CJ for You: journalism

journalism

Showing posts with label journalism. Show all posts
Showing posts with label journalism. Show all posts

Today's world in people's sharing! 3


 மக்களின் பகிர்வுகளில் இவ்வுலகம்! 3



நிறைவுப்பகுதி

பகிர்வோரின் மனநிலை

இந்த கட்டுரையின் சாரமே இதுதான். உலகம் கையிலடங்கி விட்டதால், மனிதனுக்கு நிலை கொள்ளவில்லை. தன் கருத்தை பகிர்கிறேன் என்று பல வழிகளில், தானே சிக்கிக் கொள்கிறான். தன்னளவில் புரிந்துகொண்ட ஒன்று, பிறருக்கு சென்றடைகையில் எப்படி இருக்க வேண்டும் என்ற ஒரு அடிப்படையும் தெரியவில்லை. அதை கற்றுக்கொள்வதும் இல்லை. அதுகுறித்து கவலை கொள்வதும் இல்லை.

இன்றைய தொல்லைகாட்சி செய்தி பகிர்வுகளும் அப்படித்தான். மக்களின் மூளையை சலவை செய்வதில் முதலிடம் இதற்குத்தான் தரவேண்டும். மக்களை ஒரு குறிப்பிட்ட நிலையிலேயே, நிறுத்தி வைக்க இவர்களால் முடியும். உதாரணமாக, ஏதோ இரண்டு வீடுகளில், அருகருகே நடந்த ஒரு சாதாரண பிரச்சனையை, சாதிப் பிரச்சனையாக மாற்றி, தெருவை, ஊரை, சமூகத்தை, நாட்டைச்சார்ந்த கலகமாக மாற்ற இவர்களால் முடியும். ஆனாலும் தொல்லைக்காட்சி ஒரு குழு அமைப்பு.

தனி மனிதனில், ஒரு சாதாரண பிரச்சனை வளரும், ஆனால் சீக்கிரமாக அடங்கிவிடும் என்பது பொதுவானது. இதில் பழிக்கு பழி வாங்குதல் என்பது, பிறர்தூண்டுவதால் மட்டுமே நடக்கும். உண்மையாகவே பிரச்சனையில் தொடர்புடையோர் சமாதனத்திற்கே தயாராக இருப்பார்கள். இங்கே தனி மனிதர்கள், தங்களின் கருத்துக்களை புகுத்தி இரண்டு பேருக்கும் குழப்பத்தை உண்டாக்குகிறார்கள்.

பொதுவாக தனிமனிதனின் மனம், இந்த சுருங்கிய உலகில், எந்நேரமும் கொந்தளிப்பாக இருக்கிறது. ஒரு குப்பைத்தொட்டியில், குப்பை சேருவதைப் போல, எல்லா விசயங்களையும் தனக்குள் ஏற்றிக்கொண்டு தன் நிலை என்ன, தன் குணம் என்ன என்பதை மறந்தே போகிறான். ஒரே ஒரு நெருப்புப் பொறி கிடைத்தால், குப்பென்று பற்றி எரிவார்கள் அல்லது எரித்துவிடுவார்கள். இதில் படித்தவரும், படிக்காதவரும் பொதுவே.


இணையத்தில் பகிர்வோரின் மனநிலை

வெந்ததை தின்று விதி வந்தால் சாவோம் என்ற, வெள்ளந்தியான மன நிலையில் நீங்கள் இருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். அல்லது மனம் விரிந்த நிலையில் எல்லாவற்றை சமநோக்கில் பார்க்கும் மனிதனாக இருங்கள். இப்பொழுது, நீங்கள் இணையத்தில் ஏதேனும் ஒரு இணைய பத்திரிக்கை செய்தி, சமூக பகிர்வு வளைத்தளமான பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம், யூடுயூப் இவற்றை சற்றே பார்வை இடுங்கள். ஒரு மணி நேரத்திற்குள்ளாக, உங்கள் மனம் கொந்தளிக்கும் என்பது உறுதி. 

