CJ for You: animals

animals

Showing posts with label animals. Show all posts
Showing posts with label animals. Show all posts

Is exercise necessary for humans? Do dogs, cats, tigers, lions, elephants all exercise? Doesn't that live well and long?


மனிதனுக்கு உடற்பயிற்சி அவசியமா? தேவைதானா? நாய், பூனை, புலி, சிங்கம், யானை எல்லாம் உடற்பயிற்சியா செய்கிறது? அதெல்லாம் நன்றாக, நீண்டநாள் வாழ்வதில்லையா? விளக்கம் தருக.


அதானே? மிருகங்களும், பறவைகளும் உடற்பயிற்சியா செய்கிறது? மனிதனும் அவ்வாறே இருந்து விடலாமே? உங்கள் கேள்வி மிகச்சரிதான். உங்கள் சிந்தனையையும் பாராட்டலாம். ஆனால், நீங்கள் கற்கால மனிதனா? நவீன கால மனிதனா? உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கிறது? குகையில் வாழ்கிறீர்களா? குளிர்சாதன வசதி கொண்ட வீட்டில் வாழ்கிறீர்களா? கையில் தீபந்தம் இருக்கிறதா? கைபேசி இருக்கிறதா? என்ற கேள்விகளுக்கு எல்லாம் விடையை சொல்லி விடுங்கள்.

பறவைகள், விலங்குகள் இன்னமும் இயற்கை ஒட்டித்தான் வாழ்கின்றன. அதன் வரம்பை மீறிட அதற்கு தெரியாது. இனிமேலும் கூட, அவைகள் அப்படித்தான் வாழும். துரதிஷ்டவசமாக அவைகளுக்கு ‘ஐந்தறிவுதான்’ இருக்கிறது.

ஆனால், மனிதனுக்கு ஆறறிவு. அதனால் அவன், வரம்புகளை அமைத்துக் கொள்கிறான். என்றாலும் இயற்கையை மீறிடவும் செய்கிறான். அதனால், அவனுக்குரிய, இயற்கையின் அமைப்பு, வழிமுறை இவற்றிலிருந்து விலகி விடுகிறான். அவனுடைய, உடல், மனம், உயிர் ஆகியன பிரச்சனைக்குள்ளாகிறது. இதை நீங்கள், உங்களுடைய அனுபவத்தில் அறிந்திருக்கிறீர்களா? இல்லையா? என்பது தெரியவில்லை. அதனால்தான் உங்களுக்கு இப்படியான கேள்வி பிறந்திருக்கிறது. அதை என்னிடமும் கேட்கிறீர்கள்.

எனினும் உங்களை உடற்பயிற்சி செய்க, என்று யாரும் சொல்லிவிட மாட்டார்கள். வற்புறுத்தவும் மாட்டார்கள். கட்டளை இடவும் மாட்டார்கள். இந்த அரசாங்கமும் கூட திட்டமிடாது. அதனால் கவலை வேண்டாம். ஏதோ திடீரென உங்கள் குடும்ப மருத்துவர், உங்களைப்பார்த்து, பரிசோதனை செய்துவிட்டு, ‘ஏதேனும் உடற்பயிற்சி செய்க, நடைப்பயிற்சி கூட சரிதான்’ என்று சொல்லுவார். அதையெல்லாம் நீங்கள் கண்டுகொள்ள வேண்டாம். உடற்பயிற்சி செய்யாமல் இருந்தால் என்னய்யா ஆகிவிடப்போகிறது? என்பதுதானே உங்கள் நினைப்பு. அப்படியே இருந்துவிடுங்கள்.

இப்போது இல்லை என்றாலும் ஏதேனும் ஒரு காலத்தில், அடடா, ஏதோ தப்பு செய்துவிட்டோமோ? என்று நினைப்பு வரும். அந்த நேரத்தில்கூட அதை கடந்தும் விடலாம். ஆனால், நல்லதை சொல்லாமல் என்னால் இருக்க முடியாதே? அதனால் இந்த காணொளியில் சொல்லப்படும் விளக்கத்தை கேட்டுவிடுங்கள். பிறகு உங்கள் முடிவு.

