CJ for You: action

action

Showing posts with label action. Show all posts
Showing posts with label action. Show all posts

Is health important to a man? Is mental resourcefulness important? Explain this dilemma.


ஒரு மனிதனுக்கு உடல் நலம் முக்கியமா? மன வளம் முக்கியமா? இந்த குழப்பமான நிலையையை விளக்குக.


இந்த கேள்விக்கு பதில் தரும் முன்பாக, கேள்வி கேட்டவரின் சூழல், வாழும் நிலை, தகுதி, இப்போதிருக்கும் வாய்ப்பு, எதிர்பார்ப்பு அல்லது நிறைவு என்ற அளவுகளைக் கொண்டு சொல்லவேண்டியதாக இருக்கிறது. 

நீங்கள் உலகவாழ்வில், ஒரு நல்ல உயர்வான நிலைக்கு, பொருள் செல்வாக்கோடு நிலைக்க வேண்டும் என்று விரும்பினால், முதலில் மன வளம் முக்கியம். அந்த மன வளத்தினால், உடலை நலமாக்கி, இந்த பொருள்முதல்வாத உலகில் வென்று உயரலாம். மனம் சோர்வாகவும், குழப்பமாகவும், தடுமாற்றமாகவும் இயங்குமானால், அது உங்கள் உடலை, உடலுறுப்புக்களை கெடுக்கும். வேலை, வியாபாரம், தொழில் என்று எதனையும் செய்யவிடாது. முயற்சியில் தோல்வியை தரும். விளைவு, நட்டமாகும். இதனால் மனம் உற்சாகமாக இருக்க என்ன வேண்டும்? என்ற நோக்கத்தில் மன வளம் முக்கியம். இதற்கு யோகம் உதவுமா? நிச்சயமாக உதவும். ஆனால், யோகம் வாழ்க்கை இன்பத்தையும், பொருளாதாரத்தையும், இல்லறத்தையும் சிதைக்கிறது என்றுதானே, பெரும்பாலோர் நினைக்கிறார்கள்? சரிதானே?!

இரண்டாவது வகை மனிதராக பார்த்தால், ஏதோ ஓரளவில் நிலையான பொருள் கிடைக்கிறது. அன்றாட வாழ்வு நகர்கிறது என்ற நிலையில் இருக்கும் மனிதரை எடுத்துக்கொள்ளலாம். அதேபோல, பொருளில் நிறைவு பெற்று, இருப்பது போதும் என்ற அளவில், அன்றாட வரவில், கொஞ்சம் எடுத்துக்கொண்டு, மற்றதை சேவையாக உலகுக்கு திருப்பித்தரும் மனிதர்களையும், இங்கே இணைத்துக் கொள்ளலாம். இவர்களுக்கு இப்போது, உடல் நலம்தான் முக்கியம். ஏனென்றால், இதுநாள் வரை, அந்த உடலைக்கொண்டு, பலவிதங்களில் தூக்கம் கெட்டு, உடல் பலம் கெட்டு, தன்னுடைய பொருளாதாரத்தை உயர்த்திருப்பார்கள். உடலில் பலவித நோய்கள் தலைதூக்கி நிற்கும். சில உடல் உறுப்புக்கள் பாதிப்பு ஏற்பட்டிருக்கும். சிலர் ஏதேனும் அறுவைசிகிச்சையும் செய்திருப்பார்கள். உணவே மருந்து என்பதற்கு பதிலாக, மருந்தே உணவாக சாப்பிடம் பழக்கத்திற்கு வந்திருப்பார்கள். இதனால் இவர்கள், உடலை காத்திட வேண்டும், உடல் நலமே இவர்களுக்கு முக்கியம். பிறகு அதன் வழியாக மன நலன் காக்கப்பெறலாம்.

மூன்றாவது வகை மனிதர், உலக வாழ்க்கையில் இருந்தாலும், உள்முகமாகவே, தன்னைக்குறித்த ஒரு தேடுதலைக் கொண்டிருப்பார். ஒருவகையில் அது, அவருடைய முன்னோர்களின் விருப்பமாகவும், அதை நிறைவேற்றிட பிறந்தவராகவும் இருப்பார். இவருக்கு, நேரடியான யோகம் தேவை. அப்படியானால் பொருள் பணம் அவசியமில்லையா? என்ற கேள்வி எழும்தானே? இவர், இயல்பாக அதை ஏற்றுக்கொண்டு செயல்படுபவராக இருப்பார். வேண்டுதலும் எதிர்பார்த்தலும் இருக்காது. இருந்தாலும் அமைதி, இல்லையென்றாலும் அமைதி என்ற நிலையில் இருப்பார். உங்களில் கூட அப்படியாக சிலர் இருக்கலாம். இந்த மனிதர் யோகத்தில் உயர, உடல் நலமும் வேண்டும், மன வளமும் வேண்டும். ஆனால், முதன்மையாக, உடல் நலம் சீர் செய்துவிட்டால், அடுத்து மன வளம் நோக்கி தானாக நகர்ந்துவிடுவார்.

இப்படியாக, ஒரு மனிதனுக்கு உடல் நலம் முக்கியமா? மன வளம் முக்கியமா? என்ற கேள்விக்கான விடையை கண்டுவிட முடியும். இதை நீங்கள் மிகச்சரியாக எந்த நிலையில் இருக்கிறீர்கள் என்பதைக் கண்டுபிடித்து அதன்படி நீங்கள், பயிற்சியை தொடங்கலாம்.

வாழ்க வளமுடன்.

-


Does nature teach us a lesson in the result of action?


வினையிலே கிடைக்கின்ற பயனில் நமக்கு இயற்கை பாடம் நடத்துகிறதா?


        கர்மா என்ற வினை குறித்து, எவ்வளவு பேசினாலும் கூட, அதை நாமாக நம்முடைய அனுபவ அறிவோடு புரிந்து கொள்ளும் பொழுதுதான், அதன் சுமையும், அழுத்தமும், வீரீயமும் தெரியவரும். ‘இவ்வளவு காலமாக இப்படியாக ஒன்றை தெரிந்து கொள்ளாமல் போயிற்றே என்ற வருத்தமும் எழும். இனிமேலாவது மாற்றி அமைக்கலாம்’ என்ற நம்பிக்கையும் எழுந்துவிடும். இந்த கால சூழ்நிலையில், ஒவ்வொருவருக்கும் அப்படியான அனுபவம் கிடைக்க விரும்புவோம். ஏனென்றால், நம்முடைய, மனித பரிணாமத்தின், ஆறாம் அறிவின் எழுச்சியான பிறப்பையும், அதன் முழுமையையும், நிறைவையும் பெற்று, அனுபவித்து, இன்பமாக, சுகமாக வாழ்வதற்கு தடையாக இருப்பதே இந்த ‘கர்மா என்ற வினை’ தானே!

வேதாத்திரி மகரிஷி அவர்கள் விளக்கும் பொழுது, நமது முன்னோர்கள் நல்லது கெட்டது என்பதைத் தீர்மானித்துச் சிலவற்றைச் செய்யலாம், சிலவற்றைச் செய்யக்கூடாது என்னும் முறையிலே அனுமதி கொடுத்தும், தடை விதித்தும் வந்துள்ளார்கள். அவைகளெல்லாம் அந்தக் காலத்தை ஒட்டிய வாழ்க்கை முறைக்குப் பொருத்தமாக இருந்திருக்கும்.

நாம் இன்னும் அதிகமாக, ஆழமாகப் போனால் அந்தக் காலத்தில், ‘இதைச் செய், இதைச் செய்யாதே’ என்று சொல்வதற்கு அவர்கள் எடுத்துக் கொண்டது ‘சொர்க்கம், நரகம்’ என்ற இரண்டு கற்பனைகளே. நல்லவை செய்தால் கடவுள் ஒருவனுக்கு நல்ல இடத்தைக் கொடுப்பான்.  தீயவை செய்தால் தண்டிப்பான் என்று ஆசை காட்டியும், அச்சுறுத்தியும் நல்லன செய்யவும், தீயன தடுக்கவும், வேண்டிய அளவிற்கு மக்களுக்குப் போதித்து வந்தார்கள். விஞ்ஞான அறிவு வளர்ச்சி பெற்று வரும் இந்தக் காலத்திலே அந்த முறை எவ்வளவு நாட்கள் தொடர்ந்து பயன்படும்? 

இன்றைக்கு என்ன வேண்டும் என்றால், ‘ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விளைவு உண்டு’ என்ற இயற்கையின் நியதியை (Law of Nature) மனிதன் உணர்ந்து கொள்ளக்கூடிய அளவிற்கு சிறுவயதுலேயிருந்து படிப்படியாக விளக்கி அந்த உணர்வு ஒவ்வொருவருக்கும் வந்து விட வேண்டும்.  ‘இதைச் செய்தால் அதன் விளைவு இதுவாகத் தான் இருக்கும், அந்த விளைவைத் தாங்கிக் கொள்வதற்கு நான் தயாரா?’ என்ற அளவிற்கு ஒவ்வொருவரும் அவர்களுடைய செயலிலே விளைவாகத் தொக்கி நிற்கக் கூடிய ஒரு உண்மையை, இயற்கை அமைப்பை உணர்ந்து கொள்ளக்கூடிய முறையில் உள்ள கல்விதான் இன்றைக்கு அவசியம்.

