CJ for You: dhyan

dhyan

Showing posts with label dhyan. Show all posts
Showing posts with label dhyan. Show all posts

What is Divinity Penance? For what is this penance performed? Who is it? When? How to do it? Can you explain?


வாழ்க வளமுடன் ஐயா, இறைநிலை தவம் என்பது என்ன? எதற்கான இத்தவம் செய்யப்படுகிறது? அதை யார்? எப்போது? எப்படி செய்யலாம்? விளக்கமுடியுமா?


இத்தனை கேள்விகளை ஒன்றாக அடுக்கி இருப்பதை பார்த்தால், நீங்கள் வேதாத்திரியத்தின் வெளியே இருந்து கேள்வி கேட்பதாக தெரிகிறது. உங்களுக்கு பதில் தருவதின் வழியாக, சில வேதாத்திரிய அன்பர்களுக்குமே உதவக்கூடும் என்றும் நினைக்கிறேன். வாழ்க வளமுடன்.

இறைநிலை தவம் என்பது, வேதாத்திரியத்தில் மட்டுமே வழங்கப்படும் தவமாகும். அதுவும் நேரடியாக, வேதாத்திரி மகரிஷி அவர்களே வழிநடத்துவதாக அமைந்திருக்கும். வேதாத்திரியத்தின் முழுமையையும், மெய்ப்பொருள் உண்மையையும் உண்டாகித்தரும் தவமாக உள்ளது. வேதாத்திய பாடங்கள், அகத்தாய்வு பயிற்சிகளான எல்லாம் பூர்த்தி செய்து, பிரம்மஞானம் அறிந்து, மற்றவர்களுக்கு அவ்வுண்மையை விளக்கித்தரும் அளவில், அறிந்துகொள்ள உதவும் தவமே ‘இறைநிலை தவமாகும்’. அப்படியான பயிற்சியின் முடிவில், இத்தவம் கற்றுக்கொண்டாலே, ஆசிரியராகிவிட முடியுமா? என்றால் அதுதான் இல்லை.

இறைநிலை தவம், தொடர்ந்து செய்து, அதை நாம் அனுபவமாக்கிக் கொள்ளவேண்டியது அவசியம். மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் சொல்லுவது போல, ‘மனதின் அடித்தலமே நிலைபொருள், அது தெய்வம்’ என்ற வகையில், ஒருமுனையில் நாமும், மறு முனையில் மெய்ப்பொருளும், இணைந்திருக்கும் நிலையை உணர்ந்து, அந்நிலையிலேயே இருத்தல்’ என்பதை அனுபவமாக பெற வேண்டும். இதற்கு எவ்வளவு காலம் ஆகும்? அது அவரவருடைய, பயிற்சி, முயற்சி, ஆராய்ச்சி, அனுபவம், கர்ம வினை, அகத்தாய்வு ஆகியன துணையாக இருந்து உதவும். எனவே நாம் அக்காலத்தை கணிக்க முடியாது.

இந்த இறைநிலை தவம், முழுமையாக நம்மை, வேறொரு தளத்திற்கு கொண்டு செல்லும் அல்லது உயர்வைத்தந்து முழுமையை தரும் என்பது உண்மை. இது பொதுவெளியில் இல்லை. மற்ற எந்த யோக சேவை மையங்களிலும் இல்லை. இதற்கு முன்பும் எந்த ஒரு வகையில், இத்தவம் இருந்ததும் இல்லை என்பதே உண்மையாகும். முழுமையாக, தானாக, தான் உணர்ந்த உண்மையை, அன்பர்களுக்காக, அவர்களின் உயர்வுக்காக, வேதாத்திரி மகரிஷியே இத்தவத்தை வடிவமைத்து, நேரடியாக நடத்தியும் தந்தார். அதுவே இன்றும் தொடர்கிறது.

        சித்தர்களும், ஞானிகளும், மகான்களும், மெய்யியளாலர்களும் கண்ட மெய்ப்பொருள் உண்மையை, தவத்தின் வழியாக, உங்களுக்குள் உணர்த்தித்தருவதே ‘இறைநிலை தவத்தின் தத்துவமாகும்’. இதை நீங்களும் நானும் வார்த்தையால் விளக்கிக் கொள்ள முடியாது.

இந்த இறைநிலை தவத்தை எப்படிச் செய்யலாம்? அதை வேதாத்திரிய பாடத்திட்டத்தின் வழியாக உங்களுக்குச் சொல்லித்தருவார்கள். அதை நான் இங்கே விளக்கினால், நீண்டு எழுதிக்கொண்டே செல்லவேண்டும். பதிவு இப்போதைக்கு முடியாது. எனவே, நேரடியாக, வேதாத்திரியத்தில் இணைந்து கற்றுக்கொண்டு, இறைநிலை தவத்தை செய்யலாம். அதுதான் உங்களுக்கான உண்மை விளக்கத்தை தரும். 

இந்த இறைநிலை தவம் செய்வதற்கு, எந்த நேரமும் தனியான அமைக்கப்படவில்லை. பிரம்ம முஹூர்த்தம் என்ற அதிகாலை 3:30 என்றெல்லாம் கடின அவசியமில்லை. அதிகாலை, பகல், மாலை, இரவு என்ற வித்தியாசமும் பார்க்க வேண்டியதில்லை. அதுதான் இந்த இறைநிலை தவத்தின் சிறப்பும் ஆகும்.

முக்கியமாக ஒன்றை, இங்கே சொல்லுகிறேன். இந்த இறைநிலை தவத்தின் வழியாக, நம்முடைய உடலில், எந்த ஒரு ஆதார சக்கர மையங்களும் தூண்டப்படுவதில்லை. அதனால் ஏற்படக்கூடிய கடினமோ, சிக்கலோ, பயமோ அவசியமும் இல்லை. நம்முடைய மனமே இதில், இத்தவத்தில் முக்கிய பங்காற்றுகிறது. நம்முடைய மனமே அந்த அனுபவத்தையும் பெறுகிறது, உயர்கிறது.

இறைநிலை தவம், வேதாத்திரியத்தின் முழுமை மட்டுமல்ல. ஒவ்வொரு மனிதனுன் முழுமையான உண்மையையும், உயர்வையும் தரும் தவமும் ஆகும்.

வாழ்க வளமுடன்.

-


How is the Vethathiri Maharishi's Realization by His Words


வேதாத்திரி மகரிஷி தெய்வீக தன்மையை உணர்வாக பெற்று, அதன் நிறைபேற்று உணர்வை எப்படி சொல்லுகிறார் என்று விளக்குவீர்களா?

வேதாத்திரி மகரிஷியின், வேதாத்திரியத்தில் நான் இணைந்து, மாஸ்டர் கோர்ஸ் எனும் ஆசிரியர் பட்டயம் பெற்றதும், நேரடியாக மகரிஷிடம் தான் என்பதில் எனக்கு பெருமிதம் உண்டு. அந்த ஆசிரியர் பயிற்சியிலும், மற்றொரு நிகழ்விலும், நான் வரைந்த ‘வேதாத்திரி மகரிஷியின் ஓவியத்தை’ காட்டி இரண்டு முறை பேசி இருக்கிறேன் என்பதும், என் வாழ்வில் முக்கிய நிகழ்வுகள். ஆனால், ஆழியாறிலேயே தங்கி, அவர் அருகிலே இருந்து, அவரோடு அன்றாட நிகழ்வுகளில் கலந்து பேசி, கருத்துக்களை வாங்கி பகிர்ந்து கொண்ட, மூத்த பேராசியர்களின் மீது கொஞ்சம் பொறாமை கூட உண்டுதான்.

ஆனால், அந்த நாட்களில் என்வயது இருபதுதான் (20 Years) என்பதால், அன்றைய என் அனுபவத்தில் இருந்து, நான் என்ன கேட்டிருக்க முடியும்? என்ன பேசி இருக்கமுடியும்? என்றாலும், பஞ்சபூத தத்துவத்தையும், பரிணாமத்தையும், தன்மாற்றத்தையும், சுத்தவெளியின் தன்மை எப்படி கலந்திருக்கிறது என்ற உண்மையையும், நான் அந்த வகுப்பிலேயே குறிப்பெடுத்து, அதுகுறித்து சிந்தித்ததும் நினைவில் இருக்கிறது. அந்த அளவுக்கு நான் ஆர்வமாக, பாண்டிச்சேரி மூத்த பேராசிரியர் கே.ஜி. சாமி அவர்களின் அகத்தாய்வு பாடங்கள்தான்.

ஆனாலும், நான் மனவளக்கலை மன்றத்தின் தொடர்பிலிருந்து 1993க்குப் பிறகு விலகி இருக்கும்படி, சூழ்நிலைகள் அமைந்தன. அதன்பிறகு தனியனாகவே நான் என்னை, வேதாத்திரியத்தில் உயர்த்திக் கொண்டேன். வேதாத்திரி மகரிஷியின் நூல்களான, மனவளக்கலை, ஞானமும் வாழ்வும், காந்த தத்துவம் ஆகிய நூல்களும் பிற நூல்களும் கைவசம் இருந்தது. குறிப்பாக ஞானமும் வாழ்வும் நூல் எனக்கு உறுதுணையாக இருந்தது. தினமும் உடற்பயிற்சி, காயகல்ப பயிற்சி, தவம், ஆராய்ச்சி, அது குறித்தே சிந்தனை என்று இருந்தாலும் கூட, வெட்டவெளி என்ற தத்துவமும், பிரம்மஞானமும் பிடிபட, தீட்சை எடுத்ததில் இருந்து முப்பது ஆண்டுகள் (From 1988 to 2018 / 30 Years) தேவைப்பட்டன. அன்றுமுதல், எனக்குள் உணர்ந்ததை, உலகுக்கு பகிர்ந்தளிக்கிறேன். இன்றும் தொடர்கின்றேன்.

இதென்னாய்யா, மகரிஷியின் தெய்வீக தன்மையை கேட்டால், உன்னைப்பற்றி சொல்லிக்கொண்டிருக்கிறாயே? என்று உள்ளுக்குள் நினைக்கிறீர்களா? அதற்கு காரணம் இருக்கிறது. வேதாத்திரி மகரிஷியை புரிந்து கொள்ள வேண்டுமென்றால், நாமும் ஓரளவில், இறையுணர்வு தத்துவத்தை உணர்ந்து கொள்ளவேண்டியது அவசியம். இல்லையேல், ஒரு சாதாரண மனிதரைப்பற்றி சொல்லுவதுபோல, பெருமை மிகு வார்த்தை அலங்காரம் மட்டுமே தொக்கி நிற்கும்.  வேதாத்திரி மகரிஷி குறிப்பிட்டுச் சொல்லுவது போலவே, என்னை தகுதியாக்கிக் கொண்டு, பிறகுதான் அவரைப்பற்றி சொல்லுகிறேன் என்பதில் எனக்கு பெரும் திருப்தி. ஆனால், அதில் உங்களுக்கு சந்தேகம் இருக்கலாம். அதுபற்றி எனக்கு கவலையில்லை. என்னளவில், எது உண்மையோ அதைத்தான் சொல்லுகிறேன்.

‘நிறை உணர்வு’ எனும் தலைப்பிலான கவிதை (ஞானக்களஞ்சியம் பாடல் எண்: 709) வேதாத்திரி மகரிஷியின் முழுமையுணர்வை சொல்லுகிறது. இந்த கவியை 28/05/1986 ல் எழுதியிருக்கிறார் என்பதும் சிறப்பு. ‘உண்மை உணர்ந்தவர்கள் பல்லாயிரம் பேர் இருப்பார்கள். அவர்கள் வெளியில் தங்களை காட்டிக்கொள்வதில்லை’ என்று வேதாத்திரி மகரிஷியே குறிப்பிட்டிருக்கிறார். அந்த நாட்களில் அவரும் அப்படித்தான் இருந்திருப்பார். மற்றவர்களின் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆட்கொள்ளப்பட்டிருப்பார் என்பதும் உறுதி. உதாரணமாக, நான் இறையுணர்வு பெற்றுவிட்டேன் என்று சொன்னால், நீங்களும் என்னை கிண்டலடிப்பீர்கள். ‘அப்படியா? நம்பிட்டோம்யா’ என்று சொல்லிவிட்டு ஓடி ஒதுங்குவீர்கள். ஆனாலும், திருவள்ளுவர் தன் குறளில்,

தக்கார் தகவிலர் என்பது அவரவர்

எச்சத்தாற் காணப்ப படும்.

என்று சொல்லுவது போல, என் செயலும், சேவையும், எழுத்தும், பதிவும், பகிர்வும் நின்று, அந்த உண்மையை சொல்லும் தானே?! உங்களுக்குமே கூட அப்படித்தான் என்பதையும் மறவாதீர்கள்.

வேதாத்திரி மகரிஷியும், தன் சொந்த ஊரான கூடுவாஞ்சேரியில், அப்படியான எள்ளலைத்தான் பெற்றார். எனினும், உண்மை உணர்ந்தோர் நிலை கொள்வதில்லை. அவர்களுக்குள் இருக்கும், இறையாற்றல், ‘இதை மற்றவர்களுக்கும் விளக்கி, நெறிப்படுத்துக’ என்று தூண்டிக்கொண்டே இருக்கும். மகான் மாணிக்கவாசர் கூட, தான் உண்மை அறிந்த பிறகு, ‘உடலே பாரமாக, உன்னோடு சேரமுடியாமல் தடுக்கிறதே’ என்று சொல்லுகிறார். என்றாலும் இறையுண்மையை, அதன் தன்மையை அழகாக ‘திருவாசகம்’ நூலில் தந்திருக்கிறார். இத்தகைய நிலையை, வேதாத்திரி மகரிஷியும் தன் கவியில் சொல்லுகிறார்.

