CJ for You: remedies

remedies

Showing posts with label remedies. Show all posts
Showing posts with label remedies. Show all posts

Why do we have to suffer so much in this life? There is no change. They say that God is omnipotent. Why doesn't He solve my misery right away?


வாழ்க வளமுடன் ஐயா, வாழ்கின்ற இந்த வாழ்க்கையில் ஏன் இவ்வளவு துன்பங்கள் அனுபவிக்கவேண்டி உள்ளது. ஒரு மாற்றமும் இல்லையே. கடவுள் எல்லாம் வல்லவர் என்று சொல்லுகிறார்கள். என் துன்பத்தை ஏன் உடனே தீர்க்காமல் இருக்கிறார்? என்னதான் தவம் செய்தாலும் தீரவில்லை. வெறுப்பாக எல்லாவற்றையும் விட்டுவிடலாமா என்று தோன்றுகிறது. விளக்கம் தருக.



அன்பரே, உங்கள் வருத்தம் எனக்கு புரிகிறது. கடவுள் என்பதையும், அதன் தன்மையையும் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். கட உள் என்ற செயல் தன்மைதான் கடவுள் என்றானது. எனவே கடவுள் என்று உருவகம செய்துவிட்டு, அதை தனியாளாக, சக்தியாக, பேராற்றலாக, அது நம்மை சந்திக்கும், நாம் அதனை சந்திக்கலாம் என்று கருதி விடக்கூடாது. அதனால்தான், வந்து உதவும் என்ற எதிர்பார்ப்பு ஏற்படுகிறது. உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை என்றால், ஏமாற்றம் வந்துவிடுகிறது. எனவே கட உள் தானே தவிர, கடவுள் என்று குறிப்பாக, உருவமாக நினைத்துக் கொள்ளாதீர்கள்.
அப்படியானால், இறை என்பது எப்படி இருக்கிறது என்று கேள்வி எழுந்துவிடும். உங்களை இயக்கிக் கொண்டிருப்பதும், அந்த இயக்கத்திற்கு துணை நிற்பதும் இறையாற்றலே. இந்த பேரண்டத்தில், நாம் வாழும் பூமியை மிதக்கவிட்டுக் கொண்டிருப்பதும், நம்மை இந்த புவியில் தாங்கிக் கொண்டிருப்பதும் இறையாற்றலே.
என்னய்யா, இது நாம் ஒன்றை கேட்டால், இவர் ஏதோ ஒன்று சொல்லுகிறாரே? என்றுதானே தோன்றுகிறது? அப்படித்தான் தோன்றும், ஏனென்றால், உங்கள் புரிதலில் இருக்கும் குழப்பத்தை நீக்க முயற்சிக்கிறேன் அல்லவா?
வேதாத்திரி மகரிஷி, ‘இறை நமக்கு ஒரு துன்பமும் கொடுப்பதில்லை. ஒரு சிக்கலும் ஏற்படுத்துவதில்லை’ என்று உறுதியாக சொல்லுகிறார். அப்படியானால், நாம் வாழ்வில் நடப்பதெல்லாம் வேடிக்கையா? என்று நீங்கள் கேட்பீர்கள். இல்லை. ஆனால், அந்த துன்பமும், சிக்கலும், நீங்கள் சொல்லுகிற கடவுளால் வந்ததல்ல, இறையும் தந்ததல்ல. பிறகு யார் காரணம்? நீங்களேதான்! உங்கள் வாழ்வில் நீங்கள் ஏற்படுத்திக் கொண்ட, அமைத்துக் கொண்ட சூழலில், உங்களுக்கென்று வந்து அமைந்ததுதான். இந்த விளக்கம், உடனடியாக புரியாது எனினும், ஆழ்ந்து சிந்தியுங்கள். துரியதவம் இயற்றிவிட்டு, தற்சோதனை எனும் அகத்தாய்வு செய்யுங்கள். உண்மை புரிந்து, தீர்வு கிடைக்கும் என்பது உறுதி.
இந்த காணொளி வழியாகவும் உங்களுக்கு, விளக்கம் கிடைக்கும் என்று நம்புகிறேன். வாழ்க வளமுடன்.

கடவுள் ஏன் நமக்கு துன்பங்களை தருகிறார்? Why does God give us suffering? வேதாத்திரிய கேள்வி பதில்
வாழ்க வளமுடன்
-

If you do Navagraha penance, how is it beneficial? Does the horoscope have anything to do with it? Will this penance serve as a form of atonement? What is the truth? Explain.


வாழ்க வளமுடன் ஐயா, நவக்கிரக தவம் செய்தால், அது எப்படி நன்மை தருகிறது? ஜாதகத்திற்கும் அதற்கும் தொடர்பு உள்ளதா? இந்த தவம் ஒருவகையில் பரிகாரமாக செயல்படுமா? உண்மை என்ன? விளக்குக.

