CJ for You: materialistic

materialistic

Showing posts with label materialistic. Show all posts
Showing posts with label materialistic. Show all posts

Please explain the Kundalini yoga makes problem or will fix the problem?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, பிரச்சனைகளை தீர்ப்பதற்க்கு யோகமா? அல்லது யோகத்திற்கு வந்தால் பிரச்சனையாகி விடுமா?


பதில்:

நீங்கள் மிகவும் சாதுர்யமான கேள்வியை என்னிடம் கேட்பதாக நினைக்கிறேன். முதலில் யோகம் என்றால் என்ன? என்ற விளக்கத்திற்கு வந்துவிடுங்கள். அதுதான் சரியானது. யோகம் என்றால் வாழும் உலக வாழ்க்கையில் திருத்தங்களைப் பெற்று அறவழியில் வாழ்ந்து, இன்பத்தை மட்டுமே  அனுபவித்து மகிழ்ந்து சிறப்படையும் பயிற்சியாகும். அதில் தன்னையறிதலும், இறையுணர்தலும் இணைந்திருக்கிறதும் உண்மை!

உங்கள் வாழ்க்கையில் பிரச்சனை இருப்பது மட்டுமல்ல, எல்லோருடைய வாழ்க்கையிலும் அவரவர் அளவில் பிரச்சனைகள் இருக்கிறது. காரணம், அவர்கள் வாழ்க்கைமுறையில், இயற்கைக்கும், இயல்புக்கும் மாறான செயல்பாடுகளின் விளைவு. இயற்கையின் வினை விளைவு நீதி அறியாமை என்று வேதாத்திரி மகரிஷி அவர்கள் குறிப்பிடுகின்றார். மேலும் வழிவழியாக மனிதர்களின் கருமையம் களங்கப்பட்டிருக்கிறது. இதனால், அவர்கள் இந்த உலகில் நேர்மையாக, உண்மையாக, நட்பாக இருந்தாலும் கூட, சந்தர்ப்பவசத்தால், சூழலால் தானாகவே பிரச்சனையில் சிக்கி விடுகிறார்கள் என்றும் சொல்லுகிறார்.

எனவே பிரச்சனைகளை தீர்ப்பதற்கு யோகம் உதவாது, ஆனால் உங்கள் பிரச்சனைகளின் மூலகாரணம் என்ன என்பதை அறிந்து, முற்றிலும் அதைபோக்கி, உங்கள் வாழ்வை சீரமைக்க யோகம் உதவிடும், அதன்வழியாக உங்களின் பிரச்சனைகளை எப்படி தீர்ப்பது என்ற வழியும் உங்களுக்கு சிந்தனையில் உருவாகும். அதை திட்டமிட்டு சரி செய்து தீர்க்கலாம் என்பதே உண்மை.

யோகத்திற்கு வந்தால் பிரச்சனையாகிவிடுமா? என்றும் கேட்கிறீர்கள். உலகில் நிறைய நபர்கள் அப்படித்தான் நினைக்கிறார்கள். மேலும் யோகத்திற்கு போகாதீர்கள், தேவையுமில்லை, அவசியமும் இல்லை என்று அவர்களை தடுக்கவும் ஆட்கள் இருக்கிறார்கள். நீங்கள் உங்களையும், உங்கள் வாழ்வையும் சீரமைத்து, உலக அனுபவங்களில் அளவோடும் முறையும் வாழ்ந்து இன்பமும், நிறைவும், அமைதியும் பெறவேண்டும் என்றால், யோகம் அவசியம் வேண்டும். அப்படியில்லாது யோகத்தை விட்டுவிட்டால் வேறு வழியில்லை என்பதே உண்மையாகும். இனி முடிவு உங்கள் வசம்!

வாழ்க வளமுடன்.

Why do you have to look for pleasure in living?!


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, வாழ்வதில் ஏன் இன்பத்தை தேடவேண்டியது இருக்கிறது?!


