CJ for You: universe

universe

Showing posts with label universe. Show all posts
Showing posts with label universe. Show all posts

Not speak is silence, isn't it? What's the big deal about that? And is it possible not to speak in this world? Some men, saints and gurus are silent. Is that really silence too? Explain


வாழ்க வளமுடன் ஐயா, வாய்பேசாமல் இருந்தாலே மௌனம் தானே? அதில் என்ன பெரிய விசயம் இருக்கிறது? மேலும் இந்த உலகில் பேசாமல் இருக்கமுடியுமா? சில மனிதர்கள், சாமியார்கள், ஞானிகள் பேசாமல் இருக்கிறார்களே? அதும் மௌனமா? விளக்கம் தருக.

உங்கள் ஆர்வத்தை வரவேற்கிறேன். மௌனம் இறைவனின் மொழி என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? இந்த பிரபஞ்சம் முழுவதுமே அப்படியான மௌனம் நிரம்பி இருக்கிறது. நமக்குள்ளும் அப்படியான மௌனம் இருந்தது. இருக்கிறது. ஆம், நாம் தாயின் கருவறையில் இருக்கும் பொழுது அப்படித்தான் இருந்தோம். பிறந்த பிறகுதான் அந்த மௌனத்தை கலைத்தோம். இன்றுவரை, இப்போது வரை அந்த மௌனத்தை கடைபிடிக்கவில்லை என்றும் சொல்லலாம் தானே?

மௌனம் யோகத்தில் மிக சிறப்பானது. எனினும் வாய்மூடி பேசாமல் இருப்பதற்கும், மௌனமாக இருப்பதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு. இந்த வித்தியாசத்தை தொலைத்துவிட்டுத்தான், பெரும்பாலோர் மௌனம் இருக்கிறேன் என்று சொல்லிக் கொள்கின்றனர். 

        யாராவது எதாவது கேட்பார்கள், நாம் எதையாவது சொல்லி மாட்டிக் கொள்வோம் என்பதற்காகவே, மற்றவர்களோடு பேசுவதை தவிர்த்து, மௌன நாடகம் நடிப்பவர்களும் இந்த உலகில் உண்டு. அப்படி தோற்றம் தருகின்ற பல்லாயிரக்கணக்கான குருமார்கள், ஞானிகள், சாமியார்கள் என்ற ‘அடைமொழிக்குள்’ அவர்கள் இருக்கிறார்கள். நீங்கள் எளிதில் அவரை அடையாளம் கண்டு, அவரிடம் இருந்து ஒதுங்கி விலகி, ஏமாறாமல் உங்களை காத்துக்கொள்ளலாம்.

சிக்கல் என்ன என்றால், யார் வாய்மூடி இருக்கிறார்கள், மௌனமாக இருக்கிறார்கள் என்று உடனடியாக அறிந்துகொள்ள முடியாது. ஆனால், சிறிது நேரம், அவரின் அருகே இருந்து கவனித்தால், அவர் உண்மையாகவே மௌனத்தில் இருக்கிறாரா? வாய்மூடி இருக்கிறாரா? என்பதை அறிந்துவிடலாம்.

எப்படி? இதற்கான விளக்கத்தை இந்த காணொளி வழியாக தெரிந்து கொள்ளலாம். மேலும், உங்கள் கேள்விக்கான உண்மையும் இந்த காணொளியில் கிடைக்கும்.

நாம் பேசாமல் இருந்தால் இறைவன் பேசுகிறானா? மௌனம் உண்மைவிளக்கம் அறிவோமா?#silence #divine

வாழ்க வளமுடன்

Can we get everything we ask for through this Law of Attraction? Everyone says they won. But nothing happened to me? How long do you have to be confident? I came to know that Guru Vethathiri Maharshi has said a similar concept and method in Vethathriya also. Is that really the truth?


வாழ்க வளமுடன் ஐயா. இந்த Law of Attraction என்பதை சொல்லும் சீக்ரெட் நூல் வழியாக, நாம் கேட்பதை எல்லாமே பெறமுடியுமா? எல்லோருமே வெற்றி பெற்றதாக சொல்லுகிறார்கள். ஆனால் எனக்கு எதுவும் நடக்கவில்லையே? எவ்வளவு காலம் நம்பிக்கையோடு இருக்கவேண்டும்? வேதாத்திரியாவிலும் இதுபோன்ற ஒரு கருத்தை, வழிமுறையை, குரு வேதாத்திரி மகரிஷி சொல்லி இருப்பதாக அறிந்தேன். அது உண்மைதானா? அதுகுறித்து விளக்குவீர்களா?

The Secret என்ற நூல் சமீபமாக, (14 ஆண்டுகளாக) உலக மக்களிடையே பிரபலமாகிவிட்டது. பலருக்கும் இது குறித்த விசயங்கள், பேசு பொருளாகி பகிரப்படுகிறது. இது திரைப்படமாகவும், நூலாகவும், கட்டுரையாகவும், ஒலி நூலாகவும் இணையத்திலும் கிடைக்கிறது. நானும் கூட அப்படி என்னதான் இருக்கிறது? பார்க்கலாமே! என்று கவனித்தேன். ஆனால் முழுமையாக பார்க்க, படிக்க வாய்ப்பு அமையவில்லை. என்னுடைய சில நண்பர்கள்கூட, அதில் சில உண்மைகள் இருக்கிறது, உதவும், என்று சொல்லி படிக்க சொன்னார்கள். ஏனோ அது ஆர்வத்தை தூண்டவில்லை.


வேதாத்திரிய யோகத்தின் நல்விளக்கம், ஒருவர் பெற்றபின்பு, அவருக்கு வித்தியாசப்பார்வை இருக்கப் போவதில்லை. இன்னும் சொல்லப்போனால், எல்லாவகையான வேதாத்திரியம் அல்லாத கருத்துக்களிலும், அக்கருத்து சொல்லவருவது எது? என்ற உண்மை, அவருக்கு புலப்பட்டுவிடும். இதற்கு உதாரணமாக, இனிப்பு பண்டங்கள் பலப்பல வகையான பெயர்களில், வடிவங்களில், நறுமணங்களில் இருந்தாலும், அவை எல்லாமே, சர்க்கரை இனிப்பு என்ற ரசாயன தன்மையை மட்டுமேதான் பெற்றிருக்கின்ற என்ற அடிப்படை கருத்தில், ஒன்றிணைப்பதைப் போலவே ஆகும்.

எனினும், உங்களுக்காக, உங்கள் கேள்விக்காக, The secret, The power என்ற அந்த நூலை படித்தேன். ரூண்டா பைரன் என்ற பெண்மணி, தன் அனுபவங்களின் அடிப்படையில், அதுபோலவே சிந்தித்து அனுபவம் பெற்ற நபர்களை சந்தித்து, அவற்றை தொகுத்து, திரைப்படமாகவும், நூலாகவும் தந்திருக்கிறார். அதில் சில உண்மைகள் பொதிந்திருக்கிறது. எனினும், அது உலகாதாய விசாரணையாகவே இருக்கிறது. பொருள்முதல்வாத உலகியலில், மனிதனின் தேவைகள் மற்றும் மனம் குறித்து விளக்கினாலும், அங்கே அதற்கான பொது தன்மையில் மட்டுமே விபரம் கிடைக்கிறது. சில ஆன்மீகம் கலப்பு இருந்தாலும், யோகமாகவில்லை. எனினும், சாராசரி மனிதருக்கு தேவையான கருத்துகள் அதில் இருப்பதை மறுப்பதற்கில்லை.

கேள் கிடைக்கும் என்ற ரீதியில் இருப்பதும், நீங்களே மகத்துவமானவர், ஈர்ப்பு விதி உங்களிடமே இருக்கிறது, செயல்படுகிறது என்பதும், நன்றியுணர்வோடு இருப்பதும், நேர்மறை எண்ணங்களோடு இருப்பதும் சொல்லப்படுகிறது. இதுகுறித்து தனியாக எதிர்க்கருத்து எனக்கில்லை. எனவே, என்னிடம் விளக்கம் எதிர்பார்ப்பதைவிடவும், நீங்கள் வெற்றி பெற்றவர்களோடு கலந்துரையாடி, உண்மை அனுபவத்தை தெரிந்து கொண்டு, உங்களுக்கான வழியை பெற்றுக்கொள்ளுங்கள். பொதுவாகவே, எதுவும் நடக்கவில்லையே? என்ற கருத்துக்கு உடனடியாக வந்துவிடவும் கூடாது. நம்பிக்கை இழக்கவும் கூடாது.

வேதாத்திரியத்தில், இறை என்ற பேராற்றலிடம், கேட்டுப்பெற மனிதனுக்கு தகுதி உண்டு என்றுதான் அறிவுறுத்தப்படுகிறது. இந்த பேராற்றலே, பிரபஞ்ச சக்தி, டோட்டாலிட்டி என்று சீக்ரெட் நூலில் குறிப்பிடப்படுகிறது. கேட்டது கிடைக்கும் ஆனால், ஏற்கனவே கேட்டுவைத்த வரிசைப்படியேதான் நடக்கும் என்பதையும் வேதாத்திரி மகரிஷி விளக்குகிறார். மேலும், உன்னை தகுதியாக்கிக் கொள்க என்று அறிவுறுத்துகிறார். அதையேதான், Fraction demand Totality supplied என்றும் சொல்லுகிறார். தன் வாழ்க்கை அனுபவத்தின் வழியாகவே, அருட்காப்பும், சங்கல்பமும் தந்திருக்கிறார். அதன் விளக்கத்தை, தன் சொற்பொழிவிலும், கட்டுரைகளிலும், கவிகளிலும், என் வாழ்க்கை விளக்கத்திலும் தந்திருக்கிறார்.

இதனோடு, சர்வ வஷ்ய தன ஆகர்ஷண சங்கல்பம் என்பதையும், நமக்கு தந்திருக்கிறார். அதன் உண்மைகளையும் நமக்கு விளக்கியிருக்கிறார். யோகத்தில் நம்மை, நான் யார்? என்று உணர்ந்தறிவது, நம்முடைய பிறப்பின், நோக்கமும் கடமையும் ஆகும். அதனோடு, அந்த ஆராய்ச்சி பயணத்தோடு, உலக வாழ்க்கையும் முக்கியம், குடும்ப கடமையும், சமூக கடமையும் முக்கியம் அல்லவா? வேதாத்திரியம் இதை வலியுறுத்துகிறது. அந்தக்காலம் போல விட்டுவிட்டு செல்வது பொருந்தாது என்றும் சொல்லுகிறது. எனினும் வேதாத்திரிய கருத்துக்கள் தனித்துவமானவை. இவற்றை, The secret, The power, law of attraction என்பதை விளக்கும் நூலின் கருத்தோடு ஒப்பிட முடியாது.

மேலும் சில உண்மை விளக்கமறிய, இந்த காணொளி உதவிடும்.

பிரபஞ்ச அறிவு என்பது என்ன? அதனோடு இணைந்து கொள்வது எப்படி ? உண்மை விளக்கம் Universal Conscious, Human

வாழ்க வளமுடன்

Do we need these planets and stars when we try to know God in the form of meditation and penance in yoga? So Astrology and horoscopes are not necessary. Our yogic journey is beyond all that. Vedathri Maharshi would have risen accordingly. If that is the case, is your karmic astrological analysis wrong? What is your response to this?


வாழ்க வளமுடன் ஐயா, யோகத்தில் தியானம் தவம் என்ற வகையில், இறைவனை அறியமுயற்சிக்கும், நமக்கு இந்த கிரகங்கள், கோள்கள், நட்சத்திரங்கள் அவசியமா? ஜோதிடம், ஜாதகம் என்பதும் தேவையில்லை தானே? அதையெல்லாம் கடந்த ஒரு நிலையில்தான் நம்முடைய யோக பயணம் இருக்கிறது. வேதாத்திரி மகரிஷியும் அதன்படிதானே உயர்ந்திருப்பார். அப்படி இருக்கும்பொழுது, உங்கள் கர்ம வினை ஜோதிட ஆய்வு தவறுதானே? இதற்கு உங்கள் பதில் என்ன?




உண்மை அறியாத நிலையில் இருந்து பார்த்தால், உங்கள் கேள்வி, மிகச்சரியான பார்வையாகவே தோன்றும். ஒருகாலத்தில், அதாவது நானும் என்னுடைய பருவ வயதில், வேதாத்திரிய தீட்சை பெற்ற காலங்களில், இப்படியாக நினைத்தது உண்டு. வேதாத்திரியத்தில் நுழைவதற்கு முன்பாகவே, ஜோதிடம் குறித்த அனுபவத்தையும், எப்படி பலன் அறிவது என்பதையும் கற்றுக்கொண்டிருந்தேன் என்பதும் உண்மை.

அதனால், நீங்கள் சொல்லுவது போலவே, நாம் கிரகங்கள், நட்சத்திரங்கள், மொத்தமான இந்த பிரபஞ்சம் என்ற எல்லை கடந்து, வெட்டவெளி என்ற இறைத்தன்மையை அறிந்து கொண்டிருக்கிறோமே?! இனி இந்த கிரகங்கள், ஜோதிடம், ஜாதகம் நம்பனுமா? என்று சிந்தித்திருக்கிறேன். அதுகுறித்து பேசியும் இருக்கிறேன். என்னுடைய மூத்த, மனவளக்கலை அன்பர் ஒருவரோடும் கலந்து பேசியிருக்கிறேன். அப்போதே அவர், ‘அப்படி இல்லை’என்று மறுதலித்தார். அதற்கு மேல் அவர் விளக்கம் அளிக்கவில்லை.

ஆனால், தொடர்ந்த என் ஆராய்ச்சியில், வேதாத்திரி மகரிஷின் பிரபஞ்ப பரிணாமும், உயிரின பரிணாமும் தலைப்பிலான, தத்துவ விளக்கத்தைக் கேட்டு, எனக்குள் அதை உணர்ந்தபொழுது, உண்மை அறிந்தேன். அதன்வழியே கிடைத்த விளக்கத்தை, என்பார்வையில் சுருக்கமாக தருகிறேன். உங்களுக்குப் புரியும் வகையில் தருவது கடினமே. எனென்றால், இதை பாடமாக தந்தால் கூட, அவ்வளவு எளிதில் புரியாது. எனினும் முயற்சிக்கிறேன்.

