CJ for You: Around the body

Around the body

Showing posts with label Around the body. Show all posts
Showing posts with label Around the body. Show all posts

How Even if we see a Gnani or a Guru who has realized the truth, the mind becomes calm?


ஐயா,  உண்மை உணர்ந்த ஞானியை பார்த்தாலும், குருவை பார்த்தாலும் நமக்கு, ஏதோ பாரம் நீங்கியதுபோல தோன்றுவது எப்படி? மனம் அமைதியாகி விடுகிறது. ஏதேனும் சக்தி அவர்களிடம் இருந்து வெளிவருகிறதா? விளக்கம் தருக.


நல்லவேளையாக, அதை உணர்ந்திருக்கிறீர்கள் என்பது மகிழ்ச்சி. பெரும்பாலோருக்கு அப்படியான அனுபவம் கிடைப்பதில்லை. ஒரு இசை நன்றாக இருக்கிறதா? இனிமையானதா? அது மகிழ்ச்சியை ஊக்குவிக்கிறதா? என்பதை இசையை ரசிக்கும் பொழுதுதான் அறியமுடியும். என்னமோ சத்தம் கேட்கிறது, இரைச்சலாக இருக்கிறது, என்று கடந்து போகும் மனிதர், அந்த இசையின் இனிமையை அறிவாரா? இல்லைதானே? அதுபோல, ஞானியை, குருவை பார்க்கும் பொழுது அத்தகைய மன நிலைக்கு, பார்ப்பவரும் வரவேண்டும். பரபரப்பாக, சுடுதண்ணீரை காலில் ஊற்றியதுபோல என்று சொல்லுவார்களே, அப்படி இருந்தால் எப்படி இந்த மாற்றத்தை அறியமுடியும்?

உண்மை உணர்ந்த ஞானி, உயர்ந்த குரு இவர்களின் மனம், மிக மிக அமைதியாக இருக்கும். இறைநிலையோடு ஒன்றிவிட்ட தன்மையிலும், பேரானந்த நிலையிலும் இருக்கும். அதனால் அவர்களைச்சுற்றி ஒரு நல்ல சக்தி ஓட்டம் இருக்கும் என்பது உண்மை. வேதாத்திரியத்தில் இருப்பவர்கள் இதை ‘ஜீவகாந்தம்’ என்று எளிதாக அறிந்திட முடியும். இந்த ஆற்றல் செழுமையாக, வளம் குறையாததாக அவர்களிடம் இருக்கும். அது நமக்கு தேவையான அளவில் கிடைக்கும். நமக்கு ஊடுறுவி நிற்கும். நம்முடைய உடலுக்கும், மனதிற்கும் அத்தகைய ஆற்றல் தேவை. எனென்றால், பல வழிகளில் நாம் அந்த சக்தியை இழந்து விடுகிறோம் அல்லவா?

இப்படியான, முற்றுணர்ந்த ஞானி, உயர்ந்த குரு ஆகியோரிடம் இருக்கின்ற சக்தியாற்றலை, ஆரா என்று அழைக்கிறார்கள். புத்தர் பெருமகானுக்கு, கிட்டதட்ட ஒருமைல் தூரத்திற்கு, அந்த ஆரா பரவி இருந்தது என்று சொல்லுகிறார்கள். கெட்ட எண்ணங்களோடு அந்த, சக்தியாற்றல் வளையத்திற்குள் வரும் ஒருவன், உடனடியாக நல்லவனாக மாறிவிடுவான் என்றும் சொல்லுகிறார்கள். இது உண்மையும், நிகழக்கூடியதுமாகும்.

போலியான ஞானி, குருவைப்போல வேடம் தரித்த வேடதாரி, இவர்களை அடையாளம் கண்டு கொள்ளவும் பழகவேண்டும். தோற்றத்தை வைத்து, கையெடுத்து கும்பிடுவதும், காலில் விழுவதும் நல்லதில்லை. உங்கள் சக்தியை அவர் வாறி எடுத்துவிடவும் கூடும். இந்த ஆரா குறித்த மேலும் பல உண்மைகளை, இந்த காணொளி வழியாக அறியலாமே!

ஆரா என்பது என்ன? ஜீவகாந்தத்தோடு தொடர்புடையதா? What is Aura? Is it Related to Bio-Magnetism?

வாழ்க வளமுடன்.

How to concentrate on the Thuvathasanga when we practice the Thuriyatheetha Meditation?


துரியாதீத தவம் செய்யும் பொழுது சொல்லக்கூடிய, துவாதசாங்கம் எப்படி நினைவுக்கு கொண்டுவருவது என்று விளக்குவீர்களா?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா! துரியாதீத தவம் செய்யும் பொழுது சொல்லக்கூடிய, துவாதசாங்கம் எப்படி நினைவுக்கு கொண்டுவருவது என்று விளக்குவீர்களா?


