CJ for You: kayakapla practice

kayakapla practice

Showing posts with label kayakapla practice. Show all posts
Showing posts with label kayakapla practice. Show all posts

What is the meaning of Aswini Mudra and Ojas Breath?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, வேதாத்திரிய காயகல்பத்தில் அஸ்வினி முத்திரை, ஓஜஸ் மூச்சு என்பதை எங்களுக்கு விளக்கம் முடியுமா?


பதில்:

புரிந்துகொள்ளும் வகையில் பதில் தரமுடியும் எனினும், மிக விளக்கமாக தர வழியில்லை. ஏனென்றால், இதன் பெரும் உண்மை விளக்கத்தை, நேரடியாக, மனவளக்கலை மன்றத்தில் மட்டுமே கற்றுக்கொள்ள முடியும்,. அதுபோல கேட்டுக்கொள்ளவும் முடியும். நாம் இங்கே முகம்பாராமல், வார்த்தைகளால் விளக்கிக் கொள்வதில் பயனில்லை. மேலும் அது தவறாகவும் விளங்கிக் கொள்வதற்கு வாய்ப்பு அதிகம்.

முதலில், சித்தர்கள் பல்வேறு காலகட்டங்களில் ஆராய்ந்து, முழுமையாக செய்துவந்த, இந்த காயகல்பக்கலை ஏறக்குறைய அழிந்துவிட்டது எனலாம். ஆனால் அதன் பகுதிகள், இந்த உலகெங்கும் பலப்பல மனிதர்களிடம் சென்று சேர்ந்துவிட்டது என்பதே உண்மை. நம் நாட்டில், காயகல்பம் எதோ சாப்பிடும் லேகியமாகவும், உணவுப்பொருளாகவும் மாறிவிட்டது சோகம். ஆனால் காயகல்பம் யோகபயிற்சி முறைமட்டுமே!

அப்படி கலைந்து கிடந்த, காயகல்ப யோகக்கலையை ஒன்றுசேர்த்து, குறைகளை நீக்கி, முழுமை செய்து நமக்கு தந்தவர், குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்களே ஆகும். தான் வாழும் காலம் வரையும் கூட, அவ்வப்போது சில மாற்றங்களை கவனித்தும் வந்தார் என்பதே உண்மை.

அஸ்வினி என்றால் குதிரை என்ற கருத்தாகும். விலங்கிங்களில், குதிரை ஒன்றுதான், இந்த முத்திரையை, இயல்பாக, இயற்கையின் வழியில் செய்துவருகிறது என்பதை சித்தர்கள் கண்டார்கள். அதனால் அதற்கான பெயரை, அஸ்வினி முத்திரை என்றே வைத்தார்கள். ஓஜஸ் மூச்சு என்பது, நம்முடைய பாலுறவு சுரப்பியில் தங்கி நிற்கும், வித்துநாதத்தில் இருந்து பிரித்தெடுக்கக்கூடிய ஒரு சக்தி, இதை நம் மூச்சோடு கலந்து மேலேற்றுகிறோம். இதற்கு ஓஜ்ஸ் மூச்சு என்று சித்தர்கள் பெயரிட்டு அழைத்தார்.

வாழ்க வளமுடன்.


How can come to know the mistake and correction in Kayakalpa yoga?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, காயகல்ப பயிற்சிகளில் ஏற்படும் தவறுகளை எப்படி அறிந்திடலாம்? நாமாக திருத்திக் கொள்ளலாமா?


பதில்:

காயகல்ப பயிற்சி என்பது, மனித வாழ்வோடு துணை செய்வதும், மனிதனின் ஆயுட்காலத்தையும் உயர்த்திட வழி செய்வதும் ஆகும். மேலும் முதுமையிலும் இளமை என்ற மாற்றத்தை காப்பதும் ஆகும். சித்தர்களின் காயகலப கலையை, முழுமைப்படுத்தித் தந்த, குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்களை போற்றி வணங்குவோம்.

அன்பர்கள், காயகல்ப பயிற்சியை, மனவளக்கலை மன்றங்களில், ஆசிரியரின் நேரடி பார்வையில்தான் கற்றுக்கொள்ள வேண்டும். கணவன் மனைவி என்ற நிலையில் கூட, அவர்களுக்கு அவர்களே கற்றுக்கொள்வதில் முழுமை கிடைத்திடாது. ஆனால் விபரமும், அதன் தத்துவ விளக்கவும், தகுந்த ஆசிரியரிடம், அனுபவம் பெற்ற மனவளக்கலை அன்பரிடம் பெற்றுகொள்ளலாம். ஆனால் அதில் உண்மை இருக்கவேண்டியது அவசியம்.

காயகல்ப பயிற்சி உங்களுக்கு, ஆசிரியரால் கற்றுக்கொடுக்கும் பொழுதே, கவனமாக அதன் தத்துவ விளக்கங்களை கேட்டு, நிலை மற்றும் பயிற்சி முறைகளை செய்துபார்த்து திருத்தம் பெற்றுக்கொள்வது நல்லது. பயிற்சியை நாம் தனியாக, வீட்டில் செய்யும் பொழுது ஏற்படும் தவறுகளை அறியலாம் என்றாலும், நாமாக திருத்திக்கொள்ள முடியாது. அது அந்த தவறை மேலும் அதிகப்படுத்திவிடும் என்று அறிக. 

