CJ for You: depression

depression

Showing posts with label depression. Show all posts
Showing posts with label depression. Show all posts

Why can't you find time for exercise? How can this be changed? Give an explanation.


உடற்பயிற்சிக்கென்று நேரம் ஒதுக்கிட முடியாமல் இருப்பது ஏன்? எப்படி இதை மாற்றிக் கொள்ளலாம்? விளக்கம் தருக.


பெரும்பாலான அன்பர்களும் இந்த நிலையில்தான் இருக்கிறார்கள். உடற்பயிற்சி செய்ய ஆர்வமும், அதன் பலனை அடைவதற்கு ஆசையும் இருக்கிறது. ஆனால் நேரமின்றி தவிக்கிறார்கள். இவர்கள் எந்த வயது? என்று எடுத்துக்கொண்டால், முப்பது முதல் ஐம்பது வயதுக்குள்ளானவர்களாக இருப்பார்கள். இதில் ஆண்களும் பெண்களும் உண்டு.

முக்கியமாக, தங்கள் சூழ்நிலையில் சிக்கி இருப்பார்கள். வேறாக சொன்னால், அந்த சூழ்நிலையின் மீது பழி போடுவார்கள் எனலாம். இருக்கும் தேவைகளை நிறைவேற்ற பரபரப்பாக இருப்பார்கள். ஏதேனும் செய்தால் நல்லது என்றே இயங்குவார்கள். ஆனால், உடல்மீது அக்கறை இருக்காது. காரணம். தங்களை தாங்களே, நான் நன்றாகத்தானே இருக்கிறேன்? என்று கேட்டு, அதில் அதீத நம்பிக்கையும் கொள்வார்கள். கூடுதலாக, இவர்களின் மனம் அவர்களை விட பரபரப்பாக இருக்கும். சும்மா இருக்கவும் விடாது.

இதனால், எதைச் செய்தாலும் அதில் திருப்தி இல்லாமல், அடுத்து ஒன்றையும் செய்யலாமே? என்று கடந்து போய்க்கொண்டே இருப்பார்கள். ஒரு நேர சாப்பாட்டைக்கூட, திருப்தியாக, மன நிறைவாக ருசித்து, ரசித்து சாப்பிட மாட்டார்கள். ஆனால் பிறர் கேட்டால், ‘அருமை’ என்று சொல்லி விடுவார்கள். நான் எப்படியெல்லாம் அனுபவத்தேன் தெரியுமா? என்று கதையளப்பார்கள். அவ்வளவும் வார்த்தையாக மட்டுமே வரும், மனப்பூர்வமான அனுபவமாக இருக்காது.

இப்படித்தான் இவர்களின் ஒவ்வொருநாளும், கடந்து போய்க்கொண்டே இருக்கும். எல்லாம் தெரியும் என்ற நிலையிலும், எனக்கு இதுவும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நிலையிலும் நாட்களை கடத்துவார்கள். புதிதாக கற்றுக்கொள்ளவும் தயங்க மாட்டார்கள். ஆனால் அவற்றில் எது தனக்கு உகந்தது? தேவையானது? என்று பிரித்தறியாமல், தேர்ந்தெடுத்துக் கொள்ளாமல், குழப்பத்தோடு கைவிட்டு விடுவார்கள். ஆனால் தன்னை பெருமையாக வெளிப்படுத்திட தயங்கமாட்டார்கள்.

இந்த நிலைகளுக்கு மொத்தமான காரணம் என்ன? என்று ஆராய்ந்தால், மனம் ஒரு நிலையில் இல்லை. அவர்களின் செயலுக்கும், இயக்கத்திற்கும், நடவடிக்கைகளுக்கும் மேலாக, பதட்டமாகவும், குழப்பமாகவும் இருக்கிறது. இதை, ஒரு உதாரணமாக சொல்லுவது என்றால், சென்னை கடற்கரை முதல், தாம்பரம் வரை மின்சார ரெயில் வண்டி இயங்கிக் கொண்டே இருக்கிறது. ஒருவழியில் போகவும், இன்னொரு வழியில் வரவும் இருக்கிறது. இதில் நீங்கள் பயனிக்கும் பொழுது, எங்கே ஏறி, எந்த இடத்தில் இறங்க வேண்டும் என்று தீர்மானம் கொண்டவராக இருக்கவேண்டும். இந்த மின்சார ரெயில், கடற்கரையும் போகும், தாம்பரமும் போகும் என்பதால், நீங்களும் இங்கே அங்கே போய்க்கொண்டே இருக்கமுடியாது. எங்கே இருந்து ஏறி பயணிக்கிறீர்கள்? எங்கே பயணத்தை முடித்து இறங்க வேண்டும் என்று முடிவு செய்திட வேண்டியது முக்கியம்.

இதுப்போலவே, ஒருநாளில் நான் இந்த இந்த வேலைகளை, கடமைகளை செய்வேன், என்று முன்னதாக திட்டமிட்டு, உடற்பயிற்சிக்கு அரை நேரமோ, ஒரு மணி நேரமோ ஒதுக்கி, அந்த நேரத்தில், உங்கள் நிலைமையை, மன வேகத்தை, பரபரப்பை மாற்றி அமைக்க வேண்டும். வேறெதும் குறிக்கிடாத கவனமும், விழிப்பும் வேண்டும். நிச்சயமாக நேரம் இல்லை என்றால், உங்கள் தூக்கத்தை விடுத்து, முன்னதாக அந்த அரை மணி, ஒரு மணி நேரத்தை எடுத்துக் கொண்டு செலவழிக்கலாம். ‘ஐயோ, என் தூக்கம் போய்விடுமே என்றால், உடலே போய்விடுமே?’அதை கவனத்திக் கொள்க.

இப்படி விளக்கம் பெற்றும் என்னால் முடியாது, முடியவில்லை என்றால், உங்களிடம் மிகப்பெரிய குறை இருக்கிறது எனலாம். அதுதான் நேர மேலான்மை. ஒரு நாளை, நேரத்தை, சூழலை எப்படி, உங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்வது என்பது, உங்களுக்குத் தெரியவில்லை. உடனடியாக அதை மாற்றி அமைக்க வேண்டும். உங்கள் உடல்நலனில் நீங்களே அக்கறை செலுத்தவில்லை என்றால், எப்படியாகும்? இழப்பு வேறு யாருக்கு? இன்றே, இச்சிந்தனையை தொடங்குக. உடல்நலம் பெற்று சிறப்பாக வாழ்க.

வாழ்க வளமுடன்.

-

Best solution for peaceful family by Shri Vethathiri Maharishi


கணவன் மனைவி இடையே அடிக்கடி பிரச்சனைகளும், அதனால் மன வருத்தமும் நிகழ்ந்துகொண்டே இருக்கிறதே? மணமுறிவுக்கும் அதுவே காரணமாகிறதே? இதற்கு தீர்வு என்ன?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, கணவன் மனைவி இடையே அடிக்கடி பிரச்சனைகளும், அதனால் மன வருத்தமும் நிகழ்ந்துகொண்டே இருக்கிறதே? மணமுறிவுக்கும் அதுவே காரணமாகிறதே? இதற்கு தீர்வு என்ன? 


பதில்:

திருமணம் என்பதை ஆயிரம் காலத்து பயிர் என்றுதான் சொல்லிவருகிறார்கள். அத்தனை தலைமுறை வாழ்வுக்கு அது நிலைத்திருக்கக் கூடியது என்ற அர்த்தமாகிறது. ஆண் பெண் ஆகிய இருவரும், எங்கெங்கோ பிறந்தை வளர்ந்து வாலிபத்தில், அவர்களாகவே காதல் வயப்பட்டும், தகுந்த பெரியோர்களின் வழிகாட்டால் மூலமும் திருமணம் வழியாக, இல்லற வாழ்வை துவக்குகின்றனர். ஆனால், பிரச்சனை, மனவருத்தம் என்பது இந்த இரண்டு நிலைகளிலும் இருக்கிறது. காதல் என்ற நிலையில், மனமொத்து இருந்தாலும்கூட, திருமணம் ஆனபிறகு பல்வேறு சிக்கல்களில் அவர்களுக்குள்ளாக  பிரிவினை வந்துவிடுவதை காண்கிறோம்.

பெற்றோரின் தேடுதலிலும், பெரியோர்களின் ஆசியிலும், திருமண வாழ்வில் நுழைபவர்களும், ஆரம்பகாலத்தில் இயல்பான, நிறைவான, மகிழ்ச்சியான நிலையிலே வாழ்வை ஆரம்பித்தாலும், பின்னாளில் அவர்களுக்குள்ளாகவும் பிரிவினை வந்துவிடுவதை காண்கிறோம். இரண்டிலுமே ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, அந்தந்த சூழலுக்கும், பிரச்சனைக்கும், எதிர்காலத்திற்கும் ஏற்றபடி பொறுமை, விட்டுக்கொடுத்தல், தியாகம் ஆகிய மூன்று உயர்ந்த குணங்களால் சரி செய்யமுடியும் என்று குரு மகான் வேதாத்திரி மகரிஷி வலியுறுத்துகிறார். அவரும் இல்வாழ்க்கையில் வாழ்ந்து அனுபவித்தவர் தானே?

இந்த  பொறுமை, விட்டுக்கொடுத்தல், தியாகம் ஆகிய மூன்றையும், குடும்பத்தில் இருக்கிற யார் செயல்படுத்த வேண்டும்? ஆணா, பெண்ணா? கணவனா? மனைவியா? என்று கேட்கும் பொழுது, வேதாத்திரி மகரிஷி சொல்லுகிறார், ‘யாருக்கு அன்பு நிறைய இருக்கிறதோ அவர் அதை செயல்படுத்த வேண்டும்’ என்று பதில் தருகிறார். பொதுவாகவே, கணவன் மனைவி ஆகிய இருவருமே, புரிதலில் இருக்கக்கூடிய சிறிய, விளக்கமின்மைதான், பெரும்பாலான பிரச்சனைகளுக்கு காரணமாகிறது. அதை இருவருமே அமைதியாக பேசி, திருத்தம் பெற்றுக்கொள்ளவும் வழி உண்டு. நல்ல வழிகாட்டல் இருந்தால், உடனடியாக தீர்வும் பெற முடியும். அந்தவகையில், வேதாத்திரி மகரிஷியின், வழிகாட்டுதலை இங்கே பகிர்கின்றேன்.

வேதாத்திரி மகரிஷி சொல்லுகிறார்... 

உண்மையான நிலை என்னவென்றால் நாம் செய்த பாவம் புண்ணியம் இரண்டும் நம்மிடத்திலே உள்ளன. இந்த இரண்டையும் சரிப்படுத்துவதற்கு இறைநிலை பாரபட்சமில்லாத நீதிபதியாக அவ்வப்போது செயலிலே விளைவு தந்துக் கொண்டிருக்க வேண்டுமென்று சொன்னால் நெருங்கிய உறவிலே, இணைந்த உறவிலே உள்ளவர்கள் மூலமாகத்தான் அதிகமான அளவு செயல்பட முடியும்.  விளைவு வரமுடியும்.  அப்பொழுது இறைவனுடைய வரமாகட்டும்,  இறைவன் தரும் படிப்பினையாகட்டும், கணவனுக்கு மனைவியும் மனைவிக்கு கணவனும் அவர்கள் மூலமாகத்தான் அதிகமாக வெளிப்பாடு உண்டாகும்.


ஆகவே இருவருமே ஒருவருக்கு ஒருவர் இறைவனே என்னுடைய மனைவியினுடைய வடிவத்திலே வந்து எனக்கு உறுதுணையாக இருக்கிறாள் என்று எண்ணவும், இறைவனே எனக்குக் கணவன் என்ற உறவிலே வந்து உறுதுணையாக அமைந்திருக்கிறான் என்னுடைய வினையின் பயனாக ஏதோ ஆங்காங்கு சில துன்பங்கள் வந்தாலும் அதை நாம் போக்கிக் கொள்ள வேண்டும் என்ற அளவிலே இரண்டு பேருமே ஒருவரிடத்திலே ஒருவர் உண்மையான தெய்வ நிலையைக் காணக் கூடிய அளவிலே, தெய்வப் பிரசன்னத்தை அறியும் அளவிலே மனதை உயர்த்திக் கொண்டீர்களேயானால் இல்லற வாழ்க்கையிலே இதுவரை நீங்கள் அனுபவித்திராத ஒரு மலர்ச்சி உண்டாகும்.

