CJ for You: home

home

Showing posts with label home. Show all posts
Showing posts with label home. Show all posts

Why need Wife Appreciation? by Vethathiri Maharishi


மனைவி நல வேட்பு - Wife Appreciation


        உலகில் இதுவரை தந்தை நாள் (Father’s day), தாயார் நாள் (Mother’s day) தனித்தனியே கொண்டாடுகிறார்கள். சுமங்கலி பூஜை என்றளவிலே கணவன் நலவேட்பு நாளும் கொண்டாடுகிறார்கள். மனைவி நலவேட்பு நாள் எந்த ஊரிலேயும் இல்லை. இது ஒரு நன்றி கெட்டதனம் இல்லையா? இது என் மனதை உறுத்திக் கொண்டே இருந்தது. ஆனாலும், ஒருவர் தலையிட்டுச் செய்தால் மட்டும் போதாது. இது நாடு முழுவதும் ஆண் மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

        பெண்மையின் பெருமையை உணர வேண்டும் என்ற மனதோடு ஆராய்ச்சி செய்த போது இந்த ஆண்டு என் மனைவியினுடைய (அருள் அன்னை லோகாம்பாள்) பிறந்த நாள் 30-8-ல் வந்தது. அன்பர்களிடம் சொன்னேன். என் மனைவியின் பிறந்த நாளையே வைத்துத் தொடங்கி மனைவி நல வேட்பு நாள் கொண்டாடலாம். இதையே வைத்துக் கொண்டு, இது முதல் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 30-ஆவது நாளை மனைவி நலவேட்பு நாளாகக் கொண்டாடுவது நம் சங்கத்தின் வழக்கமாக வரட்டும். பிறகு உலக நாடுகளிலும் பரவட்டும் என்றேன். ஆண்களும், பெண்களும் உற்சாகமாக அதை ஏற்றுக் கொண்டு பல இடங்களில் கொண்டாடுகிறார்கள். நீங்களும் உங்கள் வாழ்க்கைத் துணையை நன்றியோடு வாழ்த்தி இக்கவியைச் சொல்லி மகிழுங்கள்.


பெற்றோரைப் பிறந்தகத்தைப் பிறந்த ஊரை விட்டுப்

பிரிந்து வந்து, பெருநோக்கில் கடமையறம் ஆற்றப்,

பற்றற்ற துறவியெனக் குடும்பத்தொண்டேற்றுப்

பண்பாட்டின் அடிப்படையில் எனைப் பதியாய்க் கொண்டுஎன்

நற்றவத்தால் என் வாழ்க்கைத் துணையாகிப் பெண்மை

நல நோக்கில் அன்போடு கருணை இவை கொண்டு

மற்றவர்க்கும் தொண்டாற்றும் மாண்புமிக்க எந்தன்

மனைவியை நான் மதிக்கின்றேன் வாழ்த்தி மகிழ்கின்றேன்.

அருட்தந்தை வேதாத்திரி மகரிசி

-


Wife Appreciation 

So far, ‘Fathers day’, ‘Mothers day’ are celebrated separately in the world. In the name of Sumangali puja (~ like Karva Chauth festival in southern India), husband welfare seeking day is also celebrated. Wife appreciation day is nowhere. Isn’t it lack of gratitude? This was always pinching my mind. However, it is not sufficient if just someone performs. This should be made aware to all male people in the country.

When I was analysing with the mind of understanding the glory of womanhood, birthday of my wife (Divine mother Lokambal) came on 30th August. Told to the loving disciples that can celebrate ‘Wife Appreciation Day’ by starting from the birth date of my wife. Accordingly, henceforth, let it be a practice of our organisation to celebrate ‘Wife appreciation day’ every year on 30th August. Opined that let it spread to other countries later. Men and women have accepted it enthusiastically, celebrating it at many places. You also thank your life partner with gratitude with the following poem:


Leaving your parents your home and your place of birth

You came with a great vision of performing your duty

Like a dispassionate sage to serve the family on the basis

Of tradition and culture you took me as your husband

Due to my boon you become my life partner

With all good qualities of womanhood serving others also with love and grace

You were of great service to other members of the family and society as well

Honorable my wife, I appreciate respect bless you with all happiness

 Divine Father Vethathiri Maharishi

If we worship at home pooja, the grace will be same as like a temple level?


வீட்டிலேயே பூஜை அறை அமைத்து வழிபடும் இடத்திலும்கூட, கோவில், ஆலயத்தில் இருக்கும் அதே சிறப்பான ஆற்றலும் சக்தியும் இருக்குமா? நமக்கு உதவுமா?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி: 

வாழ்க வளமுடன் ஐயா, வீட்டிலேயே பூஜை அறை அமைத்து வழிபடும் இடத்திலும்கூட, கோவில், ஆலயத்தில் இருக்கும் அதே சிறப்பான ஆற்றலும் சக்தியும் இருக்குமா? நமக்கு உதவுமா?


பதில்:

பக்தியில் இயல்பாகவே ஆர்வம்கொண்டு, அதை கடைபிடித்து வரும் இந்திய நாட்டில், ஒவ்வோர் வீட்டிலும், பூஜை வழிபாடு உண்டு. அவரவர்கள் தங்கள் பொருளாதார வசதிகேற்ப, ஒரு பூஜை அறை, ஒரு தடுப்பு, ஒரு பெட்டகம், ஒரு அலமாரி அமைத்து அங்கே, இறை உருவம், படம், பொருட்கள் கொண்டு வழிபாடு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்கள். இப்போது கட்டும் நவீன வீடுகளிலும் கூட எளிமையாக பூஜை அறை உண்டு. அது இல்லையென்றால் வீடு முழுமை அடைவதில்லை என்ற ஒரு கருத்தும் இருப்பதை நாம் அறிந்திடமுடியும். அதை மற்றவர்கள் கிண்டல், கேலி செய்தாலும், தேவை என்ற மனப்பாங்கு இருப்பதை மறுக்கமுடியாது. இறைவழிபாட்டில் ஓர் உந்துதலாகவும், யோகத்திற்கு அடிப்படையாகவும் இருக்கின்ற பக்தியை எப்படி நாம் மறுத்திட முடியும்? வளர்ந்த பெரியவர்களுக்கு தேவையில்லாது இருக்கலாம். ஆனால், நாளைய தலைமுறையாக வளர்ந்து வரும் குழந்தைகளுக்கு ஒழுக்கமும், நற்பண்பும், தன்னை மீறிய சக்திக்கு வணக்கம் செலுத்தி, மதித்து, இயற்கை ஒழுங்கமைப்பை ஏற்று வாழ்ந்து, தன்னை யார்? என்று அறிந்து பிறப்பின் முழுமையை அடைவதற்கும் பக்தி தேவைதானே?

வீட்டிலேயே  பூஜை அறை அமைத்து வழிபடுகிறோம் என்றால், அங்கே நெய் விளக்கு தீபம் இருக்கும், மந்திரங்கள் சொல்லப்படும், மனதை உற்சாகப்படுத்தும்மலர்களின் அலங்காரம், அவற்றின் நறுமணம் இருக்கும். படைப்பாக வைக்கும் பழங்கள், பலகாரங்கள் ஆகியன இருக்கும். வேண்டுதல் ஏதுமில்லை என்றாலும், வழிபாடு முடித்துவிட்டால், ஒரு திருப்தியை ஒவ்வொருவராலும் உணரமுடியும் என்பது உண்மைதான். நிச்சயமாகவே வீட்டிலேயே பூஜை அறை அமைத்து வழிபடும் இடத்திலும்கூட,  சிறப்பான ஆற்றலும் சக்தியும் இருக்கும். ஆனால், கோவில், ஆலயத்தில் இருக்கும் அதே அளவில் என்று எதிர்பார்க்கமுடியாது. காரணம், கோவில், ஆலயம் என்பது ஆற்றல், சக்தியை ஏற்று அதை தக்கவைத்துக் கொள்ளும் வழிமுறையிலேயே அமைப்பதாகும். அந்த ஆற்றல் களம் அபரிதமாக இருக்கும். அது எப்படி என்றால், யாகம் வளர்ப்பதாலும், ஆறுகால பூஜைகள் செய்வதாலும், கும்பாபிஷேகம் நிகழ்த்துவதாலும், தீப ஆராதனை, அபிஷேகம் செய்வதாலும், ஏளாரமான மக்கள் வணங்குவதாலும், அந்த இடத்தை சுற்றுவருவதாலும், அந்த வழிபாடு தளத்தில் ஆற்றல் களம் திணிவுபெறும். அதுபோலவே அவரவர்களுக்கு தேவையான ஆற்றலையும், உந்துதலையும் தந்துகொண்டே இருக்கும்.

