CJ for You: imprint

imprint

Showing posts with label imprint. Show all posts
Showing posts with label imprint. Show all posts

Will virtue and God realization give you a fulfilling life? Is that the right way?


உங்களுக்கு அறநெறியும், இறையுணர்வும் நிறைவான வாழ்வைத் தருமா? அது சரியான வழிதானா?


சித்தர்களின் வரிசையில், தலைமையாக குறிப்பிடப்படுகிற, சித்தர் பெரும் மகான், திருமூலர், தன்னுடைய ‘திருமந்திரம்’ நூல் வழியாக, ‘வாழ்கின்ற ஒரு மனிதனுக்கு, தவமும், அறமும் துணையாகும். அந்த இரு துணைகள் கொண்டுதான், நீண்ட பெரும் பிறவித்தொடரை கடந்து, முழுமை செய்திட முடியும்’ என்கிறார். ஆனால், இதையெல்லாம் ‘மனித வாழ்வியல் உண்மை தத்துவம்’ என்று அறியாமல், பக்தி வழிபாடு கோட்பாடு என்று பெரும்பாலோர், ஒதுக்கி வைத்தும், புறந்தள்ளியும் விட்டார்கள். ஆனால், உண்மை நிலைத்து நிற்பதால். இத்தகைய, மனித வாழ்வுக்கான, அக்கறையான தத்துவங்களும், கருத்துக்களும் நிலைத்து நின்று, விருப்புவோருக்கு உதவுகின்றன. சித்தர்கள், தங்களுடைய வாழ்க்கை முழுவதுமே, ஈகை என்ற உயர்ந்த நோக்கத்தைக் கொண்டவர்கள். வாழ்வில் துன்பம் ஏற்று திசைமாறும் மனிதர்களுக்கு, அன்பும் கருணையுமாக இருந்து, வழி காட்டுபவர்கள். அந்த வழியில்தான், ஆசான் வேதாத்திரி மகரிஷி அவர்களும் வந்திருக்கிறார்.

வேதாத்திரி மகரிஷி அவர்களே தரும், உண்மை விளக்கத்தை, இங்கே காணலாம். மனித இன வாழ்வுக்கு ‘இறையுணர்வும் அறநெறியும்’ சரியான வழிகாட்டுதல்கள் ஆகும்.  இறைநிலை பற்றிய அறிவு என்பது ஒரு மாபெரும் மறைபொருள் விளக்கமாகும்.  

இது ஒருவர் தன் அகத்தவத்தின் (Simplified Kundalini Yoga - SKY) மூலம் மனச் சுழல் விரைவைக் (Mind Frequency) குறைத்து அமைதி என்னும் மனநிலைக்கு வந்து, அந்த நிலையில் சிந்தித்து இறையுணர்வு பெற வேண்டும்.  

சாதாரணமாக வாய் மொழியின் மூலமாகவோ, மந்திரங்கள் மூலமாகவோ, சடங்குகள் மூலமாகவோ, புத்தகங்கள் மூலமாகவோ இறைநிலையை  உண்மையாக உணர முடியாது. ‘இறைநிலை உணர்வு ஏற்படவில்லை என்றால் ஒரு மனிதனுக்கு அறநெறி வாழ்வும் அமையாது’.

பல காரணங்களால் இக்காலத்தில் இறையுணர்வு என்ற அறிவின் முழுமைப்பேறும் (Perfection), அறநெறி என்ற சீரமைந்த வாழ்வும் நிலைகுலைந்து போயிருக்கின்றன.  இதன் காரணமாகவே இன்று நாம் மனித குல வாழ்வில் காணுகின்ற எல்லா வகையான குழப்பங்களும், துன்பங்களும் நேர்ந்துள்ளன. அறிவின் சிந்தனையாற்றல்  செயல்படாததனாலும், பழக்கத்தினாலும் தொடர்ந்து வருகின்ற செயல்கள் பலப்பல.  

களைகளை அகற்றுவது போன்றே இவற்றையும் அகற்றி விட வேண்டியது மனித இன வாழ்வுக்கும், வளத்திற்கும் நலமளிக்கும். விவசாயத்தில் பயிரை வளரவிடாது தடுக்கின்ற களைகளை போன்ற பல செயல்கள் உருவாகி சமுதாயத்தில் மண்டிக்கிடக்கின்றன.  

இறையுணர்வு பெற்று, அறம் ஆற்றி, வாழுகின்ற ஆன்மீக நெறியில் மனிதன் வாழ்ந்தால் - சமுதாயத்தில்  ஏழ்மை என்பது இருக்காது.  பொய், கொலை, களவு, சூது, விபச்சாரம் என்னும் ஐந்து வகையான பழிச் செயல்களும் இருக்காது.  அறிவின் குறைபாட்டினால் தனக்கும், பிறருக்கும் துன்பங்களை விளைவிக்கின்ற குற்றங்களும் சமுதாயத்தில் நிலவா.  

எனவே வயது வந்த அனைவரும் முறையாக "குண்டலினி யோகம்" (Simplified Kundalini Yoga) பயின்று இறையுணர்வு பெற வேண்டும்.  வாழ்வில் அறநெறியையும், இறையுணர்வையும் பின்பற்றி வாழ வேண்டும். விளைவறிந்த விழிப்போடு தனக்கும் பிறர்க்கும் துன்பம் வராமல் காக்கும் செயல் முறையே அறமாகும்.தனக்கும், பிறர்க்கும், நன்மை தரும் செயலின் விளைவாக இறைநிலையை உணரும் வழியே சிறந்த இறையுணர்வு ஆகும்.

இறைவனை வணங்குவதைவிட, இறைநிலையைப் பற்றி சிந்திப்பதே மேல். அறிவின் மதிப்பு குறையாமல் உயிர் போனாலும் சரி அதை ஏற்றுக்கொள்வோம்.  அறிவு கெட்டு உயிர் நீடித்து பயனில்லையென்பது அறிஞர் கண்ட தெளிவு. இவ்வாறாக நமக்கு வேதாத்திரி மகரிஷி அவர்கள் விளக்கம் தருகிறார். இந்த உண்மைகளை கவிதை வழியாகவும் தருகிறார்.

இறையுணர்வும் அறநெறியும் நிறைவான வாழ்வைத் தரும், என்ற தலைப்பில்

இறையுணர்ந்து, அறம்ஆற்றி, எல்லாரும் வாழ்ந்தால்,

ஏழ்மைஏது? பஞ்சமகா பாபங்கள் ஏது?

குறையறிவால் எழுகின்ற குற்றங்கள் ஏது?

கோயில்கள் தவம்பயில, தத்துவங்கள் கற்க. 

முறையாகத் திருந்தியநற் கலாசாலை களாம்.

மொழிநாடு, பொருள்துறையில் பிணக்குபோர் ஏது?

சிறைச்சாலை விலங்கினங் கட்குக்கூட வேண்டாம்!  

சிந்தனையும், சிக்கனமும், சீர்திருத்தம் ஏற்போம்.


வாழ்க வளமுடன்.

-

Do you want to understand karma in a modern, scientific way? What is the way to do that?


உங்களுக்கு கர்மா என்பதை நவீனமாக, விஞ்ஞான விளக்கமாக புரிந்து கொள்ள விருப்பமா? அதற்கான வழி என்ன?


கர்மா என்ற வினையை முதலில் புரிந்து கொள்வது அவசியம். கர்மா என்பது குறித்து, உதாசீனம் செய்வதற்கும் முன்பும், ஐயோ என்று பயப்படுவதற்கு முன்பும், கர்மா எப்படி ஏற்படுகிறது என்பதை தெரிந்து கொள்வதும் அவசியம். ஒரு உதாரணமாக, இக்கால கம்ப்யூட்டர் (கணினி) மொபைல் (கைபேசி) வழியாக, இணையத்தில் நிறைய செய்திகள், படங்கள், சினிமா, பாடல், இசை, நூல்கள் எல்லாம் பார்க்கிறீர்கள். உங்கள் நண்பர்களுக்கும், பிரியமானவர்களுக்கும் ஏதேனும் செய்திகள் அனுப்புகிறீர்கள். அவர்களும் உங்களுக்கு அனுப்புகிறார்கள். இக்கால இளவட்டங்கள் போல சில கெட்ட சமாச்சாரங்களும் கூட இருக்கலாம் தானே? 

இப்போது இந்த, அனுப்பியதும், பெறுவதும் ரகசியமாக இருக்கும். நீங்களும், நீங்கள் யாருக்கு அனுப்பினீர்களோ அவர்கள் மட்டுமே பார்க்க முடியும். எனினும், இந்த நடவடிக்கை எல்லாமே, பதிவும் ஆகும். உங்களவிலும், அவர் அளவிலும் அதை அழித்துவிடலாம். ஆனால், கணினி, கைபேசி இவற்றின் மூலத்தில், நீங்கள் கைவைக்க முடியாது. அழிக்க முடியாது. ஒரு சாஃப்ட்வேர் என்ஜீனியர், ஒரு நிமிடத்தில், உங்களுக்கு இடையே என்ன நிகழ்ந்தது? என்ன பரிமாறிக்கொண்டீர்கள்? என்று அறியமுடியும் அல்லவா? முடியாது என்கிறீர்களா?

இந்த நடவடிக்கைகள் நல்லது, நேர்மையானது, உபயோகமானது என்றால் ஒருபிரச்சனையும் எழப்போவது இல்லை. யாரும் உங்களை குறை சொல்லவோ, திருத்தவோ, தண்டிக்கவோ, சிறைபிடிக்கவோ போவதில்லை. ஆனால் எல்லாமே தவறு, அடுத்தவரை கெடுப்பது, பிரச்சனைக்குரியது, ஆபாசமானது, சட்டத்திற்கு புறம்பானது என்றால், எல்லாமே ஆரம்பமாகிவிடும் அல்லவா? இதை நான் செய்யவே இல்லை என்று உங்களால் மறுக்கவும் வழி உண்டா? யாரோ செய்தார்கள் என்று கடந்துவிட முடியுமா?

இந்த வழியில், ஓர் உண்மை உங்களுக்கு புரியவரும். செயலை செய்தது நீங்கள். அதையெல்லாம் பதிந்தது யார்? சாஃப்ட்வேர் என்பீர்கள். ஒரு சாஃப்வேர் உங்கள் நடவடிக்கையை பதிந்து வைக்கிறது என்றால், இந்த இயற்கை, உங்கள் நடவடிக்கையை பதிந்து வைத்துகொள்ளாது என்கிறீர்களா? அதற்கு அந்த திறமை இல்லை என்று எடைபோடுகிறீர்களா? இயற்கையை, இதையெல்லாம் செய்யத் தெரியாத முட்டாள் என்கிறீர்களா?

உங்களுக்கு இப்போது வயது என்ன? என்று எனக்குத் தெரியாது. ஆனால், மூன்று வயதுக்கு முன் நீங்கள் எங்கே இருந்தீர்கள்? எப்படி இருந்தீர்கள்? நினைவிருக்கிறதா? பிறந்ததில் இருந்து, கிட்டதட்ட ஆயிரம் நாட்கள் உங்களை, வழி நடத்தியது யார்? நீங்களே தானா? இந்த கேள்விக்கு விடை இருக்கிறதா?

அந்த ஆயிரம் நாட்களும், அதற்குப்பிறகு, இன்றுவரை நீங்கள் செய்துவந்தது, உங்களுக்கு நினைவில் இல்லாவிட்டாலும், பதிவு என்பது இருக்கும்தானே? இதை நீங்கள் மறுக்கமுடியுமா? உங்கள் ஹார்ட் டிஸ்கில் அழித்துவிடலாம். ஆனால் இணையம் வழியான, நெட்வொர்க் வழியான சர்வர் என்ற சோர்ஸ் டிஸ்கில் இருக்கும் அல்லவா? அதுதான் கர்மா என்ற வினை ஆகும். இது பதிவுதான். நல்லதை அப்படியே விட்டுவிடலாம். கெட்டதை, தீய விளைவு தந்ததை, திருத்த வேண்டிய கட்டாயம், ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ளது. 

அப்படியானால், உங்கள் கர்ம வினை மட்டும்தான் இருக்கிறாதா? என்ற கேள்வி எழுந்தால், இல்லை. நீங்கள் தனித்த ஒரு நபர் அல்ல. உங்களை உருவாக்க, தாயும் தந்தையும் துணையாக இருந்தார்கள். அவர்களுக்கு அவர்களின் தாயும், தந்தையும், இப்படி ஒன்று இரண்டாக, இரண்டு நான்காக அடுக்குகளாக போய்க்கொண்டே இருக்கும். இதில், ஏழு தலைமுறை என்று எடுத்துக் கொண்டால், அத்தனையும், உங்களுக்குள்ளாக இருக்கும். ஏற்கனவே பார்த்த உண்மையில், உங்கள் மூன்றுவயதிற்கு முன்னால், உங்கள் பசி, தூக்கம், எழுதல், இயற்கை உபாதைகள் இதையெல்லாம், இயற்கை கவனித்தது. அதனோடு உங்கள் நடவடிக்கைகள், ஏதோ ஒரு பதிவின் வழியாகவே நிகழ்ந்தது. ஒரு களிமன் பானையாக மாற்றம் பெறுவது, பானையால் அல்ல. மண்ணால் அல்ல. அந்த வடிவத்தை தரும் மண் கலைஞனால் தானே? அவனும் அந்த சக்கரங்களை சுழற்றி, நீர் ஊற்றி குழைத்து, வழித்து உருவாக்குகிறான். இப்படி உங்களுக்குள்ளாக நீங்கள் இல்லாமலேயே எல்லாம் நிகழ்ந்தது தானே? அந்த நிகழ்வுகளின், செயல்களின், வெளிப்பாடுகளின் பதிவுகள்தான் கர்மா. அதை தமிழில் வினை என்று சொல்லுகிறோம்.

இந்த வினைகள் மூன்று பிரிவுகள் ஆகும். சஞ்சிதம், பிராரப்தம், ஆகாமியம் ஆகியன ஆகும். சித்தர்கள் சஞ்சிதம் என்பதை பழவினை என்றும், பிராரப்தம், ஆகாமியம் இரண்டையும் சேர்த்தே புதுவினை என்றும் சொல்லுகிறார்கள். சஞ்சிதம் என்ற பழவினை, நாம் அறியாதது, நமக்குள்ளாக இருப்பது. பிராரப்தம், ஆகாமியம் என்ற புதுவினை, நாம் பிறந்தது முதல் இன்றுவரை நாமே நமக்குள் சேர்த்துக் கொண்டது.

இந்த கர்மா என்ற வினை தீர்க்கவே பிறப்பெடுத்தோம். ஆனால், அதை முற்றாக மறந்துவிட்டு, உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நம் தாய் தந்தைக்கும் தெரியவில்லை. நமக்கும் தெரியவில்லை. நம் பிள்ளைகளுக்கும் தெரியப்படுத்தவில்லை. அவர்களுடை பிள்ளைகளுக்கும் தெரியப்போவதில்லை.

