CJ for You: mind depression

mind depression

Showing posts with label mind depression. Show all posts
Showing posts with label mind depression. Show all posts

I am afraid that whatever happens to others will happen to my family as well. For example, untimely death. This adds to my confusion. This was not easily overcome. I fear for my spouse and children and their future. What to do about it?


வாழ்க வளமுடன் ஐயா, அடுத்தவருக்கு நிகழும் எந்த ஒரு துன்பமும், என் குடும்பத்திலும் நடந்துவிடுமோ என்று அச்சமாக இருக்கிறது. உதாரணமாக அகால மரணம். இதனால் என் மனம் குழப்பம் அதிகரிக்கிறது. இதை எளிதாக கடந்து செல்ல முடியவில்லை. என் வாழ்க்கைத்துணை மற்றும் குழந்தைகளை நினைத்தும், அவர்கள் எதிர்காலம் குறித்தும் பயம் வருகிறது. இதற்கு என்ன செய்வது? விளக்கம் தருக.


‘துன்பத்தை மாத்திரம் நினைத்துக் கொண்டிருந்தால் அது தொல்லையாகவே இருந்திருக்கும். அது மாத்திரம் அன்று; ஒவ்வொரு நிகழ்ச்சியும் நடக்கிறபோது காலத்தாலும், இடத்தாலும் எல்லாம் வல்ல இறைநிலையானது ஒவ்வொரு மனிதனுக்கும் கொடுக்கக் கூடிய அறிவுரை, அனுபவ உரை, அனுபவ ஞானம்; அப்படித்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படி எடுத்துக் கொண்டோமானால் எந்தத் துன்பத்துக்கும் காரணத்தைக் கண்டுபிடிக்கிறபோது இதிலிருந்து விளையக்கூடிய நன்மையெல்லாம் விளங்கி விடும். உண்மையில் எல்லாம் நன்மையாகத் தான் ஏற்படும். அப்படிப் பார்க்கின்றபோது துன்பம் வருகிறது என்று கவலைப்படுகிறோமே, துன்பம் வரக்கூடாது என்று எண்ணுவதால் தான் அந்தக் கவலை.’

இப்படியாக வேதாத்திரி மகரிஷி விளக்கம் தருகிறார். உங்கள் வாழ்க்கையில், நீங்கள் சொல்லுவதைக் கொண்டு கவனிக்கும் பொழுது, ஒருவரின் உடல் பிரச்சனை, நோய், அகால மரணம் என்பதெல்லாம் இயற்கையின் நிகழ்வு. விபத்து என்பது கூட, நம்முடைய தவறுதானே தவிர, இயற்கை நிகழ்த்துவதில்லை.

ஏதேனும் ஒரு வகையில், நாம் எல்லோருமே பிறந்து வளர்ந்து, வாழ்ந்து முடிவு நோக்கி நகர்பவர்கள்தாம். எனவே, வாழும் காலத்தில், நம்முடைய கடமைகளை நிறைவேற்றி, நல்வாழ்வு வாழ்ந்து, நம் வாரீசுகளை நிலைக்கசெய்யவேண்டும். அதன்படி அவர்கள் வாழ்ந்துவிடுவார்கள். அதுபோதும். எனவே, பிறருக்கு நடப்பதை எண்ணி, நம்மை வருத்திக்கொள்ள தேவையில்லை. உங்களுடைய இப்போதைய தேவை, எதிர்கால தேவை என்பதை திட்டமிட்டு செயல்படுங்கள். நம் பெற்றோர் இல்லாமல் நாம் எப்படி மன உறுதி கொண்டோமோ, அதுபோல குழந்தைகளுக்கும் தனித்து செயல்பட பழக்குங்கள். அவர்களுக்கு தன்னம்பிக்கை கற்றுக் கொடுங்கள்.

எதிர்கால பயம் இருந்தால், இருக்கும் நாள் கெட்டுவிடும். செயல்படவும் முடியாது. அதை இறைவசம் விட்டுவிட்டு, அருட்காப்பு செய்துகொள்ளுங்கள். அது உங்களுக்கும், கணவருக்கும், குழந்தைகளுக்கும் காப்பாக இருக்கும்.