இப்போது இந்த சிந்தனையை, மீண்டும் மீண்டும் உங்களுக்குள்ளாக ஓடவிடுங்கள். ஒருசில நாட்களில் உங்களுக்கான தெளிவில் நிறைவீர்கள். நீங்களே முன்வந்து, உங்களுக்குள்ளாக இருக்கும் பிரச்சனைகளில் இருந்து வெளிவந்து, அமைதியும், நிறைவும் கொண்ட குடும்ப வாழ்க்கையை வாழ தயாராவீர்கள் என்பது உறுதி!

வாழ்க வளமுடன்.

-




Why I have some of depression on my life, guide me?


மனதில்  விரக்தி , வேதனை , எதிலும் பற்றற்ற தன்மை, உண்பதில் ஆர்வமின்மை, நல்ல ஆடைகள் அணிவதில் விருப்பமின்மை , எந்த உறவினரிடமும் நடிப்புக்காக கூட பேச பிடிக்கவில்லை.. இதெல்லாம் ஏன் ஏற்படுகிறது ஐயா?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி: 

வாழ்க வளமுடன் ஐயா, மனதில்  விரக்தி , வேதனை , எதிலும் பற்றற்ற தன்மை, உண்பதில் ஆர்வமின்மை, நல்ல ஆடைகள் அணிவதில் விருப்பமின்மை , எந்த உறவினரிடமும் நடிப்புக்காக கூட பேச பிடிக்கவில்லை.. இதெல்லாம் ஏன் ஏற்படுகிறது ஐயா?


பதில்:

வேதாத்திரிய யோகத்தில் பயணிக்கும் நீங்கள் இப்படியெல்லாம் சொல்லலாமா? ஒருவேளை நீங்கள் வேறு ஏதேனும் பழமையான யோகமுறையில் பயணிப்பதாக உங்களை நினைத்துக் கொண்டு வருகிறீர்களா? என்றும் தெரியவில்லையே?! எனினும் இதற்கான காரணங்களை விளக்கமாக பார்க்கலாம்.

யோகம் என்பது நல்வாழ்க்கைக்கான வழியாகும். அதை அறநெறி என்று சொல்லி வைத்தார்கள். யோகம் எல்லோராலும் கற்று தெளிவு பெறுவது கடினம் என்ற அக்கால சூழலில் அதை, நல் வாழ்க்கை விளக்கமாகச் சொல்லி, வழக்கப்படுத்தினார்கள். அதை நம் குடும்பத்திலே கூட பழக்கமாகி இருப்பதை காணமுடியும். வீட்டிற்கு வந்த விருந்தினரை வரவேற்பது முதல், வயதான ஒருவரை, நட்போடு வருபவரை நோக்கி கைகூப்பி வணங்குதல் வரை, அதிலிருக்கிற பொதுவான தன்மை ‘பிறரை மதித்தல் ஆகும்’. எல்லாமே இறையின் அங்கம் என்ற உண்மைப்பொருளின் விளக்கத்தில் ஒருவருக்கு உதவுவதும், வணங்குவதும்கூட இறைக்கே என்பதான நிலை, ஞானிகளால், மகான்களால், யோகிகளால், சித்தர்களால் வழங்கப்பட்டது.

முக்கியமாக, உலகில் வாழ்கின்ற நாம் எந்த வகையிலும், வாழும் உலகையும், நம்மோடு வாழும் குடும்பத்தாரையும், சக மனிதர்களையும், உலகத்தாரையும் விலக்கிவிட்டு வாழ முடியாது. அவர்களோடு விரோதம் கொள்ளவும் வழியில்லை. எப்படியாயினும் ஏதேனும் வழியில், யாரோ ஒருவரின் அன்பும், கருணையும், உதவியும், பகிர்வும் நமக்கு கிடைத்துக் கொண்டே இருக்கிறது. அவரின் முகம்கூட அறியாத நிலையிலும் நமக்கு கிடைக்கிறது. உங்களையும், உங்களுக்கான பொருட்கள் ஆகியனவற்றை ஆராய்ந்தால் இந்த உண்மை விளங்கிவிடும். 

முக்கியமாக மனதில் விரக்தி, வேதனை, குழப்பம், எதிலும் பற்றதன்மை என்றால் மனம் அந்த அளவிற்கு பாதிப்பாக இருக்கிறது என்று அர்த்தமாகிறது. இது கர்ம வினைப்பதிவுகளின் தாக்கமாக இருக்கலாம். இந்த வாழ்க்கைச் சூழலும், அதில் நமக்கு கிடைத்த விளைவுகளும் காரணமாகலாம். நீங்கள் செய்ததின் வழியாக கிடைத்திருக்கலாம், உங்களுக்கான வாழ்க்கை அமைப்பும் அப்படியாக இருக்கலாம். அதில் நீங்கள் தவத்தால், தியானத்தால் தெளிவு பெறவேண்டியது அவசியம்.

உண்பதில் ஆர்வமின்மை என்பது, உடலுக்கான பிரச்சனையை காட்டுகிறது. உணவின்றி உடலுக்கு ஆற்றல் ஏது? ஒருநாளைக்கு நிச்சயமாக இருவேளை உணவு தேவை. அதில் நீங்கள் கவனமின்றி இருந்தால் உடல், மனம், உயிர் மூன்றுமே பாதிக்கப்படும். நல்ல ஆடைகள் என்ற நிலை தேவையின்றி எளிமை போதுமானது. நமக்காகத்தான் உடையே தவிர மற்றவர்களின் கவனத்தை கவர்வதற்காக இல்லையே?! மனதிற்கு பிடிக்காத, விருப்பமில்லாத, உறவினர்களை தாராளமாக தவிர்க்கலாம். அது உங்கள் உயர்வுக்கு நல்லதும் கூட. ஆனால் யாருமே எனக்கு தேவையில்லை என்ற நிலை, உங்கள் வாழ்க்கையை கெடுத்துவிடும். எனவே சொந்தம், நட்பு இவைகளில் கவனம் அவசியம்.

முடிவாக. நீங்கள் வேதாத்திரியத்தின் வழியில், துரியதவம் இயற்றி, அகத்தாய்வு எனும் தற்சோதனையை ஒருவாரம் தொடருங்கள். ஒவ்வொரு விளக்கத்தையும் ஒரு காகிதத்தில் எழுதி பதிவு செய்து, மறுவாரம் ஆராய்ச்சி செய்து, களையவேண்டியவற்றை அப்பொழுதே அகற்றுங்கள். மனம் தெளிவு பெறும். வாழ்க்கை நிறைவாகும்.

வாழ்க வளமுடன்

-

In our life mind is very problematic, any easy solution for that? can we live without mind?


வாழ்நாளில் நம்மை குழப்புவதே இந்த மனம் தானே? அதைமட்டும் சரிசெய்ய பயிற்சி ஏதேனும் கிடைக்காதா? மனதை விட்டுவிட்டு, விலகி சும்மா இருந்தால் போதும் என்கிறார்களே?!



வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, வாழ்நாளில் நம்மை குழப்புவதே இந்த மனம் தானே? அதைமட்டும் சரிசெய்ய பயிற்சி ஏதேனும் கிடைக்காதா? மனதை விட்டுவிட்டு, விலகி சும்மா இருந்தால் போதும் என்கிறார்களே?!

பதில்:

உங்களுடைய பிரச்சனை எனக்கு புரிகிறது. மேலும் நீங்கள் வேதாத்திரியத்திற்கு புதியவர் என்பதும், ஏதோ ஓர் ஆர்வத்தில் உள்ளே காலடி எடுத்து வைத்துவிட்டதும் தெரிகிறது. விட்டால் வேறே எங்கேயாவது தப்பி ஓடிவிடவும் யோசனையாக இருப்பதும் யூகிக்க முடிகிறது. உங்களுக்கான தெளிவான பதிலாகவே தருகிறேன்.

மனிதன் என்றாலே, இதமான மனதைக் கொண்டவன் என்று அர்த்தமாகிறது. மனதையும், மனிதனையும் பிரிக்கவே முடியாது. பிறக்கும் பொழுது இல்லாத மனம், மூன்று வயதிற்குப் பிறகு துணையாக நின்று, நாம் வாழும் காலம் வரை கூடவேதான் இருக்கும் பிரிவதே இல்லை. பிரிக்கவும் முடியாது.

வேதாத்திரிய யோகத்தில் இருக்கின்ற நீங்கள், உங்கள் மனதைக் கொண்டுதான் தியானமும், தவமும் செய்யமுடியும். அதே மனதைக் கொண்டுதான் புலன்களை கடந்து நிற்க முடியும், மனமே மனதை அறியச்செய்யவும் முடியும். அந்த மனதால்தான் நம்முடைய உயிரையும் அறியமுடியும். அதே மனதால்தான் உயிருக்குள்ளாக நிற்கின்ற அறிவை, மெய்ப்பொருள் நிலையாகவும் உணரமுடியும். அத்தகைய மனதை விட்டு விலகிவிடவும், சும்மா இருக்க வைக்கவும், தள்ளிவைக்கவும், தூரவைக்கவும் விரும்பினால் எப்படி அது நியாயமாகுமா?

உங்கள் வாழ்நாளில் உங்களை குழப்புவதே உங்களின் மனம் தான். ஏன் குழப்புகிறது? நீங்கள் அப்படி அதை வளர்த்தெடுத்திருக்கிறீர்கள். ஆனால், நான் எங்கேய்யா அதை வளர்த்தெடுத்தேன்? என்று என்னிடமே எதிர்கேள்வி கேட்பீர்கள். சரி நீங்கள் அதை செய்யவில்லை என்றால், உங்கள் தாய் தந்தையர், அவர்களின் தாய் தந்தையர், அவர்களின் அவர்களின் தாய் தந்தையர் இப்படி, பரம்பரை பரம்பரையாக செய்திருக்கலாம் அல்லவா? அதெல்லாம் எனக்கு ஏனய்யா வந்தது? என்கிறீர்களா? நீங்கள் தானே வாரீசு? உங்களிடம் தானே அது வந்து தங்கி நிற்கும்? சரிதானே?

அந்தவகையில் தங்கி நிற்பதெல்லாம், கர்மா என்ற வினைப்பதிவாக இருக்கிறது. அது எல்லாமே தீர்க்கவேண்டிய, அகற்றவேண்டிய, கழிக்கவேண்டிய பதிவுகள். இதெல்லாம் உங்கள் வாழ்க்கையில் அன்றாடம் வெளிவந்து கொண்டே இருக்கும். அது இயல்பு. இயற்கையின் வினை விளைவு நீதி அதுவாகும். அதை நீங்கள், இந்த யோகத்தின் வழியாக, அறிந்து, திருத்தி அமைக்கவேண்டும். அதற்காகத்தான் தற்சோதனையும், அகத்தாய்வும் இருக்கிறதே? அதைச் செய்யலாமே?

இப்படி எதுவுமே முயற்சிக்காமல், மனதை புரிந்தும் கொள்ளாமல், வெறுமனே ஒதுக்கி வைக்கிறேன், தள்ளி வைக்கிறேன், சும்மா வைக்கிறேன் என்றால் அது நகர்ந்துவிடுமா? நீங்கள் விலக்க விலக்க இன்னும் பலமாக ஒட்டிக் கொண்டுதான் இருக்கும். மேலே சொன்ன பயிற்சிகளை தொடருங்கள், தவத்தையும் தொடருங்கள், மனம் தெளிவு பெறும், நீங்களும் தெளிவு பெறுவீர்கள்.

வாழ்க வளமுடன்
-

Why no one give a solution for my problems? How I can get it?