நீங்களும், நானும், தீடீரென்று வந்துவிடவில்லை. மாயாஜாலம் போல, யாரோ உருவாக்கி, இவ்வுலகில் விட்டுவிடவும் இல்லை. வெட்டவெளி என்ற இறைதன்மையில் இருந்து, பரமாணு உருவாகி, அது கூடி விண் என்ற பஞ்சபூத முதல் தோற்றமாகி, அதன்வழியே, மற்ற நான்கு தோற்றமாகி, கூடிக்கலந்து பிரிந்து, தோற்றங்களாக பிரபஞ்சத்தில் உலவும் கோள்கள், கிரகங்கள், நட்சத்திரங்களாகி, அதிலே ஒரு பூமியாகி வந்து நின்றது. இதுவரை நடந்த பிரபஞ்ச பரிணாமம் கடந்து, அந்த பூமியில் உயிரின பரிணாமம் நிகழ்ந்து, அந்த வழியில் ஆறாம் அறிவுநிறைந்த மனிதனாக நாம் மலர்ந்தோம்.

இத்தனை வரிசைகளை விட்டுவிட்டு, புறவழிச் சாலை (ByBass) வழியாக, நேரடியாக இறைநிலை அடைய வழியில்லை. மனிதனும், கோள்களும் அடிப்படையில் அணுக்களே. எனில், கோள்களின் அதிர்வுகள், மனிதனை வந்தடையும் என்ற உண்மையும் இருக்கிறதே?! மேலும் மனிதனின் ஆயுள் அற்பம். அதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். மனிதன் வாழ்வது, புவி என்ற சூரியனை சுற்றிவரும் மூன்றாவது கோளில் தானே? புவிக்கு துணையாக சந்திரன் என்ற கோளும் உண்டு. மூலமான சூரியனும் உண்டு. சூரியன் சந்திரன் ஒளியலைகளும் நம்மை வந்தடைகிறதே? இதை கணக்கில் கொண்டு கணிக்கும், ஜோதிடம் பொய்யாகுமா?

குழந்தை பிறக்கும் நேரத்தில், பிரபஞ்சத்தில் உள்ள நட்சத்திரம், கோள்களின் நிலை அறிவதே ஜாதகம். அதுஒரு குறிப்பேடு. அதை மறுக்கமுடியாது. விதைக்குள் அடங்கி இருக்கும் உண்மைகள் போலவே நமக்குள் சில ரகசியங்கள் உண்டு. அதை விளக்கிடும் ஒரு முயற்சியே ஜோதிடக்கலை. உண்மை திரிந்து போனது காலத்தின் கோலம்.

எனவே ஜோதிடம், ஜாதகம், என்பது தொடங்கி, கிரகங்கள், கோள்கள், நட்சத்திரங்கள், எல்லாம் உண்மையும், சரியானதும் ஆகும். வேதாத்திரி மகரிஷி ஜோதிடத்தை மறுக்கவில்லை. அதை மற்றவர்களின் பார்வைபோல, ஆதரிக்கவும் இல்லை. ஆனால், உண்மையை விளக்கி இருக்கிறார். அதனால்தான், பஞ்ச பூத நவக்கிரக தவம் என்பதையும் நமக்கு வடிவமைத்தார். அந்த வழியில்தான், நானும், ஜோதிடம் வழியாக கர்ம வினை அறியும் ஆய்வையும் நடத்தி வருகிறேன். அதன் வழியாக பலரும் நன்மை அடைந்திருக்கிறார்கள் என்பதும் உண்மை.

மேலும் நேரடியான உண்மைகளை, உங்களுக்கு தரவேண்டும் என்ற ஆர்வத்தால், வேதாத்திரி மகரிஷியே விளக்கும் உண்மைகளை காணொளியாக தருகிறேன். உண்மை அறிந்து கொள்ளுங்கள்.

வேதாத்திரிய வானியலும் சோதிடமும் - Cosmology and Astrology by Vethathiriya ( 3 Videos on this Playlist)
வாழ்க வளமுடன்.
-

In what way does Vethathiriyam support life? So what's so special about it? Isn't it a collection of spiritual truths that have already been told by many? How can it be right to call it Vethathiriyam? Are you deceiving people?


வேதாத்திரியம் எந்த வகையில் வாழ்க்கைக்கு துணை நிற்கிறது? அப்படியென்ன அதில் சிறப்பு இருக்கிறது? ஏற்கனவே பலரும் சொன்ன ஆன்மீக உண்மைகளின் தொகுப்புத்தானே? அதை வேதாத்திரியம் என்று சொல்லிக் கொள்வது எப்படி சரியாகும்? மக்களை ஏமாற்றுகிறீர்களா?


இந்த கேள்வியை வரவேற்கிறேன். வேதாத்திரியம் குறித்து சராசரி பதிவாக சொல்லுவதற்கு மாறாக, இப்படியான கேள்விக்கு பதில் தரும்பொழுதுதான், சிறப்பான உண்மையை எல்லோரும் புரிந்து கொள்ள முடியும். வேதாத்திரியம் என்பது, வேதாத்திரி மகரிஷி அவர்கள், மெய்ப்பொருள் உண்மையை உணர்ந்தறிந்த, தன்னுடைய முப்பத்தைந்து வயது முதல், தொன்னூற்றி ஆறு வயது வரை, உலக மக்களை, ஆன்மீகத்தில் உயர்வடையச் செய்து, இன்பம், பேரின்பம், அமைதி என்ற வகையில் வாழ்வதற்கு வழிவகை செய்தவர் ஆவார். இன்னமும் அவருடைய சேவை, என்னைப்போன்ற ஆசிரியர்களால் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது.

நீங்கள் சொல்லுவதுபோல, ஆன்மீக உண்மைகள் பல, இந்த உலகில் இருக்கின்றன. ஆனால் அவை எல்லாம் சிதறிப்போய், உண்மை பலவாறாக திரிந்து போய்விட்டது. காரணம் எடுத்துச் சொல்லுபவர்கள், படித்திருக்கிறார்களே தவிர, உணர்ந்தறிந்தவர்கள் இல்லை. அப்படி இருந்தாலும் அவர்கள், மிகக் குறைவே. இதனால், யார் யாரோ, ஆன்மீகத்தின் வழியாக, உண்மை சொல்கிறேன் என்று, ஒப்பித்து, மக்களை, குறிப்பாக உங்களை ஏமாற்றிவிட்டார்கள்.  இந்த கேள்வி கேட்கும் நீங்களே ஏன் இந்த சேவையை, மக்களுக்குத் தரக்கூடாது? உங்களுக்குத்தான், பலரும் சொன்ன ஆன்மீகத்தின் தொகுப்புக்கள் குறித்த விபரங்கள் தெரிந்திருக்கிறதே? அந்த தகுதி போதுமே? அதைவிட்டுவிட்டு, வேதாத்திரியத்தை குறை சொல்வானேன்?

பக்தி, ஆன்மீகம், விஞ்ஞானம் என்று திசைக்கொன்றாக, பிரிந்துபோய், உண்மையறியாமல், வாழ்க்கைச்சூழலில் சிக்கித்தவித்த மக்களுக்கு, விளக்கம் அளித்திடவே, தான் அறிந்த மெய்ப்பொருள் உண்மையை விளக்கிட, உலக சமுதாய சேவா சங்கம் என்பதை துவங்கி, தன்னுடைய பயிற்சிகளை, முப்பத்தைந்து வயதிலேயே தொடங்கிவிட்டார். கவனிக்கவும், மெய்பொருள் உண்மையை நன்கு விளங்கிக் கொண்ட பிறகுதான். ஏதோ படித்தோம், பகிர்வோம் என்றில்லை.

தன்னுடைய அனுபவ விளக்கத்தை, மிகத்தெளிவாக வேதாத்திரி மகரிஷி பதிவு செய்கிறார். பக்தி கடந்த உண்மையே ஞானம் என்று வலியுறுத்துகிறார். எனினும் பருவத்திற்கு முன்பு வரை, பக்தி அவசியம் என்றும் சொல்லுகிறார். பருவம் வந்த அனைவருமே, பிரம்மஞானம் என்ற மெய்ப்பொருள் தத்துவம் அறிந்து கொள்ள பயிற்சி வடிவமைத்தார். சித்தர்களின் வெட்டவெளி தத்துவத்தை, வற்றாயிருப்பு, பேராற்றல், பேரறறிவு, காலம் என்ற வளம் கொண்டதாக தெரிவிக்கிறார். காந்த தத்துவத்தையும், பிரபஞ்ச பரிணாமத்தையும், உயிரின பரிணாமத்தையும், உங்கள் விஞ்ஞானத்தின் துணை கொண்டும் விளக்குகிறார். நான் யார்? என்ற கேள்விகான விடையை அறியத்தருகிறார். உண்மையை அறிய திணறும் விஞ்ஞானத்திற்கு, வழியும் காட்டுகிறார். அவ்வுண்மைகளை, உலக விஞ்ஞானிகள் கூட்டத்திலும் பகிர்ந்திருக்கிறார்.

நீங்கள் உங்கள் அறிவில், எல்லாம் ஏற்கனவே இருப்பதுதானே? இருந்தது தானே? என்று நினைத்தால் அது உங்களின் அறியாமை. எனினும், வேதாத்திரியத்தில் இணைந்து, இதையெல்லாம் தெரிந்து கொள்ளுங்கள் என்று நான் அழைக்கமாட்டேன். அது உங்கள் விருப்பம். உங்களின் உரிமை. ஆனால், விளக்கத்தை உங்களுக்குச் சொல்லவேண்டியது என்னுடைய கடமை. இங்கே ஒரு அன்பரின் வாழ்க்கை அனுபவ குறிப்பு காணொளி பதிவு, மற்றொரு புரிதலை உங்களுக்குத் தரலாம். 

உறவுகளோடு இனிய வாழ்க்கைக்கு வேதாத்திரியம் - pleasant life with relatives by Vethathiriyam

வாழ்க வளமுடன்.

-

If planets and planets really affect us, then everyone in the country should be the same. How will the planets affect each human being? It's funny. But will you explain?


உண்மையிலேயே கிரகங்கள், கோள்கள் நம்மை பாதிக்கிறது என்றால், நாட்டில் எல்லோரும் ஒரே மாதிரிதானே இருக்கவேண்டும். நல்லவனுக்கு ஒருமாதிரியும், கெட்டவனுக்கு ஒருமாதிரியும் தானே நடக்கிறது? இன்னும் சொல்லபோனால், கெட்டவனுக்குத்தான் நல்ல காலமாகவும் இருக்கிறது. இதற்கும் கிரகங்கள் என்ன செய்கிறது? ஒவ்வொரு மனிதனுக்கும் அது எப்படி பாதிப்பை தரும்? வேடிக்கைதான். எனினும் விளக்குவீர்களா?

பொதுவான கேள்வி என்றாலும், விளக்கம் தரவேண்டும் என்ற நோக்கத்தில் எடுத்துக் கொள்கிறேன். உங்கள் கேள்வியில், தெளிவான புரிதல் இல்லை. கிரகங்கள் கோள்கள் குறித்த விளக்கமும் இல்லை. வாழ்கின்ற மனிதர்கள் குறித்த விளக்கமும் இல்லை. காலம் குறித்த தெளிவும் இல்லை. எல்லாவற்றிலும் கிடைத்த அரைகுறை அறிவை, அனுபவத்தில் ஒன்றாக்கி, குழப்பமாக இந்த கேள்வி கேட்கிறீர்கள். எனினும் இதற்கான பதில் இருக்கிறது.

முதலில், நீங்களும் நானும் வாழ்கின்ற, இந்த பூமி ஒரு கிரகம் தான் நினைவிருக்கிறதா? இல்லையா? இந்த பூமி, சந்திரனை தன்னோடு இணைத்துக் கொண்டு சுற்றுவதை நீங்கள் அறீவீர்களா? நம்முடைய (?!) பூமி சூரிய குடும்பத்தில் மூன்றாவதாக, 9 கோடி மைல் தூரத்தில் அமைந்திருக்கிறது. பூமிக்கு முன்பாக இரண்டு கோள்களும், பூமிக்கு அடுத்தாக மூன்று கோள்களும், ராகு கேது எனும் நிழல் கோள்களும் இருக்கின்றன. யுரேனெஸ், நெப்டியூன், புளூட்டோவும் உண்டு. ஆனால் இவை, ஜாதக அறிவியலில் இல்லை. என்ன ஜாதக அறிவியலா? ஆம்.

ஒரு விதை முளைக்க, மண்ணும், தண்ணீரும் போதும் என்று நினைத்தால் அதைவிட முட்டாள்தனம் ஏதுமில்லை. அதை விதைக்க ஒரு காலம் வேண்டும். அது வளரவும், முழுமை பெறவும், நல்ல விளைச்சலை தந்து, பூ, காய், கனி, விதை என்று வழங்கிடவும் காலம் வேண்டும். காலம் என்பது எதனால் ஏற்படுகிறது? கோள்களின் சுழற்சியால் தானே? நீங்கள் பூமியில் நிலையாக இருப்பதால், எதுவும் சுற்றவில்லை என்று நினைத்துக் கொள்வீர்களோ? பூமி தன்னையும் சுற்றுகிறது, இந்த சூரியனையும் சுற்றுகிறது. நிலவு, பூமிக்கும், சூரியனுக்கும் இடையிலே சுற்றிக்கொண்டிருக்கிறது.

