CJ for You: bad

bad

Showing posts with label bad. Show all posts
Showing posts with label bad. Show all posts

Please explain the good, bad, and benefits on the almighty's believes and unbelieves?


இறைவழிபாடுகளில் இருக்கும் நம்பிக்கையும், கடவுளே இல்லை என்ற நிலையையும் நீங்கள் விளக்கமுடியுமா? இரண்டிலும் இருக்கின்ற நன்மை, தீமை, பயன்கள் என்ன என்றும் சொல்லுங்கள்!


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி: 

வாழ்க வளமுடன் ஐயா, இறைவழிபாடுகளில் இருக்கும் நம்பிக்கையும், கடவுளே இல்லை என்ற நிலையையும் நீங்கள் விளக்கமுடியுமா? இரண்டிலும் இருக்கின்ற நன்மை, தீமை, பயன்கள் என்ன என்றும் சொல்லுங்கள்!


பதில்:

நல்ல கேள்விதான் எனினும், இங்கே பொதுவெளியில் சுருக்கமாகவேதான் சொல்ல முடியும். கடவுளை வணங்குவோர் குறித்து பேசினாலும், கடவுள் இல்லை என்று சொல்வோரை குறித்து பேசினாலும் இங்கே தேவையற்ற பிரச்சனைகள்தான் எழுகின்றன என்று வருந்துவோர்களில் நானும் ஒருவன். ஏனென்றால் இந்த உலகில், உண்மைகளை எடுத்துப் பேசுவோர்களுக்கும், விளக்கமளித்து பேசுவோருக்கும் எதிரிகள் உருவாகிவிடுவார்கள். எனவே மிகசுருக்கமாக சிலவற்றை இங்கே சொல்ல முயற்சிக்கிறேன். இது என்னுடைய கருத்தல்ல, நான் பலவழிகளில் அறிந்து கொண்ட வகையில், மற்றவர்கள் தந்த குறிப்பு மட்டுமே.

என்னைப் பொறுத்தவரையில் நான், கடவுளை வணங்குவோரையும், கடவுள் இல்லவே இல்லை என்போரையும் குறித்து தனிப்பட்ட எந்தக்கருத்தும் சொல்லுவதில்லை. உங்களுக்கு பிடித்திருக்கிறது அதனால் கடவுளை வணங்குகிறீர்கள். உங்களுக்கு அது அனுபவமாகவில்லை எனவே கடவுள் இல்லவே இல்லை என்கிறீர்கள். அவ்வளவுதான் என்னுடைய கருத்தாக இருக்கிறது.

இந்த இரண்டு நிலைபாடு கொண்டவர்களுக்கும் தங்களுக்குள்ளாக ‘ஒரு நம்பிக்கை’ உண்டு. அந்த நம்பிக்கை பெரும்பாலும், மற்றவர்களால்தான் உருவாகிறது. அது தொடர்வதும், அற்றுப் போவதும், அவர்களுக்கே அது அனுபவமாகும் பொழுதுதான். வளரும் சிறுவயதில் பெற்றோர் ஏற்படுத்தும் பக்தி நம்பிக்கை, தொடர்ந்தால் அக்குழந்தையும் ‘கடவுளை’ நம்பும். பெற்றவர்களுக்கே பக்தியும், கடவுள் நம்பிக்கையும் இல்லையென்றால் அக்குழந்தைக்கும் ‘கடவுள்’ இல்லைதான், அதுகுறித்த நம்பிக்கையும் இல்லைதான். பக்திமார்க்கத்தில் வளர்ந்த சிறுவர் சிறுமியர் கூட பிறகு வளர்ந்த நிலையில், சூழ்நிலையினாலும், மற்ற கருத்துளினாலும், தன்னறிவினாலும், பகுத்தறிவு சிந்தனைகளினாலும் தன் சுய அறிவால், சில காலங்களுக்குப்பிறகு  ‘இரண்டாவது நிலைப்பாட்டுக்கு, இல்லாத நிலைப்பாட்டுக்கு’ வந்துவிடுவதுண்டு.

