CJ for You: friend

friend

Showing posts with label friend. Show all posts
Showing posts with label friend. Show all posts

What kinds of benefit will rise when we greets someone?


மற்றவர்களை வாழ்த்தும் பொழுது என்ன விதமான நன்மைகள் ஏற்படுகின்றன? 

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, மற்றவர்களை வாழ்த்தும் பொழுது என்ன விதமான நன்மைகள் ஏற்படுகின்றன? 


வேதாத்திரி மகரிஷி அவர்களின் பதில்:

யாரும் யாரையும் எளிதில் வாழ்த்திவிட மாட்டார்கள். அதற்கென்று ஒரு நிறைவான மனமும், சூழ்நிலையும் அமையவேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். மேலும் ஏதேனும் ஒருவகையில் இரண்டுபேருக்குமான நன்மையும் இருக்க வேண்டும், கிடைத்திருக்க வேண்டும் என்றும் நினைப்பார்கள். அப்போதுதான் அவரை / பிறரை வாழ்த்த முடியும் என்று முடிவும் செய்திருப்பார்கள். ஆனால் நிஜத்தில் அப்படியா கணக்கு போட்டுக் கொண்டு வாழ்த்த வேண்டியதில்லை. 

மனதின் நுண்ணிய நிலையிலே நாம் வாழ்த்துக் கூறும்போது அவர்களுக்கும் நமக்கும் தெரியாமலேயே இரண்டுபேருடைய அடித்தளமான அந்த உயிர்நிலையில் ஒரு பரஸ்பர ஓட்டம் ஏற்படுகின்றது.  ஊடுருவிப் பாய்ந்து நிற்கின்றோம்.  இரண்டு தடவை நாலு தடவை வாழ்த்த வாழ்த்த,  நமக்கும் அவர்களுக்கும் ஒரு தொடரியக்கம் வந்து விட்டதானால் அது எப்பொழுதும் நமக்கு அலை வீசிக் கொண்டிருக்கும். அந்த அலை நாம் நினைத்தாலும் நினைக்காவிட்டாலும் முன்பே ஏற்படுத்திவிட்ட தொடர்புப்படி வந்து கொண்டும் போய்க்கொண்டும் இருக்கும். அந்தத் தொடர் அறுபடாது இருக்கும்.

அதனால் அவருக்கு வேண்டியதை நாம் செய்ய வேண்டும் என்று நினைப்பது, நமக்கு வேண்டியதை அவர்கள் செய்ய வேண்டும் என்று நினைப்பது, அவர்கள் நன்மைக்காக நாம் எண்ணுவது இவை எல்லாம் சாதாரண நிகழ்ச்சியாக மாறிவிடும். அப்படி வாழ்த்தி வாழ்த்தி எப்பேர்ப்பட்டவர்களையும் நண்பர்களாக மாற்றிவிட முடியும்.  அவர்களுடைய செயல்களைத் திருத்திவிட முடியும்.  எண்ணங்களை எல்லாம் ஒழுங்குபடுத்திவிட முடியும்.  நல்லவர்களாக மாற்றிவிட முடியும். 

நாம் அந்த அளவு உறுதி பெற்று விட்டால் வாழ்த்துவது பழக்கத்திற்கு வந்துவிட்டால் அந்த மனநிலையிலே அந்த எல்லையிலே அந்த மையத்திலே நிற்கக்கூடிய அளவிற்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டால் நாம் நினைக்கும் போதெல்லாம் அது வாழ்த்தாக முடியும்

வாழ்க வளமுடன்.

-

Why someone or well known is perceived wrong and offense on me? How I get solution?


நன்றாக பழகியவர்களே, நம்மை சமயம்பார்த்து காலைவாறி விடுவதும், உதவிய நம்மை தூற்றுவதும் ஏன்? நிறைய அனுபவம் கிடைத்தும் ஏன் என்னால் மாற முடியவில்லை?!



வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி: 

வாழ்க வளமுடன் ஐயா, நன்றாக பழகியவர்களே, நம்மை சமயம்பார்த்து காலைவாறி விடுவதும், உதவிய நம்மை தூற்றுவதும் ஏன்? நிறை அனுபவம் கிடைத்தும் ஏன் என்னால் மாற முடியவில்லை?!

