CJ for You: manavalakkalai

manavalakkalai

Showing posts with label manavalakkalai. Show all posts
Showing posts with label manavalakkalai. Show all posts

How long the Master's help we need? After completion anyway we request more!


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, யோக குருவின் உதவி எவ்வளவு காலம் தேவைப்படும்? எல்லாம் கற்ற பிறகும் குரு இல்லையே என்ற கவலை இருக்கிறதே?!


பதில்:

எல்லாம் கற்ற பிறகும் குரு இல்லையே என்ற கவலை எழுவது உண்மைதான். என்றாலும் கூட, தன்னை இந்த வான்காந்தத்தில் கலக்க விட்டுக்கொண்ட பிறகு நாம் அப்படி நினைப்பது சரிதானா? என்றும் நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டியதும் அவசியம். மனதின் இயல்பு என்னவென்றால், இழப்பை பதிவு செய்துகொண்டு அவ்வப்பொழுது வருந்துவதுதான். ஆனால் குண்டலினி யோகம் பயிலும், மனவளக்கலை அன்பராகிய நாம் அதை மாற்றி அமைக்கவும் வேண்டும். 

ஒரு யோக குருவின் உதவி, எல்லாம் கற்கும் வரை தேவைதான். அதையும் நீங்களே சொல்லிவிட்டீர்கள். கைபிடித்து அழைத்து வந்து இதுதான் பாதை, என்று காட்டிவிட்டால், பயணம் போகவேண்டியது நாம் தானே? இனி எந்த பயணத்தில் தயக்கம் எதற்கு? நாம் என்ன நினைக்கிறோம் என்றால், இந்த பாதையில் ஏதேனும் குழப்பங்கள், தடங்கல், பிரச்சனைகள் வந்தால் என்ன செய்வது? எனக்கு அதெல்லாம் தெரியாதே? என்று நினைக்கிறோம். தன்னையறியும் வழியிலும், இறையுணர்வு பெறும் வழியிலும் எப்படி குழப்பங்கள், தடங்கல், பிரச்சனைகள் வரலாம் என்று நம்புகிறீர்கள் அல்லது நினைக்கிறீர்கள்? இது சரிதானா?

அப்படியே வந்தாலும் கூட, நம்முடைய குரு கைவிட்டுவிட்டாரே என்றா நினைப்பீர்கள்? அதற்கும் வழி இல்லையே? எனவே இது நீங்களாகவே உருவகப்படுத்திக் கொண்ட சிந்தனைதானே தவிர ஏதும் உண்மையில்லை. முக்கியமாக நம்முடைய குரு, நம் உயிரோடு கலந்துவிட்டதை நீங்கள் மறக்கலாமா?

நம் ஒருவரை மட்டுமே, இறுதிவரை உயர்த்திதர வேண்டும் என்பதும் முறையாகுமா? குருவின் நோக்கமும், செயலும், இந்த உலகில் உள்ள ஒவ்வொருவரும், உய்யவேண்டும் என்பதல்லவா? அதற்கு நாம் தடையாக நினைக்கலாமா? அவரை துணையாக நினைத்துக்கொண்டு, அவரைப் போற்றி வணங்கிக் கொண்டு, பயணித்துகொண்டே இருப்பதுதான் நம்முடை வேலை. அதுதான் நம்முடைய குருவுக்கு முழுமை தருவதாகும், முடிந்தால் நீங்கள் இன்னொருவரையும் உயர்த்துங்கள். வேறு எந்தவித குறையும் வேண்டாம், தொடர்ந்து பயணியுங்கள். உண்மை உணருங்கள்.

வாழ்க வளமுடன்.

How long I need to connect with yoga center after completed course?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, இறையுணர்வு பெறவும் தன்னை அறியவும் எவ்வளவுகாலம் மன்றத்தொடர்பு அவசியமாகிறது?


பதில்:

உங்கள் வேதாத்திரிய யோக கல்வி பயணத்தில், இரண்டு ஆண்டுகளுக்குள்ளாகவே எல்லா பயிற்சிகளையும் முடித்துவிட்டு ‘அருள்நிதி’ என்ற நிலைக்கு உயர்ந்துவிடலாம். இதுவே போதுமானதுதான். அதாவது, நாம் நம்முடைய பிறவிக்கடன் தீர்ப்பதான, கர்மா என்ற வினைப்பதிவு களங்கள் போக்குதல், அகத்தாய்வும், தற்சோதனையும் செய்து நம்மை தெளிவான முடிவுகளின் வழியாக, அளவுமுறையோடு வாழ்ந்து இன்பமும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்வு வாழ மாற்றம் பெறலாம். தொடர்ந்து ஓவ்வொருநாளும் இயற்றுகின்ற தவத்தின் வழியாக, நான் யார்? என்ற கேள்வியின் ஊடாக, தன்னையறியலாம், இறையுணர்வும் பெறலாம்.

இதற்கிடையில் நாம் நம்மை ஊக்கம் பெற்றுக்கொள்ளவே, மன்றத்தொடர்பும், கூட்டுத்தவமும், சிந்தனை விளக்க உரைகளும் தேவைப்படுகிறது. மேலும் மன்றத்தில் பலரோடு பழகி தம் சிந்தனையை உயர்த்திக் கொள்ளவும் முடியும். அவர்களுடைய யோக அனுபவம் நமக்கு உதவக்கூடும். அங்கே நிகழும் கலந்துரையாடலில் விளக்கம் பெறலாம். கேள்விகள் கேட்டு பதில் பெறலாம். சந்தேகங்களுக்கு தீர்வும் பெறலாம். இக்காரணங்களால் தான், குறிப்பிட்ட காலம்வரை, அதாவது உங்களுக்கு போதுமானவரை என்றும் சொல்லலாம், மன்றத்தொடர்பு அவசியமாகிறது.

உங்களுக்கு, நீங்கள் கற்றுக்கொண்டதை பிறருக்கும், பகிர்ந்தளிக்க, பாடமாக தர விருப்பம் கொண்டால், அருள்நிதிக்கு அடுத்த நிலைகளான, உதவி பேராசிரியர் நிலை, பேராசிரியர் நிலைக்கும் உயரலாம். அதற்கும் மன்றத்தொடர்பு உதவிடும்!

எனவே நீங்கள் எந்த அளவிற்கு விளக்கம் பெற விரும்புகிறீர்களோ, எந்த அளவிற்கு ஆர்வமுளோர்க்கு பகிர விரும்புகிறீர்களோ அதைப்பொறுத்தே மன்றத்தொடர்பு உங்களுகு தேவைப்படும். ஆனால் இது எதுவும் கட்டாயமல்ல என்பதையும் புரிந்து கொள்ளவேண்டும்!

வாழ்க வளமுடன்.

-

How to perform the simplified exercise relaxation for patients?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, எளியமுறை உடற்பயிற்சியின், உடல் தளர்த்தல் பயிற்சியை ஒரு நோய்வாய்பட்டவருக்கு, படுக்கையில் இருக்கும் ஒருவருக்கு எப்படி தரமுடியும்?


பதில்:

தாரளமாக தரலாம், மிகுந்த நன்மையும் அளிக்கும் என்பது உறுதி. அவர்கள் எழந்து நடக்கமுடியாதவாராக இருந்தாலும் குறையில்லை. முடிந்தவரை அவர்கள் புரிந்துகொள்ளும்படி, உடல் தளர்த்துதல் பயிற்சி குறித்து விளக்கமாக சொல்லி புரியவைக்க வேண்டும். அதாவது பயிற்சி எப்படி செய்வது என்றல்ல, இந்த பயிற்சியின் நோக்கம் என்ன? எதற்காக செய்கிறோம்? என்ற விளக்கத்தை மட்டும் புரியவைத்தால் போதுமானது. நீங்கள் இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து பழக்கம் இருந்தால், அதன் ஆரம்பம் முதல் கடைசி வரை நீங்களே சொல்லி பயிற்சியை நடத்தலாம். அவர்கள் அதை கேட்டுக்கொண்டே, உடலை தளர்த்திக்கொள்ள முடியும். ஒருவேளை உங்களால் நடத்தமுடியவில்லை என்றால், இணையத்தில் கிடைக்கும் ஒலிப்பதிவை பயன்படுத்தலாம். நல்ல ஒலிபெருக்கி (Speaker) கொண்டு அவர்களுக்கு நன்கு கேட்கும் ஒலி அளவில் வைத்து, கேட்டு கவனித்து செய்துவாருங்கள் என்று வழிப்படுத்தலாம்.

முக்கியமாக பயிற்சி எதற்காக என்பதை நீங்கள் சொல்லுவதில்தான் விஷயம் உள்ளது. அப்படி அவர்கள் சிறப்பாக புரிந்துகொண்டார்களா என்பதையும் நீங்கள் அவர்களிடமே கேட்டு தெரிந்துகொள்ளவும் வேண்டும் அது முக்கியமாகும்.

முடிந்தால், நம் குருமகான் வேதாத்திரி மகரிஷி அவர்களின் உருவப்படம் அவர்களிடம் காட்டி, மனதில் பதியவைக்கலாம். வாழ்க வையகம், வாழ்க வளமுடன் என்ற வாழ்த்தையும் சொல்லவைக்கலாம். அருட்காப்பும் சொல்லித்தரலாம். இது இன்னும் அவர்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக இருக்கும் என்பது உறுதி. எனவே இதை முக்கியமாக வைத்துக்கொள்ளலாம்.

ஆரம்ப நாட்களில், கொஞ்சம் அவர்களுக்கு தடுமாற்றம் இருந்தாலும் கூட, தொடர்ந்து செய்துவரும்போது நல்ல மாற்றத்தை அவர்களே உணர்ந்து உங்களுக்கு அதை தெரியப்படுத்தலாம். அதன் வழியாக, எளியமுறை உடற்பயிற்சியின் அருமையும், உடல் தளர்த்துதலின் சிறப்பும் புரியவரும். மருந்து செய்யாத மாற்றத்தை, அவர்கள் உளப்பூர்வமாக உணரக்கூடும்.