என்னென்ன தவறுகள் என்று சுருக்கமாக பார்த்தால், உடல் நிலையை சரியாக வைக்காமல் பயிற்சி செய்வது, அஸ்வினி முத்திரையை வேகமாகவோ, மிக மெதுவாகவோ செய்வது, ஓஜஸ் மூச்சு வெளியிடுவதில் புரிதல் இல்லாமை, அதை தவறாக வெளியிடுதல் ஆகியன எனலாம். மேலும் காலை, மாலை, இரவு பயிற்சிகளை கலந்தோ, மாற்றியும் செய்வது தவறே. அதுப்போல இந்த காலம் தவிர, அடிக்கடி செய்வதும் தவறே. இந்த தவறுகளை கணக்கில் கொண்டு, நீங்கள் எந்த தவறை செய்கிறீர்களோ அதை கவனித்து, நேரடியாக உங்களுக்கு, கற்றுக்கொடுத்த, மனவளக்கலை மன்ற ஆசிரியரிடம் அல்லது பொறுப்பான மற்றொரு ஆசிரியரிடம் கேட்டுத்தான் தெளிவு செய்துகொள்ள வேண்டும். நீங்களாகவோ, அனுபவம் இல்லாத வேறு யாரோ ஒருவர் சொல்லுவதை கேட்டு திருத்தம் பெறக்கூடாது.

எனவே தவறு நேர்ந்தால், அதில் உடல்நலம் பாதிப்பு உண்டாவதை அறிந்து, காயகல்ப பயிற்சி செய்வதை நிறுத்திவிட்டு, அந்த நாளோ, மறுநாளோ உடனே மனவளக்கலை மன்றத்தை தொடர்புகொண்டு சந்தேகம் தெளிக.

வாழ்க வளமுடன்.

வேதாத்திரியம் குறித்த கேள்வி பதில்கள் இந்த WhatsApp குழுவழியாகவும் பெறலாம்!

How anyone can start a day based on Vethathiriya Yoga Way?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

கேள்வி

வாழ்க வளமுடன் ஐயா, வேதாத்திரிய வழியில் ஒருநாளை எப்படி ஆரம்பிக்கலாம்? நீண்டநாளாக குழப்பமாக இருக்கிறது!


பதில்:

தற்காலத்தில் பெரும்பாலான மக்களின் வாழ்க்கை, நள்ளிரவு வரை நீடிக்கிறது என்று சொல்லமுடியும். வாழ்க்கை சூழல்களும், கைபேசியின் வரவும், இணைய பயன்பாடும் அப்படியான மாற்றத்தை தந்துவிட்டது. இது இயல்புதான். ஆனால் இதனால் எழுகின்ற விளைவுகளை கவனித்து, மாற்றங்களை அமைத்துக்கொள்வது நல்லது. ஏனென்றால், நாம் நன்றாக இருக்க, வாழ இந்த உடலும், மனமும் நல்லபடியாக இருக்கவேண்டுமே? அப்படி இருந்தால்தானே, அது யோக வாழ்வுக்கும் உதவிடும்.

ஒரு நாளை ஆரம்பிக்க, அதிகாலை எழுந்துவிட பழக வேண்டும். அதற்காக. 3.30 மணிக்கோ 4.30 மணிக்கோ உடனடியாக எழ வேண்டியதில்லை. கொஞ்சம் கொஞ்சமாக மாற்ற பழகிக் கொள்ளுங்கள். இரவு 10 மணிக்கு நான் தூங்கப்போவேன் என்ற முடிவை வைத்துக்கொண்டு, அதை செயல்படுத்துக. ஒருவார காலத்திற்குள் அதிகாலை எழுந்து விடலாம். எழுகின்ற அந்த நேரம் 5.30 முதல் 6.30 வரை கூட போதுமானதுதான்.

எழுந்த உடனே, சிறிது தண்ணீர் குடித்துவிட்டு, காலைக்கடனை முடித்துவிடுங்கள். வேதாத்திரிய மனவளக்கலை பயிற்சியில் கற்ற ‘காயகல்ப பயிற்சி’ முதல் தேர்வாக இருக்கட்டும். பிறகு ‘எளியமுறை உடற்பயிற்சி’ இரண்டாவது தேர்வு. சிறிது நேர இளைபாறலுக்குப் பிறகு, ‘தவம்’ மூன்றாவதாக அமைத்துக்கொள்க.  இந்த மூன்றும் போதுமானதுதான். மொத்தமாக 10+45+25=1.20 ஒரு மணி நேரம், 20 நிமிடங்கள் அல்லது கூடுதலாக ஆகலாம். நாம் வீணாக கழிக்கின்ற நேரத்தை விட இது ஒன்றும் பெரியவிசயமில்லை அல்லவா? எனவே அவசரமில்லாமல், பொறுமையாக செய்துவரலாம். இந்த பயிற்சிகளுக்கு இடையே, முன்னே, உங்களின் வழக்கமான ‘காஃபி, தேநீர்’ அருந்துவதை விட்டுவிடுங்கள். எல்லா பயிற்சிகளையும் முடித்த பிறகு, சிறுது நேர அமைதிக்குப் பிறகு, அருந்திக் கொள்ளலாம்.

ஆரம்ப காலத்தில் கொஞ்சம் கடினமாகவே இருக்கும், ஆனால் பழகப்பழக, ஒருநாள் ஏதோ ஒரு காரணத்தால் செய்யமுடியாமல் போனால், வருத்தப்படும் அளவிற்கு உங்கள் மனமும், உடலும் பழகிவிடும் என்பதே உண்மை. இதுவரை நீங்கள் இந்த மாற்றத்திற்குள் இல்லை என்றால், இனிமேலாவது, நாளைமுதல் நான் மாற்றிக்கொள்வேன் என்ற மன உறுதியோடு, சங்கல்பமாக எடுத்துக் கொண்டு செயல்படுத்திப்பாருங்கள். வெற்றியில் திளைப்பீர்கள்!

வாழ்க வளமுடன்.

வேதாத்திரியம் குறித்த கேள்வி பதில்கள் இந்த WhatsApp குழுவழியாகவும் பெறலாம்!