CJ for You: media

media

Showing posts with label media. Show all posts
Showing posts with label media. Show all posts

Invitation for Friend and Followers


அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும் ஒர் அழைப்பு!


Facebook, Twitter, Instagram, WhatsApp and Telegram, YouTube, SnapChat,  Etc. ஆகிய அனைத்து சமூகத்திற்கு,

வயது வித்தியாசம் இன்றி, ஒரே கருத்துப் பரிமாற்றம், எனக்கு பிடித்திருக்கிறது என்ற ஒரு உள்ளார்ந்த விருப்பம், எதிராளை பாராட்டுதல், ஊக்குவித்தல், இப்படியான நோக்கம் அமைந்து, சமூக இணையதளங்களில் கலந்திருக்கிறோம். ஒவ்வொருநாளும் முடிவின்றி அது தொடர்கின்றது.

நாம் இங்கே, நட்பாக இணைந்திருக்கிறோம். எத்தனை ஆண்டுகால நட்பில் நெருங்கி உறவினர்கள் போலான நெருக்கத்தையும் பெற்றிருக்கிறோம். நேராகவும் பார்த்து, எந்த வித்தியாசமும் இன்றி பழகுகிறோம். அன்பு பாராட்டுகிறோம். அதை ஒருவருக்கொருவர் பகிர்ந்தும் கொள்கிறோம். அதுமட்டுமே, மகிழ்ச்சி, பூரிப்பு, சந்தோசம், கவலை, துக்கம், சினம், வெறுப்பு, சிரிப்பு, மெல்லிய நகைச்சுவை, கேலி, கிண்டல் இப்படி எல்லா உணர்வுகளையும் கூட பகிர்ந்துகொள்கிறோம். பிடிக்கவில்லை என்றால் கண்டிப்பும் காட்டுகிறோம். அதை மாற்றிக்கொள்ளவில்லை என்றால் பிளாக்செய்து நீக்கியும் விடுகிறோம், நீங்கியும் விடுகிறோம்.

நமக்கென்று இருக்கின்ற, இருந்த பிரச்சனைகளில் சிக்கினாலும் கூட தனித்து நின்று, அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், அதைச்சொல்லி புலம்பாமல், இன்னொருவரையும் கஷ்டப்படுத்தாமல், பேஸ்புக் சமூக குடும்பத்தில் ஒரு இறப்பு நிகழந்தால் பரிதவிக்கிறோம், அஞ்சலி செலுத்துகிறோம். அவர் ஆன்மா சாந்தியடைய இறையை வேண்டுகிறோம். ஒரு குழந்தை பிறந்தால் மகிழ்கிறோம். அன்பையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறோம். நண்பர்களின் பிறந்தநாளில் நாமும் குதூகலம் அடைகிறோம். 

ஒருவருக்கொருவர் வேற்றுமையில் ஒற்றுமை என்று சொன்னால் மிகப்பொருத்தம். பால்பேதம் அற்றும்கூட பழகுதல் இங்கேதான் சாத்தியமாகிற்று என்றும் சொல்லலாம்.

அதுபோக உலகில் நாம் காணும், வஞ்சம், பழிவாங்குதல், ஏற்றத்தாழ்வு, மதியாதிருத்தல் அனுபவங்களும் கூட லேசாக உண்டுதான் எனினும் அவர்களை எளிதாக விலக்கியும், கடந்தும் வந்திருக்கிறோம். நட்பு எண்ணிக்கை அதிகம் ஆகிவிட, அரசியல் மேடையாகிப் போனது என்பது சோகம் தான். எனினும் அவர்களோடு நட்பை முறித்துவிடவில்லையே?! இங்கே இதுவரை சொன்ன எல்லாமே இன்னமும் தொடர்கிறதுதான். எனினும்... ஏதோ ஒன்றை விட்டுவிட்டு கலந்திருக்கிறோம் என்று மனம் உறுத்துகிறது. அது என்ன?

ஒரு நட்பாக நாம் இங்கே இணைந்திருந்தாலும், ஓவ்வொருவராக இழந்துகொண்டும் வருகிறோம், காலத்தால், அவர்களின் வயதால், உடல் பிரச்சனைகளால், பொருந்தாத சூழ்நிலைகளால்! அப்படியான சூழல் நம்மை சூழ்ந்துவிடுவதற்கு முன்னால், எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்ட நாம், நம்மை யார்? என்று அறிவதற்கான பகிர்வை பகிர்ந்தோமா? அதுகுறித்து உண்மைகளை அறிந்தோமா? என்றால் இல்லைதானே?

