CJ for You: earth life

earth life

Showing posts with label earth life. Show all posts
Showing posts with label earth life. Show all posts

French Beard and Spiritual Journey by Sugumarje


குறுந்தாடியும் ஆன்மீக பயணமும் - ஒரு அலசல்


Sugumarje - Image Created by AI based on prompt

        இந்த குறுந்தாடிக்கு பின்னால், நான் தான் இருக்கிறேன் எனினும், அதற்கென்று தனிக்கதை ஏதுமில்லை. இராயிரத்து மூன்றுவரை மீசை மட்டுமே பிரதானமாக (மூக்கின் கீழே) இருந்துவந்தது. பொதுவாகவே வாரத்தில் ஆறுநாள் தாடியும், மறுநாள் அதை (சுய) வழித்தலும் தொடர்ந்தது. எப்போதாவது மீசை ஓரம் ஒதுங்கிப்போக, முழுமையான வழித்தலும் நிகழ்ந்ததுண்டு. இராயிரத்து ஐந்துகளில் சிலமாதங்கள், மீசையும் இல்லாத நிலை நீடித்தது. எனினும், வாழ்க்கை தந்த அடியில், பாடம் நிறைய படித்ததால், அந்த அனுபவத்திற்குப் பின், மாற்றம் தேடி, இராயிரத்து ஏழில், சென்னையில் ஒருமாதம் தங்கி இருந்து சில வேலைகள் செய்யவேண்டி அமைந்தது. 

வேலைப்பளுவில், வழித்தலுக்கு நேரமும், ஆர்வமும் இன்றி தாடி, மீசையோடு ஆள் மாறி இருந்தேன். அப்போதுதான் இந்த குறுந்தாடி வைக்கலாமா? என்ற சிந்தனையும் வந்தது. அந்த குறுந்தாடிக்குறிய சில குணாதசியங்களையும் நான் வளர்த்துக்கொண்டிருந்தேன். அதனால் நம்பிக்கையும் வந்தது. உடனடியாகவே அது செயல்வடிவமும் பெற்று, என் அடையாளமாக மாறிக்கொண்டது.

விமர்சனங்களை கடந்த மனநிலையும், பக்குவம்பெற்ற அனுபவ நிலையும், நிறைத்துக்கொண்ட தகுதியும், ஒழுங்கும், நடவடிக்கைகளும் எனக்கு உறுதியை தந்தது. கேரிகேச்சர் ஓவியர் சுகுமார்ஜெ என்பதற்கான அடையாளமாகவும் மாறிவிட்டது.  இந்த வடிவ அமைப்பை, சுய வழித்தலில் கொண்டுவருதல் கடினம் என்றுதான் பலரும் சொல்லிக்கொண்டனர். சொல்லுகின்றனர். ஆனால் எனக்கொன்றும் சிரமம் இருக்கவில்லை. ஒரே அளவில் நிறுத்துக் கொள்ளுதல் என்ற நிலை, இராயிரத்து பதினெட்டுகளில் மாறிவிட்டது. காரணம், அந்த காலத்தில், வேதாத்திரி மகரிஷியின் மனவளக்கலை வழியாக, ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருந்தேன். அந்த நெடும் பயணம், பல்வேறு பிரச்சனைகளை விளைவித்தது. 

வாழும் பொழுதே இறத்தல் என்பது போல, இருக்கும் சுமையெல்லாம் கழித்தல் (கர்ம வினை) அவ்வளவு சுலபமா என்ன? இன்றுவரை வாழ்வியலில் சில கடினம் தொடர்கிறது. என் நண்பர்களிடம் சொல்லிக்கொள்வதுண்டு. 'by Spiritually I am a winner and loser in Matirialistic' எனினும், ஒவ்வொரு நாளையும், இறையாற்றல் எனக்கு கொடுக்கும் கொடையாக, நிறைவாக, புரிந்து கடந்து போகிற மனபக்குவம் எனக்கு கிடைத்துவிட்டதால், இயல்பாக ஒவ்வொரு நாளையும் அதன் போக்கிலே விட்டுவிடுகிறேன். படகில் பயணிக்கிறேன். படகின் துடுப்பை நான் இயக்குவதில்லை. இலக்கின்றியும் நான் பயணிக்கவில்லை என்பதையும் தெளிவு செய்கிறேன். என் இலக்கு நிறைவுற்றது. நீண்ட நேரம் குளத்தில் குளித்தபிறகு, சும்மா மிதக்கலாமே என்று தோன்றுமல்லவா? அது தான் இங்கே நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

இதை என் அனுபவமாக கொண்டாலும், அதுகுறித்து விளக்கிட எனக்கு ஆர்வமில்லை. அதை எத்தனையோ குருமார்கள் சொல்லிவிட்டார்கள். என்னுடைய ‘Vethathiriya Sky Lead' என்ற Youtube-லும் கூட மூன்று மாதங்களாக ஏதும் பதிவிடவில்லை. போதும் என்றாகிவிட்டது. ஆனாலும் சில பதிவுகள் அன்பர்களுக்காக இனிமேல் வரும். இத்தகைய அனுபவங்களுக்குப் பிறகு, மறுபடியும் சில மாற்றங்கள் குறுந்தாடியில் நிகழ்கிறது. தேடல் முடிந்துவிட்டாலும், வாழ்க்கை தொடர்கிறது அல்லவா? அந்த வாழ்விற்காக. இதன் காரணமாகவே, இங்கேயும் தொடர்கிறேன்.

உலகில் பிறந்துவாழும் நாம் ஒவ்வொருவருக்கும், அந்த தேடலும், கடமையும் இருக்கிறது. ஆனால், நாம் நம்மை அதில் ஈடுபடுத்துவதற்கு பதிலாக, இறையாற்றலை செயல்படு, செய்துகொடு, வரமாக கொடு, வழிநடத்து, துணை இரு, சாட்சியாக இரு என்று கேட்டுக்கொண்டிருக்கிறோம். உங்களுக்கு யோகம், ஆன்மீகம், பொருளாதாரம், வாழ்க்கை, உறவுகள், பிறவிக்கடமை, கர்ம வினை, இறை, தெய்வம், கடவுள், இயற்கை, கோள்கள், பிரபஞ்சம், விஞ்ஞானம், மெய்ஞானம் குறித்த சந்தேகங்கள் இருந்தால் என்னோடு உரையாடலாம். 

#vethathiriya #vethathiriyaskylead #sugumarje #caricaturist #caricatureartist #youtube #facebook #instagram #vethathiri #maharishi #manavalakalai #skyyoga 


Not speak is silence, isn't it? What's the big deal about that? And is it possible not to speak in this world? Some men, saints and gurus are silent. Is that really silence too? Explain


வாழ்க வளமுடன் ஐயா, வாய்பேசாமல் இருந்தாலே மௌனம் தானே? அதில் என்ன பெரிய விசயம் இருக்கிறது? மேலும் இந்த உலகில் பேசாமல் இருக்கமுடியுமா? சில மனிதர்கள், சாமியார்கள், ஞானிகள் பேசாமல் இருக்கிறார்களே? அதும் மௌனமா? விளக்கம் தருக.

உங்கள் ஆர்வத்தை வரவேற்கிறேன். மௌனம் இறைவனின் மொழி என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? இந்த பிரபஞ்சம் முழுவதுமே அப்படியான மௌனம் நிரம்பி இருக்கிறது. நமக்குள்ளும் அப்படியான மௌனம் இருந்தது. இருக்கிறது. ஆம், நாம் தாயின் கருவறையில் இருக்கும் பொழுது அப்படித்தான் இருந்தோம். பிறந்த பிறகுதான் அந்த மௌனத்தை கலைத்தோம். இன்றுவரை, இப்போது வரை அந்த மௌனத்தை கடைபிடிக்கவில்லை என்றும் சொல்லலாம் தானே?

மௌனம் யோகத்தில் மிக சிறப்பானது. எனினும் வாய்மூடி பேசாமல் இருப்பதற்கும், மௌனமாக இருப்பதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு. இந்த வித்தியாசத்தை தொலைத்துவிட்டுத்தான், பெரும்பாலோர் மௌனம் இருக்கிறேன் என்று சொல்லிக் கொள்கின்றனர். 

        யாராவது எதாவது கேட்பார்கள், நாம் எதையாவது சொல்லி மாட்டிக் கொள்வோம் என்பதற்காகவே, மற்றவர்களோடு பேசுவதை தவிர்த்து, மௌன நாடகம் நடிப்பவர்களும் இந்த உலகில் உண்டு. அப்படி தோற்றம் தருகின்ற பல்லாயிரக்கணக்கான குருமார்கள், ஞானிகள், சாமியார்கள் என்ற ‘அடைமொழிக்குள்’ அவர்கள் இருக்கிறார்கள். நீங்கள் எளிதில் அவரை அடையாளம் கண்டு, அவரிடம் இருந்து ஒதுங்கி விலகி, ஏமாறாமல் உங்களை காத்துக்கொள்ளலாம்.

சிக்கல் என்ன என்றால், யார் வாய்மூடி இருக்கிறார்கள், மௌனமாக இருக்கிறார்கள் என்று உடனடியாக அறிந்துகொள்ள முடியாது. ஆனால், சிறிது நேரம், அவரின் அருகே இருந்து கவனித்தால், அவர் உண்மையாகவே மௌனத்தில் இருக்கிறாரா? வாய்மூடி இருக்கிறாரா? என்பதை அறிந்துவிடலாம்.

எப்படி? இதற்கான விளக்கத்தை இந்த காணொளி வழியாக தெரிந்து கொள்ளலாம். மேலும், உங்கள் கேள்விக்கான உண்மையும் இந்த காணொளியில் கிடைக்கும்.

நாம் பேசாமல் இருந்தால் இறைவன் பேசுகிறானா? மௌனம் உண்மைவிளக்கம் அறிவோமா?#silence #divine

வாழ்க வளமுடன்

I suffer in every way of my life. Why does nature give me so much suffering? What is God's role in this? Give an explanation.


வாழ்க வளமுடன் ஐயா, என் வாழ்வில் எல்லாவகையிலும் துன்பங்களை அனுபவிக்கிறேன். இத்தனை துன்பங்களை இயற்கை ஏன் எனக்கு தருகிறது? இதில் கடவுளின் பங்கு என்ன? விளக்கம் தருக.

கட உள் என்று நமக்குள்ளாக இருக்கிற தன்மையே கடவுளாக மாறிவிட்டது. இத்தன்மையை இறை என்றும் நாம் வணங்குகிறோம். நம்பிக்கையற்றவர்கள் இயற்கை என்று சொல்லுகிறார்கள். எப்படியே, இறை வழியாகவும், இயற்கை வழியாகவும் துன்பம் வருகிறது என்று நம்புகிறோம். ஆனால் உண்மை என்ன?

இறைத்தன்மையும்,  இயற்கையும் மூன்று துன்பங்களை மட்டுமேதான் தருகிறது. அது என்னென்ன என்பதை இந்த காணொளி வழியாக காணலாம். ஆனாலும், இயற்கையில் கூடுதலாக சில நிகழ்ச்சிகள் எழுவதுண்டு. அது இயற்கை நிகழ்வு. தன்னை சரி செய்துகொள்ளும் ஓர் நிலைபாடும், காலத்திற்கு கேற்றபடி தன்னில் மாற்றம் பெறுவதும் ஆகும். அந்த இயற்கையின் நிகழ்வுகளில், அதைச் சார்ந்து வாழும் மனிதன் சிக்கிக் கொள்கிறான். அதனால் மட்டுமே துன்பப்படுகிறான். அதுதான் உண்மையே தவிர, மனிதனுக்கு துன்பம் தரவேண்டும் என்று இயற்கை திட்டமிட்டு செயல்படுவதில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதுபோலவே, கடவுள் தன்மையும், இந்த மனிதனுக்கு பாதிப்பு, துன்பத்தை தரவேண்டும் என்று செயல்படுவதில்லை என்பதையும் விளங்கிக் கொள்ள வேண்டும்.

இந்த விளக்கங்களின் மொத்த விளக்கமும், இந்த காணொளியில் நாம் அறிந்து கொள்ளலாம். இதோ அதற்கான பதிவு.

கடவுள் ஏன் நமக்கு துன்பங்களை தருகிறார்? Why does God give us suffering? வேதாத்திரிய கேள்வி பதில்

வாழ்க வளமுடன்

-

Why do we have to suffer so much in this life? There is no change. They say that God is omnipotent. Why doesn't He solve my misery right away?