உலகில் பிறந்த மனிதன் ஆறாவது அறிவின் துணைக்கொண்டுதான் மற்ற எல்லா உயிரினங்களை விடவும், சிந்தித்து அறிந்து கொண்டு வாழ்கிறான், அந்த சிந்தனையே மனிதனை, விலங்குகளின் பரிணாமத்தில் இருந்து, பிரித்து உயர்த்துகிறது. எல்லாவகையான உணர்வையும் விலங்குகள் போலவே பெற்று மகிழ்கிறான் என்பதும் உண்மை. கூடவே, அந்த உணர்வுகளையே பெறுவது நானேதான் என்றும் உணர்கிறான். இதனினும் மேலாக, அந்த நான் என்பது யார்? என்று சிந்தனையும் இயல்பாக எழுவது உண்மைதான். ஆனால் இந்த ‘நான் யார்?’ அவ்வளவு எளிதில் சராசரி மனிதனுக்கு வருவதே இல்லை. என்றாலும் அந்த கேள்வியோடு, யோகசாதனை வழியாக, இதை அறிந்த முன்னோர்கள்கள், ஞானிகள், மகான்கள், சித்தர்கள் தங்களோடு வாழ்கின்ற மக்களின் அறிவு நிலைக்கு ஏற்றவாறு, புரிந்து கொள்ளும்படியாக எளிமைநிலை கருதி, ‘இப்படியான உண்மை, உட்பொருளாக, மெய்ப்பொருளாக இருக்கிறது. அதை அறிந்தும், உணர்ந்தும் உங்கள் வாழ்வை சிறப்பித்துக்கொள்க’ என்ற கருத்தில், அதை ஆன்மீகத்தத்துவமாக, கருத்துருவாக ‘இறை’ என்ற உண்மை விளக்கத்தை தந்தார்கள். அதுவே கட+உள்=கடவுள் என்பதாக ஆகிற்று. ஆகவே, கடவுள் என்ற கருத்துரு வணக்கத்தில், பொதுவாகவே, நம்பிக்கை என்ற நிலைக்கு அடுத்ததாக, பரிபூரண நம்பிக்கை (FAITH) என்ற நிலைக்கு உயர்ந்தால்தான், பக்தியில் இருப்பவர் கூட, ஓரளவில் உயர்ந்து இறை உண்மையை அறியமுடியும்.

மேற்சொன்ன இந்த கருத்துக்கு எதிரான போக்குத்தான், கடவுள் இல்லை என்ற நிலைபாடு ஆகும். மனிதனும் ஓர் பிறப்பே என்ற நிலையோடு, ஆறாவது அறிவின் துணையோடு, உலக இன்பங்களை துய்த்து வாழ்ந்து வரலாம். கடவுள் என்ற கருத்துருவுக்கு இடமில்லை. அதற்கு அவசியமும் இல்லை. அப்படியாக ஏமாற்றிக் கொள்ளவும் தேவையில்லை என்பதான போக்கு ஆகும். இங்கேயும் ஒரு , பரிபூரண நம்பிக்கை (FAITH) உள்ளதுதான். அது, மனிதனுக்கென்று இருக்கிற ஆறாவது அறிவில் இயற்கை தவிர ‘வேறு எதற்கும்’ இடமில்லை என்பதாகும். அந்த இயற்கையையும் ‘ஏதொன்றும் தனியாக, சிறப்பாக’ கூறவும் அவசியமில்லை என்பதுமாகும்.

இரண்டிலும், நன்மை, தீமை, பயன்கள் எல்லாமே, உணர்ந்து அறியக்கூடியதாக இருப்பதால் அதை நீங்கள், உங்களுக்கு எந்த , பரிபூரண நம்பிக்கை (FAITH) வேண்டுமோ அதை நீங்கள் தேர்ந்தெடுத்து பயணிக்கலாம். உங்கள் வாழ்க்கை, உங்கள் தேர்வு என்பதன் வழியாக உணர்ந்து அறிந்து கொள்க!

வாழ்க வளமுடன்

-

Will karma come to the person who helps the wrong man? What is the reason for this?


தவறுக்கு துணைபோகிறவரையும் கர்மா துரத்துமா? ஏனென்றால் மனமறிந்து எந்த தவறுமே செய்யாத நிலையிலும் பலவித பிரச்சனைக்களுக்கு உள்ளாவதுபோல தோன்றுகிறதே? காரணம் என்ன?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி: 

வாழ்க வளமுடன் ஐயா,  தவறுக்கு துணைபோகிறவரையும் கர்மா துரத்துமா? ஏனென்றால் மனமறிந்து எந்த தவறுமே செய்யாத நிலையிலும் பலவித பிரச்சனைக்களுக்கு உள்ளாவதுபோல தோன்றுகிறதே? காரணம் என்ன?