இறையாற்றலே, தன் அன்பும் கருணையுமான அருளாற்றலால், வாழ்வின் ஓவ்வொரு நொடியிலும், உள்ளிருந்து உணர்த்தியதின் வழியாக, உருவெடுத்த காரணமும், காரியமும், முடிவும் தன்னுடைய, எழுபத்தைந்து வயதில் உணர்ந்துவிட்டதாக சொல்லுகிறார்.  கர்ம வினைப்பதிவுகளை திருத்தி, தூய்மை செய்துகொண்டேன் என்று தெளிவுபடுத்துகிறார். அதனால் மிச்சம் ஏதுமில்லை, கருத்தொடராக பின்பிறவி இல்லை இனி இல்லை என்று உறுதி செய்கிறார். கர்மவினை மிச்சமில்லை என்பது போலவே, கர்ம வினையை இனி உருவாக்கிடும் இச்சையும் இல்லை. அது எப்பொருளிலும் எதிலுமே இல்லை என்று திடமாக சொல்லுகிறார். தான் நிறைவில் இருப்பதாக தனக்குள் உணர்ந்த நிலையில். அருள் நிறைந்த பெரும்ஜோதி, தன்னை அரவணைத்துக் கொள்ளும், அந்தப்பரும் நன்னாளை எதிர்பார்த்து உள்ளேன் என்கிறார். இப்படியாக, தன் நிறை உணர்வினை கவிதை வழியாக பதிவு செய்கிறார்.

இது ஒன்றோடு ஒன்று கலப்பது. எது என்றும், எங்கும், எப்போதும், எல்லாமுமாக இருக்கிறதோ, அதனோடு தானும் ஒன்றாவது என்பதை உணர்ந்து சொல்லுகிறார். இது இறப்பு இல்லை, சொல்லப்போனால் எதுவுமே இறப்பு இல்லை. அது ஒரு தன்மாற்றம். பொருள் என்ற நிலையிலிருந்து, மெய்பொய்ப்பொருள் நிலை நோக்கி நகர்வது ஆகும். ஆனால், மனிதனோ, மெய்ப்பொருளின் ஓர் பகுதி என்பதை, உணர்வதே மனிதனின் பிறவி நோக்கமும், கடமையும் ஆகும். அதையே வேதாத்திரி மகரிஷின் வேதாத்திரியம் நமக்கு தருகிறது.

வாழ்க வளமுடன்.

-  


How to understand the realization, what got it from the yoga and meditation?


யோகத்தில் தியானம் செய்து, அடைகின்ற தன்னிலை விளக்கத்தில் கிடைக்கும் அனுபவத்தை எப்படியாக புரிந்து கொள்ளலாம்?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, யோகத்தில் தியானம் செய்து, அடைகின்ற தன்னிலை விளக்கத்தில் கிடைக்கும் அனுபவத்தை எப்படியாக புரிந்து கொள்ளலாம்?


பதில்:

உலகில் பிறந்து வாழும் ஒரு மனிதனுடைய நோக்கமும், பிறவிக் கடமையும், இந்த தன்னை அறிதல்தான். அதுவன்றி இந்த மனிதப்பிறப்பு முழுமை அடைவதில்லை. அதற்கு யோகமே சிறந்த வழியாகும். யோகத்தில் இணைவது மட்டுமல்லாமல், தியானமும், அதில் ஆர்வம், முயற்சி, ஈடுபாடு, பயிற்சி, ஆராய்ச்சி, தெளிவு என்றவகையில் செயல்பட்டு முடிவாக தன்னிலை விளக்கம் பெறலாம். 

இந்த தன்னிலை விளக்கத்தில், நமக்கு கிடைப்பதென்ன? அறியலாமா? இப்போது, நான் யார்? பொருளா? சக்தியா? உடலா? அறிவா? உயிரா?  என்று கேட்டுக்கொண்டால், இவை ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்க முடியுமா? என ஆழ்ந்து சிந்தித்தால் இவற்றில் எதுவும் தனித்து இல்லை. 

எல்லாம் சேர்ந்த ஒரு இயக்கச் சிறப்பே "நான்" என அறிவோம். உடல் வரையில் எல்லை கட்டி அது வரையில் "நான்" என்று எண்ணியிருந்த காலமும் உண்டு. அன்றுவரை அறிவு அறிந்திருந்த பக்குவ நிலை அது.

உருவத்தை ஆராயுங்கால் அது அணுக்களின் கூட்டமாகத் தோன்றுகிறது. அறிவை நோக்கி ஆராயுங்கால் அது உடலியக்க சக்தியின் ஒரு பிரிவு இயக்கம் என விளங்குகின்றது. 

சக்தி என்பது என்ன என ஆராயுங்கால் அது எங்கும் நிறைந்த ஒரு அகண்டாகாரப் பெருவெளியின் எழுச்சி அணுவின் மூலம் இயக்க வேகமான நிலை எனத் தெளிவாகி விடுகின்றது. 

ஆகவே அகன்ற பெருவெளியாக, அணுவாக, இயக்கச் சக்தியாக, அறிவாக இருக்கும் பல்வேறு நிலைகளும் ஒன்றாகக் காட்டும் ஒரு பேரியக்கமே "நான்" எனப்படுவது. ஒளி அல்லது ஒலி எழுச்சி பெறும் பொருட்களின் நிலை, இயக்கம் இவைகளுக்கேற்ப பல பேத அளவாக இருந்த போதிலும் ஒளி, ஒலி என்ற தத்துவத்தில் வேறுபட்டவை அல்ல. அதுபோலவே எல்லா சீவன்களிலும் உள்ள அறிவு பலபேத நிலைகளில் இயங்கிய போதிலும் அறிவு என்ற தத்துவத்தில் ஒன்றே. 

ஆகவே "நான்" பரவெளி என்ற நிலையில் எங்கும் நிறைந்த பூரணமாகவும், சக்தி என்ற நிலையில் அணுக்களின் கூட்டுப் பக்குவ பரிணாம சந்தர்ப்பச் சந்திப்புகளுக்கேற்ப பலவித இயக்க வேறுபாடுகளாகவும், அறிவு என்ற நிலையில் அந்தந்த ஜீவராசிகளின் புலன் அமைப்பு, தேவை, பழக்கம், சூழ்நிலை, அனுபவம் இவைகளுக்குப் பல பேதப்பட்ட நிலைகளாகவும் உருவம் என்ற நிலையில் அணுக்களின் கூடுதலுக்கேற்ப பலவித அமைப்புகளாகவும் இருக்கிறேன் எனக் கொள்ளுதல் சரியான முடிவாகும்.

எனவே நான் வேறு, பிரபஞ்சம் வேறு அல்ல. நான் வேறு, இயற்கை வேறு அல்ல. நான் என்பதை எதிலிருந்தும் பிரித்து எடுக்கவோ, பிரித்துப் பேசவோ முடியாது. ஒன்றாகவும் பலவாகவும் எல்லாமாக ஏகத் தொடர் நிலையில் இருப்பதே "நான்" என்பதாகும். 

அரூப நிலையில் ஏகனாக, உருவ நிலையில் சிதறுண்டு தோன்றும் பலவாக, அரூபத்தில் உருவங்கள் அனைத்தும் அடக்கம் பெற்றும், உருவங்கள் அனைத்திலும் அரூப நிலை நிறைந்தும் ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்க முடியாத அகன்ற பேரியக்கமாகிய தத்துவமே "நான்" என்பதாகும்.

தன்னை யறிந்தால் கடவுளை அறியலாம் என்ற தலைப்பிலான, ஞானக்களஞ்சிய கவிதை வழியாக, விளக்கும் உண்மையையும் அறிவோம்.

'உன்னையோ கடவுளையோ அறிய வென்றால், 

   ஒருகுறுக்கு வழியுண்டு; உள்ளுணர்ந்து 

தன்னையறிந் தந்நிலையில் நிலைத்து வாழும் 

   தனிக்கருணை வடிவான குரு வடைந்தால், 

அன்னை வயிற்றடைந்து உருவாய் உடலாய் வந்த 

   ஆதி கருவைப் புருவத்திடை உணர்த்தப் 

பின்னை நீ அவ்விடத்தில் நிலைக்க, உந்தன் 

   பேதமற்ற நிலை, கடவுளாகி நிற்கும்.'

(ஞானக்களஞ்சியம் கவி: 1460)


வாழ்க வளமுடன்.

-

பதிலின் மூலம்: வேதாத்திரி மகரிஷி அவர்கள்

-

If you are a child, you can always be happy? Is that correct?


குழந்தைகளாக இருந்தால் எப்போதும் சந்தோஷமாக இருக்கலாம் என்ற கருத்து எல்லோரிடமும் நிலவுகிறதே? அது சரியானதுதானா?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா! குழந்தைகளாக இருந்தால் எப்போதும் சந்தோஷமாக இருக்கலாம் என்ற கருத்து எல்லோரிடமும் நிலவுகிறதே? அது சரியானதுதானா?


பதில்: 

பொதுவாக அப்படிச் சொல்லிக்கொள்வது உலகவழக்கமே ஆகும். உங்களை நீங்களே கேட்டுப்பாருங்கள். நீங்கள் குழந்தையாக இருந்த பொழுது சந்தோஷமாக இருந்தீர்களா? அப்படியாக உணர்ந்தீர்களா? என்று  கேட்டுக்கொள்ளுங்கள். என்ன பதில் சொல்லுவீர்கள்? அந்த வயதில் அப்படியாக எதும் தோன்றாது. ஆனால், எல்லாவற்றிலும் ஓர் இன்ப நுகர்வு மட்டுமே தலைதூக்கி இருக்கும். அதுவே உங்களுக்கென்று விபரம் வரும்வரையிலும் தொடர்ந்திருக்கும். பெற்றோரின் நிலை அறியாமல், அது எனக்கு வேண்டும். அப்போதான் நான் நன்றாக இருப்பேன் என்று கருத்தில் அடம்பிடித்த காலம் இருந்திருக்கும்.  பெற்றோரும், தன் பிள்ளையின் மகிழ்ச்சிக்காக, தாங்கள் வருந்தினாலும் கூட, பிள்ளை நன்றாக, சந்தோஷமாக இருக்கட்டும் என்று நினைத்திருப்பார்கள்.

குழந்தைத்தனத்தில் இருந்த ஒரு உணர்வு, சந்தோஷமாக ‘இப்பொழுது’ உங்களுக்குத் தெரிகிறது என்பதுதான் உண்மை. வளர்ந்த வயதிலும், உலகில், உங்கள் வாழ்க்கை சூழலில், தொழிலில், வேலைகளில், வியாபாரங்களில் பலவிதமான தொல்லைகளை பெற்று, கவலைகொண்டு, துன்பப்பட்டு வருந்தும் இந்த வேளையில்தான், அந்தக்கால குழந்தை சந்தோஷம் ஞாபகம் வருகிறது அல்லவா? அதுதான் உண்மை. 

ஒரு பரிசோதனை செய்யுங்கள். உங்கள் குழந்தையிடம், நன்கு பேசத்தெரிந்த  3 வயது முதல் 12 வயதுக்குள்ளான குழந்தைகளிடம் (சிறுவர், சிறுமியர்) கேளுங்கள்.

‘இப்போது நீ சந்தோசமாக இருக்கிறாயா?’

‘அப்படின்னு யார் சொன்னா?’ என்று எதிர்கேள்வி கேட்பார்கள். அதற்குப்பிற்கு என்ன சொல்லுவார்கள் என்பதை உங்கள் வசமே விட்டுவிடுகிறேன். இப்போதைய, எல்லா குழந்தைகளும் கையில், கைபேசியோடு திரியும் இந்தக்காலத்தில், அவர்களும் பெரியமனிதர்கள் ஆகிவிட்டார்கள் அல்லவா?

அப்படியானால், அக்குழந்தைகளுக்கு சந்தோஷம் இல்லையா? இருக்கிறது, ஆனால் அதை உணரக்கூடிய நிலையில் அவர்கள் இல்லை. சரி, வளர்ந்து பெரியவர்களான நமக்கு சந்தோஷம் இருக்கிறதா? என்று கேட்டால், இருக்கிறது. ஆனால் நாம் அதை தவறவிட்டுக்கொண்டே இருக்கிறோம். உண்மையாகவா என்கிறீர்களா? ஆம், சந்தோஷம் எங்குமே போய்விடவில்லை. நாம்தான் அதை விட்டு விலகிக்கொண்டே இருக்கிறோம். குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள், மகிழ்ச்சியும், மன நிறைவும், அமைதியும் எங்குமே நிறைந்திருக்கிறது என்று சொல்லுகிறார்.

ஆனால், உணர்ச்சிவசப்பட்ட மனதோடு, அன்றாட வாழ்க்கைச்சூழலில் அந்த மகிழ்ச்சியும், மன நிறைவும், அமைதியும் பெறக்கூடிய நிலையில், நாம் இல்லை. பரபரப்பான நிலையில் ஓவ்வொரு நொடியையும் கடந்துவிடுகிறோம்.

இதை எப்படி சரிசெய்யலாம்? இதற்கு துரியதவம் போதுமானது. நாள்தோறும் தவறாமல், அதிகாலையில் துரியதவம் இயற்றி அன்றைய நாளை துவக்குங்கள். மனமும் எண்ணங்களும் பூரிப்பான அந்த நிலையை, உங்களுக்குள் தக்கவைத்துக்கொள்ளுங்கள். சந்தோஷத்தை தேடவேண்டாம், அது அங்கேயே இருப்பதை உணரலாம். குழந்தைப் பருவத்திற்கு போகமுடியாததற்கு வருந்தப்படவும் தேவையில்லை.

‘இந்தக்காலத்திலே அப்படி இருந்திடவும் முடியாதுங்க, ஏன்னா, பொழைப்பு கெட்டுறும்ங்க’ என்கிறீர்களா? சரி அது உங்கள் நிலைதானே, தொடர்க!

வாழ்க வளமுடன்.

-

Any of yoga chakra bottom of the Moolathara? Can we meditate there? What kind of benefits on that?