வாழ்க வளமுடன் ஐயா, வாழ்கின்ற இந்த வாழ்க்கையில் ஏன் இவ்வளவு துன்பங்கள் அனுபவிக்கவேண்டி உள்ளது. ஒரு மாற்றமும் இல்லையே. கடவுள் எல்லாம் வல்லவர் என்று சொல்லுகிறார்கள். என் துன்பத்தை ஏன் உடனே தீர்க்காமல் இருக்கிறார்? என்னதான் தவம் செய்தாலும் தீரவில்லை. வெறுப்பாக எல்லாவற்றையும் விட்டுவிடலாமா என்று தோன்றுகிறது. விளக்கம் தருக.



அன்பரே, உங்கள் வருத்தம் எனக்கு புரிகிறது. கடவுள் என்பதையும், அதன் தன்மையையும் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். கட உள் என்ற செயல் தன்மைதான் கடவுள் என்றானது. எனவே கடவுள் என்று உருவகம செய்துவிட்டு, அதை தனியாளாக, சக்தியாக, பேராற்றலாக, அது நம்மை சந்திக்கும், நாம் அதனை சந்திக்கலாம் என்று கருதி விடக்கூடாது. அதனால்தான், வந்து உதவும் என்ற எதிர்பார்ப்பு ஏற்படுகிறது. உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை என்றால், ஏமாற்றம் வந்துவிடுகிறது. எனவே கட உள் தானே தவிர, கடவுள் என்று குறிப்பாக, உருவமாக நினைத்துக் கொள்ளாதீர்கள்.
அப்படியானால், இறை என்பது எப்படி இருக்கிறது என்று கேள்வி எழுந்துவிடும். உங்களை இயக்கிக் கொண்டிருப்பதும், அந்த இயக்கத்திற்கு துணை நிற்பதும் இறையாற்றலே. இந்த பேரண்டத்தில், நாம் வாழும் பூமியை மிதக்கவிட்டுக் கொண்டிருப்பதும், நம்மை இந்த புவியில் தாங்கிக் கொண்டிருப்பதும் இறையாற்றலே.
என்னய்யா, இது நாம் ஒன்றை கேட்டால், இவர் ஏதோ ஒன்று சொல்லுகிறாரே? என்றுதானே தோன்றுகிறது? அப்படித்தான் தோன்றும், ஏனென்றால், உங்கள் புரிதலில் இருக்கும் குழப்பத்தை நீக்க முயற்சிக்கிறேன் அல்லவா?
வேதாத்திரி மகரிஷி, ‘இறை நமக்கு ஒரு துன்பமும் கொடுப்பதில்லை. ஒரு சிக்கலும் ஏற்படுத்துவதில்லை’ என்று உறுதியாக சொல்லுகிறார். அப்படியானால், நாம் வாழ்வில் நடப்பதெல்லாம் வேடிக்கையா? என்று நீங்கள் கேட்பீர்கள். இல்லை. ஆனால், அந்த துன்பமும், சிக்கலும், நீங்கள் சொல்லுகிற கடவுளால் வந்ததல்ல, இறையும் தந்ததல்ல. பிறகு யார் காரணம்? நீங்களேதான்! உங்கள் வாழ்வில் நீங்கள் ஏற்படுத்திக் கொண்ட, அமைத்துக் கொண்ட சூழலில், உங்களுக்கென்று வந்து அமைந்ததுதான். இந்த விளக்கம், உடனடியாக புரியாது எனினும், ஆழ்ந்து சிந்தியுங்கள். துரியதவம் இயற்றிவிட்டு, தற்சோதனை எனும் அகத்தாய்வு செய்யுங்கள். உண்மை புரிந்து, தீர்வு கிடைக்கும் என்பது உறுதி.
இந்த காணொளி வழியாகவும் உங்களுக்கு, விளக்கம் கிடைக்கும் என்று நம்புகிறேன். வாழ்க வளமுடன்.

கடவுள் ஏன் நமக்கு துன்பங்களை தருகிறார்? Why does God give us suffering? வேதாத்திரிய கேள்வி பதில்
வாழ்க வளமுடன்
-

Suddenly, one day, I took initiation and learned penance. But I couldn't keep up. My living situation is not good, there is no peaceful place. Shall we leave it at that? What other way? Give an explanation.


வாழ்க வளமுடன் ஐயா, ஏதோ ஒருநாள் திடீரென, தீட்சை எடுத்துக்கொண்டு, தவம் கற்றுக்கொண்டேன். ஆனால் தொடர்ந்து என்னால் செய்யமுடியவில்லை. என்னுடைய வாழ்க்கை சூழ்நிலை சரியில்லை, அமைதியான இடமும் இல்லை. அப்படியே விட்டுவிடலாமா? வேறு என்ன வழி? விளக்கம் தருக.

எல்லோருமே, தீடீரென ஒருநாள் தான், மாற்றத்தையும், உண்மையையும் உணர்ந்து, இனியாவது, வாழ்வில் திருத்தம் பெறவேண்டும் என்று, குருவை நாடி சரணடைகிறோம் என்பதுதான் உண்மை. நாம் தேர்ந்தெடுத்தது எதுவேண்டுமானலும் இருக்கலாம். ஆனால் குருவை நாடினால், அவரின் வழிகாட்டுதல் எந்தவகையிலும் நமக்கு துணை நிற்கும் என்பது உறுதி. 

நீங்கள் மனவளக்கலை அன்பர் என்றால், உங்களுக்கான அடிப்படை பயிற்சிகள் போதுமானது. அதை உங்கள் வாழ்நாள் முழுவதுமே கடைபிடிக்கும் வகையில்தான், வேதாத்திரி மகரிஷி அவர்கள் வடிவமைத்திருக்கிறார். அந்த நிலையில் இருந்து நீங்களாகவே, உயர வேண்டும் என்று தீர்மானித்தால், அதற்கு அடுத்த பயிற்சிகளில் நீங்கள் இணைந்து, அகத்தாய்வு, பிரம்மஞானம், அருள்நிதி என்ற வகையில் உயரலாம். அது உங்கள் விருப்பம் மட்டுமே தவிர, கட்டாயம் இல்லை.

பொதுவாகவே, நீங்கள் சொல்லுவது போல, சிலர் தொடர்ந்து செய்வதில்லை. ஏதோ வாரம் ஒருநாள், மாதம் ஒருநாள் என்றுதான் போகிறது. காரணம், நீங்கள் சொன்ன அதே வாழ்க்கை சூழ்நிலைதான். இந்த பொருள்முதல்வாத உலகில், எல்லோருக்குமே நேரம் கிடைப்பதில்லை. கிடைக்கும் நேரம் உறங்கி எழுவதற்கு கூட போதாமல் இருக்கிறதுதானே? வேறுவழியும் இல்லை.

ஆனால், இந்த உழைப்புக்கும், ஓட்டத்திற்கும் நம்முடைய உடல், மனம், உயிர் ஈடு கொடுக்க வேண்டுமே? அது முக்கியமாயிற்றே? அதற்கு வழி என்ன? அதற்குத்தான் இருக்கிறது வேதாத்திரிய மனவளக்கலை. அதனால், ஏதேனும் ஒரு வகையில் அரைமணியோ, ஒருமணியோ நேரம் ஒதுக்கி, பயிற்சி மற்றும் தவம் செய்ய முறைப்படுத்திக் கொள்ளவேண்டும். அது மிக மிக அவசியம். எனவே இன்றே திட்டமிடுங்கள்.

இந்த காணொளியும் உங்களுக்கு உதவக்கூடும்.

தீட்சை எடுத்துக்கொண்ட பிறகும் தவம் செய்யாமல் தவிர்க்கலாமா? #vethathiriyayoga #meditation #thavam

வாழ்க வளமுடன்.

-

Is death the only freedom from pleasure and pain? Or is it possible to be liberated while alive by some other means? Give an explanation.


வாழ்க வளமுடன் ஐயா, இறப்பு என்பதுமட்டும் தான் இன்ப துன்பங்களில் இருந்து விடுதலை தருகிறதா? அல்லது வேறு ஏதேனும் வழிகள் மூலம், வாழும்பொழுதே விடுதலை பெறமுடியுமா? விளக்கம் தருக.



இந்த கேள்வியின் வழியாக, இரண்டு நிலைகளை அறிந்து கொள்ள முடியும். ஒன்று, வாழ்ந்து கொண்டிருக்கும் பொழுதான, புரிதல் விடுதலை. இன்னொன்று முழுமையான விடுதலை. வாழும் பொழுதுதான் விடுதலை என்பது, தற்காலிகமானது. ஆனால், அதை புரிந்துகொண்டால், அடுத்து வரக்கூடிய அல்லது நிகழக்கூடிய இன்ப துன்பங்களை, விழிப்புணர்வாக ஏற்றுக் கொள்ள முடியும். அதை இயல்பாக கடந்து போகவும், பழகிவிடலாம். நாம் வருத்தப்படவும் வழியில்லை.

ஆனால், அப்படியில்லாமல், முழுமையான விடுதலை எப்போது கிடைக்கும்? என்ற கேள்விக்கு, வேதாத்திரி மகரிஷி அவர்கள், இப்படியான பதில் தருகிறார். ‘இந்த உலகில், தனியாக, நம்மை யாரும் காப்பாற்றிக் கொண்டிருக்கவில்லை. எல்லோரும் பிறந்தோம். வாழ்கிறோம். இறப்போம். இதற்கிடையில் உற்றார், உறவினர், நண்பர்கள் என்ற முறையில் சந்திப்புகள் நிகழ்கின்றன. அவை தினமும், நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. ஒன்றைப்போல ஒன்று இருப்பதில்லை. ஆனால் தொடர்ச்சியாக நினைவில் பதிவாகின்றன. அது தொகுப்பாகவும் இருந்து விடுகிறது. உண்மைதானே?’

‘எப்போது நினைத்தாலும், அந்த நினைவுகள் பசுமையாக இருக்கின்றன. அதில் இன்பமும் உண்டு, துன்பமும் உண்டு. கூடுதலும் உண்டு, பிரிதலும் உண்டு. இழப்பும் உண்டு, பெறுவதும் உண்டு. எனினும் அவையெல்லாம், நடந்து முடிந்தவைதானே? அது இப்போது இல்லை. இந்த நொடியில் அது இல்லை. நம் வாழ்க்கையில் நடந்துதான். நாம் அனுபவித்ததுதான். என்றாலும், நம்மைவிட்டு கடந்துவிட்டது தானே? புரிந்து கொள்ள கடினமாக இருந்தாலும், உண்மை இதுதான். உறங்கும் பொழுது, கனவு வருகிறது. ஆனால் அதை கனவு என்று கடந்துவிடுவதில்லை. அதிலும் எல்லா உணர்வும் உண்டு.’

‘நாம் கனவு காணும் போது, அதில் காணும் காட்சிகள், உண்மையாக, நடப்பவையாக தோன்றும். ஆனால் விழித்த பின்பு? மாயை என்று சொல்லும்படி ஒன்றுமே இருக்காது. எந்த ஒரு குறிப்பும், அடையாளமும் இருக்காது. அது போன்றே நம் வாழ்வை, நிரந்தரமானதாக நினைத்து, புலனலவில், அறிவில் கட்டுப்பட்டுச் செயல் புரியும் போதும் பல நிகழ்ச்சிகள் தொடர்பாக,  உருவாகின்றன. பிறப்பிற்கு முன்னும், இறப்பிற்கு பின்னும், உயிரின் நிலையை யூகித்து உணர்ந்தால், உலக வாழ்க்கையில், நாம் உருவாக்கிக் கொள்ளும் கருத்துக்கள் எல்லாம், என்னவாகும் தெரியுமா?’

‘எல்லாமே, கனவில் நடந்த நிகழ்ச்சிகள் போல, வலுவற்றுப் போகும். எல்லா உயிர்கட்கும், எல்லா வகையான துன்பங்களிலிருந்தும், விடுபட, இயற்கை ஒழுங்கமைப்பால் அமைந்துள்ள, ஒரு நல்வரம் தான், இறப்பு. ஆம். மரணம்தான், சீவ இன இன்ப துன்ப,  மாகடலைத் தாண்டும், உயர் நிகழ்ச்சி. என்று கவிதையில் எழுதியுள்ளேன்’ என்று வேதாத்திரி மகரிஷி பதில் தருகிறார்.

