CJ for You: infinitesimal particle

infinitesimal particle

Showing posts with label infinitesimal particle. Show all posts
Showing posts with label infinitesimal particle. Show all posts

How to understand the pattern, precession and regularity?


தன்மை, துல்லியம், இயக்க ஒழுங்கு இந்த மூன்றும் ஒவ்வொரு பொருளிலும் எவ்வாறு உள்ளது? அதை எப்படியாக புரிந்துகொள்வது?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, தன்மை, துல்லியம், இயக்க ஒழுங்கு இந்த மூன்றும் ஒவ்வொரு பொருளிலும் எவ்வாறு உள்ளது? அதை எப்படியாக புரிந்துகொள்வது?


வேதாத்திரி மகரிஷி அவர்களின் பதில்:

        நாம்  வாழும் இந்த நவீன அணுவியல், வானியல் விஞ்ஞான உலகில், மேட்டர் என்ற நிறையையும், எனர்ஜி என்ற ஆற்றலையும், தனிப்பட்டு விளக்கிட முடியாமல், இருப்பதை அப்படியே ஏற்று, எல்லாவகையான முன்னேற்றங்களையும் மக்களுக்கு வழங்கி வருகிறார்கள். ஆன்மீக வழியில், உண்மை உணர்ந்த மெய்ஞானிகள், இந்த மேட்டர் மற்றும் எனர்ஜியில் என்ன உள்ளது என்பதையும், அதை எப்படி உணர்ந்தும் கொள்ளலாம் என்றும் விளக்குகிறார்கள். இதோ வேதாத்திரி மகரிஷி, அதனில் இருக்கும் உள்ளடக்கத்தை விளக்குகிறார்.

உலகம் என்று எடுத்துக்கொண்டால், அதன் அளவு என்ன? இரசாயனங்களில் அளவு என்ன? என்பதனை இன்றுள்ள விஞ்ஞானிகள் ஓரளவிற்கு உணர்ந்துள்ளார்கள். அந்தக் காலத்தில் இருந்தவர்களும் ஓரளவிற்கு இந்தக் கிரகத்தில் இன்னின்ன சக்தி அதிகம் என்று சொல்லியிருக்கிறார்கள். எந்தப் பொருளால் ஒன்று ஆக்கப்பட்டதோ அது அதன் தன்மை. 

பூமி மணிக்கு 1,000 மைல் வேகத்தில் 24 மணி நேரத்திற்குள் ஒரு சுற்று தன்னைத்தானே சுற்றிக் கொள்கிறது. சூரியனைச் சுற்றும் பாதையில் மணிக்கு 67,000 மைல் வேகத்தில் சென்று 365¼ நாளில் அதை வலம் வருகிறது. இது சிறிதும் காலம் தவறாமல் சரியாக அமையும். இதுவே அதன் துல்லியம். 

இரசாயனப் பொருட்களிலுள்ள நுண்ணணுவின் சுழல் விரைவுக்கேற்ப காந்தத் தன்மாற்ற வேறுபாடுகள் உண்டாகின்றன. அதே விண்துகள்களின் சுழல் விரைவுக்கேற்ப அதன் திணிவும் வடிவமும் அமைகின்றன, இதுவே வடிவம். 

        பரமாணு நிலையிலிருந்து அவை கூடி ஒரு சிறு வடிவமாக மாறி, குறிப்பிட்ட விரைவில் இயங்கும்போது ஏற்பட்டு மாறிக்கொண்டே வரும் ரசாயனத் தன்மைகளும் மற்ற சிறப்புகளும் துல்லியம் அல்லது தன்மைகள் ஆகும். 

இந்த இயக்க நியதி மாறாது. பூமி தன்னுடைய மற்ற இயல்பூக்கத்தையும் நடத்திக் கொண்டு, சூரியனையும் சுற்றி வருகிறது. இச்செயல்பாட்டைத்தான் இயக்க ஒழுங்கு என்கிறோம். இதுவே காலம் அல்லது இயக்கச்சீர்மை ஆகும். 

        பூமி அதிக அளவு சூடு ஆகிவிட்டதென்றால் வெப்பக் குழம்பை “எரிமலை” யாக வெளியேற்றுகின்றது. இது காலத்தால் நடக்கும் இயக்க ஒழுங்காகும். இதுபோல் ஒவ்வொரு பொருளுக்கும் தன்மை, துல்லியம், இயக்க ஒழுங்கு என்ற மூன்று குணங்களும் உண்டு. 

ஒரு ரோஜாச்செடியை எடுத்துக் கொண்டால் அதன் இலை, தண்டு இவ்வாறுதான் இருக்கும் என்பது அதன் தன்மை. 

        ஒரு விதையைப் போட்டால் இத்தனை நாட்களில் செடி வளரும். இத்தனை நாட்களில் பூ பூக்கும். அந்தப் பூவை உண்டால் இன்னது ஏற்படும். இது விளைவு. இவை துல்லியம். அது பூத்தவுடன் அதன் இதழ்கள் வாழும் காலம், அது குறிப்பிட்ட காலத்தில் தளர்ச்சியுற்று இலையுதிர்வது, அது இத்தனை நாட்கள்தான் வளரும், வாழும் என்பது, அந்தச் செடியின் முடிவு இவையெல்லாம் காலத்தை ஒட்டி நடைபெறுவது இயக்க ஒழுங்காகும். 

