CJ for You: misunderstanding

misunderstanding

Showing posts with label misunderstanding. Show all posts
Showing posts with label misunderstanding. Show all posts

Why do we have to suffer so much in this life? There is no change. They say that God is omnipotent. Why doesn't He solve my misery right away?


வாழ்க வளமுடன் ஐயா, வாழ்கின்ற இந்த வாழ்க்கையில் ஏன் இவ்வளவு துன்பங்கள் அனுபவிக்கவேண்டி உள்ளது. ஒரு மாற்றமும் இல்லையே. கடவுள் எல்லாம் வல்லவர் என்று சொல்லுகிறார்கள். என் துன்பத்தை ஏன் உடனே தீர்க்காமல் இருக்கிறார்? என்னதான் தவம் செய்தாலும் தீரவில்லை. வெறுப்பாக எல்லாவற்றையும் விட்டுவிடலாமா என்று தோன்றுகிறது. விளக்கம் தருக.



அன்பரே, உங்கள் வருத்தம் எனக்கு புரிகிறது. கடவுள் என்பதையும், அதன் தன்மையையும் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். கட உள் என்ற செயல் தன்மைதான் கடவுள் என்றானது. எனவே கடவுள் என்று உருவகம செய்துவிட்டு, அதை தனியாளாக, சக்தியாக, பேராற்றலாக, அது நம்மை சந்திக்கும், நாம் அதனை சந்திக்கலாம் என்று கருதி விடக்கூடாது. அதனால்தான், வந்து உதவும் என்ற எதிர்பார்ப்பு ஏற்படுகிறது. உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை என்றால், ஏமாற்றம் வந்துவிடுகிறது. எனவே கட உள் தானே தவிர, கடவுள் என்று குறிப்பாக, உருவமாக நினைத்துக் கொள்ளாதீர்கள்.
அப்படியானால், இறை என்பது எப்படி இருக்கிறது என்று கேள்வி எழுந்துவிடும். உங்களை இயக்கிக் கொண்டிருப்பதும், அந்த இயக்கத்திற்கு துணை நிற்பதும் இறையாற்றலே. இந்த பேரண்டத்தில், நாம் வாழும் பூமியை மிதக்கவிட்டுக் கொண்டிருப்பதும், நம்மை இந்த புவியில் தாங்கிக் கொண்டிருப்பதும் இறையாற்றலே.
என்னய்யா, இது நாம் ஒன்றை கேட்டால், இவர் ஏதோ ஒன்று சொல்லுகிறாரே? என்றுதானே தோன்றுகிறது? அப்படித்தான் தோன்றும், ஏனென்றால், உங்கள் புரிதலில் இருக்கும் குழப்பத்தை நீக்க முயற்சிக்கிறேன் அல்லவா?
வேதாத்திரி மகரிஷி, ‘இறை நமக்கு ஒரு துன்பமும் கொடுப்பதில்லை. ஒரு சிக்கலும் ஏற்படுத்துவதில்லை’ என்று உறுதியாக சொல்லுகிறார். அப்படியானால், நாம் வாழ்வில் நடப்பதெல்லாம் வேடிக்கையா? என்று நீங்கள் கேட்பீர்கள். இல்லை. ஆனால், அந்த துன்பமும், சிக்கலும், நீங்கள் சொல்லுகிற கடவுளால் வந்ததல்ல, இறையும் தந்ததல்ல. பிறகு யார் காரணம்? நீங்களேதான்! உங்கள் வாழ்வில் நீங்கள் ஏற்படுத்திக் கொண்ட, அமைத்துக் கொண்ட சூழலில், உங்களுக்கென்று வந்து அமைந்ததுதான். இந்த விளக்கம், உடனடியாக புரியாது எனினும், ஆழ்ந்து சிந்தியுங்கள். துரியதவம் இயற்றிவிட்டு, தற்சோதனை எனும் அகத்தாய்வு செய்யுங்கள். உண்மை புரிந்து, தீர்வு கிடைக்கும் என்பது உறுதி.
இந்த காணொளி வழியாகவும் உங்களுக்கு, விளக்கம் கிடைக்கும் என்று நம்புகிறேன். வாழ்க வளமுடன்.

