CJ for You: wish

wish

Showing posts with label wish. Show all posts
Showing posts with label wish. Show all posts

What kinds of benefit will rise when we greets someone?


மற்றவர்களை வாழ்த்தும் பொழுது என்ன விதமான நன்மைகள் ஏற்படுகின்றன? 

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, மற்றவர்களை வாழ்த்தும் பொழுது என்ன விதமான நன்மைகள் ஏற்படுகின்றன? 


வேதாத்திரி மகரிஷி அவர்களின் பதில்:

யாரும் யாரையும் எளிதில் வாழ்த்திவிட மாட்டார்கள். அதற்கென்று ஒரு நிறைவான மனமும், சூழ்நிலையும் அமையவேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். மேலும் ஏதேனும் ஒருவகையில் இரண்டுபேருக்குமான நன்மையும் இருக்க வேண்டும், கிடைத்திருக்க வேண்டும் என்றும் நினைப்பார்கள். அப்போதுதான் அவரை / பிறரை வாழ்த்த முடியும் என்று முடிவும் செய்திருப்பார்கள். ஆனால் நிஜத்தில் அப்படியா கணக்கு போட்டுக் கொண்டு வாழ்த்த வேண்டியதில்லை. 

மனதின் நுண்ணிய நிலையிலே நாம் வாழ்த்துக் கூறும்போது அவர்களுக்கும் நமக்கும் தெரியாமலேயே இரண்டுபேருடைய அடித்தளமான அந்த உயிர்நிலையில் ஒரு பரஸ்பர ஓட்டம் ஏற்படுகின்றது.  ஊடுருவிப் பாய்ந்து நிற்கின்றோம்.  இரண்டு தடவை நாலு தடவை வாழ்த்த வாழ்த்த,  நமக்கும் அவர்களுக்கும் ஒரு தொடரியக்கம் வந்து விட்டதானால் அது எப்பொழுதும் நமக்கு அலை வீசிக் கொண்டிருக்கும். அந்த அலை நாம் நினைத்தாலும் நினைக்காவிட்டாலும் முன்பே ஏற்படுத்திவிட்ட தொடர்புப்படி வந்து கொண்டும் போய்க்கொண்டும் இருக்கும். அந்தத் தொடர் அறுபடாது இருக்கும்.

அதனால் அவருக்கு வேண்டியதை நாம் செய்ய வேண்டும் என்று நினைப்பது, நமக்கு வேண்டியதை அவர்கள் செய்ய வேண்டும் என்று நினைப்பது, அவர்கள் நன்மைக்காக நாம் எண்ணுவது இவை எல்லாம் சாதாரண நிகழ்ச்சியாக மாறிவிடும். அப்படி வாழ்த்தி வாழ்த்தி எப்பேர்ப்பட்டவர்களையும் நண்பர்களாக மாற்றிவிட முடியும்.  அவர்களுடைய செயல்களைத் திருத்திவிட முடியும்.  எண்ணங்களை எல்லாம் ஒழுங்குபடுத்திவிட முடியும்.  நல்லவர்களாக மாற்றிவிட முடியும். 

நாம் அந்த அளவு உறுதி பெற்று விட்டால் வாழ்த்துவது பழக்கத்திற்கு வந்துவிட்டால் அந்த மனநிலையிலே அந்த எல்லையிலே அந்த மையத்திலே நிற்கக்கூடிய அளவிற்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டால் நாம் நினைக்கும் போதெல்லாம் அது வாழ்த்தாக முடியும்

வாழ்க வளமுடன்.

-

Is it right for us to live by greeting others?


எரிகிற வீட்டில் பிடுங்குவது லாபம் என்ற வகையிலேயே எல்லோரும் இந்த உலகில் வாழும் பொழுது நாம் மட்டும் பிறரை வாழ்த்திக்கொண்டே வாழ்வது சரியாகுமா?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி: 

வாழ்க வளமுடன் ஐயா, எரிகிற வீட்டில் பிடுங்குவது லாபம் என்ற வகையிலேயே எல்லோரும் இந்த உலகில் வாழும் பொழுது நாம் மட்டும் பிறரை வாழ்த்திக்கொண்டே வாழ்வது சரியாகுமா?


