CJ for You: wealth

wealth

Showing posts with label wealth. Show all posts
Showing posts with label wealth. Show all posts

We who live on this earth become attached to everything and are trapped in material life. Is there any way to change this? How can we bring about that change?


வாழ்க வளமுடன் ஐயா, இந்த பூவியில் வாழும் நமக்கு எல்லாவற்றின் மீதும் பற்று வந்து, பொருளியல் வாழ்வில் சிக்கித்தவிக்கிறோமே? இதில் ஏதேனும் மாற்றம் காண வழியுண்டா? எப்படி அந்த மாற்றத்தைக் கொண்டுவரலாம்?




நல்ல கேள்வி. ஆனால், இந்த கேள்வியும், அதற்கான ‘வழக்கமான பதிலும்’ பலருக்கு கோபத்தை, சினத்தை உண்டு செய்யும். அதனால், சில விளக்கங்களை மட்டும் இங்கே அறிந்துகொள்ளலாம். அதற்கான பதிலை நீங்களே அறிந்து கொள்ளலாம். நான் தனியாக பதில் சொல்ல தேவையில்லை. முதலில் என்னுடைய கேள்விக்கு நீங்கள் பதில் தரவேண்டும். 

உங்கள் வாழ்வு எத்தகையது? கூட்டுக் குடும்பமா? தனிக்குடும்பமா? தனியாளாக இருக்கிறீர்களா? அரசாங்க வேலையா? தனியார் நிறுவன வேலையா? சொந்த தொழிலா? வியாபாரமா? நல்ல படிப்பும், அனுபவமும் உள்ளவரா? வேலைகளோடு நீங்கள் பொருந்தி இருக்கிறீர்களா? போதுமான வருமானம் உள்ளதா? சேமிப்பு செய்கிறீர்களா? கடன் தொல்லை இருக்கிறதா? வசிப்பது கிராமமா? நகரமா? தலை நகரா?

இந்த கேள்விக்கான பதிலும், விளக்கத்தை தர துணையாக இருக்கும். எப்படி தெரியுமா? இந்த உலகில் வாழும் எல்லா மனிதருக்கும், பொருளியல் நிலை என்றவகையில், முழுமை அல்லது நிறைவு இருக்கவேண்டும். அந்த நிலை வராமல், பொருள் பற்று குறையாது. எல்லாம் இருந்தும்கூட, இன்னமும் வேண்டும் என்று வாழ்வது அவரின் அறியாமை.

பசியை அடக்கிட, உணவு உண்கிறோம், பசி தீர்ந்தால்தான், அடுத்து உணவு குறித்த எண்ணம் எழாமல் இருக்கும். அதுபோலவே, பொருளியலில் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யாமல், அதில் திருப்தியையும், போதும் என்ற மனநிலையை உருவாக்கிட முடியாது. மேலும், இந்த உலகில் வாழும் வரை, பொருள் ஈட்டுதலை, பொருள் சேமிப்பை. பொருளின் பயன்படுத்துதலை உதாசீனம் செய்திடவும் முடியாது. அந்த பொருள் இன்றி, நாம் உலகில் வாழவும் முடியாது.

ஆனால், விழிப்புணர்வு எங்கே வேண்டும் என்றால்? இந்த அளவில் போதும் என்று நிறைவான மனம் கொள்ள வேண்டும். அதுவரை நாம் முயன்று நேர்வழியில், பொருள் ஈட்டியே ஆகவேண்டும். பரம்பரை வழியாக எல்லாம் இருந்தாலும், உங்கள் அளவிலும் அதை நிறைவு செய்து கொள்வதுதான் நல்லது ஆகும்.

இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என்று கடைசி மூச்சுவரை, பொருளை தேடிக்கொண்டே இருந்தால், இருப்பதையும், பெற்றதையும், கிடைத்ததையும் உதாசீனம் செய்கிறோம் என்று அர்த்தமாகிறது. அந்த நிலைமைக்கு நாம் செல்லக்கூடாது. என்வாழ்வில், எனக்கு, இந்த அளவு போதும் என்ற நிலைக்கு, உயரவேண்டும்.

பொதுவாகவே மனிதனுக்கு அறியாமை உண்டு. சிறிய சங்கிலி, யானையின் காலில், சுற்றப்பட்டு ஒரு சிறிய கல்லோடு இணைத்து இருந்தால், அந்த யானை, தன்னால் எங்கும் ஓட முடியாது, இந்த சங்கிலியை தன்னால், கழற்றிட முடியாது. அந்த கல்லை எடுத்து வீச முடியாது என நினைக்குமாம். அதுபோல பொருளிலும் பொருளியல் வாழ்விலும் மனிதன் சிக்கிவிடக்கூடாது. பார்ப்பதெல்லாம் பெரிது, கடினம், என்னால் முடியாது, எனக்கு அவசியமில்லை என்பது, மாற்றத்தை எதிர்நோக்கி வாழாத, வாழ முடியாத தன்மையாகும்.

என் பிறப்பைவிட வாழ்வு பெரிது, வாழ்வை விட பணமும் பொருளும் பெரிது என்று நினைப்பது முற்றிலும் அறியாமை. பிறப்பின் உண்மையும், நோக்கமும் மறந்த செயல்பாடாகும். இப்படி அறியாமையில் இருப்பவர், அதே தன்மையிலேயே வாழ்ந்து, மடிந்தும் போகிறார்கள் என்பது சோகம். இதை, வரும்போது எதுவும் கொண்டுவந்ததில்லை, போகும்பொழுது ஏதும் கொண்டுபோவதுமில்லை என்ற மூத்தோர் மொழிவழக்கில் திருத்துவார்கள். ஆனால் எந்த மாற்றமும் நிகழ்வதில்லை.

பொன்னும், பணமும், பொருளும் பெரிதென மதிப்போர்க்கு, வாழ்வும் பூமி பெரிதென தோன்றலாம். ஆனால் அந்த பூமி எவ்வளவு சிறிது என்பதை, வெளியே இருந்து பார்த்தால்தான் தெரியும். இதோ இந்த ஒளிப்படம் காணுங்கள். சனி கிரத்தின் ஓரத்தில் இருந்து பூமி எப்படி தெரிகிறது? பூமி உண்மையிலேயே பெரிதா? பூமியே இத்தனை சிறிதாக இருந்தால், மற்றதெல்லாம்?

Source: Hashem Al-Ghaili

இப்படியாக, இந்த சூரிய குடும்பம் அடங்கிய பால்வெளி மண்டலம், அதுபோல பலப்பல அண்டங்கள், இவை எல்லாம் அடங்கிய பிரபஞ்சம் என்று இங்கிருந்தவாறே மனதை விரித்தால், பூமி எத்தனை சிறியது என்பது நமக்கு புரியவரும். அப்படியானால்? நாம் மதித்து போற்றி வாழும், பொன்னும், பொருளும், பணமும் எத்தகையது? சிந்தனை செய்துபார்க்கலாம். அதன் வழியாக ஏதேனும் புது சிந்தனை உங்களுக்கு எழுந்தால், என்னிடம் தெரிவியுங்கள்.


வாழ்க வளமுடன்.

-

Is it good for us, living in this materialistic world, to move towards fulfillment in making money? Is it good to stand in fulfillment? Explain which and why.


வாழ்க வளமுடன் ஐயா, இந்த பொருள்முதல்வாத உலகில் வாழ்கின்ற நாம், பணம் சம்பாதிப்பதில், நிறைவை நோக்கி நகர்வது நல்லதா? நிறைவில் நிற்பது நல்லதா? எது என்பதும், ஏன் என்பதும் விளக்கம் தருக.

        மனிதர்களாகிய நாம், எப்போதும் குறை என்ற நிலையிலேயே இருப்போம். ஒரு குழந்தைக்கு எவ்வளவு கொடுத்தாலும், இன்னும் கொடு என்று கேட்குமே, அந்தக் குழந்தைபோலவே, நாம், கேட்டுக்கொண்டே இருக்கிறோம். அந்த குறையை நிறையாக்க, ஓடிக்கொண்டே இருக்கிறோம். ஆனால் பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. நிறை கிடைத்தபாடில்லை. இப்படியாக, குறை என்பது என்ன? நிறை என்பது என்ன? நிறைவை நோக்கி நகர்வது நல்லதா? நிறைவில் நிற்பது நல்லதா? எது, ஏன் என்பதும் விளக்கம் தெரிந்து கொள்வோமா? .

ஒரு மனிதனுக்கு நிறை என்பது எதன் அடிப்படையில் என்று பிரித்தால், இந்த வானத்தில் எத்தனை நட்சத்திரங்கள் இருக்கின்றன என்று எண்ணுவதுபோலவும், ஒரு கடற்கரையில் எத்தனை மணல்துளிகள் இருக்கின்றன என்று எண்ணுவதுபோலவும் நீண்டுகொண்டே இருக்கும். இந்தியாவை பொறுத்தமட்டில், நூற்றி நாற்பது கோடி மக்கள் இருப்பதாக சமீபத்திய, மக்கள் தொகை கணக்கு சொல்லப்படுகிறது. இந்த நூற்றி நாற்பது கோடி மக்களுக்கும், பல நூறு குறைகள் இருக்கும். அந்த குறைகளை நிவர்த்தி செய்ய அவர்கள், பயணித்துக்கொண்டே இருப்பார்கள். எதுவரை? அதை பிறகு பார்க்கலாம்.

எனவே எதுவெல்லாம் நிறை? என்று பட்டியலிட்டால், இந்த கட்டுரையையும், உங்களுக்கான  பதிலையும் இன்றைக்கு தரமுடியாது. என்றைக்கு தருவேன் என்று என்னாலும் உறுதிபட சொல்லமுடியாது. ஆனால் நிறை என்பது என்ன? குறை என்பது என்ன? என்ற விளக்கம் ஓரளவு உதவியாக இருக்கும். ஒரு முக்கியமான விசயத்தையும், இங்கே குறிப்பிட விரும்புகிறேன். தமிழில், ஒரு சிந்தனையும், தத்துவ உண்மையையும் ஒருவர் தந்தால், அதை கண்டுகொள்ளவே மாட்டார்கள். இவரெல்லாம் இப்படி சொல்லுமளவுக்கு பெரிய ஆளா? என்று கடந்துவிடுவார்கள். ஆனால், இந்தியா கடந்த, மற்ற மொழியில், யாரேனும் ஒற்றைவரியை சொன்னால், ஆகா, ஓஹோ என்பார்கள். எல்லோருக்கும் பகிர்வார்கள்.