பதில்:

மனிதர்களின் பொதுவான மனோபாவம், குணாதியம் என்று சொல்லலாம். ஆங்கிலத்தில் Personality என்பார்கள். அது ஒவ்வொருவருக்கும், 16 காரணங்களால் மாறுபடும் என்று வேதாத்திரி மகரிஷி அவர்கள் சொல்லுகிறார். அதில் ஒன்றின் கூடுதல் குறைவு சதவீதமும், மனிதர்களை மாற்றிக்கொண்டே இருக்கும். ஒருவர் பிறப்பிலேயே நல்லவராக இருப்பதற்கும், பிறப்பிலேயே தன் இயல்பை மாறாக காட்டுவதும் இதனால்தான். சிலருக்கு மத்திம காலத்தில் வளரும் பொழுது, தன் அனுபவங்களால் மாறவும் செய்யும். இன்னும் சிலர், தன் வாழ்க்கை முடியப்போகிறது என்ற நிலையிலும், அந்த அனுபவம் பெறும் பொழுதும் நல்லவராக வாழ முயற்சிப்பார். இன்னும் ஒருசிலர், நான் யாருக்காகவும் மாறவேண்டிய அவசியமில்லை என்ற நிலையில் தொடர்ந்து பிரச்சனைக்கு உரியவராக இருப்பார்.

ஒரு மனிதர், இன்னொரு மனிதரோடு தொடர்பு கொள்ளும் பொழுது, சக மனிதர் என்ற பார்வை வெகு சிலருக்குத்தான் இருக்கும். இப்பொழுது மணி என்ன? என்று கேட்டால் கூட (இப்பொழுது யாருமே கேட்பதில்லை என்றாலும் கூட) நாம் கேட்டது காதில் விழவே இல்லை என்ற ரீதியில் இருப்பார்கள். அதாவது அவர்கள், மனிதர்களின் தரம் பார்த்துத்தான் பதிலே சொல்லுவார்கள் என்பதாக அவர்கள் மனநிலை இருக்கிறது. 

சிங்கங்கள் சிங்கங்ளோடு பேதம் காணுவதில்லை. ஆடுகள் ஆடுகளோடு பேதம் காணுவதில்லை. ஆனால் மனிதர்களில் சிங்கமும் உண்டு, ஆடுகளும் உண்டு. இன்னும் பலப்பல மிருங்கங்களும் உண்டு. யாரும் பொருத்தமில்லாததாக நினைக்க வேண்டாம். அத்தகைய குணாதசியம் என்பதை சொல்லவந்தேனே தவிர வேறெதும் இல்லை. இது ஏன்? காரணம் அவர்களுக்காக இருக்கின்ற பதிவுகள், மனிதனின் தரத்திற்கும், ஆறாவது அறிவின் முழுமைக்கும் இல்லை என்பதுதான். தங்களை திருத்திக்கொள்ள அவர்கள் வாய்ப்பை ஏற்பதே இல்லை. கொடுத்தாலும் அதை விலக்கியும் விடுவார்கள். உலகில் நாம் காணும் ஒவ்வொரு சமூக பிரச்சனைக்களுக்கும் இதுவே காரணம். ஆறாம் அறிவு நிலைக்கான விளக்கம் இன்னமும் மக்களிடம் விழிப்புநிலை பெறவில்லை. மனம் அத்தகைய கீழான இயக்க நிலைகளிலேயே இருக்கிறது. அது மாற்றம் பெறவேண்டும்.