வாழ்க வளமுடன்.

Why I am not interested to yoga meditation practice? How I can change it?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.



கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, வேதாத்திரிய தவம் செய்வதற்கான ஆர்வமே இல்லாமல் இருந்தால் என்ன செய்வது? எப்படி திருத்திக்கொள்ளலாம்?!


பதில்:

ஆரம்பகாலத்தில், அதாவது வேதாத்திரிய அடிப்படை பயிற்சி கற்றுக்கொண்ட காலத்தில் அப்படித்தோன்றுவது இயல்புதான். பதினைந்து நாட்களில் நாம் கற்றுக்கொள்ளும் பயிற்சிகள் உடனடியாக நம்மை மாற்றிவிடும் என்று எப்படி நம்பமுடியும்? நாமெல்லாம் எவ்வளவு பெரிய கில்லாடிகள். அப்படியெல்லாம் மாற்றிக்கொள்வோமா? நம்மை அசைக்க முடியாது அல்லவா?

உண்மை என்ன என்றால், நாம் இதுநாள் வரை வாழ்ந்துவந்த நாட்களில், யோகத்திற்கு இடம் அளிக்கவே இல்லை. பக்தியோடும், பக்தி இல்லாமலும் சாமி கும்பிட்டு வந்தோமே தவிர அதன் உண்மை அறிய முயற்சிக்கவில்லை. கோவில், குளமென்று சுற்றி, மலை ஏறி இறங்கினோமே தவிர அதிலும் உண்மை என்ன என்று அறியவில்லை. ஆனால் தொடர்ந்து பலகாலமாக அதை செய்துவந்தோம். அப்படியான பழக்கம் உடனடியாக நம்மைவிட்டு போய்விடுமா? அது கொஞ்சம் கொஞ்சமாகத்தானே விலகும். இதற்கிடையில், யாரோ ஒரு சிலருக்கு, வேதாத்திரியத்தையே விட்டுவிடலாமே என்று கூட தோன்றிவிடும். அப்படியும் சிலர் விட்டுவிட்டு வேறெதோ, வாசி யோகம், சித்தர் யோகம் என்று பயில போய்விட்டார்கள். சரி அவர்களை நாம் குறை சொல்ல முடியாது. அவர்களுக்கு விருப்பமானதை தேர்ந்தெடுக்க அவர்களுக்கு உரிமை உள்ளதுதானே?! நாம் என்ன செய்யமுடியும்?

இப்போது உங்கள் பிரச்சனையும் அதுதான். ஏற்கனவே நீங்கள் வாழ்ந்த வாழ்க்கை, வழக்கப் பழக்கங்களின் தாக்கம் இன்னமும் உங்களை விட்டு விலகிவிடவில்லை. அதனால், எதற்கடா, இந்த தவமும் யோகமும்?! என்று உங்களை, உங்கள் மனமே குழப்புகிறது.

இதற்கு சரியான வழி என்ன தெரியுமா? உங்களை நீங்களே ஆராய்ச்சி செய்யுங்கள். யாரோ சொல்லித்தான் இந்த யோகமும் தவமும் கற்றேனா? இல்லையென்றால் எனக்கே ஆர்வம் வந்து கற்றுக்கொண்டேனா? இதற்கு தகுந்த நேரம், இடம், சூழ்நிலை இருக்கிறதா? இதனால் என்னுடைய வழக்கமான வேலை பாதிப்படைகிறதா? யாருக்காவது தொந்தரவாக இருக்கிறதா? இதனால் என்னுடைய நட்பு வட்டம் பாராட்டுகிறதா? கேலி செய்கிறதா? என் வீட்டில் எதிர்க்கிறார்களா? ஏற்கிறார்களா? என் வாழ்க்கத்துணைக்கு பிடிக்கிறதா? பிடிக்கவில்லையா? இதை செய்யும் பொழுது வேறுவேலை தடங்கல் ஆகிறதா? அடுத்து முக்கியமான வேலை இருக்கிறதா? வீம்பாக இதை செய்கிறேனா? எதிர்பார்ப்போடு செய்கிறேனா? என்ற இந்த கேள்விக்கெல்லாம் பதில் என்ன என்று கண்டுபிடித்து, ஒரு வெள்ளைத்தாளில் பதிலை எழுதிவைத்துக்கொண்டு ஆராய்ந்து சிந்தனை செய்யுங்கள்.

அந்த பதிலின் வழியாக, உங்கள் நிலை உங்களுக்கே புரியவரும், அதன்படி நீங்கள் வேதாத்திரிய யோகத்தை தொடரலாம். உங்கள் ஆர்வமும் கூடிவரும் என்பது உண்மை. அதன்வழியே நன்மை விளையும்.

வாழ்க வளமுடன்.


Family lifestyle is obstructs to the yoga?


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, குடும்ப வாழ்க்கையில் இருப்பதுதான் யோகத்திற்கு தடை என்று சொல்லுகிறார்களே, அது உண்மைதானா?


பதில்:

இல்லவே இல்லை. அப்படி சொல்லப்பட்டது ஒருகாலம். அது எப்போதோ கடந்துபோய்விட்டது என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள். எல்லாவற்றிற்கும் மாற்றம் வேண்டும் என்று, நம் வாழ்க்கை மிக உயர்ந்த நிலையில், உலகமே சுருங்கிய அளவிற்கு மாற்றத்தை பெற்று வாழ்ந்து வந்துகொண்டு இருக்கிறோம். இது இன்னமும் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கிறது அல்லவா? அப்படியான மாற்றம், யோகத்திற்கு மட்டும் வராது என்று நினைக்கிறீர்களா? அல்லது வந்துவிடாது என்று முடிவு செய்கிறீர்களா?

யோகத்திற்கும் மாற்றம் வந்துவிட்டது. ஆனால் மக்கள் இன்னும் பழங்கால, அந்தக்கால நிலைகளையே மனதில் பதித்து, அதையே பேசிப்பேசி மயக்கத்தில் இருக்கிறார்கள். முதலில் யோகம் என்றால் என்ன? இதற்கு உடனே நமக்கு கிடைக்கும் பொதுவான பதில் என்ன தெரியுமா? இறைவனை அறியும் அடையும் வழி, இதற்கு துறவு ஏற்கொள்ளவேண்டும். வீட்டை, குடும்பத்தை விட்டு விலகி, காட்டில் சென்று தவம் செய்ய வேண்டும். இதற்கு பல ஆண்டுகள் ஆகும் என்பார்கள். சாதாரண மனிதர்களுக்கு, குடும்ப வாழ்வில் இருப்பவர்களுக்கு தேவை இல்லை என்றும் சொல்லுவார்கள்.

ஆனால், யோகம் என்றால் தன்னை அறிந்து வாழும் நெறி ஆகும். அந்த தன்னை அறிதலில், இறை எனும் மாபெரும் உணர்வையும் புரிந்து கொள்கிறோம். எப்படி நமக்குள்ளாக நிறைந்து இருக்கிறது என்பதையும், இயற்கைக்கும் நமக்கும் என்ன தொடர்பு என்பதையும் அறிந்து கொள்கிறோம். வாழ்வில் நம் கடமை என்ன என்று புரிந்து, எது உண்மையான இன்பமோ அதை மட்டுமே அனுபவித்து, பிறரையும் மகிழ்வித்து வாழப் பழகுகிறோம் என்பதுதான் யோகத்தின் உண்மை விளக்கம் ஆகும்.

தற்காலத்தில் எத்தனையோ யோகம் உலகில் உள்ளன, எனினும், வேதாத்திரி மகரிஷி அவர்களின் மனவளக்கலை என்பது எளிமைப்படுத்தப்பட்ட குண்டலினி யோகம் ஆகும். இதில் எந்த ஒரு குழப்பத்திற்கும் இடமின்றி, கற்றுத் தேரலாம். இன்னமும் பழங்கதை பேசி காலத்தை வீணாக்கிட வேண்டாம். வாழும் காலத்திற்குள்ளாக, நம் பிறவிக்கடனான, கர்மா என்ற வினைப்பதிவுகளை தீர்த்து, துன்பங்கள் நீக்கிய இன்பமான் வாழ்வில், நான் யார்? என்ற தன்னையறிதலில் உயர்ந்து, யோகவாழ்வில் முழுமைபெறுவோம்.

வாழ்க வளமுடன்.

Detailed information about the Manonmaniya Thavam


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, மனோன்மணிய தவம் குறித்து உண்மை விளக்கம் தருக!


பதில்:

மனோன்மணிய தவம், இப்பொழுது தவிர்க்கப்பட்டுவிட்டது. இதுப்போல பல தவங்கள், அதன் அடிப்படை நிலை கருதி நிக்கப்பட்டது. காரணம், நாம் நேரடியாகவே உயர்நிலை தவங்கள் கற்றுவிடுகிறோம். எனவே அத்தகைய உயர்நிலை தவங்கள் கற்கும் நிலையில், அதற்கு மாறான நிலைகொண்ட தவங்கள் தேவை குறைந்துவிடுகிறது. ஆனால் ஆரம்ப காலத்தில், கற்றுக்கொடுக்கப்பட்டது. 

ஏனென்றால், அன்பர்கள் படிப்படியாக உயர்நிலைக்கு வரவும், அவர்கள் தவங்களை, குண்டலினி சக்தி நிறையும் ஆதார, சக்கர நிலைகளை புரிந்து கொள்ளவும் தேவைப்பட்டது. ஆனால் காலமாற்றத்தில், அன்பர்களின் ஆர்வம், முயற்சி இவற்றை கருத்தில் கொண்டும், அவர்களின் தினசரி வாழ்வியல் சூழல் தன்மையைக் கொண்டும், நேரடியாகவே உயர்நிலை தவங்கள் கற்றுக்கொடுக்கப்படுகிறது. அன்பர்களின் நோக்கம் நிறைவேற, கற்ற தவங்களை, தடையில்லாமல் தொடர்ந்து செய்துவருவதில்தான் இருக்கிறது.

