண்மையையும் நாம் இங்கே தெரிந்து கொள்வோம். 

மகாகவி பாரதி, எழுச்சிக்கவிஞர் மட்டுமல்ல, சிறந்த யோகி, அதிலும் முற்றுணர்ந்த ஞானி என்பதும் உண்மையே. அதனால்தான் அப்படியான, தத்துவ கவிகளை தந்திடவும் முடிந்தது என்பதையும் நாம் அறிந்துகொள்ள வேண்டும். குள்ளச்சாமி என்ற ஒரு ஞானியின் வழியாக, மெய்ப்பொருள் தத்துவத்தை உணர்ந்தறிந்த பொழுது, சந்திரன் என்ற கோளைக் கண்டுதான் விளக்கம் பெற்றார் என்பதை அவருடைய வாழ்க்கை வரலாறு வழியாக தெரிந்து கொள்கிறோம். இந்த நிகழ்வு குறித்து, மற்றொரு பதிவாக இனிவரும் காலங்களில் பதிவு செய்கிறேன்.

அந்த வகையில், ஜோதிடத்தில் உள்ள சிலரின், பொய்களின் காரணமாகவும், அவர்களின் ஜோதிடமே ஒரு தடைக் கல்லாகவும், தலைவிதியாகவும் மாறிவிடுகிறது. பரிகார வகையில் பொருட்செலவையும், கால விரயத்தையும் உண்டாக்கி, மனிதனின் தன்னம்பிக்கையையும் குலைத்துவிடுகிறது என்பதாக, உண்மைக்கு புறம்பாக மாறி இருக்கின்ற காரணம் கொண்டே, அதை பொய்யென்று இகழ் என்று சொல்லி இருக்கிறார் என்பது தெளிவு. அப்படியானால் ஜோதிடத்தில் உண்மை இருக்கிறதா? என்று நீங்கள் கேட்பீர்கள். ஆம் இருக்கிறது. அதை நன்கு தேர்ந்த ஜோதிடர் எடுத்துரைப்பார்.

குறிப்பாக, இறந்தகாலம் என்பதும், எதிர்காலம் என்பதும் ஜோதிடத்தில், பலன் சொல்லுவதில் முக்கியபங்கு வகிக்கும். நிகழ்காலம் என்பதை எவ்வகையிலும் தீர்மானிக்க இயலாது. ஆனால் அதன் ஆரம்ப நிலையை சுட்டிக்காட்ட முடியும். இதில் இறந்தகாலம் என்பது நமக்குத் தெரிந்த ஒன்றுதானே? அதனால் கவலை ஏதுமில்லை. அதுகுறித்து நினைத்து நிகழ்காலத்தை வீணாக்க வேண்டியதில்லை. எதிர்காலம் எப்போதுமே இல்லை. இறந்தகாலம் என்பது ஓர் நினைவு என்றால், எதிர்காலம் என்பது ஓர் கனவு. எனவே எதிர்காலத்தைக் குறித்து நாம் எதும் சொல்லுவதற்கில்லை. ஆனால், ஜோதிடத்தில் எதிர்காலம் சொல்லுவது ஓர் தன்னம்பிக்கை குறித்த ஊக்குவித்தலே ஆகும். என்றாலும் கூட அப்படி எதிர்காலத்தைச் சொல்லி நான் ஊக்குவித்தலும் சொல்வதில்லை. ஆய்வில் கிடைத்ததை, உள்ளதை உள்ளபடி சொல்லுகிறேன்.

இதில் பரிகாரம் என்பது உண்டா? உண்டு. அது கர்ம யோகமாகவும், ஞான யோகமாகவும் இருந்தால் மட்டுமே பலன் தரும். 

🔎 Click and Zoom it for Readable View


கோவில் கோவிலாக சென்று வழிபாடும், கடல், ஆறு, மலை என சென்று மற்ற எந்த பரிகாரமும் செய்துவிட்டாலும், காலத்தால் காத்திருக்க வேண்டும். அதன்பிறகுதான் பலன் கிடைக்கும். சில நேரம் அந்த பலன் தள்ளியும் போகலாம். இங்கேதான், இந்த தாமதமும், தள்ளிப்போகும் தன்மையும் நிகழ்வதற்கு, நம்முடைய கர்மா என்ற வினை காரணமாகிறது. இந்த கர்மா என்ற வினை தீர மிகச்சிறந்தவழி, தவம் என்ற ஞான யோகமும், அறம் என்ற கர்ம யோகமும் ஆகும். சித்தர் பெருமகான் திருமூலரும், வினைக்கடலை நீந்தி தீர்க்க, தவமும் அறமுமே துணை என்றும் சொல்லுகிறார்.

இந்த வினைக்கடலான, கர்மா எப்படி உங்களோடு இணைந்திருக்கிறது? என்பதையே, உங்கள் ஜோதிடத்தின் வழியாக ஆய்வாக கண்டு உண்மை அறிகிறோம். ஜாதகத்தின் வழியாக  அறியமுடியும். எனினும் அது கருத்தொடராக, எல்லோரிடமும் மறைந்திருந்து செயலாக்கம் பெற்றுகொண்டே இருக்கிறது. ஒரு பாதையில் தீர்க்கப்படலாம், ஒரு பாதையில் அதிகப்படலாம். இரண்டுக்கும் இடையில் நாம் போராடிக்கொண்டு இருப்போம் என்பதே உண்மை.

        எனக்கு ஜாதமே இல்லையே? என்று தப்பிக்கலாம். ஜாதகமும் ஜோதிடமும் பொய் என்று சரியான உண்மை புரியாமலும் மறுக்கலாம். அது உங்கள் விருப்பம். ஆனால், உங்களுக்கு மட்டுமல்ல, உலகில் வாழும் எல்லா உயிர்களுக்கும், ஜீவன்களுக்கும், நான்கு வழிகளில், அந்தந்த உயிருக்கான சக்தியாற்றல் கிடைக்கிறது. அவை 1) உணவு 2) காற்று 3) வானில் உலவும் கோள்கள், நட்சத்திரங்கள் 4) பூமியின் மையத்தில் இருந்து கிடைக்கும் அணுவாற்றல் ஆகியன ஆகும்.

        எனவே உங்களுக்குள், கிரகங்கள், கோள்கள், நட்சத்திரங்கள் ஆகியவற்றின் சக்தி ஊடுறுவிக் கொண்டுதானே இருக்கிறது? அது தாக்கம் தந்துகொண்டுதானே இருக்கிறது? உதாரணமாக, சூரியனின் என்ற நட்சத்திர ஒளியில் நீங்கள் இருந்தால், உடல் சூடாகிறது, வியர்க்கிறது. சந்திரன் என்ற கோளின் ஒளியில் குளுமையை உணர்கிறீர்கள். இதெல்லாம் உண்மைதானே? இப்போதும், உங்கள் கருத்து அப்படித்தான் என்று சொல்லுவீர்களா?

இந்த  வினை குறித்த சோதிட ஆய்வு, ஓவ்வொருவரின் குணாதசியம் என்ன? என்பதில் ஆரம்பித்து, உங்கள் நடவடிக்கை, எண்ணங்களும், செயல்பாடுகளும் என்பதை எடுத்துச் சொல்லி, உங்களுக்கு திருத்தமான வழியை தருவதே ஆகும். கருத்தொடராக உங்களோடு தொக்கி நிற்கும் கர்மா என்ற வினை தீர்க்க என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது என்ற அறிவுரை தந்து, வேதாத்திரியத்தின் வழியாகவும், வேதாத்திரியம் அல்லாத, வேறெந்த யோக சாதனையின் வழியாகவும், முற்றிலும் புதியவர் என்றால் யோக விளக்கமும் தந்து, தவமும் அறமும் கொண்டு தீர்த்து, வாழ்வை மாற்றி அமைத்து சிறப்பாக வாழ வழி தரப்படுகிறது. இதுதான் இந்த ஜோதிட ஆய்வு ஆகும். இது சேவையாக வழங்கப்படுகிறதே தவிர வேறெந்த  நோக்கமும் இல்லை. எனவே, இந்த வழிமுறைகள், உலகில் இருக்கும், நிகழும் வழக்கமான ‘ஜோதிட ஆய்வாக’ இருக்காது.

        சரி ஐயா. இந்த ஆய்வு எப்படி உதவுகிறது? என்று நீங்கள் கேட்டால், அதற்கான பதில் இதோ. எனக்கென்னய்யா, நான் நன்றாகத்தான் இருக்கிறேன், என்றுதான் எல்லோரும் சொல்லுவார்கள். ஆனால், ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு மனக்குறை அவர்களை கீழே இழுக்கும். அதற்கு காரணங்களை ஆராய்ந்தால் ஏதும் புரியாது. சிலருக்கு பொருள் பிரச்சனை இருக்கலாம். சிலருக்கு பொருளே பிரச்சனையாக இருக்கலாம். தன்னுடைய நடவடிக்கையே தவறாகலாம், உடனிருப்போர், வாழ்க்கை துணை, வேலை, தொழில், வியாபாரம், என்று பலவழிகளில் அன்றாடம் தீர்க்கமுடியாத பிரச்சனைகள் உருவாகலாம். இது ஏன்? இதில் இருந்து நாம் எப்படி தடுத்து, விலகி நின்று, அலசி தீர்க்கலாம் என்ற ஆலோசனை கிடைக்கும். இந்த ஆலோசனை, நம்முடைய அடிப்படை குணாதசியத்தை ஒட்டியே அமைகிறது என்பது அதிசயமான உண்மை. யோகவழியிலும் அதைத்தான் நாம் செய்கிறோம் என்றாலும், புரிந்து கொண்டு இயங்கினால், பதில் விரைவாக கிடைக்கலாம் அல்லவா? அதைத்தான் இச்சேவை துணை செய்கிறது.

வேதாத்திரியர்களுக்கு சலுகை ஏன்? அவர்கள் ஏற்கனவே அந்த திருத்தமான பாதையில் இருக்கிறார்கள். மற்ற புதிய அன்பர்களுக்கு, யோகம் குறித்தும், தவம் அறம் குறித்தும் தனியாக விளக்கம் தர வேண்டும்தானே? அதனால்தான். நன்கொடை எதற்கய்யா? என்றும் கேட்கிறீர்களா? இந்த சேவையில் ஒரு ஒழுங்குமுறையை கொண்டுவரவேண்டும் அல்லவா? அதற்காகவே!