பதில்:

இன்பம் என்பதை மகிழ்போகம் என்று சித்தர்கள் அழைப்பார்கள். ஆனால் போகம் என்ற வார்த்தையின் தமிழ் அர்த்தம் சிதைந்துவிட்டது என்பது உண்மை. போகம் என்றால் ஆணும் பெண்ணும் கூடிக்கலத்தல் என்றுதான் பெரும்பாலோர் நினைத்துக் கொண்டு இருக்கின்றனர். எனவே மகிழ்போகம் என்று சொன்னாலும், அதைத்தான் அர்த்தம் கொள்வார்கள்.

சித்தர்கள் சொன்ன விளக்கத்தின் வழியாக, மகிழ்போகம் என்றால், மனிதன் தன்னுடைய புலன்களால் அனுபவிக்கின்ற, உணர்கின்ற இன்பத்தைத்தான் குறிப்பாக தருகிறார்கள். வேதாத்திரி மகரிஷி அவர்கள் சொல்லும் பொழுது, ஐம்புலன்களை தாண்டி இந்த உலக இன்பங்கள் என்ன அனுபவித்துவிடப்போகிறோம்? எல்லாமே நம் புலன்களுக்குள்ளாக அடங்கிவிடுகிறது. ஆனால் தன்னை அறிந்துகொண்டால், அதுதான் நிலையான இன்பம், பேரின்பம் என்ற உண்மையும் நமக்கு விளங்குவிடும் என்கிறார்.

ஆனால் நாம் வாழ்வில் இன்பத்தை தேடுகிறோம் என்பது உண்மைதான். ஏனென்றால், நமக்கு எது இன்பம் என்பதை உணர்தலாக பெறவில்லை. அந்த இன்பம் எங்கே இருக்கிறது என்பதும் நமக்கு தெரியவில்லை. அதனால்தான் நாம் இன்னமும் தேடிக்கொண்டே இருக்கிறோம். மேலும் அந்த இன்பத்தை பெற்றுவிட்டாலும் கூட, அதுதான் இன்பமா என்று தெரிந்து கொள்ளாமலும், புரிந்து கொள்ளாமலும் மிகையாக அனுபவித்து அல்லது குழப்ப நிலையில் அதை ஏற்று, அதன் வழியாகவே துன்பத்தையும் வரவழைத்துக் கொள்கிறோம் என்பதே உண்மையாகும்.

இறையாற்றல், நாம் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாகவும் இன்பத்தை வாரிவழங்குவது உண்மையே. எப்போது துன்பம் வந்தாலும்கூட அதை தாங்கும் அளவிற்கு, நமக்கு துணை நிற்பது கூட இறையாற்றல்தான் என்பதை நாம் அறிவதில்லை. சிந்தனையாற்றல் மிகுந்த நாம், எது இன்பம்? அந்த இன்பம் எங்கே இருக்கிறது? அதை எப்படி அளவு முறையோடு அனுபவிப்பது? என்பதை அறிந்துகொள்ளமுடியும், ஏற்று செயல்படுத்திடவும் முடியும். ஆனால் இந்த உலகில் நாம் அதற்கு இடம் கொடுக்காமல், தேடிக்கொண்டே காலத்தை வீண் செய்கிறோம். வேதாத்திரி மகரிசி, ‘தேடுவதை விட்டுவிட்டால், தேடும் பொருள் அங்கேயே இருப்பதை அறியலாம்’ என்றும் சொல்லுகிறார்! உங்கள் வசதி எப்படி?!

வாழ்க வளமுடன்.

Isn't it true that if you join yoga, you will lose money making?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, யோகத்தில் இணைந்தால் பணம் சம்பாதிப்பது போய்விடும் என்பதுதானே உண்மை?


பதில்:

உண்மையில்லை. இப்படி சொல்லி, மக்களை யோகத்தின் பக்கம் போகவிடாமல் தடுக்கும், குறுபுத்தி மனிதர்களின் மிகப்பெரும் பொய். கட்டுக்கதை ஆகும்.