எனக்கான பிரச்சனைக்கு ஏன் யாராலும் உதவமுடியவில்லை, அதற்கான வழியோ, பதிலோ தரமாட்டேன் என்கிறார்கள் என்று குழப்பமாக இருக்கிறது. இதற்கு விடை என்ன?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, எனக்கான பிரச்சனைக்கு ஏன் யாராலும் உதவமுடியவில்லை, அதற்கான வழியோ, பதிலோ தரமாட்டேன் என்கிறார்கள் என்று குழப்பமாக இருக்கிறது. இதற்கு விடை என்ன?


பதில்: 

இது பொதுவான நிலைமைதான். மனிதர்களுடைய சிந்தனையும், செயலும், எதிர்பார்ப்பும் கூட ஒன்றாக இருந்துவிட நிறைய வாய்ப்பு உள்ளது. ஆனால் அதனால் எழுகின்ற விளைவுகளும், பிரச்சனைகளும் தனித்தனியானவை தான் என்பது பிரபஞ்ச இயற்கை விதி என்றுதான் சொல்லவேண்டும். கூடவே ஒவ்வொரு தனிமனிதனிடம் உள்ளமைந்த, சமீபகால மக்கள் ஏற்றுக்கொள்ளாத, கர்மா என்ற வினைப்பதிவும் காரணமாக அமைந்து விடுகிறது.

இரண்டு நபர்கள் என்று கணக்கில் எடுத்துக்கொண்டால் கூட, ஒரே வயது, ஒரே ஊர், ஒரே படிப்பு என்று பல ஒற்றுமைகள் இருந்தாலும் கூட அவர்களுக்கான பிரச்சனை என்பது, ஒரே மாதிரி இருப்பதே இல்லை. சிலர் பேசிக்கொள்ளும் பொழுது, ‘நான் நினைச்சேன், நீ சொல்லிட்ட’ என்று மகிழ்வோடு பாராட்டுவார்கள். அப்படியாக ஒருவர் நினைப்பதைக்கூட, பிறரால் சொல்லிவிட முடிகிறபொழுது, பிரச்சனை என்றால் மட்டும், தனித்தனியாகத்தான் பிறக்கிறது/ இருக்கிறது. மனிதனின் சிறப்பும் இதுவேதான்.

ஆனால் இதற்காக, ‘எனக்கான பிரச்சனைக்கு ஏன் யாராலும் உதவமுடியவில்லை, அதற்கான வழியோ, பதிலோ தரமாட்டேன் என்கிறார்கள் என்று குழப்பமாக இருக்கிறது' என்று புலம்பிக்கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. பிரச்சனைகள் பல இருந்தாலும், அவற்றை முதலில் ஒழுங்கு செய்துகொள்ள வேண்டியது அவசியம். எல்லா பிரச்சனைகளையும் ஒரே தொகுப்பில், அடுக்கில் வைத்துக்கொண்டு புலம்பக்கூடாது. தீர்க்கமுடியாதது, தீர்க்க முடிந்தது, தீர்க்கவேண்டியது, விட்டு விலக்கவேண்டியது என்று அதில் வகைகளை பிரிக்கவேண்டியதும் அவசியம். நீங்கள் அகத்தாய்வு எனும் தற்சோதனை பயிற்சி குறித்த விளக்கம் பெற்றிருந்தால், அதை செய்யமுடியும். ஒரு அரைநாள், இதற்காக ஒதுக்கிக்கொண்டு, துரிய தவம் இயற்றி, அதன் நிறைவில், ஒரு காகிதத்தில் வரிசையாக, ஒவ்வொரு பிரச்சனைகளாக எழுதிக் கொண்டு, அதை பட்டியலிட்டு, சீர்தூக்கிப் பார்த்து வகைப்படுத்திக் கொள்ளலாம். பெரும்பாலான மனக்குறை, இந்த பயிற்சியின் வாயிலாகவே தீர்க்கமுடியும், பிரச்சனைகளின் தாக்கம் குறையும் என்பது உண்மை.

மேலும், ஒரு குருவோ, மகானோ, ஞானியரோ, இதை விளக்கிக் கொண்டிருக்கும் நானோ, தனியாக, ஒரு குறிப்பிட்ட நபருக்காக ஒன்றை சொல்லுவதற்கு வழியில்லை. நீங்கள் அவர்களை நேரடியாக பார்த்து கேட்டால்தான் உங்களுக்கான தனியான ஆலோசனையும், தீர்வும் அவர்களிடம் இருந்து கிடைக்கும். அது இல்லாமல், யாருமே எனக்கு தீர்வு தரவில்லை என்று வருந்துவதில் பயனில்லை. ஆனால், பொதுவாக கிடைக்கும் செய்திகளில், எழுத்துக் கட்டுரைகளில், கவிகளில், உண்மை விளக்கங்களில், பேச்சுக்களில் கூட உங்களுக்கான தீர்வு அங்கே பொதிந்து மறைந்து இருக்கும். இது உறுதியான உண்மையே. ஆனால் நாம்தான் எதையுமே ‘தனி கவனத்துடன்’கவனிப்பதே இல்லையே? பிறகு எப்படி நமக்கான தீர்வு கிடைக்கும். இன்னும் சொல்லப்போனால், உங்களை ஏதோ ஒரு நாளில், ஏதோ ஒரு காரணமாக, சந்திக்கும், பேசும், நபர்கள் வழியாகக்கூட உங்களுக்கான தீர்வு கிடைக்கலாம். நாம் தான் அதற்கு தயாராகாமல், விழிப்பாக இல்லாமல் இருப்போம். கொஞ்சம் கவனித்துப்பார்த்தால், பல வழிகளில் அந்த உண்மையை, வழியை, கருத்தை, ஆலோசனையை பெறாமல் இழந்திருப்போம்.

எனவே உங்களுக்கான தீர்வு கிடைக்க, தீர்வைப் பெற வழிகள் மூன்று உள்ளன. நேரடியாக சந்தித்து ஆலோசனை பெறுங்கள், அகத்தாய்வு எனும் தற்சோதனை செய்யுங்கள், உங்களைச்சுற்றி நிகழ்வதை கவனியுங்கள். போதுமானது. நீங்கள் தெளிவு பெற, இறைநிலையோடு இணைந்து நின்று வாழ்த்துகிறேன்.

வாழ்க வளமுடன்

-

How Amavasya fast will benefit to us and which meditation is best for that day?


அமாவாசை விரதம் என்பது எவ்வகையில் நமக்கு உதவுகிறது? எந்த தவம் செய்தால் சிறப்பான முன்னேற்றம் தரும் என்பதை விளக்குவீர்களா?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, அமாவாசை விரதம் என்பது எவ்வகையில் நமக்கு உதவுகிறது? எந்த தவம் செய்தால் சிறப்பான முன்னேற்றம் தரும் என்பதை விளக்குவீர்களா?

பதில்:
அமாவாசை, பௌர்ணமி என்பதும் ஒவ்வொரு மாதமும் அடுத்தடுத்து நிகழும் இயற்கையின் அதிசயம் என்றுதான் சொல்லவேண்டும். இந்த புவியில், பஞ்சபூதங்களுக்கும், அதன் மலர்ச்சியில் உள்ள இயற்கைக்கும், பரிணாமத்தின் வழியாக மலர்ந்த ஜீவன்களுக்கும், மனிதர்களாகிய நமக்கும் ஓர் உந்துதலையும், மாற்றத்தையும் ஏற்படுத்துகிறது என்பது உண்மை. அக்காலத்தில் இருந்தே இதை உணர்ந்தறிந்த முன்னோர்கள், மக்களின் வாழ்க்கை முறையை, அன்றைய நாளில் மட்டும் ஒழுங்குசெய்தார்கள். நிலவு, சூரியன், பூமி இவற்றின் அமைப்பில் மாறும் ஆற்றலை, நமக்கு சாதகமான வகையில் ஏற்று நன்மை பெற வழி வகுத்தார்கள்.

அமாவாசை என்றால், சூரியனும் நிலவும் இணைகிறது எனலாம். பௌர்ணமி என்றால் சூரியனும், நிலவும் தனித்தனியே எதிரெதிராக பிரிந்து நிற்கிறது எனலாம். இந்த இரண்டு நிலைகளிலும், சூரியன், நிலவு, நாம் வாழும் பூமி இவற்றின் காந்தக்களம் மாறுபாடு அடைகிறது. ஏனென்றால் ஓவ்வொரு கிரகத்திற்கும், தனித்தன்மையான காந்த அலைகள் உண்டு. அவை எப்போதும் பரவி வீசிக்கொண்டே இருக்கும். அமாவாசையில் சூரியனும், நிலவும் இணைவதால், அதன் காந்த அலைகள், புமியை நோக்கிய நிலையில் பலமாகின்றன. இதனால் ஒர் ஆகர்ஷணசக்தி ஏற்படுகிறது. இது மனிதர்களாகிய நம் உடலையும், மனதையும் பாதிக்கிறது. அது மட்டுமல்ல, ஜீரணமண்டலத்தையும் பாதிக்கிறது.

அதனால்தான் அமாவாசையில் விரதம் என்ற நிலைபாட்டை வைத்தார்கள். இந்த விரதம், குறிப்பிட்ட எளிய உணவுகளை குறைவாக சாப்பிடுவது என்றும், ஒரு நேரம் மட்டும் எதுவும் சாப்பிடாமல் தவிர்ப்பது என்றும் முன்னோர்கள் வழிசெய்தார்கள். இதில் அந்த ஆற்றலை வணங்குவதற்கு பக்தி வழியாகவும் பூஜை என்று வைத்தார்கள். இதனால் உடல், மன, உயிர் நலம் காக்கப்படும் என்பது உறுதி.

உணவு என்ற விரதம் மட்டுமல்ல, எந்த ஒரு புதிய செயல் தவிர்ப்பது, கடினமான வேலைகளை தவிர்ப்பது, ஆயுதங்களை கையாளாமல் இருப்பது என்று பல விரதங்கள் உண்டுதான். முக்கியமாக ஆண், பெண் உடலுறவையும் தடுக்கவே சொல்லுகிறார்கள். அதற்கான காரணங்கள் நிறைய உண்டு. அதை தனிப்பதிவாகவே தரலாம். ஆனால் இதை எல்லாம் மறுத்து, பொய், கட்டுக்கதை என்போர், வரக்கூடிய பிரச்சனையை அனுபவிக்க வேண்டியதுதான். அதுகுறித்து நாம் ஏன் கவலைப்பட வேண்டும்?!

அமாவாசையில் தவம் செய்வதாக இருந்தால், சாந்தி தவம் செய்யலாம். தவ ஆற்றலை உடலாற்றலாக மாற்றம் செய்யும் வகையில், உடல்நலம் காக்கப்படும். சக்தி இழப்பும் ஏற்படாது. மனமும் சிதறாத நிலைக்கு உதவும். வேறு தவங்கள் தேவையில்லை.
வாழ்க வளமுடன்
-

I am sad that there is no one to comfort me. Who will give me a shoulder?


என்னை தேற்றுவதற்கு யாருமே இல்லையே என்று வருத்தமாக இருக்கிறது. அவ்வளவு துன்பங்களை நான் அனுபவிக்கிறேன். எனக்கு தோள் கொடுப்பார் யார்?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, என்னை தேற்றுவதற்கு யாருமே இல்லையே என்று வருத்தமாக இருக்கிறது. அவ்வளவு துன்பங்களை நான் அனுபவிக்கிறேன். எனக்கு தோள் கொடுப்பார் யார்?


பதில்:

உங்களின் நிலைமை எனக்கு புரிகிறது. ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் இந்த நிலைமை ஒவ்வொருவருக்கும் உண்டு. நாம் பிறந்து வளர்ந்து வரும் பருவ காலத்தில், எதைபற்றியும், எதுகுறித்தும் கவலைப்படாது வாழ்ந்த காலம் உண்டு. ஆனால், குடும்பத்தில் சூழல்காரணமாக, நமக்கு கிடைத்த வாய்ப்புக்கள் வழியாக, சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக ஏதேனும் ஒரு வாழ்க்கை மாற்றத்தை ஏற்றுக்கொண்ட பிறகு, வெளியில் சொல்லமுடியாத துயரம் நம்மை ஆழ்த்திவிடும். உண்மையில் அதை விட்டு விலகிட முடியாத அளவில் சிக்கி இருப்போம். ஏதோ ஒருவகையில், மற்றவர்கள் என்னால் பாதிக்கப்படக் கூடாது என்ற நல்ல எண்ணமும் அதில் இருக்கும் என்பதே உண்மை. ஆனால் மேலும்மேலும் சிக்கல் நிறைந்து, என்னசெய்வது என்று புரியாமல் காலம் கடத்திவருவோம்.

