CJ for You: happiness

happiness

Showing posts with label happiness. Show all posts
Showing posts with label happiness. Show all posts

Should we accept that there is suffering in life? Can't suffering be solved completely? What is the reason for this? What is the way to solve it?


ஐயா, வாழ்வில் துன்பமும் இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டுமா? துன்பத்தை முழுமையாக தீர்க்க முடியாதா? இதற்கு காரணம் என்ன? அதை தீர்த்திட வழி என்ன?

நமக்கு வாழ்வதற்கு வாழ்க்கை மட்டுமே இருக்கிறது. அதில் இன்பமும், மகிழ்ச்சியும் இருக்கிறது. அதன் காரணத்தையும், அதில் இருக்கின்ற உண்மையையும் அறிந்து கொண்டால், நம் பிறப்பும், வாழ்வும், நம்முடைய மூலமான நிலையையும் அறிந்துவிட்டால், பேரின்பமாக இருக்கும். இதைத்தான் பிறவிக்கடமை, பிறவி நோக்கம் என்று சொல்லியிருக்கிறார்கள்.

ஆனால் நாம் பேரின்பம் என்றால், வேறு ஏதோ ஒன்று என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். அதைத்தான் செயல்படுத்திடவும் செய்கிறோம் அல்லவா? புலன்களைக் கடந்த ஓர் இன்பம் இருக்கிறது என்பதை நாம் ஏற்றுக்கொள்வதில்லை. அதெப்படி ஐயா, புலன் கடந்து இன்பமாவது ஒன்றாவது? என்று எதிர்கேள்வி கேட்டு, இந்த உண்மையையும், அதை சொன்னவரையும் கூட ஒதுக்கித் தள்ளிவிடுகிறோம்.

பொதுவாகவே நம் வாழ்வில், பலப்பல உண்மைகள், நமக்கு காலம் கடந்து தான் தெரியருகிறது. அது மனிதருடைய இயலாமைதான். நமக்கு முன்னே புகையும், பனியும் படர்ந்து இருக்குமானால், அருகில் இருப்பவரை பார்க்க முடியாது. அவர் யார் என்று அடையாளம் காணவும் முடியாது. இப்படியாகத்தான், பல உண்மைகளை நாம் மறுத்து, கடந்து போய்விடுகிறோம். இன்னமும் கூடுதலாக, இதெல்லாம் தெரியாவிட்டால், தெரிந்து கொள்ளாவிட்டால் என்னய்யா? என்ன குடிமுழுகி போய்விடப்போகிறது? என்றுதான் நாம் நினைக்கிறோம். அப்படித்தான், உங்களுக்கு முன் பிறந்த, உங்களின் முன்னோர்கள், கைவிட்டு விட்டார்கள். நாமும் அதே தவறை செய்யலாமா?

இந்த காணொளி வழியாக, உண்மையும், தீர்வும் பெறலாம். மிக எளிமையாக புரிந்து கொள்ள முடியும்.

உங்கள் வாழ்வில் துன்பச்சிக்கல் இருந்தால் அதை தீர்க்க வழி என்ன? உண்மை விளக்கம் Difficulties & problems

வாழ்க வளமுடன்

How Even if we see a Gnani or a Guru who has realized the truth, the mind becomes calm?


ஐயா,  உண்மை உணர்ந்த ஞானியை பார்த்தாலும், குருவை பார்த்தாலும் நமக்கு, ஏதோ பாரம் நீங்கியதுபோல தோன்றுவது எப்படி? மனம் அமைதியாகி விடுகிறது. ஏதேனும் சக்தி அவர்களிடம் இருந்து வெளிவருகிறதா? விளக்கம் தருக.


நல்லவேளையாக, அதை உணர்ந்திருக்கிறீர்கள் என்பது மகிழ்ச்சி. பெரும்பாலோருக்கு அப்படியான அனுபவம் கிடைப்பதில்லை. ஒரு இசை நன்றாக இருக்கிறதா? இனிமையானதா? அது மகிழ்ச்சியை ஊக்குவிக்கிறதா? என்பதை இசையை ரசிக்கும் பொழுதுதான் அறியமுடியும். என்னமோ சத்தம் கேட்கிறது, இரைச்சலாக இருக்கிறது, என்று கடந்து போகும் மனிதர், அந்த இசையின் இனிமையை அறிவாரா? இல்லைதானே? அதுபோல, ஞானியை, குருவை பார்க்கும் பொழுது அத்தகைய மன நிலைக்கு, பார்ப்பவரும் வரவேண்டும். பரபரப்பாக, சுடுதண்ணீரை காலில் ஊற்றியதுபோல என்று சொல்லுவார்களே, அப்படி இருந்தால் எப்படி இந்த மாற்றத்தை அறியமுடியும்?

உண்மை உணர்ந்த ஞானி, உயர்ந்த குரு இவர்களின் மனம், மிக மிக அமைதியாக இருக்கும். இறைநிலையோடு ஒன்றிவிட்ட தன்மையிலும், பேரானந்த நிலையிலும் இருக்கும். அதனால் அவர்களைச்சுற்றி ஒரு நல்ல சக்தி ஓட்டம் இருக்கும் என்பது உண்மை. வேதாத்திரியத்தில் இருப்பவர்கள் இதை ‘ஜீவகாந்தம்’ என்று எளிதாக அறிந்திட முடியும். இந்த ஆற்றல் செழுமையாக, வளம் குறையாததாக அவர்களிடம் இருக்கும். அது நமக்கு தேவையான அளவில் கிடைக்கும். நமக்கு ஊடுறுவி நிற்கும். நம்முடைய உடலுக்கும், மனதிற்கும் அத்தகைய ஆற்றல் தேவை. எனென்றால், பல வழிகளில் நாம் அந்த சக்தியை இழந்து விடுகிறோம் அல்லவா?

இப்படியான, முற்றுணர்ந்த ஞானி, உயர்ந்த குரு ஆகியோரிடம் இருக்கின்ற சக்தியாற்றலை, ஆரா என்று அழைக்கிறார்கள். புத்தர் பெருமகானுக்கு, கிட்டதட்ட ஒருமைல் தூரத்திற்கு, அந்த ஆரா பரவி இருந்தது என்று சொல்லுகிறார்கள். கெட்ட எண்ணங்களோடு அந்த, சக்தியாற்றல் வளையத்திற்குள் வரும் ஒருவன், உடனடியாக நல்லவனாக மாறிவிடுவான் என்றும் சொல்லுகிறார்கள். இது உண்மையும், நிகழக்கூடியதுமாகும்.

போலியான ஞானி, குருவைப்போல வேடம் தரித்த வேடதாரி, இவர்களை அடையாளம் கண்டு கொள்ளவும் பழகவேண்டும். தோற்றத்தை வைத்து, கையெடுத்து கும்பிடுவதும், காலில் விழுவதும் நல்லதில்லை. உங்கள் சக்தியை அவர் வாறி எடுத்துவிடவும் கூடும். இந்த ஆரா குறித்த மேலும் பல உண்மைகளை, இந்த காணொளி வழியாக அறியலாமே!

ஆரா என்பது என்ன? ஜீவகாந்தத்தோடு தொடர்புடையதா? What is Aura? Is it Related to Bio-Magnetism?

வாழ்க வளமுடன்.

Do you know how to treat a lifelong partner, lover and better half?


உங்களின் மனதை கவர்ந்தவரிடம், வாழ்க்கையை பகிர்ந்து கொண்டவருடன், வாழ்நாள் முழுவதும் துணையாக இருப்பவரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் தெரியுமா?


உலகில் மனிதனின் பிறப்பு, என்றுமே தனியாக நிகழ்ந்துவிடுவதில்லை. ஆண், பெண் என்றான அன்பு, காதல், அதன் வழியான திருமண பந்தம், குடும்பம் என்ற அமைப்பு ‘பெரும்பான்மையாக’ அமைந்திருக்கிறது. அதுதான் சமூகத்தின், உலகின் நடைமுறையாகவும் இருக்கிறது. பிறக்கும் ஆணும், பெண்ணும் தனக்கு பருவம் வந்த காலத்தில், அடுத்த நிலையான வாழ்வைத் தொடங்க, ஆண் ஒரு பெண்ணையும், பெண் ஒரு ஆணையும் துணையாகக் கொண்டு, திருமணம் வழியாக, குடும்ப வாழ்க்கையை ஆரம்பிக்கிறார்கள். அவர்களின் பெற்றோரும், உற்றோரும், நண்பர்களும் துணையாக இருந்து, இதை வழிநடத்தியும் தருகிறார்கள். இந்த குடும்பம் என்ற அமைப்பு எனக்கு, அமையவில்லையே? என்று கேட்கிறீர்களா? இதோ அதற்கான விளக்கமும் காண்போம்.

தனி நபரான வாழ்க்கை, ஓர் முழுமையை தருவதில்லை. எனினும், அது கடமையை தீர்த்தல் என்பதாக நிகழ்ந்துவரும். இந்த தனி நபர் என்ற நிலை, தன் விருப்பத்தாலும், சூழ்நிலையாலும், சந்தர்ப்பங்களாலும் அமைந்துவிடும். ஆனால், எந்த நொடியிலும், இதை அவரே விரும்பி, தன் முயற்சியாலும், மற்றவர்களின் துணை மற்றும் உதவியாலும், நிச்சயமாக மாற்றம் கொள்ள முடியும். அப்படி இருக்கும்பொழுது, யார்மீதோ பழி சொல்லுவதில் அர்த்தமில்லை. உலகின் நடைமுறைக்கு ஏற்றபடி, கல்வி, வழக்க பழக்கம், வேலை, பொருளாதாரம் என்ற வகையிலும், உங்களை தகுதியாக்கிக் கொள்ளவும் முயற்சிக்க வேண்டும். முக்கியமாக காத்திருக்க வேண்டியதும் அவசியமாகிறது. இயற்கை எந்தவகையிலும், பழி கொள்வதாக கருத இடமில்லை. எனவே தனி நபருக்கும் இயல்பாக, இல்லறம் அமையும்.

எந்த வகையில், ஆண், பெண் என்று இருந்தவர்கள், கணவனும் மனைவியாக, ஒருவருக்கு ஒருவர் துணையாக, சடங்குகள், சம்பிரதாயம், வழக்கம் வழியாகவோ, ஒப்பந்த பதிவு வழியாகவோ, திருமணமாகி, இல்லறத்தை தொடங்குகின்றனர். அந்த இல்லறம் சிறப்பாகவே தொடர்கிறதா? என்று கேள்வியை முன்வைத்தால், 

‘சிறப்பாகத்தான் சென்றுகொண்டு இருக்கிறது’ என்போருக்கு, என்னுடைய நல்வாழ்த்தை பகிர்கின்றேன். ‘அது, சிறப்பாக தொடங்கியது உண்மைதான். ஆனால் இன்றோ தடுமாறுகிறது’ என்பது பெரும்பாலோரின் பதிலாகும். 

சிறப்பாக தொடங்கியது ஏன் தடுமாறுகிறது? என்று அதில் சிக்கிக் கொண்ட கணவனும், மனைவியும் சிந்திக்கின்றனர். அதை விலக்கிட, தீர்த்திட முயற்சிக்கின்றனர். ஆனால் அவர்களே அறியாமல், மேலும் மேலும் சிக்கிக் கொள்கின்றனர். இதற்குப் பிறகு, அந்த தடுமாற்றம், அவர்களை பாதை மாற்றி, திசைக்கு ஒருவராக பிரித்தும் வைக்கிறது. இந்த தடுமாற்றம், சிக்கல், பிரச்சனை ஆகியவற்றுக்கான தீர்வு என்ன? என்று வேதாத்திரி மகரிஷியிடம், அன்பர்கள் கேட்கிறார்கள். அவர் ஓர் துறவி ஆயிற்றே? என்று கேள்வி எழுந்தாலும், அதற்கு அவரே பதிலும் சொல்லுகிறார். ‘நான் துறவியாகவே ஆன்மீகத்தில் நுழையவில்லை. உங்களைப்போல, நானும் இல்லறத்தில் வாழ்ந்து, அந்த நிறைவில்தான், யோகத்தில் நின்றேன். அதனால், அந்த வாழ்வியல் அனுபவம் எனக்கு உண்டு. அதன் அடிப்படையில் உங்களுக்கு வழிகாட்டிடவும் முடியும்’ என்கிறார்.

