CJ for You: disturbances

disturbances

Showing posts with label disturbances. Show all posts
Showing posts with label disturbances. Show all posts

Why can not practice meditation at home and is not satisfied too?


எவ்வளவோ முயற்சித்தாலும் வீட்டில் தவம் செய்யமுடியவில்லை. செய்தாலும் திருப்தி இல்லை ஏன்?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, எவ்வளவோ முயற்சித்தாலும் வீட்டில் தவம் செய்யமுடியவில்லை. செய்தாலும் திருப்தி இல்லை ஏன்?


பதில்:

இன்றைய காலகட்ட விஞ்ஞான வளர்ச்சியில், அதன் முன்னேற்றங்களை நாம் எல்லோருமே இங்கே அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். அந்தவழியாக வந்த பொருட்கள், வாகனங்கள் என்றும் நம்மிடையே குவிந்து கிடக்கிறது. இன்னமும் வந்துகொண்டேதான் இருக்கிறது. அதனுடைய தேவைகளும் நமக்கு வேண்டியதாகவும் உள்ளது. இவ்வளவுக்கு இடையிலும் நாம், நம்முடைய வாழ்க்கையை அமைத்து அதை திறமாக நடத்தவேண்டியுள்ளது, அதோடு அதில் விளையக்கூடிய பிரச்சனைகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டியதாக இருக்கிறது. மேலும் உள்முக தேடலுக்கான தவமும் செய்ய விரும்புகிறோம். தடையாகிறது.

உதாரணமாக, அதிகாலை எழுந்து, தவம் செய்ய அமர்ந்துவீட்டீர்கள். கண்கள் மூடி சில நொடிகளில், உங்கள் கைபேசி அழைக்கிறது. அதை கவனம் செலுத்தாமல் தவம் செய்கிறீர்கள். இப்போது அழைப்பு நின்றுவிட்டது. ஆனால் மறுபடி அழைக்கிறது. இப்போது நாம் அதை எடுப்பதா? விடுப்பதா? குழப்பம்தானே வரும்?

இதுபோல, வண்டி, வாகனங்களின் ஒலி, இரைச்சல், சாலை வியாபார குரல்கள், எங்கேயோ இருந்து குரைக்கும் நாய்கள் அதன் சண்டை ஒலி, உங்கள் வீட்டில் சமையலையில் இருந்து, தீடீரென்று வரும் ஒலிகள். உங்கள் குழந்தைகளின், அவர்களுக்கிடையேயான பிரச்சனையில் அடிதடி சண்டை ஒலிகள். அழுகைக் குரல், எதிர்பாரமல், உங்கள் மடியில் வந்து உட்காரும், குழந்தை, செல்லப்பிராணிகள் என்று இப்படி இன்னும் பல உண்டு.  இவையெல்லாம் கடந்து, அமைதியாக தவம் இயற்றுவது என்பது கொஞ்சம் கடினமே!

உங்களின் தவத்திற்கான நேரத்தை, அதிகாலை 04:30 முதல் 05:30 மணிக்குள்ளாக முடித்துவிட முடிந்தால் மிக நல்லது. வாய்ப்பிருந்தால், அருகில் உள்ள, தவ மையத்திற்கு சென்று கூட்டுத்தவம் செய்துவரலாம். அதற்கென்று உங்கள் வேலைகளை, கடமைகளை கெடுத்துக்கொள்ளாது இருக்கவும் வேண்டும். உங்களை வருத்திக் கொள்ளவும் கூடாது. இதற்காக தனிமையான இடம் தேர்வு செய்வது கடினம், அது நல்லதும் இல்லை. கோவில், வழிபாடு தளங்களில் செய்யலாம் என்றாலும் அதுவும் பிரச்சனையாகலாம்.

உண்மையிலேயே உங்கள் இல்லம் போன்ற அமைதியான, பாதுகாப்பான, இடம் இந்த உலகிலேயே இல்லை என்பதே பொதுவானது.

இவ்வளவு பிரச்சனைகளையும் ஏற்று, கடந்து தவம் செய்தாலும், மனம் அதில் நிலைப்பது மிக கடினம். ஏனென்றால், தவத்தின் வழியாக, மனதை அதன் இயல்புக்கு திருப்ப முயற்சிக்கிறோம். ஆனால் சூழலின் காரணமாக அது மேலும் கொந்தளிக்கிறது என்பதால் அந்த தவம் உங்களுக்கு உதவாது. அதனால்தான் முன்பைவிடவும் குழப்பமாகிறது. திருப்தி அளிக்காது. நிம்மதியற்றும் போகிறது. இந்த தவம் இயற்ற தடையாக இருப்பது எல்லாம் என்ன? என்று ஒரு ஆராய்ச்சி செய்யுங்கள். எதையெல்லாம், எவற்றையெல்லாம் சரி செய்ய முடியும் என்று முடிவு செய்யுங்கள். அதை சரி செய்யுங்கள். உங்களால் எதுவும் செய்யமுடியாது என்றால், தவம் செய்து உங்களை, உங்கள் இயல்பை கெடுத்துக்கொள்ளாமல், தவத்தையே கொஞ்ச காலத்திற்கு தள்ளிவைத்து விடுங்கள். அதுதான் நல்லது. சூழல் சரியானால் பிறகு ஆரம்பியுங்கள். தவறில்லை!

வாழ்க வளமுடன்.

-

How to correct the disturbances while practicing Kayakalpa Yoga?