இந்த வகையில், உங்கள் கேள்விக்கான பதில் கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன். விரும்புவோர் வாட்சப் - WhatsApp வழியாக தொடர்பு கொள்ளலாம். அதற்கான நன்கொடையும் வழங்கி, உங்கள் பிறப்பு குறித்த விபரங்கள் (தேதி, மாதம், வருடம், நேரம், ஊர், இப்பொழுது வசிக்கும் ஊர்) அனுப்பி வைக்கலாம். ஜோதிடத்தின் வழியாக கிடைத்த ஆய்வு முடிவுகள், உங்களுக்கு விளக்கமாக மின்னூலாக அனுப்பி வைக்கப்படும். இதற்கு 7 முதல் 15 நாட்கள் ஆகலாம்.

நன்றி.

வாழ்க வளமுடன்.

-


What is Divinity Penance? For what is this penance performed? Who is it? When? How to do it? Can you explain?


வாழ்க வளமுடன் ஐயா, இறைநிலை தவம் என்பது என்ன? எதற்கான இத்தவம் செய்யப்படுகிறது? அதை யார்? எப்போது? எப்படி செய்யலாம்? விளக்கமுடியுமா?


இத்தனை கேள்விகளை ஒன்றாக அடுக்கி இருப்பதை பார்த்தால், நீங்கள் வேதாத்திரியத்தின் வெளியே இருந்து கேள்வி கேட்பதாக தெரிகிறது. உங்களுக்கு பதில் தருவதின் வழியாக, சில வேதாத்திரிய அன்பர்களுக்குமே உதவக்கூடும் என்றும் நினைக்கிறேன். வாழ்க வளமுடன்.

இறைநிலை தவம் என்பது, வேதாத்திரியத்தில் மட்டுமே வழங்கப்படும் தவமாகும். அதுவும் நேரடியாக, வேதாத்திரி மகரிஷி அவர்களே வழிநடத்துவதாக அமைந்திருக்கும். வேதாத்திரியத்தின் முழுமையையும், மெய்ப்பொருள் உண்மையையும் உண்டாகித்தரும் தவமாக உள்ளது. வேதாத்திய பாடங்கள், அகத்தாய்வு பயிற்சிகளான எல்லாம் பூர்த்தி செய்து, பிரம்மஞானம் அறிந்து, மற்றவர்களுக்கு அவ்வுண்மையை விளக்கித்தரும் அளவில், அறிந்துகொள்ள உதவும் தவமே ‘இறைநிலை தவமாகும்’. அப்படியான பயிற்சியின் முடிவில், இத்தவம் கற்றுக்கொண்டாலே, ஆசிரியராகிவிட முடியுமா? என்றால் அதுதான் இல்லை.

இறைநிலை தவம், தொடர்ந்து செய்து, அதை நாம் அனுபவமாக்கிக் கொள்ளவேண்டியது அவசியம். மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் சொல்லுவது போல, ‘மனதின் அடித்தலமே நிலைபொருள், அது தெய்வம்’ என்ற வகையில், ஒருமுனையில் நாமும், மறு முனையில் மெய்ப்பொருளும், இணைந்திருக்கும் நிலையை உணர்ந்து, அந்நிலையிலேயே இருத்தல்’ என்பதை அனுபவமாக பெற வேண்டும். இதற்கு எவ்வளவு காலம் ஆகும்? அது அவரவருடைய, பயிற்சி, முயற்சி, ஆராய்ச்சி, அனுபவம், கர்ம வினை, அகத்தாய்வு ஆகியன துணையாக இருந்து உதவும். எனவே நாம் அக்காலத்தை கணிக்க முடியாது.

இந்த இறைநிலை தவம், முழுமையாக நம்மை, வேறொரு தளத்திற்கு கொண்டு செல்லும் அல்லது உயர்வைத்தந்து முழுமையை தரும் என்பது உண்மை. இது பொதுவெளியில் இல்லை. மற்ற எந்த யோக சேவை மையங்களிலும் இல்லை. இதற்கு முன்பும் எந்த ஒரு வகையில், இத்தவம் இருந்ததும் இல்லை என்பதே உண்மையாகும். முழுமையாக, தானாக, தான் உணர்ந்த உண்மையை, அன்பர்களுக்காக, அவர்களின் உயர்வுக்காக, வேதாத்திரி மகரிஷியே இத்தவத்தை வடிவமைத்து, நேரடியாக நடத்தியும் தந்தார். அதுவே இன்றும் தொடர்கிறது.

        சித்தர்களும், ஞானிகளும், மகான்களும், மெய்யியளாலர்களும் கண்ட மெய்ப்பொருள் உண்மையை, தவத்தின் வழியாக, உங்களுக்குள் உணர்த்தித்தருவதே ‘இறைநிலை தவத்தின் தத்துவமாகும்’. இதை நீங்களும் நானும் வார்த்தையால் விளக்கிக் கொள்ள முடியாது.

இந்த இறைநிலை தவத்தை எப்படிச் செய்யலாம்? அதை வேதாத்திரிய பாடத்திட்டத்தின் வழியாக உங்களுக்குச் சொல்லித்தருவார்கள். அதை நான் இங்கே விளக்கினால், நீண்டு எழுதிக்கொண்டே செல்லவேண்டும். பதிவு இப்போதைக்கு முடியாது. எனவே, நேரடியாக, வேதாத்திரியத்தில் இணைந்து கற்றுக்கொண்டு, இறைநிலை தவத்தை செய்யலாம். அதுதான் உங்களுக்கான உண்மை விளக்கத்தை தரும். 

இந்த இறைநிலை தவம் செய்வதற்கு, எந்த நேரமும் தனியான அமைக்கப்படவில்லை. பிரம்ம முஹூர்த்தம் என்ற அதிகாலை 3:30 என்றெல்லாம் கடின அவசியமில்லை. அதிகாலை, பகல், மாலை, இரவு என்ற வித்தியாசமும் பார்க்க வேண்டியதில்லை. அதுதான் இந்த இறைநிலை தவத்தின் சிறப்பும் ஆகும்.

முக்கியமாக ஒன்றை, இங்கே சொல்லுகிறேன். இந்த இறைநிலை தவத்தின் வழியாக, நம்முடைய உடலில், எந்த ஒரு ஆதார சக்கர மையங்களும் தூண்டப்படுவதில்லை. அதனால் ஏற்படக்கூடிய கடினமோ, சிக்கலோ, பயமோ அவசியமும் இல்லை. நம்முடைய மனமே இதில், இத்தவத்தில் முக்கிய பங்காற்றுகிறது. நம்முடைய மனமே அந்த அனுபவத்தையும் பெறுகிறது, உயர்கிறது.

இறைநிலை தவம், வேதாத்திரியத்தின் முழுமை மட்டுமல்ல. ஒவ்வொரு மனிதனுன் முழுமையான உண்மையையும், உயர்வையும் தரும் தவமும் ஆகும்.

வாழ்க வளமுடன்.

-


Truth and Secret Explanation of Vethathiriya Kayakalpa Yoga Exercise by Vethathiri Maharishi


வேதாத்திரிய காயகல்ப யோக பயிற்சி குறித்த உண்மை விளக்கங்களை பகிர்வீர்களா?

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, வேதாத்திரிய காயகல்ப யோக பயிற்சி குறித்த உண்மை விளக்கங்களை பகிர்வீர்களா?


பதில்: 

இதோ, வேதாத்திரி மகரிஷி, வேதாத்திரிய அன்பர்களுக்கு மட்டுமில்லாமல், உலகில் உள்ள எந்த மனிதருக்கும், வளரும் பருவம் வந்த அனைவருமே கற்று பயன்பெற்று, உலகில் நிறைவாக, தன்னையறிந்து, முழுமைபெற, வாழ்நாளை சிறப்பிக்க, இப்பயிற்சியின் விளக்கம் தருகிறார். முற்றிலும், நோக்கம் திசைமாறி, சிதறிக்கிடந்த, சித்தர்களின் ‘காயகல்ப யோக கலையை’ ஒருங்கிணைத்து, திருத்தி அமைத்து, எல்லோருக்கும் பயனுள்ள வகையில் நமக்குத் தந்த, வேதாத்திரி மகரிஷிக்கு நம் வணக்கத்தை செலுத்துவோம். வாழ்க வளமுடன்.

        வேதாத்திரி மகரிஷி சொல்லுகிறார், ’மனவளக் கலையில் காயகற்பப் பயிற்சி எனும் ஒரு அற்புதமான மனித வளப் பயிற்சி - கற்றுணர்ந்து பயன் கொள்வீர்! விந்து நாதம் எனும் மூலப்பொருட்களைத் தூய்மை செய்து அவற்றின் வலுவையும் அளவையும். தரத்தையும் உயர்த்தும் எளிய பயிற்சி ஆகும்.

அது நாம் உண்ணும் உணவு.

1. ரசம்

2. ரத்தம்

3. சதை

4. கொழுப்பு 

5. எலும்பு

6. மஜ்ஜை மற்றும்

7. சுக்கிலம்

என்ற ஏழு தாதுக்களாக முறையே ஒன்றிலிருந்து மற்றொன்றாக இறையாற்றலால் மாற்றப்படுகின்றன. இந்த உடலியக்க விஞ்ஞானத்தைப் பற்றி சிந்தனையாளர்களுக்கும் மருத்துவ விஞ்ஞானிகட்கும் நன்கு தெரியும். 

இவற்றில் சுக்கிலம் (விந்து-நாதம்) எனும் ‘சீவ இன அனைத்தடக்கப் பொருள்’ தான் மனித உடலினது தோற்றம் தன்மை வளர்ச்சி இயக்கம் விளைவுகள் அனைத்துக்கும் அடிப்படை ஆற்றலான மிக மதிப்புடைய பொருளாகும்.

உயிரினங்களின் பிறப்பு இறப்பு இரண்டு நிகழ்ச்சிகட்கும் வித்து எனும் சீவசக்தியே காரணம் ஆகும். ஒரு விதையில் ஒரு முழு மரம் காந்த அலைவடிவில் சுருங்கி இருப்பதைப் போலவே விந்துநாதக் குழம்பில் உள்ள ஒவ்வொரு செல்லிலும் மனித வடிவமே சுருங்கி இருக்கிறது. 

        மேலும் பரிணாமத் தொடராக வரும் செயல்கள் எண்ணம் இவற்றின் அலைகளைச் சுருக்கிப் பதிவாக வைத்திருக்கும் கருமையத்ததைத் தாங்கிக் கொண்டு இருக்கும் தெய்வீகத் திரவமும் வித்துவே (Sexual vital fluid) விந்து நாதத் திரவமே ஆகும்.இத்தகைய மதிப்பு வாய்ந்த வாழ்க்கை நலநிதியான விந்துநாதத் திரவங்களை மனிதவள மதிப்பறியாமல் மக்களில் பெரும்பாலோர் வீணாக்கியும் கெடுத்தும் விடுகிறார்கள். 