மனிதனின் பிறப்பு, அவனுடைய வாழ்வின் நோக்கம், அதிலிருக்கும் கடமை இப்படி எதுவுமே அறிந்துகொள்ளாது, பிறந்தோம் வாழ்ந்தோம் போகப்போகிறோம் என்று வாழும் மனித கூட்டம் ஒருபுறம். இறைவனாவது, இயற்கையாவது, கிரகங்களாவது, ஜாதகமாவது ஒன்றாவது, எல்லாமே நம்ம கையில்தான் என்று, தனித்து எல்லாம் அனுபவித்து வாழும் கூட்டம் ஒருபுறம். இவை எதையுமே கண்டுகொள்ளாமல், அடுத்தவரின் வளம் பறித்து தான்மட்டுமே வாழும் கூட்டம் இன்னொருபுறம். இப்படியாக பல்வேறு மனிதக்கூட்டம், நம்மோடுதான் வாழ்ந்து வருகிறது.

இந்த கூட்டங்களோடு, மனிதவாழ்வை உயர்த்திட விரும்பிய, சித்தர்கள், ஞானிகள், மகான்கள் அறிவுரை நாடிச் சென்று, தன்னையும், தன் வழியாக வரும் வாரீசுகளையும் நல்வழிப்படுத்த நினைப்பவர்கள் பலர். இந்த உலகம் இவர்களால்தான், இன்னமும் உயிர்ப்போடு இருக்கிறது. உண்மையை மறுப்பது என்பது வேறு, எது உண்மை என்று அறிந்து கடைபிடிப்பது என்பது வேறு. இந்த இரண்டுக்குமான வித்தியாசம் அறியாதவர்களின் வாழ்க்கைதான், இவ்வுலகில் ஏனோதானோ என்று இருக்கிறது. உண்மை என்னவென்றால், அது குறையாகவும் அவர்களுக்கு தெரிவதில்லை. அதனால் அந்த மயக்கத்தில் இருந்து அவர்கள் விடுபடவும் வாய்ப்பின்றி வாழ்க்கை முடிந்துவிடுகிறது.

இந்த நிலையில், இப்படியான கேள்வியும், அதை அறிய விரும்பும் ஆர்வமும், மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது. மனித உயிர்கள் மட்டுமல்ல, இந்த உலகில், நாம் காணும் எல்லா பொருட்களும், உயிர்களும் உருவாகவும், இயங்கிடவும் ஒரு பேராற்றல் துணையாக இருக்கிறது. அதைத்தான் நாம் இறையாற்றல், மெய்ப்பொருள் என்று உயர்வாக சொல்லி வணங்குகிறோம். அந்த ஆற்றல், பிரபஞ்சத்தில் உள்ள விண்மீன்கள், சூரியன்கள், கோள்கள் இவற்றோடும் கலக்கிறது. பலவேறு தன்மைகள் கொண்ட அந்த ஆற்றல், நாம் வாழும் பூமியை வந்தடைகிறது. அதை நாம் பன்னிரெண்டு ராசிகளாக அமைத்திருக்கிறோம். அந்த ராசிகளை கடக்கும் கோள்களைக் கொண்டு, அதன் தன்மையை, நமக்கு கிடைக்கும் பாதிப்புக்களை, நன்மைகளை அறிந்து கொள்கிறோம். இது அடிப்படை தாக்கம் அல்ல எனினும் நமக்குள்ளாக தூண்டுதல் நிச்சயமாக இருக்கிறது. அதை ஜோதிட கலை வழியாக கணிக்கிறோம்.

இங்கே பரிகாரம் என்றால் அது நம்மை திடப்படுத்திக் கொள்வதுதானே தவிர தப்பிப்பது அல்ல. ஆனால், இவ்வுலகில் பரிகாரம் பலவகைகளில், பொய்யும் புரட்டும் கலந்து ஏமாற்றம் அளிக்கிறது எனலாம். இந்நிலையில்தான், வேதாத்திரிய பஞ்ச பூத நவக்கிரக தவம், பரிகார தவமாக அமைந்துவிடுகிறது. இங்கே நாம், நம்முடைய ஜாதகத்தை நினைப்பதில்லை. நேரடியாக அந்தந்த கிரகங்களை நினைத்து தவம் இருக்கிறோம். அதன் ஆற்றலோடு கலக்கிறோம். நன்மை செய்ய வேண்டுகிறோம். அதனால் இது பரிகாரமாகவே மாறிவிடுகிறது. மனம் ஒன்றி நின்று தவம் செய்வதைத்தவிர, இங்கே எந்தவித செலவும் இல்லை.

இந்த காணொளி வழியாக, இன்னும் சில உண்மைகளை அறிந்து கொள்க!