துரிய தவம் அடிக்கடி செய்யுங்கள், மனம் தெளிவு பெறும். முக்கியமாக, இந்த கைபேசி, அதன்வழியான தகவல்கள் இவையெல்லாம், சிறுது நாளைக்கு மூட்டை கட்டுங்கள். அடுத்தவருடைய பிரச்சனை, துன்பம், உலகின் போக்கு, குழப்பம், அரசியல் அடிதடி, தடுமாற்றம், விரோதபோக்கு இதெல்லாம் இப்போது வேண்டாம். விலகிக் கொள்ளுங்கள். அதற்கு பதிலாக, கிடைக்கும் நேரங்களில்,  நீங்கள், உங்கள் குடும்பம் என்று மகிழ என்னென்ன வழிகள் உண்டோ அதை கவனியுங்கள். அது போதும், மகிழ்ச்சி உங்கள் இல்லத்தை நிறைக்கும். வாழ்க வளமுடன். மேலும் சில உண்மைகள் அறிய இந்த காணொளி உதவும்.

துன்பமே இல்லாத வாழ்க்கை வாழ விருப்பமா? அதற்கான வழி என்ன?

வாழ்க வளமுடன்

-

Why have a depression? Any best solution for it?


மனம் ஏன் பாரமாக இருக்கிறது? எப்படி அதை சரிசெய்வது?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, மனம் ஏன் பாரமாக இருக்கிறது? எப்படி அதை சரிசெய்வது?

பதில்:

நாம் இந்த உலகில், மனதின் வழியாகவே வாழ்கிறோம். உலக இன்ப துன்பம் அடங்கிய எல்லாவற்றிற்கும் வாசல், நம்முடைய மனமே. நாம் வெளியே போவதற்கும், நமக்குள் ஏதேனும் வருவதற்கும் மனமே வாசலாக இருக்கிறது. நாம் வாழ்கின்ற இந்தக்காலத்தில், ஒவ்வொரு நாளும், உலக முன்னேற்றமும் புதிதுபுதிதாக வந்துகொண்டே, வளர்ந்துகொண்டே இருந்தாலும்கூட, நாம் எப்போதும் ஒரே நிலையில்தான் வாழ்ந்து வருகிறோம் என்பதும் உண்மை. 

ஒரு தலைமுறை என்று எடுத்துக்கொண்டாலும் அது தொடர்கிறது. சராசரியான பார்வைக்கு உதாரணமாக சொல்ல வேண்டுமானல், தாத்தாவுக்கு அப்பா திறமைசாலி, அப்பாவுக்கு மகன் திறமைசாலி, மகனுக்கு பேரன் திறமைசாலி, பேரனுக்கு அவனுடைய மகன் திறமைசாலி என்று தொடராக மாறிக்கொண்டேதான் இருக்கிறது.

ஆனால் மனிதனும், அவனுடைய மனமும் அப்படியேதான் இருக்கிறது. இது, இந்த நிலை மாறிட வேண்டும் என்றுதான், யோகம் உருவானது. யோகம் புரியாதவர்களுக்கு பக்தி துணையானது. இந்த இரண்டிலுமே பலப்பல பொய்கள் கலந்து, மனிதர்களுக்கு நீண்டகாலமாக, எளிதில் நெருங்க முடியாதபடி தூரமாகிவிட்டது.

எனினும் அவ்வப்பொழுது மகான்கள், ஞானிகள் தோன்றி, உருவாகி, மக்களுக்கான மாற்றத்தை, மனதிற்கான மாற்றத்தை வழங்கிக் கொண்டேதான் இருக்கிறார்கள். குரு மகான் வேதாத்திரி மகரிஷியின் நோக்கமும் அதுதான். உலக சமாதானம் என்ற திட்டத்தை முன்னிறுத்தி, உலகம் முழுவதும் ஓரே ஆட்சியில் அமைந்து, உலக மக்கள் நலவாழ்வுக்கு, திட்டத்தை தந்து அதை பலவாறாக தன் வாழ்நாள் முழுவதும் செயல்படுத்தி வந்தார். அவர் எடுத்துக்கொடுத்த பணி இன்னும், நம்மைப்போன்ற வேதாத்திரியர்களால் தொடர்கிறது.