இந்தக் குறைபாடு மனித வளத்தை மிகவும் தாக்கிச் சீரழிக்கின்றது. இதனால் தான் தனிமனிதன் குடும்பம் சமுதாயம் உலகம் என்ற அளவில் மனித இன வாழ்வில் கணிக்க முடியாத எண்ணிக்கையில் சிக்கல்களையும் துன்பங்களையும் விளைவிக்கின்றன. இந்த உண்மைகளை அறிந்த சித்தர்கள் எனும் மனிதவள விஞ்ஞானிகள் வித்துவைத் தூய்மை செய்து வளப்படுத்தும் பயிற்சியை உலக மக்களுக்கு வழங்கியுள்ளார்கள். இந்தப் பயிற்சி தான் காயகற்பம் எனும் மனித வளப் பயிற்சியாகும்.

நீண்ட காலமாக இந்தக் காயகற்ப பயிற்சியானது மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. எல்லாச் சித்தர்களுமே அவரவர்கள் எழுதிய நூல்களில் இந்தப் பயிற்சியைப் பற்றிச் சில குறிப்புகளை எழுதி உள்ளார்கள்.  எனினும் இதனைப் பயின்று பயன் பெற்றவர்கள் நேர்முகமாகக் கற்றுக் கொடுத்தால் அல்லாது எவருக்கும் எழுத்தின் மூலம் இந்தப் பயிற்சியினை விளங்கிக் கொள்ளமுடியாது.

உதாரணமாக,

உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவைக்

கருத்தினா லிருந்தியே கபாலமேற்ற வல்லீரேல்

விருத்தரும் பாலராவார். மேனியும் சிவந்திடும்

அருள்தரித்த அம்மைபாதம் ஐயன்பாதம் உண்மையே!

காயகற்ப பயிற்சியைப் பற்றி சித்தர்கள் எழுதி உள்ள பாடல்களில் இது ஒன்று. இது சுத்த தமிழ்தான் என்றாலும் இதனைப் படித்து விட்டுக் காயகற்பப் பயிற்சியை ஒருவர் தெரிந்து பழகமுடியாது. எனவே குரு என்னும் ஒரு நபரிடமிருந்து நேர்முறைப் பயிற்சி தான் தேவையாகின்றது. இந்தக் காயகற்ப பயிற்சி காலத்தால் பல பிரிவுகளாக்கப்பட்டுத் தூரக் கிழக்கு நாடுகளில் சிதறிக் கிடக்கின்றன.

சித்த மருத்துவத் துறையில் எனக்கிருக்கும் (வேதாத்திரி மகரிஷியின் வார்த்தையில்) ஆழ்ந்த பற்றுதலால் சித்தர்கள் அருளியுள்ள பல நூல்களையும் ஆராய்ந்ததோடு எனது அருள் தொண்டு பயணத்தின் போது நான் சந்தித்த பல கீழ்நாட்டு உடற்பயிற்சி ஆசிரியர்கள் மூலம்திரட்டிய பல பயிற்சி முறைகளையும் ஒன்று இணைத்து மனவளக் கலைக் காயகற்பப் பயிற்சி என்ற பெயரில் போதித்து வருகிறேன். இப்பயிற்சியை இதுவரை சுமார் இரண்டு லட்சம் பேருக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறேன்.இந்த மனவளக்கலைக் காயகற்பப் பயிற்சியில் எனது இருபது ஆண்டுகால செயல்முறை அனுபவங்களும் இணைந்துள்ளன. 

இந்தப் பயிற்சியை மூன்று மணி நேரத்தில் ஒருவர் கற்றுக் கொள்ள முடியும். மனவளக் கலை மன்றங்களில் உறுப்பினராகி வாழ்க்கைவள விஞ்ஞானம் பயில்வேலார்களுக்கு இந்தப் பயிற்சியும் சேர்த்துக் கொடுக்கப்படுகின்றது.முறை தவறிய வழிகளில் விந்துவை நாசப்படுத்தி கொண்டு படிப்பில் விருப்பமில்லாமலும் நினைவாற்றல் குறைந்து வாழ்வில் சோர்வும் ஏமாற்றமும் காண்கின்ற இளைஞர்களுக்கு அவர்கள் வாழ்வைப் புதுப்பித்துக் கொள்ள இது ஒர் உயர்ந்த சாதனைவழி. ஆண் பெண் இருபாலரும் வயது பதினான்கு பதினைந்துக்கு மேல் காயகற்பப் பயிற்சியைக் கற்றுப் பயனடையலாம்.

திருமணம் வேண்டாம் என்று பொதுநல ஆன்மீகத் தொண்டில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் இந்த அரிய காயகற்பக் கலை நல்லதோர் தோழனாகப் பயன்படும்.’ என்பதாக விரிவான விளக்கங்களை, வேதாத்திரி மகரிஷி அவர்கள் நமக்கு வழங்கியுள்ளார்.

வாழ்க வளமுடன்.

-

What is the way to understand our body and live long? Is Vethathiriyam help?


உடலை நல்லமுறையில் புரிந்துகொள்ளவும், நலமாக நீண்டநாள் வாழவும் வழி உண்டா? வேதாத்திரியம் என்ன சொல்லுகிறது?




வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, உடலை நல்லமுறையில் புரிந்துகொள்ளவும், நலமாக நீண்டநாள் வாழவும் வழி உண்டா? வேதாத்திரியம் என்ன சொல்லுகிறது?

பதில்:
நமது உயிருக்கும் உடலுக்கும் ஒத்த உறவு இனிமையான உறவு இருக்கும் வரையில் தான் உடல் நலம் மன நலம் பாதுகாக்கப்பெறும்.  இந்த உறவானது நீடித்திருப்பதற்கு ரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம் காற்று ஓட்டம் இவை மூன்றும் சரியாக இருக்க வேண்டும்.  அளவிலே முறையிலே இவை சரியாக இருந்தால் தான் உயிருக்கும் உடலுக்கும் ஒரு தொடரியக்கம் நட்பு உறவு சீராக இருக்கும்.  எந்தக் காரணத்தினாலோ ரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்று ஓட்டம் இந்த மூன்றிலே ஒன்று தடுக்கப்பட்டாலும் திசைமாறினாலும் வெளியேறினாலும் அளவிலே குறைந்தாலும் ஓட்டத்திலே குழப்பம் அடைந்தாலும் அந்த இடத்தில் அணு அடுக்குச் சீர்குலைவு ஏற்படும்.

அது இரத்த ஓட்டத்திலோ வெப்ப ஓட்டத்திலோ காற்று ஓட்டத்திலோ எதனாலே வந்தாலும் சரி, மற்ற இரண்டும் கூட ஓட்டத்திலே தடையாகிவிடும்.  அந்தக் குழப்பத்தை நீக்குவதற்கு அங்கே இருக்கக் கூடிய மின்சக்தி போதாது. அதனாலே அதிகமான மின்சக்தி அங்கே சேர வேண்டியதாகின்றது.  அவ்வாறு அங்கே சேரும் போது ஏற்கெனவே அங்கு தொளை (puncture) ஆகி இருக்கிறது அளவுக்கு மேலாகக் காந்த சக்தி மின் சக்தியாக மாறும் போது அந்த இடத்தில் நிச்சயமாக மின்குறுக்கு (short circuit, earthing) உண்டாகும். அதுதான் வலியாக வரும்.

இந்த மின்குறுக்கு சிறிது நேரம் இருந்தால் அது வலி என்றும், அது இடத்தாலே விரிந்தும் காலத்தாலே நீடித்தும் இருந்தால் அது நோய் அல்லது வியாதி என்றும் கூறப்படுகிறது.  அதற்கும் மேலாக உடலில் உள்ள ஜீவ காந்த சக்தி எல்லாம் அதிகமாகச் செலவாகி, வருவதற்கும் போவதற்கும் மத்தியில் உள்ள இருப்பை ஜீவகாந்தம் வெகுவாகக் குறைக்குமானால் அதனை ஈடு செய்ய முடியாமல் போகும்.  ஈடு செய்யும் முயற்சியில் உயிராற்றல் தோல்வியடையும்.  உடலை நிர்வாகம் செய்வதற்குப் போதிய காந்த சக்தி ஜீவகாந்த சக்தி உற்பத்தி செய்ய முடியாமல் தோல்வியடையும்.  

அந்தத் தோல்வியிலே தானே குறைவு பட்டு அது தன்னாலே ஏற்படக்கூடிய வெப்பத்தினாலே அதனுடைய மின்கலம் (battery) என்று சொல்லக்கூடிய விந்து நாளத்தைத் தகர்த்தெறிந்துவிட்டு அதைத் தாங்கி நிற்கக்கூடிய விந்துவையே அல்லது நாளத்தையே உடைத்துக் கொண்டு வெறியேறிய பின்னர் அதைத் தாங்கி நிற்கும் உயிர் உடலில் இருந்து பிரிந்துவிடும். இதுவே மரணம். இதுதான் உடலியக்கத்தில் உள்ள ஒரு நுட்பம்.

இப்படியான உண்மையை நாம் புரிந்துகொண்டு, இயற்கையின் அன்பளிப்பான, உடலை காத்து நலமடைய, வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சி உதவுகிறது. எல்லோரும் கற்று பயணடையலாம்.

வாழ்க வளமுடன்.
-
பதிலின் மூலம்: வேதாத்திரி மகரிஷி அவர்கள்

Why Vethathiriyam not mentioned Shivan, Shakti and all?


ஆன்மீகத்தில் சிவன் என்பது எப்போதும் உண்டு. இப்போதுள்ள யோகசாதனையிலும் சிவன், ஆதிசிவன், சக்தி உண்டு. இவை எல்லாமே வேதாத்திரியத்தில் ஏன் சொல்லப்படவில்லை?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா! ஆன்மீகத்தில் சிவன் என்பது எப்போதும் உண்டு. இப்போதுள்ள யோகசாதனையிலும் சிவன், ஆதிசிவன், சக்தி உண்டு. இவை எல்லாமே வேதாத்திரியத்தில் ஏன் சொல்லப்படவில்லை?


பதில்: 

அன்பரே, மிக நீண்ட ஆராய்ச்சிக்குரிய கேள்வியை கேட்டுவிட்டீர்கள். இதை இங்கே எழுத்தில் விளக்கமாக சொல்லிவிட முடியாது. அதை நேரடியாக, உங்கள் முன்னால் சொன்னால்தான் சரியாக புரிந்துகொள்ளவும் முடியும். உங்களுக்கு இந்த கேள்விக்கான பதில் நிச்சயமாக கிடைக்கவேண்டும் என்றால், யாரேனும் உங்கள் ஆசிரியரிடம் கூட கேட்டு தெரிந்துகொள்ளலாம். எனினும் சில அடிப்படை உண்மைகளை, விளக்கங்களை இங்கே தருகிறேன். ஓரளவுக்கு உங்களுக்கான புரிதலை தரும் என்று நம்புகிறேன்.

