Home » Posts filed under completeness
No need mantra and chanting if mind will be completeness by Siddhar Agathiyar
December 13, 2023 Sugumarje
மனமது செம்மையானால் மந்திரம் எதுக்கடி?!
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, மனதை செம்மையாக வைத்துக்கொண்டால் மந்திரம் தேவையில்லை என்று சொல்லுகிறார்களே? அதன் விளக்கம் என்ன?
பதில்:
ஆதியோகியின் வழியில், சப்தரிஷிகளில் ஒருவர், தமிழ்நாட்டில் வாழ்ந்து வந்த சித்தர்களின் வரிசையில் முதன்மையாக இருந்தவர், அகத்தியர் ஆவார். இவரை மகாமுனி, முனிவர், மகான் என்ற அடைமொழியோடு அழைப்பார்கள். அவர் எழுதிய கவியின் முதல்வரியே நீங்கள் இங்கே கேட்கும் கேள்வியாகும். அந்தக்கவி இதுதான்.,
மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா
மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே
இந்தப்பாடலின் கருத்துப்படி, மனம் செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம், வாயுவை உயர்த்த வேண்டாம், வாசியை நிறுத்த வேண்டாம், மந்திரம் தானாக செம்மையாகிவிடும் என்று பொதுவான கருத்துரை எல்லோருக்கும் உருவாகும். ஆனால் இது படிநிலையாக நாம் பெறுகின்ற மாற்றத்தை விளக்கிச் சொல்லுகின்ற கவியாகும்.
பொதுவாகவே, சித்தர்கள் எழுதக்கூடிய கவிகள் குழூஉக்குறி என்ற பாணியில் அமைந்திருக்கும். அது என்ன என்றால், பரிபாஷையில் ஒரு கருத்தை சொல்லியிருப்பார்கள். சாதாரணமாக வாசிக்கும் பொழுது ஒரு அர்த்தமும், ஆழ்ந்து ஆராய்ச்சி நோக்கோடு படிக்கும் பொழுது உண்மை அர்த்தமும் விளக்கமாக கிடைக்கும். ஒருவகையில், சித்தர் பரம்பரையினர் மட்டுமே புரிந்துகொள்ளும் வகையில் இருக்கும் என்றும் சொல்லலாம். இந்த வரிசையில் இன்னும் நமக்கு புரியாத, விளங்கிக் கொள்ளமுடியாத எண்ணற்ற சித்தர் கவிபாடல்கள் இருக்கின்றன என்பதே உண்மை.
இந்த மனமது பாடல் குறித்த உண்மை வேறு யாரேனும் சொல்லியிருக்கிறார்களா? என்று தேடும்பொழுது, தமிழ்நாடு ஆன்மீக யாத்திரைக்குழு என்ற வலைப்பூவில், ஒர் பதிவையும் கண்டேன். நல்ல விளக்கம் எனினும் ஓரளவிற்கு யோக விளக்கத்தோடு அமைந்திருந்தது. அதை இன்னும் தெளிவாக இங்கே காண்போம்.
மெய்ப்பொருள் உண்மையை யோகத்தின் வழியே தேடும் ஒரு சீடருக்கு சொல்லுவது போல இந்த கவி அமைந்திருக்கிறது! இந்த மனம் செம்மை நிலைக்கு வரவேண்டும் என்றால், நீங்கள் இப்போது இருக்கும் நிலையிலேயே இருந்தால் கிடைத்துவிடாது. அதற்கு யோகத்தில் இணையவேண்டும். குருவின் உதவியும் கண்காணிப்பும் வேண்டும். உலகியலில் இப்போது வழங்கப்படும் யோகம் அல்லாத வேறெந்த மன பயிற்சியும் நிச்சயமாக உதவிடாது. சில நாட்கள் நன்றாக, தெளிவாக இருக்கலாம், மறுபடி பழையமாதிரியான நிலைக்கு தானாக மாறிவிடுமே?!