நவக்கிரக தவம் செய்வதில் ஏற்படும் நன்மைகள் உண்மையா? எவ்வாறு இத்தவம் உதவுகிறது?!

வாழ்க வளமுடன்.

-

Is Pancha bootha Navagraha Thavam helps to horoscope problem?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, ஜாதகத்தில் வரக்கூடிய பிரச்சனைகளுக்கு பரிகாரமாக, நவக்கிரக தவம் செய்யலாமா?


பதில்:

ஒரு சோதிட குறிப்பில், குழந்தை பிறந்த நேரம் என்பதைக் கொண்டு, வானில் எந்தெந்த கிரங்கங்கள் எங்கிருந்து தன்னுடைய காந்த அலையை வீசுகிறது என்பதைத்தான் நாம் ஜாதகம் என்று சொல்லுகிறோம். பெரும்பாலான ஜாதகங்களில், மிகச்சரியான நேரம் என்பது குறைவுதான். மேலும் வாக்கியம், திருக்கணிதம் ஆகிய இரண்டுவகையான பஞ்சாங்க உதவியும் கூட பிறந்த குழந்தையின் லக்கனம், பிறந்த நட்சத்திர பாதம் ஆகியவற்றையும், வக்கிர, நகர்ந்த கிரகங்களின் இருப்பிடத்தை மாற்றிவிடும். என்றாலும் கூட கிரகங்களின் காந்த அலை வீச்சு என்பது உறுதியானதுதான்.

ஒரு ஜாதக கணிப்பில், ஆராய்ச்சியில் ஏற்கனவே இருக்கிற ஒரு பிரச்சனை தீரவும், வரக்கூடிய பிரச்சனையை முன்கூட்டியே அறிந்து தீர்க்கவும் நிச்சயமாக முடியாது என்பதுதான் உண்மை. ஆனால் அதை ஏற்றுக்கொள்ளக்கூடிய மனநிலையை நாம் உருவாக்கிக் கொள்ளமுடியும். ஒரு ஆறுதலான வார்த்தைகள் தந்து உதவுவது போல. பெரும்பாலானவை அனுபவித்து தீர்ப்பது என்பதாகவே இருக்கும். ஆனாலும் வாழும் மனிதனுக்கு இயற்கை கொஞ்சம் கருணை காட்டத்தான் செய்கிறது. அதனால் மனம் உடைந்து கலங்கவேண்டிய அவசியமில்லை

இங்கே பரிகாரம் என்பது, மன நிறைவு, மனதுக்கு ஆறுதல் என்பதுதானே தவிர வேறெதும் இல்லை. இந்த பரிகாரம் என்று சொல்லி பணம் பறிக்கும் பல்லாயிர சோதிடர்கள் இருக்கிறார்கள் என்பதும் இப்போதைய நிலைதான். அதை நாம் குறைசொல்ல முடியாது எனினும் அவர்களிடம் சிக்காமல் விலகி இருக்கவேண்டும். கோவிலுக்கு போவது, பூஜை செய்வது, அபிஷேகம் செய்வது, தானம் செய்வது, யாகம் வளர்ப்பது என்று எத்தனையோ செய்தாலும் கூட இருப்பதும், வரப்போவதும் ஜாதகத்தில் மாறிவிடுவதில்லை. ஆனால் இதையெல்லாம் செய்தால் ஏற்படும் மன மாற்றம் நமக்கு உள்முகமாக நம்பிக்கையைத் தரும்.

ஆனால், வேதாத்திரியத்தின் வழியாக பயணிக்கின்ற ஒருவர், இந்த பரிகாரம் என்பதற்கு, பஞ்ச பூத நவக்கிரக தவம் செய்தால், வழக்கமான பரிகாரதிற்கு மாற்றா? என்று கேட்டால் அது இல்லை என்பதுதான் உண்மை. நிச்சயமாக பஞ்ச பூத நவக்கிரக தவம்  எந்த பரிகாரத்திற்கும் உதவுவதில்லை. என்றாலும் கூட, ஒவ்வொரு கிரத்தின், கோளின் மீதும் நம்முடைய மனதை நிறுத்தி, தவமாக செய்துவருகையில், அந்த கிரகம், கோளின் காந்த அலைவீச்சின் தாக்கத்தை, சமன் செய்துகொள்ளும் வகையில் மனம் மாறுகிறது என்பது உண்மையே! அந்த வகையில், வாழ்க்கையில் ஏற்படுகின்ற, ஏற்படப்போகும் நிலைக்கு மனம் உறுதிபடுகிறது என்றும் சொல்லலாம். இது பரிகாரம் அல்ல எனினும் நமக்கு ஊக்கமளிக்கும் ஒன்றாகும். 