ஒரு உண்மையை, மதிப்பான பொருளை, நிகழ்வை தெரிந்துகொண்ட நீங்கள், அதை பிற மக்களிடமும், சராசரி மனிதனிடமும், உங்களைவிட கல்வியில் ஆரம்பநிலையில் உள்ளவரிடம், கல்வி அறிவே இல்லாதவரிடம் சொல்லுவதென்றால் எப்படி சொல்லுவீர்கள்? ‘இது இப்படியானது’ என்று உயர்வாகத்தானே சொல்லுவீர்கள். அப்படி சொல்லவில்லை என்றால், அதன் தரம் தாழ்ந்துவிடும். மக்கள் அதை விட்டு விலகிச்சென்றுவிடுவார்கள். தேவையும், அவசியமும் இல்லை என்று போய்விடுவார்கள். உண்மைதானே?

அப்படியானால், நீங்கள் மெய்ப்பொருளை உணர்ந்தவராக இருந்தால்? அதை எப்படி சொல்லுவீர்கள்? இப்பொழுது ஒரு விளக்கம் உங்களுக்கு கிடைத்திருக்கும் அல்லவா? அதுபோலவே, மெய்ப்பொருள் உண்மையறிந்த ஞானிகள், மனிதனி பிறப்பின் கடமையே, அந்த மெய்ப்பொருளை உணர்வதுதான் என்பதை, மக்களுக்கு விளக்கம் தருவதற்காகவே, அந்த மெய்ப்பொருளை ‘சிவம்’ என்று சொன்னார்கள். உயிரினங்களை ‘சீவன்’ என்று சொன்னார்கள். சிவம் என்பது நிலையானது, உயர்வானது, மெய்யானது என்று பொருள் தரும் வார்த்தையாகும். ஆனால் பின்னாளில்தான் அது சிவனாக மாறிவிட்டது. சீவன் என்பதற்கு பொருத்தமாகக்கூட சிவன் வந்திருக்கலாம்.

மெய்ஞானிகள் சொன்ன, சிவம், சிவன், சக்தி, சீவன் என்பதற்கும், ஆன்மீகவாதிகள் சொல்லுகிற சிவம், சிவன், சக்தி, சீவன் என்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. முன்னது தெளிவானது. பின்னது திறை மறைக்கப்பட்டு ஜோடிக்கப்பட்டதாகும். நாமும் பழங்காலமாக மெய்ஞானிகள் சொன்னதை விட்டுவிட்டு, ஆன்மீகவாதிகள் சொன்னதை பெற்றுக்கொண்டு வந்துவிட்டோம். உண்மைதானே? சிவம் என்றாலும் சிவன் என்றாலும் ஒரு காட்சி அல்லவா வந்து நிற்கிறது. வார்த்தை சொல்லும் உண்மை இங்கே மாறிவிட்டதே? இதை குரு மகான் வேதாத்திரி மகரிஷி உணர்ந்துதான், வேதாத்திரியம் தனிப்பாதையில் நடைபோட வழி வகுத்தார். உண்மையை, உள்ளது உள்ளபடி உணர்ந்தால்தான், விளக்கமும், நிறைவும் கிடைக்கும் என்றுதான் தன் வேதாத்திரிய பயிற்சிகளையும் வடிவமைத்தார். இன்றும் அது தொடர்கிறது.

வாழ்க வளமுடன்.

-

Why some of Vethathiriyans continues their temple worships?


வேதாத்திரியத்தில் இருப்பவர்களே பழக்க வழக்கம் மாற்றாமல், பிரம்மஞானம் கற்றும்கூட இன்னும் கோவிலுக்கும், ஆலயத்திற்கும், செல்வதை தொடர்கிறார்களே?




வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி: 
வாழ்க வளமுடன் ஐயா, வேதாத்திரியத்தில் இருப்பவர்களே பழக்க வழக்கம் மாற்றாமல், பிரம்மஞானம் கற்றும்கூட இன்னும் கோவிலுக்கும், ஆலயத்திற்கும், செல்வதை தொடர்கிறார்களே?

பதில்:
இந்த கேள்வியில், உங்கள் ஆதங்கம் தெரிகிறது. நீங்கள் சொல்வது சரிதான். என்றாலும், உங்களுக்கு உண்மை தெரியுமா? இந்த கோவில், ஆலய வழிபாடுகளின் உண்மையை அறியவதற்குத்தான், வேதாத்திரிய பிரம்மஞானம் கற்றார்கள். இன்னும் தெளிவாக சொல்லப்போனால், கோவிலும், ஆலயமும், அவர்களின் அந்த் வழிபாடும்தான் இந்த அளவுக்கு உயர்த்தியது அல்லவா? உங்களை உயர்த்திய ஏணியை உடனே எட்டி உதைத்து தள்ளிவிடுவீர்களா? அது நியாயம் ஆகுமா? அந்த ஏணியையும், அதன் படிகளையும் நினைத்துப்பார்ப்பது தவறாகுமா?

வேதாத்திரிய பிரம்மஞானம் கற்றவர்கள், உடனடியாக அந்த வழக்கத்தையும் பழக்கத்தையும் விட்டுவிட வேண்டுமா? ஏன்? மற்றவர்களின் பார்வைக்காக ‘சும்மா’ வந்து போவதாகவும் இருக்கலாம் அல்லவா? அது மற்றவர்களுக்கு உண்மையான ஊக்கம் தருவதாக அமையலாமே? அங்கே வருபவர்களிடம் அந்த உண்மையை சொல்லுவதற்காகவும் இருக்கலாம்தானே? 

வேதாத்திரியமோ, குரு மகான் வேதாத்திரி மகரிஷியோ, பிரம்மஞானம் கற்ற பிறகு, மற்ற எல்லா வழக்க பழக்கங்களையும் விட்டுவிட வேண்டும் என்று, எப்போதாவது சொல்லப்படுகிறதா? சொல்லி இருக்கிறாரா? உண்மையாகவே, அவர் ‘யோகத்தில் உண்மை அறிந்தவர்கள் கோவிலுக்கு போகலாமா என்ற ஒர் கேள்வி எழுகிறது, என்னைக்கேட்டால், அவர்கள் கோவிலுக்கு போவதில் தவறில்லை. இன்னும் சொல்லப்போனால் போகலாம் என்றுதான் சொல்லுவேன்’ என்றும் பதில் அளித்திருக்கிறார். ஏன்? கோவில் வழிபாட்டின் உண்மை அறிந்த பிறகு, அந்த பழைய வழிபாடு அவரிடம் இல்லை, மேலும் அங்கே வரும் மற்றவர்களுக்கு அவர், உண்மை விளக்கமும், ஊக்கமும் தரமுடியுமே!

ஞானிகளும், மகான்களும் கூட கோவில் கும்பாபிஷேகம் நாளிலும், யாகம் வளர்க்கும் நாளிலும் அங்கே தங்கி இருப்பதை நீங்கள் அறிவீர்களா? அதன் காரணம் என்ன? தாங்கள் உணர்ந்த உண்மையை அங்கே வெளிப்படுத்துகிறார்கள். அங்கே இருக்கும் ஆற்றலில் தன்பங்கையும் அளிக்கிறார்கள். ஆனால் இது மறைமுகமாகவே நிகழும், எவரும் அறியமாட்டார்.

உண்மையில் கோவில், ஆலய வழிபாட்டின் உள்ளார்ந்த கருத்தை அறியாமல்தான் இந்த கேள்வியே பிறந்திருக்கிறது என்று தோன்றவும் இடமுள்ளது, கோவில் ஆலயத்தில், கடவுளை கருத்தாக பார்ப்பவர்தான் பக்தர். பிரம்மஞானம் உணர்ந்தவர் பார்க்கும் பார்வை வேறு என்பது நீங்கள் அறிவீர்கள் என்று நம்புகிறேன். முக்கியமாக, இனிவரும் காலங்களில், நீங்கள் மற்றவர்கள்மேல் அக்கறை கொண்டு, வருந்துவதை, கவலைப்படுவதை, பதட்டப்படுவதை, திருத்தவேண்டும் என்பதை விட்டுவிடுங்கள். அவர்களை அவர்களே பார்த்துக்கொள்வார்கள். நீங்கள் உங்களுக்காக, உங்கள் வழியில் ஆராய்ந்து உயருங்கள், மற்றவர்களை குறித்த எண்ணமெல்லாம் உங்களுக்கு, உங்கள் முன்னேற்றத்தில் தடை ஆகலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

        மேலும், பிரம்மஞானம் என்ற உண்மையில் எல்லாமே இறை என்ற முழுமை உணர்வு வந்துவிடுவதால் அங்கே விழிப்பு நிலையும் அவர்களுக்கு இருக்கும். உங்கள் கேள்விக்கு பதில் மட்டுமல்ல, கேள்வியின் குறைகளை வெளிப்படுத்தி உங்களுக்கான விளக்கம் தருவதுமே இந்தப்பதிவாகும். 

வாழ்க வளமுடன்
-

What is the easy way to understand the Vethathiriyam, if we feel as difficult?


வேதாத்திரிய தத்துவத்தை புரிந்துகொள்ள கடினமாக இருக்கிறது என்றால் என்ன செய்வது? புரிந்துகொள்வதற்கான வழி என்ன?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, வேதாத்திரிய தத்துவத்தை புரிந்துகொள்ள கடினமாக இருக்கிறது என்றால் என்ன செய்வது? புரிந்துகொள்வதற்கான வழி என்ன?


பதில்:

பொதுவாகவே கல்வி என்ற நிலையில் உள்ள எந்த உண்மைகளும், விளக்கங்களும், தத்துவங்களும் புரிந்துகொள்ள கடினமாகவே இருக்கும். அவற்றை அனுபவமாக்கிக் கொள்ளும் பொழுது அவை முழுமையாக புரிந்துவிடும் என்பதே உண்மையாகும். எந்த ஒரு நபரை எடுத்துக் கொண்டாலும். அவரின் வயது, அனுபவம், கல்வி அறிவு, ஏற்கும் திறன், புரிந்துகொள்ளும் திறன் ஆகியவை அளவில் மாற்றம் பெற்றே இருக்கும். ஒருவருக்கு எளிமையாக இருப்பது, இன்னொருவருக்கு கடினமாக இருக்கும். இதனோடு ஆராய்ச்சிப் பார்வை, ஒத்துப்பார்த்தல், அனுபவமாக்கிக் கொள்ளுதல் என்ற தன்மைகளும் மாறுதலாகவே இருக்கும். எழும் சந்தேகங்களும், அதற்குறிய கேள்விகளும் கூட ஒரே மாதிரி இருப்பதில்லை.