எனவே, தவிர்க்கப்பட்ட தவங்களை நாம் மீண்டும் கற்று செய்துவருவது நல்லதுதான் எனினும், அது தேவையில்லை என்பதே கருத்தாக நிற்கிறது.

இதை இன்னும் விளக்கமாக புரிந்து கொள்ள வேண்டுமென்றால். மனோன்மணியம் என்பது, பீனீயல் சுரப்பி என்று விஞ்ஞானத்தில் குறிப்பிடப்படும் ஒரு சக்கரம், ஆதாரமாகும். இந்த மனோன்மணி என்பதை துரிய சக்கரத்தின், அடிப்புற நிலை, மூலை நிலை எனலாம். நாம் இந்த இடத்தில் மனம் செலுத்தி தியானித்து பழக, மனோன்மணிய தவம் சித்தர்களால் உருவாக்கப்பட்டது. இந்த மனோன்மணிய இடத்தை, இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள, ஆக்கினை வழியாக உள்முகமாகவும், தலை உச்சியிலிருந்து கீழாகவும் ஒரு கோடு வரைந்தால், இரண்டு கோடுகளும் இணையும் புள்ளி எனலாம். சிலர் இரு காதுகளின் மேல்புறத்தின் வழியாக கோடுவரைந்தால், அக்கோட்டின் மையப்புள்ளி என்றும் கூறுவார்கள்.

மனோன்மணிய தவம், இணையத்தில் காணக்கிடைப்பதால், அதன்வழியாக நீங்கள் தவம் இயற்றலாம். தவறில்லை.

வாழ்க வளமுடன்.

How long we need to yoga practice for answering on Who am I?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

 கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, நான் யார்? என்று தன்னையுணர எவ்வளவு காலம் ஆகும் என்று சொல்ல முடியுமா?


பதில்:

இதற்கான பதிலை யாராலும் சொல்லிவிட முடியாது. ஏனென்றால், அவரவர் பெற்றுள்ள கர்மா எனும் வினைப்பதிவுகளின் தாக்கம் கொண்டே அளவிடவும், அதை எவ்வளவு காலத்திற்குள்ளாக தீர்க்கமுடியுமோ அதைபொறுத்துமே அமையும் என்பது உண்மை. நம் குருமகான் வேதாத்திரி மகரிஷி சொல்லியுள்ளபடி பார்த்தால், மனவளக்கலை வழியாக யோகம் கற்று, வாழும் காலத்திற்குள்ளேயே, தன்னுடைய கர்மா எனும் விளைப்பதிவு களங்கங்களை நீக்கி, இறையுண்மை அறியலாம். இதற்கு பயிற்சி, முயற்சி, ஆராய்ச்சி உறுதுணையாக இருக்கவேண்டும்.

ஆனால், ஒருவரின் கர்மாவை தீர்த்திட ஒரு பிறவி போதாது என்ற கட்டுக்கதை, ஏற்கனவே வழக்கத்தில் உள்ளது. அந்த நம்பிக்கையில், தன்னால் முடியாது என்ற ஒரு தாழ்வு மனப்பான்மையும் மக்களிடம் உருவாகிவிட்டதை அறியமுடியும். இதனாலும் யோகத்திற்கு வராமல், பக்தி வழியிலேயே நல்லது நடக்கட்டும் என்ற நம்பிக்கைக்கு போய்விட்டனர் என்றால் மிகையில்லை. மேலும் யோகம் கடினமானது என்றே இன்னமும் நினைத்துக்கொண்டு இருக்கின்றனர். ஆனால், மனவளக்கலை எளியமுறை குண்டலினி யோகம் என்பதை மறந்துவிடுகின்றனர்.

பொதுவாக சொல்லுவதாக இருந்தால், நம் மகரிஷி சொன்னது போல, பயிற்சி, முயற்சி, ஆராய்ச்சி இவற்றோடு தவ வாழ்வை அமைத்துக் கொண்டால், பத்து ஆண்டுகள் முதல் முப்பது ஆண்டுகள் ஆகலாம் என்று சொல்லலாம். அது எங்களின் அனுபவத்தில் கிடைத்த ‘நிறைபேற்று நிலையை’ உணர்ந்து சொல்லுகிறோம். ஆனாலும் இந்த கணக்கீடு மாறக்கூடும் என்பதே உண்மை. ஆனாலும் கூட, உங்களுக்கு ஏற்படும் மாற்றத்தை, அனுபவத்தைக் கொண்டு, நீங்களே அதை தெரிந்து கொள்ளவும் முடியும். அற்புதமான அந்த அனுபவத்தை நிச்சயமாக, வாழ்நாளுக்குள்ளாக பெற்றி மகிழ்ந்து, இறையுணர்வு விளக்கத்தோடு, உண்மை இன்பம் என்ன என்ற தெளிவோடும் வாழமுடியும் என்பதே உண்மையாகும். அத்தகைய அனுபவம் கிடைக்க உங்களை வாழ்த்தி மகிழ்கிறேன்.

வாழ்க வளமுடன். 

What is the meaning of Aswini Mudra and Ojas Breath?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, வேதாத்திரிய காயகல்பத்தில் அஸ்வினி முத்திரை, ஓஜஸ் மூச்சு என்பதை எங்களுக்கு விளக்கம் முடியுமா?


பதில்:

புரிந்துகொள்ளும் வகையில் பதில் தரமுடியும் எனினும், மிக விளக்கமாக தர வழியில்லை. ஏனென்றால், இதன் பெரும் உண்மை விளக்கத்தை, நேரடியாக, மனவளக்கலை மன்றத்தில் மட்டுமே கற்றுக்கொள்ள முடியும்,. அதுபோல கேட்டுக்கொள்ளவும் முடியும். நாம் இங்கே முகம்பாராமல், வார்த்தைகளால் விளக்கிக் கொள்வதில் பயனில்லை. மேலும் அது தவறாகவும் விளங்கிக் கொள்வதற்கு வாய்ப்பு அதிகம்.

முதலில், சித்தர்கள் பல்வேறு காலகட்டங்களில் ஆராய்ந்து, முழுமையாக செய்துவந்த, இந்த காயகல்பக்கலை ஏறக்குறைய அழிந்துவிட்டது எனலாம். ஆனால் அதன் பகுதிகள், இந்த உலகெங்கும் பலப்பல மனிதர்களிடம் சென்று சேர்ந்துவிட்டது என்பதே உண்மை. நம் நாட்டில், காயகல்பம் எதோ சாப்பிடும் லேகியமாகவும், உணவுப்பொருளாகவும் மாறிவிட்டது சோகம். ஆனால் காயகல்பம் யோகபயிற்சி முறைமட்டுமே!

அப்படி கலைந்து கிடந்த, காயகல்ப யோகக்கலையை ஒன்றுசேர்த்து, குறைகளை நீக்கி, முழுமை செய்து நமக்கு தந்தவர், குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்களே ஆகும். தான் வாழும் காலம் வரையும் கூட, அவ்வப்போது சில மாற்றங்களை கவனித்தும் வந்தார் என்பதே உண்மை.

அஸ்வினி என்றால் குதிரை என்ற கருத்தாகும். விலங்கிங்களில், குதிரை ஒன்றுதான், இந்த முத்திரையை, இயல்பாக, இயற்கையின் வழியில் செய்துவருகிறது என்பதை சித்தர்கள் கண்டார்கள். அதனால் அதற்கான பெயரை, அஸ்வினி முத்திரை என்றே வைத்தார்கள். ஓஜஸ் மூச்சு என்பது, நம்முடைய பாலுறவு சுரப்பியில் தங்கி நிற்கும், வித்துநாதத்தில் இருந்து பிரித்தெடுக்கக்கூடிய ஒரு சக்தி, இதை நம் மூச்சோடு கலந்து மேலேற்றுகிறோம். இதற்கு ஓஜ்ஸ் மூச்சு என்று சித்தர்கள் பெயரிட்டு அழைத்தார்.

வாழ்க வளமுடன்.


How anyone can start a day based on Vethathiriya Yoga Way?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

கேள்வி

வாழ்க வளமுடன் ஐயா, வேதாத்திரிய வழியில் ஒருநாளை எப்படி ஆரம்பிக்கலாம்? நீண்டநாளாக குழப்பமாக இருக்கிறது!


பதில்:

தற்காலத்தில் பெரும்பாலான மக்களின் வாழ்க்கை, நள்ளிரவு வரை நீடிக்கிறது என்று சொல்லமுடியும். வாழ்க்கை சூழல்களும், கைபேசியின் வரவும், இணைய பயன்பாடும் அப்படியான மாற்றத்தை தந்துவிட்டது. இது இயல்புதான். ஆனால் இதனால் எழுகின்ற விளைவுகளை கவனித்து, மாற்றங்களை அமைத்துக்கொள்வது நல்லது. ஏனென்றால், நாம் நன்றாக இருக்க, வாழ இந்த உடலும், மனமும் நல்லபடியாக இருக்கவேண்டுமே? அப்படி இருந்தால்தானே, அது யோக வாழ்வுக்கும் உதவிடும்.

ஒரு நாளை ஆரம்பிக்க, அதிகாலை எழுந்துவிட பழக வேண்டும். அதற்காக. 3.30 மணிக்கோ 4.30 மணிக்கோ உடனடியாக எழ வேண்டியதில்லை. கொஞ்சம் கொஞ்சமாக மாற்ற பழகிக் கொள்ளுங்கள். இரவு 10 மணிக்கு நான் தூங்கப்போவேன் என்ற முடிவை வைத்துக்கொண்டு, அதை செயல்படுத்துக. ஒருவார காலத்திற்குள் அதிகாலை எழுந்து விடலாம். எழுகின்ற அந்த நேரம் 5.30 முதல் 6.30 வரை கூட போதுமானதுதான்.