செயலிலேயே விளைவு இருக்கின்றது என்பது தெளிவாகவும், உறுதியாகவும் உணர்ந்து கொள்ளப் பெற்றால் ஒரு ஆசை எழும்போது, அதனை நிறைவேற்றிக் கொள்ளச் செயலில் இறங்கும்போது நல்லது அடைவோம் என்று நன்மை செய்வான். இந்த முறையிலே தான் தற்காலத்திற்கு கல்வி முறை அவசியம். ‘வினையும் பயனும்’ என்ற முறையிலே ஒரு தெளிவான பொறுப்புணர்ச்சி ஏற்படுவது இன்று எல்லோர்க்கும் அவசியம். 

அந்த வழியில்தான், வேதாத்திரிய மனவளக்கலை அன்பர்களுக்கு உதவுகிறது. ஏன் மனவளக்கலையில் இணைந்து விளக்கம் பெறவேண்டும் என்று அறிவோமா? தனிப்பட்டதாக, என்றோ வாழ்வில் கிடைக்கும் அனுபவத்திற்கு பதிலாக, நாமாகவே விரும்பி, உண்மையை தெரிந்து கொண்டு, விளக்கம் பெற்று, நம்மையும், நமக்குப்பின் வரக்கூடிய சந்ததியினரின், மகிழ்ச்சியும், நிறைவுமான வாழ்க்கைக்கும் நாம் உதவமுடியும். நமக்கு முன்பாக, நம் பரம்பரையினரின் தொகுப்பான குறைகளைக்கூட, நாம் திருத்தி அமைத்துக் கொள்ளவும் முடியும்.

வாழ்க வளமுடன்.

-

In this living world, how can we be aware of our actions and duties?


வாழ்கின்ற இந்த உலகில், நம்முடைய செயல்களிலும், கடமையிலும், விழிப்புணர்வாக இருப்பது எப்படி?




கடமையில் விழிப்புணர்வு என்பது, ஓவ்வொரு மனிதனுக்கும் தேவையானது. தன்னுடைய வாழ்வில், துன்பமும், சிக்கலும் தானாக, உருவாக்கிக் கொள்ளாத நிலை, இங்கிருந்துதான் கிடைக்கும். கவனமும், பாதுகாப்பும் தரும்.
இன்ப வாழ்வுக்கு, திறந்த மனப்பான்மையோடு கருத்தை மனதில் வாங்கிக் கொள்வது (Receptivity) அதற்கேற்ப தன்னை மாற்றிக் கொள்வது (Adaptability) குற்றத்தைக் கண்டபோது, அதை மன்னித்து மறந்து விடுவது (Magnanimity) ஆகிய மூன்று தன்மைகள் நம் எல்லோரிடமும் வளர்க்கப்பட வேண்டும். இதோடு தீமையை நீக்கி, நன்மையே செய்தல் (Creativity) என்ற தன்மையும் வேண்டும்.
பிறர்க்கு உதவி புரிவதில் கூட நாம் இக்காலத்தில் விழிப்போடு இருக்க வேண்டியுள்ளது. உதவி தேவைப்படுபவர்கள் தான், அதற்கு தகுதியுடையவர்கள் தான் நம்மை நாடி வருகிறார்கள் என்று நினைப்பதற்கில்லை. 
அப்படித் தகுதியுடையவர்களாய் இருப்பினும், தகுதி பெற்ற எல்லோருக்குமே நாம் உதவி செய்ய முடியுமா என்பதையும் நாம் சிந்தித்துப் பார்த்துக் கொள்ள வேண்டும். 
நாம் ஒரு கனி மரம் வளர்க்கின்றோம். கனிகளை மட்டும் தான் கொடுத்து உதவி செய்யலாமே ஒழிய மரத்தையே வெட்டிக் கொடுத்துவிட்டால் பிறகு கனி எப்படிக் கிடைக்கும்? 
பொருள் பறிக்கவே சிலர் பற்பல வேடங்களில் நம்மை நாடி வரும் இக்காலத்தில், பிறர்க்கு உதவி செய்வதில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியுள்ளது, 
பிறர் உதவி என்பது கூரிய ஆயுதம் போன்றது. தவறிமாட்டிக் கொண்டால் அதற்கு நாமே பலியாகி விடுவோம். விழிப்பு நிலையோடு தான், நம் அளவுக்குத் தக்கபடி தான் நாம் பிறர்க்கு உதவ வேண்டும். 
நீதிபதி முன் நிறுத்தப்படும் குற்றவாளியை, எப்படி அந்நீதிபதி அவன் குற்றமற்றவனாகவும் இருக்கக்கூடும், என்று விசாரணையை துவக்குகிறாரோ, அதேபோல் நம்மிடம் உதவி நாடுபவரை "இவன் ஏன் ஏமாற்றுக்காரனாய் இருக்கக் கூடாது" என்று ஒரு கேள்வி எழுப்பிக் கொண்டு, பிறகு நல்லவன் தான் என்று சோதித்து அறிந்த பிறகே அளவோடு உதவி அளிக்க வேண்டும்.
உலக கடமையில் ஈடுபட்டுள்ள நமக்கு பல பொறுப்புகள் உண்டு. எவ்வளவு விழிப்புடன் நம் கடமையைச் செய்கிறோமோ அந்த அளவுக்குத் தான் நாம் வாழ்வில் இனிமை காண முடியும். இத்தகைய தெளிவான அனுபவ விளக்கத்தை, பாமர மக்களின் தத்துவஞானி, வேதாத்திரி மகரிஷி அவர்கள் நமக்கு அறியத்தருகிறார்.

வாழ்க வளமுடன்.

Do you want to understand karma in a modern, scientific way? What is the way to do that?


உங்களுக்கு கர்மா என்பதை நவீனமாக, விஞ்ஞான விளக்கமாக புரிந்து கொள்ள விருப்பமா? அதற்கான வழி என்ன?


கர்மா என்ற வினையை முதலில் புரிந்து கொள்வது அவசியம். கர்மா என்பது குறித்து, உதாசீனம் செய்வதற்கும் முன்பும், ஐயோ என்று பயப்படுவதற்கு முன்பும், கர்மா எப்படி ஏற்படுகிறது என்பதை தெரிந்து கொள்வதும் அவசியம். ஒரு உதாரணமாக, இக்கால கம்ப்யூட்டர் (கணினி) மொபைல் (கைபேசி) வழியாக, இணையத்தில் நிறைய செய்திகள், படங்கள், சினிமா, பாடல், இசை, நூல்கள் எல்லாம் பார்க்கிறீர்கள். உங்கள் நண்பர்களுக்கும், பிரியமானவர்களுக்கும் ஏதேனும் செய்திகள் அனுப்புகிறீர்கள். அவர்களும் உங்களுக்கு அனுப்புகிறார்கள். இக்கால இளவட்டங்கள் போல சில கெட்ட சமாச்சாரங்களும் கூட இருக்கலாம் தானே? 

இப்போது இந்த, அனுப்பியதும், பெறுவதும் ரகசியமாக இருக்கும். நீங்களும், நீங்கள் யாருக்கு அனுப்பினீர்களோ அவர்கள் மட்டுமே பார்க்க முடியும். எனினும், இந்த நடவடிக்கை எல்லாமே, பதிவும் ஆகும். உங்களவிலும், அவர் அளவிலும் அதை அழித்துவிடலாம். ஆனால், கணினி, கைபேசி இவற்றின் மூலத்தில், நீங்கள் கைவைக்க முடியாது. அழிக்க முடியாது. ஒரு சாஃப்ட்வேர் என்ஜீனியர், ஒரு நிமிடத்தில், உங்களுக்கு இடையே என்ன நிகழ்ந்தது? என்ன பரிமாறிக்கொண்டீர்கள்? என்று அறியமுடியும் அல்லவா? முடியாது என்கிறீர்களா?

இந்த நடவடிக்கைகள் நல்லது, நேர்மையானது, உபயோகமானது என்றால் ஒருபிரச்சனையும் எழப்போவது இல்லை. யாரும் உங்களை குறை சொல்லவோ, திருத்தவோ, தண்டிக்கவோ, சிறைபிடிக்கவோ போவதில்லை. ஆனால் எல்லாமே தவறு, அடுத்தவரை கெடுப்பது, பிரச்சனைக்குரியது, ஆபாசமானது, சட்டத்திற்கு புறம்பானது என்றால், எல்லாமே ஆரம்பமாகிவிடும் அல்லவா? இதை நான் செய்யவே இல்லை என்று உங்களால் மறுக்கவும் வழி உண்டா? யாரோ செய்தார்கள் என்று கடந்துவிட முடியுமா?

இந்த வழியில், ஓர் உண்மை உங்களுக்கு புரியவரும். செயலை செய்தது நீங்கள். அதையெல்லாம் பதிந்தது யார்? சாஃப்ட்வேர் என்பீர்கள். ஒரு சாஃப்வேர் உங்கள் நடவடிக்கையை பதிந்து வைக்கிறது என்றால், இந்த இயற்கை, உங்கள் நடவடிக்கையை பதிந்து வைத்துகொள்ளாது என்கிறீர்களா? அதற்கு அந்த திறமை இல்லை என்று எடைபோடுகிறீர்களா? இயற்கையை, இதையெல்லாம் செய்யத் தெரியாத முட்டாள் என்கிறீர்களா?