தொடர்ந்து பஞ்ச பூத நவக்கிரக தவம் செய்துவரும் பொழுது, மனதின் சக்தியும், கிரகங்கள், கோள்களின் சக்தியும் கலப்புறுகிறது. அதன்வழியாக நாம் நன்மையே பெறலாம், பெற முடியும் என்ற ஒரு நம்பிக்கை நமக்குள்ளாக வந்துவிடும். நம்முடைய கடந்த கால நிலையை மாற்றிட முடியாது எனினும், வரப்போகிற நிலைமையை சரி செய்துவிடக்கூடிய விழிப்புணர்வு நமக்கு கிடைக்கும் என்பது உறுதி.

இந்த பஞ்ச பூத நவக்கிரக தவம் மட்டும், வேதாத்திரியத்தில் பயணிக்கும் ஒருவர் மட்டுமல்லாது, யார்வேண்டுமானாலும், தீட்சை பெற்றுக்கொள்ளாத எந்த ஒருநபரும் செய்து அதற்கான பலனைப் பெறலாம் என்பதுதான் இத்தவத்தின் சிறப்பாகும்! 

வாழ்க வளமுடன்.

Vethathiriya Kayakalpa Practice Makes body heat or not?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, முறையாக காயகல்பம் கற்றேன். ஒரு மாதம் தொடர்ந்து செய்துவந்தேன். உடல் சூடு ஆனதாலும் அதனால் உடல் நலமும் கெட்டுவிட்டது. எனவே நிறுத்திவிட்டேன். இன்னும் சூடு குறையவில்லை. என்ன செய்யலாம்?


பதில்:

முறையாக காயகல்பம் கற்றேன் என்று சொல்லுகிறீர்கள். அதன்படியே செய்தீர்களா? என்ற கேள்விக்கும் பதில் சொல்லியாக வேண்டும். ஏனென்றால், கற்கும்பொழுது இருக்கும் கவனம், அதை நாம் தொடர்ந்து செய்யும் பொழுதும் வரவேண்டியது அவசியம்.

குரு மகான் வேதாத்திரி மகரிசி, பல ஆண்டுக்காலம் ஆராய்ச்சியாகவே, காயகல்ப பயிற்சியை செய்து பார்த்து, அதன் விளைவு, மாற்றங்கள், ஏற்பு இவற்றை கணித்து, தவறுகளையும், குழப்பங்களையும் மாற்றி அமைத்துத்தான், மனவளக்கலை வழியாக பாடமாக நமக்கு தந்திருக்கிறார் என்பதையும் நாம் அறிந்துகொள்ள வேண்டும். எனவே மேம்போக்காக, காயகல்பத்தில் தவறு என்று நாம் சொல்லிவிட முடியாது. அதற்கு வழியும் இல்லை!

காயகல்ப பயிற்சியில், கால்களின் நிலை, கைகள் வைக்கும் நிலை, அங்கே தரப்படும் லேசான அழுத்தம், முறையான அஸ்வினி முத்திரை அளவுகள், அதற்கான கால அளவு, ஓஜஸ் மூச்சு வெளிவிடும் நிலையில் நாக்கின் நிலைபாடு, ஓஜஸ் மூச்சின் அழுத்தம் மற்றும் வெளியிடும் முறை என்பதாக பலவற்றில் நாம் செய்யும் தவறுகளை, அப்படியே விட்டுவிடுகிறோம். அங்கேதான் நீங்கள் குறிப்பிட்ட உடல் உஷ்ணம் அல்லது உடல் சூடு ஏற்பட்டுவிடுகிறது என்பதை கவனத்தில் கொள்க.

அதனால்தான், காயகல்ப பயிற்சி கற்றுக்கொள்ளும் பொழுதே, தனியாகவும் செய்து காண்பித்து, குறைகளை திருத்திக் கொள்வது நல்லது. கற்றுக்கொண்டேன், இனி வீட்டில் செய்து கொள்ளலாம் என்று உடனடியாக முடிவெடுக்கக் கூடாது. அதுபோல குழப்பம் என்றால், ஆசிரியரிடமே நேரடியாக சந்தித்துக் கேட்பதே நல்லது.

சரி, இனி தீர்வு என்ன என்றால், தற்பொழுது நிறுத்திவிட்டீர்கள் என்பதால், உடனடியாக, கற்றுக்கொண்ட மன்றத்தின் வழியாகவோ, வேறு மன்றத்திலும் கூட, உங்கள் நிலையை சொல்லி, திருத்தங்களை பெற்றுக்கொள்ளலாம். இதுவரையுல் தவறாக செய்ததால்தான் உடல் உஷ்ணம் / உடல் சூடு இருக்கிறது என்பதை புரிந்துகொள்க. நிச்சயமாக உங்களின் இந்த பிரச்சனை தீரும், கவலை வேண்டாம்.