சரி, இந்த கர்மா என்ற வினை தீர்க்கப்பட்டால் என்னய்யா ஆகும்? இதை வார்த்தைகளால், உங்களுக்கு புரியவைத்திட முடியாது. அதை நீங்கள் உண்வாக பெறலாம். ஆம் முற்றிலும் விடுதலை உணர்வாக, உலகில் வாழ்ந்து மகிழலாம். நிறைவாக, வாழ்நாள் முழுவதும் என்பது உறுதி.

வாழ்க வளமுடன்.

What is the relationship between man and God? Is that true and necessary?


மனிதனுக்கும் இறைநிலைக்கும் உள்ள தொடர்பு என்ன? அது உண்மையும், அவசியமும் தானா?


இந்த கேள்வியை கேட்கும் வகையில், உங்களுக்கு இறை நம்பிக்கையும், அதுகுறித்த சிந்தனையும், மனிதன் பிறப்பு குறித்த ஆராய்ச்சியும், இயற்கை குறித்த வியப்பும் இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.

கடவுள் என்பதே பொய் என்ற கருத்து, அவ்வப்பொழுது மேலோங்கி, இளையோர்களிடம் திணிக்கப்பட்டு வருவதையும் நாம் காண்கிறோம். எனினும் அதுகுறித்து நாம் கவனம் கொள்ள அவசியமில்லை. ஏனென்றால், இந்த பிரச்சனையை, அவர்களுக்குள்ளாக இருக்கும், இறையாற்றலே சரி செய்துகொள்ளும் என்பது உறுதி. என்ன அதுவரை அவர்களுடைய வாழ்க்கை, பல திசைமாற்றங்களை சந்தித்து, இறுதியாக ‘ஓ, இதுதான் கடவுளா?’ என்று அவர்களின் கேள்விக்கு பதிலை, காலமே தந்துவிடும். சிலருக்கு தன் வாழ்நாளிலேயே கிடைக்கும். சிலருக்கு அவர்களின் வழியாக வரும் வாரீசுகளுக்கு கிடைக்கும். நாம் அதை எப்போது என்று தீர்மானிக்க வழியில்லை. எனவே, நாம் அவர்களை அப்படியே விட்டுவிடுவோம். அது அவர்கள் பாதை, சென்று சேரட்டும், நாம் நம் பாதையில் பயணிப்போம்.

மனிதனுக்கும் இறைநிலைக்கும் உள்ள தொடர்பு அறியவேண்டும் என்றால், நாம், விஞ்ஞானத்தில் சொல்லப்படுகின்ற, ரிவர்ஸ் இன்ஞ்ஜீனியரிங் டெக்னாலஜிக்கு ( Reverse Engennering Technology) செல்லவேண்டும். இந்த பின்னோக்கிய அமைப்பியல் நுட்பம் என்பது, மனிதனின் மூலம் என்ன? என்ற கேள்வியாக ஆரம்பிக்கலாம். உயிர்வியல் ஆய்வாளரான, சார்லஸ் டார்வின், குரங்கிலிருந்து வந்தவன் மனிதன் என்றார். நவீன விஞ்ஞானம், இல்லை, குரங்குக்கு முன்னேயும், குரங்குக்கு பின்னேயும் பல நூறு பிறப்புக்கள் வந்தன. பிறகுதான் நவீன மனிதன் வந்தான் என்று சொல்லுகிறது. இந்த விஞ்ஞானம் எப்போது தொடங்கியது? புவியீர்ப்பு என்பதையே 17ம் நூற்றாண்டில்தான் கண்டுபிடித்தார்கள். அதற்கும் முன் இல்லையா? இருந்தது அதை, பதிவு செய்து விஞ்ஞானமாக்கவில்லை. அவ்வளவுதான்.

இவையெல்லாம், மக்களின் வாழ்வியலில் எல்லாம் கலந்துதான் இருந்தது. Proof என்று சொல்லக்கூடிய சான்று, தனியாக இல்லை. விஞ்ஞானம் என்ற அமைப்பும் உருவாகவில்லை. ஆனால், பல்லாயிரம் ஆண்டுகளாக, செய்யுள் வழியாக, கவி வழியாக வந்து கொண்டுதான் இருந்தது. இதையெல்லாம், பக்தி என்பதாக, சிலர் ஒதுக்கிவைத்தது, வாழும் மக்களுக்கான அநீதி. எனினும் உண்மை மறைவதில்லை.

இறை நிலை, தெய்வீகம், கடவுள், இயற்கை இப்படி எந்தெந்த வார்த்தையில் சொன்னாலும், ஒரே பொருளைக்குறிக்கும், மெய்பொருளை நாம், அவ்வளவு சுலபமாக ஒதுக்கிவிடவும் முடியாது. உயர்வான, மூலமான, என்றும், எங்கும், எப்போதும் இருக்கும் ஒன்றான முழுமை அது. வார்த்தைக்குள் சிக்கிடாதது. ஆனால், உணர்வுக்கும் அறிவுக்கும் கிடைப்பது. நிச்சயமாக அது கற்றறிவும், படிப்படிவும், அனுபவ அறிவும் அல்ல. சிந்தனையும், எண்ணமும் அற்ற ஓர் ஒப்பற்ற நிலை. இதை, வேதாத்திரி மகரிஷிதான், உள்ளது உள்ளபடி, விஞ்ஞானிகளுக்கும் புரியவைத்தார்.

அறிவும், விரைவுமாக, வேகமும் விவேகமுமாக, பேராற்றலும் பேரறிவுமாக, தன்னியல்பாக அதிர்ந்துகொண்டே இருப்பதும், தன்னிருக்க சூழ்ந்தழுத்தமாக இருப்பதும் எதுவோ அதுவே மெய்பொருள் என்கிறார். இதை உங்கள் வார்த்தை படி எப்படி அழைத்தாலும், அழைக்காவிட்டாலும், ஒதுக்கித்தள்ளினாலும்கூட ‘அது இருக்கும், அதற்குள் நாம் இருப்போம், நமக்குளும் அது இருக்கும்’.

பரிணாமத்தில் எழுச்சியில், தன்மாற்றமாக உண்டான, பரமாணு முதல், மனிதன் வரையில் வந்த பயணம், மனிதன், நான் யார்? என்று தன்னை அறிந்த பொழுது முழுமை அடைந்தது. துரதிர்ஷ்டவசமாக, ஓர் மனிதனில் அது திருப்தி அடையவில்லை. ஒவ்வொரு மனிதனும், அந்த பயணத்தை முடிக்கவேண்டிய அவசியம் இருக்கிறது. அதுவரை, பிறப்பு தொடர்ந்து கொண்டே இருக்கும். தலைமுறை தலைமுறையாக. உங்களிடம் எப்படி உங்கள் தாத்தா பாட்டியின் குணாதசியம் இருக்கிறதோ, அதுபோல உங்கள் குணாதசியம், உங்கள் பரம்பரைக்கு, வாரீசுகளுக்கு கடத்தப்படும். இல்லை என்று மறுப்பீர்களா?

இதையே கர்ம வினை என்று அமைகிறது. கர்மா என்ற வார்த்தை, உங்களை ஏதோ செய்கிற்து என்றால், செயல் விளைவு தத்துவமாக எடுத்துக்கொள்ளலாம். இதில் இயற்கையின், வினை விளைவு நீதி உள்ளடக்கமாக இருக்கிறது. யாரும், எதுவும், இதிலிருந்து தப்பமுடிவதில்லை. அதை புரிந்து கொண்டு, உங்களுக்கும், பிறருக்கும் பிரச்சனை ஏற்படுத்தும், ஏற்படுத்திய பதிவுகளை நாம் விலக்கி, தூய்மை செய்துகொள்வது அவசியம். பிறப்பின் நோக்கமும் அதுதான். இறைநிலையின் தீர்ப்பும் அதுதான். அதை புரிந்து கொள்ளாதவரை, உங்கள் வாழ்க்கைப்பாடு திண்டாட்டம் தான். அதை தனியாக, இங்கே வார்த்தைகளால் விளக்கவேண்டிய அவசியமில்லை. இந்த வகையில், உங்கள் கேள்விக்கு விடை, புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.

வாழ்க வளமுடன்.

-

What is the meaning of Genetic Center in the Vethathiriya Yoga?


வேதாத்திரியத்தில் சொல்லப்படுகின்ற ‘கருமையம்’ என்பது குறித்து விளக்கம் தருக.

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, வேதாத்திரியத்தில் சொல்லப்படுகின்ற ‘கருமையம்’ என்பது குறித்து விளக்கம் தருக.


பதில்:

கருமையம் என்ற பொருளும், அதன் உண்மையும், வேதாத்திரியத்தின் சிறப்பு ஆகும். கருமையம் நம்முடைய பொக்கிஷம் என்கிறார், வேதாத்திரி மகரிஷி. இந்த பிரபஞ்சத்தில் எப்பொருளுக்கும், கருமையம் உண்டு எனினும், உயிரின பரிணாமத்தின் வழியாக அமைந்த கருமையம், தனிச்சிறப்பு  பெற்றிருக்கிறது. இந்த கருமையமும், ஒவ்வொரு மனிதருக்கும் நிச்சயமாக உண்டு என்பதை மறவாதீர்.

        ஒரு மனிதனின், வாழும் காலத்தில் எப்படி அதன் செயல்பாடு இருக்கிறதோ, அதே தன்மையில் எப்போதும் இருக்கும். அதாவது தன்னுடைய பதிவுகளில் இருப்பதை, வெளிக்காட்டிக்கொண்டே இருக்கும் என்று அர்த்தமாகிறது. இது எவ்வளவு காலம் என்றால், கருமையத்தின் களங்கள் தீர்க்கப்படும்வரை எனலாம். இந்த களங்கம் என்பதுதான், கர்ம வினைப்பதிவுகள் என்றாகின்றன.

வாழும் ஒருமனிதன், இறந்து போனால், எல்லாம் முடிந்தது என்பதில்லை. குரு மகான் வேதாத்திரி மகரிஷி, ‘வாழ்ந்து மறைந்த அந்த மனிதனின் கருமையமும், அதன் பதிவுகளும் அழிவதில்லை’ என்கிறார். மேலும், அவரின் விளக்கத்தின் வழியாக அறிவோம்.

கருமையம் (Genetic Center) மிக வியப்பான செயல்களை ஆற்றிக் கொண்டிருப்பதை ஆழ்ந்து ஆராய்ந்தால் உணர்ந்து கொள்ளலாம். கருமையம் என்பது காந்த அலைத் திணிவு. நுண்ணிய ஜீவ இனங்களிலிருந்து அவை பரிணாமத்தால் உயர்ந்து மனிதனாகும் வரையில் கருமையம் தனது செயலை நிறுத்துவதில்லை; தன்மைகளை இழப்பதும் இல்லை.

உடல் காலத்தால் மாறிக்கொண்டு இருக்கும். அதை உடலுக்கு இறப்பு என்று சொல்கிறோம். ஆனால், அதிலடங்கியிருந்த உயிர்த்துகளோ, பிரபஞ்சம் முழுவதும் இயங்கிக் கொண்டு இருக்கும் உயிர்த்துகளோடு கலந்து விடும். உடலை விட்டு வெளியேறிய இந்தக் காந்த அலைக்கு அதன் இயக்க நியதியினாலும், இதுவரையில் இணைத்துக் கொண்ட தன்மையினாலேயும் ஒரு சிறப்பு நிலை உருவாகிவிடுகிறது.

வான் காந்தத்தில் (Universal Magnetism) மிதக்கும் இத்தகையக் கருமையமானது அதன் சிறப்புக்கு ஏற்பச் செயல்படக்கூடிய, விளைவுகளைத் தரக்கூடிய பொருத்தமான ஜீவ இனத்தோடு இணைந்து விடும்.

அது முதற்கொண்டு கருமையம் இணைத்துக் கொண்ட ஜீவனுடைய ஆன்மா, அந்த இணைப்பினாலான சிறப்புக்களையும் பெற்றுவிடும். இவ்வாறு வாழும்போதே சந்ததிகள் மூலம் பல்லாயிரம் தலைமுறைகளுக்கும் தொடர்ந்து வருவதும், உடலை விட்ட பின்னர்கூடத் தனது தகுதிக்கேற்ற ஒரு கருமையத்தோடு இணைந்து கொள்வதும், சாதாரண மன நிலையிலுள்ள மனிதனால் சரியாக உணர்ந்து கொள்ள முடியாது.

எனினும் இறையாற்றலால் நிகழ்ந்து கொண்டு இருக்கும் இந்த வியத்தகு கருமையம், பேரியக்க மண்டல இரகசியங்கள் அனைத்தையும் அடக்கமாகப் பெற்ற ஒரு இயற்கை நியதியாகும்.

தன்னிலை விளக்கமானாலும் சரி, இறைநிலை விளக்கமானாலும் சரி, இக்காந்தக் "கருமையத்தை" உணர்ந்து கொள்ளாத முன்னம் தெளிவாக உணர்ந்து கொள்ள முடியாது, என்பதாக, விளக்கம் அளிக்கிறார், வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

வாழ்க வளமுடன்.

-

பதிலின் மூலம் வேதாத்திரி மகரிஷி அவர்கள்

-

How the astrology advice will helps to clear the Karma? Do you continue this astrology service?


ஜாதகத்தின் வழியாக, கர்ம வினைப்பதிவுகளை அறிந்துகொள்ள முடியும் என்று சொல்லுகிறீர்கள். அது எந்த வகையில் உதவுகிறது என்று விளக்கம் தருவீர்களா? இந்த சேவை இன்னும் தொடர்கிறீர்களா?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா! ஜாதகத்தின் வழியாக, கர்ம வினைப்பதிவுகளை அறிந்துகொள்ள முடியும் என்று சொல்லுகிறீர்கள். அது எந்த வகையில் உதவுகிறது என்று விளக்கம் தருவீர்களா? இந்த சேவை இன்னும் தொடர்கிறீர்களா?


பதில்: 

சோதிடம், ஜாதகம் என்பதெல்லாம் பொய் என்பதுதான் பெரும்பாலோர் முடிவு. வாழ்கின்ற உயிரனங்கள், மனிதர்களாகிய நாம் மட்டுமல்ல, ஒரு புல் முளைப்பதற்கு முன்பே, பல கோடி ஆண்டுகளாக, தன் காந்த அலைகளை, பூமியின் கூட்டு கிரகங்களும், சுற்றியுள்ள நட்சத்திரங்களும் பூமிக்கு தாக்கத்தை ஏற்படுத்தின என்பதை நாம், மறந்துவிடக்கூடாது. எந்த ஒரு தாவர விதையை, மண்ணில் விதைத்தாலும், அது பருவத்தால்தான், முளைவிட்டு வளர்ந்து செடியாகி, மரமாகி, பூத்துக்குலுங்கி, காய்களையும், பழங்களையும் தருகிறது. இந்த பருவம் என்பது எப்படி வருகிறது? பூமியின் சுழற்சியினாலும், பூமியின் நகர்வினாலும், சூரியன் முதலான கிரகங்கள், நட்சத்திரங்கள் ஆகியவற்றின் தாக்கம் இல்லாமல் வருகிறதா?