ஒரு மனிதனாக, இந்த உலகில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து, நட்பாகி, அனுபவித்து, பகிர்ந்து, பெற்று வாழ்ந்து மறைவது மட்டுமா? இந்த பிறப்பு ஏன் நிகழ்ந்தது? பிறப்பில் ஏதேனும் கடமை இருக்கிறதா? நோக்கம் இருக்கிறதா? மனிதனானவன் யார்? நான் யார்? பிறக்கும் முன் எங்கிருந்தேன்? எங்கே போகப்போகிறேன்? அவ்வளவுதானா? வேறேதேனும் உண்மை உள்ளதா? கடவுள் உண்டா? இல்லவே இல்லையா? இருந்தால் எப்படி இருக்கிறது? இல்லையென்றால் எப்படி நிரூபணம் செய்வது?  மிதக்கும் உலகை தாங்கிப்பிடிப்பது யார்? அது இயற்கை என்றால் இயற்கை என்பது என்ன? இப்படி பலவாறாக கேட்டுக்கொண்டோமா? அதை மற்றவர்களிடம் கேட்டோமா? பதில் அறிய முயற்சித்தோமா? தெரிந்த பதிலையாவது சொன்னோமா? என்ற கேள்விகள்தான் என்னுடைய மனதை உறுத்துகிறது.

இங்கே நான் ஏதோ எனக்கு தெரிந்த வழியில் சொல்லுவதாக நினைக்காமல், இதே பதிவையே நீங்கள் எழுதியதாக நினைத்து, உங்களுக்குத் தெரிந்ததை பகிர்ந்து கொள்ள முயற்சிக்கலாம் என்பதும், பகிர்வுகள் இல்லாமல் நீங்களாகவே தேடிக்கொள்ளலாம் என்பதும் என்னுடைய விருப்பம்.

ஒருவேளை இந்த மாற்றத்திற்கான விதையை நானும் விதைக்காமல் போனால், இதை, இப்படி ஒரு திருத்தத்தை, வழியை, யோசனையை, இப்படியும் ஒரு வாழ்கைக்கான நோக்கமும் பாதையும் உண்மையும் இருக்கிறது என்றுகூட சொல்லாமல் ஏமாற்றிவிட்டானே என்று நீங்கள் சொல்லக்கூடும். ஏமாற்றியதற்காக நானும் ஏதோ ஒருநாளில் வருந்தக்கூடும். சரிதானே?!

இன்றோ, நாளையோ, எதாவது ஒருநாளோ, இனி நம்மை அறிந்து உணர விருப்பம் கொள்ளலாமா? யோசித்து முடிவெடுங்கள்! இதெல்லாம் ஆகாத வேலை என்றால் கடந்தும் விடலாம், தவறில்லை. நமக்காக வேறு யாரேனும் ஒருவர் நம் குடும்பத்திலேயே பிறவி வழியாக பிறந்து வந்து நம் கடனையும் சேர்த்து அவரின் கடன் தீர்ப்பார் என்பதுதான் உண்மை!

-

NE YOU WS


உன்னை நெருக்கும் செய்தி


பொறுப்புத்துறப்பு

படிக்கும் யாரையும், இந்த கட்டுரை கட்டாயப்படுத்தவில்லை. சில ஆய்வுக்காக, விளக்கங்களுக்காக, ஆன்மீக தேடுதலுக்காக எழுதப்பட்டது. குறிப்பிட்ட எந்த செய்தித்தாள், பத்திரிக்கை, நிறுவனங்கள், வழங்குனர் நேராகவோ மறைமுகமாகவோ சார்ந்தது அல்ல. தவறுகளிருந்தால் மன்னிக்கவும். 


உலகம் சுருங்கிவிட்டது

உலகின் புதிய கண்டுபிடிப்புக்களையும், அது குறித்த வளர் சிந்தனைகளையும் நான், எங்கள் வீட்டில் உயபயோகப்படுத்திக் கொண்டிருந்த பொருட்களால் அறிவேன். ஆனாலும், அறிவியல் அறிஞர்களின் மகத்தான தொடர் கண்டுபிடிப்புக்களால் இந்த உலகம் எல்லைகளற்று சுருங்கிவிட்டது. இந்த கருத்து நான் 1985 ம் ஆண்டு, என் வகுப்பறையில், ஒரு ஆங்கில பாடத்தின் வழியாக தெரிந்துகொண்டேன். அதற்கு பிறகும் நிற்காத அறிவியல் முன்னேற்றம், இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இணையத்தால் ஒன்றுபட்ட உலகம், கையடக்கத்தில் சுருங்கி கைபேசியில் உள்ளது. ஆனால், என்னதான் இணைய சுதந்திரம் என்றாலும்கூட, அந்தந்த நாட்டுக்கான சர்வர்கள் (Worldwide web internet servers) மூலம், எல்லைகள் அமைந்துதான் இருக்கிறது.


தானியங்கி?!

இந்த சர்வர் எல்லைகள் சுதந்திரமானவை, மக்களுக்கானவை, அவர்களின் உரிமைகள் என்றாலும், அவை, அவ்வப்பொழுது கதவடைக்கும் அல்லது கதவை திறக்கும். அது அந்தந்த இணைய சேவை வழங்குனரைப் பொறுத்தது. சில நேரங்களில் இது காசுக்கும், கிளர்ச்சிக்கும், புரட்சிக்கும், தீர்வுக்கும், யுத்தத்திற்கும், உள்நாட்டு கலவரத்திற்கும் வேலை செய்யும். ஆனால் இது இதற்காக என்று யாருக்குமே தெரியாது. முக்கியமாக இணையத்துக்கு இயக்குனர் என்ற ஒருவர் இல்லவே இல்லை என்று சொல்லப்படுவதுண்டு. 



