CJ for You: duty

duty

Showing posts with label duty. Show all posts
Showing posts with label duty. Show all posts

Who are Siddhars? Why is it that only Tamil Siddhas are spoken of? Are there still Siddhas? How useful is their support to us? Will you explain?


வாழ்க வளமுடன் ஐயா. சித்தர்கள் என்பவர் யார்? அது ஏன் தமிழக சித்தர்கள் மட்டுமே உயர்வாக பேசப்படுகிறார்கள்? இன்னமும் சித்தர்கள் இருக்கிறார்களா? அவர்களின் துணை நமக்கு எந்த அளவில் பயன்படுகிறது? விளக்குவீர்களா?



இந்த உலகில், பல்லாயிரம் ஆண்டு பரிணாம எழுச்சியில், இயற்கையின் உன்னதமாக, முழுமை வடிவமாக வந்த அமைந்த ஒரு ஜீவ, உயிரினம்தான் மனிதன். மனிதன் திடீரென வானத்தில் இருந்து குதித்துவிடவில்லை. யாரும் ஒருநாளில் உருவாக்கிடவும் இல்லை. ஒரு பெரிய மரத்தின் மூலம், சிறிதாக, அணுவாக இரு விதைக்குள் இருந்ததுதானே? அதுபோலவே மனிதனின் மூலமும், அணுவில் இருந்துதான் தொடங்கியது. அந்த அணு ஒருசெல் உயிரியாக மலர்ந்து, ஒர்ரறிவு தாவரமாக மலர்ந்து, ஐந்தறிவு விலங்கினங்களாக உயர்ந்து, அந்த அறிவு வேட்கை நின்றிடாமல், முழுமைபெற துடித்து, பல்வேறு பிறவிகளுக்கு அப்பால் வந்ததே, மனிதப்பிறவியாகும். ஆறாம் அறிவில் முழுமைபெற்று, தன் மூலம் நோக்கி நகர்ந்து நின்றவனே மனிதன்.

இந்த தற்கால, நவீன விஞ்ஞானம் சொல்லும் முன்பாகவே, மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, சித்தர்கள் கண்டறிந்தனர். சும்மா வெறுமனே யூகமாக அவர்கள் சொல்லவில்லை. சித்து என்ற உயிரின் மூலம் எது? என்று தேடி அதை முழுமையாக அறிந்ததனால்தான், சித்தர்கள் என்றும் அழைக்கப்பட்டனர். மனித பிறப்பின் ரகசியமும், நான் யார்? என்ற தேடல் முழுமையும், பொருளுக்கும், உயிருக்கும், இயற்கைக்கும், பிரபஞ்சத்திற்கும், மூலமாகவும் இருந்து, இயக்கிக் கொண்டும் இருக்குமந்த, மெய்ப்பொருளையும் கண்டார்கள்.

தன் ஆரம்ப புள்ளியை, அதில் கண்டு, உண்மை அறிந்து அதுவே மனித பிறப்பின் நோக்கமும், முடிவும், கடமையும் என்று, உலக மக்களுக்கு அறியத்தந்தார்கள். விரும்பியோர்க்கு யோகமாகவும், எளியோருக்கும், பாமரரருக்கும் பக்தியாகவும் தந்தார்கள். 

சித்தர்கள், தங்களை ஒழுக்கம், கடமை, ஈகை வழியாக, உலகோர்க்கும் சேவை செய்வதையே முழுமையாக்கிக் கொண்டார்கள். இன்றும் பலப்பல சித்தர்கள் இருக்கிறார்கள். ஆனால், நீங்களும் நானும் நினைப்பதைப்போல அவர்கள் தங்களை வெளிக்காட்டிக் கொள்வதில்லை. இப்படியான சித்தர்களை தமிழ்நாடு கொண்டது, மிகச்சிறப்பு. தமிழ்நாட்டின் காலநிலையும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது. சித்தர்களால், நாம் பெருமைமட்டும் அடையவில்லை. வாழ்வின் முழுமையையும் அடைகிறோம்.
 
இந்த காணொளி வழியாக இன்னும் பல தகவல்களை அறிந்து கொள்வோம்.

தமிழக சித்தர்களின் கடவுள் தேடல்! The search for God by the Siddhars of Tamil Nadu! Part 01
வாழ்க வளமுடன்.
-

In this living world, how can we be aware of our actions and duties?


வாழ்கின்ற இந்த உலகில், நம்முடைய செயல்களிலும், கடமையிலும், விழிப்புணர்வாக இருப்பது எப்படி?




கடமையில் விழிப்புணர்வு என்பது, ஓவ்வொரு மனிதனுக்கும் தேவையானது. தன்னுடைய வாழ்வில், துன்பமும், சிக்கலும் தானாக, உருவாக்கிக் கொள்ளாத நிலை, இங்கிருந்துதான் கிடைக்கும். கவனமும், பாதுகாப்பும் தரும்.
இன்ப வாழ்வுக்கு, திறந்த மனப்பான்மையோடு கருத்தை மனதில் வாங்கிக் கொள்வது (Receptivity) அதற்கேற்ப தன்னை மாற்றிக் கொள்வது (Adaptability) குற்றத்தைக் கண்டபோது, அதை மன்னித்து மறந்து விடுவது (Magnanimity) ஆகிய மூன்று தன்மைகள் நம் எல்லோரிடமும் வளர்க்கப்பட வேண்டும். இதோடு தீமையை நீக்கி, நன்மையே செய்தல் (Creativity) என்ற தன்மையும் வேண்டும்.
பிறர்க்கு உதவி புரிவதில் கூட நாம் இக்காலத்தில் விழிப்போடு இருக்க வேண்டியுள்ளது. உதவி தேவைப்படுபவர்கள் தான், அதற்கு தகுதியுடையவர்கள் தான் நம்மை நாடி வருகிறார்கள் என்று நினைப்பதற்கில்லை. 
அப்படித் தகுதியுடையவர்களாய் இருப்பினும், தகுதி பெற்ற எல்லோருக்குமே நாம் உதவி செய்ய முடியுமா என்பதையும் நாம் சிந்தித்துப் பார்த்துக் கொள்ள வேண்டும். 
நாம் ஒரு கனி மரம் வளர்க்கின்றோம். கனிகளை மட்டும் தான் கொடுத்து உதவி செய்யலாமே ஒழிய மரத்தையே வெட்டிக் கொடுத்துவிட்டால் பிறகு கனி எப்படிக் கிடைக்கும்? 
பொருள் பறிக்கவே சிலர் பற்பல வேடங்களில் நம்மை நாடி வரும் இக்காலத்தில், பிறர்க்கு உதவி செய்வதில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியுள்ளது, 
பிறர் உதவி என்பது கூரிய ஆயுதம் போன்றது. தவறிமாட்டிக் கொண்டால் அதற்கு நாமே பலியாகி விடுவோம். விழிப்பு நிலையோடு தான், நம் அளவுக்குத் தக்கபடி தான் நாம் பிறர்க்கு உதவ வேண்டும். 
நீதிபதி முன் நிறுத்தப்படும் குற்றவாளியை, எப்படி அந்நீதிபதி அவன் குற்றமற்றவனாகவும் இருக்கக்கூடும், என்று விசாரணையை துவக்குகிறாரோ, அதேபோல் நம்மிடம் உதவி நாடுபவரை "இவன் ஏன் ஏமாற்றுக்காரனாய் இருக்கக் கூடாது" என்று ஒரு கேள்வி எழுப்பிக் கொண்டு, பிறகு நல்லவன் தான் என்று சோதித்து அறிந்த பிறகே அளவோடு உதவி அளிக்க வேண்டும்.
உலக கடமையில் ஈடுபட்டுள்ள நமக்கு பல பொறுப்புகள் உண்டு. எவ்வளவு விழிப்புடன் நம் கடமையைச் செய்கிறோமோ அந்த அளவுக்குத் தான் நாம் வாழ்வில் இனிமை காண முடியும். இத்தகைய தெளிவான அனுபவ விளக்கத்தை, பாமர மக்களின் தத்துவஞானி, வேதாத்திரி மகரிஷி அவர்கள் நமக்கு அறியத்தருகிறார்.