உங்களுக்கு இப்போது வயது என்ன? என்று எனக்குத் தெரியாது. ஆனால், மூன்று வயதுக்கு முன் நீங்கள் எங்கே இருந்தீர்கள்? எப்படி இருந்தீர்கள்? நினைவிருக்கிறதா? பிறந்ததில் இருந்து, கிட்டதட்ட ஆயிரம் நாட்கள் உங்களை, வழி நடத்தியது யார்? நீங்களே தானா? இந்த கேள்விக்கு விடை இருக்கிறதா?

அந்த ஆயிரம் நாட்களும், அதற்குப்பிறகு, இன்றுவரை நீங்கள் செய்துவந்தது, உங்களுக்கு நினைவில் இல்லாவிட்டாலும், பதிவு என்பது இருக்கும்தானே? இதை நீங்கள் மறுக்கமுடியுமா? உங்கள் ஹார்ட் டிஸ்கில் அழித்துவிடலாம். ஆனால் இணையம் வழியான, நெட்வொர்க் வழியான சர்வர் என்ற சோர்ஸ் டிஸ்கில் இருக்கும் அல்லவா? அதுதான் கர்மா என்ற வினை ஆகும். இது பதிவுதான். நல்லதை அப்படியே விட்டுவிடலாம். கெட்டதை, தீய விளைவு தந்ததை, திருத்த வேண்டிய கட்டாயம், ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ளது. 

அப்படியானால், உங்கள் கர்ம வினை மட்டும்தான் இருக்கிறாதா? என்ற கேள்வி எழுந்தால், இல்லை. நீங்கள் தனித்த ஒரு நபர் அல்ல. உங்களை உருவாக்க, தாயும் தந்தையும் துணையாக இருந்தார்கள். அவர்களுக்கு அவர்களின் தாயும், தந்தையும், இப்படி ஒன்று இரண்டாக, இரண்டு நான்காக அடுக்குகளாக போய்க்கொண்டே இருக்கும். இதில், ஏழு தலைமுறை என்று எடுத்துக் கொண்டால், அத்தனையும், உங்களுக்குள்ளாக இருக்கும். ஏற்கனவே பார்த்த உண்மையில், உங்கள் மூன்றுவயதிற்கு முன்னால், உங்கள் பசி, தூக்கம், எழுதல், இயற்கை உபாதைகள் இதையெல்லாம், இயற்கை கவனித்தது. அதனோடு உங்கள் நடவடிக்கைகள், ஏதோ ஒரு பதிவின் வழியாகவே நிகழ்ந்தது. ஒரு களிமன் பானையாக மாற்றம் பெறுவது, பானையால் அல்ல. மண்ணால் அல்ல. அந்த வடிவத்தை தரும் மண் கலைஞனால் தானே? அவனும் அந்த சக்கரங்களை சுழற்றி, நீர் ஊற்றி குழைத்து, வழித்து உருவாக்குகிறான். இப்படி உங்களுக்குள்ளாக நீங்கள் இல்லாமலேயே எல்லாம் நிகழ்ந்தது தானே? அந்த நிகழ்வுகளின், செயல்களின், வெளிப்பாடுகளின் பதிவுகள்தான் கர்மா. அதை தமிழில் வினை என்று சொல்லுகிறோம்.

இந்த வினைகள் மூன்று பிரிவுகள் ஆகும். சஞ்சிதம், பிராரப்தம், ஆகாமியம் ஆகியன ஆகும். சித்தர்கள் சஞ்சிதம் என்பதை பழவினை என்றும், பிராரப்தம், ஆகாமியம் இரண்டையும் சேர்த்தே புதுவினை என்றும் சொல்லுகிறார்கள். சஞ்சிதம் என்ற பழவினை, நாம் அறியாதது, நமக்குள்ளாக இருப்பது. பிராரப்தம், ஆகாமியம் என்ற புதுவினை, நாம் பிறந்தது முதல் இன்றுவரை நாமே நமக்குள் சேர்த்துக் கொண்டது.

இந்த கர்மா என்ற வினை தீர்க்கவே பிறப்பெடுத்தோம். ஆனால், அதை முற்றாக மறந்துவிட்டு, உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நம் தாய் தந்தைக்கும் தெரியவில்லை. நமக்கும் தெரியவில்லை. நம் பிள்ளைகளுக்கும் தெரியப்படுத்தவில்லை. அவர்களுடை பிள்ளைகளுக்கும் தெரியப்போவதில்லை.

சரி, இந்த கர்மா என்ற வினை தீர்க்கப்பட்டால் என்னய்யா ஆகும்? இதை வார்த்தைகளால், உங்களுக்கு புரியவைத்திட முடியாது. அதை நீங்கள் உண்வாக பெறலாம். ஆம் முற்றிலும் விடுதலை உணர்வாக, உலகில் வாழ்ந்து மகிழலாம். நிறைவாக, வாழ்நாள் முழுவதும் என்பது உறுதி.

வாழ்க வளமுடன்.

If everything has already been provided, is it okay to ask for it?


எல்லாம் ஏற்கனவே வழங்கப்பட்டிருக்கிறது என்றால், கேட்டுப் பெறலாம் என்பது சரியா?


கேள்வி

        ஞானமும் வாழ்வும் என்ற நூல் 3வது பாகம் 4வது பாராவில் மனிதன் தெய்வத்தை வேண்டிப் பெறவேண்டியது ஒன்றுமே இல்லை, அவனுக்கு வேண்டிய அனைத்தும் பிறப்பிலேயே இணைக்கப்பெற்று உள்ளன என்று ஐயா முற்பகுதியில் கூறியிருக்கிறீர்கள்.

        பிறகு 80வது பக்கத்தில் சங்கற்பங்கள் ஓதுவது சிறந்த பயனளிக்கும் என்று சொல்லியுள்ளீர்கள். இதன் உட் பொருள் விளக்கவும். பயன் சங்கற்பத்தால் எழுவது மறு பிறவிக்கா அல்லது நிகழ்காலத்திற்கு ஒக்குமா?


பதில்

பாமர மக்களின் தத்துவஞானியும், அருட்தந்தையுமான வேதாத்திரி மகரிஷி அவர்கள், இந்த கேள்விக்கான விளக்கம் அளிக்கிறார்.

‘எல்லா உயிர்களுக்கும் தேவையான அனைத்தும் பிறப் போடு இணைக்கப் பெற்றிருக்கின்றது உண்மை. இது இயற்கையின் ஒழுங்கமைப்பு.  எந்த செயலுக்கும் விளைவு உண்டு செயலிலிருந்து விளைவைப் பிரிக்க முடியாத இணைப்பும் இயற்கையின் ஒழுங்கமைப்பே. 

எனவே இனிய வாழ்விற்கு வேண்டியவற்றை மாத்திரம் முயற்சியால் அடைய எண்ணத்தில் வலுவேற்றிக்கொள்வது சிறந்தது. 

மனிதன் நிலை பிறழாதிருக்கவும், முயற்சியை முறைப்படுத்தவும், செயல் பிறழாது காக்கவும் இம்முறை மிகவும் அவசியம். எச் செயலுக்கும் மூலம் எண்ணமே ஆகையால் எண்ணத்தில் உறுதி ஏற்படுத்திக் கொள்வதே சங்கற்பம் ஆகும்.

இயற்கையின் ஒழுங்கமைப்புப்படி மழை பெய்கிறது. அணைகட்டி, குளம், ஏரி, வெட்டி நீர் தேக்கி பயன் காண்கிறோம். இயற்கையின் ஒழுங்கமைப்பு இங்கு ‘விதி’ யாக அமைகிறது. முயற்சி ‘மதி’ யாகிறது, தெய்வச் செயலாகிய விதியை உணர்ந்து கொண்டால், முயற்சியின் ஒழுங்கமைப்பில் தான் வாழ்வு சிறப்படையும் என்ற உண்மை புலனாகும்.

அவ்வொழுங்கமைப்பிற்காக மனதிலே உறுதி பெறவேண்டும். எனவே சங்கற்பம் மனிதனுக்கு மிக்க பயன்தருகின்றது. உயர்ந்த நோக்கத்தில் வகுத்து உருப்போடப்படும் சங்கற்பங்கள், பொருள் துறைக்கும் நல்லது; அருள் துறைக்கும் நல்லது. இம்மைக்கும் நல்லது; மறுமைக்கும் நல்லது.’

வாழ்க வளமுடன்.

-

How we can act free from problematic activities with family members and others?


வாழ்க்கைத் துணைவரோடும், பிள்ளைகளோடும், வீட்டில் இருப்போரிடம் பேசும் பொழுதேகூட அதை அவர்கள் புரிந்துகொள்ளாமல் பிரச்சனை எழுகிறதே? எப்படி இதை சரி செய்வது?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி: 

வாழ்க வளமுடன் ஐயா, வாழ்க்கைத் துணைவரோடும், பிள்ளைகளோடும், வீட்டில் இருப்போரிடம் பேசும் பொழுதேகூட அதை அவர்கள் புரிந்துகொள்ளாமல் பிரச்சனை எழுகிறதே? எப்படி இதை சரி செய்வது?

பதில்:

நீங்கள் சொல்லுகின்ற இந்த பிரச்சனை, பெரும்பாலும் எல்லா குடும்பங்களிலும் உண்டு. ஒரு குடும்பத்திலேயே இப்படி இருந்தால், ஒரு சமூகத்தில், நாட்டில், உலகில் எத்தனையோ பிரச்சனை எழுந்துவிடுமே? இதையெல்லாம் எப்படித்தான் சமாளிக்கிறார்களோ? என்ற ஒரு கேள்வியும் உங்களுக்கு எழுந்துவிடும் அல்லவா? ஆம் அதுவும் உண்மைதான். இப்போது இருக்கின்ற தலைவர்கள், தலைவிகள் படும்பாடையும் நாம் அறிவோம் தானே?

