CJ for You: center

center

Showing posts with label center. Show all posts
Showing posts with label center. Show all posts

Did you know? Kundalini energy and yogic sadhana are the true explanation.


உங்களுக்குத் தெரியுமா? குண்டலினி சக்தியாற்றலும் யோக சாதனையும் உண்மை விளக்கம். 

    
        குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள், பல்லாண்டு காலமாக, கடின முறைகளால் சிக்கி இருந்த, குண்டலினி யோகத்தை, தான் கற்றுத் தேர்ந்து, உண்மை உணர்ந்து, அதை விஞ்ஞானத்தோடு உதாரணங்களால், விளக்கி, புரியவைக்கும் வழியில், திருத்தி அமைத்தார், எளியமுறை குண்டலினி யோகமாக, இல்லறத்தை விட்டு விலகிடாமல், பருவம் வந்த அனைவருமே, ஆண், பெண் பேதமின்றி கற்று, நான் யார்? என்ற கேள்விக்கான பதிலைப் பெற்று, பிரம்மஞானம் என்ற மெய்ப்பொருள் உண்மை விளக்கத்தை பெற வழிவகை செய்தவர். குண்டலினி சக்தியாற்றல் குறித்தும், யோகசாதனை குறித்தும் சொல்லும் விளக்கம், இதோ, 

நாம் உணர்ந்து உலகிற்கு உணர்த்துவது எளியமுறைக் குண்டலினி யோகம் என்பதாகும். எளியமுறைக் குண்டலினி என்பது அறிவின் பதிவைக் கொண்ட உயிர்ச் சக்தியை மேலே நோக்கி எழச் செய்து அதிலே ஒன்றி நின்று இயற்கை இரகசியங்களை உணர்ந்து தன்னிலை உணரும் பயிற்சியாகும். உயரே செல்லாமல், கீழ்நோக்கி போகவிட்டால் மேல்நிலை அனுபவ உணர்வு பெறுவது போய், தாழ்ந்த உணர்வுகளே தலையெடுத்து ஓங்கும் நிலை ஏற்படும். அதைத் தான் இன்று பெரும்பாலும் காண்கிறோம். அதனால் தான் சிக்கல்கள் ஏற்படுகின்றன.  

  மனிதன் இந்தப் பழக்கத்தால் அவனின் உயிர்ச்சக்தி கீழ் நோக்கிய இடத்தில், அதாவது மூலாதாரத்தில் தேங்கிக் கிடக்கின்றது; குண்டலித்து உள்ளது. இதனையே குண்டலினி சக்தி என்கிறோம். சக்தி என்ற உடன் அது உடல் எங்கும் நிலவுவதாயிற்றே என்ற எண்ணம் எழலாம். எங்கும் இயங்கும் சக்திக்கு ஒரு இயக்க மையம் வேண்டும் அல்லவா? இந்த இயக்க மையமே மூலாதாரம் எனப்படும். எனவே, இயக்க மையத்தை முறையாக உசுப்பிவிடும்போது மிகச் சிறப்பாகச் செயல்படுவது இயல்பு. அதைத்தான் எளியமுறைக் குண்டலினியோகப் பயிற்சி என்கிறோம்.  

  இந்த உயிர்சக்தி உடலின் மற்ற எல்லா இடத்திலும் பரவி இருப்பினும் அதற்கு ஒரு இயக்க மையம் உண்டு. இரத்தம் உடல் முழுவதிலும் பரவி இருந்தாலும் இருதயத்தை இயக்க மையமாகக் கொண்டிருப்பதனைப் போல, காற்று உடல் முழுவதிலும் பரவி இருப்பினும் நுரையீரலை இயக்க மையமாகக் கொண்டிருப்பதனைப் போல, உயிர்ச் சக்திக்கும் இயக்க மையம் இருக்கத்தானே வேண்டும். உயிருக்கு இயக்க மையங்கள் பல உள்ளன. அத்தகைய மையங்கள் உடம்பில் ஆறு இடங்களில் இருப்பதாக மெய்யுணர்வாளர்கள் உணர்ந்து உணர்த்தி உள்ளனர். அவைகளில் அடிமட்டத்தில் இருக்கும் மையம் மூலாதாரமாகும். 

  ஒவ்வொரு மையத்திலும், உயிர்ச்சக்தியை இயக்கிவிட்டால் அதற்கேற்ற பலன் ஏற்படும். மேலும் கீழே இருந்து மேலே போகப் போக, பலன்மிகும். இவ்வாறு இயக்கிவிடப்படும் உயிர்ச்சக்தியால் உடலில் உள்ள செல்களை ஒழுங்குபடுத்திச் செயல்படுத்த இயலும். உயிர்ச் சக்தியானது உடலின் செல்களுக்கு ஒத்த முறையில் அமையவில்லையென்றால் உடல் நோய்கள், மன நோய்கள் போன்றவை ஏற்படும். எனவே, ஆற்றல் மிக்க உயிர்ச்சக்தியைச் சேர்க்கவும், பாதுகாக்கவும் அறிந்திருக்க வேண்டும்.  

  இதனைத்தான் ஆன்மீக அறிவு என்கின்றனர். இந்தத் தெளிவையும் பயிற்சியையும் நல்குவதே எளியமுறைக் குண்டலினியோகம் என்பது. உயிர்ச் சக்தியை உணர்ந்து அதன் இயக்கத்தை நெறிப்படுத்துவதன் மூலம், அதன் படர்க்கை நிலையான மனதையும் சீரமைத்துக் கொள்ள இயலும். 

        இந்த குண்டலினி உயர்த்துதல், தேர்ந்த குருவின் வழியாக, தீட்சையாக மட்டுமே பெற வேண்டியது அவசியம். சுயமாகவோ, தானாகவோ, அனுபவம் இல்லாதோரிடமோ, குறுக்குவழியிலோ, மந்திட உச்சாடன பூஜை வழியாகவோ செய்துவிடக்கூடாது. இதைக்குறித்த விளக்கம் அறிய, இந்த காணொளி தொகுப்பு உங்களுக்கு உதவலாம்.

-

குண்டலினி உயர்த்துதலும் ஆபத்து காரணிகளும் - Kundalini Raising and Risk Factors

https://www.youtube.com/playlist?list=PLQQJZk6S322lsF-zw6W4w-dLqJeJx2pyb

வாழ்க வளமுடன்.

-

மூலவடிவம்: அருட்தந்தை வேதாத்திரி மகரிசி அவர்கள்.

-


Any of yoga chakra bottom of the Moolathara? Can we meditate there? What kind of benefits on that?


மூலாதாரத்திற்கு கீழே ஆதார சக்கரங்கள் உண்டா? நாம் அங்கே தியானம் செய்யமுடியுமா? செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும்?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா! மூலாதாரத்திற்கு கீழே ஆதார சக்கரங்கள் உண்டா? நாம் அங்கே தியானம் செய்யமுடியுமா? செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும்?