மூலாதாரத்திற்கு கீழே ஆதார சக்கரங்கள் உண்டா? நாம் அங்கே தியானம் செய்யமுடியுமா? செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும்?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா! மூலாதாரத்திற்கு கீழே ஆதார சக்கரங்கள் உண்டா? நாம் அங்கே தியானம் செய்யமுடியுமா? செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும்?


பதில்: 

இந்த பிரபஞ்சத்தில் உள்ள எல்லா பொருட்களுக்கும், தன்னளவில் ஒரு மையம் உண்டு. அது எந்த வடிவத்தில் இருந்தாலும், எந்த அளவிலே இருந்தாலும், எந்த உருவத்தில் இருந்தாலும் கூட அதன் மையமாக ஒரு நிலை நிச்சயமாக உண்டு. அதுபோலவே எந்த ஜீவன்கள் எடுத்துக் கொண்டாலும், அதன் உடலின் நீளம் அகலம் அளவை எடுத்துக்கொண்டு வகுத்தால், அதன் மையத்திலும் ஓர் புள்ளியான நிலை உண்டு. மனிதனுக்கும் அவ்வாறே உண்டு. அதுவே மூலாதாரம் என்று வழங்குகிறோம். இந்த விளக்கங்களின்படி, மூலாதாரத்திற்கு கீழே என்று சொல்லுவதற்கு இடமில்லை. நாம் நிமிர்ந்து நடப்பதால், மூலாதாரத்திற்கு கீழே என்று உங்களுக்கு சந்தேகம் எழுகிறதா? மேலே கீழே என்பதெல்லாம், நம்முடைய விளக்கத்திற்க்காத்தானே தவிர அப்படி எதும் இல்லை என்று சொல்லமுடியும். மேலும் பூவி ஈர்ப்பு ஒன்று இருப்பதால்தான் கீழே என்பது மேலே என்பதும் தோன்றுகிறது. வான் வெளியில், பிரபஞ்சத்தில் மிதக்கும், நாம் வாழும் பூமிக்கே மேலே கீழே என்று எப்படி, எதைச் சொல்லுவது? அதுப்போலவே மனிதனைத் தவிர்த்து, உணர்வன என்ற வகுப்பில் உள்ள, பாம்பு, பல்லி, முதலை, ஆமை இவற்றிற்கெல்லாம் என்ன சொல்லுவது?

மூலம் + ஆதாரம் என்பதுதான் மூலாதாரம் ஆகிறது. எப்பொருளுக்கும் ஓர் மையப்புள்ளி என்ற நிலைபாடு சரியானதுதான். எனவே மூலாதாரத்திற்கு கீழே என்ற சக்கரங்களும், ஆதாரமையங்களும் இல்லை என்பதே சரியானது.

உங்கள் கேள்வியில் உள்ளடக்கமாக இருக்கும், ஓர் சந்தேகத்திற்கும் பதில் சொல்லியாகவேண்டும். தெய்வீக திருவிளையாடல் என்று வேதாத்திரி மகரிஷி அவர்கள் விளக்குகின்ற, உயிரின பரிணாமத்தில் இயல்பூக்கத்தின் வழியாகவே, தன்னை மேம்படுத்தி முழுமையான நிலைதான் மனிதன் ஆகும். மனிதன் என்ற நிலையில், அந்த தெய்வீகம் தன்னையே அறிந்து முழுமையும் செய்து கொண்டது. அப்படி இருக்கும்பொழுது, மூலாதரத்திற்கும் மேலே என்று சொல்லுவது தவறு, மூலாதாரத்திற்கு உயர்வான நிலை, ஆதார சக்கரங்களில் தான் நமக்கு, வேலை இருக்கிறதே தவிர கீழே இல்லை. நீங்கள் உங்களை ‘நான் யார்?’ என்ற தேடலின் வழியான உண்மையை அறிய, மூலாதார நிலை தாண்டிய உயர் நிலைகளை அடையவேண்டும்.

மூலாதாரத்திற்கு கீழே அதாவது, மூலாதாரத்திற்கு தாழ்வான நிலைகளில் நீங்கள், தனியாக ஒன்றும் செல்லவேண்டியதில்லை. அதுதான் வழக்கமாக நம் வாழ்நாளில் வந்து கொண்டே இருக்கிறதே? நம்மையும் பாடாய்படுத்துகிறதே? ‘என்னை மிருகமாக்கிறாதே’ என்று தானே நாம் மற்றவர்களிடம் சொல்லுகிறோம் / கத்துகிறோம். உண்மைதானே? இதற்கு வேதாத்திரி மகரிஷியே ஒரு விளக்கம் தருவார். பேசிக்கொண்டிருக்கும் இருவருக்கு, ஏதேனும் வாக்குவதம் முற்றி அடிதடியில் இறங்கினால், ஆயுதம் ஏதும் இல்லாத நிலையில், யாரோ ஒருவர் மற்றவரை கடிக்கச்செய்வார், நகத்தால் பிராண்டுவார், கைகளால் தாக்குவார். இதெல்லாம் யார் செய்தது? நாம் பார்க்கின்ற காட்டுவிலங்குகள் செய்யும் செயல்கள் அல்லவா? இது ஏன் மனிதனிடம் வந்தது?

மனிதன் பரிணாமத்தின் வழியே, விலங்குகளின் மூலத்தைக் கொண்டவன். மனிதாக வந்தும் கூட அவனின், கருமையத்தில், விலங்கினத்தின் தன்மைகள் உள்ளடக்கம் பெற்றிருக்கின்றன. அவன் அதிலிருந்து விலகி, மனம் இதனான மனிதனாக மாறிட, அவனின் உயிரின் இயக்க மையத்தை மாற்றி அமைத்து, உயர்த்திட வேண்டியது அவசியம். அதைத்தான் குண்டலினி தீட்சை என்று அழைக்கிறோம். மூலாதாரம், உயர்சக்தி மையம், மனதின் மூலமான காந்த மையம், வித்து சக்தியின் மையம் எல்லாமே கருமையம் என்ற ஒரே இடத்தில்தானே இயற்கையாக அமைகிறது. சராசரி மனிதன், நீங்கள் கேட்பது போல, கீழே தாழ்வான நிலையில் இருந்துதான் வாழ்கிறான். அவன் உயர்வடைய, சிறப்படைய, உண்மை உணர, தன்னையறிய, மூலாதாரத்தில் இருந்து உயர்வான நிலையைத்தான் தியானிக்க வேண்டும். அதில் எந்தவித மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை.

யோகத்திற்கு வராமல், குருவின் வழியாக தீட்சையும் எடுத்துக்கொள்ளாத மனிதன் இயல்பாகவே தன்னை மறந்து, விலங்கினத்தின் பண்புகளை வெளிப்படுத்தியே வாழ்வான், வாழ்ந்துகொண்டு இருப்பான். இப்போது உங்களுக்கு விளக்கம் கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன்.

வாழ்க வளமுடன்.

-

How to concentrate on the Thuvathasanga when we practice the Thuriyatheetha Meditation?


துரியாதீத தவம் செய்யும் பொழுது சொல்லக்கூடிய, துவாதசாங்கம் எப்படி நினைவுக்கு கொண்டுவருவது என்று விளக்குவீர்களா?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா! துரியாதீத தவம் செய்யும் பொழுது சொல்லக்கூடிய, துவாதசாங்கம் எப்படி நினைவுக்கு கொண்டுவருவது என்று விளக்குவீர்களா?


பதில்: 

பெரும்பாலான யோக சாதனை நிலையங்களில், துரியாதீத தவம் கிடையாது. அதுகுறித்து அவர்களுக்குத் தெரியாது. அதை மிகச்சரியாக புரிந்துகொள்ளவும் வாய்ப்பில்லை. ஏனென்றால், துரியாதீத தவம் என்பது, குரு மகான் வேதாத்திரி மகரிஷி தானாக வடிவமைத்து, தன் அன்பர்களுக்கும், இந்த உலகுக்கும் தந்த ஒரு அற்புதமான தியானமும் தவமும் ஆகும்.

யோகத்தில், ராஜயோகமாக கருதப்படும் நிலையில், சகஸ்ரதாரா என்ற 1008 இதழ் தாமரைக்கு ஒப்பாக சொல்லும், துரியம் என்ற தவ நிலைதான் உயர்வானதாகும். துரியத்திற்கு மேலான தவம் இல்லை என்பதுதான் இங்கே இருக்கும் நிலை. ஆனால் வேதாத்திரியத்தில், கூடுதலாக ‘துரியாதீதம்’ உண்டு. அது ஏன்? எப்படி? எதற்காக? என்பதெல்லாம் இன்னொரு பதிவாக பார்க்கலாம். இப்பொழுது நீங்கள் கேட்ட, கேள்விக்கு வரலாம்.

துவாத சாங்கம் என்பது ஓர் ஆதாரமோ, மைய சக்கரமோ, நிலையோ அல்ல என்பது தான் உண்மை. ஆனால் அதை அனுமானமாக, உளப்பூர்வமாக, உணர்வாக நாம் அறியலாம். இது யோகத்தில் குறிப்பிடக்கூடிய ஒரு நிலைதான் என்பதும் உண்மை. இந்த துவாத சாங்கம் குறித்து அனேக யோக சாதனையாளர்களும் சொல்லியுள்ளனர். பொதுவாகவே, ஜடப்பொருளோ, உயிர்ப்பொருளோ எடுத்துக்கொண்டால், அவற்றைச்சுற்றிலும் ஒரு அலை இயக்கம் நிகழ்ந்துகொண்டே இருக்கும். இது நவீன விஞ்ஞானத்தாலும் நிரூபணம் செய்யப்பட்ட உண்மையாகும். அந்த அலை குறிப்பிட்ட வண்ணங்களில் கூட இருக்கிறது என்று, அகச்சிவப்பு கதிர் காமெரா, புற ஊதா கதிர் காமெரா இவற்றின் வழியாக, ஒளிப்படமாக எடுத்திருக்கிறார்கள் என்பதையும் நாம் அறிவோம்.

அப்படியான அலை இயக்கம், மனிதனுக்கும் இருக்கும்தானே? ஆம். அவனுக்குள்ளாக இயங்கும் ஆற்றலானது. அவனைச் சுற்றிலும், உடலுக்கு வெளியில், குறிப்பாக ‘ஒருஅடி தூரத்தில்’ வீசிக்கொண்டே இருக்கிறது. இந்த அலை இயக்கம் சிலவேளைகளில் சுருங்கவும் செய்யலாம், கூடுதலாக விரியவும் செய்யலாம். அதற்கான காரணங்கள் பல இருக்கின்றன. இப்போது அது நமக்கு தேவையில்லை. இந்த ஒருஅடி தூர அளவிற்கு (12 அங்குலம் / 12Inch) அளவினால அலை இயக்கத்திற்கு, ஓரு புள்ளியை ‘மானசீகமாக’ அமைக்கிறோம். அதுதான் தலைக்குமேலே, உச்சியில் இருந்து மேல்நோக்கிய நிலையில் இருக்கும் ‘துவாத சாங்கம்’ என்ற நிலையாகும். நீங்கள் தவம் செய்யும் பொழுது, உங்கள் மனதாலேயே அந்த இடத்தை நினைவுப்படுத்திக் கொள்ளலாம். மிகச்சரியாக இடத்தை தீர்மானிப்பதும், அங்கே கவனத்தை நிலைப்படுத்துவதும், மனதை ஒன்றினைப்பதும் கடினமே. எனினும் தொடர்ந்து தவம் செய்யச்செய்ய அது உங்களுக்கு கைகூடும் என்பது உறுதி.

        முக்கியமாக, இதை ஆரா (Aura) என்று அர்த்தப்படுத்திக்கொள்ளக் கூடாது. ஆரா என்பது வேறுமாதிரியான தன்மை கொண்டதாகும்.

வாழ்க வளமுடன்.

-

How the meditation is helping to our mind in yoga?


தியானம் என்ற அகத்தவம் எப்படி நம்முடைய மனதுக்கு துணை செய்து உதவுகிறது என்பதை விளக்கமுடியுமா?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, தியானம் என்ற அகத்தவம் எப்படி நம்முடைய மனதுக்கு துணை செய்து உதவுகிறது என்பதை விளக்கமுடியுமா?


வேதாத்திரி மகரிஷி அவர்களின் பதில்:

மனம் உள் ஒடுங்கவும் பரந்து விரிந்து செல்லவும் உள்ள ஆற்றலைப் பெற்றது.  மனித மனம் பேராற்றல் பெற்ற ஒன்று.  மனதின் புலன் இயக்க வேகத்தை எல்லாம் கழித்துப் பரமாணு நிலைக்கு ஒன்றுபடுத்தும்போது இயற்கையின் இரகசியங்களைப் பேரியக்க மணடலத்தில் நிகழும் பல தரப்பட்ட இயக்க வேகங்களை அறிந்து உணர்கிறது. 

எல்லைக்கு உட்படாத மனம் ஒன்றில்தான் எல்லையற்ற சுத்தவெளியை  பரம்பொருளை பரவெளியை உணர முடியும்.  அந்த நிலையைப் பெறுவதற்கு உறுதுணையாகவும் வழிகாட்டியாகவும் உள்ளதே அகத்தவம் (Simplified Kundalini Yoga - SKY) எனும் குண்டலினி யோகமாகும். 

அகத்தவப் பயிற்சினால் தான் அலையும் மனதினை நிலைக்குக் கொண்டுவர இயலும்.   அலையும் மனதை ஓரிடத்தில் நிலைத்து நின்று நோக்க முறையான உளப்பயிற்சி (Systematic Psychic Practice) அவசியமாகிறது.  ஆன்மாவிற்கு மேல்நோக்கு வேகமூட்டும் தியானப்  பயிற்சியை குருவின் மூலம் தான் பெற வேண்டும்.  

அலையும் மனதை ஓரிடத்தில் நிலைத்து நின்று நோக்கவில்லையானால் ரங்க ராட்டினத்தில் சுற்றிக்கொண்டிருப்பவன் கண்களுக்குப் பக்கத்தில் உள்ளவர்கள் பக்கத்தில் உள்ள வீடுகள் ஆகியவை படாமல் தப்பிப் போவது போல இந்த பிரபஞ்சத்தில்  இந்த உலகில்  நடப்பில் உள்ள உண்மை நிலைமைகளை மனதால் உணர முடியாது. 