        இதற்கெல்லாம் காரணம், அவர்களின் வயதும், அவர்களின் வாழ்க்கை சூழலும், ஏற்புத்திறனும், வாழ்வில் அவர்கள் கண்ட குடும்ப, சமூக, உலக வழக்க பழக்கங்களுமே ஆகும். எந்த வகையிலும் யாரையும் இங்கே குறை சொல்லுவதற்கு வாய்ப்பில்லை. பொதுவாகவே, என்னுடைய எல்லாவகையான பதிவுகளிலும், ‘நான் சொல்லுவது உங்களுக்கு புரிகிறதா?’ என்று முட்டாள்தனமாக கேட்பதே இல்லை. அது கேட்போரை கீழாக நினைத்து கேட்கக்கூடிய மனோநிலை என்பதை சில ‘விற்பனர்கள்’ புரிந்து கொள்வதில்லை. தன்னைமட்டுமே மேலாக நினைத்து, தனக்கு எல்லாம் தெரியும் என்ற ஒரு நிலையில் இருப்பதுண்டு. ஒருவேளை ‘எனக்கு சுத்தமாக புரியவில்லை ஐயா’ என்று ஒருவர் எழுந்து கேட்டால், அந்த விற்பனரின் நிலை என்ன? மறுபடி முதலில் இருந்து பாடம் நடத்துவாரா? தனியாக கவனம் வைத்து பாடம் தருவாரா?

        வேதாத்திரியம் மிக எளிமையானது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. வேதாத்திரியத்தின் உண்மைகளும், விளக்கங்களும், தத்துவங்களும் புரிந்துகொள்ள கடினமானதும் அல்ல. வேதாத்திரியத்தை தந்த, வேதாத்திரி மகரிஷி ‘பாமர மக்களின் தத்துவஞானி’ என்றுதான் போற்றப்படுகிறார். அவரின் எழுத்துக்களும், கட்டுரைகளும், கவிகளும், பேச்சுக்களுமே சான்றாக இருக்கின்றது. அதை எடுத்துச் சொல்லுபவரும் அத்தகைய உண்மையை, தானாக புரிந்து கொண்ட பிறகு சொன்னால்தான், அது மற்றவர்களுக்கும் எளிதாக புரிந்து கொள்ளும் தன்மையில் இருக்கும். தனக்கே புரியாத ஒன்றை, பிறருக்கு பாடமாக, கல்வியாக தரமுடியுமா? எனவே இங்கே, ஒரு குறிப்பிட்ட உண்மைகளும், விளக்கங்களும், தத்துவங்களும் புதிய ஒருவருக்கு வழங்கவேண்டும் என்றால், கற்றுக்கொடுப்பவர் நன்கு புரிந்து கொண்ட தன்மையில், அனுபவமானவராக இருக்கவேண்டியதும் அவசியம்.

        உங்களைப்போல, ஒரு தனிமனிதராகவே ஒவ்வொருவரும் இருப்பார். அவரவர்களுக்கு ஏற்றவகையில், தனித்தனி கவனம் கொண்டு உண்மைகளும், விளக்கங்களும், தத்துவங்களும்  தரமுடியும் என்பதும் உண்மையே. பொதுவெளியிலும், கல்வி, பாட மையங்களிலும் அதை தரும் பொழுது, ஒரு பொதுவான நிலையில்தான் வழங்கமுடியும். அது எல்லோருடைய அறிவிற்கும் போய்ச்சேரும்படி ‘எளிமையாக’ இருக்கவேண்டியதும் அவசியமாகும். அனுபவமிக்க ஆசிரியர்கள் அதை கடைபிடிக்கிறார்கள் என்பதும் உண்மையே. படித்ததை பேசுவதற்கும், உணர்ந்ததை பேசுவதற்கும் வித்தியாசம் உண்டுதானே?

        உங்களுக்கு இங்கே வழங்கப்படும் வழி, தீர்வு என்ன? என்றால் வேதாத்திரிய தத்துவத்தை மட்டுமல்ல, வேறு எந்த தத்துவமாக இருந்தாலும், அந்த வகுப்பில் உங்களுக்கு புரியவேண்டும் என்று நினைக்காதீர்கள். கல்வி பாடங்களை, விளக்கங்களை கேட்கும்பொழுது, குறிப்பு எடுத்துக்கொள்வது மிகச்சிறந்த வழி. உங்கள் சிறப்பான மூளையையும் காதுகளையும் மட்டுமே நம்புவது தவறு. சிந்தனைக் கவனம் சிதறிவிட்டால், அந்த விளக்கங்கள் உங்களின் இன்னொரு காதுவழியாக வெளியே ஓடுவிடும். அன்றைய பாடங்களை அன்றைக்கே, தனியாக அமர்ந்து, உங்கள் குறிப்புக்களோடு ஞாபகப்படுத்தி, ஆராய்ந்து பாருங்கள், எளிதாக புரிந்துகொள்ள வாய்ப்பு உண்டு.

        கேள்வி நேரத்திலேயே, உங்கள் குறிப்பின் வழியாக, உங்களுக்கு புரிந்து கொள்ள கடினமானதை, சந்தேகத்தை கேள்வியாக கேட்டு பதில் பெற மறவாதீர்கள். ‘உங்களுக்கு புரிகிறதா?’ என்று ஆசிரியர் கேட்டால் ‘எனக்கு புரியவில்லை ஐயா’என்று உடனடியாக சொல்லிவிடுங்கள். பிறகு அந்த ஆசிரியரே உங்களுக்கு ஏற்றபடியாக தன்னை மாற்றுக்கொள்வார் என்பது உறுதி.

வாழ்க வளமுடன்

-

Why it is called by Vethathiriyam instead of Ashtanga yoga?


எல்லோருமே அஷ்டாங்க யோகம் என்றே சொல்லிவரும் பொழுது, வேதாத்திரிய யோகம் என்று சொல்லப்படுவதின் அர்த்தம் என்ன?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, எல்லோருமே அஷ்டாங்க யோகம் என்றே சொல்லிவரும் பொழுது, வேதாத்திரிய யோகம் என்று சொல்லப்படுவதின் அர்த்தம் என்ன?

பதில்:

பதஞ்சலி முனிவர் வகுத்துத்தந்த அஷ்டாங்க யோகம்தான் இன்றும் தொடரப்படுகிறது என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. உலகில் இருக்கின்ற எல்லாவகையான பெயரில் இயங்கிவரும், மக்களுக்கு ஆன்மீக சேவை வழங்கிவரும் யோக மையங்களும், இந்த அஷ்டாங்க யோகத்தின் வழியாகத்தான் கல்விப்பாடங்களையும், பயிற்சிகளையும் வழங்கி வருகின்றன. மெய்ப்பொருள் உண்மை விளக்கத்திற்கு வேதாந்ததையும் எடுத்துகொண்டு விரிவுரை தருவார்கள். அதில் தங்கள் அனுபவத்தையும் இணைத்துத் தருவார்கள். அந்த தலைமை யோகி, மகான், ஞானி, ஆகியோருக்குப் பிறகு, அவை அனைத்தையும் கற்று முழுமை அனுபவம் பெற்றவர் தனியாகவும் அதையே தொடர்வார், அங்கேயே பயிற்றுனராகவும் ஆசிரியராகவும் தொடர்வார். பெரும்பாலும் தங்களுடைய பயிற்சியில் எதையுமே மாற்றிக் கொள்ளவே மாட்டார்கள். அந்த பழமை மூலமானது, நவீன காலத்துக்கு ஏற்றபடி தொடருமே தவிர, வேறுஎதும் மாறிடாது.

இப்போதும் கூட அஷ்டாங்க  யோகம் இல்லாத சித்தர்வழி யோகமுறைகளும் உண்டு என்பதை மறுக்கமுடியாது. இதில் வேதாந்த கருத்துக்களின்றி, சித்தாந்த கருத்துக்களே பகிரப்படும். ஒருவகையில் நேரடியான யோக முறை என்று சொல்லவும் வாய்ப்புண்டு. இதிலும் அந்தக்கால பழமையான கடின பயிற்சிமுறைகள் உண்டு. மாற்றத்தை ஏற்றுக்கொள்ள மாட்டர்கள். உண்மை விளக்கம் பெறவர்கள் தங்களை யோகி, சித்தர் என்றும் விளங்கிக்கொண்டு கல்வி பாடங்களை, பயிற்சிகளை வழங்கிவருவார்கள். இங்கும் அனைத்தையும் கற்று முழுமை அனுபவம் பெற்றவர் தனியாகவும் அதையே தொடர்வார், அங்கேயே பயிற்றுனராகவும் ஆசிரியராகவும் தொடர்வார். 
இந்த இரண்டு நிலையான யோக மையங்களில், மெய்ஞான விளக்கங்கள் மட்டுமே இருக்கும். விஞ்ஞான விளக்கமோ ஒப்பீடோ, தகுந்த விளக்கமோ இருக்க வாய்ப்பில்லை. எல்லாவகையிலும், ஏற்கனவே சொல்லப்பட்டது எதுவோ அதுவேதான் தொடரும். சிற்சில கருத்துக்கள் மாறலாம் ஆனால், பழமையே தொடரும். அதற்கே முக்கியத்துவமும் தரப்படும். எக்காலத்திலும் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை என்ற உறுதி இருக்கும்.

ஆனால், குரு மகான் வேதாத்திரி, வேதாந்தம், சித்தாந்தம் இரண்டிலும் பெற்ற அனுபவங்களோடு அதில், ஆராய்ச்சியில் கிடைத்த உண்மைகளை எடுத்துக்கொண்டார். ஒவ்வொரு சைவ, வைஷ்ணவ, வேதாந்த விற்பனர்கள், சித்தர்கள் ஆகியோர் கவியாக வழங்கிய மெய்ஞான அனுபவங்களையும் ஏற்று விளக்கம் பெற்றார். உலகில் அணு முதல் அண்டம் வரையிலான விஞ்ஞான ஆராச்சிகளையும் அறிந்து அவற்றின் வழியாகவும் கிடைத்த ஆய்வுகளை, யோகத்தின் உண்மையை விளக்குவதற்கு பயன்படுத்திக் கொண்டார். அவற்றை தன்னுடை கல்வியாக, பயிற்சியாக, பாடத்திட்டமாகவும் வழங்கிவந்தார். சித்தாந்த வழியான யோகமாக இருந்தாலும், அதில் இத்தகைய நவீன மாற்றங்களை ஏற்று அனுபவமான பயிற்சி முறைகளும் சொல்லித்தருவதுண்டு. 