இந்த உலகில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும், ஒரு அடையாளம் உண்டு. அந்த அடையாளம்தான் தன்னை வெளிப்படுத்தும். நான் இப்படிப்பட்டவன், இப்படிப்பட்டவள் என்று நாமும் அதை சொல்லால், செயலால் வெளிப்படுத்திக் காட்டுவோம். நம்முடைய சொல்லாலும், செயலாலும் மற்றவர்கள் அதை புரிந்து கொள்ளவும் செய்வார்கள். இது நாமளாகவே விரும்பியும் கட்டமைத்துக் கொள்ளலாம். சில நேரங்களில் நம்மையறியாமலும் அது வெளிப்பட்டு அப்படியான ஒரு தோற்றத்தை ஏற்படுத்திவிடவும் கூடும். அதில் நாம் கவனமாக இருக்கவேண்டும். நான்கு சுவருக்குள் யாரும் பார்க்காதவண்ணம் இருப்பது வேறு, ஒருவரோ, பலரோ, குடும்பமோ, சமூகமோ பார்க்கின்ற பார்வை வேறு என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

பொதுவாகவே ‘நான் நல்லவன் / நல்லவள்’ என்ற ரீதியிலான நம்பிக்கை நல்லதுதான். ஆனால் அதை மற்றவர்கள் மீது காட்டவும் கூடாது, திணிக்கவும் கூடாது. ஒவ்வொருவரும் அவரவர் அளவில் நல்லவர்கள் தான் என்பதை நினைவில் கொள்க. சில விரும்பாத நடவடிக்கைகள், குணங்கள் இருந்தாலும் உடனே காட்டிக்கொள்ளவும் மாட்டார்கள். 

ஒளிவுமறைவின்றி இருக்கக்கூடிய உறவு என்றால் அது கணவன் மனைவி உறவு மட்டுமே. அதில் ஆளுமையும், அதிகாரமும், உதவிடாது. அன்பு மட்டுமே தேவை. இந்த உறவில் இன்னொருவரை திருத்த வேண்டும் என்று நினைக்கவே கூடாது. அதை செயல்படுத்தவும் கூடாது. அவரவர்களுக்கு அது அவரவர் இயல்பு. அதை நீங்கள் சுட்டிக்காட்டலாமே தவிர மாற முயற்சிக்கக் கூடாது. வேதாத்திரி மகரிஷி ‘பொறுமை, விட்டுக்கொடுத்தல், தியாகம்’ என்ற மூன்று தன்மைகளை கணவனும் மனைவியும் ஏற்றுக்கொண்டால், இல்லறவாழ்வு இன்பமாக சிறப்பாக நிறைவாக இருக்கும் என்கிறார். ஆனால் நான், பொறுமை காப்பதா? நான் விட்டுக்கொடுக்கமுடியுமா? அது என் தலைமுறையிலேயே இல்லையே? நான் ஏன் தியாகம் செய்யவேண்டும்? என்றுதான் கேள்வி எழுமே தவிர மாற்றத்தை ஏற்கவே மாட்டொம் அல்லவா?

 வாழ்க்கைத் துணைவரோடும், பிள்ளைகளோடும், வீட்டில் இருப்போரிடம் பேசும் பொழுதேகூட அதை அவர்கள் புரிந்துகொள்ளாமல் பிரச்சனை எழுகிறது என்றால், முதலில் உங்களோடு இருக்கும், பழகும் இவர்கள், அவர்களுடைய இயல்பில் இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். உங்களுடை எக்கருத்தையும், வழிமுறையையும் திணிக்காதீர்கள், அவர்களை திருத்த முயற்சிக்காதீர்கள். உங்கள் சொல், செயல் ஆகிய மூலமாக அவர்களுக்குள் ஏற்படுத்திய பிம்பத்தை கலைக்காதீர்கள். ஒருவேளை தவறாக அவர்கள் கருதியிருந்தால், அதை திருத்திட முயற்சியுங்கள். நான் நல்லவன் / நல்லவள் என்று சொல்லாமல், அதை செயலாலும், அன்பாலும் காட்டுங்கள்.

அவர்களின் ஏற்பு இல்லாமல், கேட்காமல் எதையுமே செய்யதீர்கள். சொல்லாதீர்கள். எப்போதுமே மற்றவர்கள் குறித்த ‘பாவ்வம்’ என்று சொல்லக்கூடிய குணாதசியத்தை நீங்கள் தீர்மாணிக்காதீர்கள். அதுபோலவே ‘நான் இப்படித்தான்’ என்றும் உங்களை முடிவு செய்யாதீர்கள். இயல்பு என்ற நிலைக்கு நீங்கள் வந்து நின்று, அந்ததந்த பொழுதுக்கும், நேரத்திற்கும் தகுந்தபடி, விழிப்பாக செயல்படுங்கள். மற்றவர்களோடு எந்த பிரச்சனையும் எழாது காத்துக்கொள்ளலாம்.

வாழ்க வளமுடன்
-

Who offer the solution for our life sufferings? man, god or nature?


வாழ்க்கை சிக்கல்களுக்கு தீர்வை தருவது யார்? மனிதனா? கடவுளா? இயற்கையா?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, வாழ்க்கை சிக்கல்களுக்கு தீர்வை தருவது யார்? மனிதனா? கடவுளா? இயற்கையா?

பதில்:
நல்ல சிந்தனைக்குறிய கேள்விதான். வாழ்க்கை என்பது சிக்கலானது இல்லை. மனிதர்கள் வாழும் காலத்தில் அவர்கள், அவர்களுக்குள்ளாக ஏற்படுத்திக்கொண்டே சிக்கல். அது அந்த மனிதர்களுடைய வாழ்நாளெல்லாம் தொடர்வதால், வாழ்க்கை சிக்கலானதாக தெரிகிறது என்பதுதான் உண்மை. உலகில் ஐந்தறிவு ஜீவராசிகளில் சிக்கல் உண்டா? உண்டு அவை, இயற்கை சிக்கலாக இருக்கும், அதை சமப்படுத்தி, அதை வென்று வாழக்கூடிய தன்மை அவைகளுக்கு உண்டு. இதை Survival of the Fittest என்று சொல்லுவார்கள். தமிழில் மிக கேவலமாக ‘வலியது வாழும்’ என்று மொழி பெயர்த்திருக்கிறார்கள். அது உண்மையில்லை. ‘தகுதியுள்ளது வாழும்’ என்பதுதான் சரியான அர்த்தமாகும். நாமும் அவ்வாறேதான்.

ஒரு மனிதரை சந்தித்து, அவர் யாராக வேண்டுமானலும் இருக்கட்டும், எத்தகைய பின்புலம் உள்ளவராகவும் இருக்கட்டும், என்ற நிலையில் எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டால், நாம் கேட்பதற்காக ‘நன்றாக இருக்கிறேன்’ என்று மறுமொழி தருவார். பெரும்பாலும் முகம் அறியாத நபர்களிடம், தங்களைப்பற்றி எதுவும் சொல்லக்கூடாது என்றுதான் நம் மக்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள். அதனால் நாம் அப்படியே நகர்ந்துவிடாமல், ‘ஏதேனும் பிரச்சனை உள்ளதா? நான் உதவலாமா?’ என்று கேட்டால் கூட ‘தேவையில்லை’ என்றுதான் சொல்லுவார்கள். ஆனால் தங்களிடம் உள்ள குறையை சொல்லுவதற்கும், பகிர்ந்து ஆலோசனை கேட்பதற்கும், உதவியாகவும் யாரையாவது எதிர்பார்ப்பார்கள். இந்த நிலையில், எல்லோருக்குமே வாழ்க்கை சிக்கல் உள்ளது என்று அறியலாம். ஆனால அவரவர் அளவில் சிறியதாகவோ, பெரியதாகவோ இருக்கும்.

பெரும்பாலான மனிதர்களின் முதல்நிலை சிக்கல், பணமும், வருமானமும் தான் என்பதை உறுதியாக சொல்லலாம். பணம், வருமானம் இருப்பவருக்கு, அதை செலவு செய்வதிலும், பற்றாக்குறையிலும் சிக்கல். பணமும் வருமானமும் இல்லாதவருக்கு அன்றாட செலவுகளுக்கே சிக்கல். இந்த இரண்டுக்குப் பிறகுதான் மற்ற எல்லா சிக்கல்களையும் வரிசைப்படுத்த முடியும்.

இத்தகைய சிக்கல்கள் தானாக வந்ததா? சிந்தித்துப்பாருங்கள். கொஞ்சம் முன்னோக்கி பார்த்தால், எங்கோ, ஏதோ ஓர் இடத்தில் நம்முடைய எதிர்பார்ப்பும், ஏமாற்றமும் கலந்திருக்கும். நம்முடைய செயல்பாடும், திட்டமும், உழைப்பும், சரிசெய்தலும் தடுமாறி இருக்கும். நடப்பது நடக்கட்டும் என்று இருந்தால் கூட காலத்தில் அதுவும் சிக்கலாகிவிடும் தானே?! எனவே எப்படிப் பார்த்தாலும், ஒரு சிக்கல் எழுகிறது, எழுந்திருக்கிறது என்றால், அது நம்மால்தான் வந்திருக்கிறது என்று சொல்லலாம். நம்மைச் சார்ந்தவர்களால் கூட நமக்கு வரும். அங்கே நாம் தப்பிக்கவும் வழியில்லை. ஏனென்றால், குடும்பம், உறவு, வாழ்க்கைத்துணை, குழந்தைகள், நண்பர்கள் என்றில்லாமல் தனித்து வாழ்ந்திடவும் வழியில்லையே. 