என்றாலும், இப்போது உங்களுக்கும், உங்களைப்போன்ற மற்றவர்களுக்கும், மனம் பாரமாக இருக்கிறதே?! அதை எப்படி சரி செய்வது? தீர்ப்பது? அதையும் யோசிக்கலாம். இந்த மன பாரம் என்பதை, இக்காலத்தில் மன நல மருத்துவர்கள், மன அழுத்தம் என்று சொல்லுகிறார்கள். பல்வேறு சிக்கல்களில் சிக்கி, பல்வேறு நினைவுகளின் தாக்குதலும், அதை நினைத்து வருந்துவதும் இத்தகைய மன அழுத்தத்திற்கு காரணம் என்று சொல்லுகிறார்கள். இதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான மன அழுத்தமும் இருக்கும் என்பதே உண்மை. இதை தீர்ப்பதற்கு, மன நல மருத்துவர்கள் தரும் ஆலோசனை என்ன?

மனதை இயல்பாக வைத்திருங்கள். நேற்று நடந்ததை, எப்போதோ முடிந்த ஒன்றை நினைக்காதீர்கள். மனதில் எழும் எண்ணங்களை பின்பற்றாதீர்கள். உங்களுக்கு பிடித்ததை செய்யுங்கள். தனிமையில் இருக்காதீர்கள், பாடல், இசை, நாடகம், சினிமா என்று நேரத்தை திசை திருப்புங்கள், பிடித்ததை சாப்பிடுங்கள். நன்றாக தூங்குங்கள் என்று சொல்லிவிட்டு, சில சத்து மாத்திரைகளையும், தூக்கம் வரவழைக்கும் மாத்திரைகளையும், தந்து அக்கறையோடு கவனிப்பார்கள். (பொதுவான கருத்தாக சொல்லப்படுகிறதே தவிர, மனநல மருத்துவர்களை குறை சொல்லுவதாக கருதவேண்டாம்)

வேதாத்திரியும், இப்படியான அறிவுரைகளும், மருந்துகளும் தருவதில்லை. சுற்றி வளைக்காமல் நேரடியாகவே, மனதை புரிந்து கொள்க என்று, தவம் இயற்றச் சொல்லுகிறது.  மனதையும், அதில் எழுகின்ற எண்ணங்களையும் அறிந்து, புரிந்து, ஆராய்ச்சி செய்து, ஒழுங்குசெய்து கொள்ள அகத்தாய்வு எனும் பயிற்சியை தருகிறது. இந்த தற்சோதனை வழியாக, மனம் தன்னைத்தானே விரிந்து நோக்கிட வழி பிறக்கிறது, தேவையில்லாததை தானே திருத்திக்கொள்ள பழகுகிறது.

மேலும் எண்ணம் ஆராய்தலை முடித்து, சினம் தவிர்த்தல், கவலை ஒழித்தல் என்ற அடுத்த இரு நிலை பயிற்சிகளையும் தந்து, நான் யார்? என்று ஆராயவும் சொல்லுகிறது வேதாத்திரியம்.

உங்களுடைய மன பாரத்திற்கும், மன அழுத்தத்திற்கும் முழுமையான, தெளிவான, சிறப்பான மருந்து ‘வேதாத்திரிய அகத்தாய்வு எனும் தற்சோதனை’ எனும் பயிற்சிதான் என்பதில் ஐயமில்லை!
வாழ்க வளமுடன்.
-

NE YOU WS


உன்னை நெருக்கும் செய்தி


பொறுப்புத்துறப்பு

படிக்கும் யாரையும், இந்த கட்டுரை கட்டாயப்படுத்தவில்லை. சில ஆய்வுக்காக, விளக்கங்களுக்காக, ஆன்மீக தேடுதலுக்காக எழுதப்பட்டது. குறிப்பிட்ட எந்த செய்தித்தாள், பத்திரிக்கை, நிறுவனங்கள், வழங்குனர் நேராகவோ மறைமுகமாகவோ சார்ந்தது அல்ல. தவறுகளிருந்தால் மன்னிக்கவும். 


உலகம் சுருங்கிவிட்டது

உலகின் புதிய கண்டுபிடிப்புக்களையும், அது குறித்த வளர் சிந்தனைகளையும் நான், எங்கள் வீட்டில் உயபயோகப்படுத்திக் கொண்டிருந்த பொருட்களால் அறிவேன். ஆனாலும், அறிவியல் அறிஞர்களின் மகத்தான தொடர் கண்டுபிடிப்புக்களால் இந்த உலகம் எல்லைகளற்று சுருங்கிவிட்டது. இந்த கருத்து நான் 1985 ம் ஆண்டு, என் வகுப்பறையில், ஒரு ஆங்கில பாடத்தின் வழியாக தெரிந்துகொண்டேன். அதற்கு பிறகும் நிற்காத அறிவியல் முன்னேற்றம், இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இணையத்தால் ஒன்றுபட்ட உலகம், கையடக்கத்தில் சுருங்கி கைபேசியில் உள்ளது. ஆனால், என்னதான் இணைய சுதந்திரம் என்றாலும்கூட, அந்தந்த நாட்டுக்கான சர்வர்கள் (Worldwide web internet servers) மூலம், எல்லைகள் அமைந்துதான் இருக்கிறது.