காலையில் காஃபியும் செய்தியும்

சுடச்சுட என்று நாம் காலையில் குடிக்கும் காஃபியை மட்டுமல்ல, செய்திகளையும் சொல்லலாம். செய்தித்தாள் விற்பனையில் சுடச்சுட செய்திகள் என்றுதான் சொல்லப்படும். ஓவ்வொருநாளும் காலையில், செய்திகளை தாங்கி கடைவிரிக்கும் பத்திரிக்கைகள் நிறைய இருந்தன. இன்றைய இணையயுகத்தில் சில உலகளாவிய பெரும் செய்தித்தாள்கள் பரிதாபமாக, தன் கடைசி பதிப்பை தந்து ஓய்ந்துவிட்டன. வானொலியும், தொல்லைகாட்சிகளும் இருந்த நிலையிலும், உயிரோடு வலம் வந்த செய்தி பத்திரிக்கைகள், கைபேசி இணைய உலகத்தில் மூர்ச்சை ஆகிவிட்டன.

உலகில் என்ன நடந்திருக்கிறது என்ற ஆர்வமும், நேற்றிருந்தோர் இன்றில்லையே என்ற தலைவர்களின் கடைசி வாழ்க்கை நிகழ்வும், விளையாட்டின் வெற்றி தோல்வி நிலையும், பண மதிப்பின் தற்போதைய நிலையும், நாட்டின், அரசின் நிலைத்தன்மையும், எதிர்கட்சியின் சுட்டிக்காட்டுதலும் அறியவும், கல்வி கட்டுரைகள் படிக்கவும், வேலைவாய்ப்பு தேடவும், இயற்கை பேரழிவும், சமூக அவலங்களும், தீவிரவாதி, போராட்டங்கள், கிளர்ச்சியாளார்கள், குற்றங்கள், நோய் தன்மைகள், ராசி பலன்கள், ஆன்மீக செய்திகள் இப்படி இன்னும் பலப்பல விசயங்கள் குறித்து அறிந்து தெளிய செய்திகள் நமக்கு உதவுகிறது என்பது நன்றாக நமக்கு தெரிந்ததுதான். ஒவ்வொரு நாளும் செய்திகள் தெரியாமல் இருப்பது குற்றம் என்ற அளவில், பிறர் அதைபற்றி நம்மிடம் பேசும்பொழுது கூறியிருப்பார்கள் என்பது உண்மை.


NEWS

இந்த ஆங்கில வார்த்தையை அக்ரனிம் (Acronym) முறையில், வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு ஆகிய நான்கு திசைகளின் வழியாக பார்க்கும் பார்வையை, இந்த செய்திகள் வழங்குகிறது என்பது பொதுவான கருத்து.  ஆனால் திசையும், பார்வையும் என்று எடுத்துக்கொண்டால், பத்துவகையானவை உள்ளன. அந்த கூடுதல் ஆறு வகை என்ன? வட கிழக்கு, வட மேற்கு, தென் கிழக்கு, தென் மேற்கு, மேலே, கீழே என்பன ஆகும்.


ஓசிபேப்பர்

அந்தக்காலத்தில் ஓசிபேப்பர் ஒரு மிகப்பெரும் பிரச்சனையாக இருந்துவந்தது. காசு கொடுத்து வாங்குபவர் ஒருவர், படிப்பவர்கள் பலபேர். ஒரு செய்தித்தாள் வரிசைப்படி படிக்க வேண்டும் என்பது பலரின் விருப்பம். ஆனால் இந்த ஓசி பேப்பர் ஆசாமிகள், ஒரு தாளை பிரித்து தாருங்கள் என்பார், அவர் படித்துவிட்டு, இன்னொருவருக்கு பகிர்ந்து விடுவார். பேப்பர் வாங்கியவருக்கு அந்த தாள் மீண்டும் வருமா என்பது கேள்விக்குறி!

இதனால், நிறைய ஒரிஜினலாக பேப்பர் வாங்கியவர், ஒரு நூல் கொண்டு தைத்து விடுவார். ஏனென்றால், பிரிந்த பேப்பர் தன்கைக்கு வராது என்பதும், வரிசை மாற்றினாலும் பிடிக்காது என்பதும் காரணம். வாங்கி படித்து, பக்கம் மாற்றி வைத்துக்கொடுத்தால், காசு கொடுத்து வாங்கியவருக்கு, கோபம் வரும்.  இதனாலேயே, தையல், பிரிக்கமுடியாது அப்படியே படித்துத்தான் தருவேன் என்பார். ஓசிபேப்பர் ஆசாமி விடமாட்டார். இவர் படிக்கும் பொழுதே, அவர் அங்கங்கே தலையை நுழைத்து தடங்கல் செய்து, ஆகமொத்தமாக இரண்டு பேரும் சரியாக படிக்கமாட்டார்கள். 