வாழ்க வளமுடன்.

Is Zodiac Horoscope Dosha Remedies Working?


ஜெனன ஜாதக தோஷ பரிகாரம் வேலை செய்கிறதா?


தோஷம் என்றால் என்ன?

ஒரு ஜெனன ஜாதகத்தில் இருக்ககூடிய நல்லன, நிறைகள் எல்லாம் யோகம் என்ற அழைக்கப்படும் வேளையில், அதில் இருக்கக்கூடிய தவறுகள், குறைகள் தோஷம் என்று அழைக்கப்படுகிறது. 

இந்த தோஷம் என்பதிலும், ஒரு ஜாதகனின் பலமும் வெளிப்படும். அதாவது இக்குறை உள்ளவரோடு, குறை உள்ளவரை சேர்த்தால் பலன் உண்டாகும். உதாரணமாக, செவ்வாய் தோஷம் இருக்கிற ஆணுக்கு, செவ்வாய் தோஷம் உள்ள பெண்ணே பொருத்தமாவாள். இரண்டு குறைகள் சேரும்பொழுது அவை நிறைகளாக மாறுகிறது அல்லது குறைகள் சமம் ஆக்கப்படுகின்றன.


தோஷம் நிவர்த்தி அல்லது பரிகாரம்

பெருமளவில் இந்த வகையில், ஒரு ஜாதகருக்கு அனுபவம் கிடைத்திருக்கும். முக்கியமாக திருமணம் செய்வதற்கு, “தோஷம் நிவர்த்தி அல்லது பரிகாரம்” என்ற வகையில், ஏதேனும் ஜோசியரிடம் ஆலோசனை கேட்டிருப்பார்கள். அவர்கள் சொன்னபடி குறிப்பிட்ட வகையில் அதை நிறைவேற்றி இருப்பார்கள். ஜாதகருக்கு இதில் நம்பிக்கை இல்லை என்றாலும் கூட, பெற்றோரின் தொல்லை தாங்காமல் செய்திருப்பார்கள். உண்மைதானே?

இந்த தோஷம் நிவர்த்தி அல்லது பரிகாரம் செய்வதனால் ஏற்படும் நன்மைகள் என்ன? ஆராய்வோம்.


தோஷங்கள்

1) ராகு, கேது சர்ப்ப தோஷம்

திருமண தடையும், வாழ்க்கை முன்னேற்ற தடையும், பூர்வ புண்ணிய தடையும், குழந்தைபாக்கிய தடையும் உண்டாக்கும் என்று சொல்லுவார்கள்

2) செவ்வாய் தோஷம்

ஆண், பெண் திருமண பொருத்தத்தில் இந்த தோஷத்திற்கு முக்கிய இடம் உண்டு

3) மாங்கல்ய தோஷம்

பெண்ணின் ஜாதகத்தின் வழியாக, கணவனின் ஆயுள் நிர்ணயம் செய்யும் தோஷம் என்பார்கள்

4) களத்திர தோஷம்

கணவனாக வருபவன், மனைவியாக வருபவள் குணங்களில் இருக்கும், அல்லது ஏற்பட போகும் மாற்றத்தை குறிப்பிடும் தோஷம் என்று சொல்லுவார்கள்.

5) புத்திரதோஷம்

குழந்தை பிறக்காத அல்லது பிறந்த குழந்தை குறித்த தோஷங்களை குறிக்கிறது என்பார்கள்.

6) சூரிய தோஷம்

உயிர், வாழ்க்கை, வளர்ச்சி, தொழில், அரசாங்க துணை ஆகியன குறித்த தோஷங்களை குறிக்கும் என்பார்கள். 

7) புனர்பூ தோஷம்

சந்திரன் சனி ஆகிய கிரங்களின் கூட்டினால் உண்டாகும் தோஷம் ஆகும்.

8) விஷ கன்யா தோஷம்

பெண்களின் ஜெனன ஜாதகத்தில் இருக்கும் இத்தோஷம் கணவனுக்கு  பிரச்சனைகளை உண்டாக்கும் என்று சொல்லுகிறார்கள்

9) பாபகத்ரி நீச்ச தோஷம்

ஒரு ராசி கட்டத்தின் முன்பும், அடுத்தும் அமைதிருக்கின்ற சுபர் அல்லது பாவர் கிரங்களைக் கொண்டு இந்த தோஷம் அமைவதாக சொல்லுகின்றனர். 

10) பாலரிஷ்ட தோஷம்

ஒரு குழந்தை இறந்தே பிறப்பது அல்லது 14 வயதிற்குள் இறப்பது இத்தகைய தோஷமாகும். 

இவை போக வேறு சில தோஷங்களும் இருக்கலாம், ஆனால் இந்த பதிவைப்பொறுத்தவரை இந்த விளக்கம் போதும் என்று நினைக்கிறேன்.


