CJ for You: night

night

Showing posts with label night. Show all posts
Showing posts with label night. Show all posts

Why mind recalling at morning all that we like to forget before sleeping?


ஒரு நாளின் இரவில், தூக்கத்திற்கு முன்பாக எதையெல்லாம் மறக்க நினைக்கிறோமோ அது நீண்ட தூக்கத்திற்குப் பிறகும், காலையில் அப்படியே மனதில் நிலைப்பது ஏன்?



வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி: 

வாழ்க வளமுடன் ஐயா, ஒரு நாளின் இரவில், தூக்கத்திற்கு முன்பாக எதையெல்லாம் மறக்க நினைக்கிறோமோ அது நீண்ட தூக்கத்திற்குப் பிறகும், காலையில் அப்படியே மனதில் நிலைப்பது ஏன்?

பதில்:

ஓவ்வொருக்கும் இருக்கின்ற மனதின் தன்மையே அதுதானே? இயற்கையின் அற்புதம் இது. மேலு மனிதனும் மனமும் பிரித்துப்பார்த்திட முடியாது அல்லவா? உங்களை விடவும் மனம் எப்போதும் விழிப்பில்தான் இருக்கும். நீங்கள் மறந்தாலும் மனம் மறக்காது. அதுபோலவே நீங்கள் விரும்பும் பொழுதெல்லாம் அது எடுத்தும் காட்டாது. அதற்கென்று இயற்கை நியதி இருக்கிறது. அதன்படிதான் மனமானது செய்படுகிறது. இரவு தூக்கத்தில் மனம் இல்லை என்று யாராவது உங்களுக்கு சொன்னார்களா?  தூக்கத்தில் மனம் தன்னுடைய செய்ல்பாடுகளை குறைத்துக் கொள்கிறது என்பதுதான் உண்மை. இன்னொருவகையில், அது நடுமனமாகவும், ஆழ்மனமாகவும் கூட செயல்படுவதற்கான வாய்ப்புகள் அங்கே இருக்கிறது. உங்களுக்கு எழும் கனவுகளும், காட்சிகளும் அந்தவகைதான். இதை நடுமன, ஆழ்மன நிலைகளை மனசாட்சி என்றும் சொல்லுகிறோம்.

எப்போதும் நம்மோடு யாரும் துணை இருக்கமாட்டார்கள். அப்படி எதிர்பார்ப்பதும் தவறுதான். ஆனால் நம்மோடு நம் மனம் எப்போதும் இருக்கும். நாம் செய்வதையும், பிறர் செய்வதையும் கவனிக்கும், அதை பதிந்து வைக்கும். அவ்வப்பொழுது எடுத்துக் காட்டும். சரி தவறு என்பதெல்லாம் அதற்கில்லை. அதை சரி தவறு என்று தீர்மானிப்பதும், இனம் பிரிப்பதும் நாம்தான். நீங்கள் தனியாக கட்டளை இட்டு ‘இதையெல்லாம் பதிந்து கொள்ளாதே, கண்டும் காணாமல் விட்டுவிடு’ என்று சொல்லமுடியாது. தாஜா செய்யவும் முடியாது, மிஞ்சினாலும், கொஞ்சினாலும் உங்கள் மனம் தன்னுடைய இயல்பை மாற்றிக்கொள்ளாது. இயற்கையின் பெருநிதி அல்லவா?!

ஆனால் மனதின் துணை கொண்டு நீங்கள் வாழ்வது போலவே, அதனோடு இணைந்து ஆராய்ச்சி செய்து, உங்கள் வாழ்க்கையை சீர் செய்திட முடியும். அதற்கு வழி உண்டு. ஆனால் உலகில் வழங்கப்படும் எந்த மன பயிற்சி கற்றாலும், மனதை மாற்றிடவோ, தள்ளிவைத்து பழகவோ, சும்மா இருக்கவிடவோ முடியவே முடியாது என்பதை அறிந்து கொள்ளுங்கள். அப்படியென்றால் வேறு வழியே இல்லையா? என்று கேட்டால், யோகம் என்பது தான் சிறந்த வழி. ஆனால் இங்கேதான் யாருக்குமே யோகத்தில் ஆர்வமில்லையே? நேரடியாக ஞானம் வேண்டும் என்கிறார்கள், ஆனால் யோகம் தேவையில்லை என்ற முடிவில் இருக்கிறார்கள். சரி அது அவர்கள் பாடு.