இந்தியா நாடும், நம் தமிழகமும் ஆயிரக்கணக்கான, மெய்யான உண்மைகளை பொதிந்து வைத்திருக்கிறது. அந்த சிந்தனையாளர்களும், சித்தர்களும், ஞானிகளும், மகான்களும் சொன்னதை படிக்கவும், பொருள் உண்மை அறியவும், தனிமனிடனுடைய வாழ்நாள் போதாது. ஆனால் நாம்தான் அதையெல்லாம், தொட்டுப்பார்ப்பதும் இல்லை, கண்ணால் பார்ப்பதும் இல்லை. கிட்டப்பார்வை குறையுள்ளவருக்கு, அருகில் இருப்பது தெரியாது என்பதுபோல, நாம் தூரப்பார்வைதான் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

நிறை என்றால் என்ன? குறை என்றால் என்ன? இந்த இரண்டுக்குமே பொதுவான விடை எங்கே இருக்கிறது தெரியுமா? ஒவ்வொருவருடைய மனதில் இருக்கிறது. ஆங்கிலத்தில், முன்னோர் சொன்னதை, வழிமொழிந்து மட்டுமே நகர்வார்கள். சொந்த அறிவுக்கும், சிந்தனைக்கும் அங்கே இடமில்லை. அதை தமிழில், அதே போல, ‘இன்னொருவனின் முன்னெடுப்பில்’ சொன்னால், ‘நீ ஏன் அவர் புகழ்பாடுகிறாய்?’ அவரை வைத்து பிழைக்கிறாயா?’ என்று கேட்பார்கள். ‘சொந்த புத்தி இல்லையா?’ என்று கூடுதலாகவும் கேள்வி கேட்பார்கள். சரி, சொந்த புத்தியில் சொல்ல ஆரம்பித்தால், சொல்லுபவரின், சொல்லையும், கருத்தையும் விட்டுவிட்டு, சொல்லுபவரை, ஆராய ஆரம்பித்துவிடுவார்கள். இதுதான் நம் மக்களின் நடைமுறை வழக்கமும், பழக்கமும். இதனாலேயே, விளக்கமான கட்டுரை எழுதவே தயக்கமாகவும் இருக்கிறது. ஆனால், எனக்குப்பின் இச்சமூகத்திற்கு தரக்கூடிய பதிவுகள் தேவை என்பதால், ஒவ்வொருவரும், தங்கள் அனுபவத்தை, விளக்கத்தை, உண்மையை, பதிவு செய்யவேண்டிய கட்டாயம் இருக்கிறது. அப்படித்தான், நாம் பல சங்ககால கல்வெட்டு எழுத்துக்களையும், ஓலைச்சுவடிகளையும் பெற்றோம்.

தமிழகத்தின் வாழ்வியல் சொல்லும், சங்க கால படைப்புக்கள், தன் அனுபவத்தின்படியே வந்தவை. இவர் இப்படிச் சொன்னார் என்று எவருமே தொகுப்பாக தந்ததில்லை. அதுபோலவே, என்னுடைய எழுத்துகளும் அமைகின்றன. என்றாலும் தேவைப்படும்பொழுது, முன்மொழிவு, வேதாத்திரியம் தான். 

இந்த நிறை, குறை கேள்விக்கு, கூடுதல் உண்மையை, வேதாத்திரி மகரிஷி இப்படிச் சொல்லுகிறார். ‘மனிதன் பிறக்கிறான். சிறிது காலம் வாழ்கிறான். பின்னர் இறந்து விடுகிறான். வாழும் காலத்தில் குடல் ஜீரணிக்கக் கூடிய அளவுக்கு மேலாக உணவை உட்கொள்ள முடியாது. உடல் சுமக்கும் அளவுக்கு மேலாக உடைகளை அணியவும் முடியாது. நின்றால் ஒன்பதுக்கு ஒன்பது அங்குலம் பூமி, படுத்தால் ஒன்றரை அடிக்கு ஆறடி அளவு நிலம், உட்கார்ந்தால் மூன்றடிக்கு மூன்றடி தரை. இதற்கு மேல் எவராலும் அனுபவிக்கவும் முடியாது. எவ்வளவு தான் ஒரு மனிதன் சம்பாதித்து இருப்பு வைத்திருந்தாலும், இறக்கும்போது அவற்றில் ஒரு துளியைக் கூட எடுத்துக் கொண்டு போகவும் முடியாது.’

இந்த நிலையில், நிறையும், குறையும் எங்கே? எதனிடத்தில்? எப்படி? என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடிகிறதா? இந்த நிறையும், குறையும் எங்கே சம நிலை அடைகிறது? எங்கே மறைகிறது? முழுமை அடைகிறது? என்ற கேள்வியை முன்வைத்தால், அது ‘மெய்ப்பொருள் உண்மையை அறியும்பொழுது’ என்பதுதான் பதிலாகும்.

ஆனால், வாழ்கின்ற, இந்த பொருள்முதல்வாத உலகில், குறைதான் இருக்கும் என்பது உறுதி, அதுவரை, நிறைவை நோக்கி நகர்கின்ற வாழ்க்கைதான் சரியானது. நிறைவில் நின்றால், மற்றொரு குறையில் சிக்கி இருப்பதை உணர்வீர்கள். ஆனால், எது நிறை? என்ற கேள்வியோடு நகருங்கள். அனுபவம், காலம், அதைத்தரும் இயற்கை ஆகிய மூன்றும், உங்களை வழிநடத்தும்.

வாழ்க வளமுடன்

-

Why the social norms is never changes based on rich, poor and middle classes?


பணக்காரனிடம் பணம் சேர்ந்துகொண்டே இருக்கிறது, ஏழை ஏழையாகிக் கொண்டே இருக்கிறான். நடுத்தரவர்க்கம் உழைத்துக்கொண்டே இருக்கிறது. இதை மாற்றவழி என்ன?



வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, பணக்காரனிடம் பணம் சேர்ந்துகொண்டே இருக்கிறது, ஏழை ஏழையாகிக் கொண்டே இருக்கிறான். நடுத்தரவர்க்கம் உழைத்துக்கொண்டே இருக்கிறது. இதை மாற்றவழி என்ன?


பதில்:

ஏதோ பொருளாதார நிபுணருக்கு அனுப்பிவைக்க வேண்டிய கேள்வியை என்னிடம் அனுப்பிவிட்டீர்களா என்று கேட்கத் தோன்றுகிறது. நிச்சயமாக அவர்கள் மிக தெளிவான, துல்லியமான, உலகியல் நிலைப்படியும், தற்கால சூழ்நிலைப்படியும் புள்ளிவிபரங்களோடு கூடிய விரிவான பதிலை அவர்கள்தான் தரமுடியும். என்னளவில் பார்வைகளும் அனுபவங்களும் மாறும் என்பதே உண்மை. மேலும் யோகத்தில் ஆழ்ந்து அதில் பயணிப்பவர் பார்வை ஆழ்ந்து செல்லக்கூடியதுதான் என்றாலும், அக்கருத்தை சொல்லும் பொழுது, எதிர்தரப்பு எதிர்பாராத பதிலாக அமையும், அதனால் இவரிடம் போய் ஏனடா இதைக்கேட்டோம் என்று வருந்துமளவுக்கு, முகத்தினை திருப்பிக்கொள்ளும் அளவுக்கு, வேறொடு பிரச்சனை எழுமளவுக்கு இருக்கும். ஏதோ முடிந்தளவு விளக்க முயற்சிக்கிறேன்.

பணக்காரன், ஏழை, நடுத்தரவர்க்கள் என்பதெல்லாம் விதி அல்ல என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். ஒரு பணக்கார வீட்டில், பணக்காரனுக்கு மகனாக / மகளாக பிறந்ததால் மட்டுமே அவர் பணக்காரர் இல்லை. அவரின் வாழும் முறைதான் அந்த தகுதியை நிர்ணயிக்கிறது. ஒரு பணக்காரர் தீடீரென்று பணம், பொருள், சொத்து இழந்தும் விடுகிறார் அல்லவா? அதுபோலவே ஏழைக்குடும்பத்தில் பிறந்தாலும், அந்த சூழலை மாற்றிட உயர்ந்த படிப்பு படிக்க முயற்சிக்கலாம், அடிப்படை கல்வி போதுமென வேலைக்கு செல்லலாம். படிப்பே தேவையில்லை என்று திறமையை வைத்தும் உழைத்து முன்னேறலாம் அல்லவா? அடுத்ததாக, நடுத்தர வர்க்கமும் ஒரே வேலை, தொழில், பரம்பரை நிலை என்பதெல்லாம் மாற்றி, என்ன செய்தால், எப்படி செய்தால், உயரலாம், முன்னேறலாம், மேம்பாடு காணலாம் என்று சிந்தித்து, ஆராய்ந்து தகுந்த காலத்தில் நல்ல நிலையை அடையலாம் அல்லவா?