பொதுவான நிவர்த்தி அல்லது பரிகாரம் என்ன?

எந்த ஒரு ஜெனன ஜாதகத்தை ஒரு சோதிடரிடம் கேட்டு, தோஷம் தொடர்பாக ஆலோசித்தால், இன்ன இன்ன தோஷம் இருக்கிறது, இதனால் நிவர்த்தி அல்லது பரிகாரம் செய்யவேண்டும் என்று சொல்லுவார்.  வியாபார ரீதியிலான ஜோதிடர் என்றால் “யாகம் செய்யலாம்” என்றும் அதற்கு இவ்வளவு செலவு ஆகும் என்றும் பட்டியல் போட்டுத் தருவார்கள். 

சில ஜோதிடர்கள், இந்த பரிகாரத்திற்கு இந்த கோவிலுக்கு போய்வாருங்கள், பால் அபிஷேகம் செய்யுங்கள், இந்த கடலில், ஆற்றில் பிண்டம் வைத்து வழிபடுங்கள், அன்னதானம், ஆடைகள் தானம் செய்யுங்கள்,  ஏழைக் குழந்தைக்கு, உடல் ஊனமுற்ற, பார்வையற்ற சிறப்பு நபர்களுக்கு உதவுங்கள் என்றெல்லாம் சொல்லி விடுவார்கள்.

இன்னும் சில சோதிடர்கள், உங்கள் ஊரிலேயே இருக்கும் கோவிலுக்கு சென்று தீபம் ஏற்றி வழிபடுங்கள், நவ கிரகங்களுக்கு நீர் ஊற்றுங்கள் என்று எளிய வகையில் சொல்லிவிடுவார்கள்.


தோஷம் நிவர்த்தி அல்லது பரிகாரம் செய்தபிறகு?!

சோதிடர்கள் சொன்ன பரிகாரம் செய்த பிறகு என்ன நடந்துவிடும்? அந்த ஜாதகருக்கும், அவரின் குடும்பத்தாருக்கும் மனதிருப்தி கிடைக்கும்.  இவர் தோஷம் நிவர்த்தி அல்லது பரிகாரம் செய்துவிட்டார் என்று கிரகங்கள் திருப்தி கொண்டு இடம் மாறி அமர்ந்து விடுவதில்லை. தன் தாக்கத்தை குறைத்துக் கொள்வது இல்லை. உடனே நல்லது செய்துவிடுவதும் இல்லை. அல்லது அந்ததந்த கிரகங்களுக்கு அதிபதியாக சொல்லப்படும், கோவிலில் இருக்கும் இறைவன்கள் அருளைப்பொழிந்து விடுவதில்லை. நீங்கள் பிண்டம் வைத்துவிட்டீட்கள் என்பதற்காக, மூதாதையர்களும் பாசத்தால் பொங்கிவழிந்து உதவி செய்து விடுவதில்லை. 

எது இருந்ததோ அது அப்படியேதான் இருந்தது! 

அப்படியானால் தோஷம் நிவர்த்தி அல்லது பரிகாரம் என்பது பொய்யா?

உங்கள் மனம் ஏற்படுத்தும் மாயம், இந்த நிவர்த்தி, பரிகாரத்தால் “இனி நல்லது நடக்கும்” என்று நம்புகிறது. உங்கள் குடும்பத்தாரும் நம்புகிறார்கள், நீங்கள் இதைச்செய்யும் பொழுது, அதை பார்க்கும் “மற்றவர்களும்” நம்புகிறார்கள். அவ்வளவுதான்.


வேறு வழி என்ன? அல்லது உண்மை என்ன?

செவ்வாய் தோஷம் என்பது எந்த நிலையும், மாறாது, குறைவுபடாது. எனவே அந்த வரனுக்கு, செவ்வாய் தோஷம் இருக்கும் வரனை இணைப்பதுதான் அதற்கான பரிகாரமும், நிவர்த்தியும்.  இதைத்தவிர விளக்கு போடுவதாலும், நீர் ஊற்றுவதாலும், குறிப்பிட்ட ஸ்தல கோவில்களுக்கு போவதாலும் எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை. செவ்வாய் தோஷத்திற்கும் திருமண தடைக்கும் ஒரு தொடர்பும் இல்லை. காலத்தால் காத்திருந்தால் தகுந்த வரன் அமையும். உங்கள் ஆர்வத்திற்கும், விருப்பத்திற்கும் வரன் வேண்டும் என்றால் எப்படி கிடைக்கும்?! வாழ்க்கை என்ன பாஸ்ட் புட்டா?