வேறு எங்கும் போகவேண்டாம். அமாவாசையிலும், பௌர்ணமியிலும் உங்களுக்குள் வித்தியாசத்தை உணர்ந்திருக்கிறீர்களா? இல்லையா? இல்லை என்றுதான் ஆணித்தரமாக சொல்லுவீர்கள் என்று எனக்குத் தெரியும். சரி எது ஏனென்ய்யா கடல்நீர், கரைதாண்டி பொங்குவதும், கரை கடந்து உள்வாங்குவதும் நிகழ்கிறது? நீங்கள் யாராவது ஆள்வைத்து இதை செய்கிறீர்களா? இல்லைதானே? பெருங்கடல் இந்த பாதிப்புக்கு உள்ளாகுமானால், மனிதன் 73% நீரை தனக்குள்ளே வைத்திருக்கிறானே? அவனுக்கு பாதிப்பு ஏற்படாதா? நிச்சயமாக நீங்கள் பாதிக்கப்பட மாட்டீர்கள். நீங்கள் மட்டும் அற்புத பிறவி ஆகிற்றே?!

இப்படியாக, விளக்கிக் கொண்டே போகலாம். நாம் வாழும் இந்த பூமி, பேரண்டத்தைப் பொறுத்தவரை, மிக மிக சிறியது. அதில் வாழும் நாம் எங்கனம்? ஜூம் அவுட் செய்தால், இந்த பால்வெளி மண்டலமே சிறியது. பல கோடி நட்சத்திர மண்டலங்கள், அவை கணக்கில் அடங்கா. இன்னமும் விஞ்ஞானம், சூரியகுடும்பத்தைத் தாண்டி செல்லவே இல்லை. விஞ்ஞானத்திற்கு எட்டாததை எல்லாமே பொய் என்பது உங்கள் வாதம். ஆனால் அதில் உண்மை இருக்கிறது என்பதுதான் மெய்ஞானத்தின் வாதம். எனினும் மெய்ஞானம் கட்டாயப்படுத்துவதில்லை. புரியவில்லை என்றால் விட்டுவிடு என்றுதான் சொல்லுகிறது. இந்த காணொளி, ஏதேனும் வகையில் சில உண்மைகளை விளக்கும் என்று நம்புகிறேன்.

கோள்கள், கிரகங்கள், நட்சத்திரங்கள் நம்மை நிச்சயமாகவே பாதிப்புக்குள்ளாக்குகிறதா?

வாழ்க வளமுடன்

-

What is God really? How to know or realize? Give an explanation.


வாழ்க வளமுடன் ஐயா, இறை என்பது உண்மையில் எது? எப்படி தெரிந்து கொள்வது அல்லது உணர்ந்து கொள்வது? விளக்கம் தருக.


இறை என்ற வார்த்தையிலேயே ஓர் உண்மை இருக்கிறது எனலாம். தமிழ் மொழியின் சிறப்பு, அந்த வார்த்தையிலேயே அதனுடைய இயல்பும் இருப்பது ஆகும். இறை, என்பது எங்கும் நிறைந்து இருக்கும் ஒன்றை குறிப்பதாகும். இதை இறைந்து இருக்கிறது என்றும் சொல்லமுடியும். உதாரணமாக, உங்களிடம் உள்ள ஒரு கண்ணாடி பொருளை கீழே போட்டால் உடைந்து சிதறும் அல்லவா? கண்ணுக்குத் தெரியாத சிறு சிறு துகள்களாகவும் அவை இருக்கலாம். அவை எல்லாம் இறைந்து கிடக்கிறது எனலாம். தெரியாது ஆனால், காலை வைத்தால், ரத்தம் வரும் அளவிற்கு பாதத்தை பதம் பார்க்கும்தானே?

இந்த இயற்கையோடு, நாம் காணும் பொருட்களோடு, உயிர்களோடு, இந்த பிரபஞ்சத்தோடு ‘இறைந்து இருக்கும்’ ஒரு பேராற்றலையே ‘இறை’ என்று முன்னோர்கள் நமக்கு சொல்லிக் கொடுத்தார்கள். அதையே நாமும் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

இத்தகைய பேராற்றலை, குறிப்பாக உணர்த்தும் வகையில்தான்,  பக்தியாகவும் மலர்ந்தது. அதை ஏற்போரும் உண்டு, மறுப்போரும் உண்டு. அது அவரவர்கள் நிலைபாடும், உண்மை அறியாமையுமே ஆகும். ஆனால் இறைந்து கிடப்பது உண்மை என்பதை யாராகிலும் மறுக்கமுடியுமா? இதை மேலும், குருமகான் வேதாத்திரி மகரிஷியின் வார்த்தைகளின் வழியாகவே அறியலாம். இந்த காணொளி காண்க.

இறை என்பது உண்மையில் எது என்று உங்களுக்குத் தெரியுமா?

வாழ்க வளமுடன்

Can we receive within ourselves the cosmic energy energy? What is the way out? Does meditation and penance help with that? Give an explanation.


பிரபஞ்ச ஆற்றல் சக்தி என்பதை நாம் நமக்குள்ளாக பெற்றுக்கொள்ள முடியுமா? அதற்கு வழி என்ன? தியானம் தவம் அதற்கு உதவுகிறதா? விளக்கம் தருக.


பிரபஞ்சம் ஆற்றல் சக்தி, என்றுமே எப்போதுமே குறைவுபடமால் இருக்கக்கூடியது ஆகும். நாம் காணும், காணமுடியாத தொலைவில் இருக்கும் கோள்கள், சூரியன்கள், நட்சத்திரங்கள், நட்சத்திர மண்டலங்கள் ஆகிய அனைத்தும், தனக்குள்ளிருந்து, ஆற்றல் சக்தியை வழங்கிக் கொண்டே இருக்கின்றன. எப்படி நமக்கு, காலையில் சூரியனின் ஒளியும், இரவில் சந்திரனின் ஒளியும் நமக்கு துணையாகி, உதவுகிறதோ, அதுபோலவே, இந்த பிரபஞ்ச ஆற்றல் சக்தியும் துணையாகிறது, உதவுகிறது எனலாம்.

இந்த உண்மையை, உங்கள் பிறந்த நேர ஜாதக குறிப்பின் வழியாகவும் அறிந்துகொள்ள முடியும். ஜாதகம் என்பது மிகச்சிறந்த எடுத்துக்காட்டு எனலாம். ஆனால், ஜாதகம் என்று சொன்னதுமே, எனக்கு எதுவுமே நல்லது நடக்கவே இல்லையே? என்றுதான் சொல்லுவார்கள். அதற்கு வேறு சில காரணங்கள் இருக்கின்றன. அதை தேர்ந்த ஜோதிடர், உங்கள் ஜாதகத்தை ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்து சொல்லுவார். நாம் இங்கே, இந்த பிரபஞ்ச ஆற்றல் சக்தியை மட்டும் கவனிப்போம்.


நாம் வாழ்கின்ற இந்த பூமியும் கூட, இந்த பிரபஞ்சத்தின் ஒரு கூறு என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. பூமிக்கு அருகிலும், தூரமாகவும், வெகு தொலைவிலும் பல்லாயிரம் நட்சத்திரங்கள் இருக்கின்றன என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். இவற்றின் ஆற்றலும் சக்தியும் பூமியையும் வந்தடைகின்றன. கூடவே, நம் பூமியின் அண்டை வீட்டார்களான, சந்திரன், புதன், சுக்கிரன், செவ்வாய், குரு, சனி ஆகிய கோள்களின் ஆற்றல் சக்தியும் இணைந்துதான் கிடைக்கின்றன. இதனினும் மேலாக, ராகு கேது என்ற நிழலான, ஆற்றல் சக்தியும் கிடைக்கின்றன. ராகு கேது என்பதை, நாம் தனித்து பார்க்கவும் முடியாது. ஆனால், அவற்றின் ஆற்றல் சக்தி அபரிதமானது என்பது, பொதுவாகவே உங்களுக்கு தெரியும் அல்லவா?

இந்த பிரபஞ்ச ஆற்றல், ஓவ்வொரு, கோள்கள், சூரியன்கள், நட்சத்திரங்கள் ஆகியவற்றில் இருந்து வந்தாலும்கூட, தனித்தன்மைகளை பெற்றிருந்தாலும் கூட, எல்லாமே அதன் அதன் அளவில், ஒன்றாகவே கலந்துதான் வருகின்றன. எங்கெங்கே, எந்தெந்த பொருளில், உயிரில் மோதுகிறதோ, அந்த அளவில் தூண்டுதலை உண்டாக்குகின்றன. அவை நம்மை பொறுத்தவரையில், நன்மை தருவதாக இருக்கலாம். தீமை தருவதாகவும் இருக்கலாம். அது நம்முடைய குணாதசியம் என்ற அடைப்படை நிலையை பொறுத்தது ஆகும். அப்படியானால், இந்த அடிப்படை நிலையை மாற்றிட முடியுமா? என்ற கேள்வி எழுந்தால், அதற்கு தியானம் என்ற தவம் உதவுகிறது.

நம்முடைய உடலுக்கும், மனதிற்கும், உயிருக்கும் இத்தகைய, பிரபஞ்சம் ஆற்றல் சக்தி அன்றாடம், நொடிக்கு நொடி கிடைக்கிறது. அதை நாம் தனியாக உணர்ந்து கொள்வதற்கும் வழி இல்லாத நிலையில்தான், நம்முடைய சராசரி வாழ்க்கை நகர்கிறது. தியானத்தின் வழியாக, தவத்தின் வழியாக, மன ஓர்மை பெற்றவர்கள் மட்டுமே, இதை அனுபவ பூர்வமாக உணரமுடியும். அதுவரை அப்படியெல்லாம் வாய்ப்பே இல்லை என்று மறுத்துத்தான் பேசுவோம்.

மேலும் நம்முடிய வாழ்வின் அடிப்படைக்குக்கூட, இந்த பிரபஞ்சம் ஆற்றல் சக்தி உறுதுணையாக இருக்கிறது என்பதை, சித்தர்களும், அவர்வழி வந்தவர்களும், வேதாத்திரி மகரிஷி அவர்களும் உண்மை விளக்குகிறார்கள். பிரபஞ்சம் ஆற்றல் சக்தி இருக்கிறது, அது நமக்கு கிடைக்கிறது. நமக்குள்ளாக ஊடுறுவி நிறைகிறது. நம்மைக்கடந்தும் செல்கிறது என்பது உண்மையே!

வாழ்க வளமுடன்.

-


Is Blackhole as a Dark matter in the DNA? What is result of the bio-chemical research?


கருந்துளை எனும் கருப்பொருள், உயிர்களின் மரபணுக்களிலும் உள்ளதா? உயிர் வள விஞ்ஞான ஆராய்ச்சி என்ன சொல்லுகிறது?

Source from Hashem Al-Ghaili
  

        நாம் வாழும் காலத்தில், விஞ்ஞானம் என்ற Science (அறிவு இயல் அல்ல, விண் அறிவு அல்லது விண் ஞானம் என்பதுதான் சரியானது), பல்லாயிரம் ஆண்டுகளாக, இந்திய நாட்டின் ஆதாரமாக, திகழும் மெய்யியலுக்கு காட்சி வடிவம் கொடுக்க முயற்சிக்கிறது எனலாம். சிலர் இந்தியாவை, அவர்கள் வணிக ரீதியாக அணுகி, இங்குள்ள பல உண்மை தத்துவங்களை திருடிக்கொண்டு போய்விட்டார்கள் என்றும் சொல்லுவார்கள். அதில் எதோ சில வகையில், உண்மை இருக்கலாம். மதிப்பு வாய்ந்தது என்று எதையேனும் நினைத்தால், எனக்கு வேண்டும் என்று வைத்துக்கொள்வது, மனிதனின் இயல்பு. மேலும், அது நம்மிடம் இருக்கும் பொழுது, அவற்றை மதிப்பில்லாததாக வைத்துக் கொண்டதும், நம்முடைய தவறுதானே?

ஆனால், எப்படி ஒரு மனிதனுக்கு, தன்னளவில், அறிவு பல நிலைகளில் இருக்கிறதோ, அதுபோல, பிரபஞ்ச அறிவு என்ற ஒன்று நிலைபெற்றிருக்கிறது. எங்கே? இந்த பிரபஞ்சத்தில்! இந்த பிரபஞ்ச அறிவு, மனித உயிர்களின் அறிவை, தன்னோடு இணைத்துக் கொள்கிறது.  இதனால்தான், ‘நான் நினைத்தேன், நீ சொல்லிவிட்டாய்’ என்றும், ‘நான் இதைத்தான் செய்யவேண்டும் என்று நினைத்தேன், நீ செய்துவிட்டாய்’, என்றும், ‘இதுதான் எனக்கு விருப்பமாக இருந்தது, அதை நீ நிறைவேற்றி விட்டாய்’ என்றும் அதிசயமாக பேசிக்கொண்டு இருக்கிறோம். அதனால், இங்கிருந்து, திருடித்தான், அதை இன்னொருவர் வெளிப்படுத்த வேண்டும் என்பதில்லை. நுணுகி ஆராய்ந்து கொண்டே இருந்தால், சிந்தித்துக்கொண்டே இருந்தால், பிரபஞ்ச அறிவானது, அதற்கான விளக்கத்தை, தூண்டுதலை கொடுத்துக் கொண்டே இருக்கும். மிகச் சரியாக, அதைபற்றிக் கொண்டு உயர்ந்தால், நம் கேள்விக்கான பதிலை, சந்தேகத்துக்கான விளக்கத்தை பெறமுடியும் என்பது உறுதியே. இதெல்லாம் நம்புறமாதிரியாய்யா இருக்கு?! என்று கேள்வி எழுப்புவோருக்கு, இதில் எந்த புனைவும், மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், எல்லாம் பொய், கட்டுக்கதை, ஏமாற்றுவித்தை என்போருக்கு, தனியே எந்த விளக்கமும் இல்லை.