உலகில் வாழும் எல்லா மனிதர்களுக்கும் ஐந்து கடமைகள் இருப்பதாக, குரு மகான் வேதாத்திரி மகரிஷி குறிப்பிடுகின்றார். அதில் பணம் சம்பாதித்தல் ஒரு கடமைதான். அதிலிருந்து நாம் எப்போதும் விலகிவிட முடியாது. இந்த பணம் தேடுதல், சம்பாதித்தல் ஒரு மனிதன் குறிப்பிட்ட காலத்தில் துவங்கி, தன்னுடைய முதுமை காலத்திற்குள் நிறைவு பெறவேண்டியதும் அவசியம்.

பொதுவாகவே, குழந்தைகள் மற்றும் முதியவர்கள் விதிவிலக்கு. சில உடல்தகுதியில் பாதிப்படைந்தோருக்கும் இந்த விதிவிலக்கு உண்டு. இவர்களுக்கு நாம் உதவக்கூடிய கடமையும் இருக்கிறதுதான். மேலும் இக்காலத்தில் பெண்கள் தனியே, தன்னை நிர்வகித்துக் கொள்ளக் கூடிய நிலைக்கு உயர்ந்து விட்டார்கள். இது மிகப்பெரும் வளர்ச்சி. இது இன்னும் பெருகி மிகச் சுதந்திரமாக செயல்படும் தன்மைக்கு வரவேண்டும். அந்தவகையில் வளர்ந்த ஆணும், பெண்ணும் தனக்கும், தன் வளர்ச்சிக்கும், தன்னை  நிலைப்படுத்தவும், சமூக வளர்ச்சிக்கும், அதன் வழியாக உலகின் சமச்சீருக்கும் தொழில், வியாபாரம், வேலை செய்து பணம் ஈட்டுதல் முக்கியமானது ஆகும்.

உலக மக்கள், முதலில் யோகம் என்ற குழப்பமான மயக்க நிலையில் இருந்து விடுபட வேண்டும். யோகம் என்பது நம்மை திருத்திக் கொண்டு, உண்மையாக, அறத்தோடு, இயற்கையோடு தன்னை ஒன்றிணைத்து, தன்னையும் அறிந்து வாழும் நெறிமுறைதானே தவிர வேறொன்றும் இல்லை. யோகத்தில் இணைவதற்காகவோ, இணைந்த பிறகோ சம்பாதிப்பைதையும், மற்ற எல்லாவற்றையும் விட்டுவிட வேண்டும் என்பது தவறான எண்ணம். இனிமேலாவது திருத்திக்கொள்ள வேண்டும். 

‘சம்பாதிப்பதை விட்டுவிட்டால் இந்த உலகில் எப்படி வாழ முடியும்? பிச்சை எடுக்கமுடியுமா? தருவார்களா? உழைத்துச் சாப்பிடு என்றுதானே விரட்டுவார்கள்? மேலும் அப்படி உலகுக்கு பாரமாக, மற்றவர்களுக்கும் பாரமாக வாழ்ந்து என்னதான் பெறமுடியும்?’ என்று குரு மகான் வேதாத்திரி மகரிஷி கேட்கிறார். தன்னளவில் வேலையோ, கடமையோ செய்து பணம், பொருள் ஈட்டி வாழ்வதுதான் முறை என்றும் பதில் தருகிறார். எனவே இனிமேலும் பொய்களை, கட்டுக்கதைகளை நம்பிடாதீர். உண்மை விளக்கம் பெறுக.

யோகத்தில் இணைந்தாலும் கூட, வழக்கமான உங்கள் பணி, வேலை, தொழில், வியாபாரம் ஆகியவற்றை கடமையாக செய்யலாம். யோகத்தில் இணைந்திருப்பதால், நீங்கள் அறவழியில் பயணிப்பதால், முன்னைவிடவும், உங்கள் வருமானம், மக்களின் நம்பிக்கை, மக்களின் ஆதரவு பெருகிடவும் வாய்ப்பு அதிகம். சம்பாதிப்பது என்பதில், உங்கள் தேவை என்பதை நிர்ணயித்து, போதும் என்ற நிறைவுக்குப் பிறகு, இந்த சமுகத்தில் தேவைப்படுவோர்க்கு, உண்மையான ஏழைகளுக்கு உங்கள் உதவியை சேவையாக செய்யுங்கள். நலம் பெறுங்கள்!

வாழ்க வளமுடன்.