எனவே மனதினுடைய (Mind) இயக்க வேகத்தைக் குறைத்துக் குறைத்து இறுதியில் நிலைத்து நின்று நோக்கி அறிதல் வேண்டும்.  இந்த நோக்கத்தை அருளவல்ல ஒரு உன்னதமான உளப்பயிற்சியே குண்டலினியோகமாகும்". 

வாழ்க வளமுடன்.

-

Why need importance to Shanti Yoga Meditation?


சாந்தி தவத்திற்கு முக்கியத்துவம் தரவேண்டிய அவசியம் என்ன?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி: 

வாழ்க வளமுடன் ஐயா, சாந்தி தவத்திற்கு முக்கியத்துவம் தரவேண்டிய அவசியம் என்ன?


பதில்: 

வேதாத்திரியத்திற்கு நீங்கள் முற்றிலும் புதியவர் என்றால், இந்த கேள்வி இயல்பானது. ஆனால், நீங்கள் வேதாத்திரியத்தில் இணைந்து பயிற்சிகளில் பல மாதம், ஆண்டு அனுபவம் உள்ளவர் என்றால், சாந்திதவம் குறித்த புரிதல் உங்களுக்கு இல்லை என்பது நிச்சயமானது. அதுபோலவே நீங்கள், வேதாத்திரிய தவங்களை சரியாக செய்யவதும் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது என்பதும் உண்மையாகும்.

எந்த ஒரு யோக அமைப்பிலும் இல்லாத ஒரு சிறப்பு, மனவளக்கலையில் உண்டு. அந்த சிறப்பை தருவதற்கு நிறைய இருந்தாலும் கூட, மிக முக்கியமான ஒன்றுதான் இந்த சாந்தி யோகம். கூடுதலாக, இந்த சாந்தி யோகம் பரஞ்ஜோதி மகான் அவர்களால், வேதாத்திரி மகரிஷிக்கு கற்றுக்கொடுக்கப்பட்டு, பிறகு மனவளக்கலையிலும் இணைக்கப்பட்டது என்பது வரலாறு. எனவே நாம் பரஞ்சோதி மகானுக்கும் நன்றியை, வாழ்த்தை வழங்கவேண்டியதும் அவசியம்.

சாந்தி யோகம் என்ற சாந்தி தவம் எதற்காக? ஒரு உதாரணம் வழியாக அறியலாமா? இதோ!

-

ஒரு புதிய இருசக்கர வாகனம் வாங்குகிறீர்கள். பரிசோதனை ஓட்டம் ஒட்டிப்பார்த்து, மிகவும் திருப்தியோடும், மன நிறைவோடும் வாங்கிவிட்டீட்கள். புதிய தொழில்னுட்பங்கள் நிறைந்த அந்த வாகனம், பார்க்கவும் அழகு, அதன் செயல்திறனிலும் அழகு. வழக்கமான விதிமுறைகள் பின்பற்றி வீட்டிற்கு கொண்டுவந்தும் நிறுத்திவிட்டீர்கள். மறுநாள் நீங்களும் உங்கள் நண்பரும், அருகில் உள்ள ஒரு நகரத்திற்கு சுற்றுலா திட்டமிட்டு அதிகாலை, உங்கள் புதிய வாகனத்தில், நிறைவான பெட்ரோல் நிரப்பிக்கொண்டு பயணிக்கிறீர்கள். பயணம் மிகச்சிறப்பாக ஆரம்ப்பிக்கிறது.

அதிகாலை சூரியவெளிச்சமும், குளிர்ந்த காற்றும் மனதுக்கு இதமாகிறது. நண்பரோடு பேசிக்கொண்டே நீங்கள், வாகன ஓட்டத்தின் சுகத்தையும் அனுபவிக்கிறீர்கள். உங்களுக்கு இப்போது ஒரு எண்ணம் தோன்றுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக இதன் வேகத்தை அதிகப்படுத்தி பயணிக்கலாமே? என்று நினைக்கிறீர்கள். உங்கள் நண்பரிடம் பகிர்ந்து கொள்ள, அந்த நண்பரும் அதை ஆமோதிக்கிறார். இப்போது வாகனம் முன்னைவிட சீறிப்பாய்கிறது. காற்றின் வேகத்தை கிழித்துக்கொண்டு போவதுபோல முன்னேறுகிறீர்கள். வேகம், இன்னும் வேகம். மிக அற்புதமான அனுபவத்தை பெறுகிறீர்கள். நல்லவேகத்தில் சென்றுகொண்டே இருக்கும்பொழுது, உங்கள் வாகனத்தின் இன்ஜின் நிறுவிட்டது, வண்டியின் வேகம் குறைந்து நின்றுவிட்டது. நல்லவேளையாக சாலையின் ஓரம் வந்துவிட்டீர்கள். இறங்கி வண்டியை பரிசோதித்தால் ஏதும் குறையில்லை. மறுபடி வாகனத்தை இயக்கினால் எதுவும் நடக்கவில்லை. கிக்கர், ஸ்டார்ட் பட்டன் எதுவும் வேலை செய்யவில்லை. இப்போதைக்கு வண்டியை நிறுத்தலாம். இல்லையேல் தள்ளிக்கொண்டு போகலாம். நீங்களும் உங்கள் நண்பரும் அதில் சோர்ந்துவிட்டீர்கள். மனம் தளர்ந்துவிட்டீர்கள். இப்படி ஆகிவிட்டதே என்று கவலை கொண்டீர்கள்.

உடனே, வாகன விற்பனையத்திற்கு அழைப்பு விடுத்து நிலைமையை சொல்லுகிறீர்கள். நீங்கள் சொல்லுவதை அவர்கள், கலந்தாலோசிக்கிறார்கள். உடனே அங்கே இருக்கும் ஒருவர், அந்த மெக்கானிக் புரிந்துகொண்டார். 

‘ரொம்ப வேகமா போனீங்களா சார்?’

‘ஆமாங்க, எப்படி இருக்கும்னு செக் செய்தோம்’

‘அதான் சார் பிராப்ளம். புதுவண்டி அவ்வளோ வேகமா போகக்கூடாது, என்ஜின் ஜாம் ஆகிருக்கும். காத்திருங்க நாங்க வந்து அங்கேயே சரி செய்கிறோம்’

இனி வேறு வழி இல்லை, அவர்கள் வரும்வரை காத்திருக்கவேண்டியதுதான். இல்லையா?!

-

இந்த விளக்கத்தில் உங்களுக்கு ஒரு உண்மை புரிந்திருக்கும்தானே? நாம் தவம் இயற்றுவதில் ஆற்றல் தேக்கம் வரக்கூடாது. அப்படி வந்துவிட்டால், நமக்கு தலைபாரமும், உடல் வலியும் சோர்வும் வந்துவிடும். அதனால் நம்முடைய இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும். ஏனென்றால் நம்முடைய உடலும், மனமும் தவத்திற்கும், தவ ஆற்றலுக்கும் பழகவில்லை. அந்த பழக்கம் வரும்வரை, வாரத்தில் ஒருநாள், சாந்தி தவம் என்ற இறங்குபடி தவம் அவசியம். தவ ஆற்றலை, மீண்டும் ஒருநாள் மட்டுமாவது மூலாதர மையத்தில் நின்று இயங்கச்செய்யவேண்டும். அப்படிச் செய்தால், அதீத தவ ஆற்றல், உடல் ஆற்றலாகமாறி உடலுக்கும், மனதுக்கும் நன்மை செய்யும்.

இதனால்தான் சாந்தி யோகம் என்ற சாந்தி தவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அதை நீங்களும் கடைபிடிக்க வேண்டியதும் அவசியமாகும்.

வாழ்க வளமுடன்

-

What happening between ourselves and our mind when we practice the meditation?


தியானம் என்ற அகத்தவம் செய்யும் பொழுது நமக்கும், நம்முடைய மனதுக்கும் நிகழும் மாற்றங்கள் என்ன என்பதை விளக்குவீர்களா?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, தியானம் என்ற அகத்தவம் செய்யும் பொழுது நமக்கும், நம்முடைய மனதுக்கும் நிகழும் மாற்றங்கள் என்ன என்பதை விளக்குவீர்களா?


வேதாத்திரி மகரிஷி அவர்களின் பதில்:

வெறுமனே தியானம் செய்பவர்களுக்கு, ஏதோ அந்த நேரம் மட்டும் அமைதி கிடைப்பதுபோல தோன்றலாம். எனினும் அது உடனே விலகி எப்போதும்போலவே ஆகிவிடும். தகுந்த குரு வழியாக, குண்டலினி தீட்சைபெற்று, உபதேசம் பெற்று தியானம் செய்யும் பொழுதுதான், உயர்ந்த நன்மைகள் பல நிகழும்.

ஆரம்பத்தில் பத்து நிமிடம் குண்டலினி யோக தவம்  செய்தோமானால் தொடக்கத்தில் அரை நிமிடம் மனம் நிலைத்திருந்தது என்றாலும் அதுவே லாபம் தான். அது மாத்திரம் இல்லை நாம் உயிர்ச் சக்தியின் மீது மனதை நிலைக்க வைத்துத் தவம் செய்யும்போது Beta Wave (அலைநீளம் 14 - 40 Cycles) என்ற நிலையிலிருந்து Alpha Wave (அலை நீளம் 8 - 13 Cycles) என்ற நிலைக்கு மனம் வந்து விடும். அதைத்தான் சொப்பன நிலை அல்லது சாக்கரம் என்று சொல்லுவார்கள். 

அந்தச் சொப்பன நிலை எதுவோ அந்த Alpha அலைக்கு வந்தும் விழிப்போடு இருக்கிறோம்.  அதாவது தூக்கத்துக்குரிய நிலை வந்தும் விழிப்போடு இருக்கிறபோதுதான் அது யோகம்.  ஆனால் அதே Alpha அலை வந்து உறங்கி விட்டோமானால் அது தூக்கம்.

அந்த நிலையிலேயே நாம் தவம் செய்து பழகி வருகிறபொழுது அங்கும் இங்கும் மனது ஓடியது என்றாலும் அதிகமாக உணர்ச்சி வயம் பட்ட இடம் 20,30,35 Cycles போகாமல் அப்படி மனம் ஓடாமல் இந்த 14,15,16,18 வரைக்கும் ஓடித் திரும்புகிறது பாருங்கள், அது லாபந்தானே கடைசி வரையிலும்?

ஒன்று முதல் மூன்று (1-3 cycle/second) வரையுள்ள டெல்டா அலைக்கு தவத்தின் மூலம் மனதை (Mind Frequency) பழகிக் கொண்டோமானால் பேரியக்க மண்டலம் (Universe) இறை நிலையிலிருந்து தோன்றிய காலம் முதற்கொண்டு இன்று வரை நடந்த நிகழ்ச்சிகளெல்லாம் அங்கங்கே என்னென்ன நடந்ததோ அவற்றை எல்லாம் உணரக்கூடிய இடத்திற்கு மனம் (Mind) வந்து விடும்.

ஆகையினாலே நாம் உட்கார்ந்து அமைதியாகத் தவம் (Simplified Kundalini Yoga) செய்கிறபோதே நம்மை நாம் திருத்திக் கொள்வதற்கு, நம்மை நாம் வலுப்படுத்திக் கொள்வதற்கு நம்முடைய மனதைத் தெளிவுபடுத்திக் கொள்வதற்கு உறப்படுத்திக் கொள்வதற்கு, இதுவரையிலும் செய்த தவறுகளையெல்லாம் திருத்திக் கொண்டு நாம் மனிதர்களாக மாறுவதற்கு ஏற்ற பயிற்சியைச் செய்கிறோம் என்ற ஒரு தெளிவு ஒரு உணர்வு எல்லாருக்கும் வர வேண்டும். 

அது வந்துவிட்டது என்று வைத்துக் கொள்ளுங்கள், அந்த அக்கரையோடு நீங்கள் தவம் செய்கிறபோது அதனால் பெறுகின்ற பலன் வாழ்க்கையின் எல்லாத்துறைகளிலும் எல்லா அம்சங்களிலும் உங்களை பிரகாசிக்கச் செய்யும் என்பதை அனுபவ ரீதியாக நீங்கள் விரைவிலேயே உணர்ந்து கொள்வீர்கள்.

வாழ்க வளமுடன்.

-

Why felt peace when worship at temple better then the meditation?


தியானம் செய்வதை விடவும், கோவிலுக்குச் சென்றால் ஒரு நிம்மதி கிடைப்பதை நன்றாகவே உணர்கிறேன். இதன் காரணம் என்ன? இது சரியானதா?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி: 

வாழ்க வளமுடன் ஐயா, தியானம் செய்வதை விடவும், கோவிலுக்குச் சென்றால் ஒரு நிம்மதி கிடைப்பதை நன்றாகவே உணர்கிறேன். இதன் காரணம் என்ன? இது சரியானதா?

பதில்:

தியானம் செய்வதை விட நிறைவான நிம்மதி என்பது, நீங்கள் இன்னமும் தியானத்தை சரியாக செய்யவில்லை என்பதைத்தான் காட்டுகிறது. தியானம் என்பதை நீங்கள் எப்படியாக புரிந்துகொண்டிருக்கிறீர்கள் என்பது தெரியவில்லை. தியானம் முழுமையான தீர்வாக அமைந்து, நல்ல நிறைவைத் தரும், மனதுக்கு தேவையான ஊக்கம் தந்து நிம்மதியாக இருக்கவும் துணையாக இருக்கும். தன்னையறிதலுக்கு மனமும் தயாராக இருக்க பழகியும்விடும். இதை இப்படியாகச் சொல்லுவதால் கோவிலுக்கு போகவேண்டிய அவசியமில்லை என்ற கருத்துக்கும் குறுக்காக நீங்கள் வந்துவிட வேண்டிய அவசியமில்லை.