கால சர்ப தோஷம் என்பது அமைந்திருக்கிறது. அமைந்துவிட்டது. ராகு கேது வுக்கு பால் அபிஷேகம் செய்துவைத்தால் குளிர்ந்து நகர்ந்து விடுவார்களா? இல்லை. அப்படி தோஷம் அமைந்ததற்கு தகுந்த காரணங்கள் இருந்திருக்கின்றன. அது காலத்தால் தானாக சரிசெய்யப்படும். காத்திருங்கள். 

என்னய்யா இவர், காத்திருங்கள், காத்திருங்கள் என்கிறாரே?! எனக்கு வயதாகிறதே? பொண்ணுக்கு வயதாகி காத்திருக்கிறாளே, இதற்கு மேல் காத்திருந்தால் கிழவி ஆகிவிடுவாளே என்றெல்லாம் நினைப்பீர்கள். இத்தகைய தோஷம் உள்ள ஒரு வரனுக்கு தகுந்த வரன் நிச்சயமாக கிடைக்கும். அந்த தகுந்த காலத்தை பெற காத்திருப்பதைத் தவிர வேறுவழி இல்லையே!


இயற்கையின் விதி

ஒரு குழந்தையின் ஜெனனம் என்ன சொல்லுகிறது? ஜாதகம் எழுதி பலன் பார்ப்பது பிறகு வைத்துக்கொள்ளலாம். பொதுவான பிறப்பு தரும் கேள்விகள் என்ன? பார்க்கலாமா!, இக்குழந்தை பெற்றோருக்கு உயர்வைத் தருமா? நல்ல கல்வி கற்குமா? நல்ல வேலைக்கு போகுமா? நிறைய சம்பாதிக்குமா? நல்ல நிலையில் திருமணம் செய்யுமா? அதற்குப்பிறகு குழந்தை பிறக்குமா? இவைதானே உங்கள் கேள்விகள்?

இந்த தோஷங்கள் ஒரு ஜாதகத்தில் அமைவதன் காரணம் என்ன? இந்த இயற்கைக்கு உங்கள் கேள்விகள் மேல் அக்கறை இல்லை. உண்மையாகவே அக்குழந்தை பிறந்தது, பெற்றோரின், அவர்களின் பெற்றோரின், அவர்களின் பெற்றோரின் (இன்னும்...) என்றவகையில் வரும் பூர்வ புண்ணியத்தால் நிகழ்வதாகும். அவைகளை கர்மா என்றும் வினைப்பதிவுகள் என்றும் சொல்லலாம். அந்த பூர்வ புண்ணித்தில் விட்ட குறை, நிறைகளை சரிசெய்யவே பிறந்திருக்கிறது. அந்த செயலில் முழுமையடையவில்லை என்றால் மட்டுமே, திருமணமும், அதன் பிறகான குழந்தையும் அமையும் என்பதுதான் இயற்கையின் விதி. 

அதென்ன இயற்கை விதி?! என்றால், நாம் எண்ணுகின்ற எண்ணங்களுக்கும் , செய்கின்ற செயலுக்கும் ஏற்ப பலன்கள் உடனேயும் கிடைக்கும், தாமதமாகவும் கிடைக்கும். ஒருமையில் கற்ற கல்வி ஏழுமையும் உய்க்கும் என்றால், கர்மா மட்டும் உடனே கழிந்துவிடுமா? பொதுவாக எல்லோரும் என்ன நினைக்கிறார்கள் என்றால், ஒருவர் இறந்த பிறகு, செய்யும் கர்ம சடங்குகளில் எல்லாமே கழிந்துவிடுகிறது என்பதாக. ஆனால் இறந்தவரின் கர்மா அவரின் குழந்தைகளை சார்ந்துவிடுகிறது என்பதுதான் நிஜம். ஐயா, அவருக்கு குழந்தைகள் இல்லையே என்கிறீர்களா? இறந்தவருக்கு பிரியமானவரிடம் போய்ச்சேர்ந்துவிடும். எந்த கர்மாவும் தனித்து நிற்பதில்லை. வாழையடி வாழையாக அடுத்து அடுத்து வந்து சேர்ந்துகொண்டே இருக்கும், அவ்வப்பொழுது கழிந்துகொண்டே இருக்கும்.

இந்த இயற்கையின் வினை விளை நீதி என்பதை அறிந்துகொண்டால், அதற்கேற்றபடி நம் எண்ணங்களை, செயல்களை ஒழுங்குபடுத்திக் கொள்ளலாம். குருமகான் வேதாத்திரி மகரிசி அவர்களும் இதையேதான் மையப்படுத்துகிறார். 