கோவில், ஆலய வழிபாடுகளில் புதைந்திருக்கின்ற, கருத்துருவான இறை உண்மை அவர்களுக்குள் உடனடியாகவும், அதை நினைக்கும்பொழுதும் கிடைத்துக்கொண்டே இருக்கும். அது அவர்களின் மலர்ச்சிக்கும், உயர்வுக்கும் உறுதுணையாக இருக்கும்.  வீட்டில் அந்த அளவிற்கு கிடைத்திடுதல் அபூர்வமாகும். எனினும் ஏதேனும் ஒருவகையில் துணைசெய்யும் என்பதில் ஐயமில்லை. எனினும், பருவம் வந்தோரும், வயதில் பெரியோர்களும் இந்த வழிபாடுகள் தாண்டி, இதில் உள்பூர்வமாக பொதிந்து இருக்கின்ற, இறை தத்துவத்தை அறிவதற்கு முயற்சிக்க வேண்டியது அவசியம். அந்த நிலையில் உயர்ந்திட, யோகத்தில் ஆர்வம் வரவேண்டும். அப்போதுதான் நம்முடைய பிறப்பின் நோக்கம், கடமை நிறைவேறிடும். பூஜை வழிபாடு மட்டுமே போதும் என்று நின்றுவிடுவது முழுமையில்லை என்பதை நினைவுகொள்க.

இந்த பூஜை, வழிபாடு, அதன் தொடர்பான விசயங்களை மறுப்பவர்களையும், கிண்டலும், கேலியும் செய்பவர்களை புறந்தள்ளுங்கள். அவர்களுக்கு புரியவில்லை என்றால் அப்படியே விட்டுவிடுங்கள். அப்படிப்பட்டவர்களுக்கு விளக்கம் சொல்லி உங்கள் நேரத்தை வீண் செய்யாதீர்கள். உங்களுக்கு விருப்பமானதை தொடர்வதில் எந்த தவறும் இல்லை. அதில் உண்மையோடும், உண்மையை நோக்கியும் பயணியுங்கள்.  

வாழ்க வளமுடன்

-

How we can act free from problematic activities with family members and others?


வாழ்க்கைத் துணைவரோடும், பிள்ளைகளோடும், வீட்டில் இருப்போரிடம் பேசும் பொழுதேகூட அதை அவர்கள் புரிந்துகொள்ளாமல் பிரச்சனை எழுகிறதே? எப்படி இதை சரி செய்வது?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி: 

வாழ்க வளமுடன் ஐயா, வாழ்க்கைத் துணைவரோடும், பிள்ளைகளோடும், வீட்டில் இருப்போரிடம் பேசும் பொழுதேகூட அதை அவர்கள் புரிந்துகொள்ளாமல் பிரச்சனை எழுகிறதே? எப்படி இதை சரி செய்வது?

பதில்:

நீங்கள் சொல்லுகின்ற இந்த பிரச்சனை, பெரும்பாலும் எல்லா குடும்பங்களிலும் உண்டு. ஒரு குடும்பத்திலேயே இப்படி இருந்தால், ஒரு சமூகத்தில், நாட்டில், உலகில் எத்தனையோ பிரச்சனை எழுந்துவிடுமே? இதையெல்லாம் எப்படித்தான் சமாளிக்கிறார்களோ? என்ற ஒரு கேள்வியும் உங்களுக்கு எழுந்துவிடும் அல்லவா? ஆம் அதுவும் உண்மைதான். இப்போது இருக்கின்ற தலைவர்கள், தலைவிகள் படும்பாடையும் நாம் அறிவோம் தானே?

இந்த உலகில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும், ஒரு அடையாளம் உண்டு. அந்த அடையாளம்தான் தன்னை வெளிப்படுத்தும். நான் இப்படிப்பட்டவன், இப்படிப்பட்டவள் என்று நாமும் அதை சொல்லால், செயலால் வெளிப்படுத்திக் காட்டுவோம். நம்முடைய சொல்லாலும், செயலாலும் மற்றவர்கள் அதை புரிந்து கொள்ளவும் செய்வார்கள். இது நாமளாகவே விரும்பியும் கட்டமைத்துக் கொள்ளலாம். சில நேரங்களில் நம்மையறியாமலும் அது வெளிப்பட்டு அப்படியான ஒரு தோற்றத்தை ஏற்படுத்திவிடவும் கூடும். அதில் நாம் கவனமாக இருக்கவேண்டும். நான்கு சுவருக்குள் யாரும் பார்க்காதவண்ணம் இருப்பது வேறு, ஒருவரோ, பலரோ, குடும்பமோ, சமூகமோ பார்க்கின்ற பார்வை வேறு என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

பொதுவாகவே ‘நான் நல்லவன் / நல்லவள்’ என்ற ரீதியிலான நம்பிக்கை நல்லதுதான். ஆனால் அதை மற்றவர்கள் மீது காட்டவும் கூடாது, திணிக்கவும் கூடாது. ஒவ்வொருவரும் அவரவர் அளவில் நல்லவர்கள் தான் என்பதை நினைவில் கொள்க. சில விரும்பாத நடவடிக்கைகள், குணங்கள் இருந்தாலும் உடனே காட்டிக்கொள்ளவும் மாட்டார்கள். 

ஒளிவுமறைவின்றி இருக்கக்கூடிய உறவு என்றால் அது கணவன் மனைவி உறவு மட்டுமே. அதில் ஆளுமையும், அதிகாரமும், உதவிடாது. அன்பு மட்டுமே தேவை. இந்த உறவில் இன்னொருவரை திருத்த வேண்டும் என்று நினைக்கவே கூடாது. அதை செயல்படுத்தவும் கூடாது. அவரவர்களுக்கு அது அவரவர் இயல்பு. அதை நீங்கள் சுட்டிக்காட்டலாமே தவிர மாற முயற்சிக்கக் கூடாது. வேதாத்திரி மகரிஷி ‘பொறுமை, விட்டுக்கொடுத்தல், தியாகம்’ என்ற மூன்று தன்மைகளை கணவனும் மனைவியும் ஏற்றுக்கொண்டால், இல்லறவாழ்வு இன்பமாக சிறப்பாக நிறைவாக இருக்கும் என்கிறார். ஆனால் நான், பொறுமை காப்பதா? நான் விட்டுக்கொடுக்கமுடியுமா? அது என் தலைமுறையிலேயே இல்லையே? நான் ஏன் தியாகம் செய்யவேண்டும்? என்றுதான் கேள்வி எழுமே தவிர மாற்றத்தை ஏற்கவே மாட்டொம் அல்லவா?

 வாழ்க்கைத் துணைவரோடும், பிள்ளைகளோடும், வீட்டில் இருப்போரிடம் பேசும் பொழுதேகூட அதை அவர்கள் புரிந்துகொள்ளாமல் பிரச்சனை எழுகிறது என்றால், முதலில் உங்களோடு இருக்கும், பழகும் இவர்கள், அவர்களுடைய இயல்பில் இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். உங்களுடை எக்கருத்தையும், வழிமுறையையும் திணிக்காதீர்கள், அவர்களை திருத்த முயற்சிக்காதீர்கள். உங்கள் சொல், செயல் ஆகிய மூலமாக அவர்களுக்குள் ஏற்படுத்திய பிம்பத்தை கலைக்காதீர்கள். ஒருவேளை தவறாக அவர்கள் கருதியிருந்தால், அதை திருத்திட முயற்சியுங்கள். நான் நல்லவன் / நல்லவள் என்று சொல்லாமல், அதை செயலாலும், அன்பாலும் காட்டுங்கள்.

அவர்களின் ஏற்பு இல்லாமல், கேட்காமல் எதையுமே செய்யதீர்கள். சொல்லாதீர்கள். எப்போதுமே மற்றவர்கள் குறித்த ‘பாவ்வம்’ என்று சொல்லக்கூடிய குணாதசியத்தை நீங்கள் தீர்மாணிக்காதீர்கள். அதுபோலவே ‘நான் இப்படித்தான்’ என்றும் உங்களை முடிவு செய்யாதீர்கள். இயல்பு என்ற நிலைக்கு நீங்கள் வந்து நின்று, அந்ததந்த பொழுதுக்கும், நேரத்திற்கும் தகுந்தபடி, விழிப்பாக செயல்படுங்கள். மற்றவர்களோடு எந்த பிரச்சனையும் எழாது காத்துக்கொள்ளலாம்.