இப்படியான நிலை இருக்கும் பொழுது பணக்காரனிடம் பணம் சேர்ந்துகொண்டே இருக்கிறது, ஏழை ஏழையாகிக் கொண்டே இருக்கிறான். நடுத்தரவர்க்கம் உழைத்துக்கொண்டே இருக்கிறது என்று சொல்லுவது முறையாகாது. அவரவர் அளவில் இருக்கக்கூடிய பிரச்சனைகள், வெளியில் தெரியாது. நீங்கள் ஒரு பணக்காரனாக இருந்தால் இந்த கேள்வியே கேட்டிருக்க மாட்டீர்கள் என்பது உறுதி. ஏழையும், நடுத்தரவர்க்கமும் தான் இப்படியான புலம்பலிலும், சிக்கலிலும் இருக்கிறார்கள். பணக்கார்களை நீங்கள் நுணுகி பார்க்கவேண்டும். அவர்களிடம் பொதுவாகவே, அநாவசிய செலவு என்று இருப்பதில்லை. எல்லாவற்றிலும் அளவு வைத்துக்கொள்வார்கள். திட்டமிடுவார்கள். லாபமும், வருமானமும் வருமா? என்று சிந்தித்துத்தான் ஒன்றை தொடங்குவார்கள். இழப்பை சிறிதளவும் ஏற்க மாட்டார்கள். தானமாக கொடுத்தாலும் அதில் ஓர் அளவும் கணக்கும் இருக்கும். இத்தகைய குணங்கள் ஏழையிடமும், நடுத்தரவர்கத்திடமும் உண்டா?

இன்றைக்கு இருக்கு, நாளை என்பதை நாளைக்குப் பார்க்கலாம் என்றுதான் ஏழையும், நடுத்தரவர்க்கமும் இருக்கும். தன்னிடம் இருப்பதை வாறி இறைக்கும் மனநிலையோடுதான் இருப்பார்கள். அது நல்ல உயர்ந்த நிலைதான் ஆனால், நீங்கள் தன்னளவில் ஏன் கஷ்டத்தை ஏற்கவேண்டும்? அப்படியான அவசியம் என்ன? அவரெல்லாம் உழைக்காமலேயே சம்பாதிக்கிறான், நான் இப்படியாக அவதிப்பட வேண்டியுள்ளது என்று மற்றவரை ஏன் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும்? இது உதாரணங்களே! இதுபோல இன்னும் நிறை பேசிக்கொண்டே. எழுதிக்கொண்டே போகலாம்.

ஏழைகளும், நடுத்தரவர்க்கமும் உழைக்கத் தயாரானவர்கள்தான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. மற்றவர்களுக்கு உதவும் மனநிலையும், பிறருக்காக வருந்தும் மனநிலையும் பெற்றவர்கள். ஆனால் தன்னளவில் தன்னை உயர்த்திட ஏனோ தயங்குகிறார்கள். அதை மாற்றி வாழ்வில், தொழிலில், வேலையில், வியாபாரத்தில், உழைப்பில் வெற்றி பெற்று, பொருளும் செல்வமும் பெறவேண்டும் என்று வாழ்த்தி மகிழ்கிறேன்.

ஐயா, என்னளவில் எனக்குத் தெரிந்த கருத்தைத்தான் முன்வைத்திருக்கிறேன். இதில் மாற்றுக்கருத்துக்கு இடமுண்டு. நான் தீர்வு தந்தாக என்னிடம் வாளை சுழற்றவேண்டாம். வாள் சண்டைக்கு நான் தயாரில்லை. கருத்துக்களில் உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால் விலகிக் கொள்ளுங்கள். தவறு இருக்குமானால் நானே திருத்திக்கொள்ளவும் தயங்கமாட்டேன்.

வாழ்க வளமுடன்

-

It is necessary to live for money, to live with money. Is it appropriate to live through yoga?


பணத்திற்காக வாழ்வது, பணத்தோடு வாழ்வது என்பதுதானே அவசியமாக இருக்கிறது. இதில் யோகத்தின் வழியே வாழ்வது பொருந்துமா?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, பணத்திற்காக வாழ்வது, பணத்தோடு வாழ்வது என்பதுதானே அவசியமாக இருக்கிறது. இதில் யோகத்தின் வழியே வாழ்வது பொருந்துமா?

பதில்:

அந்தக்காலம் முதல், இப்போது இருக்கின்ற, நவீன அணு விஞ்ஞான காலம் வரையிலும், மனிதர்களின் வாழ்வில் பலதரப்பட்ட மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. அந்தவகையில், இன்று பொருள்முதல்வாத உலகில் வாழ்கிறோம். ஒவ்வோரு மனிதரும், இன்னொரு மனிதனோடு ஏதேனும் ஓர் வகையில் இணைந்துதான் வாழ்கிறான். ஒருவருக்கொருவர் பரிமாற்றமும் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. தன்னளவில் வாழ்பவருக்கும், குடும்ப உறுப்பினர்களோடு வாழ்பவருக்கும் பணம் முக்கியமாக மாறிவிட்டது. குடும்பத்தில் ஒருவர் என்ற நிலைமாறி, எல்லோருமே பணம் சம்பாதிக்கவேண்டிய சூழலும் இன்று பெருகிவிட்டதை மறுக்கமுடியாது. 

தன்னியல்பாக, தற்சார்பாக வாழ்ந்தாலும்கூட பிறருக்கு உதவுதல், சமூகத்திற்கு உதவுதல், அதன்வழியாக தானும் பயன்பெறுதல் என்றுதான் வாழ்வும் முடியும். பண்டம் மாற்று என்று, பணமில்லாத பரிமாற்றங்கள் நிகழ்வதற்கும் இனி வழியில்லை. பணம் என்ற ஒன்றை தேடுதலின் வழியாகவே, ஒவ்வொரு மனிதனும் தன்னை நிலை நிறுத்திக் கொள்கிறான். அவனின் கல்வியும், படிப்பும், பயிற்சியும், படிப்பறியாதோர்க்கு அனுபவமும், பழக்கமும், உடல்வலிவும் அவரவருக்கு தேவையான பணத்தை பெறுவதற்கு பிரதானமாக இருக்கிறது.

தன் தேவைகளை, விருப்பங்களை நிறைவேற்ற ஓவ்வொருவருக்கும் பணம் தேவை. குழந்தைகளும், உடல் உழைப்பை தர இயலாத வயதானவர்கள் மட்டுமே விதிவிலக்கு. இந்த இருதரப்பினருக்கும், யாரேனும் சிலர் உதவி செய்துதான் காக்கவேண்டும்.

இந்த வகையில், நீங்கள் சொன்னதுப்போலவே, பணத்திற்காக வாழ்வது, பணத்தோடு வாழ்வது என்பதுதானே அவசியமாக இருக்கிறது. நமக்கு மட்டுமல்ல, உலகில் வாழ்கின்ற எல்லா மனிதர்களுக்கும் என்பதும் குறிப்பிடவேண்டியதாகும். இதில் யோகத்தின் வழியே வாழ்வது என்றால், இந்த சிந்தனை எப்படி இருக்கிறது தெரியுமா? இந்த சம்பாத்தியத்தை, பணத்தை, அதன் பயனை விட்டுவிடவேண்டுமோ? என்று கேட்பதுபோல இருக்கிறது!

யோகம் என்பது என்ன? என்பதை முதலில் தெரிந்து கொள்க. யோகம் என்பது, மனிதனின் மூலம் எது? என்று அறிந்து தன்னை நெறிப்படுத்திக்கொள்ளும் ஒரு பயிற்சி முறைதான். இதை எல்லாவற்றையும் விட்டுவிடுதல் எங்கே வந்தது? மேலும் யோகமும், துறவும் என்று முடிச்சிட்டுக்கொள்வது இன்னொரு பிரச்சனை. யோகம் என்பது பொருளாதார வாழ்க்கைக்கு எதிரானது என்ற நம்பிக்கையும், துறவு என்பது எல்லா சுகங்களையும், குடும்பத்தையும், விட்டுவிட்டு கையேந்தும் நிலைக்கு மாறிக்கொள்வது என்ற ரீதியில்தான் மக்கள் புரிந்துவைத்திருக்கிறார்கள். இந்த இரண்டுமே உண்மைக்கு புறம்பான தகவல்கள். மக்களிடம் அப்படி இன்னும் நிலைத்துவிட்டது.

யோகம் என்பது பயிற்சிமுறை என்பதுபோல, துறவு என்பது அளவிலும், முறையும் வாழ்ந்து அனுபவிப்பதற்கான வழி ஆகும்.  இந்த இரண்டு உண்மைகளை நன்றாக புரிந்துகொள்ளுங்கள். உங்களிடம் வேறுயார், தவறாக சொன்னாலும், அவர்களையும் திருத்துங்கள். 

இப்படியாக, பணத்திற்காக வாழ்வது, பணத்தோடு வாழ்வது என்பதுதானே அவசியமாக இருக்கிறது என்கிறபோது, உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கிறது? என்று கேள்வி கேட்டால், அதற்கு உங்களுடைய பதில் என்ன? மன நிறைவாக, மகிழ்ச்சியாக, நிம்மதியாக இருக்கிறதா? பணம் இல்லாதவரும் ஒரு பரபரப்பான வாழ்வில்தான் இருக்கிறார். பலகோடி சொத்துக்கு அதிபதி என்றவரும் பரபரப்பான வாழ்வில்தான் இருக்கிறார். இருவருக்கும் உடல் வலி, நோய், பசி, தூக்கம், உறக்கம் ஆகிய இவற்றில் எப்படி இருக்கிறார்கள்? என்பதும் உங்களுக்குத் தெரியுமே? அன்றாடம் அவர்களுக்கு எழும் பிரச்சனைகளுக்கும் அளவே இல்லை எனலாம். வெளிப்பார்வைக்கு ஏழைக்கும், பணக்காரருக்கும் நிறைவாகவோ, குறைவாகவோ இருப்பதாக தோனலாம். ஆனால் அவர்கள் அளவில், ஏகப்பட்ட பிரச்சனை தாக்கம் இருப்பதை மறுக்கமுடியாது. அதை அவர்கள் மட்டுமே அறிவார், நமக்குத் தெரியாது, சிலர் நம்மிடம் சொல்லவும் மாட்டார்கள்.