இப்போது கோவிலுக்குச் சென்றால் ஏன் மனம் அமைதியாகிறது? உங்களுக்குத் தேவையான, உங்கள் மனதிற்கு தேவையான ஒரு ஆற்றல் அங்கே நிரம்பி இருக்கிறது. அந்த ஆற்றல் அங்கே, வழிபாட்டு இடங்களில் தினமும், வழிபாடுகளால் உருவாக்கம் செய்யப்பட்டு தேக்கி வைக்கப்படுகிறது. எப்படி மின்கலங்களில், நமக்குத் தேவையான மின்சாரத்தை தேக்கிவைத்து, மின்சாரம் இல்லாத நிலைகளில், நேரங்களில் பயன்பாடு செய்கிறோமோ அப்படியாக. கோவிலில், வழிபாட்டுத்தலங்களில் இந்த ஆற்றல் எப்போதும் வெளிவந்துகொண்டே இருக்கும். நமக்கும், நம்மைப்போன்ற எல்லா ஜீவங்களுக்குமே அந்த ஆற்றல் உதவி செய்யும் என்பது உண்மை.

இதைத்தான் குடமுழுக்கு என்று, பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சீர் செய்கிறார்கள். ஊக்கப்படுத்துகிறார்கள். மக்களும் அன்றாடம் அவ்விடங்களுக்குச் சென்று வருவதால் பயனும் அடைகிறார்கள். ஆனால் யோகத்தில் தீட்சை எடுத்துக்கொண்டு பயணிக்கும் ஒரு அன்பருக்கு, கோவிலுக்குப் போய்தான் அந்த ஆற்றலை பெறவேண்டும் என்ற நிலை மாறிவிடுகிறது. தியானத்தில், மனதையே அதற்கு தகுந்தபடி மாற்றி அமைப்பதால், உங்களைச் சுற்றி இருக்கும் ஆற்றலின் வழியாகவே அந்த நிறைவையும், நிம்மதியையும் பெறுவதற்கு பழகிவிடுகிறது.

நீங்கள் இன்னமும் தியானத்தில் ஆழமாக செல்லவில்லை, பழகிக்கொள்ளவில்லை என்று தெரிகிறது. அதுவரை இப்படியான அனுபவம் உங்களுக்கு இருக்கும் என்று நம்பலாம். என்றாலும் தவறில்லை. தொடர்ந்து தியானம் செய்யுங்கள். அந்த ஆற்றல் உங்களுக்குள் தானாகவே நிரம்புவதை உணர்வீர்கள். நிறைவும் நிம்மதியும் இயல்பாக கிடைக்கும் என்பதை அறிவீர்கள். உடனே நீங்கள் கோவிலுக்கு செல்வதை நிறுத்திவிடலாம் என்று நான் சொல்லவே இல்லை. வழக்கம் போல சென்றுவாருங்கள். பயன்பெறுங்கள். இது உங்களுக்கு மட்டுமல்ல. எல்லா அன்பர்களுக்குமே சொல்லுகிறேன்.

வாழ்க வளமுடன்
-

What is the truth of Tamil new year and will it help for meditation?


தமிழ்புத்தாண்டு நாளின் சிறப்பு நம்முடைய தவத்திற்கு உதவுமா? விளக்கம் தருக.



வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி: 
வாழ்க வளமுடன் ஐயா, தமிழ்புத்தாண்டு நாளின் சிறப்பு நம்முடைய தவத்திற்கு உதவுமா? விளக்கம் தருக.

பதில்:
யோகசாதனையில் ஈடுபட்டுள்ள அன்பர்களுக்கு நாளும் கிழமையும் திசையும் ஒரு கணக்குமல்ல, தடையுமல்ல. ஆனால் புதிதாக யோகத்தில் இணைந்துகொள்ள விரும்பும் அன்பர்களுக்கும், யோகத்தில் ஆர்வமுள்ள நபர்களுக்கும், சித்திரைத்திங்கள் எனும் தமிழ் புத்தாண்டு நாள் சிறப்பாக இருக்கும் எனலாம்.

ஒரு வகையில் சூரியன், தன்னை புத்துணர்வாக்கிக் கொண்டு, தன்னொளியில் பிரகாசிக்கத் தொடங்கும் நாளாக, தமிழ் சித்திரை மாதம் ஒன்றாம் நாளை எடுத்துக்கொள்ளலாம். வானியல் அடிப்படையிலும், ஜோதிட அடிப்படையிலும் இது சரிதான். மேலும் சூரியனின் உச்சவீட்டாக இருக்கக்கூடிய மேஷ ராசிக்கட்டத்திற்கும் வருகிறது. இந்த மேஷ வீட்டில்தான் அசுவினி, பரணி, கிருத்திகை 1 ஆகிய நட்சத்திரங்களும் அதன் பாதங்களும் இருக்கின்றன. இதன்படி நாம் கவனிக்கும் பொழுது, அசுவினி என்ற நட்சத்திரத்தின் பாதையில், சூரியன் வரும் நாளே ‘சித்திரை மாதம்’ ஆகும். சூரியன் உச்சம் பெறுவது தனிப்பட்ட பாகையில் ஆகும்.

எனினும் சூரியனை, ஆத்மகாரகன், ஆத்மாவுக்கு உரியவன் என்றுதான் சொல்லப்படுகிறது. அதேபோல சந்திரனை மனோகாரகன், மனதிற்கு உரியவன் என்று சொல்லப்படுகிறது. சூரியன் எப்படி புத்துணர்வோடு, சித்திரை மாதத்தில் நுழைகிறதோ, அதே போன்றதொரு ஆத்ம புத்துணர்வு, நம் ஆன்மாவுக்கும் கிடைக்கலாம் அல்லவா? அந்த அடிப்படையில்தான், தமிழ்புத்தாண்டு நாள், யோகத்திற்கும், தவத்திற்கும் உதவலாம். 

மேலும் இது கோடைக்காலம். நீங்களே பார்க்கலாம். பெரும்பாலான மரங்கள் கடந்த மாதங்களில், தன்னுடைய எல்லா இலைகளையும் உதிர்த்துவிட்டு, பூரிப்பாக இளம்பச்சை இலைகளை தன்னுடைய கிளைகளில் படரச்செய்வதை காணலாம். கண்ணுக்கும் கருத்துக்கும் இனிதான பச்சைபசேல் என்ற மரங்களை இந்த கோடைகாலத்தில்தான் காணமுடியும். மாமரம் தன் பூக்களோடு மாங்கனிகளை தரும் காலமும் இதுதான். புளியமரம் தன் புளியங்கனிகளை தருவதும் இக்காலமே.

புதிதாக யோகத்தில் இணைவோடுக்கு இது சிறந்தகாலம் என்பதில் ஐயமில்லை. அதுபோலவே, ஏற்கனவே யோகத்தில் பயணிப்போருக்கு, தங்களின் தவ ஆராய்ச்சிக்கு இக்காலம் உதவும் என்பது நிச்சயமே. நீங்கள் தன்னையறிதலில் உயர்வு பெற இறைநிலையோடு மனதை இணைத்து வாழ்த்தி மகிழ்கின்றேன்.

வாழ்க வளமுடன்
-

Is it okay by practice one meditation per day?


ஒரு நாளைக்கு ஒரு தவம் மட்டுமே செய்துவர முடிகிறது. அது சரியானதுதானா?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி: 

வாழ்க வளமுடன் ஐயா, ஒரு நாளைக்கு ஒரு தவம் மட்டுமே செய்துவர முடிகிறது. அது சரியானதுதானா?


பதில்:

வாழ்கின்ற இந்த உலகில், தனி மனிதராக இருந்தாலும், குடும்ப அமைப்பில் இருந்தாலும் அன்றாடம், பரபரப்பாக இயங்க வேண்டிய கட்டாயம் எல்லோருக்குமே உண்டு. எந்த வகையிலும் அதை தவிர்க்க முடியாது. சில விடுமுறை நாட்களில் கூட ஓய்வாக இருக்கமுடியாத சூழல் இருப்பதும் உண்மை. அப்படியான நிலையில்,  தவம் செய்வதற்கு நேரம் ஒதுக்குவதும் கடினமே.

பொதுவாக ஒரு நாளில், நான்கு தவம் இயற்றுவதற்கான் வாய்ப்புக்கள் உள்ளது. 1) அதிகாலை 2) முற்பகல் 3) மாலை 4) இரவு படுக்கைக்கு முன்பாக என்று பிரித்து விருப்பமான தவங்களை செய்யலாம், இரவில், மற்ற எந்த தவங்களையும் தவிர்த்து, சாந்தி தவம் மட்டும் செய்துவருவது சிறப்பு. அப்படியில்லை என்றால், அன்றைய உறக்கம் கெடும், உடலும், மனதும் துன்புறும் என்பது உறுதி.

என்றாலும், இன்றைய சூழலில், எனக்கு தவம் செய்யவே நேரமில்லை என்று ஒதுக்கிவிட்டு, உலகோடு ஓடாமல், ஒரு நாளைக்கு ஒரு தவம் மட்டுமே செய்ய முடிகிறது என்பதே சிறப்புத்தான். அதற்காக பாராட்டவும் செய்யலாம். ஆனால், நம்முடைய உடலும், மனமும் ஓடுகின்ற பரபரப்பான ஓட்டத்திற்கு அமைதி கொடுக்கவும், யோகத்தின் வழியாக நாம் உயரவும், ஒரு நாளைக்கு ஒரு தவம் மிகதாமதமாகவே உதவும். உதவாது என்று சொல்லுவதற்கு வழியில்லை. எனினும் இந்த யோக பயணம் நீண்ட நாள் எடுத்துக்கொள்ளும். 

அதனால், வேலை நாட்கள் என்று எடுத்துக்கொண்டால், ஐந்து நாட்களுக்கு, நாளில் ஒரு தவமும், விடுமுறை நாட்களிலாவது, மூன்று முதல் நான்கு தவம் செய்வதற்கு திட்டமிட்டுக்கொள்ளுதல் சிறப்பானதாகும். அப்படியாக உங்கள் சூழலை மாற்றிக்கொள்ள தயக்கம் வேண்டாம். இன்றே உடனடியாக திட்டமிட்டு தொடங்கிடுக. நிச்சயம் உதவிடும், மாற்றமும் வரும்.

உங்களுக்கு வாய்ப்பிருந்தால், நீங்கள் செய்கின்ற அந்த ஒரே ஒரு தவத்தை, அருகில் உள்ள நண்பர்களோடு, தவ மையத்தில் அன்பர்களோடு செய்வதற்கு வாய்ப்பிருந்தால் அதை பயன்படுத்திக் கொள்க. மிகுந்த பயன் தருவற்கு வழி உண்டாகும். மேலும் நீங்கள் வீட்டிலே அதை செய்வதாக இருந்தால், அதிகாலை என்பதை வழக்கப்படுத்திக் கொள்ளவும். ஏதெனும் வகையில் அந்த அதிகாலைத் தவம், நாள் முழுவதும் புத்துணர்ச்சியோடு உங்களை செயலாற்ற  வைக்கலாம் அல்லவா? அப்படி சிறப்புற உங்களை வாழ்த்தி மகிழ்கிறேன்.

வாழ்க வளமுடன்

-

Always we are suffering to find happiness in life, then how will help yoga on that?


வாழும் நாட்களில், மகிழ்ச்சியும் சந்தோஷமும் தேடித்தானே வாழ்கிறோம். அதற்காத்தான் இத்தனை கஷ்டமும்படுகிறோம். இதில் யோகத்தில் எப்படி மகிழ்ச்சியும், சந்தோஷமும் கிடைத்துவிடும்?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, வாழும் நாட்களில், மகிழ்ச்சியும் சந்தோஷமும் தேடித்தானே வாழ்கிறோம். அதற்காத்தான் இத்தனை கஷ்டமும்படுகிறோம். இதில் யோகத்தில் எப்படி மகிழ்ச்சியும், சந்தோஷமும் கிடைத்துவிடும்?


பதில்:

அப்படியானால், உங்கள் யோகப்பயணத்தின் நோக்கம் என்னவென்றால், தேடுகின்ற மகிழ்ச்சியும் சந்தோஷமும் உங்களுக்கு கிடைக்கவேண்டும் என்பதாகத்தான் இருக்கிறது அல்லவா? உண்மையாக இப்படி யாரேனும் உங்களுக்குச் சொன்னார்களா? நீங்களாகவே அப்படியாக நினைத்துக் கொண்டீர்களா? என்பதை யோசிக்கிறேன். பெரும்பாலான யோக அமைப்புக்கள், யோகம் செய்தால் உண்மை விளக்கம் பெறலாம் என்றுதான் சொல்லுவார்கள். அந்த உண்மை விளக்கம், பலபடிகளில் உயர்வை அளித்து, ‘நான் யார்?’ என்ற கேள்விக்கான விடையை அளித்து, நம்முடைய பிறவி நோக்கத்தையும், இதுநாள்வரை நாம் பெற்றுவந்த பிறவிக்கடனையும் தீர்த்து நம்மை முழுமையாக்கும் என்பதுதான் உண்மை.

இந்த யோகபயணத்தில், அவரவர்களின் ஆர்வம், முயற்சி, பயிற்சி, ஆராய்ச்சி, விளக்கம் என்ற வகையில்தான் முன்னேற்றமும் கிடைக்கும். அந்த கால அளவு முறை என்பதை நாம், தீர்மானிக்க முடியாது. ஒருவருக்கு உடனே கிடைக்கலாம், இன்னொருவருக்கு குறிப்பிட்ட காலம் ஆகலாம். மற்றொருவருக்கு நீண்ட காலம் எடுத்துக்கொள்ளலாம்.  ஆனால், யோகத்தில் பயணிக்கும் ஒருவருக்கு உண்மை எப்படியாவது கிடைத்துவிடுகிறது என்பதுதான் நிச்சயமானது. அதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

யோகத்தில் இணைந்து அதன்வழியாக, விளக்கம்பெற்று பயிற்சியும், தியானமும் செய்துவந்தால், மகிழ்ச்சியும் சந்தோஷமும் எப்படி கிடைக்கும்? என்ற கேள்வியும், இதுவரை யோகம் செய்து வந்தும், அந்த மகிழ்ச்சியும் சந்தோஷமும் கிடைக்கவில்லையே? என்ற மற்றொரு கேள்வியும், உங்களுடைய கேள்வியில் இருக்கிறது எனலாம்.