அதுவே வேதாத்திரியம் என்ற புதிய ஒன்றாக மாற்றம் பெற்றது.
குரு மகான் வேதாத்திரி மகரிசி, தன்னுடைய வேதாத்திரியத்தின் வழியாக , யோகம் என்பதை அஷ்டாங்க யோக வழியிலும் வேதாந்த வழியிலும், சித்தாந்த வழியிலும், விஞ்ஞான வழியிலும், தன் அனுபவத்தின் வழியிலும் விளக்குகின்றார் என்பதை, அந்த வேதாத்திரியத்தில் பயணிக்கும் ஓவ்வொருவரும் அறிந்து கொள்ளமுடியும். அப்படியானால் வேதாத்திரியம் மட்டுமே சிறப்பா? என்ற கேள்வி எழுந்துவிட்டால், அது அப்படியல்ல, ஒரே ஊருக்குச்செல்லும் இலக்கு நோக்கிய பாதைகள் பல இருப்பது போல வேதாத்திரியமும் ஒன்று. பயணம் செல்லவிரும்புவரின் முடிவே அதை தீர்மானிக்கும்.

வாழ்க வளமுடன்
-

Why still some of people share the old notes and details is hard to follow in this modern world?


இன்னமும் கூட பழைய பஞ்சாங்கம்,  புரிந்து கொள்ள முடியாத விளக்கம், குறிப்பு, வழிபாடு, சடங்கு, வழிமுறை, நடைமுறைக்கு கடினமான பழக்கங்கள் இவற்றை விளக்குகிறார்களே?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, இன்னமும் கூட பழைய பஞ்சாங்கம்,  புரிந்துகொள்ள முடியாத விளக்கம், குறிப்பு, வழிபாடு, சடங்கு, வழிமுறை, நடைமுறைக்கு கடினமான பழக்கங்கள் இவற்றை விளக்குகிறார்களே?


பதில்:

வேதாத்திரியத்தில் இருக்கின்ற உங்களுக்கு அத்தகைய கண்ணோட்டம் வேண்டியதில்லை. இப்போழுது நீங்கள் இருக்கும் நிலையில், உங்கள் வகுப்பில் என்ன சொல்லித்தரப்படுகிறதோ? உங்கள் கேள்விக்கான விளக்கம் கிடைக்கிறதோ? அதை மட்டும் நீங்கள் பெற்று பயன் செய்து கொள்ளுங்கள். உங்களைச் சுற்றி என்ன நடந்தாலும், யார் என்ன சொன்னாலும் அப்போதைக்கு ஏற்று கடந்துவிடப் பழகுங்கள்.

யாரையும் குறை சொல்லுவதும், அவர்களை திருத்திட முயற்சிப்பதும், மாற்றங்களை விளக்கிக் கொண்டிருப்பதும், அவர்களின் விளக்கத்தில் இருக்கிற குறைகளை களைவதும் நம்முடைய வேலையில்லை. அதை காலமும், அவர்களுடைய அனுபவமும் பார்த்துக்கொள்ளும். எனவே அவர்களையும், அவர்கள் கருத்துக்களையும் கடந்துபோகக் கூடிய தன்மையை நீங்கள் வளர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

ஒரு தனிநபர், ஒரு சமூகம், ஒர் நாடு என்ற வகையில் பலவித கருத்துக்களும், விளக்கங்களும் இருக்கத்தான் செய்யும். வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான் உலகின் சிறப்பாகும். அதற்குத் தக்கபடி நாம் வாழ்வதற்கும் பழகிக் கொள்ளவேண்டும்.

வேதாத்திரியம் உண்மையிலேயே தனது விளக்கத்தை தருவதாக மட்டுமே அமைந்திருப்பதை நீங்கள் காணலாம். எந்த வகையிலும் அது வேண்டாம், இது வேண்டாம், இது தவறு, அது தவறு என்று குறைகளையும், விளக்கங்களையும் சுட்டிக் காட்டுவதே இல்லை. இதை கட்டாயம் கடைபிடியுங்கள் என்று உங்களை வற்புறுத்துவதும் இல்லை. ஏதேனும் குழப்பமாக சொல்லி உங்களை எந்த விதத்திலும் பயமுறுத்துவதும் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதுவரை உங்களுக்கு வேதாத்திரியத்தின் நோக்கம் தெரியவில்லை என்றாலும் கூட, இனிமேலாவது தெரிந்து கொள்ளுங்கள்.

ஒரு பாதையில், பலதரப்பட மனிதர்கள் கடந்து போகலாம். அவர்களோடு நாமும் நடந்து போகிறோம். அந்த வகையில், அந்த பாதையில் நடந்து போகிற எல்லோருக்குமே ஒரே நோக்கமும், தெளிவும், விளக்கமும் இருக்கும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. மனிதன் ஒரே மாதிரியான அமைப்பில் இருந்தாலும், வந்தாலும், ஒவ்வொருவரும் தனித்தனி உலகம் என்ற உயர்ந்த ஞானிகளின் கருத்தை நாம் ஏற்றுக்கொள்ளாமல் இருக்கமுடியாது. அந்த உண்மையை புரிந்து கொண்டு, அவர், அவருக்குத் தெரிந்த கருத்தையும், அவர் கற்றுக்கொண்ட கருத்தையும், அவருக்கு அனுபவப்பட்ட வழிகளில் கிடைத்த உண்மைகளையும் சொல்லுகிறார். அது அவருடைய வழி என்று விட்டுவிடுதல் நல்லது. உங்களுக்கான வழியும், பாதையும் எதுவோ அதில் நீங்கள் அமைதியாக நிறைவாக பயணிப்பதுதான் நல்லதாகும்.

குறைகளை பார்த்துக்கொண்டே இருக்கின்ற மனதிற்கு என்றுமே அமைதி இருக்கப்போவது இல்லை. அதனால், உங்களுடைய உண்மைக் கருத்துக்களில் நின்று, அதை குழப்பிக்கொள்ளாமல், மேலும் மேலும் அதிலேயே விளக்கம் பெற்று உயர்ந்து கொண்டே இருங்கள், அதுவே போதுமானது!

வாழ்க வளமுடன்

-

Why some of disease and problem not cure by the simplified exercise?


சில உடல் உபாதைகள், நோய்கள் எளியமுறை உடற்பயிற்சியால் குணமாகவில்லையே? காரணம் என்ன?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, சில உடல் உபாதைகள், நோய்கள் எளியமுறை உடற்பயிற்சியால் குணமாகவில்லையே? காரணம் என்ன?


பதில்:

அன்பரே, உங்களுடைய வயது தெரியவில்லை, எப்போது முதல், இந்த வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சி செய்து வருகிறீர்கள்? ஏற்கனவே உங்களுக்கு என்ன மாதிரியான உடல் உபாதைகள், நோய்கள் இருந்தன? எந்தவகையான மருந்துகள் எடுத்துக்கொண்டீர்கள்? சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி, இயற்கை வைத்தியம், மூலிகை வைத்தியம், யுனானி, அலோபதி இப்படி எந்தப் பிரிவு மருத்துவரின் ஆலோசனைகளை ஏற்று கடைபிடித்து வருகிறீர்கள்? அதன் விளைவு, மாற்றம் எப்படி இருக்கிறது? இருந்தது? மருத்துவம் தொடர்கிறதா? நிறுத்திவிட்டீர்களா? 

நீங்கள் தினமும் வேதாத்திரியம் வழங்கும் எளியமுறை உடற்பயிற்சி செய்து வரவேண்டும் என்பதே அதன் பலன் தருவதின் சிறப்பாகும்.  அப்படி அதனை தொடர்ந்து வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சி செய்து வருகிறீர்களா? என்பதான இத்தனை கேள்விகளுக்கும் பதில் தெரியவில்லை. அதை நீங்களே ஒரு ஆராய்ச்சி குறிப்பாக எழுதி தயாரித்து, நேரடியாக ஆசிரியரிடம் கேட்டும் உண்மை அறியமுடியும்.

நிச்சயமாக, வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சியின் வழியாக பலன்கள் செய்துவருவதால் மட்டுமே கிடைக்கும். குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் அதை, எளியமுறை உடற்பயிற்சியை வடிவமைத்த பொழுது, அந்தந்த பயிற்சிகளை மற்றவர்களோடு பகிர்ந்து, செய்யச்சொல்லி, மாற்றத்தை கணித்து, தானும் செய்து பார்த்து விளைவுகளை கண்டு, பயிற்சியிலும் தேவைப்படும் மாற்றத்தை ஏற்படுத்திக்கொண்டார். தன் வாழ்நாள் முழுவதும், 96 வயது வரையும் இதை கடைபிடித்தார். தன்னோடு இருக்கும் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளையும் ஏற்றுக்கொண்டும் திருத்தி அமைத்தும்  கொண்டார்.

பொதுவாகவே இளமைக் காலத்திலும், பருவம் வந்த வயதுகளிலும், மனமும், உடலும் மிக மிக உற்சாகமாக இருக்கும். உறக்கமும் மிகச்சரியாக இருக்கும். இருபது வயதை கடந்து, உலக கடமைகளில் நம்மை இணைத்துக்கொண்டு பயணிக்கும் பொழுது, உணவாலும், அதிக உழைப்பாலும், தூக்கமின்மையாலும், அன்றாட இன்ப நுகர்வுகளாலும், ஓயாத சிந்தனையாலும் நம்முடைய உடலும், மனமும் கெடுகின்றது. தானாகவே நோயை வரவழைத்துக் கொள்கிறோம். மேலும் வித்துவழியாக பரம்பரை நோய்களும் நம்மிடம் எட்டிப்பார்க்கிறது. நம்மைச் சுற்றியுள்ள சுழல், கிரகங்களின் அலைத்தாக்கம், தொற்று நோய்கள் வழியாகவும் பாதிக்கப்படுவோம்.