அத்தகைய வாழ்வில் நிம்மதி என்ற ஒரே ஒரு தேவையை பூர்த்தி செய்யவல்லது, யோகம் மட்டுமே என்பதை மறுக்கமுடியாது. யோகம் இல்லாமல் வாழ்வதில் ஒரு குறையும் இல்லை. ஆனால், அற்புதமான ஒரு வாய்ப்பை நீங்கள் இழந்துவிடுவீர்கள். யோகம் என்பதை அறிவதற்காக இன்னொரு பிறப்பும் நிகழப்போவதில்லை என்பதை அறிவீர்கள்தானே?

உங்களை, உங்கள் பிறப்பை அர்த்தமாக்கிக் கொள்ள உங்களுக்கு கிடைத்த வாய்ப்பு, யோகத்தால் உருவாகும். இல்லையேல் கைநழுவிப் போகும் என்பதே உண்மை.

வாழ்க வளமுடன்
-

I expect a lot of everything. When will I get it all?!


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, நான் எல்லாமே நிறைய நிறைய எதிர்பார்க்கிறேன். அது எல்லாமே எனக்கு எப்போது கிடைக்கும்?!


பதில்:

இந்த இயற்கையானது, அதன் மாபெரும் சக்தியானது, உங்களுக்குத் தேவையானதை நிச்சயமாக வழங்கும். அது உண்மை. அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். ஆனால், நீங்கள் எதிர்பார்ப்பதை எல்லாம் தராது, கிடைக்காது. ஆனால், நீங்கள் கேட்பதற்கு உரிமை உண்டு. நிச்சயமாக நீங்கள் கேட்கலாம். ஆனால் உங்களுக்கு அதை பெற்றுக்கொள்ளும் தகுதி இருக்கிறதா? என்று இந்த இயற்கையாற்றல் சோதனை செய்யும். அதன் வழியாக உங்களுக்கு என்ன தேவையோ, அதைமட்டுமே வழங்கத் தயாராகும்!

எனக்கு Law of Attraction, அது, இது, என்று எல்லாமே தெரியும்ங்க, எப்படியும் நான் கேட்டுப் பெறுவேன், எனக்கு நம்பிக்கை இருக்கிறது’ என்றுதானே சொல்லுவீர்கள். சரி, ஆனால் நான் உங்கள் ஆசையை நம்பிக்கை இழக்கச்செய்யவில்லை. ஆனால் புரிந்துகொள்ளுங்கள். எதன் வழியாக நீங்கள் எதிர்பார்த்தாலும் கூட , உங்களுக்கு எது தேவையோ அதுதான், வழங்கப்படுமேயன்றி  வேறெதும் கிடைக்காது! வேதாத்திரியம் வழியாக நீங்கள் கற்றுக்கொண்ட, தனா ஆகர்ஷ்ண சங்கல்பம் செய்தாலும் கூட, நீங்கள் எதிர்பார்ப்பது எல்லாம் கிடைக்காது. உடனே இதெல்லாம் பொய்யா? ஏமாற்றுவேலையா? என்று எதிர்கேள்வி கேட்டுவிடக்கூடாது.

உங்களுக்கென்று வழங்கப்படுவது தாமதமானால், நீங்கள் கேட்டு வாங்குவது தவறில்லையே?! அதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். குரு மகான் வேதாத்திரி மகரிஷி, எதிர்பார்ப்பே வேண்டாம், அது ஏமாற்றத்தைத்தான் தரும் என்று உறுதிபட சொல்லுகிறார். தேவை என்பது வேறு, விருப்பம் என்பது வேறு, எதிர்பார்த்தல் என்பது வேறு, வேண்டும் என்பது வேறு. இப்படி நான்கு வகையாக சொல்லலாம். ஒவ்வொன்றுக்கும் உதாரணம் தனியாக சொல்லவேண்டியதில்லை என்று நினைக்கிறேன். நீங்களே கொஞ்சம் சிந்தித்தால் அதற்கான விளக்கம் கிடைத்துவிடும்.

இந்த எதிர்பார்ப்பு ஏன் வருகிறது? தேவை என்பதை மீறி நினைக்கும் பொழுதுதான் வருகிறது. உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு என்ன தேவையோ அதை மீறி ஏன் எதிர்பார்ப்பு என்றால், அதற்கு மிக எளிய காரணம், நீங்கள் வேறு யாரையோ உங்களோடு ஒப்பிடுகிறீர்கள். அந்த யாரோ போல உயரவேண்டும், அவரை  விடவும் மேலாக உயரவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். அப்போதுதான் உங்களுடை தேவை என்பதை விட்டு விலகி, இவ்வளவு என்றோ, நிறைய நிறைய என்றோ எதிர்பார்க்கத் துவங்கிவிடுகிறீர்கள்.

இந்த ஏதிர்பார்ப்பதிலேயே நீங்கள் மனதை செலுத்தினால், மனதின் மகத்தான சக்தி வீணாகிவிடும். இருப்பதையும் இழக்கும்படியான வாழ்க்கை சிதறிவிடும். உங்கள் தேவைகள்கூட பறிபோகலாம். இதிலிருந்து விலக, அகத்தாய்வும், தற்சோதனையும் செய்து, உண்மையாகவே எனக்கு என்ன தேவை? என்று பட்டியலிட்டு அதை கேளுங்கள். கிடைக்கும்!

வாழ்க வளமுடன்.

-

How to fix the deficit in materialistic life?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, ஏதோ ஒரு பற்றாக்குறையிலேயே வாழ்வதாக தோன்றுகிறது. அது எப்பொழுது மாறும்?!


பதில்:

நீங்கள் சொல்வது உண்மைதான். இந்த உலகில்வாழும் பெரும்பான்மையான மக்களுக்கு, ஏதோ ஒரு பற்றாக்குறையிலேயே வாழ்வதாக தோன்றுகிறது. சிலர் உங்களைப்போல வெளியில் சொல்லுவார்கள். சிலர் சொல்லுவதில்லை. இதற்கு பலவித காரணங்களை சொல்லுவார்கள். அதாவது, வாழ்க்கையில் இப்படி அப்படி நிறைவு செய்துகொள். அதை இதை கழித்தும், பெற்றும் வாழ பழகிக் கொள் என்று எண்ணற்ற அறிவுரைகள் கிடைக்கும். என்றாலும் கூட இதற்கு முக்கியமாக இருக்கக்கூடிய காரணம் ஒன்று உண்டு. அதன் வழியாகத்தான் இந்த பற்றாக்குறை நின்றுவிடுகிறது. அது என்ன?

அதுதான் நம்முடைய மனம். இந்த மனம் நமக்குள்ளாக இருந்தாலும், அதனுடைய மூலம் மிகப் பிரமாண்டமானது. அதை நாம் அறிந்துகொள்வதில்லை. அதற்கான வழியையும் தேடுவதில்லை.  அசட்டையாக இருந்து தவிர்த்தும் விடுகிறோம். 

ஆனால், நாம் வாழ்கின்ற இந்த உலகில், அடிப்படையான விசயங்களை முழுமை செய்தாகவேண்டியது அவசியம். ஏனென்றால் பொருள் இல்லாமல் இந்த உலகம் இல்லை. உணவு, உடை, இருப்பிடம் என்பதோடு பொருளும், பணமும் அவசியமானது தான். அந்த பணத்தைப் பெற, வேலை, தொழில், வியாபாரம், உழைப்பு என்ற வகையில் நாம் செயல்பட வேண்டியதும் முக்கியமானது. இந்தவகையில் பற்றாக்குறையை, அதாவது அடிப்படை பற்றாக்குறையை சரி செய்தாகவேண்டும்.

இவை எல்லாம் இருந்தும், தனக்கும், தன் குடும்பத்திற்கும், வரக்கூடிய வாரீசுகளும் நிறைவாக வாழக்கூடிய அளவுக்கு இருந்தும் கூட, நீங்கள் பற்றாக்குறையை அனுபவித்தால், அதற்கு காரணம் மனதில் நிறைவில்லை என்பதுதான் அர்த்தம். அந்த மனம், இயல்பான அதன் ஆற்றலை, சக்தியை, நிலையை மறந்து சிக்கித் தவிக்கிறது என்பதுதான் உண்மை.

அத்தகைய மனதை, அதன் உண்மை நிலையை நோக்கி திருப்பினால் மட்டுமே, எல்லாம் இருந்தும் பற்றாக்குறையாக நினைக்கும் நிலை மாற்றமடையும். இதற்கு நீங்கள் யோகத்தில் இணைந்து, அதில் மனதையும் இணைத்தால் மட்டுமே மாறிடும். எளியமுறை குண்டலினி யோகமான வேதாத்திரியம் அதற்கு உதவிடும்!

வாழ்க வளமுடன்.

Why are poverty and money unrelated to each other?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, ஏழ்மையும் பணமும் ஏன் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் இருக்கிறது? எப்படி சரி செய்வது?!


பதில்:

இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதருக்கும், தனித்தனியான வாழ்வியலும், ஒருவரோடு ஒருவர் கலந்து வாழும் வாழ்விலும் இருக்கிறது. அதுதான் இயற்கையானதும், இயல்பானதும் ஆகும். இதில் இரண்டாவது நிலையில் இருக்கும் கலந்து வாழ்தலில் பகிர்ந்து கொள்ளுதலும் உண்டு. கொடுக்கல் வாங்கல் என்றும் சொல்லலாம். அது பொருளாக இருக்கவேண்டியதில்லை. அறிவாக, அனுபவமாக, முன்னெச்சரிக்கையாக இருக்கலாம். இங்கே ஒருவருக்கு பொருளை, பணத்தை தரவேண்டும், பெறவேண்டும் என்று நினைப்பதுதான், அந்த ஒருவருக்கு ஏழ்மையை கொண்டுவந்து விடுகிறது! எப்படி?!

நான், என்னால் முடிந்தவரை இப்படித்தான் இருப்பேன். எனக்குத் தெரிந்தது இவ்வளவுதான், என்னால் செய்யமுடிந்தது இதுதான். இதற்கு மேல் நீதான் உதவவேண்டும். எனவே உன்னிடமிருப்பதை எனக்குத் தா, என்று எதிர்பார்ப்பதுதான் ஏழ்மையை வரவழைக்கிறது.