மனிதனுக்கு உடற்பயிற்சி என்பது தேவைதானா? உண்மையும் ரகசியமும் என்ன? 

வாழ்க வளமுடன்

Please explain the good, bad, and benefits on the almighty's believes and unbelieves?


இறைவழிபாடுகளில் இருக்கும் நம்பிக்கையும், கடவுளே இல்லை என்ற நிலையையும் நீங்கள் விளக்கமுடியுமா? இரண்டிலும் இருக்கின்ற நன்மை, தீமை, பயன்கள் என்ன என்றும் சொல்லுங்கள்!


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி: 

வாழ்க வளமுடன் ஐயா, இறைவழிபாடுகளில் இருக்கும் நம்பிக்கையும், கடவுளே இல்லை என்ற நிலையையும் நீங்கள் விளக்கமுடியுமா? இரண்டிலும் இருக்கின்ற நன்மை, தீமை, பயன்கள் என்ன என்றும் சொல்லுங்கள்!


பதில்:

நல்ல கேள்விதான் எனினும், இங்கே பொதுவெளியில் சுருக்கமாகவேதான் சொல்ல முடியும். கடவுளை வணங்குவோர் குறித்து பேசினாலும், கடவுள் இல்லை என்று சொல்வோரை குறித்து பேசினாலும் இங்கே தேவையற்ற பிரச்சனைகள்தான் எழுகின்றன என்று வருந்துவோர்களில் நானும் ஒருவன். ஏனென்றால் இந்த உலகில், உண்மைகளை எடுத்துப் பேசுவோர்களுக்கும், விளக்கமளித்து பேசுவோருக்கும் எதிரிகள் உருவாகிவிடுவார்கள். எனவே மிகசுருக்கமாக சிலவற்றை இங்கே சொல்ல முயற்சிக்கிறேன். இது என்னுடைய கருத்தல்ல, நான் பலவழிகளில் அறிந்து கொண்ட வகையில், மற்றவர்கள் தந்த குறிப்பு மட்டுமே.

என்னைப் பொறுத்தவரையில் நான், கடவுளை வணங்குவோரையும், கடவுள் இல்லவே இல்லை என்போரையும் குறித்து தனிப்பட்ட எந்தக்கருத்தும் சொல்லுவதில்லை. உங்களுக்கு பிடித்திருக்கிறது அதனால் கடவுளை வணங்குகிறீர்கள். உங்களுக்கு அது அனுபவமாகவில்லை எனவே கடவுள் இல்லவே இல்லை என்கிறீர்கள். அவ்வளவுதான் என்னுடைய கருத்தாக இருக்கிறது.

இந்த இரண்டு நிலைபாடு கொண்டவர்களுக்கும் தங்களுக்குள்ளாக ‘ஒரு நம்பிக்கை’ உண்டு. அந்த நம்பிக்கை பெரும்பாலும், மற்றவர்களால்தான் உருவாகிறது. அது தொடர்வதும், அற்றுப் போவதும், அவர்களுக்கே அது அனுபவமாகும் பொழுதுதான். வளரும் சிறுவயதில் பெற்றோர் ஏற்படுத்தும் பக்தி நம்பிக்கை, தொடர்ந்தால் அக்குழந்தையும் ‘கடவுளை’ நம்பும். பெற்றவர்களுக்கே பக்தியும், கடவுள் நம்பிக்கையும் இல்லையென்றால் அக்குழந்தைக்கும் ‘கடவுள்’ இல்லைதான், அதுகுறித்த நம்பிக்கையும் இல்லைதான். பக்திமார்க்கத்தில் வளர்ந்த சிறுவர் சிறுமியர் கூட பிறகு வளர்ந்த நிலையில், சூழ்நிலையினாலும், மற்ற கருத்துளினாலும், தன்னறிவினாலும், பகுத்தறிவு சிந்தனைகளினாலும் தன் சுய அறிவால், சில காலங்களுக்குப்பிறகு  ‘இரண்டாவது நிலைப்பாட்டுக்கு, இல்லாத நிலைப்பாட்டுக்கு’ வந்துவிடுவதுண்டு.