பதில்: 

இந்த பிரபஞ்சத்தில் உள்ள எல்லா பொருட்களுக்கும், தன்னளவில் ஒரு மையம் உண்டு. அது எந்த வடிவத்தில் இருந்தாலும், எந்த அளவிலே இருந்தாலும், எந்த உருவத்தில் இருந்தாலும் கூட அதன் மையமாக ஒரு நிலை நிச்சயமாக உண்டு. அதுபோலவே எந்த ஜீவன்கள் எடுத்துக் கொண்டாலும், அதன் உடலின் நீளம் அகலம் அளவை எடுத்துக்கொண்டு வகுத்தால், அதன் மையத்திலும் ஓர் புள்ளியான நிலை உண்டு. மனிதனுக்கும் அவ்வாறே உண்டு. அதுவே மூலாதாரம் என்று வழங்குகிறோம். இந்த விளக்கங்களின்படி, மூலாதாரத்திற்கு கீழே என்று சொல்லுவதற்கு இடமில்லை. நாம் நிமிர்ந்து நடப்பதால், மூலாதாரத்திற்கு கீழே என்று உங்களுக்கு சந்தேகம் எழுகிறதா? மேலே கீழே என்பதெல்லாம், நம்முடைய விளக்கத்திற்க்காத்தானே தவிர அப்படி எதும் இல்லை என்று சொல்லமுடியும். மேலும் பூவி ஈர்ப்பு ஒன்று இருப்பதால்தான் கீழே என்பது மேலே என்பதும் தோன்றுகிறது. வான் வெளியில், பிரபஞ்சத்தில் மிதக்கும், நாம் வாழும் பூமிக்கே மேலே கீழே என்று எப்படி, எதைச் சொல்லுவது? அதுப்போலவே மனிதனைத் தவிர்த்து, உணர்வன என்ற வகுப்பில் உள்ள, பாம்பு, பல்லி, முதலை, ஆமை இவற்றிற்கெல்லாம் என்ன சொல்லுவது?

மூலம் + ஆதாரம் என்பதுதான் மூலாதாரம் ஆகிறது. எப்பொருளுக்கும் ஓர் மையப்புள்ளி என்ற நிலைபாடு சரியானதுதான். எனவே மூலாதாரத்திற்கு கீழே என்ற சக்கரங்களும், ஆதாரமையங்களும் இல்லை என்பதே சரியானது.

உங்கள் கேள்வியில் உள்ளடக்கமாக இருக்கும், ஓர் சந்தேகத்திற்கும் பதில் சொல்லியாகவேண்டும். தெய்வீக திருவிளையாடல் என்று வேதாத்திரி மகரிஷி அவர்கள் விளக்குகின்ற, உயிரின பரிணாமத்தில் இயல்பூக்கத்தின் வழியாகவே, தன்னை மேம்படுத்தி முழுமையான நிலைதான் மனிதன் ஆகும். மனிதன் என்ற நிலையில், அந்த தெய்வீகம் தன்னையே அறிந்து முழுமையும் செய்து கொண்டது. அப்படி இருக்கும்பொழுது, மூலாதரத்திற்கும் மேலே என்று சொல்லுவது தவறு, மூலாதாரத்திற்கு உயர்வான நிலை, ஆதார சக்கரங்களில் தான் நமக்கு, வேலை இருக்கிறதே தவிர கீழே இல்லை. நீங்கள் உங்களை ‘நான் யார்?’ என்ற தேடலின் வழியான உண்மையை அறிய, மூலாதார நிலை தாண்டிய உயர் நிலைகளை அடையவேண்டும்.

மூலாதாரத்திற்கு கீழே அதாவது, மூலாதாரத்திற்கு தாழ்வான நிலைகளில் நீங்கள், தனியாக ஒன்றும் செல்லவேண்டியதில்லை. அதுதான் வழக்கமாக நம் வாழ்நாளில் வந்து கொண்டே இருக்கிறதே? நம்மையும் பாடாய்படுத்துகிறதே? ‘என்னை மிருகமாக்கிறாதே’ என்று தானே நாம் மற்றவர்களிடம் சொல்லுகிறோம் / கத்துகிறோம். உண்மைதானே? இதற்கு வேதாத்திரி மகரிஷியே ஒரு விளக்கம் தருவார். பேசிக்கொண்டிருக்கும் இருவருக்கு, ஏதேனும் வாக்குவதம் முற்றி அடிதடியில் இறங்கினால், ஆயுதம் ஏதும் இல்லாத நிலையில், யாரோ ஒருவர் மற்றவரை கடிக்கச்செய்வார், நகத்தால் பிராண்டுவார், கைகளால் தாக்குவார். இதெல்லாம் யார் செய்தது? நாம் பார்க்கின்ற காட்டுவிலங்குகள் செய்யும் செயல்கள் அல்லவா? இது ஏன் மனிதனிடம் வந்தது?

மனிதன் பரிணாமத்தின் வழியே, விலங்குகளின் மூலத்தைக் கொண்டவன். மனிதாக வந்தும் கூட அவனின், கருமையத்தில், விலங்கினத்தின் தன்மைகள் உள்ளடக்கம் பெற்றிருக்கின்றன. அவன் அதிலிருந்து விலகி, மனம் இதனான மனிதனாக மாறிட, அவனின் உயிரின் இயக்க மையத்தை மாற்றி அமைத்து, உயர்த்திட வேண்டியது அவசியம். அதைத்தான் குண்டலினி தீட்சை என்று அழைக்கிறோம். மூலாதாரம், உயர்சக்தி மையம், மனதின் மூலமான காந்த மையம், வித்து சக்தியின் மையம் எல்லாமே கருமையம் என்ற ஒரே இடத்தில்தானே இயற்கையாக அமைகிறது. சராசரி மனிதன், நீங்கள் கேட்பது போல, கீழே தாழ்வான நிலையில் இருந்துதான் வாழ்கிறான். அவன் உயர்வடைய, சிறப்படைய, உண்மை உணர, தன்னையறிய, மூலாதாரத்தில் இருந்து உயர்வான நிலையைத்தான் தியானிக்க வேண்டும். அதில் எந்தவித மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை.

யோகத்திற்கு வராமல், குருவின் வழியாக தீட்சையும் எடுத்துக்கொள்ளாத மனிதன் இயல்பாகவே தன்னை மறந்து, விலங்கினத்தின் பண்புகளை வெளிப்படுத்தியே வாழ்வான், வாழ்ந்துகொண்டு இருப்பான். இப்போது உங்களுக்கு விளக்கம் கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன்.

வாழ்க வளமுடன்.

-

How to concentrate on the Thuvathasanga when we practice the Thuriyatheetha Meditation?


துரியாதீத தவம் செய்யும் பொழுது சொல்லக்கூடிய, துவாதசாங்கம் எப்படி நினைவுக்கு கொண்டுவருவது என்று விளக்குவீர்களா?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா! துரியாதீத தவம் செய்யும் பொழுது சொல்லக்கூடிய, துவாதசாங்கம் எப்படி நினைவுக்கு கொண்டுவருவது என்று விளக்குவீர்களா?


பதில்: 

பெரும்பாலான யோக சாதனை நிலையங்களில், துரியாதீத தவம் கிடையாது. அதுகுறித்து அவர்களுக்குத் தெரியாது. அதை மிகச்சரியாக புரிந்துகொள்ளவும் வாய்ப்பில்லை. ஏனென்றால், துரியாதீத தவம் என்பது, குரு மகான் வேதாத்திரி மகரிஷி தானாக வடிவமைத்து, தன் அன்பர்களுக்கும், இந்த உலகுக்கும் தந்த ஒரு அற்புதமான தியானமும் தவமும் ஆகும்.

யோகத்தில், ராஜயோகமாக கருதப்படும் நிலையில், சகஸ்ரதாரா என்ற 1008 இதழ் தாமரைக்கு ஒப்பாக சொல்லும், துரியம் என்ற தவ நிலைதான் உயர்வானதாகும். துரியத்திற்கு மேலான தவம் இல்லை என்பதுதான் இங்கே இருக்கும் நிலை. ஆனால் வேதாத்திரியத்தில், கூடுதலாக ‘துரியாதீதம்’ உண்டு. அது ஏன்? எப்படி? எதற்காக? என்பதெல்லாம் இன்னொரு பதிவாக பார்க்கலாம். இப்பொழுது நீங்கள் கேட்ட, கேள்விக்கு வரலாம்.