நமக்கு தெரியவில்லை, அறியவில்லை, அது குறித்த தெளிவில்லை, ஆராய்ச்சியும் இல்லை என்றால், உடனே இல்லை என்று மறுத்துவிடுவதுதான், சராசரி மக்களின் குணம். இதற்கு அவர்கள் சான்று தருவது, நவீன விஞ்ஞானம். உண்மையிலேயே அவர்கள் நம்பும் நவீன விஞ்ஞானம் கூட, அடிக்கடி தன் கொள்கைகளை, மாற்றிக்கொண்டே இருக்கிறது. ஆனால் நம்மக்கள் விடாப்பிடியாக ‘மறுப்பிலேயே’ இருக்கிறார்கள். இருக்கட்டும், நாம் மட்டுமாவது, உண்மையை நோக்கி நகர்வோம். அதில் தெளிவு பெறுவோம்.

கடந்த வருடங்களில், ‘ஜாதகத்தில் அறியவரும் கர்ம வினைகள், எத்தகையது?’என்ற ஆராய்சிக்காக சில அன்பர்களின், ஜாதக குறிப்புக்களை பெற்று ஆராய்ந்து, விளக்கம் பெற்று, அதை அவர்களிடம் சொல்லி, அதை தீர்ப்பதற்கான வழிமுறைகளையும், வேதாத்திரியத்தின் வழியில் விளக்கினேன். எல்லா அன்பர்களும், அதை எற்றுக் கொண்டதும் நிகழ்ந்தது.

இந்த கர்ம வினைப்பதிவுகள், சஞ்சித கர்மா என்ற பழவினையாகவும், பிராரப்தம், ஆகாமியம் என்ற புதுவினையாகவும், ஓவ்வொரு மனிதருடைய ‘கருமையத்தில்’ பதிவாக உள்ளது. இத்தகைய கர்ம வினைப்பதிவுகள், துளியும் மாறாது அப்படியே ஒரு மனிதனிடத்தில் இருந்து, அவனுடைய பரம்பரைக்கு கடத்தப்படுகிறது. இயற்கையின் ‘வினை விளைவு நீதி’ அற்புதமாக இதை நடத்திக்கொண்டிருக்கிறது. எல்லா மனிதர்களுக்கும், அவர்களின் கர்ம வினைப்பதிவுகளே, குணாதசியமாகவும் அமைகிறது. குழந்தையாக பிறந்த நாளில், அக்குழந்தையின் பிறந்த நேரம் கொண்டு, ஜாதமாக கணித்துக்கொண்டால், அதில் நிச்சயமாக கர்ம வினைப்பதிவுகளை, கிரகங்கள் சொல்லுகின்றன.

பொதுவாக, இங்கே ஒரு அன்பரின் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆராய்ச்சியில் எடுத்துக் கொள்வதில்லை. என்னுடைய ஆராய்ச்சியும், விளக்கமும், கர்ம வினைப்பதிவுகள், கருவழியாக எப்படி இருந்தன? இப்போது எப்படி இருக்கின்றன? இந்த கர்ம வினைகளில் என்னுடைய வாழ்வின் நிலை என்ன? என்ன செய்தால், இப்போது, இந்த பிறவியில், இந்த வாழ்வில் கர்ம வினைகளை போக்கலாம்? என்பதுதான் என்னுடைய ஆராய்ச்சியும் விளக்கமும் ஆகும். வேதாத்திரிய யோகத்தின் வழியாகவும், ஒரு மனிதனின் பிறப்பே, கர்ம வினையினாலும், அதை தீர்க்கவே பிறந்தோம் என்பதையும் அறிகிறோம். ஆனால், வாழும் பொழுது ‘வேதாத்திரி மகரிஷியே சொன்னது போல, என்னை மறந்தேன், எந்தன் வினை மறந்தேன்’ என்பதாக வாழ்ந்து முடிக்கிறோம்.

இதனால், நம்முடைய வாழ்வில், நாம் மட்டுமல்ல, நம் குழந்தைகளும், வாரீசுகளும், பரம்பரையினருமே பாதிக்கப்படுகிறார்கள்.  இப்பிறவியில் நாம் கர்ம வினைக்கடலை தீர்க்க, தவமும் அறமும் தேவை என்று, சித்தர் பெருமகான், திருமூலர் சொன்னது போல, நாம் தவம் வழியாகவும், அறவாழ்க்கை வழியாகவும், வேதாத்திரியத்தின் துணையோடு, கர்ம வினைப்பதிவுகளை தீர்க்கலாம். நிறைய அன்பர்கள், அடிக்கடி கேட்டுக்கொண்டுதான் வந்தார்கள். இப்போது நீங்கள் கேள்வியாகவும் கேட்டுவிட்டீர்கள். நல்லது. இன்று முதல் தொடர்ந்து, இந்த சேவை அளிக்கலாம் என்றும் விரும்ப்பம் கொண்டுள்ளேன்.

நீங்களும், உங்கள் ஜாதகம் வழியாக, வேறெந்த கேள்விகளும் இல்லாமல், கர்ம வினைப்பதிவுகளின் நிலையும், அதை தீர்த்து தெளிவான நிலைபெறவும் விரும்பினால், என்னுடைய வாட்சாப் எண்ணுக்கு, உங்கள் ஜோதிட குறிப்பை எனக்கு அனுப்பி ஆலோசனை பெறலாம். மேலும் ஜோதிடம் இல்லாதோரும், தனிப்பட்ட விபரங்கள் தந்து ஆலோசனை பெறலாம். முக்கியமாக எல்லா அன்பர்களும் 1) பெயர் 2) பிறந்த தேதி / மாதம் / வருடம் 3) பிறந்த நேரம் 4) பிறந்த ஊர் 5) இப்பொழுது வசிக்கும் ஊர் 5) யோகத்தில் ஈடுபாடு 6) வேதாத்திரியத்தில் இருந்தால் அதன் விபரம் 7) திருமணம் ஆனவர் / ஆகாதவர் 8) குழந்தை விபரங்கள் ஆகியன குறித்து அனுப்பவேண்டியது முக்கியம். இதற்கான நன்கொடை நேரடியாக கேட்டு அறிந்து கொள்ளலாம்!

        இந்த ஆய்வுகளின் முடிவில், உங்களின் குணாதசியம் முதற்கொண்டு, நீங்கள் எந்தெந்த வகையில், கர்ம வினைகளால் சூழப்பட்டு இருக்கிறீர்கள்? அதனுடைய தாக்கம் என்ன? எவ்வகையில் பாதிக்கப்படுகிறீர்கள்? எப்படி செயல் திருத்தம் பெறலாம்? என்னென்ன வழிமுறைகள்? வேதாத்திரியத்தின் துணையோடு எப்படி கர்ம வினைகளை தீர்க்கலாம்? அதற்கான தவமும், வழிமுறைகளும் என்ன? என்று தெளிவான விளக்கம் அதில் இருக்கும்.

-

வாட்சப் தொடர்புக்கு: https://wa.me/9442783450

நன்கொடை சேவை மட்டுமே,  நன்கொடை வழங்க: 9442783450@UPI

-

அன்பர்களுக்கான ஜாதகம் வழியான கர்ம வினைப்பதிவுகள் குறித்த விளக்கமும், ஆராய்ச்சி முடிவும், தீர்ப்பதற்கான வழிமுறைகளும் இரண்டு வாரத்திற்குள்ளாக, PDF கோப்பாக, வாட்சப் வழியாகவே அனுப்பி வைக்கப்படும். விருப்பமுள்ள அன்பர்கள், இந்த சேவையை பயன்படுத்திக்கொள்ள அன்புடன் அழைக்கிறேன்.

வாழ்க வளமுடன்.

How we can pass the difficulties with smile by the way of Thirukkural Truth?


இடுக்கன் வருங்கால் நகுக என்ற திருக்குறளுக்கான உண்மை விளக்கத்தை, குரு மகான் வேதாத்திரி மகரிஷி சொல்லியிருப்பதாக அறிகிறேன். அந்த விளக்கத்தை பகிர்வீர்களா?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா! இடுக்கன் வருங்கால் நகுக என்ற திருக்குறளுக்கான உண்மை விளக்கத்தை, குரு மகான் வேதாத்திரி மகரிஷி சொல்லியிருப்பதாக அறிகிறேன். அந்த விளக்கத்தை பகிர்வீர்களா?

பதில்:  

இடுக்கண் வருங்கால் நகுக அதனை
        அடுத்தூர்வது அஃதொப்ப தில்.

இதற்கான உரை விளக்கம், தமிழறிஞர் மு. வரதராசன் அவர்கள் வழங்குவது என்ன? துன்பம் வரும்போது (அதற்காக கலங்காமல்) நகுதல் வேண்டும், அத் துன்பத்தை எதிர்த்து வெல்லவல்லது அதைப் போன்றது வேறு இல்லை’ என்று சொல்லுகிறார். இதுபோலவே பலரும் சொல்லுவார்கள் என்பதுதான் பொதுவானது. சராசரி மக்கள், இக்குறளின் உண்மையை ‘தானாகவே’ புரிந்து கொள்ளக்கூடிய மக்களும் உண்டு. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, ஆசான் திருவள்ளுவரால் எழுதப்பட்ட, திருக்குறள், மூலமான, நம் தாய்மொழியான தமிழில் எழுதப்பட்டது, அது இன்னமும் எழுத்து, பொருள், அர்த்தம் வடிவில் மாறாமல் இருப்பது அதிசயம்தானே? உலகில் பெரும்பாலான பழமையான குறிப்புக்கள் இன்னமும் புரிந்துகொள்ளப்படாமல், சிதைவுற்று விட்டது. ஆனால், தமிழ் சமுதாயம் அக்காலத்தில் இருந்து, பல்வேறுவகையான சான்றுகளை இன்னமும் பொக்கிஷமாக வைத்திருக்கிறது. உலகில் தமிழுக்கு கிடைத்த, இந்த அற்புதம் வேறு எந்த மொழி, இன சமுதாயத்திற்கும் இல்லை என்றே சொல்லுகிறார்கள். நம்மில் பலர் இந்த உண்மை தெரியாமலும் இருக்கிறார்கள்.

‘இடுக்கண் வருங்கால் நகுக அதனை, அடுத்தூர்வது அஃதொப்ப தில்’ என்று வாசிக்கும் பொழுதே, அதன் அர்த்தம் நமக்கு புரிந்துவிடும் என்றாலும் கூட, துன்பம் வந்தால் சிரித்துவிடுக, இதைத்தவிர அத்துன்பத்தை கடந்து செல்ல வேறு வழியில்லை, என்பதாக மிக எளிய விளக்கமாகக் கொள்ளமுடியும். 

குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள், தேர்ந்தெடுத்த சில, திருக்குறள்களுக்கு மட்டுமே, உரை விளக்கம் எழுதி அதை நூலாக தந்திருக்கிறார். அது போதுமானது என்றும் சொல்லுகிறார். இன்றைய காலத்தில், தமிழ் நன்கு பேச, படிக்க, அறிந்த யாவரும் ‘திருக்குறள் உரை’ எழுத தயாராகவே இருக்கிறார்கள். இனி, இக்குறளுக்கு,  வேதாத்திரி மகரிஷி அவர்களின் விளக்கத்தை காண்போம்.

ஒரு துன்பம் என்பது எப்போது எழுகிறது? நம்முடைய எண்ணம், சொல், செயலால் எழுகின்ற விளைவாகும். பிறராலும் அது நமக்கு விளைவாக வரும். அடுத்து, இயற்கையால் நிகழக்கூடியதாக இருக்கும். சில வகையில், சமுதாயம், உலகம் என்ற நிலையிலும் நாம் மட்டுமல்ல, அனைவருமே துன்பத்தை ஏற்கவேண்டி வரலாம். இங்கே நமக்கு வரும் துன்பம் என்பதை மட்டுமே கவனத்தில் கொண்டாலும், அது ஒருவகையில் ‘கர்மா என்ற வினைப்பதிவின் செயல்பாடு’ என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். சஞ்சிதம், பிராரப்தம், ஆகாமியம் என்ற மூன்றடுக்கு கர்ம வினைகள் நம்மிடம் உண்டு. அது ஒவ்வொன்றாக வெளியேறிட வேண்டும். அந்த களங்கம் தீரவேண்டும். அப்போதுதான், இறையுணர்வு நம்மிடம் மிகுதியாகும். அந்த கர்ம வினைகளை தீர்க்கவே பிறவியும் எடுத்தோம் என்பதும் உண்மையே.

இப்போது, ஒரு துன்பம் நமக்கு எழுகிறது என்றால், இங்கே நம்முடைய கர்ம வினைப்பதிவில் ஒன்று கழிந்துவிட்டது. அது நம்மிடமிருந்து விலகுகிறது என்று உணர்ந்து கொண்டு, நிம்மதியை உணர்ந்து, மனதில் அமைதி கொள்ள வேண்டும். இந்த தெளிவான உண்மையைத்தான் ஆசான் திருவள்ளுவர், ‘இடுக்கண் வருங்கால் நகுக ' என்று சொல்லுகிறார். என்பதான விளக்கத்தை, குரு மகான் வேதாத்திரி மகரிஷி தருகிறார். வேதாத்திரிய பதிப்பகம் வழங்கிய, வேதாத்திரி மகரிஷியின் திருக்குறள் உரை விளக்கம் நூலை வாங்கி, மேலும் உண்மைகள் அறிக.

வாழ்க வளமுடன்.

-

Every action will be recorded and it transform as a effect in human life, How?


மனிதன் ஒரு செயல் செய்தால் பதிவு உண்டாகிறது என்றும், அதுதான் அவனுடைய வாழ்வில் விளைவாகவும் மாறுகிறது என்று வேதாத்திரியம் சொல்லுகிறது. விளக்குக.

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, மனிதன் ஒரு செயல் செய்தால் பதிவு உண்டாகிறது என்றும், அதுதான் அவனுடைய வாழ்வில் விளைவாகவும் மாறுகிறது என்று வேதாத்திரியம் சொல்லுகிறது. விளக்குக.


பதில்:

இந்த உலகில் வாழும், ஒவ்வொரு மனிதனுக்கும் மூன்று வகையிலான இயக்கம் உண்டு. அவை எண்ணம், சொல், செயல் ஆகியன ஆகும். தன் விருப்பத்திற்காகவும், சூழலுக்காகவும், தேவைக்காகவும், பிறருக்காகவும் இதை அவன், செய்யலாம். என்றாலும் விளைவு என்பதை, எந்த மனிதனும் முடிவு செய்துவிட முடியாது. ஓரளவு யூக்கிக்கலாம் எனினும், விளைவு என்பதில் இயற்கையின் நியதி நிச்சயமாகிவிடுகிறது. மனிதன், தன்னால் விளைந்த அந்த விளைவை ஏற்றுக் கொள்ளக்கூடிய கட்டாயமும் உண்டு. 

ஒவ்வொரு பதிவுக்கும் அது செயல்பட காலம் உண்டு. இயற்கையிலே எந்தத் தவறும் இருக்கமுடியாது. ஏற்கனவே ஒருவர் ஒரு தவறு செய்ய எண்ணியிருப்பார். அதைச் செயலிலே கொண்டுவர முடியவில்லை. அது அப்படியே பதிவாகி இருக்கிறது. காலத்தால் எண்ணிய எண்ணம் எப்படியும் செயல்பட வேண்டும். அவ்வாறு அவர் ஒருவருக்குத் தீங்கு செய்ய வேண்டும் என்று எண்ணிவிட்டால், அந்த எண்ணத்தை உணர்ந்து அழிக்கவில்லை என்றால் அதற்குரிய காலத்திலே அந்தத் தீமை செய்தே ஆகவேண்டும். 

