அன்பரே, உங்கள் வருத்தம் எனக்கு புரிகிறது. கடவுள் என்பதையும், அதன் தன்மையையும் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். கட உள் என்ற செயல் தன்மைதான் கடவுள் என்றானது. எனவே கடவுள் என்று உருவகம செய்துவிட்டு, அதை தனியாளாக, சக்தியாக, பேராற்றலாக, அது நம்மை சந்திக்கும், நாம் அதனை சந்திக்கலாம் என்று கருதி விடக்கூடாது. அதனால்தான், வந்து உதவும் என்ற எதிர்பார்ப்பு ஏற்படுகிறது. உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை என்றால், ஏமாற்றம் வந்துவிடுகிறது. எனவே கட உள் தானே தவிர, கடவுள் என்று குறிப்பாக, உருவமாக நினைத்துக் கொள்ளாதீர்கள்.
அப்படியானால், இறை என்பது எப்படி இருக்கிறது என்று கேள்வி எழுந்துவிடும். உங்களை இயக்கிக் கொண்டிருப்பதும், அந்த இயக்கத்திற்கு துணை நிற்பதும் இறையாற்றலே. இந்த பேரண்டத்தில், நாம் வாழும் பூமியை மிதக்கவிட்டுக் கொண்டிருப்பதும், நம்மை இந்த புவியில் தாங்கிக் கொண்டிருப்பதும் இறையாற்றலே.
என்னய்யா, இது நாம் ஒன்றை கேட்டால், இவர் ஏதோ ஒன்று சொல்லுகிறாரே? என்றுதானே தோன்றுகிறது? அப்படித்தான் தோன்றும், ஏனென்றால், உங்கள் புரிதலில் இருக்கும் குழப்பத்தை நீக்க முயற்சிக்கிறேன் அல்லவா?
வேதாத்திரி மகரிஷி, ‘இறை நமக்கு ஒரு துன்பமும் கொடுப்பதில்லை. ஒரு சிக்கலும் ஏற்படுத்துவதில்லை’ என்று உறுதியாக சொல்லுகிறார். அப்படியானால், நாம் வாழ்வில் நடப்பதெல்லாம் வேடிக்கையா? என்று நீங்கள் கேட்பீர்கள். இல்லை. ஆனால், அந்த துன்பமும், சிக்கலும், நீங்கள் சொல்லுகிற கடவுளால் வந்ததல்ல, இறையும் தந்ததல்ல. பிறகு யார் காரணம்? நீங்களேதான்! உங்கள் வாழ்வில் நீங்கள் ஏற்படுத்திக் கொண்ட, அமைத்துக் கொண்ட சூழலில், உங்களுக்கென்று வந்து அமைந்ததுதான். இந்த விளக்கம், உடனடியாக புரியாது எனினும், ஆழ்ந்து சிந்தியுங்கள். துரியதவம் இயற்றிவிட்டு, தற்சோதனை எனும் அகத்தாய்வு செய்யுங்கள். உண்மை புரிந்து, தீர்வு கிடைக்கும் என்பது உறுதி.
இந்த காணொளி வழியாகவும் உங்களுக்கு, விளக்கம் கிடைக்கும் என்று நம்புகிறேன். வாழ்க வளமுடன்.
கடவுள் ஏன் நமக்கு துன்பங்களை தருகிறார்? Why does God give us suffering? வேதாத்திரிய கேள்வி பதில்
வாழ்க வளமுடன்
-