வாழ்க வளமுடன்.

Do you want to understand karma in a modern, scientific way? What is the way to do that?


உங்களுக்கு கர்மா என்பதை நவீனமாக, விஞ்ஞான விளக்கமாக புரிந்து கொள்ள விருப்பமா? அதற்கான வழி என்ன?


கர்மா என்ற வினையை முதலில் புரிந்து கொள்வது அவசியம். கர்மா என்பது குறித்து, உதாசீனம் செய்வதற்கும் முன்பும், ஐயோ என்று பயப்படுவதற்கு முன்பும், கர்மா எப்படி ஏற்படுகிறது என்பதை தெரிந்து கொள்வதும் அவசியம். ஒரு உதாரணமாக, இக்கால கம்ப்யூட்டர் (கணினி) மொபைல் (கைபேசி) வழியாக, இணையத்தில் நிறைய செய்திகள், படங்கள், சினிமா, பாடல், இசை, நூல்கள் எல்லாம் பார்க்கிறீர்கள். உங்கள் நண்பர்களுக்கும், பிரியமானவர்களுக்கும் ஏதேனும் செய்திகள் அனுப்புகிறீர்கள். அவர்களும் உங்களுக்கு அனுப்புகிறார்கள். இக்கால இளவட்டங்கள் போல சில கெட்ட சமாச்சாரங்களும் கூட இருக்கலாம் தானே? 

இப்போது இந்த, அனுப்பியதும், பெறுவதும் ரகசியமாக இருக்கும். நீங்களும், நீங்கள் யாருக்கு அனுப்பினீர்களோ அவர்கள் மட்டுமே பார்க்க முடியும். எனினும், இந்த நடவடிக்கை எல்லாமே, பதிவும் ஆகும். உங்களவிலும், அவர் அளவிலும் அதை அழித்துவிடலாம். ஆனால், கணினி, கைபேசி இவற்றின் மூலத்தில், நீங்கள் கைவைக்க முடியாது. அழிக்க முடியாது. ஒரு சாஃப்ட்வேர் என்ஜீனியர், ஒரு நிமிடத்தில், உங்களுக்கு இடையே என்ன நிகழ்ந்தது? என்ன பரிமாறிக்கொண்டீர்கள்? என்று அறியமுடியும் அல்லவா? முடியாது என்கிறீர்களா?

இந்த நடவடிக்கைகள் நல்லது, நேர்மையானது, உபயோகமானது என்றால் ஒருபிரச்சனையும் எழப்போவது இல்லை. யாரும் உங்களை குறை சொல்லவோ, திருத்தவோ, தண்டிக்கவோ, சிறைபிடிக்கவோ போவதில்லை. ஆனால் எல்லாமே தவறு, அடுத்தவரை கெடுப்பது, பிரச்சனைக்குரியது, ஆபாசமானது, சட்டத்திற்கு புறம்பானது என்றால், எல்லாமே ஆரம்பமாகிவிடும் அல்லவா? இதை நான் செய்யவே இல்லை என்று உங்களால் மறுக்கவும் வழி உண்டா? யாரோ செய்தார்கள் என்று கடந்துவிட முடியுமா?

இந்த வழியில், ஓர் உண்மை உங்களுக்கு புரியவரும். செயலை செய்தது நீங்கள். அதையெல்லாம் பதிந்தது யார்? சாஃப்ட்வேர் என்பீர்கள். ஒரு சாஃப்வேர் உங்கள் நடவடிக்கையை பதிந்து வைக்கிறது என்றால், இந்த இயற்கை, உங்கள் நடவடிக்கையை பதிந்து வைத்துகொள்ளாது என்கிறீர்களா? அதற்கு அந்த திறமை இல்லை என்று எடைபோடுகிறீர்களா? இயற்கையை, இதையெல்லாம் செய்யத் தெரியாத முட்டாள் என்கிறீர்களா?

உங்களுக்கு இப்போது வயது என்ன? என்று எனக்குத் தெரியாது. ஆனால், மூன்று வயதுக்கு முன் நீங்கள் எங்கே இருந்தீர்கள்? எப்படி இருந்தீர்கள்? நினைவிருக்கிறதா? பிறந்ததில் இருந்து, கிட்டதட்ட ஆயிரம் நாட்கள் உங்களை, வழி நடத்தியது யார்? நீங்களே தானா? இந்த கேள்விக்கு விடை இருக்கிறதா?

அந்த ஆயிரம் நாட்களும், அதற்குப்பிறகு, இன்றுவரை நீங்கள் செய்துவந்தது, உங்களுக்கு நினைவில் இல்லாவிட்டாலும், பதிவு என்பது இருக்கும்தானே? இதை நீங்கள் மறுக்கமுடியுமா? உங்கள் ஹார்ட் டிஸ்கில் அழித்துவிடலாம். ஆனால் இணையம் வழியான, நெட்வொர்க் வழியான சர்வர் என்ற சோர்ஸ் டிஸ்கில் இருக்கும் அல்லவா? அதுதான் கர்மா என்ற வினை ஆகும். இது பதிவுதான். நல்லதை அப்படியே விட்டுவிடலாம். கெட்டதை, தீய விளைவு தந்ததை, திருத்த வேண்டிய கட்டாயம், ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ளது. 

அப்படியானால், உங்கள் கர்ம வினை மட்டும்தான் இருக்கிறாதா? என்ற கேள்வி எழுந்தால், இல்லை. நீங்கள் தனித்த ஒரு நபர் அல்ல. உங்களை உருவாக்க, தாயும் தந்தையும் துணையாக இருந்தார்கள். அவர்களுக்கு அவர்களின் தாயும், தந்தையும், இப்படி ஒன்று இரண்டாக, இரண்டு நான்காக அடுக்குகளாக போய்க்கொண்டே இருக்கும். இதில், ஏழு தலைமுறை என்று எடுத்துக் கொண்டால், அத்தனையும், உங்களுக்குள்ளாக இருக்கும். ஏற்கனவே பார்த்த உண்மையில், உங்கள் மூன்றுவயதிற்கு முன்னால், உங்கள் பசி, தூக்கம், எழுதல், இயற்கை உபாதைகள் இதையெல்லாம், இயற்கை கவனித்தது. அதனோடு உங்கள் நடவடிக்கைகள், ஏதோ ஒரு பதிவின் வழியாகவே நிகழ்ந்தது. ஒரு களிமன் பானையாக மாற்றம் பெறுவது, பானையால் அல்ல. மண்ணால் அல்ல. அந்த வடிவத்தை தரும் மண் கலைஞனால் தானே? அவனும் அந்த சக்கரங்களை சுழற்றி, நீர் ஊற்றி குழைத்து, வழித்து உருவாக்குகிறான். இப்படி உங்களுக்குள்ளாக நீங்கள் இல்லாமலேயே எல்லாம் நிகழ்ந்தது தானே? அந்த நிகழ்வுகளின், செயல்களின், வெளிப்பாடுகளின் பதிவுகள்தான் கர்மா. அதை தமிழில் வினை என்று சொல்லுகிறோம்.