இப்போது, இந்த கவி, அஷ்டாங்க யோகத்தின் படி, ஓவ்வொரு உயர்வையும் காட்டுவதாகவே பார்க்கமுடியும். யோகத்தில் இணைந்து கொண்டு, அந்தக்கால முறைப்படி மந்திரம் சொல்லிவந்தால், முதல் நிலையில் மனம் செம்மையாகும். அது என்ன மந்திரம்? ‘ஓம் நமசிவய’ (பஞ்சாக்ஷர மந்திரம்) என்பதுதான் சித்தர்களின் அடிப்படையான மந்திரம். இந்த பஞ்சாக்ஷர, ஐந்தெழுத்து ரகசியம் என்ன? என்று பார்த்தால், ந நிலம் /ம நீர் / சி நெருப்பு / வ காற்று / ய வானம் என்பதாகும்! இதனோடு முன்பாக ‘ஓம்’ என்று சொல்லப்படும். ஆனால் இப்போது நீங்கள் அதை சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம் என்பது எனது ஆலோசனை. ஏன் சொல்லக்கூடாது என்பதை பிறகு, இன்னொரு பதிவில் பார்க்கலாம்!
இப்படி மந்திரம் சொல்லிச் சொல்லியே மனம் செம்மையானால், அந்த மந்திரம் செபிப்பதை விட்டு விட்டு, வாயுவை உயர்த்தவேண்டும். அதாவது பிராணாயமம் செய்யவேண்டும். இந்நிலையில் மனம் செம்மையானால், பிராணாயமம் வழி வாயுவை உயர்த்த வேண்டாம். அடுத்ததாக, வாசியோகம் தொடரவேண்டும். அந்த வாசியோகத்தின் வழியே நம்முடைய மனம் செம்மையானால், வாசியையை நாம் நிறுத்தவேண்டியதில்லை, அது தானாகவே நிகழந்து, மனதை அடுத்தும் செம்மையாக்கிவிடும். இப்படி ஓவ்வொரு நிலைக்கும், இந்த மந்திரம் மனதை செம்மையாக்குகிறது. அதனால் மந்திரமே செம்மையானது என்று அகத்தியர் பெருமான் இந்த உண்மையை கவி வழியாக சொல்லுகிறார்.
வாழ்க வளமுடன்.
-
How to fix the deficit in materialistic life?
November 19, 2023 Sugumarje
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, ஏதோ ஒரு பற்றாக்குறையிலேயே வாழ்வதாக தோன்றுகிறது. அது எப்பொழுது மாறும்?!
பதில்:
நீங்கள் சொல்வது உண்மைதான். இந்த உலகில்வாழும் பெரும்பான்மையான மக்களுக்கு, ஏதோ ஒரு பற்றாக்குறையிலேயே வாழ்வதாக தோன்றுகிறது. சிலர் உங்களைப்போல வெளியில் சொல்லுவார்கள். சிலர் சொல்லுவதில்லை. இதற்கு பலவித காரணங்களை சொல்லுவார்கள். அதாவது, வாழ்க்கையில் இப்படி அப்படி நிறைவு செய்துகொள். அதை இதை கழித்தும், பெற்றும் வாழ பழகிக் கொள் என்று எண்ணற்ற அறிவுரைகள் கிடைக்கும். என்றாலும் கூட இதற்கு முக்கியமாக இருக்கக்கூடிய காரணம் ஒன்று உண்டு. அதன் வழியாகத்தான் இந்த பற்றாக்குறை நின்றுவிடுகிறது. அது என்ன?
அதுதான் நம்முடைய மனம். இந்த மனம் நமக்குள்ளாக இருந்தாலும், அதனுடைய மூலம் மிகப் பிரமாண்டமானது. அதை நாம் அறிந்துகொள்வதில்லை. அதற்கான வழியையும் தேடுவதில்லை. அசட்டையாக இருந்து தவிர்த்தும் விடுகிறோம்.
ஆனால், நாம் வாழ்கின்ற இந்த உலகில், அடிப்படையான விசயங்களை முழுமை செய்தாகவேண்டியது அவசியம். ஏனென்றால் பொருள் இல்லாமல் இந்த உலகம் இல்லை. உணவு, உடை, இருப்பிடம் என்பதோடு பொருளும், பணமும் அவசியமானது தான். அந்த பணத்தைப் பெற, வேலை, தொழில், வியாபாரம், உழைப்பு என்ற வகையில் நாம் செயல்பட வேண்டியதும் முக்கியமானது. இந்தவகையில் பற்றாக்குறையை, அதாவது அடிப்படை பற்றாக்குறையை சரி செய்தாகவேண்டும்.