வாழ்க வளமுடன்
-

Why unable to complete and get the obstacles on action based on thought?


நினைத்த ஒன்றை செய்யமுடியாமல் போவதும், தடை உண்டாவதும் ஏன்?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, நினைத்த ஒன்றை செய்யமுடியாமல் போவதும், தடை உண்டாவதும் ஏன்?

பதில்:

நினைத்த ஒன்றை செய்வது என்றால், தனி மனிதனாக இருக்கும் பொழுது, தனக்காக ஏதேனும் செய்து கொள்வது நிகழும், எனக்கு பிடிக்கும் அதனால் இப்படி செய்கிறேன் என்று சொல்லவும் முடியும். ஆனால் அது, உங்களுடைய அளவுக்குள் இருப்பதாகவும், மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய வரையறை, வரம்பிற்குள் இருப்பதாகவும் இருக்கவேண்டியது அவசியம். ஏனென்றால் ஒரு மனிதனாகிய நீங்கள், சமூகத்தின் அங்கம். உங்களுடைய எந்த ஒரு செயலும், நடவடிக்கையும் இந்த சமூகத்தின் வழியாக பிரதிபலிக்கும் என்பதே உண்மை. அதுதான் இயற்கையாகவும் உள்ளது.

உதாரணமாக, உங்கள் வீட்டிற்குள்ளே நீங்கள் எப்போதும், உங்களுக்கு பிடித்தவற்றை செய்யலாம். உங்கள் தாய், தந்தை, உடன்பிறந்தோர் அதை அனுமதிக்கலாம், சிலவேளை அவர்களும் கூட, உங்களிடம் ‘இப்படியெல்லாம் செய்யாதே, இது தவறு, திருத்திக்கொள்’ என்பார்கள். சில விருந்தினர்கள், சொந்தபந்தம் உங்கள் இல்லத்தில் வந்திருந்தால் கூட, உங்கள் நடவடிக்கைகள் பார்த்து, ‘இவன்(ள்) ஏன் இப்படி?’ என்று நினைத்துக் கொள்வார்கள். உங்கள் குடும்பத்தோடு உரிமை உள்ளவர்கள், உங்களைப்பற்றி மற்றவர்களிடம், திருத்தச் சொல்லி அக்கறை கொள்வார்கள். சிலர் நேரடியாக உங்களிடமே சொல்லவும் கூடும்.

குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள், ‘உனக்கும் நல்லதாய் ஊருக்கும் நல்லதாய் எண்ணுவதும், சொல்வதும், செய்வதும் சிறப்பு’ என்று சொல்லுகிறார். உங்களுடைய எந்தஒரு சிந்தனை, செயல், வார்த்தை ஆகியன, மற்றவர்களும் ஏற்றுக்கொள்ளும்படி அமைத்துக் கொண்டால், எந்த தடையும் நேரப்போவதில்லை. நீங்கள் நினைத்ததை செய்வதற்கு சாதகமாக அமையும், மேலும் பிறரும்கூட இதில் துணையாக இருப்பார்கள்.

இதற்கு சரியான தீர்வு, முன்கூட்டியே விளைவு என்ன? என்று தீர்மானித்துக் கொள்வதுதான் நல்லது. இதை செய்தால் எனக்கு என்ன நிகழும்? இதனால் எனக்கோ, மற்ற யாருக்காவதோ தொந்தரவும், பிரச்சனைகளும் எழுமா? அது உடனடியாகவா? நீண்டநாள் கழித்து வருமா? இதில் ஏதேனும் மாற்றம் செய்யமுடியுமா? இதன் தேவையும் அவசியமும் உண்மைதானா? என்று பல கேள்விகள் கேட்டு அதற்கான விடையை தெளிவு செய்து கொள்ளலாம்.

ஒரு அலுவலகத்திலும், அரசு நிர்வாகங்களிலும் எந்த ஒரு முடிவும் உடனடியாக செயல்படுத்தப்படுவதில்லை. ஒருவேளை அப்படி செயல்படுத்துவதாக இருந்தால், ஏற்கனவே சில நிபுணர்கள் குழு அதை ஆராய்ந்து முடிவு செய்திருக்கும் என்பதே உண்மை. திடீரென்று ஒன்றை பிறர் நமக்கு சொன்னால் கூட, திணித்தால் கூட நாம் அதை ஏற்க மறுப்போம் தானே? அதுபோலவே நீங்கள் சொன்னதை நினைத்ததை சொல்லமுடியாமலும், செய்யமுடியாமலும் போகலாம். 

இன்னொரு முக்கியமான காரணம், நீங்கள் நினைத்ததை செய்வதற்கு தகுந்த காலமா? என்பதை முதலில் ஆராயவேண்டும். சூழ்நிலையும் பொருத்தமாக உள்ளதா என்பதையும் அறியவேண்டும். இப்படி எல்லாவற்றையும், திட்டமிட்டு அலசி, ஆராய்ந்து பிறகு செயலாக்கம் செய்தால், நினைத்த ஒன்றை செய்வதில் வெற்றி உண்டு.

வாழ்க வளமுடன்.

-

Why can not practice meditation at home and is not satisfied too?


எவ்வளவோ முயற்சித்தாலும் வீட்டில் தவம் செய்யமுடியவில்லை. செய்தாலும் திருப்தி இல்லை ஏன்?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, எவ்வளவோ முயற்சித்தாலும் வீட்டில் தவம் செய்யமுடியவில்லை. செய்தாலும் திருப்தி இல்லை ஏன்?


பதில்:

இன்றைய காலகட்ட விஞ்ஞான வளர்ச்சியில், அதன் முன்னேற்றங்களை நாம் எல்லோருமே இங்கே அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். அந்தவழியாக வந்த பொருட்கள், வாகனங்கள் என்றும் நம்மிடையே குவிந்து கிடக்கிறது. இன்னமும் வந்துகொண்டேதான் இருக்கிறது. அதனுடைய தேவைகளும் நமக்கு வேண்டியதாகவும் உள்ளது. இவ்வளவுக்கு இடையிலும் நாம், நம்முடைய வாழ்க்கையை அமைத்து அதை திறமாக நடத்தவேண்டியுள்ளது, அதோடு அதில் விளையக்கூடிய பிரச்சனைகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டியதாக இருக்கிறது. மேலும் உள்முக தேடலுக்கான தவமும் செய்ய விரும்புகிறோம். தடையாகிறது.

உதாரணமாக, அதிகாலை எழுந்து, தவம் செய்ய அமர்ந்துவீட்டீர்கள். கண்கள் மூடி சில நொடிகளில், உங்கள் கைபேசி அழைக்கிறது. அதை கவனம் செலுத்தாமல் தவம் செய்கிறீர்கள். இப்போது அழைப்பு நின்றுவிட்டது. ஆனால் மறுபடி அழைக்கிறது. இப்போது நாம் அதை எடுப்பதா? விடுப்பதா? குழப்பம்தானே வரும்?

இதுபோல, வண்டி, வாகனங்களின் ஒலி, இரைச்சல், சாலை வியாபார குரல்கள், எங்கேயோ இருந்து குரைக்கும் நாய்கள் அதன் சண்டை ஒலி, உங்கள் வீட்டில் சமையலையில் இருந்து, தீடீரென்று வரும் ஒலிகள். உங்கள் குழந்தைகளின், அவர்களுக்கிடையேயான பிரச்சனையில் அடிதடி சண்டை ஒலிகள். அழுகைக் குரல், எதிர்பாரமல், உங்கள் மடியில் வந்து உட்காரும், குழந்தை, செல்லப்பிராணிகள் என்று இப்படி இன்னும் பல உண்டு.  இவையெல்லாம் கடந்து, அமைதியாக தவம் இயற்றுவது என்பது கொஞ்சம் கடினமே!