இவ்வளவுக்கும், துணையாக நிற்கும் தீர்வு என்றால், பருவ வயதில் வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சி கற்றுக்கொண்டால் சிறப்பு. உடல் உபாதை, வலி, பிரச்சனைகள், நோய்கள் எல்லாம் உருவாகி நம்மை வருத்தி, அதனால் மருத்துவ ஆலோசனை பெற்று, மருந்துகள் எடுத்துகொண்டிருக்கும் நிலையில், வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சி செய்து வந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று நினைப்பது தவறு. வருமுன் காப்பதும், வந்ததை ஓரளவில் தடுத்துக் கொள்வதுமே நன்று. இடைப்பட்ட காலத்தில், 30, 40 வயதுகளில், வயோதிகத்தில் நம்மால் இதைத்தான் பெறமுடியுமே தவிர, முற்றாக நோயை தீர்க்க முடியாது. ‘குணப்படுத்துவதை விடவும், தடுப்பதே சிறப்பு’ என்று மருத்துவ சொல் இருக்கிறது. 

உண்மையாக, நீங்கள் எதிர்பார்ப்பு ஏதுமின்றி, வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சி செய்து வாருங்கள். உங்களுக்கான உடல் உபாதை, வலி, பிரச்சனை, நோய்க்கான மருந்து என்னவோ அதையும் எடுத்துக்கொள்ளுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக மாற்றத்தை பெறுவீர்கள் என்பது உறுதி!

வாழ்க வளமுடன்.

Does this Vethathiriyam teach the good ways to earn money?!


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, பணம் சம்பாதிக்க நல்லவழிகளை சொல்லித்தருகிறதா இந்த வேதாத்திரியம்?!


பதில்:

நிச்சயமாகவே சொல்லித்தருகிறது! அது எப்படி என்று வரிசையாக பார்க்கலாம். முதலில் மனிதனின் உலக கடமைகளில் ஐந்தில் ஒன்றாக, சம்பாத்தியம் ( பணத்தை சம்பாதித்தல்) இருப்பதை, குருமகான் வேதாத்திரி மகரிஷி விளக்கிச் சொல்லுகிறார். அதனால் அதை விட்டுவிடவும் கூடாது என்று வலியுறுத்துகிறார். உடனே எதிர்கேள்வி கேட்பார்கள் ‘அப்படியானால் சம்பாதித்துக்கொண்டே இருக்கலாமா?” என்று. (எதிராளியை மடக்குவதற்க்குத்தான் அவர்களுக்கு எவ்வளவு ஆசையும் தன்முனைப்பும்!) இதற்கும் விளக்கம் தருகிறார் நம் மகரிஷி! இப்படியெல்லாம் கேட்பார்கள் என்று அவருக்குத் தெரியாதா என்ன?

‘போதும் என்ற நிலை வரை சம்பாதியுங்கள்’ என்கிறார். அதாவது என் வாழ்நாளுக்கு இவ்வளவு பணமும், பொருளும் போதும். இதில் நான் நிறைபெறுகிறேன். இதற்கு மேல் வரக்கூடிய என் சம்பாத்தியத்தை, இந்த சமூகத்திற்கு ஏதேனும் வழியில் திருப்பி அளிக்கிறேன் என்ற முடிவுக்கும் வர வேண்டும் என்றும் சொல்லுகிறார். சரி ஏன் சமுகத்திற்கு திருப்பி அளிக்கவேண்டும் என்றும் கேட்பீர்கள் தானே? அதற்கும் விடை உண்டு.

‘நீங்கள் பிறந்தது முதல் இன்றுவரை, பல்வேறு நிலைகளில், பல்வேறு வகைகளில் உணவு, பயன்படுத்திய பொருட்கள், துணிமணிகள், வாழ்க்கை பொருட்கள், தன்னலமற்ற சேவைகள் இப்படியாக எல்லாவற்றிலும் சமூகமக்களின் உதவியை, உழைப்பை மறைமுகமாகவோ, நேர்முகமாகவோ பெற்றிருக்கிறீர்கள்தானே? அதை நாம் மறந்துவிடலாமா? அதற்கு நாம் நம்மாலான உதவியை திருப்பித்தரவேண்டுமே’ என்று வலியுறுத்துகிறார்.

மேலும் பணம் சம்பாதிக்க 1) நேர்வழிகளை தேர்ந்தெடுக்கவேண்டும் 2) உங்கள் உழைப்பின் வழியாகவே அந்த பணம் கிடைக்க வேண்டும் 3) உங்களுக்கு பணம் கிடைப்பதின் வழியாக எவரும் மனதளவிலோ, உடலளவிலோ பாதிக்கப்படக் கூடாது 4) உங்களுக்கு திருப்தி அளிக்கும் நிலைவரை சம்பாதிக்கலாம் 5) உங்கள் வாழ்க்கைக்கு போதுமானது என்றபோது திருப்தியில் நிறைவு பெற வேண்டும் 6) நீங்கள் வாழும் சமூகத்திற்கு திருப்பியளிக்கவேண்டும்! என்பதான ஆறு வழிகளை வேதாத்திரியம் சொல்லித்தருகிறது! 

இன்னும் விளக்கமாக அறிந்துகொள்ள இந்த காணொளி உதவும்: இங்கே காண்க!

வாழ்க வளமுடன்.

How vethathiriyam make understand the God to us?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.



கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, கடவுளை வேதாத்திரியம் எப்படி காண்கிறது என்று விளக்குவீர்களா?

பதில்:
வழக்கமாக நாம் இங்கே குறிப்பிடுவதுண்டு, கட+உள் என்ற செயல்குறிப்புத்தான் கடவுள் என்ற பெயர்ச்சொல்லாக மாறிவிட்டது. இதைச் சொல்லும்பொழுதே அந்த கடவுள் எப்படி காண்பது என்பதும், எதுவாக இருக்கும் என்ற ஊகமும் கிடைத்துவிடுகிறதுதானே?!
கடவுள் தனியாக இல்லை, நமக்குள்ளாக இருக்கிறதோ? என்ற ஐயப்பாடு எழுந்தால்கூட போதுமானதுதான்.

ஆனால் பெரும்பாலோர் என்ன சொல்லுவார்கள் தெரியுமா? அப்படியெல்லாம் இல்லை, உயர்ந்த பெரிய கோவில்களிலும், வழிபாடு தளங்களிலும், மலை உச்சிகளில் உள்ள வழிபாட்டு நிலைகளிலும் தான் இருக்கிறது என்பார்கள். தவறில்லை. அவரவர் எப்படி அந்தந்த வயதில், கடவுள் என்ற நிலையை புரிந்து வைத்திருக்கிறார்களோ அதன்படி அவர்கள் அதை புரிந்துகொண்டு, வழிபடுகிறார்கள் என்பதுதான் உண்மை. இதையே பக்தி மார்க்கம் என்று நாம் அழைக்கிறோம். அதாவது சராசரி மனிதருக்கான இறையுணர்தல் பாதை என்றும் சொல்லலாம்.

ஆனால் யோகத்தில் உள்ளவர்கள், பக்தியை கடந்து, அதன் உண்மை என்ன? என்று அறிந்துகொள்ள ஆர்வமும், முயற்சியும், உந்துதலையும் பெற்றவர்கள், தகுந்த குருவை நாடி, அவர் வழியாக குண்டலினி எனும் உயிராற்றல் திணிவு சக்தியை எழுப்பிக்கொண்டு, தவம் இயற்றி உண்மையான இறையை, கடவுளை காண்கிறார்கள்.

வேதாத்திரியம் என்பது, எளியமுறை குண்டலினி யோகமாகும். உலகில் இருக்கும் பலவித யோகங்களின் அடிப்படையில் உள்ள சிரமங்களை எல்லாம் நீக்கி, குருமகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள், உலக மக்களுக்காக வழங்கியதாகும். வேதாத்திரியத்தில் கடந்து உள்ளே சென்றால், இறையை நாம், நமக்குள்ளாக ‘அறிவாக’ காண்கிறோம். அறிவு என்பது இங்கே உயர்ந்த மெய்யறிவு என்று பொருளாகும். வெறுமனே சும்மா, படிப்பினாலும், அனுபவத்தாலும், இயற்கையாகவும் பெறும் மூளை செயல்பாட்டு அறிவு அல்ல. இது உணர்வால் நாம் பெறும் உண்மை அறிவு ஆகும்.

இந்த அறிவு, விவேகம் என்றும் வழங்கப்படும். இந்த விவேகம், வேகம் என்ற ஆற்றலோடு, பிரபஞ்சத்தை தாங்கிக் கொண்டு இருக்கிறது. இந்த வேகம், விவேகம் என்பதையே ‘சித்தர்கள் வெட்டவெளி’ என்று குறிப்பிட்டார்கள். 
வேதாத்திரியத்தின் வழியாக ஆழ்ந்து செல்லச்செல்ல இந்த உண்மையை நீங்களும் உணர்வீர்கள்.

வாழ்க வளமுடன்.

Vethathiri Maharishi Simplified exercise, you and your health


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, எளியமுறை உடற்பயிற்சி செய்ய நினைக்கும் பொழுதெல்லாம் ஏதேனும் வேலை வந்து தடுக்கிறது. அதனாலேயே தொடர முடியவில்லையே?! என்ன செய்வது?!


பதில்:

நல்லதுதான், இதற்கு நம் வேதாத்திரி மகரிஷி அவர்கள் சொல்லுகிற பதிலை பார்க்கலாமா? ‘இதெல்லாம் சப்பைகட்டு, உங்களுக்கு செய்ய விருப்பமில்லை அதான் விசயம்’ என்கிறார். ஆம் அது உண்மைதானே? நீங்களும், உங்கள் உடலும், உடல் உறுப்புக்களும் நன்றாக, நீண்டநாள், எந்த நோய்தாக்கமும் இல்லாமல், வலி, சோர்வு ஏதும் இல்லாமல், காலை முதல் மாலை, இரவு என நாள் முழுவதும் உற்சாகமாக இருக்கவேண்டும் என்று நினைத்தால், எளியமுறை உடற்பயிற்சி செய்வதில் என்ன தயக்கம் வந்துவிடப்போகிறது?

இந்த எண்ணம் வந்துவிட்டால், முதலில் அதை செய்துவிட்டுத்தானே மற்ற வேலைகளை பார்ப்பீர்கள்? ஆனால் உங்களுக்கு உங்கள் உடலைவிட வேறு ஏதோ ஒன்று தேவையாக இருக்கிறது. முக்கியமாக தெரிகிறது. அதனால் எளியமுறை உடற்பயிற்சி செய்ய ஆர்வமில்லை, செய்தால் அப்படி என்ன ஆகிவிடப்போகிறது? செய்யாமல் விட்டாலும் ஒன்றும் குறையில்லை. நான் நன்றாகத்தானே இருக்கிறேன் என்றும் நீங்கள் நினைக்கிறீர்கள். சரி, நீங்கள் நன்றாக இருப்பதாக நினைப்பது சரிதான் தவறல்ல. ஆனால் உண்மையிலேயே உங்கள் உடலும், உடல் உறுப்புக்களும் நன்றாக இருக்கிறதா? என்று கேள்வி கேட்டு அதற்கான சோதனையை செய்திருக்கிறீர்களா? இல்லையா?