பதில்: 

இந்த சந்தேகம் எனக்கும், யோகத்தில் இல்லாத காலங்களில் இருந்துவந்தது. வேதாத்திரிய யோகத்திற்கு வந்த பிறகு, செயல்விளைவு தத்துவமும், இயற்கையின் விதி என்பதையும் நன்கு புரிந்து கொண்டபிறகு  அந்த சந்தேகம் தீர்ந்துவிட்டது. உண்மை கண்ட நிலையில், என்னுடைய செயல்களை நான் திருத்தி அமைத்துக் கொண்டாலும், என்னைச்சார்ந்த மற்றவர்களை அறியும் பொழுதும், சில அன்பர்களின் வாழ்க்கை கதைகளை கேட்கும் பொழுதும் ‘நான் அறிந்த உண்மையையும் மீறி’ வருத்தம் எழுவது உண்டு.

துன்பப்படும் இவர்கள் ஒன்றுமே செய்யவில்லையே, ஏன் இப்படி நிகழ்கிறது? என்று மனம் வருத்தமடையும். ஆனால் வேதாத்திரி மகரிஷி சொல்லுவது போல, இயற்கையின் ஒழுங்கமைப்பு ஒருபோது மாறாத தன்மை கொண்டது. தெய்வீக நீதிமன்றத்தின் செயல்பாடு அது என்றும் சொல்லுகிறார். யாருக்காகவும், எதற்காகவும், எக்காலத்திலும் மாற்றம் பெறாதது. இன்னும் சொல்லப்போனால் ‘தன்னையே தான் தண்டித்து, திருத்திக்கொள்ளும்’ தன்மை உடையதுதான் இறையாற்றல். அத்தகைய உயர்ந்த தன்மை கொண்டது. நம்மை சும்மா விட்டுவிடுமா?

வெளிப்பார்வைக்கு வேண்டுமானால், தவறு செய்தவரும், அந்த தவறுக்கு துணை நின்றவரும், வாய்ப்பு இருந்தும் தட்டிகேட்காமல் இருந்தவரும், கூடவே இருந்து அந்த தவறை திருத்தி அமைக்காதவரும், மகிழ்வாக, நிறைவாக, எப்போதும் போலவோ, அதைவிட சிறப்பாகவோ வாழ்வது போல இருக்கலாம். ஆனால் அதனால் எழுந்த கர்மா எனும் வினைப்பதிவு ‘சும்மா’விட்டுவிட்டது. இதென்னெ பயமுறுத்தல் என்கிறீர்களா? நீங்கள் செய்துதான் பாருங்களேன். அப்போது விளைவை அனுபவிக்கும் பொழுதாவது நம்புவீர்கள்தானே?!

மனிதனுக்கு மனிதன் செய்யும் பிணக்குத்தான் இன்றைய உலகின் அவலம். உதவியும் செய்யாமல், உபத்திரவும் செய்யாமல் இருந்தால் கூட போதுமானது. ஆனால், எப்படியாவது தான் வளர, முன்னேற, நன்மதிப்பு பெற என்று திட்டமிட்டு, அடுத்தவரை உடலாலும், மனதாலும் துன்பப்படுத்திக் கொண்டே வந்தால், தங்களுக்கான பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியாது. ஒருவேளை எந்த துன்பமும், வருத்தமும் இல்லாமல் இறந்துவிட்டால் கூட, அவர்களின் வாரீசுகளுக்கு அந்த சுமை வந்து சேர்ந்துவிடுமே?! இதற்கான சில உதாரணங்களை, உங்கள் வாழ்க்கையிலேயே பிறரை பார்த்து அறிந்து கொள்ளலாம்.