ஆகவே அவரது எண்ணம் செயலாக வேண்டும். அதே சமயம் இங்கே நம்மிடத்தே செயல் பதிவு நீங்கவும் வேண்டும். இரண்டையும் இணைத்து இயற்கை ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி அவர் மூலமாக நமக்கு ஒரு வருத்தத்தைத் தந்தது. இதை உணரும்போது நாம் அவரை வாழ்த்தவே வேண்டும். நாம் மகிழ்ச்சியடையவும் வேண்டும். ஏனென்றால் நம்மிடம் உள்ள பதிவு ஒன்று வெளியாகிவிட்டது, அது செயலாகி அப்பதிவு கழிந்துவிட்டது என்று புரிந்துகொள்ளலாம்..

ஒரு மனிதனிடத்திலே நூற்றுக்கணக்கான பதிவுகள் இருக்கலாம்.. ஒரு விதையிலே மரம் இருப்பதுபோன்று, அந்த விதையை நட்டவுடனேயே - பூ, காய், பழம் எல்லாம் உடனே வந்துவிடுவது இல்லை. விதையானது முதலிலே சிறு செடியாக வருகிறது. காலத்தாலே, பல வாரங்கள் கழித்தோ, மாதங்கள் கழித்தோ, ஆண்டுகள் கழித்தோ மரமாகிய பின் பூ, காய், பழம் வரலாம். அதுபோன்று பதிந்த ஒவ்வொரு பதிவுக்கும் செயலாக மலர அதற்கு தகுந்த காலம் என்று ஒன்று உண்டு. 

அந்த அந்தக் காலத்தால் முறையாக அது எழுச்சி அடைந்து இயங்கிச் செயல்படும். ஆகவே "இடுக்கண் வருங்கால் நகுக" என்றுதான் திருவள்ளுவர் கூறினாரே தவிர, அந்தத் துன்பத்தை ஏற்படுத்தியவரை வருத்தவேண்டும் என்று கூறவில்லை. எனவே எவ்வாறு நாம் துன்பம் வரும்போது நகை புரிய வேண்டும்? சிரிக்கவேண்டும்? என்றால்.. உண்மையிலேயே ஏற்கனவே இருந்த நம்முடைய சுமை அல்லது பாவப் பதிவு (sins and imprints) ஒன்று இன்று நம்மிடம் அப்பதிவு செயலாகி கழிந்துவிட்டது என்று எண்ணும்போது, அத் துன்பத்தை ஏற்றுக்கொள்ளக் கூடிய இன்பமான உணர்ச்சிதான் அகத்தவப் பயிற்சியினால் பக்குவப்பட்ட குண்டலினியோக சாதகனுக்கு ஏற்படவேண்டுமே அன்றி, சினம் கொள்ளக் கூடாது.!

சினத்திற்குப் பதிலாக அத்தகைய ஞானம் கொண்ட கர்மயோக நெறி தான் அகத்தவப் பயிற்சி (Simplified Kundalini Yoga) மேற்கொள்ளும் குண்டலினியோகிக்கு மலர வேண்டும்.

வாழ்க வளமுடன்.

-

பதிலின் மூலம் வேதாத்திரி மகரிஷி அவர்கள்

-

Is the human fate on the Horoscope or astrology chart and available solution for that?


ஜாதகத்தின் வழியாக தலையெழுத்து என்பதை நாம் பார்க்கமுடியுமா? அது உண்மைதானா? அதற்கு பரிகாரமும் உள்ளதா?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா! ஜாதகத்தின் வழியாக தலையெழுத்து என்பதை நாம் பார்க்கமுடியுமா? அது உண்மைதானா? அதற்கு பரிகாரமும் உள்ளதா?


பதில்: 

வானியலில் சூரியன், நிலவு இவற்றின் அருகாமையையும், தூரத்தில் தெரியும் கோள்களையும் நட்சத்திரங்களையும் கண்டு மகிழ்ந்த மனிதன், அவற்றின் ஒளியையும், அவற்றின் அலைகளையும் அது தரும் தூண்டுதலையும் அறிந்து தொகுத்து தந்த விளக்கமே ஜோதிடம் ஆகும். பன்னெடுங்காலமாக, பல குறிப்புகள் வழியாக, ஜோதிட உண்மைகள் உலகில் நிலவிவருகிறது. ஜோதிடம் பெருங்கடல் என்று சொல்லுவார்கள். அதுபோலவே முழுமையாக எல்லாமே அறிந்த சோதிடர் என்று யாரையும் குறிப்பிட்டுச் சொல்ல வழியின்றி, அவரவர் அவர்வாழ்வில் கற்றுத்தேர்ந்த நிலையில்தான், ஜோதிட உண்மைகளை சொல்லிவருகிறார் என்பதுதான் உண்மை. பெரும்பாலான ஜோதிடர்கள் கற்றுக்கொண்டேதான் இருக்கிறார்கள் என்பதையும் சொல்லவேண்டும். 

ஒரு ஜோதிடம் என்பது, குழந்தை பிறக்கும் நேரத்தில், பூஉலகைச் சுற்றிலும் அமைந்திருக்கும் கிரகம், கோள்கள், நட்சத்திரங்களின் நிலை ஆகும். இதில் கரு உருவான நாள் முதலாகவே அவற்றின் அலைவீச்சு துவங்கிவிடுகிறது என்பதையும் நாம் அறியமுடியும். ஒவ்வொரு ஜாதகத்திலும் கர்ப்பச்செல் என்ற கணக்கின் வழியாக இதை, ஜோதிடர்கள் குறிப்பார்கள். இந்த குறிப்புகள் வழியாக, எங்கும், எவ்விடத்திலும் அக்குழந்தையின் ‘தலையெழுத்து’ என்று எதுவும் இல்லை. அப்படியான தாக்கங்களை  கிரகம், கோள்கள், நட்சத்திரங்கள் தருவதும் இல்லை. தலையெழுத்து என்பது இல்லையானால், எல்லாமே பொய்தானே? என்ற எதிர்கேள்விக்கும் இங்கே இடமில்லை. மண்ணில் விதைக்கும் எந்த ஒருவிதைக்கும் கூட, எங்கோ இருக்கும் கோள்களும், நட்சத்திரங்களும் தூண்டுதலை தருகிறது என்று நிரூபிக்கிறார்கள் என்பதை நாம் அறிவோம்.

ஒரு குழந்தையின் ஜாதக குறிப்பின் வழியாக, அக்குழந்தையின் இயல்பு, குணாதசியம், வளர்ச்சி என்பதை சொல்லமுடியும். அடிப்படையாக அக்குழந்தையின் ‘அக நிலை’ என்ன என்பதையும் சொல்லமுடியும். குழந்தை பிறந்த அந்த குடும்பத்தின், பரம்பரையின் சூழல் யூகமாக சொல்லவும் முடியும். கர்மா என்றா வினைப்பதிவுகளின் தொடர்ச்சியை கணித்தும் சொல்லமுடியும். என்ன மாற்றங்களை கற்றும், பழகியும், உலகியலில் நன்மையை பெறலாம் என்பதையும் சொல்லமுடியும்.

அந்த வகையில், ஒரு குழந்தையின் தலையெழுத்து, ஜோதிடத்தில் இல்லை. பரிகாரம் என்பதும் இல்லவே இல்லை. மனதிற்கு திருப்தி அளிப்பதாக, அந்த நேரத்திற்கு ஏதெனும் செய்யலாமே தவிர, வேறெதும் நன்மை இல்லை. பரிகாரம் என்பதால் எந்த மாற்றமும் நிகழ்ந்துவிடுவதில்லை. செயலுக்கு தகுந்த விளைவு என்ற இயற்கையின் நீதியில் இருந்து, தப்பிக்க எந்த வழியும் இல்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

        ஜோதிடம் என்பது ஒரு குறிப்பு. ஒரு திட்ட வரையறை. இயற்கையின் பிரித்தறியமுடியாத, ஒரு பாகமாகவே உலகில், தாவரம் முதல் மனிதன் வரை எல்லா ஜீவன்களும் பரிமாற்றம் பெற்றவை என்பதை மறவாதிருங்கள். அந்த நிலையில் மனிதனுக்கு தன்னுடைய ஆறாம் அறிவின் முழுமையில் கிடைத்த ஒர் ஆராய்ச்சி தான் இந்த ஜோதிடம். இதை தவறாக பயன்படுத்துவோர் ஏராளம். அவர்களை அவர்கள் வழியிலேயே விட்டுவிடுவோம்.

வாழ்க வளமுடன்.

-

Why human need to understand himself in the earth lifetime?


வாழும் மனிதன் தன் உண்மை நிலை உணர்ந்து தன்னை உயர்த்திக்கொள்வதற்கான் உண்மையான காரணம் என்ன? ஏன் தேவையாகிறது?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, வாழும் மனிதன் தன் உண்மை நிலை உணர்ந்து தன்னை உயர்த்திக்கொள்வதற்கான் உண்மையான காரணம் என்ன? ஏன் தேவையாகிறது?


வேதாத்திரி மகரிஷி அவர்களின் பதில்:

உலகில் பிறந்து வாழ்கின்ற மனிதர்களாகிய நாம், நீண்ட நெடுங்காலமாகவே பல பிறவிகளை எடுத்து உணர்ச்சி வயப்பட்ட நிலையிலேதான் வாழ்ந்து பழகியிருக்கிறோம். இப்படியே இருக்கிற வரையிலே மனிதனானவன் மனிதத்தன்மையையோ தெய்வத்தன்மையையோ அடைய முடியாது. அதற்கு மனம் அமைதி நிலைக்கு வரவேண்டும், சிந்தனை உயர வேண்டும் நுன்மை பெற வேண்டும் உண்மை உணர்வு வேண்டும். 

அப்பொழுதுதான் மனிதன் மனிதனாக வாழவும் மகிழ்ச்சி, இன்பம் இவையெல்லாம் கிட்டுகின்ற நிலைமையும் உண்டாகும்.  இந்தக் குறிக்கோள் கொண்டே மனதிற்கு முதலிலே ஒரு பயிற்சியைக் கொடுக்கிறோம். குண்டலினியோகம் கற்று உயிர் (Life force) மேல் மனம் செலுத்துகிறோம்.  ஜீவகாந்த சக்தி (Bio-Magnetism) புலன்கள் மூலமாகவோ எண்ணத்தின் மூலமாகவோ தான் ஜீவகாந்த சக்தி செலவாகிற இடம், அது குழாய் போல  அந்தக் குழாய் அதிகமாகத் திறந்திருந்தால் தானே ஜீவகாந்த சக்தி அதிகம் செலவாகும்.  அந்தக் குழாயின் அடைப்பானைத் திருப்பி நீங்கள் மீண்டும் உயிர்மேலே மனத்தை வைக்கிறீர்கள். எங்கே charge ஆகிறதோ அங்கேயே கொண்டு வந்து விடுகிறோம், அதுதான் தவம் (Energy Meditation).

மனவளக்கலை மன்றங்களில் குண்டலினியோகப் பயிற்சியில், உயிர்ச்சக்தியை மேலே எழுப்பி மனதால் அதைப் பற்றித் தியானம் செய்யும்போது மன அலை நீளம் நுணுகி அமைதிக்கு வரும்.  அமைதியினால் மன உறுதி ஏற்படும்.  அறிவு கூர்மை ஏற்படும். அனாவசியமாக மனோ சக்தி செலவாகாது. எப்போதும் சிந்தனையாற்றல் பெருகிக் கொண்டே இருக்கும். தேர்ந்தெடுத்துச் செயல் செய்வதற்கு நமது மனம் விழிப்பு நிலையில் இருக்கும்.

எண்ணம் ஆராய்தல், ஆசை சீரமைத்தல், சினம் தவிர்த்தல், கவலை ஒழித்தல் என்ற தற்சோதனைப் பயிற்சிகளை மேற்கொள்ள முடியும். இன்னும்.. நான் யார்? உடலா? உயிரா? மனமா? இந்த உடல், உயிர், அறிவு எவ்வாறு இயங்கிக் கொண்டிருக்கின்றன? இவற்றிற்கெல்லாம் உள்ள தொடர்பு என்ன? என்பதையெல்லாம் உணர்ந்து கொள்ள முடியும். அதற்கான அகத்தாய்வுப் பயிற்சியை அளித்து நேரடியாக ஒவ்வொருவரும் உணரும்படியாகச் செய்கிறது மனவளக்கலை மன்றம். 

இந்தப் பயிற்சிகளைச் சரியாகச் செய்து விட்டால் மனம் எவ்வளவு தெளிவாக இருக்கிறது என்பதை அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம்.  நாமாக மனதைப் பளுவாக்கிக் கொள்வதற்குப் பதிலாக இலேசாக ஆக்கிக் கொள்கிறோம். அதன் பிறகு வாழ்க்கை நிலையே தெளிவாக இருக்கிறது என்பதை அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம். 

தெரிந்தோ தெரியாமலோ நாம் சில தவறுகள் செய்ததனால் உடலில் நோய்கள் உண்டாயின. இன்னும் சில நோய்களும் உணடாகலாம். அதனால் வரப்போகிற நோய்களைத் தடுக்கவும் வந்த நோய்களைப் போக்கிக் கொள்ளவும் எளியமுறையில் சில உடற்பயிற்சிகளை மனவளக்கலை மன்றத்தில் சொல்லிக் கொடுக்கிறார்கள். 

உடற்பயிற்சிகளைக் கற்றுக் கொண்டு இரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்று ஓட்டம் இவைகளைச் சரிப்படுத்தி உடலுக்கும, உயிருக்கும் நட்பைச் சரியாக வைத்துக் கொண்டால் உடல் எப்போதும் நலமாக இருக்கும். உடல் நலமும் வேண்டும் மனவளமும் வேண்டும். எளிமைப்படுத்தப்பட்ட குண்டலினி யோக பயிற்சி முறையானது (Simplified Kundalini Yoga - SKY) மனிதனை மனிதன் ஆக்க வல்லது. மனதை திடப்படுத்த வல்லது.

வாழ்க வளமுடன்.

The truth and answer, who raising the question 'where is the God?'


கடவுள் எங்கே இருக்கிறார்? என்று கேட்பவர்களுக்கான உண்மை விளக்கம் தருவீர்களா?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா! கடவுள் எங்கே இருக்கிறார்? என்று கேட்பவர்களுக்கான உண்மை விளக்கம் தருவீர்களா?


வேதாத்திரி மகரிஷி அவர்களின் பதில்:

'கடவுள் எங்கேயோ இருப்பதாக எண்ணிக்  கொண்டிருக்கிறார்கள்.  அவன் மனிதனின் மன இயக்கத்தில் இருக்கிறான்.  ஆம், தெய்வம் அதற்குள்ளாகவும் இயங்கிக் கொண்டிருக்கிறது.   வேறுவேறாக இல்லை,  இறைவன் மனிதனிடம் ஒன்றுபட்டுத் தான் இருக்கிறான்.'  