உலகில் பிறந்த மனிதன் ஆறாவது அறிவின் துணைக்கொண்டுதான் மற்ற எல்லா உயிரினங்களை விடவும், சிந்தித்து அறிந்து கொண்டு வாழ்கிறான், அந்த சிந்தனையே மனிதனை, விலங்குகளின் பரிணாமத்தில் இருந்து, பிரித்து உயர்த்துகிறது. எல்லாவகையான உணர்வையும் விலங்குகள் போலவே பெற்று மகிழ்கிறான் என்பதும் உண்மை. கூடவே, அந்த உணர்வுகளையே பெறுவது நானேதான் என்றும் உணர்கிறான். இதனினும் மேலாக, அந்த நான் என்பது யார்? என்று சிந்தனையும் இயல்பாக எழுவது உண்மைதான். ஆனால் இந்த ‘நான் யார்?’ அவ்வளவு எளிதில் சராசரி மனிதனுக்கு வருவதே இல்லை. என்றாலும் அந்த கேள்வியோடு, யோகசாதனை வழியாக, இதை அறிந்த முன்னோர்கள்கள், ஞானிகள், மகான்கள், சித்தர்கள் தங்களோடு வாழ்கின்ற மக்களின் அறிவு நிலைக்கு ஏற்றவாறு, புரிந்து கொள்ளும்படியாக எளிமைநிலை கருதி, ‘இப்படியான உண்மை, உட்பொருளாக, மெய்ப்பொருளாக இருக்கிறது. அதை அறிந்தும், உணர்ந்தும் உங்கள் வாழ்வை சிறப்பித்துக்கொள்க’ என்ற கருத்தில், அதை ஆன்மீகத்தத்துவமாக, கருத்துருவாக ‘இறை’ என்ற உண்மை விளக்கத்தை தந்தார்கள். அதுவே கட+உள்=கடவுள் என்பதாக ஆகிற்று. ஆகவே, கடவுள் என்ற கருத்துரு வணக்கத்தில், பொதுவாகவே, நம்பிக்கை என்ற நிலைக்கு அடுத்ததாக, பரிபூரண நம்பிக்கை (FAITH) என்ற நிலைக்கு உயர்ந்தால்தான், பக்தியில் இருப்பவர் கூட, ஓரளவில் உயர்ந்து இறை உண்மையை அறியமுடியும்.

மேற்சொன்ன இந்த கருத்துக்கு எதிரான போக்குத்தான், கடவுள் இல்லை என்ற நிலைபாடு ஆகும். மனிதனும் ஓர் பிறப்பே என்ற நிலையோடு, ஆறாவது அறிவின் துணையோடு, உலக இன்பங்களை துய்த்து வாழ்ந்து வரலாம். கடவுள் என்ற கருத்துருவுக்கு இடமில்லை. அதற்கு அவசியமும் இல்லை. அப்படியாக ஏமாற்றிக் கொள்ளவும் தேவையில்லை என்பதான போக்கு ஆகும். இங்கேயும் ஒரு , பரிபூரண நம்பிக்கை (FAITH) உள்ளதுதான். அது, மனிதனுக்கென்று இருக்கிற ஆறாவது அறிவில் இயற்கை தவிர ‘வேறு எதற்கும்’ இடமில்லை என்பதாகும். அந்த இயற்கையையும் ‘ஏதொன்றும் தனியாக, சிறப்பாக’ கூறவும் அவசியமில்லை என்பதுமாகும்.