இந்த உலகில், மூன்று பிரிவில் இருக்கும் மனிதர்கள்தான், பிற மனிதர்களின் உதவியைப் பெற தகுதியானவர்கள் என்று குருமகான் வேதாத்திரி மகரிஷியும் குறிப்பிடுகின்றார். யார் அவர்கள் என்றால், 1) வயதான பெரியோர்கள் 2) 14 வயதுக்குள்ளான குழந்தைகளும், சிறியவர்களும் 3) உடலில், மனதில் ஏதெனும் ஒருவகையில் பாதிப்படைந்தோர் ஆகியோர் மட்டுமே! (சிறப்புப் பெற்றவர்கள்)

ஆனால் உலகில் எல்லாமனிதர்களுமே ஒரு எதிர்பார்ப்பில் சிக்கிக் கொண்டார்கள். ஏழ்மை என்பது தலைவிதி அல்ல என்று எத்தனையோ ஞானிகளும், மகான்களும், அனுபவசாலிகளும் சொன்னாலும் அதை ஏற்பதில்லை. ஒருவர் பிறக்கும் பொழுதும், வளரும் பொழுதும் ஏழ்மையாக, ஏழையாக இருக்கலாம். ஆனால், தன்னால் உடல் உழைப்பையும், அறிவையும், அனுபவத்தையும் இந்த உலகோடு, உலகமக்களோடு, வாழும் சமுகத்தோடு பகிர்ந்துகொள்ள முடியும் என்றால், அந்த ஏழ்மையை, இதுவரை இருந்து வந்த ஏழ்மையை மாற்றிவிடலாமே? தனக்கும், தன்னை சார்ந்த சக மனிதர்களுக்கும், இந்த சமூகத்திற்கும் தேவையான, அவசியமான, துணையான ஒன்றை செய்து பயன்பெறலாமே?! அது சேவையாக, தொழிலாக, வியாபாரமாக, உதவியாகவும் இருக்கலாம். அதன்வழியாக பணமும் பொருளும் பெறலாம் தானே?!

ஏழ்மையும் பணமும் விரோதிகள் அல்ல, அப்படி நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். உங்கள் வாழ்க்கையூடாக மாற்றத்தை சிந்தித்து, அதை செயல்படுத்தி வாருங்கள். நீங்களும் வாழ்வில் உயர்வீர்கள். நலமும் பலமும் அடைவீர்கள்!

வாழ்க வளமுடன்.

Can you explain how we get wealth through yoga?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, எனக்கு பணமும் பொருளும் எப்போது கிடைக்கும் என்பதை யோகத்தில் அறிந்துகொள்ள முடியுமா?


பதில்: 

உங்களுக்கு பணமும் பொருளும் மட்டுமல்ல, எல்லா செல்வ வளங்களும் கிடைக்கவேண்டும் என்பதுதானே உண்மை. இந்த பணமும் பொருளும், எல்லா செல்வ வளங்களும்,  இந்த உலகில் வாழும் எல்லா மனிதர்களுக்கும் தேவையானது என்பதிலும் மாற்றுக்கருத்து இல்லை. எப்போது கிடைக்கும் என்று தெரிந்து கொள்வது மட்டுமல்ல. நிறைவாக தொடர்ந்து கிடைப்பதையும் நாம் யோகத்தின் வழியாக தெரிந்து கொள்ள முடியும். இது ஒன்றும் மாயாஜால வித்தை என்று நினைக்காதீர்கள். நிச்சயமாக நடக்கக்கூடியதுதான். அதை எப்படி என்று பார்க்கலாமா?!

இல்லை நீங்கள் பொய் சொல்லுகிறீர்கள்! அதெப்படி யோகத்தின் வழியாக அறிந்துகொள்ள முடியும்? என்று ஒரு கேள்வியை நீங்கள் இப்பொழுது முன்வைத்தால், யோகத்தின் வழியாக கிடைக்காது என்பது உங்கள் நம்பிக்கையாக இருக்கிறது என்று அர்த்தமாகிறது. அதாவது இந்த கேள்விக்கான பதில் ஏற்கனவே உங்களுக்கு தெரிந்திருக்கிறது. அதனால் இங்கே என்னிடம் கேட்ட கேள்வியே தப்பாகவும் மாறிவிடுகிறது அல்லவா?!

ஆனால், யோகத்தில் அறிந்துகொள்ள முடியும், பணமும் பொருளும், எல்லா செல்வ வளங்களும் கிடைக்க, அதற்கு துணையாக யோகமும் உதவி செய்யும் என்பது உண்மையே! அது குறித்த விளக்கத்தை, இங்கே ‘வேதாத்திரிய யோகா’ காணொளி தளத்தில் காணலாம்!

-

அதற்கான இணைப்புச்சுட்டி இதோ: பிரபஞ்ச இயற்கை ஆற்றல் உங்களுக்கு பணம் பொருள் செல்வவளம் தருமா?

-

வாழ்க வளமுடன்.

What is the part of yoga in earing money for life? is it there or not?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, பணம் சம்பாதிப்பதில் யோகத்தின் பங்களிப்பு  என்ன? அப்படி உள்ளதா இல்லையா?


பதில்:

உண்மையில் இது நல்ல கேள்வியே! இந்தக்காலத்திற்கு பொருத்தமான கேள்வியும் ஆகும். இதனால் யோகமும் பணமும் எதிர் எதிரானவை என்ற கருத்து இனிமேலாவது மாறிடும் என்று நம்பலாம்! பணம் சம்பாதிப்பதில் யோகத்தின் பங்களிப்பு இருக்கிறது. அதை மறுக்க முடியாது!

பொதுவாக யோகம் என்பது பணம், பொருள், சம்பாத்தியம், வேலை, வாழ்க்கை கடமை, குடும்பம், இன்னும் சில சேர்த்துக்கொள்ளலாம்... என்பதற்கு எல்லாமே எதிரானவை. யோகத்தில் இணைந்துவிட்டால், யோகத்தை ஏற்றுக்கொண்டால் இதெல்லாம் செய்யக்கூடாது என்ற கருத்து நிலைத்துவிட்டது. அப்படியானால் யோகத்தை ஏற்றுக்கொண்டவர் எப்படி வாழ்வார்? இந்த உலகுக்கு பாரமாகவும், அடுத்தவருக்கு பாரமாகவும், அடுத்தவர்களை அண்டி பிழைக்கும் ஆண்டியாக, பிச்சை பெற்றா வாழமுடியும்?!

இந்த உலகில் வாழ்கின்ற ஓவ்வொருவருக்கும், வாழ்வியல் கடமையோடு ‘சம்பாத்தியமும்’ ஒரு கடமையே. யோகத்தில் இணைந்துகொண்டவரும், கடமை, சேவை, செய்து அதற்கான ஊதியம், கூலி பெறத்தான் வேண்டும். ஆனால் யோகத்தில் இணைந்தால், வாழ்க்கை கடமைகளை அப்படியே விட்டுத் துறக்க வேண்டும் என்பது இக்காலத்தில் சரியாகுமா? இல்லத்திலேயே துறவு என்பதுதான் இக்கால முறை. முதலில் துறவு என்றால் என்ன? உறவிலே கண்ட உண்மை நிலையே துறவு என்று வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுகிறார்.

நீங்கள் யோகத்தில் இணைந்து கொண்ட பிறகு, உங்களுடைய, வாழ்வு, கடமை, சேவை, பழக்கம், வழக்கம் இவற்றில் ஒர் நேர்மையும், அளவு முறையும், நிறைத்தன்மையும் இருக்கும் என்பதே உண்மை. அதன் வழியாக நீங்கள் வழக்கம்போல, தொழில், வியாபாரம், வேலை இவற்றை செய்து அதற்கான பலனை நிச்சயமாக பெறலாம். உங்கள் உண்மை காரணமாக, உங்கள் செயல்பாடு, பிறமனிதர்களால் போற்றப்படும், அதன்வழியாக நீங்கள் நல்ல உயர்வான வளர்ச்சி பெறலாம். அந்த வளர்ச்சியில் உங்களுக்கு போதுமானது போக மீதியை, சேவையாக, தேவைப்படுவோருக்கும், ஏழைகளுக்கும் வழங்கலாமே?!

யோகம் பற்றி புரியாதவர்கள் அப்படியே பேசிவிட்டு போகட்டும், நாம் அதை கவனத்தில் கொண்டுவர தேவையில்லை! மேலும் யோகத்தையே, மக்களை ஏமாற்றி சம்பாத்தியத்திற்கு பயன்படுத்துபவர்களைப்பற்றி ஒன்றும் சொல்லுவதற்கில்லை.

வாழ்க வளமுடன்.

-

Why do some people degrade other human beings and live with competition and jealousy?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, சிலர் தங்களோடு வாழும் பிற மனிதர்களை தாழ்த்தியும், போட்டி, பொறாமையோடும் வாழ்வது ஏன்?


பதில்:

தங்களோடு வாழும் பிற மனிதர்களை தாழ்த்தியும், போட்டி, பொறாமையோடும் நடத்திக்கொள்வதற்கு காரணம், சிலர் தங்களையும், பிறரையும் சம அளவில் கருதாததே ஆகும், மனிதன் என்பவன் மன இதனானவன் என்ற உண்மையை அவர்கள் உணர்வில்லை. மேலும் அத்தகைய மனிதர்களின் பரம்பரையில் வாழ்ந்தவர்களும், பொருள், புகழ், அதிகாரம், புலன் இன்பம் ஆகியவற்றில் மிகுந்த அக்கறை கொண்டவர்களாகவும் அதற்கு மிக மதிப்பளித்தும் வாழ்ந்து வந்திருப்பார்கள். அதுவே இப்போது வாழும் தலைமுறையினருக்கும் தொடர்கிறது எனலாம்.