'ஆனால் மனிதனுடைய எண்ணத்தின் காரணமாக,  இச்சையின் காரணமாக,  பல பொருட்களின் மீது வைத்திருக்கிற ஆசையின் காரணமாக, இறைவன் தூரத்தில் இருப்பது போல் மனிதனுக்குத் தோன்றுகிறது.'  

'இச்சையின் அடுக்குகளே இறைவன் தூரத்தில் இருப்பது போல் செய்து வருகின்றன.'  

'நமக்கும் கடவுளுக்கும் எவ்வளவு தூரம் இருக்கிறது என்று ஒரு கணக்கெடுக்க வேண்டுமா?  எத்தனை பொருட்களின் மீது ஆசை இருக்கிறதோ, வரிசையாக எழுதி பட்டியலிட்டால் அது இருக்கும் நீளத்தைக் கொண்டு இவ்வளவு தூரம் தான் நமக்கும் கடவுளுக்கும் இருக்கக் கூடிய தூரம்.'

'பொருட்களின் மீது இருக்கக் கூடிய ஆசைகள் எவ்வளவோ,  அந்த அளவுக்குக் கடவுளுக்கும், மனிதனுக்கும் உள்ள தூரம் அதிகமாகும்.  ஆகவே,  ஆசை என்பதைச் சீரமைத்து விட்டோமேயானால்,  இறைவனைக் காணலாம்.'

'ஆசையை அனுமதித்துக் கொண்டே இருந்தால்,  அதை ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு ஆண்டும் செயலாக்கிக்  கொண்டு தான் இருப்போம்.  அந்த வகையில் வேலை இருந்துக் கொண்டே இருக்கும்.'  

'ஆனால் ஆசை சீரமைக்கப்பட்டது என்றால்,  ஒரு பளுவும் இல்லை.  ஆகையினால் மனம் துல்லியமாக, நிறைவாக இருக்கும்.  அங்கே இறைவன் இருப்பான்.'

'ஆசை முறை கெட்டுப் போனால் பேராசை, முறைப்படுத்தப்பட்டால் நிறைமனம்.'

'மனிதன் தன்முனைப்பு அறுத்தாலே போதும்; அவன் 

        இறைநிலை என்கின்ற பெரிய ஆற்றலோடு தன்னைக் கரைய விட்டுக் கொள்கிறான்.'

        'தன்முனைப்பு, பாவப் பதிவுகள், தேவையில்லாத கடும்பற்று - இந்த மூன்றும்தான் மனிதனை எல்லைகட்டி குழப்பத்தில் ஆழ்த்தி வைக்கிறது.'

-

இந்த கவிகள் கூடுதலாக விளக்கங்களை தரும்.

'ஓர்மை நிலைப்பயிற்சி'

நினைப்பும் மறப்பும் அற்று இருக்க நீ பழகிக்கொள், புலன்கள் 

   அனைத்தும் அடிமையாம், அமைதி கிட்டிடும் ஆங்கே, 

ஒன்றையும் நினையாது, உன்னையும் மறவாது

   நின்ற நிலையே அது.  நீயறி., நினைவை நிறுத்தி.

(ஞானக்களஞ்சியம் கவி: 1486)


'நிறை நிலையில் அமைதி'

எல்லை கட்டும் மனநிலையில் இன்ப துன்பம் 

   இரவு பகல், சிறிது பெரிது,  ஆண்பெண், கீழ் மேல்,

நல்லதுவும் அல்லதுவும், நாணம், வீரம்,

   நட்டம்லாபம் என்ற அனைத்தும் தோன்றும்;

வல்லமையும் அதன்முழுமை நிலையாய் உள்ள 

   வரைகடந்த மெய்ப்பொருளாம்., அகத்துணர்ந்தால் 

அல்லலற்று அறிவு விழித்தும், விரிந்தும், 

   அறிவறிந்த நிறைநிலையில் அமைதி காணும்.

(ஞானக்களஞ்சியம் கவி: 661)

-

'வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!'

Is it right for us to live by greeting others?


எரிகிற வீட்டில் பிடுங்குவது லாபம் என்ற வகையிலேயே எல்லோரும் இந்த உலகில் வாழும் பொழுது நாம் மட்டும் பிறரை வாழ்த்திக்கொண்டே வாழ்வது சரியாகுமா?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி: 

வாழ்க வளமுடன் ஐயா, எரிகிற வீட்டில் பிடுங்குவது லாபம் என்ற வகையிலேயே எல்லோரும் இந்த உலகில் வாழும் பொழுது நாம் மட்டும் பிறரை வாழ்த்திக்கொண்டே வாழ்வது சரியாகுமா?


பதில்:

இதே போன்றதொரு கேள்வி வேதாத்திரி மகரிஷியிடம் கேட்கப்பட்டது. அது ‘தவறு செய்பவர்கள் இந்த உலகில் நன்றாகத்தானே வாழ்கிறார்கள். நாம் ஏன் திருத்தமாக வாழவேண்டும்?’ என்ற கேள்வி. அதற்கு மகரிஷின் பதில் ‘நீங்கள் வேண்டுமானால் அப்படி கொஞ்சநாள் தவறு செய்தே வாழ்ந்து பாருங்களேன்’ என்று தருகிறார்.

நம்முடைய பார்வைக்கு, தவறு செய்பவர்கள் ‘நன்றாக’ இருப்பதுபோலவும், செழிப்பாக, இன்பமாக, நிறைவாக வாழ்வது போலவும் தெரியும், ஆனால், அவர்கள் மனதிலும், உடலிலும், வீட்டிலும், வீட்டில் உள்ள மற்றவர்களுக்கு உள்ள பிரச்சனைகள் எதுவுமே நமக்கு தெரியாது. இரவில் அவர்கள் நிம்மதியாக தூங்கி எழுவார்களா? என்பது கூட கேள்விதான். அதை அவர்கள் வெளிக்காட்டவும் தயங்குவார்கள் / மறைப்பார்கள். ஆனால் ஏதேனும் வகையில் நாம் அறிய முடியும்தானே?

நாம் நம்முடைய பார்வையை, முன்னோக்கி பார்த்தால் இப்படி வாழ்ந்த முடிந்தவர்கள் பேரும் புகழோடுமா தன்னுடைய காலத்தை முடித்திருக்கிறார்கள்? சிந்தித்துப் பாருங்கள். அவர்கள் இறந்து பல காலம் ஆனாலும் கூட, அவர்கள்மேல் விழுந்த பழிச்சொல் அகலாமல் இருப்பதை நாம் காணமுடியும். நல்லதிற்கு உதாரணம் என்பது போலவே, தீய நடவடிக்கைகளுக்கும், தவறுகளுக்கும் உதாரணமாக அவர்கள் ‘காலத்தால்’ நின்றிருப்பதை அறியலாம்.

அறிவில், அனுபவத்தில், வாழும் சூழலில் வளர்ச்சி அடையாத சிலர், மற்றவர்கள் வருத்தி, துன்புறுத்தி, பிடுங்கி, வாழ்வதை நாம் காணமுடியும். நாமேகூட அப்படியான சிலரிடம் மாட்டிக்கொண்டு முழித்திருப்போம் என்பதும் உண்மையே. அத்தகைய நிகழ்வுக்குப் பின் நாம் எப்படி இருக்கிறோம்? என்பதையும், அவர்கள் எப்படி இருக்கிறார்கள்? என்பதையும் சிந்திக்க வேண்டும். அறம் அல்லாத எந்த ஒரு செயலை செய்தாலும், அது இயற்கை எனும் தெய்வீக பேராற்றலால், அவரவர் மனதிற்குள்ளாகவும், கருமையத்திலும் ‘கர்மவினைப்பதிவாக’ பதிவு செய்வதை மறவாதீர்கள். வட்டியும் முதலுமாக என்ற ரீதியில் அதை தீர்க்காமல் விடவே விடாது. அதுதான் இயற்கையின் செயல்விளைவு நீதி.

சாதாரணமாகவே, மனம் ஒப்பாத ஒன்றை செய்துவிட்டு காலம்பூராவும் வருந்துவது மனிதனின் இயல்பு. யோகத்தின் வழியாக மனதை அறிந்த நாம், அப்படியான தவறை நாமே விரும்பி செய்திட முடியுமா? அது நியாயமும் ஆகுமா? இருக்கும் வினைப்பதிவுகளை தீர்க்க மட்டுமேதான் நாம் பிறந்திருக்கிறோம் என்பதை மறுபடி நாம் ஞாபகப்படுத்திக் கொள்வோம். தவறு செய்யும் அவர்கள், தவறுமட்டுமே செய்யும் அவர்களுக்கு அதுகுறித்த கவலை இல்லை. அது அவர்கள் பாடு. நாம் நம்மை திருத்திக் கொள்வோம்.

வாழ்க வளமுடன்

-

Astrologers advice to clear the Pithru Dosham, is yoga and meditation will help to this?


ஜாதகத்தில் பித்ரு தோஷம் உள்ளதாக ஜோதிடர்கள் கூறுகிறார்கள். அதுதான் எல்லாவற்றிற்கும் தடையாகிறது என்றும் சொல்லுகிறார்கள். அந்த பித்ரு தோஷம் என்பதை யோகத்தின் வழியாக, தியானத்தின் வழியாக தீர்க்கமுடியுமா? 



வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி: 
வாழ்க வளமுடன் ஐயா, ஜாதகத்தில் பித்ரு தோஷம் உள்ளதாக ஜோதிடர்கள் கூறுகிறார்கள். அதுதான் எல்லாவற்றிற்கும் தடையாகிறது என்றும் சொல்லுகிறார்கள். அந்த பித்ரு தோஷம் என்பதை யோகத்தின் வழியாக, தியானத்தின் வழியாக தீர்க்கமுடியுமா? 

பதில்:
ஒரு குழந்தை இந்த உலகில் எங்கு ஜனித்த போதிலும் அக்குழந்தைக்கு ஜாதகம் எழுதமுடியும், எந்த ஜீவன் உலகில் பிறந்தாலும், அக்குழந்தையின் அடிப்படை காரணியாக, புளூ பிரிண்ட் என்பதாக ஜாதகம் அமைந்திருக்கும் என்பதே உண்மை. அன்றைய நாளின், கிரக நிலைகள் அதில் இருந்தாலும் கூட, சூரியனும் சந்திரனும் ஒரு ஜீவனின் உயிர், மனம் இவற்றை அமைக்கிறது. அமைந்ததை சொல்லுகிறது என்றும் குறிப்பிடலாம். அந்த ஜாதகத்தில் அமைந்திருக்கும் ராகு, கேது என்ற நிழல் கிரகங்கள் தான், நீங்கள் இந்த கேள்வியில் குறிப்பிட்ட பித்ரு தோஷம் என்பதை சொல்லுகிறது.

இப்படியெல்லாம் கதையளக்க வேண்டுமா? என்று கேட்பவர்கள் இந்த பாராவையும், அடுத்த பாரா வரையில் மட்டும் படித்துவிட்டு பிறகு வழக்கமான ஏதேனும் பொழுதுபோக்கு நிகழ்ச்சியை பார்க்க படிக்க சென்றுவிடலாம். பிரபஞ்சம் அளவில் இருக்கின்ற பெரும் கோள்கள், நட்சத்திரங்களாக நாம், அதாவது நம்முடைய முன்னோர்கள் எடுத்துக்கொண்டார்கள். சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களில் சூரியனைச் சேர்த்து ஒன்பது கிரகங்களை முதன்மையாக அமைத்தார்கள். எனவே பிரபஞ்சம் உண்மை, நட்சத்திரங்கள் உண்மை, கோள்களும் உண்மை என்ற நிலையில், அதன்வழியாக வரும் அலைகளும், அவற்றின் கூடுதல் குறைவும் தவறாகிவிடுமா? அவற்றை ஜாதகத்தில் குறிப்பதும் தவறாகிவிடுமா? 

எங்கே தவறு நிகழ்கிறது என்றால், ஜாதகத்தை ஒரு ‘அடிப்படை காரணியாக, புளூ பிரிண்ட்’ என்று நினைக்காமல், மொத்தமும் அதுதான் என்று முடங்கும் அறியாமையில் தான் தவறு நிகழ்கிறது. பாதையில் இருக்கும் பாறையை, தாண்டிப்போகலாம், ஏறிப்போகலாம், உடைத்தெறிந்தும் போகலாமே? பாதை தடை இருக்கிறது எனும் சோம்பேறித்தனம் கொள்ளலாமா? இதில் ஜோதிடர்களை குறை சொல்லும் நபர்களும் உண்டு. உனக்கு திறமை உண்டுதானே? நீ அதை கற்றுக்கொள்ளலாமே?!

பித்ரு தோஷம் என்பது நம்முடைய முன்னோர்களை குறிக்கிறது. அவர்களின் தொடர்ச்சியாவேதான் நாம் பிறந்தோம் என்பது உண்மைதானே? அவர்களுக்கான மிச்சம், நம்மோடும் தொடரக்கூடும் அல்லவா? இதை வேதாந்தம் சொல்லும் கர்மா என்றும், யோகம் சொல்லும் வினைப்பதிவுகள் என்றும் எடுத்துக்கொள்ளலாம். வாழ்க்கையை கர்மயோகமாக மாற்றிக்கொண்டால், இந்த பித்ரு தோஷம் தானாகவே அகன்றுவிடுவதை அறியலாம். ஆனால், இப்போதைய Materialistic உலகில் அதற்கு வழி இல்லைதான். அதனால் யோகம் சிறந்த தீர்வை தருகிறது.

சோதிடர்கள் தரும் ஆலோசனை வழியாக, காசி, இராமேஸ்வரம், கங்கை, காவிரி சென்று பிண்டம் வைத்து வணங்கினாலும் கூட கிடைத்திடாத நல்லமாற்றம், முழுமையான தீர்வு யோகத்தின் வழியாகவும், தியானத்தின் வழியாகவும் கிடைக்கிறது. நிச்சயமாக, பித்ரு தோஷம் நீங்கிய வாழ்வை நாம் பெறமுடியும். அதற்கு பிறகு, அந்த தோஷம் நீங்கியபிறகு ஒரு குழந்தை பிறந்தால், அதன் ஜாதகம் கணிக்கும் பொழுது, அதை ஆராய்ந்தால், பித்ரு தோஷமற்ற ராகு கேது நிலையை நாம் காணவும் முடியும் அது உண்மை. ஆனால் இக்காலத்தில் அதையும் சிலர் பித்ரு தோஷமே என்று கதை கட்டுவார்கள் என்பதும் உண்மை. பிறப்பின் நோக்கத்தை, கடமையை அறியவிடாமல் தடுப்பது தான் தோஷமே தவிர மற்ற எதுவும் தோஷம் அல்ல என்ற உண்மையையும் அறிந்து கொள்ளுங்கள்.