இந்த உலகில், ஆறாம் அறிவாக உயர்ந்து வாழும் நாம், அறியாமையில் சிக்கிவிடக்கூடாது. எனவே, அந்நிலை வரும்வரை காத்திருக்காமல், விட்டுவிடாமல், உண்மையை, சிந்தித்தும், யூகித்தும் அறிந்து, விழிப்புணர்வு பெறலாம். நமக்கு நிகழும் நிகழ்ச்சிகளை, ஒவ்வொடு கணமும் ஆராய்ந்து, விளங்கிக் கொண்டால், போதுமானதாகும்.

இந்த உண்மையை காணொளி பதிவாகவும் அறிந்து கொள்க!

வாழ்க வளமுடன்.

Instead of analyzing and trying to solve the problem of man's life, how can it be solved by just doing sankalpa? You need to think a little wisely, don't you?


மனிதனுடைய வாழ்க்கைப் பிரச்சனையை அலசி ஆராய்ந்து தீர்ப்பதற்கு முயற்சிக்காமல், சும்மா சங்கல்பம் செய்தால் எப்படி தீரும்? கொஞ்சம் அறிவோடு யோசிக்கவேண்டும் அல்லவா? கதைவிடாதீங்க! என்ற இந்த பின்னூட்டத்திற்கு விளக்கம் காணலாம்.

பொதுவாக எல்லாவற்றையும் அறிவுக்கண்ணோட்டத்தில் பார்க்கிறேன் என்று இருப்பவர்கள்தான் இப்படியான கருத்தை, பொதுவெளியில் சொல்லுவார்கள். அதாவது ‘உன்னைவிட நான் சிந்திக்கிறேன். அதுவும் என் மூளையை கசக்கி யோசிக்கிறேன், அதுவும் சயின்ஸ் என்ற அறிவியல் (?!) துணையோடு செயல்படுகிறேன்’ என்று தனக்குள்ளும், மற்றவர்களிடமும் சொல்லிக் கொள்வார்கள். இருக்கட்டும் இது மிகச்சிறந்த செயல்பாடுதான். வரவேற்கலாம்.

ஆனால், இவர்கள் அடிப்படையை விட்டுவிட்டு, வேறெதோ பின்னால் செல்கிறார்கள் என்று சொல்லலாம். கிராமத்து சொல்வடை என்ற பழமொழிகளில் ஒன்றான ‘தும்பைவிட்டு வாலைப் பிடிக்கிற’ ஆட்கள்தான் இவர்கள். 

சங்கல்பம் என்பது, ஒரு ஆரம்ப புள்ளியாகவும் இருக்கலாம். ஒரு செயல், நடவடிக்கை, பொதுவான நிலை என்ற வகையில், சங்கல்பம் செய்து ஆரம்பிக்கலாம். ஏதேனும் இடைப்பட்ட சிக்கலில், பிரச்சனையில், அதன் தீர்வுக்காக சொல்லி வரலாம். பிரச்சனையின் தாக்கம், பொருந்தா விளைவு வந்தாலும் கூட, அந்த இடத்திலும், சங்கல்பத்தை சொல்லி தீர்வுக்கு வழி தேடலாம். இப்படியாக, சங்கல்பம் என்பது எல்லா வகையிலும், எல்லா நிலைகளிலும் சொல்லி வரலாம் என்பதுதான் உண்மை. சங்கல்பம் இயற்கையோடு மனதை ஒன்றிணைக்கும் ஓர் பயிற்சி. இயற்கையின் ஆற்றலோடு நாம், நம்மை இணைத்துக்கொள்ளும் ஓர் முயற்சி. இது உண்மைதானா? என்றால். அதை நீங்களே உணர்ந்து கொள்ளலாம். இனி இங்கே நாம் எழுத்தால் விளக்கிச் சொல்வதை விட, இந்த கருத்தில் நாம் ஏற்கனவே, @Vethathiriya காணொளியாக வழங்கி உள்ளேன். இதோ இந்த இணைப்பு வழியாக காணலாம். உண்மை விளக்கத்தை காணலாம்.

என்னுடைய பிரச்சனையை தீர்க்க தவம், சங்கல்பம் உதவுமா?  Will Meditation Sankalp help to fix My problems?

வாழ்க வளமுடன்.

-

There is no need to worry about exercising so much. Isn't this a common thing? If you are interested, let them do it. Why provoke people to say it so often? What is the need for that?


உடற்பயிற்சி செய்வதை இவ்வளவு பெரிதாக அலட்டிக்கொள்ள தேவையில்லை. இது பொதுவான விசயம் தானே? ஆர்வமிருந்தால் செய்து கொள்ளட்டும். அதை ஏன் அடிக்கடி சொல்லி மக்களை தூண்டவேண்டும்? அப்படி என்ன அவசியம்? அதில் உங்களுக்கு என்ன கிடைக்கப்போகிறது? கேள்வி தவறென்றால் மன்னிக்கவும்.




ஒரு கேள்வி எப்போதுமே தவறாக இருக்கமுடியாது. அந்த கேள்விக்கான பதில்தான் தவறாக இருக்கும் என்பது பொதுவானது. எனவே நிச்சயமாக இந்த கேள்வியை எடுத்துக்கொண்டு, அதற்கான பதிலை தருகிறேன்.

நீங்கள் மனவளக்கலை அன்பராகவும் இருக்கலாம், பொதுவான அன்பராகவும் இருக்கலாம். அது பிரச்சனையில்லை. ஆனால் உடற்பயிற்சியால் என்ன நிகழ்கிறது? என்பதை மேலோட்டமான அறிவாக மட்டும் கொண்டிருக்கிறீர்கள் என்பது நன்றாகவே தெரிகிறது. முக்கியமாக, உடற்பயிற்சி என்பது, ஒவ்வொருவருக்கும் அவசியம் தேவை. அதிலும், இந்த உலகில் நன்றாக வாழ நினைக்கும் அனைவருக்குமே தேவையும் அவசியமும் ஆகும். உண்மையாக, உடற்பயிற்சி என்பது, ஏதோ ஒருவர் மற்றவருக்காக செய்யும் பயிற்சி அல்ல.

தன்னுடைய உடலுக்கு, உடலுறுப்புகளுக்கு ஊக்கம் தந்திடும் ஒரு செயல், 24 மணி நேரத்தில் சில நிமிடங்களை, உடற்பயிற்சியில் செலவழிக்கலாம். அதில் ஒரு இழப்பும் இல்லை. அதிகாலை உடற்பயிற்சி என்றால், அன்றைய நாள் முழுவதுக்குமான சக்தியாற்றல் கிடைத்துவிடுகிறது. உற்சாகமாக இரவு வரை, இயல்பாகவும் இருக்க முடிகிறது. இரவில் நல்ல தூக்கமும், அதுபோலவே அதிகாலை விழிப்பும் வந்துவிடுகிறது. இது உடற்பயிற்சி செய்துவருகின்ற ஒவ்வொரு அன்பரின் அனுபவமே ஆகும்.

மனித வாழ்வில், அவனுடைய ஆயுட்காலம் தனியாக யாருமே கணித்திட முடியாது. வாழும்வரை, இருக்கும்வரை, இயற்கைக்கு முரண்படாமல் வாழவேண்டும் அல்லவா? முரண் எங்கே எழுகிறது? இந்த இயற்கை அமைப்பை மீறிடும் பொழுது வருகிறது. 

உங்களை விட, உங்கள் உடலுக்கும் உடல் உறுப்புகளுக்கும், இயற்கையோடு இணைந்து செயல்படும் தன்மையும், அறிவும் உண்டு. ஆனால், நீங்கள்தான் உங்கள் விருப்பத்தின் வழியால், ஆர்வத்திலும், செயல்பாட்டிலும் அந்த ஒழுங்கமைப்பை கெடுத்துவிடுகிறீர்கள். இதனால் உங்கள் உடலின், உடல் உறுப்புக்களின் கட்டமைப்பு குலைந்து விடுகிறது. ஒரு நாளின் உணவு முறை, உடல் இயக்கம், தூக்கம் எல்லாம் மாற்றிவிடுகிறீர்கள். இதனால் உங்கள் உள் கட்டமைப்பு சிதறுகிறது. உடலுக்கும் மனதிற்கும் உள்ள ஒத்துழைப்பும் தடுமாறுகிறது. இப்படியான நிலை வந்துவிட்டால், மனிதனின் வாழ்நாள் குறுகிவிடும். அதனால், உங்கள் பிறப்பின் நோக்கம், கடமை அறியமுடியாது என்பதுதான், தன்னையறிந்த சித்தர்கள், யோகியர்கள், மகான்கள் ஆகியோரின் வார்த்தைகளாகும். அதனால்தான் உடற்பயிற்சியை, முதல் பாடமாக வைத்தார்கள்.

இப்பொழுது உங்களுக்கு உண்மை தெரியவரும் என்று நினைக்கிறேன். இதனோடு, இந்த காணொளியும் நல்ல விளக்கத்தை தரும். இதோ அதன் இணைப்பு...

எளியமுறை உடற்பயிற்சி வழியே நிறைவேறும் பிறப்பின் நோக்கம் என்ன? உண்மை ரகசியம் - Purpose Truth Secret


வாழ்க வளமுடன்
-

Is it still fair to believe in karma? Outdated myths are no longer valid. That's what people all say. Is there really karma or not? Explain.


இன்னமும் கர்மாவை நம்புவதெல்லாம் நியாயமா? காலவதியான கட்டுக்கதைகள் இனிமேலும் செல்லுபடி ஆகாது. இப்படித்தான் மக்கள் எல்லோரும் சொல்லுகிறார்கள். உண்மையாகவே கர்மா உண்டா இல்லையா? விளக்குக.

என்னுடைய வாழ்விலும், இதை இப்பொழுது விளக்கிச் சொல்லும் அளவிற்கு வளர்ந்திருக்கிறேன் என்றாலும், என் பதின்ம வயதுகளில், கர்மாவை ஏற்றுக்கொண்டவனில்லை. நான் செய்யாத ஒன்றை, என்னை ஏன் சுமக்கச் சொல்லுகிறீர்கள்? என்றுதான் கேட்டிருக்கிறேன். அதுபோலவேதான், மக்கள் அனைவரும் ‘கர்மா’ குறித்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். அது தவறு அல்ல என்பதுதான் என்னுடைய கருத்து. பேசட்டும், விலக்கட்டும், ஒதுக்கி தள்ளட்டும். ஆனால், உண்மை என்ன? என்று ஆராய்ந்து பார்த்த பிறகுதான் அதை செய்யவேண்டும். இது என்னுடைய வேண்டுகோள். 

ஒன்றைப்பற்றி தெரியாமலேயே அதை புறம்தள்ளுவது, பாதிக்கப்பட்ட உடலுக்கு தேவையான மருந்தை, ‘எனக்கு வேண்டாம், இதை சாப்பிட்டால் நான் பிழைத்துவிடுவேன்’ என்று சொல்லுவது போல ஆகிவிடும். எத்தனை முரண்பாடு கவனித்தீர்களா?

முதலில் இந்த கர்மா என்ற வார்த்தையின், அர்த்தத்தை விளங்கிக் கொள்ள வேண்டும் என்பதும் என்னுடைய வேண்டுகோள். கர்மா என்ற வடமொழி சொல், அழகாக வினை என்று சித்தர்களால் வழங்கப்பட்டிருக்கிறது. வினை என்றால் செயல், இயக்கம் என்று அர்த்தமாகிறது. இதை இன்றைய நவீன விஞ்ஞானத்தின் பார்வையில் விளக்க முடியுமா? என்று கேட்கிறீர்களா? முடியும்.

'Every action has reaction'என்பது பொதுவான கருத்துதானே? இன்னமும் விளக்கமாக, Newton's third law of motion, every action has an equal and opposite reaction. These two forces act on two different bodies. இதன்படி, ஒரு செயலுக்கு அதற்கு சமமான எதிர் செயலோ, விளைவோ உண்டு என்று தெரியவருகிறதுதானே? அதுதான் இந்த கர்மாவில், இல்லையில்லை, வினையில் இருக்கிறது. ஒரு செயலை செய்கிறீர்கள். அந்த செயலுக்கு விளைவாக இன்னொரு செயல் விளைகிறது. அது நன்மையாகவும், தீமையாகவும் அமைந்துவிடுகிறது. இது உங்கள் அளவில் உண்மைதானே? 