அத்தகைய காலகட்டத்தில், நாம் தனிமனிதனாக அல்லாமல், நமக்கென்று ஒரு குடும்பம், நம்மை எதிர்பார்த்து சில உறுப்பினர்களும் இருப்பார்கள். இதற்கிடையில் நமக்கு ஆறுதல் சொல்லவோ, ஏதேனும் உதவி செய்தோ, நல்லவார்த்தைகள் சொல்லி ஊக்கப்படுத்தவோ, நம்முடைய பெற்றோர்களும் இருக்கமாட்டார்கள். ஆம் அவர்கள் வயதாகி, முடியாத சூழலில் இருக்கலாம். காலத்தில் நிறைவாகியும் போயிருக்கலாம். நம்மோடு இருப்பவர்களும், நமக்கான எந்த உதவியும், ஆறுதலும் தரமுடியாத சூழலில் இருக்கலாம். அவர்களை சொல்லியும் குறையில்லை. அவர்களுக்கும் நம்மைப்போலவே ஏகப்பட்ட பிரச்சனைகள் இருக்கலாம்தானே?

இப்போதைய இந்த சூழலில், நமக்கு உதவி எதுவும் கூட தேவையில்லை. ஒரு ஆறுதல் வார்த்தை சொல்லக்கூட யாருமில்லையே என்பதுதான் மிகப்பெரும் பிரச்சனை. ஆனால் ஓவ்வொருவருமே, அவரவர் உலகில் தனித்து, ஒரு எல்லையோடு வாழ்ந்து வருவதால், யாரையும் யாரும் தன்னிடத்தில் அண்ட விடுவதில்லை. ‘நீ உன் எல்லைக்குள் இரு, நானும் என் எல்லைக்குள்தான் இருப்பேன்’ என்று சொல்லிவிடுவார்கள். இதையும் நாம் குறை சொல்லமுடியாது. ஒருகாலத்தில் நாம் இப்படித்தானே சொல்லிக்கொண்டிருந்தோம் இல்லையா? நிச்சயமாக இல்லை என்று மறுக்கமுடியாதுதானே?!

அப்படியானால், என்னை தேற்றுவதற்கு யாருமே இல்லையே என்று வருத்தமாக இருக்கிறது. அவ்வளவு துன்பங்களை நான் அனுபவிக்கிறேன். எனக்கு தோள் கொடுப்பார் யார்? என்று நீங்கள் கேட்டதற்கு வழி என்ன? யோகத்தின் வழியாக நம்மை உயர்த்த விரும்பும், குரு தான் நமக்கு உதவக்கூடியவர். நம் குருமகான் வேதாத்திரி மகரிஷி அவர்களை. ‘அருட்தந்தை’ என்று அழைப்பதில் இருக்கக்கூடிய அர்த்தமும், உண்மையும் அதுதான். ஒரு தந்தைக்குத்தான், வாழ்வியல் குறித்த முழு அனுபவம் இருக்கும். தாய் நம்மை, உள்முகமாக, மனப்பூர்வமாக ஆறுதல் தரக்கூடியவள்தான். அதில் மாற்றுக்கருத்தில்லை. எனினும், வாழ்கின்ற வாழ்க்கையில் பெறக்கூடிய துன்பங்களுக்கு தகுந்த ஆறுதல் தந்து நம்மை தேற்றக்கூடியவர் ‘தந்தை’ மட்டுமே.

குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்களை, ‘அருட்தந்தை’ என்ற நிலையில் ஏற்க தயாராகுங்கள். அவரின் தோளில் சாய்ந்து ஆறுதல் பெறுங்கள். ‘நான் இருக்கிறேன்’ என்றுதான் அவர் நம்மிடம் சொல்லியிருக்கிறார். சூட்சுமமாக, வான்காந்த வெளியில் கலந்திருக்கிறார். உங்களுக்கு ஆறுதல் தர, உங்கள் குருவை விட வேறு யார் வேண்டும்? இனி கவலையும், துன்பமும் எதற்கு? மிகச்சிறந்த வடிகாலாக, நம் குரு மகான் வேதாத்திரி மகரிஷி இருக்கிறார்.

வேதாத்திரியத்தில் இணையாதவர்களுக்கு, அவரவர் அளவில் அவர்களுடைய குருவை தாராளமாக ஏற்றுக்கொள்ளலாம். அதில் எந்த சந்தேகமும் இல்லை. எனவே குருவின் தோள் சாயுங்கள். ஆறுதல் பெறுங்கள். எல்லாம் கடந்து விட்டு விலகி, வாழ்வில் உயர்ந்து, மெய்யுணர்வு பெறுங்கள். வாழ்க்கையின், பிறப்பின் கடமையில் சிறந்து விளங்குங்கள். 

வாழ்க வளமுடன்

-

I want to share my grievances with someone. How to solve this?


என்னுடைய மனக்குமறல்களை யாரிடமாவது பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால் கேட்க யாருமே இல்லை. இதை எப்படி தீர்ப்பது?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, என்னுடைய மனக்குமறல்களை யாரிடமாவது பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால் கேட்க யாருமே இல்லை. இதை எப்படி தீர்ப்பது?


பதில்:

உண்மையிலேயே வருத்தம் தரக்கூடிய கேள்விதான். என்றாலும் கூட இதை தீர்க்க எளியவழி உண்டு. உங்களின் வயது சொல்லவில்லை, எனினும் எல்லா வயதினருக்கும் இந்த பிரச்சனையில் இருக்கிறார்கள் என்பதை உணரமுடிகிறது. பருவ வயதினரும், நடுத்தர வயதினரும், வயது முதிந்தோர்க்கும் என்றவகையில், அவரவர்களுக்கான அளவில் மனக்குமறல்கள் உண்டு. முதலில் மனக்குமறல் என்றால் என்ன என்று பார்த்துவிடுவோம். 

‘தான் நினைத்ததை, தான் விருப்பத்தை, தன்னுடைய நிலையை, தன்னுடைய திட்டத்தை, எதிர்பார்ப்பை சொல்லமுடியாமல், தனக்குள்ளேயே அடக்கி வைத்துக்கொள்ளுதல்’ என்பதுதான் மனக்குமறலாக நாம் கருதமுடிகிறது. இதன் அளவு அன்றாடம் கூடிக்கொண்டே போக, தன்னுடைய எந்தக்கருத்தும் செயல்படாது என்ற எண்ணமும் கூடி, மன அழுத்தம் அதிகமாகிவிடும். அந்த மன அழுத்தம், தான் வாழ்கின்ற வாழ்க்கையையே, அர்த்தமில்லாதாக மாற்றி, இனி ஒன்றுமில்லை என்ற நிலைக்கு தள்ளிவிடுகிறது. அந்த நிலையில்தான், யாரிடமாவது இதை சொன்னாலாவது ஒரு ஆறுதல் கிடைக்குமா? என்று எதிர்பார்த்து பிறரிடம் சொல்ல துடிக்கிறோம். துரதிர்ஷ்டவசமாக, எல்லோருமே இத்தகைய மன அழுத்தத்தில் இருப்பதால், ‘ஏற்கனவே என்கிட்ட நிறைய இருக்கு, நான் வேறே உன் மனக்குமறலை கேட்டு வாங்கிக்கனுமா?’ என்ற சிந்தனையில் தவிர்த்து விடுவார்கள். நகர்ந்துபோய்விடுவார்கள்.

இத்தகைய மன அழுத்தம் காரணமாகவே, போதைப்பொருட்களை நாடுவதும், தரம் தாழ்ந்த செயலில் ஈடுபடுவதும் நிகழ்ந்துவிடும். பொது கவனத்தில் இருந்து விலகி, தனிமையும் கூடி, மன அழுத்தம் தாங்காமல், இனி வாழ்வதில் பிரயோஜனம் இல்லை என்ற அளவில், தற்கொலை முடிவுக்கும் வந்துவிடுவதுதான் சோகம்.

உண்மைத்தெளிவு வந்துவிட்டால், இதற்கெல்லாம் அவசியமில்லை. முக்கியமாக, ஒரு ஆறுதலாக யாராவது இருந்தால் நல்லது என்ற நிலை சிறப்பு. ஆனால் அது யார்? இந்த கேள்வி உங்கள் முன் நின்றால், நீங்கள் உங்கள் குருவை தேர்ந்தெடுங்கள். நம்மீது மிகுந்த அக்கறை கொண்டவர் நம்முடைய குரு மட்டுமே என்பது உறுதியான உண்மை. யோகத்தில் இருக்கின்ற நமக்கு, குருவின் அக்கறையும், அணுசரனையும் உண்டு. எனவே மிக எளிமையாக, உங்களுக்கு ஆறுதல் தர குரு தயாராக இருக்கிறார்.

எப்போதுமே, உங்களுடைய மனக்குமறல்களை யாரிடமாவது பகிரவேண்டும் என்று நினைக்காதீர்கள். அதை கேட்கத்தான் வெளியிலே யாருமே தயாராக இல்லையே?! அதனால் குருவை மட்டுமே நாடுங்கள். தினமும் தவம் செய்து, அகத்தாய்வின் வழியாக, தற்சோதனையில் உங்களை பரிசோதனை செய்யுங்கள். உங்கள் மனக்குமறல்களை பட்டியலிடுங்கள். எதையும் விட்டுவிடாமல் எழுதுங்கள். ஒருவாரம், பத்து நாட்கள், ஒருமாதம் எடுத்துக்கொண்டு எல்லாவற்றையும் வெளியே கொட்டி, பட்டியலில் கொண்டுவாருங்கள்.

மீண்டும் தவமும் அகத்தாய்வும் செய்து, எதனால்? ஏன்? எப்படி இதை கடக்கலாம்? அவசியமானதா? அவசியமற்றதா? விட்டு விலகவேண்டியாதா? என்று கேள்விகள் கேட்டு பகுதி பகுதியாக பிரித்து அலசுங்கள். உண்மை விளக்கம் பெறுங்கள். உங்கள் குரு, ஆசிரியரிடம் தொடர்பில் இருங்கள். அவர்களின் ஆலோசனையை கேட்டு மாற்றம் பெறுங்கள். அவர்கள் உங்களுக்கு உதவ தயாராகவே இருக்கிறார்கள். மன உறுதியோடு, இன்றே இந்த மாற்றத்தை துவங்கி வெற்றி காணுங்கள்.

வாழ்க வளமுடன்

-

Why getting wrong result and difficulties as almost in every action in my life?


என் வாழ்க்கையில், நான் எதைச்செய்தாலுமே தவறுமேல் தவறாகவே வருகிறது. துன்பமே எழுகின்றது ஏன்?



வேதாத்திரிய கேள்வியும் பதிலும்


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, என் வாழ்க்கையில், நான் எதைச்செய்தாலுமே தவறுமேல் தவறாகவே வருகிறது. துன்பமே எழுகின்றது ஏன்?

பதில்:

பெரும்பாலான அன்பர்களின் கருத்தாகவே இதை எடுத்துக் கொள்ளமுடியும். சிலர் உங்களைப்போல வெளியில் சொல்லுவார்கள். சிலர் வெளியே சொல்லிக்கொள்ளாமல் தனக்குள் புலம்பித் தவிப்பார்கள். சிலர்,  என் தலைவிதியே என்று தொடர்ந்து ஓடிக்கொண்டே இருப்பார்கள். ஆனால் உண்மையிலேயே நாம் எதைச் செய்தாலுமே தவறுமேல் தவறாகவே வருகிறதா? அது உண்மைதானா? பார்க்கலாம்.