துவாத சாங்கம் என்பது ஓர் ஆதாரமோ, மைய சக்கரமோ, நிலையோ அல்ல என்பது தான் உண்மை. ஆனால் அதை அனுமானமாக, உளப்பூர்வமாக, உணர்வாக நாம் அறியலாம். இது யோகத்தில் குறிப்பிடக்கூடிய ஒரு நிலைதான் என்பதும் உண்மை. இந்த துவாத சாங்கம் குறித்து அனேக யோக சாதனையாளர்களும் சொல்லியுள்ளனர். பொதுவாகவே, ஜடப்பொருளோ, உயிர்ப்பொருளோ எடுத்துக்கொண்டால், அவற்றைச்சுற்றிலும் ஒரு அலை இயக்கம் நிகழ்ந்துகொண்டே இருக்கும். இது நவீன விஞ்ஞானத்தாலும் நிரூபணம் செய்யப்பட்ட உண்மையாகும். அந்த அலை குறிப்பிட்ட வண்ணங்களில் கூட இருக்கிறது என்று, அகச்சிவப்பு கதிர் காமெரா, புற ஊதா கதிர் காமெரா இவற்றின் வழியாக, ஒளிப்படமாக எடுத்திருக்கிறார்கள் என்பதையும் நாம் அறிவோம்.

அப்படியான அலை இயக்கம், மனிதனுக்கும் இருக்கும்தானே? ஆம். அவனுக்குள்ளாக இயங்கும் ஆற்றலானது. அவனைச் சுற்றிலும், உடலுக்கு வெளியில், குறிப்பாக ‘ஒருஅடி தூரத்தில்’ வீசிக்கொண்டே இருக்கிறது. இந்த அலை இயக்கம் சிலவேளைகளில் சுருங்கவும் செய்யலாம், கூடுதலாக விரியவும் செய்யலாம். அதற்கான காரணங்கள் பல இருக்கின்றன. இப்போது அது நமக்கு தேவையில்லை. இந்த ஒருஅடி தூர அளவிற்கு (12 அங்குலம் / 12Inch) அளவினால அலை இயக்கத்திற்கு, ஓரு புள்ளியை ‘மானசீகமாக’ அமைக்கிறோம். அதுதான் தலைக்குமேலே, உச்சியில் இருந்து மேல்நோக்கிய நிலையில் இருக்கும் ‘துவாத சாங்கம்’ என்ற நிலையாகும். நீங்கள் தவம் செய்யும் பொழுது, உங்கள் மனதாலேயே அந்த இடத்தை நினைவுப்படுத்திக் கொள்ளலாம். மிகச்சரியாக இடத்தை தீர்மானிப்பதும், அங்கே கவனத்தை நிலைப்படுத்துவதும், மனதை ஒன்றினைப்பதும் கடினமே. எனினும் தொடர்ந்து தவம் செய்யச்செய்ய அது உங்களுக்கு கைகூடும் என்பது உறுதி.

        முக்கியமாக, இதை ஆரா (Aura) என்று அர்த்தப்படுத்திக்கொள்ளக் கூடாது. ஆரா என்பது வேறுமாதிரியான தன்மை கொண்டதாகும்.

வாழ்க வளமுடன்.

-

Why need importance to Shanti Yoga Meditation?


சாந்தி தவத்திற்கு முக்கியத்துவம் தரவேண்டிய அவசியம் என்ன?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி: 

வாழ்க வளமுடன் ஐயா, சாந்தி தவத்திற்கு முக்கியத்துவம் தரவேண்டிய அவசியம் என்ன?


பதில்: 

வேதாத்திரியத்திற்கு நீங்கள் முற்றிலும் புதியவர் என்றால், இந்த கேள்வி இயல்பானது. ஆனால், நீங்கள் வேதாத்திரியத்தில் இணைந்து பயிற்சிகளில் பல மாதம், ஆண்டு அனுபவம் உள்ளவர் என்றால், சாந்திதவம் குறித்த புரிதல் உங்களுக்கு இல்லை என்பது நிச்சயமானது. அதுபோலவே நீங்கள், வேதாத்திரிய தவங்களை சரியாக செய்யவதும் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது என்பதும் உண்மையாகும்.

எந்த ஒரு யோக அமைப்பிலும் இல்லாத ஒரு சிறப்பு, மனவளக்கலையில் உண்டு. அந்த சிறப்பை தருவதற்கு நிறைய இருந்தாலும் கூட, மிக முக்கியமான ஒன்றுதான் இந்த சாந்தி யோகம். கூடுதலாக, இந்த சாந்தி யோகம் பரஞ்ஜோதி மகான் அவர்களால், வேதாத்திரி மகரிஷிக்கு கற்றுக்கொடுக்கப்பட்டு, பிறகு மனவளக்கலையிலும் இணைக்கப்பட்டது என்பது வரலாறு. எனவே நாம் பரஞ்சோதி மகானுக்கும் நன்றியை, வாழ்த்தை வழங்கவேண்டியதும் அவசியம்.

சாந்தி யோகம் என்ற சாந்தி தவம் எதற்காக? ஒரு உதாரணம் வழியாக அறியலாமா? இதோ!

-

ஒரு புதிய இருசக்கர வாகனம் வாங்குகிறீர்கள். பரிசோதனை ஓட்டம் ஒட்டிப்பார்த்து, மிகவும் திருப்தியோடும், மன நிறைவோடும் வாங்கிவிட்டீட்கள். புதிய தொழில்னுட்பங்கள் நிறைந்த அந்த வாகனம், பார்க்கவும் அழகு, அதன் செயல்திறனிலும் அழகு. வழக்கமான விதிமுறைகள் பின்பற்றி வீட்டிற்கு கொண்டுவந்தும் நிறுத்திவிட்டீர்கள். மறுநாள் நீங்களும் உங்கள் நண்பரும், அருகில் உள்ள ஒரு நகரத்திற்கு சுற்றுலா திட்டமிட்டு அதிகாலை, உங்கள் புதிய வாகனத்தில், நிறைவான பெட்ரோல் நிரப்பிக்கொண்டு பயணிக்கிறீர்கள். பயணம் மிகச்சிறப்பாக ஆரம்ப்பிக்கிறது.

அதிகாலை சூரியவெளிச்சமும், குளிர்ந்த காற்றும் மனதுக்கு இதமாகிறது. நண்பரோடு பேசிக்கொண்டே நீங்கள், வாகன ஓட்டத்தின் சுகத்தையும் அனுபவிக்கிறீர்கள். உங்களுக்கு இப்போது ஒரு எண்ணம் தோன்றுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக இதன் வேகத்தை அதிகப்படுத்தி பயணிக்கலாமே? என்று நினைக்கிறீர்கள். உங்கள் நண்பரிடம் பகிர்ந்து கொள்ள, அந்த நண்பரும் அதை ஆமோதிக்கிறார். இப்போது வாகனம் முன்னைவிட சீறிப்பாய்கிறது. காற்றின் வேகத்தை கிழித்துக்கொண்டு போவதுபோல முன்னேறுகிறீர்கள். வேகம், இன்னும் வேகம். மிக அற்புதமான அனுபவத்தை பெறுகிறீர்கள். நல்லவேகத்தில் சென்றுகொண்டே இருக்கும்பொழுது, உங்கள் வாகனத்தின் இன்ஜின் நிறுவிட்டது, வண்டியின் வேகம் குறைந்து நின்றுவிட்டது. நல்லவேளையாக சாலையின் ஓரம் வந்துவிட்டீர்கள். இறங்கி வண்டியை பரிசோதித்தால் ஏதும் குறையில்லை. மறுபடி வாகனத்தை இயக்கினால் எதுவும் நடக்கவில்லை. கிக்கர், ஸ்டார்ட் பட்டன் எதுவும் வேலை செய்யவில்லை. இப்போதைக்கு வண்டியை நிறுத்தலாம். இல்லையேல் தள்ளிக்கொண்டு போகலாம். நீங்களும் உங்கள் நண்பரும் அதில் சோர்ந்துவிட்டீர்கள். மனம் தளர்ந்துவிட்டீர்கள். இப்படி ஆகிவிட்டதே என்று கவலை கொண்டீர்கள்.