எழுந்த உடனே, சிறிது தண்ணீர் குடித்துவிட்டு, காலைக்கடனை முடித்துவிடுங்கள். வேதாத்திரிய மனவளக்கலை பயிற்சியில் கற்ற ‘காயகல்ப பயிற்சி’ முதல் தேர்வாக இருக்கட்டும். பிறகு ‘எளியமுறை உடற்பயிற்சி’ இரண்டாவது தேர்வு. சிறிது நேர இளைபாறலுக்குப் பிறகு, ‘தவம்’ மூன்றாவதாக அமைத்துக்கொள்க.  இந்த மூன்றும் போதுமானதுதான். மொத்தமாக 10+45+25=1.20 ஒரு மணி நேரம், 20 நிமிடங்கள் அல்லது கூடுதலாக ஆகலாம். நாம் வீணாக கழிக்கின்ற நேரத்தை விட இது ஒன்றும் பெரியவிசயமில்லை அல்லவா? எனவே அவசரமில்லாமல், பொறுமையாக செய்துவரலாம். இந்த பயிற்சிகளுக்கு இடையே, முன்னே, உங்களின் வழக்கமான ‘காஃபி, தேநீர்’ அருந்துவதை விட்டுவிடுங்கள். எல்லா பயிற்சிகளையும் முடித்த பிறகு, சிறுது நேர அமைதிக்குப் பிறகு, அருந்திக் கொள்ளலாம்.

ஆரம்ப காலத்தில் கொஞ்சம் கடினமாகவே இருக்கும், ஆனால் பழகப்பழக, ஒருநாள் ஏதோ ஒரு காரணத்தால் செய்யமுடியாமல் போனால், வருத்தப்படும் அளவிற்கு உங்கள் மனமும், உடலும் பழகிவிடும் என்பதே உண்மை. இதுவரை நீங்கள் இந்த மாற்றத்திற்குள் இல்லை என்றால், இனிமேலாவது, நாளைமுதல் நான் மாற்றிக்கொள்வேன் என்ற மன உறுதியோடு, சங்கல்பமாக எடுத்துக் கொண்டு செயல்படுத்திப்பாருங்கள். வெற்றியில் திளைப்பீர்கள்!

வாழ்க வளமுடன்.

வேதாத்திரியம் குறித்த கேள்வி பதில்கள் இந்த WhatsApp குழுவழியாகவும் பெறலாம்!

Shall we chant mantra or play bhakti songs when we practice meditation?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, தவம் செய்யும் பொழுது, மந்திரம் சொல்லலாமா? பக்தி பாடல்கள் கேட்கலாமா? 

பதில்:

தவம் செய்யும் பொழுது மந்திரம் சொல்லுவது உண்டு. அதுபோல தவம் செய்யும் பொழுது பக்தி பாடல்கள் கேட்பதும் உண்டு. பாடல்கள் பாடியே கொண்டாட்டமாக தவம் செய்வதும் உண்டு. இது இன்னமும் உலக அளவில் ஒவ்வொரு அன்பர்களாலும் தொடரப்பட்டு வருவதுதான். அதில் எந்த சந்தேகமும் இல்லை.

இவை எல்லாம், பதஞ்சலி முனிவர் வகுத்த அஷ்டாங்க யோகத்தில் இருக்கும் நிலைகள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், தியானம் என்ற நிலைக்கு நாம் உயர விரும்பினால், இதையெல்லாம் விட்டுவிட வேண்டியது அவசியமாகிறது. ஆனால் நாம் தவம் என்பதாக, இந்த மந்திரம் சொல்லுவதையும், பக்தி பாடல் கேட்பதையும், நாமே பாடி ஆடுவதையும் ஏற்றுக்கொண்டுவிட்டோம். குருமகான் வேதாத்திரி மகரிஷி வழங்கிய, மனவளக்கலையான, எளியமுறை குண்டலினி யோகத்தில், மந்திரமோ, தந்திரமோ, எந்திரமோ இல்லை. அதை எல்லாம் கடந்த, அஷ்டாங்க யோகத்தில் ஏழாவது நிலையாகிய, தியானத்திற்கு, உடனே வந்துவிடுகிறோம் என்பதே உண்மை.

இதனால், சராசரியாக தவம் செய்ய விரும்பும் அன்பருக்கும், மனவளக்கலை கற்ற அன்பருக்கும் தவம் செய்வதில் வித்தியாசம் வந்துவிடுகிறது. எனவே மனவளக்கலையில் பயணிக்கும், அன்பர்கள் தவம் செய்யும்பொழுது, இதையெல்லாம் செய்யவேண்டியதில்லை. தவம் இயற்றுவதற்காக, மனவளக்கலை ஆசிரியர் சொல்லிக் கொடுக்கப்பட்ட வழிமுறைகளை செய்துவந்தால் போதுமானது.

வாழ்க வளமுடன்.

-

வேதாத்திரியம் குறித்த கேள்வி பதில்கள் இந்த WhatsApp குழுவழியாகவும் பெறலாம்!

How many meditation will practice on the starting level?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்



கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, ஆரம்ப தவசாதகர் ஒரு நாளைக்கு எத்தனை தவம் செய்யலாம்?


பதில்:

ஆரம்ப தவசாதகர் என்றால், முதலில் எளியமுறை உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். ஏனென்றால், தவத்தில் அமர்ந்தால், மிக எளிதாக, உடல் வலி ஏதும் இல்லாமல் இருக்கவேண்டும். முதுகுதண்டு நேராக இருக்கும்படி நிமிர்ந்து உட்கார வேண்டியது அவசியம். சாதரண பதமாசனத்தில் அமர்ந்தால் போதும் என்றாலும் கூட, அதில் கூட கால்வலி எதுவும் வரக்கூடாது. 

உடலில் வலி, சோர்வு இருந்தால் தவம் மிகச்சரியாக இயற்ற முடியாது, அந்த தவமும் உதவாது, இடைப்பட்ட நேரத்திலேயே முடித்துவிடத் தோன்றும். எனவே உடல் அதை எல்லாம் பொருட்படுத்தாத நிலையை, உடற்பயிற்சியால் வரவழைத்துக் கொள்ள வேண்டும். இதற்கு ஒருவாரம் முதல் ஒருமாதம் எடுத்துகொள்வது நல்லதுதான். கூடவே காயகல்பமும் செய்து பழகி வந்தால் இன்னமும் நன்மை கூடும், தவமும் சிறக்கும்.

ஆரம்ப தவசாதகருக்கு, ஆக்கினை முதல் துரியாதீதம் வரை கற்ற அனுபவம் பெற்றிருப்பார் என்றாலும் கூட, முதல் வாரம் ஆக்கினை தவம் மட்டுமே செய்துவரலாம். ஒருநாளைக்கு இரண்டு முறை தவம் இயற்றினால் போதுமானதே. அதிகாலையில் மற்றும் மாலையில் என்று அமைத்துக் கொள்ளலாம். மற்ற நேரங்களில் அந்த அனுபவத்தி நினைத்துப் பார்ப்பதாக நேரத்தை செலவிட்டுக் கொள்ளலாம்.

அடிக்கடியோ, ஒரு நாளைக்கு பல நேரமோ, அதிக நேரமோ தவம் இயற்ற வேண்டியதில்லை. ஒரு தவம் இயற்ற எந்தளவு நேரம் தரப்பட்டிருக்கிறதோ அந்த நேரம் மட்டும் இயற்றினால் போதுமானது. அமிர்தம் என்பதற்காக அடிக்கடி உண்ணக்கூடாது என்பார்கள். அதுபோலவே தவமும் என்று சொல்லலாம்.

ஆக்கினை தவம் இயற்றிவரும் நாட்களில் ஒரு சிலருக்கு, தவ ஆற்றல் கூடிவிடும். அதனால் தலைபாரம் உணர்ந்தால், உடனடியாக சாந்தி தவம் செய்து, அதிகமான தவ ஆற்றலை, உடலுக்கு தேவையான ஆற்றலாக மாற்றிக்கொள்ளலாம். 

உங்களின் ஆரவம், முயற்சி, ஆராய்ச்சி அதிகமாக இருந்தாலும் கூட, ஒருநாளைக்கு இருவேளை தவம் என்பது, ஆரம்ப சாதகருக்கு பொருத்தமானது.

வாழ்க வளமுடன்.

வேதாத்திரியம் குறித்த கேள்வி பதில்கள் இந்த WhatsApp குழுவழியாகவும் பெறலாம்!

Why and What the important of the re-touch?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

இன்றுமுதல் வேதாத்திரிய கேள்வி பதில்களும் பதிவாக வழங்கப்படுகிறது. வாழ்க வளமுடன்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, மறுதீட்சை என்பது அவசியம்தானா?


பதில்:

மறுதீட்சை என்ற வார்த்தையை நன்கு கவனியுங்கள். கொடுக்கப்பட்ட தீட்சையை, கற்றுக்கொடுக்கப்பட்ட தீட்சையை சரியாக பயன்படுத்திக் கொள்ளாதவர்களுக்கு நிச்சயமாக, மறுதீட்சை அவசியமே! குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்களின், எளியமுறை குண்டலினி யோகமான மனவளக்கலையைக் கூட, அவர்களால் தொடர்ந்து பயணிக்க முடியாத சூழலில் சிக்கி விடுகிறார்கள்.

இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். பொதுவாக வேலைப்பளு, குடும்பத்தில் அன்றாடம் நிகழக்கூடிய நிகழ்வு, பிரச்சனைகள், மனவளக்கலை மன்றத்தை விட்டு தூரமாக விலகி இருத்தல், நீண்ட நோய் தொந்தரவு, ஊர் விட்டு ஊர் மாறிவிடுதல், வெளிநாடு சென்று விடுதல், தவம் செய்யவே நேரம் கிடைக்காமை, விபத்தில் உண்டான காயம், உடல் வலி பிரச்சனை, உடலில் ஏற்றுக்கொண்ட அறுவைசிகிச்சை என்று இருக்கலாம்.