ஒரு உண்மை விளக்கத்தை, இன்று உங்களுக்குச் சொல்லுகிறேன். அந்த உண்மை உங்களுக்குத் தெரியுமா? மகிழ்ச்சியும் சந்தோஷமும் வாழ்க்கையில் தேடிப்பெற வேண்டிய அவசியமே இல்லை. அது ஏற்கனவே நம்மிடம்தான் இருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்களா? நம்மிடம் ஏற்கனவே நிலைபெற்று இருக்கின்ற மகிழ்ச்சியும் சந்தோஷமும் பலவித தடைகளால் மறைக்கப்பட்டிருக்கிறது. அந்த தடைகளை அகற்றி, நமக்குள்ளும், நம்மைச்சுற்றிலும், இந்த உலகிலும், இந்த பிரபஞ்ச அளவிலும், எங்கும் நிறைந்துள்ள ‘மகிழ்ச்சியும் சந்தோஷமும்’ இருக்கும் இடத்திலிருந்தே பெறுவதுதான் யோகத்தின் முக்கிய நோக்கமும் ஆகும்.

‘அதுதானய்யா, கிடைக்கவில்லையே?’ என்று புலம்புவதில் அர்த்தமில்லை. உங்கள் யோகப்பயணத்தை, எந்த தேடுதலும், நோக்கமும் இன்றி இயல்பாக தொடருங்கள். உங்களுக்கான வெற்றி இலக்கு நிச்சயமாக கிடைக்கும். அதில் சந்தேகமில்லை. வாய்ப்புக் கிடைத்தால், என்னை நேரில் சந்தித்து உண்மையறியுங்கள். உங்கள் ஆசிரியடமும் கேட்டுப் பெறுங்கள்.

வாழ்க வளமுடன்

-


Can we understand the someone's mind after experienced in Meditation?


தியானத்தில் ஆழ்ந்து நின்று உண்மை விளக்கம் பெற்றுவிட்டால், மற்றவர்களுடைய மனதை நாம் அறிந்துகொள்ள முடியுமா?



வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, தியானத்தில் ஆழ்ந்து நின்று உண்மை விளக்கம் பெற்றுவிட்டால், மற்றவர்களுடைய மனதை நாம் அறிந்துகொள்ள முடியுமா?

பதில்:

மிகுந்த ஆராய்ச்சி மனப்பான்மையில் இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். நாம் இந்த உலகில் பிறந்தபொழுது நமக்கு மனம் இல்லை. ஏன் இல்லை? என்றால், மனம் என்பது அப்பொழுதுமுதல் கட்டப்பட்டு வருகிறது என்று அர்த்தமாகிறது. ஏனென்றால் மனம் என்பது பொருள் வடிவம் கொண்டதல்ல. அது அலைவடிவானது. அந்த அலைகள் மனமாக ஒரு மாற்றத்தை அமைத்துக்கொள்வதற்கு, கிட்டதட்ட மூன்று ஆண்டுகள் ஆகிறது. இதை குருமகான் வேதாத்திரி மகரிஷி அவர்களும் தெளிவுபடுத்துகிறார்.
ஒரு மனிதருடைய, குழந்தைப்பருவமான அந்த மூன்று வயது முதல், அவனுடைய / அவளுடைய வாழும் காலம்வரை மனம் என்பது இயங்கிக்கொண்டே இருக்கிறது. ஒருபோதும் அது இல்லாமல் போவதில்லை. தூக்கத்தில் கொஞ்சம் அமைதி அடைகிறது. கண்விழித்த உடனே மறுபடி எப்போதும்போலவே இயங்கவும் ஆரம்பிக்கிறது. இதில் இன்னொரு உண்மையும் இருக்கிறது. மனம் என்பது தனியாக இல்லை. மனம்தான் மனிதன், மனிதன் தான் மனம் என்றும் சொல்லலாம். மனம்+இதன்=மனிதன் என்றுதான் நாம் அறிகிறோம்.

அப்படியான அந்த மனம், மூன்று வயதில் வளர்ச்சி அடைந்தபிறகு, புத்தம் புதிதாக இருக்கிறதா? என்ற ஒரு கேள்வி எழுமானால், இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.  வளர்ச்சி அடைந்த மனம், நமக்குள்ளாக கருமையத்தில் இருக்கிற பதிவுகளை எடுத்துக் காட்டிக்கொண்டே இருக்கிறது. இந்த பதிவுகள் நம்முடைய, பரம்பரை வழியாக, வித்து மூலமாக, எங்கும் தடையில்லாமல் வந்துகொண்டே இருக்கிறது. உங்கள் மூலமாக, உங்களுடைய வருங்கால சந்ததியினருக்கும் எடுத்துக்கொண்டு போகும் என்பது உறுதியானது. இவ்வளவு ரகசியங்கள், உங்களுக்குள்ளாகவே, உங்கள் மனதிற்குள்ளாகவே இருக்கும் பொழுது, அதை தெரிந்து கொள்ள முயற்சிக்காமல், அடுத்தவருடைய மனதை அறிந்து கொள்ள விரும்புவது நியாயமா? சிந்தித்துப்பாருங்கள்.

'அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்’ (குறள் 706)

என்ற ஆசான் திருவள்ளுவரின் திருக்குறள் உங்களுக்குத் தெரியுமா?

இந்தக்குறள் சொல்லும் வழியாக, அடுத்தவருடைய முகத்தைப்பார்த்தாலே, அவருடைய மனம் எப்படிப்பட்டது? அவருடைய மனதிற்குள்ளாக என்ன இருக்கிறது? என்பதை நாம் புரிந்துகொள்ளவும், அறிந்துகொள்ளவும் முடியும். அப்படியிருக்கும்பொழுது, தியானத்தில் ஆழ்ந்து, பலகாலம் முயன்று அதன் வழியாக பிறருடைய மனதை அறிய முயற்சிப்பது வேண்டாத வேலைதானே?!

தன்னையறிந்த, மெய்ப்பொருள் உணர்ந்த சித்தர்களும், ஞானிகளும், மகான்களும், யோகிகளும் கூட பிறருடைய மனதை அறிந்துகொள்ள ஆர்வம் கொண்டதில்லை. அது மிகப்பெரிய சுமையாகிவிடும். உங்களுடைய கர்மா என்ற வினைப்பதிவே கட்டுக்கடங்காமல் இருக்கும் பொழுது, மற்றவர்களுடை கர்மா என்ற வினைப்பதிவையும் நீங்களே பகிர்ந்துகொள்ள நினைக்கிறீர்களா? அது அவசியம்தானா? நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

வாழ்க வளமுடன்
-

Is it true mind will be affected when break the meditation suddenly?


தியானம் செய்யும் பொழுது தடை உண்டானால், மனக்குழப்பம் வரும், புத்தி பேதலிக்கும் என்று சொல்லுகிறார்களே? அது உண்மையா? விளக்கம் தேவை!


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, தியானம் செய்யும் பொழுது தடை உண்டானால், மனக்குழப்பம் வரும், புத்தி பேதலிக்கும் என்று சொல்லுகிறார்களே? அது உண்மையா? விளக்கம் தேவை!


பதில்:

யோகத்தில் தியானம் என்பது மிக உயர்ந்த சாதனை. மிக எளிதில் யாருக்கும் கிடைக்காத பேறு என்றுதான் சொல்லவேண்டும். பரபரப்பான இப்போதைய, பொருள்முதல்வாத உலகில், தியானம் மிகவும் கடினமானதுதான். ஏனென்றால், நம் மனதை அலைக்கழிக்க ஏகப்பட்ட விஷயங்கள் அருகியிருக்கின்றன. மிக முக்கியமாக நம்முடைய செல்ஃபோன். ஏதோ நம்மோடு பிறந்தது போலவே, ஒட்டிக்கொண்டது. அது இல்லாமல் நம்முடைய எந்த நடவடிக்கையும் இல்லை என்ற நிலைக்கு நாம் மாறிவிட்டோம், மாற்றப்பட்டுவிட்டோம் என்பது உண்மைதானே?

இதோடு, வேலை, வியாபாரம், தொழில், நிறுவனவேலைகள் என்றும் பலவழிகளில் சிக்கி, நேரமின்மையில் தவிக்கிறோம். சரியான நேரத்திற்கு உணவை எடுத்துக்கொள்ளக்கூட நேரமில்லை. இதனினும் மேலாக, குடும்ப கடமைகள். வீட்டில் இருக்கும் நபர்களுக்கான தேவைகளை நிறைவேற்றுதல், குழந்தைகளை கவனித்தல், வளர்த்தல், அவர்களுடைய கல்விக்கு உதவுதல் என்றும் வரிசையாக அடுக்கிவைத்தார்போல செய்யவேண்டிய கடமைகள். இவை எல்லாமே ஆண்களுக்கும் உண்டு, பெண்களுக்கும் உண்டு. கூடுதலாக பெண்களுக்கு, எல்லோருக்குமான உணவை சமைத்தல், பரிமாறுதல், வீட்டில் உள்ளவர்களை அக்கறையோடு கவனித்தல் என்ற பொறுப்பும் உண்டு. இதையெல்லாம் அன்றாடம் ஒழுங்கிபடுத்திக்கொண்டு, அதில் கிடைக்கும் சிறிய இடைவெளியில், நமக்கான சில நேரங்களை, வேலைகளை ஒதுக்கிவைத்துவிட்டு, இந்த தியானத்தை செய்யவேண்டிய நிலைதான் இங்கே, இன்று இருக்கிறது.

மேற்கண்ட விஷயத்தை படிக்கும் பொழுதே, யோசித்துப் பார்க்கும் பொழுதே, ஏகப்பட்ட தடைகளுக்கான காரணங்கள் விளங்கிவிடும் என்பது உண்மைதான். என்றாலும் கூட, நாம் யோகத்திலும் கூட ஒரு முன்னேற்றமான காலத்தில் வாழ்ந்து வருகிறோம் என்றால் மிகையில்லை. குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் வழங்கிய ‘எளியமுறை குண்டலினி யோகம்’ என்ற மிகச்சிறந்த யோகமுறையில் பயணிக்கிறோம். அதனால், நம்முடைய அன்றாட வாழ்வில், மிகச்சிறிய நேரத்தை ஒதுக்கிக்கூட தியானம் இயற்ற முடிகிறது. அதுகுறித்த சிந்தனையிலும் இருக்கமுடிகிறது. இது நமக்கு கிடைத்த மிகப்பெரும் பாக்கியம் அல்லவா?

என்றாலும் கூட, நாம் இயற்றுகின்ற தியானத்தில் தடை ஏற்பட்டால், அது பாதிப்பை தரும் என்பது உண்மைதான். மனக்குழப்பம், மன அழுத்தம் உருவாகிவிடும்.  தியானம் முடிக்காமல் தடையால் நிறுத்திவிட்டோமே? என்று சிந்திப்பது மனக்குழப்பம் ஆகும். ஏற்பட்ட தடையால் மனமும் எண்ணங்களும் சிதறுவது, பதட்டப்படுவது, என்ன ஆகிவிடுமோ? என்று பயப்படுவது மன அழுத்தம் ஆகும். இந்த இரண்டும் பொதுவாக, தியானத்தில் தடை ஏற்பட்டால், எல்லோருக்குமே உருவாகக்கூடியதுதான். என்றாலும் அடுத்த சில மணி நேரங்களில், தானாகவே சரியாகிவிட வாய்ப்பு உள்ளது. ஏனென்றால், நாம் இணைந்திருக்கின்ற ‘மனவளக்கலையின்’ சிறப்பு அதுவே.

புத்தி பேதலிக்குமா? என்ற அடுத்த ஒரு கேள்வி உள்ளது. இப்பொழுது நாம் பயணிக்கும், எளியமுறை குண்டலினி யோகத்தில் அதற்கு வாய்ப்பில்லை. ஆனால், வாசியோகம், ஆசனமுறை, பூஜா முறை ஆகியவற்றில் குண்டலினி சக்தி தானாகவே எழுப்பிக்கொண்டு, தியானம் செய்துவரும் அன்பர்களுக்கு, அந்த தியானம் செய்யும் பொழுது தடை ஏற்பட்டால், புத்தி பேதலிக்க வாய்ப்பு உண்டு. எனினும் குருவின் அருகாமையும், மேற்பார்வையும் இருந்தால் சரிசெய்யப்படலாம். எனினும் கவனம் வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

வாழ்க வளமுடன்

-

Why my experience in dhyan is simple instead of awesome of others experience?


தியானம் குறித்து மற்றவர் சொல்லுவதெல்லாம் நமக்கு பிரமிப்பாக இருக்கிறது, ஆனால் நாம் இயற்றும் தியானத்தில் அப்படியான அனுபவம் ஏற்படமாட்டேன் என்கிறதே? ஏன்?



வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, தியானம் குறித்து மற்றவர் சொல்லுவதெல்லாம் நமக்கு பிரமிப்பாக இருக்கிறது, ஆனால் நாம் இயற்றும் தியானத்தில் அப்படியான அனுபவம் ஏற்படமாட்டேன் என்கிறதே? ஏன்?