உங்களுக்கு ஒரு பழமொழி தெரியுமா? ‘முதல் கோணல், முற்றிலும் கோணல்’ என்பதுதான் அது. உங்களுடைய எந்த ஒரு செயலிலும், அதனுடைய தொடக்கம் சரியாக அமையவில்லை, மனம் ஒப்பவில்லை, குழப்பத்தோடு தொடங்குகிறது என்றால், அந்த செயலும், அதனுடைய விளைவும் நிச்சயமாக பிரச்சனைக்குரியதாகவோ, துன்பம் தருவதாகவோதான் அமையும் என்பது உறுதி. இயற்கையின் எந்த ஒரு செயலிலும், அதன் விளைவிலும் ஒற்றுமை, நேர்மை, ஒழுங்கு, காலம் என்பது அடங்கியிருக்கிறது. இதில் எல்லாவற்றிலுமே ‘துன்பம்’ எழுவதில்லை. ஆனால் நாம்தான் துன்பம் மட்டுமே எழுகிறது என்று புலம்பித்தவிக்கிறோம்.

இங்கே இரண்டு முக்கிய குறிப்புக்களை காணலாம். 1) நாமாக ஏதேனும் விளைவை நினைத்துக்கொண்டு, நம்முடைய செயலை செய்வது. 2) இதைச் செய்தல் இன்னதுதான் விளையும் என்ற எதிர்பார்ப்போடு செய்வது ஆகிய இரண்டு நிலைகள் உள்ளன. இதில் நீங்கள் எப்படி ஒரு செயலை செய்வதற்கு ஆயத்தமாகிறீர்கள்? என்பதில்தான் உங்களுக்கான பதில் அடங்கியிருக்கிறது.
இந்த இரண்டு நிலைகளை நீங்கள், எந்த ஒரு செயலை செய்யும் முன்பாகவும், சிந்தனை செய்துகொள்ளுங்கள். ‘இந்த இரண்டும் என்னிடம் இல்லை’ என்ற தெளிவான நிலையில் செயலை செய்ய தயாராகுங்கள்.

அடுத்ததாக, எப்போதும் ஒரு செயலை அனுபவமாக செய்யுங்கள். அனுபவம் இல்லை என்றால், அந்த செயலை செய்துவிட்டு, அதையே அனுபவமாக பெறுங்கள். அந்த அனுபவத்தின் அடிப்படையில், விளக்கம் பெற்று, தெளிவாக, கவனமாக, சிறப்பாக அடுத்தபடி செய்யுங்கள். இந்த இடத்தில் அந்த விளைவு தவறாக, துன்பமாக இருக்குமானல், அதை உடனடியாக திருத்திக் கொள்ளுங்கள். அடுத்தும் அதேபோல செய்யாதீர்கள்.

எந்த ஒரு செயல் செய்தாலும், உங்கள் உடல், மனம் விழிப்புணர்வோடும், ஒன்றுக்கொண்டு தொடர்புடையதாகவும் செய்யுங்கள். ஏனோதானோ என்று செய்யாதீர்கள். அசால்ட் என்று சொல்லப்படும் நிலையிலும் அச்செயலை செய்யாதீர்கள். மேற்கண்ட விளக்கங்களை நீங்கள் தெளிவு செய்துகொண்டால், ‘என் வாழ்க்கையில், நான் எதைச்செய்தாலுமே தவறுமேல் தவறாகவே வருகிறது. துன்பமே எழுகின்றது ஏன்?’ என்று கேட்பதற்கு இடமிருக்காது.

வாழ்க வளமுடன்
-

Why do you have frequent disagreements, quarrels with your spouse?


வாழ்க்கைத் துணைவரோடு அடிக்கடி கருத்துவேறுபாடும், சண்டை, சச்சரவும் வருவது ஏன்?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, வாழ்க்கைத் துணைவரோடு அடிக்கடி கருத்துவேறுபாடும், சண்டை, சச்சரவும் வருவது ஏன்?


பதில்:

நீங்கள் சொல்வது உண்மைதான், வாழ்க்கைத் துணைவரோடு அடிக்கடி கருத்துவேறுபாடும், சண்டை, சச்சரவும் வந்துகொண்டுதான் இருக்கிறது. இதை திருமணம் என்ற பந்தத்தின் வழியாக இல்லறத்தில் வாழ்ந்துவரும் எல்லோரும் அனுபத்திருப்பார்கள், அனுபவத்திக் கொண்டும் இருப்பார்கள். இப்போது காதல் வசப்பட்டு, உனக்காக உயிரையும் கொடுப்பேன் என்ற உயர்ந்த வசனம் பேசுபவர்களும் பின்னாளில், கணவன் மனைவி என்று ஏற்றுக்கொண்டு வாழும் பொழுது, இப்போது நீங்கள் கேட்பதைப்போல யாரிடமாவது கேட்பார்கள்.

இந்த உலக உறவுகளிலேயே, மிக உயர்ந்தது, மதிப்புவாய்ந்தது, எல்லோரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய உறவுமுறை எது தெரியுமா? கணவன், மனைவி என்ற உறவுதான். மேலும், வாழ்நாள் முழுவதும் தொடர்க்கூடியதும் இந்த உறவுதான். நம் இந்திய வாழ்வியல் கலாச்சாரம், நீண்டநாள் தொடரும் இல்லற வாழ்க்கையை அமைத்திருக்கிறது. தனித்தனியாக பிறந்து வளரும் ஒரு ஆணும், பெண்ணும், உலகமும், நீதி அமைப்பும் ஏற்ற வயதில், திருமணம் செய்து கொண்டு, கணவன் மனைவி என்ற ஒருவருக்கொருவர் ஏற்றுக்கொண்டு இல்லற வாழ்வை தொடங்குகின்றனர். அதன்வாழ்க்கை வழியாக, குழந்தைகளை வருங்கால சந்ததியாக பெற்றெடுத்து ஆளாக்குகின்றனர். ஆனால், பெருபாலான உலக நாடுகளில், ஒரே திருமண நிகழ்வும், ஒரே கணவன், ஒரே மனைவி என்ற நிலையும், மாறிக்கொண்டே இருக்கிறது. திருமணமும், திருமண முறிவும் அடிக்கடி நிகழ்கின்றன. இதற்கு காரணம் நீங்கள் இங்கே கேட்ட, அதே கருத்துவேறுபாடு, சண்டை, சச்சரவு தான். வேறுசில காரணங்களும் இதனுள்ளே அடங்கிவிடவும் கூடும்.

சரிங்க ஐயா, இதற்கு காரணம் நீங்கள் இன்னும் சொல்லவில்லையே என்று கேட்கிறீர்களா?

இதோ, காதலிக்கும் பொழுது விட்டுக்கொடுத்தும், ஏற்றுக்கொண்டும், உதவியும் வரக்கூடிய ஆணின் நிலையும், பெண்ணின் நிலையும் தொடர்கிறது. அதுபோலவே, முன்பின் அறிமுகமில்லாத ஆணும், பெண்ணும், பெரியவர்களின் ஆலோசனையில் திருமணம் வழியாக இல்லறத்தை ஆரம்பிக்கும் காலத்தில்  விட்டுக்கொடுத்தும், ஏற்றுக்கொண்டும், உதவியும் வரக்கூடிய ஆணின் நிலையும், பெண்ணின் நிலையும் சில காலம் தொடர்கிறது. காதலிப்பவர்களுக்கு திருமணத்திற்குப் பின்பும், திருமணமானவர்களுக்கு சில மாதங்கள், சில வருடங்கள் கடந்தும், இந்த கருத்துவேறுபாடும், சண்டை, சச்சரவும் அடிக்கடி வந்துவிடுகிறது. இதற்கு முக்கிய காரணம் என்ன தெரியுமா? கணவன் மனைவிமேல் வைத்திருக்கும் அன்பும், பாசமும், அக்கறையும் தான். அதுபோலவே மனைவி கணவன் மேல் அன்பும், பாசமும், அக்கறையும் தான்.

அமைதியாக, சிந்தித்துப் பாருங்கள் இந்த உண்மை உங்களுக்கு புரியவரும். இதை எப்படி தீர்க்கலாம்? யாருக்கு அதிக அன்பு இருக்கிறதோ? இருக்கிறது என்று கருதுகிறாரோ? அவர் விட்டுக்கொடுத்து வாழ்வதற்கு பழக வேண்டும். இதைத்தான் குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்களும், தன் வாழ்வில் பெற்ற அனுபவமாக நமக்கும் சொல்லுகிறார்.

வாழ்க வளமுடன்.

-

The world is full of happiness! Isn't that a lie?!


இந்த உலகில் இன்பமே நிறைந்திருக்கிறது என்று சொல்லுகிறார்களே? அது பொய்தானே?!

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, இந்த உலகில் இன்பமே நிறைந்திருக்கிறது என்று சொல்லுகிறார்களே? அது பொய்தானே?!


பதில்:

இந்த உலகில், நிறைந்திருக்கும் இன்பத்தைக் காணாமல், பொய்யை பார்ப்பதும், பொய்யாக உணர்வதும் உங்கள் பார்வையில்தான் அமைந்திருக்கிறது. உங்கள் வாழ்க்கையில் அப்படியான அனுபவங்களையும் நீங்கள் பெற்றிருக்கலாம் என்றே கருத இடமிருக்கிறது. இதை, இந்த பார்வையை நீங்கள் மாற்றிக்கொள்வதுதான் மிகச்சிறந்த வழி. உங்கள் வயது என்ன என்று எனக்குத்தெரியவில்லை. உங்கள் கடந்த காலத்தை, யோசித்துப்பாருங்கள். ஒருநாள் கூடவா நீங்கள், இன்பத்தில் திளைக்காலம் இருந்தீர்கள்? அனுபவிக்காமல் இருந்தீர்கள்? உணராமல் இருந்தீர்கள்? அதை பிறருக்கும் பகிராமல் விட்டீர்கள்?

பெரும்பாலும் இதற்கு நீங்கள் பதில் சொல்லுவீர்கள். எப்படியென்றால், ‘ஐயா, அதெல்லாம் அந்தக்காலம்’ என்பதாக உங்கள் பதில் இருக்கும். இது என்ன அந்தக்காலம் என்றால், நீங்கள் சிறுவயதில் அனுபவித்த காலமாக இருக்கலாம். 

அந்த சிறுவயது என்றால், மூன்று முதல் பதினெட்டு வயது வரை என்று பொதுவாக கருதலாம். அந்த வயதில், ஆணுக்கும் பெண்ணுக்கும் எந்தவித எதிர்பார்ப்பும் இருப்பதில்லை. தன்னையும், தன் குடும்பம் பற்றியும் கூட சிந்தனையில் வைத்துக்கொள்வதில்லை. எப்போதும் ஒரு பரபரப்பு, ஆற்றல் வேகம், செயல்பாடு, மனதில் உத்வேகம், ஏதோ சாதிக்க பிறந்ததான நினைப்பு, அப்படி, இப்படி என்று ஏதேதோ இருக்கும். எந்த செயல் செய்தாலும், உங்களை வெளிப்படுத்தி, அதன்வழியாக அன்பையும், நட்பையும், மதிப்பையும், பாராட்டையும் பெறுவதற்கு விரும்புவீர்கள். முக்கியமாக தன்னநலம் கருதாத செயல்பாட்டில் நீங்கள் ஆர்வமாக இருப்பீர்கள். அந்த வயதில் உங்களுக்கென்று தனி உலகமும் கூட அமைந்திருக்கும் என்பதே உண்மை. அது உங்கள் மனதளவில் கூட இருக்கலாம்.

எந்த குழப்பங்களுக்கும் சிக்கிடாமல், எனக்கெதுக்கு அது? என்று விலகி விலகி ஓடி, தனித்திருந்து, எதும் கிட்டே வராத தடுப்போடு, உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ? அதை செய்வதற்கு விருப்பமும், செய்திறனும், திட்டமும் கொண்டிருப்பீர்கள்.

இவை அனைத்துமே இன்று, உங்களுக்கு மாறிவிட்டது. இந்த உலகில் எல்லாமே துன்பமாக மாறிவிட்டது என்று கருதுகிறீர்கள். இன்பம் என்பதே பொய் என்ற கருத்துக்கும் வந்துவிட்டீர்கள். அதை நீங்களும் அறிந்துகொண்டு, மற்றவர்களுக்கும் சொல்லிவிட துடிக்கிறீர்கள். சரிதானே?!