How anyone can start a day based on Vethathiriya Yoga Way?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

கேள்வி

வாழ்க வளமுடன் ஐயா, வேதாத்திரிய வழியில் ஒருநாளை எப்படி ஆரம்பிக்கலாம்? நீண்டநாளாக குழப்பமாக இருக்கிறது!


பதில்:

தற்காலத்தில் பெரும்பாலான மக்களின் வாழ்க்கை, நள்ளிரவு வரை நீடிக்கிறது என்று சொல்லமுடியும். வாழ்க்கை சூழல்களும், கைபேசியின் வரவும், இணைய பயன்பாடும் அப்படியான மாற்றத்தை தந்துவிட்டது. இது இயல்புதான். ஆனால் இதனால் எழுகின்ற விளைவுகளை கவனித்து, மாற்றங்களை அமைத்துக்கொள்வது நல்லது. ஏனென்றால், நாம் நன்றாக இருக்க, வாழ இந்த உடலும், மனமும் நல்லபடியாக இருக்கவேண்டுமே? அப்படி இருந்தால்தானே, அது யோக வாழ்வுக்கும் உதவிடும்.

ஒரு நாளை ஆரம்பிக்க, அதிகாலை எழுந்துவிட பழக வேண்டும். அதற்காக. 3.30 மணிக்கோ 4.30 மணிக்கோ உடனடியாக எழ வேண்டியதில்லை. கொஞ்சம் கொஞ்சமாக மாற்ற பழகிக் கொள்ளுங்கள். இரவு 10 மணிக்கு நான் தூங்கப்போவேன் என்ற முடிவை வைத்துக்கொண்டு, அதை செயல்படுத்துக. ஒருவார காலத்திற்குள் அதிகாலை எழுந்து விடலாம். எழுகின்ற அந்த நேரம் 5.30 முதல் 6.30 வரை கூட போதுமானதுதான்.

எழுந்த உடனே, சிறிது தண்ணீர் குடித்துவிட்டு, காலைக்கடனை முடித்துவிடுங்கள். வேதாத்திரிய மனவளக்கலை பயிற்சியில் கற்ற ‘காயகல்ப பயிற்சி’ முதல் தேர்வாக இருக்கட்டும். பிறகு ‘எளியமுறை உடற்பயிற்சி’ இரண்டாவது தேர்வு. சிறிது நேர இளைபாறலுக்குப் பிறகு, ‘தவம்’ மூன்றாவதாக அமைத்துக்கொள்க.  இந்த மூன்றும் போதுமானதுதான். மொத்தமாக 10+45+25=1.20 ஒரு மணி நேரம், 20 நிமிடங்கள் அல்லது கூடுதலாக ஆகலாம். நாம் வீணாக கழிக்கின்ற நேரத்தை விட இது ஒன்றும் பெரியவிசயமில்லை அல்லவா? எனவே அவசரமில்லாமல், பொறுமையாக செய்துவரலாம். இந்த பயிற்சிகளுக்கு இடையே, முன்னே, உங்களின் வழக்கமான ‘காஃபி, தேநீர்’ அருந்துவதை விட்டுவிடுங்கள். எல்லா பயிற்சிகளையும் முடித்த பிறகு, சிறுது நேர அமைதிக்குப் பிறகு, அருந்திக் கொள்ளலாம்.

ஆரம்ப காலத்தில் கொஞ்சம் கடினமாகவே இருக்கும், ஆனால் பழகப்பழக, ஒருநாள் ஏதோ ஒரு காரணத்தால் செய்யமுடியாமல் போனால், வருத்தப்படும் அளவிற்கு உங்கள் மனமும், உடலும் பழகிவிடும் என்பதே உண்மை. இதுவரை நீங்கள் இந்த மாற்றத்திற்குள் இல்லை என்றால், இனிமேலாவது, நாளைமுதல் நான் மாற்றிக்கொள்வேன் என்ற மன உறுதியோடு, சங்கல்பமாக எடுத்துக் கொண்டு செயல்படுத்திப்பாருங்கள். வெற்றியில் திளைப்பீர்கள்!