பதில்:

இதுபோலவே நிறைய அன்பர்கள் என்னிடம் சொல்லியதுண்டு. அதற்கு சில காரணங்கள் இருக்கலாம் என்று கருதுகிறேன். வாருங்கள் அலசுவோம். முதலில், தியானம் என்பது குறித்த உண்மையை நீங்களாகவே உருவாக்கிக் கொள்ளகூடாது. அதாவது நீங்களாகவே ஒரு நூலை வாசித்து, யாராவது குருவின் வாழ்க்கை வரலாறை படித்து அதுபோன்ற தியானம் அனுபவம் பெறலாம் என்று நினைத்து, தியானம் இயற்றக்கூடாது. முறையாக குருவிடம் தீட்சை வழியாக கற்றுக்கொள்வதுதான் மிகச்சிறந்த வழியாகும்.

உங்கள் குரு உங்களுக்கு எவ்வகையில் உபதேசமும், தியான முறையும் சொல்லித்தருகிறாரோ, அதன் வழியேதான் தியானம் செய்யவேண்டும். எந்தவகையிலும் நீங்களாகவே அதில் மாற்றம் கொண்டுவரக்கூடாது.  அதுபோலவே ஒரு தியானம் செய்வதற்கான நேரம் முக்கியமானது. அதை நீடிக்கவும், குறைக்கவும் நமக்கு அனுமதி இல்லை. ஆனால் தானாகவே தியானத்தில் ஆழ்ந்து நீடிக்குமானால் அதில் எந்த தவறும் இல்லை. அப்படி ஆழ்ந்து நீடித்தல், பல ஆண்டுகள் தொடர்ந்த பயணத்தில்தான் கிடைக்கும் என்பதால் அந்த பயமும் இப்போதில்லை.

தியானம் கற்றுக்கொள்ளும் அன்பர்கள், தங்களின் வயது, அனுபவம், வாழ்க்கை முறை, ஏற்கனவே பக்தியில் அவர்களுக்கு இருந்த ஈடுபாடு, முற்றிலும் புதிய அனுபவம் என்ற வகையில் பலதரப்பட்ட ஏற்றத்தாழ்வுகள், வித்தியாசங்கள் இருக்கும் என்பதால். ஒரு தியானம் எல்லோருக்குமே ஒரே மாதிரியான அனுபவத்தை தரும் என்று எதிர்பார்க்கமுடியாது. இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். எனவே ஒரு வகுப்பில் உங்களோடு உள்ள அன்பர்களின் தியான அனுபங்களையும், ஏற்கனவே அனுபவம் மிக்க அன்பர்களின் தியான அனுபவங்களையும், உங்களுடைய தியான அனுபவங்களோடு ஒப்பிட்டுப்பார்ப்பது நல்லதல்ல. 

தியானத்தில் மனம் நிகழ்த்தும் மாயாஜாலம் யாராலும் புரிந்துகொள்ளவும் முடியாது. நீங்கள் உங்கள் வழியிலே செய்யும் தியானத்தில் என்ன நிகழ்கிறதோ? அதில் மட்டுமே கவனம் செலுத்தி தொடர்ந்து செய்து வாருங்கள். உங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை, குருவோடும், ஆசிரியர்களோடும் பகிர்ந்து கொள்ளுங்கள். தேவைப்பட்டால் உங்களின் சக அன்பர்களோடு பகிரலாம். ஆனால் ஒப்பீடு தேவையில்லை. முக்கியமாக, மற்ற அன்பர்களின் தியான அனுபவங்களை எல்லாம் கேட்டு, அதை உங்களுடைய மனதில் ஏற்றிக்கொண்டு, எனக்கும் அதுபோல நிகழுமா? என்ற கேள்வியோடும், எனக்கும் அதுபோலவே நிகழவேண்டும் என்று எதிர்பார்ப்பதும் தவறு என்பதை புரிந்து கொள்ளுங்கள். அவரின் அனுபவம் அவருக்கு. உங்கள் அனுபவம் உங்களுக்கு என்பதுதான் உண்மையானது. இதில் எந்த ஒப்பீடும் உதவாது.

உங்கள் யோகபயணத்தில், நீங்கள் இயற்றுகின்ற தியானத்தில், உங்களுக்கு கிடைக்கும் அனுபவங்களே மிகச் சிறந்தது என்பது உணர்ந்துகொள்ளுங்கள். அதையே சிந்தித்து ஆராய்ந்தும் பாருங்கள். உங்கள் யோகத்தில் சிறப்பான நிலையை அடையலாம்.

வாழ்க வளமுடன்
-

What would happen if my self-realization did not take place within my life?


வாழும் இந்தப்பிறவியில், வாழ்நாளுக்குள்ளாக என்னுடைய தன்னையறிதல் நிகழவில்லை என்றால் என்ன ஆகும்?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, வாழும் இந்தப்பிறவியில், வாழ்நாளுக்குள்ளாக என்னுடைய தன்னையறிதல் நிகழவில்லை என்றால் என்ன ஆகும்?


பதில்:

நல்ல புரிதல் உள்ள கேள்வியாக கருதுகிறேன். பொதுவாகவே எல்லோருக்கும் இந்த கேள்வி உண்டு எனினும், சிலர்தான் வாய்விட்டு கேட்பார்கள். அத்தகையவர்களுக்கும் இந்த பதில் உதவும் என்பது உண்மை. இந்த கேள்வி எழுந்துவிட்டால், அவர்களுக்கு ஒரு திசை மாற்றம் ஏற்பட்டுவிடும். அதாவது அவ நம்பிக்கை. ‘இனிமேலாவது தன்னையறிவதாவது’என்று கைவிட்டுவிடுவார்கள். மேலும் இதுவரை வாழ்ந்தவர்கள் எல்லோரும், தன்னையறிந்தா போய்ச்சேர்ந்தார்கள்? இல்லையே? என் குடும்பத்தில் யாரும் இல்லை. எனக்கு தெரிந்தவரையிலும், அறிந்தவரையிலும் யாருமில்லையே? அதனால் எனக்கென்ன அக்கறை வந்ததது? அவர்களைப்போலவே நாமும் போய்ச்சேர்வோம். என்ன குறை ஆகிவிடப்போகிறது? போகும் காலம் வந்தால் போய்த்தான் சேரவேண்டும், நிலைத்து நிற்கவா முடியும்? என்று தனக்குத்தானே ஆறுதல் சொல்லிக்கொண்டு, வழக்கமான பக்தியிலேயே தன்னை கரைத்துக்கொள்வார்களே தவிர, யோகத்தின் பக்கம் வரமாட்டார்கள்.

உண்மையிலேயே யோகம் யாருக்கும் கட்டாயமில்லை, ஆனால் யோகம் தான் தனையறிதலுக்கான சிறந்த தீர்வு. பிறவிப் பெருங்கடல் நீந்துவர் என்ற ஆசான் திருவள்ளுவரின் குறள் சொல்லும்படி, பிறப்பு நீண்டுகொண்டே போகும். இங்கே பிறப்பு நீளும் என்றால் அவரே பிறந்துகொண்டே வருவார் என்று நினைத்துவிடக்கூடாது. அது அறியாமை. ஒருவர் உலகில், பிறந்து வாழ்வில் மறைந்துபோனாலும், அவரின் கர்மா என்ற வினைப்பதிவு, அவரின் குழந்தை, வாரிசுகள் என்று தொடர்ந்துகொண்டே இருக்கும் என்பதுதான் பிறவித்தொடர் ஆகும். அது அந்த குடும்பத்தில் ஏதேனும் ஒரு தலைமுறையில், யாரெனும் ஒருவர் யோகத்தின் வழியில் தீர்க்கும் வரை தொடர்ந்துகொண்டேதான் இருக்கும். அது இயற்கையின் வினை விளைவு நீதியும் ஆகும்!

ஆனால், யோகத்தின் உண்மை அறிந்து, தங்களை இணைத்துக்கொண்டு, குருவின் வழிகாட்டலோடு பயணிக்கும் ஒருவருக்கு காலத்தால், எத்தகைய கர்ம வினைப்பதிவு சுமையாக இருந்தாலும் கூட அது களைந்து, தூய்மைக்கு வழி பிறக்கும். இதற்கு தேவை, ஆர்வம், முயற்சி, பயிற்சி, செயலாக்கம், ஆராய்ச்சி என்பதுதான். எனவே, வாழும் இந்தப்பிறவியில், வாழ்நாளுக்குள்ளாக என்னுடைய தன்னையறிதல் நிகழுமா? என்ற கேள்விக்கு இடமில்லை. எப்போது? நீங்கள் யோகத்தில் உங்களை இணைத்துக்கொண்ட பிறகு.

யோகத்திற்கு வராமலேயே, முடியுமா? நிகழுமா? என்று கேட்பது நியாயமும் இல்லை. ஒருவேளை, யோகத்தில் இணைந்துகொண்ட பிறகும், தவம் தியானம் செய்துவரும் பொழுதும், வாழும் இந்தப்பிறவியில், வாழ்நாளுக்குள்ளாக என்னுடைய தன்னையறிதல் நிகழவில்லை என்றால் என்ன செய்வது? என்ற கேள்வி எழுமானால். நீங்கள் யோகத்தில் பயணிப்பதால், உங்கள் முயற்சி, செயல், ஆராய்ச்சி என்ற அளவில் அதில் மாற்றம் நிச்சயமாக நிகழந்திருக்கும். எனவே இங்கே வருத்தமும், கவலையும் பெறவேண்டிய அவசியமில்லை. அந்த வழியில் இருக்கும் அடுத்தவற்றை, உங்கள் வழியில் வந்த, வரும் வாரீசுகள், தலைமுறைமுறையினர் தீர்த்துவைப்பார்கள் என்பது உறுதி, மாற்றுக்கருத்தும் இல்லை.

வாழ்க வளமுடன்.

-

Why need yoga, we need to life like as others, who free from on yoga in life?


மற்றவர்களைப் போல்தான் வாழவேண்டும் என்கிறபொழுது, யோகம் இல்லாத வாழ்வுதானே வாழ்கிறார்கள்? பிறகு ஏன் எனக்கு மட்டும் யோகம்?




வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, மற்றவர்களைப் போல்தான் வாழவேண்டும் என்கிறபொழுது, யோகம் இல்லாத வாழ்வுதானே வாழ்கிறார்கள்? பிறகு ஏன் எனக்கு மட்டும் யோகம்?

பதில்:

நீங்கள் கேட்பது சரியான சந்தேகம் தான். ஒரு நூறு அன்பர்களை எடுத்துக்கொண்டால், அதில் யாரேனும் ஒருவருக்குத்தான், நிச்சயமாக யோகத்தில் இணையவேண்டும் என்ற ஆர்வம் எழும் என்பது உண்மையே. அந்த ஒருவரை மற்ற 99 அன்பர்களும் தடுத்து நிறுத்திவிடுவார்கள், சிலவேளை அவர்களை பார்த்து அந்த ஒருவரும், யோகத்தை விட்டுவிடுவார். பெரும்பாலும் இதுதான் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது எனலாம். அந்த ஒருநபர், இத்தனை பேரும் யோகம் என்பதே அறியாமல், அதில் ஆர்வம் காட்டாமல், அதைக்குறித்து ஒரு விபரமும் தெரிந்து கொள்ளாமல், வழக்கமான உலக வாழ்க்கையில் வாழ்கிறார்கள். நன்றாகத்தானே இருக்கிறார்கள்! அந்த நிலையில் நான் மட்டும் ஏன்? எதற்காக? யோகம் வேண்டும், அதில் இணையவேண்டும்? என்று நினைக்கிறேன் என்று குழப்பம் எழுந்துவிடுகிறது.

உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா? யோகத்தில் விருப்பமும், அதில் இணைந்து உண்மையை அறியவேண்டும் என்ற விருப்பமும், தானாக, உங்களுக்குள்ளாக எழவேண்டும். அது உங்களுடைய மனதை, சிந்தனையை இயல்பாக தூண்டவேண்டும். யாரோ சொன்னார்கள், இவர் சொன்னார், அவர் சொன்னார், முயற்சிக்கிறேன் என்றெல்லாம் யோகத்தில் இணையமுடியாது, இணைந்தாலும் கூட அதை தொடரவும் முடியாது. ஒரு நாளோ, ஒருவாரமோ, ஒருமாதமோ செய்துவிட்டு முழுமையாக அதை கைவிட்டு போய்விடுவார் என்பதுதான் உண்மை.

உலகில் பெரும்பாலோர்க்கு கடவுள் நம்பிக்கையே, அவர்களுடைய சிதைந்து போய் இருப்பதால், யோகம் குறித்த எந்த நல்ல எண்ணமும் கருத்தும் இருக்காது என்றே கருதவேண்டும். உண்மையில் கடவுள் (கட+உள்) என்ற தத்துவமும், நம்பிக்கையும் உண்மையாகவேதான் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. பகல் வானில் நட்சத்திரங்களே இல்லை என்று வாதாடும் அன்பர்களை நாம் என்ன செய்துவிடமுடியும்? அதுபோலவேதான் நாம் கணக்கில் எடுத்துக் கொண்ட 99 அன்பர்களும் இருப்பார்கள். இருக்கிறார்கள் என்றும் சொல்லலாம்.

உங்களுக்கு வாய்ப்பிருந்தால், உங்கள் வாழ்க்கையையும், அவர்களுடைய வாழ்க்கையையும் ஒப்பிட்டுப் பாருங்கள். பணம், பொருள், வசதி அதுவெல்லாம் கணக்கில் இல்லை. அது யார்வேண்டுமானாலும், தகுந்த காலத்தில் சம்பாத்தியமாக கொண்டுவரலாம். அதற்கு தேவை உழைப்பும், விழிப்புணர்வும், முயற்சியும், ஆர்வமும் மட்டுமே. பரம்பரையாக செல்வாக்கோடு இருப்பவர், இப்போதும் உங்களைவிட பணக்காரராக் இருப்பதில் வியப்பொன்றும் இல்லை. அதனால் அந்த பொருள்நிலை செல்வாக்கை விலக்கிவிட்டு, அவர்களுடை எண்ணம், சொல், செயல், வழக்கம், பழக்கம், அணுகுமுறை, உதவும் குணம், நிறைவு, அமைதி என்பதெல்லாம் ஆராய்ந்து பாருங்கள். ஒவ்வொரு நாளையும், தன்னோடு இருக்கும் ஒவ்வொரு நபரையும் எப்படி நடத்துகிறார் என்று கவனியுங்கள். 