உங்களின் தவத்திற்கான நேரத்தை, அதிகாலை 04:30 முதல் 05:30 மணிக்குள்ளாக முடித்துவிட முடிந்தால் மிக நல்லது. வாய்ப்பிருந்தால், அருகில் உள்ள, தவ மையத்திற்கு சென்று கூட்டுத்தவம் செய்துவரலாம். அதற்கென்று உங்கள் வேலைகளை, கடமைகளை கெடுத்துக்கொள்ளாது இருக்கவும் வேண்டும். உங்களை வருத்திக் கொள்ளவும் கூடாது. இதற்காக தனிமையான இடம் தேர்வு செய்வது கடினம், அது நல்லதும் இல்லை. கோவில், வழிபாடு தளங்களில் செய்யலாம் என்றாலும் அதுவும் பிரச்சனையாகலாம்.

உண்மையிலேயே உங்கள் இல்லம் போன்ற அமைதியான, பாதுகாப்பான, இடம் இந்த உலகிலேயே இல்லை என்பதே பொதுவானது.

இவ்வளவு பிரச்சனைகளையும் ஏற்று, கடந்து தவம் செய்தாலும், மனம் அதில் நிலைப்பது மிக கடினம். ஏனென்றால், தவத்தின் வழியாக, மனதை அதன் இயல்புக்கு திருப்ப முயற்சிக்கிறோம். ஆனால் சூழலின் காரணமாக அது மேலும் கொந்தளிக்கிறது என்பதால் அந்த தவம் உங்களுக்கு உதவாது. அதனால்தான் முன்பைவிடவும் குழப்பமாகிறது. திருப்தி அளிக்காது. நிம்மதியற்றும் போகிறது. இந்த தவம் இயற்ற தடையாக இருப்பது எல்லாம் என்ன? என்று ஒரு ஆராய்ச்சி செய்யுங்கள். எதையெல்லாம், எவற்றையெல்லாம் சரி செய்ய முடியும் என்று முடிவு செய்யுங்கள். அதை சரி செய்யுங்கள். உங்களால் எதுவும் செய்யமுடியாது என்றால், தவம் செய்து உங்களை, உங்கள் இயல்பை கெடுத்துக்கொள்ளாமல், தவத்தையே கொஞ்ச காலத்திற்கு தள்ளிவைத்து விடுங்கள். அதுதான் நல்லது. சூழல் சரியானால் பிறகு ஆரம்பியுங்கள். தவறில்லை!

வாழ்க வளமுடன்.

-

To whom does Vethathiriyam give importance to living people? Why?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, வேதாத்திரியம் ஆண்களைவிடவும் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் தருவதாக நினைக்கிறேன். ஏன்?


பதில்:

குரு மகான் வழங்கிய வேதாத்திரியம் ஆண்களைவிடவும் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறது. ஆம், உண்மைதான். தெய்வீக பேராற்றலே பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றதே? நாம் தந்தால் ஏதும் குறைந்துவிடுவோமா? இந்த இயற்கையின் பரிணாமத்தில் இருக்கிற பெண் என்ற தன்மைக்கான முக்கியத்துவத்தை, நாம் இன்னமும் சரியாக தரவில்லை என்பதுதான் குறையாக இருக்கிறது. ஆனாலும் வேதாத்திரியம் முழுமையான முக்கியத்துவம் தருகிறது.

எனக்கும், இந்த வேதாத்திரி மகரிஷி ஏன் இவ்வளவு முக்கியத்துவம் பெண்களுக்கு தருகிறார்? என்ற கேள்வியும் சிந்தனையும் எழுந்தது உண்மை. அதை ஆராய்ந்து பார்க்கும்பொழுதான், மகரிஷியின் தெளிந்த பார்வை எனக்கும் கிடைத்தது. அதை நான், என் வாழ்க்கையூடாக அனுபவமாகவும் பெற்றேன் என்பதே உண்மை.

உலக வரலாற்றில், பெண்மைதான் ஆளுமை என்பதாக இருந்தது என்பதை அந்த வரலாற்று சுவடுகள் வழியாக அறிந்துகொள்ள முடியும். ஆனால் அதில் குழப்பம் விளைவித்து, பெண்களை இப்போதுள்ள நிலைக்கு கொண்டு வந்துவிட்டனர். இதில் கலாச்சாரம் என்ற விதியையும் அவர்களுக்கு புகுத்திவிட்டனர். பெண்களை நாங்கள் தான் பாதுகாக்கிறோம் என்று சொல்லிவிடுகிறார்கள் ஆண்கள்.

இந்த ஆண்களையும், பத்துமாதம் சுமந்து பெற்றெடுக்கிறாளே ஒரு பெண்? அவளுக்குத் தெரியாதா தன்னை பாதுகாத்துக்கொள்ள? அவள் தன்னை மட்டுமல்ல, தன் சமூகத்தையும் பாதுகாத்துக்கொள்ளும் உள்ளமைப்பும், திறமையும் கொண்டவள்தான். இல்லையென்றால், இந்த உலகை, புதிய பரிணாமத்தில் நிலை நிறுத்த, குழந்தை உருவாக்கி, பெற்றெடுத்து வளர்ப்பதை, இயற்கை அவளிடம் ஒப்படைக்குமா? ஏன் இதை ஆண்கள் வசம் இயற்கை கொடுக்கவில்லை?! பதில் தருவார்களா இந்த ஆண்கள்?!

ஒரு ஆணுக்கு, அவனுடைய வாழ்வில், தாயாக, சகோதரியாக, மனைவியாக, மகளாக, மருமகளாக, பேத்தியாக அமைவது பெண் தானே?! மேலும் உறவுகளிலும், நட்புவட்டத்திலும் பெண்கள் உண்டுதானெ? ஆனால், உலகில் பிறந்து இப்போது இருக்கிற பெரியவர்களான ஆண்களும், நடுத்தர வயதுள்ள ஆண்களும், இளையோர்களான ஆண்களும், சிறுவர்களான் ஆண்களும் தன்னுடைய வாழ்வில், ஒரு பெண்ணை எப்படி மதிக்க வேண்டும், போற்றிட வேண்டும் என்று அறிந்துகொள்வதே இல்லை என்று சொல்லமுடியும். இதெல்லாம் பிற ஆண்களைப்பார்த்து, பெண்களிடம் இப்படித்தான் நடந்துகொள்ள வேண்டும் என்ற தவறான கற்பிதங்கள். மேலும் வரவேற்பரை வரை வந்து பாடம் நடத்தும் தொலைகாட்சியும், சினிமாவும், இன்னும் பலவும் கூட இருக்கிறதே?!

ஒரு ஆண், தன்னுடைய வாழ்வில், எல்லாமாக இருக்கும் ‘அவனுக்குரிய’ பெண்ணை இழந்தால்தான் அவன் ஒரு நல்ல பாடம் படிப்பான். ஆனால் அந்த திருத்தத்தை பெற்று, வருந்திடவும், இதுநாள் வரை இப்படி செய்துவிட்டேனே என்று மன்னிப்பு கேட்கவும், அவனுக்குரிய பெண் அங்கே இருக்கமாட்டாளே?! ஆனால், பெண்ணுக்கு இதுதான் மதிப்பு என்ற உலகியல் வழக்கம் உடனே மாறிடாது. நாம் நம் குடும்பத்தில் மாற்றினால், நம்முடைய ஆண் குழந்தைகள் மாற்றிக்கொள்ளும், அதைக் கண்டு சமூகத்தில் உள்ள ஆண்குழந்தைகள் மாற்றிக்கொள்ளும். அதன்வழியாக உலக ஆண்களும் மாற்றம் பெறுவார்கள்.

வாழ்க வளமுடன்.

Isn't it true that if you join yoga, you will lose money making?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, யோகத்தில் இணைந்தால் பணம் சம்பாதிப்பது போய்விடும் என்பதுதானே உண்மை?


பதில்:

உண்மையில்லை. இப்படி சொல்லி, மக்களை யோகத்தின் பக்கம் போகவிடாமல் தடுக்கும், குறுபுத்தி மனிதர்களின் மிகப்பெரும் பொய். கட்டுக்கதை ஆகும்.

உலகில் வாழும் எல்லா மனிதர்களுக்கும் ஐந்து கடமைகள் இருப்பதாக, குரு மகான் வேதாத்திரி மகரிஷி குறிப்பிடுகின்றார். அதில் பணம் சம்பாதித்தல் ஒரு கடமைதான். அதிலிருந்து நாம் எப்போதும் விலகிவிட முடியாது. இந்த பணம் தேடுதல், சம்பாதித்தல் ஒரு மனிதன் குறிப்பிட்ட காலத்தில் துவங்கி, தன்னுடைய முதுமை காலத்திற்குள் நிறைவு பெறவேண்டியதும் அவசியம்.