இதற்கு முக்கிய காரணம், உங்களுடைய எதிர்பார்ப்பும், அதனால் விளைந்த ஏமாற்றமும் ஆகும்! எப்படி என்பதை சிந்தனை செய்யுங்கள். அதற்கான உண்மை உங்களுக்கு புரியவரும்.

வாழ்க வளமுடன்.

What is the old method to fix the meditation energy stagnation?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, சாந்தி தவம் அந்தக்காலத்தில் இல்லை என்றால், வேறெப்படி சமாளித்தார்கள்?


பதில்:

உண்மைதான். வேதாத்திரி மகரிஷியின் காலத்திற்கு முன்பே, சாந்தி தவம் என்ற இறங்குபடி தவம், யாரோலோ எங்கேயோ உருவாக்கம் பெற்று உலகில் நடைமுறையில் இருந்துவந்திருக்கிறது. ஆனால் அது எல்லோருக்கும் கிடைக்கும் வகையில் பரலாக்கப்படவில்லை. இதனால், வழக்கமான, கடினமான, பிரச்சனைகள் மிகுந்த தவமுறைகள்தான் அங்காங்கே செயல்முறையில் இருந்தன. அதனால், தவம் இயற்றிடும் யோகியர்கள் பலவழிகளில் துன்பமே அனுபவித்தனர் என்பதுதான் உண்மை.

சாந்தி யோகம் என்ற சாந்தி தவத்தை நமக்கு வழங்கிய வேதாத்திரி மகரிஷி அவர்களுமே, தன்னுடைய தவ ஆற்றலின் தேக்கத்தால் அவதியுற்றார் என்று நீங்கள் அறிவீர்களா? அந்த தவ ஆற்றலின் தேக்கப்பிரச்சனைகள் குறித்து அவரே அனுபவமும் பெற்றிருக்கிறார். அதை தன்னுடைய உரைகளிலும், என் வாழ்க்கை கதை நூலிலும், ஞானக்களஞ்சிய கவிகளிலும் குறிப்பிட்டுள்ளார். நீண்ட நாட்கள் அந்த பிரச்சனைகளுக்கு வழிதெரியாமல் திண்டாடி, பிறகுதான் அதை வழிப்படுத்திக்கொள்ள அவருக்கு வழிபிறந்தது. அது எப்படி? எங்கு என்பதை, நம் ‘வேதாத்திரிய யோகா’ காணொளி தளத்தில் பதிவாக தந்திருக்கிறேன். நீங்கள் என்னுடைய குரல்வழியாக உண்மையை அறிந்துகொள்ளலாம்.

-

இதோ அதற்கான சுட்டி(Link): https://youtu.be/hvSv2YuMhyg?feature=shared

-

வாழ்க வளமுடன்.
-

உலகம் பார்ப்பதற்கு முன்பாகமவே, உங்களுக்கு மட்டுமே முதலில் காணக் கிடைக்கும் பதிவுகள் பெறலாம், . உறுப்பினராக இணைந்துகொள்க.

Join this Channel - Only you can get posts that are available to see first, before the world sees it. 

https://www.youtube.com/channel/UCKov60ULoBQ76KIiUXhLL-A/join

-


How to deal with cheaters in our everyday life?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, முதுகில் குத்துபவர்களையும், காலைவாரி விடுபவர்களையும் எப்படி சமாளிப்பது?


பதில்:

யோகத்தின் பாதையில் செல்லுகிறவர்களுக்கும் இப்படியான சூழ்நிலைகள் வரத்தான் செய்யும். ஏனென்றால் ஏதேனும் ஒருவகையில், நாம் உலகில்போக்கில் போகத்தானே வேண்டியுள்ளது. அந்த வகையில், நாம் என்றோ செய்த ஒரு தவறு, அதாவது நமக்கு சரியாக இருந்து பிறருக்கு அதில் விளைந்த துன்பம் என்றும் புரிந்துகொள்ளலாம். நான் அப்படி எதுவுமே செய்யவில்லையே என்று நீங்கள் சொன்னாலும் கூட, உங்கள் தாய், தந்தையரோ, அவர்களுக்கு முன்னோர்களோ செய்திருக்கலாம். அது உங்கள் வழியாக தீர்க்கவும் இப்படியாக நிகழலாம். இதுவெல்லாம் காலத்தின் கணக்கு என்பதால் நாம் ஏதும் முன்கூட்டி அறியவோ, தீர்க்கவோ முடியாது. அதை ஏற்று அனுபவித்தே தீர்க்க முடியும்!

முக்கியமாக இந்த புரிதல் வந்துவிட்டால், நாம் எந்தவகையிலும் நம்மை வருத்திக் கொள்ளாமல், இந்த அளவில் என்னுடைய வினைப்பயன் ஒன்று கழிந்துவிடுகிறது, என்ற நினைவில் ‘வாழ்க வளமுடன்’ என்று சொல்லி அதை கடந்துவிடலாம். நடந்ததை எண்ணியும், இப்படியாகிவிட்டதே என்ற மன வருத்தமும் ஏற்படுத்த தேவையில்லை. அந்த நபர்களை நினைத்து திட்டவோ, சாபமிடவோ, பழிவாங்கிடவோ தேவையும் இல்லை. நல்ல புரிதல் உங்களுக்கு வந்துவிட்டால் அவர்களை வாழ்த்திடவும் செய்யலாம்.

உங்கள் வாழ்வில் நிகழ்ந்த இந்த சம்பவம், இனிமேலும் நிகழாத விழிப்புணர்வோடு நீங்கள் செயல்படுங்கள். ஏதேனும் தவறு நேர்ந்துவிட்டால், உடனடியா தொடர்புடைய அந்த நபரிடம், விளக்கம் சொல்லி, மன்னிப்பும் கேட்டுவிடுங்கள். இதனால் உங்களுக்கு அவரால் வேறெதும் துன்பம் நிகழாமல் செய்துவிடலாம். குருமகான் வேதாத்திரி மகரிஷி சொல்வதுபோல ‘விளைவறிந்த விழிப்புநிலை’ என்ற அளவில் உங்கள் கடமைகளை, வேலைகளை, தொழிலை,  வியாபாரத்தை செய்துவாருங்கள். நன்மை அடைக!

வாழ்க வளமுடன்.

-

How i can fix my confidence, depression, sorrow, problems in my daily life?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, வாழ்க்கையில் ஓவ்வொருநாளும் சோகம், கவலை, பிரச்சனை சூழும் பொழுது, மனம் அமைதி கெடுகிறது. தன்னம்பிக்கையும் இல்லாதுபோகிறது எப்படி சரி செய்யலாம்?


பதில்:

சராசரி மனித வாழ்வில் அப்படி நிகழ நிறைய வாய்ப்புக்களை நாம்தான் உருவாக்கி வைத்திருக்கிறோம். மேலும் புதிதாக உருவாக்கியும் கொள்கிறோம். காரணம் என்னவென்றால், மனம் என்பது என்ன? அதன் மகத்துவம் என்ன? என்பதெல்லாம் அறியாத காரணத்தால்தான். யாரிடமாவது மனம் என்றால் என்ன? என்று கேட்டால் என்ன சொல்லுவார்கள் தெரியுமா? மனம் என்பது எண்ணங்களின் வெளிப்பாடு. அது இங்கிக்கொண்டே இருக்கும் என்று சில வரிகளில் முடித்துவிடுவார்கள். நவீன கால விஞ்ஞானமும் மனம் என்பதை இன்னமும் முழுமையாக சொல்லிவிடவில்லை. ஆனால் உலகில் மனநல மருத்துவர்கள் பெருகிக்கொண்டே இருக்கிறார்கள். யாரோ ஒருவர் சொன்னதுபோல ‘எல்லோரும் மனநலன் பாதிக்கப்பட்டவர்தான், ஆனால் வெளியே தெரிவதில்லை’ என்பது உண்மையோ என்று கருதவும் இடமாகிவிட்டது.

உங்கள் மனதை முதலில் புரிந்துகொள்வதுதான் முதல்படி. அதற்கு சாதாரணமான பயிற்சி உதவாது. மனதை பழக்கப்படுத்தும் எதுவும், மனதால்தான் செய்கிறோம் என்றாலும் அது அதன் போக்கில் உடனடியாக மாற்றம் ஏற்றுக்கொள்ளாது. ஒரு காட்டு யானையை, ஒரே நாளில் அல்லது சில நாட்களில் நம் போக்கிற்கு கொண்டவர முடியுமா?

அதேபோல மனதை விட்டுவிட்டும் நாம் வாழமுடியாது, அதை வேறெங்கோ வைத்துவிட்டும் வாழமுடியாது. நாம் அந்த மனதோடு இணையவேண்டும். மனதின் அலைநீளங்களில், அதன் இயக்கத்தில் கவனம் வைக்கவேண்டும். அதற்கு, யோகம்தான் சிறந்தவழி. எனக்கு அதெல்லாம் சரிப்படாது. யோகத்திற்கும் வரமாட்டேன் என்றால், உங்களுக்கான வழி ஏதுமில்லை என்பதையும் புரிந்துகொள்ளுங்கள்.

யோகத்தில் இணைந்தால், தவம், தியானம் வழியாக மனதை ஆராய்கிறோம். மனம் என்றால் என்ன என்பதை, அங்கே புரிந்துகொள்கிறோம். அதன்வழியாக திருத்தம் பெற்று, மனதை எப்படி கையாளவேண்டும் என்பதையும் அறிந்துகொண்டு, நாமும் நம் தவறுகளில் திருத்திக்கொண்டு, இயல்பாக வாழ முயற்சிக்க பழகினால், உங்களுடைய சராசரி வாழ்வில், அளவுமுறையோடு செயல்பட்டு, துன்பம், கவலை, குழப்பம், சோகம் சூழாத வாழ்க்கையை வாழமுடியும். தன்னம்பிக்கையோடு வாழமுடியும், அதை மற்றவர்களுக்கு தரவும் முடியும். எது இன்பம் என்பதை புரிந்து அதை அனுபவிக்கவும் முடியும்.

வாழ்க வளமுடன்.

-

Why getting sleeping disorder and dreaming on everyday? Any solution?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, அடிக்கடி கனவுத்தொல்லை இருக்கிறது. தூக்கமும் இல்லை. இதற்கான காரணம் என்ன?


பதில்:

உங்கள் வாழ்வில் நீங்கள் அதிகம் உணர்ச்சி வசப்படுபவராக இருக்கிறீர்கள். மேலும் ஏதெனும் நடந்துவிடுமோ என்ற பயமும், அதனோடு கூடிய சிந்தனைக் குழப்பங்களும் உங்களுக்கு இருக்கிறது என்றும் உறுதியாக சொல்லலாம். உங்களில் செயலில் நீங்கள் சரியாக இருந்தால் ஏன் பயம் வருகிறது? எனவே உங்களுடைய எந்த செயலிலும் கவனமாக, சரியாக செய்கிறேனா? என்று கவனியுங்கள். அல்லது திட்டமிட்டு அந்த செயலை செய்யுங்கள். பேசும்பொழுதும் கூட அப்படி கவனிக்க வேண்டும். ஏதோ தோன்றியது சொல்லிவிட்டேன் என்று பேசிவிடக்கூடாது. இதனால் நீங்களும் வருத்தப்படுவீர்கள், எதிராளும் வருத்தப்படுவார். அதுவே உங்களை குழப்புகிறது.

இந்த குழப்பங்கள், பயம், சிந்தனை தடுமாற்றம் எல்லாமே உங்கள் அடிமனதில் மிகத்தெளிவாக பதிந்துவிடும். நீங்கள் தூக்கத்தில் இருக்கும் பொழுது, புறமனம் இயங்காத நிலையில், அடிமனம் விழித்துக்கொள்கிறது. அதுதான் இப்படியெல்லாம் செய்தாய், இப்படி விளைவு வந்தது என்றெல்லாம் எடுத்துக்காட்டும். பிறர் இப்படி செய்தார்கள் என்றும் சொல்லிக்காட்டும். இனிமேல் இந்தமாதிரி செய்யலாமே என்று உங்களுக்கு பாடமும் நடத்தும்.