நீங்கள் எளியமுறை உடற்பயிற்சியை தவிர்க்கும் அளவிற்கு, உடல் நலத்தோடு இருக்கிறீர்கள் என்பது சிறப்பு. அதற்காக வாழ்த்துகிறேன். அந்த உடல் நலத்தை அப்படியே பேணி காத்திடுங்கள் அது போதும். எளியமுறை உடற்பயிற்சி செய்துதான் ஆகவேண்டும் என்று நானோ, வேறு யாருமோ, எவருமோ கட்டாயப்படுத்தவில்லை. உங்களுடைய பசிக்காக நீங்கள் தான் உணவு உண்ண வேண்டும் இல்லையா? அதுப்போலவே உங்களுக்கு தேவை என்றால் தான் எளியமுறை உடற்பயிற்சி செய்யவேண்டுமே தவிர கட்டாயத்திற்காக வற்புறுத்தலுக்காக பயமுறுத்தலுக்காக செய்ய வேண்டாமே?!

இனி உங்கள் முடிவுதான்! 

வாழ்க வளமுடன்.

Why is difficult as following the Vethathiriyam? Only easy to Maharishi.


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, வேதாத்திரியத்தை கடைபிடிக்க கடினமாக இருக்கிறது. மகரிஷி தனியாள் என்பதால் அவருக்கு சுலபம் தானே?!


பதில்:

இப்படித்தான் எல்லோரும் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்தவிதமான கேள்வியை, குரு வேதாத்திரி மகரிஷி அவர்கள், உலகம் முழுவதும் உள்ள அன்பர்கள் மூலமாக எதிர்கொண்டுள்ளார். அதை அவரே சொல்லியும் உள்ளார் என்பதுதான் சிறப்பு. ஒரு தத்துவ விளக்கம், வெளிநாட்டில் நடத்திக்கொண்டிருந்த பொழுது ஒருவர், உங்கள் கேள்வி போலவே கேட்டுள்ளார்.

‘சுவாமிஜி, நீங்கள் ஒரு துறவி. அதனால் இந்த வழிமுறைகளை கடைபிடிப்பது உங்களுக்கு சுலபமானது. ஆனால் நாங்கள் குடும்பஸ்தர்கள். எங்களுக்கு மிக கடினம், முடியாததும் கூட’ என்று கேட்கிறார்.

‘நான் துறவி என்று சொல்லவில்லையே, நீங்கள் நினைப்பதுபோல் நான் துறவியும் அல்ல. நானும் உங்களைப்போல இல்லறத்தில் வாழ்ந்து நிறைவு கண்டு, பிறகு யோகத்தில் என்னை இணைத்துக்கொண்டு பயணிக்கிறேன். மேலும் ஒன்று அல்ல இரண்டு மனைவிகள்’ என்று மகரிஷி பதில் தந்திருக்கிறார்.

இப்போது கேள்வி கேட்டவர் எப்படியான வியப்புக்கு உள்ளாவார் என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடிகிறதா? மேலும் நான் விளக்கமாக சொல்லவேண்டியது இல்லை என்று நினைக்கிறேன்.

சரி, நான் உங்களுக்கு ஒரு ஆலோசனை கூறலாமா? நீங்கள் வேதாத்திரியத்தை இதற்கு மேலும் தொடரவேண்டாம். சற்று நிறுத்தி வைத்துவிடுங்கள்.

குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் எழுதிய, என் வாழ்க்கை விளக்கம் என்ற தலைப்பிலான நூலை வாங்கி படியுங்கள். முழுவதும் படித்து முடித்துவிட்டு, இரண்டு மூன்று நாள் சிந்தனை செய்யுங்கள். இந்த வேதாத்திரி மகரிஷி அவர்கள் வழங்கிய வேதாத்திரியமும், நான் கற்றுக்கொண்ட யோக பயிற்சிகளும் தேவைதானா? இதை தொடரலாமா? விட்டுவிடலாமா? வேறு என்ன செய்யலாம்? என்று கேள்விகள் கேட்டு அதற்குறிய பதிலை தேடுங்கள். என்னிடமோ, வேறு யாரிடமோ ஆலோசனை கேட்காதீர்கள். உங்களுக்குள்ளாக என்ன பதில் விளக்கம் வருகிறதோ அதை கடைபிடியுங்கள். முடிவு எதுவாக இருந்தாலும் அது ‘உங்களுக்கு நல்லதே’ ஆகும்!

வாழ்க வளமுடன்.

Why Kayakalpa yoga morning exercise has 2 stages on level 3?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, காயகல்ப பயிற்சியில், காலை மூன்று பயிற்சிகளில், நான்காவதாக ஆண்களுக்கு மட்டும் தனி நிலை என்பது ஏன்?


பதில்:

சித்தர்கள் வழியான, உடலை உறுதி செய்து, வித்துநாதம் காக்கும் அற்புத பயிற்சியே காயகல்பயோக பயிற்சி ஆகும். இந்த புராதனமான இக்கலையை, முழுமைசெய்து வடிவமைத்தவர், குரு மகான வேதாத்திரி மகரிசி அவர்களே. காலையில் செய்தும் பயிற்சி மூன்று, அதில் மூன்றாவது பயிற்சியில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனி நிலை அமைக்கப்பட்டிருக்கிறது.

அதாவது ஆண்களுக்கு கூடுதலாக ஒரு நிலை உண்டு. இதற்கான காரணம், பெண்களுக்கு உள்ளமைந்த கர்பப்பை, மற்றும் இனப்பெருக்க உறுப்புக்களில் அழுத்தம் வரக்கூடாது என்பதற்காகவும், அதனால் வேறுவிதமான பாதிப்புக்களும், தொந்தரவுகளும் ஏற்படுத்திக்கொள்ளக் கூடாது என்பதற்காகவும் மூன்றாவது பயிற்சி நிலையிலேயே பத்து அஸ்வினி முத்திரையும், ஒரு ஓஜ்ஸ் மூச்சும் செய்துவந்தால் போதுமானது ஆகும்.

ஆண்களுக்கு இனப்பெருக்க உறுப்பு உடலை விட்டு வெளிப்புறமாக அமைந்திருப்பதால், மூன்றாவது பயிற்சியின் முதல் நிலையில் 10 அஸ்வினி முத்திரையும், ஒரு ஓஜ்ஸ் மூச்சு செய்வதற்குமுன் உடலை வளைக்கும் விதமாக, கால்களுக்குள் கைகளை கோர்த்த நிலையில் வந்தபிறகு ஓஜ்ஸ் மூச்சு வெளியிட வேண்டும் என்று பயிற்சி வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

இதற்கான உண்மை விளக்கம், நீங்கள் இந்த காயகல்ப யோகப் பயிற்சியை கற்கும் பொழுதே சொல்லித்தரப்பட்டிருந்தாலும், நீங்கள் அதில் கவனமின்றி மறந்திருக்க வாய்ப்பு உண்டு எனினும் இப்பொழுது அறிந்துகொண்டது நன்மைதானே.

வாழ்க வளமுடன்.  

How to perform the simplified exercise relaxation for patients?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, எளியமுறை உடற்பயிற்சியின், உடல் தளர்த்தல் பயிற்சியை ஒரு நோய்வாய்பட்டவருக்கு, படுக்கையில் இருக்கும் ஒருவருக்கு எப்படி தரமுடியும்?


பதில்:

தாரளமாக தரலாம், மிகுந்த நன்மையும் அளிக்கும் என்பது உறுதி. அவர்கள் எழந்து நடக்கமுடியாதவாராக இருந்தாலும் குறையில்லை. முடிந்தவரை அவர்கள் புரிந்துகொள்ளும்படி, உடல் தளர்த்துதல் பயிற்சி குறித்து விளக்கமாக சொல்லி புரியவைக்க வேண்டும். அதாவது பயிற்சி எப்படி செய்வது என்றல்ல, இந்த பயிற்சியின் நோக்கம் என்ன? எதற்காக செய்கிறோம்? என்ற விளக்கத்தை மட்டும் புரியவைத்தால் போதுமானது. நீங்கள் இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து பழக்கம் இருந்தால், அதன் ஆரம்பம் முதல் கடைசி வரை நீங்களே சொல்லி பயிற்சியை நடத்தலாம். அவர்கள் அதை கேட்டுக்கொண்டே, உடலை தளர்த்திக்கொள்ள முடியும். ஒருவேளை உங்களால் நடத்தமுடியவில்லை என்றால், இணையத்தில் கிடைக்கும் ஒலிப்பதிவை பயன்படுத்தலாம். நல்ல ஒலிபெருக்கி (Speaker) கொண்டு அவர்களுக்கு நன்கு கேட்கும் ஒலி அளவில் வைத்து, கேட்டு கவனித்து செய்துவாருங்கள் என்று வழிப்படுத்தலாம்.

முக்கியமாக பயிற்சி எதற்காக என்பதை நீங்கள் சொல்லுவதில்தான் விஷயம் உள்ளது. அப்படி அவர்கள் சிறப்பாக புரிந்துகொண்டார்களா என்பதையும் நீங்கள் அவர்களிடமே கேட்டு தெரிந்துகொள்ளவும் வேண்டும் அது முக்கியமாகும்.

முடிந்தால், நம் குருமகான் வேதாத்திரி மகரிஷி அவர்களின் உருவப்படம் அவர்களிடம் காட்டி, மனதில் பதியவைக்கலாம். வாழ்க வையகம், வாழ்க வளமுடன் என்ற வாழ்த்தையும் சொல்லவைக்கலாம். அருட்காப்பும் சொல்லித்தரலாம். இது இன்னும் அவர்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக இருக்கும் என்பது உறுதி. எனவே இதை முக்கியமாக வைத்துக்கொள்ளலாம்.

ஆரம்ப நாட்களில், கொஞ்சம் அவர்களுக்கு தடுமாற்றம் இருந்தாலும் கூட, தொடர்ந்து செய்துவரும்போது நல்ல மாற்றத்தை அவர்களே உணர்ந்து உங்களுக்கு அதை தெரியப்படுத்தலாம். அதன் வழியாக, எளியமுறை உடற்பயிற்சியின் அருமையும், உடல் தளர்த்துதலின் சிறப்பும் புரியவரும். மருந்து செய்யாத மாற்றத்தை, அவர்கள் உளப்பூர்வமாக உணரக்கூடும்.

வாழ்க வளமுடன்.