வாழ்க வளமுடன்.

வேதாத்திரியம் குறித்த கேள்வி பதில்கள் இந்த WhatsApp குழுவழியாகவும் பெறலாம்!

Incomplete Birth-debt on Life


பிறவிக்கடன் தீர்க்காத வாழ்க்கை


அன்பர்களே, என்னுடைய இணைதள பத்திரிக்கை தேடுதல் என்பது எப்போதாவதுதான் நடக்கும். ஏனென்றால், இத்தளங்களை பார்த்து செய்தியை வாசிப்பது என்பது, தற்போதைய இணையம், அந்தக்கால, மொட்டையான ஆர்வத்தை தூண்டும் துண்டு தலைப்புக்களை போல எழுதி, மீன் புழுவுக்கு ஆசைப்பட்டு கொக்கியில் மாட்டி சிக்கி தவிப்பது போல, நாமும் அந்த இணையதளத்தில் சிக்கி விடுவோம். ஆனால் சில நல்ல தகவல்களும் தருகிறார்கள் என்றும் சொல்லலாம். 


ஓய்வில் உழைப்பு

கடந்த மாதத்தில் அப்படி படித்த, ஒரு இணைதள பத்திரிக்கை ஒரு கட்டுரை படித்தேன். அதில் கிடைத்த செய்தியோடு, என் சிந்தனையை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். கோயம்புத்தூரில் இருக்கும், முதியோர் இல்லத்தில், அங்கே இருந்து வாழக்கூடிய பணிஓய்வு பெற்றோர்  ஒரு குழுவாக இணைந்து, பண்பலை வானொலி நடத்திவருகிறார்கள். இதன் மூலமாக அவர்களுக்கு என்ன நடக்கிறது என்று அவர்களே சொல்லுகிறார்கள்.

எங்கள் வாழ்க்கை, இப்பொழுது வெறுமனே கழிவதில்லை, எல்லோருக்கும் பயன்படும்வகையில் நாங்கள், ஓவ்வொருவருமே செயல்படுகிறோம்.

இதுவரையில் எங்களின் வாழ்வில், எங்களுக்கு விருப்பமானதை செய்யமுடியாது இருந்தோம், இப்பொழுது அப்படி இல்லை.

எங்களுக்கு பிடித்த விசயத்தை செய்வதற்கு எங்களுக்கு அவகாசம் இல்லாமலிருந்தது. தற்பொழுது அதை செய்கிறோம்.

ஓவ்வொருவருக்கும் உள்ள திறமைகளை, வெளிக்காட்ட முடியாமல் அடைத்திருந்தோம். அதை செய்ய தள்ளிப்போட்டோம், அதற்கான கால அவகாசம் இல்லாமலிருந்தோம். கால ஓட்டத்தில் பிறரின் பார்வைக்காக செய்ய தயங்கினோம். இன்று ஓவ்வொருவரும் அத்திறமைகளை வெளியே தருகிறோம். திருப்தியாக இருக்கிறோம்.

இன்று எங்கள் பிள்ளைகளுக்கே, இதுவரை தெரியாத ஒரு முகத்தை அவர்களுக்கு காட்டியுள்ளோம். அவர்களும் பாராட்டுகிறார்கள்.

எங்களைப்போல உள்ள ஓய்வு இல்லத்தில் இருப்பவருக்கும், பணி ஓய்வுக்குப்பிறகு வாழ்க்கை இல்லை என்போருக்கும் உதாரணமாக இருக்கிறோம். சொல்லப்போனால் இளையோருக்கும் உத்வேகமாக இருக்கிறோம்.


எத்தனை கேள்விகள்?!