நன்மையாக இருந்தால் அனுபவிப்பீர்கள், தீமையாக இருந்தாலும் அதை அனுபவிக்கத்தான் வேண்டும். இதில் நீங்கள், தீமையை அனுபவிக்காமல் தப்பித்துவிடலாம். ஆனால் செயலை செய்தது நீங்கள் தானே? அப்படியானால், தப்பித்துவிடுவது உங்கள் அளவில் என்றால், இயற்கை விதிப்படி அப்படி இல்லை. அந்த விளைவை நீங்கள் அனுபவித்துத்தான் ஆகவேண்டும் என்று உங்களை தண்டிக்கிறது. இது இயற்கையின் வினை விளைவு நீதி, Law of the Nature என்று வேதாத்திரி மகரிஷி அவர்கள் சொல்லுகிறார்.

நான் சொன்னால் கூட நம்ப மாட்டீர்கள், ஆனால் வேதாத்திரி மகரிஷி அவர்களே விளக்கிச் சொன்னால், நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? இதோ இந்த காணொளி பதிவில் உண்மை அறிக.

உங்களின் உண்மையும், உங்கள் கர்மாவின் ரகசியமும் தெரியுமா?

வாழ்க வளமுடன்

-

Is exercise necessary for humans? Do dogs, cats, tigers, lions, elephants all exercise? Doesn't that live well and long?


மனிதனுக்கு உடற்பயிற்சி அவசியமா? தேவைதானா? நாய், பூனை, புலி, சிங்கம், யானை எல்லாம் உடற்பயிற்சியா செய்கிறது? அதெல்லாம் நன்றாக, நீண்டநாள் வாழ்வதில்லையா? விளக்கம் தருக.


அதானே? மிருகங்களும், பறவைகளும் உடற்பயிற்சியா செய்கிறது? மனிதனும் அவ்வாறே இருந்து விடலாமே? உங்கள் கேள்வி மிகச்சரிதான். உங்கள் சிந்தனையையும் பாராட்டலாம். ஆனால், நீங்கள் கற்கால மனிதனா? நவீன கால மனிதனா? உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கிறது? குகையில் வாழ்கிறீர்களா? குளிர்சாதன வசதி கொண்ட வீட்டில் வாழ்கிறீர்களா? கையில் தீபந்தம் இருக்கிறதா? கைபேசி இருக்கிறதா? என்ற கேள்விகளுக்கு எல்லாம் விடையை சொல்லி விடுங்கள்.

பறவைகள், விலங்குகள் இன்னமும் இயற்கை ஒட்டித்தான் வாழ்கின்றன. அதன் வரம்பை மீறிட அதற்கு தெரியாது. இனிமேலும் கூட, அவைகள் அப்படித்தான் வாழும். துரதிஷ்டவசமாக அவைகளுக்கு ‘ஐந்தறிவுதான்’ இருக்கிறது.

ஆனால், மனிதனுக்கு ஆறறிவு. அதனால் அவன், வரம்புகளை அமைத்துக் கொள்கிறான். என்றாலும் இயற்கையை மீறிடவும் செய்கிறான். அதனால், அவனுக்குரிய, இயற்கையின் அமைப்பு, வழிமுறை இவற்றிலிருந்து விலகி விடுகிறான். அவனுடைய, உடல், மனம், உயிர் ஆகியன பிரச்சனைக்குள்ளாகிறது. இதை நீங்கள், உங்களுடைய அனுபவத்தில் அறிந்திருக்கிறீர்களா? இல்லையா? என்பது தெரியவில்லை. அதனால்தான் உங்களுக்கு இப்படியான கேள்வி பிறந்திருக்கிறது. அதை என்னிடமும் கேட்கிறீர்கள்.

எனினும் உங்களை உடற்பயிற்சி செய்க, என்று யாரும் சொல்லிவிட மாட்டார்கள். வற்புறுத்தவும் மாட்டார்கள். கட்டளை இடவும் மாட்டார்கள். இந்த அரசாங்கமும் கூட திட்டமிடாது. அதனால் கவலை வேண்டாம். ஏதோ திடீரென உங்கள் குடும்ப மருத்துவர், உங்களைப்பார்த்து, பரிசோதனை செய்துவிட்டு, ‘ஏதேனும் உடற்பயிற்சி செய்க, நடைப்பயிற்சி கூட சரிதான்’ என்று சொல்லுவார். அதையெல்லாம் நீங்கள் கண்டுகொள்ள வேண்டாம். உடற்பயிற்சி செய்யாமல் இருந்தால் என்னய்யா ஆகிவிடப்போகிறது? என்பதுதானே உங்கள் நினைப்பு. அப்படியே இருந்துவிடுங்கள்.

இப்போது இல்லை என்றாலும் ஏதேனும் ஒரு காலத்தில், அடடா, ஏதோ தப்பு செய்துவிட்டோமோ? என்று நினைப்பு வரும். அந்த நேரத்தில்கூட அதை கடந்தும் விடலாம். ஆனால், நல்லதை சொல்லாமல் என்னால் இருக்க முடியாதே? அதனால் இந்த காணொளியில் சொல்லப்படும் விளக்கத்தை கேட்டுவிடுங்கள். பிறகு உங்கள் முடிவு.

மனிதனுக்கு உடற்பயிற்சி என்பது தேவைதானா? உண்மையும் ரகசியமும் என்ன? 

வாழ்க வளமுடன்

Isn't it wrong to grow a body? Is Siddhar Thirumoolar right? What is the truth?


ஐயா, உண்டி வளர்த்தேன், உயிர் வளர்த்தேன் என்று திருமூலர் சித்தர் சொல்லுகிறாரே. அப்படியாக உடலை வளர்ப்பது தவறுதானே? சித்தர் திருமூலர் சொல்லுவது சரியா? உண்மை என்ன?

சித்தர் பெருமகான், திருமூலரின் திருமந்திரம் நூலில், அந்த பாடலின் ஒரு வரியை எடுத்துக்கொண்டு, உங்களுக்குத் தெரிந்த அளவில், இந்த கேள்வியை கேட்கிறீர்கள். உண்மையில் உங்கள் முடிவு தவறு. அந்த பாடல் முழுமையாக என்ன என்பதை, இதோ இங்கே பார்க்கலாமா?

‘உடம்பார் அழியில் உயிரார் அழிவர்

திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்

உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே

உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே!’

என்ற இந்த கவியில், உண்டி வளர்த்தேன், உயிர் வளர்த்தேன் என்று தான் சொல்லுகிறார். ஆனால், எதற்காக அப்படி சொல்லுகிறார் என்பதையும் விளக்குகிறார் அல்லவா? மிக எளிய தமிழில் இருப்பதால், தனியாக விளக்க வேண்டியதில்லை என்று கருதுகிறேன். எனினும் சுருக்கமாக சொல்லுகிறேன். நாம் வாழும் வரை உடலும், உயிரும் இணைந்திருக்க வேண்டும். எந்த ஒன்று பாதிக்கப்பட்டாலும், பிரிந்தாலும் எல்லாம் முடிந்தது. இதற்கிடையில், நான் யார்? என்று தன்னை அறியவேண்டும். பிறவிக்கடனான கர்ம வினைப்பதிவுகளை நீக்க வேண்டும் அல்லவா?

அதற்காக வாழ்வையும் வளமாக்கிட வேண்டுமே! என்பதையே இந்த திருமந்திர கவிதையில் விளக்குகிறார். பொதுவாக, சித்தர்கள் இந்த உடலை, ஒரு பொருட்டாக கண்டுகொண்டதில்லை. அப்படித்தான் அவர்கள் கருதி, பல கவிகள் தந்திருக்கிறார்கள். திருவாசகம் தந்த மாணிக்கவாசகரும், ‘இந்த உடல் எனக்கு ஒரு தடையாக இருக்கிறது’ என்று சொல்லுகிறார். இறை உண்மையை, மெய்ப்பொருளை உணர்ந்தவர்களுக்கு, அப்படித்தான் தோன்றும். ஆனால், மகான் திருமூலர், நமக்காகவே இந்த கவிவழியாக உண்மை சொல்லுகிறார்.

சராசரி வாழ்வில் இருக்கும் மக்களுக்கு உண்மை விளக்கம் தரும் வகையில்தான் இந்த கவிதை உதவுகிறது. உடலை கெடுத்துக்கொண்டு, ஆன்மீகத்திற்கும், யோகத்திற்கும் பயணிக்க வேண்டியதில்லை. உடலும் வேண்டும், உடலும் வேண்டும், உண்மைப்பொருள் தேடுதலும் வேண்டும் என்று நமக்கெல்லாம் அறிவுரைதான் சொல்லுகிறார். மேலும் இந்த உண்மை விளக்கத்தை, இந்த காணொளி வழியாகவும் அறியலாம்.

வாழ்க வளமுடன்.

-

why does man need food? How does the need for food help? Can you survive without food?


வாழ்க வளமுடன் ஐயா, மனிதனுக்கு உணவு ஏன் தேவை? உணவின் அவசியம் எப்படி உதவுகிறது? உணவில்லாமல் வாழ முடியுமா?

உலகில் வாழும் மனிதனுக்கு மட்டுமல்ல, உயிருள்ள, அசைவுள்ள, எல்லா ஜீவன்களுக்குமே உணவு அவசியம். இடம் விட்டு இடம்நகராத, செடி, மரங்களுக்குக் கூட உணவின் தேவையும், அவசியமும் இருக்கிறது என்பதை நாம் அறிவோம்தானே? என்னவென்றால், அது தானாகவே, காற்றின் வழியாகவும், வெப்பத்தின் வழியாகவும், மண்ணின் வழியாகவும், நீரின் வழியாகவும் உணவை தயாரித்து கொள்கிறது. விஞ்ஞானத்தின் வழியாகவும் நீரூபணம் செய்யப்பட்டிருக்கிறது. இன்னும் விளக்கமாக, வேதாத்திரி மகரிஷி அவர்களின் கருத்தை அப்படியே எடுத்துக்கொண்டு பார்க்காலாம்.

மனிதன் இப்பூவுலகின்மீது வாழ்ந்து கொண்டிருக்கிறான். இப்பூவுலகம் 25000 மைல் சுற்றளவு உடையது. தன்னைத் தானே மணிக்கு 1042 மைல் வேகத்தில் சுற்றிக் கொண்டுள்ளது. எந்த ஒரு பொருளும் வேகமாகச் சுற்றும் பொழுது இறைவெளியின் சூழ்ந்தழுத்தம் (Self Comprehensive Surrounding Pressure Force) காரணமாக ஒரு மைய ஈர்ப்பு விசை அமைந்து விடுகிறது. 

உலகம் சுழலுகின்ற வேகத்தில் அதன் விளிம்பில் மையத்தை விட்டு விலக்கும் சக்தி (Gravitational Repulsive Force) அல்லது தள்ளும் சக்தி உண்டாகிறது.

உடலானது கோடானுகோடி செல்களால் கட்டப்பட்டுள்ளது. பலகோடி பிறவிகளில் வந்த பரிணாம வேகத்தில் உடலில் உள்ள விண் என்ற லேசான நுண்ணியக்கத் துகள்கள் மேல் நோக்கு வேகத்தைப் பெற்றுள்ளன, பூமியின் மையத்தை விட்டு விலகும் ஆற்றலால் பூமியின் மேல் வாழுகின்ற மனித உடலில் உள்ள நுண்ணியக்கத் துகள்கள் உடலை விட்டுத் தொடர்ந்து (Thrown up) விசிறியடிக்கப்படுகின்றன. அதனால் உடலில் நுண்ணியக்க ஆற்றலில் தொடர்ந்து இழப்பு ஏற்படுகிறது.

அதே போல பூமியின் மைய ஈர்ப்பு ஆற்றலால் வேகம் குறைந்த முதிர்வுற்ற (Worn out Cells) துகள்கள் பூமியை நோக்கி உதிர்ந்து விடுகின்றன. இவ்வாறு ஒவ்வொரு நிமிடத்திற்கும் மனித உடலில் உள்ள தசை, நரம்பு, எலும்பு, மூளைகளிலிருந்தும் கோடிக்கணக்கான செல்களை உடல் இழந்து கொண்டிருக்கிறது.

அதே நேரத்தில் ஒவ்வொரு நிமிடமும் கோடிக்கணக்கான புதிய சக்தி மிக்க செல்கள் உணவிலிருந்தும், காற்றிலிருந்தும், நீரிலிருந்தும், கோள்களிலிருந்தும் உடலைப் புதுப்பித்துக் கொண்டிருக்கின்றன. இதனால் உடலின் இழப்பானது சரிக்கட்டப்படுகிறது.