உடனே, வாகன விற்பனையத்திற்கு அழைப்பு விடுத்து நிலைமையை சொல்லுகிறீர்கள். நீங்கள் சொல்லுவதை அவர்கள், கலந்தாலோசிக்கிறார்கள். உடனே அங்கே இருக்கும் ஒருவர், அந்த மெக்கானிக் புரிந்துகொண்டார். 

‘ரொம்ப வேகமா போனீங்களா சார்?’

‘ஆமாங்க, எப்படி இருக்கும்னு செக் செய்தோம்’

‘அதான் சார் பிராப்ளம். புதுவண்டி அவ்வளோ வேகமா போகக்கூடாது, என்ஜின் ஜாம் ஆகிருக்கும். காத்திருங்க நாங்க வந்து அங்கேயே சரி செய்கிறோம்’

இனி வேறு வழி இல்லை, அவர்கள் வரும்வரை காத்திருக்கவேண்டியதுதான். இல்லையா?!

-

இந்த விளக்கத்தில் உங்களுக்கு ஒரு உண்மை புரிந்திருக்கும்தானே? நாம் தவம் இயற்றுவதில் ஆற்றல் தேக்கம் வரக்கூடாது. அப்படி வந்துவிட்டால், நமக்கு தலைபாரமும், உடல் வலியும் சோர்வும் வந்துவிடும். அதனால் நம்முடைய இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும். ஏனென்றால் நம்முடைய உடலும், மனமும் தவத்திற்கும், தவ ஆற்றலுக்கும் பழகவில்லை. அந்த பழக்கம் வரும்வரை, வாரத்தில் ஒருநாள், சாந்தி தவம் என்ற இறங்குபடி தவம் அவசியம். தவ ஆற்றலை, மீண்டும் ஒருநாள் மட்டுமாவது மூலாதர மையத்தில் நின்று இயங்கச்செய்யவேண்டும். அப்படிச் செய்தால், அதீத தவ ஆற்றல், உடல் ஆற்றலாகமாறி உடலுக்கும், மனதுக்கும் நன்மை செய்யும்.

இதனால்தான் சாந்தி யோகம் என்ற சாந்தி தவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அதை நீங்களும் கடைபிடிக்க வேண்டியதும் அவசியமாகும்.

வாழ்க வளமுடன்

-

Why it is called by Vethathiriyam instead of Ashtanga yoga?


எல்லோருமே அஷ்டாங்க யோகம் என்றே சொல்லிவரும் பொழுது, வேதாத்திரிய யோகம் என்று சொல்லப்படுவதின் அர்த்தம் என்ன?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, எல்லோருமே அஷ்டாங்க யோகம் என்றே சொல்லிவரும் பொழுது, வேதாத்திரிய யோகம் என்று சொல்லப்படுவதின் அர்த்தம் என்ன?

பதில்:

பதஞ்சலி முனிவர் வகுத்துத்தந்த அஷ்டாங்க யோகம்தான் இன்றும் தொடரப்படுகிறது என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. உலகில் இருக்கின்ற எல்லாவகையான பெயரில் இயங்கிவரும், மக்களுக்கு ஆன்மீக சேவை வழங்கிவரும் யோக மையங்களும், இந்த அஷ்டாங்க யோகத்தின் வழியாகத்தான் கல்விப்பாடங்களையும், பயிற்சிகளையும் வழங்கி வருகின்றன. மெய்ப்பொருள் உண்மை விளக்கத்திற்கு வேதாந்ததையும் எடுத்துகொண்டு விரிவுரை தருவார்கள். அதில் தங்கள் அனுபவத்தையும் இணைத்துத் தருவார்கள். அந்த தலைமை யோகி, மகான், ஞானி, ஆகியோருக்குப் பிறகு, அவை அனைத்தையும் கற்று முழுமை அனுபவம் பெற்றவர் தனியாகவும் அதையே தொடர்வார், அங்கேயே பயிற்றுனராகவும் ஆசிரியராகவும் தொடர்வார். பெரும்பாலும் தங்களுடைய பயிற்சியில் எதையுமே மாற்றிக் கொள்ளவே மாட்டார்கள். அந்த பழமை மூலமானது, நவீன காலத்துக்கு ஏற்றபடி தொடருமே தவிர, வேறுஎதும் மாறிடாது.

இப்போதும் கூட அஷ்டாங்க  யோகம் இல்லாத சித்தர்வழி யோகமுறைகளும் உண்டு என்பதை மறுக்கமுடியாது. இதில் வேதாந்த கருத்துக்களின்றி, சித்தாந்த கருத்துக்களே பகிரப்படும். ஒருவகையில் நேரடியான யோக முறை என்று சொல்லவும் வாய்ப்புண்டு. இதிலும் அந்தக்கால பழமையான கடின பயிற்சிமுறைகள் உண்டு. மாற்றத்தை ஏற்றுக்கொள்ள மாட்டர்கள். உண்மை விளக்கம் பெறவர்கள் தங்களை யோகி, சித்தர் என்றும் விளங்கிக்கொண்டு கல்வி பாடங்களை, பயிற்சிகளை வழங்கிவருவார்கள். இங்கும் அனைத்தையும் கற்று முழுமை அனுபவம் பெற்றவர் தனியாகவும் அதையே தொடர்வார், அங்கேயே பயிற்றுனராகவும் ஆசிரியராகவும் தொடர்வார். 
இந்த இரண்டு நிலையான யோக மையங்களில், மெய்ஞான விளக்கங்கள் மட்டுமே இருக்கும். விஞ்ஞான விளக்கமோ ஒப்பீடோ, தகுந்த விளக்கமோ இருக்க வாய்ப்பில்லை. எல்லாவகையிலும், ஏற்கனவே சொல்லப்பட்டது எதுவோ அதுவேதான் தொடரும். சிற்சில கருத்துக்கள் மாறலாம் ஆனால், பழமையே தொடரும். அதற்கே முக்கியத்துவமும் தரப்படும். எக்காலத்திலும் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை என்ற உறுதி இருக்கும்.