இல்லற வாழ்க்கைச் சிறப்பாக அமைய வேண்டும் என்றால், அதற்கு என்ன வழி? இதோ, வேதாத்திரி மகரிஷியின் வழிகாட்டுதலை காண்போம். சிறப்பான குடும்ப வாழ்க்கைக்கு, மூன்று பண்புகள், 1.  விட்டுக் கொடுப்பது, 2.  அனுசரித்துப் போவது, 3.  பொறுத்துப் போவது ஆகிய குணங்கள் அவசியம். இவை மூன்றும் இல்லை என்றால் இல்லறம் இன்பமாக இருக்காது.

இந்த இடத்தில் ஒரு சந்தேகம். ஒரு பேராசிரியை எழுந்து அதைக் கேட்டார்.

விட்டுக்கொடுப்பது என்று பொதுவாக சொல்கிறீர்கள். யார் விட்டுக் கொடுப்பது? கணவனா? மனைவியா? பிரச்சினையே அங்குதானே ஆரம்பம்!’ எல்லோரும் ஆவலோடு, மகரிஷியின் முகத்தைப் பார்கிறார்கள். இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்? கணவனுக்குச் சாதகமாகப் பேசுவாரா? மனைவிக்குச் சாதகமாகப் பேசுவாரா? மகரிஷி சிரிக்கிறார். அப்புறம் சொல்கிறார்.

‘யாரிடம் அன்பு அதிகமாக இருக்கிறதோ, அறிவாளியோ அவர்கள் தான் விட்டுக் கொடுப்பார்கள். அவர்கள்தான் அனுசரித்துப் போவார்கள். அவர்கள்தான் பொறுத்துப் போவாகள்.’ என்கிறார்.

அரங்கம் கைதட்டலால் அதிர்கிறது. ஆரவாரம் அடங்கியவுடன் அருட்தந்தை தொடந்து பேசுகிறார். ‘அன்புள்ளவர்களிடம்தான் பிடிவாதம் இருக்காது. பெருந்தன்மை இருக்கும். குடும்பத்தில் ஆற்றலை உற்பத்தி பண்ணுகிறவர்கள் அவர்கள்தாம். அவர்கள்தாம் Power Producers, Charged Batteries, நம்பிக்கை நட்சத்திரங்கள், இறை ஆற்றலோடு நெருக்கம் உள்ளவர்கள்.  அவர்களுக்குத்தான் தவம் எளிதாகக் கைகூடும். அவர்கள் தொட்டதெல்லாம் துலங்கும். அத்தனைச் சிக்கல்களுக்கும் தீர்வாக அவர்கள் திகழ்வார்கள். அருட்பேராற்றலால் ஆசிர்வதிக்கப் பெற்றவர்கள்!’

இல்லறத்தை விட்டு விலகிடாமல், அதில் ஓர் நிறைவைகண்டு, முழுமை செய்துவிட்டு, தன் வாழ்நாள் முழுவதும், யோகத்தின் வழியாக, பருவம் வந்த அனைவருமே, மெய்ப்பொருள் உண்மை விளக்கமும், நான் யார்? என்ற தன்னையறிதலும், பிரம்மஞானமும் வழங்கி, தனிமனித விடுதலையும், அமைதியும் தந்து, அதன் வழியாக, உலக சமாதானமும் தந்து வழிநடத்தும், வேதாத்திரி மகரிஷி அவர்களின் விளக்கம் நமக்குள் ஓர் உந்துதலை ஏற்படுத்துவதை உணர முடிகிறதுதானே?

விட்டுக்கொடுப்பதில் முந்திக் கொள்ள வேண்டும் என்கிற வெளிச்சத்தை நமக்குள்ளே உண்டு பண்ணுகிறது. அமைதியான குடும்பமே நல்ல குடும்பம். குடும்ப அமைதியே உலக அமைதிக்கு வித்தாகும் என்றும் குறிப்பிடுகிறார் மகரிஷி. அமைதியான குடும்ப வாழ்விற்கு மேலும் அவர் சொல்கின்ற கீழ்க்கண்ட பத்து அறிவுரைகளை கவனத்தில் கொள்வோம். 

பத்து வழிகள்:

1.  நாம் பெற்ற ஞானத்தைப் பயன்படுத்த வேண்டிய இடம் நம் குடும்பமே.

2.  கணவன்-மனைவி உறவுக்கு இணையாக உலகில் வேறெந்த உறவையும் சொல்ல முடியாது.

3.  குடும்ப நிர்வாகம் செய்வது உங்கள் அறிவாகத்தான் இருக்க வேண்டும். எந்த நிலையிலும் உணர்ச்சிகள் நிர்வாகம் செய்யக் கூடாது.

4.  வரவுக்குள் செலவை நிறுத்துங்கள். அது குடும்ப அமைதியைக் காக்கும். வீண் செலவுகள் செய்ய வேண்டாம்.

அது குடும்ப அமைதியைக் குலைக்கும்.

5.  ஒரு குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் பொருளீட்டும் திறன் வேண்டும். அல்லது பெரும்பாலோர் பொருளீட்டும் திறன் பெற்றிருத்தல் வேண்டும்.

சிலர் அதிகமாக சம்பாதிக்கலாம்; சிலர் குறைவாகச் சம்பாதிக்கலாம். அப்படி இருந்தாலும் அதைக் காப்பது, நுகர்வது, பிறருக்கு இடுவது ஆகிய செயல்களில் சமமான பொறுப்பு வேண்டும்.

6.  கணவனுக்குத் தெரியாமல் மனைவியோ, மனைவிக்குத் தெரியாமல் கணவனோ சம்பாதிப்பதும், செலவு செய்வதும், சேமிப்பதும் சரியாக இருக்காது. அது பிணக்கிக்கு இடம் தரும்.

மனதில் ஒளிவு மறைவு வைத்துக் கொண்டிருந்தால் தெய்வீக உறவு இருக்காது.  பொறுப்பற்று வீண் செலவு செய்பவராக இருந்தால் இது பொருந்தாது.

7.  குடும்ப அமைதி நிலவ, சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்தல், தியாகம் என்ற மூன்றையும் கடைபிடித்து வரவேண்டும்

8.  பிறர் குற்றத்தைப் பெரிதுபடுத்தாமல் பொறுத்தலும், மறத்தலும் அமைதிக்கு வழி வகுக்கும்.

9.  தனக்குக் கிடைத்த வாழ்க்கைத்துணையைப் பற்றி 

யாரும் குறை கொள்ளத் தேவை இல்லை. அவரவர் அடிமனமே இதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்.

10.  நல்ல குடும்பத்தில் நன்மக்கள் தழைப்பார்கள். பிறவிப் பெருங்கடல் நீந்துவதற்கும் குடும்ப அமைதி இன்றியமையாததாகும். 

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!

In this living world, how can we be aware of our actions and duties?


வாழ்கின்ற இந்த உலகில், நம்முடைய செயல்களிலும், கடமையிலும், விழிப்புணர்வாக இருப்பது எப்படி?




கடமையில் விழிப்புணர்வு என்பது, ஓவ்வொரு மனிதனுக்கும் தேவையானது. தன்னுடைய வாழ்வில், துன்பமும், சிக்கலும் தானாக, உருவாக்கிக் கொள்ளாத நிலை, இங்கிருந்துதான் கிடைக்கும். கவனமும், பாதுகாப்பும் தரும்.
இன்ப வாழ்வுக்கு, திறந்த மனப்பான்மையோடு கருத்தை மனதில் வாங்கிக் கொள்வது (Receptivity) அதற்கேற்ப தன்னை மாற்றிக் கொள்வது (Adaptability) குற்றத்தைக் கண்டபோது, அதை மன்னித்து மறந்து விடுவது (Magnanimity) ஆகிய மூன்று தன்மைகள் நம் எல்லோரிடமும் வளர்க்கப்பட வேண்டும். இதோடு தீமையை நீக்கி, நன்மையே செய்தல் (Creativity) என்ற தன்மையும் வேண்டும்.
பிறர்க்கு உதவி புரிவதில் கூட நாம் இக்காலத்தில் விழிப்போடு இருக்க வேண்டியுள்ளது. உதவி தேவைப்படுபவர்கள் தான், அதற்கு தகுதியுடையவர்கள் தான் நம்மை நாடி வருகிறார்கள் என்று நினைப்பதற்கில்லை. 
அப்படித் தகுதியுடையவர்களாய் இருப்பினும், தகுதி பெற்ற எல்லோருக்குமே நாம் உதவி செய்ய முடியுமா என்பதையும் நாம் சிந்தித்துப் பார்த்துக் கொள்ள வேண்டும். 
நாம் ஒரு கனி மரம் வளர்க்கின்றோம். கனிகளை மட்டும் தான் கொடுத்து உதவி செய்யலாமே ஒழிய மரத்தையே வெட்டிக் கொடுத்துவிட்டால் பிறகு கனி எப்படிக் கிடைக்கும்? 
பொருள் பறிக்கவே சிலர் பற்பல வேடங்களில் நம்மை நாடி வரும் இக்காலத்தில், பிறர்க்கு உதவி செய்வதில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியுள்ளது, 
பிறர் உதவி என்பது கூரிய ஆயுதம் போன்றது. தவறிமாட்டிக் கொண்டால் அதற்கு நாமே பலியாகி விடுவோம். விழிப்பு நிலையோடு தான், நம் அளவுக்குத் தக்கபடி தான் நாம் பிறர்க்கு உதவ வேண்டும். 
நீதிபதி முன் நிறுத்தப்படும் குற்றவாளியை, எப்படி அந்நீதிபதி அவன் குற்றமற்றவனாகவும் இருக்கக்கூடும், என்று விசாரணையை துவக்குகிறாரோ, அதேபோல் நம்மிடம் உதவி நாடுபவரை "இவன் ஏன் ஏமாற்றுக்காரனாய் இருக்கக் கூடாது" என்று ஒரு கேள்வி எழுப்பிக் கொண்டு, பிறகு நல்லவன் தான் என்று சோதித்து அறிந்த பிறகே அளவோடு உதவி அளிக்க வேண்டும்.
உலக கடமையில் ஈடுபட்டுள்ள நமக்கு பல பொறுப்புகள் உண்டு. எவ்வளவு விழிப்புடன் நம் கடமையைச் செய்கிறோமோ அந்த அளவுக்குத் தான் நாம் வாழ்வில் இனிமை காண முடியும். இத்தகைய தெளிவான அனுபவ விளக்கத்தை, பாமர மக்களின் தத்துவஞானி, வேதாத்திரி மகரிஷி அவர்கள் நமக்கு அறியத்தருகிறார்.

வாழ்க வளமுடன்.

Will virtue and God realization give you a fulfilling life? Is that the right way?


உங்களுக்கு அறநெறியும், இறையுணர்வும் நிறைவான வாழ்வைத் தருமா? அது சரியான வழிதானா?


சித்தர்களின் வரிசையில், தலைமையாக குறிப்பிடப்படுகிற, சித்தர் பெரும் மகான், திருமூலர், தன்னுடைய ‘திருமந்திரம்’ நூல் வழியாக, ‘வாழ்கின்ற ஒரு மனிதனுக்கு, தவமும், அறமும் துணையாகும். அந்த இரு துணைகள் கொண்டுதான், நீண்ட பெரும் பிறவித்தொடரை கடந்து, முழுமை செய்திட முடியும்’ என்கிறார். ஆனால், இதையெல்லாம் ‘மனித வாழ்வியல் உண்மை தத்துவம்’ என்று அறியாமல், பக்தி வழிபாடு கோட்பாடு என்று பெரும்பாலோர், ஒதுக்கி வைத்தும், புறந்தள்ளியும் விட்டார்கள். ஆனால், உண்மை நிலைத்து நிற்பதால். இத்தகைய, மனித வாழ்வுக்கான, அக்கறையான தத்துவங்களும், கருத்துக்களும் நிலைத்து நின்று, விருப்புவோருக்கு உதவுகின்றன. சித்தர்கள், தங்களுடைய வாழ்க்கை முழுவதுமே, ஈகை என்ற உயர்ந்த நோக்கத்தைக் கொண்டவர்கள். வாழ்வில் துன்பம் ஏற்று திசைமாறும் மனிதர்களுக்கு, அன்பும் கருணையுமாக இருந்து, வழி காட்டுபவர்கள். அந்த வழியில்தான், ஆசான் வேதாத்திரி மகரிஷி அவர்களும் வந்திருக்கிறார்.

வேதாத்திரி மகரிஷி அவர்களே தரும், உண்மை விளக்கத்தை, இங்கே காணலாம். மனித இன வாழ்வுக்கு ‘இறையுணர்வும் அறநெறியும்’ சரியான வழிகாட்டுதல்கள் ஆகும்.  இறைநிலை பற்றிய அறிவு என்பது ஒரு மாபெரும் மறைபொருள் விளக்கமாகும்.  