பொதுவாகவே, குழந்தைகள் மற்றும் முதியவர்கள் விதிவிலக்கு. சில உடல்தகுதியில் பாதிப்படைந்தோருக்கும் இந்த விதிவிலக்கு உண்டு. இவர்களுக்கு நாம் உதவக்கூடிய கடமையும் இருக்கிறதுதான். மேலும் இக்காலத்தில் பெண்கள் தனியே, தன்னை நிர்வகித்துக் கொள்ளக் கூடிய நிலைக்கு உயர்ந்து விட்டார்கள். இது மிகப்பெரும் வளர்ச்சி. இது இன்னும் பெருகி மிகச் சுதந்திரமாக செயல்படும் தன்மைக்கு வரவேண்டும். அந்தவகையில் வளர்ந்த ஆணும், பெண்ணும் தனக்கும், தன் வளர்ச்சிக்கும், தன்னை  நிலைப்படுத்தவும், சமூக வளர்ச்சிக்கும், அதன் வழியாக உலகின் சமச்சீருக்கும் தொழில், வியாபாரம், வேலை செய்து பணம் ஈட்டுதல் முக்கியமானது ஆகும்.

உலக மக்கள், முதலில் யோகம் என்ற குழப்பமான மயக்க நிலையில் இருந்து விடுபட வேண்டும். யோகம் என்பது நம்மை திருத்திக் கொண்டு, உண்மையாக, அறத்தோடு, இயற்கையோடு தன்னை ஒன்றிணைத்து, தன்னையும் அறிந்து வாழும் நெறிமுறைதானே தவிர வேறொன்றும் இல்லை. யோகத்தில் இணைவதற்காகவோ, இணைந்த பிறகோ சம்பாதிப்பைதையும், மற்ற எல்லாவற்றையும் விட்டுவிட வேண்டும் என்பது தவறான எண்ணம். இனிமேலாவது திருத்திக்கொள்ள வேண்டும். 

‘சம்பாதிப்பதை விட்டுவிட்டால் இந்த உலகில் எப்படி வாழ முடியும்? பிச்சை எடுக்கமுடியுமா? தருவார்களா? உழைத்துச் சாப்பிடு என்றுதானே விரட்டுவார்கள்? மேலும் அப்படி உலகுக்கு பாரமாக, மற்றவர்களுக்கும் பாரமாக வாழ்ந்து என்னதான் பெறமுடியும்?’ என்று குரு மகான் வேதாத்திரி மகரிஷி கேட்கிறார். தன்னளவில் வேலையோ, கடமையோ செய்து பணம், பொருள் ஈட்டி வாழ்வதுதான் முறை என்றும் பதில் தருகிறார். எனவே இனிமேலும் பொய்களை, கட்டுக்கதைகளை நம்பிடாதீர். உண்மை விளக்கம் பெறுக.

யோகத்தில் இணைந்தாலும் கூட, வழக்கமான உங்கள் பணி, வேலை, தொழில், வியாபாரம் ஆகியவற்றை கடமையாக செய்யலாம். யோகத்தில் இணைந்திருப்பதால், நீங்கள் அறவழியில் பயணிப்பதால், முன்னைவிடவும், உங்கள் வருமானம், மக்களின் நம்பிக்கை, மக்களின் ஆதரவு பெருகிடவும் வாய்ப்பு அதிகம். சம்பாதிப்பது என்பதில், உங்கள் தேவை என்பதை நிர்ணயித்து, போதும் என்ற நிறைவுக்குப் பிறகு, இந்த சமுகத்தில் தேவைப்படுவோர்க்கு, உண்மையான ஏழைகளுக்கு உங்கள் உதவியை சேவையாக செய்யுங்கள். நலம் பெறுங்கள்!

வாழ்க வளமுடன்.

Family lifestyle is obstructs to the yoga?


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, குடும்ப வாழ்க்கையில் இருப்பதுதான் யோகத்திற்கு தடை என்று சொல்லுகிறார்களே, அது உண்மைதானா?


பதில்:

இல்லவே இல்லை. அப்படி சொல்லப்பட்டது ஒருகாலம். அது எப்போதோ கடந்துபோய்விட்டது என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள். எல்லாவற்றிற்கும் மாற்றம் வேண்டும் என்று, நம் வாழ்க்கை மிக உயர்ந்த நிலையில், உலகமே சுருங்கிய அளவிற்கு மாற்றத்தை பெற்று வாழ்ந்து வந்துகொண்டு இருக்கிறோம். இது இன்னமும் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கிறது அல்லவா? அப்படியான மாற்றம், யோகத்திற்கு மட்டும் வராது என்று நினைக்கிறீர்களா? அல்லது வந்துவிடாது என்று முடிவு செய்கிறீர்களா?

யோகத்திற்கும் மாற்றம் வந்துவிட்டது. ஆனால் மக்கள் இன்னும் பழங்கால, அந்தக்கால நிலைகளையே மனதில் பதித்து, அதையே பேசிப்பேசி மயக்கத்தில் இருக்கிறார்கள். முதலில் யோகம் என்றால் என்ன? இதற்கு உடனே நமக்கு கிடைக்கும் பொதுவான பதில் என்ன தெரியுமா? இறைவனை அறியும் அடையும் வழி, இதற்கு துறவு ஏற்கொள்ளவேண்டும். வீட்டை, குடும்பத்தை விட்டு விலகி, காட்டில் சென்று தவம் செய்ய வேண்டும். இதற்கு பல ஆண்டுகள் ஆகும் என்பார்கள். சாதாரண மனிதர்களுக்கு, குடும்ப வாழ்வில் இருப்பவர்களுக்கு தேவை இல்லை என்றும் சொல்லுவார்கள்.

ஆனால், யோகம் என்றால் தன்னை அறிந்து வாழும் நெறி ஆகும். அந்த தன்னை அறிதலில், இறை எனும் மாபெரும் உணர்வையும் புரிந்து கொள்கிறோம். எப்படி நமக்குள்ளாக நிறைந்து இருக்கிறது என்பதையும், இயற்கைக்கும் நமக்கும் என்ன தொடர்பு என்பதையும் அறிந்து கொள்கிறோம். வாழ்வில் நம் கடமை என்ன என்று புரிந்து, எது உண்மையான இன்பமோ அதை மட்டுமே அனுபவித்து, பிறரையும் மகிழ்வித்து வாழப் பழகுகிறோம் என்பதுதான் யோகத்தின் உண்மை விளக்கம் ஆகும்.

தற்காலத்தில் எத்தனையோ யோகம் உலகில் உள்ளன, எனினும், வேதாத்திரி மகரிஷி அவர்களின் மனவளக்கலை என்பது எளிமைப்படுத்தப்பட்ட குண்டலினி யோகம் ஆகும். இதில் எந்த ஒரு குழப்பத்திற்கும் இடமின்றி, கற்றுத் தேரலாம். இன்னமும் பழங்கதை பேசி காலத்தை வீணாக்கிட வேண்டாம். வாழும் காலத்திற்குள்ளாக, நம் பிறவிக்கடனான, கர்மா என்ற வினைப்பதிவுகளை தீர்த்து, துன்பங்கள் நீக்கிய இன்பமான் வாழ்வில், நான் யார்? என்ற தன்னையறிதலில் உயர்ந்து, யோகவாழ்வில் முழுமைபெறுவோம்.

வாழ்க வளமுடன்.

Medicine does not work - part 02


 வேலை செய்யாத மருந்து பகுதி 02



நேற்றைய பதிவில்,

ஞானியை தேடிச் சென்று யோகம் கற்பதற்கான தகுதி குறித்து கண்டோம். ஞானியோடு இணைந்து சென்றவன், தன்னை அவர்க்கு ஒப்படைத்திருந்தான் எனில், குருவிடம் அர்பணிப்பு என்ற வகையில், அவர், அவனுடைய தலையை ஆற்றில் மூழ்கடிக்கும் பொழுது, மூச்சடைக்கும் பொதுவான நேரமாவது அமைதியாக இருந்திருக்கலாம். (எப்படியும் சராசரி மனிதன் 10 முதல் 30 நொடிகள் வரை மூச்சை நிறுத்தி வைக்கலாம்) தன்னை தேடிவந்த ஒருவனை, ஒரு ஞானி, உயிர்க்கொலை செய்வாரா? என்று சிந்திருக்கலாம். ஆனால் அதற்கு அவகாசமில்லாமல், “நான் செத்துவிடுவோனோ” என்று திகைத்து, ஞானியின் பிடியிலிருந்து விலக முயற்சித்தான். 