உண்மையாகவே, இந்த 99 அன்பர்களைவிட நீங்கள், வித்தியாசமாக, உள்ளுணர்வில் இருப்பதை மிக எளிதாக கண்டுகொள்வீர்கள். யோகத்தில் நீங்கள் இணைந்துகொண்டால், மிக எளிமையாக அளவு, முறை கண்ட வாழ்வில், தன்னை அறிந்து, இறை உண்மையும் அறிந்து, நிறைவாக, நிம்மதியாக, என்றும் மகிழ்வோடு வாழ்ந்து அதை பிறருக்கும் பகிர்ந்து வாழமுடியுமே?!

மேலும் பிறவி நோக்கமும் நிறைவேறிவிடும். இதுவரை இருந்துவந்த கர்ம வினைப்பதிவுகளின் களங்கம் நீங்கிவிடும். உங்களின் முன்னோர்களும், உங்கள் வழி வரும் தலைமுறையினரும் கூட நிறைவடைவார்கள். இயற்கையின் உன்னதமும் உங்களுக்கு புரிந்துவிடும். எனவே, யோகம் குறித்தான சிந்தனையில், விழிப்பாக இருங்கள்.

உடனே யோகத்தில் உங்களை இணைத்துக் கொள்ளுங்கள் என்றெல்லாம் சொல்லவும் மாட்டேன், கட்டாயப்படுத்தவும் மாட்டேன். அதை நீங்களே முடிவு செய்யலாம். காலமும் உங்களுக்கு துணை செய்யும்.

வாழ்க வளமுடன்.
-

Why no mind peace when we worship in temple too? What can be done?


மன அமைதிக்காக ஏதேனும் கோவிலுக்கு சென்றாலும்கூட அமைதி கிடைக்கவில்லையே? என்ன செய்வது?!


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, மன அமைதிக்காக ஏதேனும் கோவிலுக்கு சென்றாலும்கூட அமைதி கிடைக்கவில்லையே? என்ன செய்வது?!


பதில்:

இந்தக்கேள்வியின் உள்நிலை அறியும் பொழுது, நீங்கள் வீட்டிலேயே தவம் செய்துவருகிறீர்களா? அதைவிட்டு விட்டீர்களா? என்று தெரியவில்லை.  என்றாலும், யோகத்தில் இணைந்து தவம் கற்றுக்கொண்ட ஒருவர், முற்றிலுமாக கோவிலுக்கு போவதை, அங்கே வழிபாடு செய்வது விட்டுவிட வேண்டியதில்லை. அதில் எந்த வித மாற்றுக்கருத்தும், குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் சொன்னதுமில்லை. என்றாலும், அந்த வழிபாடுகளில் இருக்கின்ற உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும் என்றுதான் அறிவுறுத்துகிறார். அதனால், யோகத்திற்கு வந்த பிறகு கோவிலுக்கு செல்வது அவரவர் விருப்பமே. ஆனால் அதற்காக, கற்றுக்கொண்ட யோகத்தை விட்டுவிடவும் கூடாது. அதுதான் பிறப்பை மறுபடியும் சிக்கலாக்கிவிடும்.

உங்கள் கேள்வியின் வழியாக, இரண்டு விசயங்களை புரிந்து கொள்ளமுடிகிறது. உங்களுக்கு வீட்டில் தவம் செய்தாலும் அமைதி கிடைக்கவில்லை, கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தாலும் அமைதி கிடைக்கவில்லை. இப்பொழுது இதற்கு காரணம், ஏற்கனவே உங்கள் மனம் அமைதியின்று தவிக்கிறது என்றுதான் கருதவேண்டும். உங்கள் வாழ்வில் ஏதேனும் ஒரு சிக்கல் இருக்கலாம். அது தினமும் தொடர்கிறது என்றுதான் நினைக்கிறேன். அது குடும்பத்தில் இருக்கலாம், குடும்ப நபர்களில் இருக்கலாம், உங்களின் நெருங்கிய நட்பு வட்டத்தில் இருக்கலாம், உங்களின் தொழில், வியாபாரம், வேலை இவற்றிலும் கூட சிக்கல் இருக்கலாம்.

எனவே முதலில், இந்த சிக்கல், மன குழப்பம் தருவது எது என்று ஆராயுங்கள். ஒருநாளை இதற்கென்று ஒதுக்கி, ஏதேனும் தனிமையில் உட்கார்ந்து யோசியுங்கள், சிந்தனை செய்யுங்கள், முதலில் உங்கள் கைபேசி, மற்ற இதர உபயோகங்களை ஒருநாள் தவிர்த்துவிடுங்கள். வெறும் ஆளாக அமர்ந்து, யாரையும் அருகில் விடாமல் தனியாக, உங்கள் வீட்டிலே கூட அமைதியாக இருந்து சிந்தித்துப் பாருங்கள். இதைத்தான், வேதாத்திரியத்தில் ‘அகத்தாய்வு எனும் தற்சோதனை’ என்றும் சொல்லுகிறோம். உங்களுக்கு தவம் செய்ய வாய்ப்பிருந்தால், முதலில் துரிய தவம் செய்துவிட்டு பிறகு இந்த சிந்தனையை தொடருங்கள். நிச்சயமாக விடை கிடைக்கும்.

அந்த சிக்கல், அதன் தன்மை, யாரால் வந்தது?, எதனால் வந்தது? எப்படி தீர்க்கலாம்? யார் உதவுவார்கள்? எவ்வளவு காலம் ஆகும்? நீடித்தால் என்னாகும்? விலக்கிவைக்க முடியுமா? ஏற்று வாழ முடியுமா? என்றெல்லாம் கேள்வி கேட்டு அந்த பதிலை எழுதியும் வையுங்கள். மறுபடி ஆராயுங்கள்.

மற்றபடி பிரச்சனையும், சிக்கலும், குறையும் மனதில் சுமந்து கொண்டு இருக்கிற நிலையில், நீங்கள் வீட்டில் தவம் செய்தாலும் அமைதி கிடைக்காது. கோவிலுக்கு சென்று வணங்கி, வழிபாடு செய்தாலும் அமைதி கிடைக்காது. பிரச்சனை உங்கள் தவத்தில் இல்லை, கோவிலிலும் இல்லை. அது அந்த பிரச்சனை உங்களுடைய மனதில்தான் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள். உண்மை அறிந்தால் அந்த அமைதியை நீங்கள் அறிந்து அதை அனுபவிக்கலாம்.

வாழ்க வளமுடன்.

-

AKASH TECHNOLOGIES AND CULTURAL EDUTATION presents SEREVIYO


AKASH TECHNOLOGIES AND CULTURAL EDUTATION

ஆகாஷ் தொழிநுட்பம் மற்றும் கலாச்சார கல்வி

வணக்கம் அன்பர்களே,

கடந்த அக்டோபர் மாத்தில், ஆகாஷ் தொழிநுட்பம் மற்றும் கலாச்சார கல்வி (AKASH TECHNOLOGIES AND CULTURAL EDUTATION) என்ற பெயரில் தனிப்பட்ட ஒரு சேவை நிறுவனம் அமைத்தாகி விட்டது! 

இதன்வழியாக, ஒரு குறிப்பிட்ட வரையறை எல்லைக்குள்ளாகவும், வளையத்திற்குள்ளாகவும் செயல்பட்டாகவேண்டிய கட்டாயத்திலிருந்து விடுதலை கிடைத்துவிடுகிறது. ஏனென்றால், ஒருவரை பின்பற்றி நடந்தால் (அதாவது குரு மகான் வேதாத்திரி மகரிஷியை), நாம் பெற்ற வேதாத்திரிய கருத்துக்களைக்கூட சொல்ல முடியவில்லை. இது அவருடையதா, உன்னுடையதா? என்று சந்தேகிக்கின்றனர். அதை பல பின்னூட்டங்கள் வழியாக நான் அறிவேன். இதனோடு எப்படி, நாம் பெற்ற நம்முடைய அனுபவங்களை சொல்லமுடியும்? 

மேலும் அப்படியான ஒருவரை, பின்பற்றி அவர் வழி நடக்க மாபெரும் சங்கமும் இருக்கிறது, மக்களும் இருக்கின்றனர். சிலவேளை, நாம் பகிர்கின்ற ஒரு சில பதிவுகளை, கருத்துக்களை ‘எங்களுடையது’என்று காப்புரிமை கோருகிறார்கள். என்னுடைய வேதாத்திரிய யோகா காணொளி பதிவிலும் அப்படி ஒரு பிரச்சனை எழுந்து, அதை ஏற்று, அழிக்கவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டேன். ஏனென்றால், YouTube அதை என்னிடம் சொல்லி, நீக்குமாறு எச்சரிக்கையாக சொல்லிவிட்டது. அதை நாம் மீறினால் குற்றம் என்றாகிவிடும். பிறகு நம்முடைய காணொளி சேவையும் நீக்கப்படும்.

இதுகுறித்து எனக்கு கவலையில்லை. என்றாலும், இதை நாம் எளிமையாக கடந்து நகர்வோம். ஏனென்றால், நமக்கு அந்த ஒருவரும், அவர் தந்த உண்மை விளக்கமும், அதன் வழியாக நாம் பெற்ற உண்மையும், அனுபவமும் நமக்கு கிடைத்திருக்கிறது. அதுபோதும்!

அதனால்தான், இந்த வட்டத்தை விட்டு வெளியே வரவேண்டும், அது அவசியமானதாக இருக்கிறது என்ற சிந்தனை எனக்குள் எழுந்தது. அந்த அடிப்படையில்தான், ஆகாஷ் தொழிநுட்பம் மற்றும் கலாச்சார கல்வி என்ற் அமைப்பின் வழியாக, சேரெவியோ எனும் அறம், யோகம் வழியாக தன்னையறிதல் (Sereviyo : Self-Realization with Virtue and Yoga) என்ற சேவை தொடங்கப்பட்டது. 

இதனுடைய நோக்கம், ஏற்கனவே தீட்சை எடுத்துக்கொண்ட அன்பர்களுக்கு ஊக்கமளித்து, அவர்களை உயர்த்திட துணை செய்வதும், தீட்சை பெறாதோர்க்கும், சராசரி அன்பர்களுக்கும், வாழ்வில் துன்புற்று வருந்தி, கலங்குவோருக்கும் உதவிடும் வகையில், பதிவுகள் அமைந்திருக்கும்.

பதிவுகளை கேட்டுக்கொண்டே எல்லோரும் தவம் இயற்றிடவும் இங்கே வழிகள் சொல்லித்தரப்படும். அது உங்களையும், உங்கள் மனதை புரிந்துகொள்ள உறுதுணையாக இருக்கும். தொடர்ந்து இங்கே பயணம் செய்வது மட்டுமே உங்களை, தன்னையறிதலை நோக்கி நகர்த்தும் என்பது உண்மை.

முக்கியமாக, இங்கே உங்களுக்கு இருக்கின்ற எல்லாவிதமான நம்பிக்கைகளையும், வழக்க, பழக்கங்களையும் கைவிட்ட நிலையில் நீங்கள் இணைந்துகொண்டால், உங்கள் வளர்ச்சி அபரிதமாக அமையும் என்பது என்னுடைய கணிப்பு. ஆனால் அதை விட்டுவிலகுதலும், கைவிடுதலும் அவ்வளவு சுலபமும் அன்று. ஆனால் அதை நீங்களே முடிவு செய்யலாம். தொடர்ந்து பதிவுகளை காணுங்கள். உங்களை வரவேற்று மகிழ்வதில் பெருமிதம் கொள்கிறேன். நன்றி

இது தொடர்பான விளக்கங்கள், மேலும்...

Sereviyo Welcomes you!

செரெவியோ வழியாக உங்களை வரவேற்கிறோம். ஏற்கனவே தீட்சை பெற்றவர்கள் மட்டுமல்லாமல், எளிமையான வழியில், தீட்சை பெறாதவர்களுக்கும், சராசரி மனிதர்களுக்காகவும்! முன்னுரையாக எப்படி செயல்பட விரும்புகிறோம் என்பதையும், அது உங்களுடைய வாழ்விற்கு எவ்விதம் உதவும் என்ற வகையிலும் விளக்கம் தந்துள்ளோம். கண்டு கேட்டு பயன்பெறுக. நாம் தொடர்ந்து பயணிப்போம். நன்றி!

வேதாத்திரிய உண்மைகளை, இயல்பான வாழ்வோடு கலந்து, இன்னொரு பரிணாமத்தில், நம்மை அறிவதற்கான பயணம் இது. விருப்புவோர் இணைந்துக்கொண்டு, உங்களுக்கு விருப்பமானவர்களுக்கும் பகிருங்கள்!

https://www.youtube.com/@sereviyo

-

முதல் காணொளி பதிவு (அறிமுகம்)

Do you like to understand the secret of you and this universe? ரகசியத்தை அறிந்துகொள்ள விருப்பமா? 

https://www.youtube.com/watch?v=iOKawT1Ghu8

-

Sereviyo WhatsApp Group

Sereviyo என்பது, அறம், யோகம் வழியாக தன்னையறிதல் என்ற சேவை ஆகும். இது ஏற்கனவே தீட்சை பெற்றவர்கள் மட்டுமல்லாமல், எளிமையான வழியில், தீட்சை பெறாதவர்களுக்கும், சராசரி மனிதர்களுக்காகவும் வழங்கப்படுகிறது!

உங்களுடைய கருத்துக்கள், பின்னூட்டங்கள் தெரிவிக்கலாம். பதிவுகள் குறித்த முன்னூட்டம், விளக்கம் பெறலாம். உங்களுக்கான ஆறுதல், சந்தேக தீர்வு, கேள்விக்கான பதில்களை பெறலாம்.

https://chat.whatsapp.com/H6KiDLTtSfG9gXusm9czGp

-