இது ஒருவர் தன் அகத்தவத்தின் (Simplified Kundalini Yoga - SKY) மூலம் மனச் சுழல் விரைவைக் (Mind Frequency) குறைத்து அமைதி என்னும் மனநிலைக்கு வந்து, அந்த நிலையில் சிந்தித்து இறையுணர்வு பெற வேண்டும்.  

சாதாரணமாக வாய் மொழியின் மூலமாகவோ, மந்திரங்கள் மூலமாகவோ, சடங்குகள் மூலமாகவோ, புத்தகங்கள் மூலமாகவோ இறைநிலையை  உண்மையாக உணர முடியாது. ‘இறைநிலை உணர்வு ஏற்படவில்லை என்றால் ஒரு மனிதனுக்கு அறநெறி வாழ்வும் அமையாது’.

பல காரணங்களால் இக்காலத்தில் இறையுணர்வு என்ற அறிவின் முழுமைப்பேறும் (Perfection), அறநெறி என்ற சீரமைந்த வாழ்வும் நிலைகுலைந்து போயிருக்கின்றன.  இதன் காரணமாகவே இன்று நாம் மனித குல வாழ்வில் காணுகின்ற எல்லா வகையான குழப்பங்களும், துன்பங்களும் நேர்ந்துள்ளன. அறிவின் சிந்தனையாற்றல்  செயல்படாததனாலும், பழக்கத்தினாலும் தொடர்ந்து வருகின்ற செயல்கள் பலப்பல.  

களைகளை அகற்றுவது போன்றே இவற்றையும் அகற்றி விட வேண்டியது மனித இன வாழ்வுக்கும், வளத்திற்கும் நலமளிக்கும். விவசாயத்தில் பயிரை வளரவிடாது தடுக்கின்ற களைகளை போன்ற பல செயல்கள் உருவாகி சமுதாயத்தில் மண்டிக்கிடக்கின்றன.  

இறையுணர்வு பெற்று, அறம் ஆற்றி, வாழுகின்ற ஆன்மீக நெறியில் மனிதன் வாழ்ந்தால் - சமுதாயத்தில்  ஏழ்மை என்பது இருக்காது.  பொய், கொலை, களவு, சூது, விபச்சாரம் என்னும் ஐந்து வகையான பழிச் செயல்களும் இருக்காது.  அறிவின் குறைபாட்டினால் தனக்கும், பிறருக்கும் துன்பங்களை விளைவிக்கின்ற குற்றங்களும் சமுதாயத்தில் நிலவா.  

எனவே வயது வந்த அனைவரும் முறையாக "குண்டலினி யோகம்" (Simplified Kundalini Yoga) பயின்று இறையுணர்வு பெற வேண்டும்.  வாழ்வில் அறநெறியையும், இறையுணர்வையும் பின்பற்றி வாழ வேண்டும். விளைவறிந்த விழிப்போடு தனக்கும் பிறர்க்கும் துன்பம் வராமல் காக்கும் செயல் முறையே அறமாகும்.தனக்கும், பிறர்க்கும், நன்மை தரும் செயலின் விளைவாக இறைநிலையை உணரும் வழியே சிறந்த இறையுணர்வு ஆகும்.

இறைவனை வணங்குவதைவிட, இறைநிலையைப் பற்றி சிந்திப்பதே மேல். அறிவின் மதிப்பு குறையாமல் உயிர் போனாலும் சரி அதை ஏற்றுக்கொள்வோம்.  அறிவு கெட்டு உயிர் நீடித்து பயனில்லையென்பது அறிஞர் கண்ட தெளிவு. இவ்வாறாக நமக்கு வேதாத்திரி மகரிஷி அவர்கள் விளக்கம் தருகிறார். இந்த உண்மைகளை கவிதை வழியாகவும் தருகிறார்.

இறையுணர்வும் அறநெறியும் நிறைவான வாழ்வைத் தரும், என்ற தலைப்பில்

இறையுணர்ந்து, அறம்ஆற்றி, எல்லாரும் வாழ்ந்தால்,

ஏழ்மைஏது? பஞ்சமகா பாபங்கள் ஏது?

குறையறிவால் எழுகின்ற குற்றங்கள் ஏது?

கோயில்கள் தவம்பயில, தத்துவங்கள் கற்க. 

முறையாகத் திருந்தியநற் கலாசாலை களாம்.

மொழிநாடு, பொருள்துறையில் பிணக்குபோர் ஏது?

சிறைச்சாலை விலங்கினங் கட்குக்கூட வேண்டாம்!  

சிந்தனையும், சிக்கனமும், சீர்திருத்தம் ஏற்போம்.


வாழ்க வளமுடன்.

-

Is there any other guides by Vethathiri Maharshi after simplified exercises to get fit?


உடல் நலம் பெறுவதற்கு, எளியமுறை உடற்பயிற்சிக்கு அடுத்து, வேதாத்திரி மகரிஷி வேறேதேனும் பயிற்சிகள் உள்ளதா?

கேள்வி

வாழ்க வளமுடன் ஐயா. உடல் நலம் பெறுவதற்கு, எளியமுறை உடற்பயிற்சிக்கு அடுத்து, வேதாத்திரி மகரிஷி வேறேதேனும் பயிற்சிகள், வழிமுறைகள் சொல்லியிருக்கிறாரா? 


பதில்

தன்னுடைய வாழ்நாளில், தன் இறையுணர்தல் பயணத்தோடு, அதை மற்றவர்களுக்கும், அறித்தரும் வேளையில், அன்பர்களின் உடல்நலம் குறித்த அக்கறையும் கொண்டிருந்தார் வேதாத்திரி மகரிஷி அவர்கள். பிறருக்கு அப்பயிற்சிகளை கற்றுத்தந்து, அதன் வழியாக கிடைத்த, அந்த மாற்றங்களையும், விளைவுகளையும் கூட ஆராய்ந்து, திருத்தி, முழுமை செய்திருக்கிறார்.  பல்வேறு வகையான ஆசனம், மூச்சுப்பயிற்சி, உடலியக்கம், அக்குபிரஷர் என்று எல்லாம் கலந்த ஒன்றாகவே, எளியமுறை உடற்பயிற்சியை அமைத்துத் தந்திருக்கிறார். 

    முக்கியமாக, கிட்டதட்ட உண்மையை இழந்திருந்த, சித்தர்களின், அற்புதமான காயகல்ப யோக கலையை, முழுமை செய்தும் தந்தார். எளிமையான குண்டலினி யோகத்தையும் கற்றுத்தந்தார். தன்னைப்போலவே நாமும், மெய்ப்பொருள் விளக்கம் பெற வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வமும் கொண்டிருந்தார்.

அந்த வகையில், அவர் சொன்ன, உடல் நலம் பெறுவதற்கான அடிப்படை வாழ்க்கை நெறிமுறைகளை இங்கே காணலாம். வாழும் வாழ்க்கையில், உடல் நலம் மீது அக்கறை கொண்டோர் யாவரும், கடைபிடிக்க வேண்டிய விதிகள் என்று கூட சொல்லமுடியும். தங்களின் உடலின் மீதும், உயிரின் மீதும், வாழ்நாளின் மீதும் விருப்பம் கொண்டோர், இந்த நெறிமுறைகளை கடைபிடிக்கவேண்டியது அவசியம். மற்றவர்கள், வழக்கம்போல, ஒதுக்கி, தள்ளி வைத்துவிடலாம்.

இனி, 

  அடிப்படை: அணுக்களின் கொத்து இயக்க நிகழ்ச்சியே தூல உடல்.அதனூடே பரமாணு நிலையில் ஊடுருவிச் ஓடிச் சுழன்று கொண்டேயிருப்பது உயிர்ச்சக்தி. உயிர்ச்சக்தியின் ஓட்டத்தில் தடையுண்டானால் அதுவே உணர்ச்சியாகின்றது.  அந்த உணர்ச்சி ஒரு ஜீவன் தாங்கும் அளவிற்கும் தாங்கிப்பழகிய அளவிற்கும் மேலாக ஓங்கும்போது அது வல்லுணர்ச்சியாகி துன்பமாக, நோயாக உணரப்பெறுகின்றது. 

        அந்த தடை நீடித்து, அதன் விளைவாக உடலில் மின் சாரம், காற்று, இரத்தம், ஆகிய மூன்று சுழல்களும் தடைப்படுமானால் உடலுக்கு மூலமான வித்து, தாங்கும் அளவுக்கு மேல் கனல் கொண்டு, அதன் நாளங்களைத் தகர்த்து வெளியேறிவிடும். உணர்ச்சி என்ற அறிவோடு கூடிய உயிச்சக்தி தொடர்ந்து அந்த உடலில் சுழன்று இயங்க முடியாமல் உடலை விட்டு வெளியேறி விடும். இந்த நிகழ்ச்சியே மரணம் எனப்படுகிறது.

ஐந்தில் அளவுமுறை: உயிர்ச்சக்தி உடலில் ஒழுங்காக ஓடிக்கொண்டிருப்பதே இன்ப உணர்வாகும்; உடல் நலமாகும். அதைப் பாதுகாக்க (1) உணவு, (2) உழைப்பு, (3) உறக்கம், (4) ஆண்-பெண் உடலுறவு, (5) எண்ணம் இந்த ஐந்து அம்சங்களில் தொடர்ந்த கவனம் தேவை. இவை அளவுக்கு அதிகமானாலும் குறைந்தாலும் முறை தவறிக் கொள்ளப் பெற்றாலும் உயிர்ச்சக்தி ஓட்டம் பாதிக்கப்படும். நோய்கள் உண்டாகும்.

உணவில் எளிமை: வாரத்திற்கு ஒரு முறை இரவில் உணவு கொள்ளாமல், இலேசாகப் பழ வகை உண்டோ, அல்லது சிறிது பால் அருந்தியோ உறங்குவது நோய்களை ஒரு அளவில் தடுக்க உதவும். உடல் ஜீரணிக்கத்தக்க அளவு உணவு உண்டால் அது நன்மை பயக்கும். அளவுக்கு மீறினால், அந்த உணவு உடலை ஜீரணிக்கும்.

சமநிலை தாக்கங்கள்: கருவமைப்பு, எண்ணம், செய்கை, கோள்களின் சஞ்சாரத்தில் அமையும் நிலை, சந்தர்ப்ப மோதல் ஆகிய காரணங்களால் உடலில் இரசாயன வேறுபாடுகள் உண்டாகின்றன. இத்தகைய வேறுபாடுகளால் உடலிலுள்ள அணு மூலகங்கள் அதற்கு ஏற்ப விரைவில் வேறுபடும். அதன் பயனாக உடலில் சுழன்றோடிக் கொண்டிருக்கும் காந்தம், மின்சாரம், இரத்தம், காற்று ஆகிய நால்வகையும் அவற்றின் விரைவில் ஏற்றத்தாழ்வுகளைப் பெறும்.  விளைவாக ஒவ்வொரு அவயங்களூடேயும் ஊடுருவிச் செல்லும் அவற்றின் ஓட்டத்தில் தடையும் உண்டாகும். இந்தத் தடை நோயாக உணரப்படுகிறது. எந்த அவயத்தில் எந்த அளவு எந்தச் சக்தியின் ஓட்டத்தில் தடைப்படுகிறதோ அதற்கு ஏற்ப நோயின் வலுவும், பெயரும், அதற்குக் காலமும் நிர்ணயிக்கப்பெறுகின்றன.

மரு உந்து சக்தி: நோய்களை நீக்கிக் கொள்ளும் சக்தி இயற்கையாக உடலில் அமைந்துள்ளது.ஒத்த முறையில் பத்தியம் காத்து ஓய்வும் எடுத்துக்கொண்டால் நோய்கள் மிகவும் விரைவாகத் தீர்ந்துவிடும். நோய் கடினமாக இருந்தால் தக்க மருந்து வகைகளை உபயோகிக்கலாம்.

ஆர்வமும் மாற்றமும்: நோயற்ற உடலில்தான் அறிவும் திறன்பட இயங்கும். இயற்கை இன்பங்களைத் துய்க்க இயலும். எனவே ஒவ்வொருவரும் நோயுற்று வாழ வழிகண்டு நின்று ஒழுகி வாழவேண்டும்.

அகத்தாய்வு: மனத்தூய்மை, ஒழுங்கான உணவு, அளவான உழைப்பு இவற்றுடன் கூடிய வாழ்க்கை, நோய்கள் இல்லா உடல் நலத்தோடு இருக்க உதவும். பொறாமை, சினம், வஞ்சம், கவலை, காம எண்ணங்கள் இவை உடல் காந்த சக்தியினை அளவுக்கு மீறி அழித்து விடும். தவத்தாலும் ஆராய்ச்சியாலும் இந்த உணர்ச்சி நிலைகளை மாற்றி விடலாம். உணர்ந்தோரை அண்டி முயலுங்கள். வெற்றி நிச்சயம்.