கொக்கி போடும் தலைப்பு

இந்த ஓசிபேப்பர் ஆசாமிகளையும், செய்தித்தாள் வாங்க வைத்த பெருமை, பத்திரிக்கை தலைப்பு செய்திகளுக்கு உண்டு. மத்திய மந்திரிக்கு சிறை? என்று ஒரு செய்தியை போட்டு, ஓசி பேப்பர் ஆசாமிகளை மாட்டவைத்து விடுவார்கள். வாங்கி படித்துப்பார்த்தால், செய்தியில், விசாரணை என்று, சிறை செல்ல நேரலாம் என்று ஒரு யூகம் மட்டுமே இருக்கும். சினிமா கிசு கிசு கொக்கிகள் அதிகம். 




ஆர்வத்தை முறைகேடாக்குதல்

இந்த செய்தித்தாள் படிக்கும் ஆர்வ பரம்பரையில் வந்த நாம், இக்காலத்திலும் செய்திகளில் ஆர்வமாக இருப்பது இயல்பானதுதான். ஆனால் காலமாற்றத்தில், செய்தி வழங்குனர்கள், மக்களின் இயல்பு வாழ்க்கையில் நடக்கும் செய்திகளைத் தருவதற்கு பதிலாக, செய்திகளை தந்து மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிப்புக்கு உள்ளாக்குகின்றனர்.  மறைமுகமாக, மனிதர்களின் மனங்களில் ஒரு கிளர்ச்சியை தூண்டி, அதன்மூலம் உணர்ச்சிகளை ஊக்குவித்து, தவறாகவும் எதிராகவும் செயல்பட தூண்டுகிறார்கள். 

சிலவகைகளில் தனக்குச் சாதகமான நாட்டிற்கும், தலைமைக்கும், தலைவருக்கும் ஆதரவாக மக்களை திரட்டி, தங்களின் எதிரிக்கு பலிகடா ஆக்குகின்றனர். இதற்கெல்லாம் ஆதாரம் எளிதில் சிக்குவதில்லை. இது, உடலில் சேர்ந்துவிட்ட மெதுவாக வேலைசெய்யும் விஷம் போலானது ஆகும். அவரவர் கையிலேயே இந்த செய்திகள் சேரும்வகையில் இருப்பதால், அவர்களுக்கும் வேலை எளிதாக ஆகிவிடுகிறது. இப்படியான செய்திகளை தடுப்பதிலும், உண்மை அறிவதிலும் எல்லோருமே சோர்ந்துவிடுகின்றனர்.


மக்களின் செய்திகள்

தனிப்பட்ட நபர்களும், இப்பொழுது யூடுயுப் காணொளி மூலமாக செய்திகள் வழங்கிறார்கள். கைபேசி வழி செய்திகள், காணொளிகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பது மறுக்கமுடியாத உண்மை. சில வேளைகளில், பெரும் நிறுவனங்கள் காட்டாத, அவர்களுக்கு கிடைக்காத செய்திகளை மிக எளிதாக, இந்த மக்களின் செய்திகள் தந்துவிடுகின்றன. 

சமூக வளைத்தள தனி நபர் செய்திகளும், காணொளிகளும் விதிவிலக்கல்ல.

பேஸ்புக்கும், டிவீட்டரும் ஒரு நாட்டில், அம்மக்களின் கிளர்ச்சிக்கு உதவிசெய்வதை மறுக்கவும் முடியாது. ஆனாலும் இதிலும் பொய்யும் புரட்டும் கலந்திருக்கிறது, கட்டுக்கடங்காமல். 



உங்களை நெருக்கும் செய்திகள் 

நாலாபக்கங்களிலும் வரும் செய்திகள், உங்கள் கழுத்தை அல்ல, உங்கள் மனதை, அறிவை, வாழ்க்கையை நெருக்குகின்றன. உன் கையில் எதிரி வேண்டுமா, கை பேசியில் செய்தி பார், உன் வரவேற்பறையில் எதிரி வேண்டுமா? உங்கள் வீட்டு தொல்லைகாட்சியை பார். சாவகாசமாக ஓய்வு நேரத்தில் எதிரி வேண்டுமா? செய்தித்தாள் படித்துப்பார். 


மனமும் நிம்மதியும்

ஒரு மனிதனுக்கு வாழ்வியல் பொக்கிசம், அவனின் மனம்தான். அது அமைதியாக இருந்தால், அவனுக்கு நிம்மதியும் கிடைக்கும். அவனின் மனம் அமைதியை தேடிச்செல்வதில் ஆர்வமாகத்தான் இருக்கிறது. ஆனால் பல வழிகளில் தோல்வியுறுகிறது. 

உனக்கு உன் உன்னளவில் மனக்குழப்பங்கள் வேண்டுமா? உள்ளூர் செய்திகளை படி, கேள், பார்.

உனக்கு மாவட்ட அளவில் மனக்குழப்பங்கள் வேண்டுமா? மாவட்ட செய்திகளை படி, கேள், பார்.

உனக்கு மாநில அளவில் மனக்குழப்பங்கள் வேண்டுமா? மாநில செய்திகளை படி, கேள், பார்.

உனக்கு தேசம் அளவில் மனக்குழப்பங்கள் வேண்டுமா? தேசிய செய்திகளை படி, கேள், பார்.