காயகல்ப யோகப் பயிற்சி செய்யும்பொழுது ஏற்படும் தொந்தரவுகளை சரி செய்வது எப்படி?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, காயகல்ப யோகப் பயிற்சி செய்யும்பொழுது ஏற்படும் தொந்தரவுகளை சரி செய்வது எப்படி?


பதில்:

வேதாத்திரிய காயகல்ப யோகப் பயிற்சி செய்யும்பொழுது ஏற்படும் தொந்தரவுகள், அதை புரிந்துகொள்ளாமல் செய்வதால்தான் வருகிறது. முக்கியமாக, இந்த பயிற்சியை யாரும் யாருக்கும் செய்துகாட்டி விளக்கமுடியாது. உள்முகமாக, உள்ளுணர்வாக செய்யக்கூடியது. ஒருவர் இந்த பயிற்சியை செய்கிறார் என்பதை, வெளிப்படையாக அறிந்துகொள்ளவும் முடியாது. பயிற்சியாளர், ஓஜஸ் மூச்சு வெளியிடும் பொழுதுதான், இவர் ஏதோ செய்கிறார் என்று பிறர் தெரிந்து கொள்வார்.

இதன் காரணமாகவே, ஒரு ஆசிரியர் சொல்லித்தருவதை புரிந்துகொள்வது, பயிற்சி கற்றுக்கொள்பவருக்கு குழப்பத்தை ஏற்படுத்தும். இதனால், பயிற்சி எங்கே கற்றுக்கொள்கிறீர்களோ, அந்த இடத்திலேயே, அந்த ஆசிரியரிடமே, உங்கள் சந்தேகத்தை கேட்டு தெளிவு செய்துகொள்வதுதான் மிகச்சிறந்த வழி ஆகும். ஏதோ சொன்னார், எனக்கு நன்றாக புரிந்துவிட்டது என்றபடி கடந்துவிட்டால், நாம் வீட்டில் தனியாக செய்யும்பொழுது பல சந்தேகங்கள் எழுந்துவிடும். அதனால்தான் அந்த விளைவுகள் தவறாகிறது, நமக்கு தொந்தரவாகவும் இருக்கிறது. என்னதான் நீங்கள் பயிற்சியின் பொழுது குறிப்பு எடுத்துக்கொண்டு வந்தாலும், நேரடியாக கேள்வியில் கிடைக்கின்ற பதில்தான் சிறப்பாகும்.

முக்கியமாக, உங்களோடு பயிற்சி எடுத்த சிலரிடமோ, ஏற்கனவே பயிற்சி எடுத்து வந்திருக்கும் மற்றவரிடமோ உங்கள் சந்தேகத்தை கேட்டுக்கொள்ளக் கூடாது. அது உங்கள் குழப்பத்தை அதிகப்படுத்திவிடும் என்பதை அறிக. தகுந்த ஆசிரியரிடம் மட்டுமே உங்கள் குழப்பத்தை, சந்தேகத்தை, கேள்வியை கேட்க வேண்டியது அவசியம்.

பொதுவெளியில், இணையதளத்தில் எந்த சந்தேகத்தையும் யாரிடமும் கேட்க்கக்கூடாது. சிலர், நாம் படிப்பதற்கே அருவருப்பு அடைகிறவகையில், அப்படி, இப்படி என்று கேள்விகள் கேட்பதும் உண்டு. சிலர் பயிற்சியை கிண்டல் செய்யும் விதமாகவும் கேள்வி கேட்பார்கள். அவர்களை விட்டுவிடுவோம், அவர்கள் நல்லபடியாக வாழ்க என வாழ்த்தியும் விடுவோம். பொதுவெளியில் கேள்வி கேட்டால், பலவிதமான திசை திருப்பலுக்கு ஆளாகுவீர்கள். உங்களுக்கு அருகில் உள்ள, பயிற்சி மையத்தை அணுகி, அங்கே ஆசிரியரை கண்டு, நீங்கள் கற்றுக்கொண்ட காயகல்ப யோகப் பயிற்சி விபரங்களைச் சொல்லி, சந்தேகத்தை தெளிவு செய்துகொள்ளலாம். அதற்கான சான்றிதழையும் கையில் வைத்துக்கொண்டு போனால் நல்லதுதான்.

ஒருவேளை உங்களுக்கு அருகில், எந்த ஒரு பயிற்சி மையமும் இல்லை, நீங்களும் வெகுதூரத்தில் இருக்கிறீர்கள் என்றால், முக்கியமாக நீங்கள் கற்றுக்கொண்ட குழப்பம் தீரும் வரை, சந்தேகம் தெளிவு பெறும்வரை, காயகல்ப யோகப் பயிற்சியை செய்யாதீர்கள். அது ஒருவாரம், பத்துநாட்கள், ஒரு மாதம் ஆனாலும் பரவாயில்லை. கைபேசி, தொலைபேசி வழியாகவும் ஆசிரியரிடம் கேட்கலாம் எனினும் நேரில் கேட்டறிவதே நல்லது. சமீபகால ஜூம் வழியான சந்திப்பில் கேட்டாலும் பலன் உண்டுதான். எனவே அதற்குறிய வழியை, பயிற்சி மைய இணையம் வழியாகவும், அதுவழங்கும் சமூக வலைதள அறிக்கை மூலமாகவும் அறிக. பலன் பெறுக.

வாழ்க வளமுடன்.

-