ஆனால், குரு மகான் வேதாத்திரி, வேதாந்தம், சித்தாந்தம் இரண்டிலும் பெற்ற அனுபவங்களோடு அதில், ஆராய்ச்சியில் கிடைத்த உண்மைகளை எடுத்துக்கொண்டார். ஒவ்வொரு சைவ, வைஷ்ணவ, வேதாந்த விற்பனர்கள், சித்தர்கள் ஆகியோர் கவியாக வழங்கிய மெய்ஞான அனுபவங்களையும் ஏற்று விளக்கம் பெற்றார். உலகில் அணு முதல் அண்டம் வரையிலான விஞ்ஞான ஆராச்சிகளையும் அறிந்து அவற்றின் வழியாகவும் கிடைத்த ஆய்வுகளை, யோகத்தின் உண்மையை விளக்குவதற்கு பயன்படுத்திக் கொண்டார். அவற்றை தன்னுடை கல்வியாக, பயிற்சியாக, பாடத்திட்டமாகவும் வழங்கிவந்தார். சித்தாந்த வழியான யோகமாக இருந்தாலும், அதில் இத்தகைய நவீன மாற்றங்களை ஏற்று அனுபவமான பயிற்சி முறைகளும் சொல்லித்தருவதுண்டு. 

அதுவே வேதாத்திரியம் என்ற புதிய ஒன்றாக மாற்றம் பெற்றது.
குரு மகான் வேதாத்திரி மகரிசி, தன்னுடைய வேதாத்திரியத்தின் வழியாக , யோகம் என்பதை அஷ்டாங்க யோக வழியிலும் வேதாந்த வழியிலும், சித்தாந்த வழியிலும், விஞ்ஞான வழியிலும், தன் அனுபவத்தின் வழியிலும் விளக்குகின்றார் என்பதை, அந்த வேதாத்திரியத்தில் பயணிக்கும் ஓவ்வொருவரும் அறிந்து கொள்ளமுடியும். அப்படியானால் வேதாத்திரியம் மட்டுமே சிறப்பா? என்ற கேள்வி எழுந்துவிட்டால், அது அப்படியல்ல, ஒரே ஊருக்குச்செல்லும் இலக்கு நோக்கிய பாதைகள் பல இருப்பது போல வேதாத்திரியமும் ஒன்று. பயணம் செல்லவிரும்புவரின் முடிவே அதை தீர்மானிக்கும்.

வாழ்க வளமுடன்
-

How long we need to learn yoga for completeness? and doing teaching service too?


யோகத்தின் வழியாக உண்மை விளக்கம் பெற எவ்வளவு காலம் கற்றுக் கொள்ள வேண்டும்? கற்பிக்கும் சேவையும் செய்யவேண்டும்? விளக்குக!

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, யோகத்தின் வழியாக உண்மை விளக்கம் பெற எவ்வளவு காலம் கற்றுக் கொள்ள வேண்டும்? கற்பிக்கும் சேவையும் செய்யவேண்டும்? விளக்குக!


பதில்:

எல்லோருக்கும் பயன் தரக்கூடிய நல்ல கேள்வி என்றே கருதுகிறேன். ஆனால் இந்தபதிலை எப்படி புரிந்து கொள்வார்கள் என்ற ஐயம் எனக்குண்டு. என்றாலும் விளக்கம் தருவதை என் கடமையாக கருதுகிறேன். இதை என் அனுபவங்களில் இருந்தே தருவதால், சரியானதாகவே இருக்கும். ஏனென்றால் அனுபவத்தைத் தவிர சிறந்த ஆசான் யாருளர்? என்றுதான் பொதுவாக சொல்லுவார்கள்.

ஒவ்வொரு யோகசாதனை அமைப்பிலும் குறிப்பிட்ட கால வகுப்பும், பயிற்சியும் உண்டு. வேதாத்திரியத்தில் கிட்டதட்ட ஓராண்டு முதல் இரண்டு ஆண்டுக்குள்ளாக, அடிப்படை பயிற்சி முதல் தொடங்கி நிறைவான பயிற்சி பெற்றுவிடலாம். தான் கற்ற அந்த மையத்தில் மட்டுமே, பிறருக்கு சொல்லித்தரும் ஆசிரியாராக தகுதி பெற்றுவிடலாம். எனினும் மற்ற மையங்களுக்கோ, பிற ஊர்களுக்கோ, நாடுகளுக்கோ நீங்கள் ஆசிரியராக செல்லவேண்டும் என்றால், கிட்டதட்ட பத்து ஆண்டுகள் முதல் இருபது ஆண்டுகள் சேவை அனுபவம் பெற்றிருக்கவேண்டும். இது கொஞ்சம் முன்னெ பின்னே என்று காலமாறுபாடு இருக்கலாம்.

வேறு சில யோக அமைப்பில், அடிப்படை பயிற்சி கற்றுத்தேர்வதற்கே, மூன்று ஆண்டுகள் முதல் ஏழு ஆண்டுகள் ஆகிறது. அப்படியானால், பயிற்றுனர் ஆவதற்கும், ஆசிரியராவதற்கும் எத்தனை ஆண்டுகள் ஆகலாம் என்பதை நீங்களே கணக்கிட்டுக் கொள்ளலாம்.

உங்களின் வளர்ச்சியில், நீங்கள் எந்த அளவுக்கு உயர்வு பெறுகிறீர்கள் என்பதுதான் முக்கியமானது. வெறுமனே சான்றிதழையும், பட்டயத்தையும் பெற்று அடுக்கிக்கொண்டே வருவதில் பயனில்லை என்பதை நாம் அறிவோம்தானே?! அதனால் உங்களுக்கு எது தேவையோ அதை முதலில், பெற்று, கற்று உங்களை முழுமை செய்து கொள்ளுங்கள். யோகத்தின் வழியாக, தனி மனிதனாக, உங்களை நீங்கள் உணர்ந்து நிறைவு செய்வதுதான், முதலாவதான நோகம். மற்றவர்களுக்கு பயிற்றுவிப்பது, விருப்பத்தின் வழியாக வருவதுதானே தவிர, கட்டாயம் ஏதுமில்லை. 

மிக முக்கியமாக, நீங்கள் உண்மையாக அறிந்து உணராத, முழுமைப்பெறாத ஒன்றை எப்படி பிறருக்கு சொல்லமுடியும்? நீங்கள் அறிந்த, கற்றுத்தேர்ந்த வார்த்தைகளால் மட்டுமே பிறருக்கு பகிர்வதில் என்ன விளக்கம் தரமுடியும்? உங்கள் அளவிற்கு, அதே அளவில் அவர்களும் கற்றுத்தேர்வார்கள் என்பது என்ன நிச்சயம்? இந்த கேள்விகளை நீங்களே கேட்டு அதற்கு பதிலை கண்டுகொள்ளுங்கள். இந்த விளக்கத்தை, ‘காணாத பழச்சுவை அறிக’ என்ற தலைப்பில் கவிதை விளக்க நூலாக எழுதியுள்ளேன். ஒரு பழம் இருக்கிறது. அதுகுறித்தான, வடிவம், தோற்றம், சுவை, மணம் எல்லாமே உங்களுக்கு தெரியும், இந்த விபரங்களை நீங்களே படித்தீர்கள், அந்த பழத்தை ருசித்து சாப்பிட்டவரும் சொன்னார், அதையும் நீங்கள் ஏற்றுக்கொண்டீர்கள். ஆனால், நீங்கள் அந்த பழத்தை பார்த்ததும் இல்லை, சாப்பிட்டதும் இல்லை, ருசி பார்த்ததும் இல்லை. இந்த நிலையிலே நீங்கள் எப்படி, மற்றவர்களுக்கு அந்த பழம் குறித்து சொல்லுவீர்கள்?!

பொதுவாக உண்மை விளக்கம் அறிந்துகொள்ளவும், புரிந்துகொள்ளவும் நாம் காலம் நிர்ணயிக்க முடியாது. அதை உங்களின், ஒவ்வொருவரின் கர்மா என்ற வினைப்பதிவும், அதன் களங்கள் தீர்ப்பதும், யோகத்தில் அவரவர்களுடைய முயற்சியும், பயிற்சியும், ஆராய்ச்சியும், தெளிவும் முடிவு செய்யும் என்பதுதான் உண்மையானது.