இங்கே நம்முடைய முன்னோக்கிய பார்வையும், எதிர்கால திட்டமிடுதலும் நிச்சயம் தேவைப்படும். இயற்கையில் சிக்கல் எழுகிறதா? என்றால் ஆம், ஆனால் அது அதன் போக்கில்தான் நிகழ்கிறது. ஒரு பழமொழி சொல்லுவதுபோல, ‘உப்பு விற்கப்போனால் மழை பெய்கிறது, மாவு விற்கப்போனால் காற்று அடிக்கிறது’ என்பதாக. கிராமங்களில் இதற்கு பதிலும் சொல்லுவார்கள், ‘இது ரெண்டையும் கலந்து பண்டமாக செய்து விற்கலாம்ல’ என்பார்கள். எனவே இயற்கை நமக்கு எந்த ஒரு சிக்கலையும், தனி நபருக்காக உருவாக்குவதில்லை. இயற்கையோடு வாழ்ந்தாக வேண்டிய நாம்தான் அதில் சிக்கிக் கொள்கிறோம்.

நீங்கள் கேட்ட கேள்வியில்,  தீர்வை தருவது யார்? மனிதனா? கடவுளா? இயற்கையா? என்பதில், மனிதன், கடவுள், இயற்கை இம்மூன்றுக்கும் ஒரு தொடர்பு இருப்பதையும் நாம் அறியலாம். எப்படியென்றால், மனிதன் கடந்து உள்ளே பயணித்து தன்னை அறிந்தால் இயற்கையின் உண்மையை தெரிந்து கொள்ளலாம் என்ற விளக்கமாகும். அப்படியானால் முடிவாக என்ன சொல்லமுடியும் என்றால், மனிதன் இயற்கையிலிருந்து விடுபட்டவன் இல்லை.

ஆனால் அவன் தனித்திருப்பதாக கருதுகிறான். இயற்கையில் ஒரு விதி இருக்கிறது. அது செயல் விளைவு தத்துவமாக செயல்படுகிறது. இன்னது செய்தால் இன்னது விளையும் என்பது பொதுவிதி. இது யாருக்காகவும், எதனாலும் மாறாது, குழையாது. சிதறாது. இதை புரிந்து கொண்டால், மனிதன் உருவாகிக்கொண்ட சிக்கல்களுக்கு தீர்வு மனிதனாலேயேதான் பெறமுடியும். மனிதன் தனக்குத்தானே தீர்வு தரவும் முடியும், பிறருக்கும் தீர்வு தரமுடியும். அதுபோலவே உங்களுக்கு நீங்களும் தீர்வு கொண்டுவரலாம், பிறரும் உங்களுக்கு தீர்வு தந்துவிடமுடியும். இதை சாத்தியப்படுத்துவது யார்? நீங்களேதான்.

வாழ்க வளமுடன்.
-

Why unable to complete and get the obstacles on action based on thought?


நினைத்த ஒன்றை செய்யமுடியாமல் போவதும், தடை உண்டாவதும் ஏன்?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, நினைத்த ஒன்றை செய்யமுடியாமல் போவதும், தடை உண்டாவதும் ஏன்?

பதில்:

நினைத்த ஒன்றை செய்வது என்றால், தனி மனிதனாக இருக்கும் பொழுது, தனக்காக ஏதேனும் செய்து கொள்வது நிகழும், எனக்கு பிடிக்கும் அதனால் இப்படி செய்கிறேன் என்று சொல்லவும் முடியும். ஆனால் அது, உங்களுடைய அளவுக்குள் இருப்பதாகவும், மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய வரையறை, வரம்பிற்குள் இருப்பதாகவும் இருக்கவேண்டியது அவசியம். ஏனென்றால் ஒரு மனிதனாகிய நீங்கள், சமூகத்தின் அங்கம். உங்களுடைய எந்த ஒரு செயலும், நடவடிக்கையும் இந்த சமூகத்தின் வழியாக பிரதிபலிக்கும் என்பதே உண்மை. அதுதான் இயற்கையாகவும் உள்ளது.

உதாரணமாக, உங்கள் வீட்டிற்குள்ளே நீங்கள் எப்போதும், உங்களுக்கு பிடித்தவற்றை செய்யலாம். உங்கள் தாய், தந்தை, உடன்பிறந்தோர் அதை அனுமதிக்கலாம், சிலவேளை அவர்களும் கூட, உங்களிடம் ‘இப்படியெல்லாம் செய்யாதே, இது தவறு, திருத்திக்கொள்’ என்பார்கள். சில விருந்தினர்கள், சொந்தபந்தம் உங்கள் இல்லத்தில் வந்திருந்தால் கூட, உங்கள் நடவடிக்கைகள் பார்த்து, ‘இவன்(ள்) ஏன் இப்படி?’ என்று நினைத்துக் கொள்வார்கள். உங்கள் குடும்பத்தோடு உரிமை உள்ளவர்கள், உங்களைப்பற்றி மற்றவர்களிடம், திருத்தச் சொல்லி அக்கறை கொள்வார்கள். சிலர் நேரடியாக உங்களிடமே சொல்லவும் கூடும்.

குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள், ‘உனக்கும் நல்லதாய் ஊருக்கும் நல்லதாய் எண்ணுவதும், சொல்வதும், செய்வதும் சிறப்பு’ என்று சொல்லுகிறார். உங்களுடைய எந்தஒரு சிந்தனை, செயல், வார்த்தை ஆகியன, மற்றவர்களும் ஏற்றுக்கொள்ளும்படி அமைத்துக் கொண்டால், எந்த தடையும் நேரப்போவதில்லை. நீங்கள் நினைத்ததை செய்வதற்கு சாதகமாக அமையும், மேலும் பிறரும்கூட இதில் துணையாக இருப்பார்கள்.

இதற்கு சரியான தீர்வு, முன்கூட்டியே விளைவு என்ன? என்று தீர்மானித்துக் கொள்வதுதான் நல்லது. இதை செய்தால் எனக்கு என்ன நிகழும்? இதனால் எனக்கோ, மற்ற யாருக்காவதோ தொந்தரவும், பிரச்சனைகளும் எழுமா? அது உடனடியாகவா? நீண்டநாள் கழித்து வருமா? இதில் ஏதேனும் மாற்றம் செய்யமுடியுமா? இதன் தேவையும் அவசியமும் உண்மைதானா? என்று பல கேள்விகள் கேட்டு அதற்கான விடையை தெளிவு செய்து கொள்ளலாம்.

ஒரு அலுவலகத்திலும், அரசு நிர்வாகங்களிலும் எந்த ஒரு முடிவும் உடனடியாக செயல்படுத்தப்படுவதில்லை. ஒருவேளை அப்படி செயல்படுத்துவதாக இருந்தால், ஏற்கனவே சில நிபுணர்கள் குழு அதை ஆராய்ந்து முடிவு செய்திருக்கும் என்பதே உண்மை. திடீரென்று ஒன்றை பிறர் நமக்கு சொன்னால் கூட, திணித்தால் கூட நாம் அதை ஏற்க மறுப்போம் தானே? அதுபோலவே நீங்கள் சொன்னதை நினைத்ததை சொல்லமுடியாமலும், செய்யமுடியாமலும் போகலாம். 

இன்னொரு முக்கியமான காரணம், நீங்கள் நினைத்ததை செய்வதற்கு தகுந்த காலமா? என்பதை முதலில் ஆராயவேண்டும். சூழ்நிலையும் பொருத்தமாக உள்ளதா என்பதையும் அறியவேண்டும். இப்படி எல்லாவற்றையும், திட்டமிட்டு அலசி, ஆராய்ந்து பிறகு செயலாக்கம் செய்தால், நினைத்த ஒன்றை செய்வதில் வெற்றி உண்டு.

வாழ்க வளமுடன்.

-

Why I getting the breathing problems when practice meditation?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, தவத்தில் செய்வதற்கு உடகார்ந்த உடனே மூச்சு மூட்டுவதாகவும், சுவாசிக்க கடினமாகவும் இருக்கிறது ஏன்? இதை எப்படி சரிசெய்வது?


பதில்:

இதுபோலவே நிறைய அன்பர்கள் சொல்லுவதை கேட்டிருக்கிறேன். இப்படி இயல்பான சுவாசம் மாறி உங்களுக்கு தொந்தரவாக மாறுவதற்கு சில காரணங்கள் அமைந்துவிடுகின்றன. முக்கியமாக நம்முடைய வாழ்க்கைச் சூழலும் பெரும் காரணமாகும். கிட்டதட்ட மூன்று ஆண்டுகள், கரோனா நோய் தொற்று, நம்மை மட்டுமல்ல, உலகெங்கும் வாட்டி வதைத்தது. எத்தனையோ மக்களை நாம் இழந்தும் விட்டோம். நம் வீட்டிலும் கூட அப்படி நிகழ்ந்துவிட்டது வருத்தமானதே! இந்த கொடிய அனுபவத்திற்குப்பிறகு, இந்த வருடம் முதலாகவே நல்ல மாற்றம் வந்துவிட்டது. எனினும் கூட நாம் அந்த அனுவத்தின் வழியாக பாடம் கற்று, அதை திருத்திக்கொண்டோமா? என்றால் நாம் என்ன பதில் சொல்லுவோம்?