இப்படியான உலகிலா நாம் வாழ்கிறோம்? இவன் இப்படியா? அவன் அப்படியா? இந்தத் தலைவரா? என்று பலப்பல வகைகளில் சிந்தித்து, உங்களுக்குள் தீர்வு நோக்கி நகர்வீர்கள். இவனை அடக்கலாம், அவனை ஒடுக்கலாம், இதையெல்லாம் இப்படி செய்யலாமே என்று ஒரு கூட்டத்தின் தலைவனைப்போல திட்டமிடுவீர்கள் என்பது உறுதி. நீதியை நிலை நாட்ட வந்த தலைவனைப்போல நீங்கள் மாறிவிடுவீர்கள். இத்தகைய தூண்டுதலைத்தான் இந்த இணையவழி பகிர்வுகள் தருகின்றன. எனவே நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள்.


பகிர்வில் தனி மனித மனநிலை

இது இன்னும் ஓர் முக்கியமான தலைப்பு. திரைப்படங்களில், “ஒரு பொண்ணோட மனசு இன்னொரு பொண்ணுக்குத்தான் தெரியும்” என்ற சொற்றொடர் மிகப்பிரபலம். அது உண்மையல்ல என்றாலும், ஒரு மனிதனின் மனநிலையை நாம் யூகம் செய்ய முடியும். வெளிப்படையாக சிலர் சொல்லாமல் இருந்தாலும், இப்பொழுது இதைத்தான் அவன்/அவள் நினைத்துக் கொண்டிருக்கிறான்/ள் என்று நாம் சிந்திக்கலாம். ஆனால் அந்தக்காலம் மலையேறிவிட்டது அல்லது மலையிறங்கிவிட்டது. ஆம்.

நான் ஒரு செய்தியை பகிர்ந்தாலும், நீங்கள் ஒரு செய்தியை பகிர்ந்தாலும், ஒரு மூன்றாம் மனிதன் தன் கருத்தை  தெரிவிக்கும் வழியில் இணையம் வளர்ந்துவிட்டது. அந்த கருத்துப்பகிர்வு எவ்வளவு தன்மையாக இருக்கிறது என்பதை நீங்களே அறிவீர்கள். 100 க்கு 99 சதம் வன்மம் தூண்டும் நிலையில்தான் எதிர்கருத்துக்கள் பகிரப்படுகின்றன. மனிதனின் மனம் இதத்தை இழந்துவிட்டது. எதிராள் என்ன நினைப்பார்கள் என்ற சிந்தனை ஏதுமின்றி, உடனுக்குடனே வன்மம் தலைக்கேறி எழுத்தில் வந்து நிறைந்து நிற்கிறது. தற்பொழுது “கிளப்ஹவுஸ்”ஸில் வார்த்தைகளும் கிடைப்பதாக அறிகிறேன். 

ஒட்டுமொத்தமாக மனித சமூகம், தன் தகுதி இழந்து கிடப்பதாக எண்ண இடமிருக்கிறது. வளர்ந்தோரும், வளர்வோரும் இதில் வித்தியாசமில்லை. பேசவும், எழுதவும் தெரியாத குழந்தைகள் கூட காட்சி வடிவத்தில் வந்துவிட்டார் என்றும் சொல்ல முடியும்.


தீர்வுப் பகிர்வு

எப்பொழுதுமே நமக்கு இருக்கும் ஒர் உயர்ந்த எண்ணம் என்ன என்றால், எல்லாமே உடனடியாக மாறிவிட வேண்டும் என்று விரும்புவதுதான். இதெல்லாம் நடக்கிற காரியமா? ஆனால் தனி மனிதனாக, நாம் மாறினால் நிச்சயமாக மாறிவிடும். அதாவது நம் மனம் மட்டுமே. ஒரு பூனை கண்ணை மூடிக்கொண்டால், உலகம் இருண்டுவிட்டதாக நினைக்குமாம். இருக்கட்டுமே, அதற்கு அதனுடைய உலகம் இருண்டுவிட்டது. உனக்கென்ன கவலை. நீ உன் உலகத்தில் இரு.

உன் வீட்டின் கதவுக்கு வெளியே புயலும், மழையும் என்றால், வீட்டில் கதவுக்குப் பின்னே நீ பாதுகாப்பாகத் தானே இருப்பாய்? கொஞ்ச நாளைக்கு அப்படி இருக்கலாம். நீ இல்லை என்பதால் கூட, அந்த புயலும் மழையும் அடங்கிவிடாது என்றாலும், பார்வையாளர் இல்லை என்றால் அங்கே ஆட்டம் நடக்காது அல்லது ஒத்திவைக்கப்படும் அல்லவா? அதுபோல காலத்தால் அடங்கிவிடும்.