உனக்கு உலக அளவில் மனக்குழப்பங்கள் வேண்டுமா? உலக செய்திகளை படி, கேள், பார்.

இப்படித்தான், இந்த செய்தி உலகம் நம்மோடு கலந்திருக்கிறது. இதில் ஆபாச செய்திகளும், போதைதரும் விளையாட்டு செய்திகளும் தனி.



செய்திகளை தேர்ந்தெடுங்கள்

அன்பர்களே, உங்களிடம் வந்து, மோதி, குவியும் செய்திகளை பிரித்தெடுங்கள். அதன் தலைப்புக்களில் மயங்காதீர்கள். உங்கள் மகத்தான ஓவ்வொரு நொடியையும், உங்கள் மனம் கெட பயன்படுத்தாதீர்கள். படித்தால், கேட்டால், பார்த்தால் என்ன ஆகிவிடப்போகிறது என்று இறங்கிவிடாதீர்கள். ஏற்கனவே நம் மனம் பலப்பல குப்பைகளில் சிக்கி தவிக்கிறது. இன்னும், இனிமேலும் குப்பைகள் வேண்டாம். விழிப்போடு இருங்கள், நிம்மதியோடு இருங்கள். அமைதியாக இருங்கள். வாழ்வியலை அனுபவியுங்கள்.

இயற்கையும், இரவு வானமும், தரும் செய்திகள் மகத்தானவை. அவைகளை படியுங்கள், கேளுங்கள், பாருங்கள். வாழ்க வளமுடன். 

------

Photos thanks to: Marjan Blan l Sierra Koder l Francisco Gonzalez l FreeVector l Google





My Vote Goes to


 என் ஓட்டு யாருக்கு?


முதல் ஓட்டு அனுபவம்

நான் 18 வயது நிரம்பி, புதிய “மனிதனாக” மாறிய நாட்களில், ஓட்டுசீட்டில் என் பெயர் ஏறிக்கொண்டது. ஓவ்வொரு கட்சி வாக்கு படிவத்திலும் என் பெயரை படித்துப்பார்த்து, வாக்குச்சாவடி சீட்டு வாங்கு வைத்துக்கொள்ளும் பொழுது பெருமையாகவே இருந்தது. என்வீட்டில் மொத்தம் என்னையும் சேர்த்து எட்டு ஓட்டுகள் கிடைக்கும். எங்கள் பகுதி குறிப்பிட்ட கட்சிக்குரியது என்றெல்லாம் இல்லை எனினும்,  திமுக, அதிமுக, ஆர்வமுள்ளவர்களே அதிகம். ஆங்காங்கே சிலர் காங்கிரஸ். சிலர் இ.கம்யூனிஸ்ட் என்று சொல்லிக்கொள்வதும் உண்டு. எல்லோருமே கண்ணைப்பறிக்கும் புனிதமான வெள்ளை ஆடைகளில் “தங்களை” மறைத்திருந்தார்கள் என்றுதான் சொல்லவேண்டும். நானும் என் அம்மாவும், அருகே இருந்த வாக்குச்சாவடியாக மாற்றப்பட்ட பள்ளிக்கு நடந்துசென்றோம். பக்கம் என்பதால், நடந்தே சில தெரு மாறி செல்கையில், ஒரு காங்கிரஸ்காரர் வீட்டில் பல குதிரை வண்டிகள் நின்றிருந்தன. எங்களைப்பார்த்த அவர்,

“ஓட்டு சாவடிக்குத்தானேம்மா, இருங்க. வண்டி வைக்கிறேன்” என்றார்.

“வேணாண்ணா. நடந்துடறோம்” அம்மா

“அட, இருங்க போவோம். தம்பிக்கி கன்னி ஓட்டா? டேய் தம்பி எந்த கட்சிக்கு ஓட்டு போடனும் தெரியுமா?”

“தெரியும் சார்” நான்

“@க்கு போட்டுடு என்னா!” என்றார் சிரித்துக்கொண்டே.

இவ்வளவு சத்தமாக சொல்லுகிறாரே என்று நினைத்துக்கொண்டேன். அவர் வீட்டில், எப்போதாவது அந்தவீட்டின் அருகே, கடந்துவருகையில் ஏறக்குறைய என்வயதை ஒட்டிய கான்வெண்ட் பள்ளி மாணவியை பார்த்திருக்கிறேன். என்னை விட அழகாகவும் இருப்பாள். அது அவர் மகளா, பேத்தியா என்பது கூட தெரியாது. இந்த நேரத்தில் என் கண்கள், பருவ வயதின் ஆர்வத்தில், அந்த மாணவியை தேடத்தான் செய்தன. வேறு வழியின்றி, எங்கள் வீட்டிலிருந்து 800 மீட்டர் தூரமிருந்த பள்ளிக்கு, ஒரு 500 மீட்டர் தூரத்திற்கு குதிரை வண்டி பயணம். வாக்கு சாவடியில் என் பெயரையும் என்னையும் சரிபார்த்து, விரலில் மைவைத்து, 

“தம்பி, ஒரு தடவைதான், ஒரு பெயரில்தான், ஒரு சின்னத்தில் தான் குத்தனும் சரியா?”