இந்த வினைகள் மூன்று பிரிவுகள் ஆகும். சஞ்சிதம், பிராரப்தம், ஆகாமியம் ஆகியன ஆகும். சித்தர்கள் சஞ்சிதம் என்பதை பழவினை என்றும், பிராரப்தம், ஆகாமியம் இரண்டையும் சேர்த்தே புதுவினை என்றும் சொல்லுகிறார்கள். சஞ்சிதம் என்ற பழவினை, நாம் அறியாதது, நமக்குள்ளாக இருப்பது. பிராரப்தம், ஆகாமியம் என்ற புதுவினை, நாம் பிறந்தது முதல் இன்றுவரை நாமே நமக்குள் சேர்த்துக் கொண்டது.

இந்த கர்மா என்ற வினை தீர்க்கவே பிறப்பெடுத்தோம். ஆனால், அதை முற்றாக மறந்துவிட்டு, உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நம் தாய் தந்தைக்கும் தெரியவில்லை. நமக்கும் தெரியவில்லை. நம் பிள்ளைகளுக்கும் தெரியப்படுத்தவில்லை. அவர்களுடை பிள்ளைகளுக்கும் தெரியப்போவதில்லை.

சரி, இந்த கர்மா என்ற வினை தீர்க்கப்பட்டால் என்னய்யா ஆகும்? இதை வார்த்தைகளால், உங்களுக்கு புரியவைத்திட முடியாது. அதை நீங்கள் உண்வாக பெறலாம். ஆம் முற்றிலும் விடுதலை உணர்வாக, உலகில் வாழ்ந்து மகிழலாம். நிறைவாக, வாழ்நாள் முழுவதும் என்பது உறுதி.

வாழ்க வளமுடன்.

Most of people not interested on yoga and they living till end, no issues on that. correct?


யோகத்திற்கு யாரோ ஒரு சிலர்தானே வந்து சேர்கிறார்கள், பெரும்பாலோர் எப்போதும்போல உலக இன்பம் அனுபவித்து வாழ்ந்து முடிந்துவிட்டால் போதும் என்றே இருக்கிறார்கள். அதில் ஏதும் குறை இருப்பதாக தெரியவில்லையே?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி: 

வளமுடன் ஐயா, யோகத்திற்கு யாரோ ஒரு சிலர்தானே வந்து சேர்கிறார்கள், பெரும்பாலோர் எப்போதும்போல உலக இன்பம் அனுபவித்து வாழ்ந்து முடிந்துவிட்டால் போதும் என்றே இருக்கிறார்கள். அதில் ஏதும் குறை இருப்பதாக தெரியவில்லையே?


பதில்:

நீங்கள் சொல்வது சரிதான். எப்போதுமே வாழ்கின்ற வாழ்க்கையில் தானாகவே யோகத்திற்கு வருபவர்களும், பிறர் சொல்லி கேட்டு யோகத்திற்கு வந்து அதை கடைபிடித்து வருபவர்களும் ஒருசிலர் தான் என்பதில் ஐயமில்லை. அதுபோலவே, பெரும்பாலோர் எப்போதும்போல உலக இன்பம் அனுபவித்து வாழ்ந்து முடிந்துவிட்டால் போதும் என்றே இருக்கிறார்கள். அதனால் நீங்களும் அப்படியே இருந்துவிடலாமே என்று நினைக்கிறீர்கள். சரிதானே?

அது உங்கள் விருப்பம், உங்கள் முடிவு, நான் தலையிடமாட்டேன். ஆனால் அதிலிருக்கும் உண்மையை நான் சொல்லியே ஆகவேண்டும். அதுதான் என்னுடைய கடமை. இந்த உலகில் நாம் அடிக்கடி பிறப்பதில்லை. ஏற்கனவே பிறந்தோமா? என்பதும் நினைவில் இல்லை, இனி எப்போதாவது பிறக்கப்போகிறோமா? என்பதும் நமக்குத் தெரியாது தானே? அப்படியானால் இருக்கின்ற இந்த வாழ்க்கையை நல்லவிதமாக, எல்லா இன்பங்களையும் பெற்று அனுபவித்து வாழ்வது நல்லதுதான். ஆனால் உண்மையாகவே அப்படி வாழ்ந்து அனுபவித்தீர்களா? அப்படி அனுபவிக்கவும் முடிகிறதா? என்ற கேள்விக்கு பதிலை சொல்லுவீர்களா?

வாழ்க்கை என்றால் கஷ்ட நஷ்டம் இருக்கத்தான் செய்யும், இதையெல்லாம் பெரிசாக எடுத்துக்கொள்ள முடியுமா? என்று என்னிடமே எதிர்கேள்வியும் கேட்பீர்கள். இந்த பிரபஞ்சம் முழுவதும் இன்பமே நிறைந்திருக்கிறது. அந்த இன்பத்தை நீங்கள் ஏன் மறுக்குறீர்கள்? என்று நானும் கேள்வி கேட்பேன். அது உண்மைதானா? ஆம். இந்த பிரபஞ்சம் முழுவதும் இன்பமே நிறைந்து இருக்கிறது. அதை நானும் அனுபவித்து மகிழ்கிறேன். உங்களைப்பொறுத்தவரை, ஏதேனும் செய்தால்தான் இன்பம் கிடைக்கும் என்றுதானே நினைக்கிறீர்கள்? ஆனால் சும்மா இருக்கும் சுகம் பற்றிய உண்மையை அறிவீர்களா? எதுவுமே செய்யாமல், இன்பத்தை தேடாமல், இன்பத்திலேயே நிறைந்து இருப்பது குறித்த உண்மை உங்களுக்குத் தெரியுமா?

தெரியாவிட்டாலும் பிரச்சனை இல்லை. அதனால் என்ன பிரயோஜனம்? என்று மறுபடி என்னிடம் எதிர்கேள்வி கேட்கிறீர்களா? சரி, நீங்கள் பிறந்ததே அந்த உண்மையை அறிவதற்குத்தானே? அதை மறந்துவிட்டீர்களே? அந்த உண்மை அறிந்துவிட்டால், நீங்களாக இருப்பது யார்? என்ற ‘நான் யார்?’ என்ற கேள்விக்கும் விடை கிடைத்துவிடுமே? அதை கிடைத்த இந்த பிறவியில் அறிந்து கொள்ளாமல், வாழ்க்கையை முடித்துக்கொள்வீர்களா? அது சோகம் இல்லையா? உணராமல் இறந்துவிடுவது கொடுமை தானே? இனி அந்த வாய்ப்பு எப்படி கிடைக்கும்? முடிந்தது முடிந்ததுதான்.

எனவே சுருக்கமாக முடித்துக்கொள்ளாலாம், உங்களுக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி ‘யோகத்தில்’ பயணியுங்கள். உங்களோடு வராதவர்களை ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். அது உங்களை முடக்கிவிடும். அதற்கு இடம்கொடுக்காமல், தொடர்ந்து பயணித்து, உண்மை விளக்கம் பெறுங்கள். குருவருள் உங்களுக்கு துணை இருக்கட்டும். நானும் உங்களை வாழ்த்து மகிழ்கிறேன்.