இந்த உலக வாழ்வியலில் இப்படியான அனுபவ வார்த்தைகள் மிகச்சரியானது என்றுதான் தோன்றும். ஆனால், ஒரு மனிதர் எத்தனை காலம்தான் இப்படியான மிகை உணர்ச்சிகளுக்கும், ஏதேனும் சாதிக்க வேண்டும் என்றும் ஓடிக்கொண்டே இருக்கவேண்டும்? வாழ்நாளில் என்றைக்கேனும் “அமைதி” எனும் நிலை நாட வேண்டாமா? எதுவுமே செய்யாமல், உள்முக ஆராய்ச்சியிலேயே அந்த ஆழ்ந்த அமைதி கிடைக்கிறதே அது வேண்டாமா? உங்களுக்காகவும், உங்கள் குழந்தைக்காகவும், பிறருக்காகவும் வாழ்கிறீர்களே, உங்களை யார் என்று அறிந்தீர்களா? “நான் யார்” என்ற கேள்விக்கான பதிலை தேட முயற்சித்தீர்களா?

ஏன் இந்த பூமியில் பிறந்தேன்? எதற்காக பிறந்தேன்? என்ன நோக்கம் கொண்டு என்னை பெற்றெடுத்தார்கள்? என்ன தேடுதலுக்காக நான் வாழ்ந்தேன்? ஏன் இறை? எது இறை? கோவிலிலா? வீட்டிலா? மலைகளிலா? மலைச்சிகரங்களிலா? எங்கே இறை? நான் யார்? இளமையின் வளர்ச்சியில் நான் ஏன் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுத்தேன்? அவர் ஏன் என்வாழ்வில் இணைந்தார்? எங்களுக்கும் ஏன் குழந்தைகள் பிறந்தன? அவர்கள் யார்? எதற்காக பிறந்தார்கள்? இப்படி நீண்டு செல்லும் ஏதேனும் ஒரு கேள்விக்கு பதில் தேட முனைந்தீர்களா?

இத்தனை சித்தர்களும், ஞானியர்களும், மகான்களும் வாழ்ந்து சொல்லிச்சென்றதெல்லாம் பொய்யா? இத்தனை குழப்பங்களுக்குப் பிறகும் மேற்குலகம், மன அமைதியை தேடி இந்தியாவுக்கே வருகிறார்களே அதிலெல்லாம் அர்த்தமில்லையா? சில ஆன்மீக, யோக தலைவர்கள் வெளிநாடு சென்று, அங்குள்ள மக்களுக்கு கற்பிக்கிறார்களே அதெல்லாம் விசயமே இல்லையா?


கட உள் என்பதற்கு கூடவா அர்த்தமில்லை?!

இந்த உலகை, இந்த வாழ்க்கையை, இந்த உலக இன்பங்களை, நட்புக்களை, மனிதர்களை புரிந்துகொள்ள அல்லது உங்களை இந்த உலகுக்கு வெளிக்காட்ட, உங்கள் திறமைகளை வெளிப்படுத்த இன்னும் எத்தனை ஆண்டுகள்தான் வேண்டும்?! இறக்கும் வரையிலும் “இவள்/ன்” உழைத்தான், திறமையோடு இருந்தான். உதாரண மனிதராக வாழ்ந்தார் என்று சொல்லவேண்டுமா? அந்த வார்த்தைகளை பெறுவதனால் உங்களுக்கு என்ன பலன் கிடைக்கும்? உங்கள் பகிர்வாக இவற்றைத்தான் உங்கள் பங்காக, இந்த உலகில் விட்டுச்செல்ல வேண்டுமா?



பொதுவான வாழ்க்கை எப்படி ஆரம்பிக்கிறது?

நம் எல்லோருக்குமே, நம் பெற்றோர் ஏழையோ, நடுத்தரமோ, பணக்காரரோ என்றாலும், பொதுவான ஒரு வாழ்வு உண்டு. 14 வயதுவரை கட்டுப்பாடுகளற்ற சுதந்திரம் உண்டு. அதற்கு பிறகு, விளையாட்டுத்தனம் மறைந்து, குடும்ப சூழல் அறிந்து, கல்வி, வேலை, தொழில், வியாபாரம், கடல் கடந்த வேலை அல்லது வணிகள் என்றபடி, நம் எல்லை எல்லைகள் விரிந்துவிடும். கல்வியில் பெற்றோர் துணை செய்தாலும் கூட, வேலை தேடுதல் அவரராகவே தேர்ந்தெடுக்கவேண்டியது இருக்கும்.  பிறகு, வேலை, தொழிலில், வணிகத்தில் ஓரளவு சம்பாத்தியத்தில் நிறைவு பெற்றால், காதல் வழி, திருமணம் வழி வாழ்க்கைத் துணைவர் கிடைத்து விடுவார்கள். சம்பாத்திய நிறைவு இல்லாத காதல் எப்படி இருக்கும் என்று நான் தனியாக சொல்ல  வேண்டியதில்லை என்று நினைக்கிறேன். இதற்குள் அல்லது இதற்கிடையில் பெற்றோரின் மறைவு, அவர்களை தன்னோடு வீட்டில் வைத்துக்கொள்ளுதல் உண்டு.