இனி, இன்றைய, விஞ்ஞான ஆராய்ச்சியின் ஒரு விளக்கத்தை இங்கே காண்போம். விஞ்ஞானம், மெய்யியலை விரும்புவதும், அணுகுவதும் இல்லை. ஏனென்றால், விஞ்ஞானத்திற்கு எப்போதுமே, கருத்துக்கு நிகரான காட்சி, உருவம், வடிவம்  வேண்டும். அப்போதுதான் நம்பும். மெய்யியலை பொய்யியல் என்றுதான் நம்மில் பெரும்பாலோரும் சொல்லுகிறோம் அல்லவா? இந்த விஞ்ஞானம், தனக்கு புரியாத இரண்டு உண்மைகளை, விளக்க முயற்சித்து, தோற்றுக்கொண்டே இருக்கிறது, அந்த தோல்வியை ஏற்றுக்கொள்ளவும் அதற்கு விருப்பமில்லை, தள்ளிப்போட்டுக்கொண்டே நகர்கிறது, இன்னும் நகரும். சரி, அது என்னாய்யா அந்த இரண்டு? அது பொருள் மற்றும் ஆற்றல் (Matter and Power). இரண்டும் இருக்கிறது. ஆனால் அதன் மூலம் நாம் அறியோம் என்று கைவிரிக்கிறது. இன்றைய பதிவு, அந்த விஞ்ஞானம், கண்டுபிடித்த ஒரு ஆராய்ச்சியை விளக்க முயற்சிக்கிறது. காண்போம்.

உயிரியல் கருப்பொருள் (Dark Matter) - ஒவ்வொரு உயிரினத்தின் மரபணுக் குறியீட்டிலும் இருண்ட பொருள் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். எந்த அளவுகளில் என்றால், நமது முழு மரபணுவிலும், புரதங்களுக்கான டிஎன்ஏ குறியீடுகளில் 1 முதல் 2% மட்டுமே நிரம்பியிருக்கிறது. மீதமுள்ள 98% மரபணு எதற்கும் குறியிடாது, இடமாக மட்டும் இருக்கிறது. இதை வெறுமை (Emptiness) என்று சொல்லுவார்கள். நான் அறிந்த, அன்பர் ஒருவர், இடமாக இருக்கிறது (Spaceness) என்கிறார்.

இந்த பெரிய அளவிலான, காலி இடமான, மரபணு குறியீடு, டிஎன்ஏவின் டார்க் மேட்டர் என்று குறிப்பிடப்படுகிறது. இந்த உயிரியல் இருண்ட பொருளில், குறியீட்டு அல்லாத டிஎன்ஏ மற்றும் ஆர்என்ஏ பகுதிகள் அடங்கும். இந்த DNA வரிசைகளின் சரியான செயல்பாடு அல்லது அவை ஏன் நமது மரபணுவில் உள்ளன? என்பது யாருக்கும் தெரியாது. 

மரபணு வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்த, இந்த குறியீட்டு அல்லாத டிஎன்ஏ உதவியாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். அருகிலுள்ள மரபணுக்கள் எவ்வாறு வெளிப்படுத்தப்படுகின்றன? மற்றும் எந்த வகையான உயிரணுக்களில் இது பாதிக்கிறது? என்பது ஆய்வில் இருக்கிறது.

இந்த இருண்ட பொருளில், ஆயிரக்கணக்கான புரோட்டீன் அல்லாத குறியீட்டு மரபணுக்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர், ஆனால் அவற்றின் செயல்பாடுகள் அல்லது நோய் தாக்கத்தில், அவற்றின் பங்கைப் புரிந்து கொள்ளவில்லை. மனிதர்கள், எலிகள் மற்றும் கோழிகள் போன்ற பல்வேறு உயிரினங்களில், இந்த இருண்ட பொருளின் சில பகுதிகள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருக்கும் என்பதையும் கண்டறிந்திருக்கிறார்கள்.

200 மில்லியன் ஆண்டுகளுக்கும் மேலாக நாம் உருவாகி வருகிறோம் என்பதைக் கருத்தில் கொண்டு, இந்த மரபணு வரிசைகள் நமது உயிர்வாழ்வதற்கு இன்றியமையாததாக இருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

குறியிடப்படாத பகுதியிலிருந்து, இந்த நான்கு மரபணுக்களை ஆராய்ச்சியாளர்கள் நீக்கியபோது, ​​ எலிகளின் மூளையில் அசாதாரணங்களை அவர்கள் கண்டறிந்தனர், டிஎன்ஏவின் இந்த குறியீட்டு அல்லாத, டார்க் மேட்டர் பிரிவில் உள்ள பிறழ்வுகள், அல்சைமர் போன்ற மூளை நோய்களுக்கு காரணமாக இருக்கலாம் என்று பரிந்துரைத்தனர்.

இன்னொரு ஆராய்ச்சியின் முடிவாக, நமது இரைப்பைக் குழாயில் காணப்படும் சுமார் 40% முதல் 50% வரையிலான மரபணு தகவல்கள், எந்த விலங்கு, தாவரம், பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை அல்லது மனிதர்களுக்கு முன்னர் வகைப்படுத்தப்பட்ட அல்லது அறியப்பட்ட எந்த வகையான உயிரினங்களுடனும் பொருந்தவில்லை என்று அறியப்படுகிறது.

அன்பர்களே, இந்த ஆராய்ச்சியின் மூலக்கட்டுரை உதவி, Hashem Al-Ghaili. இணையத்தில் கிடைப்பதால், நீங்களும் நேரடியாகவும் தெரிந்து கொள்ளலாம். இந்த ஆராய்ச்சி விளக்கங்கள், நமக்குள்ளும் சில கேள்விகளை எழுப்புகின்றன. உண்மைதானே?

வாழ்க வளமுடன்.

-


Do planets affect an individual's living environment? Changing? What is the truth?


கிரகங்கள் தனி மனிதனின் வாழ்க்கைச் சூழலை பாதிக்கிறதா? மாற்றுகிறதா? உண்மை என்ன?


இதை ஒரு நீண்ட, விளக்கத்தின் வழியாகவே காணலாம். இல்லையேல், உங்களுக்கு, சரியான புரிதல் கிடைக்காது என்பது உறுதி. நாம் வாழும் இந்த புவியும் ஒரு கிரகம்தான் என்பதை மறந்து விடக்கூடாது. மேலும் முக்கியமாக, நாம் நிலத்தில் நிலையாக வாழ்வதாகவே ஒரு கற்பனையில் இருக்கிறோம். ஆனால் உண்மை என்ன? நாம் பிறந்தது முதல், வாழ்க்கையின் முடிவுவரை, நாம் பயணித்துக்கொண்டே இருக்கிறோம். எங்கே? இந்த பிரபஞ்சத்தில், நாம் அறியமுடியாத ஏதோ ஒரு இலக்கு நோக்கியே. இதை எப்படி அறியலாம்? மிக எளிமையாக, சூரியன் கிழக்கில் உதிப்பதும், மேற்கில் மறைவதும் போதுமானது. உண்மையிலேயே, சூரியன் கிழக்கிலிருந்து மேற்காக நகர்கிறதா? என்று கேட்டால், ஆம் என்பது உங்கள் பதிலா? அப்படியானால் நீங்கள், மாய உலகில் இருக்கிறீர்கள்.

உண்மை என்ன? நாம் வாழ்கின்ற பூமிதான், வடக்கு தெற்கை அச்சாக கொண்டு, மேற்கிலிருந்து கிழக்காக, தனக்குத்தானே சுற்றிக்கொண்டு இருக்கிறது. கூடுதலாக சூரியனோடு இணைந்து, சூரியனை அச்சாக கொண்டு, சூரியனையும் சுற்றுகிறது. இந்த உண்மையை நன்கு விளக்கமாக்கிக் கொள்ளவேண்டியது அவசியம்.

நாம் வாழும் பூமியோடு, கூடுதலாக பூமியை சுற்றும் சந்திரனையும் அறிந்து கொள்க. மேலும் சூரிய குடும்பத்தில் பூமி, மூன்றாவது கிரகம். நாம் வாழும் இந்த பூமியோடு, புதன், சுக்கிரன், செவ்வாய், குரு, சனி ஆகிய கிரகங்களும் இணைந்து சுற்றி வருகின்றன. சனிக்கு அடுத்தும் நெப்டியூன், புளூட்டோ இரண்டு கிர்கங்கள் இருந்தாலும், அதனுடைய தூரம் காரணமாகவும், பலமில்லாத அலைகள் கொண்டிருப்பதால், இந்திய ஜோதிடத்தில் இணைத்துக் கொள்ளவில்லை. இந்த இடத்தில், ‘இல்லை அவை கண்டுபிடிக்கபடவில்லை, பிறகுதான் அதை விஞ்ஞானம் கண்டுபிடித்தது’ என்று ஒருவர் சொன்னால், அது அவரின் அறியாமை. சாதாரண கண்ணுக்கு தெரியாமல் இருக்கும் நட்சத்திரங்களை எப்படி இணைத்தார்கள்? அப்படியானால் அதெல்லாம் பொய்யா? அல்லது அப்போதே விஞ்ஞானம் இந்த, நட்சத்திரங்களை கண்டுபிடித்து அவர்களுக்குச் சொன்னதா? இதற்கு உங்கள் விடை என்ன?

இப்போது, உங்கள் கேள்வியின், பதிலுக்கு வருவோம். இப்படி தானும் சுற்றிக்கொண்டு, சூரியனை சுற்றிக்கொண்டே இருக்கும் கிரகங்கள், தன்னிலிருந்து அலைகளை வீசிக்கொண்டே இருக்கின்றன. இன்னொரு அதிசயம் என்னவென்றால், நாம் நிலையாக இருக்கிறது என்று எண்ணிக்கொண்டிருக்கும், சூரியனும், தன் குடும்பத்தை எடுத்துகொண்டு, நகர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில்தான் நட்சத்திரங்களின் அலைகளும் மாறிக்கொண்டே இருக்கின்றன. நட்சத்திரங்களும் கிரகங்கள்தான். வெகுதூரத்தில் இருப்பதால், அதை நட்சத்திரங்கள் என்கிறோம்.

இந்த அலைகள் எல்லாமே ஒன்றோடு ஒன்று கலந்து, அதன் தூரம், அருகாமை என்கிற வகையில், பூமியை வந்தடைகிறது. பூமியும் ஓரளவில் பாதிப்படைகிறது எனினும், அதை நாம் உணர்வதில்லை. ஆனால் பூமியில் வாழும் நமக்கு, அந்த அலைகள், தனித்தனியாக, ஒரு தூண்டுதலை ஏற்படுத்துகிறது. ஏன்? மனிதன் முதற்கொண்டு எல்லா உயிரினமும், எல்லா பொருட்களும், அணுக்களால் ஆனவையே. காணும் பொருட்களெல்லாம் அணுக்களின் கூட்டு, காண்கின்ற நாமும் அணுக்களின் கூட்டுத்தான். இதில் உங்களுக்கு சந்தேகம் உண்டா?

இதில், மனிதனுக்கு எப்படி, தனியான பாதிப்பை கிரகங்கள் ஏற்படுத்துகின்றன? என்று சிந்தித்தால், உயிரின பரிணாமம் என்ற முதல் நிலைக்கு நாம் கவனம் செலுத்த வேண்டும். Evaolution என்று சொல்லப்படும் ஒன்றன் பின் ஒன்றான, சங்கிலித்தொடரான பரிணாமத்தில், உடலின், உடலுக்குள்ளாக அந்தந்த உறுப்புக்களின், உயிரின், மனதின் உருவாக்கத்தில், தனித்தனியான கிரகங்களின் பங்கும் முக்கியமானதாக இருக்கிறது. இதை ஜோதிடத்தின் அடிப்படையிலேயே அறிந்து கொள்ள முடியும். நாம் பிறக்கும் பொழுது, ஆங்காங்கே இருக்கக்கூடிய கிரகங்கள், ஒரு பதிவை தருகின்றன. அதை நாம், நம்முடைய ஜாதகமாக எழுதிக்கொள்கிறோம். அன்றிலிருந்து, நமக்கு ஏற்படும் தூண்டுதல்களில், நம் செயல்பாடுகள் இருக்கின்றன.

இந்த தூண்டுதலை புரிந்து, அறிந்து அதற்கு விளக்கமான பாதையில், நாம் வாழ்வதற்கு பழகிக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இல்லையேல், உங்கள் வாழ்க்கைச் சூழல் மாற வாய்ப்புள்ளது. அதுபோல பாதிக்கப்படவும் செய்யும். மாறுதல் கொள்ளவும் செய்யும். உங்கள் ஜாதகம், உங்களுக்கான கையேடு என்பதை மட்டும் நினைவில் கொள்க. ஆனால் அது உங்கள் தலையெழுத்து என்று நம்பி விடாத விழிப்புணர்வு தேவை.

வாழ்க வளமுடன்.

-


Can Yoga Bring Physical and Mental Health? Doesn't medication solve that? Part 02


உடல் நலம், மன வளம் யோகத்தால் கிடைத்துவிடுமா? மருந்துகள் அதை தீர்க்காதா? உண்மை என்ன? Part 02


இயக்கம் என்பது, இந்த பிரபஞ்சத்தில் எப்படி இருக்கிறதோ, அதுபோலவே, அந்த பிரபஞ்சத்தில் இருக்கிற எல்லாமே, அதனுள் அடங்கிய எல்லாமே, இயங்கிக் கொண்டிருக்கிறது. கல் மண் உலோகம் போன்ற ஜடப்பொருளும் அணுக்கூட்டங்களால் இயங்குகிறது. அதுபோலவே, மரமும், புழுவும், எல்லா உயிரினங்களும், மனிதன் உட்படவும் அணுக்களின் கூட்டே. அவ்வணுக்களும் இயங்கிக் கொண்டே இருக்கிறது. இதை இயற்கை. அந்த வகையிலேதான், ஜீவன்களின் உடலுறுப்பும் இயங்கிக்கொண்டே இருக்கின்றன. மனிதனைத்தவிர, மற்றெல்லா உயிரினங்களும், தன் இயற்கை இயல்பை விட்டுவிடவில்லை. இன்னும் மாறாமல், இயற்கையோடு உறவாடிக்கொண்டு, அந்த இயற்கை நீதிக்கு பொருத்தமாகவே வாழ்கின்றன.