வாழ்க வளமுடன்

-

Will anyone give up domesticity, the world, and the earnings in order to know the duty of birth?


பிறப்பின் கடமையை அறிவதற்காக, இல்லறத்தை, உலகை, சம்பாத்தியத்தை யாராவது விடுவார்களா?



வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, பிறப்பின் கடமையை அறிவதற்காக, இல்லறத்தை, உலகை, சம்பாத்தியத்தை யாராவது விடுவார்களா?


பதில்:

பிறப்பின் கடமையை அறிவதற்காக, இல்லறத்தை, உலகை, சம்பாத்தியத்தை யாராவது விடுவார்களா? ஆமாம், சரியான கேள்விதான். இதைத்தான் குரு மகான் வேதாத்திரி மகரிஷியும் கேட்கிறார். எதற்காக விடவேண்டும்? உங்கள் இல்லறத்தை, உலகை, சம்பாத்தியதை விட்டு விலக வேண்டிய அவசியம் என்ன? அப்படி விட்டுவிட்டால் எப்படி இந்த உலகில் வாழ்வீர்கள்? யாரையாவது அண்டிப்பிழைத்தால் அது மிக கடினம் அல்லவா? அப்படியாக யாரேனும் நமக்கு வாழ்நாள் முழுதும் உதவமுடியுமா? என்று தான் கேள்விகளை அடுக்குகிறார்.

முதலில், உங்களை இதையெல்லாம் விட்டுவிட்டுத்தான், பிறவிக் கடமையை அறியவேண்டும் என்று சொன்னவர் யார்? அப்படி அறிவுரை சொல்லி உங்களை திசை திருப்பிவிட்டது யார்? மனதில் குழப்பத்தை ஏற்படுத்தியது யார்? உங்களுக்கும் யோகசாதனைக்கும் உள்ள தூரத்தை அதிகப்படுத்தியது யார்? இப்படியாக சொல்லி, உங்களின் இந்த பிறப்பை, உலகவாழ்வை வீண் செய்ய முயற்சித்தது யார்?

பிறவிக் கடமை என்பது, ‘நான் யார்?’ என்று தனக்குத்தானே கேட்டு, அதற்கான உண்மையை அறிந்து கொண்டு வாழ்வதுதான். இந்த ஆராய்ச்சிக்கும், அறிதலுக்கும் தடையாக, இல்லறம், உலகம், சம்பாத்தியம் தடையாக இல்லவே இல்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள். உங்களை நீங்கள் இனியாவது விளக்கம் பெற்றவராக மாற்றிக் கொள்ளுங்கள்.

யோகம் என்பது, ஓர் வழி ஆகும். அறம் என்ற இயற்கைக்கு முரண்படாத நிலையில், விளக்கத்தில், விழிப்புணர்வில் வாழ்வதற்கான கற்றுத்தேர்தல், ஒரு பாடமும், பயிற்சி முறையும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதற்கு வெறுமனே பயிற்சி என்பது இல்லாமல், குண்டலினி எனும் உயிராற்றலை அறிந்து உணர்ந்து கொள்வது அவசியமாகிறது. இதில் எந்த குழப்பமோ, தடையோ, பிரச்சனையோ இல்லவே இல்லை.

நாம் வாழும் இந்த உலகில், பெரும்பாலோர் இன்பத்தை நுகர்வதற்கு பதிலாக, இன்பத்தோடு துன்பத்தையும், இன்னும் பலப்பல பிரச்சனைகளையும்தான் சுமந்துகொண்டு, தீர்க்க வழியில்லாமல் வாழ்ந்து வருகிறார்கள். அப்படியான மனிதர்களுக்கு உதவுவதுதான் யோகம் ஆகும். எப்படியும், நீங்கள் நன்றாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். அந்த நம்பிக்கையிலேயே வாழ்ந்து வாருங்கள். காலம் உங்களுக்கு உதவும்.

வாழ்க வளமுடன்.

-

If we join in yoga, I think money earning will be lost. Correct?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, பணம் என்ற ஒன்றை வைத்துத்தானே வாழவேண்டியுள்ளது. யோகத்திற்கு வந்துவிட்டால் அதில் இழப்பு வந்துவிடுமே?!


பதில்:

உங்களுடைய புரிதலில் தவறு இருக்கிறது. இல்லையென்றால் யாரோ உங்களுக்கு தவறான தகவல்களை தந்திருக்கிறார்கள் என்றும் சொல்லலாம். முதலாவதாக யோகத்தையும், பணத்தையும் இணைத்து சொன்னது யார்? எதிர் எதிராக சொன்னதும் யார்? என்று தெரியவில்லை. ஆனால் பற்பல கதைகள் சொல்லி மக்களை, உங்களைப்போன்ற பலரை குழப்பி வைத்திருக்கிறார்கள் என்று சொல்லமுடியும்!

மனிதர்களாகிய நாம் ஆதிகாலத்தில் விலங்குகள் போல, வேட்டையாடி, உண்டு, உறங்கி வாழ்ந்து வந்தோம். அந்த வாழ்வில் தொடர்ச்சியில், பல்லாயிரம் ஆண்டுகள் அனுவமாக அறிவில் உயர்ந்து, ஒருவருக்கொருவர் பயண்பாடு கொள்ளவும், இன்னொருவருக்கு உதவவும் பண்டமாற்றும், பணமும் வந்து சேர்ந்தது. முக்கியமாக யாரும் யாரையும் ஏமாற்றி, சோம்பேறியாக வாழ்ந்திடக்கூடாது என்ற நிலையிலும், ஒரு வேலை அதற்கான கூலி என்ற முறையும் வந்துவிட்டது. நவீன கால மாற்றத்தில், வேலை, வியாபாரம், தொழில், நிறுவனம் என்று பலவாறாக உலகளவில் மாற்றம் வந்துவிட்டது. இத்திறமைகளை கற்றுக்கொடுக்க எண்ணற்ற கல்வி நிறுவனங்களும் உள்ளன. எனவே எல்லாவற்றிற்கும் பணம் முதன்மை என்பதில் ஐயமில்லை. அந்தப்பணத்தை சம்பாதிப்பது ஒவ்வொரு மனிதனின் கடமை என்பது உலகம் ஏற்றுக்கொண்ட உண்மை.

இங்கே யோகம் எப்படி பணத்திற்கு விரோதமாக போய்விட்டது என்று தெரியவில்லை. யோகத்திற்கு வந்துவிட்டால் ஏன் பணத்தை ஒதுக்கிடவேண்டும்? ஏன் பணத்தை வெறுக்கவேண்டும்? சம்பாத்தியத்தை விட்டுவிட வேண்டும்? அப்படி பணத்தை விட்டுவிட்டால், யோகத்தில் சென்றவர், உலகில் எப்படி உயிர் வாழ்வார்?! யார் உதவுவார்? ஏதேனும் காட்டுக்குச் சென்று பழம், காய்கறிகள் பறித்து உண்பாரா? வாழும் மக்களிடம் யாசகம் கேட்டு புசிப்பாரா? தன் தேவைகளை எப்படி நிறைவேற்றுவார்? யோகத்தில் வந்ததினால், இந்த உலகுக்கு அவர் அவசியமில்லாதவராக போய்விடுவாரா? இப்படியான எத்தனையோ கேள்விகளுக்கு விடை இருக்கிறதா? சரி, இதற்கு யோகமே தேவையில்லை என்ற முடிவுக்கும் நீங்கள் போய்விடுவீர்களா? இல்லைதானே?!