தவிர்க்க வேண்டியவை: உணவு உண்ட உடனே ஓட்டம், சைக்கிள் சவாரி, கடினமான வேலை, ஆண் பெண் உடலினைப்பு இவை கூடாது. அடுத்தடுத்து இச்செயல்களில் ஈடுபடுவோருக்கு வயிற்றுப்புண் உண்டாகிவிடும். அது குன்மம் (Peptic Ulcer) நோயாக வழங்கப் பெறுகின்றது. 

தூய்மை பெறல்: உடலிலிருந்து கழிவாகி வெளியேறும் எந்தப் பொருளும் உடலின் மீது தங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவை உடனே கிருமிகளாக மாறும் வாய்ப்பு இருக்கின்றது. ஒரு நாளைக்கு ஒரு முறையாகிலும் வெந்த நீரிலே தண்ணீரிலோ குளிக்க வேண்டியது அவசியம். மலபந்தம் (Constipation) அஜீரணம் இவை ஏற்படாமல் பாதுகாப்பது உடல் நலத்தைப் பேணும் வழிகளில் மிக முக்கியமானது.

தன்னில் அக்கறை: எந்தக் காரணத்தைக் கொண்டும் பிறர் அணியும் செருப்பு, உடுத்தும் துணி, படுக்கும் பாய் இவற்றை மற்றவர் உபயோகிக்கக் கூடாது. தவிர்க்க முடியாத சமயத்தில் பிறர் பாயின் மீது துணி விரித்துப் படுப்பது நல்லது. மக்கள் கூட்டமாக கூடும் இடங்களில் மூன்று அடிக்கு ஒருவர் மேல் நெருங்கி இருக்கக் கூடாது. மூச்சு விடும்போது அவற்றில் வெளிவரும் சத்துக்கள் மிகவும் வேகமானவை. இருவர் மூச்சும் ஒன்று சேரும்போது உடனே கிருமிகளாக மாறும் தன்மையுடையன. அத்தகைய காலங்களில் கிருமி நாசினிப் புகையோ அல்லது சாம்பிராணிப் புகையோ இடைவிடாமல் பரப்பிக் கொண்டே இருக்கவேண்டும்.

வேதாத்திரி மகரிஷி அவர்களின், இந்த விளக்கத்தை, நன்கு அறிந்து, நினைவில் கொண்டு, அதன்படி, நம் வாழ்க்கைமுறையை அமைத்துக் கொண்டால். தனிமனிதனாகவும் இன்புறலாம். குடும்பமாகவும், சமூகமாகவும் இன்புறலாம். உலக மக்கள் யாவருமே இன்புறலாம். இனிமை நிறைந்த வாழ்வை, எல்லோரும் வாழவும் வழியுண்டாகும்.

வாழ்க வளமுடன்.

-

If you are a child, you can always be happy? Is that correct?


குழந்தைகளாக இருந்தால் எப்போதும் சந்தோஷமாக இருக்கலாம் என்ற கருத்து எல்லோரிடமும் நிலவுகிறதே? அது சரியானதுதானா?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா! குழந்தைகளாக இருந்தால் எப்போதும் சந்தோஷமாக இருக்கலாம் என்ற கருத்து எல்லோரிடமும் நிலவுகிறதே? அது சரியானதுதானா?


பதில்: 

பொதுவாக அப்படிச் சொல்லிக்கொள்வது உலகவழக்கமே ஆகும். உங்களை நீங்களே கேட்டுப்பாருங்கள். நீங்கள் குழந்தையாக இருந்த பொழுது சந்தோஷமாக இருந்தீர்களா? அப்படியாக உணர்ந்தீர்களா? என்று  கேட்டுக்கொள்ளுங்கள். என்ன பதில் சொல்லுவீர்கள்? அந்த வயதில் அப்படியாக எதும் தோன்றாது. ஆனால், எல்லாவற்றிலும் ஓர் இன்ப நுகர்வு மட்டுமே தலைதூக்கி இருக்கும். அதுவே உங்களுக்கென்று விபரம் வரும்வரையிலும் தொடர்ந்திருக்கும். பெற்றோரின் நிலை அறியாமல், அது எனக்கு வேண்டும். அப்போதான் நான் நன்றாக இருப்பேன் என்று கருத்தில் அடம்பிடித்த காலம் இருந்திருக்கும்.  பெற்றோரும், தன் பிள்ளையின் மகிழ்ச்சிக்காக, தாங்கள் வருந்தினாலும் கூட, பிள்ளை நன்றாக, சந்தோஷமாக இருக்கட்டும் என்று நினைத்திருப்பார்கள்.

குழந்தைத்தனத்தில் இருந்த ஒரு உணர்வு, சந்தோஷமாக ‘இப்பொழுது’ உங்களுக்குத் தெரிகிறது என்பதுதான் உண்மை. வளர்ந்த வயதிலும், உலகில், உங்கள் வாழ்க்கை சூழலில், தொழிலில், வேலைகளில், வியாபாரங்களில் பலவிதமான தொல்லைகளை பெற்று, கவலைகொண்டு, துன்பப்பட்டு வருந்தும் இந்த வேளையில்தான், அந்தக்கால குழந்தை சந்தோஷம் ஞாபகம் வருகிறது அல்லவா? அதுதான் உண்மை. 

ஒரு பரிசோதனை செய்யுங்கள். உங்கள் குழந்தையிடம், நன்கு பேசத்தெரிந்த  3 வயது முதல் 12 வயதுக்குள்ளான குழந்தைகளிடம் (சிறுவர், சிறுமியர்) கேளுங்கள்.

‘இப்போது நீ சந்தோசமாக இருக்கிறாயா?’

‘அப்படின்னு யார் சொன்னா?’ என்று எதிர்கேள்வி கேட்பார்கள். அதற்குப்பிற்கு என்ன சொல்லுவார்கள் என்பதை உங்கள் வசமே விட்டுவிடுகிறேன். இப்போதைய, எல்லா குழந்தைகளும் கையில், கைபேசியோடு திரியும் இந்தக்காலத்தில், அவர்களும் பெரியமனிதர்கள் ஆகிவிட்டார்கள் அல்லவா?

அப்படியானால், அக்குழந்தைகளுக்கு சந்தோஷம் இல்லையா? இருக்கிறது, ஆனால் அதை உணரக்கூடிய நிலையில் அவர்கள் இல்லை. சரி, வளர்ந்து பெரியவர்களான நமக்கு சந்தோஷம் இருக்கிறதா? என்று கேட்டால், இருக்கிறது. ஆனால் நாம் அதை தவறவிட்டுக்கொண்டே இருக்கிறோம். உண்மையாகவா என்கிறீர்களா? ஆம், சந்தோஷம் எங்குமே போய்விடவில்லை. நாம்தான் அதை விட்டு விலகிக்கொண்டே இருக்கிறோம். குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள், மகிழ்ச்சியும், மன நிறைவும், அமைதியும் எங்குமே நிறைந்திருக்கிறது என்று சொல்லுகிறார்.

ஆனால், உணர்ச்சிவசப்பட்ட மனதோடு, அன்றாட வாழ்க்கைச்சூழலில் அந்த மகிழ்ச்சியும், மன நிறைவும், அமைதியும் பெறக்கூடிய நிலையில், நாம் இல்லை. பரபரப்பான நிலையில் ஓவ்வொரு நொடியையும் கடந்துவிடுகிறோம்.

இதை எப்படி சரிசெய்யலாம்? இதற்கு துரியதவம் போதுமானது. நாள்தோறும் தவறாமல், அதிகாலையில் துரியதவம் இயற்றி அன்றைய நாளை துவக்குங்கள். மனமும் எண்ணங்களும் பூரிப்பான அந்த நிலையை, உங்களுக்குள் தக்கவைத்துக்கொள்ளுங்கள். சந்தோஷத்தை தேடவேண்டாம், அது அங்கேயே இருப்பதை உணரலாம். குழந்தைப் பருவத்திற்கு போகமுடியாததற்கு வருந்தப்படவும் தேவையில்லை.

‘இந்தக்காலத்திலே அப்படி இருந்திடவும் முடியாதுங்க, ஏன்னா, பொழைப்பு கெட்டுறும்ங்க’ என்கிறீர்களா? சரி அது உங்கள் நிலைதானே, தொடர்க!

வாழ்க வளமுடன்.

-

Always we are suffering to find happiness in life, then how will help yoga on that?


வாழும் நாட்களில், மகிழ்ச்சியும் சந்தோஷமும் தேடித்தானே வாழ்கிறோம். அதற்காத்தான் இத்தனை கஷ்டமும்படுகிறோம். இதில் யோகத்தில் எப்படி மகிழ்ச்சியும், சந்தோஷமும் கிடைத்துவிடும்?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, வாழும் நாட்களில், மகிழ்ச்சியும் சந்தோஷமும் தேடித்தானே வாழ்கிறோம். அதற்காத்தான் இத்தனை கஷ்டமும்படுகிறோம். இதில் யோகத்தில் எப்படி மகிழ்ச்சியும், சந்தோஷமும் கிடைத்துவிடும்?


பதில்:

அப்படியானால், உங்கள் யோகப்பயணத்தின் நோக்கம் என்னவென்றால், தேடுகின்ற மகிழ்ச்சியும் சந்தோஷமும் உங்களுக்கு கிடைக்கவேண்டும் என்பதாகத்தான் இருக்கிறது அல்லவா? உண்மையாக இப்படி யாரேனும் உங்களுக்குச் சொன்னார்களா? நீங்களாகவே அப்படியாக நினைத்துக் கொண்டீர்களா? என்பதை யோசிக்கிறேன். பெரும்பாலான யோக அமைப்புக்கள், யோகம் செய்தால் உண்மை விளக்கம் பெறலாம் என்றுதான் சொல்லுவார்கள். அந்த உண்மை விளக்கம், பலபடிகளில் உயர்வை அளித்து, ‘நான் யார்?’ என்ற கேள்விக்கான விடையை அளித்து, நம்முடைய பிறவி நோக்கத்தையும், இதுநாள்வரை நாம் பெற்றுவந்த பிறவிக்கடனையும் தீர்த்து நம்மை முழுமையாக்கும் என்பதுதான் உண்மை.

இந்த யோகபயணத்தில், அவரவர்களின் ஆர்வம், முயற்சி, பயிற்சி, ஆராய்ச்சி, விளக்கம் என்ற வகையில்தான் முன்னேற்றமும் கிடைக்கும். அந்த கால அளவு முறை என்பதை நாம், தீர்மானிக்க முடியாது. ஒருவருக்கு உடனே கிடைக்கலாம், இன்னொருவருக்கு குறிப்பிட்ட காலம் ஆகலாம். மற்றொருவருக்கு நீண்ட காலம் எடுத்துக்கொள்ளலாம்.  ஆனால், யோகத்தில் பயணிக்கும் ஒருவருக்கு உண்மை எப்படியாவது கிடைத்துவிடுகிறது என்பதுதான் நிச்சயமானது. அதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

யோகத்தில் இணைந்து அதன்வழியாக, விளக்கம்பெற்று பயிற்சியும், தியானமும் செய்துவந்தால், மகிழ்ச்சியும் சந்தோஷமும் எப்படி கிடைக்கும்? என்ற கேள்வியும், இதுவரை யோகம் செய்து வந்தும், அந்த மகிழ்ச்சியும் சந்தோஷமும் கிடைக்கவில்லையே? என்ற மற்றொரு கேள்வியும், உங்களுடைய கேள்வியில் இருக்கிறது எனலாம்.

ஒரு உண்மை விளக்கத்தை, இன்று உங்களுக்குச் சொல்லுகிறேன். அந்த உண்மை உங்களுக்குத் தெரியுமா? மகிழ்ச்சியும் சந்தோஷமும் வாழ்க்கையில் தேடிப்பெற வேண்டிய அவசியமே இல்லை. அது ஏற்கனவே நம்மிடம்தான் இருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்களா? நம்மிடம் ஏற்கனவே நிலைபெற்று இருக்கின்ற மகிழ்ச்சியும் சந்தோஷமும் பலவித தடைகளால் மறைக்கப்பட்டிருக்கிறது. அந்த தடைகளை அகற்றி, நமக்குள்ளும், நம்மைச்சுற்றிலும், இந்த உலகிலும், இந்த பிரபஞ்ச அளவிலும், எங்கும் நிறைந்துள்ள ‘மகிழ்ச்சியும் சந்தோஷமும்’ இருக்கும் இடத்திலிருந்தே பெறுவதுதான் யோகத்தின் முக்கிய நோக்கமும் ஆகும்.