இவர்கள் அனைவரும், முழுமையான யோககல்வி கற்றிருந்தாலும், மறுபடி தவம் செய்ய நினைத்தால், செய்யலாம் என்பது சரிதான். ஆனால் அங்கே ஒரு தடை ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருக்கலாமே?! அந்த தடையினால், குண்டலினி சக்தியின் பாதையிலும் அதன் ஓட்டத்திலும் பிரச்சனை உருவாகலாம். அதனால் ஆக்கினை தவம் செய்தால், மிகச்சரியாக ஆக்கினையில் பொருந்திவர வேண்டுமே? அதுபோல சாந்தி தவம் செய்தால், மூலாதாரத்தில் நிலைபெற வேண்டுமே? அப்படி இல்லையென்றால் அது, பலவித உடல், மன பிரச்சனைகளை உருவாக்கக்கூடும். 

எனவே, மறுதீட்சை அவசியம்தானா? என்ற கேள்வியை விட்டுவிட்டு, இத்தனை நாட்கள், மாதங்கள், வருடங்கள் காலமாக, தவம் செய்யாததால், வேறு ஏதேனும் பிரச்சனை ஏற்படுத்திக் கொள்வதை தவிர்க்கும் பொருட்டு, மனவளக்கலை மன்றத்தை அணுகியோ அல்லது தகுந்த ஆசிரியரைத் தேடியோ, அவரிடம் நேரில், மறுதீட்சை பெறுவது நல்லதுதான்.

தவம் எடுத்துக்கொண்ட எல்லோருமே, மறுதீட்சை பெற்றுக்கொண்டுதான் இருக்கிறார்களா? என்று எதிர்கேள்வி கேட்டு உதாசீனம் செய்தால், அதற்கான பலனை அனுபவிக்கவேண்டியது நீங்களேதான்!

மேலும், மறுதீட்சை என்பது கட்டாயமாக்கப்படவில்லை என்பதையும் இங்கே தெள்வுபடுத்திக் கொள்க. உங்கள் விருப்பத்தில் மறுதீட்சை பெற்றுக் கொள்வது சிறந்த வழி. எனவே அக்கறையின் வழியாகவே இதற்கான பதில் தரப்படுகிறது!

வாழ்க வளமுடன்.

வேதாத்திரியம் குறித்த கேள்வி பதில் என்ற இந்த WhatsApp குழுவழியாகவும் பெறலாம்!

Let us remember our Guru Vethathiri Maharshi



வேதாத்திரி மகரிஷியை நினைவு கூர்வோம்.

கட்டுரையின் நோக்கம்

தனிமனித வாழ்வு என்ற குறுகிய வட்டத்திலேயே வாழ்ந்து அதிலேயே சுகம்கண்டு மடிந்தும் போகும் சராசரி மனிதனாக, இந்த உலகவாழ்வை முடிக்காமல், தான் தன்னையறிந்து, இறையுண்மையை உணர்ந்து, தன்னிலே இறை என்ற நிலை வழியாக வாழ்ந்து, அதை பிறருக்கும் கற்றுக்கொடுத்து, வருங்கால சந்ததியினருக்கும் சேரும்வகையில் பாடங்களாகவும் மாற்றி, இந்த உலகமெல்லாம் சிறப்புற்று, இன்புற்று வாழவே, தன் எண்ணம், சொல், செயல் இவற்றால் நிரப்பிக்கொண்ட வேதாத்திரி மகரிஷி அவர்களின், இயல்பு என்னை பூரிப்படைய வைக்கிறது. ‘இப்படியான ஒரு ஞானி, எனக்கு ஆசானாக அமைந்தாரே’ என்ற உன்னதமான வியப்பில் எழுதப்பட்டதாகும்!

நான் கிளம்புகிறேன்

வேதாத்திரி மகரிஷி, தன்னுடைய 96ம் வயது நிறைந்து, ஆண்டு 2006ல் மார்ச் 28ம் நாள் அன்று தன்னை வான் காந்தத்தில் நிறைத்துக்கொண்டார். அதற்கு முன்னதாக அவர், ஆழியாறு அறிவுத் திருக்கோவிலில் நிகழ்ந்த, பேராசியர்களுக்கான கூட்டங்களில், நிர்வாகிகள், உறுப்பினர்களைப் பார்த்து 'நான் வந்த வேலை முடிந்தது, நான் கிளம்புகிறேன், என்று சொன்னால் இவங்கெல்லாம் பதறுகிறார்கள். அதான் எல்லாம் பார்த்துக்கொள்ள நீங்கள் வந்துவிட்டீர்களே? போதும் நிறைவாக இருக்கிறேன். பொதுவாக ஒரு மனிதன், நீண்ட நாள் வாழ்வது அவசியமில்லை, அப்படி வாழந்தால், இன்னொருவருக்கு பாரமாக இருக்கக்கூடாது’ என்று சொல்லியிருக்கிறார்.

ஆனாலும், வேதாத்திரி மகரிஷியின் அன்பால் ஈர்ப்பான, அன்பர்களின் அழுத்தமான கோரிக்கையாலும் விருப்பத்தாலும்தான், அவர், கோவையில் உள்ள KG மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் தன் உடல்வழி வந்த பயணத்தை, போதும் என்றே நிறைத்துக் கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஜீவ சமாதி எதற்காக?

சிலர், நேரடியாகவே என்னிடம் கேட்டிருக்கிறார்கள். 

‘உங்க சுவாமிஜி எங்கேயா ஜீவ சமாதியானார்? மருத்துவமனையில் தானே இறந்தார்?’

சித்தர்கள் கால பழமையிலேயே சிக்கித்தவிக்கும், இந்த அரைகுறை ஆசாமிகளுக்கு எப்படி புரியவைப்பது என்றே நான் கவலைப்படுவேன். அந்தக்காலத்தில், மக்களின் வாழ்க்கை முறை வேறு. வாழ்வுக்காக எண்ணும் எழுத்தும், தொழிலும் தங்களுக்குள்ளாகவே, இல்லம்வழி கல்வியாக கற்ற நிலையில், அவர்களுக்கு எப்படி சொன்னாலும் விளங்கவில்லை, அதில் ஆர்வம் கொள்ளவில்லை. மேலும் அம்மக்கள் யோகத்தில் இறங்காமல் இருப்பதால், இறைவிளக்க தத்துவங்கள் ஒன்றுமே புரியவில்லை. ஆனாலும் அந்தக்காலத்தில்தான் அப்படியான மக்கள் என்றாலும்கூட, இப்போது இந்த அணு, வானியல், விஞ்ஞான காலத்தில் மட்டும் இவர்களுக்கு, இப்போதுள்ள மக்களுக்கு புரிந்துவிட்டதா என்ன? என்றுதானே தோன்றுகிறது. 

சித்தர்கள், இந்த பாமர மக்களுக்காக, நேரடியாக தன்னையறிதலையும், இறையுணர்வையும் தருவதற்கு பதிலாக, குறிப்பால் உணர்த்திட எண்ணியே, சிலை வணக்கம் என்ற பக்தி முறையை கொண்டு வந்தனர். பின்னாளில் குறுக்கு புத்தியுடையோர் அதில் வழிபாடு, சடங்கு என்று புகுத்தி, அதையும் நீங்கள் செய்யக்கூடாது என்று மக்களையே தள்ளிவைத்து குழப்பமாகிவிட்டது. கொஞ்சமாக கிடைத்த உண்மையும் தூரத்தில் தள்ளிப்போய் விட்டது.

பஞ்ச பௌதீக தோற்றத்தில் முதன் நிலையான ஆகாஷத்துகள் அல்லது விண், மனிதனுக்குள்ளாக உயிர் என்ற சிறப்போடு அழைக்கப்படுகிறது. மனிதனின் வாழ்நாளுக்குப் பிறகு , இயல்பாக அது வெளியேறி மீண்டும் வெளியே உள்ள ஆகாஷ துகளோடு இணைந்துவிடும். அதுவே இயற்கை. ஆனால் சித்தர்கள், அந்த சிலை வணக்கம் என்ற முறையில் வாழும் மக்களுக்கு உதவி செய்ய, அவர்களின் மனதை, அறிவை உயர்த்திட எண்ணியே தங்கள் வாழ்நாள் தானாக முடிவுக்கு வரும்முன்னரே தடுத்து, பலவித பயிற்சிகளால், தங்கள் உயிரை, உடலிலேயே அடக்கி, நிறுத்தி வைக்கும் முறைதான் ‘ஜீவ சமாதி நிலை’ ஆகும். சில சித்தர்களின் ஜீவசமாதிகளின் மேல், கோவில்களும் கட்டப்பட்டன. இந்த பயிற்சி முறை மிக கடினமானதும், இயற்கையை மீறியதாகவும் இருந்திருக்கிறது. எனவேதான் சில ஞானியர்கள், மகான்கள் ‘ஜீவ சமாதி’ வேண்டாம் என்கிறார்கள். ஒருவகையில் இது தற்கொலைக்கு சமமானது என்றும் சொல்லுகிறார்கள்.

சில பதிவுகளில், நான் ஏற்கனவே நம் வேதாத்திரி மகரிஷி ‘ஜீவ சமாதி’ குறித்து சொன்னதை குறிப்பிட்டுள்ளேன். மீண்டும் இங்கே அதை நினைவுறுத்துகிறேன். 