இதைப்படித்து அறிந்துவிட்டு, உங்கள் ஜாதகத்தை அனுப்பவேண்டாம். ஏற்கனவே, கர்மா என்ற வினைப்பதிவு, பித்ரு தோஷம், பாவம் என்ற தலைப்பிலான ஆராய்ச்சியை அன்பர்களின் ஜாதகம் வழியாக அறிந்து, அவர்களுக்கு விளக்கமும், தீர்வு வழிமுறைகளும் சொல்லி முடித்துவிட்டேன். நிறைவும் செய்துவிட்டேன்.

வாழ்க வளமுடன்
-

Why India has that yoga, karma, worship to the divine etc.?


இந்தியநாட்டில்தான் இப்படி யோகம், கர்மா, பிறப்பு நோக்கம், கடமை, வழிபாடு அது இது என்று இருக்கிறது. வெளிநாட்டு மக்கள் இதில் தப்பிவிடுகிறார்கள் அல்லவா? உண்மை என்ன?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, இந்தியநாட்டில்தான் இப்படி யோகம், கர்மா, பிறப்பு நோக்கம், கடமை, வழிபாடு அது இது என்று இருக்கிறது. வெளிநாட்டு மக்கள் இதில் தப்பிவிடுகிறார்கள் அல்லவா? உண்மை என்ன?


பதில்:

முகம் மலர்ந்த சிரிப்போடு இந்த கேள்வியை வரவேற்கிறேன். நல்ல கேள்விதான். ஆனால் இதில் மிகப்பெரிய பிழை இருப்பதை அறியாமலேயே நீங்கள் கேட்டுவிட்டீர்கள். தவறில்லை. நாம் உண்மை என்ன என்று அலசி ஆராய்ந்துவிடலாமே?

இப்போது நாம் ஏதேனும் ஒரு வெளிநாட்டிற்கு போய்விடலாமா? நார்வே (Norway) என்ற நாட்டை தேர்ந்தெடுத்து  ஓஸ்லோ என்ற நகரத்திற்கு (Oslo) பயணித்துவிடலாம். இந்தியா, தமிழ்நாடு மாநிலம், சென்னையில் இருந்து கிட்டதட்ட 7700km தூரம் இருக்கிறது. விமானத்தில் செல்ல 13Hr நேரம் ஆகலாம். பயணச்சீட்டிற்கு 60k ஆகலாம். நாம் எண்ணித்தின் வழியாக செல்வதால் ஒரு செலவும் இல்லை. இன்றைய நாளில் அங்கே, கால நிலை, குறைபனி -2 என்று சொல்லுகிறார்கள் (March 13'2024). அங்கே வாழ்கின்ற மக்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் என்று நினைக்கிறீர்கள்? அங்கே காற்று இருக்கிறது. தினமும் ஒரு நாளில், நாம் காண்பதுபோலவே சூரியனின் வெளிச்சம் இருக்கிறது. ஆனால் வெப்பமில்லை. சந்திரன் ஒளிர்கிறது. காலையும் உண்டு, இரவும் உண்டு. அங்கே வாழும் மக்களுக்கு உடலும் உண்டு, குடலும் உண்டு, மனமும் உண்டு. பசி எடுக்கும் சாப்பிடுவார்கள். மனமிருப்பதால், வாழ்க்கையின் இன்பம் துன்பம், மகிழ்ச்சி வருத்தம், கவலை, சினம் வந்துகொண்டுதான் இருக்கும். காதலும் உண்டு, காமமும் உண்டு, திருமணமும், இணைந்த குடும்ப வாழ்க்கையும் உண்டு, அதில் பிரச்சனைகளும், சண்டைகளும் உண்டு, பிரிவும் உண்டு, 

தங்கள் வாழ்க்கையையும், குழந்தையின் எதிர்காலத்தையும் திட்டமிட்டு உழைப்பார்கள், பணமும் பொருளும் சம்பாதிப்பார்கள். உழைப்பின் மிகுதியால் சோர்வும், அசதியும், தூக்கமும் வரலாம். குளிரை தாங்கமுடியாமல், சூடாகவும், சூட்டை ஏற்படுத்தி தாங்கிக்கொள்ள, அவர்கள் புகைக்கலாம், மதுபானங்கள் குடிக்கலாம். காய்கறிகள் சாப்பிடலாம். மாமிசம் மட்டுமே முழுநேர சாப்பாடாகவும் இருக்கலாம். அது அந்த நாடுகளில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கலாச்சாரம். அதன்வழியே இன்பமும் வரலாம் துன்பமும் வரலாம், பிரச்சனைகளும், நோய்களும், பெரும் செலவும் வரலாம்தானே? குணப்படுத்தலாம், அதுமுடியாமல் இறக்கவும் நேரலாம்.

ஆக அங்கேயும் பிறப்பும் உண்டு, இறப்பும் உண்டு. சிலருக்கு இறை வழிபாடு இருக்கலாம். யாருக்குமே நம்பிக்கையின்றி அதில் ஏமாற்றமும் இருக்கலாம்.  எனினும் தெய்வீகம் என்ற மெய்ப்பொருள் அதன் இயல்பில் மாறிக்கொள்வதில்லை. அவர்களும் நாம் வாழும் பூமியில் தான் இருக்கிறார்கள். வேறெரு கோளிலோ, கிரகத்திலோ இல்லை. அவர்களுக்கும், காலநிலை, பருவமாற்றம் எல்லாமும் உண்டு.

அவர்கள் எதைச்செய்தாலும் நல்லவிளைவுகள் மட்டுமே வருமா? விளைவறிந்து தான் எதையுமே செய்வார்களா? உணர்ச்சியும், சிந்தனையும், நோக்கமும் எப்போதும் நேர்மையாக தெளிவாக இருக்குமா? சினம், கோபம் என்றால் என்ன என்று தெரியாமல் இருப்பார்களா? தங்களுக்குள் தாக்கிக் கொள்ளாமல், மரியாதையாக நடந்துகொள்வார்களா? எப்போதும் அன்போடும், நட்போடும், கருணையோடும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்களா? இப்படியாக எத்தனையோ கேள்விகளுக்கு உங்கள் பதில் என்ன? 

இவ்வளவு இருக்கும் பொழுது எப்படி அவர்கள், மனிதப்பிறவியின் நோக்கத்தில் இருந்தும், மெய்ப்பொருள் உண்மை விளக்கத்தில் இருந்தும் தப்பிவிடுகிறார்கள் என்று கருதுகிறீர்கள்? உங்கள் பார்வைக்கு ஒரு உண்மை தெரியவில்லை என்றால் அது இல்லவே இல்லை என்று கருதிவிட முடியுமா? எங்கும் நிறைந்துள்ள, உலகையும், சந்திரனையும், சூரியனையும், அவைகளைப்போல பலதுமாக இருக்கும் கிரங்களையும், நட்சத்திரங்களையும், மண்டலங்களையும் மிதக்கவிட்டு, தாங்கிக்கொண்டிருக்கும் அந்த மெய்ப்பொருளை, கண்ணால் பார்க்கமுடியவில்லை என்பதால், இல்லை என்று சொல்லுவது பொருந்துமா?

இதுபோலவே, நாமும் பிறமக்களும் வாழும், இந்த பூமியில் இருக்கின்ற எந்த ஒரு வெளிநாட்டையும், மனிதர்களையும் சிந்தித்துப்பாருங்கள். உங்களால் முடிந்தால் கடல்கடந்து, வான்கடந்து சென்று, நேரிலே, நிஜமாக அவர்களோடு பேசி பழகி கேள்விகள் கேட்டு, உண்மையை அறியுங்களேன்.

மனிதனின் மூலம் என்ன? அவன் யார்? என்பதை தானாகவே அறியும் வழிதானே ‘கடவுள்’. அதை உலகில் பிறந்த ஆறாவது நிலை அறிவைக்கொண்ட மனிதன் அறியவேண்டும் என்பதுதானே அந்த பரிணாமத்தில் பொதிந்துள்ள உண்மை. அதை மறந்து, மறுத்து வாழ்ந்துவிட்டால், தப்பிப்பதாக அர்த்தமா?

அப்படித்தானே நம்முடைய முன்னோர்கள் வாழ்ந்தார்கள், இன்னும் சிலர் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். நாமும் இந்த முயற்சியை விட்டுவிடலாமா? இருக்கும் நவீன விஞ்ஞான அணுவியல் கருவிகளை அனுபவித்துக்கொண்டு, உண்டு, உறங்கி, எழுந்து, வாழ்ந்து மடிந்து போகலாமா? அப்படியானால், நமக்கும் நமக்கு கீழான உயிரினங்களுக்கும் என்ன வித்தியாசம்?

உங்கள் பார்வையை மாற்றி, வெளிநாட்டு மக்களை, உள்நோக்கி அவர்களின் வாழ்க்கையை ஆராய்ந்து பாருங்கள். உண்மை தானாகவே உங்களுக்கு புரியும். அவர்களும் விதிவிலக்கல்ல. உலகில் எந்த மனிதர்களுமே விதிவிலக்கல்ல. அவர்கள் உங்களைவிட, யோகம் குறித்த உண்மையை அறியாது இருக்கலாம் அல்லவா? உங்களால் முடிந்தால், அவர்களை, அவர்களின் மனதின் தரத்தை இன்னும் உயர்த்தலாமே? அப்படியொரு உயர்ந்த வேலையும், பொறுப்பும் சக மனிதாகிய உங்களுக்கும் இருக்கிறதே? யோகத்தில் உயர்ந்த பிறரைப்போல நீங்கள் உயரவேண்டும் என்று நினைப்பது போலவே, அவர்களுக்கும் வழிகாட்டலாமே? சிந்தித்துப் பாருங்கள்.

வாழ்க வளமுடன்

-


In our life mind is very problematic, any easy solution for that? can we live without mind?


வாழ்நாளில் நம்மை குழப்புவதே இந்த மனம் தானே? அதைமட்டும் சரிசெய்ய பயிற்சி ஏதேனும் கிடைக்காதா? மனதை விட்டுவிட்டு, விலகி சும்மா இருந்தால் போதும் என்கிறார்களே?!



வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, வாழ்நாளில் நம்மை குழப்புவதே இந்த மனம் தானே? அதைமட்டும் சரிசெய்ய பயிற்சி ஏதேனும் கிடைக்காதா? மனதை விட்டுவிட்டு, விலகி சும்மா இருந்தால் போதும் என்கிறார்களே?!

பதில்:

உங்களுடைய பிரச்சனை எனக்கு புரிகிறது. மேலும் நீங்கள் வேதாத்திரியத்திற்கு புதியவர் என்பதும், ஏதோ ஓர் ஆர்வத்தில் உள்ளே காலடி எடுத்து வைத்துவிட்டதும் தெரிகிறது. விட்டால் வேறே எங்கேயாவது தப்பி ஓடிவிடவும் யோசனையாக இருப்பதும் யூகிக்க முடிகிறது. உங்களுக்கான தெளிவான பதிலாகவே தருகிறேன்.

மனிதன் என்றாலே, இதமான மனதைக் கொண்டவன் என்று அர்த்தமாகிறது. மனதையும், மனிதனையும் பிரிக்கவே முடியாது. பிறக்கும் பொழுது இல்லாத மனம், மூன்று வயதிற்குப் பிறகு துணையாக நின்று, நாம் வாழும் காலம் வரை கூடவேதான் இருக்கும் பிரிவதே இல்லை. பிரிக்கவும் முடியாது.

வேதாத்திரிய யோகத்தில் இருக்கின்ற நீங்கள், உங்கள் மனதைக் கொண்டுதான் தியானமும், தவமும் செய்யமுடியும். அதே மனதைக் கொண்டுதான் புலன்களை கடந்து நிற்க முடியும், மனமே மனதை அறியச்செய்யவும் முடியும். அந்த மனதால்தான் நம்முடைய உயிரையும் அறியமுடியும். அதே மனதால்தான் உயிருக்குள்ளாக நிற்கின்ற அறிவை, மெய்ப்பொருள் நிலையாகவும் உணரமுடியும். அத்தகைய மனதை விட்டு விலகிவிடவும், சும்மா இருக்க வைக்கவும், தள்ளிவைக்கவும், தூரவைக்கவும் விரும்பினால் எப்படி அது நியாயமாகுமா?

உங்கள் வாழ்நாளில் உங்களை குழப்புவதே உங்களின் மனம் தான். ஏன் குழப்புகிறது? நீங்கள் அப்படி அதை வளர்த்தெடுத்திருக்கிறீர்கள். ஆனால், நான் எங்கேய்யா அதை வளர்த்தெடுத்தேன்? என்று என்னிடமே எதிர்கேள்வி கேட்பீர்கள். சரி நீங்கள் அதை செய்யவில்லை என்றால், உங்கள் தாய் தந்தையர், அவர்களின் தாய் தந்தையர், அவர்களின் அவர்களின் தாய் தந்தையர் இப்படி, பரம்பரை பரம்பரையாக செய்திருக்கலாம் அல்லவா? அதெல்லாம் எனக்கு ஏனய்யா வந்தது? என்கிறீர்களா? நீங்கள் தானே வாரீசு? உங்களிடம் தானே அது வந்து தங்கி நிற்கும்? சரிதானே?

அந்தவகையில் தங்கி நிற்பதெல்லாம், கர்மா என்ற வினைப்பதிவாக இருக்கிறது. அது எல்லாமே தீர்க்கவேண்டிய, அகற்றவேண்டிய, கழிக்கவேண்டிய பதிவுகள். இதெல்லாம் உங்கள் வாழ்க்கையில் அன்றாடம் வெளிவந்து கொண்டே இருக்கும். அது இயல்பு. இயற்கையின் வினை விளைவு நீதி அதுவாகும். அதை நீங்கள், இந்த யோகத்தின் வழியாக, அறிந்து, திருத்தி அமைக்கவேண்டும். அதற்காகத்தான் தற்சோதனையும், அகத்தாய்வும் இருக்கிறதே? அதைச் செய்யலாமே?

இப்படி எதுவுமே முயற்சிக்காமல், மனதை புரிந்தும் கொள்ளாமல், வெறுமனே ஒதுக்கி வைக்கிறேன், தள்ளி வைக்கிறேன், சும்மா வைக்கிறேன் என்றால் அது நகர்ந்துவிடுமா? நீங்கள் விலக்க விலக்க இன்னும் பலமாக ஒட்டிக் கொண்டுதான் இருக்கும். மேலே சொன்ன பயிற்சிகளை தொடருங்கள், தவத்தையும் தொடருங்கள், மனம் தெளிவு பெறும், நீங்களும் தெளிவு பெறுவீர்கள்.

வாழ்க வளமுடன்
-

How long we need to learn yoga for completeness? and doing teaching service too?


யோகத்தின் வழியாக உண்மை விளக்கம் பெற எவ்வளவு காலம் கற்றுக் கொள்ள வேண்டும்? கற்பிக்கும் சேவையும் செய்யவேண்டும்? விளக்குக!

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, யோகத்தின் வழியாக உண்மை விளக்கம் பெற எவ்வளவு காலம் கற்றுக் கொள்ள வேண்டும்? கற்பிக்கும் சேவையும் செய்யவேண்டும்? விளக்குக!