‘அதுதானய்யா, கிடைக்கவில்லையே?’ என்று புலம்புவதில் அர்த்தமில்லை. உங்கள் யோகப்பயணத்தை, எந்த தேடுதலும், நோக்கமும் இன்றி இயல்பாக தொடருங்கள். உங்களுக்கான வெற்றி இலக்கு நிச்சயமாக கிடைக்கும். அதில் சந்தேகமில்லை. வாய்ப்புக் கிடைத்தால், என்னை நேரில் சந்தித்து உண்மையறியுங்கள். உங்கள் ஆசிரியடமும் கேட்டுப் பெறுங்கள்.

வாழ்க வளமுடன்

-


Why are there so few teachings for life these days?


இந்தக்காலத்தில் வாழ்க்கைக்கான போதனைகள் குறைவாக இருக்கிறதே ஏன்?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, இந்தக்காலத்தில் வாழ்க்கைக்கான போதனைகள் குறைவாக இருக்கிறதே ஏன்?

பதில்:
இந்தக்காலத்தில் வாழ்க்கைக்கான போதனைகள் குறைவாக இருக்கிறதாக ஏன் உங்களுக்குத் தோன்றுகிறது? என்று எதிர் கேள்வி கேட்டால் உங்கள் பதில் என்ன? பொதுவாகவே அறிவுரையும், ஆலோசனையும் மிக எளிது என்று எல்லோரும் சொல்லுவார்கள். அதை சொல்லுபவர்களே கடைபிடிக்கிறார்களா என்பதும் சந்தேகமே!

ஆனால் மனித வாழ்க்கைக்கான தத்துவங்களும், உண்மைகளும், வழிமுறையாக தந்த போதனைகளும், தன்னையும், இயற்கையையும் உணர்ந்தறிந்த ஞானிகளால், மகான்களால், மேதைகளால் வழங்கப்பட்டது, இன்னும் வழங்கப்பட்டுக் கொண்டும் வருகிறது, அவர்கள் வழி நடக்கும் உயர்ந்தோர்களாலும், ஆசான்களாலும். நம் தமிழ்நாட்டில் சங்ககாலம் என்று சொல்லப்படுகின்ற கிட்டதட்ட ஆறாயிரம் ஆண்டுகளாகவே, வாழ்க்கை நெறிகள் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன. 

அவற்றையெல்லாம் தொகுத்தளித்த ‘தொல்காப்பியம்’ எனும் நூல் மூன்றாயிரம் ஆண்டுக்கால நிறைவை பெற்றிருக்கிறது. இவை எல்லாம், மன வாழ்வியலை இயற்கைக்கு ஒத்த தன்மையோடும், மதித்து வாழும் நிலையையும், மக்களோடு மக்களாக தானும் எப்படி வாழ்ந்து இன்பமே கண்டு நிறைவடையலாம் என்றும் வழி சொல்லுகிறது. தொல்காப்பியம் என்பது பல ஞானிகளில் கருத்துக்களை உள்ளடக்கிய தொகுப்பு என்றும் சொல்லுகிறார்கள். சித்தர்கள் வழங்கிய பல குறிப்புக்கள், மனித வாழ்க்கையை ஒழுங்கு செய்வது மட்டுமல்லாமல், மனிதனின் மூலமான உண்மையை அறியவும் வழி தருகிறது. அதை ஏற்கமுடியாதவர்களுக்கு பக்தி என்ற வழிமுறையையும் கொடுக்கிறது.

ஆசான் திருவள்ளுவர் இராயிரம் ஆண்டுகள் முன்பாக, பல்வேறு தலைப்புக்களில் வாழ்க்கை நெறிமுறைகளை தருவதை நாம் சிறுவயது பள்ளிப்பாடங்களில் இருந்தே அறிவோம். எனவே வாழ்க்கைக்கான போதனைகள் நிறைய, நிறைய, நிறைய இருக்கின்றன. ஆனால் நாம் அவற்றை ஏற்று, புரிந்து, வாழ்வில் பயன்படுத்துகிறோமா? என்பதுதான் சந்தேகத்திற்குறியது.

நீங்கள் இந்தக்காலத்தில் என்று சொல்லுகிறீர்கள், ஏன் மனிதன் ஒவ்வொரு காலமும் மாறிவிடுகிறானா? இல்லையே? அவன் வாழ்க்கை முறையும், பொருள் வயப்பட்ட, உயயோகப்படுத்தும் கால நிலைகளும், விஞ்ஞான முன்னேற்றமும் தான் மாறிக்கொண்டே வருகின்றன. மனிதன் உடல், மனம், உயிர், கற்றறிவு, அனுபவ அறிவு, குடும்பம், உறவுகள், சமூகம், உலகம், சராசரி வாழ்நாள் காலம் என்பதில் எந்த மாற்றமும் வருவதில்லையே.

ஆனால் நாம் என்ன நினைக்கிறோம் என்றால், வாழ்க்கைக்கான போதனை என்றால், எப்படி பணமும் பொருளும் பெறவேண்டும்? மகிழ்ச்சியை நீடித்து அனுபவிக்க என்ன வழி? என்ன செய்தாலும், எதை சாப்பிட்டாலும் நோயில்லாமல் வாழ்வது எப்படி? என்ன செய்தாலும் குறையில்லாமல் நீண்ட நாள் வாழ்வது எப்படி? இன்னும் பலப்பல, என்பதாகத்தான் எதிர்பார்க்கிறோம். அந்த எதிர்பார்ப்பதுதான் நம் குறையே தவிர, போதனைகளில் எந்தக்குறையும் இல்லை. சிந்தித்துப்பாருங்கள்!

வாழ்க வளமுடன்.
-

Why do you have frequent disagreements, quarrels with your spouse?


வாழ்க்கைத் துணைவரோடு அடிக்கடி கருத்துவேறுபாடும், சண்டை, சச்சரவும் வருவது ஏன்?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, வாழ்க்கைத் துணைவரோடு அடிக்கடி கருத்துவேறுபாடும், சண்டை, சச்சரவும் வருவது ஏன்?


பதில்:

நீங்கள் சொல்வது உண்மைதான், வாழ்க்கைத் துணைவரோடு அடிக்கடி கருத்துவேறுபாடும், சண்டை, சச்சரவும் வந்துகொண்டுதான் இருக்கிறது. இதை திருமணம் என்ற பந்தத்தின் வழியாக இல்லறத்தில் வாழ்ந்துவரும் எல்லோரும் அனுபத்திருப்பார்கள், அனுபவத்திக் கொண்டும் இருப்பார்கள். இப்போது காதல் வசப்பட்டு, உனக்காக உயிரையும் கொடுப்பேன் என்ற உயர்ந்த வசனம் பேசுபவர்களும் பின்னாளில், கணவன் மனைவி என்று ஏற்றுக்கொண்டு வாழும் பொழுது, இப்போது நீங்கள் கேட்பதைப்போல யாரிடமாவது கேட்பார்கள்.

இந்த உலக உறவுகளிலேயே, மிக உயர்ந்தது, மதிப்புவாய்ந்தது, எல்லோரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய உறவுமுறை எது தெரியுமா? கணவன், மனைவி என்ற உறவுதான். மேலும், வாழ்நாள் முழுவதும் தொடர்க்கூடியதும் இந்த உறவுதான். நம் இந்திய வாழ்வியல் கலாச்சாரம், நீண்டநாள் தொடரும் இல்லற வாழ்க்கையை அமைத்திருக்கிறது. தனித்தனியாக பிறந்து வளரும் ஒரு ஆணும், பெண்ணும், உலகமும், நீதி அமைப்பும் ஏற்ற வயதில், திருமணம் செய்து கொண்டு, கணவன் மனைவி என்ற ஒருவருக்கொருவர் ஏற்றுக்கொண்டு இல்லற வாழ்வை தொடங்குகின்றனர். அதன்வாழ்க்கை வழியாக, குழந்தைகளை வருங்கால சந்ததியாக பெற்றெடுத்து ஆளாக்குகின்றனர். ஆனால், பெருபாலான உலக நாடுகளில், ஒரே திருமண நிகழ்வும், ஒரே கணவன், ஒரே மனைவி என்ற நிலையும், மாறிக்கொண்டே இருக்கிறது. திருமணமும், திருமண முறிவும் அடிக்கடி நிகழ்கின்றன. இதற்கு காரணம் நீங்கள் இங்கே கேட்ட, அதே கருத்துவேறுபாடு, சண்டை, சச்சரவு தான். வேறுசில காரணங்களும் இதனுள்ளே அடங்கிவிடவும் கூடும்.

சரிங்க ஐயா, இதற்கு காரணம் நீங்கள் இன்னும் சொல்லவில்லையே என்று கேட்கிறீர்களா?

இதோ, காதலிக்கும் பொழுது விட்டுக்கொடுத்தும், ஏற்றுக்கொண்டும், உதவியும் வரக்கூடிய ஆணின் நிலையும், பெண்ணின் நிலையும் தொடர்கிறது. அதுபோலவே, முன்பின் அறிமுகமில்லாத ஆணும், பெண்ணும், பெரியவர்களின் ஆலோசனையில் திருமணம் வழியாக இல்லறத்தை ஆரம்பிக்கும் காலத்தில்  விட்டுக்கொடுத்தும், ஏற்றுக்கொண்டும், உதவியும் வரக்கூடிய ஆணின் நிலையும், பெண்ணின் நிலையும் சில காலம் தொடர்கிறது. காதலிப்பவர்களுக்கு திருமணத்திற்குப் பின்பும், திருமணமானவர்களுக்கு சில மாதங்கள், சில வருடங்கள் கடந்தும், இந்த கருத்துவேறுபாடும், சண்டை, சச்சரவும் அடிக்கடி வந்துவிடுகிறது. இதற்கு முக்கிய காரணம் என்ன தெரியுமா? கணவன் மனைவிமேல் வைத்திருக்கும் அன்பும், பாசமும், அக்கறையும் தான். அதுபோலவே மனைவி கணவன் மேல் அன்பும், பாசமும், அக்கறையும் தான்.

அமைதியாக, சிந்தித்துப் பாருங்கள் இந்த உண்மை உங்களுக்கு புரியவரும். இதை எப்படி தீர்க்கலாம்? யாருக்கு அதிக அன்பு இருக்கிறதோ? இருக்கிறது என்று கருதுகிறாரோ? அவர் விட்டுக்கொடுத்து வாழ்வதற்கு பழக வேண்டும். இதைத்தான் குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்களும், தன் வாழ்வில் பெற்ற அனுபவமாக நமக்கும் சொல்லுகிறார்.

வாழ்க வளமுடன்.

-

What is the way I can live without suffering?


வாழ்க வளமுடன் ஐயா, துன்பமில்லாது நான் வாழ்வதற்கு என்ன வழி?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, துன்பமில்லாது நான் வாழ்வதற்கு என்ன வழி?


பதில்:

இந்த உலகில் வாழும் மனிதன் மட்டுமல்ல, எல்லா உயிர்களுக்கும், இன்பமான வாழ்வுதான் கிடைக்கிறது. அதுதான் இயற்கையின் திட்டமாகவும் இருக்கிறது. ஏன் இங்கே இயற்கையை குறிப்பிடுகின்றோம்? இயற்கையின் வழியாக வந்த, பரிணாமத்தில் வந்தது தான் இந்த உலகம், அந்த உலகில் பரிணாமத்தால் உயிர்கள் உண்டானது. தாவரம் முதலான ஓரறறிவு முதல் ஐயறறிவு விலங்கினங்கள் வரை. அதன் பின்னும் அதன் தொடர்ச்சியாகத்தான் ஆறாம் அறிவாக மனிதனும் பரிணாமம் அடைந்தான். மனிதனின் பரிணாமத்தில் இயற்கையும் முழுமையை பெற்று நிறைந்தது. அதனால்தான் ஆறாம் அறிவுக்கு மேலான ஒன்று இல்லை, இவ்வுலகில்.