பகிர்தல் அல்லாது இந்த உலகம் இல்லை. பகிர்வுதான் இந்த உலகை, மனித சமூகத்தை நகர்த்துகிறது என்பது மாபெரும் உண்மை. பகிர்தலில் நமக்கும் கடமை இருக்கிறது. நல்லதை பகிர்வோம், விலகி நிற்போம். மீண்டும் நல்லதை பகிர்வோம். மாற்றம் கொள்வோம். மாற்றம் ஒன்றே மாறாதது.

வாழ்க வளமுடன். 

-----

Today's world in people's sharing! 2


 மக்களின் பகிர்வுகளில் இவ்வுலகம்! 2


முதல்பகுதி படிக்கலாமே


இரண்டாம் பகுதி

பகிர்தலின் வளர்ச்சி

ஒரு தனி மனிதனின் கருத்துப்பகிர்வு தடைசெய்ப்பட்டிருந்த காலம் ஒன்றும் உண்டு. அதாவது கருத்து சுந்ததிர தடை. இத்தடை இருந்தால்தான் அரசை விமர்சனம் செய்ய மாட்டார்கள் என்று ஒரு கண்டிப்பு அல்லது மக்களிடம் பயம். ஆனாலும் கால மாற்றம் எல்லாவற்றையும் கடந்துவிட்டது.  

குழுவாக வாழ்ந்து வந்த மனிதர்கள், பிறர் அறிய முடியாத ரகசிய மொழிகளில் தங்கள் கருந்துக்களை பகிர்ந்து கொண்டிருந்தார்கள். இன்றும் கூட சில கிராமங்களில் நடப்பதுண்டு. மேலும் இப்போது, குழு அமைப்பு சிதைந்துவிட்டது. கூட்டுக்குடும்ப அமைப்பும் சிதைந்துவிட்டது. தனித்தனியாக, நான்கு நபர்கள், மூன்று நபர்கள் என்று குடும்பம் சுருங்கிவிட்டது. ஆனால் இது எவ்வளவு மோசமான விளைவுகளைத்தரும் என்பது யாருக்குமே புரியவில்லைதான். அத்தை மாமா என்ற உறவும், கூட்டமும் இனிவரும் காலத்தில் இருக்குமா என்பது தெரியவில்லை. ஒருவருக்கு ஏதேனும் பிரச்சனை என்றால், குடும்பத்தை விட்டு வெளி நபர்தான் உதவிக்கு வரக்கூடிய சூழல். இனிவரும் காலத்திலாவது மாறவேண்டும் என்று விருப்பம் கொள்வோம்.

இப்படியாக தன் குழுவிடமும், குடும்பத்தாரிடம் மட்டுமே, கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருந்த மனிதன், கடிதங்கள் வாயிலாக, தன்னை கடந்து தூரத்தில் இருப்பவரிடமும் தன் கருத்தை பகிர முனைந்தான். தொலைத்தொடர்பு புரட்சியில், எழுத்தை தவிர்த்து, தன் குரல் வழியாகவே கருத்தைப் பகிரும் நிலைக்கு உயர்ந்தான். மனிதனின் சிந்தனையில் எழுந்த உச்ச நிகழ்வாக, இணையம் (Internet, Worldwide web)வந்துவிட உலகமே சுருங்கி, தற்போது உள்ளங்கையில், கைபேசி அளவில் அடங்கிவிட்டது. அடேங்கப்பா, என்ன ஒரு அசுர வளர்ச்சி!


பகிர்வோரின் நிலை

இந்த வளர்ச்சிக்கு ஈடாக, சமமாக மனிதன் தன்னை உயர்த்திக் கொண்டானா? என்றால் இல்லை. அவன் அவனளவில் அப்படியே இருக்க, சும்மா சொரிந்து கொண்டிருந்தவனுக்கு கையில் கத்தியை கொடுத்தாக மாறிவிட்டது. அவன் தன்னையே, தன் இனத்தையே வெட்டி வெட்டி ரத்தக்களரி ஆக்கிக்கொண்டு இருக்கிறான். தனக்கு கருத்து சுதந்திரம் வேண்டும் என்று சிந்தித்தவனுக்கு உதித்த, இணையம், எல்லோரையும் அள்ளி அணைத்து பினைத்துக்கொண்டது. ஆனால் மனிதன், இன்னொரு மனிதனை இணைத்துக்கொள்ள தவறிவிட்டான். 