பதில்:

எல்லோருக்கும் பயன் தரக்கூடிய நல்ல கேள்வி என்றே கருதுகிறேன். ஆனால் இந்தபதிலை எப்படி புரிந்து கொள்வார்கள் என்ற ஐயம் எனக்குண்டு. என்றாலும் விளக்கம் தருவதை என் கடமையாக கருதுகிறேன். இதை என் அனுபவங்களில் இருந்தே தருவதால், சரியானதாகவே இருக்கும். ஏனென்றால் அனுபவத்தைத் தவிர சிறந்த ஆசான் யாருளர்? என்றுதான் பொதுவாக சொல்லுவார்கள்.

ஒவ்வொரு யோகசாதனை அமைப்பிலும் குறிப்பிட்ட கால வகுப்பும், பயிற்சியும் உண்டு. வேதாத்திரியத்தில் கிட்டதட்ட ஓராண்டு முதல் இரண்டு ஆண்டுக்குள்ளாக, அடிப்படை பயிற்சி முதல் தொடங்கி நிறைவான பயிற்சி பெற்றுவிடலாம். தான் கற்ற அந்த மையத்தில் மட்டுமே, பிறருக்கு சொல்லித்தரும் ஆசிரியாராக தகுதி பெற்றுவிடலாம். எனினும் மற்ற மையங்களுக்கோ, பிற ஊர்களுக்கோ, நாடுகளுக்கோ நீங்கள் ஆசிரியராக செல்லவேண்டும் என்றால், கிட்டதட்ட பத்து ஆண்டுகள் முதல் இருபது ஆண்டுகள் சேவை அனுபவம் பெற்றிருக்கவேண்டும். இது கொஞ்சம் முன்னெ பின்னே என்று காலமாறுபாடு இருக்கலாம்.

வேறு சில யோக அமைப்பில், அடிப்படை பயிற்சி கற்றுத்தேர்வதற்கே, மூன்று ஆண்டுகள் முதல் ஏழு ஆண்டுகள் ஆகிறது. அப்படியானால், பயிற்றுனர் ஆவதற்கும், ஆசிரியராவதற்கும் எத்தனை ஆண்டுகள் ஆகலாம் என்பதை நீங்களே கணக்கிட்டுக் கொள்ளலாம்.

உங்களின் வளர்ச்சியில், நீங்கள் எந்த அளவுக்கு உயர்வு பெறுகிறீர்கள் என்பதுதான் முக்கியமானது. வெறுமனே சான்றிதழையும், பட்டயத்தையும் பெற்று அடுக்கிக்கொண்டே வருவதில் பயனில்லை என்பதை நாம் அறிவோம்தானே?! அதனால் உங்களுக்கு எது தேவையோ அதை முதலில், பெற்று, கற்று உங்களை முழுமை செய்து கொள்ளுங்கள். யோகத்தின் வழியாக, தனி மனிதனாக, உங்களை நீங்கள் உணர்ந்து நிறைவு செய்வதுதான், முதலாவதான நோகம். மற்றவர்களுக்கு பயிற்றுவிப்பது, விருப்பத்தின் வழியாக வருவதுதானே தவிர, கட்டாயம் ஏதுமில்லை. 

மிக முக்கியமாக, நீங்கள் உண்மையாக அறிந்து உணராத, முழுமைப்பெறாத ஒன்றை எப்படி பிறருக்கு சொல்லமுடியும்? நீங்கள் அறிந்த, கற்றுத்தேர்ந்த வார்த்தைகளால் மட்டுமே பிறருக்கு பகிர்வதில் என்ன விளக்கம் தரமுடியும்? உங்கள் அளவிற்கு, அதே அளவில் அவர்களும் கற்றுத்தேர்வார்கள் என்பது என்ன நிச்சயம்? இந்த கேள்விகளை நீங்களே கேட்டு அதற்கு பதிலை கண்டுகொள்ளுங்கள். இந்த விளக்கத்தை, ‘காணாத பழச்சுவை அறிக’ என்ற தலைப்பில் கவிதை விளக்க நூலாக எழுதியுள்ளேன். ஒரு பழம் இருக்கிறது. அதுகுறித்தான, வடிவம், தோற்றம், சுவை, மணம் எல்லாமே உங்களுக்கு தெரியும், இந்த விபரங்களை நீங்களே படித்தீர்கள், அந்த பழத்தை ருசித்து சாப்பிட்டவரும் சொன்னார், அதையும் நீங்கள் ஏற்றுக்கொண்டீர்கள். ஆனால், நீங்கள் அந்த பழத்தை பார்த்ததும் இல்லை, சாப்பிட்டதும் இல்லை, ருசி பார்த்ததும் இல்லை. இந்த நிலையிலே நீங்கள் எப்படி, மற்றவர்களுக்கு அந்த பழம் குறித்து சொல்லுவீர்கள்?!

பொதுவாக உண்மை விளக்கம் அறிந்துகொள்ளவும், புரிந்துகொள்ளவும் நாம் காலம் நிர்ணயிக்க முடியாது. அதை உங்களின், ஒவ்வொருவரின் கர்மா என்ற வினைப்பதிவும், அதன் களங்கள் தீர்ப்பதும், யோகத்தில் அவரவர்களுடைய முயற்சியும், பயிற்சியும், ஆராய்ச்சியும், தெளிவும் முடிவு செய்யும் என்பதுதான் உண்மையானது.

வேதாத்திரி மகரிஷியிடமே, இந்த சந்தேகம் குறித்து கேட்டிருக்கிறார்கள். ‘உண்மை விளக்கம் பெறாத நாங்கள், எப்படி பிறருக்கு தீட்சை தரமுடியும்?’ என்று அன்பர்கள் கேட்டதற்கு, மகரிஷி அவர்கள் ‘ஒரு கையில் இறைநிலையை பிடித்துக் கொள்ளுங்கள், மற்றொருகையால் என்னை பிடித்துக் கொள்ளுங்கள், போதுமே’ என்று பதில் தருகிறார். தீட்சை என்ற நிலைக்கு வேண்டுமானால் இது போதுமானதாக இருக்கும் என்பது என்னுடைய கருத்து. ஆனால் மெய்ப்பொருளின் உண்மை விளக்கம் தருவதற்கு, நீங்கள் அதை உணர்ந்தறியாமல் தரமுடியாது என்பதும் என்னுடைய கருத்து. ஆனால் உங்களுக்கு, உங்களால் அது முடியுமானால், பிறருக்கு தருவதில் குறையில்லை. தாராளமாக நீங்கள், பயிற்றுனராக, ஆசிரியராக, அதனினும் மேலான நிலையிலும் தொடரலாம். அது உங்கள் விருப்பமே!

அப்படியானால், இதில் உங்கள் அனுபவம் என்ன? என்று கேட்பீர்கள். இங்கே அதை எழுதினால் அது ‘சுயபுராணமாக, தற்பெருமையாக’ மற்றவர்கள் கருதிவிட வாய்ப்புள்ளது. என்னை நேரில் சந்தித்து கேளுங்கள். சொல்லுகிறேன்.

வாழ்க வளமுடன்

-

Why the enlightenment is late through the yoga? How long it takes?


யோகத்தின் வழியாக நம்மை உயர்த்திக்கொள்ள எவ்வளவு காலம் ஆகும்? ஏன் தாமதம் ஆகிறது?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, யோகத்தின் வழியாக நம்மை உயர்த்திக்கொள்ள எவ்வளவு காலம் ஆகும்? ஏன் தாமதம் ஆகிறது?


பதில்:

உலகில் பிறந்த நாம், பக்தி வழிபாட்டின் வழியாக, இயற்கையின் உன்னதமான பெரும் பொருளை, மெய்ப்பொருளை அறிந்துகொள்கிறோம். நம்மைவிட, நம்மிலும் பெரிய, சக்திவாய்ந்த ஒன்று இறையாக, தெய்வமாக இருக்கிறது என்று நம்புகிறோம். அதற்கு மதிப்பு கொடுத்து வளர்ந்து வந்து, இளைஞர்களாக உலக வாழ்க்கையை ஏற்கும் பொழுது, நம்முடைய வாழ்க்கையை சீரமைத்துக் கொள்கிறோம். சிலர் அது பொய், இல்லவே இல்லை என்ற ரீதியில் மாற்றுப்பாதையில் சென்றுவிடுகிறார்கள். நாம், இதுவரை வழிபட்டுவந்த அந்த இறையை, தெய்வீகத்தை உண்மையாக அறியும்பொருட்டு, யோகத்தில் இணைத்துக்கொள்ளவும் விரும்புகிறோம்.

அப்படியான யோகத்தில், எளிமைப்படுத்தப்பட்ட வேதாத்திரியத்தில் நாம் இணைந்திருக்கிறோம். இப்படி சொல்லுவதால் மற்ற யோக அமைப்புக்களை குறைசொல்லுவதாக நினைத்திடக்கூடாது. ஒவ்வொரு அமைப்பும் ஒவ்வொரு வகையான சிறப்பை கொண்டதுதான் என்பதால், இங்கே மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. அப்படி யோகத்தில் பயணிக்கும் பொழுது, குருவின் அன்பினாலும், கருணையாலும், உண்மை தத்துவ விளக்கங்களை பெறுகிறோம். கேட்கும் பொழுதும், படிக்கும் பொழுதும் நமக்கு புரிந்தாலும், அது நடைமுறைக்கு எளிதில் வந்துவிடுவதில்லை.

இதற்கு ஒரு மனிதனிடம் உள்ள, மூன்றடுக்கு கர்ம வினைப்பதிவுகளும், பழிச்செயல் பதிவுகளும் காரணமாகின்றன. கருவழியாக, முன்னோர்கள் தெரிந்தோ, தெரியாமலோ செய்த வினைகள் பதிவாகி, கருமையம் களங்கப்பட்டு இருக்கிறது. அது நமக்கும் பகிரப்பட்டு இருக்கும் நிலையில், நாம் அதை தூய்மை செய்யாது, நமக்கு ஒரு குழந்தை உண்டானால் அக்குழந்தைக்கும் பகிரப்படும் என்பது இயற்கை விதி. அத்தகைய கர்மா என்ற வினைப்பதிவுகளும், பழிச்செயல் பதிவுகளும் எவ்வளவு இருக்கிறதோ அந்த அளவிற்கு, அதை தீர்ப்பதற்காக நம்முடைய, யோக பயண முயற்சி தொடரவேண்டியது அவசியமாகிறது. சிலருக்கு 20 ஆண்டுகள் ஆகலாம், சிலருக்கு 30 ஆண்டுகள் ஆகலாம். சிலருக்கு 50 ஆண்டுகள் ஆகலாம். சிலருக்கு இன்னும் கூடுதலாக ஆகலாம்.

எனினும், யோகத்தின் வழியாக ஏற்படும் வளர்ச்சியை நாம் முடிவு செய்யவும் முடியாது. கணித்துப்பார்க்கவும் முடியாது. இந்த இடத்தில் நாம் அதை இயற்கையின் வசமும், தெய்வீகத்தின் வசமும் ஒப்படைத்து விட்டு, நாம் தொடர்ந்து பயணிக்க வேண்டியதுதான். ஆனால், அந்த மாற்றங்களும், உயர்வுகளும் நாம் அறிந்திடவும் முடியும் என்பதே உண்மை. சிறிது ஆழ்ந்து சிந்தித்தால், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடியும்கூட மாற்றம் உண்டாகிக்கொண்டே வருவதை நாம் உணரமுடியும்.

தொடர்ந்து யோகத்தில் பயணியுங்கள், நிறைவடைவீர்கள்!

வாழ்க வளமுடன்.

-

Some of wealthy men living with as atheist, they no need yoga by the way?


உலகில் எல்லா வசதிகளோடு வாழும் ஒருவர், கடவுள் மறுப்பாளராகவும் இருக்கிறார். அவருக்கு யோகம் தேவையில்லையா?



வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, உலகில் எல்லா வசதிகளோடு வாழும் ஒருவர், கடவுள் மறுப்பாளராகவும் இருக்கிறார். அவருக்கு யோகம் தேவையில்லையா?

பதில்:
இந்த கேள்விக்கான  பதிலை நாம் பார்க்கும் முன்பாக, நீங்கள் எப்போதும், இன்னொரு மனிதரோடும், அவர் வாழ்க்கையோடும், பணம், பொருள், வசதியோடும் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். அது நிச்சயமாக உங்களுக்கு ஒரு பிரச்சனையை, வலியை ஏற்படுத்தும். உங்கள் வாழ்க்கை நிறைவான வாழ்க்கையாக உணர்ந்தால் பரவாயில்லை. ஆனால் குறையான வாழ்வாக நினைத்துக்கொண்டால், அதில் நீங்கள் தன்னம்பிக்கை இழந்துவிடுவீர்கள் என்பது உறுதி. எனவே கவனமாக இருங்கள்.

உலகில் பிறந்த ஓவ்வொருவரும் வாழவேண்டும். உலகநடைமுறையில் வாழ பணமும் சம்பாதிக்க வேண்டும். அது சம்பளம் வழியாக, தொழில் முலமாக, வியாபாரத்தினால் இன்னபிற வழிகளால் கிடைக்கவும் வேண்டும். ஏழையாக இருந்தாலும் தன் தேவைகளை தானே நிறைசெய்ய உலகில் பலப்பல வழிகளும் உண்டு. ஏற்கனவே பரம்பரைவழி, பெற்றோர்வழி செல்வந்தர்களாக இருந்தால், பிறக்கும் குழந்தைக்கும் அச்செல்வம் தொடரும். ஏழையாகவே இதுவரை இருந்தாலும், இப்பொது பிறக்கு குழந்தை அந்த நிலையை மாற்றியும் அமைக்கலாம், ஏழ்மை என்பது விதியும் அல்ல.

குறுகிய காலத்தில் நியாயமாக முன்னேறுவோரும் உண்டு, குறுக்குவழியில் முன்னேறுவோரும் உண்டு. குறுக்கு வழியில் பணம் பொருள் ஈட்டவேண்டும் என்பதற்காக, தவறான வழிகளை தேடி பயணிப்பார்கள், அதில் வெற்றியும் அடைவார்கள்.

நம்முடைய பார்வைக்கு அவர்களின் வளர்ச்சியும் தெரியும், அதில் இருக்கும் ரகசியமும் தெரியும் என்பது உண்மைதான். அதோடு அவர் தன்னை கடவுள் மறுப்பாளராகவும் காட்டிக்கொள்கிறார் என்றும் சொல்லுகிறீர்கள். கடவுள் மறுப்பாளர்களை கடவுள் என்ற இறையாற்றல் கைவிட்டுவிடுமா? இல்லையே, நம்மை காப்பதுபோலவே அவர்களையும் காக்கும். ஆனால் ஓவ்வொரு மனிதனுக்குள்ளாக, கடந்து உள்ளே இருக்கின்ற மனமும், அதன் முடிவில் இருக்கும் கருமையமும் எல்லாவற்றையும் பதிவு செய்கிறது. அதுவே கர்மா என்ற வினைப்பதிவாகவும் மாறிவிடுகிறது. மேலும் அவர்களிடைய அறிவு களங்களோடும் இருக்கிறது. அந்த கர்ம வினைப்பதிவுகளும், களங்கமும் காலத்தால் தீர்க்காது அவர்களின் பிறவிக்கடமை முழுமையும் அடையாது. பிறவி வழியாக தொடரவும் செய்யும்.