இப்படி வந்த உயிரினங்களில், மனிதன் மட்டுமே துன்பம் அடைகிறான் என்ற கருத்து நம் எல்லோருக்கும் உண்டு. முதலில் துன்பம் என்பது என்ன? என்று சிந்தித்தால், அதில் பலவகை வந்து நிற்கும். உதாரணமாக, உடலில் காயம், வலி, நோய், என துன்பம் வரலாம். மனதில் எழும் குழப்பாமான சிந்தனைகள், விரும்பத்தாகத நிகழ்வுகள், ஏமாற்றங்கள் வழியாக துன்பம் வரலாம். உங்களுக்கு என்ன வகையான துன்பம் என்பதை நீங்கள் தெளிவாகவும் சொல்லவில்லை. நீங்களே ஒரு நாள், தனியாக உட்கார்ந்து, என்ன வகையான துன்பம் எனக்கு இருக்கிறது? இது எதனால் வந்தது? என்றும் யோசித்துப்பார்த்து, வரிசையாக அதை எழுதுவைத்துக் கொள்ளுங்கள்.

பிறகு அதை படித்துப்பார்த்தால், சில உங்களுடைய எதிர்பார்ப்பினால் வந்த ஏமாற்றமாக இருக்கும். சில உங்களுடைய தவறான செயல்களால் உருவானதாக இருக்கும், சில அளவு முறை மீறியதால் வந்த விளைவாக இருக்கும். சில இயற்கையை மீறிய செயலுக்கான தண்டனையாக இருக்கும். சில மற்றவர்களுக்கு செய்த செயல்களால் கிடைத்த எதிர்விளைவுகளாக இருக்கும். சில ஏற்கனவே உங்கள் குடும்பத்தில் தொடர்ந்து வருவதாகவும் இருக்கும். இதில் கிடைத்திருப்பது எல்லாமே துன்பம்தான், நாம் புரிந்து கொள்ளாதவரை.

இந்த துன்பங்களின் உண்மை நிலையறிந்து, திட்டமிட்டு மாற்றி அமைத்துக்கொண்டால், இருக்கும் துன்பத்தில் இருந்து தீர்வு காணலாம், அதை விட்டு விலகலாம், அந்த துன்பங்கள் இனியும் எழாத வகையில் நம்மை பாதுகாத்தும் கொள்ளலாம். இதற்கு, வேதாத்திரியத்தில் அகத்தாய்வு, தற்சோதனை எனும் பயிற்சிகள் உதவும். துன்பத்திற்கு தீர்வும், வழியும் உங்களிடமே இருக்கிறது, அதை தேடிக்கண்டடைவதே உங்களுக்கான நோக்கமாக மாற்றிக் கொள்ளுங்கள்!

வாழ்க வளமுடன்.

-

The world is full of happiness! Isn't that a lie?!


இந்த உலகில் இன்பமே நிறைந்திருக்கிறது என்று சொல்லுகிறார்களே? அது பொய்தானே?!

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, இந்த உலகில் இன்பமே நிறைந்திருக்கிறது என்று சொல்லுகிறார்களே? அது பொய்தானே?!


பதில்:

இந்த உலகில், நிறைந்திருக்கும் இன்பத்தைக் காணாமல், பொய்யை பார்ப்பதும், பொய்யாக உணர்வதும் உங்கள் பார்வையில்தான் அமைந்திருக்கிறது. உங்கள் வாழ்க்கையில் அப்படியான அனுபவங்களையும் நீங்கள் பெற்றிருக்கலாம் என்றே கருத இடமிருக்கிறது. இதை, இந்த பார்வையை நீங்கள் மாற்றிக்கொள்வதுதான் மிகச்சிறந்த வழி. உங்கள் வயது என்ன என்று எனக்குத்தெரியவில்லை. உங்கள் கடந்த காலத்தை, யோசித்துப்பாருங்கள். ஒருநாள் கூடவா நீங்கள், இன்பத்தில் திளைக்காலம் இருந்தீர்கள்? அனுபவிக்காமல் இருந்தீர்கள்? உணராமல் இருந்தீர்கள்? அதை பிறருக்கும் பகிராமல் விட்டீர்கள்?

பெரும்பாலும் இதற்கு நீங்கள் பதில் சொல்லுவீர்கள். எப்படியென்றால், ‘ஐயா, அதெல்லாம் அந்தக்காலம்’ என்பதாக உங்கள் பதில் இருக்கும். இது என்ன அந்தக்காலம் என்றால், நீங்கள் சிறுவயதில் அனுபவித்த காலமாக இருக்கலாம். 

அந்த சிறுவயது என்றால், மூன்று முதல் பதினெட்டு வயது வரை என்று பொதுவாக கருதலாம். அந்த வயதில், ஆணுக்கும் பெண்ணுக்கும் எந்தவித எதிர்பார்ப்பும் இருப்பதில்லை. தன்னையும், தன் குடும்பம் பற்றியும் கூட சிந்தனையில் வைத்துக்கொள்வதில்லை. எப்போதும் ஒரு பரபரப்பு, ஆற்றல் வேகம், செயல்பாடு, மனதில் உத்வேகம், ஏதோ சாதிக்க பிறந்ததான நினைப்பு, அப்படி, இப்படி என்று ஏதேதோ இருக்கும். எந்த செயல் செய்தாலும், உங்களை வெளிப்படுத்தி, அதன்வழியாக அன்பையும், நட்பையும், மதிப்பையும், பாராட்டையும் பெறுவதற்கு விரும்புவீர்கள். முக்கியமாக தன்னநலம் கருதாத செயல்பாட்டில் நீங்கள் ஆர்வமாக இருப்பீர்கள். அந்த வயதில் உங்களுக்கென்று தனி உலகமும் கூட அமைந்திருக்கும் என்பதே உண்மை. அது உங்கள் மனதளவில் கூட இருக்கலாம்.

எந்த குழப்பங்களுக்கும் சிக்கிடாமல், எனக்கெதுக்கு அது? என்று விலகி விலகி ஓடி, தனித்திருந்து, எதும் கிட்டே வராத தடுப்போடு, உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ? அதை செய்வதற்கு விருப்பமும், செய்திறனும், திட்டமும் கொண்டிருப்பீர்கள்.

இவை அனைத்துமே இன்று, உங்களுக்கு மாறிவிட்டது. இந்த உலகில் எல்லாமே துன்பமாக மாறிவிட்டது என்று கருதுகிறீர்கள். இன்பம் என்பதே பொய் என்ற கருத்துக்கும் வந்துவிட்டீர்கள். அதை நீங்களும் அறிந்துகொண்டு, மற்றவர்களுக்கும் சொல்லிவிட துடிக்கிறீர்கள். சரிதானே?!

இதற்கு முக்கிய காரணம், உங்களுடைய எதிர்பார்ப்பும், அதனால் விளைந்த ஏமாற்றமும் ஆகும்! எப்படி என்பதை சிந்தனை செய்யுங்கள். அதற்கான உண்மை உங்களுக்கு புரியவரும்.

வாழ்க வளமுடன்.

Does this Vethathiriyam teach the good ways to earn money?!


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, பணம் சம்பாதிக்க நல்லவழிகளை சொல்லித்தருகிறதா இந்த வேதாத்திரியம்?!


பதில்:

நிச்சயமாகவே சொல்லித்தருகிறது! அது எப்படி என்று வரிசையாக பார்க்கலாம். முதலில் மனிதனின் உலக கடமைகளில் ஐந்தில் ஒன்றாக, சம்பாத்தியம் ( பணத்தை சம்பாதித்தல்) இருப்பதை, குருமகான் வேதாத்திரி மகரிஷி விளக்கிச் சொல்லுகிறார். அதனால் அதை விட்டுவிடவும் கூடாது என்று வலியுறுத்துகிறார். உடனே எதிர்கேள்வி கேட்பார்கள் ‘அப்படியானால் சம்பாதித்துக்கொண்டே இருக்கலாமா?” என்று. (எதிராளியை மடக்குவதற்க்குத்தான் அவர்களுக்கு எவ்வளவு ஆசையும் தன்முனைப்பும்!) இதற்கும் விளக்கம் தருகிறார் நம் மகரிஷி! இப்படியெல்லாம் கேட்பார்கள் என்று அவருக்குத் தெரியாதா என்ன?

‘போதும் என்ற நிலை வரை சம்பாதியுங்கள்’ என்கிறார். அதாவது என் வாழ்நாளுக்கு இவ்வளவு பணமும், பொருளும் போதும். இதில் நான் நிறைபெறுகிறேன். இதற்கு மேல் வரக்கூடிய என் சம்பாத்தியத்தை, இந்த சமூகத்திற்கு ஏதேனும் வழியில் திருப்பி அளிக்கிறேன் என்ற முடிவுக்கும் வர வேண்டும் என்றும் சொல்லுகிறார். சரி ஏன் சமுகத்திற்கு திருப்பி அளிக்கவேண்டும் என்றும் கேட்பீர்கள் தானே? அதற்கும் விடை உண்டு.

‘நீங்கள் பிறந்தது முதல் இன்றுவரை, பல்வேறு நிலைகளில், பல்வேறு வகைகளில் உணவு, பயன்படுத்திய பொருட்கள், துணிமணிகள், வாழ்க்கை பொருட்கள், தன்னலமற்ற சேவைகள் இப்படியாக எல்லாவற்றிலும் சமூகமக்களின் உதவியை, உழைப்பை மறைமுகமாகவோ, நேர்முகமாகவோ பெற்றிருக்கிறீர்கள்தானே? அதை நாம் மறந்துவிடலாமா? அதற்கு நாம் நம்மாலான உதவியை திருப்பித்தரவேண்டுமே’ என்று வலியுறுத்துகிறார்.

மேலும் பணம் சம்பாதிக்க 1) நேர்வழிகளை தேர்ந்தெடுக்கவேண்டும் 2) உங்கள் உழைப்பின் வழியாகவே அந்த பணம் கிடைக்க வேண்டும் 3) உங்களுக்கு பணம் கிடைப்பதின் வழியாக எவரும் மனதளவிலோ, உடலளவிலோ பாதிக்கப்படக் கூடாது 4) உங்களுக்கு திருப்தி அளிக்கும் நிலைவரை சம்பாதிக்கலாம் 5) உங்கள் வாழ்க்கைக்கு போதுமானது என்றபோது திருப்தியில் நிறைவு பெற வேண்டும் 6) நீங்கள் வாழும் சமூகத்திற்கு திருப்பியளிக்கவேண்டும்! என்பதான ஆறு வழிகளை வேதாத்திரியம் சொல்லித்தருகிறது! 

இன்னும் விளக்கமாக அறிந்துகொள்ள இந்த காணொளி உதவும்: இங்கே காண்க!

வாழ்க வளமுடன்.

What is the meaning of yoga instead of enjoying the earth life?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, இந்த உலகில் பிறந்ததே, நன்றாக, இன்பமாக வாழ்ந்து எல்லாம் அனுபவிக்கத்தான். அதை விட்டுவிட்டு பருவ வயதிலும் வீணாக யோகத்திற்கு வருவது தேவைதானா? அதற்கு அவசியம்தான் என்ன?


பதில்:

நல்ல கேள்விதான். இந்த உலகில் பிறந்ததே, நன்றாக, இன்பமாக வாழ்ந்து எல்லாம் அனுபவிக்கத்தான். அதை யாருமே மறுப்பதற்கில்லை. ஆனால், நீங்கள் அப்படி நிச்சயமாக அனுபவித்து வாழ்கிறீர்களா? அல்லது மற்றவர்கள் அப்படி நன்றாக இன்பமாக வாழ்கிறார்களா? என்று கேட்டுப் பார்த்திருக்கிறீர்களா? என்பதற்கு உங்களிடம் பதில் இருக்கிறதா? அதற்கு மாறாக, நீங்களாகவே மற்றவர்கள் அப்படி நன்றாக இன்பமாக வாழ்வதாக கற்பனை செய்து கொள்கிறீர்களா என்றும் ஆராய்ந்து பாருங்கள். இதுவரை அப்படி வாழ்ந்தவர்கள் தங்களின் அனுபவங்களை சொல்லி இருக்கிறார்களா? அப்படி என்னதான் சொல்லுகிறார்கள்? சொன்னார்கள்? என்றும் யோசித்துப் பாருங்கள்.

ஒரு இன்பம் என்றால் நிறைவு வரவேண்டும்,.அந்த நிறைவில் பேரின்பம் உணரவேண்டும். அந்த பேரின்பத்தில் அமைதி உணரவேண்டும். அப்படி நிகழ்கிறதா? எல்லாமே பற்றாக்குறையாக அல்லவா இருக்கிறது?! இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என்று தானே போய்க்கொண்டே இருக்கிறீர்கள்? உண்மையா? இல்லையா?