இவ்வளவு காலத்திலும் கூட, வரப்பு சண்டைகள் போல எல்லைச் சண்டைகள் ஓவ்வொரு நாட்டிலும் நடந்துக்கொண்டுதான் இருக்கிறது.  எல்லைகள் இல்லா இணையம் சாத்தியமாயிற்று. ஆனால் எல்லைகளில்லா மனோநிலை சாத்தியப்படவில்லை. இதற்கு யார் காரணம்? உலகில் உள்ள பொறுப்புடைய தலைவர்கள் தான்.

உலகின் வல்லரசு யார் என்ற போட்டியில், மார்தட்டிக்கொண்டு, ஒரு கேக்கை இரண்டாக வெட்டுவது போல, உனக்கு பாதி, எனக்கு பாதி என்று நாடுகளை பகிர்ந்து கொண்ட அமெரிக்காவும், ரஷ்யாவும் கூட இன்று, இணைந்து கைகோர்த்து, விண்வெளியில் 400 கிலோமீட்டர் உயரத்தில், ஒரு கால்பந்து திடல் அளவான, விண்கப்பலில் (International space station-ISS) ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள். 

இவர்களுக்கு விண்ணில் எல்லைகள் இல்லை, ஆனால் மனித சமூகம் வாழும் பூமியில் எல்லைகள், “இவர்கள்மாதிரியான “ தலைவர்களுக்கு தேவையாக இருக்கிறது. தலைவர்கள் எவ்வழியோ தொண்டர்கள் என்னும் நிலை என்று மாறுமோ தெரியவில்லை. அது மாற வேண்டும் என்றும் விருப்பம் கொள்வோம்.

அன்பர்களே இதன் நிறைவு பகுதி, நாளை வரும்.


Today's world in people's sharing!


மக்களின் பகிர்வுகளில் இவ்வுலகம்!



கால மாற்றம்

மக்கள் அனைவருமே ஒருவருக்கு ஒருவர் தன் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுதல், கடந்த 10 ஆண்டுகளில் மிகவும் வேகமாக மாறிவிட்டது. அறிவியல் முன்னேற்றமும், தொடர்பு சாதனங்களை எளிமையாக்கி மக்களிடம் கிடைக்கச் செய்ததின் மாற்றமே இது. வீட்டுக்கு ஒரு தொலைபேசி இருந்தகாலம் போய், குரலாலே பேசி கருத்து பரிமாற்றம் மாறி, முகம்பார்த்து பேசிக்கொள்ளும் மிக எளிய முறைக்கு வந்துவிட்டோம். 

அதுவும் இந்த கரோனா நோய்த்தொற்றுக் காலத்தில் இன்னும் கூடவே மாற்றம் பெற்றுவிட்டது.  வாயிலே சில வார்த்தைகள் மட்டுமே பேசத்தெரிந்த, கேள்வி கேட்டால் என்ன பதில் சொல்லுவது என்று தெரியாத, தன் வீட்டு ஆட்களுக்கு மட்டுமே மரியாதை கொடுக்கத் தெரிந்த, வெளி உலகமே தெரியாத, ஆனால் ஒரு சின்ன, பெரிய LED திரையில் மட்டுமே பார்க்கத் தெரிந்த நான்கு வயது குழந்தைக்கு (?!) ஆரம்ப கல்வி பயிலும் நிலை, ஆன்லைனில் வந்துவிட்டது. அந்த குழந்தையிடம் கைபேசி வாயிலாக குரலாக பேசினால் “வீடியோ காலில் வரத்தெரியாதா?” என்று எதிர்கேள்வி கேட்கிறது.

ஆனால் இந்தக் கட்டுரை அலசல் அக்குழந்தைகள் எதிர்காலம் பற்றியதல்ல, எனவே யாரும் கவலைப் படவேண்டம் :P


கடமை

ஒரு பெரும்பான்மையான மக்களுக்கு, தான் அறிந்ததை சமூகத்திற்கு தரவேண்டும் என்ற உந்துதல் எப்போதுமே இருக்கும். அது உண்மையாகவே இயல்பான கடமை. பணம் வாங்கிக்கொண்டு தருதல் என்பது பின்னால் வந்த பிசினஸ் ரகசியம். தான் அறிந்ததை பிறருக்கு தராது இருந்தால், நாம் இந்த உலகில் இன்றுவரை காட்டுமிராண்டியாகவே வாழ்ந்து கொண்டிருப்போம். தமிழகத்தில் 3000 ஆண்டுகளுக்கு முன்னதாகவே, மனித சமூகம் அற்புதமான வாழ்க்கை முறையை கொண்டிருந்தது என்பதை, தமிழ்சங்க கால நூல்கள் வழியாக அறியலாம்.