மனிதன், ஆறாவது அறிவின், சிந்தனை எழுச்சியால், பலவகைகளில் உந்துதல் பெற்று, இயற்கையின் எல்லைகளை மீறிவிடுகிறான். இதனால், தன்னை வித்தியாசப்படுத்திக் கொள்கிறான். பிரபஞ்சத்தின், இயற்கையின் ஒருபகுதி நான் என்பதை அறியாமல், தானே உயர்வானவன் என்ற தன்முனைப்பு கருத்துக்கு வந்துவிடுகிறான். இக்கருதாக்கம், அவனை, இயற்கைக்கும், பிரபஞ்சத்திற்கும் விரோதமாக செயல்பட வைக்கிறது எனலாம். மனிதனின் ஆறாம் அறிவின் எழுச்சி, மனித பரிணாமத்தின், வளர்ச்சிக்கும் உதவுகிறது என்பதில் ஐயமில்லை. ஓவ்வொரு நாளும், விஞ்ஞானமும், மருத்துவமும், வானியலும் வளர்ந்துகொண்டே இருக்கிறது. கடல் நீர் சூழ்ந்த நிலப்பரப்பில், எல்லா உயிரினங்களும், எல்லைகளற்று இருக்கையில், மனிதன், தான் வாழும் நிலப்பரப்பிலும், தன் மனதிலும் எல்லைகளை வகுத்துக்கொண்டு வாழ்ந்து வருகிறான். இந்நிலை மாறிடவே, சித்தர்களும், யோகியரும், மகான்களும் முயன்றார்கள். பக்தியிலும், யோகத்திலும் மனிதனை உயர்த்திட வழி காட்டினார்கள், இன்னும் வழி காட்டிக்கொண்டே இருக்கிறார்கள். வேதாத்திரி மகரிஷி, தன் வாழ்நாளில், உலக சமாதனமும், ஓர் உலக கூட்டாட்சியும் அமையவேண்டும் என்ற நோக்கத்தோடு வாழ்ந்து, அதற்கான வழிமுறைகளையும், திட்டங்களையும் வகுத்துத் தந்தார். இன்னும் நூற்று ஐம்பது ஆண்டுகளில் நிழந்திடும் என்றும் உறுதி அளித்திருக்கிறார்.

மனிதனின், இயற்கையை மீறிவிட்ட வாழ்க்கை முறைதான், அவனுக்கு பலவித தொல்லைகளை உருவாக்குகிறது. மனம் இதனான மனிதன், அந்த இதம் என்ற அமைதி, பொருத்தம், நிலைபாடு, சமநிலை ஆகியவற்றை இழந்துவிட்டான் என்று சொல்லலாம். ஆனால், மனிதனை மனிதனே இப்படி சொல்லிக் கொள்ளலாமா? என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது. பொதுவாக, ஒரு மனிதன், தன்னுடைய உடல், மனம், உயிர் இயக்கத்தால்தான் வாழ்கிறான். ஆனால் உடல் இயக்கம் ஏதுமில்லாமல், வெறுமனே வாழ தயாராகிறான். மனமும், உயிரும் இயற்கையாக இயங்கும் பொழுதும், உடல்சார்ந்த உறுப்புக்களும்  இயற்கையாக இயங்கும் பொழுதும், உடல் இயக்கம் இல்லாது தடுமாறுகிறான். இதனால் உடலும் கெட்டு, உடலுறுப்பும் கெட்டு, வாழ்நாளை சுருக்கிக் கொள்கிறான்.

அக்கால மருத்துவ முறைகளும், இயற்கை மருத்துவமும், பாரம்பரிய மருத்துவமும், நவீன மருத்துவமும் உதவினாலும்கூட, மனிதனுக்கு முழுமையான தீர்வு இல்லை. உடலையும், உடலுறுப்பையும் தானாகவே சரி செய்திடும் அமைப்பும், சிறப்பும், இயற்கையாகவே உண்டுதான் எனினும், அதற்கான வாய்ப்பை மனிதன் இழக்கிறான். இயற்கையின் வினை விளைவு நீதி தெரியாமல், தானாகவே வலிந்து போய், சிக்கிக் கொள்கிறான். முக்கியமாக, மனிதனான, தன்னுடைய பிறப்பின் உண்மையை, அதிசயத்தை, பெருமையை, சிறப்பை, மகத்துவத்தை அறியாமலேயே, என்ன என்று புரிந்து கொள்ளாமலேயே, அதை உணராமலேயே இறந்தும் விடுகிறான். இதில் வேடிக்கை என்னவென்றால், பிறந்தவர் இறப்பார் என்று தத்துவத்தை அவனே சொல்லிக்கொள்வான். பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் கொஞ்ச காலம் நிலைத்திருக்கும், வாழ்நாளையும், வாழ்க்கையையும் ஆராய்ந்திட மாட்டான்.

இதனால், மருந்துகள் அவனுக்கு உதவாத நிலையை அடைந்துவிடுகிறான். எதாவது பிரச்சனை என்றால், பாதிக்கப்பட்ட அந்த உறுப்பை அகற்று என்பது, வழக்கமான மருத்துவ முறையாக வந்து நிற்கிறது. மருந்துகளால் சரி செய்யப்படுகின்ற, ஆரம்பகால கவனிப்பும், அக்கறையும் மனிதனுக்கு தெரியவில்லை. அதை மறந்தும் விட்டான்.  இயற்கையாக சரி செய்துகொள்ளும் வழக்கமும், பழக்கமும் கூட அவனுக்கு இல்லை. இந்த நிலையில்தான், யோகம் அவனுக்கு உதவ துணை நிற்கிறது எனலாம்.

யோகம் என்பது, மனதை செம்மைபடுத்தும் ஓர் பயிற்சி. வேதாத்திரி மகரிஷி மிகப் பொருத்தமாக, மனவளக்கலை என்ற தமிழாக்கத்தை அதற்கு தந்திருக்கிறார். இதுவரை மனிதன் விட்டு விலகிய பாதையில், அவனை அழைத்துச் செல்வதற்கு, யோகம் மட்டுமே உதவும். ‘தேடுவதை விட்டுவிட்டால், தேடும் பொருள் அங்கேயே இருக்கும்’என்று, உண்மை விளக்கமாக, வேதாத்திரி மகரிஷி சொல்லுகிறார். இன்னொரு உதாரணமாக, தேவையற்ற பகுதிகளை, ஒரு பாறையில் இருந்து, அகற்றும் பொழுதுதான், அந்த பாறையின் உள்ளாக, மறைந்திருந்த சிலை, வெளிப்படுகிறது. அதுபோல, தவறுகளை திருத்திவிட்டால், இயல்பு அங்கே இருப்பதை அறியலாம். அதை காத்தும் வரலாம்.

மனவளக்கலை யோகமும், அதன் வழியாக தரும் எளியமுறை உடற்பயிற்சியும், இருக்கும் நோய்க்கும், பாதிக்கப்பட்ட உடலுறுப்புக்கும் தீர்வு அல்ல. ஆனால் வருமுன் காப்பதில், அதற்கு நிகர் ஏதுமில்லை என்பதை புரிந்து கொள்ளலாம். நீங்கள், அன்றாட வாழ்வுக்கு வாங்கும் பொருளை, கவனமாக கையாண்டால், வாழும் நாள்வரை உபயோகிக்கலாம் அல்லவா? அதுபோலவே, உங்கள் உடலையும், உடலுறுப்பையும் காத்துவந்தால், உங்களுடைய வாழ்நாள் முழுவதும் நிறைவாக வாழலாம். இதனாலேயே, பருவம் வந்த அனைவருமே, மனவளக்கலை யோகம் மற்றும் எளியமுறை உடற்பயிற்சி கூடுதலாக காயகல்பம் கற்ற வேண்டும் என்று, வேதாத்திரி மகரிஷி வலியுறுத்துகிறார்.

வேதாத்திரி மகரிஷியின் வாழ்க்கையை, பெரும்பாலும் ஆராய்ச்சிக்கே பயன்படுத்தினார். காயகல்ப யோகம் எனும் பயிற்சியை, அவர் முழுமையாக்கிய பொழுது, ‘இதன் முழுமை எனக்கு இப்போதுதான் கிடைத்தது, முன்னமே கிடைத்திருந்தால், நானும் அப்பொழுதே கற்றிருப்பேன்’ என்று சொல்லியிருக்கிறார். அப்படி கிடைத்த அற்புதமான பயிற்சியை, நாம் கைவிடுகிறோம். செய்ய நேரமில்லை என்று ஒதுக்கி தள்ளுகிறோம். 

இனியும் வருத்தம் தேவையின்றி, ஒரே முடிவாக, நீங்கள் எந்த வயதினராக இருந்தாலும், யோகத்தில் இணைந்து கொள்ளுங்கள். பயிற்சிகளை தொடருங்கள். உங்களுக்கும், இயற்கைக்கும் உள்ள இணைப்பை உறுதி செய்யுங்கள். முரண்படாத வாழ்க்கையை வாழத் தொடங்குங்கள். சிலநாட்களில் விளக்கமும், உறுதியும் பெறலாம். உடல் நலம், மன வளம் யோகத்தால் கிடைத்துவிடுகிறது என்ற உண்மையை, நீங்களே அறிந்து கொள்ளலாம்.

வாழ்க வளமுடன்.

Can Yoga Bring Physical and Mental Health? Doesn't medication solve that? Part 01


உடல் நலம், மன வளம் யோகத்தால் கிடைத்துவிடுமா? மருந்துகள் அதை தீர்க்காதா? உண்மை என்ன? Part 01


வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதனுக்கு, ஒவ்வொரு நாளும் புதிது. இந்த ஒருநாள் என்பது, அவன் தூங்கத்தில் இருந்து விழுத்து எழுவதை சொல்லலாம். ஆர்பரித்த புயல், அடங்கி அடுத்ததாக ஒரு புதிய ஆர்பரிப்புக்கு தயாராவது போல, மனிதன் ஒருநாளில் களைத்து, சோர்ந்து, தூங்குகிறான், தூங்க முயற்சிக்கிறான். மறுநாளில் கண்விழித்து எழுகிறான். அவனுக்கான புதிய நாள் காத்திருக்கிறது. இது தினமும் நிகழும் ஒரு இயற்கை நிகழ்வு. ஆனால், உண்மை என்ன? நொடிக்கு நொடி எதுவுமே, பழசில் இல்லை. அது தன்னில் இருக்கும் பழசை உதிர்த்துக்கொண்டே, புதிதாக மலர்ச்சியை பெற்றுக்கொண்டே இருக்கிறது.

இந்த பூமி, நொடிக்கு ஆயிரம் மைல் வேகத்தில் சுழன்று, பதினைந்து லட்சம் மைல் தூரம் நகர்ந்து கொண்டே இருக்கிறது. இதை எதற்காக, இவ்வளவு தெளிவாக சொல்லப்படுகிறது என்றால், எதுவுமே புதிதாக மாறிக்கொண்டே, நிகழ்ந்துகொண்டே இருக்கையில், மனிதன், தன்னை பழசில் தான் இணைத்துக் கொண்டிருக்கிறான். அதை மாற்றிக்கொள்ள விருப்பமின்றி, அதிலே தங்கி நிற்கிறான். பிரபஞ்சத்தின் மலர்ச்சியோடு, தன்னை இணைத்துக் கொள்வதில்லை. இணைத்துக் கொள்ள விரும்புவதும் இல்லை.

ஒரு மழை பொழிந்து, ஓடுகின்ற மழைநீர், ஓடி மண்ணில், ஊறி, மறைந்துபோனால் அது மிக இயல்பானது. ஆனால் எங்கேயாவது, தேங்கி நின்றால், மண்ணும், நீரும் கலந்து, மற்றொரு வளர்ச்சிக்கு ஆளாகிவிடும். நீர் தேங்குதல், சிறு பூச்சிகள், புழு, கொசு என்று பலவித உயிர்களை தோற்றுவிக்கும். பாசம் பிடித்து சிறுசெல் பூச்சிகளும் உருவாகும். மனிதர்களுக்கு ஒவ்வாத பல பிரச்சனைகள் அங்கிருந்து உருவாகும். அதுபோலவே, மனிதன் தேங்கி நின்றால், பலவித உடல், மன பிரச்சனைகளுக்குள் சிக்குகிறான்.

முதலில் மன நலம் பாதிப்பும், அதன்வழியே உடல் பாதிப்பும், உடலுறுப்பு பாதிப்பும் நிகழும், அதேவேளையில் முதலில் உடல் பாதிப்பும், உடலுறுப்பு பாதிப்பும், அதன்வழியே மன நலம் பாதிப்பும் நிகழக்கூடும். மனித நோய்களின் அடிப்படை இதுதான். இதை வருமுன் காக்கவே உடற்பயிற்சி, மனித வாழ்வின் கலாச்சாரமாக உருவானது. அன்றாட வேலைகளும் கூட, உடற்பயிற்சிக்காகவே உருவாக்கமும் செய்யப்பட்டன. உடல் உழைப்பு இல்லாத மனிதன், நோய்க்கு இடம் தருகிறான் என்பது நிருபிக்கப்பட்ட உண்மை தானே?

உடலுக்குள் ஓடிக்கொண்டே இருக்கும் காற்று, வெப்பம், ரத்தம் இவற்றின் ஓட்டம் சீராக இருக்க வேண்டியது மிக அவசியம். அதற்கு ஈடாக, உடலுறுப்புக்கள் இயல்பாக, இயற்கையாக செயல்படும். இதற்கு வழியும், உறுதுணையும் தர, உடலை தகுந்த அளவில், இயக்குவதும் முக்கியம் அல்லவா? ‘நான் எதுவும் செய்யமாட்டேன். ஆனால் நான் நலமாக இருக்கவேண்டும்’ என்று நினைப்பதும், வாழ்வதும் எப்படி சரியாகும்? இந்த நிலையில்தான், வாழ்வில் உடற்பயிற்சி அவசியமாகிறது.

இப்படி மாற்றத்தை செய்யாமல், உடலில் சோர்வு, வலி, நோய் என்று வரும்பொழுதுதான், மரு உந்து என்ற மருந்து அவசியமாகிறது. உடலின் குறைபாட்டின் அடிப்படையிலே, மருந்தின் தன்மையும், வீரியமும், அளவும், எடுத்துக்கொள்ளும் காலமும் மாறுபடும். இந்த கருத்தின் மற்றொரு வகையில்தான், யோகம் என்பதும் உதவுகிறது. 

அடுத்த பதிவில் தொடர்ந்து காண்போம்.