‘அந்தக்காலம் போல மக்களின் அறிவு நிலை, வாழ்க்கை முறை இப்போது இல்லை. யாரும் எதையும் அறிந்து கொள்ளுவதிலும், தெரிந்து கொள்ளுவதிலும், உணர்ந்து கொள்வதிலும் திரை மறைவு இல்லை. ஒருவர் ஒருவரை நேரடியாக சந்தித்தும் உண்மையை சொல்லலாம், உணர்த்தலாம். தினம்தினம் வளர்ந்து வரும் விஞ்ஞானமும் அதற்கு உதவுகிறது. மக்களோடு மக்களாக, அவர்களை நல்வழிப்படுத்தும் ஞானிகளும் வாழும் காலம் இது. எனவே ‘ஜீவ சமாதி’யாக மாறித்தான் அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற அவசியம் இல்லை. அப்படி மாறுவதற்காக இயற்கைக்கு மாறாக தன்னை துன்புறுத்திக்கொள்ளவும் தேவையில்லை’

எல்லாவற்றிற்கும் விதை

ஆதிகாலம் முதல் இக்காலம் வரை, உலகில் இதுவரை எத்தனையோ போர் நிகழ்ந்துள்ளது. ஏன் இன்றும் கூட நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. காரணம் என்ன? தன்னை ஒரு மனிதனாக எண்ணிக்கொள்ளும் மனிதன், இன்னொருவரையும் மனிதனாக, தன் இனமாக எண்ணிக்கொள்வது இல்லை. அவன் வேறு, நான் வேறு என்ற பாகுபாட்டில், தன் இனத்தின் மேலேயே போர் தொடுக்கிறான். அவன் வாழும் உரிமையை பறிக்கிறான். துன்புறுத்துகிறான். கொன்று உயிரை பறிக்கிறான். ஒரு விலங்கு செய்வது போலவே!

ஆனாலும், ஐந்தறிவான ஒரு சிங்கம் இன்னொரு சிங்கத்தோடு சண்டையிட்டு, கொன்று, உணவாக்கிக் கொள்வதில்லையே. தன் இனம் என்ற உணர்வு அதற்கு இருக்கிறது. மேலும் முக்கியமாக அதனிடம், அணு ஆயுதங்கள் மட்டுமல்ல, எந்த ஆயுதமும் இல்லை! இப்படியாக மான்கள், குரங்குகள் என்று தனித்தனி இனம் சார்ந்துதான் இருக்கின்றன. தான் உணவை சமைக்கத்தெரியாத, இயற்கை அறிவில்தான் சிங்கம் மானை வேட்டையாடுகிறதே தவிர வேறொன்றும் பகை, வெறுப்பு, பழி உணர்ச்சி ஏதுமில்லையே! மனிதன் அப்படி ஐந்தறிவா? அவன் ஆறறிவு ஆகிற்றே?!

ஆம், அப்படியானால் மனிதனில் எல்லோரும் மனிதர்கள்தானே? பிறகு ஏன் இந்த ஏற்றத்தாழ்வு அவனுக்குள்? காரணம் அவனுக்குள் இருக்கின்ற பிறவித்தொடரான கருமைய பதிவுகளும், கர்மா என்ற வினைப்பதிவுகளுமே காரணமாகிறது. மனிதன் தீடீரென்று உருவானவன் அல்லவே?! வழிவழியாக வந்த பரிணாமத்தின் உன்னத நிலை அல்லவா?!

எனவே, இந்த மனிதனின் அறியாமை நிலையை, தனி மனித விடுதலையாக்கினால் மட்டுமே, அதை தீர்த்திட முடியும் என்ற பெரு நோக்கில்தான் ‘மனவளக்கலை’ யை உருவாக்கினார், வேதாத்திரி மகரிஷி அவர்கள். அந்த தனிமனித விடுதலை வழியாகவே, ஒருவரை ஒருவர் மதித்து, எல்லையில்லா நாடுகளாகி, ஓர் உலக கூட்டு ஆட்சியாக, ஓர் உன்னத உலகமாக மக்கள் வாழ முடியும் என்ற வகையில்தான், உலக சமாதானம் என்ற திட்டத்தையும் முன்மொழிந்து அதை, எல்லோருக்கும் சென்றடைய வழி செய்தார். தன் பிற்கால 10 ஆண்டுக்கால வாழ்நாள் முழுதும், முன்பை விடவும் அதிகமாக, அதற்காகவே செலவழித்தார் எனலாம். விதையாக, உலகமெங்கும், எல்லோரின் மனம் எங்குமே விதைத்துவிட்டார்.

உலக சமாதானம்

‘மலர வேண்டும் உலகசமாதானம்’ என்ற வார்த்தையையே, சங்கல்பமாக வேதாத்திரி மகரிஷி தன் இறுதிக்காலங்களில் சொன்னதாக குறிப்பிடுகிறார்கள். உடல்நிலை பாதிப்புக்குள்ளாகி, பெருங்குடல் அடைப்பு நீக்கிய அறுவைசிகிச்சை ஆன நிலையிலும், தன்னுணர்வுக்கு வராத நிலையிலும் கூட ‘மலர வேண்டும் உலகசமாதானம்’ என்று வேதாத்திரி மகரிஷியின் உதடுகள் முணுமுணுத்ததாம்! என்னுடைய சக வேதாத்திரிய நண்பர் இந்த நிகழ்வை சொன்னார்.


உலக சமாதனம் உலகில் மலர்வதற்கு, மொத்தமாக 150 ஆண்டுகள் ஆகும் என்று சொல்லியிருக்கிறார். கிட்டதட்ட 7.5 தலைமுறைக் காலம் எனலாம். முன்னதாகவே ‘தன் காலத்திற்குப்பிறகு, கொஞ்சம் தொய்வு வரலாம் எனினும் பிறகு இன்னும் மிக திடமாக பரவும்’ என்று சொன்னதாக சக அன்பர் ஒருவர் குறிப்பிட்டார். ஆனால் தொய்வின்றி, உலகெங்கிலும் வேதாத்திரிய அன்பர்கள், இயங்கிக்கொண்டே இருக்கிறார்கள் என்றால் அது மிகையில்லை.

வேதாத்திரியத்தின் வழியாக, தனிமனித விடுதலைக்கு நாம் இன்னும் துடிப்பாக செயல்படுவோம் என்றே சங்கல்பம் கொள்வோம். நம் உயிரோடும் கலந்து, வான்காந்தத்திலும் கலந்திருக்கும், நம் குருமகான் வேதாத்திரி மகரிசி நமக்கு துணையாக இருப்பார் என்பது உண்மையே! குருவை நினைந்து போற்றி மகிழ்வோம்!

வாழ்க வையகம், வாழ்க வையகம், வாழ்க வளமுடன்!

-

What is my journey in Vethathiriyam like?!


வேதாத்திரியத்தில் என்னுடைய பயணம் எப்படிப்பட்டது?!


நானும் வேதாத்திரியமும்

அருள்நிதி பயிற்சிக்காக, ஆழியாறில் 1991ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 27ம் தேதி மாலையில் அங்கே சென்றடடைந்தோம், அங்கே, முதலில் நாங்கள் கண்ட காட்சி இன்னும் அதே மலர்ச்சியோடு, ஆம், குருமகான் வேதாத்திரி மகரிசி, மாலை நடைப்பயணத்தில் எங்களை நோக்கி வந்துகொண்டிருந்தார். சிறிது நேரம் எங்கள் குழுவோடு பேசிவிட்டு வாழ்த்தினார். மறுநாள்  28 முதல் 29, 30 ம் தேதிவரை, வேதாத்திரி மகரிஷி அவர்கள் நிகழ்த்திய ஆசிரியர் பயிற்சி பெற்றுக் கொண்டோம். அவ்வப்பொழுது எனக்கு கிடைத்த உணவு இடைவேளை நேரத்திலும், அன்றைய நாள் பயிற்சி முடிவிலும், அருள்நிதி சான்று பெற்று, நான் வாழ்த்துகளை பெற்ற நேரத்திலும் ‘நான் தகுதியுள்ளவன் தானா?’ என்ற கேள்வி எனக்குள் எழுந்துவந்தது உண்மையே.

ஆனால், ஒரு தகுதி, ஏற்கனவே தகுதியுள்ள ஒருவரால் வழங்கப்படுகிறது என்றால், ‘நிற்க அதற்குத்தக’ என்பது தான் அதன் அர்த்தம். உண்மையாக, இந்த இயற்கையும், நம்மை அப்படித்தான் அரவணைத்து நடத்திச் செல்கிறது. தவறிவிட்டால், தண்டிக்கவும் செய்கிறது அல்லவா?

யார் வேண்டுமானாலும், வேதாத்திரிய தீட்சை பெறலாம் என்றாலும், நம்மில் சிலருக்கே அது கிடைத்தது. ஏன்? நாம் தகுதி பெற்றதினால் தானே? 

சராசரி நபர்களுக்கும மட்டுமின்றி தேடுவோருக்கும் கூட இன்னும் கிடைத்தபாடில்லையே?! அதுதான் இயற்கையின் நிகழ்வாகிறது. எனவே நீங்கள், வேதாத்திரியத்தில் இணைந்ததையும், தீட்சை பெற்றதையும், மகிழ்ந்து, வாழ்த்துங்கள். பிறவியில் கிடைத்த பெரும் பேறு என போற்றுங்கள். அதற்கு உங்களுக்கு விளக்கம் தந்த ஆசிரியர்கள் அல்லது துணை செய்த நண்பரை நினைத்தும் வாழ்த்துங்கள்.

தடுப்பும் ஏற்பும்

ஒரு சராசரி நடுத்தரவர்க்க மனிதருக்கு நடக்கும் நிகழ்வான, படிப்பு, வேலை, வளர்ச்சி, உயர்வு என்று எல்லாவற்றிக்கும் போராட்டமும், தடுமாற்றமும், நமக்கு யார் உதவுவார்கள்? என்ற எதிர்பார்ப்பும், ஏமாற்றமும் எல்லோருக்கும் பொதுவானதே ஆகும். எனக்கும் அப்படித்தான். ஆனால், அப்படி நிகழும் பொழுது, ஏதோ ஒருவகையில் நீங்கள் செலுத்தப்படுகிறீர்கள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். அதுதான் யோகத்தில் சிறப்பாகும்!