நீங்கள் சொல்லுவது போல, இந்த உலகில் பிறந்ததே, நன்றாக, இன்பமாக வாழ்ந்து எல்லாம் அனுபவிக்கத்தான், அந்த வழியில் பிறந்ததின் நோக்கம் தடைபட்டுவிட்டது, திசை மாறிவிட்டது. அது என்ன நோக்கம் என்றால்? நாம் நம்மை ‘நான் யார்?’ என்று கேட்டுக்கொண்டு அதற்கான விடைகாண்பதாகும். இதென்னெ? அப்படி கேட்டால்தான் வாழ்க்கையா? என்று எதிர்கேள்வி கேட்பீர்கள். சரி விட்டுவிடலாமா? இதற்காகவே மறுபடி மறுபடி தொடர்பிறப்பு நிகழும் என்ற உண்மை உங்களுக்கு தெரியுமா? உங்கள் குழந்தையோ, பேரன் பேத்தியோ, அவர்கள் வழியில் யாரோ ஒருவராவது, இதற்கு பதில் அறியாது, பிறவியும் வாழ்வும் முழுமை அடைவதில்லை என்ற இயற்கை நீதி நீங்கள் அறிவீர்களா? ஆனாலும் உங்கள் விருப்பம் போல செயல்படுங்கள். நான் சொன்னதற்காக மாறவேண்டியது இல்லைதான்.

மேலும் பருவவயதிற்குப் பிறகுதான், உலகியலில் தனித்து இயங்கிடும் வாழ்க்கைக்கு மாறுகிறோம். அந்த நிலையில், ஒரு குருவின் வழியாக, அவரின் துணை கொண்டு யோகத்திற்கு வந்துவிட்டால், வாழும் வாழ்க்கையும், இனி வாழப்போகிற வாழ்க்கையும் இனிதாகும். எது உண்மையான இன்பம்? என்ற விழிப்புணர்வில் அளவு முறையோடு, வாழ்கின்ற வாழ்க்கை முழுவதும் இன்பத்தை அனுபவிக்கலாம், பேரின்பத்தை உணரலாம். அமைதியாகலாம். அதற்கான வாய்ப்பை நீங்களே தடுத்துக்கொள்ள வேண்டுமா? தன்னை அறிவதுதான், பிறவிக்கான கடமை என்ற உண்மையும் உள்ளது. உங்களுக்கு அதுகுறித்து தெரியவில்லை என்பதற்காக, அப்படி எதுவுமே இல்லை என்ற முடிவுக்கு நீங்கள் வந்துவிடலாமா? உங்களுக்கு தெரிந்ததையும், அறிந்ததையும், பிறர் சொல்லுவதையும், நான் சொல்லுவதையும் ஆராய்ந்து, உண்மை அறிந்துகொண்ட பிறகு, நீங்களே முயற்சிக்கலாம். யாரோ எவரோ சொல்லுகிறார்கள் என்று உடனடி மாற்றமும், அதனால் ஏமாற்றமும் உங்களுக்கு தேவையில்லை.

வாழ்க வளமுடன்.

Why most of saints distract our expectations on their meet?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

ஞானிகளிடம் இன்பமான வாழ்வைப்பற்றி பேசி, கேள்விகேட்டால், துன்பமாகவே கருதும்படி சொல்லுகிறார்களே? அதனாலேயே அவர்கள் மேல் வெறுப்பாகிறது!


பதில்:

உங்கள் மனநிலையின் கருத்தை அப்படியே சொன்னதற்கு நன்றி. இதற்கு தகுந்த பதில் உண்டு. ஞானிகளும் உங்களைப்போல பிறந்து வளர்ந்து, உலக இன்பங்களில் திளைத்தவர்தான். ஞானி என்றுமே தனியாக உருவாகி பிறந்து வருவதில்லை என்பதை அறிக. சொல்லப்போனால் பிறக்கின்ற எல்லா குழந்தைகளும், நீங்களும், இதற்கு முன் பிறந்தோரும் கூட அப்படியான தகுதி பெற்றவர்கள் தான். ஆனால் அதை நாம் உணர்ந்து, நம்மை திருத்தி, வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ளவில்லை. அதற்கு ஆர்வமும் கொள்ளவில்லை.

இந்த உலகில், எதோ பிறந்தோம், வளர்ந்தோம், இன்ப துன்பம் அனுபவித்தோம், வாழ்க்கைத்துணையை கண்டோம், கூடி வாழ்ந்தோம், பிள்ளைகளை பெற்றோம், வளர்த்து ஆளாக்கினோம், பேரப்பிள்ளைகளை கண்டோம், போய்ச்சேருவோம் என்று வாழ்வை முடித்து விடுகிறோம்.

இப்பொழுது ஞானியாக இருப்பவரும் அப்படியான வாழ்க்கைச்சூழலில் சிக்கியவர்தான். யாரோ ஒரு சிலர்தான், திருமண பந்தத்தில் சிக்காது, பிரம்மச்சாரியத்தில் நிலைக்கின்றார். அது அவரவர் விருப்பத்தில் தான் நிகழ்கிறது. மற்றோர் எல்லோரும், வாழ்கின்ற வாழ்க்கையில் இந்த இன்பம் போதவில்லை, துன்பம்தானே எங்கும் விளைகிறது? என்று சிந்தித்து, எது உண்மையான இன்பம் என்று தேடுகிறார்கள். வணங்கும் கடவுளை கேட்டால் அதற்கும் பதில் இல்லை. அனுபவி என்றுதான் சொல்லுகிறதாக தோன்றுகிறது. அதனால் அவர் குருவை தேடி சரணடைகிறார். கடவுள் என்பதை கட+உள் என்று புரிந்து கொள்கிறார். அந்த வழியில் தவம் செய்து, தற்சோதனையில் தன்னை திருத்தி, மனதை புலன்களில் இருந்து விடுவித்து, எது உண்மை இன்பம், இயற்கை என்பது என்ன? இறை என்பது என்ன? நான் யார்? என்று தன்னையறிகிறார். இறையுணர்வு பெறுகிறார். அதனால் அவர் ஞானி ஆகிறார்.

ஆகவே ஞானிகளுக்கு மட்டுமே எது உண்மை இன்பம், பேரின்பம், அமைதி, முழுமை என்பது தெரியும். அதை உங்களுக்கு விளக்க முயற்சிக்கிறார். ஆனால் நாம்தான் அதை கேட்டுக்கொள்ளும் தன்மையில் இல்லை. இவரிடம் போனால், வாழ்வையே விடச்சொல்லுவார் என்று பயப்படுகிறார்கள், அவரை ஒதுக்கித்தள்ளுகிறார். உண்மையான தன் பிறவிக்கடனை, இப்பிறவியில் ஒதுக்கித்தள்ளுவது போலவெ! இந்த உண்மை தெரிந்த பிறகாவது, ஞானிகளின் சொல்லை கொஞ்சம் கவனித்துக் கேளுங்கள். மாற்றம் உண்டாகும்!

வாழ்க வளமுடன்.

-

Why do some people degrade other human beings and live with competition and jealousy?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, சிலர் தங்களோடு வாழும் பிற மனிதர்களை தாழ்த்தியும், போட்டி, பொறாமையோடும் வாழ்வது ஏன்?


பதில்:

தங்களோடு வாழும் பிற மனிதர்களை தாழ்த்தியும், போட்டி, பொறாமையோடும் நடத்திக்கொள்வதற்கு காரணம், சிலர் தங்களையும், பிறரையும் சம அளவில் கருதாததே ஆகும், மனிதன் என்பவன் மன இதனானவன் என்ற உண்மையை அவர்கள் உணர்வில்லை. மேலும் அத்தகைய மனிதர்களின் பரம்பரையில் வாழ்ந்தவர்களும், பொருள், புகழ், அதிகாரம், புலன் இன்பம் ஆகியவற்றில் மிகுந்த அக்கறை கொண்டவர்களாகவும் அதற்கு மிக மதிப்பளித்தும் வாழ்ந்து வந்திருப்பார்கள். அதுவே இப்போது வாழும் தலைமுறையினருக்கும் தொடர்கிறது எனலாம்.

மேலும் பரிணாமத்தின் வழியாக, விலங்கின பதிவுகளின் தாக்கமும் அதிக செயல்பாட்டில் இருக்கும் என்று சொல்லாம். அதாவது அவர்களின் கருமையம் களங்கத்தோடு இருக்கிறது. அதை திருத்திடவும், திருத்தி அமைக்கவும் வாய்ப்பில்லாமல் போகிறது. பல பிறவிகளின் வழியாக அந்த சுமையையும் கூட்டிக்கொண்டே போகிறார்கள். இதன் வழியாக, அவர்களுக்கு இயற்கை சில பாடங்களை கொடுத்து திருத்தம் செய்கிறது எனினும், அதை அவர்கள் ஏற்று நடப்பது இல்லை. இந்த களங்கத்தின் வழியாக, அவர்களின் உடல்நலம், மன நலம் பாதிக்கும், பிறவித்தொடர் நோய்களும், துன்பங்களும் இருக்கும் என்பதே உண்மை. யோகத்தில் இணைந்து தங்களை உயர்த்திக்கொள்ள வேண்டியது அவசியமாகும், மேலும் இரண்டொழுக்க பண்பாடும் கொண்ட வாழ்வாகவும் வாழவேண்டியதும் அவசியமாகும்.

இத்தகைய மனிதர்களிடம் சிக்கிக் கொண்டவர்களின் துயரம் சொல்லில் அடங்காது எனினும், இவர்களோடு இணைப்பில் உள்ளவர்கள், தனியே, தன் திறமையக்கொண்டு வாழ பழகுதல் வேண்டும், இவர்களை சாராத வகையில், வாழ்க்கையை அமைத்துக்கொண்டால் நல்லதுதானே. அவர் நம்மை சக மனிதனாக மதிக்காவிட்டாலும் கூட இவர்கள் திருத்தம் பெற நாம் வாழ்த்தலாம். அது நமக்கு நன்மையே தரும்.

வாழ்க வளமுடன்

Keep mind calm, no need meditation. Is it correct?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, மனதை இயல்பாக வைத்திருந்தால் போதும், தவம் தியானம் தேவையில்லை என்பது உதவுமா? அது உண்மையா?!


பதில்: 

தவம் தியானம் தேவையில்லை என்பது உதவிடாது. அது தவறான கருத்தே ஆகும். மனதை இயல்பாக வைத்திருந்தால் போதும் என்பது மட்டுமே சரி. அந்த மனம் எப்படி இயல்பாக இருக்கும்? இருக்கமுடியும்? காலம்காலமாக அது தூங்கும் நேரம் தவிர மற்ற எல்லா நேரங்களிலும் இயங்கிக் கொண்டேதானே இருக்கிறது! நாம் எப்பொழுதும் அதனோடுதான் கலந்து இருக்கிறோம். அந்த மனதின் வழியாகவே செயல்படுகிறோம். இன்பங்களை அனுபவிக்கிறோம். துன்பங்களால் வருந்துகிறோம். திட்டமிடுகிறோம், தவறை திருத்த முயற்சிக்கிறோம் இப்படியாக எல்லாமே மனதின் வழியாகத்தானே நிகழ்கிறது. அப்படியான மனதை இயல்பாக வைக்க உதவும் ஒரு பயிற்சிதான் தவம் தியானம் ஆகும்.

தீடீரென்று நீங்கள் முடிவு செய்து ‘மனமே சும்மா இரு’ என்று சொல்லிவிட்டால் சும்மா இருந்திடுமா? இனி இயல்பாக மனதை வைத்திருப்பேன் என்று நீங்கள் முடிவெடுத்தால், மனம் அதன்படி நடந்திடுமா? உங்கள் கட்டளைக்கும், வார்த்தைக்கும், செயல்பாட்டுக்கும் அடிபணிவதாகவா உங்கள் மனம் இருக்கிறது? சிந்தித்துப் பாருங்கள். 

நீங்கள் உங்கள் மனம் விரும்பும்படி நடக்கிறீர்களா? அல்லது மனம் உங்கள் விருப்பத்தின் படி நடக்கிறதா? என்று கேள்விகேட்டால் என்ன பதில் தருவீர்கள்? 

தவம் தியானம் வழியாக, நாம் நம்முடைய செயல்பாட்டை, சிந்தனைகளை, எண்ணங்களை ஒழுங்கு செய்து, புலன்களை கட்டுப்பாடாக வைத்திருந்து, மனதை கவனிக்கிறோம் என்பதே உண்மை. மனம் தன்னையே கவனிக்கிறது என்பது கூட இங்கே உண்மைதான். அப்படியாக, மனதிற்கு தரப்படும் அல்லது கற்றுக்கொடுக்கப்படும் பயிற்சிதான் தவம் தியானம். எனவே அது இல்லாமல், மனதை வெறுமனே சும்மா இரு, இயல்பாக இரு என்று இருக்கவைத்தால் இருக்காது என்ற உண்மையை புரிந்துகொள்ளுங்கள்.