இதை ஒரு உதாரணத்தினால் அறிந்து கொள்ளலாம். நாம் உடலைச் சரியாக எடை போட்டுக் கொள்வோம். ஒரு முழுநாள் நீரைத்தவிர எந்த உணவும் எடுத்துக் கொள்ளாமல் இருப்போம். அடுத்தநாள் காலை உடலை எடை போட்டுப் பார்த்தால் குறைந்த பட்சம் 50 கிராமிலிருந்து அதிக பட்சம் 200 கிராம் வரை உடலின் எடை குறைந்திருக்கும். இதிலிருந்து உடல் தான் இழந்த அணுக்களை உணவால் புதுப்பித்துக் கொள்வதை அறியலாம்.

இவ்வாறு உடலின் ஆற்றல் இழப்பிற்கு சேர்க்கைக்கும் இடையில் நாள் தோறும் மனிதன் சாவிலிருந்து தப்பிப் பிழைத்துக் கொண்டேயிருக்கிறான். இதனால் தான் வாழ்க்கைக்கு “பிழைப்பு” என்றே பெயர் வந்தது. என்பதாக விளக்கம் தருகிறார்.

வாழ்க வளமுடன்

-

Can we receive within ourselves the cosmic energy energy? What is the way out? Does meditation and penance help with that? Give an explanation.


பிரபஞ்ச ஆற்றல் சக்தி என்பதை நாம் நமக்குள்ளாக பெற்றுக்கொள்ள முடியுமா? அதற்கு வழி என்ன? தியானம் தவம் அதற்கு உதவுகிறதா? விளக்கம் தருக.


பிரபஞ்சம் ஆற்றல் சக்தி, என்றுமே எப்போதுமே குறைவுபடமால் இருக்கக்கூடியது ஆகும். நாம் காணும், காணமுடியாத தொலைவில் இருக்கும் கோள்கள், சூரியன்கள், நட்சத்திரங்கள், நட்சத்திர மண்டலங்கள் ஆகிய அனைத்தும், தனக்குள்ளிருந்து, ஆற்றல் சக்தியை வழங்கிக் கொண்டே இருக்கின்றன. எப்படி நமக்கு, காலையில் சூரியனின் ஒளியும், இரவில் சந்திரனின் ஒளியும் நமக்கு துணையாகி, உதவுகிறதோ, அதுபோலவே, இந்த பிரபஞ்ச ஆற்றல் சக்தியும் துணையாகிறது, உதவுகிறது எனலாம்.

இந்த உண்மையை, உங்கள் பிறந்த நேர ஜாதக குறிப்பின் வழியாகவும் அறிந்துகொள்ள முடியும். ஜாதகம் என்பது மிகச்சிறந்த எடுத்துக்காட்டு எனலாம். ஆனால், ஜாதகம் என்று சொன்னதுமே, எனக்கு எதுவுமே நல்லது நடக்கவே இல்லையே? என்றுதான் சொல்லுவார்கள். அதற்கு வேறு சில காரணங்கள் இருக்கின்றன. அதை தேர்ந்த ஜோதிடர், உங்கள் ஜாதகத்தை ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்து சொல்லுவார். நாம் இங்கே, இந்த பிரபஞ்ச ஆற்றல் சக்தியை மட்டும் கவனிப்போம்.


நாம் வாழ்கின்ற இந்த பூமியும் கூட, இந்த பிரபஞ்சத்தின் ஒரு கூறு என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. பூமிக்கு அருகிலும், தூரமாகவும், வெகு தொலைவிலும் பல்லாயிரம் நட்சத்திரங்கள் இருக்கின்றன என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். இவற்றின் ஆற்றலும் சக்தியும் பூமியையும் வந்தடைகின்றன. கூடவே, நம் பூமியின் அண்டை வீட்டார்களான, சந்திரன், புதன், சுக்கிரன், செவ்வாய், குரு, சனி ஆகிய கோள்களின் ஆற்றல் சக்தியும் இணைந்துதான் கிடைக்கின்றன. இதனினும் மேலாக, ராகு கேது என்ற நிழலான, ஆற்றல் சக்தியும் கிடைக்கின்றன. ராகு கேது என்பதை, நாம் தனித்து பார்க்கவும் முடியாது. ஆனால், அவற்றின் ஆற்றல் சக்தி அபரிதமானது என்பது, பொதுவாகவே உங்களுக்கு தெரியும் அல்லவா?

இந்த பிரபஞ்ச ஆற்றல், ஓவ்வொரு, கோள்கள், சூரியன்கள், நட்சத்திரங்கள் ஆகியவற்றில் இருந்து வந்தாலும்கூட, தனித்தன்மைகளை பெற்றிருந்தாலும் கூட, எல்லாமே அதன் அதன் அளவில், ஒன்றாகவே கலந்துதான் வருகின்றன. எங்கெங்கே, எந்தெந்த பொருளில், உயிரில் மோதுகிறதோ, அந்த அளவில் தூண்டுதலை உண்டாக்குகின்றன. அவை நம்மை பொறுத்தவரையில், நன்மை தருவதாக இருக்கலாம். தீமை தருவதாகவும் இருக்கலாம். அது நம்முடைய குணாதசியம் என்ற அடைப்படை நிலையை பொறுத்தது ஆகும். அப்படியானால், இந்த அடிப்படை நிலையை மாற்றிட முடியுமா? என்ற கேள்வி எழுந்தால், அதற்கு தியானம் என்ற தவம் உதவுகிறது.

நம்முடைய உடலுக்கும், மனதிற்கும், உயிருக்கும் இத்தகைய, பிரபஞ்சம் ஆற்றல் சக்தி அன்றாடம், நொடிக்கு நொடி கிடைக்கிறது. அதை நாம் தனியாக உணர்ந்து கொள்வதற்கும் வழி இல்லாத நிலையில்தான், நம்முடைய சராசரி வாழ்க்கை நகர்கிறது. தியானத்தின் வழியாக, தவத்தின் வழியாக, மன ஓர்மை பெற்றவர்கள் மட்டுமே, இதை அனுபவ பூர்வமாக உணரமுடியும். அதுவரை அப்படியெல்லாம் வாய்ப்பே இல்லை என்று மறுத்துத்தான் பேசுவோம்.

மேலும் நம்முடிய வாழ்வின் அடிப்படைக்குக்கூட, இந்த பிரபஞ்சம் ஆற்றல் சக்தி உறுதுணையாக இருக்கிறது என்பதை, சித்தர்களும், அவர்வழி வந்தவர்களும், வேதாத்திரி மகரிஷி அவர்களும் உண்மை விளக்குகிறார்கள். பிரபஞ்சம் ஆற்றல் சக்தி இருக்கிறது, அது நமக்கு கிடைக்கிறது. நமக்குள்ளாக ஊடுறுவி நிறைகிறது. நம்மைக்கடந்தும் செல்கிறது என்பது உண்மையே!

வாழ்க வளமுடன்.

-


Ten top most wanted Mudra for Health and Peaceful Life with detailed explanations


வாழ்க வளமுடன் ஐயா, மனித வாழ்வில், உடலுக்கான நன்மையும், மன அமைதியும் உண்டாக்கும் பத்து முத்திரைகள் குறித்த விளக்கம் தாருங்கள்.

வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சியில், தனிப்பட்ட முத்திரைகள் இல்லை. ஆனால், தேவையான இடங்களில், சில முத்திரைகள் அமைந்திருக்கின்றன, அந்த முத்திரைகளின் தொகுப்பை தனியாக, வேதாத்திரியா சானலில் பதிவாக தந்திருக்கிறோம். அதை இங்கே காணலாம்.

இணைப்பு: வேதாத்திரிய உடற்பயிற்சியில் முத்திரைகள்

வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சியில், வேதாத்திரி மகரிஷியால் சேர்த்துக்கொள்ளப்படாத, முத்திரைகள் அவற்றின் தொகுப்பு ஏன் பின்னாளில், சேர்க்கப்பட்டன? காரணம், அவை பள்ளி, கல்லூரி, ஆராய்ச்சி மாணவர்களுக்கு பாடத்திட்டமாக மாற்றம் பெறும்பொழுது, யோகா என்ற தலைப்பின் கீழ், இவை தனிதொகுப்பாக சேர்த்துக்கொள்ளப்பட்டன. வேதாத்திரி மகரிஷியும் அதற்கான அனுமதி கொடுத்தார். இந்த முத்திரைகள், வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சிக்கு முன்னதாக, செய்து கொள்ளலாம். இனி முத்திரைகள் குறித்து பார்ப்போம்.

“முத்திரை (முத்ரா)” என்பது ஒரு சில மதங்களின் குறியீடாகவும், செய்கையாகவும் கூறப்படுகிறது. பெரும்பாலும் கை, விரல்களினால் செய்யப்பட்டாலும் முழு உடலை கொண்டும் முத்திரை காட்டப்படும்.

புத்தர் பல முத்திரைகளை கையாண்டிருப்பதை அவருடைய சிலைகளில் காணலாம்.

பரத நாட்டியத்தில் 200-க்கும் மேற்பட்ட முத்திரைகளும், மோகினி ஆட்டத்தில் 250-க்கும் மேற்பட்ட முத்திரைகளும் கையாளப்படுகிறது. தாந்தீரிகத்தில் 108 முத்திரைகள் உள்ளன. அன்றாட நம் உடல் ஆரோக்கியத்திற்கு கீழ்க்கண்ட 10 முத்திரைகள் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன.

நமது கைகளின் ஐந்து விரல்கள் ஐம்பூதங்களை குறிக்கின்றன.

1. கட்டைவிரல் – தீ

2. ஆள்காட்டி விரல் – காற்று

3. நடுவிரல் – ஆகாயம்

4. மோதிரவிரல் – நிலம்

5. சுண்டுவிரல் – நீர்

Click for Big View


இந்த ஐந்து விரல்களை பயன்படுத்தி முத்திரை ஆசனங்கள் செய்தால் உடல் நலம் கூடும்.

1. அறிவு முத்திரை:

ஆள்காட்டி விரல் நுனி கொண்டு கட்டை விரல் நுனியை தொடவும். மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும்.

கட்டை விரல் நுனிகள் பிட்யூட்டரி மற்றும் எண்டாக்ரின் சுரப்பிகளுக்கு ஆதாரம்.

ஆள்காட்டி விரல் நுனியால் அழுத்தம் கொடுக்கும்போது மேற்கண்ட சுரப்பிகளின் இயக்கம் சுறுசுறுப்படையும்.

இந்த முத்திரையை நின்ற நிலை, உட்கார்ந்த நிலை, படுத்த நிலையிலும் செய்யலாம்.

அறிவை கூர்மையாக்கி நினைவாற்றலை அதிகரிக்கும். தூக்கமின்மையை போக்கும். கோபம் குறையும்.

2. வாயு முத்திரை:

ஆள்காட்டி விரலை கட்டை விரல் அடியில் வைத்து கட்டை விரலால் அழுத்தவும்.

மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். 45 நிமிடங்கள் தொடர்ச்சியாக செய்தால் வாயுவால் ஏற்படும் தொந்தரவை 24 மணி நேரத்தில் நிவர்த்தி செய்யும்.

தொடர்ந்து 2 மாதங்கள் செய்து வந்தால் வாயுப்பிடிப்பு, கீழ் வாதம், பாரிச வாயு போன்ற வியாதிகளை கட்டுப்படுத்தும்.

வயிறு சம்பந்தப்பட்ட வாயு உபாதைகளும் நீங்கும்.

3. சூன்ய முத்திரை:

நடு விரலை சுக்கிர மேட்டின் மேல் வைத்து கட்டை விரலால் அழுத்தவும்.

மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். உடல் சோர்வை இது நிவர்த்தி செய்யும்.

தினமும் 40 முதல் 60 நிமிடங்கள் செய்ய வேண்டும். காது தொடர்புடைய நோய்களை இந்த முத்திரை கட்டுப்படுத்தும்.

4. பூமி முத்திரை:

மோதிர விரல் நுனி கொண்டு கட்டை விரல் நுனியை தொடவும். மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும்.

சோர்வை இது குறைக்கும். இந்த முத்திரையை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம்.

சோர்வான எடை குறைந்தவர்களுக்கு உடல் எடை கூடும். மேனி அழகை கூட்டி பளபளப்பாக்கும். உடலை சுறுசுறுப்பாக்கி ஆரோக்கியத்தை நிலைப்படுத்தும்.

நடு விரலை சுக்கிர மேட்டின் மேல் வைத்து கட்டை விரலால் அழுத்தவும் – மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும்.