பதில்: 

பெரும்பாலான யோக சாதனை நிலையங்களில், துரியாதீத தவம் கிடையாது. அதுகுறித்து அவர்களுக்குத் தெரியாது. அதை மிகச்சரியாக புரிந்துகொள்ளவும் வாய்ப்பில்லை. ஏனென்றால், துரியாதீத தவம் என்பது, குரு மகான் வேதாத்திரி மகரிஷி தானாக வடிவமைத்து, தன் அன்பர்களுக்கும், இந்த உலகுக்கும் தந்த ஒரு அற்புதமான தியானமும் தவமும் ஆகும்.

யோகத்தில், ராஜயோகமாக கருதப்படும் நிலையில், சகஸ்ரதாரா என்ற 1008 இதழ் தாமரைக்கு ஒப்பாக சொல்லும், துரியம் என்ற தவ நிலைதான் உயர்வானதாகும். துரியத்திற்கு மேலான தவம் இல்லை என்பதுதான் இங்கே இருக்கும் நிலை. ஆனால் வேதாத்திரியத்தில், கூடுதலாக ‘துரியாதீதம்’ உண்டு. அது ஏன்? எப்படி? எதற்காக? என்பதெல்லாம் இன்னொரு பதிவாக பார்க்கலாம். இப்பொழுது நீங்கள் கேட்ட, கேள்விக்கு வரலாம்.

துவாத சாங்கம் என்பது ஓர் ஆதாரமோ, மைய சக்கரமோ, நிலையோ அல்ல என்பது தான் உண்மை. ஆனால் அதை அனுமானமாக, உளப்பூர்வமாக, உணர்வாக நாம் அறியலாம். இது யோகத்தில் குறிப்பிடக்கூடிய ஒரு நிலைதான் என்பதும் உண்மை. இந்த துவாத சாங்கம் குறித்து அனேக யோக சாதனையாளர்களும் சொல்லியுள்ளனர். பொதுவாகவே, ஜடப்பொருளோ, உயிர்ப்பொருளோ எடுத்துக்கொண்டால், அவற்றைச்சுற்றிலும் ஒரு அலை இயக்கம் நிகழ்ந்துகொண்டே இருக்கும். இது நவீன விஞ்ஞானத்தாலும் நிரூபணம் செய்யப்பட்ட உண்மையாகும். அந்த அலை குறிப்பிட்ட வண்ணங்களில் கூட இருக்கிறது என்று, அகச்சிவப்பு கதிர் காமெரா, புற ஊதா கதிர் காமெரா இவற்றின் வழியாக, ஒளிப்படமாக எடுத்திருக்கிறார்கள் என்பதையும் நாம் அறிவோம்.

அப்படியான அலை இயக்கம், மனிதனுக்கும் இருக்கும்தானே? ஆம். அவனுக்குள்ளாக இயங்கும் ஆற்றலானது. அவனைச் சுற்றிலும், உடலுக்கு வெளியில், குறிப்பாக ‘ஒருஅடி தூரத்தில்’ வீசிக்கொண்டே இருக்கிறது. இந்த அலை இயக்கம் சிலவேளைகளில் சுருங்கவும் செய்யலாம், கூடுதலாக விரியவும் செய்யலாம். அதற்கான காரணங்கள் பல இருக்கின்றன. இப்போது அது நமக்கு தேவையில்லை. இந்த ஒருஅடி தூர அளவிற்கு (12 அங்குலம் / 12Inch) அளவினால அலை இயக்கத்திற்கு, ஓரு புள்ளியை ‘மானசீகமாக’ அமைக்கிறோம். அதுதான் தலைக்குமேலே, உச்சியில் இருந்து மேல்நோக்கிய நிலையில் இருக்கும் ‘துவாத சாங்கம்’ என்ற நிலையாகும். நீங்கள் தவம் செய்யும் பொழுது, உங்கள் மனதாலேயே அந்த இடத்தை நினைவுப்படுத்திக் கொள்ளலாம். மிகச்சரியாக இடத்தை தீர்மானிப்பதும், அங்கே கவனத்தை நிலைப்படுத்துவதும், மனதை ஒன்றினைப்பதும் கடினமே. எனினும் தொடர்ந்து தவம் செய்யச்செய்ய அது உங்களுக்கு கைகூடும் என்பது உறுதி.

        முக்கியமாக, இதை ஆரா (Aura) என்று அர்த்தப்படுத்திக்கொள்ளக் கூடாது. ஆரா என்பது வேறுமாதிரியான தன்மை கொண்டதாகும்.

வாழ்க வளமுடன்.

-