வாழ்க வளமுடன்.

-

Is the human fate on the Horoscope or astrology chart and available solution for that?


ஜாதகத்தின் வழியாக தலையெழுத்து என்பதை நாம் பார்க்கமுடியுமா? அது உண்மைதானா? அதற்கு பரிகாரமும் உள்ளதா?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா! ஜாதகத்தின் வழியாக தலையெழுத்து என்பதை நாம் பார்க்கமுடியுமா? அது உண்மைதானா? அதற்கு பரிகாரமும் உள்ளதா?


பதில்: 

வானியலில் சூரியன், நிலவு இவற்றின் அருகாமையையும், தூரத்தில் தெரியும் கோள்களையும் நட்சத்திரங்களையும் கண்டு மகிழ்ந்த மனிதன், அவற்றின் ஒளியையும், அவற்றின் அலைகளையும் அது தரும் தூண்டுதலையும் அறிந்து தொகுத்து தந்த விளக்கமே ஜோதிடம் ஆகும். பன்னெடுங்காலமாக, பல குறிப்புகள் வழியாக, ஜோதிட உண்மைகள் உலகில் நிலவிவருகிறது. ஜோதிடம் பெருங்கடல் என்று சொல்லுவார்கள். அதுபோலவே முழுமையாக எல்லாமே அறிந்த சோதிடர் என்று யாரையும் குறிப்பிட்டுச் சொல்ல வழியின்றி, அவரவர் அவர்வாழ்வில் கற்றுத்தேர்ந்த நிலையில்தான், ஜோதிட உண்மைகளை சொல்லிவருகிறார் என்பதுதான் உண்மை. பெரும்பாலான ஜோதிடர்கள் கற்றுக்கொண்டேதான் இருக்கிறார்கள் என்பதையும் சொல்லவேண்டும். 

ஒரு ஜோதிடம் என்பது, குழந்தை பிறக்கும் நேரத்தில், பூஉலகைச் சுற்றிலும் அமைந்திருக்கும் கிரகம், கோள்கள், நட்சத்திரங்களின் நிலை ஆகும். இதில் கரு உருவான நாள் முதலாகவே அவற்றின் அலைவீச்சு துவங்கிவிடுகிறது என்பதையும் நாம் அறியமுடியும். ஒவ்வொரு ஜாதகத்திலும் கர்ப்பச்செல் என்ற கணக்கின் வழியாக இதை, ஜோதிடர்கள் குறிப்பார்கள். இந்த குறிப்புகள் வழியாக, எங்கும், எவ்விடத்திலும் அக்குழந்தையின் ‘தலையெழுத்து’ என்று எதுவும் இல்லை. அப்படியான தாக்கங்களை  கிரகம், கோள்கள், நட்சத்திரங்கள் தருவதும் இல்லை. தலையெழுத்து என்பது இல்லையானால், எல்லாமே பொய்தானே? என்ற எதிர்கேள்விக்கும் இங்கே இடமில்லை. மண்ணில் விதைக்கும் எந்த ஒருவிதைக்கும் கூட, எங்கோ இருக்கும் கோள்களும், நட்சத்திரங்களும் தூண்டுதலை தருகிறது என்று நிரூபிக்கிறார்கள் என்பதை நாம் அறிவோம்.

ஒரு குழந்தையின் ஜாதக குறிப்பின் வழியாக, அக்குழந்தையின் இயல்பு, குணாதசியம், வளர்ச்சி என்பதை சொல்லமுடியும். அடிப்படையாக அக்குழந்தையின் ‘அக நிலை’ என்ன என்பதையும் சொல்லமுடியும். குழந்தை பிறந்த அந்த குடும்பத்தின், பரம்பரையின் சூழல் யூகமாக சொல்லவும் முடியும். கர்மா என்றா வினைப்பதிவுகளின் தொடர்ச்சியை கணித்தும் சொல்லமுடியும். என்ன மாற்றங்களை கற்றும், பழகியும், உலகியலில் நன்மையை பெறலாம் என்பதையும் சொல்லமுடியும்.

அந்த வகையில், ஒரு குழந்தையின் தலையெழுத்து, ஜோதிடத்தில் இல்லை. பரிகாரம் என்பதும் இல்லவே இல்லை. மனதிற்கு திருப்தி அளிப்பதாக, அந்த நேரத்திற்கு ஏதெனும் செய்யலாமே தவிர, வேறெதும் நன்மை இல்லை. பரிகாரம் என்பதால் எந்த மாற்றமும் நிகழ்ந்துவிடுவதில்லை. செயலுக்கு தகுந்த விளைவு என்ற இயற்கையின் நீதியில் இருந்து, தப்பிக்க எந்த வழியும் இல்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

        ஜோதிடம் என்பது ஒரு குறிப்பு. ஒரு திட்ட வரையறை. இயற்கையின் பிரித்தறியமுடியாத, ஒரு பாகமாகவே உலகில், தாவரம் முதல் மனிதன் வரை எல்லா ஜீவன்களும் பரிமாற்றம் பெற்றவை என்பதை மறவாதிருங்கள். அந்த நிலையில் மனிதனுக்கு தன்னுடைய ஆறாம் அறிவின் முழுமையில் கிடைத்த ஒர் ஆராய்ச்சி தான் இந்த ஜோதிடம். இதை தவறாக பயன்படுத்துவோர் ஏராளம். அவர்களை அவர்கள் வழியிலேயே விட்டுவிடுவோம்.

வாழ்க வளமுடன்.

-

What is the meaning of twin seven worlds?


பூமிக்கு மேலேயும், பூமிக்கு கீழேயும்  ‘ஈரேழுலுலகம்’ என்று சொல்லியுள்ளார்களே, அதைப் பற்றித் தங்கள் கருத்தென்ன?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, பூமிக்கு மேலேயும், பூமிக்கு கீழேயும் ‘ஈரேழுலுலகம்’ என்று சொல்லியுள்ளார்களே, அதைப் பற்றித் தங்கள் கருத்தென்ன?


வேதாத்திரி மகரிஷி அவர்களின் பதில்:

நாம் வசிக்கும் பூமியில் இருந்து சூரியனை நோக்கிய வரிசையில் பூமி, சந்திரன், சுக்கிரன், புதன், சூரியன், ராகு, கேது ஆகிய ஏழு கோள்களின் வரிசை அமையும். இதை மேலேழுலகம் என்றார்கள் முன்னோர்கள்.

பூமியிலிருந்து மறுபக்கம் நோக்கினால் செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்சியூன், புளூட்டோ ஆகிய ஆறு கோள்களும் உள்ளன. அதற்கப்பால் சுத்தவெளிதான் உள்ளது என்றெண்ணிய முன்னோர்கள் ஏழாவதாக உள்ளதைப் பாழ்தளம் (பேச்சு வழக்கில் இன்று பாதாளம்) என்றனர். இதைக் கீழேழுலகம் என்றார்கள், இன்றைய விஞ்ஞானக் கூற்றுப்படியும் இவைதான் காணமுடிகிறதே தவிர வேறு மேலேழு, கீழேலுலகங்கள் இல்லை.

மக்களுக்கு மெய்ப்பொருள் உண்மைகளை சொல்லும் வழியில் சில கதைகளை சொல்லிவைத்தார்கள். அந்த கதைகள் பின்னாளில் பலராலும் கட்டுக்கதைகளாகி, நம்முன்னால் வளர்ந்தும், பெருகியும், உண்மையை மறைத்துக்கொண்டும் நிற்கிறது. எதுவென்றாலும் அதில் இருக்கிற உண்மையை ஆராய்ந்து பார்க்கும் விழிப்புணர்வு அவசியமாகும்.

வாழ்க வளமுடன்.

Can the horoscope of children born at the same time be the same?


குறிக்கப்படும் ஜாதகம் எப்படி நமக்கானது என்று சொல்லமுடியும்? நான் பிறந்த அதே நேரத்தில் எத்தனையோ நபர்கள் பிறந்திருப்பார்கள் அல்லவா? அப்பொழுது அவர்கள் ஜாதகமும் ஒரே மாதிரிதானே இருக்கும்?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி: 

வாழ்க வளமுடன் ஐயா, குறிக்கப்படும் ஜாதகம் எப்படி நமக்கானது என்று சொல்லமுடியும்? நான் பிறந்த அதே நேரத்தில் எத்தனையோ நபர்கள் பிறந்திருப்பார்கள் அல்லவா? அப்பொழுது அவர்கள் ஜாதகமும் ஒரே மாதிரிதானே இருக்கும்?

பதில்:

நீங்கள் கேட்பது சரியான கேள்விதான். நீங்கள் பிறந்ததில் இருந்தே ஆரம்பிக்கலாமே. நீங்கள் இப்பொழுது அம்மாவின் கருவறையில் இருக்கிறீர்கள். குழந்தைப்பேறு மருத்துவமனையிலும் சேர்த்து தகுந்த நேரத்திற்கு மருத்துவர்கள் காத்திருக்கிறார்கள். அதே மருத்துவமனையில் ஒரே நேரத்தில் ஐந்து தாய்மார்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கும் ஒரே சமயத்தில் உதவ மருத்துவர்களும் இருக்கிறார்கள். அதிகாலை 3. 40 க்கு, உங்களோடு சேர்ந்து ஆறு குழந்தைகள் பிறக்கின்றன. அதில் மூன்று பெண் குழந்தைகள், மூன்று ஆண் குழந்தைகள். இத்தனை குழந்தை பிறப்பை, அங்கேயே ஆறு சோதிடர்களை வைத்து ஜாதகமும் எழுதிவிடலாமா? சரி. குழந்தைபிறப்பின் நேரத்தை மருத்துவர்கள் சொன்னபடி குறித்து ஜாதகம் கணித்தாயிற்று.

இப்பொழுது ஏறக்குறைய எல்லா ஜாதகமும் ஒரே மாதிரி இருக்கும் என்பது உண்மைதான். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.  என்றாலும், ஜாதகம் அதன் நுணுக்கத்தில், கணிதத்தில் நுண்ணிய மாறுதலாகவே அமைதிருப்பதையும் நாம் அறியமுடியும். இந்த ஆறு குழந்தைகளுக்கும் ஒரே பெயர் வைக்கப்போவதில்லை. தனிப்பட்ட விருப்பமான பெயர்தான் வைப்பார்கள். கணித்த ஜாதகம் ஒன்றாக இருந்தாலும், எல்லா குழந்தைகளும் ஒரே நேரத்தில் அழுவதில்லை, கொட்டாவி விடுவதில்லை, தானாக சிரிப்பதில்லை. ஒரு குழந்தை காலையில் தூங்கும், இரவில் அழும், சில குழந்தை இரவில் தூங்கும், வெளிச்சம் வந்தால் அழுதுகொண்டே இருக்கும். ஒரு குழந்தை தாய்ப்பால் குடிக்கும், ஒரு குழந்தை அதை அறவே மறுக்கும். ஒரு குழந்தை தாயின் அணைப்பை விரும்பும், மறு குழந்தை தூக்கினாலே அழும். இப்படி பலவித மாறுபாடுகள் அங்கேயே வெளிப்படுவிடுகின்றன அல்லவா?

ஜாதகமும், அதன் கிரநிலைகளும் ஒன்றாக இருக்கட்டும். அந்தந்த கிரக நிலைகளின் அலைவீச்சு ஒன்றாகவே இருந்தாலும், அதை பெறுவது, ஏற்பது, விலக்குவது என்று ஒவ்வொரு குழந்தைக்கும் மாறிக்கொண்டே இருக்கும் என்பது உண்மை. மேலும் அந்த ஜாதகத்தை வைத்துக்கொண்டு, இந்தக்குழந்தை இப்படித்தான் வளரும் என்று சொல்லவும் முடியாது. அப்படி எந்த ஜோதிடரும் சொல்லவும் மாட்டார். ஒரே ஒரு சாட்டிலைட் தொலைகாட்சி டிஷ், உங்களின் ஒரே ஒரு 49 இன்ஞ் ஸ்மார்ட் டிவி வழியாக பல்வேறு நிகழ்ச்சிகளை பார்ப்பது போலவே, இந்த குழந்தைகள் மாறிக்கொண்டுதான் வளரும் என்பது உண்மை. ஒரே மரத்தின் விதைகளை நீங்கள் விதைத்தாலும், வளர்ந்து அதுதரும் அதன் கனிகள் ஒரே சுவையாக இருப்பதில்லை.

அப்படியானால் ஜாதகம்? அது ஒரு குறிப்பு, கையேடு. அதைக்கொண்டு அந்தக் குழந்தைகளின் அடிப்படை அறிந்து மாற்றத்தை விரும்பி செயல்பட்டு வாழ்வில் தன்னை உயர்த்திக் கொள்ளலாம். பார்வைக்கு ஒன்றுபோல் இருக்கலாம். ஆராய்ந்து பலன் தரும் பொழுது அது மாறுதலை தந்துகொண்டே இருக்கும். ஒவ்வொடு தனித்தனியான குழந்தைக்கும் பதினாறு வகையான மாற்றங்கள் உண்டு என்று வேதாத்திரி மகரிஷி அவர்கள் சொல்லுகிறார். அதில் ஒன்று மாறினாலும் ஒரே மாதிரி இருக்கபோவதில்லை. அதனால் ஒரே நேரத்தில் பிறந்த எல்லோருக்கும் ஜாதகம் கணித்தாலும், நகர்ந்துகொண்டே இருக்கக்கூடிய இந்த வானியல் நிகழ்வு, நுண்ணிய மாற்றதை கொண்டிருக்கும். அது அந்த ஜாதகத்திலும் இடம்பெறும் என்பதுதான் உண்மை.

        குழந்தையின் அடிப்படை குணாதசியம், கர்மா, செயல்பாடு, மனநிலை, பரம்பரை, வழக்கம், பழக்கம், இப்படியாக எண்ணற்ற விசயங்கள், குழந்தைக்கு குழந்தை மாறுபாடுபெறும் அல்லவா? அதுபோல அந்த ஜாதகமும் தன்னுள்ளே ரகசியத்தை புதைத்து வைத்திருக்கும். அதை நல்ல தேர்ந்த, அனுபவம் உள்ள ஜோதிடர் நிச்சயமாக கண்டடைவார்.