நீங்கள் கேட்டது போல, தவறுக்கு துணைபோகிறவரையும் கர்மா துரத்துமா? என்றால், ஆம் துரத்தும். ஏனென்றால் மனமறிந்து எந்த தவறுமே செய்யாத நிலையிலும் பலவித பிரச்சனைக்களுக்கு உள்ளாவதுபோல தோன்றுகிறதே? ஆமாம். காரணம் என்ன? பார்க்கலாமா? உனக்கு வாய்ப்பு இருந்தும் ஏன் அதை தட்டிக்கேட்காமல் இருந்தாய்? நீ அதை மாற்றியிருக்கலாம், திருத்தியிருக்கலாம், மன்னிப்பு கேட்டிருக்கலாம், உதவி செய்திருக்கலாம் தானே? அதை ஏன் நீ செய்யவில்லை. நீ அந்த தவறுகளுக்கு கூட்டுதானே? என்று இந்த இயற்கை கேட்டு அதை பதிவு செய்துகொண்டு, தக்க காலத்தில் திருப்பி அளிக்கிறது. திருத்திக்கொள்கிறாயா? என்று பாடம் நடத்துகிறது. ஆனால் மனிதன் ‘இந்த இயற்கையையே மிஞ்சி விட்டதாக வெற்றி பெருமிதம்’ கொண்டு வாழ்கிறான். அந்த பெருமிதம் இன்னும் வடிந்தபாடில்லை!

வாழ்க வளமுடன்

-

Why some people looking calm but they extreme blast sometimes?


அமைதியாக இருக்கும் பலர் தீடீரென்று வெடிப்பதுபோல நடந்துகொள்வது ஏன்? அதனால் எழும் பிரச்சனை என்ன?



வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி: 
வாழ்க வளமுடன் ஐயா, அமைதியாக இருக்கும் பலர் தீடீரென்று வெடிப்பதுபோல நடந்துகொள்வது ஏன்? அதனால் எழும் பிரச்சனை என்ன?

பதில்:
உங்களுடைய கேள்வியில், அமைதியாக இருக்கும் பலர் என்பதை விடவும், அமைதியாக இருப்பதுபோல நடிக்கும் பலர் என்பதுதான் சரியானது ஆகும். உலகவாழ்வில், நன்கு கல்வி கற்றவர், சிந்தனையாற்றல் மிக்கவர், தன் காரியத்தில் கண்ணும் கருத்துமாக இருப்பவர், சுய சிந்தனை உள்ளவர், தற்சார்பு தன்மையில் வாழநினைப்பவர், தத்துவத்தை கரைத்து குடித்தவர் இப்படி பலரும், வெளித்தோற்றத்திற்கு அமைதியாகவே இருப்பார்கள். ‘இந்தப்பூனையும் பால் குடிக்குமா?’ என்ற பழமொழி ஞாபகத்திற்கு வருவதை தடுக்கமுடியாது. அவரைப்பார்க்கின்ற நாம், அவரை மதித்து அவரோடு நட்பு பாராட்டவே விரும்புவோம்.

‘என்னைவிட இவ்வளவு அமைதியாக இருக்கிறாரே, இவரோடு நாம் பழகிக் கொண்டால், நமக்கும்கூட அந்த அமைதியான பண்பு வந்துவிடும் அல்லவா?’ என்றுதான் நினைப்போம். பழகும் காலங்களில் கூட உங்களோடு, ஒரு வார்த்தைகள் பேசி நிறுத்திக்கொள்வார். நீங்கள் சொல்லுவதை எல்லாம் அக்கறையாக கேட்டுக்கொள்வார். அதாவது உங்களுக்கு அவ்வளவு மதிப்பு அளிப்பார், அப்படியாக காட்டிக்கொள்வார் என்பதுதான் உண்மை. நீங்கள் பழகுகின்ற அந்த காலம் முழுவதும் உங்களை எடைபோடுவார். ‘இவர் எப்படிப்பட்டவர்? எந்தெந்த விசயத்தில் இவர் பலவீனம்? இவரின் நல்லது என்ன? கெட்டது என்ன? இவரிடமிருந்து நமக்கு கிடைப்பது என்ன? லாபம் என்ன?’ என்று பல வகைகளில் கணக்குப்போட்டு, எடைபோட்டுக் கொண்டிருப்பார். இதெல்லாம் முடிந்தவுடனே, உங்கள் ஒவ்வொரு சொல்லுக்கும் செயலும், ‘ஆமாய்யா, ஆனா இப்படி, அப்படி’ என்றவாறாக மாற்றுக்கருத்தை தெரிவிப்பார். அதை நீங்கள் கவனமாக செவிமெடுக்கவில்லை என்றால் ‘யோவ், உனக்கு எத்தனை தடவை, என்ன சொன்னாலும் தெரியாதாய்யா?’ என்று சினம் கொள்ளுவார். நாமும் இவ்வளோ அன்பாக பழகியவர், ‘நம்ம நல்லதுக்குத்தானே சொல்லுகிறார்’ என்று ஏற்றுக்கொள்ளவும் தயாராவோம். சரிதானே?!