ஒருவரோடு நீங்கள் பழகும்பொழுது, கவனமாக இருக்கவேண்டியது அவசியம். உங்களைப்பற்றிய எல்லா தகவல்களையும் தந்துவிடக்கூடாது. உங்கள் மீது அக்கறை காட்டும் எந்த நபரையும் சந்தேகம் கொள்ளுங்கள். ஆனால் அவர்களை உதாசீனம் செய்திடக் கூடாது. அதனால் உங்களுக்கு நன்மை என்றால், சிலவற்றை கொடுக்கலாம், பெறலாம். ஆனால் உங்களை முழுதாக அவர்களிடம் சொல்லிவிடக்கூடாது. ஒரு எச்சரிக்கை எப்போதும் வேண்டும். நீங்களும் அவரை பயன்படுத்தக்கூடாது, அவரும் உங்களை பயன்படுத்த விடக்கூடாது. ஓவ்வொடு மனிதருடைய செயல், அசைவு, நிலை, பேச்சு இவற்றில் கவனம் வேண்டும். அது உண்மையாக எதை சொல்லுகிறது என்ற விளக்கம் பெற வேண்டும். இப்படி இன்னும் நிறைய அறிவுரைகள் உண்டுதான் எனினும், இது போதுமானது. உங்களை காலைவாறிய, தூற்றிய மனிதர்களிடம் இருந்து உடனே விலகுங்கள். அவர்களை பழி வாங்கிட ஒருபோதும் நினைக்காதீர்கள். அவர்கள் முன்பாக வாழ்ந்து காட்டவேண்டிய அவசியமும் உங்களுக்கு வேண்டாம். நீங்கள் உங்கள் இயல்பில் எப்போதும் இருக்கலாம்.

மிக எளிமையாக, குரு மகான் வேதாத்திரி மகரிஷி சொன்ன, இரண்டொழுக்க பண்பாடை மறவாதீர்கள். ‘நான் எனது வாழ்நாளில் யாருடைய உடலுக்கோ மனதிற்கோ துன்பம் தரமாட்டேன். துன்பப்படுவோருக்கு என்னாலான உதவிகள் செய்வேன்’ என்று அடிக்கடி சொல்லிவாருங்கள். அதை உங்களோடு பழகுவோரிடமும் படித்துப்பார்க்கச் சொல்லுங்கள். மாறுதல் உண்டாகலாம்.

வாழ்க வளமுடன்
-

I am worried about who not yet join in yoga within my friend list, is it correct?


எந்த வகையில் நான் அழைத்தாலும்கூட, யோகம் எனக்கு தேவையில்லை என்று சொல்லிவிட்டு, யோகத்திற்கு வராதவர்கள் குறித்து நான் கவலைப்படுகிறேன். அது சரியா?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, எந்த வகையில் நான் அழைத்தாலும்கூட, யோகம் எனக்கு தேவையில்லை என்று சொல்லிவிட்டு, யோகத்திற்கு வராதவர்கள் குறித்து நான் கவலைப்படுகிறேன். அது சரியா?


பதில்:

இந்த பொருள்முதல்வாத உலகில், பொருளையே வாழ்வின் துணையாகவும்,, உயர்வாகவும், மதிப்பாகவும், ஆதாயமாகவும் நினைத்து தன் வாழ்நாளை கழித்துக்கொண்டிருக்கும் பெரும்பாலான மனிதர்கள், தன் இறுதிக்காலத்தில் எதையுமே எடுத்துப்போவதில்லை என்று தெரிந்தும், வாழும் பொழுது பற்றிக்கொண்டுதான் இருப்பார்கள். ‘அதனால் என்ன? எனக்கு வேண்டுமய்யா’ என்ற நிலையில்தான் வாழ்ந்துகொண்டே இருப்பார்கள். அவர்களை குறைசொல்லவும் முடியாது. அவர்களின் வாழ்வியல் அனுபவம் அப்படிப்பட்டது. எவ்வளவு கிடைத்தாலுமே, குறைமனதோடு, இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் வாழும் நிலை அவர்களுடையது. 