தடுப்பு ஊசிகள் செலுத்திக்கொண்டோம், மருந்துகள் எடுத்துக்கொண்டோம், முககவசம் அணிந்து, தனிமை செய்துகொண்டோம், தூர அளவில் நின்று பேசுதல், பழகுதல் நிகழ்த்திக்கொண்டோம் என்று சொல்லுவோம். ஆனால் இதற்கு மேலாக ஏதேனும் செய்தோமா? என்றால்?!

வாழ்கின்ற நமக்கு சுவாசம் எவ்வளவு முக்கியம் என்பது தெரிந்தும், நம் சுவாசம் சிறக்க தனியே பயிற்சி செய்வதில்லை. ஆனாலும் அது இயற்கையாக, இயல்பாக, தானாக நிகழ்கிறது. நுரையீரலும், உதரவிதானமும், வயிறும் நன்கு சுருங்கி விரிந்தால்தான் நல்ல முழுமையான சுவாசம் ஏற்படுகிறது என்பதுதான் உண்மை. இந்த மூன்று உறுப்புக்களும், அதன் அசைவும் உங்களுக்கு, சுவாசிக்கிற நமக்கு வசமாக வேண்டும்.

அதற்கு பயிற்சி செய்தலும் வேண்டும். அதில், வேதாத்திரிய எளியமுறை பயிற்சியை நாம் கற்றுக்கொண்டோம். அதை ஒவ்வொருநாளும் செய்யவேண்டும். தவத்திற்கு முன்பாக செய்தல் மிகச்சிறப்பு. இந்த வழியில்தான் நீங்கள் இந்த சுவாச பிரச்சனையை சரி செய்யமுடியும்.

வாழ்க வளமுடன்.

Are you feared because someone has teased your face and by comment? Is that true?!


உங்கள் முகம் காட்டும் காணொளி பதிவுகள் சமீபமாக ஏதுமில்லை, ஏன்?



வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, கடந்த ஒருசில மாதங்களாக உங்கள் முகம் காட்டும் காணொளி பதிவுகள் ஏதுமில்லை. ஏதேனும் காரணம் உண்டா?!

[ திருத்தப்படாத கேள்வி இதோ:
வாழ்க வளமுடன் ஐயா, யாரோ உங்களுடைய முகத்தையும் கருத்தையும் கிண்டல் செய்ததால், பயந்துதானே முகம் காட்டும் காணொளி பதிவதில்லை? உண்மைதானே?!]


பதில்:

என்னுடைய 35 ஆண்டுக்கால வேதாத்திரிய பயணத்தில், இரண்டாண்டு மன்ற சேவையில் அன்பர்களுக்கு தீட்சை வழங்கி வந்திருந்தாலும், தன்னையறியாது பிறருக்கு சொல்வதில் விருப்பமின்றி, சேவையிலிருந்து விலகி, தனியனாக பயணித்தேன். என் கர்ம வினைகளின் சுழற்சியில் ஆண்டுகள் ஓடின. பல சோதனைகளிலும் நான் சிக்கினேன். உயிர் மட்டும் பிரியாத அளவுக்கு இரண்டு சாலை விபத்துக்களில் சிக்கி, கை மூட்டு, தோள்பட்டை எலும்பு முறிந்து மீண்டேன். வேலை, தொழில், கல்வி பயிற்றுனர் இப்படி பலதரப்பட ஏற்றமும் தாழ்வும் நிகழ்ந்தன. எல்லாவற்றையும் எதிர்ப்பின்றி ஏற்றேன். முரண்படாமல் அந்த இறையாற்றலின் விருப்பத்திற்கு ஒத்துழைத்தேன்.

குரு மகான் வேதாத்திரி மகரிஷி சொல்லுவதுபோல,

இயற்கையென்ற பேராட்டக் காரனுக்கு என்றும்
எல்லாச் சீவன்களுமே எடுத்தாடும் காய்கள்.
பெயர்த்துஇடம் மாற்றிவைப்பான் பிய்த்தெறிவான் அருள்வான்
பிழையென்று தீர்ப்பளிக்கப் பிறந்தோர்யார்? பேருலகில்

இந்த உண்மையை நாம் புரிந்துகொண்டால் போதுமானது. அப்படித்தான் எனக்கான வாழ்க்கை அனுபவங்கள் அமைந்தன. அதனால் எனக்கு நிகழ்வதை தனியாக குறிப்பெடுத்துக் கொண்டோ, மனதிற்க்குள்ளாக வைத்து உரு ஏற்றி, வஞ்சமும் பழியும் வாங்கும் எண்ணங்களோ எனக்கு தேவையில்லை, அதற்கு அவசியமும் இல்லை. இதற்கெல்லாம் எனக்கு நேரமும் இல்லை. அந்த வழியில்தான், சரணாகதி என்ற நிலையில், நான் என்று என்னை தனிமைப்படுத்திக் கொள்ளாமல், குரு மகான் வேதாத்திரி மகரிஷியோடு, கூடவே பயணித்ததில், அவரின் வழிகாட்டலோடும், இறையாற்றலின் கருணையால் ‘என்மனதை விரித்தேன், இணைத்துக்கொண்டாய் உன்னுள்ளே’ என்று மகரிஷியே சொல்லுவது போலவே, 2018 ம் ஆண்டில் முழுமையான தத்துவ விளக்கத்தை உணர்ந்தேன். 

மேலும் பொதுவெளியில் வேதாத்திரிய தத்துவ உண்மைகளை சொல்ல வந்த பிறகு, யாருக்குமே என்னை தெரியாது, அறிமுகமும் இல்லை, இத்தனைக்கும் ஓவிய வேலைகளில் 16 ஆண்டுகால இணையவழி தொடர்பில் வளர்ந்தவன். பல்லாயிரக்கணக்கான தேடல் முடிவுகளும் என் ஒவியங்களும், சமூக வலைத்தளங்களும் சான்றாக இருக்கின்றன என்றாலும் வேதாத்திரிய மனவளக்கலை மன்றத்தோடு வளர்ந்தவன் இல்லை. 1993ம் ஆண்டிற்குப் பிறகு, தனித்த பயணமே. அதனால் நிச்சயமாக அறிமுகம் ஏதுமற்றவன். திடீரென்று சேனல் ஆரம்பித்து, வேதாத்திரியத்தை சொன்னால் ஏற்பார்களா?

இவன்யாரடா நேற்று முளைத்த காளான் என்றுதானே தோன்றும்?. எனவே என்னை, அவர்களோடு சேர்ந்த முட்டாள் என்றுதான் நினைப்பார்கள். இது எல்லோருக்குமே நிகழ்வதுதான். இதை நானே, ‘நான் முட்டாள் இல்லை’ என்று சொல்லி விளக்கம் தரவும் முடியாதே? சொன்னாலும் நம்பவா போகிறார்கள். அதனால் வழக்கமான சேவையை தொடர்கிறேன். எனினும் விளக்கமாகவும் ஒரு பதிவை தருகிறேன் இங்கே.

இந்த கேள்வியின் உள்நோக்கம் இரண்டுவிதமாக எடுத்துக் கொள்கிறேன். அவை 1) உங்கள்  முகம் காட்டும் பதிவுகள் நன்றாக இருந்தது, எனவே அதை எதிர்பார்க்கிறேன் என்ற நோக்கமும், 2) நீயெல்லாம் அறிவுரை செய்யாதே, மொகறை சரியில்லை என்றும், முட்டாள் என்றும் திட்டியதால்தான், உங்கள் முகம் காட்டும் பதிவுகளை நிறுத்திக்கொண்டீர்களா? என்ற உண்மை அறியும் நோக்கமும் ஆகும்!

எனவே இந்த கேள்வியின் நோக்கம் எப்படி என்றாலும் இந்த கேள்விக்கான பதில் தந்துவிடுவது நல்லதுதான். எதிர்பார்ப்பு என்பதை நான் ஏற்க முடியாது ஏனென்றால், யாருடைய எதிர்பார்ப்புக்கும் நான் பதிவுகளை தருவதில்லை. குரு மகான் வேதாத்திரி மகரிஷி வழங்கிய வேதாத்திரியத்தில் எனக்கு பிடித்த ஒரு விளக்கத்தை, பிறரோடு பகிர்ந்துகொள்ள கருதிய ஒரு விளக்கத்தை, எனக்கு தூண்டுதலாக அமைந்த ஒரு விளக்கத்தை மட்டுமே பதிவாக தருகிறேன். எந்த பதிவுக்காகவும் என்னிடமும் எதிர்பார்ப்பு இல்லை. மிகவும் கடினமாக, தேடி தொகுத்து தந்த நல்ல பதிவுகள் அன்பர்களால், கண்டுகொள்ளாமல் போவதே இதற்கு சான்றாகும்.