அப்படியான காலத்தில், இந்த உலகின் பல பகுதிகளில், “ஒரு சில மக்கள்” வாழ்க்கை முறை அறியாமல், பிறர் வளம் பறித்து கொள்ளையர்களாக, கொலைக்கார்களாக, பச்சைக்கறி திண்ணும் மனிதர்களாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள் என்பது உண்மையே.

தன் அனுபவத்தை, அறிவை இன்னொருவருக்கு பகிர்வதால், பெற்றுக்கொள்ளும் மனிதர், கற்றுத்தரும் மனிதருக்கு அறிவில், ஏறக்குறைய சமநிலை அடைவார். அவருடைய வாழ்வின் உயர்ச்சிக்கு அது உதவும். இந்த அறிவு அனுபவ பகிர்வு, மனிதன் உடல் அசைவுகளை, சைகைகளை, சப்தங்களை மொழியாக கொண்டபோதே வந்திருக்கும். உதாரணமாக, அந்தபக்கம் போகாதே காட்டுயானை இருக்கிறது, புலி இருக்கிறது என்று, எதிர்படும் மனிதனை எச்சரிக்கை செய்திருப்பார்கள். இந்தப்பக்கம் நல்ல பசி போக்கும் பழம் தரும் மரம் இருக்கிறது, நீ சாப்பிட்டுக்கொள் என்று வழிகாட்டி இருப்பார்கள்.

பேசும் மொழி வளர்ந்த பிறகு, மிக எளிதான வேலையாகிவிட்டது. எழுத்தும் வளர்ந்தபிறகு, அறிவு, அனுபவ பகிர்வு எல்லைகளை கடந்துவிட்டது. கடல் கடந்து மனிதர்கள் செல்லச்செல்ல உலகம் சுருங்கி, இப்பொழுது கையடக்க கைபேசியில் அமைந்துவிட்டது. இந்த மாற்றங்கள் எல்லாமே, ஒருவர் தன் அறிவை, அனுபவத்தை பிறருக்கு, பிரதிபலன் பாராமல் பகிர்ந்து கொண்டதால் மட்டுமே. 


பகிர்தலின் வளர்ச்சி

இத்தலைப்பில் அடுத்த பதிவில் காண்போம். காத்திருங்கள்.

வாழ்க வளமுடன்!

NE YOU WS


உன்னை நெருக்கும் செய்தி


பொறுப்புத்துறப்பு

படிக்கும் யாரையும், இந்த கட்டுரை கட்டாயப்படுத்தவில்லை. சில ஆய்வுக்காக, விளக்கங்களுக்காக, ஆன்மீக தேடுதலுக்காக எழுதப்பட்டது. குறிப்பிட்ட எந்த செய்தித்தாள், பத்திரிக்கை, நிறுவனங்கள், வழங்குனர் நேராகவோ மறைமுகமாகவோ சார்ந்தது அல்ல. தவறுகளிருந்தால் மன்னிக்கவும். 


உலகம் சுருங்கிவிட்டது

உலகின் புதிய கண்டுபிடிப்புக்களையும், அது குறித்த வளர் சிந்தனைகளையும் நான், எங்கள் வீட்டில் உயபயோகப்படுத்திக் கொண்டிருந்த பொருட்களால் அறிவேன். ஆனாலும், அறிவியல் அறிஞர்களின் மகத்தான தொடர் கண்டுபிடிப்புக்களால் இந்த உலகம் எல்லைகளற்று சுருங்கிவிட்டது. இந்த கருத்து நான் 1985 ம் ஆண்டு, என் வகுப்பறையில், ஒரு ஆங்கில பாடத்தின் வழியாக தெரிந்துகொண்டேன். அதற்கு பிறகும் நிற்காத அறிவியல் முன்னேற்றம், இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இணையத்தால் ஒன்றுபட்ட உலகம், கையடக்கத்தில் சுருங்கி கைபேசியில் உள்ளது. ஆனால், என்னதான் இணைய சுதந்திரம் என்றாலும்கூட, அந்தந்த நாட்டுக்கான சர்வர்கள் (Worldwide web internet servers) மூலம், எல்லைகள் அமைந்துதான் இருக்கிறது.