ஆனால் நாம் யோகத்தின் வழியாக, நம்முடைய களங்கங்களை தூய்மை செய்து, கர்ம வினைகளை தீர்த்து, பிறவிக்கடனான ‘நான் யார்?’ என்று உண்மையறிதலை நோக்கி செயல்படுகிறோம். நமக்கு கிடைத்த வரம் அல்லவா இது?!

இந்தப்பிறவியில் அவருக்கு கடந்து உள்ளே போக ஆர்வமில்லை. அதனால் யோகமும் அவசியமில்லை. அவருக்குப் பின் அவர்வழியாக வரும் பேரனோ பேத்தியோ, ஏதோ ஒரு தலைமுறையினரோ தீர்க்க முயற்சிப்பார்கள் என்பது காலமே முடிவு செய்யும். எனவே நம் கவலை அதுவல்ல.

நாம் நம்முடைய வாழ்வில் எப்படி இருக்கிறோம்? என்று ஆராய்ந்து, வாழ்க்கைக்கு நிறைவான பணம், பொருள், அதை பெறுகின்ற வகையில் வாழ்வேண்டும். இந்த வாழ்வை வீணாக்காது, யோகத்தின் வழியாக தன்னையும் அறியவேண்டும். மெய்ப்பொருள் உண்மையையும் உணரவேண்டும். இப்படி அடுத்தவர்களை ஆராயவேண்டியதில்லை, முடிந்தால் அவர்களையும் வாழ்த்தி மகிழ்வோம். 
வாழ்க வளமுடன்.
-

Why not any changes on my worries in life after yoga?


யோகத்திற்கு வந்தபிறகும் கூட வாழ்க்கைக் குறித்த கவலை மாறவில்லையே? எப்போது மாறும்?



வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, யோகத்திற்கு வந்தபிறகும் கூட வாழ்க்கைக் குறித்த கவலை மாறவில்லையே? எப்போது மாறும்?


பதில்:

பெரும்பாலான மக்களின் நிலை அதுதான். சிலர் வெளியே சொல்லுவார்கள், சிலர் தனக்குள்ளாக புலம்பி தவிப்பார்கள். சிலர் அதை மறக்க நினைத்து புகை, குடி, போதை போன்ற இன்னும் பல தவறான பழக்கங்களுக்குள் சிக்கி விடுவார்கள். ஆனால் இதையெல்லாம் மீறி, யோகத்திற்கு இவர் வந்துவிட்டார் என்பது ஓர் ஆறுதல்தான். ஒரு மனிதன் யோகத்தில் இணைவதற்கு என்ன தகுதி வேண்டும்? என்று, வேதாத்திரி மகரிஷி அவர்களிடம் கேட்ட பொழுது, அவர் ‘உடல், மனம், உயிர் வேண்டும்’ என்றுதான் பதில் தந்தார். அதனால் உங்கள் கவலையால் ஏற்பட்ட, தவறான பழக்க வழக்கம் சூழல் என்றாலும், அது யோகத்திற்கு தடையை ஏற்படுத்தாமல், விட்டு விலக்கி விடாமல்  இருக்கவேண்டியது அவசியம். அப்போதுதான் யோகத்தின் வழியாக உங்களை நீங்களே, நல்லவழியில் செல்ல திருத்திக்கொள்ள முடியும் அல்லவா?

யோகத்தில் வழியாக, நாம் நம்முடைய மனதைத்தான் முதலாவதாக சீர் செய்கிறோம். இதுவரை நாம் நம்முடைய உடலுக்கும், மனதுக்கும், உயிருக்கும், ஆன்மாவுக்கும் செய்துவந்த தவறுகளை திருத்துகிறோம். ஏற்கனவே நம்மோடு கலந்து இருக்கும், பிறவி வழியாக வந்த கர்மா என்ற வினைப்பதிவுகளை திருத்தி அமைக்கிறோம். வாழும் வாழ்க்கையில் நம்கூடவே வாழும் இந்த சமூகத்திற்கும், உலகுக்கும் நன்றிக்கடனையும் செலுத்துகிறோம். இயற்கையை மதித்து அதனோடு நல்லுறவு பேணுகிறோம். இந்த பயணத்தில் உடனடியாக நமக்கான மாற்றம் வந்துவிடுவது சாத்தியமில்லை.

ஏனென்றால் நம்முடைய சுமை, கர்ம வினைகளினால் ஆன சுமை, எவ்வளவு என்பது நமக்கு தெரியாது. எத்தனையோ தலைமுறைகளாக, நம்முடைய பரம்பரையினர் தீர்க்காத நிலையில், இப்பொழுதான், நாம் இந்த முயற்சியை எடுத்து, முடிவாக யோகத்தில் இணைந்து பயணிக்கிறோம். அந்த வகையில், இதற்கான ஒரு உந்துதலை உருவாக்கித்தந்த அந்த முன்னோர்களை வாழ்த்தியும் வணங்குவோம்.

இப்படியான, வாழ்க்கைக் குறித்த கவலை,  வாழ்க்கை சிக்கல் என்பதெல்லாம், நாம் யோகத்தில் இணைந்த உடனே மாறிவிடும் என்று எதிர்பார்ப்பது தவறு. அது தானாக நிகழும் அதுவரை நாம் காத்திருக்க வேண்டும். மனதோடு வாழும் நாம், என்றுமே ஒர் எதிர்பார்ப்பிலேயே வாழ்வதற்கு பழகிவிட்டோம். அதை நாம் திருத்திக்கொள்ள வேண்டியதும் அவசியம். அதற்கு யோகசாதனையில் தவம் நன்கு உதவிடும். நம்முடைய மனம் என்றுமே, கடந்த காலத்தையும், நாளைய நாளையும் இணைத்துக் கொண்டே, காட்சியாக காட்டிக் கொண்டே, இன்றை நாளை மறுத்துக் கொண்டே வருவதை நாம் அறிவோம்.

அந்த நிலை மாறி, இன்று, இப்பொழுது என்று விழிப்படைவதற்கு மனம் பழகவேண்டும். அப்படி பழகிவிட்டால், உங்களுடைய கவலை, வாழ்க்கை சிக்கல் அகன்று, அதை தீர்ப்பதற்கான வழிகளும் பிறப்பதை காண்பீர்கள். இதற்கு அன்றாடம் நாம் செய்யும் தவம் உதவுகிறது. அந்த தவத்தின் வழியாகவே முன்னேற்றமும், தன்னம்பிக்கையும் பிறக்கிறது. தீர்வுகளும் உருவாகிறது. மனம் தளராமல் தொடர்ந்து யோகத்தில் பயணியுங்கள். உங்களை வாழ்த்தி மகிழ்கிறேன்.

வாழ்க வளமுடன்.

-

Is it right to think that we suffer like this because of the sin?


நாம் செய்த பாவத்தால் தான் இப்படி துன்பப்படுகிறோம் என்று நினைப்பது சரிதானா?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, நாம் செய்த பாவத்தால் தான் இப்படி துன்பப்படுகிறோம் என்று நினைப்பது சரிதானா?


பதில்:

ஒரு தெளிவில்லாமல் அப்படி நினைத்துக்கொள்வது தவறு. இப்படி நினைப்பது உங்களை இன்னமும் துன்பத்தில் ஆழ்த்திவிடும் என்பதையும் மறவாதீர்கள். துன்பப்படுவதற்கு காரணம் பாவம் அல்ல. பாவம் புண்ணியம் என்ற புரிதலை விட்டு விலகியும் விடுங்கள். அது எப்படியோ இருந்துவிட்டு போகட்டும். மேலும் நீங்கள் செய்த பாவம் ஒன்றுமே இல்லை. ஆனால் உங்கள் பரம்பரையில், முன்னோர்கள் செய்த கர்ம வினைப்பதிவுகள் தொடர்கிறது என்பது உண்மையே!

மேலும் துன்பப்படுவதற்கு காரணம் பாவமோ, கர்மாவோ அல்ல, அதை புரிந்து கொள்ளாமல் நாம் செயல்படுவதால்தான் என்பதையும் தெளிவாக புரிந்துகொள்ளுங்கள். ஒரு நெருப்பு எரிகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அது தீபமாகவோ, அடுப்பாகவோ, வேறேதெனும் நெருப்பாகவோ இருக்கலாம். அதை நீங்கள் தொடுவீர்களா? தொட்டுத்தான் பார்ப்போமே? என்றாவது நினைப்பீர்களா? இல்லைதானே? ஏன் தொடமாட்டீர்கள்? விட்டு விலகுவீர்கள்? கடந்து போவீர்கள்?

அந்த நெருப்பு சுடும், சுட்டு பொசுக்கியும் விடும், தொடப்பட்ட விரலை, கையை புண்ணாக்கி விடும் என்று உங்களுக்குத் தெரியும் அல்லவா? வாழ்வில் ஏதேனும் ஒரு நாளில் அந்த அனுபவம் கிடைத்திருக்கும், அப்படியாக நெருப்பில் சிக்கிய, பாதிக்கப்பட்ட நபர் யாரையாவது பார்த்திருப்பீர்கள். ஏதேனும் யாரேனும் சொல்லக்கேட்டுருப்பீர்கள், படித்திருப்பீர்கள். அந்த விழிப்புணர்வு இப்போதும், எப்போதும் உங்களுக்கு வாழ்க்கையில் உதவுகிறது. நெருப்பு என்பது இப்படிப்பட்டது, இது தரும் விளைவுகள் அத்தகையது. எனவே நெருப்போடு எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்ற உணர்வு வந்துவிட்டது.

அதுப்போலவே, நாம் விரும்பி, எதிர்பார்த்து, தனக்காகவும் ஒரு செயல் செய்து அதன் தவறான விளைவில் துன்பபட்டு வருந்தியதும், பிறருக்கு கேடு விளைவித்து அதன்வழியாக அவருக்கு துன்பம் ஏற்படுத்தியதும், அவருடைய வருத்தமும் நம்முடைய கர்மா என்ற வினைபதிவாக பதிந்து விடுகிறது. காலத்தால் அது தானாக நம்முடைய செயல்களில் வெளிப்படுகிறது. விழிப்புணர்வாக திருத்தி செய்யாவிட்டால், மேலும் துன்பம் உண்டாகிறது.

இப்போது இதுதான் உங்கள் பிரச்சனை. நீங்கள் விளைவில் நல்லது நிகழும்படி ஒன்றைச் செய்தால், உங்களுக்கும் நன்மை, அதனால் பிறரும் நன்மையடைய வாய்ப்பு கிடைத்திடும். இதுதான் கர்மா என்ற வினைப்பதிவுகளை தீர்க்கும் வழி. என்றாலும் இது மட்டுமே போதாது, முழுமையாக தீர்க்க யோகம் ஒன்றே சிறந்த வழியாகும். இதை நீங்கள் புரிந்துகொண்டால், நீங்கள் வாழ்க்கையில் வருந்த வேண்டிய அவசியம் இருக்காது. மாறாக கர்மா என்ற வினையை தீர்த்து, இன்பவாழ்வுக்கு அஸ்திவாரம் போடலாம்!

வாழ்க வளமுடன்.

If repentance is the basis of yoga, then there is no need for yoga at all?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, பொதுவாக பார்த்தால் திருந்தி வாழ்வதுதான் யோகத்தின் அடிப்படி என்றால், யோகம் தேவையே இல்லையே?!


பதில்:

நீங்கள் மிக நன்றாக, ஆனால் குறுக்குவழியில் யோசிக்கிறீர்கள் என்பது தெரிகிறது. ஒரு வகையில் நீங்கள் சொல்லுவது சரிதான். ஆனால் திருந்தி வாழ்வது என்பது சும்மா கிடைத்துவிடாது, திருத்தி வாழவும் முயற்சிக்க வேண்டுமே?! இந்த திருந்தி, திருத்தி என்ற இரண்டுக்கும் உள்ள அர்தத்தை நன்கு உள்வாங்கிக் கொள்ளுங்கள். திருந்தி என்பது இருப்பதை அப்படியே வைத்துக்கொண்டு திருத்தமாக வாழ்வது என்று தெரியவரும், ஆனால் திருத்தி என்பது இருப்பதை அடியோடு மாற்றியமைத்து முற்றிலும் புதிதாக வாழ்வது என்று தெரியவரும். இப்போது உங்களுக்கே தெரியும் எது சிறந்தது என்று? சரிதானா?

இப்போது உங்கள் வீட்டில் பழைய, அந்தக்கால பித்தளை பாத்திரங்கள் இருப்பதாக வைத்துக்கொள்வோம். இப்போதெல்லாம் பெரும்பாலும் எவர்சில்வர் என்பதுதான் பயன்பாடாக இருக்கிறது. செம்பு மற்றும் பித்தளை பாத்திரங்கள் எல்லாமே காலாவதி ஆகிவிட்டன. எனினும் ஓர் உதாரணத்திற்காக இங்கே காணலாம். பழைய பாத்திரங்கள் அளவில் பெரியதாகவும், வடிவமற்றும் இருக்கலாம். பயன்படுத்தாமல் போய் வீட்டில் பரணில் மூட்டை போட்டு கட்டிவைத்திருப்பார்கள். அவற்றை இன்று எடுத்துப்பார்த்தால் அழுக்காக, கருப்படைந்து இருக்கும் என்பது உண்மை.

அவற்றை கொஞ்சம், சமையலுக்கு பயன்படும் புளியை கரைத்த நீரில் கழுவினால், அந்த பித்தளை பாத்திரங்கள் அழுக்கு நீங்கி பளிச்சென்று இருக்கும். இப்போதைய பயன்பாட்டிற்கு வரலாம். ஆனால் யாராது தூக்கி இறக்கி வைக்க முடியுமா? கடினம். இப்போது இந்த பித்தளையை இழக்க மனமில்லை. ஆனால் பயன்பாடு கடினமாக இருக்கிறது என்றால், அதை ஏதேனும் நிறுவனத்தில் கொடுத்து உருக்கி, உங்களுக்கு தேவையான பாத்திரமாக, தெய்வ உருவங்களாக, கலைப் பொருட்களாக மாற்றி அமைத்து, உங்கள் வரவேற்ரையில் வைத்து பாராட்டு பெறலாம் அல்லவா?

இந்த உருக்கி மாற்றி புதிதாக உருவாக்குதல் தான் யோகத்தில் நமக்கு நிகழ்கிறது. அதுதான் ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய மூலம் அறிய, நான் யார்? என்று பதிலைப் பெற, இயற்கையை அறிந்துகொள்ள, மெய்ப்பொருள் உண்மையை அறியவும் தேவையாகவும் இருக்கிறது. அப்படியானால், உங்களுக்கும் யோகம் ஏன் தேவைப்படுகிறது? ஏனென்றால் உங்களின் பரம்பரையில் இதுவரை யாருமே செய்யாத, விரும்பாத, வாய்ப்பு கிடைக்காத, தவறவிட்ட ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள் அல்லவா? அந்தக் களங்கள் நீக்கிட வேண்டாமா?!

வாழ்க வளமுடன்.

-