ஓ அப்போ மூணு தடவை குத்தனுமா?! என்று கிண்டலடிக்கும் அளவிற்கு நான் வளரவில்லை. 

வேட்பாளர் பெயர், சின்னம் பட்டியல் கொடுத்து அனுப்பிவைக்க, ஒதுக்கப்பட்டிருந்த அட்டை மறைவுக்கு பின்னே, ஸ்வத்திக் சின்னம் மை தொட்டு அழுத்தி, பதித்தேன். 


அரசு + இயல் = அரசியல்

ஒரு நாட்டின் பாதுகாப்புக்கும், மக்களின் வாழ்க்கை வளம், கல்வி, பொருளாதாரம், எதிர்கால சந்ததியினருக்கான வழி இவற்றை, இயல்பாக, அரசால் வழிநடத்துவதற்கு அமைவதுதான் அரசு. ஒரு காலத்தில் “மன்னர் பரம்பரை வழியிலில் இருந்து” மக்களால் தேர்ந்தெடுக்கும் நிலைக்கு மாறிவிட்டது. இது காலப்போக்கில், தலைவர், தலைவர் மகன், தலைவரின் பேரன், தலைவரின் கொள்ளுப்பேரன் என்று நீண்டுக்கொண்டே போய் மறுபடி “தலைவர் பரம்பரை வழிக்கு” மாறிவிட்டது, அத்தலைவர்களை தேர்ந்தெடுத்த மக்களுக்கு கிடைத்த சாபக்கேடு.

என்றைக்கு அரசியலில் இருந்துகொண்டு, அதை, தன்னை, தன் குடும்பத்தை உயர்த்துவதற்கு ஒரு தொழிலாக நினைக்க ஆரம்பித்தார்களோ அப்போதிருந்தே இந்த நாட்டிற்கான மலர்ச்சியில் தடை வந்துவிட்டது. இன்னொன்று, சமூகத்தில் தனக்கு கிடைக்கும் மரியாதை, பதவியின் அதிகாரம் இதெல்லாம் அரசியல்வாதிகளுக்கு மிகுந்த தேவையாகியது. மக்களுக்கான, நாட்டிற்கான சேவைதான் “அரசியல்” என்பது பொய்யாக போனது. 

உன்னால் நான், என்னால் நீ என்று இருகட்சியினருக்கும் இருக்கும் பொது தன்மையில், யாரும், யாரையும் காட்டிக்கொடுக்காமல் “இன்றுவரை” வளர்ந்து வருகின்றனர் என்பதுதான் உண்மை.  


குரங்கும் பகிர்வுகளும்

குரங்குகள் மட்டுமே அதிகமாக வாழும் அந்த சிறு காட்டுப்பகுதியில்,  உணவு கிடைக்காது வாடின. நல்ல உள்ளம் கொண்ட அந்த கிராமத்து மக்கள், தங்கள் தோட்டங்களில் கிடைத்த மாம்பழங்களை, ஒரு பெட்டியில் போட்டு, அந்த குரங்குகள் இருக்கும் இடங்களில் வைத்தனர். முதலில் குரங்குகள் அப்பெட்டியில் இருந்த மாம்பழங்களை பார்த்தாலும், கிட்டே வராமல் தள்ளியே நின்றன. நம்மை விட விலங்குகளுக்கு “வாசனை உணர்வு” மிக அதிகம். ஆனாலும் கிட்டே வரவில்லை. சில பெரிய வயதான குரங்குகள் கொஞ்சம் கிட்டே வந்தன. ஆர்வத்தில் நெருங்கப்போன குட்டி குரங்குகளை, அதன் தாய்கள்,  வாலைப்பிடித்து இழுத்து நிப்பாட்டின. 

வயதான குரங்குகள் பெட்டியை பாதுகாப்பாக தட்டி பார்த்துக்கொண்டு, பழத்தை எடுத்தன. சாப்பிட்டன. உடனே மற்ற குரங்குள் அனைத்தும் கிட்டே நெருங்கி, ஒரு குரங்கு, பழத்தை எடுத்துவிட்டு பாதுகாப்பான இடத்திற்கு நகர, அடுத்த குரங்கு பழத்தை எடுத்து அதுவும் பாதுகாப்பாக நகர்ந்துவிட இப்படியே எல்லா குரங்குகளும், மாம்பழத்தை எடுத்துக்கொண்டன. 

இந்த நிகழ்வில்,

1) ஒரு சில குரங்குகள் ஒரு பழம் மட்டுமே எடுத்துக்கொண்டன.

2) சில குரங்குகள் இரண்டு கைகளிலும் இரண்டு பழங்களை எடுத்துக்கொண்டன.

3) எந்த குரங்கும் ஒன்றோடு ஒன்று முட்டி மோதி, இடித்துக்கொண்டு பழங்களை எடுக்க போட்டி போடவில்லை.

4) ஒன்றை ஒன்று தள்ளிவிட்டோ, தலைக்கு மேலே ஏறியே பழத்தை எடுக்கவில்லை

5) தனக்கு கிடைக்கவில்லை என்று எந்த குரங்கும், இன்னொரு குரங்கின் மேல் பாய்ந்து சண்டைக்கு செல்லவில்லை.