ஓய்வை நோக்கி!

இந்த திருப்தி, அதிருப்தி தம்பதியர் கால வாழ்வில், குழந்தைகள் வந்துவிடுவர், பிறகு அவர்களின் வளர்ப்பு, பராமரிப்புக்கு ஆளில்லாமல் கஷ்டம், தன்னுடைய ஓய்வின்மைக்கு நடுவே அக்குழந்தைகளுக்கு கல்வி, உயர்கல்வி, அவர்களுக்கான வேலை தேடுதல், ஆம். இப்போதெல்லாம் பெற்றோர்கள்தான் பிள்ளைக்காக வேலை தேடுகின்றனர். பிறகு அவர்களுக்கான மணமகன், மணமகள் தேடுதல் என்று பரபரப்பாகி வாழ்க்கை ஓடும். இதற்குள் தன் வயது கிட்டதட்ட 55க்கும் மேலே வந்துவிடும். அதாவது பணிஓய்வு (Retirement) நெருங்கிக் கொண்டிருக்கிறது. 


நம் ஓய்வு வாழ்க்கை!

நம் பெற்றோரை நாம் பார்த்ததுப் போன்ற அன்பும், அக்கறையும் இப்போது இருப்பதில்லை. 58/60 வயதில் பணிஓய்வுக்குப் பிறகு, ஓய்வுகால ஊதியம் வந்தால் அவர்பாடு சுகம். இல்லையேல் அவதி. அதோடு இப்பொதெல்லாம் வெகு சீக்கிரமே உடல்நல குறைபாடுகள் தலைதூக்குகின்றன. அதுவும் சிரமமே. இதனால் தன் பிள்ளைகளுக்கு சுமையாக?! மாறிவிடும் வாய்ப்புக்கள் அதிகம். தற்போதைய பெரும்பாலான பெற்றோர்கள், தங்கள் பணிஓய்வுக்கு பிறகு, தன் பிள்ளைகளுக்கு தொந்தரவு தராமல், நல்ல முதியோர் இல்லங்களில், தாங்களாகவே பணம் கட்டி சேர்ந்துவிடுகின்றனர். அங்கே ஏற்கனவே வந்து தங்கி இருக்ககூடிய மற்றவர்களோடு “நல்ல நண்பர்களாக” வாழத் துவங்கின்றனர்.



materialistic vs spiritual

இப்படியான பொருள், புகழ், செல்வாக்கு, புலன் இன்ப வாழ்க்கைதான், பொருள்முதல்வாத உலகியல் வாழ்வு (Materialistic Life) என்று அழைக்கப்படுகிறது. இந்த வாழ்க்கை முறையில் என்ன இழக்கிறோம் என்றால், நாம் இந்த பூமியில் பிறந்ததற்கான காரணம், பிறப்பின் கடமை, நான் யார் என்ற தேடல் ஆகியவை நிறைவு பெறவில்லை. 

ஆனால், பெரும்பாலும் கடவுள் மறுப்பு மிகுந்த இக்காலத்தில் அந்த நாத்திகவாதிகளை விட்டுவிடலாம். சிலரே ஆத்திகவாதிகளாக பக்தி மார்க்கத்தில் திளைத்திருப்பார்கள். அதுகூட என்னால் உத்திரவாதமாக சொல்ல முடியவில்லை. நினைத்தது நடக்கவில்லை என்றால் பக்தி மார்க்கத்திலும் தொய்வு வந்துவிடும்.  அதோடு இந்த உலகில் “இறை வணிகம்” மிக நன்றாக நடக்கிறது. காவி உடுத்திய போலிச் சாமியார்களும் மலிந்துவிட்டனர். அதனால் அவர்கள் அந்தப்பக்கம் திரும்பிக்கூட பார்ப்பதில்லை. 