சில அன்பர்கள் திட்டினார்கள் என்பதை நான் கவனத்தில் கொள்வதில்லை. அதில் என்னுடைய தவறு ஏதேனும் இருக்கிறதா? என்று குறித்துக்கொள்வேன். அவர்களின் பின்னூட்டத்தால் நான் புன்னகைத்துக் கொள்வேனே தவிர வருத்தப்படுவதில்லை. அவரவர் அவரவருடைய அறிவாட்சித்தரத்தில்தான் (Personality) அடுத்தவரை எடை போடுகிறார் என்பதால், நான் அவரால் ஒன்றும் குறைந்து போய்விடுவதில்லை. இந்த பின்னூட்டத்தில் எனக்கு கிடைத்தபாடம் ஒன்று உள்ளது. என் முகம் காட்டுவது இங்கே அவசியமில்லை என்பதை புரிந்துகொண்டேன். வேதாத்திரியம் தான் முகமாக கருதுகிறார்கள் என்பதால் என்முகம் அவர்களுக்கு தேவையில்லைதானே?!

மேலும் என் முகத்தை அவர்கள் பார்த்து, அவர்களின் மனம் என்போல வடிவமெடுக்க வேண்டிய அவசியமும், என் வழியாக சொல்லும் கருத்துக்களை செமெடுத்து அறியும் அவசியமும் அவர்களுக்கு இல்லை. அவர்களுக்கு வேறு ஏதோ ஒன்று அவசியமாக இருக்கிறது. நிச்சயமாக அவர்களுக்குத் தேவையானது அவர்களுக்கு கிடைக்கட்டும்! இதற்கு நான் இங்கே, வாழ்த்தினால் கூட ‘நீ வாழ்த்தி எனக்கொன்றும் கிடைத்துவிடப் போவதில்லை, போவியா?!’ என்பார்கள் தானே?!

இன்னொரு விளக்கத்தையும் அவர்கள் நிலைக்காக தரவேண்டியது அவசியமாகிறது. பின்னூட்டம் இட்டவர்கள் ஒருவகையான போலியான பிம்பத்திற்கு அடிமையாகிவிட்டார்கள். அவர்கள் மனமும் அப்படியான நடிப்புத்தன்மைக்கு பழகிவிட்டது. இதை இந்த வேதாத்திரிய யோக (வேதாத்திரிய சானல்) வழியாக மாற்றிட முடியுமா? நிச்சயமாக முடியாது. 

சரி அப்படியானால், உங்கள் முகம் காட்டும் காணொளி பதிவு வருமா? நிச்சயம் வரலாம். அது எனக்குள்ளாக எப்போது தோன்றுகிறதோ அப்பொழுது பதிவாக வரும். யாரோ சிலருக்காக சில விஷயங்கள் மறைந்துவிடுவதில்லை, அந்த சிலரால் மறைக்கப்படுவதும் இல்லை. நெல் விதைக்கும் அதே வயலில்தான், களைகள் அபரிதமாக பச்சைப்பசேல் என்று முளைத்து படரும். ஆனால் நம் நோக்கம் நெல் விதைத்து காத்து அறுவடை செய்வதுதானே தவிர வேறொன்றுமில்லை. என்னுடைய இந்த வேதாத்திரிய யோக காணொளி தளத்திற்கும் அத்தகைய நோக்கம் உண்டு. உங்கள் கேள்விக்கு நன்றி. வாழ்த்துகள்!

நீண்ட, தெளிவான, உண்மையான, முழுமையான அனுபவம் உணர்ந்ததால்தான். இதுவரையிலும் COPYCAT என்று சொல்லப்படும், அடுத்தவரின் உழைப்பை திருடி பதிவுகளாக நான் மாற்றிக்கொண்டதும் இல்லை. பெரும்பாலாக எல்லாமே வேதாத்திரியத்தின் அடிப்படையில் எழுந்த என்னுடைய சொந்த எழுத்துக்களும், கருத்துக்களும், என் நண்பர்களுடைய அவர்கள் பெயரிலான பதிவுகள் மட்டுமே பகிர்ந்தும் வருகிறேன். 

உண்மை விளக்கங்களையும், அனுபவ பதிவுகளையும், கேள்வி பதில்களையும், கவிதையையும், அதன் கருத்துரை விளக்கங்களையும்,  என் முகத்தையும், என் குரலையும் ஏற்று, வேதாத்திரிய யோகா எனும் (வேதாத்திரிய சானல்) காணொளி தளத்தையும் ஊக்குவிக்கும் 25K வேதாத்திரிய அன்பர்களுக்கும், இனியும் இணையப்போகும் எண்ணற்ற அன்பர்களுக்கும் என்னுடைய நன்றியும், வாழ்த்துகளும். வாழ்க வளமுடன்.

வாழ்க வளமுடன்.

Society, which does not respect a contemporary, celebrate after death? Why?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, சம காலத்தில் வாழும் ஒருவரை மதிக்காத இந்த சமூகம், இறந்தபிறகு கொண்டாடுகிறதே? ஏன்?


பதில்:

நல்ல சிந்தனைக்குரிய கேள்வி. ஆம் உண்மையே.சம காலத்தில் வாழும் ஒருவரை மதிக்காத இந்த சமூகம், இறந்தபிறகு கொண்டாடுகிறது. சமூகம் மட்டுமல்ல, இந்த உலகமே என்றும் சொல்லலாம். ஒரே காலத்தில் பிறந்து வளர்ந்த மக்களிடையே, ஒரு சம அளவிலான மனோபாவம் மட்டுமே இருக்கும். ஆனால் அனுபவத்திலும், அறிவின் வளர்ச்சியிலும், சிந்தனையிலும், செயலிலும், திட்டங்களிலும் மாறுபட்டு இருப்பதை மறுப்பார்கள். ‘அப்படி என்னய்யா இவர் பெரிய ஆளு?’ என்று வெளிப்படையாகவும் சொல்லுவார்கள்.

நீங்களே உங்களை பரிசோதிக்கலாம். உங்கள் மாணவ பருவத்தை நினைவுக்கு கொண்டு வாருங்கள். உங்களோடு படித்த மாணவர்கள் ஒவ்வொருவரையும் இப்போது பார்த்தால், அவர்களின் வளர்ச்சி, திறமை, சிந்தனை, செயல்பாடு மாறி இருப்பதை கண்டு நீங்கள் வியக்கலாம் அல்லது வருந்தலாம். அதுபோலவே உங்களையும் அதே கண்ணோட்டத்தில் அவர்கள் பார்ப்பார்கள். இதுதான் நிகழும். இதற்கு மேலே உங்களை அவர்களும், அவர்களை நீங்களும் மாறுதலாக பார்க்க மாட்டீர்கள். ஏனென்றால் நீங்கள் அனைவரும் சமகாலத்தவர்கள், ஒன்றாக இருந்தவர்கள் ஆயிற்றே!

இன்னொரு உதாரணமாக, ‘மகாத்மா காந்தி’ என்று அழைக்கப்படும் நம் தேசப்பிதா, ‘மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி’  தன்னுடைய வாழ்நாளில், தான் நினைத்த எண்ணப்போக்கை செயல்படுத்திடும் பொழுது, மற்றவர்களால் அவமானங்களைத்தான் சந்தித்தார். இந்திய சுந்திர போராட்ட காலத்தில், ‘இவருக்கு இதெல்லாம் தேவையா?’ என்றுதான் விமர்சனங்களை பெற்றிருக்கிறார். ஆனால் அவரின் துணிவான, உறுதியான செயல்பாட்டின் வழியாகவே, விமர்சனங்கள் வைத்த்தவர்களை வாயடைக்கச் செய்துவிட்டார். காந்திஜியின் தலைமுறையினரை விட, அடுத்த தலைமுறைதான் அவரை கொண்டாடியது. ஆனால் காந்திஜியின் நோக்கம் வாழும் தலைமுறையின் விடுதலையோடு அடுத்த தலைமுறைக்கான விடுதலையும் இனி வரக்கூடிய தலைமுறைக்கான விடுதலையும் தானே? மேலும் காந்திஜி என்பவரை விரும்பாத, பிடிக்காத நபர்கள் இன்னமும் இருக்கிறார்கள் தானே?!

இதுபோல அறியப்படாதவராகவும்,  தவறாக கருதப்படுவோராகவும், இந்திய சுந்திர போராட்டங்களில் அவர் பங்கை மறைத்தும் காட்டப்படுபவர், நேதாஜி சுபாஷ்சந்திர போஸ் ஆவார். அவருடைய வாழும் காலம் முதல் இப்போதுவரை பலப்பல விமர்சனங்களை, கதைகளை, கருத்துக்களை வைக்கிறார்களே தவிர, அவரின் உண்மை சாதனைகளை ஏற்றுக்கொள்ள தயங்குகிறார்கள் என்றே அறியமுடிகிறது. காந்திஜியின் வழியான அஹிம்சா சுதந்திர போராட்டத்திற்கும் செயல்பாடுகளுக்கும் மாறுதலான நிலையில்தான் நேதாஜி சுபாஷ்சந்திர போஸ் செயல்பட்டார். இதற்காக, இந்தியாவை ஆண்ட ஆங்கிலேய அரசுக்கு எதிரான நாட்டு அரசுகளின் ஆதரவையும் தேடி ஏற்றுக்கொண்டார். அப்போது நடந்த போர்களிலும், சண்டைகளிலும், பிரச்சனைகளிலும் ஆங்கிலேயர்களுக்கும், ஆங்கிலேய அரசுக்கும் எழுந்த பிரச்சனைகள் பல. அதில் என்னென்ன ரகசியங்கள் இருந்தன என்று யார் அறிவார்? 