இந்த மாதிரி நபர்களை எல்லாம், ரஜனீஷ் ‘பழைய கில்லாடிகள்’ என்று அழைக்கிறார். இவர் ஒருபோதும் மாறுவதே இல்லை. மாற்றிக்கொள்வதும் இல்லை. உலகில் நடத்தப்படுகின்ற பெரும்பாலான (யோகமுறை அல்லாத) பயிற்சி மையங்கள், இப்படியான ‘அமைதியாக நடிக்கும் நபர்களைத்தான்’ உருவாக்குகின்றன. சில வணிக மேம்பாடு பாடங்களின் கல்வி கூட இப்படியான பயிற்சியைத்தான் தருவதாக சொல்லுகிறார்கள். காரியம் ஆகும்வரை கையப்பிடி, காலைப்பிடி என்று செயல்படுவார்கள். இத்தகைய குணநலன், நடவடிக்கைகள் வெறுமனே பயிற்சியால் மாறுவதில்லை. ஏனென்றால் அவர்களின் மனம் அந்த அளவிற்கு திசைமாறி போயிருக்கிறது. கூடவே அவர்களுக்கான மாற்றத்தை ‘இந்த அளவில் போதும்’ என்று நம்புகிறார்கள். அவர்களுடைய வாழ்வில், ஏதேனும் ஒருநாளில், இதனாலேயே ஒர் பிரச்சனையை சந்திக்கும்பொழுதான் ‘நாம் ஏதோ தவறு செய்கிறோம்’ என்று உள்ளுணர்வாக உணர்வார்கள். அதுவரை நாம் சொல்லுவதை கேட்டுக்கொள்ளவும் மாட்டார்கள். ‘எல்லாம் எனக்குத் தெரியும்மய்யா’ என்று விலக்கியும் விடுவார்கள்.

நாம் என்ன செய்யலாம்? இப்படியான, அமைதியாக நடிக்கும் நபர்களை, அடையாளம் கண்டு பழகவேண்டும். எடுத்த எடுப்பிலேயே நம்முடைய நல்லதை, கெட்டதை எந்த அளவிலும் அவர்களோடு பகிரக்கூடாது, நம் வார்த்தைகளில் கவனம் வைத்து பேசி, சிக்கிக் கொள்ளாத விழிப்புணர்வு வேண்டும். அது போதுமானது.

வாழ்க வளமுடன்
-

Please explain the good, bad and problems on the trick of body to body transformation!


கூடுவிட்டு கூடுபாயும் வித்தையில் இருக்கக்கூடிய நன்மை, தீமை, பிரச்சனைகள் குறித்து சொல்லமுடியுமா?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி: 

வாழ்க வளமுடன் ஐயா, கூடுவிட்டு கூடுபாயும் வித்தையில் இருக்கக்கூடிய நன்மை, தீமை, பிரச்சனைகள் குறித்து சொல்லமுடியுமா?


பதில்:

இன்னமும் உங்களுக்கு இந்த கூடுவிட்டு கூடுபாயும் வித்தையில் இருக்கும் ஆசை தீரவில்லை போலிருக்கிறதே? நல்லவேளையாக எப்படிச் செய்வது என்று என்னிடம் கேட்காமலிருப்பது குறித்து மகிழ்கிறேன். அடுத்த கேள்வி அதுவாகவே இருந்தாலும் இருக்கலாம்தானே? யார் கண்டது? இப்பொழுது இந்த கேள்விக்கு வரலாம், முடிந்தளவு விளக்க முயற்சிக்கிறேன்.

என்னுடைய ஆரம்ப நாட்களில், வேதாத்திரிய யோகத்தில் இணைவதற்கு முன்பாகவே கூட, சித்தர்களின்பால் நான் ஆர்வமோடு இருந்தேன். இதற்கு காரணமாக என்வீட்டில், பரணில் மூட்டைகட்டி வைத்திருந்த, என் தந்தைவழி தாத்தாவின் நூல்கள் உதவின. என்வீட்டில் யாருக்குமே இல்லாத அக்கறை, ஏனோ எனக்கு யோகத்தின்மேல் ஏற்பட்டது. மேலும், நகரில் இருந்த நூலகமும், உறவினர்கள், நண்பர்கள் மூலம் கிடைத்த நூல்களும் உதவியது. ஒரு சிறிய கிழிந்த துண்டு காகிதத்தைக்கூட படிக்கக்கூடிய ஆரவம் மிகுந்த காலம் அது. அப்படியாக, பதினென்கீழ்கணக்கு சித்தர்கள் முதலாக, ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், வேதாத்திரி மகரிஷி என்று பலரையும் தெரிந்துகொள்ள நூல்கள் பல கிடைத்தன.