வேதாத்திரி மகரிஷியிடமே, இந்த சந்தேகம் குறித்து கேட்டிருக்கிறார்கள். ‘உண்மை விளக்கம் பெறாத நாங்கள், எப்படி பிறருக்கு தீட்சை தரமுடியும்?’ என்று அன்பர்கள் கேட்டதற்கு, மகரிஷி அவர்கள் ‘ஒரு கையில் இறைநிலையை பிடித்துக் கொள்ளுங்கள், மற்றொருகையால் என்னை பிடித்துக் கொள்ளுங்கள், போதுமே’ என்று பதில் தருகிறார். தீட்சை என்ற நிலைக்கு வேண்டுமானால் இது போதுமானதாக இருக்கும் என்பது என்னுடைய கருத்து. ஆனால் மெய்ப்பொருளின் உண்மை விளக்கம் தருவதற்கு, நீங்கள் அதை உணர்ந்தறியாமல் தரமுடியாது என்பதும் என்னுடைய கருத்து. ஆனால் உங்களுக்கு, உங்களால் அது முடியுமானால், பிறருக்கு தருவதில் குறையில்லை. தாராளமாக நீங்கள், பயிற்றுனராக, ஆசிரியராக, அதனினும் மேலான நிலையிலும் தொடரலாம். அது உங்கள் விருப்பமே!

அப்படியானால், இதில் உங்கள் அனுபவம் என்ன? என்று கேட்பீர்கள். இங்கே அதை எழுதினால் அது ‘சுயபுராணமாக, தற்பெருமையாக’ மற்றவர்கள் கருதிவிட வாய்ப்புள்ளது. என்னை நேரில் சந்தித்து கேளுங்கள். சொல்லுகிறேன்.

வாழ்க வளமுடன்

-

Why can not practice meditation at home and is not satisfied too?


எவ்வளவோ முயற்சித்தாலும் வீட்டில் தவம் செய்யமுடியவில்லை. செய்தாலும் திருப்தி இல்லை ஏன்?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, எவ்வளவோ முயற்சித்தாலும் வீட்டில் தவம் செய்யமுடியவில்லை. செய்தாலும் திருப்தி இல்லை ஏன்?


பதில்:

இன்றைய காலகட்ட விஞ்ஞான வளர்ச்சியில், அதன் முன்னேற்றங்களை நாம் எல்லோருமே இங்கே அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். அந்தவழியாக வந்த பொருட்கள், வாகனங்கள் என்றும் நம்மிடையே குவிந்து கிடக்கிறது. இன்னமும் வந்துகொண்டேதான் இருக்கிறது. அதனுடைய தேவைகளும் நமக்கு வேண்டியதாகவும் உள்ளது. இவ்வளவுக்கு இடையிலும் நாம், நம்முடைய வாழ்க்கையை அமைத்து அதை திறமாக நடத்தவேண்டியுள்ளது, அதோடு அதில் விளையக்கூடிய பிரச்சனைகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டியதாக இருக்கிறது. மேலும் உள்முக தேடலுக்கான தவமும் செய்ய விரும்புகிறோம். தடையாகிறது.

உதாரணமாக, அதிகாலை எழுந்து, தவம் செய்ய அமர்ந்துவீட்டீர்கள். கண்கள் மூடி சில நொடிகளில், உங்கள் கைபேசி அழைக்கிறது. அதை கவனம் செலுத்தாமல் தவம் செய்கிறீர்கள். இப்போது அழைப்பு நின்றுவிட்டது. ஆனால் மறுபடி அழைக்கிறது. இப்போது நாம் அதை எடுப்பதா? விடுப்பதா? குழப்பம்தானே வரும்?

இதுபோல, வண்டி, வாகனங்களின் ஒலி, இரைச்சல், சாலை வியாபார குரல்கள், எங்கேயோ இருந்து குரைக்கும் நாய்கள் அதன் சண்டை ஒலி, உங்கள் வீட்டில் சமையலையில் இருந்து, தீடீரென்று வரும் ஒலிகள். உங்கள் குழந்தைகளின், அவர்களுக்கிடையேயான பிரச்சனையில் அடிதடி சண்டை ஒலிகள். அழுகைக் குரல், எதிர்பாரமல், உங்கள் மடியில் வந்து உட்காரும், குழந்தை, செல்லப்பிராணிகள் என்று இப்படி இன்னும் பல உண்டு.  இவையெல்லாம் கடந்து, அமைதியாக தவம் இயற்றுவது என்பது கொஞ்சம் கடினமே!

உங்களின் தவத்திற்கான நேரத்தை, அதிகாலை 04:30 முதல் 05:30 மணிக்குள்ளாக முடித்துவிட முடிந்தால் மிக நல்லது. வாய்ப்பிருந்தால், அருகில் உள்ள, தவ மையத்திற்கு சென்று கூட்டுத்தவம் செய்துவரலாம். அதற்கென்று உங்கள் வேலைகளை, கடமைகளை கெடுத்துக்கொள்ளாது இருக்கவும் வேண்டும். உங்களை வருத்திக் கொள்ளவும் கூடாது. இதற்காக தனிமையான இடம் தேர்வு செய்வது கடினம், அது நல்லதும் இல்லை. கோவில், வழிபாடு தளங்களில் செய்யலாம் என்றாலும் அதுவும் பிரச்சனையாகலாம்.

உண்மையிலேயே உங்கள் இல்லம் போன்ற அமைதியான, பாதுகாப்பான, இடம் இந்த உலகிலேயே இல்லை என்பதே பொதுவானது.

இவ்வளவு பிரச்சனைகளையும் ஏற்று, கடந்து தவம் செய்தாலும், மனம் அதில் நிலைப்பது மிக கடினம். ஏனென்றால், தவத்தின் வழியாக, மனதை அதன் இயல்புக்கு திருப்ப முயற்சிக்கிறோம். ஆனால் சூழலின் காரணமாக அது மேலும் கொந்தளிக்கிறது என்பதால் அந்த தவம் உங்களுக்கு உதவாது. அதனால்தான் முன்பைவிடவும் குழப்பமாகிறது. திருப்தி அளிக்காது. நிம்மதியற்றும் போகிறது. இந்த தவம் இயற்ற தடையாக இருப்பது எல்லாம் என்ன? என்று ஒரு ஆராய்ச்சி செய்யுங்கள். எதையெல்லாம், எவற்றையெல்லாம் சரி செய்ய முடியும் என்று முடிவு செய்யுங்கள். அதை சரி செய்யுங்கள். உங்களால் எதுவும் செய்யமுடியாது என்றால், தவம் செய்து உங்களை, உங்கள் இயல்பை கெடுத்துக்கொள்ளாமல், தவத்தையே கொஞ்ச காலத்திற்கு தள்ளிவைத்து விடுங்கள். அதுதான் நல்லது. சூழல் சரியானால் பிறகு ஆரம்பியுங்கள். தவறில்லை!

வாழ்க வளமுடன்.

-

How to correct the disturbances while practicing Kayakalpa Yoga?


காயகல்ப யோகப் பயிற்சி செய்யும்பொழுது ஏற்படும் தொந்தரவுகளை சரி செய்வது எப்படி?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, காயகல்ப யோகப் பயிற்சி செய்யும்பொழுது ஏற்படும் தொந்தரவுகளை சரி செய்வது எப்படி?