நன்றாக புரிந்து கொள்ளுங்கள். யோகம் என்பது வாழ்வியல் உண்மை நெறியாகும். அப்படியான யோகத்தையும் பணத்தையும் முடிச்சுபோட்டு, விரோதம் செய்யவேண்டாம். உங்கள் வழக்கமான வேலை, தொழில், வியாபாரம், நிறுவனம் நடத்தி பணத்தை சம்பாதியுங்கள். அதில் எந்த சுணக்கமும் வேண்டாம். நீங்கள் யோகத்தில் இருந்தபடி இதைச் செய்தால், உண்மையும், அளவும், நிறைவும் அமைந்திருக்கும். அதன் பலனாக உங்களை பலர் தேடிவருவதையும், அப்படி வருகின்ற எல்லோருக்கும் நிம்மதியும் கிடைப்பதை காண்பீர்கள். அதன்மாற்றமாக உங்களுக்கு வாழ்வில் அமைதியும் கிடைக்கும். முக்கியமாக இந்த உலகில் நாம் வாழும் வரை, சம்பாத்தியமும் அதன் நிறைவும் நமக்குத்தேவைதான்!

வாழ்க வளமுடன்.

What is the meaning of yoga instead of enjoying the earth life?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, இந்த உலகில் பிறந்ததே, நன்றாக, இன்பமாக வாழ்ந்து எல்லாம் அனுபவிக்கத்தான். அதை விட்டுவிட்டு பருவ வயதிலும் வீணாக யோகத்திற்கு வருவது தேவைதானா? அதற்கு அவசியம்தான் என்ன?


பதில்:

நல்ல கேள்விதான். இந்த உலகில் பிறந்ததே, நன்றாக, இன்பமாக வாழ்ந்து எல்லாம் அனுபவிக்கத்தான். அதை யாருமே மறுப்பதற்கில்லை. ஆனால், நீங்கள் அப்படி நிச்சயமாக அனுபவித்து வாழ்கிறீர்களா? அல்லது மற்றவர்கள் அப்படி நன்றாக இன்பமாக வாழ்கிறார்களா? என்று கேட்டுப் பார்த்திருக்கிறீர்களா? என்பதற்கு உங்களிடம் பதில் இருக்கிறதா? அதற்கு மாறாக, நீங்களாகவே மற்றவர்கள் அப்படி நன்றாக இன்பமாக வாழ்வதாக கற்பனை செய்து கொள்கிறீர்களா என்றும் ஆராய்ந்து பாருங்கள். இதுவரை அப்படி வாழ்ந்தவர்கள் தங்களின் அனுபவங்களை சொல்லி இருக்கிறார்களா? அப்படி என்னதான் சொல்லுகிறார்கள்? சொன்னார்கள்? என்றும் யோசித்துப் பாருங்கள்.

ஒரு இன்பம் என்றால் நிறைவு வரவேண்டும்,.அந்த நிறைவில் பேரின்பம் உணரவேண்டும். அந்த பேரின்பத்தில் அமைதி உணரவேண்டும். அப்படி நிகழ்கிறதா? எல்லாமே பற்றாக்குறையாக அல்லவா இருக்கிறது?! இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என்று தானே போய்க்கொண்டே இருக்கிறீர்கள்? உண்மையா? இல்லையா?

நீங்கள் சொல்லுவது போல, இந்த உலகில் பிறந்ததே, நன்றாக, இன்பமாக வாழ்ந்து எல்லாம் அனுபவிக்கத்தான், அந்த வழியில் பிறந்ததின் நோக்கம் தடைபட்டுவிட்டது, திசை மாறிவிட்டது. அது என்ன நோக்கம் என்றால்? நாம் நம்மை ‘நான் யார்?’ என்று கேட்டுக்கொண்டு அதற்கான விடைகாண்பதாகும். இதென்னெ? அப்படி கேட்டால்தான் வாழ்க்கையா? என்று எதிர்கேள்வி கேட்பீர்கள். சரி விட்டுவிடலாமா? இதற்காகவே மறுபடி மறுபடி தொடர்பிறப்பு நிகழும் என்ற உண்மை உங்களுக்கு தெரியுமா? உங்கள் குழந்தையோ, பேரன் பேத்தியோ, அவர்கள் வழியில் யாரோ ஒருவராவது, இதற்கு பதில் அறியாது, பிறவியும் வாழ்வும் முழுமை அடைவதில்லை என்ற இயற்கை நீதி நீங்கள் அறிவீர்களா? ஆனாலும் உங்கள் விருப்பம் போல செயல்படுங்கள். நான் சொன்னதற்காக மாறவேண்டியது இல்லைதான்.

மேலும் பருவவயதிற்குப் பிறகுதான், உலகியலில் தனித்து இயங்கிடும் வாழ்க்கைக்கு மாறுகிறோம். அந்த நிலையில், ஒரு குருவின் வழியாக, அவரின் துணை கொண்டு யோகத்திற்கு வந்துவிட்டால், வாழும் வாழ்க்கையும், இனி வாழப்போகிற வாழ்க்கையும் இனிதாகும். எது உண்மையான இன்பம்? என்ற விழிப்புணர்வில் அளவு முறையோடு, வாழ்கின்ற வாழ்க்கை முழுவதும் இன்பத்தை அனுபவிக்கலாம், பேரின்பத்தை உணரலாம். அமைதியாகலாம். அதற்கான வாய்ப்பை நீங்களே தடுத்துக்கொள்ள வேண்டுமா? தன்னை அறிவதுதான், பிறவிக்கான கடமை என்ற உண்மையும் உள்ளது. உங்களுக்கு அதுகுறித்து தெரியவில்லை என்பதற்காக, அப்படி எதுவுமே இல்லை என்ற முடிவுக்கு நீங்கள் வந்துவிடலாமா? உங்களுக்கு தெரிந்ததையும், அறிந்ததையும், பிறர் சொல்லுவதையும், நான் சொல்லுவதையும் ஆராய்ந்து, உண்மை அறிந்துகொண்ட பிறகு, நீங்களே முயற்சிக்கலாம். யாரோ எவரோ சொல்லுகிறார்கள் என்று உடனடி மாற்றமும், அதனால் ஏமாற்றமும் உங்களுக்கு தேவையில்லை.

வாழ்க வளமுடன்.

How long we need to yoga practice for answering on Who am I?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

 கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, நான் யார்? என்று தன்னையுணர எவ்வளவு காலம் ஆகும் என்று சொல்ல முடியுமா?


பதில்:

இதற்கான பதிலை யாராலும் சொல்லிவிட முடியாது. ஏனென்றால், அவரவர் பெற்றுள்ள கர்மா எனும் வினைப்பதிவுகளின் தாக்கம் கொண்டே அளவிடவும், அதை எவ்வளவு காலத்திற்குள்ளாக தீர்க்கமுடியுமோ அதைபொறுத்துமே அமையும் என்பது உண்மை. நம் குருமகான் வேதாத்திரி மகரிஷி சொல்லியுள்ளபடி பார்த்தால், மனவளக்கலை வழியாக யோகம் கற்று, வாழும் காலத்திற்குள்ளேயே, தன்னுடைய கர்மா எனும் விளைப்பதிவு களங்கங்களை நீக்கி, இறையுண்மை அறியலாம். இதற்கு பயிற்சி, முயற்சி, ஆராய்ச்சி உறுதுணையாக இருக்கவேண்டும்.