உடல் சோர்வின்மையை இது நிவர்த்தி செய்யும். தினமும் இப்படி 40 முதல் 60 நிமிடங்கள் செய்து வந்தால் நோய் குணமாகும்.

காது வலியை 4 அல்லது 5 நிமிடத்தில் குணமாக்கும். காது கேளாதோர் மற்றும் மூளை பாதிக்கப்பட்டோர்க்கு இந்த முத்திரை உதவும்.

பிறவி நோயாக இருந்தால் பயன் தராது.

5. வாழ்வு முத்திரை:

சின்ன விரல் மற்றும் மோதிர விரலை மடக்கி கட்டை விரலால் அழுத்தவும்.

மற்ற இரு விரல்களும் நேராக இருக்க வேண்டும். பெயருக்கு ஏற்றார்போல் வாழ்வின் சிறப்பிற்கு வகை செய்யும்.

இந்த முத்திரையை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். வைட்டமின் குறைபாடு நீங்கும். சோர்வு நீங்கும். கண்பார்வை சிறப்பாகும்.

6. ஜீரண முத்திரை:

நடு விரல் மற்றும் மோதிர விரல் நுனியின் மூலம் கட்டை விரல் நுனியை தொட வேண்டும்.

மற்ற இரு விரல்களும் நேராக இருக்க வேண்டும். தினமும் குறைந்தது 45 நிமிடங்கள் பயிற்சி தரவும். சர்க்கரை வியாதி, மலச்சிக்கல் போன்றவற்றை சீராக்கும்.

7. இதய முத்திரை:

நடு விரல் மற்றும் மோதிர விரல் நுனிகள் கட்டை விரல் நுனியை தொட வேண்டும்.

ஆள் காட்டி விரல் நுனி கட்டைவிரலின் அடியை தொட வேண்டும். சின்ன விரல் மட்டும் நேராக இருக்க வேண்டும்.

இது இதய நலத்துக்கு சிறந்தது. இதய நோய் உள்ளவர்கள் தினமும் இருமுறை தலா 15 நிமிடம் செய்தால் பலன் தெரியும்.

8. சூரிய முத்திரை:

மோதிர விரலை மடக்கி கட்டை விரலால் அழுத்தவும்.

தைராய்டு சுரப்பியை தூண்டும் சக்தி இந்த முத்திரைக்கு உண்டு.

தினமும் இரு முறை 5 முதல் 15 நிமிடங்கள் பயிற்சி தரலாம். கொலஸ்ட்ராலை குறைக்க உதவும்.

நிம்மதியின்மை, ஜீரணமின்மை போன்ற குறைபாட்டை களைய வகை செய்யும்.

9. நீர் முத்திரை:

சின்ன விரல் நுனி கொண்டு கட்டை விரல் நுனியை தொடவும்.

மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். இது உடலில் உள்ள நீரை கட்டுப்பாட்டில் வைத்து நீர் குறைவால் ஏற்படும் குறைகளை நிவர்த்தி செய்யும்.

இதனை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். ஜீரண கோளாறு மற்றும் சதை பிடிப்புகள் வராது.

10. லிங்க சக்தி முத்திரை:

இரு கைகளையும் சேர்த்து விரல்கள் ஒன்றுக்கொன்று பின்னி இருப்பது போல் சேர்த்து கொள்ளவும்.

இப்படி செய்யும்போது இடது கை கட்டை விரல் நேராகவும் வலது கை கட்டை விரல் மற்றும் ஆள் காட்டி விரல் நடுவில் இருக்குமாறும் வைத்துக் கொள்ளவும்.

இது உடலில் உஷ்ணத்தை தரும். எனவே இதை பயிற்சி செய்யும்போது நெய், அதிக நீர் மற்றும் பழ ரசம் பருகவும்.

இதை அதிக நேரம் செய்யக் கூடாது. ஏனெனில் இந்த முத்திரை குளிர் காலத்தில் செய்தால் கூட வியர்வை வரும்.

கபம் மற்றும் சளி போன்ற சுவாச சம்பந்தப்பட்ட வியாதிகளை குணப்படுத்த வல்லது.

வாழ்க வளமுடன்!

-

There is no compulsion to change through yoga. Why?


யோகத்தின் வழியான, மாற்றத்திற்கு வரவேண்டிய கட்டாயம் ஏதுமில்லை. ஏன்?


இந்த உலகில் பிறந்து வாழும் நாம், யாருடைய பிள்ளை, யாருடைய வாரீசு, யாருடைய வம்சாவழி என்பதெல்லாம் தெரியும். அதை நாம் வளரும் பொழுதே தெரிந்தும் கொண்டு, அதை இறுக பற்றிக்கொண்டும் விடுகிறோம். நாம் வீடு, ஊர், நாடு என்பதையும்கூட விரிவாக, நுண்ணிய தகவல்களோடு அறிந்து கொள்கிறோம். சமூகம், உலகம் என்ற செயல்பாடுகளையும், அதன் பாரம்பரியம், வரலாறு, முன்னேற்றம் என்பதையும் தெளிவாகவே நாம் புரிந்தும் கொள்கிறோம். கல்வியும் இதற்கு உறுதுணையாக இருக்கிறது.

ஆனால், மனிதனாக இருக்கிற நாம், பரிணாமத்தின் எழுச்சியில் வந்த, ஆறறிவான ஜீவன் என்பதை ஒரு விளக்கமாக பெற்றுக்கொண்டாலும், ‘நான் யார்?’ என்ற கேள்வியை கேட்டுக்கொண்டதில்லை. நீ யார்? என்று மற்றவர்களை தயங்காமல் கேட்கும் நாம், நமக்குள்ளாக கேட்டுக்கொள்வதே இல்லை. அது குறித்த அக்கறையும் நமக்கில்லை. நம்மைச்சார்ந்த குடும்ப உறவுகள் யாரும்கூட சொல்லித்தரவும் இல்லை. ஆனால், ஏதோ ஒருவகையில், நண்பர்களோ, யாரோகூட, இப்படியாக ‘நான் யார்?’ என்ற கேள்வி இருக்கிறது. அதை கேட்டுப் பார்க்கவேண்டும். இதற்கு பக்தி கடந்த யோகம் உதவும் என்று சொல்லி இருப்பார்கள். உங்கள் சூழ்நிலைகளும் இப்படியான கேள்வியை உருவாக்கிடவும் வாய்ப்புண்டு.

ஒரு சிலருக்கு, இப்படியாக ‘நான் யார்?’ என்று தனக்குத்தானே கேட்டுக்கொள்வது அவசியம்தானா? என்றும் நினைப்பார்கள். ஆறாம் அறிவு ஜீவன் என்று தன்னை உயர்வாக சொல்லிக்கொள்கின்ற மனிதன், அந்த ஆறாம் அறிவை, அதன் பயனை, அற்புதத்தை அறிந்து கொள்ள வாய்ப்பு இருக்கும் பொழுது, அதை தவறவிடலாமா? மறுத்து ஒதுக்கித் தள்ளலாமா? எனினும் இவர்களை எல்லாம், வற்புறுத்தியோ, கட்டாயப்படுத்தியோ, யோகத்தின் வழியாக, நீங்கள் உண்மை உணர்ந்து கொள்ளுங்கள் என்று சொல்லமுடியாது. இதெல்லாம் தானாக வருவதும், தனக்குள்ளாக மலரும், சிந்தனையும் ஆகும். சட்டமோ, விதியோ ஏற்படுத்தி, நாம் ஒன்றும் செய்வதற்கில்லை. அப்படியான அவசியமும், அவசரமும் அவர்களுக்கு இல்லை.

இப்போது, உள் ஆர்வத்தோடும், மற்றவர்கள் சொல்லி, ஏதோ தவிர்க்கமுடியாத கட்டாயத்திலும், விருப்பத்திலும் யோகத்தில் இணைந்து கொண்டோம் என்று வைத்துக்கொண்டால், அடுத்தடுத்த நடவடிக்கை எப்படி இருக்கும்? என்ற கேள்வி எழும் அல்லவா? இந்த கேள்விக்கு, வேதாத்திரி மகரிஷி அவர்களே பதில் தருகிறார். எப்படி என்று பார்க்கலாமா?

வேதாத்திரி மகரிஷி அவர்கள், நம்மிடம் இப்படியாக விளக்குகிறார். மனவளக்கலை மன்றத்திற்கு வந்ததால் என்னென்ன நன்மைகள் வந்தன? சினிமாவுக்கு, கோயிலுக்குப் போனதால் என்னென்ன நன்மைகள் வந்தன? இரண்டு மாதங்கள் கழித்து மனதுக்கு, தெளிவோ, அமைதியோ, வெற்றியோ, மகிழ்வோ இருக்கிறது என்றால் அதைப் பின் பற்றி வாருங்கள்.

இல்லை, இதைவிட எனக்குக் கோயிலுக்குப் போனதனால், சினிமாவுக்குப் போனதனால் நன்றாக இருக்கிறது என்று சொன்னால், இன்னும் சில நாட்களுக்கு அதையே தொடருங்கள்.

ஆனால், மனவளக்கலை மன்றம் மனிதனை மனிதன் ஆக்க வல்லது. மனதைத் திடப்படுத்த வல்லது. மனது திடம் இல்லாததனால்தான் வாழ்க்கைச் சிக்கல்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை; தாங்கிக் கொள்ள முடியவில்லை; அதைப் போக்கிக் கொள்ள முடியவில்லை. அப்போதுதான் சினம் உண்டாகிறது. துன்பம் உண்டாகிறது.

மனதிலே நல்ல வலு இருக்குமேயானால் இதெல்லாம் தானாகவே போக்கி விட முடியும். உங்கள் கையில் ஏதேனும் பொருள் இருக்குமேயானால், அப்போது விருந்தினர் வந்துவிட்டால் அச்சமில்லை. உட்காருங்கள். இதைச் சாப்பிடுங்கள். அதைச் சாப்பிடுங்கள் என்பீர்கள். உங்கள் கையில் பொருள் இல்லையானால் எப்படி இருக்கும்? சோர்வு இருக்கும்.

அதே போல, மனம் வளமாக இருக்குமேயானால் ஏதேனும் புதிய சிக்கல்கள் தோன்றும்போது அதைச் சோர்வு இல்லாது தாங்கிக் கொள்ளலாம். வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்கள் எதையெடுத்தாலும் போக்கிவிட முடியும் என்று நினைக்காதீர்கள். அல்லது பிறருடைய வாழ்க்கைச் சிக்கல்களை நாம் போக்கிவிட முடியும் என்ற அகம்பாவமும் யாருக்கும் வேண்டாம். அவரவர்களே போக்கிக் கொண்டால் தான் முடியும். அதற்கு மற்றவர்கள் உதவி செய்ய முடியும்; ஒத்துழைக்க முடியும்.

ஒரு கிணற்றுக்கு, இன்னொரு கிணற்றிலிருந்து குழாய் மூலம் நீரைச் செலுத்தி நிரப்ப இயலாது; அந்தக் கிணறு நிறையாது. அதனுடைய ஊற்று வந்தால்தான் எப்போதுமே கிணறு நிரம்பும். 

ஒருவருக்கு ஏதோ ஒரு சிரமம் இருக்கிறது. பத்து ரூபாய் கொடுத்தோம். அந்தச் சிரமம் போய்விட்டது என்பது இல்லை. இன்றைக்குப் பத்து ரூபாய் கொடுத்தோம் என்றால் நாளைக்கு இருபது ரூபாய் கொடுக்க வேண்டிய நிலைவரும்.

ஒவ்வொருவருடைய உள்ளமும் ஒரு பெரிய சுரங்கம். அறிவாலும், ஆற்றலாலும் அதை வளர்க்க வேண்டும். அதைத் தான் 'மனவளக்கலை மன்றம்' (Simplified Kundalini Yoga) செய்கிறது.

உடலாலும் மனதாலும் மனிதனை மேல் நோக்கி வரச் செய்ய அவர்கள் செய்ய வேண்டிய செயல்களையெல்லாம் வழிப்படுத்தி வாழ வைக்கத் தேவையானப் பயிற்சிகளை அளிக்கிறது. அதை அனுபவத்தினால்தான் தெரிந்து கொள்ளவும் முடியும்.  எனவே, நமக்கு கிடைத்த அரிய வாய்ப்பை, பிறவியின் நோக்கமும், கடமையும் தீர்க்க பயன்படுத்திக் கொள்ளலாம்.

வாழ்க வளமுடன்!

-

In this living world, how can we be aware of our actions and duties?