இரண்டிலும், நன்மை, தீமை, பயன்கள் எல்லாமே, உணர்ந்து அறியக்கூடியதாக இருப்பதால் அதை நீங்கள், உங்களுக்கு எந்த , பரிபூரண நம்பிக்கை (FAITH) வேண்டுமோ அதை நீங்கள் தேர்ந்தெடுத்து பயணிக்கலாம். உங்கள் வாழ்க்கை, உங்கள் தேர்வு என்பதன் வழியாக உணர்ந்து அறிந்து கொள்க!

வாழ்க வளமுடன்

-

Sixth and below!


ஆறும் அதற்கு கீழும்!



பதுங்குதல்

பெரும்பாலும் என் வீட்டில் சிறு பூச்சி, சிறிய வகை சிலந்தி, கரப்பான் பூச்சி, எறும்பு, பல்லி மற்றும் தூசி தொந்தரவுகள் உண்டு. இந்த வீட்டின் மனிதர்கள் எப்போதடா விளக்கை நிறுத்திவிட்டு படுப்பார்கள் என்று காத்திருந்து வெளியே நடமாடுவது போல இருக்கும். நான் முன்பு குடியிருந்த வீட்டில், பாம்பு எல்லாம் சாதாரணம். பகலில் கூட வீட்டின் சுற்றுச்சுவர் வழியாக வெளியே பார்த்தால், பாம்பு தென்படுகிறது என்று என் வீட்டிற்கு வந்த விருந்தாளிகள் சொல்லியிருக்கிறார். 

ஒருமுறை கூட நான் அப்படி பார்த்ததில்லை. இத்தகைய உயிரிங்களின் போக்கு, இரவில்தான் அதிகமாக இருக்கும் என்பது உண்மை. அதாவது மனிதர்களின் அசைவு, உடல் அதிர்வு, குரல் அதிர்வு, ஒலி ஒளி தாக்குதல், வெப்பம் குளுமை பாதிப்பு இதெல்லாம் குறைந்த பிறகு அல்லது நின்றுவிட்ட பிறகு தான், தன் இரை தேடி வெளியே கிளம்புகின்றன. ஆம் அந்த உயிரினக்களுக்கு உணவின் பொருட்டுத்தான் வீட்டிலும் தங்குகின்றன. அதுவரை மற்றெல்லா பொழுதுகளும் பதுங்கியே இருக்கின்றன.

உதாரணமாக, ஏதேனும் சிறு பூச்சியை நீங்கள் விரட்டி அடிக்க முயற்சித்தால் அவை உடனடியாக ஏதேனும் ஒரு இருட்டுப்பகுதியை நோக்கி பறக்கும் அல்லது ஓடும். ஏனென்றால் அப்போதைக்கு அவைகளுக்கு பாதுகாப்பு அந்த இருட்டு இடங்களே! சிலவேளை தரையில் ஓடும் பூச்சி, பல்லி இவற்றை விரட்டினால், அவை உங்களை நோக்கிவரும் போது, உங்கள் உள்ளங்காலுக்கு அடிப்பகுதியில் கூட தங்குவதற்கு முயற்சிக்கும். ஏனென்றால் அங்கேயும் இருட்டு இருக்கிறதே! நீங்கள் ஐயய்யோ என்று அலறி, காலை உதறி ஓடுவது எனக்கு காட்சியாகிறது. 


வாழ்விடம்

இந்த உயிரினங்கள் எல்லாமே ஏன் மனிதர் வாழும் இடங்களில் இருக்கிறது? இருங்க, இருங்க! நீங்களும் நானும்தான், அத்தகைய உயிரினங்கள் வாழும் இடங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இன்னும் சொல்லப் போனால், நாம் உரிமை எடுத்துக்கொண்டு, உனக்கு இங்கே இடமில்லை என்று விரட்டியும் விட்டு, அந்த உயிரினங்களுக்கு நவீன வாழ்வியல் மூலமாக, தொந்தரவுகளையும் கொடுக்கிறோம். 