குரு மகான் வேதாத்திரி மகரிஷியும், தான் பிறந்து வளர்ந்த ‘கூடுவாஞ்சேரி’ ஊரில் பலவித இன்னல்களை சந்தித்தார். அந்த குறிப்புக்கள் அவரின் என்வாழ்க்கை விளக்க நூலில் சொல்லப்படவில்லை என்றாலும், பிறர் எழுதிய மகரிஷியின் வாழ்வில் நடந்த நிகழ்வுகள் தொகுப்பில் படிக்கமுடியும். ‘கூடுவாஞ்சேரி’ ஊரில், வேதாத்திரி மகரிஷி அமைத்த தியான குடில், மாவட்ட கலெக்டர் அவர்களால், அரசு வழங்கிய நிலத்தில், மகரிஷியின் தொண்டு செய்யும் கருத்தை ஏற்று அரசாங்கமே அளித்த நிலம் அது. ஆனால். அக்குடில் உடனடியாக அந்த ஊர்கார்களால் கலைக்கப்பட்டு, பெரும் பிரச்சனையாகி, மகரிஷியின் உயிருக்கும் அச்சுறுத்தலாக அமைந்ததை சொல்லலாம். இதை மகரிஷி அவர்கள் ‘ எனக்கு இந்த ஊரில் வேலையில்லை, என்ற பாடத்தை இறைநிலை எனக்கு சொல்லுகிறது’ என்று குறிப்பிடுகிறார்.

வேதாத்திரி மகரிஷி குறித்த உண்மைகளை உணர்ந்த நாம், குரு மகான், தத்துவஞானி, அருட்தந்தை, மகரிஷி, என்று புகழ்பாடுகிறோம். இப்போதைய தலைமுறையும் போற்றுகிறது. வரும் தலைமுறையும் உலகமும் போற்றும். இதுதான் புரிந்துகொள்ளும் நிலை.

ஆனாலும் வாழும் காலத்தில் சக மனிதர்கள், அவ்வளவு சுலபமாக ஏற்றுக்கொள்ள மறுப்பார்கள் என்பதுதான் உலக நிலைபாடு. அது அவர்கள் குறை மனமும், அறிவும் செய்யும் மாயமாகும்.

வாழ்க வளமுடன்.

Why getting sleeping disorder and dreaming on everyday? Any solution?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, அடிக்கடி கனவுத்தொல்லை இருக்கிறது. தூக்கமும் இல்லை. இதற்கான காரணம் என்ன?


பதில்:

உங்கள் வாழ்வில் நீங்கள் அதிகம் உணர்ச்சி வசப்படுபவராக இருக்கிறீர்கள். மேலும் ஏதெனும் நடந்துவிடுமோ என்ற பயமும், அதனோடு கூடிய சிந்தனைக் குழப்பங்களும் உங்களுக்கு இருக்கிறது என்றும் உறுதியாக சொல்லலாம். உங்களில் செயலில் நீங்கள் சரியாக இருந்தால் ஏன் பயம் வருகிறது? எனவே உங்களுடைய எந்த செயலிலும் கவனமாக, சரியாக செய்கிறேனா? என்று கவனியுங்கள். அல்லது திட்டமிட்டு அந்த செயலை செய்யுங்கள். பேசும்பொழுதும் கூட அப்படி கவனிக்க வேண்டும். ஏதோ தோன்றியது சொல்லிவிட்டேன் என்று பேசிவிடக்கூடாது. இதனால் நீங்களும் வருத்தப்படுவீர்கள், எதிராளும் வருத்தப்படுவார். அதுவே உங்களை குழப்புகிறது.

இந்த குழப்பங்கள், பயம், சிந்தனை தடுமாற்றம் எல்லாமே உங்கள் அடிமனதில் மிகத்தெளிவாக பதிந்துவிடும். நீங்கள் தூக்கத்தில் இருக்கும் பொழுது, புறமனம் இயங்காத நிலையில், அடிமனம் விழித்துக்கொள்கிறது. அதுதான் இப்படியெல்லாம் செய்தாய், இப்படி விளைவு வந்தது என்றெல்லாம் எடுத்துக்காட்டும். பிறர் இப்படி செய்தார்கள் என்றும் சொல்லிக்காட்டும். இனிமேல் இந்தமாதிரி செய்யலாமே என்று உங்களுக்கு பாடமும் நடத்தும்.

உங்கள் கனவில், எக்காலத்திற்கும் பொருந்துவதாகவே காட்சிகள் அமையும். அடிமனம் விழித்துக்கொண்டால் உங்களுக்கு தூக்கமும் தடைபடும். ஆழ்ந்த தூக்கம் கிடைக்காது. எவ்வளவு நேரம் தூங்கினாலும், தூக்கக் கலக்கமும், உடல்சோர்வும் இருக்கும். முக்கியமாக மனதில் நிம்மதி உணர முடியாது. இதனால், அன்றைய புதிய நாளும் கெட்டுப்போக வாய்ப்பு அதிகமாகிவிடும்.

நீங்கள் வேதாத்திரிய யோகம் கற்றவரானால், இரவில் தூக்கமின்மையும், கனவுகளும் வந்து தொல்லை தருமானால், சாந்தி தவம் செய்துவிட்டு பிறகு தூங்கப்பழகுங்கள். ஒரு மூன்று நாள் இரவில் தவம் செய்துவந்தால் மாற்றம் கிடைக்கும். உங்கள் செயலில், சிந்தனையில், பேச்சில் கவனமாக இருந்து, நல்லதை பேசுவேன், நல்லதை செய்வேன் என்று உறுதிபட இருங்கள். பிறர் மனவருத்தம் பட ஏதும் செய்யாது தவிர்த்துப் பழகுங்கள். இந்த பழக்கத்தை தினமும் கடைபிடித்தால், கனவுத்தொல்லையில் இருந்தும், தூக்கமின்மையில் இருந்தும் மீண்டுவிடலாம்! மேலும் மனவருத்தம் தரும் சினிமா, தொலைகாட்சி, கைபேசி காட்சி பார்க்காதீர்கள். அதுவும் காரணமாக அமைந்திருக்கும் என்பதே உண்மை!

வாழ்க வளமுடன்.

What is Gnana in Tamil? How to get it?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, ஞானம் என்பது என்ன? அதை எப்படி பெறுவது?


பதில்:

ஞானம் பெறுதல் எப்படி என்றால், முதலில் உங்களுக்கு என்ன தேவை? எது எனக்கு வேண்டும்? எதில் நான் உயர்வடைய வேண்டும்? என்ற நோக்கமும், சிந்தனையும் வேண்டும். அதை நோக்கியே உங்கள் கவனம் இருக்கவேண்டும். மனம் ஒருமுகம் என்று கூட சொல்லலாம். அத்தகைய ஞானம் என்பதை குண்டலினி யோகத்தின் வழியாக பெறுவது ஒருவகை. வேறு சில வாழ்க்கைக்கு, அறிவுக்கு, வளர்ச்சிக்கு உதவம் கலைகள், பயிற்சிகள் வழியாகவும் பெறலாம் என்பதே உண்மை.

ஞானம் அடைந்தால் மோட்சம், முக்தி, அப்படி இப்படி என்ற கதைதான் இங்கே உலவுகிறது. ஞானம் ஒரு தனித்துவமான, சக்தியை வழங்குகின்ற, சக்தியை பெற்றுக்கொள்கின்ற நிலை அல்ல என்பதை முதலில் தெளிவு செய்து கொள்க. ஞானம் என்பது உங்கள் அனுபவத்தில், வளர்ச்சியில், ஆராய்ச்சியில், காலத்தால் பெறக்கூடிய ஒரு நிலைதான். அந்த நிலையை அடைந்தவர்களை, அதாவது ஞானத்தில் நிலை பெற்றவர்களை, ஞானி என்று அழைக்கின்றோம் அல்லது அழைக்கப்படுகிறார்கள்.

ஞானம் என்றால், உண்மையை அறிந்த நிலை என்று அர்த்தமாகும். இறைஞானம் என்றால், இறை என்ற உண்மையை அறிந்துகொண்ட நிலை என்று பொருளாகிறது. கேள்விஞானம் என்றால் கூட, கேள்விகளாக சிந்தித்து, உண்மையை அறியக்கூடிய தன்மை அல்லது நிலை என்று பொருளாகும். ஞானம் என்பது, அக்காலம் முதல் இக்காலம் வரை, உணமை அறியாதோரால் கட்டமைக்கப்படும் அதிசயமானது ஒன்றல்ல. 

முக்கியமாக, வெற்று வார்த்தைகளால் விளங்கிக் கொள்வது ஞானம் அல்ல. மனப்பூர்வமாக, மனமே மலர்ந்து, விரிந்து, இறையுண்மையில் திளைத்த நிலையில் உங்களுக்கு கிடைப்பதுதான் ஞானம். ஒருவேளை உங்களுக்கு வார்த்தையில் கிடைத்தாலும், அந்த உண்மை தன்மை நோக்கி நகர்ந்து அதை உணரவேண்டும். 

குண்டலினி யோகத்தின் வழியாக நாம் பெறுகின்ற ஞானம், இறை ஞானம் ஆகும். இதற்கு தகுந்த குருவின் வழிகாட்டல் வேண்டும், அவர்மூலமாக தீட்சையும், தவசாதனையும் பெற்று கற்றுத்தேரவேண்டும். நம்முடைய முயற்சி, பயிற்சி, ஆர்வம், ஆராய்ச்சி ஆகியவற்றின் வழியாக, ஞானம் பெறுதல் கைகூடும்.

வாழ்க வளமுடன்.