வாழ்கின்ற இந்த உலகில், நம்முடைய செயல்களிலும், கடமையிலும், விழிப்புணர்வாக இருப்பது எப்படி?




கடமையில் விழிப்புணர்வு என்பது, ஓவ்வொரு மனிதனுக்கும் தேவையானது. தன்னுடைய வாழ்வில், துன்பமும், சிக்கலும் தானாக, உருவாக்கிக் கொள்ளாத நிலை, இங்கிருந்துதான் கிடைக்கும். கவனமும், பாதுகாப்பும் தரும்.
இன்ப வாழ்வுக்கு, திறந்த மனப்பான்மையோடு கருத்தை மனதில் வாங்கிக் கொள்வது (Receptivity) அதற்கேற்ப தன்னை மாற்றிக் கொள்வது (Adaptability) குற்றத்தைக் கண்டபோது, அதை மன்னித்து மறந்து விடுவது (Magnanimity) ஆகிய மூன்று தன்மைகள் நம் எல்லோரிடமும் வளர்க்கப்பட வேண்டும். இதோடு தீமையை நீக்கி, நன்மையே செய்தல் (Creativity) என்ற தன்மையும் வேண்டும்.
பிறர்க்கு உதவி புரிவதில் கூட நாம் இக்காலத்தில் விழிப்போடு இருக்க வேண்டியுள்ளது. உதவி தேவைப்படுபவர்கள் தான், அதற்கு தகுதியுடையவர்கள் தான் நம்மை நாடி வருகிறார்கள் என்று நினைப்பதற்கில்லை. 
அப்படித் தகுதியுடையவர்களாய் இருப்பினும், தகுதி பெற்ற எல்லோருக்குமே நாம் உதவி செய்ய முடியுமா என்பதையும் நாம் சிந்தித்துப் பார்த்துக் கொள்ள வேண்டும். 
நாம் ஒரு கனி மரம் வளர்க்கின்றோம். கனிகளை மட்டும் தான் கொடுத்து உதவி செய்யலாமே ஒழிய மரத்தையே வெட்டிக் கொடுத்துவிட்டால் பிறகு கனி எப்படிக் கிடைக்கும்? 
பொருள் பறிக்கவே சிலர் பற்பல வேடங்களில் நம்மை நாடி வரும் இக்காலத்தில், பிறர்க்கு உதவி செய்வதில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியுள்ளது, 
பிறர் உதவி என்பது கூரிய ஆயுதம் போன்றது. தவறிமாட்டிக் கொண்டால் அதற்கு நாமே பலியாகி விடுவோம். விழிப்பு நிலையோடு தான், நம் அளவுக்குத் தக்கபடி தான் நாம் பிறர்க்கு உதவ வேண்டும். 
நீதிபதி முன் நிறுத்தப்படும் குற்றவாளியை, எப்படி அந்நீதிபதி அவன் குற்றமற்றவனாகவும் இருக்கக்கூடும், என்று விசாரணையை துவக்குகிறாரோ, அதேபோல் நம்மிடம் உதவி நாடுபவரை "இவன் ஏன் ஏமாற்றுக்காரனாய் இருக்கக் கூடாது" என்று ஒரு கேள்வி எழுப்பிக் கொண்டு, பிறகு நல்லவன் தான் என்று சோதித்து அறிந்த பிறகே அளவோடு உதவி அளிக்க வேண்டும்.
உலக கடமையில் ஈடுபட்டுள்ள நமக்கு பல பொறுப்புகள் உண்டு. எவ்வளவு விழிப்புடன் நம் கடமையைச் செய்கிறோமோ அந்த அளவுக்குத் தான் நாம் வாழ்வில் இனிமை காண முடியும். இத்தகைய தெளிவான அனுபவ விளக்கத்தை, பாமர மக்களின் தத்துவஞானி, வேதாத்திரி மகரிஷி அவர்கள் நமக்கு அறியத்தருகிறார்.

வாழ்க வளமுடன்.

Is the human fate on the Horoscope or astrology chart and available solution for that?


ஜாதகத்தின் வழியாக தலையெழுத்து என்பதை நாம் பார்க்கமுடியுமா? அது உண்மைதானா? அதற்கு பரிகாரமும் உள்ளதா?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா! ஜாதகத்தின் வழியாக தலையெழுத்து என்பதை நாம் பார்க்கமுடியுமா? அது உண்மைதானா? அதற்கு பரிகாரமும் உள்ளதா?


பதில்: 

வானியலில் சூரியன், நிலவு இவற்றின் அருகாமையையும், தூரத்தில் தெரியும் கோள்களையும் நட்சத்திரங்களையும் கண்டு மகிழ்ந்த மனிதன், அவற்றின் ஒளியையும், அவற்றின் அலைகளையும் அது தரும் தூண்டுதலையும் அறிந்து தொகுத்து தந்த விளக்கமே ஜோதிடம் ஆகும். பன்னெடுங்காலமாக, பல குறிப்புகள் வழியாக, ஜோதிட உண்மைகள் உலகில் நிலவிவருகிறது. ஜோதிடம் பெருங்கடல் என்று சொல்லுவார்கள். அதுபோலவே முழுமையாக எல்லாமே அறிந்த சோதிடர் என்று யாரையும் குறிப்பிட்டுச் சொல்ல வழியின்றி, அவரவர் அவர்வாழ்வில் கற்றுத்தேர்ந்த நிலையில்தான், ஜோதிட உண்மைகளை சொல்லிவருகிறார் என்பதுதான் உண்மை. பெரும்பாலான ஜோதிடர்கள் கற்றுக்கொண்டேதான் இருக்கிறார்கள் என்பதையும் சொல்லவேண்டும். 

ஒரு ஜோதிடம் என்பது, குழந்தை பிறக்கும் நேரத்தில், பூஉலகைச் சுற்றிலும் அமைந்திருக்கும் கிரகம், கோள்கள், நட்சத்திரங்களின் நிலை ஆகும். இதில் கரு உருவான நாள் முதலாகவே அவற்றின் அலைவீச்சு துவங்கிவிடுகிறது என்பதையும் நாம் அறியமுடியும். ஒவ்வொரு ஜாதகத்திலும் கர்ப்பச்செல் என்ற கணக்கின் வழியாக இதை, ஜோதிடர்கள் குறிப்பார்கள். இந்த குறிப்புகள் வழியாக, எங்கும், எவ்விடத்திலும் அக்குழந்தையின் ‘தலையெழுத்து’ என்று எதுவும் இல்லை. அப்படியான தாக்கங்களை  கிரகம், கோள்கள், நட்சத்திரங்கள் தருவதும் இல்லை. தலையெழுத்து என்பது இல்லையானால், எல்லாமே பொய்தானே? என்ற எதிர்கேள்விக்கும் இங்கே இடமில்லை. மண்ணில் விதைக்கும் எந்த ஒருவிதைக்கும் கூட, எங்கோ இருக்கும் கோள்களும், நட்சத்திரங்களும் தூண்டுதலை தருகிறது என்று நிரூபிக்கிறார்கள் என்பதை நாம் அறிவோம்.

ஒரு குழந்தையின் ஜாதக குறிப்பின் வழியாக, அக்குழந்தையின் இயல்பு, குணாதசியம், வளர்ச்சி என்பதை சொல்லமுடியும். அடிப்படையாக அக்குழந்தையின் ‘அக நிலை’ என்ன என்பதையும் சொல்லமுடியும். குழந்தை பிறந்த அந்த குடும்பத்தின், பரம்பரையின் சூழல் யூகமாக சொல்லவும் முடியும். கர்மா என்றா வினைப்பதிவுகளின் தொடர்ச்சியை கணித்தும் சொல்லமுடியும். என்ன மாற்றங்களை கற்றும், பழகியும், உலகியலில் நன்மையை பெறலாம் என்பதையும் சொல்லமுடியும்.

அந்த வகையில், ஒரு குழந்தையின் தலையெழுத்து, ஜோதிடத்தில் இல்லை. பரிகாரம் என்பதும் இல்லவே இல்லை. மனதிற்கு திருப்தி அளிப்பதாக, அந்த நேரத்திற்கு ஏதெனும் செய்யலாமே தவிர, வேறெதும் நன்மை இல்லை. பரிகாரம் என்பதால் எந்த மாற்றமும் நிகழ்ந்துவிடுவதில்லை. செயலுக்கு தகுந்த விளைவு என்ற இயற்கையின் நீதியில் இருந்து, தப்பிக்க எந்த வழியும் இல்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

        ஜோதிடம் என்பது ஒரு குறிப்பு. ஒரு திட்ட வரையறை. இயற்கையின் பிரித்தறியமுடியாத, ஒரு பாகமாகவே உலகில், தாவரம் முதல் மனிதன் வரை எல்லா ஜீவன்களும் பரிமாற்றம் பெற்றவை என்பதை மறவாதிருங்கள். அந்த நிலையில் மனிதனுக்கு தன்னுடைய ஆறாம் அறிவின் முழுமையில் கிடைத்த ஒர் ஆராய்ச்சி தான் இந்த ஜோதிடம். இதை தவறாக பயன்படுத்துவோர் ஏராளம். அவர்களை அவர்கள் வழியிலேயே விட்டுவிடுவோம்.

வாழ்க வளமுடன்.

-

It is necessary to live for money, to live with money. Is it appropriate to live through yoga?


பணத்திற்காக வாழ்வது, பணத்தோடு வாழ்வது என்பதுதானே அவசியமாக இருக்கிறது. இதில் யோகத்தின் வழியே வாழ்வது பொருந்துமா?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, பணத்திற்காக வாழ்வது, பணத்தோடு வாழ்வது என்பதுதானே அவசியமாக இருக்கிறது. இதில் யோகத்தின் வழியே வாழ்வது பொருந்துமா?

பதில்:

அந்தக்காலம் முதல், இப்போது இருக்கின்ற, நவீன அணு விஞ்ஞான காலம் வரையிலும், மனிதர்களின் வாழ்வில் பலதரப்பட்ட மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. அந்தவகையில், இன்று பொருள்முதல்வாத உலகில் வாழ்கிறோம். ஒவ்வோரு மனிதரும், இன்னொரு மனிதனோடு ஏதேனும் ஓர் வகையில் இணைந்துதான் வாழ்கிறான். ஒருவருக்கொருவர் பரிமாற்றமும் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. தன்னளவில் வாழ்பவருக்கும், குடும்ப உறுப்பினர்களோடு வாழ்பவருக்கும் பணம் முக்கியமாக மாறிவிட்டது. குடும்பத்தில் ஒருவர் என்ற நிலைமாறி, எல்லோருமே பணம் சம்பாதிக்கவேண்டிய சூழலும் இன்று பெருகிவிட்டதை மறுக்கமுடியாது. 

தன்னியல்பாக, தற்சார்பாக வாழ்ந்தாலும்கூட பிறருக்கு உதவுதல், சமூகத்திற்கு உதவுதல், அதன்வழியாக தானும் பயன்பெறுதல் என்றுதான் வாழ்வும் முடியும். பண்டம் மாற்று என்று, பணமில்லாத பரிமாற்றங்கள் நிகழ்வதற்கும் இனி வழியில்லை. பணம் என்ற ஒன்றை தேடுதலின் வழியாகவே, ஒவ்வொரு மனிதனும் தன்னை நிலை நிறுத்திக் கொள்கிறான். அவனின் கல்வியும், படிப்பும், பயிற்சியும், படிப்பறியாதோர்க்கு அனுபவமும், பழக்கமும், உடல்வலிவும் அவரவருக்கு தேவையான பணத்தை பெறுவதற்கு பிரதானமாக இருக்கிறது.

தன் தேவைகளை, விருப்பங்களை நிறைவேற்ற ஓவ்வொருவருக்கும் பணம் தேவை. குழந்தைகளும், உடல் உழைப்பை தர இயலாத வயதானவர்கள் மட்டுமே விதிவிலக்கு. இந்த இருதரப்பினருக்கும், யாரேனும் சிலர் உதவி செய்துதான் காக்கவேண்டும்.

இந்த வகையில், நீங்கள் சொன்னதுப்போலவே, பணத்திற்காக வாழ்வது, பணத்தோடு வாழ்வது என்பதுதானே அவசியமாக இருக்கிறது. நமக்கு மட்டுமல்ல, உலகில் வாழ்கின்ற எல்லா மனிதர்களுக்கும் என்பதும் குறிப்பிடவேண்டியதாகும். இதில் யோகத்தின் வழியே வாழ்வது என்றால், இந்த சிந்தனை எப்படி இருக்கிறது தெரியுமா? இந்த சம்பாத்தியத்தை, பணத்தை, அதன் பயனை விட்டுவிடவேண்டுமோ? என்று கேட்பதுபோல இருக்கிறது!