பதில்:

இதே போன்றதொரு கேள்வி வேதாத்திரி மகரிஷியிடம் கேட்கப்பட்டது. அது ‘தவறு செய்பவர்கள் இந்த உலகில் நன்றாகத்தானே வாழ்கிறார்கள். நாம் ஏன் திருத்தமாக வாழவேண்டும்?’ என்ற கேள்வி. அதற்கு மகரிஷின் பதில் ‘நீங்கள் வேண்டுமானால் அப்படி கொஞ்சநாள் தவறு செய்தே வாழ்ந்து பாருங்களேன்’ என்று தருகிறார்.

நம்முடைய பார்வைக்கு, தவறு செய்பவர்கள் ‘நன்றாக’ இருப்பதுபோலவும், செழிப்பாக, இன்பமாக, நிறைவாக வாழ்வது போலவும் தெரியும், ஆனால், அவர்கள் மனதிலும், உடலிலும், வீட்டிலும், வீட்டில் உள்ள மற்றவர்களுக்கு உள்ள பிரச்சனைகள் எதுவுமே நமக்கு தெரியாது. இரவில் அவர்கள் நிம்மதியாக தூங்கி எழுவார்களா? என்பது கூட கேள்விதான். அதை அவர்கள் வெளிக்காட்டவும் தயங்குவார்கள் / மறைப்பார்கள். ஆனால் ஏதேனும் வகையில் நாம் அறிய முடியும்தானே?

நாம் நம்முடைய பார்வையை, முன்னோக்கி பார்த்தால் இப்படி வாழ்ந்த முடிந்தவர்கள் பேரும் புகழோடுமா தன்னுடைய காலத்தை முடித்திருக்கிறார்கள்? சிந்தித்துப் பாருங்கள். அவர்கள் இறந்து பல காலம் ஆனாலும் கூட, அவர்கள்மேல் விழுந்த பழிச்சொல் அகலாமல் இருப்பதை நாம் காணமுடியும். நல்லதிற்கு உதாரணம் என்பது போலவே, தீய நடவடிக்கைகளுக்கும், தவறுகளுக்கும் உதாரணமாக அவர்கள் ‘காலத்தால்’ நின்றிருப்பதை அறியலாம்.

அறிவில், அனுபவத்தில், வாழும் சூழலில் வளர்ச்சி அடையாத சிலர், மற்றவர்கள் வருத்தி, துன்புறுத்தி, பிடுங்கி, வாழ்வதை நாம் காணமுடியும். நாமேகூட அப்படியான சிலரிடம் மாட்டிக்கொண்டு முழித்திருப்போம் என்பதும் உண்மையே. அத்தகைய நிகழ்வுக்குப் பின் நாம் எப்படி இருக்கிறோம்? என்பதையும், அவர்கள் எப்படி இருக்கிறார்கள்? என்பதையும் சிந்திக்க வேண்டும். அறம் அல்லாத எந்த ஒரு செயலை செய்தாலும், அது இயற்கை எனும் தெய்வீக பேராற்றலால், அவரவர் மனதிற்குள்ளாகவும், கருமையத்திலும் ‘கர்மவினைப்பதிவாக’ பதிவு செய்வதை மறவாதீர்கள். வட்டியும் முதலுமாக என்ற ரீதியில் அதை தீர்க்காமல் விடவே விடாது. அதுதான் இயற்கையின் செயல்விளைவு நீதி.