6) தனக்கு கிடைக்காது யாருக்கும் கிடைக்க கூடாது என்று பெட்டியை தள்ளி உருட்டிவிடவில்லை.

7) தன்னால் முடிந்த அளவில் மாம்பழம் வேண்டும் என்று நிறைய எடுத்துக்கொள்ளவில்லை.

8) யாருக்கு கிடைத்தால் என்ன? கிடைக்காவிட்டால் என்ன? என்று எந்த ஒரு குரங்கும், பெட்டியோடு மாம்பழத்தை தூக்கிக்கொண்டு ஓடவில்லை.

9) தனக்கு மாம்பழம் கிடைக்கவில்லை என்பதற்காக கவலைப்படவில்லை, சினம் கொள்ளவில்லை, ஆத்திரப்படவில்லை

10) எந்தக்குரங்கும் சாப்பிட்டு விட்டு மீண்டும் மீண்டும் வந்து மாம்பழத்தை எடுத்துக் கொள்ளவில்லை.

குரங்குகளுக்கு கட்சி இல்லை, கொள்கைகள் இல்லை, அரசியல் ஆர்ப்பாட்டமும் இல்லை, தலைவர்கள் இல்லை, தொண்டர்கள் இல்லை. இப்படி இல்லாததினால் அவைகள் தாழ்ந்து போகவும் இல்லை. 


#குரங்கிலிருந்து மனிதன் வந்தானா? இல்லையா என்ற கேள்விக்கு நீங்களே பதில் சொல்லுங்கள்.


வாழ்த்தெரியார் ஆளத்தெரியாதோர்

வாழ்த் தெரியாதோர் பெரும்பாலும் வாழ்நாட்டில்

     ஆளத் தெரியாதோர் ஆட்சியே நடைபெறும்

கோழை, கயவர், கொலைஞர், தடியர்கள்,

    ஏழை, நோயுற்றோர் எங்குமே காட்சியாம்.

இந்த கவியை, குருமகான் வேதாத்திரி மகரிசி அவர்கள் 1958ம் ஆண்டு எழுதியிருக்கிறார். (ஞானக்களஞ்சியம் நூல் ஒன்று, 129ம் கவி)


மன்னிப்போம் மறப்போம்

மக்களிடையே பொய்யுரைகள், வெறுப்புரைகள், வெற்றுவாக்குறுதிகள் கொடுத்து, மக்களை தன் வசம் திருப்பும் கலையை, எல்லா கட்சி தலைவர்களும் கற்றிருக்கிறார்கள். தாங்கள் பிறர் மூலமாக தங்களை உயர்வாக சொல்லி, புகழ்பரப்பிக்கொள்ளும் தன்மையும் அவர்களுக்கு உண்டு. வேண்டுமென்றால் காலில் விழவும் தயங்குவதில்லை. அந்த அளவிற்கு “அதிகார போதையில்” ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். உண்மை உரக்கச்சொல்வோம் என்ற செய்தித்துறைகள் கூட, பூசி மழுப்பிக்கொண்டிருக்கின்றன, அதுவும் ஒரு கட்சி சார்பாகவே.

நாங்கள் தப்புசெய்திருக்கிலாம். நாங்கள் திருத்திக்கொள்கிறோம். என்று “சும்மா” கேட்டாலும், “பணம்” கொடுத்து கேட்டாலும், மக்கள் “மன்னிப்போம் மறப்போம்” என்று கடந்த ஆட்சிக்காலத்தில் தாங்கள் பெற்ற எல்லா கொடுமைகளையும் கடந்து, மீண்டும் அதே அரசை வரவேற்கின்றனர்.

குடும்ப பரம்பரை என்பதுப்போலவே, தனி மனித சிந்தனையும், அரசை தேர்ந்தெடுக்கும் உரிமையும் பலருக்கு இல்லை. கூடவே தனது “இந்த வளர்ச்சிக்கு” காரணம் இந்த அரசுக்கு ஓட்டு போட்டதால்தான், அதனால் நீயும் போடு என்று பிள்ளைக்கும் ஊட்டி வளர்க்கினர். 

இவர்களிடம் பணம் வாங்கிவிட்டேன். அதை செலவும் செய்துவிட்டேன். தின்ன காசுக்கு, நியாயமா “இவங்களுக்குத்தான் ஓட்டு போடனும்” என்று வாக்கு அளித்து விடுகின்றனர். பணம் பெற்று ஓட்டு போட்டால், அடுத்த அந்த ஐந்து ஆண்டுகளில் உங்களுக்கான தீர்வை எப்படி கொடுப்பார்கள்?!

“யோவ், நீதான் அன்னைக்கே காசு வாங்கிட்டேயேயா? இப்ப என்ன இதுக்கு வந்து இங்க நிக்கிற?!” என்று கேட்க மாட்டார்களா? 