கூடுவிட்டு கூடுபாயும் வித்தை குறித்தும் நான் அறிந்தேன். சித்தர் பெருமகான் திருமூலர், காட்டுவழியே செல்லும் பொழுது, மேய்ப்பனை இழந்த மாடுகள் வீடுதிரும்பாமல் இருந்தபொழுது, இறந்து போன அந்த மேய்ப்பனின் உடலில், தன்னுயிரைப் பாய்ச்சி, மேய்ப்பனாக மாறி, அம்மாடுகளை வீட்டிற்கு வழிநடத்தி உதவியதாக படித்திருக்கிறேன்.  சித்தர்கள், தங்களுடைய ஆராய்ச்சிக்காகவே இவ்வித்தையை செய்திருக்கிறார்கள். பேரதிசயமாக இருந்ததும் உண்மை. இது எப்படி என்பதுதான் அந்த 14 முதல் 17 வயதில் எனக்கு அறியமுடியவில்லை. 18 வயது நிறைவில்தான் ‘வேதாத்திரிய தீட்சை’ பெற்றேன். அந்த வயதிலே ‘கூடுவிட்டு கூடுபாயும் வித்தை' மையமாகக் கொண்டு கதைகள் கூட எழுதினேன் என்றால் மிகையில்லை. ஏதேனும் சில நேரம், நானே வேறு யாராகவோ இருப்பதாகவும், என்முகத்தை நானே வேறு ஆளாக கண்ணாடியில் பார்ப்பது வரையிலான கனவுகள் கூட கண்டதுண்டு. ஆனால் அந்த கனவுகளின் உண்மை நான் மட்டுமே அறிவேன்.

கூடுவிட்டு கூடுபாயும் வித்தையில், இறந்த உடலில் புகுவது என்று சொல்லப்பட்டாலும் அதில் உண்மை இருப்பதாக தெரியவில்லை. ஏனென்றால் உயிர் பிரிந்த உடலில் எல்லாமே இறந்து கொண்டே இருக்கையில், அதை மீண்டும் புதுப்பிப்பது இயற்கைக்கு முரணானது. (உடனே வாளை தூக்கி சண்டை போடவேண்டாம்). அப்படியானால், உயிரோடு இருக்கும் ஒரு மனிதனோடு கலக்கமுடியுமா? முடியும். அதிலும் சிக்கல் உள்ளது. அந்த உயிர் தனித்தன்மையாக இருந்தால், கூடுவிட்டு கூடுபாயும் நம்மை ஏற்றுக்கொள்ளாது. பிறருக்கும், சமூகத்திற்கும், உலகுக்கும் நன்மை தரதக்க வகையில் இதை செய்யலாம் என்பது ‘சித்தர்களின் கருத்து’. தனிமனித, சுயநல, பறித்தல் நோக்கோடு இதைச் செய்தால், உங்கள் உயிர் வீணாகிவிடும். கவனம்.

முக்கியமாக, கூடுவிட்டு கூடுபாயும் வித்தையை செய்வதென்றால், நீங்கள் உங்கள் உயிரை தனியே பிரித்துப் பழகவேண்டும். உயிரில் குறிப்பிட்ட அளவு பிரிந்து சென்ற உங்கள் உடல், மிகச்சரியாக பாதுகாக்கப்பட வேண்டும். எந்த ஒரு அதிர்ச்சியும் இங்கே நேரக்கூடாது. கிட்டதட்ட நீங்கள் இறந்தபோன தன்மைபோலத்தான் இருப்பீர்கள். அது உண்மை ஆகிவிடாமல் இருக்க கவனமாக இருக்கவேண்டியது அவசியம். உயிர்த்துகள் என்பது மிகமிக நுண்ணியது, சக்தி வாய்ந்தது. அதற்குரிய மதிப்பளித்து செயல்படுவது முக்கியம். கொஞ்சம் பிசகினாலும் உங்கள் வாழ்க்கை முடிந்துவிடக்கூடிய அபாயம் உண்டு. உங்கள் உடலுக்கே மீண்டும் திரும்புவதில் அதிக பிரச்சனைகளை நீங்கள் சந்திக்கக்கூடும்.