இவ்வாறு ஒவ்வொரு சடப் பொருளிலும், ஒவ்வொரு உயிரிலும் அதன் தன்மை, துல்லியம், இயக்க ஒழுங்கு என்ற முத்தன்மைகளையும் காணலாம். 

வாழ்க வளமுடன்.

-

What is called by Mahaakash, Boothaakash and Siddhaakash?


மாகாகாசம், பூதாகாசம், சித்தாகாசம் என்றால் என்ன?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, மாகாகாசம், பூதாகாசம், சித்தாகாசம் என்றால் என்ன?


பதில்:

மெய்ப்பொருளாக உள்ள, முழுமுதற்பொருளையும், அதன் பரிணாமத்தையும் விளக்கும் வகையில் சித்தர்கள் நமக்குத்தந்த நிலைகள்தான் இந்த மாகாகாசம், பூதாகாசம், சித்தாகாசம் என்பதாகும். இறை, இறையாற்றல், மெய்ப்பொருள், வெட்டவெளி, சுத்தவெளி என்று பலவாறாக உயர்ந்த கருத்தில், மதிப்புத்தந்து அழைக்கக்கூடிய ஒன்றை, முழுமுதற்பொருளை, எல்லாவற்றிற்கும் ஆதாரமாகவும், காத்து, அன்பும், கருணையோடும் இருந்துவரக்கூடியைத்தான், கட+உள்=கடவுள் என்று அழைத்து, யோகத்தின் வழியாக அறியவும் முடியும் என்று வகை செய்தனர் சித்தர்கள்.

எவ்வகையிலும் உருவமில்லா மெய்யை, எளியவர்கள் உணரவே கருத்துருவாக இருப்பதை, உருவ வழிபாடாக சிவம் என்பதை சிவனாக அமைத்தார்கள், பின்னாளில் வந்தோர் சிவத்தின் இயக்கத்தை நாராயணன் என்று அமைத்தார்கள். பின்னாளிலும், இந்நாளிலும் எப்படி இருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள்.

ஆகாசம் என்ற வார்த்தையில் குறிப்பிடப்படுவது, மெய்ப்பொருளின் பரிணாமத்தில் வந்த காட்சியாக வந்த, எழுந்த முதற்பொருளாகும். இந்த ஆகாசம் வடமொழி சொல்லாகும். தமிழில் இதை விண் என்று அழைக்கிறோம். இப்படி ஆகாசம் என்ற ஒன்றை முந்தைய நிலையை, பரிணாமத்தில் எழுச்சி பெறாமல், மாற்றம் அடையாமல், உள்ளடக்கமாக, மெய்ப்பொருளாகவே இருந்த நிலையைத்தான் சித்தர்கள் ‘மகாகாசம்’ என்று அழைத்தனர். மகா என்றால் மிகப்பெரிய, அளவிட முடியாத, விரித்துச் சொல்லமுடியாத என்று அர்த்தமாகிறது.

அடுத்து வரும் ‘பூதாகாசம்’ என்பது மெப்பொருள், தன்னிறுக்கத்தால், நொறுங்கி, எழுச்சிபெற்று, பரமாணுவாக தோன்றி, அந்த பரமாணுவின் கூட்டாக அமைந்த ஆகாசம் என்ற பொருளாக, முதல் பஞ்சபூத (பௌதீக) தோற்றமாக மலர்ந்ததை சொல்லுவதாகும். இந்த ஆகாசம் என்பதற்கு பிறகுதான், வாயு, தேயு, அப்பு, பிரிதிவி என்ற மற்ற நான்கான, காற்று, வெப்பம், நீர், மண் என்ற் பஞ்சபூத தோற்றங்களாக வந்தது. இந்த ஐந்தும் கூட்டாகவும், இவற்றில் சில பல கூட்டாக இணைந்து உருவான பிரபஞ்சப் பொருள்கள், இயற்கைப் பொருட்கள் அனைத்தும் ‘பூதாகாசம்’ என்று குறிப்பிடுகின்றனர். பஞ்ச பூதங்களை, அதனால் ஆன ஆகாசம் என்ற தோற்ற முதற்பொருளை உள்ளடக்கியது என்று அர்த்தமாகிறது.

அடுத்ததாக வரும் ‘சித்தாகாசம்’ என்பது உயிராக மாறிய ஆகாசம் என்ற கருத்தில் சொல்லப்படுவதாகும். பூதாகாசத்தின் பரிணாமத்தில் இருந்து, அதன் தன்மாற்றமாக, அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் என்ற ஐந்து உணர்வை அறியும் வகையில் அடுத்தாக எழுந்ததே ‘மனம்’ ஆகும், இதை உள்ளடக்கமாக, மனம் என்பதைக் கொண்டு மலர்ந்தது ஜீவன்கள் ஆகும், இவை ஓர் அறிவுமுதல், ஆறறிவு மனிதன் வரை முழுமையடைந்து நிற்பதாகும். மனம் என்பது, ஆகாசத்தின் படர்க்கை நிலையே ஆகும். மனம் அதன் ஆழ்நிலையில் கருமையமாகவும் அமைகிறது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். சித்து என்றால் உயிர் என்றும் பொருளாகும். உயிராக மாறிய ஆகாசம் என்ற பொருளில்தான் ‘சித்தாகாசம்’ என்று அழைத்தனர். இந்த சித்து என்று உயிரை உணர்ந்தால்தான், சித்தர்கள் என்றும் அழைக்கப்பட்டனர் என்பதையும் அறிந்துகொள்ளலாம்! 

வாழ்க வளமுடன்.