உங்கள் கனவில், எக்காலத்திற்கும் பொருந்துவதாகவே காட்சிகள் அமையும். அடிமனம் விழித்துக்கொண்டால் உங்களுக்கு தூக்கமும் தடைபடும். ஆழ்ந்த தூக்கம் கிடைக்காது. எவ்வளவு நேரம் தூங்கினாலும், தூக்கக் கலக்கமும், உடல்சோர்வும் இருக்கும். முக்கியமாக மனதில் நிம்மதி உணர முடியாது. இதனால், அன்றைய புதிய நாளும் கெட்டுப்போக வாய்ப்பு அதிகமாகிவிடும்.

நீங்கள் வேதாத்திரிய யோகம் கற்றவரானால், இரவில் தூக்கமின்மையும், கனவுகளும் வந்து தொல்லை தருமானால், சாந்தி தவம் செய்துவிட்டு பிறகு தூங்கப்பழகுங்கள். ஒரு மூன்று நாள் இரவில் தவம் செய்துவந்தால் மாற்றம் கிடைக்கும். உங்கள் செயலில், சிந்தனையில், பேச்சில் கவனமாக இருந்து, நல்லதை பேசுவேன், நல்லதை செய்வேன் என்று உறுதிபட இருங்கள். பிறர் மனவருத்தம் பட ஏதும் செய்யாது தவிர்த்துப் பழகுங்கள். இந்த பழக்கத்தை தினமும் கடைபிடித்தால், கனவுத்தொல்லையில் இருந்தும், தூக்கமின்மையில் இருந்தும் மீண்டுவிடலாம்! மேலும் மனவருத்தம் தரும் சினிமா, தொலைகாட்சி, கைபேசி காட்சி பார்க்காதீர்கள். அதுவும் காரணமாக அமைந்திருக்கும் என்பதே உண்மை!

வாழ்க வளமுடன்.

What benefit am I get from greeting the enemy?


எதிரியை வாழ்த்துவதால் எனக்கென்ன பலன் கிடைத்துவிடப்போகிறது?


கடந்த வாரத்தில் அன்பர்களே, நமக்கு துன்பம் தரும் எதிரியை வாழ்த்தினால் சரி செய்துவிடலாம் என்றால் நம்ப முடிகிறதா? என்ற கேள்வியோடு வாக்குகள் செலுத்த அன்பர்களை கேட்டுக்கொண்டோம். அதற்கு கிடைத்த வாக்கு விபரம் பாருங்கள்...

நிச்சயமாக காலத்தால் மாறிடும் சரியாகும் உண்மை 77% (அதிக வாக்கு)

என்று கிடைத்திருந்தாலும், இந்த வாக்கு ஏதோ ஒப்புக்கு கொடுத்துள்ளார்களோ என்று தோன்றுகிறது. அதாவது சும்மா போட்டுவைப்போம் என்று வாக்கு அளித்திருக்கிறார்கள். இதை எப்படி நாம் கண்டுபிடித்தோம் என்றால், இந்த வாக்குப்பதிவின் முடிவையும், அதற்கான விளக்கப்பதிவையும் 12% அன்பர்கள்தான் பார்த்து படித்திருக்கிறார்கள் என்பது எங்கள் ஆய்வில் தெரியவருகிறது.

நீ என்னமோ சொல்லிக்கய்யா, நாங்கள் எங்களை மாற்றிக்கொள்ள தயாரில்லை என்ற நிலைக்கு போய்விட்டார்களோ என்று கருதிட இடமிருக்கிறது.

ஏனென்றால். இந்த வாக்குப்பதிவு வழியாக நாம் அறிந்துகொண்டது, 12% அன்பர்கள் மட்டுமே எதிரியை அல்லது எதிரியாக செயல்படுபவரை வாழ்த்திடவும், வாழ்த்தின் வழியாக திருத்தவும், தன் வழியை சரி செய்து கொள்ளவும் விரும்புகிறார்கள். அந்த 12% அன்பர்களை வாழ்த்தி மகிழ்கிறோம். ஏறக்குறைய 88% அன்பர்கள், எதிரியை பழிவாங்கிட நினைக்கிறார்கள், அப்படி பழிவாங்கிட சந்தர்ப்பம் கிடைக்க காத்திருக்கிறார்கள், அதை வஞ்சமாக மனதிற்குள் போட்டுக் கொள்கிறார்கள். கூடுதலாக அதை ஒரு கர்மாவாகவும் பதிந்துவைத்து விடுகிறார்கள் என்று கருத இடமிருக்கிறது. 

ஆனால் அந்த 88% அன்பர்கள் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். என்ன சொல்லுவார்கள் என்றால், அவர்களை அப்படியே விட்டுவிட்டோம், ஒதுக்கி தள்ளிவிட்டோம் என்று மறுப்பு தெரிவிப்பார்கள்.

ஆனால் அந்த எதிரியால் நீங்கள் பாதிக்கப்பட்டது உண்மைதானே? அந்த காயம் மனதிற்குள் மறைந்தாலும் வடுவாக இருக்கிறதே? எப்போது நினைத்தாலும் அது கண்முன் நிகழ்கிறதுதானே? அப்போதைய சினமும், என்னால் எதும் செய்யமுடியவில்லையே என்ற வருத்தமும், இப்படி செய்துவிட்டாரே (னே) என்ற நிலைபாடும் அப்படியே காட்சியாக வருகிறது அல்லவா? அதை எப்படி போக்குவீர்கள். இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும்கூட இது மாறுவதற்கு வழி உண்டா? சிந்தித்தீர்களா? வேறு என்னதான் செய்யப்போகிறீர்கள்?

அவரை அந்த எதிரியை, உங்களுக்கு துன்பம் தந்த எதிரியை அப்படியே விட்டுவிட்டோம் என்றால், நீங்கள் முன்னைவிட தெளிவாக, உங்கள் செயலில், கருத்தில் நிலைத்து, இயல்பாக அல்லவா இருக்கவேண்டும்? மேலும் வழக்கமான மகிழ்ச்சியாக இருக்கவேண்டுமே? அப்படி இருக்கிறீர்களா? என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்களேன்.

ஒரு எதிரியை, உங்களுக்கு, உங்கள் வாழ்க்கையில் சந்தித்த எதிரியை வாழ்த்துவதால், நீங்கள் அந்த வருத்தத்தில் இருந்தும், பதிவில் இருந்தும் விலகுகிறீர்கள் என்பதே உண்மை. மேலும் அந்த எதிரியை வாழ்த்திக்கொண்டே இருப்பதால், அந்த எதிரி குறித்தான் எண்ணம் உங்களுக்குள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. கவலையும் வராது, பழிக்குப்பழி வாங்கவேண்டும் என்ற எண்ணமும் தோன்றாது. அதற்கான திட்டமும் உருவாகாது. ஆனால் அந்த வாழ்த்தினால் என்ன மாற்றம் நிகழ்கிறது தெரியுமா?

உங்களைச் சுற்றி உண்மையிலேயே ஒரு பாதுகாப்பு வளையத்தை அமைத்துக் கொள்கிறீர்கள். உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் சேர்த்தே என்றும் சொல்லலாம். ஏற்கனவே உங்களை துன்பத்திற்கு ஆளாக்கிய எதிரி, உங்கள் வாழ்த்தால் மறுபடி எதுவும் செய்யாத நிலைக்கு உங்களை மாற்றிக்கொள்கிறீர்கள். உங்கள் வாழ்த்தால் உங்களுக்கு தீங்கிழைத்த எதிரியின் மன நிலையும் மாற்றம் அடைகிறது என்பதே இங்கே முக்கியமானது. உங்களை வருத்தத்திற்கு உள்ளாக்கியதற்கு, அந்த எதிரியே மனவருத்தம் அடைவதும் நிகழும். காலத்தால் அவரே உங்களிடம் வந்து, மன்னிப்பு கேட்பதும் கூட நிகழ வாய்ப்புள்ளது. ஏனென்றால் இயற்கையின் விதி அத்தகையது.

இதை ஏன் நம்ப மறுக்குறீர்கள் என்று தெரியவில்லை. வாழ்த்தின் உண்மையை அறிந்து உணர்ந்து கொள்ளுங்கள். குருமகான் வேதாத்திரி மகரிஷியின் வழிநடப்போருக்கு, வாழ்த்து பேருதவி அளிக்கும் என்பது அனுபவப்பூர்வமானது ஆகும்.

வாழ்க வளமுடன்.

-

இந்தபதிவின் மூலக்கட்டுரை இங்கே இருக்கிறது!

வேதாத்திரிய வாக்குப்பதிவு.

அன்பர்களே, நமக்கு துன்பம் தரும் எதிரியை வாழ்த்தினால் சரி செய்துவிடலாம் என்றால் நம்ப முடிகிறதா?

வாக்கின் முடிவும் - விளக்கமும்

-

அன்பன்

சுகுமார்ஜெ (Sugumarje)

வாழ்க வையகம், வாழ்க வையகம், வாழ்க வளமுடன்!

Why I am not interested on simplified exercise?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, உடற்பயிற்சி செய்வதற்கு சோம்பேறித்தனமாக இருக்கிறதே எப்படி திருத்தலாம்?


பதில்:

அந்த அளவிற்கு உங்கள் மனதை கெடுத்துவைத்திருக்கிறீர்கள் என்பது தெரிகிறது. நீங்கள் மட்டுமல்ல, உலகில் கோடிக்கணக்கான இளைஞ சமுதாயமே அப்படித்தான் இருக்கிறது என்று கணக்கெடுத்திருக்கிறார்கள். காரணம், உலகில் ஏற்பட்டிருக்கும் தகவல் தொடர்பு மலர்ச்சி. உலகை கைகளில் சுருக்கி கைபேசி வடிவில் தந்துவிட்டதால், கண்களுக்கும், விரல்களுக்கும் மட்டுமே அதிக பயிற்சியும், குரலுக்கு கொஞ்சம் பயிற்சியும் தந்துகொண்டு வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

தனியாக, உடலுக்கும், உடல் உறுப்புகளுக்கும் பயிற்சி தேவையா? என்று அவர்களே அதை தவிர்த்தும் விடுகின்றனர். முதலில் நீங்கள் சொன்ன சோம்பேறித்தனம் எப்படி வருகிறது என்பதை அறிந்திடுங்கள். உங்களுக்கு உடற்பயிற்சியில் ஆர்வமில்லை. அதை செய்வதால் என்ன மாற்றம் நிகழ்கிறது என்பது குறித்த அக்கறை இல்லை. நான் நன்றாகத்தானே இருக்கிறேன். பிறகு எதற்காக பயிற்சி என்ற அசட்டுத்தனம். ஆனால் உடல் உங்களின் அன்றாட நடவடிக்கைகளால் சோர்வடைகிறது என்பதை நீங்கள் அறிவதே இல்லை. மேலும் மேலும் உடலை படாதபாடு படுத்தி, பகல்முழுவதும் உயயோகப்படுத்திவிட்டு, இரவிலும் கூடுதலாக கஷ்டப்படுத்துகிறீர்கள். இந்த உடலுக்கென்று பாஷை இல்லை. அதனால் அது என்னைவிட்டுவிடு என்று ஒருபோதும் சொல்லாது.

உங்களுக்கு ஏற்றபடி அது உங்களோடு பயணிக்கும். தீடீரென்று ஒருநாள் ஒரு தலைவலி என்று ஆரம்பிக்கும், பிறகு காய்ச்சல், உடல் வலி, சதை பிடிப்பு, உடலில் சூடு, கண்கள் வீக்கம், மூக்கில் சளி, இருமல் என்று படிப்படியாக ஆரம்பித்து நாளடைவில், ஒரு நோய்க்கான அறிகுறியைக் காட்டி, உங்களை படுக்கையில் வீழ்த்தும். அப்போதும் ஏதேனும் ஒரு மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற்று, மருந்துகள் சாப்பிட்டு, உடலுக்கு ஊக்கம் கொடுத்து, பழையபடி அதே வேலையை ஆரம்பிப்பீர்கள். இந்த முறை முன்னைவிட பலவீனமாக மீண்டும் உடல் விழும். இது தேவைதானா? சிந்திப்பீர்.