தானியங்கி?!

இந்த சர்வர் எல்லைகள் சுதந்திரமானவை, மக்களுக்கானவை, அவர்களின் உரிமைகள் என்றாலும், அவை, அவ்வப்பொழுது கதவடைக்கும் அல்லது கதவை திறக்கும். அது அந்தந்த இணைய சேவை வழங்குனரைப் பொறுத்தது. சில நேரங்களில் இது காசுக்கும், கிளர்ச்சிக்கும், புரட்சிக்கும், தீர்வுக்கும், யுத்தத்திற்கும், உள்நாட்டு கலவரத்திற்கும் வேலை செய்யும். ஆனால் இது இதற்காக என்று யாருக்குமே தெரியாது. முக்கியமாக இணையத்துக்கு இயக்குனர் என்ற ஒருவர் இல்லவே இல்லை என்று சொல்லப்படுவதுண்டு. 



காலையில் காஃபியும் செய்தியும்

சுடச்சுட என்று நாம் காலையில் குடிக்கும் காஃபியை மட்டுமல்ல, செய்திகளையும் சொல்லலாம். செய்தித்தாள் விற்பனையில் சுடச்சுட செய்திகள் என்றுதான் சொல்லப்படும். ஓவ்வொருநாளும் காலையில், செய்திகளை தாங்கி கடைவிரிக்கும் பத்திரிக்கைகள் நிறைய இருந்தன. இன்றைய இணையயுகத்தில் சில உலகளாவிய பெரும் செய்தித்தாள்கள் பரிதாபமாக, தன் கடைசி பதிப்பை தந்து ஓய்ந்துவிட்டன. வானொலியும், தொல்லைகாட்சிகளும் இருந்த நிலையிலும், உயிரோடு வலம் வந்த செய்தி பத்திரிக்கைகள், கைபேசி இணைய உலகத்தில் மூர்ச்சை ஆகிவிட்டன.

உலகில் என்ன நடந்திருக்கிறது என்ற ஆர்வமும், நேற்றிருந்தோர் இன்றில்லையே என்ற தலைவர்களின் கடைசி வாழ்க்கை நிகழ்வும், விளையாட்டின் வெற்றி தோல்வி நிலையும், பண மதிப்பின் தற்போதைய நிலையும், நாட்டின், அரசின் நிலைத்தன்மையும், எதிர்கட்சியின் சுட்டிக்காட்டுதலும் அறியவும், கல்வி கட்டுரைகள் படிக்கவும், வேலைவாய்ப்பு தேடவும், இயற்கை பேரழிவும், சமூக அவலங்களும், தீவிரவாதி, போராட்டங்கள், கிளர்ச்சியாளார்கள், குற்றங்கள், நோய் தன்மைகள், ராசி பலன்கள், ஆன்மீக செய்திகள் இப்படி இன்னும் பலப்பல விசயங்கள் குறித்து அறிந்து தெளிய செய்திகள் நமக்கு உதவுகிறது என்பது நன்றாக நமக்கு தெரிந்ததுதான். ஒவ்வொரு நாளும் செய்திகள் தெரியாமல் இருப்பது குற்றம் என்ற அளவில், பிறர் அதைபற்றி நம்மிடம் பேசும்பொழுது கூறியிருப்பார்கள் என்பது உண்மை.


NEWS

இந்த ஆங்கில வார்த்தையை அக்ரனிம் (Acronym) முறையில், வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு ஆகிய நான்கு திசைகளின் வழியாக பார்க்கும் பார்வையை, இந்த செய்திகள் வழங்குகிறது என்பது பொதுவான கருத்து.  ஆனால் திசையும், பார்வையும் என்று எடுத்துக்கொண்டால், பத்துவகையானவை உள்ளன. அந்த கூடுதல் ஆறு வகை என்ன? வட கிழக்கு, வட மேற்கு, தென் கிழக்கு, தென் மேற்கு, மேலே, கீழே என்பன ஆகும்.