நீங்கள், ஏதேனும் ஒரு நாள், துணைக்கு யாருமற்று, தனித்து நின்று பழகும் பொழுதுதான்,
உலகியலில் பிறமனிதர்கள் எப்படி?
நம்மோடு ஏன் இப்படி பழகுகிறார்கள்?
இப்பொது இருக்கும் சூழ்நிலையை எப்படி ஏற்பது?
நாம் எப்படி நம்மை மாற்றிக்கொள்வது?
அதை எப்படி அதை அணுகுவது?

என்ற அனுபவம் கிடைக்கும். அதன்வழியாகவே, ஒரு தனியனாக உங்களை நீங்கள் உணர்ந்தால்தான், நிஜமாக நீங்கள் எந்த நிலையில் இருக்கிறீர்கள் என்பதுகூட உங்களுக்கே தெரியவரும். அதுவரை ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான். 

ஆனால் இவை எல்லாம், இயல்பாக, இயற்கையாக நிகழும் ஒன்றுதானே? அதை விழிப்பாக, ஓர் ஆராய்ச்சியாக எடுத்துக்கொண்டால், நம்மை திருத்தும் ஒரு தடுப்பும், அதன்வழியாக ஏற்பும்   இயற்கையே நிகழ்த்துகிறது என்று தெரிந்து கொள்ளலாம். எனவே நமக்கு நிகழ்கின்ற எதுவுமே காரணமின்றி நிகழ்வதில்லை. நாம் செல்லும் பாதையில், போக்குவரத்தை சரிசெய்வதைப் போல காலம் செயல்படுகிறது. விபத்து ஏற்படுகிறது என்றால் அது நம் கவனக்கோளாறே ஆகும்.

உண்மை விளக்கம்பெற உதவுவீர்

தனி மனிதன், நான் யார்? என்று தன்னை அறியவும், தன் மூலம் அறிந்து பிறவிக்கடன் தீர்க்கவும் ‘பிரம்மஞானம்’ போதும். ஆனால், அருள்நிதி பயிற்சி ஏன் பெறுகிறோம்? கற்றுக்கொண்ட விளக்கத்தில் ஆழ்ந்து, தேர்ந்து, உண்மையறிந்த பிறகு, நம்மைப்போலவே, துன்பத்தில் சிக்கித்தவிக்கும், சகமனிதரை நாம் உயர்த்துவதற்கு உதவலாம் அல்லவா? அதற்காகவே

ஆனால் வேதாத்திரியத்தில், இது கட்டாயமல்ல. உங்களுக்கு அப்படியான விருப்பம் இருந்தால் பிறருக்கு சொல்லித்தரலாம். மேலும் வேதாத்திரியத்தை, உலகெங்கிலும் எடுத்துச்செல்லும் வகையில் மனவளக்கலை  வழியாக. அருள்நிதி நிலையும், கூடுதலாக, துணைப்பேராசிரியர், பேராசிரியர் என்ற நிலைகளும் கொண்டுவரப்பட்டது. 

ஒரு மனிதன் தன்னை உயர்த்திக்கொள்வது மட்டுமல்ல, சக மனிதருக்கும், காலம் காலமாக மறைந்திருக்கும் உண்மை விளக்கத்தை அறியத் தரவேண்டும் என்பது, நம் குருமகான் வேதாத்திரி மகரிஷி அவர்களின் திட்டம். அதன்படியே இன்று, வேதாத்திரியம் பரந்து விரிந்து இருப்பதை நாம் காணமுடியும்.

கர்மா எனும் வினைப்பதிவு தாக்கமும் கழிவும்!

எப்படியோ நாம் பிரம்மஞானம், பெற்று அருள்நிதி ஆகிவிட்டோம், இன்னும், துணைப்பேராசிரியர், பேராசிரியர் என்றும் ஆகிவிட்டோம். ஆனால் நாம், தன்னை அறிதலிலும், இறையுண்மை உணர்தலிலும் எப்படி இருக்கிறோம்? என்பது அவரவருக்கே தெரியும் உண்மையாகும்.

இதற்கு நம் கர்மா என்ற வினைப்பதிவின் பங்கு அளப்பறியது. என்னதான் வேதாத்திரிய சேவையில் இருக்கிறோம் என்றாலும் அதன் தாக்கம் ஒவ்வொருவரும் அறிவார். தனியாக இங்கே நான் விளக்கத் தேவையில்லை. நம் ஓவ்வொரு நொடி வெளிப்பாடிலும் கர்மா வரவும், பற்றும் இருப்பதை உணர்ந்தால் போதுமானது.  வரவில் கவனமாக இருப்பது முக்கியம். 

புலிவால் பிடித்த கதை

குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள், தன் 50 வயது நிறைவில், உலக வாழ்வு போதும் என்ற முடிவோடு, முழுமையாக, எல்லாவற்றிலிருந்தும் விலகி, வேதாத்திரிய சேவையை ஏற்றுக்கொண்டார். 

1988 முதல், இத்தனை ஆண்டுகளாக, ஆர்வம், பயிற்சி, முயற்சி, ஆராய்ச்சி, முடிவு என எனக்கு வேதாத்திரியம் வழியாக, உண்மை வரவர, என் சூழல் மிகுந்த மாற்றம் நிகழ்ந்தது. தானாகவே 2017ம் ஆண்டில் அந்த உண்மைக்குள் நான் விழ ஆரம்பித்தேன். 2018 ல் நிறைப்பேறு நிலை என்பது புரிய ஆரம்பித்தது. எப்போதுமே எனக்குத் தெரிந்ததை, பிறருக்கு சொல்லும் பழக்கமும், சொல்லித்தரும் பழக்கமும் உண்டு.

அந்த வழியாக, வழக்கமான பணிகளோடு, வேதாத்திரியமும் பிறருக்குத் தரலாம் என்றெண்ணி ஆண்டு 2018 ல் ஆரம்பித்ததே ‘வேதாத்திரிய சானல்’ ஆகும். ஆண்டு 2019 ல் டிசம்பரில், பெரும் தொற்றான கோவிட் பரவ, என்னுடைய வழக்கமான பணிகள் பாதிக்கபட, முழுதான பணியாக வேதாத்திரிய சேனலில் பதிவேற்றம் செய்வது என வந்துவிட்டது. இன்று இந்த ஆண்டு 2023-லும், ‘நீ முழுமையாக இதில் இரு’ என்பதாகவே சூழல் அமைந்துவிட்டது.

ஆம் புலிவாலை சும்மா பிடிக்கப்போக அதில் சிக்கிவிட்டேன் என்ற பழமொழி போலத்தான் சொல்லவேண்டும். வேதாத்திரியத்தை நான் விட்டால்கூட, வேதாத்திரியம் என்னை விடாது. இப்பொழுது எனக்கு வேதாத்திரியம் தவிர வேறெதும் தெரியாது என்ற நிலையில் நின்று கொண்டிருக்கிறேன். அதனால் தான், வேதாத்திரியத்தில் வழக்கமான பதிவுகளோடு கூடுதலாக தனிப்பட்ட சேவையும் தரலாம் என்று முடிவெடுத்தேன். அதை நன்கொடை பெற்று நடத்தக்கூடிய நிலையில் தான் நான் இருக்கிறேன்.

ஏனென்றால், முழுதாக வேதாத்திரியத்தில் இயங்கினால், உலகியல் பணிகளில் தொய்வு வருவது இயல்பானதே ஆகும். இதை நம் குருமகான் வேதாத்திரி மகரிஷி அனுபவித்தும் இருந்தார். அவர் ‘அடுத்த வேளை சாப்பாடு கிடைக்குமா? என்று காலம் தள்ளிய நாட்கள் அவை’ என்கிறார். ஆனால், இறையுண்மையை, நான் யார்? என்ற தன்னையறிதலை, பிறவிக்கடன் தீர்க்கும் உன்னதத்தை, ஏளனமாக பார்ப்பவர்கள் பலர் உண்டு. அவர்கள்தான்  இந்த சேவையில் ஈடுபடுபவர்களையும் ஏளனம் செய்வார்கள். அதுகுறித்து, தன்னை அர்ப்பணித்து சேவையில் இறங்கியவர்கள் வருத்தம் கொள்வதில்லை!

எதிர்பார்ப்பில்லை

நான் யாரிடமும் எதையும் எதிர்பார்க்கமாட்டேன், எல்லாம் வல்ல இறைநிலை, என்னை பார்த்துக்கொள்ளும்’ என்பது நம் குருமகான் வேதாத்திரி மகரிஷி, வேதாத்திரிய சேவையில் இருப்பவர்களுக்கு சொல்லித்தரும் சங்கல்பம். நானும் இந்த சங்கல்பத்தின் வழியேதான் வேதாத்திரிய சேவையில் இறங்கியுள்ளேன். நான் இறங்கினேன் என்பது தவறு, இறைநிலையே என்னை தன்னில் நகர்த்திக் கொண்டது என்று சொல்லலாம். ஆனாலும், யாருக்கு எப்பொழுது எது எங்கே கிடைக்கவேண்டும் என்பதை, காலமும், அதனோடு இருக்கும் பேராற்றலும், பேரறறிவும் தானே தீர்மானிக்கிறது.  எனவே காத்திருக்கிறேன்!

வாழ்க வையகம், வாழ்க வளமுடன்!

Athma and it's Imprints



 கேள்வி: 

ஆன்மா எப்படி களங்கமடையும்? அது தூய்மையானது அல்லவா?


பதில்:

நான் யார்?