இப்படியான சக மனிதர்களிடம், ‘பக்தி என்ற நிலை கடந்து, உண்மையறிய யோகம் வாருங்கள்’ என்று அழைத்தால், வரமாட்டார்கள். அவர்களைப் பொறுத்தவரை, பக்தி போதுமானது. கடவுளே இல்லை என்பது கூட போதுமானதுதான். தன்னைமட்டுமே மையப்படுத்திக்கொண்டு வாழும் மனிதருக்கும், தன்னால் தான் எல்லாம் நிகழ்கிறது, தன்னறிவாலும், திறமையாலும், அனுபவத்தாலும், உழைப்பினாலும்தான் ‘நான் வாழ்கிறேன், நான் உயர்கிறேன்’ என்று நினைப்போருக்கு, பக்தியும், கடவுளும் தேவை இருக்காது. அவர்களிடம் நாம் அதை விளக்கிக் கொண்டிருக்கவும் முடியாது. கடவுள் என்பது கடந்து உள்ளே அறிவதுதானே தவிர வேறொன்றும் இல்லை என்று கூட நாம் உண்மையை சொல்லமுடியாது. எல்லாம் எனக்குத் தெரியும் என்று மிகப்பெரிய தடுப்புச்சுவரை, நமக்கு முன்னே வைத்துவிடுவார்கள்.

இதனால், நீங்கள் அவர்மீது கொண்ட அக்கறையில், யோகம் குறித்து எத்தகைய விளக்கம் கொடுத்தாலும், அது அவர்களிடம் எடுபடாது. ‘உன் வேலையைப்பார்’ என்று சொல்லாமல் சொல்லிவிடுவார்கள். நமக்கோ, அவர்கள்மீது வருத்தமும், கவலையும் எழுவது உண்மைதான். வேறுவழி என்ன?

நீங்கள் அவரை எப்படியாயினும், விளக்கம் பெற வைக்கவேண்டும் என்று விரும்பினால், நீங்களே ‘யோகம்’ குறித்த விளக்கத்தை அளிக்காதீர்கள். இங்கே, இப்படி ஒரு அறிவுத்திருக்கோவில் என்ற ஒன்று இருக்கிறது. வேதாத்திரி மகரிஷியின் வேதாத்திரிய கருத்துக்கள் இங்கே விளக்கம் தரப்படுகிறது. ஏதேனும் ஒருநாள் வாய்ப்பு கிடைத்தால், வந்து பாருங்கள். அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுங்கள். அதன் பிறகு உங்கள் முடிவில் இருக்கலாம்’ என்று சொல்லிப்பாருங்கள். அவர் தன்னளவில் மாறுதல் பெற வழி உண்டு. அப்படியும்கூட ஒரு மாற்றமும் இல்லை என்றால், அவரை நீங்கள் யோகத்திற்கு அழைப்பதில் இருந்து கைவிட்டுவிடுங்கள். இனி ஒருபோதும் யோகம் குறித்து அவரிடம் பேசாதீர்கள், அதன் அருமை, பெருமைகளை சொல்லாதீர்கள். ஒரு நண்பராக உங்களால் அவருக்கும், அவரால் உங்களுக்கும் என்ன நன்மை கிடைக்குமோ அதை வழிநடத்துங்கள். அது போதும். இதற்காக நீங்கள் வருந்தவேண்டாம், கவலைப்படவேண்டாம்.

அவருக்குள்ளாக இருக்கிற கர்ம வினைப்பதிவுகளின் தாக்கம் குறையும் பொழுது, தானாகவே யோகத்திற்கு வருவதற்கான வாய்ப்பு உருவாகும். அது அவருக்கும் கிடைக்கலாம். அவருக்குப்பின் அவரின் வாரிசுகளில் யாருக்கேனும் கிடைக்கலாம். அதை காலம் முடிவுசெய்யும். அதன் போக்கில் விட்டுவிடுங்கள். வேறுவழியில்லை. இதில் அவரை கட்டாயப்படுத்தவும் முடியாது அல்லவா?! கட்டாயப்படுத்தினாலும் அவர், வழக்கமான வாழ்விலுக்கு உடனே வந்தும் விடுவார்.

வாழ்க வளமுடன்

-

Why some of best chances missing in my life?!


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, வாழ்க்கையில் நல்ல வாய்ப்பு ஏன் தட்டிக் கழித்துக்கொண்டே இருக்கிறது?!