மேலும் பரிணாமத்தின் வழியாக, விலங்கின பதிவுகளின் தாக்கமும் அதிக செயல்பாட்டில் இருக்கும் என்று சொல்லாம். அதாவது அவர்களின் கருமையம் களங்கத்தோடு இருக்கிறது. அதை திருத்திடவும், திருத்தி அமைக்கவும் வாய்ப்பில்லாமல் போகிறது. பல பிறவிகளின் வழியாக அந்த சுமையையும் கூட்டிக்கொண்டே போகிறார்கள். இதன் வழியாக, அவர்களுக்கு இயற்கை சில பாடங்களை கொடுத்து திருத்தம் செய்கிறது எனினும், அதை அவர்கள் ஏற்று நடப்பது இல்லை. இந்த களங்கத்தின் வழியாக, அவர்களின் உடல்நலம், மன நலம் பாதிக்கும், பிறவித்தொடர் நோய்களும், துன்பங்களும் இருக்கும் என்பதே உண்மை. யோகத்தில் இணைந்து தங்களை உயர்த்திக்கொள்ள வேண்டியது அவசியமாகும், மேலும் இரண்டொழுக்க பண்பாடும் கொண்ட வாழ்வாகவும் வாழவேண்டியதும் அவசியமாகும்.

இத்தகைய மனிதர்களிடம் சிக்கிக் கொண்டவர்களின் துயரம் சொல்லில் அடங்காது எனினும், இவர்களோடு இணைப்பில் உள்ளவர்கள், தனியே, தன் திறமையக்கொண்டு வாழ பழகுதல் வேண்டும், இவர்களை சாராத வகையில், வாழ்க்கையை அமைத்துக்கொண்டால் நல்லதுதானே. அவர் நம்மை சக மனிதனாக மதிக்காவிட்டாலும் கூட இவர்கள் திருத்தம் பெற நாம் வாழ்த்தலாம். அது நமக்கு நன்மையே தரும்.

வாழ்க வளமுடன்

Isn't it true that if you join yoga, you will lose money making?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, யோகத்தில் இணைந்தால் பணம் சம்பாதிப்பது போய்விடும் என்பதுதானே உண்மை?


பதில்:

உண்மையில்லை. இப்படி சொல்லி, மக்களை யோகத்தின் பக்கம் போகவிடாமல் தடுக்கும், குறுபுத்தி மனிதர்களின் மிகப்பெரும் பொய். கட்டுக்கதை ஆகும்.

உலகில் வாழும் எல்லா மனிதர்களுக்கும் ஐந்து கடமைகள் இருப்பதாக, குரு மகான் வேதாத்திரி மகரிஷி குறிப்பிடுகின்றார். அதில் பணம் சம்பாதித்தல் ஒரு கடமைதான். அதிலிருந்து நாம் எப்போதும் விலகிவிட முடியாது. இந்த பணம் தேடுதல், சம்பாதித்தல் ஒரு மனிதன் குறிப்பிட்ட காலத்தில் துவங்கி, தன்னுடைய முதுமை காலத்திற்குள் நிறைவு பெறவேண்டியதும் அவசியம்.

பொதுவாகவே, குழந்தைகள் மற்றும் முதியவர்கள் விதிவிலக்கு. சில உடல்தகுதியில் பாதிப்படைந்தோருக்கும் இந்த விதிவிலக்கு உண்டு. இவர்களுக்கு நாம் உதவக்கூடிய கடமையும் இருக்கிறதுதான். மேலும் இக்காலத்தில் பெண்கள் தனியே, தன்னை நிர்வகித்துக் கொள்ளக் கூடிய நிலைக்கு உயர்ந்து விட்டார்கள். இது மிகப்பெரும் வளர்ச்சி. இது இன்னும் பெருகி மிகச் சுதந்திரமாக செயல்படும் தன்மைக்கு வரவேண்டும். அந்தவகையில் வளர்ந்த ஆணும், பெண்ணும் தனக்கும், தன் வளர்ச்சிக்கும், தன்னை  நிலைப்படுத்தவும், சமூக வளர்ச்சிக்கும், அதன் வழியாக உலகின் சமச்சீருக்கும் தொழில், வியாபாரம், வேலை செய்து பணம் ஈட்டுதல் முக்கியமானது ஆகும்.

உலக மக்கள், முதலில் யோகம் என்ற குழப்பமான மயக்க நிலையில் இருந்து விடுபட வேண்டும். யோகம் என்பது நம்மை திருத்திக் கொண்டு, உண்மையாக, அறத்தோடு, இயற்கையோடு தன்னை ஒன்றிணைத்து, தன்னையும் அறிந்து வாழும் நெறிமுறைதானே தவிர வேறொன்றும் இல்லை. யோகத்தில் இணைவதற்காகவோ, இணைந்த பிறகோ சம்பாதிப்பைதையும், மற்ற எல்லாவற்றையும் விட்டுவிட வேண்டும் என்பது தவறான எண்ணம். இனிமேலாவது திருத்திக்கொள்ள வேண்டும். 

‘சம்பாதிப்பதை விட்டுவிட்டால் இந்த உலகில் எப்படி வாழ முடியும்? பிச்சை எடுக்கமுடியுமா? தருவார்களா? உழைத்துச் சாப்பிடு என்றுதானே விரட்டுவார்கள்? மேலும் அப்படி உலகுக்கு பாரமாக, மற்றவர்களுக்கும் பாரமாக வாழ்ந்து என்னதான் பெறமுடியும்?’ என்று குரு மகான் வேதாத்திரி மகரிஷி கேட்கிறார். தன்னளவில் வேலையோ, கடமையோ செய்து பணம், பொருள் ஈட்டி வாழ்வதுதான் முறை என்றும் பதில் தருகிறார். எனவே இனிமேலும் பொய்களை, கட்டுக்கதைகளை நம்பிடாதீர். உண்மை விளக்கம் பெறுக.

யோகத்தில் இணைந்தாலும் கூட, வழக்கமான உங்கள் பணி, வேலை, தொழில், வியாபாரம் ஆகியவற்றை கடமையாக செய்யலாம். யோகத்தில் இணைந்திருப்பதால், நீங்கள் அறவழியில் பயணிப்பதால், முன்னைவிடவும், உங்கள் வருமானம், மக்களின் நம்பிக்கை, மக்களின் ஆதரவு பெருகிடவும் வாய்ப்பு அதிகம். சம்பாதிப்பது என்பதில், உங்கள் தேவை என்பதை நிர்ணயித்து, போதும் என்ற நிறைவுக்குப் பிறகு, இந்த சமுகத்தில் தேவைப்படுவோர்க்கு, உண்மையான ஏழைகளுக்கு உங்கள் உதவியை சேவையாக செய்யுங்கள். நலம் பெறுங்கள்!

வாழ்க வளமுடன்.

Why do I feel like suffering from yoga and not being as happy as others?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, மற்றவர்களெல்லாம் இயல்பாக வாழும்பொழுது, யோகத்தில் இருக்கும் நான்மட்டும் இப்படி கஷ்டப்படுகிறேனே என்று தோன்றுகிறது. சரிதானா?!


பதில்:

நீங்கள் யோகத்தில் இருப்பது மிக நல்லது, அதற்கு வாழ்த்துகள். உங்களைத் தவிர மற்றவர்கள் எல்லாம் இயல்பாக வாழ்கிறார்கள் என்று எப்படி சொல்லுகிறீர்கள்? அவர்களின் வாழ்க்கைமுறை, பொருளாதார நிலை, ஆடம்பரம், தோற்றம், வழக்கம் பழக்கம் இப்படி வெளித் தோற்றங்களை வைத்துப்பார்த்தால் அப்படித்தான் தோன்றும். நிச்சயமாக அவர்கள் சூழ்நிலை கைதியாக, ஒரு நடிப்பாக வாழ்ந்துகொண்டிருப்பதை அறியலாம். மேலும் முக்கியமாக, பொருள், புகழ், அதிகாரம், இன்பவாழ்வு என்ற நிலையில்தான் தங்கள் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டு இருப்பார்கள். நீங்கள் அவர்களிடம் போய், ஏதேனும் கேட்டுப்பாருங்கள். உங்கள் நிலையைவிடவும், மிகச் சாதாரண நிலையில் இருப்பார்கள் என்பதே உண்மை. மேலும் அவர்கள் யோகத்திற்கு வரமுடியாத மிக நீண்ட தூரத்திலும் நிலைபெற்றிருக்கிறார்கள்.

தெய்வபக்தி மிகுதி என்று காட்டிக்கொள்வார்கள். அன்பும் ஆதரவும் பிறருக்கு எப்போதும் உண்டு என்றும் சொல்லுவார்கள். தேவை என்றால் என்னை அணுகுக என்றும் நம்பிக்கை தருவார்கள். ஆனால் திடீரென்று ஆளே நம்கண்ணுக்கு தெரியாமல் மறைந்து விடுவார்கள். மறுத்தும் விடுவார்கள். 

யோகத்தில் இருக்கிற நீங்கள், உங்களை சரியான பாதையில் பயணிக்கிறீர்கள் என்பது உறுதி. அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. வாழ்க்கையின் நோக்கமே, இன்பமாக வாழ்வதுதான், அதில் எந்த குழப்பமும் இன்றி இருக்க, தன்னையறிதல் எனும் பிறப்பின் கடமையை அறிந்துகொள்ள வேண்டும். நம்மிடம் இருக்கும் களங்களை போக்கி, மனதை, உடலை இயல்பாக வைத்துக்கொள்ள யோகம் தானே சிறந்த வழி?! இதுவரையில் வாழ்ந்த வாழ்க்கையில், உங்களை நினைத்துப்பாருங்கள்.