ஓசிபேப்பர்

அந்தக்காலத்தில் ஓசிபேப்பர் ஒரு மிகப்பெரும் பிரச்சனையாக இருந்துவந்தது. காசு கொடுத்து வாங்குபவர் ஒருவர், படிப்பவர்கள் பலபேர். ஒரு செய்தித்தாள் வரிசைப்படி படிக்க வேண்டும் என்பது பலரின் விருப்பம். ஆனால் இந்த ஓசி பேப்பர் ஆசாமிகள், ஒரு தாளை பிரித்து தாருங்கள் என்பார், அவர் படித்துவிட்டு, இன்னொருவருக்கு பகிர்ந்து விடுவார். பேப்பர் வாங்கியவருக்கு அந்த தாள் மீண்டும் வருமா என்பது கேள்விக்குறி!

இதனால், நிறைய ஒரிஜினலாக பேப்பர் வாங்கியவர், ஒரு நூல் கொண்டு தைத்து விடுவார். ஏனென்றால், பிரிந்த பேப்பர் தன்கைக்கு வராது என்பதும், வரிசை மாற்றினாலும் பிடிக்காது என்பதும் காரணம். வாங்கி படித்து, பக்கம் மாற்றி வைத்துக்கொடுத்தால், காசு கொடுத்து வாங்கியவருக்கு, கோபம் வரும்.  இதனாலேயே, தையல், பிரிக்கமுடியாது அப்படியே படித்துத்தான் தருவேன் என்பார். ஓசிபேப்பர் ஆசாமி விடமாட்டார். இவர் படிக்கும் பொழுதே, அவர் அங்கங்கே தலையை நுழைத்து தடங்கல் செய்து, ஆகமொத்தமாக இரண்டு பேரும் சரியாக படிக்கமாட்டார்கள். 


கொக்கி போடும் தலைப்பு

இந்த ஓசிபேப்பர் ஆசாமிகளையும், செய்தித்தாள் வாங்க வைத்த பெருமை, பத்திரிக்கை தலைப்பு செய்திகளுக்கு உண்டு. மத்திய மந்திரிக்கு சிறை? என்று ஒரு செய்தியை போட்டு, ஓசி பேப்பர் ஆசாமிகளை மாட்டவைத்து விடுவார்கள். வாங்கி படித்துப்பார்த்தால், செய்தியில், விசாரணை என்று, சிறை செல்ல நேரலாம் என்று ஒரு யூகம் மட்டுமே இருக்கும். சினிமா கிசு கிசு கொக்கிகள் அதிகம். 




ஆர்வத்தை முறைகேடாக்குதல்

இந்த செய்தித்தாள் படிக்கும் ஆர்வ பரம்பரையில் வந்த நாம், இக்காலத்திலும் செய்திகளில் ஆர்வமாக இருப்பது இயல்பானதுதான். ஆனால் காலமாற்றத்தில், செய்தி வழங்குனர்கள், மக்களின் இயல்பு வாழ்க்கையில் நடக்கும் செய்திகளைத் தருவதற்கு பதிலாக, செய்திகளை தந்து மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிப்புக்கு உள்ளாக்குகின்றனர்.  மறைமுகமாக, மனிதர்களின் மனங்களில் ஒரு கிளர்ச்சியை தூண்டி, அதன்மூலம் உணர்ச்சிகளை ஊக்குவித்து, தவறாகவும் எதிராகவும் செயல்பட தூண்டுகிறார்கள். 

சிலவகைகளில் தனக்குச் சாதகமான நாட்டிற்கும், தலைமைக்கும், தலைவருக்கும் ஆதரவாக மக்களை திரட்டி, தங்களின் எதிரிக்கு பலிகடா ஆக்குகின்றனர். இதற்கெல்லாம் ஆதாரம் எளிதில் சிக்குவதில்லை. இது, உடலில் சேர்ந்துவிட்ட மெதுவாக வேலைசெய்யும் விஷம் போலானது ஆகும். அவரவர் கையிலேயே இந்த செய்திகள் சேரும்வகையில் இருப்பதால், அவர்களுக்கும் வேலை எளிதாக ஆகிவிடுகிறது. இப்படியான செய்திகளை தடுப்பதிலும், உண்மை அறிவதிலும் எல்லோருமே சோர்ந்துவிடுகின்றனர்.