கட்சியற்ற ஆட்சி

மனிதனின் அடிப்படையான தேவைகள் மூன்று,

1) உணவு 2) உடை 3) இருப்பிடம்

மேலும், அடுத்ததாக கல்வி, மருத்துவ உதவி, தொழில்வாய்ப்பு, மக்களின் பாதுகாப்பு ஆகிய அடுத்த நான்கு தேவைகள் போதுமானதாக இருக்கும்.  ஆனால் தனிப்பட்ட தேவைகள் என்றால் ஆளாளுக்கு மாறுபடும் எனவே தனித்தேவைகளை நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. எந்த ஒரு அரசும் இந்த முக்கிய அடிப்படை முன்றும், அடுத்த நான்கும் நிறைவேற்ற முடிவு செய்தாலே போதுமானதுதான்.

ஆனால் நாட்டில் ஒவ்வொரு கட்சிக்கும் ஓவ்வொரு கொள்கைகள், அதிலும் ஒன்றுக்கொன்று முரண்பாடுகள். சேவை மக்களுக்கானது என்றால் “ஒரே மாதிரிதானே இருக்க வேண்டும்?!” எத்தனை கட்சிகள் அரசாள வந்தாலும், 1) கடன் 2) வறுமை 3) கல்வியின்மை ஆகிய மூன்றும் இன்றுவரை தீர்க்கப்படவே இல்லையே?!

எனவே கட்சிகளற்ற ஆட்சிதான் நன்மை தரும் என்றும், வேதாத்திரி மகரிசி அவர்கள் தீர்வு (ஆண்டு 1961) தருகிறார்.


இன்னும் சில வார்த்தைகள்

வேதாத்திரி மகரிசி அவர்கள் “அரசியல், ஆட்சி, தலைவர்கள்” குறித்து இன்னும் என்ன சொல்கிறார் என்று பார்ப்போமே.

1) அரசியலே மக்களை அடக்கிடவும், உறிஞ்சிடவும் ஏற்றவழி என்பதை தலைவர்கள் அறிந்துகொண்டனர்.

2) அரசியலே முரடர்களின் சொத்தாய் மாறும் அவலநிலையை முதலில் மாற்றவேண்டும்.

3) தெளிவற்ற மக்களிடம் சுயநலத்தோர், தேச, மத, ஜாதி, இன வெறியூட்டி, தெரிந்தால்போல நடித்து புகழ் பெறும் நடிகராக, அரசியல் தலைவர்கள் இருக்கிறார்கள்


வாழவைக்கும் ஆட்சி

கடன் வறுமை கல்வியின்மை என்ற மூன்று

களங்கங்கள் உலகினிலே மறைய வேண்டும்

உடன்பிறந்தார் போலஉள்ளம் ஒன்றி மக்கள்

உயர்நிலையில் வாழ வைக்கும் ஆட்சி வேண்டும்.

என்று வேதாத்திரி மகரிசி அவர்கள், ஆட்சியாளார்களை வரவேற்கிறார்.


வாக்கு தேர்வு

யாரோ சொல்கிறார்கள், என் நண்பர் சொல்கிறார். என் தந்தை சொல்கிறார், என் வாழ்க்கைதுணை சொல்கிறார். சமூக வலைத்தளங்களில் சொல்லுகிறார்கள். செய்தி தொலைகாட்சியில் சொல்லுகிறார்கள். தொண்டரே சொல்கிறார். தலைவரே சொல்கிறார் என்றெல்லாம் “ஒரு சார்பு” நிலை எடுத்து உங்கள் வாக்கை வீணடிக்காதீர்கள்.

ஆட்சியாளர்களின் கடந்த கால நிலையை அலசுங்கள், இப்போது சொல்லும் வாக்குறுதிகளை கேளுங்கள். இரண்டையும் ஒப்பிட்டுப்பாருங்கள். கடந்த ஆட்சியை நிறைவேறாமல், நிறைவேற்றப்படாமல் போன காரணமென்ன என்பதை சிந்தியுங்கள். அது அந்த அரசின் அலட்சியம் என்றால், அவர்களுக்கு மறுவாய்ப்பு தருவதில் ஒரு பிரயோஜனமும் இல்லை. கண்டிப்பாக தவிர்த்து விடுங்கள். எளிய தலைவர்களை தேர்ந்தெடுங்கள். உங்கள் நண்பரோ, அறிமுகமானவரோ இருந்தால் அவர்களுக்கு வாக்களியுங்கள். கட்சி என்ற பாசம், ஒட்டுதல் நிலையில், அவர்கள் நிறுத்தும் எந்த மனிதருக்கும், உணர்ச்சி வசத்தால் வாக்களிப்பதை தவிருங்கள்.

உங்கள் வாக்கும், உங்களுக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு செல்லும் எனவே, ஒரு நாள் பணத்திற்கு ஏமாறாதீர்கள். விரலோடு ஒட்டும் மையில், மொத்த வாழ்க்கையையும் இருட்டாக்காதீர்கள். உங்கள் வாக்கால், பிற மனிதரையும், சமூகத்தை அவதிக்குள்ளாக்காதீர்கள்.


வாழ்க வளமுடன். 


-----------------

Photo thanks to: Trac Vu @tracminhvu