தானியங்கி?!

இந்த சர்வர் எல்லைகள் சுதந்திரமானவை, மக்களுக்கானவை, அவர்களின் உரிமைகள் என்றாலும், அவை, அவ்வப்பொழுது கதவடைக்கும் அல்லது கதவை திறக்கும். அது அந்தந்த இணைய சேவை வழங்குனரைப் பொறுத்தது. சில நேரங்களில் இது காசுக்கும், கிளர்ச்சிக்கும், புரட்சிக்கும், தீர்வுக்கும், யுத்தத்திற்கும், உள்நாட்டு கலவரத்திற்கும் வேலை செய்யும். ஆனால் இது இதற்காக என்று யாருக்குமே தெரியாது. முக்கியமாக இணையத்துக்கு இயக்குனர் என்ற ஒருவர் இல்லவே இல்லை என்று சொல்லப்படுவதுண்டு. 



காலையில் காஃபியும் செய்தியும்

சுடச்சுட என்று நாம் காலையில் குடிக்கும் காஃபியை மட்டுமல்ல, செய்திகளையும் சொல்லலாம். செய்தித்தாள் விற்பனையில் சுடச்சுட செய்திகள் என்றுதான் சொல்லப்படும். ஓவ்வொருநாளும் காலையில், செய்திகளை தாங்கி கடைவிரிக்கும் பத்திரிக்கைகள் நிறைய இருந்தன. இன்றைய இணையயுகத்தில் சில உலகளாவிய பெரும் செய்தித்தாள்கள் பரிதாபமாக, தன் கடைசி பதிப்பை தந்து ஓய்ந்துவிட்டன. வானொலியும், தொல்லைகாட்சிகளும் இருந்த நிலையிலும், உயிரோடு வலம் வந்த செய்தி பத்திரிக்கைகள், கைபேசி இணைய உலகத்தில் மூர்ச்சை ஆகிவிட்டன.

உலகில் என்ன நடந்திருக்கிறது என்ற ஆர்வமும், நேற்றிருந்தோர் இன்றில்லையே என்ற தலைவர்களின் கடைசி வாழ்க்கை நிகழ்வும், விளையாட்டின் வெற்றி தோல்வி நிலையும், பண மதிப்பின் தற்போதைய நிலையும், நாட்டின், அரசின் நிலைத்தன்மையும், எதிர்கட்சியின் சுட்டிக்காட்டுதலும் அறியவும், கல்வி கட்டுரைகள் படிக்கவும், வேலைவாய்ப்பு தேடவும், இயற்கை பேரழிவும், சமூக அவலங்களும், தீவிரவாதி, போராட்டங்கள், கிளர்ச்சியாளார்கள், குற்றங்கள், நோய் தன்மைகள், ராசி பலன்கள், ஆன்மீக செய்திகள் இப்படி இன்னும் பலப்பல விசயங்கள் குறித்து அறிந்து தெளிய செய்திகள் நமக்கு உதவுகிறது என்பது நன்றாக நமக்கு தெரிந்ததுதான். ஒவ்வொரு நாளும் செய்திகள் தெரியாமல் இருப்பது குற்றம் என்ற அளவில், பிறர் அதைபற்றி நம்மிடம் பேசும்பொழுது கூறியிருப்பார்கள் என்பது உண்மை.


NEWS

இந்த ஆங்கில வார்த்தையை அக்ரனிம் (Acronym) முறையில், வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு ஆகிய நான்கு திசைகளின் வழியாக பார்க்கும் பார்வையை, இந்த செய்திகள் வழங்குகிறது என்பது பொதுவான கருத்து.  ஆனால் திசையும், பார்வையும் என்று எடுத்துக்கொண்டால், பத்துவகையானவை உள்ளன. அந்த கூடுதல் ஆறு வகை என்ன? வட கிழக்கு, வட மேற்கு, தென் கிழக்கு, தென் மேற்கு, மேலே, கீழே என்பன ஆகும்.