மனதை இயல்பாக வைத்திருந்தால் போதும், தவம் தியானம் தேவையில்லை என்பது பேசுவதற்கும், சொல்லுவதற்கும், எழுதுவதற்கும் நன்றாக இருக்கும், செயல்பாட்டிற்கு வராது! இல்லை ஐயா, இதை உலகெங்கும் கடைபிடிக்கிறார்கள், அனுபவசாலிகள் சொல்லுகிறார்கள் என்று நீங்கள் முடிவெடுத்தால் தொடருங்கள், சிறிதளவு மாற்றம் பெறுவதற்குக் கூட பல ஆண்டுக்காலம் ஆகலாம். அத்தகைய வலிமை படைத்தது நம் மனம்! 

வாழ்க வளமுடன்.

Why do you have to look for pleasure in living?!


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, வாழ்வதில் ஏன் இன்பத்தை தேடவேண்டியது இருக்கிறது?!


பதில்:

இன்பம் என்பதை மகிழ்போகம் என்று சித்தர்கள் அழைப்பார்கள். ஆனால் போகம் என்ற வார்த்தையின் தமிழ் அர்த்தம் சிதைந்துவிட்டது என்பது உண்மை. போகம் என்றால் ஆணும் பெண்ணும் கூடிக்கலத்தல் என்றுதான் பெரும்பாலோர் நினைத்துக் கொண்டு இருக்கின்றனர். எனவே மகிழ்போகம் என்று சொன்னாலும், அதைத்தான் அர்த்தம் கொள்வார்கள்.

சித்தர்கள் சொன்ன விளக்கத்தின் வழியாக, மகிழ்போகம் என்றால், மனிதன் தன்னுடைய புலன்களால் அனுபவிக்கின்ற, உணர்கின்ற இன்பத்தைத்தான் குறிப்பாக தருகிறார்கள். வேதாத்திரி மகரிஷி அவர்கள் சொல்லும் பொழுது, ஐம்புலன்களை தாண்டி இந்த உலக இன்பங்கள் என்ன அனுபவித்துவிடப்போகிறோம்? எல்லாமே நம் புலன்களுக்குள்ளாக அடங்கிவிடுகிறது. ஆனால் தன்னை அறிந்துகொண்டால், அதுதான் நிலையான இன்பம், பேரின்பம் என்ற உண்மையும் நமக்கு விளங்குவிடும் என்கிறார்.

ஆனால் நாம் வாழ்வில் இன்பத்தை தேடுகிறோம் என்பது உண்மைதான். ஏனென்றால், நமக்கு எது இன்பம் என்பதை உணர்தலாக பெறவில்லை. அந்த இன்பம் எங்கே இருக்கிறது என்பதும் நமக்கு தெரியவில்லை. அதனால்தான் நாம் இன்னமும் தேடிக்கொண்டே இருக்கிறோம். மேலும் அந்த இன்பத்தை பெற்றுவிட்டாலும் கூட, அதுதான் இன்பமா என்று தெரிந்து கொள்ளாமலும், புரிந்து கொள்ளாமலும் மிகையாக அனுபவித்து அல்லது குழப்ப நிலையில் அதை ஏற்று, அதன் வழியாகவே துன்பத்தையும் வரவழைத்துக் கொள்கிறோம் என்பதே உண்மையாகும்.

இறையாற்றல், நாம் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாகவும் இன்பத்தை வாரிவழங்குவது உண்மையே. எப்போது துன்பம் வந்தாலும்கூட அதை தாங்கும் அளவிற்கு, நமக்கு துணை நிற்பது கூட இறையாற்றல்தான் என்பதை நாம் அறிவதில்லை. சிந்தனையாற்றல் மிகுந்த நாம், எது இன்பம்? அந்த இன்பம் எங்கே இருக்கிறது? அதை எப்படி அளவு முறையோடு அனுபவிப்பது? என்பதை அறிந்துகொள்ளமுடியும், ஏற்று செயல்படுத்திடவும் முடியும். ஆனால் இந்த உலகில் நாம் அதற்கு இடம் கொடுக்காமல், தேடிக்கொண்டே காலத்தை வீண் செய்கிறோம். வேதாத்திரி மகரிசி, ‘தேடுவதை விட்டுவிட்டால், தேடும் பொருள் அங்கேயே இருப்பதை அறியலாம்’ என்றும் சொல்லுகிறார்! உங்கள் வசதி எப்படி?!

வாழ்க வளமுடன்.

Why do I feel like suffering from yoga and not being as happy as others?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, மற்றவர்களெல்லாம் இயல்பாக வாழும்பொழுது, யோகத்தில் இருக்கும் நான்மட்டும் இப்படி கஷ்டப்படுகிறேனே என்று தோன்றுகிறது. சரிதானா?!


பதில்:

நீங்கள் யோகத்தில் இருப்பது மிக நல்லது, அதற்கு வாழ்த்துகள். உங்களைத் தவிர மற்றவர்கள் எல்லாம் இயல்பாக வாழ்கிறார்கள் என்று எப்படி சொல்லுகிறீர்கள்? அவர்களின் வாழ்க்கைமுறை, பொருளாதார நிலை, ஆடம்பரம், தோற்றம், வழக்கம் பழக்கம் இப்படி வெளித் தோற்றங்களை வைத்துப்பார்த்தால் அப்படித்தான் தோன்றும். நிச்சயமாக அவர்கள் சூழ்நிலை கைதியாக, ஒரு நடிப்பாக வாழ்ந்துகொண்டிருப்பதை அறியலாம். மேலும் முக்கியமாக, பொருள், புகழ், அதிகாரம், இன்பவாழ்வு என்ற நிலையில்தான் தங்கள் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டு இருப்பார்கள். நீங்கள் அவர்களிடம் போய், ஏதேனும் கேட்டுப்பாருங்கள். உங்கள் நிலையைவிடவும், மிகச் சாதாரண நிலையில் இருப்பார்கள் என்பதே உண்மை. மேலும் அவர்கள் யோகத்திற்கு வரமுடியாத மிக நீண்ட தூரத்திலும் நிலைபெற்றிருக்கிறார்கள்.

தெய்வபக்தி மிகுதி என்று காட்டிக்கொள்வார்கள். அன்பும் ஆதரவும் பிறருக்கு எப்போதும் உண்டு என்றும் சொல்லுவார்கள். தேவை என்றால் என்னை அணுகுக என்றும் நம்பிக்கை தருவார்கள். ஆனால் திடீரென்று ஆளே நம்கண்ணுக்கு தெரியாமல் மறைந்து விடுவார்கள். மறுத்தும் விடுவார்கள். 

யோகத்தில் இருக்கிற நீங்கள், உங்களை சரியான பாதையில் பயணிக்கிறீர்கள் என்பது உறுதி. அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. வாழ்க்கையின் நோக்கமே, இன்பமாக வாழ்வதுதான், அதில் எந்த குழப்பமும் இன்றி இருக்க, தன்னையறிதல் எனும் பிறப்பின் கடமையை அறிந்துகொள்ள வேண்டும். நம்மிடம் இருக்கும் களங்களை போக்கி, மனதை, உடலை இயல்பாக வைத்துக்கொள்ள யோகம் தானே சிறந்த வழி?! இதுவரையில் வாழ்ந்த வாழ்க்கையில், உங்களை நினைத்துப்பாருங்கள்.

யோகத்தில் இணைந்தபிறகு ஏற்பட்ட, ஏற்பட்டுக் கொண்டிருக்கிற மாற்றங்களை எண்ணிப்பாருங்கள். அன்று உங்களுக்கு மனம் என்றால் என்ன என்றே தெரியாதுதானே? இப்பொழுது மனம் குறித்த விளக்கமும், அதை எப்படி இயல்பாக வைத்துக்கொள்வது யோகத்தின் வழியாக நீங்கள் அறிந்துவிட்டீர்களே!  தினமும் இயற்றும் தவமும் உங்களை உயர்த்துகிறது. காலத்தால் நீங்கள் தன்னிலை விளக்கம் பெற்று உயர்வடைவீர்கள். வாழ்க்கையை இயற்கையோரு ஒன்றி ரசித்து, இன்பமாக வாழ்வீர்கள் என்பதே உண்மை. இது குருமகான் வேதாத்திரி நமக்கு தந்த பாதை.

மற்றவர்களை எப்போதும், உங்களோடு ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். அது உங்கள் மனதை, உடலை, வளர்ச்சியை, நோக்கத்தை கெடுக்கும். உங்கள் பாதையில், உங்கள் செயலுக்கான விளைவை மிகச்சரியாக இறைநிலை தரும், அதுதான் அதனுடைய நீதியும் ஆகும்!

வாழ்க வளமுடன். 

Why all are advice to worship the Ancestors Worship Temple?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்!



கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, பெரும்பாலோர் குலதெய்வம் கோவிலுக்கு சென்று வழிபடுங்கள். நன்மை பிறக்கும் என்று அடிக்கடி சொல்லுகிறார்களே? அதில் உண்மை உள்ளதா?


பதில்:

பக்தி வழியில், மக்களை மேன்மை அடையச் செய்வதற்காக சொல்லப்படும் வழிமுறைதான் இது. தனியாக குறிப்பிடும் வகையில் சில உள் அர்த்தம் இதில் உண்டு எனினும், அடிக்கடி குலதெய்வம் கோவிலுக்கு சென்று வழிபட்டால் மட்டும் நன்மை பிறந்துவிடுவதில்லை என்பதையும் நாம் அறிந்துகொள்ள வேண்டும்.

குலதெய்வம் என்பது என்ன? ஆதிகாலம் முதல், நம் குடும்பத்தின் முன்னோர்கள் பக்தி வழியில் வழிபட்டு, வழிபாடு செய்து வந்த நிலையில் இருக்கும், தெய்வம் எனலாம். நாமும் சிறுவயதில் இருந்து அச்சடங்குகளை பார்த்து, வணங்கி வந்ததால் நமக்கும் இதில் ஏற்பு உண்டாகிவிடும். முன்னோர்கள் வணங்கிய தெய்வத்தையே நானும் வணங்குகிறேன் என்ற சிறப்பும் அங்கே இருக்கிறது தானே?!

ஆனால் ஒன்றை இங்கே கவனிக்க வேண்டும். இத்தனை ஆண்டுகாலமாக, எத்தனையோ தலைமுறையாக வந்த பக்தி, கனிந்து யோகமாக மாறவில்லையே?! பக்தி என்பது குறிப்பிட்ட விளக்கமுடியாத எல்லைகளைக் கொண்டது. ஆனால் யோகம் என்பது முழுமையானது, விரிவானது, உண்மையானது ஆகும். பக்தியில் இருப்பவர்களுக்கு, யோகம் தேவையில்லை என்ற கருத்துத்தான், பொதுவாக இங்கே பரவியிருக்கிறது. 

வழிவழியாக குலதெய்வ வழிபாடு செய்வது நல்லதுதான் எனினும், அவ்வழியில் நாம் பெற்ற, கர்மா என்ற வினைப்பதிவுகளை தீர்ப்பதற்கு நாம் எடுக்கின்ற முயற்சிகள் என்ன? என்று கேட்டால் ஒன்றுமில்லையே! இத்தனை காலமாக, நாம் பிறந்ததின் பிறவிக்கடனை மறந்துவிட்டு அல்லவா, பக்தியில் திளைக்கிறோம். உண்மையிலேயே, நம் முன்னோர்களுக்காக, அவர்களின் ஆன்ம சாந்திக்காக, கர்மா என்ற வினைப்பதிவை தீர்ப்பதற்காக நாம் ஏதேனும் முயற்சி செய்தோமா?

அவர்களைப்போலவே, இன்னமும் பக்தியில் தானே நின்றிருக்கிறோம்? இந்த இடத்தில்தான் யோகத்தின் உண்மை உணர்ந்து, யோகத்தில் இணைத்துக்கொண்டு, இதுவரை முன்னோர்களின் வழியாக பெற்ற கர்மா என்ற வினைப்பதிவை தீர்த்து, தன்னுடைய களங்கத்தையும் போக்கிக்கொண்டால், நாம் வாழும் வாழ்க்கை இனிதாகும். இனி நமக்கு வரக்கூடிய சந்ததியினரின் வாழ்க்கையும் இனிதாகும் அல்லவா?

அதற்கு நாம் முயற்சிக்க வேண்டாமா? இன்னமும் பக்தியோடு நின்றிருப்பது நல்லதுதானா என்று யோசித்துப் பாருங்கள். உண்மையை அறிந்து கொள்ளுங்கள். உங்களை வாழ்த்தி மகிழ்கிறேன்.

வாழ்க வளமுடன்.