ஆனால், ஒருவரின் கர்மாவை தீர்த்திட ஒரு பிறவி போதாது என்ற கட்டுக்கதை, ஏற்கனவே வழக்கத்தில் உள்ளது. அந்த நம்பிக்கையில், தன்னால் முடியாது என்ற ஒரு தாழ்வு மனப்பான்மையும் மக்களிடம் உருவாகிவிட்டதை அறியமுடியும். இதனாலும் யோகத்திற்கு வராமல், பக்தி வழியிலேயே நல்லது நடக்கட்டும் என்ற நம்பிக்கைக்கு போய்விட்டனர் என்றால் மிகையில்லை. மேலும் யோகம் கடினமானது என்றே இன்னமும் நினைத்துக்கொண்டு இருக்கின்றனர். ஆனால், மனவளக்கலை எளியமுறை குண்டலினி யோகம் என்பதை மறந்துவிடுகின்றனர்.

பொதுவாக சொல்லுவதாக இருந்தால், நம் மகரிஷி சொன்னது போல, பயிற்சி, முயற்சி, ஆராய்ச்சி இவற்றோடு தவ வாழ்வை அமைத்துக் கொண்டால், பத்து ஆண்டுகள் முதல் முப்பது ஆண்டுகள் ஆகலாம் என்று சொல்லலாம். அது எங்களின் அனுபவத்தில் கிடைத்த ‘நிறைபேற்று நிலையை’ உணர்ந்து சொல்லுகிறோம். ஆனாலும் இந்த கணக்கீடு மாறக்கூடும் என்பதே உண்மை. ஆனாலும் கூட, உங்களுக்கு ஏற்படும் மாற்றத்தை, அனுபவத்தைக் கொண்டு, நீங்களே அதை தெரிந்து கொள்ளவும் முடியும். அற்புதமான அந்த அனுபவத்தை நிச்சயமாக, வாழ்நாளுக்குள்ளாக பெற்றி மகிழ்ந்து, இறையுணர்வு விளக்கத்தோடு, உண்மை இன்பம் என்ன என்ற தெளிவோடும் வாழமுடியும் என்பதே உண்மையாகும். அத்தகைய அனுபவம் கிடைக்க உங்களை வாழ்த்தி மகிழ்கிறேன்.

வாழ்க வளமுடன். 

Today's world in people's sharing! 3


 மக்களின் பகிர்வுகளில் இவ்வுலகம்! 3



நிறைவுப்பகுதி

பகிர்வோரின் மனநிலை

இந்த கட்டுரையின் சாரமே இதுதான். உலகம் கையிலடங்கி விட்டதால், மனிதனுக்கு நிலை கொள்ளவில்லை. தன் கருத்தை பகிர்கிறேன் என்று பல வழிகளில், தானே சிக்கிக் கொள்கிறான். தன்னளவில் புரிந்துகொண்ட ஒன்று, பிறருக்கு சென்றடைகையில் எப்படி இருக்க வேண்டும் என்ற ஒரு அடிப்படையும் தெரியவில்லை. அதை கற்றுக்கொள்வதும் இல்லை. அதுகுறித்து கவலை கொள்வதும் இல்லை.

இன்றைய தொல்லைகாட்சி செய்தி பகிர்வுகளும் அப்படித்தான். மக்களின் மூளையை சலவை செய்வதில் முதலிடம் இதற்குத்தான் தரவேண்டும். மக்களை ஒரு குறிப்பிட்ட நிலையிலேயே, நிறுத்தி வைக்க இவர்களால் முடியும். உதாரணமாக, ஏதோ இரண்டு வீடுகளில், அருகருகே நடந்த ஒரு சாதாரண பிரச்சனையை, சாதிப் பிரச்சனையாக மாற்றி, தெருவை, ஊரை, சமூகத்தை, நாட்டைச்சார்ந்த கலகமாக மாற்ற இவர்களால் முடியும். ஆனாலும் தொல்லைக்காட்சி ஒரு குழு அமைப்பு.

தனி மனிதனில், ஒரு சாதாரண பிரச்சனை வளரும், ஆனால் சீக்கிரமாக அடங்கிவிடும் என்பது பொதுவானது. இதில் பழிக்கு பழி வாங்குதல் என்பது, பிறர்தூண்டுவதால் மட்டுமே நடக்கும். உண்மையாகவே பிரச்சனையில் தொடர்புடையோர் சமாதனத்திற்கே தயாராக இருப்பார்கள். இங்கே தனி மனிதர்கள், தங்களின் கருத்துக்களை புகுத்தி இரண்டு பேருக்கும் குழப்பத்தை உண்டாக்குகிறார்கள்.

பொதுவாக தனிமனிதனின் மனம், இந்த சுருங்கிய உலகில், எந்நேரமும் கொந்தளிப்பாக இருக்கிறது. ஒரு குப்பைத்தொட்டியில், குப்பை சேருவதைப் போல, எல்லா விசயங்களையும் தனக்குள் ஏற்றிக்கொண்டு தன் நிலை என்ன, தன் குணம் என்ன என்பதை மறந்தே போகிறான். ஒரே ஒரு நெருப்புப் பொறி கிடைத்தால், குப்பென்று பற்றி எரிவார்கள் அல்லது எரித்துவிடுவார்கள். இதில் படித்தவரும், படிக்காதவரும் பொதுவே.


இணையத்தில் பகிர்வோரின் மனநிலை

வெந்ததை தின்று விதி வந்தால் சாவோம் என்ற, வெள்ளந்தியான மன நிலையில் நீங்கள் இருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். அல்லது மனம் விரிந்த நிலையில் எல்லாவற்றை சமநோக்கில் பார்க்கும் மனிதனாக இருங்கள். இப்பொழுது, நீங்கள் இணையத்தில் ஏதேனும் ஒரு இணைய பத்திரிக்கை செய்தி, சமூக பகிர்வு வளைத்தளமான பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம், யூடுயூப் இவற்றை சற்றே பார்வை இடுங்கள். ஒரு மணி நேரத்திற்குள்ளாக, உங்கள் மனம் கொந்தளிக்கும் என்பது உறுதி. 

இப்படியான உலகிலா நாம் வாழ்கிறோம்? இவன் இப்படியா? அவன் அப்படியா? இந்தத் தலைவரா? என்று பலப்பல வகைகளில் சிந்தித்து, உங்களுக்குள் தீர்வு நோக்கி நகர்வீர்கள். இவனை அடக்கலாம், அவனை ஒடுக்கலாம், இதையெல்லாம் இப்படி செய்யலாமே என்று ஒரு கூட்டத்தின் தலைவனைப்போல திட்டமிடுவீர்கள் என்பது உறுதி. நீதியை நிலை நாட்ட வந்த தலைவனைப்போல நீங்கள் மாறிவிடுவீர்கள். இத்தகைய தூண்டுதலைத்தான் இந்த இணையவழி பகிர்வுகள் தருகின்றன. எனவே நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள்.