பொதுவான மனித மனம் இப்படித்தான் திகைக்கிறது. யோகத்திற்கு சென்றால், நான் பரதேசி போல ஆகிவிடுவேன். பணம் சம்பாதிக்க முடியாது, சுகம் அனுபவிக்க முடியாது, இல்லறம் இல்லாது போய்விடும், பிச்சை எடுக்கவேண்டிவரும் என்றெல்லாம் ஏதேதோ “அந்தக்கால பொய்” நிரப்பி பயப்படுவார்கள். பரஞ்சோதி மகான் காலம் முதல், வேதாத்திரி மகரிசி காலம் வரை, இல்லறம் இல்லாத துறவறம் காலாவதி ஆகிவிட்டது. எனவே இனிமேல் திருமணமும், உலக வாழ்வியலும் யோகத்திற்கு ஒரு தடையும் இல்லை என்பது உண்மையாகி விட்டது. ஆனாலும் சிலரிடம் அந்தப் பொய்கள் நிலைத்திருக்கின்றன.


இன்னொரு கதையை பார்க்கலாம்.

ஒரு திருமண தம்பதி, மாப்பிள்ளை பெரும் பணக்காரன். அவன் தன்னளவில் உயர்ந்த பெண்ணை திருமணம் செய்தால், தனக்கு அடங்கமாட்டாள் என்ற ஆணடிமைத்தனத்தில், ஓர் நடுத்தர வர்க்கப் பெண்ணை திருமணம் செய்தான். நல்லவிதமாக திருமணம் நடந்தது. முதலிரவு அறையில், தன் மனைவியிடம் சொன்னான்,

“இத்தனை நாள், நான் நன்றாக சாப்பிட  கூட முடியாமல் கஷ்டப்பட்டேன். இனி நீ வந்துவிட்டாய். எனக்கு கவலைவிட்டது. எனக்கு பிடித்தமான உணவை சமைத்துதருவாய் என்று நம்புகிறேன்”

“சரிங்க, அப்படியே செய்கிறேன். எனக்கு தெரிந்த அளவிலும், புதிதாக கற்று சமைக்கவும் நான் தயங்காமல் சமைத்துத் தருகிறேன். உங்க திருப்திதான் எனக்கு முக்கியம்” என்றாள் மனைவி.

மறுநாள் காலையிலேயே, மனைவி அடுப்படிக்குச் சென்று இருக்கிற பொருள் எல்லாம் சரிபார்த்து, காலை உணவுக்கு சிறந்த உணவாக, கொஞ்சம் கேசரி, பொங்கல், இட்லி, சாம்பார், தேங்காய் சட்னி, கார சட்னி, மெதுவடை என்று அமர்க்களமாக செய்து வைத்தாள். தன் கணவன் எழுந்து வருவதற்குள் இதை அவனுக்கு சாப்பிட தயாராக இருக்கவேண்டும் என நினைத்து, பரிமாறும் அறையிலும் அடுக்கி வைத்துவிட்டு. கணவனை எழுப்பி விட்டாள்.

“எல்லாம் தயாராக இருக்கு, இன்னைக்கு நீங்க திருப்தியா சாப்பிடலாம்” என்று புன்சிரிப்போடு ஆவலாக சொன்னாள்.

அவனோ சாவகாசமாக காலைக்கடன் முடித்து, குளித்து வந்து சாப்பிட அமர்ந்தான். தன் முன் பரப்பி இருந்த உணவுகளை ஒவ்வொன்றாக மூடி திறந்து பார்த்தான். அவன் மனைவி பரபரப்பாக, அவனுக்கு ஓர் இலையைப் போட்டு, அதன் மேல் நீர் தெளித்தாள். 

“நான் செய்துக்கிறேன்” என்றான் அவன்.

சுதாரித்துக்கொண்ட அவள். “கேசரி வைக்கட்டுமா?” என்றாள்.

“சரி கொஞ்சமாக வை” என்று ஒவ்வொன்றாக அவள் கேட்டு கேட்டு வைத்து அவன் முகத்தை ஆர்வமாக பார்த்தாள்.

அவனோ, ஒவ்வொன்றாக சாப்பிட்டுப்பார்த்து, உதட்டை பிதுக்கினான்.

“ஏங்க, பிடிக்கலையா?” என்று குரல் தேம்பிட கேட்டாள்.

“ஆமா, என்ன செஞ்சி வச்சிருக்க? ஒரு ருசியும் சரியில்லை, எனக்கு பிடிக்கவும் இல்லை”

அவள் ஏறக்குறைய அழுதிடும் நிலைக்குப் போய்விட்டாள்.

“இதிலே என்னென்ன குறைன்னு சொன்னா அதை சரி செய்துக்கிறேன். இல்லைன்னா உங்களுக்கு எப்படி, என்னென்ன பிடிக்கும்னு சொல்லுங்க, அதுபடிவேனா செய்துதரேன்”

“இங்கபார், அதலாம் எனக்கு தெரியாது, எனக்கு என்ன புடிக்கும்னு சொல்லவும் மாட்டேன், நீயே அதைக் கண்டுபுடி” என்று சொல்லிவிட்டு கை அலம்பிட எழுந்துவிட்டான். இலையில் எல்லாமே அப்படியே இருந்தன.

“மத்தியானமாவது எனக்கு புடிச்சதா நாலு நல்லது செய்துவை, சரியா?” என்றவாறு வெளியே கிளம்பிவிட்டான்.

புது மனைவிக்கு தலை இருண்டுவந்தது. 


நாளையும் தொடர்வோம் அன்பர்களே!

வாழ்க வளமுடன்.

----




Sixth and below!


ஆறும் அதற்கு கீழும்!



பதுங்குதல்

பெரும்பாலும் என் வீட்டில் சிறு பூச்சி, சிறிய வகை சிலந்தி, கரப்பான் பூச்சி, எறும்பு, பல்லி மற்றும் தூசி தொந்தரவுகள் உண்டு. இந்த வீட்டின் மனிதர்கள் எப்போதடா விளக்கை நிறுத்திவிட்டு படுப்பார்கள் என்று காத்திருந்து வெளியே நடமாடுவது போல இருக்கும். நான் முன்பு குடியிருந்த வீட்டில், பாம்பு எல்லாம் சாதாரணம். பகலில் கூட வீட்டின் சுற்றுச்சுவர் வழியாக வெளியே பார்த்தால், பாம்பு தென்படுகிறது என்று என் வீட்டிற்கு வந்த விருந்தாளிகள் சொல்லியிருக்கிறார். 

ஒருமுறை கூட நான் அப்படி பார்த்ததில்லை. இத்தகைய உயிரிங்களின் போக்கு, இரவில்தான் அதிகமாக இருக்கும் என்பது உண்மை. அதாவது மனிதர்களின் அசைவு, உடல் அதிர்வு, குரல் அதிர்வு, ஒலி ஒளி தாக்குதல், வெப்பம் குளுமை பாதிப்பு இதெல்லாம் குறைந்த பிறகு அல்லது நின்றுவிட்ட பிறகு தான், தன் இரை தேடி வெளியே கிளம்புகின்றன. ஆம் அந்த உயிரினக்களுக்கு உணவின் பொருட்டுத்தான் வீட்டிலும் தங்குகின்றன. அதுவரை மற்றெல்லா பொழுதுகளும் பதுங்கியே இருக்கின்றன.

உதாரணமாக, ஏதேனும் சிறு பூச்சியை நீங்கள் விரட்டி அடிக்க முயற்சித்தால் அவை உடனடியாக ஏதேனும் ஒரு இருட்டுப்பகுதியை நோக்கி பறக்கும் அல்லது ஓடும். ஏனென்றால் அப்போதைக்கு அவைகளுக்கு பாதுகாப்பு அந்த இருட்டு இடங்களே! சிலவேளை தரையில் ஓடும் பூச்சி, பல்லி இவற்றை விரட்டினால், அவை உங்களை நோக்கிவரும் போது, உங்கள் உள்ளங்காலுக்கு அடிப்பகுதியில் கூட தங்குவதற்கு முயற்சிக்கும். ஏனென்றால் அங்கேயும் இருட்டு இருக்கிறதே! நீங்கள் ஐயய்யோ என்று அலறி, காலை உதறி ஓடுவது எனக்கு காட்சியாகிறது. 