கடவுள் ஏன் நமக்கு துன்பங்களை தருகிறார்? Why does God give us suffering? வேதாத்திரிய கேள்வி பதில்
வாழ்க வளமுடன்
-

How you describe the Vethathiriya Kayakalpa Yoga Practice is the best for better life?


காயகல்பம் செய்வதால் உடறுறவில் நாட்டம் குறையும்தானே? ஆண் பெண் உடறுறவே யோகத்திற்கு எதிரானதுதானே? பிறகு எப்படி காயகல்பம் கற்றுக்கொண்டால் நல்லது என்று சொல்லுகிறீர்கள்? பிறகு இன்பம் கொடுக்கவும் முடியாது, பெறவும் முடியாது, குழந்தையும் பிறக்காது என்பதுதானே உண்மை?


இப்படியான, அரைகுறை புரிதலில் பல கேள்விகள் வருவதுண்டு. யாரோ சொன்னதை கேட்டு, உண்மையை வேறுமாதிரி புரிந்து கொள்வார்கள். இவர்களாகவே எதேதோ தப்பாகவும் புரிந்து கொள்வார்கள். இந்த கேள்வி அப்படிப்பட்டதுதான்.

இவருக்கு யார் சொன்னார்கள் என்று தெரியவில்லை. இது உண்மையா? என்று நேரடியாகவே, வேதாத்திரிய தவமையங்களுக்கோ, அறிவுத்திருக்கோவிலுக்கோ சென்று கேள்வி கேட்டிருக்கலாம். அவருக்கான விளக்கத்தை ஆசிரியர்கள் தந்திருப்பார். ஆனால், அதை யாருமே செய்வதில்லை. இப்படி பொதுவெளியில் ஏதேனும் கூறிக்கொண்டே, புலம்பிக்கொண்டே இருப்பது இந்தமாதிரியான ஆட்களின் வாடிக்கை.

யோகமும் பாலுறவும் எதிரெதிர் துருவங்கள் அல்ல. ஒரு மனிதனின் பிறப்பே பாலுறவின் வெளிப்பாடுதானே? அதிலே வந்த ஒரு மனிதன், அதை விட்டு விலகி, மறுத்து ஒதுக்கிவிட்டு, யோகத்திற்கு வருவது தகுமா? அது இயற்கைக்கு முரண்பாடு ஆகாதா?

அந்தக்காலத்தில், குண்டலினி எனும் உயிராற்றல் சக்தியை மேலே எழுப்பி கொண்டுவர, பல கடினமான முறைகள் பயிற்சிகள் இருந்தன. மேலே உயர்த்திடும் குண்டலினி சக்தி, நம்முடைய பாலுறவு ஆசையாலும், எண்ணங்களாலும், உடலுறவாலும் மறுபடி கீழே இறங்கிவிடும் என்பதால், பாலுறவை தவிர்க்கச் சொன்னார்களே தவிர, யோகத்திற்கு பாலுறவு எதிரி என்று சொல்லவில்லை. நீங்களாக தவறாக புரிந்துகொண்டால் யார் பொறுப்பு?

வெறுமனே உங்கள் அறியாமையை, ஊருக்கு வெளிக்காட்டிக் கொள்வதற்கு பதிலாக, உண்மையை, அதன் அருகில் இருந்து, அறிந்து கொள்ளுங்கள். மனித பிறப்பின் உண்மையை அறியாமல், முடங்கி, வெறுமனே மடிந்து போகாதீர்கள். இந்த காணொளி, உங்களுக்கான புரிதலை தரலாம்.