பகிர்வில் தனி மனித மனநிலை

இது இன்னும் ஓர் முக்கியமான தலைப்பு. திரைப்படங்களில், “ஒரு பொண்ணோட மனசு இன்னொரு பொண்ணுக்குத்தான் தெரியும்” என்ற சொற்றொடர் மிகப்பிரபலம். அது உண்மையல்ல என்றாலும், ஒரு மனிதனின் மனநிலையை நாம் யூகம் செய்ய முடியும். வெளிப்படையாக சிலர் சொல்லாமல் இருந்தாலும், இப்பொழுது இதைத்தான் அவன்/அவள் நினைத்துக் கொண்டிருக்கிறான்/ள் என்று நாம் சிந்திக்கலாம். ஆனால் அந்தக்காலம் மலையேறிவிட்டது அல்லது மலையிறங்கிவிட்டது. ஆம்.

நான் ஒரு செய்தியை பகிர்ந்தாலும், நீங்கள் ஒரு செய்தியை பகிர்ந்தாலும், ஒரு மூன்றாம் மனிதன் தன் கருத்தை  தெரிவிக்கும் வழியில் இணையம் வளர்ந்துவிட்டது. அந்த கருத்துப்பகிர்வு எவ்வளவு தன்மையாக இருக்கிறது என்பதை நீங்களே அறிவீர்கள். 100 க்கு 99 சதம் வன்மம் தூண்டும் நிலையில்தான் எதிர்கருத்துக்கள் பகிரப்படுகின்றன. மனிதனின் மனம் இதத்தை இழந்துவிட்டது. எதிராள் என்ன நினைப்பார்கள் என்ற சிந்தனை ஏதுமின்றி, உடனுக்குடனே வன்மம் தலைக்கேறி எழுத்தில் வந்து நிறைந்து நிற்கிறது. தற்பொழுது “கிளப்ஹவுஸ்”ஸில் வார்த்தைகளும் கிடைப்பதாக அறிகிறேன். 

ஒட்டுமொத்தமாக மனித சமூகம், தன் தகுதி இழந்து கிடப்பதாக எண்ண இடமிருக்கிறது. வளர்ந்தோரும், வளர்வோரும் இதில் வித்தியாசமில்லை. பேசவும், எழுதவும் தெரியாத குழந்தைகள் கூட காட்சி வடிவத்தில் வந்துவிட்டார் என்றும் சொல்ல முடியும்.


தீர்வுப் பகிர்வு

எப்பொழுதுமே நமக்கு இருக்கும் ஒர் உயர்ந்த எண்ணம் என்ன என்றால், எல்லாமே உடனடியாக மாறிவிட வேண்டும் என்று விரும்புவதுதான். இதெல்லாம் நடக்கிற காரியமா? ஆனால் தனி மனிதனாக, நாம் மாறினால் நிச்சயமாக மாறிவிடும். அதாவது நம் மனம் மட்டுமே. ஒரு பூனை கண்ணை மூடிக்கொண்டால், உலகம் இருண்டுவிட்டதாக நினைக்குமாம். இருக்கட்டுமே, அதற்கு அதனுடைய உலகம் இருண்டுவிட்டது. உனக்கென்ன கவலை. நீ உன் உலகத்தில் இரு.

உன் வீட்டின் கதவுக்கு வெளியே புயலும், மழையும் என்றால், வீட்டில் கதவுக்குப் பின்னே நீ பாதுகாப்பாகத் தானே இருப்பாய்? கொஞ்ச நாளைக்கு அப்படி இருக்கலாம். நீ இல்லை என்பதால் கூட, அந்த புயலும் மழையும் அடங்கிவிடாது என்றாலும், பார்வையாளர் இல்லை என்றால் அங்கே ஆட்டம் நடக்காது அல்லது ஒத்திவைக்கப்படும் அல்லவா? அதுபோல காலத்தால் அடங்கிவிடும்.

பகிர்தல் அல்லாது இந்த உலகம் இல்லை. பகிர்வுதான் இந்த உலகை, மனித சமூகத்தை நகர்த்துகிறது என்பது மாபெரும் உண்மை. பகிர்தலில் நமக்கும் கடமை இருக்கிறது. நல்லதை பகிர்வோம், விலகி நிற்போம். மீண்டும் நல்லதை பகிர்வோம். மாற்றம் கொள்வோம். மாற்றம் ஒன்றே மாறாதது.

வாழ்க வளமுடன். 

-----

Today's world in people's sharing! 2


 மக்களின் பகிர்வுகளில் இவ்வுலகம்! 2


முதல்பகுதி படிக்கலாமே


இரண்டாம் பகுதி

பகிர்தலின் வளர்ச்சி

ஒரு தனி மனிதனின் கருத்துப்பகிர்வு தடைசெய்ப்பட்டிருந்த காலம் ஒன்றும் உண்டு. அதாவது கருத்து சுந்ததிர தடை. இத்தடை இருந்தால்தான் அரசை விமர்சனம் செய்ய மாட்டார்கள் என்று ஒரு கண்டிப்பு அல்லது மக்களிடம் பயம். ஆனாலும் கால மாற்றம் எல்லாவற்றையும் கடந்துவிட்டது.  

குழுவாக வாழ்ந்து வந்த மனிதர்கள், பிறர் அறிய முடியாத ரகசிய மொழிகளில் தங்கள் கருந்துக்களை பகிர்ந்து கொண்டிருந்தார்கள். இன்றும் கூட சில கிராமங்களில் நடப்பதுண்டு. மேலும் இப்போது, குழு அமைப்பு சிதைந்துவிட்டது. கூட்டுக்குடும்ப அமைப்பும் சிதைந்துவிட்டது. தனித்தனியாக, நான்கு நபர்கள், மூன்று நபர்கள் என்று குடும்பம் சுருங்கிவிட்டது. ஆனால் இது எவ்வளவு மோசமான விளைவுகளைத்தரும் என்பது யாருக்குமே புரியவில்லைதான். அத்தை மாமா என்ற உறவும், கூட்டமும் இனிவரும் காலத்தில் இருக்குமா என்பது தெரியவில்லை. ஒருவருக்கு ஏதேனும் பிரச்சனை என்றால், குடும்பத்தை விட்டு வெளி நபர்தான் உதவிக்கு வரக்கூடிய சூழல். இனிவரும் காலத்திலாவது மாறவேண்டும் என்று விருப்பம் கொள்வோம்.

இப்படியாக தன் குழுவிடமும், குடும்பத்தாரிடம் மட்டுமே, கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருந்த மனிதன், கடிதங்கள் வாயிலாக, தன்னை கடந்து தூரத்தில் இருப்பவரிடமும் தன் கருத்தை பகிர முனைந்தான். தொலைத்தொடர்பு புரட்சியில், எழுத்தை தவிர்த்து, தன் குரல் வழியாகவே கருத்தைப் பகிரும் நிலைக்கு உயர்ந்தான். மனிதனின் சிந்தனையில் எழுந்த உச்ச நிகழ்வாக, இணையம் (Internet, Worldwide web)வந்துவிட உலகமே சுருங்கி, தற்போது உள்ளங்கையில், கைபேசி அளவில் அடங்கிவிட்டது. அடேங்கப்பா, என்ன ஒரு அசுர வளர்ச்சி!