எனக்கு அவசியமில்லை எனும் கருத்து!

இதில் முக்கியமாக கருதவேண்டியது, இயற்கை குறித்த விளக்கமில்லை என்பதால், இறையை அறிந்துகொள்ள வேண்டிய அவசியம் என்ன என்ற சிந்தனைதான். வேதாத்திரி மகரிசி அடிக்கடி இரண்டு உதாரண கேள்விகள் கேட்பார்.

நீங்கள் பசியாற உணவு எடுத்துக் கொள்கிறீர்கள். உணவை எடுத்து வாயில்போட்டு, அரைத்து மென்று முழுங்குவதை தவிர உங்கள் வேலை ஏதும் இல்லை. அவ்வுணவை செரிமானம் செய்து, சக்தியாகவும், ரத்தமாகவும், தசையாகவும் மாற்றுவது யார்வேலை? நீங்கள் செய்தீர்களா? வேறு யாரேனும் செய்தார்களா? இல்லை அரசாங்கம் செய்ததா? சரி இந்த உலகில் மிகப்பெரும் அறிவியல் நிபுணர்களிடம் இரண்டு இட்லியை கொடுத்து, ரத்தமாக, தசையாக மாற்றித்தர கேட்டால், அவர்களாலும் முடியுமா?

இந்த பூமி எவ்வளவு எடை இருக்கும்? கணக்குப்போட்டால் 5.972 × 10^24 kg வரும். சூரியனின் எடை கணக்குப் போட்டால் 1.989 × 10^30 kg வரும். இப்படியே எல்லா கிரங்களுக்கும் போட்டுப்பாருங்கள். இவற்றையெல்லாம் தாங்கிக்கொண்டிருப்பது எது?  ஒரு எடையுள்ள பொருளை ஒன்று, சும்மா தாங்கி, மிதக்க விட்டுக்கொண்டு இருக்கிறது என்றால், மிதக்கும் பொருள் வலிமையானதா? தாங்கும் பொருள் வலிமையானதா?   



இயற்கையும் இறையும்

இப்பொழுது சிந்தித்துப்பாருங்கள். இது அறிவியல், இயற்கை என்று நீங்கள் வாதிடலாம், இதைத்தான் ஞானிகள் “இறை” என்கிறார்கள். பொதுவாக சொல்லுவார்கள், உண்மையான குருவை தேடுதலில் நீங்கள் ஒரு அடி எடுத்துவைத்தால், அந்த குரு உங்களை நோக்கி இரண்டு அடிகள் எடுத்துவைப்பார். 

இறை சிந்தனையில் தெளிவு பெற, 18 வயது நிரம்பினால் போதுமானது. வாழ்வில் எப்போது நமக்கு ஒரு துணை வேண்டும் என்ற எண்ணம் எழுகிறதோ, அந்த வயதே சிறந்தது. அந்த எண்ணம் எழுவதில், ஒரு காரணமும் இருக்கிறது. திருமணத்திற்கு முன்பே இதில் யோகம் அறிந்துகொண்டால், பிறக்கும் குழந்தை “கருவிலே திருவுடையார்” என மாறலாம்! ஆனால் 60 ஆகியும், நான் இந்த உலகியலில் இயங்கிக்கொண்டே இருப்பேன் என்பது தவறல்ல. ஆனால் உண்மை உணராமல் இருக்கிறீர்களே?! 

இறந்ததும், பிறர் நினைவுகளால் வாழ்வது, இறவாமல் வாழ்வது வேறு. கடந்து உள்ளே அறிந்து, பிறப்புமின்றி, இறப்புமின்றி, எந்நாளும் அழிவின்றி இருப்பது எதுவோ, அதை தன்னிலே அறிந்து இருப்பதும் வேறு. எது உங்கள் தேர்வு?!

------

Photos thanks to: istockphotos, 123RF,  Dreamstime