இவை எல்லாம் இருந்தும், தனக்கும், தன் குடும்பத்திற்கும், வரக்கூடிய வாரீசுகளும் நிறைவாக வாழக்கூடிய அளவுக்கு இருந்தும் கூட, நீங்கள் பற்றாக்குறையை அனுபவித்தால், அதற்கு காரணம் மனதில் நிறைவில்லை என்பதுதான் அர்த்தம். அந்த மனம், இயல்பான அதன் ஆற்றலை, சக்தியை, நிலையை மறந்து சிக்கித் தவிக்கிறது என்பதுதான் உண்மை.
அத்தகைய மனதை, அதன் உண்மை நிலையை நோக்கி திருப்பினால் மட்டுமே, எல்லாம் இருந்தும் பற்றாக்குறையாக நினைக்கும் நிலை மாற்றமடையும். இதற்கு நீங்கள் யோகத்தில் இணைந்து, அதில் மனதையும் இணைத்தால் மட்டுமே மாறிடும். எளியமுறை குண்டலினி யோகமான வேதாத்திரியம் அதற்கு உதவிடும்!
வாழ்க வளமுடன்.
asset / completeness / deficiency / deficit / expected / fulfil / how to fix / kundalini / life / lose / materialistic world / money / required / source / truth / wealth / yoga
What is the meaning of Aswini Mudra and Ojas Breath?
July 27, 2023 Sugumarje
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, வேதாத்திரிய காயகல்பத்தில் அஸ்வினி முத்திரை, ஓஜஸ் மூச்சு என்பதை எங்களுக்கு விளக்கம் முடியுமா?
பதில்:
புரிந்துகொள்ளும் வகையில் பதில் தரமுடியும் எனினும், மிக விளக்கமாக தர வழியில்லை. ஏனென்றால், இதன் பெரும் உண்மை விளக்கத்தை, நேரடியாக, மனவளக்கலை மன்றத்தில் மட்டுமே கற்றுக்கொள்ள முடியும்,. அதுபோல கேட்டுக்கொள்ளவும் முடியும். நாம் இங்கே முகம்பாராமல், வார்த்தைகளால் விளக்கிக் கொள்வதில் பயனில்லை. மேலும் அது தவறாகவும் விளங்கிக் கொள்வதற்கு வாய்ப்பு அதிகம்.
முதலில், சித்தர்கள் பல்வேறு காலகட்டங்களில் ஆராய்ந்து, முழுமையாக செய்துவந்த, இந்த காயகல்பக்கலை ஏறக்குறைய அழிந்துவிட்டது எனலாம். ஆனால் அதன் பகுதிகள், இந்த உலகெங்கும் பலப்பல மனிதர்களிடம் சென்று சேர்ந்துவிட்டது என்பதே உண்மை. நம் நாட்டில், காயகல்பம் எதோ சாப்பிடும் லேகியமாகவும், உணவுப்பொருளாகவும் மாறிவிட்டது சோகம். ஆனால் காயகல்பம் யோகபயிற்சி முறைமட்டுமே!
அப்படி கலைந்து கிடந்த, காயகல்ப யோகக்கலையை ஒன்றுசேர்த்து, குறைகளை நீக்கி, முழுமை செய்து நமக்கு தந்தவர், குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்களே ஆகும். தான் வாழும் காலம் வரையும் கூட, அவ்வப்போது சில மாற்றங்களை கவனித்தும் வந்தார் என்பதே உண்மை.
அஸ்வினி என்றால் குதிரை என்ற கருத்தாகும். விலங்கிங்களில், குதிரை ஒன்றுதான், இந்த முத்திரையை, இயல்பாக, இயற்கையின் வழியில் செய்துவருகிறது என்பதை சித்தர்கள் கண்டார்கள். அதனால் அதற்கான பெயரை, அஸ்வினி முத்திரை என்றே வைத்தார்கள். ஓஜஸ் மூச்சு என்பது, நம்முடைய பாலுறவு சுரப்பியில் தங்கி நிற்கும், வித்துநாதத்தில் இருந்து பிரித்தெடுக்கக்கூடிய ஒரு சக்தி, இதை நம் மூச்சோடு கலந்து மேலேற்றுகிறோம். இதற்கு ஓஜ்ஸ் மூச்சு என்று சித்தர்கள் பெயரிட்டு அழைத்தார்.
வாழ்க வளமுடன்.