இரவில்  தூக்கத்திற்கு முன்பாக எதையெல்லாம் மறக்க நினைக்கிறோமோ அது நீண்ட தூக்கத்திற்குப் பிறகும், காலையில் அப்படியே மனதில் நிலைப்பது இயல்பு. நீங்கள் என்ன செய்யலாம் என்றால், மறக்க நினைப்பதற்கு பதிலாக, என்னென்ன நடந்தது? அதில் என்ன தவறு நான் செய்தேன்? மற்றவர்கள் பங்கு என்ன? அதை நான் தடுத்தேனா? ஆராயாமல் ஏற்றுக்கொண்டேனா? தவறுக்கு காரணம் என்னவாக இருக்கலாம்? என்ற பல கேள்விகளோடு நீங்கள் ஆராய்ந்து பழகலாம். அது காலையில் ஏதேனும் ஒரு தீர்மானத்திற்கு, தெளிவிற்கு வர வாய்ப்பு உள்ளது. இது முழுமையான தீர்வு அல்ல, எனினும் கொஞ்சமாவது உங்களுக்கு பயன் தருவதற்கு வாய்ப்பு உள்ளது.

வாழ்க வளமுடன்
-

Why getting sleeping disorder and dreaming on everyday? Any solution?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, அடிக்கடி கனவுத்தொல்லை இருக்கிறது. தூக்கமும் இல்லை. இதற்கான காரணம் என்ன?


பதில்:

உங்கள் வாழ்வில் நீங்கள் அதிகம் உணர்ச்சி வசப்படுபவராக இருக்கிறீர்கள். மேலும் ஏதெனும் நடந்துவிடுமோ என்ற பயமும், அதனோடு கூடிய சிந்தனைக் குழப்பங்களும் உங்களுக்கு இருக்கிறது என்றும் உறுதியாக சொல்லலாம். உங்களில் செயலில் நீங்கள் சரியாக இருந்தால் ஏன் பயம் வருகிறது? எனவே உங்களுடைய எந்த செயலிலும் கவனமாக, சரியாக செய்கிறேனா? என்று கவனியுங்கள். அல்லது திட்டமிட்டு அந்த செயலை செய்யுங்கள். பேசும்பொழுதும் கூட அப்படி கவனிக்க வேண்டும். ஏதோ தோன்றியது சொல்லிவிட்டேன் என்று பேசிவிடக்கூடாது. இதனால் நீங்களும் வருத்தப்படுவீர்கள், எதிராளும் வருத்தப்படுவார். அதுவே உங்களை குழப்புகிறது.

இந்த குழப்பங்கள், பயம், சிந்தனை தடுமாற்றம் எல்லாமே உங்கள் அடிமனதில் மிகத்தெளிவாக பதிந்துவிடும். நீங்கள் தூக்கத்தில் இருக்கும் பொழுது, புறமனம் இயங்காத நிலையில், அடிமனம் விழித்துக்கொள்கிறது. அதுதான் இப்படியெல்லாம் செய்தாய், இப்படி விளைவு வந்தது என்றெல்லாம் எடுத்துக்காட்டும். பிறர் இப்படி செய்தார்கள் என்றும் சொல்லிக்காட்டும். இனிமேல் இந்தமாதிரி செய்யலாமே என்று உங்களுக்கு பாடமும் நடத்தும்.

உங்கள் கனவில், எக்காலத்திற்கும் பொருந்துவதாகவே காட்சிகள் அமையும். அடிமனம் விழித்துக்கொண்டால் உங்களுக்கு தூக்கமும் தடைபடும். ஆழ்ந்த தூக்கம் கிடைக்காது. எவ்வளவு நேரம் தூங்கினாலும், தூக்கக் கலக்கமும், உடல்சோர்வும் இருக்கும். முக்கியமாக மனதில் நிம்மதி உணர முடியாது. இதனால், அன்றைய புதிய நாளும் கெட்டுப்போக வாய்ப்பு அதிகமாகிவிடும்.

நீங்கள் வேதாத்திரிய யோகம் கற்றவரானால், இரவில் தூக்கமின்மையும், கனவுகளும் வந்து தொல்லை தருமானால், சாந்தி தவம் செய்துவிட்டு பிறகு தூங்கப்பழகுங்கள். ஒரு மூன்று நாள் இரவில் தவம் செய்துவந்தால் மாற்றம் கிடைக்கும். உங்கள் செயலில், சிந்தனையில், பேச்சில் கவனமாக இருந்து, நல்லதை பேசுவேன், நல்லதை செய்வேன் என்று உறுதிபட இருங்கள். பிறர் மனவருத்தம் பட ஏதும் செய்யாது தவிர்த்துப் பழகுங்கள். இந்த பழக்கத்தை தினமும் கடைபிடித்தால், கனவுத்தொல்லையில் இருந்தும், தூக்கமின்மையில் இருந்தும் மீண்டுவிடலாம்! மேலும் மனவருத்தம் தரும் சினிமா, தொலைகாட்சி, கைபேசி காட்சி பார்க்காதீர்கள். அதுவும் காரணமாக அமைந்திருக்கும் என்பதே உண்மை!