மக்களின் செய்திகள்

தனிப்பட்ட நபர்களும், இப்பொழுது யூடுயுப் காணொளி மூலமாக செய்திகள் வழங்கிறார்கள். கைபேசி வழி செய்திகள், காணொளிகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பது மறுக்கமுடியாத உண்மை. சில வேளைகளில், பெரும் நிறுவனங்கள் காட்டாத, அவர்களுக்கு கிடைக்காத செய்திகளை மிக எளிதாக, இந்த மக்களின் செய்திகள் தந்துவிடுகின்றன. 

சமூக வளைத்தள தனி நபர் செய்திகளும், காணொளிகளும் விதிவிலக்கல்ல.

பேஸ்புக்கும், டிவீட்டரும் ஒரு நாட்டில், அம்மக்களின் கிளர்ச்சிக்கு உதவிசெய்வதை மறுக்கவும் முடியாது. ஆனாலும் இதிலும் பொய்யும் புரட்டும் கலந்திருக்கிறது, கட்டுக்கடங்காமல். 



உங்களை நெருக்கும் செய்திகள் 

நாலாபக்கங்களிலும் வரும் செய்திகள், உங்கள் கழுத்தை அல்ல, உங்கள் மனதை, அறிவை, வாழ்க்கையை நெருக்குகின்றன. உன் கையில் எதிரி வேண்டுமா, கை பேசியில் செய்தி பார், உன் வரவேற்பறையில் எதிரி வேண்டுமா? உங்கள் வீட்டு தொல்லைகாட்சியை பார். சாவகாசமாக ஓய்வு நேரத்தில் எதிரி வேண்டுமா? செய்தித்தாள் படித்துப்பார். 


மனமும் நிம்மதியும்

ஒரு மனிதனுக்கு வாழ்வியல் பொக்கிசம், அவனின் மனம்தான். அது அமைதியாக இருந்தால், அவனுக்கு நிம்மதியும் கிடைக்கும். அவனின் மனம் அமைதியை தேடிச்செல்வதில் ஆர்வமாகத்தான் இருக்கிறது. ஆனால் பல வழிகளில் தோல்வியுறுகிறது. 

உனக்கு உன் உன்னளவில் மனக்குழப்பங்கள் வேண்டுமா? உள்ளூர் செய்திகளை படி, கேள், பார்.

உனக்கு மாவட்ட அளவில் மனக்குழப்பங்கள் வேண்டுமா? மாவட்ட செய்திகளை படி, கேள், பார்.

உனக்கு மாநில அளவில் மனக்குழப்பங்கள் வேண்டுமா? மாநில செய்திகளை படி, கேள், பார்.

உனக்கு தேசம் அளவில் மனக்குழப்பங்கள் வேண்டுமா? தேசிய செய்திகளை படி, கேள், பார்.

உனக்கு உலக அளவில் மனக்குழப்பங்கள் வேண்டுமா? உலக செய்திகளை படி, கேள், பார்.

இப்படித்தான், இந்த செய்தி உலகம் நம்மோடு கலந்திருக்கிறது. இதில் ஆபாச செய்திகளும், போதைதரும் விளையாட்டு செய்திகளும் தனி.



செய்திகளை தேர்ந்தெடுங்கள்

அன்பர்களே, உங்களிடம் வந்து, மோதி, குவியும் செய்திகளை பிரித்தெடுங்கள். அதன் தலைப்புக்களில் மயங்காதீர்கள். உங்கள் மகத்தான ஓவ்வொரு நொடியையும், உங்கள் மனம் கெட பயன்படுத்தாதீர்கள். படித்தால், கேட்டால், பார்த்தால் என்ன ஆகிவிடப்போகிறது என்று இறங்கிவிடாதீர்கள். ஏற்கனவே நம் மனம் பலப்பல குப்பைகளில் சிக்கி தவிக்கிறது. இன்னும், இனிமேலும் குப்பைகள் வேண்டாம். விழிப்போடு இருங்கள், நிம்மதியோடு இருங்கள். அமைதியாக இருங்கள். வாழ்வியலை அனுபவியுங்கள்.

இயற்கையும், இரவு வானமும், தரும் செய்திகள் மகத்தானவை. அவைகளை படியுங்கள், கேளுங்கள், பாருங்கள். வாழ்க வளமுடன். 

------

Photos thanks to: Marjan Blan l Sierra Koder l Francisco Gonzalez l FreeVector l Google