வாழ்விடம்

இந்த உயிரினங்கள் எல்லாமே ஏன் மனிதர் வாழும் இடங்களில் இருக்கிறது? இருங்க, இருங்க! நீங்களும் நானும்தான், அத்தகைய உயிரினங்கள் வாழும் இடங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இன்னும் சொல்லப் போனால், நாம் உரிமை எடுத்துக்கொண்டு, உனக்கு இங்கே இடமில்லை என்று விரட்டியும் விட்டு, அந்த உயிரினங்களுக்கு நவீன வாழ்வியல் மூலமாக, தொந்தரவுகளையும் கொடுக்கிறோம். 

அந்த சிறு உயிரினங்களுக்கான உணவுச் சங்கிலியையும் அறுத்த பெருமை நமக்கு உண்டு. கூடவே நம்முடைய சோம்பேறி தனத்தாலும், சுத்தத்தில் அக்கறை இன்மையாலும் வெளியே இருக்கக்கூடிய உயிரினங்களை நாமே வருக, வருக என்று வரவேற்கவும் செய்கிறோம்.


விட்டு விலகி விட்டோம்

எங்கள் வீட்டில் சில பாம்புகள் வரும் என்று சொன்னேன் அல்லவா? அவை ஒருபோதும் வீட்டிற்குள் வந்ததில்லை. ஒரு நேரம் வாசல்படி ஏறிவந்த பாம்பு, யாரோ வருகிறார்கள் என்று தெரிந்தவுடனே, வெளிவாசல் வழியே படி இறங்கி ஓடி மறைந்துவிட்டது. ஆனால் குளியலறையிலும், வீட்டு சுற்றுச்சுவருக்கு உள்ளேயும் வந்துவிட்ட பாம்பை அடிக்காமல், விரட்டி இருக்கிறோம். பாம்பை கொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. அதற்கு விசம் இருக்கலாம் ஆனால், சிறு அதிர்வு இருந்தாலே மிக விரைவாக ஓடி ஒளிந்துகொள்ளும் தன்மை கொண்டது. லாவகமாக அதை விரட்டி விட வாய்ப்பு உள்ளது. ஆனால் நமக்கு பழக்கம் இல்லை என்பதுதான் பொதுவான விசயம். 

எப்படி விவசாயத்தை விட்டு மிக நீண்ட பாதையில் விலகிவிட்டோமோ, அதுபோலவே பிற உயிரினங்களோடு கூடிய தடுப்பு, விலக்கல், பாதுகாப்பு இவற்றிலும் விலகிவிட்டோம். காலம் கடந்து செல்லச்செல்ல, இத்தகைய உயிரினங்கள் குறித்த தகவல்களைச் சொல்லும் பெருசுகளையும் நாம் இழந்து கொண்டிருக்கிறோம் என்பது மிக முக்கியமான குறிப்பு. ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது என்று பழமொழி சொல்லிக்கொண்டே, அந்த ஏட்டுச்சுரைக்காயை கறிக்கு உயயோகப்படுத்த பழகிக் கொண்டிருக்கிறோம் என்பதே உண்மை.


வாழ்தல் கேள்விக்குறி?!

ஒரு சுண்டெலியைப்போல உங்களால் வேகமாக திட்டமிட முடியுமா? ஒரு எறும்புபோல எங்கோ மறைந்த சர்க்கரையை தேடி எடுக்க முடியுமா? கரப்பான் பூச்சியைப்போல எந்த சூழலிலும் வாழ்ந்து பழக உங்களால் முடியுமா? என்று பலப்பல கேள்விகளை வரிசையாக கேட்கலாம். ஆனால் அதையெல்லாம் விட்டுவிடுங்கள். ஏனென்றால் நாமெல்லாம் ஆறறவு பெற்ற மனித உயிரினம் அல்லவா? இருக்கட்டும்.

ஆனால், இந்த உயிரினங்களும், பிறக்கின்றன, வளர்கின்றன, இணையோடு கூடி களிக்கின்றன. முட்டைகள், குஞ்சுகள், குட்டிகள் இடுகின்றன. தேவையான நேரத்தில் உணவு தேடி தின்கின்றன. அமைதியாகின்றன, காலத்தில் இறந்தும் போகின்றன. நாம் ஆறறவு என்று நமக்கு தற்பெருமை இருக்கிறது, ஆனால் எங்கேயோ வாழ்க்கையை தொலைத்துவிட்ட யோசனை உள்ளுக்குள் எழுகிறதா இல்லையா?

யோசிப்பதற்குக்கூட நமக்கு நிறைய நேரம் இல்லைதான். ஆனால் கொஞ்சம் முயற்சிக்கலாம்.

 

Get ready to live now - Part 02


 



முந்தைய பதிவு செல்ல Part 01

வாழ்வதற்கு தயாராகுக - இரண்டு

கடந்த பதிவின் தொடர்ச்சி!


பொய் சூழ்நிலை

பிறக்கும்பொழுதே சில குழந்தைகள், தாயின் ஊட்டசத்து குறைபாடால், தசை நோயால் பாதிக்கப்படுகிறார்கள். இக்குழந்தைகளால் நிற்க முடியாது, ஒரே இடத்தில் உட்காரவும் முடியாது, நாம் தூக்கி வைத்துக்கொள்ளவும் முடியாது. ஏனென்றால் கொஞ்ச நேரத்தில் அவர்களின் தசை இறுகி அல்லது தளர்ந்து மிகப்பெரும் வலியை கொடுக்கும். இப்படியான குழந்தைகளுக்கு இயற்கை முறையில் சில சிகிச்சைகள் வழங்குவதுண்டு. அதில் முக்கியமான ஒன்று, மணலில் பள்ளம் தோண்டி, அக்குழந்தைகளை அதில் நிற்க வைத்து அல்லது உட்காரவைத்து, தலை தவிர்த்து மற்ற உடல் பாகங்களை எல்லாம் மண்ணால் மூடி விடுதல். சிறிது நேரம் கழித்து அவர்களை விடுவித்துவிடலாம். இதில் என்ன நடக்கிறது என்றால், மண்ணில் இருக்கக்கூடிய சில சத்துக்களும், பாக்டீரியாக்கள் எனும் நுண்ணுயிரிகளும் உடலில் கலக்கின்றன. உடலை, சதையை பலப்படுத்துகின்றன. கூடவே எதிர்ப்பு சக்தியை உருவாக்குகின்றன. இந்த நவீன காலத்தில் மண்ணைத்தொட்டுப் பார்த்த குழந்தைகளை, விரல் விட்டு எண்ணி விடலாம். 

எதைத்தொட்டாலும் நோய் வரும் என்று பயந்து பயந்து வளர்த்து, அது கரோனாவால் உண்மையாகிப்போனதுதான் மிச்சம். இயல்பான எதிர்ப்பு உடலில் இல்லாமல் போய்விட்டது.

வருடம் முழுதும் சாராசரி வெப்பமான ஒரு நகரில், எந்நேரமும் சென்டர்லைஸ்ட் ஏர்கண்டிசனிங் வீட்டில், பளிங்கு தரையில், செருப்புக்காலோடு சிலர் வாழ்ந்துவருவதாக கேள்விப்பட்டிருக்கிறேன். என்ன ஒரு இயற்கை முரண்பாடு?! இந்த உடலுகென்று ஒரு வெப்ப நிலை இருக்கிறது. அதை சமநிலையில் வைத்துக்கொள்வதற்கு இந்த உடல்படும் பாடு நமக்குத்தெரியாது. நமக்குத்தான் என்றைக்குமே உள்முக பார்வை இல்லையே. ஏற்கனவே தொழிற்சாலை, வாகன புகைகளால் குழப்பமடைந்த இயற்கை மனிதர்களின் சராசரி வெப்பத்தை தாக்கிக்கொண்டிருக்கிறது. இதிலிருந்து தப்பிப்பதாக நினைத்துக்கொண்டு, தற்காலிக செயற்கை குளிருக்குள் அடங்குகிறார்கள். இது நிச்சயமாக உங்கள் உடலையும், உயிரையும் கெடுக்கும். இயல்பாக இந்த உடல், தனக்கு ஏற்ற சூழ்நிலைக்கு ஏற்றவாறு, தகவமைத்துகொள்வதில் நீங்கள் வாய்ப்பு கொடுக்காமல் தவிர்க்கிறீர்கள். இதனால் உங்கள் உடல் தேவையில்லாது தடுமாறுகிறது. அதுவே எல்லா நோய்க்கும் காரணமாகிறது. 