வாழ்க வளமுடன்
-

Does a dead soul leave immediately? Where is it going?


இறந்த உயிர் உடனடியாக வெளியேறிவிடுமா? எங்கே போகிறது?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி: 

வாழ்க வளமுடன் ஐயா, இறந்த உயிர் உடனடியாக வெளியேறிவிடுமா? எங்கே போகிறது?


பதில்:

கருவிலே தொடங்கிடும் நம்முடைய உயிரின் பயணம், பிறந்து வாழ்கின்ற காலமுழுவதும் கூடவே பயணித்து, குறிப்பிட்ட காலத்தில், வாழ்நாளின் முடிவில் உடலை விட்டு பிரிந்துவிடும். இது இயற்கையின் நியதியாகும். எந்த மாற்றத்திற்கும் உட்பட்டதல்ல. இது எல்லா ஜீவன்களுக்குமே உரித்தானதுமாகும். குரு மகான் வேதாத்திரி மகரிஷி சொல்லுவது போல, ‘இது இயற்கையின் நீதி. இதில் தப்பித்தோர் யாருமில்லை. ஒரு நூறாண்டு என்று எடுத்துக்கொண்டால், அன்று வாழ்ந்தவர்கள் இன்று இல்லை. இன்று வாழ்ந்து கொண்டிருப்பவர்கள், அடுத்த நூறாண்டுகளில் இருக்கப்போவதும் இல்லை’.

நம்முடைய உடல், உயிர், மனம் கூடவே இன்னொன்றான ஆன்மா (ஆத்மா) இதில் நாம் யார்? என்ற கேள்வி எழுவது இயல்பு. அந்த நாம் யார்? என்று நான் சொல்லுவதை விட, ‘நான் யார்?’ நீங்களே உங்களுக்குள்ளாக கேட்கும் பொழுதான் அங்கே உங்களுக்கான ஆராய்ச்சி தொடங்கும். எனவே அதில் நான் குறுக்கே நிற்கப்போவது இல்லை. ஆனால் நாம் உயிர் அல்ல என்பதை மட்டும் என்னால் சொல்ல முடியும்.

‘ஆனால் நாம் உயிரால்தானே வாழ்கிறோம்’ என்று சொல்லுவீர்கள். ஆம் அது உண்மைதான். நாம் + உயிரால் = வாழ்கிறோம். இங்கே நாம் தனித்து நிற்பதை அறிவீர்களா? உயிரால் வாழ்கிறோம்,. உயிரில்லையேல் நாமும் இல்லை. அப்படியென்றால் நாம் யார்? அதுதான் ‘நான் யார்?’ என்ற கேள்வியில் கிடைப்பதாகும்.

உயிர், தினமும் நம்மைவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக பிரிந்து கொண்டேதான் இருக்கிறது. அதனால்தான் காலையில் இருக்கும் உற்சாகம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, சோர்ந்துபோய், களைத்து உறங்கிவிடுகிறோம். சிலர் மயக்கமே அடைந்துவிடுகிறார்கள். அதை சரிசெய்யவே, காற்று, தண்ணீர், உணவு, பூமியின் மையப்பகுதியில் இருந்து வரும் சக்தி அலைகள் நமக்கு உதவுகிறது. என்றாலும், ‘ஒரு நாள் என்பது உயிரை அறுத்தெறியும் வாள்’ என்றுதான் ஆசான் திருவள்ளுவர் தன் குறள் வழியாக சொல்லுகிறார். அதுவும் உண்மைதான்.

வாழ்நாளின் காலம் முடிந்துவிட்டால், காலன் வந்துவிட்டான்  என்று சொல்லுவார்கள். வடநாட்டில் காளி என்றும் சொல்லுவார்கள். உயிர் உடனடியாக நம் உடலை விட்டு வெளியேறிவிடும். உயிரின் தன்மை எப்போதும் தனித்தன்மை வாய்ந்தது. உடனடியாக வெளியேறி, உடலுக்கு அப்பாலுள்ள, விண் துகள்கள் களத்தோடு இணைந்துவிடும். ஏன்? வெளியே விண்ணாக (ஆகாஷ்) இருப்பதுதான் உடலளவில் உயிராக இருக்கிற உண்மை அறிவீர்களா? மற்றபடி உயிர் எங்கேயும் போய்விடுவதில்லை. 

என்ன? ஏதேனும் என்னோடு வாள் சுழற்ற தயாராக இருக்கிறீர்களோ? பார்க்கலாம்.

வாழ்க வளமுடன்

-

What is called by Mahaakash, Boothaakash and Siddhaakash?


மாகாகாசம், பூதாகாசம், சித்தாகாசம் என்றால் என்ன?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, மாகாகாசம், பூதாகாசம், சித்தாகாசம் என்றால் என்ன?


பதில்:

மெய்ப்பொருளாக உள்ள, முழுமுதற்பொருளையும், அதன் பரிணாமத்தையும் விளக்கும் வகையில் சித்தர்கள் நமக்குத்தந்த நிலைகள்தான் இந்த மாகாகாசம், பூதாகாசம், சித்தாகாசம் என்பதாகும். இறை, இறையாற்றல், மெய்ப்பொருள், வெட்டவெளி, சுத்தவெளி என்று பலவாறாக உயர்ந்த கருத்தில், மதிப்புத்தந்து அழைக்கக்கூடிய ஒன்றை, முழுமுதற்பொருளை, எல்லாவற்றிற்கும் ஆதாரமாகவும், காத்து, அன்பும், கருணையோடும் இருந்துவரக்கூடியைத்தான், கட+உள்=கடவுள் என்று அழைத்து, யோகத்தின் வழியாக அறியவும் முடியும் என்று வகை செய்தனர் சித்தர்கள்.

எவ்வகையிலும் உருவமில்லா மெய்யை, எளியவர்கள் உணரவே கருத்துருவாக இருப்பதை, உருவ வழிபாடாக சிவம் என்பதை சிவனாக அமைத்தார்கள், பின்னாளில் வந்தோர் சிவத்தின் இயக்கத்தை நாராயணன் என்று அமைத்தார்கள். பின்னாளிலும், இந்நாளிலும் எப்படி இருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள்.

ஆகாசம் என்ற வார்த்தையில் குறிப்பிடப்படுவது, மெய்ப்பொருளின் பரிணாமத்தில் வந்த காட்சியாக வந்த, எழுந்த முதற்பொருளாகும். இந்த ஆகாசம் வடமொழி சொல்லாகும். தமிழில் இதை விண் என்று அழைக்கிறோம். இப்படி ஆகாசம் என்ற ஒன்றை முந்தைய நிலையை, பரிணாமத்தில் எழுச்சி பெறாமல், மாற்றம் அடையாமல், உள்ளடக்கமாக, மெய்ப்பொருளாகவே இருந்த நிலையைத்தான் சித்தர்கள் ‘மகாகாசம்’ என்று அழைத்தனர். மகா என்றால் மிகப்பெரிய, அளவிட முடியாத, விரித்துச் சொல்லமுடியாத என்று அர்த்தமாகிறது.

அடுத்து வரும் ‘பூதாகாசம்’ என்பது மெப்பொருள், தன்னிறுக்கத்தால், நொறுங்கி, எழுச்சிபெற்று, பரமாணுவாக தோன்றி, அந்த பரமாணுவின் கூட்டாக அமைந்த ஆகாசம் என்ற பொருளாக, முதல் பஞ்சபூத (பௌதீக) தோற்றமாக மலர்ந்ததை சொல்லுவதாகும். இந்த ஆகாசம் என்பதற்கு பிறகுதான், வாயு, தேயு, அப்பு, பிரிதிவி என்ற மற்ற நான்கான, காற்று, வெப்பம், நீர், மண் என்ற் பஞ்சபூத தோற்றங்களாக வந்தது. இந்த ஐந்தும் கூட்டாகவும், இவற்றில் சில பல கூட்டாக இணைந்து உருவான பிரபஞ்சப் பொருள்கள், இயற்கைப் பொருட்கள் அனைத்தும் ‘பூதாகாசம்’ என்று குறிப்பிடுகின்றனர். பஞ்ச பூதங்களை, அதனால் ஆன ஆகாசம் என்ற தோற்ற முதற்பொருளை உள்ளடக்கியது என்று அர்த்தமாகிறது.

அடுத்ததாக வரும் ‘சித்தாகாசம்’ என்பது உயிராக மாறிய ஆகாசம் என்ற கருத்தில் சொல்லப்படுவதாகும். பூதாகாசத்தின் பரிணாமத்தில் இருந்து, அதன் தன்மாற்றமாக, அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் என்ற ஐந்து உணர்வை அறியும் வகையில் அடுத்தாக எழுந்ததே ‘மனம்’ ஆகும், இதை உள்ளடக்கமாக, மனம் என்பதைக் கொண்டு மலர்ந்தது ஜீவன்கள் ஆகும், இவை ஓர் அறிவுமுதல், ஆறறிவு மனிதன் வரை முழுமையடைந்து நிற்பதாகும். மனம் என்பது, ஆகாசத்தின் படர்க்கை நிலையே ஆகும். மனம் அதன் ஆழ்நிலையில் கருமையமாகவும் அமைகிறது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். சித்து என்றால் உயிர் என்றும் பொருளாகும். உயிராக மாறிய ஆகாசம் என்ற பொருளில்தான் ‘சித்தாகாசம்’ என்று அழைத்தனர். இந்த சித்து என்று உயிரை உணர்ந்தால்தான், சித்தர்கள் என்றும் அழைக்கப்பட்டனர் என்பதையும் அறிந்துகொள்ளலாம்! 

வாழ்க வளமுடன்.

The world is full of happiness! Isn't that a lie?!


இந்த உலகில் இன்பமே நிறைந்திருக்கிறது என்று சொல்லுகிறார்களே? அது பொய்தானே?!

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, இந்த உலகில் இன்பமே நிறைந்திருக்கிறது என்று சொல்லுகிறார்களே? அது பொய்தானே?!


பதில்:

இந்த உலகில், நிறைந்திருக்கும் இன்பத்தைக் காணாமல், பொய்யை பார்ப்பதும், பொய்யாக உணர்வதும் உங்கள் பார்வையில்தான் அமைந்திருக்கிறது. உங்கள் வாழ்க்கையில் அப்படியான அனுபவங்களையும் நீங்கள் பெற்றிருக்கலாம் என்றே கருத இடமிருக்கிறது. இதை, இந்த பார்வையை நீங்கள் மாற்றிக்கொள்வதுதான் மிகச்சிறந்த வழி. உங்கள் வயது என்ன என்று எனக்குத்தெரியவில்லை. உங்கள் கடந்த காலத்தை, யோசித்துப்பாருங்கள். ஒருநாள் கூடவா நீங்கள், இன்பத்தில் திளைக்காலம் இருந்தீர்கள்? அனுபவிக்காமல் இருந்தீர்கள்? உணராமல் இருந்தீர்கள்? அதை பிறருக்கும் பகிராமல் விட்டீர்கள்?

பெரும்பாலும் இதற்கு நீங்கள் பதில் சொல்லுவீர்கள். எப்படியென்றால், ‘ஐயா, அதெல்லாம் அந்தக்காலம்’ என்பதாக உங்கள் பதில் இருக்கும். இது என்ன அந்தக்காலம் என்றால், நீங்கள் சிறுவயதில் அனுபவித்த காலமாக இருக்கலாம். 

அந்த சிறுவயது என்றால், மூன்று முதல் பதினெட்டு வயது வரை என்று பொதுவாக கருதலாம். அந்த வயதில், ஆணுக்கும் பெண்ணுக்கும் எந்தவித எதிர்பார்ப்பும் இருப்பதில்லை. தன்னையும், தன் குடும்பம் பற்றியும் கூட சிந்தனையில் வைத்துக்கொள்வதில்லை. எப்போதும் ஒரு பரபரப்பு, ஆற்றல் வேகம், செயல்பாடு, மனதில் உத்வேகம், ஏதோ சாதிக்க பிறந்ததான நினைப்பு, அப்படி, இப்படி என்று ஏதேதோ இருக்கும். எந்த செயல் செய்தாலும், உங்களை வெளிப்படுத்தி, அதன்வழியாக அன்பையும், நட்பையும், மதிப்பையும், பாராட்டையும் பெறுவதற்கு விரும்புவீர்கள். முக்கியமாக தன்னநலம் கருதாத செயல்பாட்டில் நீங்கள் ஆர்வமாக இருப்பீர்கள். அந்த வயதில் உங்களுக்கென்று தனி உலகமும் கூட அமைந்திருக்கும் என்பதே உண்மை. அது உங்கள் மனதளவில் கூட இருக்கலாம்.

எந்த குழப்பங்களுக்கும் சிக்கிடாமல், எனக்கெதுக்கு அது? என்று விலகி விலகி ஓடி, தனித்திருந்து, எதும் கிட்டே வராத தடுப்போடு, உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ? அதை செய்வதற்கு விருப்பமும், செய்திறனும், திட்டமும் கொண்டிருப்பீர்கள்.

இவை அனைத்துமே இன்று, உங்களுக்கு மாறிவிட்டது. இந்த உலகில் எல்லாமே துன்பமாக மாறிவிட்டது என்று கருதுகிறீர்கள். இன்பம் என்பதே பொய் என்ற கருத்துக்கும் வந்துவிட்டீர்கள். அதை நீங்களும் அறிந்துகொண்டு, மற்றவர்களுக்கும் சொல்லிவிட துடிக்கிறீர்கள். சரிதானே?!

இதற்கு முக்கிய காரணம், உங்களுடைய எதிர்பார்ப்பும், அதனால் விளைந்த ஏமாற்றமும் ஆகும்! எப்படி என்பதை சிந்தனை செய்யுங்கள். அதற்கான உண்மை உங்களுக்கு புரியவரும்.

வாழ்க வளமுடன்.

Why astrologers mostly failed on the foretelling?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, பெரும்பாலான ஜோதிடர்கள் நிகழப்போவதை சொல்வதில் ஏன் ஏமாற்றுகிறார்கள்?