வாழ்க வளமுடன்.

Why advised to avoid the meditation practice at night times?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.




கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, இரவில் தவம் செய்வதை ஏதற்காக தவிர்க்கச் சொல்லுகிறார்கள்?!


பதில்:

இரவில் தவம் செய்யக்கூடாது என்பதல்ல. செய்யலாம். ஆனால் அதற்கு நன்கு ஏற்கனவே பழக்கப்பட்டிருக்க வேண்டியது அவசியமாகும். குறைந்தது 12 மாதங்களாவது தொடர்ந்து, நாள் தோறும் தவம் செய்து பழகியிருந்தால், இரவில் தவம் செய்வதில் எந்தப் பிரச்சனையும் இருக்கப் போவதில்லை. ஆனால், தவம் கற்ற ஆரம்ப நிலை சாதகர்கள், இரவில் தவம் செய்வதை தவிர்க்க வேண்டும். முக்கியமாக எல்லோருமே, அதாவது எந்த நிலையில் தவம் கற்றோரும் கூட, உச்ச தவமான துரியாதீத தவத்தை இரவில் செய்யக்கூடாது என்பது பொதுவான விதி என்று சொல்லலாம். அதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. அதை விளக்கமாக சொல்லி உங்கள் மனதை குழப்பமடையச் செய்ய எனக்கு ஆர்வமில்லை. தவிர்த்துவிடலாம் என்றால் அதை அப்படியே ஏற்றுக்கொள்வது சரியானதுதான். இல்லை நான் முயற்சிப்பேன் என்றால், அது உங்கள் சமர்த்துதான்.

சரி, ஏன் இரவில் தவம் தவிர்க்கப்பட வேண்டும்? என்று கேட்பீர்களானால், முதலில் தவம் என்பது என்ன? என்ற கேள்விக்கான விடையை பெற வேண்டும். நீங்கள் உங்களுடைய மனதை ஒரு நிலையில் குவித்து தவம் செய்கிறீர்கள். அந்த நேரத்தில் உங்கள் கவனம் அதில் மட்டுமேதான் இருக்கும். உங்கள் சூழல் குறித்த எந்த ஒரு கவனமும் அங்கே இருக்காது. ஆரம்பத்தில் இருக்கும் என்றாலும் போகப்போக கவனம் தவத்தில் மட்டுமே இருக்கும்.

இரவு என்பது இருட்டானதுதானே ஓய்வானதுதானே என்பீர்கள்! அது யாருக்கு? இரவு சில உயிரிங்களுக்கு இயக்கமும் கொடுக்கும். பூச்சிகள், வண்டுகள், எலிகள், பல்லிகள், பாம்புகள் இப்படி பல உண்டு. அந்தநேரத்தில், தீடீரென்று எற்படும் வெளிச்சம் கூட உங்களை பாதிக்கும், யாராவது கதவை தட்டினால் கூட பாதிக்கும். இப்படி பல பிரச்சனைகள் எழ வாய்ப்பு உண்டுதானே?!

என்னதான் பாதுகாப்பு என்றாலும் கூட, ஒரு கொசு போதுமே உங்கள் தவத்தை கெடுக்க?! இதனால் மனமொன்றிய நிலையில் ஏற்படும் பிரச்சனைகளால், மனதின் இயல்பு பாதிப்படையும், அதனால் உடலும் கெடும், செய்கிற தவமும் கெடும். அதன்வழியாக உங்கள் தூக்கமும் கெடும். மறுநாள் அலுவல்களும் கெடும் அல்லவா?! எனவே இதையெல்லாம் கவனத்தில் கொண்டு இரவில் தவம் செய்வது குறித்து சிந்தித்துப் பாருங்கள். தேவைப்பட்டால், சாந்திதவம் மட்டும் செய்யலாம். ஏனென்றால் அதில் மனமும், உடலும் அமைதியை நோக்கித்தான் செல்கிறது!

வாழ்க வளமுடன்.