பதில்:

இதற்கு பதில் உங்கள் கேள்வியிலேயே இருக்கிறது எனலாம். எப்படி தெரியுமா? இதோ, வாழ்க்கையில் நல்ல வாய்ப்பு இருக்கிறது, ஏன் தட்டிக் கழித்துக் கொண்டே போகிறது? என்று சொல்லலாம். ஆம், ஒருநாளில், நீங்கள் கண்விழித்தது முதல் என்ன நிகழ்கிறது? என்ன நிகழ்ந்தது என்று சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் கண்விழித்ததே நல்ல வாய்ப்பு தானே? உலகில் எத்தனையோ மனிதர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்காமல் போகிறதே?! உண்மைதானே?!

எனவே நீங்கள் கண்விழித்தது நல்ல வாய்ப்பு, முதலாவதாக கிடைத்துவிட்டது. பிறகு இயற்கை கடன்களை தீர்த்துவிட்டீர்கள். அதுவும் இயற்கை உங்களுக்கு வழங்கிய வாய்ப்புத்தான். இல்லை என்று மறுத்துவிடுவீர்களா? அடுத்ததாக நல்ல காஃபி, தேனீர் உங்கள் வாழ்க்கைத்துணைவர் தருகிறார். நீங்கள் அவருக்கு தயாரித்துக் கொடுத்தாலும் ஏற்றுக் கொள்ளக்கூடியதுதான். திருமணம் ஆகாதவர்களுக்கு, தாயோரோ, உடன்பிறந்தோரோ தயாரித்து தரலாம். சரியான நேரத்திற்கு காலை உணவும் கிடைத்துவிடுகிறது. உணவகத்திற்குப் போய் சாப்பிட்டாலும் கூட, யாரோ ஒருவர் உங்களுக்காக சமைத்து தருகிறார். யாரோ ஒருவர் உங்களுக்கு பரிமாறுகிறார். இப்படி எல்லாவகையிலும் நல்ல வாய்ப்பு கிடைக்கிறதுதான்.

ஆனால் இதையெல்லாம் நாம், நல்ல வாய்ப்பாக எடுத்துக் கொள்வதும் இல்லை, அப்படி கருதிக்கொள்வதும் இல்லை. நாம் என்ன நினைக்கிறோம் என்றால், நான் கேட்டது, நான் எதிர்பார்த்தது கிடைக்குமா? கிடைக்கவில்லையே என்று இந்த எதிர்பார்ப்பினால், ஏற்கனவே கிடைக்கின்ற எல்லா வாய்ப்புக்களையும் கவனம் செலுத்தாமல் இழந்து விடுகிறோம். இகழ்ந்தும் விடுகிறோம்.

இதற்கு காரணம், நாமும், நம்முடைய மனமும், அதில் எழுகின்ற எண்ணங்களும், இதனோடு தொடர்புடைய மூளையும் பரபரப்பாகவே இருக்கிறது. அமைதியும் பொறுமையும் இல்லை. இந்த அமைதியையும், பொறுமையையும் உங்களுக்குள்ளாக கொண்டு வாருங்கள். உண்மையை அறிவீர்கள். உங்களைச்சுற்றி எண்ணற்ற வாய்ப்புக்கள் கொட்டிக்கிடப்பதை அறிவீர்கள்! 

வாழ்க வளமுடன்.

Body isn't your servant - Final post


இந்த உடல் உன் வேலைக்காரனல்ல, அப்படியானால் யார்? 





வணக்கம் அன்பர்களே!


உங்களுக்கு பரிசாக கிடைத்த உடல் மற்றும் உடல் உன் வேலைக்காரன் அல்ல எனும், 

இந்த பதிவு மற்றும் இதன் தொடர்ச்சி பதிவுகள் அனைத்தும், அமேசான் வழியாக ”இயற்கை வழங்கிய உங்களுக்கான பரிசு” எனும் தலைப்பில் மின்நூலாக வெளிவருவதால், இங்கே பதிவிட முடியாமைக்கு வருந்துகிறேன். உங்கள் ஆதரவுக்கு நன்றி.


அமேசான் கிண்டில் மின்நூல் வழியாக வாங்க அல்லது படிக்க, கீழே சுட்டுக.

இயற்கை வழங்கிய உங்களுக்கான பரிசு



----------------------

Photos Thanks to: Hian Oliveira / Eiliv-Sonas Aceron / National Cancer Institute