பதில்:

அரைகுறை சோதிட அறிவு கொண்டவரும், ஆரம்ப நிலை சோதிடரும், ஆர்வக்கோளாறான சோதிடரும் ஏமாற்றலாம். ஆனால், ஜோதிடமும், ஜோதிடர்களும் ஏமாற்றவில்லை என்பதே உண்மை. ஒரு பொதுத்தன்மை என்று எடுத்துக்கொண்டால் கிரகங்கள் கூட ஏமாற்றவில்லை என்பதுதான் உண்மை.

ஒரு நல்ல, தேர்ச்சி பெற்ற, அனுபவம் வாய்ந்த சோதிடர், தன்னுடைய ஆராய்ச்சியால், மிகச் சரியாக கணித்து எழுதப்பட்ட ஜாதக குறிப்பைக் கொண்டு, என்ன சொல்லமுடியுமோ அதை அந்த ஜாதகருக்கு சொல்லுவார். இதில் அவர் பலவழிகளில், பலவகைகளில் அனுபவம் பெற்றிருப்பார். இதுதான் நடக்கும் என்று, எந்த சோதிடரும் சொல்ல மாட்டார் என்று நினைக்கிறேன். அப்படி அவர் சொல்லுகிறார் என்றால்,  அவர் தன்னறிவில் வளர்ச்சியின்றி நின்றுவிட்டார் என்றுதான் அர்த்தம்.

மேலும் நிகழப்போவதை குறிப்பால் சொல்லும் சோதிடர்கள்தான் இருப்பார்கள். அவர்களுடைய கணக்கில், என்ன சொல்லமுடியுமோ அதைத்தான் சொல்லவும் செய்வார்கள். ஒரு கிரகம் இந்த இடத்தில், இன்ன சேர்க்கையில், இந்த வகையில் என்று கணக்கிட்டு சொல்வார்கள். இதற்கு பழமையான நூல்களும், சித்தர் பரிபாஷை பாடல்களும், அனுபவம் வாய்ந்தவர் நூல்களும், சோதிடரின் ஆராய்ச்சியும் உதவிடும்.

இதனால், அவர்கள் நிகழப்போவதை கோடிட்டு மட்டுமே காட்டுவார்கள். அப்படியே அப்படியே என்று சொல்லமாட்டார்கள். அதை உறுதிப்படுத்தவும் மாட்டார்கள்.

சொன்னாலும் நடப்பதில்லை என்பது உண்மைதான். அப்படி நிகழாமல் போவதற்கு, பலன் சொல்லும் சோதிடரை விடவும், அந்த ஜாதகரே காரணமாக இருப்பார் என்பதுதான் சிறப்பு. முக்கியமாக கவனியுங்கள்... ஒரு ஜாதகரின் ஜாதகத்தை கணித்து, ஆராய்ந்து, எதிர்காலத்தை சொல்லுவதற்கும், ஜாதகர் கேட்டுக் கொள்வதற்கும், கிரகங்களின் தாக்கங்களுக்கும், ஜாதகரின் அடுத்தடுத்த நடவடிக்கைகளுக்கும் இடையிலே என்னென்ன நிகழ்கிறது என்று, நான் இங்கே விளக்க ஆரம்பித்தால், இந்த பதிவை என்னால் நிறுத்துவது மிக கடினம். மேலும் அது எழுத்தால், வார்த்தையால் விளக்கமுடியாததாகவும் இருக்கும்.

இதைமட்டும் அரைகுறையாக நீங்களோ, வேறு யாரோ புரிந்துகொண்டு, ஜாதகமும் பொய், ஜோதிடரும் பொய், கிரகங்களும் பொய் என்ற முடிவுக்கு வந்தாலும் வரலாம். அது உங்கள் விருப்பம் / அவர்கள் விருப்பம். அதை  தடை செய்வதற்கோ, மறுப்பதற்கோ வழியில்லை. அதனால் இதை உங்களுக்கோ, அந்த யாரோ ஒருவருக்கோ  நிரூபணம் செய்யவேண்டும்?! என்றும் எனக்கு அவசியமில்லையே!

முடிவாக, பெரும்பாலான ஜோதிடர்கள் நிகழப்போவதை சொல்வதில் ஏன் ஏமாற்றுகிறார்கள் என்றால், அவர்களின் அனுபவம் மிக குறைவு என்றுதான் பதில் கிடைக்கும். மற்ற சோதிடர்களும் இதைத்தான் வலியுறுத்துவார்கள்.

சோதிடம் என்பது ஆய்வுதானே தவிர உறுதியான முடிவைச் சொல்லுவது அல்ல. இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு ஆற்றின் குறுக்கே பாலம் கட்டும் பொழுது, நூறு ஆண்டுகள் தாங்கும் என்றுதான் அதை கட்டும் பொறியியல் வல்லுனர்கள் முடிவு செய்வார்கள். ஆனால் அந்தப் பாலம் முன்னூறு ஆண்டுகள் தாங்கி நன்றாக இருக்கிறது என்றால், என்ன அர்த்தம்? நம்முடைய பயன்பாடு கவனமாக இருக்கிறது என்றுதான் அர்த்தம். அதுபோல, இங்கே சோதிடத்திலும் மாற்றங்கள் நிகழ்ந்துவிடுகிறது. அதை நீங்களே சிந்தித்துப் பாருங்கள்!

வாழ்க வளமுடன்.

Why astrology prediction is available for Jupiter, Saturn and Rahu Ketu only?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.




கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, குரு கிரக பெயர்ச்சி, சனி கிரக பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி என்று மட்டுமே ஜோதிடர்கள் பலன் சொல்லுவது ஏன்?


பதில்:

ஜோதிடர்கள், உங்களுடைய ஜாதக கணிப்புப்படி எல்லா கிரக நிலைகளையும் ஆராய்ந்து, இப்போதுள்ள கோள் சார பெயர்ச்சி நிலைகளையும் கொண்டுதானே பலன் சொல்லுகிறார்கள். என்றாலும் பொதுவெளியில், ஜாதகம் கொண்டு சொல்லாமல் பொதுபலன் சொல்லும் பொழுது, ராசிகட்டங்கள் படி, குரு, சனி, ராகு, கேது கிரங்களின் பெயர்ச்சிகளை சொல்லுவார்கள். அப்படி இந்த நான்கு கிரங்களை மட்டும் மைப்படுத்திக் கொண்டு சொல்லுவதற்கும் சில காரணங்கள் உண்டுதான்.

ஏனென்றால், இவற்றின் நகர்வு கடந்து நீண்டகாலம் ஒரே வீட்டில் சஞ்சரிக்கும் தன்மை கொண்ட கிரகங்கள் ஆகும். உதாரணமாக சனி கிரகம், கிட்டத்தட்ட 2.5 ஆண்டுகள் ஒரு ராசி வீட்டில் தங்கிச்செல்லும். சில காலம், பின்னோக்கியும் நகர்ந்திடும். அதை வக்கிர நிலை என்று சொல்லுவார்கள். மேலும் சனி கிரகம் மிக மெதுவாக நகரும் கிரகமும் ஆகும். இதனால் எப்படிப் பார்த்தாலும் 3 ஆண்டுகள் என்று வைத்துக்கொள்ளலாம். அந்த மூன்று ஆண்டுகள் ஜாதகருக்கு என்னென்ன பலன்களை தரும் என்பது ஆராய்ச்சிக்குறியதுதானே?! எனவே சனி கிரகம் பட்டியலில் இருக்கிறது.

குரு கிரகம் அளவிலும், நன்மையான சக்தி அளிப்பதிலும் பெரியது. கிட்டதட்ட 1 ஆண்டுக்காலம் ஒரு ராசியில் தங்கி செயல்படும். இக்கிரகத்திற்கும் வக்கிர நிலை உண்டு. அதனால் குருவும் பட்டியலில் இருக்கிறது.

ராகு மற்றும் கேது நிழல் கிரகங்கள், கிட்டதட்ட 1.5 ஆண்டுகள் ஒரு ராசியில் தங்கி, அந்த ராசிக்குரிய கிரக பலன்களை தருவார்கள். இக்கிரங்களுக்கும் வக்கிர நிலை உண்டு. நம்மை வாழ்வில் வழி நடத்தும் கிரகங்களில், ராகு கேது கிரங்களே முக்கியமானவையாகும். இதனால் ராகுவும் கேதுவும் பட்டியலில் இருக்கிறது.

மற்றபடி சூரியன், செவ்வாய், சுக்கிரன் 1 மாதம் எடுத்துக்கொண்டு அடுத்தடுத்த ராசிகளுக்கு போய்விடுகிறது. புதன் கொஞ்சம் சீக்கிரமாகவே ஒவ்வொரு ராசிவீடாக போய்வரும். சந்திரன் 2.5 நாளுக்கு ஒருமுறை ஒவ்வொரு ராசிக்கட்டமாக நகர்ந்துவரும். இந்த சூரியன், செவ்வாய், சுக்கிரன், புதன், சந்திரன் ஆகியவையும் ஒரு ஜாதகருக்கு பாதிப்பை தருகிறது என்றாலும் கூட காலம் சிறியதாக இருப்பதால், உடனடியாக அது கடந்தும் விடுமே? அதனால் பொதுவாக சொல்லும் பொழுது தவிர்த்துவிடுகிறார்கள். இதுதான் காரணம்! 

மேலும் இத்தகைய பெரிய கிரகங்களின் அருகாமையும், தூரமும் கூட நம்மை பாதிக்கிறது என்று வேதாத்திரி மகரிஷி அவர்களும் சொல்லுகிறார்.

வாழ்க வளமுடன்.

Method of realize the Divine by the words


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, இந்த இறை, இறைவன், கடவுள், தெய்வம் என்பது இல்லாமல் யோகத்தில் பயணிக்க முடியாதா?


பதில்: 

பயணிக்கமுடியும். ஆனால், அந்த முழுமையான உணர்வும், மெய்ப்பொருள் உண்மையும், பேரறறிவும், பேராற்றலின் தன்மையும் விடுபட்டுப்போக வாய்ப்புள்ளதே? ஆனால் ஒன்று தெளிவாக சொல்ல முடியும். நீங்கள் சொன்ன ‘இறை, இறைவன், கடவுள், தெய்வம்' என்ற என்பதின் வழியாக உங்களுடைய புரிதலில் தவறு இருக்கலாம் அல்லது ஏமாற்றம் இருக்கலாம்.

ஒரு நாட்டினை ஆளுகின்ற அரசன் என்று வைத்துக்கொள்ளலாம். அரசன் என்று கூட சொல்லாமல் அரசர் என்றுதான் சொல்லுவார்கள். பாருங்கள், ஆரம்பத்திலேயே நாம் மதிப்பு கொடுத்துவிட்டோம் அல்லவா? இந்த அரசர் என்ற ஒரு ஆட்சியாளரை, நீங்கள் நேரில் பார்த்தால் தான் மதிப்பு கொடுப்பீர்களா? கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். அரசர்கள் உலகையும், நாட்டையும் ஆண்ட காலம் மலையேறி விட்டதுதான். என்றாலும் கூட ஒரு கற்பனையாக அப்படி உங்களை, அந்த அரசர் ஆளுகின்ற, ஆளுமை செய்கின்ற நாட்டின், குடிமகனாக (அந்தக்குடி அல்ல) உங்களை நினைத்துப் பாருங்கள்.

அரசர் என்ற வார்த்தையை கேட்டாலே உங்களுக்கு ஒரு மரியாதையும், வணக்கமும் தானாகவே வந்துவிடும் அல்லவா? நீங்கள் நேரடியாக அரசர் குறித்த உண்மை தெரிந்துகொள்ளாவிட்டாலும் கூட, உங்கள் பெற்றோர், மற்றோர், உறவினர், பொதுமக்கள் ஆகியோரின் நடவடிக்கைகளிலும், பழக்கங்களின் வழியாகவும், அவர்கள் உங்களுக்குச் சொன்ன சம்பவங்கள் மூலமாகவும் அப்படியான நிலைக்கு நீங்கள் வந்திருப்பீர்கள்தானே?!

இதுதான் நீங்கள் சொன்ன ‘இறை, இறைவன், கடவுள், தெய்வம்' என்ற சொற்களின் வழியாக நிகழ்கிறது. எல்லைகட்டிய மனதாலும், நமது ஐம்புலன்களாலும், மெய்ப்பொருளான உண்மையை நாம் புரிந்துகொள்ளவும், உணர்ந்து கொள்ளவும் முடியாது. அதற்கு நம்மை தயார் செய்வதற்காகவாவது இப்படியான உயர்வான உண்மையை விளக்கிச்சொல்லும், இறை, இறைவன், கடவுள், தெய்வம் என்ற நிலை முக்கியம். அற்பமான, அழிந்து, மறைந்து, சூனியமாக போகக்கூடிய ஒன்றிலிருந்து விடுபட்டு, பெருமான் மாணிக்கவாசகரின் வார்த்தைகளால் ‘ஆக்கம், அளவு, இறுதி’ இல்லாத அந்த தெய்வீகத்தை வெறுமனே உங்களால் புரிந்துகொள்ள முடியுமா?

‘ அவ்வளவுதானே? இதெல்லாம் எங்களால முடியாதாய்யா?, ரொம்ப சுலபம்’ என்று கூட நீங்களும், உங்கள் மனமும் சொல்லலாம். தவறில்லை நீங்கள் உங்கள் வழியில் முயற்சியுங்கள். நீங்கள் வெறுமனே பற்றி இருக்கிற யோகத்தை விட்டுவிட்டுங்கள். அப்போதுதான் நீங்களாக முயற்சித்தீர்கள் என்று உங்களால் சொல்லவும் முடியும்.

அப்படியெல்லாம் இல்லை, நான் முயற்சிக்கிறேன் என்று நீங்கள் நினைத்தால், முதலில், இறை, இறைவன், கடவுள், தெய்வம் என்பதில் இருக்கிற உண்மையை புரிந்துகொள்ள முயற்சியுங்கள். பிறகு உங்கள் பயணம் சிறப்பாகும். 

வாழ்க வளமுடன்.