அந்த சிறு உயிரினங்களுக்கான உணவுச் சங்கிலியையும் அறுத்த பெருமை நமக்கு உண்டு. கூடவே நம்முடைய சோம்பேறி தனத்தாலும், சுத்தத்தில் அக்கறை இன்மையாலும் வெளியே இருக்கக்கூடிய உயிரினங்களை நாமே வருக, வருக என்று வரவேற்கவும் செய்கிறோம்.


விட்டு விலகி விட்டோம்

எங்கள் வீட்டில் சில பாம்புகள் வரும் என்று சொன்னேன் அல்லவா? அவை ஒருபோதும் வீட்டிற்குள் வந்ததில்லை. ஒரு நேரம் வாசல்படி ஏறிவந்த பாம்பு, யாரோ வருகிறார்கள் என்று தெரிந்தவுடனே, வெளிவாசல் வழியே படி இறங்கி ஓடி மறைந்துவிட்டது. ஆனால் குளியலறையிலும், வீட்டு சுற்றுச்சுவருக்கு உள்ளேயும் வந்துவிட்ட பாம்பை அடிக்காமல், விரட்டி இருக்கிறோம். பாம்பை கொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. அதற்கு விசம் இருக்கலாம் ஆனால், சிறு அதிர்வு இருந்தாலே மிக விரைவாக ஓடி ஒளிந்துகொள்ளும் தன்மை கொண்டது. லாவகமாக அதை விரட்டி விட வாய்ப்பு உள்ளது. ஆனால் நமக்கு பழக்கம் இல்லை என்பதுதான் பொதுவான விசயம். 

எப்படி விவசாயத்தை விட்டு மிக நீண்ட பாதையில் விலகிவிட்டோமோ, அதுபோலவே பிற உயிரினங்களோடு கூடிய தடுப்பு, விலக்கல், பாதுகாப்பு இவற்றிலும் விலகிவிட்டோம். காலம் கடந்து செல்லச்செல்ல, இத்தகைய உயிரினங்கள் குறித்த தகவல்களைச் சொல்லும் பெருசுகளையும் நாம் இழந்து கொண்டிருக்கிறோம் என்பது மிக முக்கியமான குறிப்பு. ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது என்று பழமொழி சொல்லிக்கொண்டே, அந்த ஏட்டுச்சுரைக்காயை கறிக்கு உயயோகப்படுத்த பழகிக் கொண்டிருக்கிறோம் என்பதே உண்மை.


வாழ்தல் கேள்விக்குறி?!

ஒரு சுண்டெலியைப்போல உங்களால் வேகமாக திட்டமிட முடியுமா? ஒரு எறும்புபோல எங்கோ மறைந்த சர்க்கரையை தேடி எடுக்க முடியுமா? கரப்பான் பூச்சியைப்போல எந்த சூழலிலும் வாழ்ந்து பழக உங்களால் முடியுமா? என்று பலப்பல கேள்விகளை வரிசையாக கேட்கலாம். ஆனால் அதையெல்லாம் விட்டுவிடுங்கள். ஏனென்றால் நாமெல்லாம் ஆறறவு பெற்ற மனித உயிரினம் அல்லவா? இருக்கட்டும்.

ஆனால், இந்த உயிரினங்களும், பிறக்கின்றன, வளர்கின்றன, இணையோடு கூடி களிக்கின்றன. முட்டைகள், குஞ்சுகள், குட்டிகள் இடுகின்றன. தேவையான நேரத்தில் உணவு தேடி தின்கின்றன. அமைதியாகின்றன, காலத்தில் இறந்தும் போகின்றன. நாம் ஆறறவு என்று நமக்கு தற்பெருமை இருக்கிறது, ஆனால் எங்கேயோ வாழ்க்கையை தொலைத்துவிட்ட யோசனை உள்ளுக்குள் எழுகிறதா இல்லையா?

யோசிப்பதற்குக்கூட நமக்கு நிறைய நேரம் இல்லைதான். ஆனால் கொஞ்சம் முயற்சிக்கலாம்.