பகிர்வோரின் நிலை

இந்த வளர்ச்சிக்கு ஈடாக, சமமாக மனிதன் தன்னை உயர்த்திக் கொண்டானா? என்றால் இல்லை. அவன் அவனளவில் அப்படியே இருக்க, சும்மா சொரிந்து கொண்டிருந்தவனுக்கு கையில் கத்தியை கொடுத்தாக மாறிவிட்டது. அவன் தன்னையே, தன் இனத்தையே வெட்டி வெட்டி ரத்தக்களரி ஆக்கிக்கொண்டு இருக்கிறான். தனக்கு கருத்து சுதந்திரம் வேண்டும் என்று சிந்தித்தவனுக்கு உதித்த, இணையம், எல்லோரையும் அள்ளி அணைத்து பினைத்துக்கொண்டது. ஆனால் மனிதன், இன்னொரு மனிதனை இணைத்துக்கொள்ள தவறிவிட்டான். 

இவ்வளவு காலத்திலும் கூட, வரப்பு சண்டைகள் போல எல்லைச் சண்டைகள் ஓவ்வொரு நாட்டிலும் நடந்துக்கொண்டுதான் இருக்கிறது.  எல்லைகள் இல்லா இணையம் சாத்தியமாயிற்று. ஆனால் எல்லைகளில்லா மனோநிலை சாத்தியப்படவில்லை. இதற்கு யார் காரணம்? உலகில் உள்ள பொறுப்புடைய தலைவர்கள் தான்.

உலகின் வல்லரசு யார் என்ற போட்டியில், மார்தட்டிக்கொண்டு, ஒரு கேக்கை இரண்டாக வெட்டுவது போல, உனக்கு பாதி, எனக்கு பாதி என்று நாடுகளை பகிர்ந்து கொண்ட அமெரிக்காவும், ரஷ்யாவும் கூட இன்று, இணைந்து கைகோர்த்து, விண்வெளியில் 400 கிலோமீட்டர் உயரத்தில், ஒரு கால்பந்து திடல் அளவான, விண்கப்பலில் (International space station-ISS) ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள். 

இவர்களுக்கு விண்ணில் எல்லைகள் இல்லை, ஆனால் மனித சமூகம் வாழும் பூமியில் எல்லைகள், “இவர்கள்மாதிரியான “ தலைவர்களுக்கு தேவையாக இருக்கிறது. தலைவர்கள் எவ்வழியோ தொண்டர்கள் என்னும் நிலை என்று மாறுமோ தெரியவில்லை. அது மாற வேண்டும் என்றும் விருப்பம் கொள்வோம்.

அன்பர்களே இதன் நிறைவு பகுதி, நாளை வரும்.


Today's world in people's sharing!


மக்களின் பகிர்வுகளில் இவ்வுலகம்!



கால மாற்றம்

மக்கள் அனைவருமே ஒருவருக்கு ஒருவர் தன் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுதல், கடந்த 10 ஆண்டுகளில் மிகவும் வேகமாக மாறிவிட்டது. அறிவியல் முன்னேற்றமும், தொடர்பு சாதனங்களை எளிமையாக்கி மக்களிடம் கிடைக்கச் செய்ததின் மாற்றமே இது. வீட்டுக்கு ஒரு தொலைபேசி இருந்தகாலம் போய், குரலாலே பேசி கருத்து பரிமாற்றம் மாறி, முகம்பார்த்து பேசிக்கொள்ளும் மிக எளிய முறைக்கு வந்துவிட்டோம். 

அதுவும் இந்த கரோனா நோய்த்தொற்றுக் காலத்தில் இன்னும் கூடவே மாற்றம் பெற்றுவிட்டது.  வாயிலே சில வார்த்தைகள் மட்டுமே பேசத்தெரிந்த, கேள்வி கேட்டால் என்ன பதில் சொல்லுவது என்று தெரியாத, தன் வீட்டு ஆட்களுக்கு மட்டுமே மரியாதை கொடுக்கத் தெரிந்த, வெளி உலகமே தெரியாத, ஆனால் ஒரு சின்ன, பெரிய LED திரையில் மட்டுமே பார்க்கத் தெரிந்த நான்கு வயது குழந்தைக்கு (?!) ஆரம்ப கல்வி பயிலும் நிலை, ஆன்லைனில் வந்துவிட்டது. அந்த குழந்தையிடம் கைபேசி வாயிலாக குரலாக பேசினால் “வீடியோ காலில் வரத்தெரியாதா?” என்று எதிர்கேள்வி கேட்கிறது.

ஆனால் இந்தக் கட்டுரை அலசல் அக்குழந்தைகள் எதிர்காலம் பற்றியதல்ல, எனவே யாரும் கவலைப் படவேண்டம் :P


கடமை

ஒரு பெரும்பான்மையான மக்களுக்கு, தான் அறிந்ததை சமூகத்திற்கு தரவேண்டும் என்ற உந்துதல் எப்போதுமே இருக்கும். அது உண்மையாகவே இயல்பான கடமை. பணம் வாங்கிக்கொண்டு தருதல் என்பது பின்னால் வந்த பிசினஸ் ரகசியம். தான் அறிந்ததை பிறருக்கு தராது இருந்தால், நாம் இந்த உலகில் இன்றுவரை காட்டுமிராண்டியாகவே வாழ்ந்து கொண்டிருப்போம். தமிழகத்தில் 3000 ஆண்டுகளுக்கு முன்னதாகவே, மனித சமூகம் அற்புதமான வாழ்க்கை முறையை கொண்டிருந்தது என்பதை, தமிழ்சங்க கால நூல்கள் வழியாக அறியலாம்.

அப்படியான காலத்தில், இந்த உலகின் பல பகுதிகளில், “ஒரு சில மக்கள்” வாழ்க்கை முறை அறியாமல், பிறர் வளம் பறித்து கொள்ளையர்களாக, கொலைக்கார்களாக, பச்சைக்கறி திண்ணும் மனிதர்களாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள் என்பது உண்மையே.

தன் அனுபவத்தை, அறிவை இன்னொருவருக்கு பகிர்வதால், பெற்றுக்கொள்ளும் மனிதர், கற்றுத்தரும் மனிதருக்கு அறிவில், ஏறக்குறைய சமநிலை அடைவார். அவருடைய வாழ்வின் உயர்ச்சிக்கு அது உதவும். இந்த அறிவு அனுபவ பகிர்வு, மனிதன் உடல் அசைவுகளை, சைகைகளை, சப்தங்களை மொழியாக கொண்டபோதே வந்திருக்கும். உதாரணமாக, அந்தபக்கம் போகாதே காட்டுயானை இருக்கிறது, புலி இருக்கிறது என்று, எதிர்படும் மனிதனை எச்சரிக்கை செய்திருப்பார்கள். இந்தப்பக்கம் நல்ல பசி போக்கும் பழம் தரும் மரம் இருக்கிறது, நீ சாப்பிட்டுக்கொள் என்று வழிகாட்டி இருப்பார்கள்.

பேசும் மொழி வளர்ந்த பிறகு, மிக எளிதான வேலையாகிவிட்டது. எழுத்தும் வளர்ந்தபிறகு, அறிவு, அனுபவ பகிர்வு எல்லைகளை கடந்துவிட்டது. கடல் கடந்து மனிதர்கள் செல்லச்செல்ல உலகம் சுருங்கி, இப்பொழுது கையடக்க கைபேசியில் அமைந்துவிட்டது. இந்த மாற்றங்கள் எல்லாமே, ஒருவர் தன் அறிவை, அனுபவத்தை பிறருக்கு, பிரதிபலன் பாராமல் பகிர்ந்து கொண்டதால் மட்டுமே. 


பகிர்தலின் வளர்ச்சி

இத்தலைப்பில் அடுத்த பதிவில் காண்போம். காத்திருங்கள்.

வாழ்க வளமுடன்!