காயகல்பம் யோகம் செய்வதால் காமத்தில் ஆர்வம் குறைகிறதா? #Vethathiriya #Kayakalpa yoga truth & benefits
வாழ்க வளமுடன்
-

How do we deal with those who deny and oppose whatever they say?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, வாழ்விலும், தொழில், வியாபார ரீதியிலும், சில நட்பு வட்டங்களிலும் எது சொன்னாலும் மறுத்தும், எதிர்த்தும் பேசுபவர்களை எப்படி சமாளிப்பது?


பதில்:

மிக நல்ல கேள்வி, சமீப காலமாகவே நானும் கூட இதை அனுபவித்து இருக்கிறேன். இங்கே இணைய தளத்திலும் அப்படியான அனுபவங்கள் உண்டு. அதுவும் இந்த, வேதாத்திரிய சானல், (இப்பொழுது வேதாத்திரிய யோகா) ஆரம்பித்த பிறகு நிறைய நபர்கள், மறுத்தும், எதிர்த்தும் பேசுகிறார்கள், அதாவது பின்னூட்டம் இடுகிறார்கள். அவர்களை சமாளிப்பது ஒரு பெரும் கலைதான்.

பொதுவாகவே, இப்போதைய தலைமுறைக்கு ஒன்று அல்லது இரண்டு முந்தைய தலைமுறை என்று வைத்துக் கொள்ளலாம். குறிப்பாக சொல்லுவதென்றால் 20 வயது முதல் 39 வயதுக்குள்ளான நபர்கள் என்று சொல்லலாம். இதில் பால் பேதம் இல்லவே இல்லை. இவர்கள்தான், எதை யார் சொன்னாலும், உடனே ‘உனக்கு ரொம்பத் தெரியுமோ? அதெல்லாம் அப்படியில்லை, என்னமோ தெரிஞ்ச மாதிரி பேச வேண்டியது! இதைப்பற்றி ‘இவர்’ என்ன சொல்லுறார் தெரியுமா?’ என்று விலாவரியாக பேச ஆரம்பித்து விடுவார்கள்.

சொல்லுவது யார்? அவரின் அனுபவம் என்ன? எதன் அடிப்படையில் சொல்லுகிறார்? எதற்காக சொல்லுகிறார்? யாருக்காக சொல்லுகிறார்? இதன் விளைவு யாருக்கு எப்படி இருக்கும்? நன்மைதானா? என்னதான் முடிவாக சொல்ல வருகிறார்?  என்றெல்லாம் நிறுத்தி நிதானமாக ஆராய்வதில்லை. ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற பழமொழியை, உதாரணமாக காட்டி, ‘நீ இதானே சொல்லுகிறாய்? இதற்கு மேலும் இதைத்தான் சொல்லுவாய்!’ என்று முடிவு செய்துவிடுவார்கள்.

இப்படி வாதிடுபவர்களிடம் நாம் ஒன்றும் பேசுவதற்கில்லை. அப்படியா? சரி இனி நான் திருத்திக் கொள்கிறேன் என்று ஒப்புக்கொண்டு நகர்ந்து விடுவது நல்லது. ஏனென்றால், மறுத்தும், எதிர்த்தும் பேசுபவர்கள், தன்முனைப்புக்கான நல்ல உதாரணப்புருஷர்கள். இவர்களோடு மல்லுகட்டுவது உங்களுக்கு கடினம். ஏனென்றால் நாம் பொதுவாக, யோகத்தில் இணைந்து அதன் வழியாக பயணிக்கிறோம். நாம் எதை விளக்க முயற்சித்தாலும் அது வேறுவிதமாகவே திரும்பும். நாம் சொல்லுவதை வைத்தே நம்மை மடக்கவே நினைப்பார்கள். அவர்களை பொறுத்தவரை அவர்களின் தன்முனைப்பில், அவர்கள்தான் வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவர்கள். ஆம் நீ வெற்றியாளன் தான் என்று நீங்கள் அவரை உறுதி செய்துவிட்டு நகர்ந்து விடுங்கள். கூடவே வாழ்க வளமுடன் என்று வாழ்த்தியும் விடுங்கள். அதுவே போதுமானது!

வாழ்க வளமுடன்.