பொதுவாக ஆன்மா என்பதுகுறித்து அறியாவிட்டாலும், நாம் ஆன்மா என்று “எவ்வகையிலோ” அறிந்திருக்கிறோம். இதற்கு பல ஆன்மீக நூல்களும், ஆன்மீக தலைவர்களும், யோகிகளும், சித்தர்களும், குரு மகான்களும் துணை செய்திருக்கின்றனர். ஆனால், அவர்கள் சொன்னதை கேட்டதோடு சரி, தன்னை அறிவதற்கான “பாதையில்” செல்வதற்கு மட்டும் யாருக்கும் ஆர்வமில்லை என்பதுதான் உண்மை. 


என்ன வித்தியாசம்?

பொருளியல் சார்ந்த இப்புவி வாழ்வில், தன்னையும், தன் பொருளாதர நிலையை உயர்த்தி, அதை தக்கவைப்பதற்கே பெரும்பாடாகி இருக்கின்ற நிலையில், தன்னை உணர்ந்தால் என்ன? உணராவிட்டால்தான் என்ன? என்றும்,

உணர்ந்தவன் மட்டும் என்ன, காலம் காலமாக நிலைத்து வாழ்ந்து விடுகிறாரோ? அவரும் நம்மைப்போல செத்துத்தானே போகிறார், சரித்தான், அவரும் போகிறார், நானும் போகிறேன் போ, போ. என்று சொல்லி, இறந்தும் வாழ்வது குறித்த உண்மை அறியாமல் பேசி, தன்னை அறியாமலேயே, மகத்தான இந்த வாழ்வை, இறை அறிவதற்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்த தெரியாமல், இன்னும் பேரின்பமாக இந்த வாழ்வை ரசிக்கத் தெரியாமல், தன் வாழ்க்கையை முடித்துக் கொள்கின்றனர். 


பேரின்பம்?!

என்ன? இறை உணர்ந்தால் பேரின்பமாக வாழலாமா? என்னாய்யா சொல்றீங்க? இறை உணர காட்டுக்கு போகனும், கல்யாணம் செய்யாம, பிரம்மச்சாரியா இருக்க வேண்டும், சுகங்கள் அனுபவிக்க கூடாது. சிற்றின்பமான உடலுறவு செய்யக்கூடாது, பச்சையாக சொன்னால் “விந்து” வெளியிடக்கூடாது, சில நேரம் நிர்வாணமா வாழவேண்டிவரும், இல்லையென்றால் காவி உடுத்த வேண்டும். மீசை, தாடி, மயிர் மழிக்க கூடாது, பிச்சை எடுத்து உண்ண வேண்டும். மொத்தத்திலே பரதேசி மாதிரி வாழனுமே?! நீ என்னமோ பேரின்பம்னு சொல்லுறியே?!

அப்படி சொன்னது யார்? உன்னை, தனிமனிதனை ஏமாற்றி, நீ உழைத்து சம்பாதித்த பொருளையும், பணத்தையும் பிடிங்கித் தின்று, தன் உயிர் வளர்க்கும் கூட்டமே. அவனுக்கு உழைக்க தெரியாது. நீ உழைத்தால் உன்னிடமிருந்து பிடிங்கிக்கொண்டால் அவனுக்கு சுலபம். அதனால் உன்னை அந்தப்பக்கம் போகாதே என்று சொல்லிவிட்டான். 

உண்மையாக, இந்த பூமியில், உனக்கு கிடைத்திருக்கும் பிறப்பு, இந்த உலக இன்பங்களை எல்லாம், அளவோடும், முறையோடும் பெற்று அனுபவித்து, இன்பம் அனுபவிப்பதற்கே. இன்பமாக இந்த இயற்கையோடு இணைந்து வாழ்ந்தால், இன்பம் மிகுந்து பேரின்பமாகும், அதன் தொடர்ச்சியாக அமைதியும் கிடைக்கும். 


அவன் யார் என்று எனக்கு சொல்லுங்களேன்?

உன்னை எமாற்றி பிழைத்து, உனது பொருள், சொத்து, பணம், உழைப்பு இப்படி எல்லாம் பறித்துக்கொண்டு, யார், தன் உயிரும், உடலும் வளர்க்கிறானோ அவனே அவன்.


இதற்கு பதில் என்ன?

ஐயா, இதை எழுதிய நான் கேட்கிறேன். ஒருவேளை நீங்கள் பரதேசி மாதிரி போகாமலும், வாழாமலும், உங்கள் இஷ்டப்படி இப்போது இந்த வாழ்க்கையில், நீங்கள் சுகவாசியாக வாழ்கிறீர்களா? 

பதில் கிடைக்குமா?


மனிதனின் பரிணாமம்

ஒவ்வொரு மனிதனும், (மனிதன் என்றாலே, மனம்+இதன் என்று வேதாத்திரி மகரிசி அவர்கள் சொல்லியுள்ளார்) தனக்குள்ளாக நான்கு பரிணாமங்களை உள்ளடக்கியிருக்கிறான் (ள்). அம் மூன்று பரிணாமங்கள்...

1) உடல்

2) உயிர்

3) மனம்

4) ஆன்மா


ஆன்மா

நாம் கேள்விப்பட்டது போலவே, ஆன்மா நீரில் நனையாது, நெருப்பில் எரியாது, காற்றில் கரையாது என்பது உண்மைதான். ஆனால் ஆன்மாவை அம்மாபெரும் சுத்த வெளி என்கிற இறைதன்மையோடு ஒப்பிட முடியாது. அதோடு இரண்டும் வேறு, அதன் நிலைகளும் வேறு ஆகும். 

சுத்தவெளி தனைஅறிய நினைத்த பயணத்தில், ஆன்மாவாக மலர்ந்தது. ஆனால் தன்னை அறிந்துகொள்வதற்குள் பலகோடி உயிரினங்களாகவும், அதன் வழியில் மன இதனான, மனிதனாகவும் மலர்ந்தது. மனிதனுக்குள்ளாக, கருமையம் அமைந்து, தன் சரித்திரத்தை பதிந்துகொண்டும் விட்டது. அப்படியாக பிறவி, பிறவியாக ஆன்மாக்களாக வந்தவேளையில் சஞ்சிதம், பிராரப்தம், ஆகாமிய வினைப்பதிவுகளை பெற்று, ஆன்மாக்களில் களங்கம் ஏற்பட்டுவிட்டது. 

அதில் ஒருசில ஆன்மாக்கள் தன் வாழ்நாளில் தன் சஞ்சிதம், பிராரப்தம், ஆகாமிய வினைப்பதிவுகளை தூய்மைசெய்து “இறை” உணர்ந்தன. பிற ஆன்மாக்கள் தன் வினைப்பதிவுகளை கழிப்பதற்காக மீண்டும் மீண்டும் பிறந்தன.  இறை உணர்ந்தவர்கள், அதை, தன்னைச்சார்ந்த மனித குலத்தின்மீது அக்கறைகொண்டு, அவ்வழியை சொல்லியும் எழுதியும் வந்தனர். அவர்களில் நம் குருமகான் வேதாத்திரி மகரிசியும் ஒருவர். 

குருமகான் வேதாத்திரி மகரிசி அவர்கள் உருவாக்கித்தந்த, உலக சமாதான சேவா சங்கம் வழங்கும், மனவளக்கலை பயிற்சியில் தன்னை இணைத்துக் கொண்ட அன்பர்கள் அனைவரும், இறை உணர, குருமகான் அவர்களை சரணடைந்து விட்டோம். இனி அவ் வினைப்பதிவுகளை தீர்த்து தூய்மை செய்துகொள்ள வேண்டும். அதுவே நாம் கடமை என்று வாழ்ந்து வருகின்றனர்.


இறை மற்றும் ஆன்மா

தாமரை இலை தண்ணீர் போல பாதிக்கப்படாதது சுத்தவெளி மட்டுமே. ஆனால் ஆன்மாவில் எல்லா களங்கங்களும் மையம் கொண்டு, வினைப்பதிவுகளாக பதிந்துவிடும். இதனால்தான் உள்ளத்தால் உள்ளலும் தீதே என்று திருவள்ளுவரும் சொல்லியுள்ளார். 

ஆனால், நான் என்ற கேள்வியோடு தன்னை அறிய வாய்ப்பில்லாமல், பிறவித் தொடர் வழியாக, ஓவொருவருக்கும் ஆன்மா களங்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. மனிதனுக்கு மறுபிறவி இல்லை என்பதை, அறிவியல் ரீதியாக ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் அவன் ஆவியை நம்புவான். அது நம்மை பழிவாங்கும் என்றும் சொல்லுவான். இறந்தவன் ஆவியாக இருப்பது ஏன் என்று கேட்டால் பதிலிருக்காது. 

ஓவ்வொரு மனிதனுக்கும் மறுபிறவி தன் குழந்தைகளே, தான் இறை உணர முடியாத நிலையில்தான், 

1) உங்கள் பெற்றோர்கள் உங்களை பெற்றெடுத்தார்கள்

2) நீங்கள் உங்கள் குழந்தைகளை பெற்றெடுக்கிறீர்கள்

3) உங்கள் குழந்தைகள் உங்கள் பெயரன், பெயர்த்திகளை பெற்றெடுக்கிறார்கள்

ஆனால் யாரும் இறை உணர தயாராக இல்லை.


முடிவு?!

ஆன்மாவில் களங்கம் என்பதற்கு மட்டுமே இந்த பதிவு தரப்பட்டது. இது புரியவில்லை என்றால், முழுமையான விளக்கம் வேண்டுமென்றால், உங்கள் அருகில் உள்ள, வேதாத்திரி மகரிசி மனவளக்கலை மன்றங்களை அணுகலாம். 

அல்லது உங்களுக்கு கேள்விகள் இருந்தால் இங்கே, பின்னூட்டம் இடுங்கள், அதற்கான பதிலை அடுத்த பதிவுகளில் தருகிறேன். வாழ்க வளமுடன். 

-------------

Thanks to Image: Omid Armin @omidarmin