பதற்றம் வேண்டாம்

ஒருவரின் ஜாதகத்தில் தோஷங்கள் இருந்தால் இருக்கட்டும் பதற்றப்படாமல், ஜாதகத்தை எடுத்துக்கொண்டு ஓவ்வொரு நல்ல ஜோதிடராக பார்த்து, ஆலோசனை கேட்டு, ஊர் ஊராக, கோவில் கோவிலாக சுற்றாமல், விளக்கு ஏற்று, குடம் குடமாக நீர் ஊற்று என்று அந்தப்பெண்ணை பாடாய்படுத்தாமல் அமைதியாக இருங்கள்.

அவனோ, அவளோ அமைதியாக இருக்கட்டும், திருமணம் அது இது என்று தொல்லை செய்யாதிருங்கள். பிடித்த படிப்பை படிக்கட்டும், பிடித்த வேலையை பார்க்கட்டும், அவர்களை சுமையாக நீங்கள் கருதாது இருங்கள். அவர்களாகவே காதல் வயப்பட்டால் கூட, அந்தபையன், அந்தப்பெண் எப்படி வாழ்க்கை நடத்துவார் என்றும், எதிர்காலத்தில் எப்படி வாழ்வார்கள் என்றும், எந்த பிரச்சனையும் எழாதவகையில் ஆலோசித்து சரி என்றால் சம்மதம் சொல்லிவிடுங்கள். தடுக்காதீர்கள். ஒரு ஜாதகர் கண்டிப்பாக அந்த ஜாதகத்தின் வழியில் இயல்பாக பொருந்திப்போக வாய்ப்பு அதிகம். திருமணம் வேண்டாம் என்கிறாரா? விட்டுவிடுங்கள், அவர்களை வற்புறுத்தாதீர்கள். தனித்து வாழ பழகிக்கொள்ளட்டும்.  திருமணம் செய்தவர்கள் சொர்கத்திற்கு போவதில்லை, தனித்து வாழ்வபர்கள் நரகத்திற்கு போவதில்லை.  குழந்தை பெற்றவர்களுக்கு மட்டும் மோட்சம் கிடைப்பதில்லை, குழந்தை பெறாதவர்கள் முக்தி அடையாமலும் இல்லை. 


எனவே தோஷ நிவர்த்தி அல்லது பரிகாரம் உண்டா?

இருக்கிறது என்றால் அது பொய் அல்லது உங்களை திருப்தி செய்யும் ஒரு வார்த்தையே! இன்னொன்றும் உண்டு, அது வணிகம்!! 


ஒப்படையுங்கள்

இந்த ஜெனன ஜாதக தோஷம் என்பதிலிருந்து உங்களுக்கு நிவர்த்தி அல்லது பரிகாரம் வேண்டும் என்றால் ஒரே வழி, உங்களை இறையிடம் ஒப்படையுங்கள் மனதளவில். கோவிலும் வேண்டாம், குளமும் நதியும், கடலும் வேண்டாம். 

ஓவ்வொரு நாளும் சூரிய உதயத்தில் வானம் நோக்கி வணங்குங்கள். என்னை உன்னிடம் ஒப்படைக்கிறேன் என்று மனதார சொல்லுங்கள். 


நவக்கிரக தவம்

நவ கோள்களை மனதார வணங்கி பழகுங்கள். (கோவில்தான் கரோனா நோய்தொற்று காலத்தால் பூட்டு போடப்பட்டிருக்கிறதே?) இருக்கும் இடத்திலிருந்தே பரிகாரத்தையும், நிவர்த்தியையும் செய்யலாம் எந்த செலவும் இல்லாமல். உங்களுக்கு கோளறு திருப்பதிகம் தெரியுமா? சொல்லுங்கள். பதிகம் பாடினால் சரியாகுமா? பாடினால் சரி ஆகாதுதான். ஆனால் அந்த நேரத்தில் அந்த நவ கோள்களை நினைத்து, மனதோடு  இணைந்திருக்கிறீர்களே! அதுதான் உண்மைக்காரணம். சமஸ்கிருத ஸ்லோகம் சொல்லலாமா? தாராளமாக சொல்லலாம். 

வீட்டில் தவம் செய்ய பழகுங்கள். நவக்கிரக தவம் என்று ஒன்றுண்டு. இதை  “மனவளக்கலை” மையத்தில் எல்லோரும் கற்றுக்கொள்ளலாம். அல்லது அந்த இணையதளத்தில் ஜூம், யூடூயுப் மூலமாக நடந்தால் கலந்து கொள்ளுங்கள். நவக்கிரக தவத்திலும், மனம்ஒன்றிபோகும், அதைத்தான் அமைதியாக செய்கிறீர்கள். 

நவ கோள்களின் தோஷம் உங்களுக்கு, உங்கள் வாழ்க்கைக்கு கொடுக்கப்பட்ட கசப்பு மருந்து. ஏற்றுக்கொண்டு வாழ கற்றுக்கொள்ளுங்கள். 


வாழ்க வளமுடன். 

---------------

Present by:





Photos Thanks to: Google and copyright their owners.