தீப்பெட்டி வீடுகள்

நமது தமிழ்நாட்டில் இருக்கிற வீடு கட்டிடக்கலை நிபுணர்கள், மேஸ்திரிகள், கொத்தனார்கள் இவர்களை கூட்டி வந்து “எப்படி வீடுகட்டுவது?” என்று யாராவது மறுபடி பாடம் நடத்தினால் நல்லது. ஏனென்றால் இவர்கள் கட்டுகிற எந்த வீட்டிலும், 

1) வெளிக்காற்று உள்ளே வராது. உள்காற்று வெளியே போகாது.

2) வீட்டின் எந்த அறையிலும் வெளிச்சம் வர வாய்ப்பு இருக்காது.

3) அறையின் வெப்பக்காற்று வெளியேற எந்த வழியும் தரப்பட்டிருக்காது.

4) ஓவ்வொரு அறையிலும் மேற்சுவற்றின் வழியாக வெப்பம் இறங்கும்

5) கதவு, ஜன்னல்களில் கண்ணாடி பதிக்கப்பட்டு, அதீத வெளிச்சமும், அதீத வெப்பம் வீட்டிற்குள் வரும்.

6) சமையல் அறையில் புகை, வெப்பம் வெளியேபோக முடியாது. மிளகாய், கடுகு தாளித்தால் வீட்டிலிருக்கிற எல்லோருக்கும் “காரத் தும்மல்” இலவசம்

7) ஜன்னலுக்கு வெளிப்புறம், மழை, வெயில் தடுப்பு வழியாகவும், தண்ணீர் வீட்டிற்குள் வரும், வெயிலும் வரும்.

8) வயிமுட்ட சாப்பிட்டு எழுந்து கை கழுவ நடக்க முடியாது என்பதால், அருகிலேயே கைகழுவும் தொட்டி இருக்கும், அவ்வப்பொழுது அது அடைத்து துர்நாற்றமும் தரும்.

9) குளியலறையும், கழிவறையும், சமயலறைக்கு அருகில் இருக்கும் அல்லது சாப்பாடு பரிமாறும் அறைக்கு அருகில் இருக்கும்.

10) குளியறையில் கை தூக்கி, கை நீட்டி சோப்பு போட முடியாது ஏனென்றால் கை சுவரில் இடிக்கும்

11) கழிப்பறையில் கொஞ்சம் குண்டான ஆட்கள் உள்ளே நுழையவே முடியாது,  நுழைந்தாலும் உடலை திருப்பி வெளியே வர முடியாது.

12) வெஸ்டர்ன் டாய்லெட் செட் தான் இருக்கும். நீங்களாக வயிறை முக்கினால், குடலிறக்க நோய் நிச்சய பரிசு உண்டு. 

13) சரி, கால் மடக்கியாவது உட்காரலாம் என்றால், கீழே விழுமளவுக்கு பாத டைல்ஸ் பதிந்திருக்கும். பிடிக்கவும் ஏதும் வசதியிருக்காது. 

14) ______________________________________ இதில் உங்க வீட்டை சுற்றிப்பார்த்து ஏதேனும் எழுதிக்கொள்ளவும். 

இப்படியான வீட்டில் மனுசன் குடியிருப்பானா? என்று கேட்கிறீர்களா? சரிதான்! இப்படி அரும், பெரும் வசதிகள் வீட்டில் இருந்தால், உடலும், மனமும் எப்படி நன்றாக இருக்கும்?!


நேரமில்லாத நிலை

குனிந்து நிமிரக்கூட நேரமில்லை என்பார்கள் பொதுவாக. நிஜமாகவே இக்காலத்தில் அப்படி ஆகிவிட்டதோ என்று எண்ணிவிடத்தோன்றுகிறது. எல்லோரும் தன்னை, கையடக்க கைபேசிக்குள் புதைத்துக்கொண்டுவிட்டார்கள். இவர்களாக எதுவுமே செய்வதில்லை. யாராவது சிரித்தால் சிரிக்கிறார்கள், யாராவது பாடினால் கேட்கிறார்கள், யாராவது அழுகாச்சி செய்தால் இவர்களும் அழுகிறார்கள், யாராது சண்டை போட்டால் குத்துடா, வெட்டுடா என்கிறார்கள். யாராவது உடற்பயிற்சி செய்தால் பார்த்து மகிழ்கிறார்கள். இப்படியாக எல்லாமே யாரோ அல்லது யாராவது செய்துகொண்டிருந்தால் இவர்களுக்கு போதுமானது. தானாக எதுவுமே செய்யமாட்டார்கள். உடற்பயிற்சி செய்வதா? அதற்கெல்லாம் நேரமில்லையே என்பதுதான் இவர்களின் பதில். 

கூட்டமாக இருக்காதீர்கள், தும்மும்போதும் இருமும்போதும் கைகளால் மறைத்து கொள்ளுங்கள் அல்லது துணி வைத்துக்கொள்ளுங்கள். எதையும் தேவையில்லாது தொடாதீர்கள், கைகளை 20 நொடி நன்றாக சோப்பு போட்டு கழுவுங்கள். மூக்கு, வாய், கண் அடிக்கடி தொடாதீர்கள். எங்கே சென்றாலும் முககவசம் அணியுங்கள், ஒரு அடி தள்ளி நின்றே பேசுங்கள். இப்படியெல்லாம் சொன்னால், யாருக்கோ சொல்வதாக நினைத்துக்கொண்டு, இந்த வழிமுறைகளை கடைபிடிப்பதே இல்லை, அதில் அக்கறை கொள்வதும் இல்லை. இப்படியான துயர் சூழலில் பழகிக்கொள்வதும் இல்லை

இப்படியானவர்களைக் கண்டால் கரோனாவுக்கு குஷி ஏற்படாதா என்ன? 


தீர்வை நோக்கி

காலம் இன்னும் கடந்துவிடவில்லை. இன்று ஆரம்பித்தாலும்கூட நாளடைவில் உங்களை, உங்கள் உடலை பலப்படுத்திவிடலாம். உங்கள் தவறுகளிலிருந்து பாடம் படித்தது போதும். இனி அத்தவறுகளிலிருந்து விலகுங்கள். உங்களை, உங்கள் கவனத்தை திசை திருப்பும் எல்லாவற்றிலிருந்தும் வெளியே வாருங்கள். அடிப்படை தேவைகள் என்ன? எந்தெந்த வகையில் நான் என்னை திருத்திக்கொள்ள வேண்டும், திருத்திக்கொள்ள முடியும் என்பதை வகைப்படுத்துங்கள். காலம் நகர்ந்துகொண்டே இருக்கும். ஒரு நொடி கூட உங்களால் தக்கவைக்க முடியாது. 

நீங்கள் இன்னும் வாழ வேண்டும் என்றால், தப்பிக்க நினைக்காதீர்கள், உங்களை திருத்தப்பாருங்கள். உடலை வளப்படுத்தாமல் ஒருபோதும் உங்களால் வாழ முடியாது என்பதை புரிந்துகொள்ளுங்கள். அடிக்கடி சொல்வது போல, இயற்கையின் உன்னத பரிசு இந்த உடல், அதை பாழாக்காதீர்கள்.

அல்லது உங்களுக்குள்ளாக நான் வாழ்ந்து முடித்துவிட்டேன், இனி வாழ்வில் ஒன்றுமில்லை என்ற நிறைவிலாவது திருப்தி கொள்ளுங்கள். உங்கள் மீத வாழ்க்கையை கரோனாவுக்கு கொடுத்து விடுங்கள் என்று சொன்னால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? 

அந்நிலை வேண்டவே வேண்டும். இன்றே தீர்வை நோக்கி நகர்க, 

வாழ்க வளமுடன். 


-----------------

Image Thanks to: Brooke Cagle and shutterstock