யோகம் என்பது என்ன? என்பதை முதலில் தெரிந்து கொள்க. யோகம் என்பது, மனிதனின் மூலம் எது? என்று அறிந்து தன்னை நெறிப்படுத்திக்கொள்ளும் ஒரு பயிற்சி முறைதான். இதை எல்லாவற்றையும் விட்டுவிடுதல் எங்கே வந்தது? மேலும் யோகமும், துறவும் என்று முடிச்சிட்டுக்கொள்வது இன்னொரு பிரச்சனை. யோகம் என்பது பொருளாதார வாழ்க்கைக்கு எதிரானது என்ற நம்பிக்கையும், துறவு என்பது எல்லா சுகங்களையும், குடும்பத்தையும், விட்டுவிட்டு கையேந்தும் நிலைக்கு மாறிக்கொள்வது என்ற ரீதியில்தான் மக்கள் புரிந்துவைத்திருக்கிறார்கள். இந்த இரண்டுமே உண்மைக்கு புறம்பான தகவல்கள். மக்களிடம் அப்படி இன்னும் நிலைத்துவிட்டது.

யோகம் என்பது பயிற்சிமுறை என்பதுபோல, துறவு என்பது அளவிலும், முறையும் வாழ்ந்து அனுபவிப்பதற்கான வழி ஆகும்.  இந்த இரண்டு உண்மைகளை நன்றாக புரிந்துகொள்ளுங்கள். உங்களிடம் வேறுயார், தவறாக சொன்னாலும், அவர்களையும் திருத்துங்கள். 

இப்படியாக, பணத்திற்காக வாழ்வது, பணத்தோடு வாழ்வது என்பதுதானே அவசியமாக இருக்கிறது என்கிறபோது, உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கிறது? என்று கேள்வி கேட்டால், அதற்கு உங்களுடைய பதில் என்ன? மன நிறைவாக, மகிழ்ச்சியாக, நிம்மதியாக இருக்கிறதா? பணம் இல்லாதவரும் ஒரு பரபரப்பான வாழ்வில்தான் இருக்கிறார். பலகோடி சொத்துக்கு அதிபதி என்றவரும் பரபரப்பான வாழ்வில்தான் இருக்கிறார். இருவருக்கும் உடல் வலி, நோய், பசி, தூக்கம், உறக்கம் ஆகிய இவற்றில் எப்படி இருக்கிறார்கள்? என்பதும் உங்களுக்குத் தெரியுமே? அன்றாடம் அவர்களுக்கு எழும் பிரச்சனைகளுக்கும் அளவே இல்லை எனலாம். வெளிப்பார்வைக்கு ஏழைக்கும், பணக்காரருக்கும் நிறைவாகவோ, குறைவாகவோ இருப்பதாக தோனலாம். ஆனால் அவர்கள் அளவில், ஏகப்பட்ட பிரச்சனை தாக்கம் இருப்பதை மறுக்கமுடியாது. அதை அவர்கள் மட்டுமே அறிவார், நமக்குத் தெரியாது, சிலர் நம்மிடம் சொல்லவும் மாட்டார்கள்.

அத்தகைய வாழ்வில் நிம்மதி என்ற ஒரே ஒரு தேவையை பூர்த்தி செய்யவல்லது, யோகம் மட்டுமே என்பதை மறுக்கமுடியாது. யோகம் இல்லாமல் வாழ்வதில் ஒரு குறையும் இல்லை. ஆனால், அற்புதமான ஒரு வாய்ப்பை நீங்கள் இழந்துவிடுவீர்கள். யோகம் என்பதை அறிவதற்காக இன்னொரு பிறப்பும் நிகழப்போவதில்லை என்பதை அறிவீர்கள்தானே?

உங்களை, உங்கள் பிறப்பை அர்த்தமாக்கிக் கொள்ள உங்களுக்கு கிடைத்த வாய்ப்பு, யோகத்தால் உருவாகும். இல்லையேல் கைநழுவிப் போகும் என்பதே உண்மை.

வாழ்க வளமுடன்
-

Does the occasion and the situation automate? If not, do we create ourselves?


சந்தர்ப்பம் மற்றும் சூழ்நிலை தானாக அமைகிறதா? அப்படியில்லை என்றால் நாமாக உருவாக்கிக் கொள்கிறோமா?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, சந்தர்ப்பம் மற்றும் சூழ்நிலை தானாக அமைகிறதா? அப்படியில்லை என்றால் நாமாக உருவாக்கிக் கொள்கிறோமா?


பதில்:

நல்ல மிக சிந்தனைக்குரிய கேள்வியை கேட்ட உங்களை பாராட்டுகின்றேன். பொதுவாகவே உலகில் வாழும் மனிதனை ‘சூழ்நிலைக் கைதி’ என்று பொருள்பட சொல்லுவார்கள். நினைத்தை செய்யமுடியாத தன்மையில் சிக்கிக் கொண்டவன் என்ற உண்மையான அர்த்தத்தை அது தருகிறது எனலாம். அப்படியான சூழ்நிலை கைதி என்றால், மனிதானனவனுக்கு, வாழ்கின்ற இந்த உலகில் அவனுக்கு நிகழ்வது, வந்து சேர்வது ஆகிய எல்லாமே தானாகவே வந்து அமைவதுபோன்ற நிலைதான் இருக்கிறது என்ற பொருளையும் உருவாக்கும். இது ஓரளவு உண்மைதான் எனினும் மற்றொரு தன்மையும் உண்டு.

மனித வாழ்வியலில், எந்த ஒரு மனிதரும் தனித்த வாழ்க்கைமுறையை கடைபிடிக்கவழியில்லை. எப்படியாயினும், ஒரு குடும்பத்தின் வழியாக, சமுகத்தின் வழியாக, நாட்டின் வழியாக, உலகின் வழியாகவேதான், அப்போதுள்ள வழக்க பழக்கங்களை ஏற்றுத்தான் வாழவேண்டிய அவசியம் இருக்கிறது. தனித்து வாழ்ந்தாலும், விலகி வாழ்ந்தாலும் அது சமூக குற்றமாகவும் ஆகிவிடும். அதற்கு அவன் வாழ்கின்ற நாட்டின் சட்டமும், விதிமுறைகளும் இடமளிக்காது. மேலும் தண்டனையும் தந்துவிடும் என்பது உறுதி.

இதனால், மனம்போன போக்கில் என்பதுபோல ஒரு மனிதன் தற்சார்பாக, தன்னியல்பாக வாழமுடியாது. எந்தவகையிலாவது, இன்னொருவரோடு, பிறமனிதர்களோடு, இந்த சமுகத்தோடு இணைந்து வாழ்ந்தே ஆகவேண்டும். ஒருவருக்கொருவர் பகிர்வும் இருந்திடவேண்டும். இந்த வாழ்வியல் அடிப்படையில் கவனித்தால், சந்தர்ப்பம் மற்றும் சூழ்நிலை தானாக அமைவதும் உண்டு, தேவையின் காரணமாக, நாமும் உருவாக்கிக் கொள்வதும் உண்டு என்ற ‘இரட்டை நிலைப்பாடு’ இருப்பதை அறியலாம்.

ஐந்தறிவு உயிரினங்கள் வரையிலும், அவை ‘இயற்கைச் சூழலின் கைதி’ என்பதில் ஐயமில்லை. ஆனால் ஒன்றை கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். ஒருபோதும் ஐந்தறிவு உயிரினங்கள் ‘இயற்கையை மீறுவதில்லை’. இந்த இடத்தில்தான் ஆறாவது அறிவான மனிதன் வித்தியாசப்படுகிறான். தான் இயற்கைக்கும் அப்பாற்பட்டவன் என்று கருதிக்கொண்டு, இருக்கின்ற / அமைகின்ற சந்தர்ப்பம் மற்றும் சூழ்நிலையை தாண்டி, தானாக ஒன்றை உருவாக்குகிறேன் என்று, தனக்கும், பிறருக்கும், இந்த சமூகத்திற்கும், உலகுக்கும் சிக்கலை உண்டாக்கிக் கொள்கிறான். மேலும் இந்த இயற்கையையே பாழ்படுத்திவிட்டு அவனும் அதில் சிக்கி அழிந்தும் போகிறான் என்பதில் மாற்றுக்கருத்துண்டா?

எனவே, மனிதன் தன்னுடைய ஆறாவது அறிவால், இயற்கையின் மிகப்பெரும் ஒத்துழைப்போடு,  தனக்கும் பிறருக்கும்  பயனளிக்கும் வகையிலே, இயற்கையை மீறாத நிலையில், பலனளிக்கும் வழியிலே, சந்தர்ப்பம் மற்றும் சூழ்நிலை ஆகியவற்றை ஆராய்ந்து அறிந்து உருவாக்கிக் கொள்ளலாம். தானாக அமைகின்ற சந்தர்ப்பம் மற்றும் சூழ்நிலையையும் மிகச்சரியாக பயன்படுத்திக் கொள்ளலாம். அத்தகைய திறமை மனிதனுக்குமட்டுமே உண்டு என்றும் சொல்லமுடியும்.

வாழ்க வளமுடன்

-

Is it feasible being awaken without mind?


வாழும் பொழுதும், எந்த வேலைகள் செய்யும் பொழுதும், விழிப்புணர்வுடன் மனமற்ற நிலை சாத்தியமானதா?



வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, வாழும் பொழுதும், எந்த வேலைகள் செய்யும் பொழுதும், விழிப்புணர்வுடன் மனமற்ற நிலை சாத்தியமானதா?

பதில்:

மனிதன் என்றாலே மனம்+இதன் = மனிதன் என்பதுதான் கருத்து. மனிதனையும், மனதையும் பிரித்துப்பார்த்திடவும் முடியாது. மனதை உணர்ந்த மனிதனும் இல்லை, மனதை துறந்த மனிதனும் இல்லை.  சில ஞான வகுப்பு நிகழ்த்துபவர்கள், மனதை தள்ளிவைத்து வாழ் என்று போதனை சொல்லுகிறார்கள். மனதை கண்டுகொள்ளாதே, அது உன்னை தடுக்கிறது, குழப்புகிறது, அதற்கு கவனம்  செலுத்தாதே, உன் மனதிற்கு மதிப்பளிக்காதே என்று பல்வாறாக அறிவுரைகள் தந்துகொண்டே இருக்கிறார்கள். அப்படி வாழ்வதுதான் விடுதலை வாழ்க்கை, ஞானம் தேடுதல் என்றும் சிலர் சொல்லிக்கொள்கிறார்கள்.

மனிதனே மனமாக இருக்கும் பொழுதும், மனமே மனிதனாக இருக்கும் பொழுதும் இது பொருந்தக்கூடியதா? என்பதை நீங்களே சிந்தித்துப் பாருங்கள். உங்களை உங்கள் மனதிலிருந்து பிரித்தால், தடுத்தால், விலகினால் என்னவாகும்? பிரிக்கவே முடியாத ஒன்றை பிரித்ததாக எண்ணி குழப்பம் தான் மிஞ்சி நிற்கும்.

மனமற்ற நிலை சாத்தியமில்லை. ஆனால் அது, அந்த மனமற்ற நிலை, உங்களுக்கும் எனக்கும் எவருக்கும் தினமும் நடக்கிறது. நடந்துகொண்டே இருக்கிறது. எப்போது என்று தெரியுமா? நம்முடைய தூக்கத்தில் தான். தூக்கத்தில் மனமும் இல்லை, நாமும் இல்லை. அப்படியான தூக்கத்தில் கூட சிலருக்கு கனவுத்தொல்லையும் உண்டு. கனவில் கூட மனதை பிரிக்கமுடியவில்லை என்று புரிந்துகொள்ள முடிகிறதா?

அப்படியானால் வேறு வழியே இல்லையா, மனமற்ற நிலை சாத்தியப்படுத்திட? 

இல்லைதான். ஆனால் மனதில் எண்ணங்களற்ற நிலை சாத்தியமானது. குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் சொல்லுவதுபோல, ‘மனதை அடக்க நிலைத்தால் அலையும், அறிய நினைத்தால் அடங்கும்’ ஆம் அதுதான் சிறந்தவழி.

அது எப்படி என்று கேட்கிறீர்களா? இன்னொரு கேள்வி பதிலில் காணலாம்.
வாழ்க வளமுடன்.
-