பதில்:

வேதாத்திரிய காயகல்ப யோகப் பயிற்சி செய்யும்பொழுது ஏற்படும் தொந்தரவுகள், அதை புரிந்துகொள்ளாமல் செய்வதால்தான் வருகிறது. முக்கியமாக, இந்த பயிற்சியை யாரும் யாருக்கும் செய்துகாட்டி விளக்கமுடியாது. உள்முகமாக, உள்ளுணர்வாக செய்யக்கூடியது. ஒருவர் இந்த பயிற்சியை செய்கிறார் என்பதை, வெளிப்படையாக அறிந்துகொள்ளவும் முடியாது. பயிற்சியாளர், ஓஜஸ் மூச்சு வெளியிடும் பொழுதுதான், இவர் ஏதோ செய்கிறார் என்று பிறர் தெரிந்து கொள்வார்.

இதன் காரணமாகவே, ஒரு ஆசிரியர் சொல்லித்தருவதை புரிந்துகொள்வது, பயிற்சி கற்றுக்கொள்பவருக்கு குழப்பத்தை ஏற்படுத்தும். இதனால், பயிற்சி எங்கே கற்றுக்கொள்கிறீர்களோ, அந்த இடத்திலேயே, அந்த ஆசிரியரிடமே, உங்கள் சந்தேகத்தை கேட்டு தெளிவு செய்துகொள்வதுதான் மிகச்சிறந்த வழி ஆகும். ஏதோ சொன்னார், எனக்கு நன்றாக புரிந்துவிட்டது என்றபடி கடந்துவிட்டால், நாம் வீட்டில் தனியாக செய்யும்பொழுது பல சந்தேகங்கள் எழுந்துவிடும். அதனால்தான் அந்த விளைவுகள் தவறாகிறது, நமக்கு தொந்தரவாகவும் இருக்கிறது. என்னதான் நீங்கள் பயிற்சியின் பொழுது குறிப்பு எடுத்துக்கொண்டு வந்தாலும், நேரடியாக கேள்வியில் கிடைக்கின்ற பதில்தான் சிறப்பாகும்.

முக்கியமாக, உங்களோடு பயிற்சி எடுத்த சிலரிடமோ, ஏற்கனவே பயிற்சி எடுத்து வந்திருக்கும் மற்றவரிடமோ உங்கள் சந்தேகத்தை கேட்டுக்கொள்ளக் கூடாது. அது உங்கள் குழப்பத்தை அதிகப்படுத்திவிடும் என்பதை அறிக. தகுந்த ஆசிரியரிடம் மட்டுமே உங்கள் குழப்பத்தை, சந்தேகத்தை, கேள்வியை கேட்க வேண்டியது அவசியம்.

பொதுவெளியில், இணையதளத்தில் எந்த சந்தேகத்தையும் யாரிடமும் கேட்க்கக்கூடாது. சிலர், நாம் படிப்பதற்கே அருவருப்பு அடைகிறவகையில், அப்படி, இப்படி என்று கேள்விகள் கேட்பதும் உண்டு. சிலர் பயிற்சியை கிண்டல் செய்யும் விதமாகவும் கேள்வி கேட்பார்கள். அவர்களை விட்டுவிடுவோம், அவர்கள் நல்லபடியாக வாழ்க என வாழ்த்தியும் விடுவோம். பொதுவெளியில் கேள்வி கேட்டால், பலவிதமான திசை திருப்பலுக்கு ஆளாகுவீர்கள். உங்களுக்கு அருகில் உள்ள, பயிற்சி மையத்தை அணுகி, அங்கே ஆசிரியரை கண்டு, நீங்கள் கற்றுக்கொண்ட காயகல்ப யோகப் பயிற்சி விபரங்களைச் சொல்லி, சந்தேகத்தை தெளிவு செய்துகொள்ளலாம். அதற்கான சான்றிதழையும் கையில் வைத்துக்கொண்டு போனால் நல்லதுதான்.

ஒருவேளை உங்களுக்கு அருகில், எந்த ஒரு பயிற்சி மையமும் இல்லை, நீங்களும் வெகுதூரத்தில் இருக்கிறீர்கள் என்றால், முக்கியமாக நீங்கள் கற்றுக்கொண்ட குழப்பம் தீரும் வரை, சந்தேகம் தெளிவு பெறும்வரை, காயகல்ப யோகப் பயிற்சியை செய்யாதீர்கள். அது ஒருவாரம், பத்துநாட்கள், ஒரு மாதம் ஆனாலும் பரவாயில்லை. கைபேசி, தொலைபேசி வழியாகவும் ஆசிரியரிடம் கேட்கலாம் எனினும் நேரில் கேட்டறிவதே நல்லது. சமீபகால ஜூம் வழியான சந்திப்பில் கேட்டாலும் பலன் உண்டுதான். எனவே அதற்குறிய வழியை, பயிற்சி மைய இணையம் வழியாகவும், அதுவழங்கும் சமூக வலைதள அறிக்கை மூலமாகவும் அறிக. பலன் பெறுக.

வாழ்க வளமுடன்.

-

Why does when practice meditation my body get to tremble and anxiety?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, தவம் செய்யும் பொழுதெல்லாம், உடல் நடுக்கமும், பதட்டமும் உருவாகிறது. நீண்ட நேரம் உட்காரவும் முடியவில்லை ஏன்?


பதில்:

தவம் இயற்றுவதற்கான பொதுவான நேரம் குறைந்தபட்சமாக 15 நிமிடம் தேவைப்படும். பஞ்சபூத நவக்கிரக தவம் இயற்றினால் மட்டுமே அதிகபட்சமாக 45 நிமிடம் தேவைப்படுகிறது. இத்தகைய தவத்தில் அதற்கான நேரத்தை நாம் மாற்றி அமைக்கலாமா? குறைத்துக்கொள்ளலாமா என்றால் கூடாது என்பதுதான் பதிலாகும். ஏனென்றால், நம்முடைய மனதை அந்தந்த நிலைகளில், ஆதாரங்களில் செலுத்தி கவனத்தில் நிலைப்பதற்கும். மனம் பழகுவதற்கும் தகுந்த நேரம் வழங்கியே ஆகவேண்டும். சும்மா வெறுமனே, ஆக்கினை துரியம் என்று மனதையும் வார்த்தைகளையும் ஓட்டுவதில் எந்த பலனும் கிடைக்கப்போவதில்லை என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

உங்களால், தவம் இயற்றும் பொழுது நீண்ட நேரம் உட்காரமுடியவில்லை என்றால், உங்கள் உடல் அந்த அளவிற்கு பலவீனமாக இருக்கிறது என்பதுதான் அர்த்தம். தவம் இயற்றுவதற்கு முன்பாக, எளியமுறை உடற்பயிற்சியை முழுதுமாக செய்துவிட்டு, பிறகுதான் தவம் என்று மாற்றிக்கொள்க. மேலும், தூக்க கலக்கத்தில் தவம் செய்யக்கூடாது. படுக்கையில் உட்கார்ந்தும் தவம் செய்வதை தவிர்க்கலாம். முக்கியமாக காலைக்கடன்களை முடித்துவிட்டு தவத்திற்கு செல்லுதலே நன்று. தவம் இயற்றும் நேரத்திற்கு முன்பாக நேரத்தில், உற்சாகப்படுத்தும், தேனீர், காஃபி, பழரசம் ஆகியன தவிர்த்தாக வேண்டும். அடுத்தடுத்து வரிசையாக வேலைகளை வைத்துக்கொண்டு தவம் செய்ய அமரவேண்டாமே. மேலும் உங்கள் சூழல் தவம் இயற்ற பொருத்தமானதா என்பதை நன்கு சோதனை செய்துகொள்க.