ஓசிபேப்பர்

அந்தக்காலத்தில் ஓசிபேப்பர் ஒரு மிகப்பெரும் பிரச்சனையாக இருந்துவந்தது. காசு கொடுத்து வாங்குபவர் ஒருவர், படிப்பவர்கள் பலபேர். ஒரு செய்தித்தாள் வரிசைப்படி படிக்க வேண்டும் என்பது பலரின் விருப்பம். ஆனால் இந்த ஓசி பேப்பர் ஆசாமிகள், ஒரு தாளை பிரித்து தாருங்கள் என்பார், அவர் படித்துவிட்டு, இன்னொருவருக்கு பகிர்ந்து விடுவார். பேப்பர் வாங்கியவருக்கு அந்த தாள் மீண்டும் வருமா என்பது கேள்விக்குறி!

இதனால், நிறைய ஒரிஜினலாக பேப்பர் வாங்கியவர், ஒரு நூல் கொண்டு தைத்து விடுவார். ஏனென்றால், பிரிந்த பேப்பர் தன்கைக்கு வராது என்பதும், வரிசை மாற்றினாலும் பிடிக்காது என்பதும் காரணம். வாங்கி படித்து, பக்கம் மாற்றி வைத்துக்கொடுத்தால், காசு கொடுத்து வாங்கியவருக்கு, கோபம் வரும்.  இதனாலேயே, தையல், பிரிக்கமுடியாது அப்படியே படித்துத்தான் தருவேன் என்பார். ஓசிபேப்பர் ஆசாமி விடமாட்டார். இவர் படிக்கும் பொழுதே, அவர் அங்கங்கே தலையை நுழைத்து தடங்கல் செய்து, ஆகமொத்தமாக இரண்டு பேரும் சரியாக படிக்கமாட்டார்கள். 


கொக்கி போடும் தலைப்பு

இந்த ஓசிபேப்பர் ஆசாமிகளையும், செய்தித்தாள் வாங்க வைத்த பெருமை, பத்திரிக்கை தலைப்பு செய்திகளுக்கு உண்டு. மத்திய மந்திரிக்கு சிறை? என்று ஒரு செய்தியை போட்டு, ஓசி பேப்பர் ஆசாமிகளை மாட்டவைத்து விடுவார்கள். வாங்கி படித்துப்பார்த்தால், செய்தியில், விசாரணை என்று, சிறை செல்ல நேரலாம் என்று ஒரு யூகம் மட்டுமே இருக்கும். சினிமா கிசு கிசு கொக்கிகள் அதிகம். 




ஆர்வத்தை முறைகேடாக்குதல்

இந்த செய்தித்தாள் படிக்கும் ஆர்வ பரம்பரையில் வந்த நாம், இக்காலத்திலும் செய்திகளில் ஆர்வமாக இருப்பது இயல்பானதுதான். ஆனால் காலமாற்றத்தில், செய்தி வழங்குனர்கள், மக்களின் இயல்பு வாழ்க்கையில் நடக்கும் செய்திகளைத் தருவதற்கு பதிலாக, செய்திகளை தந்து மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிப்புக்கு உள்ளாக்குகின்றனர்.  மறைமுகமாக, மனிதர்களின் மனங்களில் ஒரு கிளர்ச்சியை தூண்டி, அதன்மூலம் உணர்ச்சிகளை ஊக்குவித்து, தவறாகவும் எதிராகவும் செயல்பட தூண்டுகிறார்கள். 

சிலவகைகளில் தனக்குச் சாதகமான நாட்டிற்கும், தலைமைக்கும், தலைவருக்கும் ஆதரவாக மக்களை திரட்டி, தங்களின் எதிரிக்கு பலிகடா ஆக்குகின்றனர். இதற்கெல்லாம் ஆதாரம் எளிதில் சிக்குவதில்லை. இது, உடலில் சேர்ந்துவிட்ட மெதுவாக வேலைசெய்யும் விஷம் போலானது ஆகும். அவரவர் கையிலேயே இந்த செய்திகள் சேரும்வகையில் இருப்பதால், அவர்களுக்கும் வேலை எளிதாக ஆகிவிடுகிறது. இப்படியான செய்திகளை தடுப்பதிலும், உண்மை அறிவதிலும் எல்லோருமே சோர்ந்துவிடுகின்றனர்.