        எனவே, என்னைப்பொறுத்தவரை, இனிமேல் யாரும் ‘கூடுவிட்டு கூடுபாயும் வித்தை' செய்யவேண்டியதும் இல்லை, அதை பழகிட வேண்டியதும் இல்லை' என்றே நினைக்கிறேன். வேறு ஏதேனும் கேள்விகள் இருந்தால் நேரில் கேட்கவும்.

வாழ்க வளமுடன்

-

How i can fix my confidence, depression, sorrow, problems in my daily life?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, வாழ்க்கையில் ஓவ்வொருநாளும் சோகம், கவலை, பிரச்சனை சூழும் பொழுது, மனம் அமைதி கெடுகிறது. தன்னம்பிக்கையும் இல்லாதுபோகிறது எப்படி சரி செய்யலாம்?


பதில்:

சராசரி மனித வாழ்வில் அப்படி நிகழ நிறைய வாய்ப்புக்களை நாம்தான் உருவாக்கி வைத்திருக்கிறோம். மேலும் புதிதாக உருவாக்கியும் கொள்கிறோம். காரணம் என்னவென்றால், மனம் என்பது என்ன? அதன் மகத்துவம் என்ன? என்பதெல்லாம் அறியாத காரணத்தால்தான். யாரிடமாவது மனம் என்றால் என்ன? என்று கேட்டால் என்ன சொல்லுவார்கள் தெரியுமா? மனம் என்பது எண்ணங்களின் வெளிப்பாடு. அது இங்கிக்கொண்டே இருக்கும் என்று சில வரிகளில் முடித்துவிடுவார்கள். நவீன கால விஞ்ஞானமும் மனம் என்பதை இன்னமும் முழுமையாக சொல்லிவிடவில்லை. ஆனால் உலகில் மனநல மருத்துவர்கள் பெருகிக்கொண்டே இருக்கிறார்கள். யாரோ ஒருவர் சொன்னதுபோல ‘எல்லோரும் மனநலன் பாதிக்கப்பட்டவர்தான், ஆனால் வெளியே தெரிவதில்லை’ என்பது உண்மையோ என்று கருதவும் இடமாகிவிட்டது.

உங்கள் மனதை முதலில் புரிந்துகொள்வதுதான் முதல்படி. அதற்கு சாதாரணமான பயிற்சி உதவாது. மனதை பழக்கப்படுத்தும் எதுவும், மனதால்தான் செய்கிறோம் என்றாலும் அது அதன் போக்கில் உடனடியாக மாற்றம் ஏற்றுக்கொள்ளாது. ஒரு காட்டு யானையை, ஒரே நாளில் அல்லது சில நாட்களில் நம் போக்கிற்கு கொண்டவர முடியுமா?

அதேபோல மனதை விட்டுவிட்டும் நாம் வாழமுடியாது, அதை வேறெங்கோ வைத்துவிட்டும் வாழமுடியாது. நாம் அந்த மனதோடு இணையவேண்டும். மனதின் அலைநீளங்களில், அதன் இயக்கத்தில் கவனம் வைக்கவேண்டும். அதற்கு, யோகம்தான் சிறந்தவழி. எனக்கு அதெல்லாம் சரிப்படாது. யோகத்திற்கும் வரமாட்டேன் என்றால், உங்களுக்கான வழி ஏதுமில்லை என்பதையும் புரிந்துகொள்ளுங்கள்.

யோகத்தில் இணைந்தால், தவம், தியானம் வழியாக மனதை ஆராய்கிறோம். மனம் என்றால் என்ன என்பதை, அங்கே புரிந்துகொள்கிறோம். அதன்வழியாக திருத்தம் பெற்று, மனதை எப்படி கையாளவேண்டும் என்பதையும் அறிந்துகொண்டு, நாமும் நம் தவறுகளில் திருத்திக்கொண்டு, இயல்பாக வாழ முயற்சிக்க பழகினால், உங்களுடைய சராசரி வாழ்வில், அளவுமுறையோடு செயல்பட்டு, துன்பம், கவலை, குழப்பம், சோகம் சூழாத வாழ்க்கையை வாழமுடியும். தன்னம்பிக்கையோடு வாழமுடியும், அதை மற்றவர்களுக்கு தரவும் முடியும். எது இன்பம் என்பதை புரிந்து அதை அனுபவிக்கவும் முடியும்.