இயல்பாக, நன்றாக இருக்கும் பொழுதே, உடல்மீது அக்கறை கொண்டு, கவனித்து, பயிற்சியால் ஊக்கம் கொடுத்து வந்தால், வாழ்நாள் முழுவதும் எக்குறையும் இன்றி வாழமுடியுமே? அதை ஏன் தவிர்க்கிறீர்கள்? சிந்திப்பீர். தெளிவீர், உயர்வீர்!

வாழ்க வளமுடன்.

Why advised to avoid the meditation practice at night times?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.




கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, இரவில் தவம் செய்வதை ஏதற்காக தவிர்க்கச் சொல்லுகிறார்கள்?!


பதில்:

இரவில் தவம் செய்யக்கூடாது என்பதல்ல. செய்யலாம். ஆனால் அதற்கு நன்கு ஏற்கனவே பழக்கப்பட்டிருக்க வேண்டியது அவசியமாகும். குறைந்தது 12 மாதங்களாவது தொடர்ந்து, நாள் தோறும் தவம் செய்து பழகியிருந்தால், இரவில் தவம் செய்வதில் எந்தப் பிரச்சனையும் இருக்கப் போவதில்லை. ஆனால், தவம் கற்ற ஆரம்ப நிலை சாதகர்கள், இரவில் தவம் செய்வதை தவிர்க்க வேண்டும். முக்கியமாக எல்லோருமே, அதாவது எந்த நிலையில் தவம் கற்றோரும் கூட, உச்ச தவமான துரியாதீத தவத்தை இரவில் செய்யக்கூடாது என்பது பொதுவான விதி என்று சொல்லலாம். அதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. அதை விளக்கமாக சொல்லி உங்கள் மனதை குழப்பமடையச் செய்ய எனக்கு ஆர்வமில்லை. தவிர்த்துவிடலாம் என்றால் அதை அப்படியே ஏற்றுக்கொள்வது சரியானதுதான். இல்லை நான் முயற்சிப்பேன் என்றால், அது உங்கள் சமர்த்துதான்.

சரி, ஏன் இரவில் தவம் தவிர்க்கப்பட வேண்டும்? என்று கேட்பீர்களானால், முதலில் தவம் என்பது என்ன? என்ற கேள்விக்கான விடையை பெற வேண்டும். நீங்கள் உங்களுடைய மனதை ஒரு நிலையில் குவித்து தவம் செய்கிறீர்கள். அந்த நேரத்தில் உங்கள் கவனம் அதில் மட்டுமேதான் இருக்கும். உங்கள் சூழல் குறித்த எந்த ஒரு கவனமும் அங்கே இருக்காது. ஆரம்பத்தில் இருக்கும் என்றாலும் போகப்போக கவனம் தவத்தில் மட்டுமே இருக்கும்.

இரவு என்பது இருட்டானதுதானே ஓய்வானதுதானே என்பீர்கள்! அது யாருக்கு? இரவு சில உயிரிங்களுக்கு இயக்கமும் கொடுக்கும். பூச்சிகள், வண்டுகள், எலிகள், பல்லிகள், பாம்புகள் இப்படி பல உண்டு. அந்தநேரத்தில், தீடீரென்று எற்படும் வெளிச்சம் கூட உங்களை பாதிக்கும், யாராவது கதவை தட்டினால் கூட பாதிக்கும். இப்படி பல பிரச்சனைகள் எழ வாய்ப்பு உண்டுதானே?!

என்னதான் பாதுகாப்பு என்றாலும் கூட, ஒரு கொசு போதுமே உங்கள் தவத்தை கெடுக்க?! இதனால் மனமொன்றிய நிலையில் ஏற்படும் பிரச்சனைகளால், மனதின் இயல்பு பாதிப்படையும், அதனால் உடலும் கெடும், செய்கிற தவமும் கெடும். அதன்வழியாக உங்கள் தூக்கமும் கெடும். மறுநாள் அலுவல்களும் கெடும் அல்லவா?! எனவே இதையெல்லாம் கவனத்தில் கொண்டு இரவில் தவம் செய்வது குறித்து சிந்தித்துப் பாருங்கள். தேவைப்பட்டால், சாந்திதவம் மட்டும் செய்யலாம். ஏனென்றால் அதில் மனமும், உடலும் அமைதியை நோக்கித்தான் செல்கிறது!

வாழ்க வளமுடன்.

Why does this mind make me suffer this? How to calm it down?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, இந்த மனம் ஏன் என்னை இந்த படாதபாடுபடுத்துகிறது? அதை எப்படி அமைதிபடுத்துவது?


பதில்:

மிக நல்லதுதான், ஒருவகையில் மனம் என்பதை புரிந்துகொள்ள சந்தர்ப்பம் உங்களுக்கு கிடைத்திருக்கிறதே?! சரி இந்த மனம் என்பது என்ன? நாம் வேறு மனம் வேறா? என்றுதான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். எல்லோருமே அப்படித்தான் சொல்லி, விளக்கமும் கொடுத்து, அதை அடக்கு, விலக்கு, ஆளுமை செய் என்றெல்லாம் அறிவுரை சொல்லுகிறார்கள். ஆனால் முடிகிறதா?

குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள், மனிதனும், மனமும் ஒன்றே என்று சொல்லுகிறார். எப்படி? மனம் இதனானவன் மனிதன். மனதையும், மனிதனையும் பிரித்திட முடியாது என்கிறார். ஆனால் நாம் வாழும் காலத்தில், நம் அனுபவங்களைக் கொண்டும், பிறர் நமக்கு தருகின்ற, தகவல்கள், அறிவுரைகள், ஆராய்ச்சிகள், விஞ்ஞான முடிவுகள் கொண்டும் அப்படி பிரித்து நினைத்துக் கொண்டு, புதிய ஒரு பிரச்சனைகளிலும் சிக்கிக் கொள்கிறோம். மனம் நம்மோடு பிறந்தது, நம்மோடு பிரிவது, நம்மோடு வாழ்வதும் கூட. எனவே மனதை அடக்க நினைக்காது, அறியவும், புரிந்து கொள்ளவும் முயற்சிக்க வேண்டும்.

மனம், நம்முடைய உடலெங்கும் ஓடிக்கொண்டே இருக்கக்கூடிய, உயிராற்றலின் படர்க்கை ஆற்றல் என்ற உண்மையையும், குரு மகான் வேதாத்திரி மகரிஷி விளக்குகிறார். மனம் என்பது அலை இயக்கமும் கூட. இதை தற்கால விஞ்ஞானிகள் பதிவு செய்தும் காட்டுகிறார்கள். மேலும் மனம் என்பதை, மூளையின் அலை இயக்க செயல்பாடு என்றும் விளக்கம் தருகிறார்கள். அதுஒருபக்கம் இருக்கட்டும். நீங்களும், மனமும் ஒன்றே என்பதை முதலில் புரிந்துகொள்க.

இங்கே ஏன் படாதபாடுபடுத்துகிறது என்று கேட்டீர்கள் அல்லவா? அதற்கு அடிப்படையாக சில காரணங்கள் உள்ளன. தனக்குள்ளாக ஏற்கனவே பதிவாக வைத்திருக்கும், கர்மா என்ற வினைப்பதிவுகளின் தாக்கமே ஆகும். அது அவ்வப்பொழுது நம்முடைய எண்ணம், சொல்,செயலால் வெளிவருகிறது. சூழ்நிலை தாக்கம் இருந்தால், தானாகவும் வெளிவரும். அது எப்படி நமக்குள் இருக்கிறது என்றால், வழிவழியாக, பரம்பரையாக, நம் முன்னோர்கள் வழியாக, நம் பெற்றோருக்கு வந்து, பெற்றோரிடம் இருந்து நமக்கும் வந்துவிட்டது. இதை நாம் புரிந்து சரிசெய்துகொள்ளவும், தீர்க்கவும் வேண்டும். இல்லையேல் இது, நம் வழியாக, நம்முடைய குழந்தைகளுக்கும் தொடரும். இதுதான் இயற்கையின் வினை விளைவு நீதியாகும்.

மனதை அமைதிப்படுத்த, அந்த மனதையே ஆராயவேண்டும், அந்த ஆராய்ச்சியில் இறங்கிட யோகத்திற்கு வரவேண்டும். தகுந்த குருவால், அவரின் வழிகாட்டலுடன் நாம் அமைதியும், முழுமையும் அடையலாம். வாழ்நாளை மகிழ்ச்சிக்குறியதாக மாற்றலாம்! அந்த மாற்றத்தை பெற உங்களை வாழ்த்துகிறேன்.

வாழ்க வளமுடன்.

Vethathiriya Kayakalpa Practice Makes body heat or not?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, முறையாக காயகல்பம் கற்றேன். ஒரு மாதம் தொடர்ந்து செய்துவந்தேன். உடல் சூடு ஆனதாலும் அதனால் உடல் நலமும் கெட்டுவிட்டது. எனவே நிறுத்திவிட்டேன். இன்னும் சூடு குறையவில்லை. என்ன செய்யலாம்?


பதில்:

முறையாக காயகல்பம் கற்றேன் என்று சொல்லுகிறீர்கள். அதன்படியே செய்தீர்களா? என்ற கேள்விக்கும் பதில் சொல்லியாக வேண்டும். ஏனென்றால், கற்கும்பொழுது இருக்கும் கவனம், அதை நாம் தொடர்ந்து செய்யும் பொழுதும் வரவேண்டியது அவசியம்.

குரு மகான் வேதாத்திரி மகரிசி, பல ஆண்டுக்காலம் ஆராய்ச்சியாகவே, காயகல்ப பயிற்சியை செய்து பார்த்து, அதன் விளைவு, மாற்றங்கள், ஏற்பு இவற்றை கணித்து, தவறுகளையும், குழப்பங்களையும் மாற்றி அமைத்துத்தான், மனவளக்கலை வழியாக பாடமாக நமக்கு தந்திருக்கிறார் என்பதையும் நாம் அறிந்துகொள்ள வேண்டும். எனவே மேம்போக்காக, காயகல்பத்தில் தவறு என்று நாம் சொல்லிவிட முடியாது. அதற்கு வழியும் இல்லை!

காயகல்ப பயிற்சியில், கால்களின் நிலை, கைகள் வைக்கும் நிலை, அங்கே தரப்படும் லேசான அழுத்தம், முறையான அஸ்வினி முத்திரை அளவுகள், அதற்கான கால அளவு, ஓஜஸ் மூச்சு வெளிவிடும் நிலையில் நாக்கின் நிலைபாடு, ஓஜஸ் மூச்சின் அழுத்தம் மற்றும் வெளியிடும் முறை என்பதாக பலவற்றில் நாம் செய்யும் தவறுகளை, அப்படியே விட்டுவிடுகிறோம். அங்கேதான் நீங்கள் குறிப்பிட்ட உடல் உஷ்ணம் அல்லது உடல் சூடு ஏற்பட்டுவிடுகிறது என்பதை கவனத்தில் கொள்க.

அதனால்தான், காயகல்ப பயிற்சி கற்றுக்கொள்ளும் பொழுதே, தனியாகவும் செய்து காண்பித்து, குறைகளை திருத்திக் கொள்வது நல்லது. கற்றுக்கொண்டேன், இனி வீட்டில் செய்து கொள்ளலாம் என்று உடனடியாக முடிவெடுக்கக் கூடாது. அதுபோல குழப்பம் என்றால், ஆசிரியரிடமே நேரடியாக சந்தித்துக் கேட்பதே நல்லது.

சரி, இனி தீர்வு என்ன என்றால், தற்பொழுது நிறுத்திவிட்டீர்கள் என்பதால், உடனடியாக, கற்றுக்கொண்ட மன்றத்தின் வழியாகவோ, வேறு மன்றத்திலும் கூட, உங்கள் நிலையை சொல்லி, திருத்தங்களை பெற்றுக்கொள்ளலாம். இதுவரையுல் தவறாக செய்ததால்தான் உடல் உஷ்ணம் / உடல் சூடு இருக்கிறது என்பதை புரிந்துகொள்க. நிச்சயமாக உங்களின் இந்த பிரச்சனை தீரும், கவலை வேண்டாம்.

வாழ்க வளமுடன்.