யோகத்தில் இணைந்தபிறகு ஏற்பட்ட, ஏற்பட்டுக் கொண்டிருக்கிற மாற்றங்களை எண்ணிப்பாருங்கள். அன்று உங்களுக்கு மனம் என்றால் என்ன என்றே தெரியாதுதானே? இப்பொழுது மனம் குறித்த விளக்கமும், அதை எப்படி இயல்பாக வைத்துக்கொள்வது யோகத்தின் வழியாக நீங்கள் அறிந்துவிட்டீர்களே!  தினமும் இயற்றும் தவமும் உங்களை உயர்த்துகிறது. காலத்தால் நீங்கள் தன்னிலை விளக்கம் பெற்று உயர்வடைவீர்கள். வாழ்க்கையை இயற்கையோரு ஒன்றி ரசித்து, இன்பமாக வாழ்வீர்கள் என்பதே உண்மை. இது குருமகான் வேதாத்திரி நமக்கு தந்த பாதை.

மற்றவர்களை எப்போதும், உங்களோடு ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். அது உங்கள் மனதை, உடலை, வளர்ச்சியை, நோக்கத்தை கெடுக்கும். உங்கள் பாதையில், உங்கள் செயலுக்கான விளைவை மிகச்சரியாக இறைநிலை தரும், அதுதான் அதனுடைய நீதியும் ஆகும்!

வாழ்க வளமுடன். 

Is sangalpa and mantra working? Or is it deception?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, சர்வ வஷிய தன ஆகர்ஷண சங்கல்பம் உண்மையிலேயே வேலை செய்கிறதா? அல்லது ஏமாற்றுவேலையா?


பதில்:

இதற்கான பதில் உங்களுக்கு நிச்சயமாக தெரியவேண்டும் என்றால், நீங்கள் அதை செய்துபார்க்க வேண்டியது அவசியம். அது ஏமாற்று வேலையா? இல்லையா? என்பதையும் நீங்கள் செய்து பார்த்த பிறகு தெரிந்துகொள்ளலாம் என்பதே உண்மை. வேதாத்திரி மகரிஷி அவர்கள் சொல்லியிருக்கிறார் என்பதற்காகவும், நான் சொல்கிறேன் என்பதற்காகவும், பிறர் சொல்லுகிறார்கள் என்பதற்காகவும் நீங்களே உங்களை ஏமாற்றிக் கொள்ள தேவையும் இல்லை. சில நல்லதை, விளக்கங்களை சொல்லுபவரின் அனுபவம் கொண்டுதான் ஏற்கவேண்டும். சந்தேகம் வருகிறது என்றால் தாராளமாக நீங்கள் தவிர்த்துவிடலாம். இது அவரவர் விருப்பமே அன்றி, கட்டாயம் என்ற நிலைபாடு இல்லையே. அதுப்பொல பிறரின் நம்பிக்கையை உதாசீனப்படுத்துவதும் நம் வேலை இல்லையே!

நமக்குள்ளும், இந்த பிரபஞ்சம் முழுவதும் நிறைந்திருக்கும் ஆற்றலை, சக்தியை, நம் வசப்படுத்திக் கொள்ளும் ஒரு வழிமுறைதான், சங்கல்பம் அல்லது மந்திரம். இதை தொடர்ந்து ஊக்குவிக்கும் பொழுது, அங்கே ஏற்படும் மாற்றம், நம் விருப்பத்திற்கு சாதகமாக அமைகிறது என்பதுதான் உண்மை. இதை விஞ்ஞான அறிவுகொண்டும் நிரூபணம் செய்யலாம். ஆனால் விஞ்ஞானிகள் விளைவினை உடனே எதிர்பார்ப்பதால், அவர்கள் ஏற்க மாட்டார்கள். விளைவு என்பது உண்மை, ஆனால் அது நம் எதிர்பார்ப்புக்குள் அடங்கிடாது! அதில் இயற்கையின் பங்கும், இயற்கையின் தவறாத விதியும் உண்டு. அதை நாம கணிக்கவும் முடியாது.

சங்கல்பமும், மந்திரமும் மிகச்சாதாரண மனிதர்கள் உருவாக்கிடவும் முடியாது. அதற்கு ஆழ்ந்த அனுபவமும், உண்மை விளக்கம் பெற்ற நிலையும், இயற்கையோடு தன்னை அறிந்த நிலையும், புரிதலும் தேவை. அப்படியான மகான்கள் உருவாக்கியதே, இப்போது நமக்கு கிடைத்திருக்கும் சங்கல்பம் மற்றும் மந்திரம். யாருக்கு நம்பிக்கையும், விருப்பமும் இருக்கிறதோ அவர்கள் அதை செய்யட்டும் பலன்பெறட்டும். நம்பிக்கை இல்லாதவர்கள் அதை செய்யவேண்டியதில்லை!

வாழ்க வளமுடன்.

If we have to join in yoga, we need to emptiness on our materialistic world?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, யோகத்தில் இணைந்தால், உலக இன்பமும், பணம் சம்பாத்தியமும், சொத்துக்களும் இழந்துவிடுவோம் என்பது உண்மையா?


பதில்:

இந்த கேள்வி 99.9% உலக மக்களிடம் எழுகின்ற சந்தேகமே ஆகும். யோகத்தின் வழியாக, யோகியர்களுக்கு கிடைத்த, மரியாதையை, உதவியை, போற்றுதலை கண்ட சில, கபட வேடதாரிகள், தாங்களும் யோகியர்களாக, உரு மாற்றிக்கொண்டு, சமூகத்தில் உயர்ந்த மனிதர்களின் நட்பை பெற்று, அவர்களின் பணம், சொத்துக்களை ஏமாற்றிப் பறித்திட, நடத்திய நாடகமே இந்த நிலையில் மக்கள் நினைப்பதற்கு காரணம் ஆகும்.

ஆனாலும், நம் உலகில் அந்தக்காலம் முதல், இந்தக்காலம் வரை, ஒரு யோகி எப்படி இருக்கவேண்டும் என்பதற்கான வரையறையை, அவரவர்களாகவே ஏற்படுத்திக் கொண்டு, அதில் பலவித சட்ட திட்டங்களை உண்டாக்கி, அதிசயம், அற்புதம் என்ற கட்டுக்கதைகளையும் சேர்த்துக் கொண்டார்கள்.

 இதனால் ஒரு யோகி, எல்லாவற்றையும் இழந்துவிடுவார். உலக இன்பங்களில் அவருக்கு ஆர்வம் இருக்காது. பணமும் சொத்தும் வேலையும் அவருக்கு அவசியமில்லை. எல்லா நேரமும் இறைபுகழ் பாடுவார். நமக்கு ஆசிகள் வழங்கிக்கொண்டே இருப்பார். நாம் அவருக்கு கொடுப்பதை மட்டும் வாங்கிக் கொள்வார். அவராக எதுவுமே கேட்க மாட்டார், பேசக்கூட மாட்டார், மௌனமாகவே இருப்பார்... என்பதான பலப்பல கற்பனை கதைகளையும் உருவாக்கி விட்டனர்.

மேலும், யோகியர்களின் எளிமையை, போற்றும் நபர்களும் இருக்கிறார்கள், அது குறித்து கிண்டல் செய்பவர்களும் இருக்கிறார்கள். ஒரு யோகி இப்படித்தான் இருக்கவேண்டும் என்று சொல்லுவதற்கு இவர்கள் யார்?!

தன்னை அறிந்த யோகி, தனக்குள் இறையையும் உணர்ந்து நிறைவாகிறார். உலகில் வாழும் வரை அவருக்கான உரிமை, தேவை, கடமை உண்டுதானே? குரு மகான் வேதாத்திரி மகரிஷி சொல்லும்பொழுது, ஒரு ஆசிரமத்தில் தன்னை இணைத்துக்கொண்டால் மட்டும், உணவு, உதவி, அக்கறையை தந்துவிடுவார்களா? அங்கே அவரும் உழைத்தால் தானே எல்லாம் கிடைக்கும் என்கிறார். எனவே யோகத்தில் இருப்பரோ, யோகியோ இப்படி இருக்கவேண்டும் அல்லது இப்படி இருக்கவேண்டியது இருக்கும் என்ற கற்பனைகளுக்கு இடம் கொடுக்காதீர்கள். இன்னமும் பழைய கட்டுக்கதைகளை நம்பாதீர்கள்.

இல்லறத்தின் கடமையை விட்டு விலகுவதும், யோகத்தில் தன்னை ஏமாற்றிக் கொள்வதற்கான காலம் இது அல்ல. மனவளக்கலை வழியாக, பிறப்பின் கடமைக்கும், இறையுணர்வுக்கும், நான் யார்? என்ற தன்னையறிதலுக்கான, மிகச்சிறந்த வழி நமக்கு கிடைத்திருக்கிறது. கட்டுக்கதைகளை நம்பி, பிறர் சொல்லுவதை ஏற்று, உங்களுக்கான வாய்ப்பை தவிர்த்துவிட வேண்டாம். உண்மை என்ன என்று உங்களுக்குள்ளாக சிந்தித்து ஆராய்ந்தும் பாருங்கள்.

வாழ்க வளமுடன்.

Get ready to live now - Part 01


 


வாழ்வதற்கு தயாராகுக

இது கரோனா நோய்தொற்றின் இரண்டாம் அலைக்காலம். தற்பொழுது ஜெர்மனி நாட்டில், மூன்றாவது அலைக்காலமும் வந்துவிட்டதாக தகவல். எல்லோருக்கும் கொஞ்சமாவது அடிவயிற்றில் பயம் இருக்கும் என்பது உண்மையே. ஏனென்றால், நம்மை பெற்றவர்களை. உடன் பிறந்தோரை, குடும்ப உறுப்பினர்களை, நம் நண்பர்களை, நமக்கு தெரிந்தவர்களை இழந்திருக்கிறோம் தானே! அதுமட்டுமல்லாது, சமூகத்தில் மிகப்பெரும் பெயர்பெற்ற நபர்களும் இந்த கரோனா நோய்க்கிருமியால் தாக்கப்பட்டும் அல்லது எதிர்பாராத, நிரூபிக்கபடாத பக்க விளைவுகளாலும் தங்கள் உயிரை பறிகொடுத்துவிட்டார்கள். 

 

கரோனா நோய்தொற்றின் எதிர்காலம்!