வாழ்க வளமுடன்.

-

After does good, had more problems, so Karma is fake?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, நல்ல செயல்கள் செய்தால் கர்மா என்பது தீர்ந்துவிடும் என்கிறார்கள். ஆனால் நிஜத்தில் அப்படி நடக்கமாட்டேன் என்கிறதே? மேலும் புதிய சிக்கல் அல்லவா உருவாகிறது? எனவே கர்மா தீர்த்தல் என்பது பொய்தானே?


பதில்:

உங்கள் கருத்தைத்தான் நவீன விஞ்ஞான உலகம் கடைபிடித்து வருகிறது. அந்த வழியில் தான் நவீன சிந்தனையாளர்களும், சராசரி மனிதர்களும், எதையுமே கண்டு கவலைப்படாது வாழ்ந்து வரும் பகுத்தறிவு மனிதர்களும் வாழ்ந்துவருகிறார்கள். இதில் எந்த குறையும் சொல்லுவதற்கு இல்லை. இங்கே சில உண்மையை புரிதல்களில் இருக்கக்கூடிய குழப்பங்கள்தான் உள்ளது. அதை எந்த தன்னையறிந்த ஞானியோ, மகானோ, தத்துவஞானியோ, ஒரு தனி நபரும் திருத்திட வேண்டியதில்லை. எல்லாவற்றையும் ‘காலமே’ பார்த்துக்கொள்ளும். 

முதல் கருத்தாக, நாம் தனித்து பிறக்கவில்லை என்பதை எல்லோரும் அறிவார்கள். மரபு வழி என்ற வகையில், நவீன மருத்துவ உலகம் பலவித நோய்தாக்கத்தை அறிவிக்கிறது அல்லவா? சிறுவயது முதல், இளம் வயது, நடுத்தரம் வரை  வெளிக்காட்டாத நோய்கள், பிறகு ஓவ்வொன்றாக வருகிறது அல்லவா? நீங்கள் அதை வரவழைக்காவிட்டாலும் கூட தானாக வருகிறதே? எப்படி? 

அதுப்போலவே, மனித உடலின் புலன்களாலும், அதற்குதவும் கருவிகளாலும் அறியமுடியாத, கர்மாவும், மரபு வழியாக தொடர்கிறது என்பதே உண்மை. கர்மா என்பதை, குரு மகான் வேதாத்திரி மகரிசி சொன்னதைப்போல ‘வினைப்பதிவு’ என்று புரிந்துகொண்டால் எளிமையானதாகும். இனி உங்கள் கேள்விக்கு வரலாம். நல்ல செயல்கள் செய்தால் கர்மா என்பது தீர்ந்துவிடும் என்கிறார்கள். ஆனால் நிஜத்தில் அப்படி நடக்கமாட்டேன் என்கிறதே? நல்ல செயல்களை செய்வது என்பது, கர்மயோகம் என்று வேதாந்தத்தில் சொல்லுவார்கள். அது ஒரு நல்ல வாழ்வியல் முறை. ஆனால் ஏன் நல்லது செய்தாலும் தவறு நிகழ்கிறது என்றால், முதலில் நம்மிடம் இருக்கும் கர்மா என்ற வினைப்பதிவை, திருத்திக் கொள்ளவேண்டும். அதன்பிறகுதான் நீங்கள் செய்வது, முற்றிலும் நல்லதாக, தவறான விளைவை தாராததாக இருக்கும். புதிய சிக்கலும் உருவாகமல் இருக்கும்.

எனவே இதன் விளக்கமாக, நமக்குள் இருக்கும் மூன்றுவகை கர்மாவான, சஞ்சிதம், பிராரப்தம், ஆகாமியம் ஆகியவற்றை திருத்தி அமைத்துக் கொள்வது முக்கியமானது. இவற்றை திருத்தி அமைக்காமல், எது செய்தாலும், அது கர்மாவின் வெளிப்பாடாக அமையும். அதனால்தான் உங்களால் ஏற்றுக் கொள்ளமுடியாமல், கர்மா என்பதே பொய் என்ற மனநிலையை, முடிவை உருவாக்குகிறது.

வாழ்க வளமுடன்.