சாதாரணமாகவே, மனம் ஒப்பாத ஒன்றை செய்துவிட்டு காலம்பூராவும் வருந்துவது மனிதனின் இயல்பு. யோகத்தின் வழியாக மனதை அறிந்த நாம், அப்படியான தவறை நாமே விரும்பி செய்திட முடியுமா? அது நியாயமும் ஆகுமா? இருக்கும் வினைப்பதிவுகளை தீர்க்க மட்டுமேதான் நாம் பிறந்திருக்கிறோம் என்பதை மறுபடி நாம் ஞாபகப்படுத்திக் கொள்வோம். தவறு செய்யும் அவர்கள், தவறுமட்டுமே செய்யும் அவர்களுக்கு அதுகுறித்த கவலை இல்லை. அது அவர்கள் பாடு. நாம் நம்மை திருத்திக் கொள்வோம்.

வாழ்க வளமுடன்

-

Is sangalpa and mantra working? Or is it deception?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, சர்வ வஷிய தன ஆகர்ஷண சங்கல்பம் உண்மையிலேயே வேலை செய்கிறதா? அல்லது ஏமாற்றுவேலையா?


பதில்:

இதற்கான பதில் உங்களுக்கு நிச்சயமாக தெரியவேண்டும் என்றால், நீங்கள் அதை செய்துபார்க்க வேண்டியது அவசியம். அது ஏமாற்று வேலையா? இல்லையா? என்பதையும் நீங்கள் செய்து பார்த்த பிறகு தெரிந்துகொள்ளலாம் என்பதே உண்மை. வேதாத்திரி மகரிஷி அவர்கள் சொல்லியிருக்கிறார் என்பதற்காகவும், நான் சொல்கிறேன் என்பதற்காகவும், பிறர் சொல்லுகிறார்கள் என்பதற்காகவும் நீங்களே உங்களை ஏமாற்றிக் கொள்ள தேவையும் இல்லை. சில நல்லதை, விளக்கங்களை சொல்லுபவரின் அனுபவம் கொண்டுதான் ஏற்கவேண்டும். சந்தேகம் வருகிறது என்றால் தாராளமாக நீங்கள் தவிர்த்துவிடலாம். இது அவரவர் விருப்பமே அன்றி, கட்டாயம் என்ற நிலைபாடு இல்லையே. அதுப்பொல பிறரின் நம்பிக்கையை உதாசீனப்படுத்துவதும் நம் வேலை இல்லையே!

நமக்குள்ளும், இந்த பிரபஞ்சம் முழுவதும் நிறைந்திருக்கும் ஆற்றலை, சக்தியை, நம் வசப்படுத்திக் கொள்ளும் ஒரு வழிமுறைதான், சங்கல்பம் அல்லது மந்திரம். இதை தொடர்ந்து ஊக்குவிக்கும் பொழுது, அங்கே ஏற்படும் மாற்றம், நம் விருப்பத்திற்கு சாதகமாக அமைகிறது என்பதுதான் உண்மை. இதை விஞ்ஞான அறிவுகொண்டும் நிரூபணம் செய்யலாம். ஆனால் விஞ்ஞானிகள் விளைவினை உடனே எதிர்பார்ப்பதால், அவர்கள் ஏற்க மாட்டார்கள். விளைவு என்பது உண்மை, ஆனால் அது நம் எதிர்பார்ப்புக்குள் அடங்கிடாது! அதில் இயற்கையின் பங்கும், இயற்கையின் தவறாத விதியும் உண்டு. அதை நாம கணிக்கவும் முடியாது.

சங்கல்பமும், மந்திரமும் மிகச்சாதாரண மனிதர்கள் உருவாக்கிடவும் முடியாது. அதற்கு ஆழ்ந்த அனுபவமும், உண்மை விளக்கம் பெற்ற நிலையும், இயற்கையோடு தன்னை அறிந்த நிலையும், புரிதலும் தேவை. அப்படியான மகான்கள் உருவாக்கியதே, இப்போது நமக்கு கிடைத்திருக்கும் சங்கல்பம் மற்றும் மந்திரம். யாருக்கு நம்பிக்கையும், விருப்பமும் இருக்கிறதோ அவர்கள் அதை செய்யட்டும் பலன்பெறட்டும். நம்பிக்கை இல்லாதவர்கள் அதை செய்யவேண்டியதில்லை!

வாழ்க வளமுடன்.