இந்த கரோனா நோய்தொற்றின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு, மருத்துவ அறிவியல் வல்லுனர்கள் பதில் சொல்லும்போது,

“கரோனா இன்னும் பரவும், மக்களிடையே இருக்கும் ஆனால் காலப்போக்கில் பலமிழந்துவிடும்” என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள். 

குரைக்கிர நாய் கடிக்காது என்பது எனக்கு தெரியும், அது அந்த நாய்க்கு தெரியுமா? என்பதுபோலவே “இது கரோனாவுக்கு” தெரியுமா என்ற கேள்வி எழுகிறது. 


தற்காப்பு இழந்த உடல்

உலக ஒரே சந்தை பொருளாதாரம் எல்லா நாடுகளிலும் திறந்துவிடப்பட்டு, சராசரி அல்லது கடைக்கோடி மக்களும் ஏற்று தன் எல்லா வழக்க பழக்கங்களையும், வாழ்க்கை முறைகளையும் மாற்றி வைத்துவிட்டது. கிட்டதட்ட ஒரு 50 வருடம் என்று உதாரணமாக எடுத்துக்கொண்டால் கூட, மெட்ரோ நகரங்களில் கிடைக்கும் உணவுப்பொருட்கள், நகரத்தில் கிடைப்பதில்லை. நகரத்தில் கிடைப்பது ஊர்களில் கிடைப்பதில்லை, ஊரில் கிடைப்பது கிராம சிற்றூரில் கிடைப்பதில்லை.

ஆனால் இக்காலத்தில் எங்கோ வெளிநாட்டில் கிடைக்கும் “குப்பை” உணவுப்பொருள், கிராம சிற்றூரில் கிடைக்கிறது. அதை குழந்தைகள் விரும்பி சாப்பிடுகிறார்கள். குப்பையை உலகமக்களெல்லாம் விரும்பு சாப்பிடுவதில் என்ன பெருமை இருக்கமுடியும்?

இப்படியாக, நானும் கெட்டேன், நீயும் கெட்டாய் என்று எல்லோருமே உடலின் குறிப்பிட்ட தற்காப்பு சக்தியையும், உடல் உறுப்புக்களின் நல்ல செயல்பாடுகளையும் கெடுத்துக்கொண்டோம் என்பது பொய்யில்லை. திடகாத்திரமான உடல் என்பது நூலிலும், அகராதியிலும் மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கும் காலமாகவிட்டது. உணவே மருந்து, மருந்தே உணவு என்பது கேலியாகி விட்டது. அதுபோலவே இதைசொல்லியும் வியாபாரமாக்கும் “வியாபாரிகளும்” பெருகிவிட்டனர். 


அருகிவிட்ட சமைத்தல்

பசிக்கிறதா? சாப்பாட்டை கைபேசி வழியாக ஆர்டர் செய்க என்று என்று எல்லோரும் மாறிவிட்டனர். ஏன்? என்று கேட்டால், சமைக்க நேரமில்லை? ஏன் நேரமில்லை? வேறு நிறைய வேலையிருக்கிறது? அப்படி என்ன நிறைய வேலையிருக்கிறது? இதற்கு நீங்கள் தான் பதில் தரவேண்டும்.

ஒரு வீட்டில் சமையல் செய்துதான் ஆகவேண்டும் என்ற கட்டாயமில்லைதான். ஆனால் உங்கள் உடலுக்கு ஏற்ற உணவை, உங்களுக்கு பிடித்த உணவாக, நீங்களே அரிசி, காய் கறிகளை தொட்டு, சுத்தம் செய்து கழுவி, நறுக்கி, போதுமான வெப்பத்தில் சமைத்து, ருசிக்கு கூடுதாலக ஏதேனும் சேர்த்து, இறக்கி, குடும்ப உறுப்பினர்களோடு பகிர்ந்து, கையால் சாப்பிட்டால், அது உங்களுக்கும், உங்கள் உடலுக்கும், உடல் உறுப்புகளுக்கும் பலன் அளிக்குமே.

ஒரு உணவை உங்கள் கைகளால் பிசைந்து சாப்பிடும் பொழுது, உங்களின் சக்தி அவ்வுணவுக்கு சென்று, உணவைக்கூட திருத்தி அமைக்கும் என்ற உண்மை உங்களுக்கு தெரியுமா? அதுபோலவே, நீங்களே உணவை சமைத்தால் எப்படியான பலன் கிடைக்கும் என்று சிந்திக்கமுடிகிறதா?

இங்கே சமைப்பதில் ஆண், பெண் இருபாலருமே இணைந்து கொள்வதுதான் நல்லது. முடிந்தால் இதில் குழந்தைகளைக்கூட கொஞ்சம் பழக்கிக்கொடுக்கலாம் என்பது என் தீர்வு.

உணவால், சரியானபடி உடலை வளர்க்காமல், பாதுகாப்பு அளிக்காமல், வேறு எப்படித்தான் வாழப்போகிறீர்கள்?

பல்லாண்டுகாலமாக, தமிழர்கள் வாழ்வியலில் “உணவு” வியாபாரமாக்கபடவே இல்லை என்பது தான் உண்மை. ஆனால் இன்றோ, இயற்கையின் கொடையான, தண்ணீரும் விலையாகிப் போனது. காற்றும் விலையாகிக் கொண்டிருக்கிறது ஆனால் இன்னும் பரவலாக்கப்படவில்லை. பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் நகரத்தில் வேலையில்லை, உள்ளே வந்துவிட்டால் உணவு, நீர் வாங்குவதற்கு அவைகளிடம் பணமில்லை. பணமில்லா மனிதனுக்கும் உணவு, நீர், காற்று பணமின்றி கிடைக்காது என்றால், யோசித்துப்பார்க்கையில் பயமாக இருக்கிறது. 


இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில்!

அடுத்த பதிவு செல்ல Part 02

--------------

Image Thanks to: Brooke Cagle and shutterstock

Body isn't your servant - Final post


இந்த உடல் உன் வேலைக்காரனல்ல, அப்படியானால் யார்? 





வணக்கம் அன்பர்களே!


உங்களுக்கு பரிசாக கிடைத்த உடல் மற்றும் உடல் உன் வேலைக்காரன் அல்ல எனும், 

இந்த பதிவு மற்றும் இதன் தொடர்ச்சி பதிவுகள் அனைத்தும், அமேசான் வழியாக ”இயற்கை வழங்கிய உங்களுக்கான பரிசு” எனும் தலைப்பில் மின்நூலாக வெளிவருவதால், இங்கே பதிவிட முடியாமைக்கு வருந்துகிறேன். உங்கள் ஆதரவுக்கு நன்றி.


அமேசான் கிண்டில் மின்நூல் வழியாக வாங்க அல்லது படிக்க, கீழே சுட்டுக.

இயற்கை வழங்கிய உங்களுக்கான பரிசு



----------------------

Photos Thanks to: Hian Oliveira / Eiliv-Sonas Aceron / National Cancer Institute



Body isn't your servant - Part 3


 உடல் உன் வேலைக்காரனல்ல




வணக்கம் அன்பர்களே!


உங்களுக்கு பரிசாக கிடைத்த உடல் மற்றும் உடல் உன் வேலைக்காரன் அல்ல எனும், 

இந்த பதிவு மற்றும் இதன் தொடர்ச்சி பதிவுகள் அனைத்தும், அமேசான் வழியாக ”இயற்கை வழங்கிய உங்களுக்கான பரிசு” எனும் தலைப்பில் மின்நூலாக வெளிவருவதால், இங்கே பதிவிட முடியாமைக்கு வருந்துகிறேன். உங்கள் ஆதரவுக்கு நன்றி.


அமேசான் கிண்டில் மின்நூல் வழியாக வாங்க அல்லது படிக்க, கீழே சுட்டுக.

இயற்கை வழங்கிய உங்களுக்கான பரிசு



---------------

Photos thanks to: at infinity @atinfinity l National Cancer Institute @nci


Body isn't your servant - Part 2


 உடல் உன் வேலைக்காரனல்ல - பகுதி 2.




எனவே, இப்போது திருமணம் என்பது, பொருளாத தேடலிலும், அதன் நிறைவு 


வணக்கம் அன்பர்களே!


உங்களுக்கு பரிசாக கிடைத்த உடல் மற்றும் உடல் உன் வேலைக்காரன் அல்ல எனும், 

இந்த பதிவு மற்றும் இதன் தொடர்ச்சி பதிவுகள் அனைத்தும், அமேசான் வழியாக ”இயற்கை வழங்கிய உங்களுக்கான பரிசு” எனும் தலைப்பில் மின்நூலாக வெளிவருவதால், இங்கே பதிவிட முடியாமைக்கு வருந்துகிறேன். உங்கள் ஆதரவுக்கு நன்றி.


அமேசான் கிண்டில் மின்நூல் வழியாக வாங்க அல்லது படிக்க, கீழே சுட்டுக.

இயற்கை வழங்கிய உங்களுக்கான பரிசு


-----------------

Photos thanks to: Womanizer WOW Tech @womanizer l Christina @wocintechchat l Ben Hershey @benhershey



You and Your Gifted Body


 நீங்களும் உங்களுக்கு பரிசாகக் கிடைத்த உடலும்!


வணக்கம் அன்பர்களே!


உங்களுக்கு பரிசாக கிடைத்த உடல் மற்றும் உடல் உன் வேலைக்காரன் அல்ல எனும், 

இந்த பதிவு மற்றும் இதன் தொடர்ச்சி பதிவுகள் அனைத்தும், அமேசான் வழியாக ”இயற்கை வழங்கிய உங்களுக்கான பரிசு” எனும் தலைப்பில் மின்நூலாக வெளிவருவதால், இங்கே பதிவிட முடியாமைக்கு வருந்துகிறேன். உங்கள் ஆதரவுக்கு நன்றி.


அமேசான் கிண்டில் மின்நூல் வழியாக வாங்க அல்லது படிக்க, கீழே சுட்டுக.

இயற்கை வழங்கிய உங்களுக்கான பரிசு


-------------------

Image thanks to: krakenimages @krakenimages