சிலருக்கு தவம் இயற்றுவது புதிய அனுபவமாக இருப்பதால்தான், உடல் நடுக்கமும், பதட்டமும் தோன்றும். இவர்கள் அடிக்கடி அருகில் உள்ள தவமையங்களுக்குச் சென்று கூட்டுத்தவம் செய்துவரலாம். அப்படியாக கூட்டுத்தவத்தில் நன்கு பழகிக்கொண்ட பிறகு, தனியாக தவம் செய்தால் உடல் நடுக்கமும், பதட்டமும் வருவதற்கில்லை. இன்னும் தவம் செய்யலாமே என்ற ஆர்வமும், உற்சாகமும் பிறக்கும் என்பதே உண்மை. உடனடியாக் உங்கள் மாற்றிக்கொள்ள ஆரம்பியுங்கள். நலம் பெறுங்கள், தவத்தில் உயருங்கள்.

வாழ்க வளமுடன்.

Why we need to join on mass meditation in campus or center?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

 


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, வேதாத்திரிய பயிற்சி முடித்த பிறகும், அங்கே சென்று கூட்டுத்தவம் செய்தால்தான் தன்னையறிய வழிபிறக்குமா?


பதில்:

அப்படியில்லை, மேலும் அது கட்டாயமும் இல்லை. ஆனால் கூட்டுத்தவம் இயற்றும் பொழுது, எல்லோருக்கும் பொதுவான, நல்ல ஆழ்ந்த தவ நிலை அமைய வாய்ப்பு அதிகம் ஏற்படும். அதுதான் கூட்டுத்தவத்தின் சிறப்பாகும். இதற்காகவேதான் அடிக்கடி மன்றத்தொடர்பு அவசியம் என்றும் வேதாத்திரி மகரிஷி அவர்கள் குறிப்பிடுகின்றார்.

பெரும்பாலும் நாம் பரபரப்பான உலகில் வாழ்கிறோம். விழித்தெழுந்தது முதல் இரவு படுக்கைக்கு செல்லும் வரை, நமக்கான உலக கடமைகள் வரிசையாக இருக்கிறது. இதையெல்லாம் முடிப்பதற்கே நேரம் இல்லாமை. அதோடு நாம், உடலை வலுப்படுத்த காயகல்பம், எளியமுறை உடற்பயிற்சி முடித்து தவமும் செய்யவேண்டும். இதற்கு அதிகபட்சமாக 1:30 முதல் 2:00 மணி நேரம் வரை செலவிட வேண்டும். முக்கியமாக மனம் அதில் ஈடுபடவேண்டும், விருப்பத்தோடும், முயற்சிக்க வேண்டும். அதுதானே முக்கியம்?! ஏதோ கற்றோம், செய்தோம், அடுத்த வேலைகளை பார்ப்போம் என்று கடந்துபோக முடியாது அல்லவா? 

இப்படி நேரத்தை தந்து செய்ய முடியாதவர்கள், கூட்டுத்தவம் செய்துவந்தால், அவர்களுக்கு உயர்வும் கிடைக்கும். தானாக அதை செய்வதற்கு ஆர்வமும், வழியும் கூட கிடைக்கும். ஏதோ வாரம் ஒருநாள் கூட்டுத்தவம் செய்துவந்தாலும் கூட அது உதவிடும் என்பது உண்மை.

என்றாலும், நீங்கள் உங்கள் வீட்டிலே, இருக்கும் இடத்திலேயே வேதாத்திரிய பயிற்சிகளை செய்துவருவதே நல்லது. அதுதான் உங்கள் மனதை, உடலை வெகு சீக்கிரமாக பழக்கப்படுத்தும் வழியாகும். ஒரு செய்யமுடியாமல் போனாலும்கூட, இனிமேல் இப்படி தவற மாட்டேன் என்று சங்கல்பம் செய்துகொண்டு, தினக்கடமையாக ‘அதிகாலை, காயகல்பம், எளியமுறை உடற்பயிற்சி, தவமும் செய்து முடித்துத்தான் அடுத்த வேலைகளை தொடர்வேன்’ என்று உறுதி செய்து கொள்ளுங்கள். மாற்றம் தானாக நிகழும். ஆனாலும் வாய்ப்பு கிடைத்தால், கூட்டுத்தவத்தில் கலந்து கொள்ள மறவாதீர்கள்!

வாழ்க வளமுடன்!

How the Thuriyatheetha meditation set as a highest ?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, தவத்தில் துரியாதீத தவம் உயர்வானது எப்படி? வேறுதவம் இல்லையா?!


பதில்:

பல ஆயிரமாண்டு கால, யோக வரலாற்றில், சஸ்ரதாரா என்ற ஆயிரத்தெட்டு இதழ் தாமரை பெயர் கொண்ட, தலை உச்சி நிலையான, துரியம் என்ற ஆதாரமைய தவமே உயர்நிலை தவம் என்று இருந்தது. ஏறக்குறைய இப்போதும் அப்படித்தான் என்ற நிலை தொடர்கிறது. பெரும்பாலான யோக மையங்களில், துரிய தவத்திற்கு மேல்நிலையாக எந்த தவமும் இல்லை. மனவளக்கலை வழியாக மட்டுமே, ஏற்கனவே உயர் நிலையாக இருந்த துரியத்திற்கும் அடுத்ததாக உச்ச நிலை தவமாக, துரியாதீதம் என்ற தவம் வழங்கப்படுகிறது! பெயரிலேயே, துரியம் அதீதம் என்ற பெயர் பெற்றுள்ளதையும் கவனியுங்கள்.

குருமகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள், தன் இறையுணர்தல் வழியில், பல ஆண்டுகளாக, துரியதவம் இயற்றிவந்துள்ளார். எனினும் அவர் அதில் நிறைவடையாத தன்மையை உணர்ந்திருக்கிறார். துரியம் என்ற நிலைக்கு அப்பாலும் கூட மனம் விரிந்து நிற்பதையும், மேலும் மேலும் அதனிலும் விரிவதையும் கண்டு உணர்ந்து ஆராய்ச்சி செய்துள்ளார். இது குறித்து, தன்னோடு யோகத்தில் பயணித்த சிலரிடம் கேட்டு கலந்தாலோசித்த பொழுது, அவர்கள், துரியத்திற்கு மேல் எதுவுமில்லை என்றே மறுத்துள்ளனர்.

ஆனாலும், வேதாத்திரி மகரிஷி அவர்கள், தொடர்ந்து, அந்த மனவிரிவை கவனித்து, முடிவான உண்மையில், பேராற்றலும் பேரறறிவுமான, சித்தர்கள் சொன்ன வெட்டவெளியில், சுத்தவெளியில் முழுமையடைவதை உணர்ந்தார். அதன்பிறகே மனம் தன் உண்மைநிலையை, அடித்தளமான நிலையையும் அடைந்ததை அறிந்துகொண்டார். மேலும் தொடர்ந்து ஆய்வு செய்து, அதை ஆர்வமுள்ள மற்றவர்களுக்கும் தர எண்ணியே, தவமாக வடிவமைத்தார். அந்த தவமே துரியாதீதம் ஆகும். 

எனவே துரியாதீதத்திற்கு உயர்வான தவம் என்ற நிலை பொருத்தமானதே ஆகும். இதற்கு நிகராக வேறெந்த தவநிலையையும் குறிப்பிட்டுச் சொல்லிவிட முடியாது.

வாழ்க வளமுடன்.