மக்களின் செய்திகள்

தனிப்பட்ட நபர்களும், இப்பொழுது யூடுயுப் காணொளி மூலமாக செய்திகள் வழங்கிறார்கள். கைபேசி வழி செய்திகள், காணொளிகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பது மறுக்கமுடியாத உண்மை. சில வேளைகளில், பெரும் நிறுவனங்கள் காட்டாத, அவர்களுக்கு கிடைக்காத செய்திகளை மிக எளிதாக, இந்த மக்களின் செய்திகள் தந்துவிடுகின்றன. 

சமூக வளைத்தள தனி நபர் செய்திகளும், காணொளிகளும் விதிவிலக்கல்ல.

பேஸ்புக்கும், டிவீட்டரும் ஒரு நாட்டில், அம்மக்களின் கிளர்ச்சிக்கு உதவிசெய்வதை மறுக்கவும் முடியாது. ஆனாலும் இதிலும் பொய்யும் புரட்டும் கலந்திருக்கிறது, கட்டுக்கடங்காமல். 



உங்களை நெருக்கும் செய்திகள் 

நாலாபக்கங்களிலும் வரும் செய்திகள், உங்கள் கழுத்தை அல்ல, உங்கள் மனதை, அறிவை, வாழ்க்கையை நெருக்குகின்றன. உன் கையில் எதிரி வேண்டுமா, கை பேசியில் செய்தி பார், உன் வரவேற்பறையில் எதிரி வேண்டுமா? உங்கள் வீட்டு தொல்லைகாட்சியை பார். சாவகாசமாக ஓய்வு நேரத்தில் எதிரி வேண்டுமா? செய்தித்தாள் படித்துப்பார். 


மனமும் நிம்மதியும்

ஒரு மனிதனுக்கு வாழ்வியல் பொக்கிசம், அவனின் மனம்தான். அது அமைதியாக இருந்தால், அவனுக்கு நிம்மதியும் கிடைக்கும். அவனின் மனம் அமைதியை தேடிச்செல்வதில் ஆர்வமாகத்தான் இருக்கிறது. ஆனால் பல வழிகளில் தோல்வியுறுகிறது. 

உனக்கு உன் உன்னளவில் மனக்குழப்பங்கள் வேண்டுமா? உள்ளூர் செய்திகளை படி, கேள், பார்.

உனக்கு மாவட்ட அளவில் மனக்குழப்பங்கள் வேண்டுமா? மாவட்ட செய்திகளை படி, கேள், பார்.

உனக்கு மாநில அளவில் மனக்குழப்பங்கள் வேண்டுமா? மாநில செய்திகளை படி, கேள், பார்.

உனக்கு தேசம் அளவில் மனக்குழப்பங்கள் வேண்டுமா? தேசிய செய்திகளை படி, கேள், பார்.

உனக்கு உலக அளவில் மனக்குழப்பங்கள் வேண்டுமா? உலக செய்திகளை படி, கேள், பார்.

இப்படித்தான், இந்த செய்தி உலகம் நம்மோடு கலந்திருக்கிறது. இதில் ஆபாச செய்திகளும், போதைதரும் விளையாட்டு செய்திகளும் தனி.



செய்திகளை தேர்ந்தெடுங்கள்

அன்பர்களே, உங்களிடம் வந்து, மோதி, குவியும் செய்திகளை பிரித்தெடுங்கள். அதன் தலைப்புக்களில் மயங்காதீர்கள். உங்கள் மகத்தான ஓவ்வொரு நொடியையும், உங்கள் மனம் கெட பயன்படுத்தாதீர்கள். படித்தால், கேட்டால், பார்த்தால் என்ன ஆகிவிடப்போகிறது என்று இறங்கிவிடாதீர்கள். ஏற்கனவே நம் மனம் பலப்பல குப்பைகளில் சிக்கி தவிக்கிறது. இன்னும், இனிமேலும் குப்பைகள் வேண்டாம். விழிப்போடு இருங்கள், நிம்மதியோடு இருங்கள். அமைதியாக இருங்கள். வாழ்வியலை அனுபவியுங்கள்.

இயற்கையும், இரவு வானமும், தரும் செய்திகள் மகத்தானவை. அவைகளை படியுங்கள், கேளுங்கள், பாருங்கள். வாழ்க வளமுடன். 

------

Photos thanks to: Marjan Blan l Sierra Koder l Francisco Gonzalez l FreeVector l Google